Thursday, February 27, 2025

திருவாசகம் - பித்தன்

 திருவாசகம் - பித்தன் 


அதிக பிரசங்கித்தனம் என்று கேட்டு இருக்கீர்களா?  இன்று நான் செய்ய இருப்பதுதான் அது. 


இதை அதிகப் பிரசங்கித்தனம் என்று தள்ளாமல் ஏதோ அறியாப் பிள்ளை உளறுகிறது என்று பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 


ஏன் என்று பின்னால் சொல்கிறேன். 


போகின்ற வழியில் ஒரு நல்ல உயர்தர உணவு விடுதி இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பசிக்கிறது. உணவின் வாசம் மூக்கைத் துளைகிறது. நெய் வாசம், முந்திரிப்பருப்பு, ஏலக்காய் போன்றவற்றின் நறுமணம் உங்களை அழைக்கிறது. விலை ஒன்றும் அதிகம் கிடையாது. தூய்மையான விடுதி. பரிவான சேவை. 


அதில் இருந்து கொஞ்சம் தள்ளி, தெருவோரம் ஈ மொய்க்கும் ஒரு கடை. உணவு வகைகள எல்லாம் திறந்து கிடக்கிறது. ஒரு அழுக்குத் துணியைப் போட்டு மூடி இருக்கிறார்கள். தூசி படிந்த தட்டு, குவளை. பார்த்தாலே குமட்டுகிறது. 


முதலில் உள்ள விடுதியை விட்டு விட்டு இரண்டாவது விடுதியில் போய் யாராவது உண்பார்களா?  அப்படி உண்பவர்களை என்ன என்று சொல்லுவது?  பித்தன், பைத்தியக்காரன்  என்று தானே  சொல்ல முடியும்?


மணிவாசகர் சொல்கிறார், 


"இறைவா, உன் அடியவர்கள் சென்ற பாதையில் சென்று, உன் திருவருளை அடைய முயற்சிக்காமல், இந்த பிறவிக் கடலில் விழுந்து அழுந்தும் என்னை, பாவங்கள் பல செய்து நரகுக்கு போக இருந்த என்னை பித்தன் என்று ஊரார் சொல்லுவது சரிதானே.  இறையருள் அடைய வழி தெரிந்தும் அந்தப் பாதையில்  செல்லாமல்,   இந்த உலக வாழ்வில் கிடந்து உழன்று, பாவங்கள் செய்யும் என்னை பைத்தியம் என்று சொல்லாமல் என்ன என்று சொல்லுவது. அப்படிப் படி நரகில் விழ இருந்த என்னை, எப்படி நீ காப்பாற்றி, அருள் செய்து, ஆண்டுகொண்டாய்...என்ன ஒரு அதிசயம்...பைத்தியத்துக்கு அருள் புரிந்த அதிசயம் " என்று வியக்கிறார். 


பாடல் 


`பித்தன்' என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்:

ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே,

செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை,

அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள் 


`பித்தன்' என்று, = பித்து பிடித்தவன் என்று 


எனை  = என்னை 


உலகவர் = உலகில் உள்ளவர்கள் 


பகர்வது = சொல்வதற்கு 


ஓர் காரணம் = ஒரு காரணம் இருக்கிறது 


இது கேளீர் = அது என்ன என்று கேளுங்கள் 


ஒத்துச் சென்று = இறைவனின் அடியவர்கள் பாதையில் சென்று 


தன் திருவருள் = அவனுடைய திருவருளை 


கூடிடும் = அடைந்திடும் 


உபாயம் அது அறியாமே = அந்த வழியை அறியாமல் 


செத்துப்போய் = பிறந்து, இறந்து 


 அரு நரகிடை  = கொடுமையான் நரகத்தில் 


வீழ்வதற்கு  = வீழ்வதற்கு 


ஒருப்படுகின்றேனை  = உடன்படும் என்னை 


அத்தன் = என் அத்தன் 


 ஆண்டு = ஆட்கொண்டு 


 தன் அடியரில் = அவனுடைய அடியவர் கூட்டத்தில் 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே = அதிசயத்தை நான் கண்டேன் !



இதில் அதிகப் பிரசங்கித்தனம் எங்கே வந்தது?


எனக்கு இதில் கொஞ்சம் மாற்றி யோசித்தால் என்ன என்று தோன்றுகிறது. அதுதான் அதிகப் பிரசங்கித்தனம் என்று முதலிலேயே சொல்லிவிட்டேன். 


பக்தர்கள் பித்து பிடித்தவர்கள் போல் இருப்பது பெரிய அதிசயம் இல்லை. சாதாரண ஆண் பெண் காதல் கொண்டவர்களே கொஞ்சம் பித்து பிடித்தவர் போல புலம்புவதை கேட்டிருக்கிறோம். இறைவன் மேல் பக்தி என்றால் கேட்க வேண்டுமா? அது அதிசயமா? 


இறைவன் அடியவர்களுக்கு அருள் புரிவதும் அதிசயம் அல்ல. பின் எதைப் பார்த்து மணிவாசகர் அதிசயிக்கிறார்?


"`பித்தன்' என்று, எனை உலகவர்"


என்று இருப்பதை 


`பித்தன்' என்று, உனை உலகவர்"


அதாவது எனை என்பதை உனை என்று மாற்றிப் பொருள் கொண்டால் என்ன? 


அப்படிப் பார்த்தால் அதிசயப்பட நிறைய இடம் இருக்கிறது. 


"சிவ பெருமானை உன்னை பித்தன் என்று உலகோர் சொல்லுவது சரிதான். எவ்வளவோ நல்லவர்கள் இருக்க, ஒன்றும் இல்லாத என்னை ஆட்கொண்டு, உன் அடியவர்களோடு சேர்த்துக் கொண்டாயே, உன்னை பித்தன் என்று சொல்லாமல் வேறு என்ன என்று சொல்லுவது"...என்று வியக்கிறார் அடிகளார். 


சிவனுக்கு பித்தன் என்று பெயர் இருக்கிறது. 


"பித்தா பிறை சூடி" என்று சுந்தரரும் பாடி இருக்கிறார். 


"அத்தனே! அண்டர் அண்டம் ஆய் நின்ற ஆதியே! யாதும் ஈறு இல்லாச் சித்தனே!

பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே! சிவபெருமானே!

பித்தனே! எல்லா உயிரும் ஆய்த் தழைத்து, பிழைத்து, அவை அல்லை ஆய் நிற்கும்

எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே"


என்று மணிவாசகரும் பாடி இருக்கிறார். 


அது மட்டும் அல்ல, 


நமக்கு எல்லாம் எங்கே அவன் அருள் செய்யப்போகிறான் என்று சந்தேகம் கொள்ள வேண்டாம், அவன் கட்டாயம் அருள் செய்வான். ஆள் தராதரம் பார்ப்பது இல்லை அவன். ஏன் என்றால் அவன் ஒரு பித்தன். இப்படியும் ஒரு கடவுள் என்று அதிசயிக்கிறார் அடிகளார். 



Saturday, February 22, 2025

கந்தரலங்காரம் - வேன்மறவேன்

கந்தரலங்காரம் - வேன்மறவேன் 



உடுக்கை ஒலி கேட்டு இருகிறீர்களா?  டுண் டுண் டுண் என்று அடிக்கும். அதையே கொஞ்சம் மெல்லமாக, வேகமாக, அழுத்தமாக அடித்தால் அந்த சத்தமே வேறு வேறு விதத்தில் கேட்கும். அந்த சத்தத்தை மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். 


