Saturday, September 26, 2020

திருக்குறள் - இன்சொல்

திருக்குறள் - இன்சொல் 


எப்படி எல்லாம் பேசக் கூடாது என்று கேட்டால் பெரிய பட்டியல் போடலாம். 

பொய் சொல்லக் கூடாது, புறம் சொல்லக் கூடாது, பயனில சொல்லக் கூடாது, என்று நீண்ட பட்டியல் தரலாம்.

எப்படி பேசுவது என்று கேட்டால் என்ன சொல்லுவது?

இனிமையாக பேச வேண்டும். 

சரி, இனிமையாக பேசுவது என்றால் என்ன? 

யாரைப் பார்த்தாலும், "அடடா, உங்களைப் போல உண்டா" என்று அவர்களை புகழ்ந்து பேச வேண்டுமா? 

இல்லை. 

இன்சொல் என்பதற்கு வள்ளுவர் இலக்கணம் வகுத்துத் தருகிறார். 

பாடல் 


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

பொருள் 

(pl click the following link to continue reading)


இன்சொலால் = இன் சொல் ஆல்  = ஆல் என்பது அசைச் சொல். அதை விட்டு விடுவோம். மீதி உள்ளது இன் சொல். 

ஈரம் அளைஇப்  = அன்பு கலந்து 

படிறிலவாம் = உண்மையான சொற்கள் 

செம்பொருள் = அறத்தினை 

கண்டார் = எ அறிந்தவர் 

வாய்ச் சொல் = வாயில் இருந்து வரும் சொற்கள். 

மேலே ஆராய்வோம்.

முதலில், பேசுகின்ற பேச்சில் அன்பு இருக்க வேண்டும். அன்பு கலந்து பேச வேண்டும். அன்போடு பேச வேண்டும். யோசித்துப் பார்ப்போம் , நமது பேச்சில்  எவ்வளவு அன்பு இருக்கிறது என்று. கோபம் இருக்கும், வெறுப்பு இருக்கும், சந்தேகம் இருக்கும், அதிகாரம் இருக்கும், கிண்டல், நக்கல், நையாண்டி  எல்லாம் இருக்கும்.  அன்பு இருக்குமா ?  அன்பு இல்லாத பேச்சு இன் சொல் அல்ல. 

இரண்டாவது, உண்மை. பொய் கலவாமல் பேச வேண்டும்.  பேசுகிறோமா?  உண்மை பேச முடியாவிட்டால், பேசாமல் இருந்து விட வேண்டும்.  எவ்வளவுதான் அன்பாக பேசினாலும், அதில் பொய் இருந்தால், அது இனிய சொல் அல்ல.  சிலர்  மற்றவர்களை வானளாவ புகழ்வார்கள். மனதுக்குள் வைது கொண்டே. அவர்களின் புகழ்ச்சியில் உண்மை இல்லை. 

மூன்றாவது, அறத்தினை உணர்ந்து பேச வேண்டும். அறம் என்றால் என்ன என்றே தெரியாவிட்டால்  எப்படி பேசுவது? பேசாமல் இருப்பது நலம். அறம் அல்லாதவற்றை  பேசுவது இனிய சொல் அல்ல. நல்லவற்றை, பயனுள்ளவற்றை மட்டும்தான் பேச வேண்டும். 

வாய்ச் சொல் என்றார். சொல் என்றாலே வாயில் இருந்து வருவது தானே. அது என்ன  வாய்ச் சொல்? மூக்குச் சொல், காது சொல் என்று ஏதாவது இருக்கிறதா? இல்லையே. பின் ஏன், வாய்ச் சொல்?

வாயின் மூலமாக ஒன்றை மட்டுமே பேச முடியும் என்றால் ,அது பற்றிச் சொல்ல வேண்டாம். ஆனால், நம் வாய் இனியவற்றையும் பேசும், இன்னாததையும் பேசும்.  எனவே, இனியவற்றை மட்டும் பேசும் சொல் என்பதால், வாய்ச் சொல் என்றார். 

அறத்தின் தன்மை அறிந்து, அன்போடு உண்மை பேச வேண்டும். 

அது தான் இனிய சொல். 

நமது சொற்களில் எத்தனை இனிய சொல்லாக இருக்கும்? 

பழக வேண்டும். 

Friday, September 25, 2020

திருக்குறள் - செய்க பொருளை

திருக்குறள் - செய்க பொருளை 


பகை யாருக்குத்தான் இல்லை?

