Pages

Sunday, April 27, 2025

திருக்குறள் - வெகுளாமை - தீது

திருக்குறள் - வெகுளாமை - தீது 



நமக்கு கீழே உள்ளவர்களிடம் நாம் நம் கோபத்தை எளிதாக காட்ட முடியும். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. திட்டலாம், அவமானப் படுத்தலாம், அவர்கள் தன்னம்பிக்கை குறையும்படி பேசலாம், அவர்களை பலர் முன்னிலையில் தலை குனியும்படி செய்யலாம்...


ஆனால், அது எல்லாம் நமக்கே தீதாய் முடியும் என்கிறார் வள்ளுவர். 


நம்மை விட வலிமையானவர்களிடம் நாம் நம் கோபத்தைக் காட்டினால், அவர்கள் பதிலுக்கு நமக்குத் தீங்கு செய்ய முடியும். எனவே அது நிச்சயமாக நமக்கு ஒரு தீமையில்தான் போய் முடியும். 


நமக்கு கீழே உள்ளவர்களிடம் நம் கோபத்தைக் காட்டினால் நமக்கு என்ன தீங்கு விளையும்? அவர்கள் நம்மை என்ன செய்து விட முடியும்?


வள்ளுவர் சொல்கிறார், அப்படிப்பட்ட கோபம் இந்தப் பிறவியில் பழியையும், மறு பிறவியில் பாவத்தையும் கொண்டு வருவதால், அது முந்தைய கோபத்தை விட தீமை செய்வது என்கிறார். 


வலிமையானவர்களிடம் கோபத்தைக் காட்டினால், அவன் பதிலுக்கு நம்மை தாக்க முடியும், திட்ட முடியும். அதன் பலன் அங்கேயே தீர்ந்து விடும். ஆனால் மெலியார் மேல் காட்டும் கோபம் இந்தப் பிறவியிலும், மறு பிறவியிலும் தொடரும் என்பதால், அது மிகவும் தீதானது என்கிறார். 


பாடல் 



 செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்

இல்லதனின் தீய பிற.


பொருள் 


செல்லா இடத்துச் சினம்தீது = நம் கோபம் செல்லாத இடத்தில் அதைக் காட்டினால் அது நமக்கு தீமையாய் முடியும். 


 செல்இடத்தும் = கோபம் செல்லும் இடத்திலும் 


இல்லதனின் தீய பிற = அதை விட பெரிய தீமை இல்லை என்கிறார்.


பரிமேலழகர் சொல்லாத ஒன்றை நான் என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன். 


நம்மை விட கீழே உள்ளவன் என்று நாம் நினைத்து ஒருவன் மேல் நம் கோபத்தை இன்று காட்டி விடலாம். அவனே நாளை நமக்கு மேல் வந்துவிட்டால், நம் கதி?


எத்தனையோ திரைப்படங்களில் பார்க்கிறோம். ஒன்றும் இல்லாதவன் ஏதோ அதிர்ஷ்டம் அடித்து பெரிய பணக்கரனாகவோ, முதலாளியாகவோ, பெரிய அரசியல் செல்வாக்கு உள்ளவனாகவோ ஆகிவிடலாம். அப்போது அவன் நாம் முன்பு செய்தவற்றை நினைத்து நமக்கு ஒன்றுக்கு பத்தாக தீமை செய்ய முற்படலாம். 


யார் அறிவார் ? காலம் , யாரை, எங்கே கொண்டு சேர்க்கும் என்று. அடிக்கின்ற காற்றில் சில குப்பைகள் கோபுரத்தின் மேல் போய் விடலாம். 


எனவே, இன்று நமக்கு கீழே இருக்கிறான் என்று எண்ணி அவனுக்கு தீமை செய்யக் கூடாது. 


அதற்கு பெரிய உதாரணம் இராமன். 


கூனிதானே, வயதான, கூன் விழுந்த கிழவி என்ன செய்து விட முடியும்? 

இராமன் அவள் மேல் கோபப்பட்டு உண்டி வில்லை அடிக்கவில்லை. விளையாட்டாக அடித்தான். அதுவே பின்னாளில் அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பத்தைக் கொடுத்தது? தெரியாமல் செய்ததற்கே இவ்வளவு பெரிய வேதனை. தெரிந்தே செய்திருந்தால்? 


எனவே, யாரிடத்தும் கோபத்தைக் காட்டக் கூடாது என்பது பெறப்பட்டது. 