அது ஒரு சுடுகாடு. இரவு நேரம். அங்கொன்றும், இங்கொன்றுமாக பிணங்கள் எரித்து கொண்டு இருக்கின்றன. அந்த சிதைகளில் இருந்து நெருப்பு எழுந்து காற்றில் சுழன்று மேலே செல்கிறது. புகை ஒரு பக்கம். அந்த இடு காட்டில் பேய்கள் அங்கும் இங்கும் ஓலமிட்டுக் கொண்டு அலைகின்றன. 


அவை உடுக்கு அடிப்பதைப் போல டுண் டூண் டுண் என்று சப்தமிடுகின்றன. எங்கு தெரியுமா சூராதி அசுரர்களை கொன்று புதைத்த சுடுகாட்டில். 


அசுரர்களை யார் கொன்றது?  முருகப் பெருமான். 


அந்த முருகப் பெருமானை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்  என்கிறார். 


ஒரு போதும் என்றால் ஒரு போதுமா?  எப்போதும் எப்படி நினைக்க முடியும்?  அந்த ஒரு போதும் என்பதற்கு ஏதாவது வரையறை, விலக்கு இருக்கிறதா?  


இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் தருகிறார் அருணகிரியார். 


இளம் பெண்களோடு சேர்ந்து கலவியில் ஈடுபட்டு, அதில் களைத்து, சோர்ந்து போய் இருக்கும் அந்த நேரத்தில் கூட முருகனை மறக்க மாட்டேன் என்கிறார். 


"கற்கண்டு போன்ற இனிமையான குரல் உடைய மென்மையான பெண்களோடு கலவியில் ஈடுபட்டு, அந்த இன்பக் கள்ளை மொண்டு மொண்டு குடித்து களைத்து, அயர்ந்து போய் இருக்கும் அந்த வேளையிலும், பேய்கள் நடமாடும் சுடுகாட்டில் சூராதி அரக்கர்களை கொன்று புதைத்த முருகனை மறக்க மாட்டேன்" என்கிறார். 


பாடல் 



 

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை

மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள்

டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.


பொருள் 


கண்டுண்ட = கற்கண்டை உண்டது போன்ற 


சொல்லியர் = இனிய குரலை உடைய 


மெல்லியர் = மென்மையான பெண்கள் 


காமக் கலவிக் கள்ளை = அவர்களோடு காம கலவியில் ஈடுபட்டு, அந்தக் காமமாகிய கள்ளை  


மொண்டுண் டயர்கினும் = மொண்டு உண்டு அயர்ந்து இருக்கும் அந்த நேரத்திலும் 


வேன்மற வேன் = வேலை மறவேன் 


முது  = வயது முதிர்ந்த 


கூளித் = ஆண் பேய் 


திரள் = கூட்டமாக திரண்டு 


டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு

டிண்டிண் = என்று சப்தம் இட்டுக் கொண்டு 

 


டெனக் = என்று 


கொட்டி யாட = கை கொட்டி ஆட 


வெஞ் = கொடுமையனா 


சூர்க்கொன்ற = சூரர்களை கொன்ற 


ராவுத்தனே = இராவுத்தனே 


அடிக்கடி முருகனை ராவுத்தன் என்பார் அருணகிரி. 


இராவுத்தன் என்பவன் குதிரை விற்பவன். முருகன் எங்கே குதிரை விற்றான். 


மாணிக்க வாசகருக்காக சிவ பெருமான் நரிகளை பரிகளாக்கி (குதிரைகள்) பாண்டிய மன்னனிடம் விற்றான். அப்பா குதிரை வியாபாரி என்பதால் மகனும் இராவுத்தன். 


அது ஒரு பக்கம் இருக்கட்டும். 


இந்தப் பாடலுக்கு எனக்கு இன்னொரு விளக்கம் தோன்றுகிறது. சரியா தவறா என்று தெரியவில்லை. 


ஒருவன் தன் மனைவியிடம் இல்லற சுகம் அனுபவிக்கிறான். ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருவது ஆண் பெண் இன்பம் என்பது வள்ளுவர் வாக்கு. 


அது சிற்றின்பம். 


இந்தச் சிற்றின்பமே இவ்வளவு இன்பமாக இருக்கிறதே, இறைவன் திருவடி என்ற பேரின்பம் எப்படி இருக்கும் என்று அந்த நேரத்தில்  எண்ணிப் பார்க்கிறார். 


இன்னொன்று, சிற்றின்பத்தில் மனிதன் தன்னையே மறந்து போகிறான். அந்த நேரத்தில் கூட இறைவனை நினைக்கிறேன் என்கிறார். 


இன்னொன்று, இந்த அழகான பெண்கள், என் இளமை, இந்த இனிமை எல்லாம் சீக்கிரம் தீர்ந்துவிடும். எல்லாம் அழிந்து இடுகாட்டுக்குப் போய் விடும். எது நிரந்தரம்?  இறைவன் ஒருவனே நிரந்தரம் என்று அந்த நேரத்திலும் இது எல்லாம் நிரந்தரம் அல்ல என்ற ஞானம் பிறக்கிறது. 


மகான்கள் மனதில் என்ன ஓடும் என்று நாம் எப்படி அறிவது?


வெறுமனே சொல்லுக்கு அர்த்தம் சொல்லிவிட்டுப் போய் விடலாம்...



Thursday, February 20, 2025

திருக்குறள் - மனோத்தொடு வாய்மை

 திருக்குறள் - மனோத்தொடு வாய்மை 


இந்த உண்மை பேசுவது, உண்மை பேசுவது என்று சொல்கிறார்களே, அது வாயால் பேசுவது மட்டும் தானா?  


ஒருவன் "நான் தொழில் தொடங்கலாம் என்று இருக்கிறேன். இன்ன தொழில் செய்யப் போகிறேன். அதுக்கு கொஞ்சம் முதல் வேண்டும். நீங்கள் உதவி செய்ய முடியுமா " என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உதவி செய்யும் நிலையில் இருப்பவருக்கு அந்த தொழில் பற்றித் தெரியும். அதில் இலாபம் வராது என்று தெரியும். தெரிந்தும், சொல்லமால், "அதுக்கு என்ன தாராளமாய் செய்யுங்கள்" என்று சொல்லி கொஞ்சம் பணமும் கொடுக்கிறார். பணம் பெற்றுக் கொண்டவர் தொழில் தொடங்கி நட்டப் பட்டு நடுத் தெருவில் வந்து நிற்கிறார். 


உதவி செய்தது தவறா என்றால் இல்லை. ஆனால், மனதில் "நல்லா நட்டப் படட்டும் " என்று நினைத்துக் கொண்டே செய்த உதவி நல்லது அல்ல. 


அது போல் சொல்லால் நல்லது போலத் தோன்றினாலும், மனம் நல்லதாக இருக்காது. 


வள்ளுவர் சொல்கிறார் 


"மனத்தோடு கூடி வாய்மை சொல்வது என்பது தானம், தவம் இவை இரண்டும் செய்வதை விட உயர்ந்தது " என்று 


பாடல் 


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம்செய் வாரின் தலை


பொருள் 



மனத்தொடு = மனத்தோடு கூடி 


வாய்மை மொழியின் = உண்மை சொன்னால் 


தவத்தொடு = (அது) தவத்தொடு 


தானம் = தானம் 


செய் வாரின் தலை = செய்வதை விட உயர்ந்தது 


கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?  


எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன. 


சொற்கள் சேர்ந்து வாக்கியம் உண்டாகிறது. 


இந்த சொற்களை ஒட்ட வைக்க ஒரு பசை வேண்டும். 