இராமனுக்கு பகை இலங்கையில் இருந்தது. இராமன் பகையைத் தேடிப் போகவில்லை. அதுவாக வந்து சேர்ந்தது. 

காந்திக்குப் பகை உள்ளூரிலேயே இருந்து வந்தது. 

வள்ளலாருக்கு எதிரிகள் இருந்தார்கள். 

அவர்களுக்கே அப்படி என்றால், நம் பாடு எம்மாத்திரம். 

பகைவர்கள் என்றால் ஏதோ நம் மீது சண்டை போட வருபவர்கள் அல்ல. 

நம் மீது பொறாமை கொண்டவர்கள், நமது முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பவர்கள். தெரிந்தே நமக்கு தவறான வழி காட்டுபவர்கள், நம் தோல்வி கண்டு நம்மை ஏளனம் செய்பவர்கள், இவர்கள் எல்லாம் நமக்கு பகைதான். 

நம்மை விட ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தர்வகள் என்ற கர்வம் கொண்டு நம்மை தாழ்வாக நினைப்பவர்கள். 

இது ஒரு நீண்ட பட்டியல். 

பகைவர்களை எப்படி வெல்வது? அவர்களோடு சண்டை போடுவதா? பதிலுக்கு பொறாமை படுவதா? 

இல்லை. 

வள்ளுவர் சொல்கிறார். 

"நிறைய பொருள் சேர்.  பகைவர்களின் செருக்கை அறுக்க அது போன்ற கூரிய ஆயுதம் வெறும் எதுவும் இல்லை என்று"

பாடல் 

*செய்க பொருளைச் செறுநர் செருக்குஅறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்*

பொருள் 

click the following link to continue reading 





செய்க பொருளைச் = பொருளைச் செய்க 

செறுநர் = பகைவர்களின் 

செருக்கு அறுக்கும் = இறுமாப்பை, மமதையை, அறுக்கும் 

எஃகு = இரும்பு, ஆயுதம் 

அதனின் கூரியது இல் = அதைவிட கூர்மையானது எதுவும் இல்லை 

எப்போதாவது தான், வள்ளுவர் கட்டளையாகச் சொல்வார். 

அப்படி சொன்ன குறள்களில் இதுவும் ஒன்று. 

"செய்க பொருளை" என்று கட்டளையாகக் கூறுகிறார். 

பெரிய செல்வம் உடையவனாக இருந்தால், பகைவர்களின் செருக்கு தானே அடங்கும். 

ஏன்?

பெரிய செல்வம் இருந்தால், பெரிய இடங்களில் இருப்பவர் நட்பு கிடைக்கும். அப்படிப்பட்ட நம்மை , நம் பகைவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். 

கத்தி இருக்கிறதே, அது பொருள்களை வெட்டும். குணத்தை வெட்டுமா ?  எதிரியின் பகை உணர்ச்சியை வெட்ட  எந்தக் கத்தியைக் கொண்டு போவது?

நம்மிடம் நிறைய பொருள் இருந்தால், அது எதிராளியின் செருக்கை , ஆணவத்தை அறுக்கும் என்பதால், செல்வத்தை கூரிய கத்தி என்றார் வள்ளுவர். 

செருக்கு என்ற குணத்தை அறுப்பதால் அது கூரிய கத்தி. 

எதிராளியின் செருக்கை அடக்க வேண்டும் என்றால் நிறைய படி, பலப் பல பட்டங்கள் வாங்கு, படை திரட்டு, என்றெல்லாம் சொல்லவில்லை. 

செல்வத்தைச் சேர் .  பகை ஒடுங்கும் என்கிறார். 

ஏதோ நம் அற நூல்கள் எல்லாம் நம்மைச் சாமியாராக போகச் சொல்கின்றன என்ற ஒரு  குற்றச் சாட்டு உண்டு. 

அது தவறு. 

இந்தக் குறளைப் பாருங்கள்.

வள்ளுவர் என்ன சொல்கிறார் " பொருளைச் சேருங்கள்" என்கிறார். 

செல்வத்தைச் சேருங்கள். பகை தானே ஒடுங்கும். 

இதுக்கு மேல் இவ்வளவு பெரிய கருத்தை எளிமையாக, சுருக்கமாக யாரால் சொல்ல முடியும்?

யார் யாருக்கோ நன்றி சொல்கிறோம். 

ஒரு நாளேனும் வள்ளுவருக்கு நன்றி சொன்னதுண்டா?  



