Monday, April 7, 2025

திருவருட்பா - நடுக்கம்

 திருவருட்பா - நடுக்கம் 



சமீபத்தில் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அவருடைய மகன் ஏதோ வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான். என்னதான் விளையாடுகிறான் என்று பார்த்தேன். 


ஏதோ சேசிங் கேம் போல. பைக்கில் செல்லும் ஒருவன், முன்னால் செல்லும் ஒரு ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து, அதில் உள்ள ஒரு நோயாளியை வெளியே இழுத்து, பாலத்தின் மேல் இருந்து கீழே தள்ளி விட்டு, பைக்கில் பறக்கிறான். போகிற வழியில் தெருவில் சும்மா போய் கொண்டு இருப்பவர்களை காலால் எட்டி உதைத்து கீழே விழ வைக்கிறான். பைக்கில் செல்லும் மற்றவர்கள் மேல் வண்டியை விட்டு ஏத்துகிறான். 


எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதுக்காக இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவனைக் கேட்டேன். அவனோ, கேம் அங்கிள் ...என்று சொல்லிவிட்டு மேலும் மேலும் சாலையில் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அனைத்தையும் செய்து கொண்டிருந்தான். 


அவனுக்கு அதில் ஒரு வருத்தமோ, கவலையோ இல்லை. நோயாளியை பாலத்தின் மேல் இருந்து தள்ளி விடுவது என்ன விளையாட்டோ தெரியவில்லை.


சின்னப் பையன். வீடியோ கேம் விளையாடுகிறான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம். 


பெரியவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இன்று வரும் சினிமா, டிவி சீரியல்கள் போன்றவற்றில் வரும் வன்முறைக்கு அளவே இல்லை. தலையை சீவுவதும், இரத்தம் சொட்ட சொட்ட வெட்டுவதும், வெடி வைப்பதும், கையை காலை முறிப்பதும்....வன்முறை எல்லை மீறி காட்டுகிறார்கள். 


இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து மக்கள் மனம் மரத்துப் போய் விடும். சாதாரண வன்முறையில் ருசி குறைந்து மேலும் மேலும் வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும். 


மனம் மரத்து, இறுகிப் போய் விடும். உயிர்கள் மேல் அன்பு போய் விடும்.  கருணை வற்றும். 


வள்ளல் பெருமான் சொல்கிறார்....


"மீனவர்கள் மீன் வலையும், தூண்டிலும் கொண்டு போவதைப் பார்த்து உள்ளம் நடுங்கினேன்" என்கிறார். 


ஐயோ, இவ்வளவு மீன்கள் மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறி துடி துடித்து இறக்குமோ என்று என்று பதறுகிறார். மீனவர்கள் இன்னும் மீனைப் பிடிக்கவில்லை. மீன்கள் சாகவில்லை. சாகுமே, என்று நினைத்து வருந்துகிறார். 


அந்தத் தூண்டிலையும், வலையையும் கொலை கருவிகளாக பார்க்கிறார். 


உயிர்கள் மேல் எவ்வளவு கருணை இருந்தால் ஒரு மனிதன் இவ்வளவு துடிக்க முடியும். 


பாடல் 



துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்

தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்

கண்ட காலத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி

வகைகளும் கண்ட போதெல்லாம்

எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்

என் தந்தை நின் திரு உளம் அறியும்.


பொருள் 



துண்ணெனக் = துடித்து எழுந்து 


கொடியோர் = கொடியவர்கள் 


பிற உயிர் கொல்லத் = பிற உயிர்களைத் கொல்லத் 


தொடங்கிய போதெல்லாம் பயந்தேன் = தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். இவரைக் கொல்ல வில்லை. மற்ற உயிர்களை கொல்வதை அறிந்து இவர் பயப்படுகிறார். 