Thursday, April 24, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - நொடியன சொல் செய்து

 திருவாசகம் - அதிசயப் பத்து - நொடியன சொல் செய்து 


https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_24.html



நம்மை இந்தப் பிறவியில் ஆழ்த்தியது யார் ? 


நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கவாறு நமக்குப் பிறவியை அளிப்பவன் இறைவன். 


இறைவன் நினைத்தால், "சரிப்பா, நாளையில் இருந்து இனி யாருக்கும் ஒரு பிறவியும் கிடையாது. எல்லாருக்கும் முக்தி. இதே வேலையாப் போச்சு உங்களோட. பிறந்து, இறந்து, பாவ புன்னியங்கள் செய்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொண்டு...போதும்...இன்றோடு இனி யாருக்கும் எந்த பிறவியும் கிடையாது" என்று இறைவனால் செய்ய முடியுமா ? முடியாதா? 


முடியும்தானே? அவனால் முடியாதது எது?  பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறான். எதுக்கு இந்த துன்பம்?  


IPL போட்டி நடக்கிறது. எதுக்கு இத்தனை போட்டி, பாயிண்ட் எல்லாம். எல்லாருக்கும் கோப்பை என்று கொடுத்துவிட்டுப் போகலாம்தானே ? ஆளுக்கு ஒரு கோப்பை.  நம்மால் அது முடியுதானே? பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறோம்?  


அது ஒரு லீலை...அனுபவங்கள் ஆன்மாவைப் பக்குவப் படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் ஆன்மா சலிப்பு அடைந்து, போதும், என்று இறைவனை நாடத் தொடங்குகிறது. 


பொம்மைகளை வைத்து விளையாடும் பிள்ளை, சிறிது நேரத்தில் அவற்றை தூக்கிப் போட்டுவிட்டு, அம்மாவைத் தேடுவது போல. அவளைக் காணோம் என்றால் அழத் தொடங்கி விடும். ஏன், பொம்மைதான் இருக்கிறதே. வைத்துக் கொண்டு விளையாட வேண்டியதுதானே என்றால், அதில் சலிப்பு வந்து விடுகிறது. அம்மா வேண்டும். 


அது போல் ஆன்மாக்கள் இறைவனை தேடும் நிலை வரும். அது வரை பொம்மை விளையாட்டுத்தான். 


மணிவாசகர் சொல்கிறார் 


"இறைவா, நீ என்னை முன்னொரு காலம் உன்னை விட்டு நீக்கி, இந்த உலக வாழ்க்கையில் செலுத்தினாய். பின், நீயே எனக்கு மந்திர உபதேசம் செய்து, ஒரு துன்பமும் இல்லாமல் என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டாய். என் முன் வினைகள் என்னைத் தொடரா வண்ணம் பார்த்துக் கொண்டாய். என்னையும் ஆட்கொண்டு, உன் அடியவர்களில் ஒருவனாக சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"



பாடல் 


நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து;

நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து;

தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி

ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!



பொருள் 


நீக்கி = உன்னை விட்டு என்னை நீக்கி, விலகச் செய்து 


முன் எனைத்  = முன்பு என்னை 


தன்னொடு =  தன்னோடு 


நிலாவகை = எப்படி பிறை நிலா சிவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறதோ அது போல 


குரம்பையில் புகப் பெய்து = இந்தப் பிறவி என்ற சுழலில் என்னை விடாமல் அழுத்தி 


நோக்கி = பின் அன்புடன் நோக்கி 


நுண்ணிய = கூர்மையான, நுட்பமான 


நொடியன சொல் = ஒரு நொடியில் சொல்லும் சொல் 


செய்து = எனக்குச் சொல்லி 


நுகம் இன்றி விளாக்கைத்து = நுகம் என்றால் மாட்டுக்குக் கட்டும் நுகந் தடி. அந்த மாதிரி பிணைப்பு எதுவும் இல்லாமல் விவசாயம் செய்வது போல 


தூக்கி = என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டு 


முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து = முன்பு செய்த வினைகள் தூள் தூளாகும் படி செய்து 


எழுதரு சுடர்ச் சோதி ஆக்கி = மேல் நோக்கி எழுந்து சுடர் விடும் ஜாதியாக்கி 


ஆண்டு = ஆட்கொண்டு 


தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! = தன்னுடைய அடியவர்களில் சேர்த்துக் கொண்ட அதியசயத்தை கண்டோம். 


