Monday, January 31, 2022

திருக்குறள் - எது அணிகலன் ?

திருக்குறள் - எது அணிகலன் ?


நம்மை அழகு படுத்திக் கொள்ள நாம் உயர்ந்த ஆடைகள், நகைகள் இவற்றை அணிந்து கொள்கிறோம். முடியை திருத்தி, முகத்தில் பலவிதமான பொருள்களை பூசி மெருகு ஏற்றுகிறோம். 


அதெல்லாம் ஒரு அழகா? அதெல்லாம் எவ்வளவு நேரம் நிற்கும்? சில மணி நேரம் நிற்கும் அல்லது மிஞ்சி  மிஞ்சி போனால் சில நாள். 


எவ்வளவுதான் புற அழகை மெருகு ஏற்றினாலும், ஒருவன் பேச்சில், செயலில் அவன் உண்மை அழகு என்ன என்று தெரிந்து விடும். 


வள்ளுவர் சொல்கிறார் " பணிவும், இனிய சொல்லும் தான் ஒருவனுக்கு அழகு. மற்ற அழகு எல்லாம் அழகே அல்ல" என்று. 


பாடல் 


 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_31.html


(please click the above link to continue reading)


பணிவுடையன் = பணிவுடன் இருத்தல் 


இன்சொலன் ஆதல் =இனிய சொற்களை பேசுதல் 


ஒருவற்கு = ஒருவனுக்கு 


அணி = அணிகலன் ஆகும் 


யல்ல = அல்ல 


மற்றுப் பிற = மற்றவைகள் 


இப்படி நேரடி பொருள் கொண்டால் அனர்த்தம் தான் விளையும். எல்லோரிடமும் பணிவாக இருக்க வேண்டுமா? 


பிள்ளைகளிடம், பேரப் பிள்ளைகளிடம், தனக்கு கீழே வேலை பார்பவர்களிடம், அறிவற்ற முதலாளிகளிடம், பதவியில் இருக்கும் மோசமானவர்களிடம் எல்லாம் பணிவாக இருக்க வேண்டுமா? யாரைப் பார்த்தாலும், அவர் என்ன சொன்னாலும் பணிந்து போக வேண்டுமா? 


ஒரு கம்பீரம் வேண்டாமா? ஒரு ஆளுமை வேண்டாமா? ஒரு தன்னம்பிக்கை வேண்டாமா?


பரிமேலழகர் மிகத் துல்லியமாக பொருள் சொல்கிறார். 


"தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய்" என்று.


அதாவது, தன்னை விட உயர்ந்தவர்களிடம், வணங்கத் தக்கவர்களிடம், பெரியவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும் என்கிறார். 


ஆசிரியர், பெற்றோர்,  அறிவில், ஒழுக்கத்தில்  சிறந்த பெரியோர் இவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும். 


பணிவு இவர்களிடம் இருக்க வேண்டும். 


ஆனால், இனிய சொல் பேசுவது எல்லோரிடமும் இருக்க வேண்டும். அதற்கு கட்டுப்பாடு கிடையாது. 


இந்த அதிகாரம் இன்சொல் பற்றியது. இதில் பணிவுடையன் பற்றி ஏன் சொல்ல வேண்டும்? வேண்டும் என்றால் அதற்கு ஒரு அதிகாரம் எழுதிக் கொள்ள வேண்டியது+ தானே?


பரிமேலழகர் சொல்கிறார், " இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார்"


இன் சொல் சொல்வதற்கு பணிவுடைமை என்பது அவசியம். பணிவு இல்லாமல் இனிய சொல் கூற முடியாது என்பதால், வணங்கத்தக்க பெரியவர்களிடம் பணிவோடு கூடிய இன் சொல் சொல்ல வேண்டும் என்கிறார். 


நம்மை விட பெரியவர் ஒருவர் வருகிறார் என்றால் "வாருங்கள், அமருங்கள்" என்று இனிமையாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு சொல்லக் கூடாது. 


"அணியல்ல" என்று எப்படி கூற முடியும். பணிவும், இன் சொல் இல்லாவிட்டாலும் தங்க நகை, தங்க நகைதானே? பட்டுப் புடவை பட்டுப் புடவைதானே? எப்படி அணி அல்ல என்று கூற முடியும்? 


நகையும், பட்டுப் புடவையும் அழகு தரும்தான் என்றாலும், பணிவும், இன் சொல்லும் போல பேரழகு தராது என்பதால், இதோடு ஒப்பிட்டால் அது அணி அல்ல என்று கூறினார் என்று பரிமேலழகர் கூறுகிறார். 


 எழுத்து எண்ணி எழுதி இருக்கிறார்கள். படித்து இருக்கிறார்கள். 


ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு எழுத்தும் மிக கவனமாக சொல்லப் பட்டு இருக்கிறது. 


அப்படி படிக்க வேண்டும். 


Saturday, January 29, 2022

குறுந்தொகை - தாகம்

குறுந்தொகை  - தாகம் 


பசி கூட பொறுத்து விடலாம், தாகம் பொறுக்க முடியாது. 


தாகம் வந்து விட்டால், உடம்பு தவித்துப் போய் விடும். நா வறளும். கண் மயங்கும். காது அடைக்கும். மயக்கம் வரும். 


ஓரிரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது. நீர் குடிக்காமல் இருக்க முடியாது. 


அந்த தாகத்தையும் மீறியது காதல் உணர்வு. 


தலைவன் பிரிந்து போய் விட்டான். எப்போது வருவான் என்று தெரியாது. வருவானா மாட்டானா என்றும் தெரியவில்லை. தலைவி தவிக்கிறாள். தோழியிடம் தன் தவிப்பை சொல்கிறாள். 


தோழி, அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். 


"கவலைப்படாதே அவர் கட்டாயம் வருவார். வேலை நிமித்தமாக அவர் உன்னை மறந்தால் கூட, அவர் போகிற வழி உன்னை அவருக்கு ஞாபகப் படுத்தும். அவர் போகிற வழி பாலை நிலம். வெப்பம் அதிகமாக இருக்கும். தண்ணீர் கிடைப்பது அரிது. அங்கு ஆண் யானைகளும், பெண் யானைகளும் திரியும். அப்போது, பெண் யானைக்கு தாகம் எடுக்குமே என்று ஆண் யானை, அங்குள்ள மரப் பட்டைகளை உரித்து, அதில் வடியும் நீரை தன் தும்பிக்கையில் ஏந்தி, தான் குடிக்காமல் , பெண் யானைக்கு ஊட்டி விடும். அதை பார்க்கும் போது தலைவனுக்கு உன் நினைவு கட்டாயம் வரும்"


என்று. 


பாடல் 


"நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழியவர் சென்ற வாறே."


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_26.html


(please click the above link to continue reading)


"நசை = அன்பு, நட்பு 


பெரி துடையர் = நிறைய உள்ளவர் 


நல்கலு நல்குவர் = உனக்கு அவர் காதலைத் தருவார் 


பிடி = பெண் யானையின் 


பசி = தாகத்தை 


களைஇய = போக்க 


பெருங்கை = பெரிய கையை உடைய 


வேழம் = ஆண் யானை 


மென்சினை = மென்மையான கிளைகளை 


யாஅம் = யா என்ற மரத்தின் 


பொளிக்கும் = உடைத்து, முறித்து 


அன்பின = அன்பினால் 


தோழி = தோழி 


யவர் =அவர் 


சென்ற வாறே." = சென்ற ஆறே = சென்ற வழியே 


யதார்த்தமான கவிதை. 