Thursday, September 24, 2020

திருக்குறள் - மையாத்தி நெஞ்சே

 திருக்குறள் - மையாத்தி நெஞ்சே 


அவளைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. பார்க்க வேண்டும் என்ற ஆவல் நிறைய இருக்கிறது. ஆனால், உடனே பார்க்க முடியாது. 

என்ன செய்வது?

அவள் கண்களை மட்டுமாவது பார்க்க முடியுமா என்று அவன் தவிக்கிறான். 

சரி, அவள் கண்களை பார்க்க முடியாவிட்டால் என்ன, இந்த மலர்களை பார்த்தால் அவள் கண் போலத்தான் அழகாக இருக்கும். அதைப் பார்த்தால் போதாதா என்று ஒரு சோலையில் சென்று அங்குள்ள மலர்களை பார்க்கிறான். 
அப்புறம்தான் தெரிகிறது, அந்த மலர்களும் அவன் கண்ணும் ஒன்றல்ல என்று. 

அழகு என்று பார்த்தால் ஒன்று தான். 

ஆனால், அவள் கண் சொல்லும் செய்தி அவனுக்கு மட்டும் தான் தெரியும். 

இந்த பூவை எல்லோரும் பார்ப்பார்கள். 

என் காதலியின் கண்களை எல்லோரும் பார்த்தாலும், அதில் உள்ள காதலை, அன்பை நான் மட்டும் தான் அறிவேன். 

என்னைக் காணும் போது அவள் கண்கள் மாறும். அது சொல்லும் செய்தி மாறும். மற்றவர்கள் பார்க்கும் போது அது சாதாரணமாக இருக்கும். 

எனவே, என் நெஞ்சே, இந்த மலர்கள் என் காதலியின் கண்களைப் போல இருக்கின்றன என்று   நினைத்து மயங்காதே. அது வேறு, இது வேறு என்று காதலியின்  கண்களை, அதில் மலரும் காதலை சிறப்பித்துக் கூறுகிறான் காதலன். 

பாடல் 

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று

பொருள் 

(pl click to continue reading)


மலர்காணின் = மலர்களைப் பார்த்து 

மையாத்தி = மயங்காதே 

நெஞ்சே = நெஞ்சே 

இவள்கண் = இவளுடைய கண் 

பலர்காணும்  = பல பேர் காணும் 

பூவொக்கும் என்று = பூவைப் போல இருக்கிறது என்று 

நலம் புனைந்து உரைத்தல் என்ற அதிகாரத்தில் இரண்டாவது குறள் 


Wednesday, September 23, 2020

கம்ப இராமாயணம் - கோட்படாப் பதமே, ஐய குரங்கு உருக் கொண்டது

 கம்ப இராமாயணம் - கோட்படாப் பதமே, ஐய குரங்கு உருக் கொண்டது 


எது உண்மை ? எது பரம்பொருள்? எது முக்தி? எது வீடு பேறு ? என்ற கேள்விகளுக்கு எல்லாம், படித்து விடை கண்டு விடலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.   வேதங்களும் அறிய முடியாத விஷயங்கள் இருக்கிறது. 
உண்மைத் தத்துவங்கள் அறிவுக்குள் அடங்குமா? 

எல்லா பொருள்களும் இராஜஸ, தாமச, சாத்வீக குண சுழற்சிக்கு உட்பட்டவைதான். இவற்றை விட்டு மேலே போக முடியுமா? இந்த குணங்களின் ஆக்ரமிப்பு இல்லாமல் அவற்றை தாண்டிப் போக முடியுமா?

இராமனும், இலக்குவனும் காட்டில் போய்க் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை நோக்கி அனுமன் வருகிறான். 

ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அப்போது, அனுமன் தன்னுடைய விஸ்வரூபத்தை அவர்களுக்கு காண்பிக்கிறான். 

அதைக் கண்ட இராமன்  தம்பி இலக்குவனிடம் சொல்லுவான், 

"இலக்குவா, மூன்று குணங்களைத் தாண்டி, ஞான ஒளி பெற்று சுடர் விடும் அந்த ஒன்று, அநாதியான வேதங்களும் அறிய முடியாதது, எந்த தத்துவ ஞானத்தாலும் அறிய முடியாது...அப்பேற்பட்ட ஒன்று இங்கு குரங்கு வடிவில் வந்து நிற்கிறது போலும் " என்றான். 

அனுமனை,  தத்துவமும், ஞானம், வேதமும் அறிய முடியாத ஒன்று இராமன் சொல்கிறான். 