ஆன்மாக்கள் இந்தப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. அவற்றின் மேல் கருணை கொண்டு, அவன் அவற்றிற்கு வீடு பேறு தருகிறான். 


நொடியன சொல் என்றால் ஒரு நொடியில் கூறிய சொல். ஏதோ உபதேசம் என்றால் ஒரு நான்கு ஐந்து நாள் சொல்லுவது அல்ல. ஒரே நொடி. அவ்வளவுதான். 


அருணகிரிக்கு முருகன் சொன்னது போல - "சும்மா இரு". அவ்வளவுதான் உபதேசம். 


இங்கே மணிவாசகருக்கு என்ன சொன்னார் என்று சொல்லவில்லை. உரை செய்தவர்கள் "ஓம்" என்று பிரணவத்தை உபதேசம் செய்தார் என்கிறார்கள். 


அதற்குப் பின், நீண்ட நாள் பூஜை, புனஸ்காரம், என்றெல்லாம் இல்லை. வேறு எதுவும் இல்லை. 


"நுகம் இன்றி விளாக்கைத்து"


ஆன்மீக நூல்களின் தளம் வேறு எங்கோ இருக்கிறது. இவற்றின் உட்பொருள் காண்பது என்பது கடினம். முதலில் மேலோட்டமான பொருள் என்ன என்று தெரிந்து கொள்வோம். பின் உட்பொருளை தேட வேண்டும். 


தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். 



Thursday, April 10, 2025

திருக்குறள் - வெகுளாமை

 திருக்குறள் - வெகுளாமை 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_10.html

வெகுளுதல் என்றால் கோபம் கொள்ளுதல். 


வெகுளாமை என்றால் கோபம் கொள்ளாமல் இருத்தல். 


வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்?  கோபமே படக் கூடாது என்கிறாரா?  ஒருவன் என்ன தவறு செய்தாலும் கோபமே படக் கூடாதா? இதெல்லாம் நடக்கிற காரியமா?  நடை முறைக்கு ஒத்து வருமா?  என்று கேட்கலாம்.


பரிமேலழகர் சொல்கிறார், "வெகுளாமை என்றால் வெறுமனே கோபப் படாமல் இருத்தல் அல்ல. கோபப் பட தகுந்த காரணம் இருந்தும், கோபப் படாமல் இருத்தல்" என்கிறார். 


சில பேர் காரணமே இல்லமால் எரிந்து விழுவார்கள். 


சிலர்க்கு கோபப்பட்டு பேசுவதே இயல்பாக இருக்கும். சாதரணமாகவே பேசத் தெரியாது. 


ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.


இந்த அதிகாரம் இருப்பது துறவறவியலில். இது துறவிகளுக்குச் சொல்லப் பட்டது. 


அதானே பார்த்தேன், நமக்கு இல்லை என்று ஒதுக்கி விடக் கூடாது. துறவிக்கு இது கட்டாயம். இல்லறத்தில் இருப்பவர்கள் கடை பிடிக்கக் கூடாது என்று அல்ல. முயற்சி செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அது நோக்கி நகர வேண்டும். 


முதல் குறள் 


யாரிடம் கோபம் கொள்ளலாம், யாரிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார். 


நம்மை விட வலிமை குன்றியவர்கள் நமக்கு ஒரு தீங்கு செய்தாலும், அவர்கள் கோபம் கொள்ளக் கூடாது. நம்மை விட வலிமையானவர்கள் நமக்கு ஒரு தீங்கு செய்தால், அவர்கள் மேல் கோபப் பட்டாலும் ஒன்றும் பலன் இல்லை. எனவே எக்காலத்தும், யார் மீதும் கோபம் கொள்ளக் கூடாது என்கிறார். 


பாடல் 


செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்



பொருள் 


செல்இடத்துக் = ஒருவனுடைய சினம் செல்லும் இடத்து, அதாவது மெலியார் மேல் 


காப்பான் = சினத்தை காப்பவன் 


சினங்காப்பான் = சினத்தை கட்டுப் படுத்துபவன் என்று கூறப் படுவான் 


 அல்இடத்துக் = மற்ற இடத்து (அதாவது வலியார் மேல்) 


காக்கின்என் = கோபத்தை காட்டினால் என்ன 


காவாக்கால் என் = காட்டாவிட்டால் என்ன 


செல்லிடம், அல்லிடம் என்று இரண்டு இடங்களைக் கூறுகிறார். அது இடம் அல்ல. கோபம் செல்லும் மெலியார், கோபம் செல்லாத வலியார் என்று பொருள் கொள்ள வேண்டும். 