நிலவு போல் முகம், மூங்கில் போல் கை என்று பெண்ணின் உடலை வருணனை செய்யாமல், பிரிவு, காதல், ஏக்கம், நம்பிக்கை, என்று மனித உணர்வுகளை படம் பிடிக்கும் பாடல். 


"இதோ இருக்கிறது மரம். நான் இந்தப் பக்கம் கிளைகளை முறித்து நீர் அருந்துகிறேன். நீ அந்தப் பக்கம் குடி" என்று சொல்லாமல், பெண் யானைக்கு நீர் ஊட்டி விடுமாம் ஆண் யானை. 


அம்புட்டு காதல். 


ஒரு யானைக்கே இவ்வளவு காதலா என்று தலைவன் மனதில் தோன்றும் தானே. 


பொருளீட்டிக் கொண்டு , அதை அவள் கையில் கொடுத்து, அவள் முகம் மலர்வதை பார்க்க அவனுக்கும் அவனுக்கும் ஆசை வரும் தானே. 


சும்மா காதல் காதல் என்று சொல்லிக் கொண்டு இருக்கவில்லை. மரப் பட்டைகளை உரித்து, நீர் எடுத்து, பெண் யானைக்கு ஊட்டி விடுகிறது. அது காதல். 


இப்படி பல விடயங்களை நம் கற்பனைக்கு விடுகிறது இந்தப் பாடல். 


இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.  


ஆர்வம் உள்ளவர்கள்,  தேடிப் பிடியுங்கள், படியுங்கள். 

திருக்குறள் - துன்பம் இல்லாமல் போகும்

 திருக்குறள் - துன்பம் இல்லாமல் போகும் 


துன்பம் வேண்டுவார் யாரும் இல்லை. இருந்தும் துன்பம் இலாதார் யாரும் இல்லை. ஏதோ ஒரு வழியில் துன்பம் வந்து வாசல் கதவை தட்டுகிறது. 


துன்பத்திற்கு பெருமாலான காரணம் செல்வம்.


செல்வம் இல்லாமை ஒரு துன்பம். 


இருக்கும் செல்வதை இன்பமாக அனுபவிக்கத் தெரியாமல் அதை காக்க பாடுபவது இன்னொரு துன்பம். 


" எல்லோரிடத்தும் இனிய சொல் சொல்பவர்களுக்கு துன்புறுத்தும் வறுமை அல்லது வெறுப்பு இல்லாது போகும்" என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_29.html


(please click the above link to continue reading)


துன்புறூஉம்  = துன்பம் தரும் 


துவ்வாமை = வறுமை, வெறுப்பு 


இல்லாகும் = இல்லாது போகும் 


யார்மாட்டும் = எல்லோரிடத்தும் 


இன்புறூஉம் = இன்பம் தரும் 


இன்சொ லவர்க்கு = இனிய சொற்களை சொல்பவர்களுக்கு 


வள்ளுவர் சொல்லி விட்டார். அது எப்படி என்று நாம் யோசிக்கலாம். 


நமக்கு துன்பம் எப்படி வருகிறது?


வறுமையால் வரும் - எல்லோரிடமும் இனிய சொல் பேசுபவர்களுக்கு எல்லோரும் உதவி செய்வார்கள். ஏதோ ஒரு வேலை, பொருள் உதவி என்று தருவார்கள். எனவே அந்தத் துன்பம் இல்லாமல் போகும் 


எதிரிகளால் வரும் - எதிரி என்றால் ஏதோ கொலைகாரன், கொள்ளைக் காரன் என்று இல்லை. அலுவலகத்தில் நமக்கு எதிராக வேலை செய்பவர்கள், உறவில் நம் முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள்,  என்று அருகிலேயே இருப்பார்கள். எல்லோரிடமும் இனிமையாக பேசி வாழ்ந்தால், நமக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். எதிரிகளே இல்லாவிட்டால் அவர்களால் வரும் துன்பம் இல்லாமல் போகும் தானே. 


நண்பர்களால் துன்பம் வராது. 


எதிரிகளால் துன்பம் வராது. 


நம் இலக்கியங்களில் மூன்றாவதாக ஒரு பகுதியினரைப் பற்றி கூறுகிறார்கள். 


நட்பு, எதிரி, நொதுமல் என்று. 


நொதுமல் என்றால் நட்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லாதவர்கள். தெருவில் போகும் முன் பின் தெரியாதவரிடம் உள்ளது நொதுமல். 


இனிய சொல் பேசுபவர்களிடம் அப்படி முன் பின் தெரியாதவர்கள் கூட அன்பு பாராட்டத் தலைப்படுவார்கள். அவர்களின் நட்பை விரும்புவார்கள். 


யோசித்துப் பாருங்கள், இந்த உலகில் உள்ள அனைவரும் உங்களுக்கு நட்பு என்றால் அது எவ்வளவு உயர்வைத்தரும் என்று.  அப்படி இருக்கும் போது துன்பம் எங்கிருந்து வரும் ?


அதெல்லாம் சரி, இப்படிச் செய்தால் அப்படி நடக்கும் என்று என்ன உத்தரவாதம்?


ஒரு உத்தரவாதமும் இல்லை. செய்துதான் பார்க்க வேண்டும்.  


காசா பணமா? நட்டப் பட ஒன்றும் இல்லை. 


முயன்றுதான் பார்ப்போமே. ஒரு வேளை சரியாக இருந்தால்?....







Sunday, January 23, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய் நீக்கி

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய் நீக்கி 


கணவன்/மனைவி, பிள்ளைகள், சொந்தம், பந்தம், உற்றார், உறவு, நட்பு என்று நாம் பலபேரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் உண்மையா?  இந்த உலகில் நம்மைத் தவிர நமக்கு வேறு எந்த சுற்றமும் கிடையாது. எல்லா உறவும் ஒரு எல்லை வரைதான்.  


பட்டினத்தார் சொன்னது போல, "கொட்டி முழக்கி அழுதிடுவார். மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ கச்சியேகம்பனே". 


ஆற்றில் போட்ட மரக் கட்டைகள் ஆற்று வெள்ளத்தில் சில சமயம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு சிறிது தூரம் செல்லும். பின் வெள்ளம் அந்த இரண்டு மரத் துண்டுகளையும் வேறு இடத்துக்கு இழுத்துச் சென்று விடும். 


நாமும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படுகிறோம். உறவுகள் வரும், போகும். நம்மைத் தவிர நமக்கு எதுவும் நிரந்தர உறவு அல்ல.


சொல்வது, மணிவாசகர். 


உறவு மட்டும் அல்ல. நாம் சேர்த்து வைத்த பொருளும் நமது அல்ல. நாம் நினைத்தாலும் அவற்றை பிடித்து வைக்க முடியாது. அது போகின்ற காலத்தில் போகும். எத்தனை அரசர்கள் எத்தனை அரண்மனை கட்டி வாழ்ந்தார்கள். எங்கே அந்த அரண்மனைகள் எல்லாம்? அரன் மனைகள் இருக்கிறது. அரண்மனைகள் இல்லை. 


