Wednesday, February 19, 2025

நாலடியார் - தீவினையச்சம் - இடுகாடு

 நாலடியார் - தீவினையச்சம் - இடுகாடு 


சுடுகாடு. 


அங்கே என்ன இருக்கும். பிணங்களை, குழி தோண்டி புதைத்து இருப்பார்கள். சுடுகாட்டை எங்கு தோண்டினாலும் பிணம்தான் இருக்கும். 


எங்கே பிணங்கள் புதைத்து வைக்கப் பட்டு இருக்கிறதோ, அந்த இடம் சுடுகாடு. சரி தானே?


விலங்குகளை கொன்று தின்பவர்களின் வயிறும் சுடுகாடு போன்றது என்கிறது நாலடியார். வயிற்றினுள் இறந்த பிணங்களை புதைத்து வைப்பதால் அவையும் சுடுகாடு தான் என்கிறது நாலடியார். 


பாடல்  


துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா

மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க

விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட

புல்லறி வாளர் வயிறு.


பொருள் 


துக்கத்துள் தூங்கித் = துன்பத்துள் அழுந்தி, அப்படி துன்பத்தில் கிடக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருந்து 


துறவின்கட் சேர்கலா = உயர்ந்த துறவு நெறியில் சேராமல் 


மக்கள் பிணத்த சுடுகாடு = இறந்த மனிதர்களை புதைக்கும் சுடுகாடு 


தொக்க = போல 


விலங்கிற்கும்  = விலங்கினங்களுக்கும் 


புள்ளிற்கும் = பறவைகளுக்கும் 


காடே = இறந்த பின் புதைக்கும் சுடுகாடே 


புலன்கெட்ட = புலன்கள் அழிந்து 


புல்லறி வாளர் = சிறந்த அறிவினை இல்லாதவர் 


வயிறு = அவர்களின் வயிறு 


உயிர்களை கொன்று தின்பதை தீவினை என்கிறது இந்தப் பாடல். 


மாமிசம் உண்பது சரியா தவறா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்றேனும் ஒரு முடிவு வருமா என்று தெரியவில்லை. 


தெளிவான முடிவு வரும்வரை என்ன செய்வது? 


அவரவர்க்கு சரி என்று பட்டதைச் செய்யலாம். 


அல்லது 


நம்மைவிட அறிவில் முதிர்ந்த சான்றோர் சொல் கேட்டு நடக்கலாம். 


நாலடியார் போன்ற நூல் வழி நிற்கலாம். 




No comments:

Post a Comment