உதாரணமாக ஒருவன் வேகாமாக ஓடினான் என்று சொல்வதற்கு "மானைப் போல் ஓடினான்" என்கிறோம். 


இதில் "போல்" என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?  அது இந்த மானையும், ஓட்டத்தையும் சேர்த்து வைத்து பொருள் தருகிறது. அதற்கு உவம உருபு என்று பெயர். 


சுக்ரீவனைப் போல் அல்ல வாலி  என்று சொல்லும் போது இருவருக்கும் உள்ள  வேற்றுமையை நாம் காட்டுகிறோம். அது வேற்றுமை உருபு. 


இப்படி பலப் பல உருபுகள் தமிழில் உண்டு. மிக சுவாரசியமானவை. அவை நம் எழுத்தை மேலும் அழகு படுத்தும். 


இங்கே 'ஒடு' என்று உருபு இரண்டுதரம் வந்து இருக்கிறது. 


மனத்தொடு 

தவத்தொடு 


மனத்தொடு என்பதில் மனம், மொழி, மெய் இந்த மூன்றாலும் வாய்மை பேச வேண்டும்,


தவத்தொடு என்பதில் தானம் மற்றும் ஏனைய சிறப்பு அம்சங்கள் சேர்ந்து இருக்கின்றன. 


மன மொழி மெய்யால் வாய்மையுடன் இருப்பது எல்லாவற்றிலும் சிறந்தது. 



Wednesday, February 19, 2025

நாலடியார் - தீவினையச்சம் - இடுகாடு

 நாலடியார் - தீவினையச்சம் - இடுகாடு 


சுடுகாடு. 


அங்கே என்ன இருக்கும். பிணங்களை, குழி தோண்டி புதைத்து இருப்பார்கள். சுடுகாட்டை எங்கு தோண்டினாலும் பிணம்தான் இருக்கும். 


எங்கே பிணங்கள் புதைத்து வைக்கப் பட்டு இருக்கிறதோ, அந்த இடம் சுடுகாடு. சரி தானே?


விலங்குகளை கொன்று தின்பவர்களின் வயிறும் சுடுகாடு போன்றது என்கிறது நாலடியார். வயிற்றினுள் இறந்த பிணங்களை புதைத்து வைப்பதால் அவையும் சுடுகாடு தான் என்கிறது நாலடியார். 


பாடல்  


துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா

மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க

விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட

புல்லறி வாளர் வயிறு.


பொருள் 


துக்கத்துள் தூங்கித் = துன்பத்துள் அழுந்தி, அப்படி துன்பத்தில் கிடக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருந்து 


துறவின்கட் சேர்கலா = உயர்ந்த துறவு நெறியில் சேராமல் 


மக்கள் பிணத்த சுடுகாடு = இறந்த மனிதர்களை புதைக்கும் சுடுகாடு 


தொக்க = போல 


விலங்கிற்கும்  = விலங்கினங்களுக்கும் 


புள்ளிற்கும் = பறவைகளுக்கும் 


காடே = இறந்த பின் புதைக்கும் சுடுகாடே 


புலன்கெட்ட = புலன்கள் அழிந்து 


புல்லறி வாளர் = சிறந்த அறிவினை இல்லாதவர் 


வயிறு = அவர்களின் வயிறு 


உயிர்களை கொன்று தின்பதை தீவினை என்கிறது இந்தப் பாடல். 


மாமிசம் உண்பது சரியா தவறா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்றேனும் ஒரு முடிவு வருமா என்று தெரியவில்லை. 


தெளிவான முடிவு வரும்வரை என்ன செய்வது? 


அவரவர்க்கு சரி என்று பட்டதைச் செய்யலாம். 


அல்லது 


நம்மைவிட அறிவில் முதிர்ந்த சான்றோர் சொல் கேட்டு நடக்கலாம். 


நாலடியார் போன்ற நூல் வழி நிற்கலாம். 




Tuesday, February 18, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - எளியவன் அடியார்க்கு

திருவாசகம் - அதிசயப் பத்து - எளியவன் அடியார்க்கு 



பெரும்பாலனோர் நினைப்பது என்னவென்றால், ஏதாவது பாவம் செய்து விட்டால், அதற்கு ஒரு பரிகாரம் செய்து அந்த பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று. 


உதாரணமாக, கோவிலில் காணிக்கை செலுத்துவது, அன்ன தானம் செய்வது, நாலு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நல்ல காரியங்கள் செய்தால் தாங்கள் செய்த பாவம் போய் விடும் என்று நினைக்கிறார்கள். 


அது அப்படி அல்ல. 


பாவக் கணக்கு வேறு, புண்ணியக் கணக்கு வேறு. இரண்டையும் கலக்க முடியாது. 


பாவம் செய்தால் அதற்கு உரிய தண்டனை உண்டு. 


புண்ணியம் செய்தால் அதற்கு ஏற்ற பலன் உண்டு. ஒன்றை ஒன்று சரி செய்ய முடியாது. 


ஒரு கொலை செய்து விட்டு, உண்டியலில் பத்து இலட்சம் போட்டு விட்டால் கொலை பாதகம் போய் விடுமா?


போகாது. 


பாவத்தை அனுபவிக்க பிறக்க வேண்டும். 


புண்ணியத்தை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 


"அறம், பாவம் என்னும் அருங் கையிற்றால் கட்டி"  என்பார் மணிவாசகர். இரண்டும் நம்மை பிறவியோடு சேர்த்துக் கட்டும். ஒன்றை ஒன்று அவிழ்த்து விடாது. 




பின் இந்தப் பிறவிச் சுழலில் இருந்து எப்படித்தான் தப்பிப்பது?


ஒரே வழி, இறைவன் நினைத்தால், நம் புண்ணிய பாவங்கள் நம்மைத் தொடர்வதை நிறுத்த முடியும். 


"அவன் தாள் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே"


என்பார் அருணகிரிப் பெருமான். 


இறைவன் திருவருள் இருந்தால் முன்வினைப் பயன் நீங்கும். நாமே ஒன்றும் செய்து கொள்ள முடியாது. 


மணிவாசகர் சொல்கிறார், 


"யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத என் தந்தை, தாய் போன்ற சிவ பெருமான், என் முன்வினைகளை துடைத்து, என்னை ஆண்டுகொண்டு, என்னையும் தன் அடியாரோடு சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்ன சொல்லுவேன்"


என்று. 


 

பாடல் 


முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை

தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்

பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த

அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


முன்னை  = முன்பு 


என்னுடை = என்னுடைய 


வல்வினை = கொடுமையான வினைபயனை 


போயிட = என்னை விட்டு போயகல 


முக்கண துடையெந்தை = மூன்று கண்களை உடைய என் தந்தை 


தன்னை = அவனை 


யாவரும் = யாராலும் 


அறிவதற் கரியவன் = அறிவதற்கு அரியவன். அறிய முடியாதவன் 


எளியவன் = ஆனால், அவன் எளியவன் 


அடியார்க்குப் = அடியவர்களுக்கு 



பொன்னை  = பொன்னின் நிறத்தை 


வென்றதோர் = வென்றது போன்ற 


புரிசடை =  நீண்ட சடை 


முடிதனில் = முடியில் 


இளமதி யதுவைத்த = பிறைச் சந்திரனை சூடிய 


அன்னை = என் அன்னை போன்றவனை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = அவனுடைய அடியவர் கூட்டத்தில் 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் விட்ட 


 அதிசயங் கண்டாமே = அதிசயத்தை கண்டு வியகின்றேன் 


பல பக்திப் பாடல்களில் இறைவனை அம்மையே, அப்பா என்று அழைப்பதை கண்டிருக்கிறோம். 