நமக்கு வரும் நன்மை தீமைகள் பிறர் நமக்குச் செய்வது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இல்லை. நமக்கு நடக்கும் நல்லதுக்கும் தீயவற்றிற்கும் நாமே பொறுப்பு. நாம் செய்த வினை நமக்கு வந்து சேர்கிறது. ஆழ்ந்து யோசித்தால் நமக்கு நிகழ்ந்த ஒவ்வொன்றிற்கும் நாமே காரணம் என்று புரியும். 


உறவு வெளியில் இல்லை.பொருள் வெளியில் இல்லை. நன்மை தீமைகள் வெளியில் இருந்து வருவது இல்லை. 


ஆனால், நடைமுறையில் அப்படித் தெரியவில்லையே. என் கணவன்/மனைவி என் மேல் உயிரையே வைத்து இருக்கிறார்/ள். நான் என் கணவன்/மனைவி மேல் உயிரையே வைத்து இருக்கிறேன். பிள்ளைகள் மேல் அவ்வளவு பாசம்...என்றெல்லாம் தோன்றும். 


காரணம், நமக்கு உண்மை புரியாத மாயை. அது ஒரு பொய்த் தோற்றம். 


பாடல் 


தாமே தமக்குச் சுற்றமுந் தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_23.html


(please click the above link to continue reading)


தாமே தமக்குச் சுற்றமுந் = ஒருவற்கு சுற்றம், நட்பு எல்லாம் அவரே தான் 


தாமே தமக்கு விதிவகையும் = ஒருவற்கு நடக்கும் நன்மை தீமைகளுக்கு அவர் செய்த வினையின் பலனே விதியாக வந்து சேர்கிறது. 


யாமார் = நான் யார்? 


எமதார் = என்னுடையது எது ?


பாசமார் = பாசம் என்றால் என்ன? 


என்ன மாயம் = இவை எல்லாம் என்ன மாயம், மாயை 


இவைபோகக் = இதெல்லாம் போய்  (மாயை விலகி) 


கோமான் = தலைவன் (சிவன்) 


பண்டைத் தொண்டரொடும் = பழைய தொண்டர்களோடும் 


அவன்றன் = அவனுடைய 


குறிப்பே = மனக் குறிப்பை 


குறிக்கொண்டு = குறியாகக் கொண்டு 


போமா றமைமின் = போகும் + ஆறு + அமைமின் = போகின்ற வழியை அறிந்து கொண்டு 


பொய்நீக்கிப் = பொய்யானவற்றை நீக்கி 


புயங்கன் = பாம்பணிந்த கைகளை உடைய 


ஆள்வான் = நம்மை ஆளும் அவன் 


பொன்னடிக்கே. = திருவடிகளுக்கே 



மற்றது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


எது உண்மை, எது பொய் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 


பொய் என்று தெரிந்தால் அதை விட்டு விட வேண்டாமா?


கவரிங் நகையை உண்மையான நகை என்று நினைத்து அதை காப்பாற்றிக் கொண்டு இருக்க முடியுமா?


நல்ல நகையை கவரிங் நகை என்று அலட்சியமாக போட்டு விட முடியுமா? 


எது உண்மையான உறவு, எது நம் பொருள், எது பாசம் என்றெல்லாம் அறிய வேண்டும். 


ஞான இருள், மாய இருளை போக்கும். 


அந்த ஞானத்தைத் தேடும் பயணத்தை இன்றே தொடங்க வேண்டும். 


யாத்திரைப் பத்து. 


திருச்சிற்றம்பலம். 




Saturday, January 22, 2022

திருக்குறள் - அறத்தை எப்படி தொடங்குவது?

திருக்குறள் - அறத்தை எப்படி தொடங்குவது?


இரண்டு வழிதான் இருக்கிறது நமக்கு. ஒன்று இல்லறம், மற்றொன்று துறவறம். இரண்டுமே அறம் தான். அறம் அல்லாத வழியே இல்லை. 


அறத்தை எங்கிருந்து தொடங்குவது? எப்படி ஆரம்பிப்பது? 


ஒரு பெரிய செயலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு பயிற்சி வேண்டும் அல்லவா?  மருத்துவம், பொறியியல், விளையாட்டு, இசை, சமையல் என்று எதை எடுத்துக் கொண்டாலும், அதில் சிறப்பாக இருக்க பயிற்சி வேண்டும். பயிற்சி என்றால் முதலில் சில அடிப்படை பாடங்கள் இருக்கும். அ ஆ படிப்பது போல. அடிப்படை சரியாக இருந்தால் அதில் இருந்து மேலும் மேலும் படிப்படியாக முன்னேறலாம்.


அறத்திற்கு எது அடிப்படை? எது தொடக்கம் என்றால், "இனிய சொல்" என்கிறார் வள்ளுவர். 


அது ஒரு எளிமையான தொடக்கம். 


பாடல்  


முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனதே அறம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_22.html


(please click the above link to continue reading)


முகத்தான் = முகம் கண்ட போது, நேரில் பார்த்த போது 


அமர்ந்து = விரும்பி 


இனிது நோக்கி = இனிமையுடன் நோக்கி 


அகத்தானாம் = மனதில் இருந்து 


இன்சொல் = இனிய சொல் சொல்லுவதே 


இனதே அறம் = கண்ணதே அறம், சார்ந்ததே அறம், வழியதே அறம் 


இரண்டு விடயங்களை கவனிக்க வேண்டும்.


முதலாவது, முகம் மலர்ச்சியோடு இருக்க வேண்டும். இன் சொல் சொல்கிறேன் பேர்வழி என்று முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு சொல்லக் கூடாது. "இனிது நோக்கி" என்றார்.


இரண்டாவது, மனதில் இனிமை வேண்டும். சில பேர் இனிக்க இனிக்க பேசுவார்கள். உள்ளுக்குள் எல்லாம் நஞ்சு. அப்படி இருக்கக் கூடாது. மனந்திலும் இனிமை வேண்டும். 


முகம் மலர்ந்து, மனதில் இனிமை கூட்டி, இனிய சொல்லை சொல்ல வேண்டும். 


அறம் என்பது அதுதான், அதன் வழி தான், "இனதே அறம்" என்றார். 


ஏதோ எளிமையான ஒன்று போல் தெரிகிறது. 


முயன்று பாருங்கள். கோபம் காட்டாமல், அதை அடக்கிக் கொண்டு நல்ல சொல் சொல்லுவது அல்ல. மனதில் கோபமே இருக்கக் கூடாது. முடியுமா?


பொறாமை, கோபம், வெறுப்பு, உயர்வு / தாழ்வு மனப்பான்மை இவை எல்லாம் இல்லாமல், மலர்ந்த முகத்தோடு இனிய சொல்லை சொல்ல வேண்டும். 


மன மாசுக்களை நீக்கி, மலர்ந்த முகத்தோடு இனிய சொல் சொல்லிப் பழக வேண்டும். 


இதை மட்டும் செய்தால் போதும். வேறு என்ன அறம் வேண்டும்?


செய்தால் நல்லது தானே? பின் என்ன யோசனை? இன்றே தொடங்க வேண்டியது தானே?




Tuesday, January 18, 2022

இராமாநுச நூற்றந்தாதி - வேதத்தின் பொருள்

 இராமாநுச நூற்றந்தாதி - வேதத்தின் பொருள் 


வேதத்தின் உண்மையான பொருள் என்ன? 


எந்த மொழிக்கும் ஒரு எல்லை உண்டு. எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும், பெரும்பாலான சமயங்களில் சொல்ல நினைத்தது வார்த்தைகளில் வராது. நாம் ஒன்று நினைத்து சொல்வோம். கேட்பவர் வேறு மாதிரி புரிந்து கொள்ளலாம்.  இந்தச் சிக்கல் எவ்வளவு பெரிய மகான்களுக்கும் உண்டு. 


