கம்ப இராமாயணம் - மாரீசன் - தர்மம் போல்
இராவணன் அரசவையில் வீற்றிருக்கிறான். அவன் இருக்கும் அந்த மணி மண்டபத்தை வர்ணிக்க வேண்டும்.
கம்பன் என்ன சொல்கிறான் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
நாம் அறிந்தவரை ஒரு மண்டபத்தை எப்படி எல்லாம் வர்ணிக்கலாம்?
விண் வரை உயர்ந்த மாளிகை, மேகம் வந்து இளைப்பாறிப் போகும் முற்றம், ஒளி வீசும் மண்டபம், இமய மலை போல் உறுதியானது என்றெல்லாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.
கம்பன் சொல்லும் உவமை நாம் கனவிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத உவமை.
அந்த மண்டபம் தேவ தச்சன், விஸ்வகர்மா உருவாக்கியது.
சரி. அது என்ன பெரிய விடயம்.
அவன் படைக்கும் கடவுளான பபிரமனாலும் முடியாத அளவுக்கு சிறப்பாக படைப்பான்.
ஓ, அப்படியா. பெரிய ஆள் தான்.
அவன் நாம் என்னவெல்லாம் வேண்டும் என்று சொல்கிறோமோ, அது போலத் கட்டித் தருவான்.
சரி, அதில் என்ன சிறப்பு இருக்கிறது.
அவன் நாம் மனதில் நினைப்பதை எல்லாம், வேண்டியதை எல்லாம் தருவான், எப்படி என்றால் அறம் எப்படி ஒருவனுக்கு வேண்டியன எல்லாம் தருமோ, அப்படி.
எங்கிருந்து எங்கே போகிறான் கம்பன். கிடைத்த சின்ன இடைவெளியில் அறத்தின் உயர்வை சொல்லிவிட்டுப் போகிறான்.
அறம் எப்படி வேண்டியன எல்லாம் தருமோ, அது போல் தேவதச்சன் அந்த மண்டபத்தை செய்தான்.
பாடல்
நிலை இலா உலகினிடை நிற்பனவும்
நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது,
நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
உலைவு இலா வகை உழந்த தருமம் என,
நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தரெிப்பது, ஒரு புனை மணி
மண்டபம் அதனில் பொலிய, மன்னோ.
பொருள்
நிலை இலா = நிரந்தரம் இல்லாத
உலகினிடை = இந்த உலகில்
நிற்பனவும் = அசையாதனவும்
நடப்பனவும் = அசையும் தன்மை கொண்ட பொருள்களும்
நெறியின் = உயர்ந்த வழியில்
ஈந்த = உருவாக்கிய
மலரின் = திருமாலின் நாபிக் கமலத்தில்
மேல் = இருந்து உருவான, அல்லது இருக்கும்
நான்முகற்கும் = நான்கு முகங்கள் கொண்ட பிரமனுக்கும்
வகுப்பு அரிது = செய்வது கடினம்
நுனிப்பது = நுண்ணிய, நுட்பமான
ஒரு வரம்பு இல் = எல்லையில்லா
ஆற்றல் = திறமை
உலைவு இலா வகை = தீமை இல்லாத வழியில்
உழந்த தருமம் என = செய்த அறத்தைப் போல போல
நினைந்த எலாம் = மனதில் நினைத்ததை எல்லாம்
உதவும் தச்சன் = செய்து தரும் தேவ தச்சன்
புலன் எலாம் = தன் அறிவு அனைத்தையும்
தெரிப்பது = தெரிய, வெளிப்பட
ஒரு = கட்டிய ஒரு
புனை மணி = மணிகள் பதிக்கப் பெற்ற
மண்டபம் = மண்டபம்
அதனில் பொலிய, மன்னோ = அதில் பொலிவுடன் வீற்றிருந்தான்
தருமம் என்கிறான் கம்பன். அதை பிறருக்கு உதவும் தான தர்மம் என்று கொண்டாலும் சரி, செய்யக் கூடிய தருமம், அறம் என்று கொண்டாலும் சரி அர்த்தம் பெரிதாக மாறாது. அறம் சிறப்பு.
அறம், வேண்டியன எல்லாம் தரும் என்ற போதனையை இங்கே வைக்கிறான்.
கிடைக்கும் இடமெல்லாம் அறம் பேசியது நம் இலக்கியங்கள்.
No comments:
Post a Comment