Saturday, April 30, 2022

திருக்குறள் - அடங்கியான் தோற்றம்

திருக்குறள் - அடங்கியான் தோற்றம் 


பொதுவாக அற நூல்கள் அதைச் செய், இதைச் செய்யாதே என்று உபதேசம் செய்யும். பெரும்பாலான உபதேசங்கள் நடைமுறைக்கு ஒத்துவருமா என்ற சந்தேகம் நமக்கு இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராவிட்டால் "...கேக்க நல்லா இருக்கு...பாக்கலாம் ..." என்று தள்ளி வைத்துவிட்டு வேலையைப் பார்க்கப் போய் விடுவோம்.


படித்து ஒரு புண்ணியமும் இல்லை. 


நேரம் விரயம் ஆனதுதான் மிச்சம். 


ஆனால், திருக்குறள் அப்படி இல்லை. எது முடியுமோ அதைதான் சொல்லும். ஆண் பெண் இன்பமாகட்டும், பொருள் சேர்ப்பது ஆகட்டும், சண்டை பிடிப்பது, வேலை செய்வது என்று எதை எடுத்தாலும் எது முடியுமோ அதைத்தான் சொல்லுவார். .


அதனால்தான் முதலில் இல்லறத்தை வைத்து, பின் துறவறத்தை வைத்தார். 


இல்லறத்தையும் வைத்து அது கூடவே அடக்கமுடைமை, புலன் அடக்கம் என்று சொன்னால் எப்படி ?


கல்யாணம் பண்ணிவிட்டு, புலன் அடக்கம் என்றால், அதற்கு கல்யாணம் பண்ணாமலேயே இருந்திருக்கலாமே? 


வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல் என்று சொல்லிவிட்டு பின் அடக்கமுடைமை என்று சொல்கிறாரே என்று நாம் நினைப்போம். 


அப்படி அல்ல என்று சொல்கிறார். 



பாடல் 


நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_30.html


(Pl click the above link to continue reading)



நிலையின் திரியாது = தன் நிலையில் இருந்து மாறாமல் 


அடங்கியான் = அடங்கியவனின் 


தோற்றம் = தோற்றம் 


மலையினும் = மலையை விட 


மாணப் பெரிது = மிகப் பெரியது 


அடக்கம் உடமை பற்றித் தானே சொல்கிறார். எங்கே வேறுபடுகிறார் என்று நாம் தேடுவோம். 


பரிமேலழகர் இல்லை என்றால் நமக்குப் புரியவே புரியாது. 


"நிலையின் திரியாது அடங்கியான்" என்றால் என்ன? 


நிலை என்றால் இல்லறம் என்ற நிலை. பிரமச்சரியம், துறவு என்பது மற்ற நிலைகள். இங்கே இல்லறம் என்ற பால் என்பதால், நிலை என்பது இல்லறம் என்பதைக் குறிக்கும் என்று உரை எழுதுகிறார். 


இல்லறம் என்ற நிலையில் இருந்து திரியாமல். இல்லறத்துக்கு என்று சில இன்பங்கள் அனுமதிக்கபட்டு இருக்கிறது. கணவன் மனைவி இன்பம் துயித்தல், விருந்தோடு இருந்து உண்டல், என்பன அனுமதிக்கப் பட்டது. அதை அனுபவிக்கலாம். அதைத் தாண்டி போகக் கூடாது. "திரியாது".  என்றால் பிறழாது. 


அடுத்தது, "அடங்கியான்". இல்லறத்துக்கு இன்பம் அனுமதிக்கப்பட்டது என்பதற்காக  அதில் போய்க் கொண்டே இருக்கக் கூடாது. ஒரு அளவுக்கு மேல் போகாமல், போதும் என்ற திருப்தி வர வேண்டும்.  விருந்து அனுமதிகப்பட்டது என்பதற்காக அறுபது வயதில், என்பது வயதில் லட்டைக் கொண்டு வா, பாயசம் கொண்டு வா, முறுக்கைக் கொண்டு வா என்று சாப்பிட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. வயது ஆக ஆக, இன்பத்தின் மேல் உள்ள பற்று குறைய வேண்டும். அடங்க வேண்டும். .


"மலையின் மாணப் பெரிது". மலையை விட மிகப் பெரியது. இது என்ன பெரிய உதாரணமா? மலையை விடப் பெரியது என்று யார் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்தானே?


மலை எப்படி அவ்வளவு பெரிதாக ஆனது ? யாரும் செய்தார்களா? இல்லை. அது தானே உயர்ந்தது. அது போல,  புலன்களை அடக்கியவன் தானே உயர்வான். 


மலை எவ்வளவு உயர்ந்தாலும், அது தான் உயர்ந்து விட்டேன் என்று காட்டிக் கொள்ளாது. அடக்கமாக இருக்கும். அதுதான்  அதன்  கம்பீரம். 


இல்லற இன்பங்களை அனுபவித்து, அதன் மூலம் புலன் அடக்கத்தைப் பெற்றவன் அது போல உயர்ந்து கம்பீரமாக இருப்பான் என்பது இன்னொரு செய்தி. 


வள்ளுவர் இன்பங்களை மறுக்கவில்லை. மாறாக, ஆண்டு அனுபவிக்கச் சொல்கிறார். 


இன்பம் துயிக்கும் போது இரண்டு விடயங்களை மனதில் வைத்துக் கொள்ளச் சொல்கிறார். 


ஒன்று, ஒரு வரைமுறைக்குள் இருக்க வேண்டும். 


இன்னொன்று, ஒரு அளவுக்கு மேல் போகக் கூடாது. 


இதைவிட ஒரு நடைமுறைக்கு உகந்த உபதேசம் வேறு என்ன இருக்க முடியும். 


இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால்,  இல்லறத்தின் ஊடாக நம்மை துறவறத்துக்கு தயார் செய்கிறார். 


அனுபவித்து விட்டாய் அல்லவா? திருப்தி தானே...வா அடுத்த கட்டத்துக்குப் போகலாம் என்று கை பிடித்து அழைத்துச் செல்கிறார். 


நேரே துறவறம் என்று ஆரம்பித்து இருந்தால், "ஐயோ, இல்லறத்தில் என்னெனவோ இன்பங்கள் இருக்கிறதே...அதை எல்லாம் விட்டு விட்டு வந்து விட்டோமே" என்று அந்த நினைப்பாகவே இருக்கும். துறவு பாழ்படும். 


ஒண்ணே முக்கால் அடியில் என்ன ஒரு ஆழமான சிந்தனை. 










Friday, April 29, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கோயின்மை செய்வது தக்கதே?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கோயின்மை செய்வது தக்கதே?


இறைவனிடம் எல்லாம் இருக்கிறது. நாம் கேட்டவற்றை அவன் தருவான். நம்மிடம் இருந்து அவனுக்கு வேண்டியது ஒன்றும் இல்லை. நம்மை காப்பது அவன் கடமை. நம்மை என்றால் நம் உயிரை, பொருளை, சந்தோஷத்தை எல்லாம் சேர்த்ததுதான். 


அப்படி என்று நான் நினைத்துக் கொண்டு இருந்த போது, என் மகள் விடயத்தில் ஒரு தலைவனுக்கு பொருத்தமில்லாத ஒரு காரியத்தை நீ செய்யலாமா என்று நம்மாழ்வார் கேட்கிறார். .


அப்படி என்ன திருமால் செய்து விட்டார்?


பாடல் 


தொண்டெல்லாம் நின்னடி யேதொழு துய்யுமா

கண்டு,தான் கணபுரம் கைதொழப் போயினாள்

வண்டுலாம் கோதையென் பேதை மணிநிறம்

கொண்டுதான், கோயின்மை செய்வது தக்கதே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_29.html



(pl click the above link to continue reading)



தொண்டெல்லாம்  = தொண்டர்கள் எல்லோரும் 


நின்னடி யேதொழு து  = உன் திருவடிகளையே தொழுது 


உய்யுமா கண்டு = உயிவதைக் கண்டு, ஈடேறுவதைக் கண்டு 


தான் = அவள் 


கணபுரம் = திருக்கண்ணபுரம் 


கைதொழப் போயினாள் = (சென்று அல்லது நோக்கி) கைதொழப் போனாள் 


வண்டுலாம் = வண்டு உலவும் கூந்தலைக் கொண்ட 


கோதையென் பேதை = சூதுவாது அறியாத பேதைப் பெண்ணான என் கோதை (மகள்) 



மணிநிறம் = அழகிய மணி போல் ஒளி விடும் நிறத்தை 


கொண்டுதான் = நீ கொண்டு போய்விட்டாய் 


கோயின்மை = கோ + இன்மை = கோ என்றால் அரசன், தலைவன் 


செய்வது தக்கதே? = செய்வதுசரிதானா?


எல்லா பக்தர்களும் உன்னை வழிபட்டு நன்மை அடைகிறார்கள். அதைப் பார்த்து என் மகளும் உன்னை வழிபட்டாள். நீ என்னடா என்றால் அவளுக்கு வரம் தருவதை விட்டுவிட்டு அவள் மேனியின் நிறத்தை எடுத்துக் கொண்டாய். ஒரு தலைவன் செய்யும் செயலா இது ?


அதாவது, அவனையே நினைத்து உண்ணாமல், ,உறங்காமல் மெலிந்து, மேனி நிறம் குன்றிப் போய் விட்டதாம். திருமால் அருள் செய்யாததால் வந்த வினை என்கிறார். 


அருள் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை, இருக்கிறதையும் எடுத்துக் கொண்டு போவது சரியா என்று வினவுகிறார். .


பிரபந்தம் என்பது மிக மிக நெருக்கமான இறை அனுபவம். 


இறைவனுடன் சண்டை பிடிப்பது, கேள்வி கேட்பது, உருகுவது, அழுவது, கூத்தாடுவது என்று உணர்ச்சிகளின் மொத்த வெளிப்பாடு. 


ஆழமான அன்பின் அனுபவம் இருந்தால் அன்றி இவை புரியா. 




Wednesday, April 27, 2022

திருக்குறள் - அடக்கம் உடைமை - அறிவறிந்து

 திருக்குறள் - அடக்கம் உடைமை - அறிவறிந்து 


அடக்கம் என்றால் புலனடக்கம் என்று பார்த்தோம். 


நாம் சிந்தித்துக் கொண்டு இருப்பதோ இல்லறம் பற்றி. இல்லறத்தில் இருந்து கொண்டு, புலன்களை அடக்குகிறேன் என்றால் எப்படி முடியும்? புலனடக்கம் என்பது துறவரதுக்குச் சரி. இல்லறத்துக்கு? 


மனைவியுடன் அன்பாக இருக்க மாட்டேன், நாள் கிழமை என்றால் ஒரு பலகாரம் எதுவும் சாப்பிடமாட்டேன், நல்ல உடை உடுத்த மாட்டேன், எல்லா புலன்களையும் அடக்கப் போகிறேன் என்று புறப்பட்டால், அவனை விட்டு மனைவி புறப்பட்டு விடுவாள். இவனோடு எப்படி குடும்பம் நடத்துவது என்று தெரியாமல். 


பின் ஏன் வள்ளுவர் அடக்கமுடைமையை கொண்டு வந்து இல்லறத்தில் வைத்தார்? இதைக் கொண்டு போய் துறவறத்தில் வைத்து இருக்கலாமே? 


பரிமேலழகர் இல்லை என்றால் இதற்கு எல்லாம் அர்த்தம் தெரியாமலேயே போய் இருக்கும். 


பாடல் 


செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_27.html


(Pl click the above link to continue reading)


செறிவறிந்து = அடக்கத்தினை அறிந்து 


சீர்மை பயக்கும் = நல்லதைத் தரும், சிறப்பைத் தரும் 


அறிவறிந்து = அறிய வேண்டியவற்றை அறிந்து 


ஆற்றின்  = வழியாக, நெறியாக, 


-அடங்கப் பெறின். = அடக்கம் உண்டானால் 


இதற்கு பரிமேலழகர் மிக நுட்பமாக உரை செய்கிறார். 


முதலாவது, "அடங்கப் பெறின்" என்பதற்கு புலன்கள் தன் வயத்ததாதல் என்கிறார். அதாவது புலன் இன்பங்களை விட்டு ஒழிக்கச் சொல்லவில்லை. புலன்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க வேண்டும் என்கிறார். இன்று ஒரு விசேடம். வடை, பாயாசம், இனிப்பு பலகாரம் எல்லாம் செய்து இருக்கிறார்கள் என்று ஒரு பிடி பிடிக்கக் கூடாது. இவ்வளவுதான் சாப்பிடலாம் என்று கணக்கு வைத்துக் கொண்டு அவ்வளவு மட்டுமே சாப்பிட் வேண்டும். 


மனைவியை தவிர இன்னொரு பெண் பின்னால் மனம் போகக் கூடாது. 


புலன்கள் நாம் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். அது தன் பாட்டுக்குப் போகக் கூடாது. சாரதி வண்டியை ஓட்ட வேண்டும். குதிரை அது பாட்டுக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடாது. 


இரண்டாவது, "ஆற்றின்". புலன்களை தன் வயப்படுதுகிறேன் பேர்வழி என்று முரட்டுத் தனமாக எதைக் செய்யக் கூடாது. எப்படி செய்ய வேண்டும் என்று அறிந்து அந்த முறையில் செய்ய வேண்டும். ஆறு என்றால் வழி என்று பொருள். 


மூன்றாவது, "அறிவறிந்து". எதை அறிந்து கொள்ள வேண்டுமோ அதை அறிய வேண்டும். இன்று நாம் என்ன செய்கிறோம்? தேவை இல்லாதவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறோம். புலன்கள் தன் வசம் ஆகாமல் போவதற்கு காரணம் அறிவு கண்ட இடத்தில் செல்வதால். "அட, இப்படி ஒன்று இருக்கிறதா? நாமும் இதை முயன்றால் என்ன" என்று மனம் இழுத்துக் கொண்ண்டு ஓடும். தேவை இல்லாதவற்றில் அறிவை செலுத்தக் கூடாது. எத்தனை whatsapp செய்திகள்? நம்மை அறியாமலேயே நம் புலன்கள் அவற்றின் பின்னால் போய் விடும். .



நான்காவது, பரிமேலழகர் ஒரு படி மேலே போகிறார். 'அறிவறிந்து' என்பதற்கு, அடங்குதலே அறிவு என்று அறிந்து என்கிறார். படித்து வருவது அல்ல அறிவு. புலனடக்கமே அறிவு என்கிறார் அவர். 


"அடங்குதலே அறிவு என்று அறிந்து நெறிப்படி அடங்குதல்" என்று பொருள் சொல்கிறார். .


ஐந்தாவது, சும்மா இப்படி புலனடக்கம், புலனடக்கம் என்று இருந்தால் என்ன நன்மை கிடைக்கும்? நல்லா அனுபவிப்பதை விட்டு விட்டு, புலன்களை கட்டுக்குள் கொண்டு வருவதால் என்ன பலன் என்று கேட்டால், 


"செறிவு அறிந்து சீர்மை பயக்கும்" என்கிறார். 