தெருவில் ஒரு தீயவன் இருக்கிறான். அவன் நாம் போகும் போது ஏதோ சொல்லி நம்மை கேலி செய்கிறான். அவனிடம் போய் சண்டை போட முடியுமா? அவன் பல முறை சிறை சென்று வந்தவன். அவனிடம் நம் கோபத்தைக் காட்டினால் நமக்குத்தான் மேலும் தீங்கு வரும். 


சரி, கோபப் படாமல், "அவனை மன்னித்து விட்டேன்" என்று பெருந்தன்மையாக சொன்னாலும், அவனுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. அவனை மன்னிப்பது என்பது பெரிய அறச் செயல் அல்ல. நம் உயிருக்கு பயந்து அவனை மன்னிக்கிறோம். அதில் அருள்  இல்லை. 


எனவே, அவனிடம் கோபத்தைக் காட்டினாலும், காட்டாவிட்டாலும் ஒரு பயனும் இல்லை. 


நம்மை விட மெலியவர்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள், வண்டி ஓட்டுபவர், வீட்டு காவலாளி, அலுவலகத்தில் நமக்கு கீழே வேலை செய்பவர்கள் என்று நம்மை விட வலிமை குறைந்தவர்கள் மேல் கோபத்தைக் காட்ட முடியும். அந்த சமயத்தில் கோபத்தைக் காட்டாமல் இருப்பதுவே சிறந்த அறம். 


ஏன் கோபப் படக் கூடாது? பட்டால் என்ன ஆகும்?


மேலும் சிந்திப்போம். 




Monday, April 7, 2025

திருவருட்பா - நடுக்கம்

 திருவருட்பா - நடுக்கம் 



சமீபத்தில் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அவருடைய மகன் ஏதோ வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான். என்னதான் விளையாடுகிறான் என்று பார்த்தேன். 


ஏதோ சேசிங் கேம் போல. பைக்கில் செல்லும் ஒருவன், முன்னால் செல்லும் ஒரு ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து, அதில் உள்ள ஒரு நோயாளியை வெளியே இழுத்து, பாலத்தின் மேல் இருந்து கீழே தள்ளி விட்டு, பைக்கில் பறக்கிறான். போகிற வழியில் தெருவில் சும்மா போய் கொண்டு இருப்பவர்களை காலால் எட்டி உதைத்து கீழே விழ வைக்கிறான். பைக்கில் செல்லும் மற்றவர்கள் மேல் வண்டியை விட்டு ஏத்துகிறான். 


எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதுக்காக இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவனைக் கேட்டேன். அவனோ, கேம் அங்கிள் ...என்று சொல்லிவிட்டு மேலும் மேலும் சாலையில் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அனைத்தையும் செய்து கொண்டிருந்தான். 


அவனுக்கு அதில் ஒரு வருத்தமோ, கவலையோ இல்லை. நோயாளியை பாலத்தின் மேல் இருந்து தள்ளி விடுவது என்ன விளையாட்டோ தெரியவில்லை.


சின்னப் பையன். வீடியோ கேம் விளையாடுகிறான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம். 


பெரியவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இன்று வரும் சினிமா, டிவி சீரியல்கள் போன்றவற்றில் வரும் வன்முறைக்கு அளவே இல்லை. தலையை சீவுவதும், இரத்தம் சொட்ட சொட்ட வெட்டுவதும், வெடி வைப்பதும், கையை காலை முறிப்பதும்....வன்முறை எல்லை மீறி காட்டுகிறார்கள். 


இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து மக்கள் மனம் மரத்துப் போய் விடும். சாதாரண வன்முறையில் ருசி குறைந்து மேலும் மேலும் வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும். 


மனம் மரத்து, இறுகிப் போய் விடும். உயிர்கள் மேல் அன்பு போய் விடும்.  கருணை வற்றும். 


வள்ளல் பெருமான் சொல்கிறார்....


"மீனவர்கள் மீன் வலையும், தூண்டிலும் கொண்டு போவதைப் பார்த்து உள்ளம் நடுங்கினேன்" என்கிறார். 