ஏன் அப்படி?


என் பிறவிக்கு காரணமான தந்தை, தாய் இருக்கிறார்கள். நான் அவர்களோடு என்னை அடையாளம் கொண்டால், அவர்கள் மதம் என் மதம் என்று ஆகும், அவர்கள் ஜாதி என் ஜாதி என்று ஆகும், அவர்கள் நாடு என் தாய் நாடு என்று ஆகும். நான் ஒரு சிறு வலையில் மாட்டிக் கொள்வேன். 


நான் ஒரு இந்து, இந்தியன், இன்ன குலத்தில் பிறந்தவன், இன்ன மொழி எனக்குத் தாய் மொழி என்று ஆகி விடும். அதை விட்டு என்னால் வெளியே வர முடியாது. 


உண்மையைக் கண்டறிய இது ஒரு பெரிய தடை. 


நம் மதம் சொல்வதுதான் நமக்குச் சரி என்று படும்.மற்றவை எல்லாம் தவறென்று படும். 


இறைவன் எனக்குத் தாய், தந்தை என்று கொண்டால், எல்லோரும் சமம். சமயம் இல்லை, ஜாதி இல்லை, இன மொழி வேறுபாடு இல்லை. உண்மையைத் தேடி சுதந்திரமாகச் செல்லலாம். 



Friday, February 14, 2025

திருக்குறள் - வாய்மை - உள்ளத்துள் எல்லாம் உளன்

 திருக்குறள் - வாய்மை - உள்ளத்துள் எல்லாம் உளன் 



ஏன் வாய்மை பேச வேண்டும்?  அதனால் என்ன பயன் ? உண்மை பேசினால் நாலு காசு சம்பாதிக்க முடியுமா?  பலன் இல்லாமல் ஒரு காரியத்தை ஏன் செய்ய வேண்டும் ?


என்பன போன்ற கேள்விகள் எழலாம். அவை  நியாயமான கேள்விகளும் கூட.


வள்ளுவர் கூறுகிறார்....


"ஒருவன் தன் மனம் அறிய பொய் சொல்லாமல் இருப்பானானால், அவன் இந்த உலகில் எல்லோர் மனத்திலும் இருப்பான்" 


என்று. 


பாடல் 

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்


பொருள் 


உள்ளத்தால் = மனதினால் 


பொய்யாது ஒழுகின்  = பொய் சொல்லாமல்  வாழ்ந்து வந்தால் 


உலகத்தார் = உலகில் உள்ளவர்களின் 


உள்ளத்துள்  எல்லாம் = எல்லார் உள்ளத்திலும் 


உளன் = இருப்பான். 


சில பேர் நல்லவர்களை கேலி செய்வார்கள். "அவன் பாவம் ஒரு அப்பிராணி. ஒண்ணும் தெரியாது. நெளிவு சுளிவு தெரியாது.  நாலு காசு பாக்கத் தெரியாத அப்பாவி" என்று அவனைப் பார்த்து பரிதாபப் படுவார்கள். 


பரிமேலழகர் சொல்கிறார் "உலகத்தார்" என்றால் உலகில் உள்ள உயர்ந்தோர் என்று. 


அயோக்கியனுக்கு அயோக்கியத்தனம் தான் பிடிக்கும். "அடா, அவன் கில்லாடி, எப்படி காவல் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தப்பிச்சு வந்துட்டான்..." என்று களவாணிப் பயல்களை பெரிதாக பேசுவார்கள். பாராட்டுவார்கள். 


அவர்கள் மனதில் இடம் பிடிப்பது அல்ல நம் வேலை. 


ஒரு தவறான வழியில் பணம் சேர்க்கிறான் என்றான் என்றால் அவனை இகழ வேண்டுமே அல்லாமல் "..எப்படி பொருள் சேர்க்கிறான்...நாமும் தான் இருக்கிறோமே நாலு காசுக்குப் பயன் இல்லாமல்" என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. 


சரி, அது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


பொய்யாது ஒழுகினால் எப்படி நல்லவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்?


ஒருவன் உண்மை மட்டுமே பேசுவது என்று முடிவு செய்து விட்டால், அவனால் ஒரு தவறு கூட செய்ய முடியாது. ஏன் என்றால் செய்த தவறை மறைத்து பொய் சொல்ல முடியாது. உண்மையை ஒப்புக் கொண்டால் மதிப்பு போய் விடும், மரியாதை போய் விடும், தண்டனை வரும், தலை குனிவு வரும்...எனவே உண்மை சொல்வது என்று முடிவு எடுத்து விட்டால் ஒரு தவறும் செய்ய முடியாது. ஒரு தவறும் செய்யாதவனை உலகம் கட்டாயம் போற்றும். 


ஒரே ஒரு நாள் முயன்று பாருங்கள். உண்மை மட்டுமே பேசுவது என்று. என்ன வந்தாலும் சரி, உண்மை மட்டும்தான் பேசுவது என்று. 


உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போய் விடும். 



தெரியாததை , தெரியாது என்று சொல்லுங்கள். 


செய்யாததை , செய்யவில்லை என்று சொல்லுங்கள். 


மறந்து விட்டால், மறந்து விட்டது என்று சொல்லுங்கள். 


வாழ்க்கை எளிமையாகும். நாம் பொய்களால் வலை பின்னி அதில் நாமே மாட்டிக் கொண்டு தவிக்கிறோம். 


முகமூடிகள் அணிந்து அணிந்து, உண்மையான முகம் எப்படி இருக்கும் என்பதே மறந்து போய் விடுகிறோம். 


 

 

Wednesday, February 12, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - பாதி மாதொடு கூடிய

திருவாசகம் - அதிசயப் பத்து - பாதி மாதொடு கூடிய 



எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று எப்படி அறிந்து கொள்வது?  


எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அது சரி என்று சொல்ல கொஞ்சம் பேர், தவறு என்று சொல்ல கொஞ்சம் பேர், அது சரியா தவறா என்று தெரியாமல் குழம்பும் கொஞ்ச பேர். இப்படித்தான் உலகம் இருக்கிறது. 


தவறு என்று ஒரு நீதி மன்றம் சொல்வதை, மேல் நீதி மன்றம் தவறு அல்ல என்கிறது. 


ஒரு நாட்டிற்கு சரி என்பது இன்னொரு நாட்டுக்கு தவறு. 


ஒரு காலத்தில் தவறு என்பது இன்னொரு காலத்தில் சரி. 


மணிவாசகர் சொல்கிறார்


"எது சரி, எது தவறு என்று கூறும் நீதி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அப்படி தெரிந்தவர்களிடமும் சேர மாட்டேன். மனம் போன படி காரியங்கள் செய்து கொண்டு ஏதோ பிறந்து, இறந்து உழன்று கொண்டு இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை, தன் அடியவன் என்று ஏற்றுக் கொண்டு, என்னை ஆண்டு கொண்டு, தன்னுடைய அடியவர்களோடு சேர்த்து வைத்தது எவ்வளவு பெரிய அதிசயம்" 


என்று அதிசயப்படுகிறார். 