செறிவு அறிந்து என்பதற்கு பரிமேலழகர் "செறிந்த அறிவை உடையவர்", சான்றோர், நல்லோர் என்று உரை செய்கிறார். அதாவது நாம் புலன்களை நம் வயப் படுத்தி அடங்கி இருந்தால் அது நல்லவர்களுக்கு நம் மேல் ஒரு நன்மதிப்பை உண்டாக்கும். அவர்களின் மதிப்பைப் பெற்றால், அது நமக்கு பல நன்மைகளைத் தரும் என்கிறார். 


உதாரணமாக, "எனக்கு அதிகம் தெரியாது. நான் தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்" என்ற அடக்கம் இருந்தால், திருவள்ளுவரைப் படிப்போம்.  அதைப் படித்ததால் நமக்கு பலன் இருக்குமா இல்லையா? மாறாக, "எல்லாம் எனக்குத் தெரியும்" என்று இருந்தால் பலன் கிடைக்குமா? 


அடக்கமாய் இருப்பவர்கள் மேல் நல்லோருக்கு ஒரு அன்பு பிறக்கும். அந்த அன்பும் மதிப்பும் பல நன்மைகளைக் கொண்டு வந்து தரும் என்கிறார். .


அடங்குதலே அறிவு என்று அறிந்து, நெறிப்படி புலன்களை தன் வசத்தில் கொண்டு வந்தால், அது நல்லவர்களின் மதிப்பை பெற்று தருவதோடு அதன் மூலம் கிடைக்கும் பல நன்மைகைகளை நமக்குத் தரும் என்பது சாரம். 


ஒண்ணே முக்கால் அடிக்குள் ஒரு மாயாஜாலம். 


Sunday, April 24, 2022

சிவ ஞான போதம் - மாயை

 சிவ ஞான போதம் - மாயை 


சைவ சித்தாந்ததின் அடிப்படை தத்துவம் என்பது பதி, பசு, பாசம் என்ற மூன்றில் தொடங்குகிறது என்று சிந்தித்தோம். 


இந்த மூன்றும் என்றும் உள்ளது. 


இதில் பசு என்ற உயிர், தோன்றும் பொழுதே ஆணவம் என்ற மலத்தில் சிக்கி இருக்கும் (தாயின் வயிற்றில் கருவைப் போல). ஆணவ மலத்தில் கட்டுண்டு செய்வது அறியாமல் திகைக்கும் உயிர்கள் அந்த இருளில் இருந்து வெளிப்பட நினைக்கும். குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வர நினைப்பது இல்ல. 


அந்த ஆசை தான் மூல கன்மம் என்று சொல்லப் படுகிறது. அனைத்து கர்மங்களுக்கும், வினைகளுக்கும் ஆதி காரணம் அந்த மூல கன்மம் (கர்மம் அல்லது வினை). 


அப்படி வெளிப்படத் தவிக்கும் உயிர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு இறைவன் கன்மம், மாயை என்ற இரண்டை தோற்றுவிக்கிறான். 


இந்த மூன்றும் சேர்ந்து மும்மலம் என்று அறியப் படுகிறது. 


வினை செய்ய உடல் வேண்டும், உடலில் உறுப்புகள் வேண்டும்,  இருந்து செய்ய இடம் வேண்டும், செய்கின்ற அனுபவம் வேண்டும். இவற்றை தனு, கரண, புவன, போகம் என்று கூறுவார்கள் 


இவற்றையெல்லாம் இறைவன் மாயையில் இருந்து தோற்றுவிக்கிறான். 


என்ன இது மாயை, மாயை என்று எதற்கெடுத்தாலும் மாயை என்று சொன்னால் என்ன அர்த்தம். மாயை என்றால் என்ன? 


ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறோம். பார்க்க அழகாக இருக்கிறது. பிரமாண்டமாக இருக்கிறது. 


அந்தக் கட்டிடம் செங்கல், சிமெண்ட், கம்பி, மரம்,கண்ணாடி, போன்ற  வற்றால் செய்யப்பட்டது என்று தெரியும். 


ஒரு காரைப் பார்க்கிறோம். அது டையர், streering, பிரேக், என்ஜின், பெட்ரோல் tank, என்ற பல உதிரிப் பாங்களை சேர்த்து செய்யப்பட்டது என்று தெரியும் நமக்கு.


நம் உடம்பு கூட கை, கால், கண், என்ற உறுப்புகளின் தொகுதிதானே. 


உடம்பு ஒரு பெயர் வைத்து இருக்கிறோம். அது ஒரு வசதி. அவ்வளவுதான். உடம்பு என்று ஒன்று கிடையாது. உறுப்புகள் என்றுதான் இருக்கிறது. "உடம்பில்" எதை தொட்டுக் காட்டினாலும், அந்தப் பகுதிக்கு பேர் இருக்கும் - நகம், முடி, தோல், விரல் என்று. உடம்பு என்று தனியே கிடையாது. 


சரி, இந்த உறுப்புகள் என்று தனியே இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. ஒவ்வொரு உறுப்பும் திசுக்களின் தொகுதி. 


திசுக்குள் தனியாக இருர்க்கிறதா என்றால் இல்லை, அவை செல்களின் தொகுதி. 


சரி செல்களாவது தனியாக இருக்கிறதா என்றால் அது ஜீன், dna (மரபணு), சைட்டோ பிளாசம், செல் membrane என்ற தொகுதிகளால் ஆனது. 


இன்னும் உள்ளே போகலாம். 


என்ன புரிகிறது?


எந்த பெரிய உருவமும் பல சிறிய பாகங்களை உடையது.


எந்த சிறிய பாகமும் அதனினும் சிறிய கூறுகளை உடையது. 


இப்படியே சொல்லிக் கொண்டே போனால், மிக அடிப்படையானது என்பது மிக மிக நுண்ணியதாக இருக்கும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது அல்லவா?


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_24.html


(click the above link to continue reading)



இன்று நமக்கு இருக்கும் அறிவியல் உபகரணங்கள் கொண்டு நாம் ஒரு நிலையை அடைந்து இருக்கிறோம். உபகரணங்கள் மேலும் சக்தி பெறும் போது இன்னும் உள்ளே போக முடியும். 


எல்லாவற்றிற்கும் ஆதி காரணமான ஒன்று மிக மிக மிக நுண்ணியதாக இருக்கும் என்று தெரிகிறது அல்லவா?


இந்த உலகம், பிரபஞ்சம், என்பதை இறைவன் மாயையில் இருந்து உருவாக்கினான் என்று பார்த்தோம். 


அப்படி என்றால் மாயை என்பது மிக மிக மிக நுண்ணிய என்று நம்மால் உணர முடிகிறது அல்லவா? 


மாயைகாட்டு, அது எப்படி இருக்கும் என்று கேட்டால் அணுவுக்குள் இருக்கும் துகளை காட்டுவது மாதிரித்தான். காட்ட முடியாது. பார்க்க முடியாது. முழுவதுமாக உணரக் கூட முடியாது.


உள்ளே போகப் போக  அது போய்க் கொண்டே இருக்கும். 


அறிவுக்குள் அகப்படாத ஒன்று. 


இது ஒரு பக்கம். 


இதன் இன்னொரு பக்கம் என்ன என்றால்.....





Saturday, April 23, 2022

திருக்குறள் - பெரிய செல்வம்

 திருக்குறள் - பெரிய செல்வம் 


நம்மிடம் ஒரு பெரிய சொத்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம், அதை நாம் எவ்வாறு காவல் செய்வோம்?


பெரிய வைரக் கல், தங்க நகை, விலை அதிகம் உள்ள கைக் கடிகாரம் என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் கவனக் குறைவாக எங்காவது போட்டு வைப்போமா? 


எப்போதும் பத்திரமாக வைத்து இருப்பேன், ஆனால் அப்பப்ப அந்த வைர நெக்கலசை பழைய காகிதங்களோடு போட்டு வைப்பேன் என்று சொல்வோமா? 


எது எல்லாம் உயர்ந்ததோ, அவற்றை அதிக கவனத்தோடு பாதுகாக்க வேண்டும்.


அடக்கம் உடைமை என்பது ஒரு உயர்ந்த குணம். அதையும் மிக கவனமாக விலை மதிப்பற்ற பொருளை பாதுகாப்பது போல பாதுகாக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 



காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூங்கு இல்லை உயிர்க்கு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_23.html


(Please click the above link to continue reading)



காக்க பொருளா = பொருளாக காக்க. உயர்ந்த பொருளைப் போல காக்க. 


அடக்கத்தை = எதை காக்க வேண்டும்? அடக்கத்தை காக்க வேண்டும். 


ஆக்கம் = செல்வம் 


அதனினூங்கு இல்லை உயிர்க்கு = அதைவிட வேறு ஒன்று இல்லை உயிர்க்கு 


ஒருவனுக்கு பல மதிப்புள்ள செல்வங்கள் இருக்கலாம். பெரிய வீடு, நிலம், நீச்சு, நகை, நட்டு, பங்குகள், வங்கியின் இருப்புகள் என்று.


இவை எல்லாவற்றிலும் மிக உயர்ந்த செல்வம் அடக்கம் உடைமை என்ற செல்வமாகும். 


மற்ற எல்லா பொருள்களையும் எந்த அளவு ஒருவன் காப்பானோ  அதைவிட பொறுப்பாக அடக்கத்தை காக்க வேண்டும் 









Friday, April 22, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - தாங்க முடிந்தால் தாங்கு

நாலாயிர திவ்ய பிரபந்தம் -  தாங்க முடிந்தால் தாங்கு 


ஆழமாக காதலிப்பவர்களுக்கு, ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து இருக்க முடியாது. கொஞ்ச நேரம் பிரிவது என்றால் கூட பெரிய துன்பமாக இருக்கும். எப்பாட மீண்டும் பிரிந்த காதலரை பார்ப்போம், பேசுவோம் என்று இருக்கும். 


பிரிவின் தவிப்பு, காதலின் ஆழத்தைப் பொறுத்தது. 


இறைவன் மேல் ஆழ்ந்த அன்பு கொண்டு விட்டாலும் அப்படித்தான் என்கிறார் நம்மாழ்வார். 


அவர் தன் நெஞ்சைப் பார்த்துக் கூறுகிறார்...


"எப்படித்தான் அவனை விட்டு உன்னால் பிரிந்து இருக்க முடிகிறதோ. அவனைப் பார்க்காமல், அவன் திருவடியில் பூ தூவாமல், தலை தாழ்த்தி வணங்காமல், கை கூப்பித் தொழாமல் எப்படித்தான் நீ இருக்கிறாயோ என் நெஞ்சே. அவன் அவன் எங்கே என்று தேடாமல் உன்னால் இருக்க முடியும் என்றால் இரு. என்னால் முடியாது" 


என்கிறார். 


வசீகரமான பாசுரம். 


பாடல் 


வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்

தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,

எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,

தங்கத்தா னாமேலும் தங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_22.html



(Pl click the above link to continue reading)





வாழ்த்தி = வாயால் அவனை வாழ்த்தி 


அவனடியைய்ப் = அவன் திருவடிகளை 


பூப்பு னைந்து = பூக்களால் நிறைத்து 


நிந்தலையைத் = உன்னுடைய தலையை 


தாழ்த்தி = தாழ்த்தி 


இருகை = இரண்டு கைகளையும் 


கூப்பென்றால் கூப்பாது = கூப்பு என்றால் கூப்பாது 


பாழ்த்தவிதி, = பாழாய் போன விதி 


எங்குற்றாய் = எங்கு சென்றாய் 


என்றவனை  = என்று அவனை 


ஏத்தாதென் னெஞ்சமே, = போற்றாத என் நெஞ்சே 


தங்கத்தா னாம்  = தங்கத் தான் ஆம். தங்க முடியும் என்றால் 


மேலும் தங்கு. = மேலும் தாங்கிக் கொள் 


இதுவரை எப்படியோ இறைவனை தேடாமல் இங்கே தங்கி விட்டாய். இனிமேலும் அப்படியே தங்க முடியும் என்றால் நீ தங்கிக் கொள். என்னால் ஆகாது என்கிறார். 


பூ போட்டு, கை கூப்பி, தலை வணங்குவது என்ன பெரிய கடினமான செயலா? அது என்ன நெருப்புக்கு நடுவில் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்வது போல கடினமான செயலா? 


இல்லை. இருந்தும் செய்வது இல்லை. ஏன் என்று ஆழ்வார் யோசிக்கிறார். 


காரணம் கண்டு பிடித்துவிட்டார். 


எல்லாம் விதி. 


விதி நல்லதின் பக்கம் போகாமல் தீயதின் பக்கம் நம்மைத் தள்ளுகிறது. 


அதாவது போகட்டும். இறைவனைத் தொழவில்லை. 


இறைவன் நமக்கு எவ்வளவு நன்மைகள் செய்து இருக்கிறான். நம் மேல் எவ்வளவு அன்பு கொண்டிருக்கிறான். அப்படிப்பட்டவனை எங்கே எங்கே என்று தேட வேண்டாமா? அந்த ஆர்வம் கூடவா இல்லாமல் போய் விடும்? 


இப்படியே எத்தனை காலம் போவது? இறைவன் யார், அவன் எங்கே இருக்கிறான், எப்படி அவனை அடைவது என்ற ஒரு தேடல் கூட இல்லாமல் எப்படித்தான் இருக்க முடிகிறதோ என்று வியக்கிறார். ஆழ்வார். 


".இப்படியே இருக்கிறதுனா இருந்திட்டுப் போ ..." என்று மனதை கடிந்து கொள்கிறார். 


அருமையான பாசுரம். 


ஏறத்தாழ நாலாயிரம் பாசுரம்.  என்று அனைத்தையும் படித்து முடிப்பது? 


Thursday, April 21, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது 


கீழே உள்ள பாசுரத்தின் முதல் பாகத்தை நேற்று சிந்தித்தோம். அதன் link இந்த ப்ளாகின் இறுதியில் உள்ளது. ஒருவேளை படிக்க விருப்பம் இருந்தால் அதையும் படிக்கலாம். 


நம்மாழ்வார் சொல்கிறார், "எது சரி தவறு என்று தெரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாததால் பொன் மான் பின் போன அம்மானைத் தொழாமல் இதுவரை என் வாழ்நாளை எல்லாம் வீணே கழித்து விட்டேன் என்று வருந்துகிறார். 




 பாடல் 


தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா

இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்

அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை

அம்மானை ஏத்தாது அயர்த்து    (2665)



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_21.html



(Please click the above link to continue reading)



தெரிந்துணர்வு  = தெரிந்து + உணர்வு = எது நல்லது, எது கெட்டது என்று அறியும் உணர்வு 



ஒன்று இன்மையால் = அந்த உணர்வு இல்லாததால் 



தீவினையேன் = தீய வினைகள் பல செய்த நான் 




வாளா இருந்தொழிந்தேன் = ஒன்றும் செய்யாமல் வெறுமனே காலத்தை கழித்து விட்டேன் 



 கீழ் நாள்கள் எல்லாம்  = இது வரை இருந்த நாட்கள் எல்லாம் 



கரந்துருவின் = உருவத்தை மறைத்து 



அம் மானை =அந்த பொன் மானை 



அந்நான்று = அந்த நாளில் 



 பின் தொடர்ந்த = பின் தொடர்ந்து சென்ற 



 ஆழி அங்கை = மோதிரம் அணிந்த கைகளை உடைய 



அம்மானை = அம்மானை 



ஏத்தாது = போற்றாது 



அயர்த்து = சோம்பிக் கிடந்து    (2665)




இதற்கு வைணவ உரை ஆசிரியர்கள் எழுதி இருக்கும் உரை அற்புதமானது. 