வேதத்தில் என்ன சொல்லி இருக்கிறது என்று எப்படி அறிந்து கொள்வது? வேதத்தை எழுதியது யார்? அவர் வேறு ஏதாவது நூல் செய்திருகிறாரா? விரிவுரை, பொழிப்புரை என்று ஏதாவது உரை இருக்கிறதா என்றால் இல்லை. 


ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த விதத்தில் இது தான் வேதம் சொல்கிறது என்று சொல்கிறார்கள்? யார் சொல்வதை நம்புவது? எல்லோரும் பெரிய மகான்கள் தான், படித்தவர்கள்தான், ஞானிகள்கள் தான். இருந்தும் ஒருவருக்கு ஒருவர் முரண்பாடான கருத்துக்களை சொன்னால், நாம் யார் சொல்வதை பின்பற்றுவது?


உதாரணமாக,


ஜீவாத்மா, பரமாத்மா என்று இரண்டு இருக்கிறது. எல்லோரும் ஒத்துக் கொள்கிறார்கள்.


இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு  என்பதில் பல்வேறு விதமான கருத்துகள் இருக்கின்றன. 


ஜீவாத்மாவை யார் படைத்தது? எதில் இருந்து அது படைக்கப்பட்டது, படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன, நோக்கம் நிறைவேறாமல் தடுப்பது எது? ஜீவாத்மா மூலம் தான் அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமா?  பரமாத்மா நின்னைதால், இந்த ஜீவாத்மாக்கள் இல்லாமலேயே அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாதா? பின் எதற்கு இந்த ஜீவாத்மா? எதற்கு இத்தனை ஜீவாத்மாக்கள்? இன்னும் வருமா? அல்லது ஜீவாத்மாவை படைப்பது நின்று விட்டதா? 


இப்படி எண்ணற்ற கேள்விகள் இருக்கின்றன. ஆளாளுக்கு ஒரு உரை சொல்கிறார்கள். 


"வேதம் சொல்வது இது தான் என்று சில பேதையர்கள் சொல்லித் திரிகிறார்கள். பிரமம் நல்லது அல்லது நிரந்தரமானது என்று அவர்கள் சொல்கிறார்கள். மற்றைய உயிர்கள் எல்லாம் அந்த பிரம்மம் தான் என்றுஅவர்கள் சொல்கிறார்கள். உயிர்கள் உடலை விட்டு பிரிந்த பின், இறைவனோடு கலந்து விடுகின்றன என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இதெல்லாம் தவறு என்று தன்னுடைய வாதத் திறமையால் நிரூபித்தார் இராமானுசர்"


என்கிறார் திருவரங்கத்து அமுதனார். 


பாடல் 




பேதையர் வேதப் பொருளிதென் னுன்னிப் பிரமம்நன்றென்


றோதிமற் றெல்லா உயிரும் அஃதென்று உயிர்கள்மெய்விட்


டாதிப் பரனொடொன் றாமென்று சொல்லுமவ் வல்லலெல்லாம்


வாதில்வென் றான், எம் இராமா னுசன்மெய்ம் மதிக்கடலே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_18.html



(please click the above link to continue reading)


பேதையர்  = பேதைகள், முட்டாள்கள், அறிவு இல்லாதவர்கள் 


வேதப் பொருளிதென் னுன்னிப் = வேதப் பொருள் இது என்று உன்னி = வேதத்தின் பொருள் இதுதான் என்று நினைத்து 


பிரமம்நன்றென் றோதி = பிரமம் நல்லது, நிரந்தரமானது, உயர்ந்தது என்று பாடம் சொல்லி 


மற் றெல்லா உயிரும் = மற்ற உயிர்கள் எல்லாம் 


 அஃதென்று = அதுவே (பிரமமே) என்றும் 


உயிர்கள் மெய்விட் = உயிர்கள் உடம்பை (மெய்) விட்ட பின் 


டாதிப் = ஆதி 


பரனொடொன் றாமென்று = பரன் என்று சொல்லும் கடவுளிடம் ஒன்று ஆகும் என்று  


சொல்லுமவ் = சொல்லும் அந்த 


வல்லலெல்லாம் = வல்லமை எல்லாம் 


வாதில்வென் றான் = அவை தவறு என்று வாதத்தில் வென்றான் 


எம் இராமா னுசன்  = எம் தலைவனான இராமானுசன் 


மெய்ம் மதிக்கடலே. = உண்மையான கல்விக் கடலே 


சரி, அவை எல்லாம் தவறு என்றால், பின் எது சரி? 


இராமனுசர் என்னதான் சொல்கிறார்? 


அது ஒரு தனி விளக்கம். வைணவ சித்தாந்தம். அது பற்றி தனியே ஆராய்ந்து அறிய வேண்டும். 


இராமானுசர் என்ன சொல்கிறார் என்று தெரிந்து கொள்வதுதான் அவருக்கு செய்யும் மரியாதை. 


இராமனுசர் எனக்கு கடவுள் என்று சொல்லிவிட்டு, அவர் என்ன சொன்னார் என்று அறிந்து கொள்ளாமல் இருப்பது சரியா? 


நியூட்டனை நான் வணங்குகிறேன். ஆனால், அவர் சொன்ன அறிவியல் உண்மைகள் எனக்குத் என்ன என்று எனக்குத் தெரியாது என்று சொல்வது மதியீனம் அல்லவா?


இராமானுச நூற்றந்தாதி படிப்பதின் நோக்கம், இராமானுசர் கண்டு சொன்ன உண்மைகளை அறிவதுதான். சும்மா பாடல்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது அல்ல. 


அவர் சொல்லிச் சென்ற உண்மைகளை அறிந்து கொள்ள முயற்சிப்போம். 




Monday, January 17, 2022

திருக்குறள் - சொல்லும், பொருளும்

திருக்குறள் - சொல்லும், பொருளும் 


ஒருவருக்கு உதவி செய்வது என்றால் எது உயர்ந்த உதவி ? - அவருக்கு பொருள் உதவி செய்வதா அல்லது அவருக்கு நாலு நல்ல வார்த்தை சொல்வதா? 


வாய் வார்த்தையில் என்ன பலன்? அதை கொண்டு போய் வங்கியிலா போட முடியும்? பொருள் உதவி தான் உயர்ந்தது என்று நாம் நினைப்போம். 


வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. பொருள் உதவியை விட இனிய சொல் உயர்ந்தது என்கிறார். 


ஏன் அப்படிச் சொல்கிறார்? அப்படி என்றால் உதவி என்று வந்தவர்களுக்கு எல்லாம் நாலு நல்ல வார்த்தை சொல்லி அனுப்பி விடலாமே. செலவு மிச்சம். அப்படித்தானே வள்ளுவர் சொல்கிறார் என்று நினைக்கத் தோன்றும். பரிமேலழகர் இல்லாவிட்டால் நாம் இது போன்ற குறள்களை தவறாக பாடம் பண்ணிக் கொண்டு தவறான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்போம். 


இன்றும், பள்ளிகளில் சரியான முறையில் சொல்லித் தருகிறார்களா என்று தெரியவில்லை. பரிமேலழகர் உரை இல்லாமல் சொன்னால், அது தவறாகத்தான் இருக்கும். 