பாடல் 


 நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பdவ ரொடுங்கூடேன்

ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை என்னடி யானென்று

பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற

ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


நீதி யாவன யாவையும்  = எது சரி, எது தவறு என்று சொல்லும் அனைத்து நீதிகளையும் 


நினைக்கிலேன் = நினைத்துக் கூட பார்க்க மாட்டேன் 


நினைப்பவ ரொடுங் = அது பற்றி சிந்திபவர்களோடும் 

 


கூடேன் = சேர மாட்டேன் 


ஏத மே = ஏதோ கடனே  என்று, ஒன்றும் தெரியாமல்  


பிறந் திறந்துழல் வேன்றனை = பிறந்து இறந்து உழல்வேன் தன்னை 


என்னடி யானென்று = என்னுடைய அடியவன் என்று 


பாதி மாதொடுங் கூடிய = தன் உடம்பில் பாதியை உமாதேவிக்கு கொடுத்த 


பரம்பரன் = மிக உயர்ந்தவன் 


 நிரந்தர மாய்நின்ற = என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் 


ஆதி  = முதல்வன் 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன்னுடைய அடியவர்களோடு 


கூட்டிய = சேர்த்து வைத்த 


அதிசயங் கண்டாமே. = அதிசயத்தைப் பார்த்தோம் 


இறைவனின் அடியவர்களோடு சேர்ந்தால் இறைவன் பற்றிய ஞானம் வரும், இறைவன் மேல் பக்தி வரும். 


நாமும் ஒரு அடியவர்தானே?  நம்மோடு சேர்ந்தால் இறை ஞானம், பக்தி எல்லாம் மற்றவர்களுக்கு வருமா?  


அந்த அளவு ஞானத்தை நாம் தேடி அடைந்து இருக்கிறோமா? நம்மிடம் அவ்வளவு பக்தி இருக்கிறதா? 


ஏன் பிறவி வருகிறது?


சரியானவற்றை செய்யாமல் இருப்பது. 


தவறானவற்றை செய்வது. 


எது சரி, எது தவறு என்று அறியாமல் இருப்பது. 


அறிந்த்வவர்களை அண்டி அந்த அறிவைப் பெறாமல் இருப்பது. 


இவை எல்லாம் இல்லாத எனக்கு அவன் அருள் புரிந்தான் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்கிறார். 


உண்மையில் அவருக்குத் தெரியும். அவர் நம் குற்றங்களை தன் மேல் ஏற்றிக் கூறுகிறார். 


நாம் இறைவனால் ஆட்கொள்ளப் படவேண்டும் என்றால், 


நீதி எது என்று அறிய வேண்டும். 


அறிந்தவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும். 




Tuesday, February 11, 2025

திருக்குறள் - வாய்மை - சுடும் நெஞ்சு

 திருக்குறள் - வாய்மை -  சுடும் நெஞ்சு 



பொய் சொல்லி வாழ்பவர்கள் பணம் நிறைய சம்பாதிக்கிறார்கள். செல்வாக்கோடு இருக்கிறார்கள். உண்மை சொல்லி நேர்மையாக வாழ்பவர்கள் அரிச்சந்திரன் மாதிரி துன்பப்படுகிறார்கள். இதுதான் உலக நடைமுறையாக இருக்கிறது. 


அப்படி இருக்க உண்மை பேசு, உண்மை பேசு என்று ஏன் சொல்ல வேண்டும். நாமும் பொய் சொல்லி வளமாக வாழ்வதில் என்ன தவறு என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு வள்ளுவர் கூறுகிறார்: 


"பொய் என்று ஒருவன் அறிந்தே சொல்லுவானானால், அவன் மனமே தண்டிக்கும்"


பாடல்  


தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்


பொருள் 



தன்னெஞ்சு அறிவது  = ஒருவன், தனது மனம் அறிய 


பொய்யற்க = பொய் சொல்லாமல் விடுக 


 பொய்த்தபின் = மாறாக பொய் சொல்வானாயின் 


தன்நெஞ்சே = அவனுடைய நெஞ்சமே 


 தன்னைச் சுடும் = அவனைச் சுடும் 


அது எப்படி ஒருவனின் மனம் அவனை சுட முடியும்? சுடுதல் என்பதை துன்பம் என்று வைத்துக் கொண்டாலும், எப்படி ஒருவனின் மனம் அவனுக்குத் துன்பம் தரும்?  பொய் சொல்பவர்கள் மனம் எல்லாம் அவர்களை சுடுவது மாதிரி தெரியவில்லையே என்று சந்தேகம் கொண்டால், அதற்கு பரிமேலழகர் விளக்கம் தருகிறார். 


" பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்."


அது பரிமேலழகர் உரை. 


அதாவது, 


கரி என்றால் சாட்சி. 


ஒருவன் தெரிந்தே பொய் சொல்வானானால் அவன் மனமே அந்த செயலுக்கு சாட்சியாய் இருந்து அவனுக்கு துன்பத்தை வருவிக்கும் என்கிறார். 


அவன் மனமே அவனுக்கு துன்பத்தை கொண்டு வரும் என்கிறார். 


ஒருவன் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். தன் மனதை ஒருவன் ஏமாற்ற முடியாது. அது எப்போதும் அவன் செய்வதை, சொல்வதை கவனித்துக் கொண்டே இருக்கும். 


சரி, ஏதோ தெரியாமல் சொல்லி விட்டேன் என்று சொல்ல முடியாது. அறிந்தே சொன்ன பொய் தான். "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்றார். தெரிந்தே சொல்லும் பொய்கள். 


எப்போதோ சொன்னேன். அது நாளடைவில் மறைந்து விடாதா, மறந்து விடாதா என்றால் மறையாது, மறக்காது. எனவே தான் "பொய்யற்க" என்றார். பொய்யை ஒரு காலும் சொல்லக் கூடாது. அறவே சொல்லக் கூடாது. 




Monday, February 10, 2025

அபிராமி அந்தாதி - நூறாவது பாடல் - உதிக்கின்றனவே

 அபிராமி அந்தாதி - நூறாவது பாடல் - உதிக்கின்றனவே

https://interestingtamilpoems.blogspot.com/2025/02/blog-post_39.html



அபிராமி அந்தாதியின் முதல் பாடல் தொடங்குவது "உதிக்கின்ற செங்கதிர்" என்று. 


உதிக்கின்ற என்று தொடங்கி, உதிக்கின்றதுவே என்று தான் தொடுத்த பாமாலையை முடிக்கிறார் பட்டர். 


எப்படி சொல் வந்து நிற்கிறது. 


எந்தப் கல்லூரியில் படித்து வருவது இது?


அன்று கல்லூரியின் கடைசி நாள். இனி எப்போது அவளை பார்க்க முடியுமோ தெரியவில்லை. பார்க்கவே முடியாமல் போய் விடுமோ? வாழ்க்கை அவனையும், அவளையும் வேறு வேறு திசையில் கொண்டு போகலாம். அவனுக்கு இந்த நாளை எப்படியாவது நீட்டித்துக் கொண்டே போனால் என்ன என்று தோன்றுகிறது. 


இனி எப்போது பார்ப்போமோ என்ற தவிப்பில் அவளை கண் இமைக்காமல் பார்க்கிறான். அவள் காதோரம் நெளிந்து ஓடும் அந்த முடி, அவள் புருவம், அவள் கழுத்தில் அணிந்திருக்கும் மாலை, அவள் கையில் உள்ள கைக் கடிகாரம், அவள் அணிந்திருக்கும் செருப்பு என்று ஒரு அங்குலம் விடாமல் அவளை தூர நின்று எவ்வளவு தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு மனதில் பதிய வைக்கிறான். 


இனி காலம் எல்லாம் இந்த பிம்பத்தை மறக்காமல் இருக்க வேண்டுமே என்று அவளை அப்படியே மனதுக்குள் சிற்பம் போல் செதுக்கி வைக்கிறான். 


சொல்லி பார்த்துக் கொள்கிறான்...அவள் கண் எப்படி இருந்தது, விரல்கள் எப்படி என்று...அவளுக்கு திருமணம் ஆகலாம்...திருமண கோலத்தில் எப்படி இருப்பாள் என்று எண்ணிப் பார்க்கிறான்....