"ஆழி அங்கை" - மோதிரம் உள்ள கை. ஆழி என்பது சக்கரம். ஆனால் இதுவோ இராமாவதாரம் பற்றியது. அடுத்த வரியில் பொன் மான் பின் போன அம்மான் என்கிறார். இங்கே எங்கே சக்ராயுதம் வந்தது? எனவே அது மோதிரத்தைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் செய்கிறார்கள். 


சரி, பொன் மான் பின் போவது என்றால் அது இராமன் காட்டுக்குப் போன பின் நிகழ்ந்த ஒன்று. அவன் தான் எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் தானே மர உரி உடுத்து கானகம் வந்தான். மோதிரம் எங்கிருந்து வந்தது ? திருமணம் ஆன புதிது. ஒரு மகிழ்ச்சி. இராமன் கொஞ்சம் எடை கூடி இருப்பான். அதனால் அவன் கையில் உள்ள மோதிரத்தை கழட்ட முடியாமல் போய் இருக்கும். எனவே, மோதிரத்தோடு கானகம் வந்திருப்பான் என்று உரை செய்கிறார்கள். 


எவ்வளவு ஆழமாக அனுபவித்து இருக்கிறார்கள். 


பின்னாளில் அனுமனிடம் மோதிரத்தை கொடுத்து அனுப்புகிறான். அப்ப மட்டும் எப்படி மோதிரம் கழட்ட முடிந்தது என்றால், காட்டில் சரியான உணவு இல்லை. அது மட்டுமல்லாமல் சீதையை பிரிந்த துயரம் வேறு. இராமன் இளைத்துப் போனான். எனவே மோதிரம் எளிதாக கழன்று வந்தது என்கிறார்கள். 


ஒரு சொல்லுக்குப் பின்னால் இவ்வளவு கதை. 



அடுத்து, 



"கரந்துருவின் அம் மானை". கரந்து என்றால் மறைந்து. தன் உண்மையான உருவத்தை மறைத்துக் கொண்டு பொன் மான் வடிவில் வந்த மாரீசன் பின் போன என்று அர்த்தம். 



இராமனுக்குத் தெரியாதா அது பொய் மான் என்று. பின் ஏன் போனான்?  



கணவன் மனைவி உறவின் அழகை, இரகசியத்தை இங்கே சொல்கிறார்கள். 



சீதை கேட்கிறாள். "இல்லை அது பொய் மான். பொன் மான் எங்காவது உண்டா...பேசாமல் இரு" என்று சொல்லி இருக்கலாம். சொன்னால் அவள் முகம் வாடிவிடும். மனைவியின் முகம் வாடக் கூடாது என்று இராமன் பொன்மான் பின் போனானாம். என்னை நம்பி, இந்தக் காட்டுக்குள் வந்து இருக்கிறாள். அவளுக்காக, தவறாகவே இருந்தாலும், அதை செய்து அவளை சந்தோஷப் படுத்த வேண்டும் என்று இராமன் நினைத்தானாம். 




சில சமயம் பெண்கள் இப்படித்தான் காரண காரியம் இல்லாமல் எதையாவது கேட்பார்கள். அவர்களோடு வாதம் பண்ணி புண்ணியம் இல்லை. கேட்டது கிடைக்கவில்லை என்றால் பெரிய துக்கம் அவர்களுக்கு. கேட்டது கிடைக்கவில்லையே என்ற துக்கம் இல்லை.   நான் கேட்டு வாங்கித் தரவில்லையே, எனக்கு அவ்வளவுதானா மரியாதை, என் மேல் அவ்வளவுதானா அன்பு, என்ற தன்னிரக்கம், சுய பச்சாதாபம். 


தான் கேட்டு கணவன் வாங்கிக் கொடுத்து விட்டால் பெரிய சந்தோஷம். கேட்டது கிடைத்ததே என்று அல்ல. என் கணவன் எனக்காக, நான் கேட்டதை வாங்கித் தந்தான் என்ற அன்பின் அனுபவம், பெருமிதம், மனதுக்குள் ஒரு சந்தோஷம். 



அது பெண்மை. 



இராமனுக்கு அது தெரிந்து இருக்கிறது.  மனைவி கேட்கிறாள்.  அந்த மானை பிடித்துத் தந்துவிட வேண்டியதுதான் என்று கிளம்பி விட்டான். பின்னாளில் சீதை அதை நினைத்து வருந்தினாள். அது வேறு விடயம். 




அது மட்டும் அல்ல, இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். 



இறைவன் நாம் என்ன கேட்டாலும் ஓடிப் போய் நமக்காக அவற்றை கொண்டு வந்து தருவானாம். பக்தர்கள் முகம் வாடுவதைக் காண சகிக்க மாட்டானாம். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். என்ன கேட்பது என்று. சீதை மாதிரி பொன் மான் கேட்டால் பின் வருந்த வேண்டி வரும். 




நாமும் கேட்கிறோமே....பணம், வீடு, வாசல், பதவி, வேலை, வரன், பரிட்சையில் தேர்வு அடைய வேண்டும், என்று என்னவெல்லாமோ கேட்கிறோம். 



அவனுக்குத் தெரியாதா, நமக்கு என்ன வேண்டும் என்று?



மணிவாசகர் சொல்லுவார், 



"வேண்டத் தக்கது அறிவோய் நீ"



எது நான் கேட்கத் தகுந்ததோ அது உனக்குத் தெரியும். .



"வேண்ட முழுதும் தருவோய் நீ"



எது கேட்டாலும் முழுசா அப்படியே தருவ. 




"வேண்டும் பரிசு என்று ஒன்று உண்டெங்கில் அதுவும் உந்தன் விருப்பன்றே"



எனக்கு ஏதாவது தரவேண்டும் என்று நினைத்தால், உனக்கு எது விருப்பமோ, அதைக் கொடு.  எனக்கு என்ன தெரியும் எனக்கு எது நல்லது, கெட்டது என்று. நீ பார்த்து செய் என்கிறார்.




நாம் பேருந்துக்காக காத்து இருக்கிறோம். ஒரு பிச்சைக் காரன் நம்மிடம் வந்து, "ஐயா, ஒரு அஞ்சு பைசா பத்து பைசா தர்மம் பண்ணுங்க" என்கிறான். நாமும் அவன் கேட்டதுக்கு மேலேயே போட்டு ஒரு ரூபாய் கொடுக்கிறோம்.




மாறாக, "ஐயா ரொம்ப பசிக்குது, சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு" என்று சொன்னால்,, நாம் ஒரு பத்து ரூபாயோ அல்லது அதற்கு மேலேயோ கொடுத்து இருப்போம். 




நம்ம நிலைக்கு நாம் பத்து ரூபாய் கொடுக்கலாம். அல்லது ஐம்பது ரூபாய் கொடுக்கலாம். 




இறைவனிடம் எவ்வளவு இருக்கிறது. அவன் கொடுப்பதாய் இருந்தால் எவ்வளவு கொடுப்பான்?



ஔவையார் அதியமானிடம் சென்று மருந்து குழைத்து சாப்பிட பால் வேண்டும். ஒரு ஆடு இருந்தால் நல்லா இருக்கும் என்று அவனிடம் ஆடு கேட்டாளாம். ஔவையாருக்கு அவ்வளவுதான் கேட்கத் தோன்றியது. அவன் அரசன். ஒரு ஆட்டை கொடுத்தால் அவன் பெருமை என்ன ஆவது? எனவே, பொன்னால் செய்த ஆடு ஒன்றைக் கொடுத்தானாம். அவன் பெருமைக்கு அப்படித்தான் கொடுக்க முடியும். 




இறைவன் கொடுப்பதாய் இருந்தால் எவ்வளவு கொடுப்பான். அவனிடம் கேட்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். 




ஒரு வரியை வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் உள்ளே போகிறார்கள் என்று. 





அப்படி அனுபவித்து படிக்க வேண்டும். 




























-------------------------------------    பாகம் 1  ---------------------------------------------------------



இதன் முதல் பகுதியை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம் 




https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_20.html


Wednesday, April 20, 2022

திருக்குறள் - அடக்கமுடைமை - அடக்கம் அமரருள் உய்க்கும்

 திருக்குறள் - அடக்கமுடைமை - அடக்கம் அமரருள் உய்க்கும் 


முதலில் நாம் வசிக்கும் இந்த பூமிதான் உலகம். இதுதான் உலகத்தின் மையம். எல்லாம் நம் பூமியை சுற்றி வருகிறது என்று நினைத்தார்கள். 


பின், அது சரி அல்ல, நாம் பூமி நடுவில் இல்லை. சூரியன் தான் நடுவில் இருக்கிறது. பூமியும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன்ன. இவை அனைத்தும் சேர்த்தது சூரிய குடும்பம் என்று நினைத்தார்கள். நம் சூரியனும், மற்ற கோள்களும்  தான் உலகம் என்று நினைத்தார்கள். 


பின், அது சரி அல்ல. இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ நட்சத்திரங்கள் இருக்கின்றன. அதில் நம் சூரியனும் ஒன்று. இது போல் கோடிக்கணக்கான சூரியன்கள் இருக்கின்றன, அவற்றிற்கும் நம் பூமி போல் கோள்கள் இருக்கின்றன என்று கண்டு கொண்டார்கள்.  இவை அனைத்தும் சேர்ந்தது பால் வெளி அல்லது milky way என்று கண்டு கொண்டார்கள். 


பின், அது சரி அல்ல, நாம் இருக்கும் universe மட்டும் தான் உண்மை அல்லது ஒரே ஒரு universe தான் இருக்கும் என்று எப்படி நினைக்க முடியும்? ஒரு பூமி இல்லை, ஒரு சூரியன் இல்லை, ஒரு பால் வெளி இல்லை...எல்லாம் பலவாக இருக்கும் போது பிரபஞ்சம் மட்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இது universe அல்ல multiverse என்கிறார்கள். பல பிரபஞ்சங்கள் இருக்கலாம் என்கிறார்கள். நாம் இருப்பது ஒரு பிரபஞ்சத்தில். நாம் எவ்வளவு முயன்றாலும் மற்ற பிரபஞ்சங்களை காணவே முடியாது என்கிறார்கள். காரணம் அவற்றில் இருந்து வரும் ஒளி நம்மை வந்து சேரவே சேராது என்கிறார்கள். 


சரி, அதுக்கும் இந்த அடக்கமுடைமைக்கும் என்ன சம்பந்தம்?


வள்ளுவர் சொல்கிறார், சுவர்க்கம், நரகம் என்று ஒன்று அல்ல பல இருக்கின்றது என்கிறார். செய்கின்ற நன்மை தீமைகளுக்கு ஏற்ப நாம் ஏதோ சொர்கதிலோ அல்லது ஏதோ ஒரு நரகத்திலோ சென்று பிறப்போம் என்கிறார். 


இந்த பூமியில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. நல்லது மட்டுமே இருக்கும் உலகங்கள் இருக்கின்றன. அவற்றை சொர்க்கம் என்கிறோம். கெட்டது மட்டுமே இருக்கும் உலகங்கள் இருக்கின்றன, அவற்றை நரகங்கள் என்கிறோம். 


அடக்கமாக இருந்தால் தேவர்கள் வாழும் உலகில் செல்லலாம். இல்லாவிட்டால் இருண்ட உலகம் ஒன்று இருக்கிறது. அங்கே சென்று பிறப்போம் என்கிறார். 


பாடல் 


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_95.html


(pl click the above link to continue reading)


அடக்கம் = அடக்கம் 


அமரருள் = தேவர்கள் வாழும் உலகில் 


உய்க்கும் = சென்று சேர்க்கும் 


அடங்காமை = அடக்கம் இல்லாமல் இருத்தல் 


ஆரிருள் = இருள் சேர்ந்த உலகில் 


 உய்த்து விடும் = சேர்த்து விடும். 


இங்கு, அடக்கம், அடங்காமை என்பதற்கு பரிமேலழகர் அடக்கமாகிய அறம் என்றும், அடங்காமையாகிய பாவம் என்றும் உரை செய்கிறார். 


சரி, அடக்கம் என்றால் என்ன? யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருந்த இடம் தெரியாமல் இருப்பதா? மறுமொழி பேசாமல் மெளனமாக இருப்பதா? தன் திறமையை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருப்பதா?


இல்லை, பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். .


"மெய், மொழி, மனங்கள் தீநெறிக்கண் செல்லாது அடங்குதல் " 


என்று. 


உடம்பை கொஞ்சம் முயன்றால் கட்டுப் படுத்தி விடலாம். மொழி இன்னும் கொஞ்சம் கஷ்டம். மனம் இருக்கிறதே, அதை கட்டுப் படுத்துவது என்பது மிகக் கடினம். மேலும், மனம் தீ நெறியில் சென்றால் யாருக்குத் தெரியப் போகிறது? 


மாற்றான் பொருளை மனதில் தனக்கு வேண்டும் என்று நினைத்தால் தெரியவா போகிறது?


பொறாமை, பேராசை, பொருந்தா காமம் இதெல்லாம் வெளியே தெரியாது. எனவே மனம் அது நினைத்தபடி அலைந்து திரியும். 


இவற்றை, தீய வழியில் செல்ல விட்டால், அவை நம்மை பாவத்தில் அழுத்தி, பின் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடும் என்கிறார். 


திருக்குறளில் பல்வேறு நரகங்கள் பற்றி கூறுவார். பின்னால் அவற்றை எல்லாம் பார்க்க இருக்கிறோம். 


மன, மொழி, மெய்யை அடக்கி தீ நெறியில் செல்லாமால் தடுத்து விட்டால் அது நம்மை சொர்க்கத்தில் சென்று சேர்க்கும் என்கிறார். 


அடக்கம் என்றால் என்ன, 


எதை அடக்க வேண்டும், 


எங்கு செல்லாமல் அடக்க வேண்டும், 


ஏன் அடக்க வேண்டும், 


அடக்கினால் என்ன பலன்


எல்லாம் ஒண்ணே முக்கால் அடியில். 




நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - அம்மானை ஏத்தாது 


உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, அதை எல்லாம் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு, இலக்கிய அனுபவத்திற்காக பிரபந்தம் படியுங்கள். அவ்வளவு இனிமை. அவ்வளவு சுகம். 


whatsapp, youtube போன்றவற்றில் வரும் எதையெதையோ படிக்க நேரம் இருக்கும் போது, இது போன்ற உயர்ந்த நூல்கள் படிக்க கொஞ்சம் நேரம் இருக்காதா என்ன?


பக்தி எப்படி வரும்?  முதலில் கோவிலுக்கு வரவழைக்க வேண்டும். அப்புறம் தரிசனம், அப்புறம் பக்தி எல்லாம் வரும். 