இன்றைய குறளை படிக்கும் முன், முந்தைய குறளை ஒரு முறை வாசித்து விடுவோம். 


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


அதாவது, "இன்சொல் என்பது என்ன என்றால் அன்பு கலந்து, வஞ்சனை இல்லாத அற நெறிக்கண் நிற்பவர்களின் (செம்பொருள் கண்டார்) வாயில் இருந்து வரும் சொற்கள்" 


என்று பார்த்தோம். 


இனி, இன்றைய குறளுக்குள் போவோம். 


பாடல் 


அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனஅமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_17.html


(please click the above link to continue reading)



அகன் = அகம், உள்ளம் 


அமர்ந்து = மகிழ்ந்து 


 ஈதலின் = ஒருவருக்கு ஒன்றை கொடுப்பதை விட 


 நன்றே = நல்லது 


முகனஅமர்ந்து = முகம் மலர்ந்து 


இன்சொலன் ஆகப் = இனிய சொல்லை சொல்பவனாக 


பெறின் = பெற்றால் 


நேரடியான பொருள் புரிகிறது. பொருளைக் கொடுப்பதை விட இனிய சொல் சொல்வது சிறந்தது என்கிறார்.  


சொல்லுக்கும் அர்த்தம் புரிகிறது. 


ஆனால், அது எப்படி பொருளை விட சொல் சிறந்ததாக இருக்க முடியும்?


ஆயிரம் அகராதி எடுத்துப் படித்தாலும், இதற்கு மேல் நமக்கு விளங்காது. 


பரிமேலழகர் போன்ற உரை ஆசிரியர்கள் இல்லாமல் இது போன்ற குறள்களை புரிந்து கொள்வது மிகக் கடினம். 


பரிமேலழகர் சொல்கிறார் 


"இனிய சொல் என்றால் என்ன என்பதை முந்திய குறளில் பார். அங்கே என்ன சொல்லி இருக்கிறது?  அன்பு கலந்து, வஞ்சனை இல்லாமல் அற நெறியில் நிற்பவர் சொல் தான் இனிய சொல் என்று சொல்லி இருக்கிறது அல்லவா? எனவே, பொருளை விட அப்படிப் பட்ட இன் சொல் சிறந்தது"   


என்று.


கொஞ்சம் புரிந்தது போல இருக்கிறது. .


இனி நாம் அதை விரித்துப் பார்ப்போம். 


நமக்கு ஒரு பொருளாதார சிக்கல். அவசரமாக கொஞ்சம் பணம் வேண்டும். 


ஊரிலேயே பெரிய அயோக்கியன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் கேட்டால் தந்து விடுவான். போய் வாங்கிக் கொள்ளலாமா? அல்லது கந்து வட்டி,மீட்டர் வட்டி என்று வட்டிக்கு பணம் தரும் ஒரு லோக்கல் தாதா இருக்கிறான். அவனிடம் சென்று பொருள் பெற்றுக் கொள்ளலாமா? 


புரிகிறது அல்லவா?


தீயவர்களிடம் சென்று பொருள் உதவி பெறுவது பின்னால் நம்மை பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும். 


மாறாக, ஒரு நல்ல மனிதர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் போகிறோம். அவரிடம் பணம் இல்லை. ஆனால், அவர் நம் பிரச்சனையை நன்றாக கேட்டு, அதை புரிந்து கொண்டு, அந்த சிக்கலை சமாளிக்க ஒரு வழி சொல்லித் தருகிறார். அவர் நம் மேல் அன்பு உள்ளவர். வஞ்சனை இல்லாதவர். அற நெறியில் நிற்கும் நல்ல மனிதர். அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும்.


இப்போது யோசித்துப் பார்ப்போம். பொருள் சிறந்ததா அல்லது இன் சொல் சிறந்ததா?


ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ள கூடியதாக இருந்தாலும், மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது அல்லவா. 


ஒரு உதாரணம் சொல்கிறேன். தற்பெருமைக்காகவோ அல்லது நான் ஒரு அற நெறியில் வாழ்பவன் என்று சொல்லிக் கொள்ளவோ அல்ல. ஒரு உதாரணம் என்று மட்டும் இதைப் பார்க்க வேண்டும். 


என்னுடைய நெருங்கிய நண்பர் புதிது புதிதாக கார் வாங்குவதில் மிகுந்த நாட்டம் உள்ளவர். சந்தையில் எந்த புதிய கார் வந்தாலும், அதை வாங்க வேண்டும். அதை ஓட்ட வேண்டும் என்பதில் அவருக்கு தீராத காதல். எந்த கார் வாங்கினாலும், ஓரிரண்டு ஆண்டுகள் வைத்து இருப்பார். பின் விற்று விட்டு மேலும் கொஞ்சம் பணம் போட்டு இன்னொரு கார் வாங்குவார். 


தவறு இல்லை. அவர் ஆசை அப்படி. 


ஒருமுறை என்னிடம் வந்து புதிதாக வந்திருக்கும் ஒரு கார் வாங்க கொஞ்சம் பணம் வேண்டும், எப்படி பணத்தை புரட்டுவது என்று என்னிடம் கேட்டார். 


நானும் அவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். 


எனக்கு இருக்கும் அதிகாரத்தில் அவருக்கு ஒரு loan sanction பண்ணி இருக்க முடியும். என்னிடம் இருக்கும் பணத்தை அவருக்கு கொடுத்து இருக்க முடியும். அல்லது வேறு எங்கு பணம் பெற முடியும் என்று வழி காட்டி இருக்க முடியும். 


நான் அவரிடம் சொன்னேன் "இப்படி அடிக்கடி கார் வாங்குவது உன் பொருளாதார நிலைக்கு ஏற்றது அல்ல. உனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அவர்களின் படிப்பு, எதிர்காலம் இருக்கிறது. இருந்கின்ற கொஞ்சம் பணத்தை ஒரு வீட்டில் முதலீடு செய். மீதி பணத்துக்கு ஒரு வீட்டு loan வாங்கு. கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிய கடனை அடைத்து விடலாம். உனக்கு ஒரு வீடு இருக்கும்" என்று சொல்லி, அவர் ஒரு வீடு வாங்க வழி சொல்லிக் கொடுத்தேன்.


அவரும், என் பேச்சைக் கேட்டு வீடு வாங்கினார். அவரின் நல்ல காலம், ஒரு நல்ல வீடு வந்தது. வீடு வாங்கினார். 


அவரின் நல்ல நேரம், சிறிது காலத்தில் அவரின் சொந்த ஊரில் எதா நிலம் விற்று கொஞ்சம் பணம் வந்தது. அலுவலகத்தில் ஊக்கத் தொகை (போனஸ்) வந்தது. எல்லாவற்றையும் சேர்த்து கடனை விரைந்து அடைக்கத் தொடங்கினார். வட்டி செலவு குறைந்தது. 


எப்போது பார்த்தாலும் சொல்லுவார் "இந்த வீடு உன்னாலதான் வாங்கினேன்..நல்ல நேரத்தில் சரியான அறிவுரை கூறினாய்" என்று. 


நான் பணம் தந்து உதவி இருக்கலாம். நான் தராவிட்டால் அவர் வேறு யாரிடமாவது அந்தப் பணத்தை பெற்று இருக்கலாம். 