பாடல் 



குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்

உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே



பொருள் 



குழையைத் = காதணி. அவள் அணிந்திருக்கும் தோடு, ஜிமிக்கி


தழுவிய = அந்தக் காதணியை தொடும் 


 கொன்றையந்தார்= தார் என்றால் மாலை. காதில் போட்ட ஜிமிக்கையை தொட்டு வருடும் அந்தக் கொன்றை மாலை.


கமழ் = மணம் வீசும் 


கொங்கை = மார்பு 


வல்லி = சிறந்தவள் 


கழையைப் = மூங்கிலைப் 


பொருத = போட்டிபோடும் 


திருநெடுந்தோளும் = சிறந்த நீண்ட தோள்களும் 


கரும்புவில்லும் = கரும்பு வில்லும் 


விழையப் = விழைவு என்றால் ஆசை, ஆவல், ஆர்வம் 


பொரு = பொருதல் என்றால் சண்டை இடுதல், கட்டித் தழுவி நெருங்கி இருத்தல் 


வேரியம் = மணம் வீசும் 


பாணமும் = மலர்க் கணைகளும் 


வெண் நகையும் = வெண்மையான புன்சிரிப்பும் 


உழையைப் = மானுடன் 


பொரு  = போட்டி போடும் 


கண்ணும்  = கண்களும் 


நெஞ்சில் = என் மனதில் 


எப்போதும் உதிக்கின்றவே = எப்போதும் உதிக்கின்றதே 


சிவன் அணியும் காதணிகள் ஏழு வகைப்படும். 


தோடு, குண்டலம், குழை, சுருள், கோளரவன், ஓலை, பொற்றோடு என்பன.


அவன் அணியும் காதணி இவளிடம் எப்படி வந்தது?  ஆசையாக எடுத்துப் போட்டு இருப்பாளோ?  இல்லை இல்லை, அவன்தான் மாதொரு பங்கன் ஆயிற்றே. அவன் காதணி அவளுடையதும்தான். 


கொன்றை மலர் அவனுக்கு உரியது. அது இவள் தோளில்.  


அவள் மேனி எங்கும் மலர் வாசனை. 


காதணி, மாலையும் கழுத்துமாக அவள், முத்துப் பல் சிரிப்பு....


எப்போதெல்லாம் அவன் மனம் சோர்கிறதோ, அப்போதெல்லாம் அவன் மனதில் சூரியனாய் அவள் உதித்து ஒளி வீசுகிறாள். 


படித்துப் பாருங்கள். புரியலாம். 




திருவாசகம் - அதிசயப் பத்து - மனத்திடை உருகாதே

திருவாசகம் - அதிசயப் பத்து - மனத்திடை உருகாதே



தங்க ஆபரணத்தில் ஒரு வைரக் கல்லை பதிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


அந்த ஆபரணத்தின் மேல் வைரக் கல்லை வைத்து சுத்தியலால் நாலு போடு போட்டால் ஒட்டுமா? 


அல்லது, ஏதாவது பசை போட்டு ஒட்டி வைக்க முடியுமா?


நூல் ஏதாவது சுத்தி வைக்க முடியுமா?


முடியாது. 


தங்கத்தை உருக்கி, அதை கொஞ்சம் மென்மையாக்கினால் அது நெகிழும், அப்போது அந்த வைரக் கல்லை வைத்து லேசாக அழுத்தினால் அது பதிந்து விடும். ஒரு போதும் விழாது. 


அது போல,


இறைவன் நம் மனதில், நெஞ்சில் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


மனம் உருக வேண்டும். உருகிய மனதில் அவன் திருவடி எளிதில் பதியும். 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக 


என்பார் அருணகிரி. 


"ஊனாய் உருக்கி என் உள் ஒளியாய் நின்றானே"


என்பார் மணிவாசகர்.


மனம் உருகு என்றால் உருகுமா?


அதை எப்படி உருக்குவது?  


நமக்கு இன்பம் வந்த காலத்தில் நம்மோடு கூடி வாழ பலர் இருப்பார்கள். துன்பம் வந்தால், நமது சேமம் (சேமிப்பு) குறைந்தால் யார் நம்மோடு இருப்பார்கள்?  


துன்பம் வந்த காலத்தில் நம்மோடு இருப்பவன் இறைவன். நமக்கு இதுவரை எவ்வளவோ துன்பங்கள் வந்திருக்கும். அவற்றை எல்லாம் தாண்டி எப்படி வந்தோம்?  எல்லாம் நம் சாமர்த்தியமா?  நம் ஏழ்மையை பங்கு போட்டுக் கொள்ள வருபவன் அவன் மட்டும்தான். 


"ஏழை பங்காளனை பாடுதும் காண் அம்மானாய்" என்பார் மணிவாசகப் பெருந்தகை. 


"நான் தளர்ந்த போது, நலிந்த போது, துணையின்றி தவிக்கும் போது எனக்கு துணையாய் நின்று என்னை எப்படியெல்லாம் காப்பாற்றினாய். அவற்றை எல்லாம் நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. ஏதோ எல்லா துன்பங்களையும் நானே தனித்து நின்று வென்று விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். அது மட்டும் அல்ல, நீ இவ்வளவு எல்லாம் உதவி செய்திருக்கிறாய். உன்னை நினைக்காமல் இந்த பெண்கள் பின்னால் நான் அலைந்து கொண்டிருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை நீ என்னை ஆண்டு கொண்டு, உன் அடியாரில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்டது பெரிய அதிசயம் தான் "


என்கிறார் வாதவூர் அடிகள் 


பாடல் 



வைப்பு மாடென்று மாணிக்கத் தொளியென்று மனத்திடை உருகாதே

செப்பு நேர்முலை மடவர லியர்தங்கள் திறத்திடை நைவேனை

ஒப்பி லாதன உவமனி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்

தப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


வைப்பு மாடென்று = மாடு என்றால் செல்வம். வைப்பு மாடு என்றால் சேமித்த செல்வம். வைப்பு நிதி என்பது போல. 


மாணிக்கத் தொளியென்று = மாணிக்கத்தின் ஒளி என்று. 


மனத்திடை = மனதினில் 


உருகாதே = உருகாமல் 


செப்பு = செப்பு சட்டி போல 


 நேர் = உயர்ந்து எழுந்த 


முலை = மார்புகளை உடைய 


மடவர லியர்தங்கள் = இளம் பெண்கள் பின்னால் 


திறத்திடை = அவர்களிடம் சென்று 


நைவேனை = துன்பப்படுவேனை 


ஒப்பி லாதன = உனக்கு ஒப்பு என்று ஒன்றும் இல்லாதவனே 


உவமனி லிறந்தன = உன்னோடு உவமித்து சொல்லும்படி ஒன்றும் இல்லாதவனே 


ஒண்மலர்த் = ஒளி வீசும் மலர் போன்ற 


திருப்பாதத் தப்பன் = திருவடிகளுக்கு சொந்தமான எனது அப்பன் 



 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன்னுடைய அடியவர் கூட்டத்தோடு 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் கொண்டது 


அதிசயங் கண்டாமே = அந்த அதிசயத்தைப் பார்த்தோமே 


இந்த அடியவர்க் கூட்டம், அடியவர் கூட்டம் என்று சொல்கிறார்களே, அப்படி என்ன அதில் பெருமை. அவர்களும் நம்மை போன்றவர்கள்தானே. அடியாரோடு சேர்ந்து கொள்வது என்ன பெரிய விசேடம்?  