பொங்கல், சுண்டல் தருகிறேன் என்றால் ஆர்வமாக வருவார்கள். நான் அப்படி போய் இருக்கிறேன். ஒரு கை அளவுதான் பொங்கல் தருவார்கள். என்ன ஒரு சுவை. என்ன ஒரு சந்தோஷம். ஏதோ பெரிய சாம்ராஜ்யத்தை வென்றுவிட்ட மாதிரி ஒரு பெருமிதம். 


நாளும் அந்த நேரத்துக்குப் போய் விடுவேன். நேரம் கழித்துப் போனால் ஒரு வேளை கிடைக்காதோ என்றோ என்று பயந்து கொஞ்சம் முன்னாடியே போய் விடுவது. போய் என்ன செய்வது? அங்குள்ள பூஜை, மற்றும் சடங்குகளை பார்ப்பது. என்னதான் செய்கிறார்கள் என்று ஒரு ஆர்வம். அப்புறம் பொங்கல், சுண்டல் எல்லாம் கிடைக்கும். 


சாபிட்டுவிட்டு வெளியே வரும் போது, அங்கே ஒருவர் இராமாயணம் உபன்யாசம் செய்து கொண்டு இருப்பார். என்னதான் சொல்கிறார் என்று கேட்போமே என்று சிறிது நேரம் இருந்து கேட்பேன். அட, இது நல்லா இருக்கே என்று முழுவதும் கேட்பேன். சரி, நாளைக்கும் வர வேண்டும் என்ற எண்ணம் வரும். இப்படி முழு இராமாயணத்தையும் கேட்டு இருக்கிறேன். பொங்கல் மேல் இருந்த ஆர்வம் போய், இராமாயணத்தில் ஆர்வம் வந்தது. 


அப்படியே கோவிலை சுற்றி வரும் போது, அங்கே சுவர்களில் பாசுரங்கள் எழுதி வைத்து இருப்பார்கள். வாசிக்கும் போது அதில் ஒரு வசீகரம் இருக்கும். எப்படி மொழி வளைந்து கொடுக்கிறது என்று. பல சொற்களுக்கு அர்த்தம் தெரியாது. இன்று உள்ளது போல் google எல்லாம் கிடையாது. சொல் மனதுக்குள் சுற்றிக் கொண்டே இருக்கும். 


ஏதாவது நூலகத்தில் சென்று, அகாரதியில் பார்த்தால் அர்த்தம் தெரியும். பல சமயம் ஒரு சொல்லுக்கு பல அர்த்தம் இருக்கும். எது பொருந்தும் என்று சிந்திப்பேன். ஏன் இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒர்ர் சொல்லுக்கு அர்த்தம் போட்டு இருக்கிறார்கள் என்ற சிந்தனை வரும். இன்னும் தேடல் பெரிதாகும். சில சமயம் ஒரு சொல்லின் பொருளுக்கு மேற் கோள் காட்டி இன்னொரு பாடல் வரியை தந்து இருப்பார்கள். அது என்ன பாடல் என்று தேடிப் போவேன். 


இப்படி பொங்கலில் ஆரம்பித்து, உபன்யாசம், சுவற்றில் உள்ள பாசுரம், அகராதி என்று தேடல் விரிந்து கொண்டே போனது. 


பொங்கல் மாதிரி, இலக்கியங்களும். முதலில் சொல் சுவை, அணி, யாப்பு எல்லாம் இனிமையாக இருக்கும். அப்படியே நம் கை பிடித்து கொண்டு செல்லும். தேடிக் கொண்டு போக வேண்டியது நம் பொறுப்பு. 


பொங்கலை மட்டும் வாங்கி உண்டு விட்டு, அங்குள்ள தூணில் துடைத்து விட்டு போய் விடலாம். நட்டம் யாருக்கு? 


சரி அது புறம் இருக்கட்டும். 


இங்கே நம்மாழ்வார் பாசுரம் ஒன்று. முதலில் அர்த்தம் பார்ப்போம்.  பின் அதன் பின் உள்ள இலக்கிய சுவையைப் பார்ப்போம். எப்படி எல்லாம் அனுபவித்து இரசித்து இருக்கிறார்கள் என்று தெரியும். 


பாடல் என்னவோ எளிமையானது தான். 


"பெருமானே, உன்னை வணங்காமல் இது வரை என் வாழ்நாள் எல்லாம் வீணடித்து விட்டேன். எல்லாம் என் தீவினை. வேறு என்ன சொல்ல" என்று வருந்துகிறார். 


பாடல் 


தெரிந்துணர்வு ஒன்று இன்மையால் தீவினையேன் வாளா

இருந்தொழிந்தேன் கீழ் நாள்கள் எல்லாம் கரந்துருவின்

அம் மானை அந்நான்று பின் தொடர்ந்த ஆழி அங்கை

அம்மானை ஏத்தாது அயர்த்து    (2665)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_20.html


(Please click the above link to continue reading)



தெரிந்துணர்வு  = தெரிந்து + உணர்வு = எது நல்லது, எது கெட்டது என்று அறியும் உணர்வு 


ஒன்று இன்மையால் = அந்த உணர்வு இல்லாததால் 


தீவினையேன் = தீய வினைகள் பல செய்த நான் 


வாளா இருந்தொழிந்தேன் = ஒன்றும் செய்யாமல் வெறுமனே காலத்தை கழித்து விட்டேன் 


 கீழ் நாள்கள் எல்லாம்  = இது வரை இருந்த நாட்கள் எல்லாம் 


கரந்துருவின் = உருவத்தை மறைத்து 


அம் மானை =அந்த பொன் மானை 


அந்நான்று = அந்த நாளில் 


 பின் தொடர்ந்த = பின் தொடர்ந்து சென்ற 


 ஆழி அங்கை = மோதிரம் அணிந்த கைகளை உடைய 


அம்மானை = அம்மானை 


ஏத்தாது = போற்றாது 


அயர்த்து = சோம்பிக் கிடந்து    (2665)


அவ்வளவுதானே?  


இதற்குப் பின்னால் பல வைணவ உரை ஆசிரியர்கள் எழுதிய உரையைப் பார்த்தால், கண்ணில் கண்ணீர் வரும். அவ்வளவு அழகு, அவ்வளவு அன்யோன்யம், அவ்வளவு கரிசனம். 


என்ன சொல்ல. இலக்கியத்தை அனுபவிப்பதும் ஒரு கலை. 


இன்று blog நீண்டு விட்டதால், ,அந்த இலக்கிய அனுபவத்தை நாளை சிந்திப்போம்.




Tuesday, April 19, 2022

திருக்குறள் - அடக்கமுடைமை - முன்னுரை

திருக்குறள் - அடக்கமுடைமை - முன்னுரை 


நடுவு நிலைமை பற்றி இது வரை சிந்தித்தோம். 


மற்றவர்கள் விடயத்தில் நாம் நடுவு நிலையாக இருந்து விடலாம். இருக்கிறோம். 



ஒரு நாடு இன்னொரு நாட்டின் மேல் படை எடுத்தால், யார் செய்தது சரி, யார் தவறு என்று நடு நிலையாக நின்று நம்மால் சொல்ல முடியும். 



ஒரு அரசியல் கட்சி ஒன்றைச் செய்கிறது என்றால், அது சரியா, ஏன் செய்கிறது என்றெல்லாம் நடுநிலையாக நின்று நம்மால் ஆராய்ந்து சொல்ல முடியும். 


ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு நீர் தரவில்லை என்றால் எது சரி எது தவறு என்று நம்மால் சிந்திக்க முடியும். 



நாம் செய்யும் தவறுகளை நம்மால் நடு நிலையாக நின்று  ஆராய முடியுமா? 



எப்போதும் நாம் செய்வது சரி என்றுதானே நினைக்கிறோம். அது தவறு என்று பட்டால் கூட, அது ஏன் சரி என்று வாதாடுகிறோம். 


நமக்கு நாம் என்றேனும் நீதிபதியாக இருந்து இருக்கிறோமா? நம்மை குற்றவாளிக் கூண்டில் ஏத்தி நாம் நீதி சொல்லி இருக்கிறோமா?


நாம் தவறு செய்தால், நமக்கு நாம் தண்டனை கொடுத்து இருக்கிறோமா? நாம் செய்த தவறை இன்னொருவர் செய்தால் நாம் என்ன செய்வோமோ அதை நமக்குச் செய்து கொள்வோமா? 





(pl click the above link to continue reading)


மாட்டவே மாட்டோம். 


நான் பெரிய ஆள். எவ்வளவு படித்து இருக்கிறேன். எவ்வளவு சாதித்து இருக்கிறேன். எத்தனை பிரச்சனைகளை சரி செய்து இருக்கிறேன். நான் தவறு செய்வதா? என்று நம் வீர பிரதாபங்கள் முன் வந்து நிற்குமே அன்றி நானும் தவறு செய்தேன், நான் சொல்லியது தவறு,நான் செய்தது தவறு என்று ஒரு போதும் நமக்குத் தோன்றாது. தோன்றினாலும் வெளியே சொல்ல மாட்டோம். .


எனவே, அடுத்த அதிகாரம் "அடக்கமுடைமை" என்று வைத்தார். 


நல்லது கெட்டது எல்லோரிடமும் இருக்கும். நான் தவறே செய்ய மாட்டேன் என்று இறுமாப்பு கொள்ளாதே. அடங்கி இரு, என்று சொல்லும் அதிகாரம். 


யோசித்துப் பாருங்கள்,  எல்லோரும் தத்தம் குற்றங்களை ஒப்புக் கொண்டு, மன்னிப்பு கேட்டு, தண்டனை விதித்துக் கொண்டால், அல்லது தண்டனையை ஏற்றுக் கொண்டால், நாடு எப்படி இருக்கும் என்று. 


நான் செய்யும் தவறை நான் பொது வெளியில் ஒப்புக் கொள்வேன் என்று ஒருவன் நினைத்தாலே தவறு செய்வானா?  மறைத்து விடலாம் என்றுதானே தவறு செய்பவர்கள் நினைக்கிறார்கள். ஊரிடம் மறைக்கலாம். தன் நெஞ்சு அறியுமே. 


எனவே, அடக்கமுடைமை இல்லறத்தின் அடுத்த அறமாக சொல்லப் பட்டது. 


அதிகாரத்துக்குள் போவதற்கு முன், ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எவ்வளவு தவறு செய்து இருக்கிறோம், எவ்வளவை மறைத்து இருக்கிறோம். எல்லாம் வெளியில் வந்து, நாம் ஒப்புக் கொள்ள வேண்டி இருந்ந்தால் எப்படி இருக்கும் என்று. 




அதிகாரத்துக்குள் நுழைவோம். 














































Monday, April 18, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - அம்மா என்று அழுது

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - அம்மா என்று அழுது 


இருக்கின்ற நேரத்தை எல்லாம் ஏதேதோ செய்து கழித்து விட்டு, கடைசிக் காலத்தில், ஐயோ, அம்மா காலம் எல்லாம் போய் விட்டதே ...ஏதேதோ வெட்டிக் காரியங்கள் செய்து பொழுதைப் போக்கி விட்டேனே...இப்ப என்ன செய்வது" என்று கண் கலங்கி இருந்தால் என்ன செய்ய முடியும்?  


இறுதிக் காலம் என்று ஒன்று எல்லோருக்கும் வரும்தானே?  அது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அது வருவதற்கு முன் செய்ய வேண்டிய நல்ல காரியங்களை செய்து விட வேண்டாமா? 


நல்ல காரியங்களை எப்போது செய்வது? நம் இறுதிக் காலம் நாளை வரலாம், அடுத்த வாரம், அடுத்த மாதம், வருடம், பத்து இருபது வருடம் கழித்து...எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்னும் நாள் நிறைய இருக்கிறது என்று யாரும் சொல்ல முடியாது. எனவே, இன்றே ஆரம்பித்து விட வேண்டும். 


நாளை ஆரம்பிப்பதை விட இன்று ஆரம்பித்தால் ஒரு நாள் கூடக் கிடைக்கும்தானே? 


ஒரு நல்ல காரியத்தை செய்து முடிக்க எவ்வளவு நாள் ஆகும்?


பரீட்சை யில் தேற வேண்டுமா ஒரு ஐந்து அல்லது ஆறு வருடம் ஆகலாம், நல்ல வீடு வாங்கு வாங்க வேண்டுமா ஒரு பத்து வருடம் ஆகலாம். காரியம் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்ததோ, அந்த அளவுக்கு அது கடினமானதும் கூட. 


நூறு ம் மீட்டர் ஓடப் பழக வேண்டுமானால் ஒரு வாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் பழகி விடலாம். மாரத்தான் ஓடப் பழக வேண்டும் என்றால் எவ்வளவு நாள் ஆகும்? நூறு கிலோ மீட்டர் ஓடுவது என்றால், ஆயிரம் கிலோமீட்டர் ஓடுவது என்றால்? 


சொர்கத்துக்குப் போக வேண்டும் என்றால்? இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்றால்? எளிதான காரியமா? எவ்வளவு முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியை தள்ளிப் போடலாமா? இன்றே தொடங்க வேண்டாமா? அப்புறம் அழுது ஒரு புண்ணியமும் இல்லை. 


அடுத்தப் பிறவியில் என்னவாகப் பிறப்போமோ? மீண்டும் திருவாசகம் படிக்கும் வாய்ப்பு இருக்குமோ இல்லையோ. யாருக்குத் தெரியும். 


இதெல்லாம் நான் சொல்லவில்லை. மணிவாசகர் சொல்கிறார். 


பாடல் 




பெருமான் பேர் ஆனந்தத்துப் பிரியாது இருக்கப் பெற்றீர்காள்,

அரு மால் உற்றுப் பின்னை நீர், அம்மா! அழுங்கி அரற்றாதே,

திரு மா மணி சேர் திருக் கதவம் திறந்தபோதே, சிவபுரத்து,

திருமால் அறியாத் திருப் புயங்கன் திருத் தாள் சென்று சேர்வோமே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_18.html



(please click the above link to continue reading)



பெருமான் = பெருமான், சிவன் 


பேர் ஆனந்தத்துப் = பெரிய ஆனந்ததில் 


பிரியாது இருக்கப் பெற்றீர்காள் = எப்போதும் பிரியாமல் இருக்கப் பெற்றீர்கள் 


அரு மால் உற்றுப்  = அதன் அருமையை உணர்ந்து 


 பின்னை நீர் = பின்நாளில் நீங்கள் 


அம்மா! அழுங்கி அரற்றாதே, = அம்மா ! என்று அழுது அரற்றாமல் 


திரு மா மணி சேர்  = பெரிய மணிகள் கொண்ட 


 திருக் கதவம்  = கோவிலின் கதவுகள் 


திறந்தபோதே, = திறந்த போது 


சிவபுரத்து = சிவபுரத்தின் கோவில் கதவு திறந்த போது 


திருமால் அறியாத் = திருமால் அறியாத 


திருப் புயங்கன் = பாம்பை அணிந்த 


திருத் தாள் = திருவடிகளை 


சென்று சேர்வோமே. = சென்று சேர்வோமே 


இந்தப் பாடலின் நேரான அர்த்தத்தை மேலே பார்த்து விட்டோம். 


சில மறைமுகமான அர்த்தங்களை தெளிந்து கொள்வது நல்லது. 