இன்று அந்த வீட்டின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. அவரின் பிள்ளைகள் அந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு நல்ல பள்ளியில் படித்து இன்று மேல் படிப்புகாக அயல் நாடு சென்று இருக்கிறார்கள். கார் வாங்குவதில் பணத்தை விரயம் செய்து கொண்டிருந்தால் இவை எல்லாம் நடந்து இருக்குமா என்பது சந்தேகமே.


இன்சொல் என்பது பணத்தை விட மிக மிக உயர்ந்தது. 


ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள். உங்களை வாழ்வில் உயரச் செய்தது பணமா அல்லது உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் சொன்ன சொற்களா என்று. சந்தேகம் இல்லாமல் நல்லவர்களின் சொற்களாகத்தான் இருக்கும். இன்னும் சொல்லப் போனால், "அடா அவர் அன்று அப்படி சொன்னார். கேட்காமல் விட்டு விட்டேனே. அவர் சொன்ன படி கேட்டு இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்" என்று கூட நீங்கள் நினைக்கலாம். 


இன் சொற்கள் மிகுந்த பலம் வாய்ந்தவை. 


இன்சொல் சொல்பவர்களின் தொடர்பு வேண்டும். 


நாமும் இன்சொல் சொல்பவர்களாக மாற வேண்டும். 


பெறுவோம். தருவோம். 


Wednesday, January 12, 2022

திருக்குறள் - இன்சொல் - வாய்ச் சொல்

திருக்குறள் - இன்சொல் - வாய்ச் சொல் 


நமக்கு வந்த சிக்கல்கள் பெரும்பாலானவற்றிற்கு காரணம் நமது பேச்சாக இருக்கும். தவறாக பேசி விடுவது, கோபத்தில் எதாவது பேசி விடுவது, தகாத வார்த்தைகள், பொய், திரித்து கூறுவது, புறம் சொல்லுவது, வெட்டிப் பேச்சு என்று அனைத்து சிக்கல்களுக்கும் மூல காரணம் நாம் சொல்லிய சொலாக இருக்கும். அது மட்டும் அல்ல பேசத் தெரியாமல் பேசி நமக்கு வரவேண்டிய அருமையான வாய்ப்புகளை நாமே கெடுத்து கொண்டிருப்போம். 


அதிகாரிகளிடம், கணவன்/மனைவியிடம், பிள்ளைகளிடம், சில சமயம் நண்பர்கள் மத்தியில், தவறான சொற் பிரயோகங்கள் நம்மை சிக்கலில் ஆழ்த்தி இருக்கும். 


இனிமையாக பேசத் தெரிந்து கொண்டால், வாழ்க்கை மிக இனிமையாக இருக்கும். முன்னேற்றம் வரும். வாய்புகள் நம்மைத் தேடி வரும். உறவுகள் பலப்படும். 


இனிமையாக பேசுவது என்றால் என்ன? எல்லோரிடமும் பல்லைக் காண்பிப்பதா? எல்லோர் சொல்ல்வதற்கும் ஆமாம் சாமி போடுவதா? உண்மையை மறைத்து பூசி மெழுகுவதா?


இல்லை. 


இனிமையாக பேசுவது என்பது ஒரு கலை. 


அதை வள்ளுவர் கற்றுத் தருகிறார். 


மிக ஆழ்ந்து படிக்க வேண்டிய, வாழ்வில் கடை பிடிக் வேண்டிய அதிகாரம். 



பாடல் 


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_12.html

(Please click the above link to continue reading)


இன்சொலால் = இன்சொல் + ஆல் = இனிய சொல் என்பது. (ஆல் என்பது அசை நிலை) 


ஈரம்   = அன்பு  


அளைஇப் = கலந்து 


படிறிலவாம் = வஞ்சனை இல்லாத 


செம்பொருள் = செம்மையான பொருளைக் 


கண்டார்வாய்ச் சொல் = கண்டவர்கள் வாயில் இருந்து வரும் சொற்கள் 


மிக ஆழமான குறள். 


ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


முதலாவது, நாம் சொல்கின்ற சொற்களில் அன்பு இருக்க வேண்டும். ஒருவர் மேல் அன்பு இல்லாமல் பேசக் கூடாது. அவர் மேல் அன்பு இருந்தாலும், சொல்லில் அன்பு இருக்க வேண்டும். அன்போடு பேச வேண்டும். 


நம்மிடம் உள்ள குறை என்ன என்றால், அன்பு இருக்கும், ஆனால் அது சொல்லில் வராது. உதாரணமாக, பிள்ளை மேல் அளவு கடந்த அன்பு இருக்கும். ஆனால், "எருமை, படிக்காம ஊர் சுத்திக் கொண்டு இருந்தால் நீ மாடு மேய்க்கத் தான் போற" என்று சொல்லுவோம். மனதில் அன்பு இருக்கும். சொல்லில் இல்லை. எனவே, அது இனிய சொல் இல்லை. 


வீட்டில் பெரும்பாலான ஆண்கள் சொல்வது, "நான் யாருக்காக உழைக்கிறேன். இந்த குடும்பதுக்காகத்தானே உழைக்கிறேன். ஏன் என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்" என்பது. அவர்கள் நினைப்பது, கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தால் அது அன்பின் வெளிப்பாடு என்பது. 


போதாது. அன்பு என்பது சொல்லில் வர வேண்டும். மனைவிடம், குழந்தையிடம் அன்பாக பேச வேண்டும். மனைவிக்கும் தான். கணவனிடம் அன்பாக பேசி பழக வேண்டும். 


இரண்டாவது, படிறு இலவாம். சொல்லில் வஞ்சனை இருக்கக் கூடாது. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசக் கூடாது. அதற்காக மனதில் உள்ள வெறுப்பை சொல்லில் காட்டலாமா என்றால் அதுவும் கூடாது. மனதில் அன்பு இருக்க வேண்டும். அது சொல்லில் வெளிப்பட வேண்டும். 


"செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்". இது மிக முக்கியம். எது செம்மையான பொருள்? உயர்ந்த பொருள்கள். இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் பொருள்கள். அதை எப்படி அறிந்து கொள்வது. பரிமேலழகர் உரை செய்யும் போது கூறுவார் "அறநெறி கண் நிற்பவர்களுக்கு மனதில் தோன்றுவது எல்லாமே செம்பொருள் " என்று.  அதாவது, எப்போதும் அறநெறியை கடைப் பிடித்தால், செம்பொருள் காண முடியும். அப்படி செம்பொருளை கண்டவர்கள் வாயில் இருந்து வரும் சொல் இனிய சொல். 


எனவே, நாம் இனிய சொல்லை பேச வேண்டும் என்றால் முதலில் அறநெறியில் நாம் நிற்க வேண்டும். செய்வது எல்லாம் அயோக்கியத்தனம் என்றால் இனிய சொல் எப்படி வரும். அப்படியே வந்தாலும், அதில் வஞ்சனை கலந்து இருக்கும். அற நெறியில் நின்றால் வஞ்சன தானே போய் விடும். பின், சொல்லில் அன்பு கலந்தால் போதும். 


அது "வாய்ச் சொல்". சொல் என்றாலே வாயில் இருந்து வருவது தானே. மூக்கில் இருந்தா வரும். "செம்பொருள் கண்டார் சொல்" என்று சொல்லி இருக்கலாமே?


நமது வாயில் இனிய சொல்லும் வரலாம், இனிமை இல்லாத சொல்லும் வரலாம். ஆனால், செம்பொருள் கண்டவர்கள் வாயில் இருந்து தீச் சொல் வராது என்பதால் "வாய்ச் சொல்" என்று கூறினார் என்று பரிமேலழகர் உரை செய்வார். 


"தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு."


இனிய சொல் என்றால் என்பதற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர். 


அன்பு கலந்து 

வஞ்சனை இல்லாமல் 

அறநெறி நிற்பவர்கள் 


வாய்ச் சொல்லே இனிய சொல் என்று. 


அப்படி என்றால் நாம் பேசுவது எவ்வளவு இனிமை என்று நாம் அறிந்து கொள்ளலாம். 


இனிய சொல் பேசுவது என்பது ஒரு தவம். 


பயில வேண்டும். 



Monday, January 10, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - தளராது இருப்பர்

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - தளராது இருப்பர் 


ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பார்ப்போம்.


நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இதுவரை என்ன செய்தோம்?


அதே சாப்பாடு, அதே தூக்கம், அதே வேலை, அதே அரட்டை, அதே உறவுகள், அதே உடை...


அங்கொன்றும் இங்கொன்றும் ஏதோ புதிதாக வரலாம்...நாளடைவில் அதுவும் பழசாகி விடும். இதில் ஒரு அலுப்பு வரவில்லை நமக்கு. 


ஒரு தளர்ச்சி வரவில்லை. 


ஏன் இதை திருப்பி திருப்பி செய்து கொண்டிருக்கிறோம்? என்ன சாதிக்கப் போகிறோம்? என்ன கிடைத்தது இதுவரை. 


நமக்கு ஒவ்வொரு நாளும் ஏதோ புதிதாக இருப்பது போல இருக்கிறது. கொஞ்சம் ஆழமாக யோசித்தால் தெரியும், ஒரு புதுமையும் இல்லை என்று. நாம் யோசிப்பது இல்லை. 


மறந்து விடுகிறோம். 


மணிவாசகர் இன்னும் ஆழமாக யோசிக்கிறார். நேற்று, போன மாதம், போன வருடம் என்று இல்லாமல், இப்படி பிறந்து, வளர்ந்து, இறந்து, பிறந்து என்று போய்க் கொண்டே இருக்கிறதே, இதற்கு ஒரு முடிவு, எல்லை இல்லையா என்று தளர்கிறார். 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்பார். 


"தளர்ந்தேன் என்னை தாங்கிக் கொள்ளேன்" என்று கெஞ்சுவார். என்னால் முடியவில்லை, என்னைக் தூக்கிக் கொள் என்று குழந்தை தாயயைப் பார்த்து கெஞ்சுவதைப் போல, கெஞ்சுவார். 


சரி, இதை விட்டு விட்டு என்ன செய்வது? எப்படி செய்வது? நமக்குத் தெரிந்தது எல்லாம் இந்த சாப்பாடு, தூக்கம், அரட்டை, டிவி, கை பேசி, இவ்வளவு தான். வேறு என்ன செய்வது?


அதையும் அவரே சொல்கிறார் ....


"புலன்கள் பின்னால் போவதை விடுங்கள். இறைவன் திருவடியை நினையுங்கள். யார் என்ன சொன்னாலும், சிரித்தாலும், அதை எல்லாம் பொருட்படுத்தாமல் நமக்கு உதவி செய்ய இறைவன் காத்துக் கிடக்கிறான். அவன் திருவடியை நினைந்தால் நம் தளர்ச்சி எல்லாம் நீங்கும்" என்கிறார். 


இறைவன் நமக்கு உதவி செய்ய வருகிறானாம். அப்போது மற்றவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து கேலி செய்கிறார்களாம். "அவனுக்கு போயா உதவி செய்யப் போகிறாய்...அவன் ஒண்ணுக்கும் உதவாதவன், அவனுக்கு உதவி செய்வதும் ஒண்ணு தான் உதவி செய்யாமல் இருப்பதும் ஒண்ணு தான்..." என்று இறைவனை கேலி செய்வார்களாம். இருந்தும், அதை எல்லாம் பெரிதாக நினைக்காமல், அவன் நமக்கு உதவி செய்ய வருகிறான் என்கிறார். 


பாடல் 



புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்

மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்

நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட

தகவே உடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_10.html


(click the above link to continue reading)


புகவே வேண்டா = நுழைய வேண்டாம் 


புலன்களில்நீர் = நீங்கள் புலன்கள் செல்லும் வழியில் 


புயங்கப் பெருமான் = பாம்பை அணிந்த பெருமாள் 


பூங்கழல்கள் = திருவடிகளை 


மிகவே நினைமின் = எப்போதும் நினையுங்கள் 


மிக்கவெல்லாம் வேண்டா = மத்தது எல்லாம் வேண்டாம் 


போக விடுமின்கள் = போகட்டும், விட்டு விடுங்கள் 


நகவே = பிறர் நகை செய்ய, கேலி செய்ய 


ஞாலத் துள்புகுந்து = தன் இருப்பிடம் விட்டு, இந்த உலகத்துள் வந்து 


நாயே அனைய= நாய் போன்ற 


நமையாண்ட = நம்மை, ஆட்கொண்ட 


தகவே உடையான் = பெருமை உடையவன் 


தனைச்சாரத் = அவனை சார்ந்து இருக்க 


தளரா திருப்பார் = தளர்ச்சி இல்லாமல் இருப்பார்கள் 


தாந்தாமே. = அவரவர்கள் 


ஆழ்ந்து யோசித்தால் நாம் செய்யும் அர்த்தமற்ற காரியங்கள் புரியும். 


என்னதான் சொன்னாலும், "என் பிள்ளையை நான் எப்படி விட முடியும்?  என் கணவனை/மனைவியை/பெற்றோரை" என்று ஏதோ ஒன்றில் பிடிப்பு அதிகம் இருக்கும். அதை விடுவது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. 


மணிவாசகர் சொல்கிறார் 


"மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்"


இறைவனைத் தவிர வேறு எதுவும் வேண்டாம். அவை எல்லாம் உங்களை விட்டுப் போக துடித்துக் கொண்டு இருக்கின்றன. நீங்கள் தான் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விட்டால் அவை போய் விடும். அவை உங்களை பிடித்துக் கொண்டு இருக்கவில்லை. நீங்கள் தான் அவற்றை பிடித்துக் கொண்டு இருகிறீர்கள். 


போக விடுங்கள். அவை போய் விடும். 


அது உங்களுக்கும் நல்லது, அவற்றிற்கும் நல்லது. 


சிந்திப்போம். 




Saturday, January 8, 2022

திருக்குறள் - மோப்பக் குழையும் அனிச்சம்

 திருக்குறள் - மோப்பக் குழையும் அனிச்சம் 


அனிச்சம் மலர் என்று ஒரு மலர் இருந்ததாம். அந்த மலரை கையில் எடுத்து முகர்ந்து பார்த்தால் வாடிவிடுமாம். அவ்வளவு மென்மையான மலர். மூச்சு சூடு பட்டாலே வாடி விடும் மென்மை கொண்டது. 


வள்ளுவர் சொல்கிறார் 


"விருந்தினர்கள் அனிச்சம் மலரினும் மென்மையானவர்கள். அனிச்ச மலராவாது முகர்ந்தால் தான் வாடும். விருந்தினர்களோ, முகம் மாறு பட்டு நோக்கினாலே வாடி விடுவார்கள்" என்கிறார்.