இந்தக் கேள்வி ரொம்ப நாள் என்னிடம் இருந்து கொண்டே இருந்தது. 


நாம் யாரோடு சேர்கிறோமோ, அவர்களின் குணம், சிந்தனை ஓட்டம், செயல்பாடுகள் நம்மிடம் வரும். 


எளிய உதாரணம் ஒன்று பார்ப்போம். 


நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் யாரோடு அதிகம் பழகுவீர்கள்? உங்களோடு கூட வேலை செய்பவர்களிடம் பழகுவீர்கள். 


உங்களின் சிந்தனை, செயல், நோக்கம், குறிக்கோள் எல்லாம் என்னவாக இருக்கும்?


எப்படி திறமையாக வேலை செய்து நல்ல பேர் எடுப்பது? எப்படி பதவி உயர்வு அடைவது, எப்படி ஐந்து அல்லது பத்து சதவீதம் ஊதிய உயர்வு பெறுவது என்பது பற்றியே இருக்கும். 


நீங்கள், எப்படி தொழில் தொடங்குவது, எப்படி முதலீடு திரட்டுவது, எப்படி அதிக இலாபம் சம்பாதிப்பது என்பது பற்றியெல்லாம் சிந்திக்க மாட்டீர்கள். பணம் சம்பாதிக்க வேண்டும், அந்த மாதிரி ஆட்களோடு சேர வேண்டும். பழக வேண்டும். 


ஒரு துறையில் முன்னேற வேண்டும் என்றால், அந்தத் துறை சம்பந்தப்பட்ட ஆட்களோடு பழக வேண்டும், பேச வேண்டும். 


அது போல ஆன்மீகத் துறையில் முன்னேற வேண்டும் என்றால், அந்தத் துறையில் உள்ள அடியவர்களோடு சேர வேண்டும். 


இறைவனை அடைய அது ஒன்றுதான் வழி. இல்லை, நானே கண்டு பிடித்து விடுவேன் என்று சவால் விடலாம். ஒரு வேளை நீங்கள் அதை செய்தும் முடிக்கலாம். சற்று சிரமம். நிறைய மெனக்கெட வேண்டும். மாறாக, அதில் ஏற்கனவே உள்ள பலரிடம் பேசி, பழகி கொண்டிருந்தால், எளிதாக, வேகமாக சென்று அடையலாம். 


இப்படி எல்லாம், எனக்கு வழி அமைத்துத் தந்த இறைவனின் கருணையை நினைத்து அதிசயப் படுகிறார் மணிவாசகர். 




Sunday, February 9, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - முன்னுரை

 திருவாசகம் - அதிசயப் பத்து - முன்னுரை 

https://interestingtamilpoems.blogspot.com/2025/02/blog-post_9.html


உலகிலேயே பெரிய அதியசம் எது?


நாம் தான். 


நாம் எவ்வளவு பெரிய அதியசயமான ஒரு படைப்பு. 


இந்த பிரபஞ்சம் எவ்வளவு விரிந்தது? எவ்வளவு பெரியது ? நம்மால் அதை கற்பனை கூட பண்ண முடியாது. 


அவ்வளவு பெரிய அண்டப் பெரு வெளியில், ஏதோ ஒரு மூலையில், ஒரு சின்ன நட்சத்திரம் நம் சூரியன். அதைச் சுற்றும் ஒரு சின்ன கோள் நம் பூமி. அதில் உள்ள ஒரு சின்ன இடம் நம் நாடு, பின் நம் ஊர். அங்கு நாம் பிறந்தோம். 


அதுவும் கண், காது, மூக்கு என்று எல்லாம் சரியாக வேலை செய்யும்படி. 


அதுவம் எழுதப் படிக்க தெரிந்த படி.


அதுவும், அமைதியான இந்த நாட்டில். 


அதுவும், தமிழ் அறிவோடு. 


இது நடக்க என்ன சாத்தியக் கூறு இருக்கிறது?  


மிக மிக அபூர்வமான அமைப்பு நாம் பிறந்து வளர்ந்து, இந்த ப்ளாகைப் படிப்பது என்பது. 


இது நடக்காமல் இருக்க கோடிக் கணக்கான வாய்ப்பு இருக்கு. அத்தனையும் புறம் தள்ளி, இதோ நான் எழுதுகிறேன், நீங்கள் படிக்கிறீர்கள். இது அதிசயம் அல்லவா?


மணிவாசகர் அதிசயப் பத்து என்று பத்துப் ஆடல்கள் எழுதி உள்ளார். 


"நான் எல்லாம் என்ன ஒரு ஆளுன்னு, என்னை கண்டு பிடிச்சு எனக்கு அருள் செய்திருக்கிறார் இந்த சிவ பெருமான். இது எவ்வளவு பெரிய அதியசம்" என்று உருகி உருகி பத்துப் பாடல்கள் பாடி உள்ளார். 


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகும்படி பாடி இருக்கிறார். 


தினம் ஒன்றாக அந்தப் பாடல்களை சிந்திப்போம். 





Thursday, February 6, 2025

திருக்குறள் - பொய்யும் மெய்யும்

 திருக்குறள் - பொய்யும் மெய்யும் 



சில சமயம் நாம் பொய் சொல்ல வேண்டி வரலாம்.  பொய் சொல்வது அறம் அல்லாத செயல் அல்லவா? அது பாவம் அல்லவா? பொய் சொல்லலாமா? 


எது நடந்தாலும் சரி, உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும் என்று ஒரு விதி வைத்தால் அதை நடைமுறையில் செயல் படுத்த முடியுமா? 


சில உதாரணங்கள் பார்ப்போம்....


ஒரு நோயாளி ஏதோ ஒரு தீவிரமான நோயில் அவதிப் படுகிறார். மருத்துவருக்குத் தெரியும் அந்த நோயாளி இன்னும் ஓரிரு மாதங்களில் இறந்து விடுவார் என்று. நோயாளி மருத்துவரிடம் "டாக்டர் எனக்கு உடம்புக்கு எப்படி இருக்கிறது" என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். 


மருத்துவர் என்ன சொல்ல வேண்டும்? 


உண்மையைச் சொன்னால் "இன்னும் ஓரிரு மாதங்கள்தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்" என்று சொல்ல வேண்டும். 


மாறாக, "ஒண்ணும் கவலைப் படாதீங்க...எல்லாம் சரியாகிவிடும். மருந்தை மட்டும் வேளா வேளைக்கு சாப்பிடுங்கள். நாளை வந்து பார்க்கிறேன்" 


என்று சொல்லிவிட்டுப் போவார். 


மருத்துவர் சொன்னது பொய்யா?  அவர் பொய்யரா?  அவர் பாவம் செய்து விட்டாரா?


இல்லை. 


வள்ளுவர் சொல்கிறார் 


"ஒருவற்கு எந்தவித தீங்கும் விளைவிக்காத பொய்யும், மெய் என்றே கொள்ள வேண்டும்" என்று.


சொன்னது தீங்கு விளைவிக்காது என்றால் அது மெய். 


சொன்னது தீங்கு விளைவிக்கும் என்றால் அது பொய். 


மேலே சொன்ன உதாரணத்தில், அந்த மருத்துவர் இன்னும் இரண்டு மாதம் தான் என்று சொல்லி இருந்தால் அது பொய் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்


பொருள் 



பொய்ம்மையும் = பொய்யான சொற்களும் 


வாய்மை இடத்த = உண்மை என்றே கொள்ளப்படும் 


புரைதீர்ந்த = சந்தேகம் இல்லாமல் 


நன்மை பயக்கும் எனின் = நன்மையைக் கொடுக்கும் என்றால். 