இந்த சைவ வைணவ பகை என்பது மிக ஆழமானது. எல்லோர்க்கும் அவர்கள் கடவுள் பெரியவர் என்று சொல்லிக் கொள்ளவே ஆசையாக இருக்கும். அது தவறு இல்லை. அதற்காக மற்ற கடவுள்களை மட்டம் தட்ட வேண்டியது இல்லை. 


என் அம்மா எனக்கு அழகு என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது. அதற்காக அடுத்தவனின் அம்மா அவலட்சணம் என்று ஏன் சொல்ல வேண்டும். 


ஏதோ அடிமட்ட பக்தர்கள் அறியாமையில், அதீத பக்தியில் சொல்லி விட்டார்கள் என்று வைத்துக் கொண்டால் கூட, ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஒருவருக்கு ஒருவர் மற்ற தெய்வத்தை குறை சொல்லி பாடியது மாதிரியே இருக்கும். 


இங்கும் கூட, "திருமால் அறியா" என்று ஒரு இடம் வருகிறது. 


பழைய கதை. திருமாலும், பிரமனும் சிவனின் அடி முடி தேடிச் சென்றார்கள், காண முடியவில்லை. எனவே, சிவன் எவ்வளவு பெரியவர் என்று சைவர்கள் கூறிக் கொள்வார்கள். 


மணிவாசகர் சொல்வாரா? ஞானத்தின் உச்சம் தொட்டவர். 


என்ன அர்த்தம்?


திருமால், திருமகளை மணந்தவர். 


பிரம்மா, கலைமகளை மணந்தவர். 


செல்வத்தாலும், கல்வி அறிவாலும் இறைவனைக் காண முடியாது.  பக்தி ஒன்றினாலேயே அவனை அடைய முடியும் என்று சொல்லுவதற்காக வந்த கதை அது. 


என்னிடம் நிறைய பணம் இருக்கிறது. தான தர்மம் செய்கிறேன், கோவில்களுக்கு நன்கொடை தருகிறேன். எனவே எனக்கு முக்தி கிடைக்கும் என்று நினைக்கக் கூடாது. 


எவ்வளவு படித்து இருக்கிறேன். தேவாரம், திருவாசகம், பிரபந்தம், வேதம், உபநிடதம் எல்லாம் கரைத்துக் குடித்து இருக்கிறேன். எனக்கு வீடு பேறு கட்டாயம் என்று நினைக்கக் கூடாது. 


அது ஒரு செய்தி. 


"திருக் கதவம் திறந்த போதே" என்றால் கோவில் கதவு திறந்தவுடன் முதல் ஆளாக உள்ளே போக வேண்டும் என்று அர்த்தம் அல்ல. 


அந்தக் கதவு எப்போதும் திறந்து தான் இருக்கும். 


நமக்கு போக நேரம் இருக்காது. நேரம் இருக்கும் போது உடல் ஒத்துழைக்காது. 


எப்படியும் போக முடியாமல் போகும். 


எனவே, இப்பவே அந்த வேலையை தொடங்கி விடுங்கள். இறைவனை நாடும் அந்த வேலையை இன்றே தொடங்கி விடுங்கள். 


ICU வில் படுத்துக் கொண்டு, drips ஏறும் போது, கண் கலங்கி, விட்டதைப் பார்த்து அழுது ஆகப் போவது என்ன?


பருவத்தே பயிர் செய்ய வேண்டும். 




Thursday, April 14, 2022

திருக்குறள் - நடுவு நிலை - வாணிகம்

 திருக்குறள் - நடுவு நிலை - வாணிகம் 


நடுவு நிலைமை என்பது எங்கே நம்மை அதிகம் பாதிக்கும்? ஒரு சராசரி மனிதனை நடுவு நிலை எங்கு அதிகம் பாதிக்கும் என்று வள்ளுவர் யோசிக்கிறார். 


அரசன், மந்திரிகள், முதல் மந்திரி, காவல் துறை, நீதித் துறை, வேலை செய்யும் இடம், அண்டை அயல் என்று எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன. இருந்தாலும், எந்த ஒரு சாரார் நடு நிலை தவறினால் அது மிகவும் பாதிக்கும் ?


வள்ளுவர் சொல்கிறார் "வியாபாரிகள் நடுவு நிலைத் தவறக் கூடாது" என்று. 


ஏன்?


நம் உழைப்பு அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் வியாபரிகளிடம்தான் போகிறது. 


பலசரக்கு, பால், தயிர், பழம், காய் கறி, வீடு, நிலம், நகை, கார், துணி, மருந்து, தொலைபேசி சேவை, போக்கு வரத்து, அழகு சாதனப் பொருள்கள், என்று நம் செல்வம் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் வியாபாரிகளிடம் போய் சேருகிறது. 


அது ஒரு பக்கம். 


இன்னொரு பக்கம், நாமும் ஒரு வியாபாரிதானே. நாம் வேலைக்குப் போனாலும், நம் அறிவை, திறமையை, உழைப்பை விற்று பொருள் ஈட்டுகிறோம். 


அப்படிப் பார்த்தால் உலகில் நடக்கும் அதனையும் ஒரு கொடுக்கல் வாங்கல் தான். என்ன கொடுக்கிறோம், என்ன வாங்குகிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது வாழ்க்கை முழுவது. 


கொள்வதை விட அதிகம் கொடுத்தால், நட்டப் படுவோம். 


கொடுப்பதை விட அதிகம் பெற்றால், இலாபம் அடைவோம். 


எல்லாம் ஒரு இலாப நட்டக் கணக்குத் தான். 


எனவே, "வாணிகம் செய்பவர்கள் பிறர் பொருளையும் தன் பொருள் போல் நினைத்து செய்தால் அவர்களுடைய வாணிகம் சிறக்கும்"


பாடல் 


வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_14.html


(pl click the above link to continue reading)


வாணிகம் செய்வார்க்கு  = வியாபாரம் செய்பவர்களுக்கு 


வாணிகம் பேணிப் = வாணிகத்தை போற்றி 


பிறவும் = மற்றவர்கள் உடையதையும் 


தமபோல்  - தன்னுடையது போல 


செயின் = செய்தால் 


பிறவும், தமபோல் என்று தான் குறளில் இருக்கிறது. 


பரிமேலழகர் உரையில், "பிறர் பொருளையும் தன் பொருள் போல எண்ணி" என்று உரை செய்கிறார். 


அதாவது, ஏமாற்றாமால், நேர்மையாக வாணிகம் செய்தால், அவர்களது வாணிகம் சிறக்கும் என்கிறார். 


யோசித்துப் பார்ப்போம். இது என்ன ஒரு சரியான குறள் போலத் தெரியவில்லையே. எதையெதையோ சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர் திடீரென்று விற்பது, வாங்குவது, இலாபம், நட்டம் என்று சொல்ல ஆரம்பித்து விட்டாரே என்று தோன்றும். 


அப்படிச் சொல்ல வேண்டும் என்றால் அதைக் கொண்டு போய் பொருள் பாலில் வைத்து இருக்கலாம் தானே? அறத்துப் பாலில் ஏன் சொல்ல வேண்டும்?


காரணம் இருக்கிறது. 


நம்மை ஒருவன் ஏமாற்றி விட்டான் என்றால் நமக்கு என்ன தோன்றும். 


முதலில் கோபம் வரும். ஏமாற்றப் பட்டு விட்டோமே என்று நம் மேலேயே நமக்கு வெறுப்பு வரும். 


சரி, இது ஒருதரம் நடந்தால் அதோடு விட்டு விடலாம். அடிக்கடி நடந்தால் என்ன ஆகும்?


எல்லோரும் இப்படித்தான் நடக்கிறார்கள். அப்படி நடக்கிறவர்களுக்குதான் காலம் போல இருக்கிறது. நாமும் அப்படி நடந்தால் என்ன என்று நாமும் நடு நிலை தவறி நடக்கத் தலைப்படுவோம். 


நாம் இப்படிச் செய்கிறோம் என்று இன்னொருவன் செய்வான். 


இது ஒரு தொடர் சங்கிலி போல ஒரு சமுதாயமே சீரழிந்து விடும். 


ஒரு ஆட்டோ ஓட்டுனர் மீட்டருக்கு மேலே கேட்கிறார். காரணம் என்ன? காவல் துறைக்கு மாமூல் கட்ட வேண்டும். நேர்மையாக கட்டணம் வசூலித்தால் அது முடியாது. காவல் துறை ஏன் பணம் கேட்கிறது? அரசியல்வாதிகள், அதிகாரத்தில் உள்ளவர்கள் பணம் கேட்கிறார்கள். அவர்கள் ஏன் பணம் கேட்கிறார்கள், ஓட்டு வாங்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும். ஓட்டு போடுபவன் ஏன் பணம் கேட்கிறான், ஆட்டோகாரர் மீட்டருக்கு மேலே கேட்கிறார். 


ஒரு உதாரணத்துக்கு கூறினேன்.


எங்கோ ஒருவர் நடு நிலை தவறினால் அது ஒட்டு மொத்த சமுதாயத்தையே புற்று நோய் போல் அரித்து விடும். 


செய்கிற வேலைக்கு மேல் கூலி எதிர் பார்த்தால், அதுவும் ஒரு விதத்தில் இலஞ்சம் தான். .சரியான வியாபாரம் அல்ல அது. 


ஒவ்வொருவரும் நடு நிலையில், நேர்மையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 


பத்து குறள்களும் முடிந்து விட்டது. இந்த அதிகாரம் முடிந்து விட்டது. 


அடுத்த அதிகாரத்துக்குள் போவோமா அல்லது ஒரு தொகுப்புரை செய்து விட்டு பின் அடுத்த அதிக்கரதுக்கு செல்வோமா?




Wednesday, April 13, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நமது இடர் கெடவே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நமது இடர் கெடவே 


ஆழ்வார்கள் பெருமாளை அனுபவிப்பது மாதிரி இன்னொரு சமயத்தில் இருக்குமா என்று தெரியவில்லை. 


இந்த salesman என்று சொல்லுவார்களே, அவர்களுக்கு வேலை கடை கடையாக தினம் சென்று யாருக்கு என்ன பொருள் வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று கேட்டு அந்தப் பொருள்களை விற்பது. தினம் தினம் இதுதான் வேலை. 


ஆழ்வார் சொல்கிறார், பெருமாளும் ஒரு salesman மாதிரித்தான். இந்த உலகம் எல்லாம் உய்ய, பெருமாள் அலைந்து கொண்டே இருப்பாராம். யாருக்கு, எங்கு, என்ன உதவி வேணுமோ, அதை அங்கு போய்ச் செய்வாராம். "உழல்வான்" என்றே ஆழ்வார் குறிப்பிடுகிறார். அலைந்து கொண்டே இருப்பானாம். .


இப்படி அனைத்து உலகிலும் உயிர்களை காப்பாற்றுவதால், பிரம்மா, சிவன் மற்றைய தேவர்கள் எல்லோரும் பெருமாளிடம் வந்து "உன்னைத் தவிர எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை" என்று சொல்லிக் கொண்டே இருப்பார்களாம். 


அப்படிப்பட்ட பெருமாள் இருக்கும் திருமோகூர் என்ற திருத் தலத்துக்கு நாமும் செல்வோம். எதுக்கு அங்க போகணும் என்றால், நமது எல்லா இடர்களும் தொலைய என்கிறார். 


பாடல் 




அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட

வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்

நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. (3893)



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_13.html


(pl click the above link to continue reading)



அன்றி = உன்னைத் தவிர 


யாமொரு = எங்களுக்கு ஒரு 


புகலிடம் இலம் = புகலிடம் இல்லை 


என்றென் றலற்றி = என்றெல்லாம் சொல்லிக் கொண்டு 


நின்று = நின்று 


நான்முகன் = பிரமன் 


அரனொடு = சிவனோடு 


தேவர்கள் நாட = தேவர்கள் நாடி வரும் 


வென்றி = வெற்றி கொண்டு 


இம் மூவுல களித்து  = இந்த மூன்று உலகங்களை காத்து 


உழல் வான் = அலைவான் (இதே வேலையா திரிவான்) 


திரு மோகூர் = திருமோகூர் என்ற திருத்தலம் 


நன்று= நல்லது 


நாமினி நணுகுதும் = இனிமேல் நாம் அங்கு போவோம் 


நமதிடர் கெடவே. = நமது இடர் கெடவே , நமது துன்பங்கள் தொலையவே 



நீங்களும் போயிட்டு வாங்க. இந்தா தான இருக்கு. 





Monday, April 11, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - எண்ணமும் செயலும்

 திருக்குறள் - நடுவு நிலைமை - எண்ணமும் செயலும் 


எது முக்கியம்? எண்ணமா ? செயலா? 


முகமூடி அணிந்து கொண்டு ஒருவன் மற்றவனை கத்தியால் குத்தி கிழிக்கிறான்.  அது தவறா? சரியா?


முகமூடி அணிந்தவன் மருத்துவனாக இருந்தால் அது சரி. கொள்ளைக் காரனாக இருந்தால் தவறு. 


காரணம் என்ன?


செயல் ஒன்றுதான். எண்ணம் வேறு வேறு. மருத்துவர் உயிர் காக்க அந்தக் காரியத்தை செய்கிறார். கொள்ளைக் காரன் உயிரை எடுக்க அதைச் செய்கிறான். எண்ணம் வேறுபடுகிறது. 


சிலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லுவது நல்லது போல இருக்கும். நமக்கு நல்லது நினைத்துத் தான் சொல்கிறார்கள் என்று நினைப்போம். ஆனால் அவர்கள் மனதுக்குள் நாம் நாசமாகப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 

"தொழில் தொடங்குகிரீர்களா? நல்லா செய்யுங்க சார். உங்க திறமைக்கு நல்லா வருவீங்க" என்று வாய் சொல்லும். உள்ளுக்குள் "இவன் எல்லாம் தொழில் தொடங்கி...விளங்குன மாதிரிதான்..இருக்கிற நாலு காசையும் தொலைக்கப் போகிறான் ...பேராசைப் பட்டால் அப்படித்தான்" என்று நினைப்பார்கள். 


நடுவு நிலையான சொல் இருந்தால் மட்டும் போதாது. நடுவு நிலைமையான உள்ளமும் வேண்டும் என்கிறார். 


பாடல் 


சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா

உட்கோட்டம் இன்மை பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_11.html



(Pl click the above link to continue reading)


சொற்கோட்டம் = சொல்லில் உள்ள குற்றம் 


இல்லது = இல்லாது போகும் 


செப்பம் = நடுவு நிலை 


ஒருதலையா = உறுதியாக 


உட்கோட்டம் = மனதுக்குள் குற்றம் 


இன்மை பெறின் = இல்லாமல் இருந்தால் 


கோட்டம் என்றால் வளைவு. நேராக இல்லாமல் இருப்பது. 


சொற்கோட்டம், உட்கோட்டம் என்று இரண்டு கோட்டம் பற்றிக் கூறுகிறார். 


சொல்லில் கோட்டம் இருக்காது எப்போது என்றால் மனதில் உறுதியாக கோட்டம் இல்லாத போது என்கிறார். 


மனதுக்குள் ஆயிரம் வஞ்சனையை வைத்துக் கொண்டு, வெளிய நல்லவன் மாதிரி பேசுபவர்கள் அந்தக் காலத்திலும் இருந்து இருக்கிறார்கள். 


"உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்" என்பார் வள்ளல் பெருமான். 


‘தாய் உரைகொண்டு தாதை உதவிய

     தரணிதன்னை,

‘‘தீவினை” என்ன நீத்து,

     சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்றபோழ்து, புகழினோய்!

     தன்மை கண்டால்,

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,

     தெரியன் அம்மா!



என்பான் கம்பன். 


இராமனுக்கு உரிய அரசை தான் கொள்வது "தீவினை" என்று நீத்து வந்தான். வந்தவன் ஏதோ பேருக்கு "அண்ணா நீ வந்து ஆட்சி செய்" என்று சொல்லவில்லை. அழுது கொண்டே வருகிறான். இராமன் இருக்கும் திசை நோக்கித் தொழுகிறான். அது தீவினை என்பது அவன் மனதுக்குள் இருக்கிறது. 


எனவே தான் கம்பன் "ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ" என்று பரதனைப் புகழ்கிறான். 


குறளுக்கு வருவோம். 


"உட்கோட்டம் இன்மை பெறின்"


மனதில் குற்றம் இல்லாமல் இருந்தால் என்று இழுக்கிறார். மனக் கோட்டம் என்பது இல்லாமல் இருக்காது. அது இருக்கத்தான் செய்யும். அது இல்லாவிட்டால் சொற் கோட்டம் இருக்காது என்கிறார். 


மனதை சுத்தப் படுத்த வேண்டும். 


சுத்தப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 


போன வாரம் தானே குளித்தேன், வீடு பெருக்கினேன் என்று இருக்கக் கூடாது. தினம் தினம் குளிக்க வேண்டும். தினமும் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். 


வீட்டுக்கே அப்படி என்றால் மனதில் எவ்வளவு குப்பைகள் வந்து விழும்?


தினம்தோறும் சுத்தம் செய்ய வேண்டும்.  இன்று என்ன குப்பை வந்து விழுந்தது என்று பார்க்க வேண்டும். 


அதற்குத் தான் தினமும் நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும், நல்லவர்களோடு உரையாட வேண்டும். அது சுத்தப் படுத்தும் முயற்சி. 


தீயவர்களை விட்டு விலகுவது, தீயவற்றை படிக்காமல் இருப்பது என்பது குப்பை விழாமல் பார்த்துக் கொள்வது. 


இரண்டும் செய்ய வேண்டும். 


குறளும் படிக்க வேண்டும். கண்ட whatsapp குப்பைகளைபடிக்காமலும் இருக்க வேண்டும். 


குப்பை விழுந்து கொண்டே இருக்கும் போது, வீட்டை பெருக்கிக் கொண்டே இருப்பேன் என்பது புத்திசாலித் தனமா? 


குப்பை வரும் ஜன்னலை, கதவை முதலில் சாத்த வேண்டும். அப்புறம் சுத்தம் செய்ய வேண்டும். 


முயன்று பாருங்கள். 


மனமும் சொல்லும் கோட்டம் இல்லாமல் நேராக இருக்கும். 




Sunday, April 10, 2022

திருக்குறள் - சான்றோருக்கு அணி

 திருக்குறள் - சான்றோருக்கு அணி 


நடுவு நிலைமை, நடுவு நிலைமை என்று சொன்னால் அது என்ன? எப்படி நடுவு நிலையாக இருப்பது என்ற கேள்வி வரும். அதற்கு ஏதாவது வழி காட்டுதல் இருக்கிறதா? 


இவ்வளவு சொன்ன வள்ளுவர் அதைச் சொல்லாமல் விடுவாரா. வள்ளுவர் சொல்லியது ஒரு புறம் என்றால் அதற்கு பரிமேலழகர் அதற்கு செய்யும் விளக்க உரை அதற்கும் மேல்.


"சமமாக இருந்து பொருள்களை அளவிடும் தராசுக் கோல் போல் அமைந்து ஒரு பக்கமும் சாயாமல் இருப்பது சான்றோர்க்கு அழகு"


பாடல் 


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_10.html


(pl click the above link to continue reading)


சமன்செய்து = சமமாக செய்து கொண்டு 


சீர்தூக்கும் = அளவிடும் 


கோல்போல்  = தராசுக் கோல் போல் 


அமைந்தொருபால் = பொருந்தி ஒருபுறமும் 


கோடாமை = சாயாமல், தாழாமல், 


சான்றோர்க் கணி = சான்றோருக்கு அழகு 


இது என்ன பெரிய விஷயமா? தராசுக் கோல் போல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லுவது ஒண்ணும் பெரிதாகத் தெரியவில்லை?


நாம் மேலோட்டமாக பல உயர்ந்த புத்தகங்களை வாசித்து விட்டு, ஹா..இது எனக்குத் தெரியாதா என்று மேலே போய் விடுகிறோம். 


திருக்குறள் போன்ற நூல்களை வாசிக்கும் போது நாம் எதையும் சாதரணாமாக தள்ளி விடக் கூடாது. 


ஏன் என்று பார்ப்போம்.


முதலாவது, எடை போடும் துலாக் கோல் முதலில் நேராக இருக்கும். தராசு கோணலாக இருந்தால் அது எப்படி சரியாக எடை போடும்? எனவே, நடுவு நிலையில் நிற்க வேண்டும் என்றால் முதலில் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். நான் எல்லா அயோக்கியத்தனமும் செய்வேன், ஆனால் மற்றவர்கள் விடயத்தில் நடுவு நிலையில் இருப்பேன் என்றால் அது முடியாது. முதலில் நாம் நேராக இருக்க வேண்டும். 


இரண்டாவது, தராசு யாருக்காக நாம் எடை போடுகிறோம், எதை எடை போடுகிறோம் என்றெல்லாம் தெரியாது. இரண்டு பக்கமும் சரியாக இருக்கிறதா என்பது தான் அதன் நோக்கம். அது தங்கமாக இருந்தாலும் சரி, கத்திரிக்காயாக இருந்தாலும் சரி. அது போல நாமும் யாருக்காக நாம் செய்கிறோம், எதைச் செய்கிறோம் என்பதெல்லாம் அல்ல கேள்வி. நேர்மையாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். 


சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி



மூன்றாவது, "சீர் தூக்கி " என்றால் என்ன?  


பரிமேலழகர் கூறுகிறார் 

"சீர்தூக்கலாவது தொடை விடைகளால் கேட்டவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும்"


தொடை விடைகள் என்பது கேள்விகள் கேட்டு அதன் மூலம் அறிவது. பிரச்னை என்று வந்து விட்டால் இரண்டு பக்கமும் கேட்க வேண்டும், அவர்கள் சொல்பவை சரியா என்று குறுக்கு கேள்விகள் கேட்டு சரி பார்க்க வேண்டும். இன்றைய பாணியில் சொல்வது என்றால் "cross examination" 


ஊழான் உள்ளவாறு உரைத்தால், தன்னுடைய முற் பிறவியில் பெற்ற அறிவினால் உணர்ந்து எது சரி எது தவறு என்று அறிந்து உறைதல். 



சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

கோடாமை சான்றோர்க் கணி


இதில் சீர்தூக்கி என்றால் என்ன என்று பார்த்தோம். 


நான்காவது, அது என்ன ஒருபால் கோடா மை ?


"ஒருபால் கோடாமையாவது அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க"


என்று உரை செய்கிறார் பரிமேலழகர். 


அதாவது, கேள்விகள், குறுக்கு விசாரணை செய்து, தான் பெற்ற அறிவால் உண்மையை உணர்ந்து பகை, நட்பு, நொதுமல் என்ற மூன்று பகுதியினற்கும் பாகுபாடு இல்லாமல் சரியானதைக் கூறுவது. .


ஐந்தாவது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் செய்யும் உரை 




ஒரு பக்கம் துலாக் கோல், மறு புறம் சான்றோர். 


சமன் செய்வதும், சீர் தூக்குவதும் துலாக் கோலின் இலக்கணம். 

அமைதலும், ஒரு பால் கோடாமையும் சான்றோருக்கு இலக்கணம். 


இதை இரண்டையும் எப்படி இணைப்பது. ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே?


"உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீர் தூக்கலும் பொருட்கண்ணும், பொருளடை ஆகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி,"



கொஞ்சம் அடர்த்தியான தமிழ். நாம் நெகிழ்துவோம். 


இங்கே துலாக் கோல் உவமை.  சான்றோர் பொருள். 


பரிமேலழகர் சொல்கிறார் உவமைக்குச் சொன்ன சமன் செய்தலும், சீர் தூக்கலும் என்ற குணங்களை அப்படியே தூக்கி சான்றோரில் பொருத்து. 


என்ன ஆகும், சான்றோருக்கு நான்கு குணங்கள் வேண்டும் என்று ஆகி விடும். 


சமன் செய்ய வேண்டும், சீர் தூக்க வேண்டும், அமைய வேண்டும், ஒரு பால் கோடாமை வேண்டும். 


அதே போல் அமைதலும், சீர் தூக்குதலும் என்ற சான்றோரின் குணங்களை தூக்கி அப்படியே துலா கோலுக்கு பொருத்து. என்ன ஆகும் ? துலா கோலுக்கு நான்கு குணங்கள் வந்து விடும். 


எவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக எழுதி இருக்கிறார்கள் என்று. 


குறளில் எதையும் சாதரணமாக, இது தான் எனக்குத் தெரியுமே என்று எண்ணி எளிதில் மேலே சென்று விடக் கூடாது. 


பல உரைகளை படித்துத் தெளிய வேண்டும். 


அத்தனையும் பொக்கிஷம். 



Saturday, April 9, 2022

சிவ ஞான போதம் - தொடங்கிய விதம்

 சிவ ஞான போதம் - தொடங்கிய விதம்


உலகில் தோன்றியது எல்லாம் மறையும். தோற்றம் உண்டு என்றால் முடிவு உண்டு என்பது உறுதி. தோன்றி மறையும் எதுவும் நிரந்தரமானவை அல்ல. நேற்று இல்லாமல் இருந்தது, ,இன்று இருக்கிறது,நாளை மறுபடியும் இல்லாமல் போகும். இப்படி நிரந்தரம் இல்லாதவற்றைப் பற்றி அறிந்து என்ன பலன் என்று அதை விட்டுவிட்டு அழிவு இல்லாத, நிரந்தரமானவற்றை தேடத் தொடங்கினார்கள். 


அழிவு இல்லாத பொருள் எது?


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_9.html


(click the above link to continue reading)


தோற்றம் உண்டு என்றால் அழிவு உண்டு. எனவே, தோன்றாத ஒன்று அழிவு அடையாது. எனவே, தோற்றம் என்று ஒன்று இல்லாமல், எப்போதும் இருப்பவை எவை என்று ஆராய முற்பட்டபோது, மூன்று விடயங்கள் தோற்றம் என்று ஒன்று இல்லாமல் எப்போதும் இருப்பவை என்று கண்டு கொண்டார்கள். 


அவைதான் 


பதி, பசு, பாசம். 


இந்த மூன்றும் எப்போதும் இருப்பவை. தோன்றியவை அல்ல. எனவே அழியப் போவதும் இல்லை. 


இதில் பதி என்பது இறைவன். 


பசு என்பது உயிர்களைக் குறிக்கும். 


பாசம் என்றால் என்ன? பாசம் என்றால் கயிறு. பிணைப்பது. இது சற்று விரிவாக பார்க்க வேண்டிய ஒன்று. 


மூன்றும் நிரந்தரமானவை, தோற்றுவிக்கப்பட்டவை அல்ல என்று பார்த்தோம். 


உயிர்களை இறைவன் தோற்றுவிக்கவில்லை. என்று இறைவன் உண்டோ, அன்றே உயிர்களும் உண்டு. 


"என்று நீ, அன்று நான்" என்பார் தாயுமானவர். 


இந்த உயிர்கள் ஆணவம் என்ற மலத்தில், இருளில், அழுக்கில் அழுந்திக் கிடக்கும். என்ன செய்வது என்று அறியாமல், அசைவு இல்லாமல் கிடக்கும். தாயின் வயிற்றில் உள்ள குழந்தை போல என்பார்கள். குழந்தைக்கு உயிர் இருக்கிறது. உண்கிறது. சீரணிக்கிறது. வளர்கிறது. அசைகிறது. ஆனால், என்ன செய்கிறோம் என்று அறியாமல் இருளில் கிடக்கிறது அல்லவா, அது போல உயிர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஆணவ மலத்தில் சிக்கிக் கிடக்கும்.


இதை ஆன்மாவின் கேவல நிலை என்பார்கள்.  


எப்படி தாய் தன் கருவில் உள்ள குழந்தை மேல் கருணை கொண்டு அதற்கு வேண்டியதைச் செய்வாளோ, அது போல ஆணவ மலத்தில் சிக்கிக் கிடக்கும் உயிர்களுக்கு உதவும் பொருட்டு இறைவன் சிலவற்றைப் படைத்து அந்த உயிர்களுக்கு தருகிறான். 


அவற்றை தனு, கரண, புவன, போகம் என்று சொல்லுவார்கள். 

தனு என்றால் உடம்பு. 


கரணம் என்றால் ஐந்து புலன்கள், மனம், சித்தம், அகங்காரம்  என்ற கருவிகள். 


புவனம் என்றால் பூமி, இடம். உடம்பும், கருவிகளும் இருந்தால் போதுமா? அவை செயல் பட ஒரு இடம் வேண்டும் அல்லவா? எங்கிருந்து செயல்படுவது? அப்படி அவை செயல் படும் இடத்துக்கு புவனம் என்று பெயர். 


நீங்கள் இங்கு பிறக்க வேண்டும், இங்கு வாழ வேண்டும் என்று நிர்ணயம் செய்பவன் இறைவன். 


உடம்பு இருக்கிறது. கருவிகள் இருக்கின்றன. அவை செயல் படும் இடமும் ஆயிற்று. அவை எதோடு செயல்படும்? எதை பெறும் , எதை அனுபவிக்கும்? 


அனுபவிக்கப் படும் பொருள்களுக்கு, அந்த அனுபவத்துக்கு போக்கியம் என்று பெயர். 


தனு - கரண - புவன - போக்கியம். 


இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


இந்த தனு, கரண, புவன போக்கியயங்களை இறைவன் மாயையில் இருந்து உருவாக்குகிறான் என்று சொல்கிறார்கள். 


உயிர்கள் வந்து விட்டன. உடம்பு, கருவி, இடம், அனுபவிக்கும் பொருள் எல்லாம் வந்தாகி விட்டது. 


இதை உயிர்களின் சகல நிலை என்று சொல்லுவார்கள். 


இப்போது உயிர்கள் செயல்படத் தொடங்குகிறன. 


அனுபவம் வரத் தொடங்குகிறது. இன்பம், துன்பம் தெரிகிறது. நல்லது, கெட்டது தெரிகிறது. 


இந்த செயல்பாட்டை கர்மம் அல்லது கன்மம் என்று சொல்லுவார்கள். 


உயிர்கள் - ஆணவம் - மாயையில் இருந்து தோன்றிய கன்மம். 


இதுவரை பார்த்து விட்டோம். 