கண்ணினால் = என்னுடைய கண்களால் 


ஐயோ = ஐயோ 


பிற உயிர் பதைக்கக் = பிற உயிர்கள் பதை பதைக்க துடிப்பதை 

 


கண்ட காலத்திலும் பதைத்தேன் = கண்ட போது பதைத்தேன் 


மண்ணினில் = மண்ணில் (கடற் கரையில்) 


வலையும் = மீன் பிடிக்கும் வலையும் 


தூண்டிலும் = தூண்டிலும் 


 கண்ணி = மீன் பிடிக்கும் கண்ணிகளும் 


வகைகளும் = அது போன்ற கருவிகளையும் 


கண்ட போதெல்லாம் = ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் 


எண்ணி = அவை எப்படி எல்லாம் உயிர்களை வதைக்குமோ என்று எண்ணி 


என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் = என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் 


என் தந்தை நின் திரு உளம் அறியும் = என் தந்தை போன்றவனே, நீ அறிவாய் 

.

மற்ற உயிர்களுக்கு துன்பம் வருமே, இவர்கள் துன்பம் செய்வார்களே என்று இவர் பதறுகிறார். 


ஜீவ காருண்யத்தின் உச்சம். 



Thursday, April 3, 2025

திருவாசகம் - மெய்யெனக் கருதி

திருவாசகம் - மெய்யெனக் கருதி 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_3.html


இன்பம் வேண்டாம் என்று யார் சொல்லுவார்கள். 


இன்பத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சலும். 


இன்பம் எங்கே இருக்கிறது?  


பொருள்களில், அனுபவங்களில் இருப்பதாகத் தோன்றுகிறது. 


அது உண்மையா?


உருசியான உணவு. நெய் மணக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. மருத்துவர் சொன்னது ஞாபகம் வருகிறது. அரிசிச் சோறு சாப்பிட்டால் அது தான் கடைசிச் சாப்பாடு என்று.   கை வைக்க மனம் வருமா? 


அருமையான இருக்கை. மெத் மெத்தென்று இருக்கிறது. சாய்ந்து கொள்ளலாம். உட்காரும் இடத்தில் ஒரு கட்டி, அல்லது மூல வியாதி. உட்கார மனம் வருமா? பயம் வரும். 


பொருளில் இல்லை இன்பம். 


அனுபவிக்கும் உடலில் இருக்கிறது. ஒற்றைத் தலை வலி மண்டையைப் பிளக்கும் போது, சுவையான ஐஸ் கிரீம் கொடுத்தால் ருசிக்க மனம் வருமா?


சரி, உடல்தான் ஆதாரம் என்று தெரிகிறது. 


இந்த உடல் எப்படிப்பட்டது?


சொல்லவே வேண்டாம். நீரும் சலமும் ஒழுகிக் கொண்டே இருக்கும் ஒரு ஓட்டைப் பாத்திரம். எந்நேரமும் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் இடுகாட்டுக்கு ஒரு அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்கும். 


இந்த உடலுக்கா இந்தப் பாடு?  


வயதானவர்கள், மருத்துவ மனைகளில் இருக்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். மூக்கில், வாயில், கையில், காலில் என்று எங்கு பார்த்தாலும் ஏதேதோ வயர்களை சொருகி இருப்பார்கள். கருவிகளோடு ஒரு கருவியாக கிடப்பார்கள். 


மல சலம் போவது கூடத் தெரியாது. 


ஏதோ இந்த உடல் கால காலமாய் நம்மோடு இருக்கப் போவது போலவும், இருக்கின்ற இன்பங்களை எல்லாம் ஒன்று விடாமல் அனுபவித்து விடலாம் என்றும் மனிதன் கணக்குப் போடுகிறான். 


"இந்த உடலை மெய் எனக் கருதி, துன்பக் கடலில் விழுந்து அழுந்துவேனை ஒளி வீசும் என் தந்தையான சிவன் என்னை ஆட்கொண்டு தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"