சில பேர் உண்மை சொல்வதே மற்றவர்களை மாட்டி விடுவதற்காகத்தான். கேட்டால், "நான் உள்ளதைத்தானே சொன்னேன்" என்று நல்லவர்கள் போல் நடிப்பார்கள். 


சொன்னது தீமை தரும் என்றால், அது உண்மை அல்ல என்கிறார் வள்ளுவர். 


புரை தீர்ந்த என்றால் எந்த வித குற்றமும், இல்லாமல். ஒரு சதவீதம் கூட அதில் தீங்கு வரக் கூடாது. 


ஒரு அயோக்கியன் ஒரு அபலைப் பெண்ணை துரத்தி வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பெண் நம் வீட்டில் தஞ்சம் புகுகிறாள். "என்னை காட்டி கொடுத்து விடாதீர்கள்" என்று நம்மிடம் கெஞ்சுகிறாள். 


சிறிது நேரம் கழித்து அந்த அயோக்கியன் நம்மிடம் கேட்கிறான் "இங்கே ஒரு பெண் வந்தாளா " என்று. என்ன சொல்ல வேண்டும்? "ஆமாம், இங்கே உள்ளேதான் இருக்கிறாள் " என்றா சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னால் அது பொய். 


"இல்லையே, அப்படி யாரும் வரலையே" என்று சொல்லி அந்தப் பெண்ணைக் காப்பாற்றினால் அது மெய். 


அவ்வளவு தூரம் போவானேன்....


வீட்டில் மனைவி அழகு நிலையம் (beauty parlor ) சென்று கொஞ்சம் தன்னை அழகு படுத்திக் கொண்டு வந்திருப்பாள். நமக்கு ஒன்றும் பெரிதாக வித்தியாசம் தெரியாது. இருந்தாலும், "அழகு நிலையத்துக்குப் போயிட்டு வந்தாலே உனக்கு அஞ்சு வயசு குறைஞ்ச மாதிரி இருக்கு" என்று ஒரு சொன்னால், அது உள்ளது உள்ளபடி அல்ல என்றாலும், அது வாய்மையே. ஏன் என்றால், அதனால் யாருக்கும் ஒரு தீங்கும் இல்லை. 


அதே போல், கணவன் திடீரென்று உடற் பயிற்சி செய்கிறேன், உணவு கட்டுப்பாடு இருக்கிறேன், தொப்பையைக் குறைக்கப் போகிறேன் என்று ஆரம்பிக்கலாம். ஒரு வாரத்தில் ஒரு மாற்றமும் இருக்காது. இருந்தாலும், மனைவி கணவனைப் பார்த்து "நல்லா மெலிஞ்ச மாதிரி இருக்குங்க" என்று சொல்லி வைக்கணும். அதுவும் வாய்மைதான். 


நம்மில் பல பேருக்கு மற்றவர்களை பாராட்டுவது என்பது எளிதாக வருவது இல்லை. "இதெல்லாம் ஒரு பெரிய சாதனையா...இதைப் பாராட்டினால் அது உண்மை இல்லை" என்று நினைக்கலாம். 


அப்படி அல்ல. 


யாருக்கும் ஒரு தீங்கும் இல்லை என்றால், பாராட்டுவது உண்மைதான் என்கிறார் வள்ளுவர். பாரட்டுக்குத் தகுதி இல்லாவிட்டாலும், "நல்லா செஞ்சீங்க" என்று சொல்லுவதால் அவர் மகிழ்வார். உங்களை மதிப்பார். எல்லோருக்கும் நல்லது நடக்கும். எனவே அதுவும் உண்மைதான்.


சில பேர் "நான் மனதில் பட்டதை அப்படியே சொல்லி விடுவேன். நம்மிடம் ஒரு ஒளிவு மறைவு கிடையாது. உள்ளதை உள்ளபடி சொல்ல எதற்கு தயங்க வேண்டும் " என்று பெருமையாகச் சொல்வார்கள். 


அது தவறு. 


உள்ளதை உள்ளபடியே சொல்லுவதன் மூலம் மற்றவர்கள் வருந்துவார்கள் என்றால், அது உண்மை அல்ல. பொய். 


ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.




Tuesday, February 4, 2025

நாலடியார் - கண் குத்திய கை

நாலடியார் - கண் குத்திய கை 


நட்பிலும், உறவிலும் சில சமயம் வேண்டத்தகாதன ஏதாவது நிகழ்ந்து விடும். 


நண்பர்கள் நம் மனம் நோகும் படி ஏதாவது சொல்லி விடுவார்கள், அல்லது செய்து விடுவார்கள். நாம் எதிர்பார்த்து இருக்கவே மாட்டோம். 


என்ன செய்வது?


அப்படி செய்து விட்டார்களே என்று அவர்களோடு விரோதம் பாராட்டி, நட்பை துண்டித்து விடலாமா?


அல்லது சரி சரி என்று கண்டும் காணாததும் போல் இருந்து விடலாமா?


எப்படித்தான் மறந்தாலும், மன்னித்தாலும், மீண்டும் அவர்கள் முகம் பார்க்கும் போது பழையன எல்லாம் வந்து போகும்தானே. 


எப்படி இந்த தர்ம சங்கடத்தில் இருந்து மீள்வது?


நாலடியார் அதற்கு ஒரு வழி சொல்கிறது. 


சில சமயம் நம் விரல் நம் கண்ணில் பட்டுவிடும். வலி உயிர் போய்விடும். 


இவ்வளவு வலிதந்தாயே என்று விரலை வெட்டி விட முடியுமா?


நம் விரல்கள் நமக்கு எவ்வளவோ உதவி செய்து இருக்கின்றன. இனியும் அவை நமக்கு உதவி செய்யும். அப்படி இருக்க, ஏதோ ஒரு தடவை தவறு நிகழ்ந்தது என்பதற்காக விரலை வெட்டி விட முடியுமா?


அது போல நண்பர்கள் எப்போதேனும் தவறு செய்து விட்டால், அதை பெரிது படுத்தாமல் கண் குத்திய விரலை ஏற்றுக் கொள்வது போல் அவர்களை ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். 


பாடல்  



 இன்னா செயினும் விடுதற் கரியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர்

விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ

கண்குத்திற் றென்றுதங் கை.


பொருள் 


இன்னா செயினும் = நமக்கு துன்பம் செய்யினும் 


 விடுதற் கரியாரைத் = விட்டு விட முடியாதவரை. நல்ல நண்பர்களை 


துன்னாத் துறத்தல் = நெருங்கி இல்லாமல் விட்டு விலகிப் போய் விடுவது. (துன்னுதல் = நெருங்குதல்)


 தகுவதோ = சரி தானா ? (சரி இல்லை) 


துன்னருஞ் = நெருங்க முடியாத 


சீர் =  சிறந்த 


விண்குத்து = வானத்தை குத்துவது போல 


நீள்வரை  வெற்ப ! = உயர்ந்த மலைகளை கொண்ட நாட்டின் அரசனே 


களைபவோ = யாராவது வெட்டி விடுவார்களா? 


கண் குத்திற் றென்றுதங் கை = கண்ணை குத்தியது என்பதற்காக தன் கையை ?


நன்கு ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும். 


அதற்குப் பின் என்ன நடந்தாலும் அந்த நட்பை விட்டு விடக் கூடாது.


வார்த்தைகள் முத்திப் போய் அடி, தடி, சண்டை, சச்சரவு, வழக்கு, வக்கீல், நீதி மன்றம், விவாகரத்து என்று போகின்ற இந்தக் காலத்தில், இது போன்ற அறவுரைகள் மிகவும் தேவையான ஒன்று.