அனுபவங்கள் காரணமாக உயிர்கள் நல்லன, தீயனவற்றை செய்யத் தொடங்குகின்றன. அவற்றின் வினைகளுக்கு ஏற்ப இறைவன் அவைகளுக்கு அடுத்தடுத்து பிறவிகளைத் தருகிறான். 


ஆணவம் - மூல மலம். 


கன்மம் - உயிர்கள் செய்வது.


மாயை - தனு கரண புவன போகங்கள் உண்டாகி உயிர்களை செயல் பட வைப்பது. 


இந்த ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் சேர்த்து பாசம் என்று சொல்லுவார்கள். 


இந்த மூன்றும் உயிர்களைப் பிணிக்கும் கயிறு போன்றவை. 


பதி - இறைவன் 


பசு - உயிர்கள் 


பாசம் - ஆணவம்,கன்மம், மாயை என்ற மூன்றும். 


உயிர்கள் அனுபவத்தால் நல்லது கெட்டதை அறிந்து, இறைவனை நோக்கிப் பயணப்படும். 


கன்மம், மாயை என்ற மலங்களினால் உயிர்கள் ஆணவம் என்ற மலத்தை தாண்டி இறைவனை அடையும். 


விரலில் மோதிரம் மாட்டிக் கொண்டு கழட்ட முடியவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? அந்த மோதிரம் இருக்கும் இடத்துக்கு சற்று முன்னால் ஒரு நூலை இறுக்கிச் சுற்ற வேண்டும். விரலின் பருமன் சற்று சுருங்கும். மோதிரத்தை மெல்ல மெல்ல நகர்த்தி கழட்டி விடலாம். அப்புறம் அந்த நூலையும் தளர்த்தி, தூக்கிக் போட்டு விடலாம். 


கன்மம், மாயை என்ற நூலைச் சுற்றி, ஆணவம் என்ற மோதிரத்தை கழட்டிய பின் நூலை தூக்கி எறிவது போல கன்மத்தையும், மாயையையும் தூர எறிந்து  விடலாம். 


இதைதான் மல பரிபாகம் என்பார்கள். அதை பின்னால் பார்ப்போம். 


பதி - இறைவன் என்றும் உள்ளவன். 


பசு - உயிர்கள் என்றும் உள்ளவை. 


பாசம் - ஆணவம், கன்மம், மாயை - என்றும் உள்ளவை. 


இதுதான் அடிப்படை சிந்தாந்தம். 


இந்த உலகம் எப்படி வந்தது? நாம் எப்படி வந்தோம்? என்ன செய்கிறோம்? எப்படிச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? வாழ்வின் நோக்கம் என்ன என்று ஆழமாக விளக்கும் சித்தாந்தம்.


இது அடிப்படை சிந்தாந்தம். இதுவே இப்படி இருக்கிறது என்றால் மேலே போகப் போக எவ்வளவு இருக்கும். 


நூலோடு சேர்த்து அவற்றையும் அறிந்து கொள்வோம். 


அதை விட என்ன வேலை?





Friday, April 8, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவாக வையாது

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவாக வையாது 


நாம் ஏன் தவறு செய்கிறோம்?


செல்வம் இல்லை என்றா? வருமானம் இல்லை என்றா? 


நமக்கு வருமானம் குறைவாக இருந்தால் பிரச்னை இல்லை. நமக்கு சொத்து குறைவாக இருந்தால் பிரச்னை இல்லை. பிரச்னை எங்கு என்றால், மற்றவனை விட நமக்கு வருமானம், சொத்து குறைவாக இருப்பதுதான். 


நாலு பேருக்கு முன்னால் நாம் தலை நிமிர்ந்து வாழ வேண்டாமா?


அவனைப் பார், எவ்வளவு விலை மதிப்பு மிக்க காரில் போகிறான். நானும் தான் இருக்கிறேனே. அவன் வீட்டைப் பார், அவள் நகையைப் பார் என்று மற்றவர்கள் கண்ணில் நாம் தாழ்ந்து போய் விடக் கூடாது என்று நினைக்கிறோம். 


நாம் இப்படி இருந்தால் மற்றவர்கள் நம்மை என்ன நினைப்பார்கள்? திறமை இல்லாதவன், அறிவு இல்லாதவன், சாமர்த்தியம் இல்லாதவன் என்று நினைப்பார்களே என்று நாம் கவலைப் பட்டு அல்லாத வழிகளில் பணம் சேர்க்க முற்படுகிறோம். 


அவமானங்களை சகிக்கிறோம். நடுவு நிலை பிறண்டு எப்படியாவது நாலு காசு சேர்த்து இந்த உலகத்தின் முன்னால் நாமும் ஒரு பெரிய ஆள் என்று காண்பிக்க நினக்கிறோம். 


அது சரியா ?


"அற வழியில் நின்றதால் நீ வறுமையில் இருக்கிறாயா? கவலைப் படாதே, அது ஒரு குறை என்று சான்றோர் நினைக்க மாட்டார்கள்"


என்கிறார் வள்ளுவர். .


பாடல் 


கெடுவாக வையாது உலகம் நடுவாக

நன்றிக்கண் தங்கியான் தாழ்வு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_8.html


(Pl click the above link to continue reading)


கெடுவாக வையாது = கெடுதலாக வைத்து எண்ணாது 


உலகம் = உலகம் 


 நடுவாக = நடு நிலைமையோடு 


நன்றிக்கண் = அறவழியில் 


தங்கியான் தாழ்வு = செல்பவனது தாழ்ந்த வாழ்வை 


இங்கே உலகம் என்பது நல்லோர், ஆன்றோர், சான்றோர் என்று பொருள். உலகம் என்றாலே அது நல்லவர்களைத் தான் குறிக்கும். அயோக்கியர்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டுமா?  


கெடு என்பது கெடுதல் என்ற பொருளில் வந்தது. அதாவது செல்வம் இல்லாமல் வாடுதலைக் குறித்து நின்றது. 


இதில் முக்கியமாக நாம் பார்க்க வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. 


முதலாவது, நாம் யாருடைய சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது.  நம் வறுமையை பார்த்து ஏளனம் செய்பவர்களின் எண்ணத்துக்குநாம் மதிப்பு அளிக்கவே கூடாது. 


இரண்டாவது, நாம் ஒருவன் ஏழ்மையில் இருக்கிறான், வசதி குறைவாக இருக்கிறான் என்றால் அவனை குறைத்து நினைக்கக் கூடாது. அவன் நேர் வழியில் செல்கிறானா? நியாயமாக நடக்கிறானா? அதை பாராட்ட வேண்டும். அப்படி செய்தால் நேர்மையாக இருப்பவனுக்கு ஒரு உத்வேகம் பிறக்கும். நாம் செய்வது சரிதான் அன்று உறுதி பிறக்கும். மேலும் பலர் அந்தப் பாதையில் செல்லத் தலைப் படுவார்கள். தவாறன வழியில் செல்பவன் கூட, "என்ன பணம் சேர்த்து என்ன பயன், ஒரு பயல் சீண்ட மாட்டேன் என்கிறான் " என்று அலுத்து நல்ல வழியில் செல்ல நினைப்பான். 


ஆனால், இங்கே என்ன நடக்கிறது? நேர்வழியில் சென்று வறுமை உற்றவனை உலகம் கேலி பேசுகிறது. பாவம், ஒண்ணும் தெரியாதவன், பிழைக்கத் தெரியாதவன் என்று அவனை உதாசீனப் படுத்துகிறது. நல்ல வழியில் செல்பவன் கூட, இது சரிப்படாது, நாமும் களத்தில் இறங்கிற வேண்டியது தான் என்று தவறான வழியில் செல்ல முயல்வான்.


காரணம் யார்? நாம் தான். பின் அவன் இலஞ்சம் வாங்குகிறான் என்று குறை சொல்லி என்ன பயன்? 


நாம் முதலில் நல்லவர்களாக இருப்போம். 


மூன்றாவது, கெட்டவர்கள் எப்போதும் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை திருத்துவது நம் வேலை இல்லை. நாம் அவர்கள் சகவாசத்தை விட்டு விட வேண்டும். அவன் ஏதாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பான். "வம்பு செய் தீங்கினர் தம் கண்ணில் படாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி". நல்லவர்களோடு இருந்தால், "கவலைப் படாதே. நீ நல்லவன். சரியான பாதையில் போகிறாய். இப்படியே போ" என்று நம்மை உற்சாகப் படுத்துவார்கள். நம்மை நேர் வழியில் செல்ல ஊக்குவிப்பார்கள். 



நான்காவது, வறுமை, வசதிக் குறைவுக்கு பயப்படக் கூடாது. அதுக்கு பயந்தால், ,பின் நெறி அல்லா நெறியில் போக வேண்டி வரும். உள்ளதும் போய், மிகப் பெரிய வறுமை வந்து விடும். நேரான வழியில் செல்வதை நினைத்து பெருமை பட வேண்டும்.  வறுமை குறை அல்ல. அறம் பிறழ்ந்து வாழ்வது பிழை. 


முடிவாக, நேர்மையாக நடந்து, வாழ்வில் மற்றவர்களை விட செல்வதில், வருமானத்தில் தாழுந்து இருந்தாலும், அது ஒரு தாழ்வே இல்லை.


மற்றவர்களின் (கெட்டவர்களின்) மதிப்பைப் பெற தீய வழியில் செல்ல வேண்டுமா?


பூஜை அறையில் வள்ளுவர் படத்தை வைக்க வேண்டும். அந்தப் படத்தை பார்க்கும் போதெல்லாம் நல்ல விடயங்கள் ஞாபகம் வந்து கொண்டே இருக்க வேண்டும்.




Thursday, April 7, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவல் யான்

திருக்குறள் - நடுவு நிலைமை - கெடுவல் யான் 


உங்களுக்கு சகுனத்தில் நம்பிக்கை இருக்கிறதா?


அதெல்லாம் இல்லை. என்ன ஒரு பழம் பஞ்சாங்கம் என்று நீங்கள் சொல்லலாம். 


வானம் இருண்டு இருக்கிறது. மேகம் நன்றாக சூழுந்து இருக்கிறது. மழை வரும் என்று நம்புகிறீர்கள் அல்லவா? மேகம் சூழ்ந்தால் மழை வரும் என்பதற்கு ஒரு சகுனம். .


வங்கக் கடலில் புயல் மையம் கொண்டு இருக்கிறது. கடலோர இடங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. அதுவும் சகுனம் தான். 


ஒருவனுக்கு கெட்ட காலம் வரப் போகிறது என்பதற்கு என்ன சகுனம் தெரியுமா? 


வள்ளுவர் சொல்கிறார் எப்போது நடுவு நிலை மாறி ஒருவன் நடக்க நினைக்கிறானோ  அது அவனுக்கு கெட்ட காலம் வரப் போகிறது என்பதற்கு முன் வந்து சொல்லிய சகுனம் என்கிறார். 


பாடல் 


கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்

நடுஒரீஇ அல்ல செயின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_48.html


(தொடர்ந்து படிக்க மேலே உள்ள இணைய தளத்தை கிளிக் செய்யவும்)


கெடுவல்யான் = யான் கெடுவேன் அல்லது நான் கெடுவேன் 


என்பது அறிக  = என்று அறிந்து கொள்க 


தன் நெஞ்சம் = எப்போது என்றால், ஒருவனது மனம் 


நடுஒரீஇ = நடுவு நிற்றல் 


அல்ல செயின் = அல்லாதவற்றை செய்ய நினைத்தால் 


இதில் பரிமேலழகர் செய்திருக்கும் நுட்பம் அற்புதமானது. .


குறளில் "செயின்" என்று தான் இருக்கிறது. ஆனால் அவர் உரையில் "செய்ய நினைத்தால்" என்று உரை செய்கிறார். அது எப்படி செய்வதும், செய்ய நினைப்பதும் ஒன்றாகும் என்று கேட்டால் 


"நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்"


நினைப்பதும் ஒரு செயல்தான் என்கிறார். 


தவறு செய்ய நினைத்தாலே போதும், கெட்ட காலம் வரப் போகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். 


இரண்டு தும்மல் வருகிறது, மூக்கில் நீர் வடிகிறது, தொண்டை கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது என்றால் காய்ச்சல் வரப் போகிறது என்று தெரிகிறது அல்லவா? அப்போது என்ன செய்வோம்? இரண்டு மாத்திரையை போட்டுக் கொள்வோம், சூடாக இரசம் வைத்து சாப்பிடுவோம். காய்ச்சல் வருவதற்கு முன்பே அதன் அறிகுறிகளை வைத்து அந்தக் காய்ச்சல் வராமல் தடுத்து விடுகிறோம் அல்லவா? அது போல,


கெட்ட எண்ணம் வந்த வுடனேயே, இது நல்லது அல்ல என்று உணர்ந்து உடனடியாக அதை மனதில் இருந்துதூக்கி எரிந்து விட வேண்டும். 


கெட்ட எண்ணம் வந்த பின், அதை எப்படி சாமர்த்தியமாக செய்யலாம் என்று கணக்குப் போடக் கூடாது.


உடனடியாக அதை மனதில் இருந்து எடுத்து தூர எரிந்து விட வேண்டும். 


இப்படி யார் சொல்லித் தருவார்கள் ?


திருக்குறள் ஒன்று போதும் மிக மிக இன்பமாக வாழ, நேர்மையாக வாழ, பொருள் ஈட்ட, திறமையாக வேலை செய்ய, கணவன் மனைவி அன்போடு இல்லறம் நடத்த, பிள்ளைகள், உறவுகள் என்று ஒன்றாக வாழ.


இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்? 


(நிறைய குறள்கள் பாக்கி இருப்பதால் ஏறக் குறைய தினம் ஒன்று எழுதிக் கொண்டு இருக்கிறேன்.  எனக்கே புரிகிறது இது கொஞ்சம் சலிப்பூட்டும் வேலை என்று. ரொம்பவும் அலுப்பாக இருந்தால், கொஞ்சம் விடுப்பு எடுத்துக் கொண்டு பின் படியுங்கள்) 




சிவஞான போதம் - சித்தாந்தம்

 சிவஞான போதம்   - சித்தாந்தம் 


நாம் எவ்வளவோ படிக்கிறோம். ஆத்ம விசாரம், ஒரு தேடல் நமக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. .


இந்த வாழ்கையின் அர்த்தம் என்ன, இந்த பிறப்பின் நோக்கம் என்ன, இறப்புக்குப் பின் என்ன நிகழும், கடவுள் உண்டா, இல்லையா, மறு பிறப்பு உண்டா, இல்லையா , இந்த உலகம் எப்படி தோன்றியது, ஏன் தோன்றியது, யார் தோற்றுவித்தார்கள் என்று பலப் பல கேள்விகள் நம்முள் எழும்.


பாவம், புண்ணியம் என்பதெல்லாம் உண்மையா? 


இதற்கெல்லாம் எங்கே சென்று விடை காண்பது? இதுவரை இந்தக் கேள்விகளுக்கு யாராவது விடை காண முயன்று இருக்கிறார்களா? அல்லது இனிமேல் தான் முயற்சி தொடங்க வேண்டுமா?


ஏதேதோ தத்துவங்கள் சொல்கிறார்கள். அவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவது போலத் தோன்றுகிறது. எதைப் படிப்பது, எதை நம்புவது, ,எது சரி, எது தவறு என்று நாம் குழம்புகிறோம்.