பாடல் 




பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை

இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை

முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி

அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே


பொருள் 


பொத்தை = ஓட்டை. ஒன்பது ஓட்டைகள் 


ஊன் = மாமிசம் நிறைந்த 


சுவர் = மாமிசத்தை சுவர் போல் பூசி 


புழுப் = புழுக்கள் 


பொதிந் து = நிறைந்த 


உளுத்த = உறுதியில்லாத 


அசும் பொழுகிய = அசும் என்ற நின நீர் 


பொய்க்கூரை = பொய்யான கூரை 


இத்தை = இந்த உடலை 


மெய்யெனக் கருதி = உண்மையென்று கருதி 


நின்றிடர்க் = நின்று இடர். அதில் நின்று துன்பக் 


கடற் = கடலில் 


சுழித்தலைப்  = சுழலில் 


படுவேனை = மாட்டிக் கொண்டு தவிக்கும் என்னை 


முத்து = முத்து 


மாமணி = பெரி மணி 


மாணிக்க = மாணிக்கம் 


வயிரத்த = வைரம் 


பவளத்தின் = பவளம் 


முழுச்சோதி = இவற்றின் முழு ஒளியை  கொண்ட சோதி வடிவான 


அத்தன்  =என் தந்தை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்த்ஹில் 


கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயங் கண்டாமே = அதிசயத்தைக் கண்டு கொண்டோம் 




Tuesday, April 1, 2025

திருக்குறள் - வாய்மை - மெய்யா கண்டவற்றுள்

 திருக்குறள் - வாய்மை - மெய்யா கண்டவற்றுள் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post.html

ஒரு நூலை எப்படிப் படிக்க வேண்டும்?



கதை புத்தகம் என்றால் எப்படி வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். 


பாட நூல்கள், அறிவு நூல்கள், அற நூல்கள் போன்றவற்றை எப்படிப் படிப்பது?  


ஏன், அதில் என்ன சிக்கல்? மற்ற நூல்களைப் போல அவற்றையும் படிக்க வேண்டியதுதானே?  புரியாவிட்டால் அகராதி, இன்டர்நெட் எல்லாம் இருக்கே. அதில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டியதுதான் என்று நாம் நினைக்கலாம். 


சரி, தெரிந்து கொள்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அது சரிதானா என்று எப்படி அறிவது?  நாம் ஏதோ ஒன்றை புரிந்து கொள்கிறோம். அதுதான் சரி என்று நம் வாழ்வை நடத்தலாம். ஒரு வேளை நம் புரிதல் தவறாக இருந்து விட்டால்?  வாழ் நாள் பூராவும் தவறாகவே வாழ்ந்திருப்போம் அல்லவா?  எவ்வளவு பெரிய தவறு அது.


உயரிய நூல்களை ஒரு சிறந்த ஆசிரியர் மூலம் படிக்க வேண்டும் என்று நம் முன்னவர்கள் நினைத்தார்கள். தானாக படித்துத் தெரிந்து கொள்ள முடியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


வள்ளுவர் சொல்கிறார் "நான் மெய்யாக கண்டவற்றில் வாய்மையை விட சிறந்த ஒன்றும் எதுவும் இல்லை" என்று. 


பாடல் 


யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்

வாய்மையி னல்ல பிற.


பொருள் 


யாமெய்யாக் = யாம் மெய்யாக 


கண்டவற்று ளில்லை = கண்டவற்றுள் இல்லை 


யெனைத்தொன்றும் = வேறு ஒன்றும் 


வாய்மையி னல்ல பிற = வாய்மையைத் தவிர பிற ஒன்று.


நாம் படித்துக் கொண்டு போனால், "சத்தியமாகச் சொல்கிறேன். வாய்மைதான் உயர்ந்த அறம்" என்று வள்ளுவர் கூறுவதாக நினைத்துக் கொண்டு மேலே போய் விடுவோம். 


பரிமேலழகர் போன்ற உயர்ந்த உரை ஆசிரியர்கள் மூலம் படிப்பதன் மூலம் இதில் எவ்வளவு நுண்ணிய, ஆழமான அர்த்தங்கள் இருக்கிறது என்று புரியும். 


"மெய்யா" என்பதற்கு என்ன அர்த்தம்? உண்மையாக, சத்தியமாக என்று நாம் பொருள் சொல்வோம். பரிமேலழகர் சொல்கிறார் "மெய் நூல்களாக கண்டவற்றுள்" என்று.  உலகில் எவ்வளவோ உண்மை பற்றி ஆராய்ந்து சொல்லும் நூல்கள் இருக்கின்றன. அந்த அனைத்து நூல்களிலும் என்கிறார். 