ஐயோ, இவ்வளவு மீன்கள் மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறி துடி துடித்து இறக்குமோ என்று என்று பதறுகிறார். மீனவர்கள் இன்னும் மீனைப் பிடிக்கவில்லை. மீன்கள் சாகவில்லை. சாகுமே, என்று நினைத்து வருந்துகிறார். 


அந்தத் தூண்டிலையும், வலையையும் கொலை கருவிகளாக பார்க்கிறார். 


உயிர்கள் மேல் எவ்வளவு கருணை இருந்தால் ஒரு மனிதன் இவ்வளவு துடிக்க முடியும். 


பாடல் 



துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்

தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்

கண்ட காலத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி

வகைகளும் கண்ட போதெல்லாம்

எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்

என் தந்தை நின் திரு உளம் அறியும்.


பொருள் 



துண்ணெனக் = துடித்து எழுந்து 


கொடியோர் = கொடியவர்கள் 


பிற உயிர் கொல்லத் = பிற உயிர்களைத் கொல்லத் 


தொடங்கிய போதெல்லாம் பயந்தேன் = தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். இவரைக் கொல்ல வில்லை. மற்ற உயிர்களை கொல்வதை அறிந்து இவர் பயப்படுகிறார். 



கண்ணினால் = என்னுடைய கண்களால் 


ஐயோ = ஐயோ 


பிற உயிர் பதைக்கக் = பிற உயிர்கள் பதை பதைக்க துடிப்பதை 

 


கண்ட காலத்திலும் பதைத்தேன் = கண்ட போது பதைத்தேன் 


மண்ணினில் = மண்ணில் (கடற் கரையில்) 


வலையும் = மீன் பிடிக்கும் வலையும் 


தூண்டிலும் = தூண்டிலும் 


 கண்ணி = மீன் பிடிக்கும் கண்ணிகளும் 


வகைகளும் = அது போன்ற கருவிகளையும் 


கண்ட போதெல்லாம் = ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் 


எண்ணி = அவை எப்படி எல்லாம் உயிர்களை வதைக்குமோ என்று எண்ணி 


என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் = என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் 


என் தந்தை நின் திரு உளம் அறியும் = என் தந்தை போன்றவனே, நீ அறிவாய் 

.

மற்ற உயிர்களுக்கு துன்பம் வருமே, இவர்கள் துன்பம் செய்வார்களே என்று இவர் பதறுகிறார். 


ஜீவ காருண்யத்தின் உச்சம். 



Thursday, April 3, 2025

திருவாசகம் - மெய்யெனக் கருதி

திருவாசகம் - மெய்யெனக் கருதி 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_3.html


இன்பம் வேண்டாம் என்று யார் சொல்லுவார்கள். 


இன்பத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சலும். 


இன்பம் எங்கே இருக்கிறது?  


பொருள்களில், அனுபவங்களில் இருப்பதாகத் தோன்றுகிறது. 


அது உண்மையா?


உருசியான உணவு. நெய் மணக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. மருத்துவர் சொன்னது ஞாபகம் வருகிறது. அரிசிச் சோறு சாப்பிட்டால் அது தான் கடைசிச் சாப்பாடு என்று.   கை வைக்க மனம் வருமா? 


அருமையான இருக்கை. மெத் மெத்தென்று இருக்கிறது. சாய்ந்து கொள்ளலாம். உட்காரும் இடத்தில் ஒரு கட்டி, அல்லது மூல வியாதி. உட்கார மனம் வருமா? பயம் வரும். 


பொருளில் இல்லை இன்பம். 


அனுபவிக்கும் உடலில் இருக்கிறது. ஒற்றைத் தலை வலி மண்டையைப் பிளக்கும் போது, சுவையான ஐஸ் கிரீம் கொடுத்தால் ருசிக்க மனம் வருமா?


சரி, உடல்தான் ஆதாரம் என்று தெரிகிறது. 


இந்த உடல் எப்படிப்பட்டது?


சொல்லவே வேண்டாம். நீரும் சலமும் ஒழுகிக் கொண்டே இருக்கும் ஒரு ஓட்டைப் பாத்திரம். எந்நேரமும் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் இடுகாட்டுக்கு ஒரு அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்கும். 


இந்த உடலுக்கா இந்தப் பாடு?  


வயதானவர்கள், மருத்துவ மனைகளில் இருக்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். மூக்கில், வாயில், கையில், காலில் என்று எங்கு பார்த்தாலும் ஏதேதோ வயர்களை சொருகி இருப்பார்கள். கருவிகளோடு ஒரு கருவியாக கிடப்பார்கள். 