பாடல் 


மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_8.html


(please click the above link to continue reading)


மோப்பக் =முகர்ந்து பார்த்தால் 


குழையும் = வாடும் 


அனிச்சம் = அனிச்சம் மலர் 


முகந்திரிந்து = முகம் மாறுபட்டு 


நோக்கக் = பார்த்தால் 


குழையும் விருந்து. = விருந்தினர் வாடி விடுவர் 


இதற்கு பரிமேலழகர் உரை மெய் சிலிர்க்க வைக்கக் கூடியது. 


இந்தக் குறளுக்கு இதற்கு மேல் என்ன இருக்க முடியும் என்று நாம் நினைக்க முடியும். 


பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். 


"அனிச்சம் ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது."


அது அவர் செய்த உரை. சற்று இறுக்கமான உரை. 


பிரித்துப் படிப்போம். 


"அனிச்சம் ஆகுபெயர்": ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது ஆகு பெயர். அனிச்சம் மலரின் மென்மையை அனிச்சம் என்று கூறினார். எனவே அது ஆகு பெயர். அனிச்சம் என்பது மென்மைக்கு ஆகி வந்தது. 


விருந்தினரை எப்படி உபசரிக்க வேண்டும் என்று கூறுகிறார். 


முதலில் அவர்கள் தூரத்தில் வரும் போதே இன் முகம் காட்ட வேண்டும். எனவே தான் "முகம் திரிந்து நோக்க" என்றார். விருந்தினரைக் கண்டவுடன் நம் முகம் மலர வேண்டும். அவர்கள் வருவது நமக்கு மகிழ்ச்சி என்று முகத்தில் காட்ட வேண்டும். இல்லை என்றால், தூரத்தில் இருந்து அப்படியே போய் விடுவார்கள். 


அதைத்தான் 


"சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும்" என்றார். சேய்மை என்றால் தூரம் என்று பொருள். அண்மைக்கு எதிர்பதம். 


அடுத்தது, விருந்தினர் அருகில் வருகிறார். நாம் பேசுவது, சொல்வது அவருக்கு கேட்கும். அப்போது இன்சொல் சொல்லி வரவேற்க வேண்டும். 


அதைத்தான் 


"அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், "


நண்ணுதல் என்றால் அருகில் வருதல். அருகில் வரும்போது இன் சொல் கூற வேண்டும். 


சரி, அருகில் வந்து விட்டார். வீட்டுக்குள் வந்து விட்டார். அப்புறம் என்ன செய்வது?


அவர்கள் மனம் மகிழும்படி செயல்கள் செய்ய வேண்டும். 


அதைத்தான் 


"அதுபற்றி உடன்பட்ட வழி நன்று ஆற்றலும்": நன்றாற்றல் என்பது ஒரு செயல்.நல்ல செயல். 


இன்முகம் காட்டி, இனிய சொல் கூறி, இனியவை செய்து விருந்தினரை உபசரிக்க  வேண்டும். 


இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளில் இன்முகம் காட்டுவது பற்றி கூறியிருக்கிறார். 


அப்படி என்றால் அடுத்த அதிகாரம் என்னவாக இருக்கும்?


"இனியவை கூறல்"


எப்படி அதிகாரம் ஒன்றில் இருந்து ஒன்று தொடர்ந்து வருகிறது. ஆச்சரியமான விடயம். இப்படி கூட ஒரு மனிதனால் யோசித்து எழுத முடியுமா என்று. 


பரிமேலழகர் அதை எடுத்துச் சொல்கிறார் 


"விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது."


முதற்கண் இன்முகம் கூறப்பட்டது என்பதால் இனி இன்சொல்லும், இனிய செயலும் வரப் போகிறது என்று நாம் அறிந்து கொள்ளாலாம். 


இதற்கு மேலும் இதை தெளிவாக கூற முடியுமா? இதற்கு வெளியில் விருந்தோம்பல் பற்றி என்ன இருக்க முடியும்? 


வள்ளுவம் என்ற பிரமாண்டம் நம்மை பிரமிக்க வைக்கிறது. 


இதை எல்லாம் படிக்க என்ன புண்ணியம் செய்தோமோ....






Sunday, January 2, 2022

திருக்குறள் - உடைமையுள் இன்மை

திருக்குறள் - உடைமையுள் இன்மை 


சிலர் தாங்கள் செய்யாதவற்றை, செய்ய முடியாதவற்றை "அதில் எல்லாம் ஒன்றும் இல்லை, அதில் என்ன இருக்கிறது, அது எல்லாம் வெட்டி வேலை" என்று அதை இகழ்ந்து அதை செய்யாமல் இருபதற்கு காரணம் சொல்லி விடுவார்கள். 


தாங்கள் செய்யாதது மட்டும் அல்ல, செய்பவர்களையும் இகழ்வார்கள். 


உதாரணமாக, எனக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை என்றால் "...ஆங்கிலம் என்ன பெரிய மொழியா? ஆங்கிலம் படித்தவன் எல்லாம் மேதையா? தமிழில் இல்லாதது ஆங்கிலத்தில் என்ன இருக்கிறது? ஆங்கிலம் ஒரு சரியான இலக்கணம் இல்லாத மொழி" என்று அதைப் பற்றி ஏளனம் செய்து விட்டு ஏதோ நான் ஒரு பெரிய மேதாவி போல் காட்டிக் கொள்வது. 


விருந்தோம்பல் பற்றி கூறினால், "விருந்தோம்பல் எல்லாம் வெட்டி வேலை, காசுக்கு பிடித்த கிரயம், இந்த விருந்தாளிகளால் ஒரு பைசாவுக்கு புண்ணியம் இல்லை, விருந்தோம்பலில் நேரமும் பணமும் தான் விரயம் ஆகிறது "  என்று தான் செய்யாமல் இருப்பதற்கு ஞாயம் கற்பிப்பார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், "...எவ்வளவு செல்வம் இருந்தாலும் அது இல்லாத மாதிரிதான். எப்போது என்றால் அது விருந்தோம்பலை செய்யாமல் இருக்கும் மடத்தனத்தால். அந்த மடத்தனம் அறிவுள்ளவர்களிடம் இருக்காது" என்கிறார். 


பாடல் 


உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா

மடமை மடவார்கண் உண்டு.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post.html


(please click the above link to continue reading)


உடைமையுள் = செல்வம் உடமையில் 


இன்மை  = இல்லாமல் இருந்தல் 


விருந்தோம்பல் ஓம்பா மடமை  = விருந்தோம்பலை செய்யாத மடத்தனம் 


மடவார்கண் உண்டு. = அது மடையர்களிடம் இருக்கும் என்கிறார்.


"உடைமையுள் இன்மை" என்றால் என்ன? 


இருக்கு, ஆனால் இல்லை. செல்வம் இருந்தால் அதை அனுபவிக்கத் தெரிய வேண்டும். அதன் பயனை நுகரத் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் அது இருந்து என்ன பலன். செல்வம் இல்லாதவனும் அனுபவிப்பது இல்லை, இருப்பவனும் அனுபவிப்பது இல்லை என்றால் இருவருக்கும் என்ன வித்தியாசம்? 


அதற்காக இருக்கும் பணத்தை எல்லாம் நித்தம் ஒரு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், பார்ட்டி என்று விரயம் செய்யத் தேவை இல்லை. விருந்தோம்பல் என்பது நம் செல்வதை வெளிச்சம் போட்டு காண்பிக்க அல்ல. நம் அன்பை வெளிப்படுத்த.