எதுக்கு அனாவசியமா நேரத்தை வீணாக்குகிறாய். நான் எல்லா நூல்களையும் படித்துவிட்டுச் சொல்கிறேன் என்கிறார் வள்ளுவர். 


அது சரி, மெய் நூல்கள் என்றால் என்ன என்ற கேள்வி வரும் அல்லவா?  ஆளாளுக்கு ஒரு நூலை கொண்டு வருவார்கள். இதுதான் உண்மையான மெய் நூல் என்று. எப்படி இனம் காண்பது?  


பரிமேலழகர் சொல்கிறார். பிரமிக்க வைக்கிறது. 


"தம்கண் மயக்கம் இன்மையின் பொருள்களை உள்ளவாறு உணரவல்லராய்க் காம வெகுளிகள் இன்மையின் அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் வல்லராய இறைவர், அருளான் உலகத்தார் உறுதி எய்துதற் பொருட்டுக் கூறிய ஆகமங்கள்"


அவர் உரைக்கு,  நாம் உரை காணவேண்டும். ...:)


"தம்கண் மயக்கம் இன்மையின்" - அதாவது தனக்கு ஒரு குழப்பமும் இல்லாமல். எது சரி, எது தவறு என்ற குழப்பம் எதுவும் இல்லாமல். 


"பொருள்களை"  உலகில் உள்ள பொருள்களை 


உள்ளவாறு உணரவல்லராய்க் = அவை எப்படி இருக்கின்றனவோ அப்படியே உணர வல்லவர்கள். 


காம வெகுளிகள் இன்மையின் = காமமும், கோபமும் இல்லாமல். அதாவது விருப்பு, வெறுப்பு, இல்லாமல் 


அவற்றை உணர்ந்தவாறே உரைக்கவும் = அந்தப் பொருள்களை உண்மையாக உணர்ந்தது மட்டும் அல்ல, உணர்ந்தவாறே சொல்லவும். சிலருக்கு உண்மை தெரியும். இருந்தாலும், சுய இலாபம் கருதி உண்மையை மறைத்து, திரித்துச் சொல்லி விடுவார்கள். அப்படி அல்லாமல். 


வல்லராய = திறமை உள்ளவர்களாக 


இறைவர் = அப்படி இருக்கக் கூடியவர் உலகிலேயே ஒருவர்தான். அவர்தான் கடவுள். 


அருளான் = அந்தக் கடவுளின் அருள் பெற்ற 


உலகத்தார் = உலகில் உள்ளவர்கள் 


உறுதி = நிலையான வீடு பேறு 


எய்துதற் பொருட்டுக் = அடைவதற்காக 


கூறிய ஆகமங்கள் = கூறப்பட்ட ஆகமங்கள் 


அதாவது, இறை அருள் பெற்ற பெரியவர்கள், சான்றோர்கள், , உலக மக்கள் நன்மை அடையும் படி சொல்லப்பட்ட ஆகம நூல்கள்தான் மெய்யான நூல்கள் என்கிறார். 


அப்படி என்றால், மற்றவை உண்மையை எடுத்துச் சொல்லும் நூல்கள் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும். 


அப்படிப்பட்ட அனைத்து மெய் நூல்களிலும், வாய்மையை விட உயர்ந்த அறம் ஒன்றும் இல்லை என்கிறார். 


கவனிக்க வேண்டியது, மெய் நூல்கள் பல இருக்கின்றன. நான் படிக்கும் நூல்தான் மெய் நூல் என்றும் மற்றவை எல்லாம் பொய் என்றும் நினைக்கக் கூடாது. வள்ளுவர் அவற்றை எல்லாம் படித்து இருக்கிறார். 


இதெல்லாம் பரிமேலழகர் இல்லாவிட்டால் தெரிந்தே இருக்காது. 


எனவே, உயரிய நூல்களை ஆசிரியர் துணை கொண்டு அணுகுவது நலம். 


வாய்மை அதிகாரம் முற்றிற்று.