மல சலம் போவது கூடத் தெரியாது. 


ஏதோ இந்த உடல் கால காலமாய் நம்மோடு இருக்கப் போவது போலவும், இருக்கின்ற இன்பங்களை எல்லாம் ஒன்று விடாமல் அனுபவித்து விடலாம் என்றும் மனிதன் கணக்குப் போடுகிறான். 


"இந்த உடலை மெய் எனக் கருதி, துன்பக் கடலில் விழுந்து அழுந்துவேனை ஒளி வீசும் என் தந்தையான சிவன் என்னை ஆட்கொண்டு தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"


பாடல் 




பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை

இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை

முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி

அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே


பொருள் 


பொத்தை = ஓட்டை. ஒன்பது ஓட்டைகள் 


ஊன் = மாமிசம் நிறைந்த 


சுவர் = மாமிசத்தை சுவர் போல் பூசி 


புழுப் = புழுக்கள் 


பொதிந் து = நிறைந்த 


உளுத்த = உறுதியில்லாத 


அசும் பொழுகிய = அசும் என்ற நின நீர் 


பொய்க்கூரை = பொய்யான கூரை 


இத்தை = இந்த உடலை 


மெய்யெனக் கருதி = உண்மையென்று கருதி 


நின்றிடர்க் = நின்று இடர். அதில் நின்று துன்பக் 


கடற் = கடலில் 


சுழித்தலைப்  = சுழலில் 


படுவேனை = மாட்டிக் கொண்டு தவிக்கும் என்னை 


முத்து = முத்து 


மாமணி = பெரி மணி 


மாணிக்க = மாணிக்கம் 


வயிரத்த = வைரம் 


பவளத்தின் = பவளம் 


முழுச்சோதி = இவற்றின் முழு ஒளியை  கொண்ட சோதி வடிவான 


அத்தன்  =என் தந்தை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்த்ஹில் 


கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயங் கண்டாமே = அதிசயத்தைக் கண்டு கொண்டோம் 




Tuesday, April 1, 2025

திருக்குறள் - வாய்மை - மெய்யா கண்டவற்றுள்

 திருக்குறள் - வாய்மை - மெய்யா கண்டவற்றுள் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post.html

ஒரு நூலை எப்படிப் படிக்க வேண்டும்?



கதை புத்தகம் என்றால் எப்படி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். 


பாட நூல்கள், அறிவு நூல்கள், அற நூல்கள் போன்றவற்றை எப்படிப் படிப்பது?  


ஏன், அதில் என்ன சிக்கல்? மற்ற நூல்களைப் போல அவற்றையும் படிக்க வேண்டியதுதானே?  புரியாவிட்டால் அகராதி, இன்டர்நெட் எல்லாம் இருக்கே. அதில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று நாம் நினைக்கலாம். 


சரி, தெரிந்து கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அது சரிதானா என்று எப்படி அறிவது?  நாம் ஏதோ ஒன்றை புரிந்து கொள்கிறோம். அதுதான் சரி என்று நம் வாழ்வை நடத்தலாம். ஒரு வேளை நம் புரிதல் தவறாக இருந்து விட்டால்?  வாழ் நாள் பூராவும் தவறாகவே வாழ்ந்திருப்போம் அல்லவா?  எவ்வளவு பெரிய தவறு அது.


உயரிய நூல்களை ஒரு சிறந்த ஆசிரியர் மூலம் படிக்க வேண்டும் என்று நம் முன்னவர்கள் நினைத்தார்கள். தானாக படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வள்ளுவர் சொல்கிறார் "நான் மெய்யாக கண்டவற்றில் வாய்மையை விட சிறந்த ஒன்றும் எதுவும் இல்லை" என்று. 


பாடல் 


யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்

வாய்மையி னல்ல பிற.


பொருள் 


யாமெய்யாக் = யாம் மெய்யாக 


கண்டவற்று ளில்லை = கண்டவற்றுள் இல்லை 


யெனைத்தொன்றும் = வேறு ஒன்றும் 


வாய்மையி னல்ல பிற = வாய்மையைத் தவிர பிற ஒன்று.


நாம் படித்துக் கொண்டு போனால், "சத்தியமாகச் சொல்கிறேன். வாய்மைதான் உயர்ந்த அறம்" என்று வள்ளுவர் கூறுவதாக நினைத்துக் கொண்டு மேலே போய் விடுவோம். 