இந்த அறிவுத் தேடலுக்கு ஒரு முடிவு இருக்கிறதா? அல்லது தேடிக் கொண்டே இருக்க வேண்டியதுதானா?


நமக்கு முன் இந்த கேள்விகள் மட்டும் அல்ல, ,இவற்றைவிட ஆழமான கேள்விகளை கேட்டு அவற்றிற்கு விடையும் கண்டு இருக்கிறார்கள். இனி அதில் இதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு முழுமையாக அறிந்து சொல்லி இருக்கிறார்கள். 


அதுதான் சிந்தாந்தம் என்பது. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_7.html


(click the above link to continue reading)



சித்தத்தின் அந்தம். அல்லது முடிவு. 


அறிவின் எல்லையை தொட்டு, இது தான் உண்மை என்று அறிந்து சொல்லி இருக்கிறார்கள். 


சைவ சித்தாந்தத்தின் விளக்கம் தான் விளக்கம் தான் சிவ ஞான போதம். போதம் என்றால் அறிவு. 


அது என்ன சைவ சித்தாந்தம்?


இயற்பியல் (physics) படிக்கப் போனால் electron, neutron, proton என்ற அடிப்படை அணுத் துகள்களைக் கொண்டு இந்த உலகை விளக்கம் செய்வார்கள். 


காரணம் என்ன? 


இந்த அணுத் துகள்கள் மாறி மாறி வருவதுதான் உலகம். உலகில் உள்ள மற்ற பொருள்கள் மாறிக் கொண்டே இருக்கும். ஆனால் அணுத் துகள்கள் மாறாது. 


நிலையில்லா இந்த உலகில் நிரந்தரமானது எது என்று சிந்தித்தார்கள். அதைப் பிடித்து விட்டால் இந்த உலகம் பிடிபட்டு விடும். 


அப்படி தேடி தேடி கடைசியில் மூன்று விடயங்கள் நிரந்தரமானவை என்று கண்டு கொண்டார்கள். அதுதான் அடிப்படைத் தத்துவம். அதைப்  புரிந்து கொண்டால், இந்த உலகைப் புரிந்து கொள்ள முடியும். 


அது என்ன மூன்று?


பதி, பசு, பாசம் 


என்ற மூன்று. இந்த மூன்றுதான் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை. 


இதைப் புரிந்து கொண்டால், மற்றது எளிது. 


இது பற்றி மேலும் சிந்திக்க இருக்கிறோம். 


Wednesday, April 6, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - நிற்பார் நிற்க

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - நிற்பார் நிற்க 


நமக்கு ஒரு ஊருக்குப் போக வேண்டும். 


வண்டி ஒரு குறித்த சமயத்தில் கிளம்பி விடும். காலாகாலத்தில் வீட்டை விட்டு கிளம்பினால் தான் வண்டியை பிடிக்க முடியும். ஊர் போய் சேர முடியும். 


இன்னும் நேரம் இருக்கு, இன்னும் நேரம் இருக்கு என்று காலம் தாழ்த்திக் கொண்டே போனால், வண்டியைக் கோட்டை விட்டு விடுவோம் அல்லவா?


சரி, வண்டியைப் பிடிச்சாச்சு. போற வழியில், ஒரு டீ குடித்துவிட்டுப் போகலாம் என்று வண்டியை நிறுத்துகிறோம். கொஞ்ச நேரம் போகிறது. 


இன்னும் கொஞ்ச தூரம் போன பின், போற வழிக்கு ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டு போனால் என்ன. படிசுகிட்டே போகலாமே என்று ஒரு புத்தகக் கடையில் வண்டியை நிறுத்துகிறோம். 


அப்புறம்,  துணி வாங்க.  shoe பாலிஷ் போட என்று அங்கங்கே நிறுத்தி போனால் என்ன ஆகும்? வண்டி போய் விடும் அல்லவா?


போனால் என்ன? அடுத்தவண்டியில் போனா போச்சு என்று நினைக்கலாம். 


ஒரு வேளை வேற வண்டியே இல்லாவிட்டால்? இப்போது உக்ரைன் நாட்டில் சண்டை நடக்கிறது. மக்கள் அந்த நாட்டை விட்டு அருகில் உள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுகிறார்கள். அப்படி நாட்டை விட்டு போகிறவர்களை கூட்டிக் கொண்டு போக வண்டி இருக்கிறது. ஒரு வண்டியை விட்டால் அடுத்து எப்போது வண்டி வரும் என்று தெரியாது. அதற்குள் வேறு என்னவெல்லாம் நடக்கும் என்றும் தெரியாது. 


நம் பிறவியும் அப்படித்தான். வீடு பேறு என்ற இடத்துக்குப் போக வேண்டும். 


அதற்கு வழி பார்க்காமல், பராக்கு பார்த்துக் கொண்டு இருக்கிறோம். கல்யாணம், பிள்ளை, கணவன்/மனைவி, சொத்து, உறவு, சினிமா, whatsaap என்று பொழுதை போக்கிக் கொண்டு இருக்கிறோம். 


வண்டி போய் விடும். உயிர் ஒரு நாள் போய் விடும். உடம்பில் வலு போய்விடும். அப்புறம் எழுந்தால் உட்கார முடியாது. உட்கார்ந்தால் எழ முடியாது நேத்து படித்தது இன்று மறந்து விடும். 


ஒரு அவசரம் வேண்டாமா?


அவங்கள்ளெல்லாம் போகலையே, அவங்களும் அதே ஊருக்குதான போகணும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் இருக்க வேண்டியது தான். 


பாடல் 


நிற்பார் நிற்கநில் லாஉலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே

பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே

நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்

பிற்பால் நின்று பேழ்கணித்தால் பெறுதற் கரியன் பெம்மானே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_63.html


(pl click the above link to continue reading)



நிற்பார் நிற்க = யாத்திரைக்கு புறப்படமால், நிற்பவர்கள் நிற்கட்டும் 


நில் லா உலகில் = நிலை இல்லா இந்த உலகில் 



நில்லோம் = நான் நிற்க மாட்டோம் 


இனி நாம் செல்வோமே = இனிமேலாவது செல்லத் தலைப் படுவோம் 



பொற்பால்= அழகால் 


ஒப்பாந் திருமேனிப் = தனக்குத் தானே ஒப்புமை உடைய மேனியை உடைய 


புயங்கன் = பாம்பை அணிந்த கைகளை உடையவன் 


ஆள்வான் பொன்னடிக்கே = நம்மை ஆள்பவன் திருவடிகளுக்கே 


நிற்பீர் = வரிசையில் நிற்பீர் 


எல்லாந் தாழாதே = காலம் தாழ்த்தாமல் 


நிற்கும் பரிசே = நீங்கள் நினைத்து நின்ற பரிசே 


 ஒருப்படுமின் = ஒன்றாக வாருங்கள் 


பிற்பால் = அப்புறம் 


நின்று = வராமல் நின்று 


பேழ்கணித்தால் =  வருந்தினால் 


பெறுதற் கரியன் பெம்மானே. = பெறுவதற்கு அரியவன் அவன் 



சும்மா, காலத்தை விரயம் பண்ணிக் கொண்டு இருக்காதீர்கள் . உடனே புறப்படுங்கள் என்கிறார் மணிவாசகர். 



திருக்குறள் - கேடும் பெருக்கமும்

திருக்குறள் - கேடும் பெருக்கமும் 


மிக மிக பிரமிப்பூட்டும் குறள்களில் இதுவும் ஒன்று. 


ஒரு மனிதனால் எப்படி இந்த அளவு சிந்திக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது. சிந்திப்பது மட்டும் அல்ல, அதை ஒண்ணே முக்கால் அடியில் எப்படி சொல்லவும் முடிகிறது. 


அவர் சொல்வதை நாம் நம்பலாம், அல்லது நம்பாமல் இருக்கலாம். ஆனால், அந்த சிந்தனையின் ஆழம் நம்மை எங்கோ கொண்டு செல்லும். 


மேலும் காலம் தாழ்த்தாமல், குறளுக்கு செல்வோம். .


பாடல் 


கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க்கு அணி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/04/blog-post_6.html


(Pl click the above link to continue reading)


கேடும் = கெடுதலும் 


பெருக்கமும் = நன்மையும், செல்வமும் 


இல்லல்ல = இல்லாதவை அல்ல 


நெஞ்சத்துக் = மனதில் 


கோடாமை = நடுவு நிலைமை தவறாமல் இருத்தல் 


சான்றோர்க்கு அணி = சான்றோருக்கு சிறந்த அணிகலன் 


மேலோட்டமாக பொருள் சொல்வது என்றால் 


"வாழ்க்கைனா நல்லது கெட்டது நாலும் இருக்கத்தான் செய்யும். நடுவு நிலைமை தவறாமல் இருப்பது பெரியவர்களுக்கு அழகு"


இதுல என்ன பெரிய பிரமாண்டம் இருக்கிறது?  நாம கூட இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கலாமே. இதுக்கு எதுக்கு ஒரு வள்ளுவர்?


விரித்து பொருள் காண்போம்.


ஒருவன் ஏன் அறம் தவறி நடக்கிறான்?


ஏதோ வறுமை, அல்லது கொஞ்சம் அதிகம் ஆசைப் பட்டு விட்டான். பிள்ளையை பெரிய படிப்பு படிக்க வைக்க நினைப்பது தவறா? பெண்ணை ஒரு பெரிய நல்ல இடத்தில் கட்டி கொடுக்க நினைப்பது தவறா? உடம்பு சரி இல்லாத பெற்றோரை ஒரு பெரிய மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்க நினைப்பது தவறா? ஆசைப் பட்ட பெண்டாடிக்கு நாலு நகை நட்டு வாங்கித் தர நினைத்தது தவறா?


அதற்காக கொஞ்சம் அப்படி இப்படி இருந்து நாலு காசு பார்த்தால் என்ன ஆகி விடப் போகிறது என்று நினைத்து தானே பலர் தவறு செய்கிறார்கள்?


அதாவது நடுவு நிலை தவறி நடந்தால் இப்போது உள்ளை துன்பத்தை நீக்கி விட முடியும் என்று நினைக்கிறார்கள். சந்தோஷமாக வாழ முடியும் என்று நினைக்கிறார்கள். 


பரிமேலழகர் உரை செய்கிறார் 


"தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன"


நமக்கு வரும் கேடும், பெருக்கமும் நாம் முன் செய்த நல் மற்றும் தீவினையால் வந்தவை. அது இப்போது வந்தது என்று நினைக்கக் கூடாது. முன் செய்த வினை இப்போது வந்து நிற்கிறது. 


ஒரு நல்லவன் துன்பப் படுகிறான் என்றால் சான்றோர் என்ன நினைப்பார்கள் என்றால், அவன் மடையன், அவன் அறிவு இல்லாதவன், அவன் பிழைக்கத் தெரியாதவன் என்று நினைக்க மாட்டார்கள். .ஏதோ அவன் முன் செய்த வினை அவனை வாட்டுகிறது என்று நினைப்பார்களாம. 


அதேபோல் கெட்டவன் சந்தோஷமாக இருந்தால் ஏதோ அது அவன் சாமர்த்தியம் என்று நினைக்க மாட்டார்கள். அவன் முன் செய்த நல் வினை என்று நினைப்பார்களாம்.


எனவே, ஒருவன் தன் சாமர்த்தியத்தால், அறிவால், திறமையால், ஊக்கத்தால் தான் பெரிய ஆள் ஆகி விட்டோம் என்று நினைக்கக் கூடாது. அதே போல வறுமை வந்தாலும், ஏதாவது தவறானவற்றைச் செய்து வறுமையை போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக் கூடாது. என்ன செய்தாலும் செய்த வினை விடாது. 


பரிமேலழகர் மேலும் சொல்கிறார் 


"அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக்"


அதாவது அந்த இன்பமும், துன்பமும் ஏதோ இப்போதுதான் வருகிறது என்று நினைத்துக் கொண்டு 



" கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். "


நமக்கு வரும் கேடும். பெருக்கமும் நாம் செய்த முன்வினைப் பயனால் வந்தது என்று உறுதியாக நம்ப வேண்டும். (ஒருதலைக் கண் என்றால் உறுதியாக என்று அர்த்தம்) 




"அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், சான்றோர்க்கு அணி' என்றார்."


நாம் தவறான வழியில் பொருள் சேர்த்தாலும் நாம் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இருந்தால் அனுபவித்தே தீருவோம்.


என் வறுமையை போக்குகிறேன் என்று தவறு செய்தால், அந்த வினையும் சேர்ந்து கொள்ளும். 


இலாபமோ, நட்ட்டமோ, இன்பமோ, துன்பமோ என்ன ஆனாலும் தவறு செய்வதில்லை என்று உறுதியாக இருக்க வேண்டும். 


நம் சாமர்த்தியத்தால் எதுவும் நடந்து விடாது என்று அறிய வேண்டும். 


எவ்வளவோ பெரிய புத்திசாலிகளை காலம் புறம் தள்ளி இருக்கிறது. ஒன்றும் படிக்காதவனை தலையில் வைத்து கொண்டாடி இருக்கிறது. 


பெரிய பணக்காரன் எல்லாம் இழந்து ஏழ்மையில் இறந்து இருக்கிறார்கள். 


ஒன்றும் இல்லாதவன் தொட்டதெல்லாம் தங்கமாகி பெரும் பணக்கார்களாக ஆகி இருக்கிறார்கள். 


வரும் போது வரும். போகும் போது போகும். 


அதற்காக நாம் தவறான வழியில் செல்லக் கூடாது என்கிறது குறள். 


நாம் நமக்கு வரும் துன்பத்தை சகித்து இருந்து விடுவோம். பிள்ளையை ஒரு சாதரண கல்லூரியில் சேர்த்து விடலாம். பிரச்னை ஒன்றும் இல்லை. 


ஆனால், இந்த உறவுக் காரர்கள் கேலி செய்வார்களே, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏளனமாக பார்ப்பார்களே என்று நினைத்து அவர்கள் மத்தியில் நல்ல பேர் எடுக்க எப்படியோ காசு சம்பாதித்து பெரிய கல்லூரிக்கு அனுப்பி, பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ணி ஏதேதோ செய்கிறோம். 


வள்ளுவர் சொல்கிறார், இந்த அக்கம் பக்கம், உறவு, whatsapp நண்பர்கள் இவங்க என்ன நினைபாங்க என்று கவலைப் படாதே. 


சான்றோர், அதாவது படித்தவர்கள், நல்லவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசி என்கிறார். 


உன் வறுமையை துன்பத்தை கண்டு அவர்கள் உன்னை இகழ மாட்டார்கள். மாறாக, இந்த வறுமையிலும், துன்பத்திலும் தவறான வழியில் செல்லாமல் நேர்மையாக வாழ்கிறானே என்று உன்னைப் போற்றுவார்கள் என்கிறார். 


"சான்றோருக்கு அணி". 


அவங்களுக்கு அது தான் சிறப்பு. 


நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். யாருடைய எண்ணம் நமக்கு முக்கியம் என்று. 


எவ்வளவு ஆழமான குறள்!