பரிமேலழகர் போன்ற உயர்ந்த உரை ஆசிரியர்கள் மூலம் படிப்பதன் மூலம் இதில் எவ்வளவு நுண்ணிய, ஆழமான அர்த்தங்கள் இருக்கிறது என்று புரியும். 


"மெய்யா" என்பதற்கு என்ன அர்த்தம்? உண்மையாக, சத்தியமாக என்று நாம் பொருள் சொல்வோம். பரிமேலழகர் சொல்கிறார் "மெய் நூல்களாக கண்டவற்றுள்" என்று.  உலகில் எவ்வளவோ உண்மை பற்றி ஆராய்ந்து சொல்லும் நூல்கள் இருக்கின்றன. அந்த அனைத்து நூல்களிலும் என்கிறார். 


எதுக்கு அனாவசியமா நேரத்தை வீணாக்குகிறாய். நான் எல்லா நூல்களையும் படித்துவிட்டுச் சொல்கிறேன் என்கிறார் வள்ளுவர். 


அது சரி, மெய் நூல்கள் என்றால் என்ன என்ற கேள்வி வரும் அல்லவா?  ஆளாளுக்கு ஒரு நூலை கொண்டு வருவார்கள். இதுதான் உண்மையான மெய் நூல் என்று. எப்படி இனம் காண்பது?  


பரிமேலழகர் சொல்கிறார். பிரமிக்க வைக்கிறது. 


"தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள்"


அவர் உரைக்கு,  நாம் உரை காணவேண்டும். ...:)


"தம்கண் மயக்கம் இன்மையின்" - அதாவது தனக்கு ஒரு குழப்பமும் இல்லாமல். எது சரி, எது தவறு என்ற குழப்பம் எதுவும் இல்லாமல். 


"பொருள்களை"  உலகில் உள்ள பொருள்களை 


உள்ளவாறு உணரவல்லராய்க் = அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே உணர வல்லவர்கள். 


காம வெகுளிகள் இன்மையின் = காமமும், கோபமும் இல்லாமல். அதாவது விருப்பு, வெறுப்பு, இல்லாமல் 


அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் = அந்தப் பொருள்களை உண்மையாக உணர்ந்தது மட்டும் அல்ல, உணர்ந்தவாறே சொல்லவும். சிலருக்கு உண்மை தெரியும். இருந்தாலும், சுய இலாபம் கருதி உண்மையை மறைத்து, திரித்துச் சொல்லி விடுவார்கள். அப்படி அல்லாமல். 


வல்லராய = திறமை உள்ளவர்களாக 


இறைவர் = அப்படி இருக்கக் கூடியவர் உலகிலேயே ஒருவர்தான். அவர்தான் கடவுள். 


அருளான் = அந்தக் கடவுளின் அருள் பெற்ற 


உலகத்தார் = உலகில் உள்ளவர்கள் 


உறுதி = நிலையான வீடு பேறு 


எய்துதற் பொருட்டுக் = அடைவதற்காக 


கூறிய ஆகமங்கள் = கூறப்பட்ட ஆகமங்கள் 


அதாவது, இறை அருள் பெற்ற பெரியவர்கள், சான்றோர்கள், , உலக மக்கள் நன்மை அடையும் படி சொல்லப்பட்ட ஆகம நூல்கள்தான் மெய்யான நூல்கள் என்கிறார். 


அப்படி என்றால், மற்றவை உண்மையை எடுத்துச் சொல்லும் நூல்கள் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். 


அப்படிப்பட்ட அனைத்து மெய் நூல்களிலும், வாய்மையை விட உயர்ந்த அறம் ஒன்றும் இல்லை என்கிறார். 


கவனிக்க வேண்டியது, மெய் நூல்கள் பல இருக்கின்றன. நான் படிக்கும் நூல்தான் மெய் நூல் என்றும் மற்றவை எல்லாம் பொய் என்றும் நினைக்கக் கூடாது. வள்ளுவர் அவற்றை எல்லாம் படித்து இருக்கிறார். 


இதெல்லாம் பரிமேலழகர் இல்லாவிட்டால் தெரிந்தே இருக்காது. 


எனவே, உயரிய நூல்களை ஆசிரியர் துணை கொண்டு அணுகுவது நலம். 


வாய்மை அதிகாரம் முற்றிற்று.