பாடல் 


தாள்படாக்கமலம் அன்ன தடங்
     கணான், தம்பிக்கு, 'அம்மா!
கீழ்ப் படாநின்ற நீக்கி, கிளர்
     படாது ஆகி, என்றும்
நாட்படா மறைகளாலும், நவை
     படா ஞானத்தாலும்,
கோட்படாப் பதமே, ஐய!
     குரக்கு உருக்கொண்டது' என்றான்.

பொருள் 

தாள் படாக்கமலம்  =  தண்டு இல்லாத கமலம் 

அன்ன = போல 

தடங் கணான் = பெரிய கண்களை உடைய இராமன் 

தம்பிக்கு = தம்பி இலக்குவனிடம் 

 'அம்மா! = விளிச் சொல் 

கீழ்ப் படாநின்ற நீக்கி = சாத்வீகம், இராஜசம் , தாமசம் என்று முக்குணங்களை நீக்கி 

கிளர் படாது ஆகி = கலப்படம் அற்று 

என்றும் = எப்போதும் 

நாட்படா மறைகளாலும், = தோன்றிய நாள் இது என்று அறியாத வேதங்களாலும் 

நவை படா ஞானத்தாலும், = குற்றம் அற்ற ஞானத்தாலும் 

கோட்படாப் பதமே = அறிய முடியாத நிலை 

, ஐய! = இலக்குவா 

 குரக்கு உருக்கொண்டது' என்றான். = அந்த ஒன்று குரங்கு உருவம் கொண்டு வந்து இருக்கிறது என்றான் 



Tuesday, September 22, 2020

நாலடியார் - எதைக் கண்டாலும் பயம் எனக்கு

நாலடியார் - எதைக் கண்டாலும் பயம் எனக்கு 


நல்ல குடும்பத்தில் பிறந்திருப்பது அச்சம் தரும் ஒன்றாகும். 



ஏன்?

நல்ல குடும்பத்தில் பிறந்தால், படிக்காமல் இருக்க அச்சம்.  நல்ல குடும்பத்தில் எல்லோரும் படித்து இருப்பார்கள். அந்தக் குடும்பத்தில் பிறந்த பின், படிக்காமல் இருப்பது அச்சம் தரும் செயல்.  எல்லோரும் படிக்காத மண்டூகங்களாக இருந்து விட்டால் பரவாயில்லை. அந்தக் குடும்பத்தில் ஒருவன் படிக்கவில்லை என்றால் ஒன்றும் தெரியாது. 

மோசமான வேலைகள் செய்ய அச்சம். குடும்பத்தோட பேர் கெட்டுப் போய் விடுமோ என்ற அச்சம். 

வாய் தவறிக் கூட தவறாகப் பேசி விடக் கூடாதே என்ற அச்சம். இராமாயணத்தில், இராமனுக்கு அரசு இல்லை என்று சொல்லக் கேட்ட இலக்குவன் கோபத்தில் கண்டபடி பேசுவான். அப்போது இராமன் சொல்லுவான் "மறை தந்த நாவால் வாய் தந்தன கூறுதியோ"  என்பான்.வேதம் படித்த வாயால், இப்படி கோபச் சொல் வரலாமா என்று கேட்பான். நல்ல குடியில் பிறந்தால், மறந்தும் வழுக்கிய சொல் வரக் கூடாது. வந்து விடுமோ என்று அஞ்ச வேண்டும். 


ஆய்தந்து, அவன் அவ் உரை கூறலும், 'ஐய! நின் தன்
வாய் தந்தன கூறுதியோ, மறை தந்த நாவால்?
நீ தந்தது, அன்றே, நெறியோர்கண் நிலாதது? ஈன்ற
தாய் தந்தை என்றால், அவர்மேல் சலிக்கின்றது என்னோ?'  
  

அதை விட பெரிய பயம் - தன்னிடம் இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு தானும் இல்லை என்று சொல்ல வேண்டி வந்து விடுமோ என்ற பயம் பெரிய பயம். 

நல்ல குடியில் பிறந்து இருப்பது என்பது, கடலில் செல்லும் கலம் போன்றது. அங்கும் இங்கும் எப்போது அலைக்கழிக்கும். எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

பாடல் 

கல்லாமை அச்சம்; கயவர் தொழில் அச்சம்;
சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம்; எல்லாம்
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம்; மரத்தார்; இம்
மாணாக் குடிப் பிறந்தார்.

பொருள் 

(pl click the link below to continue reading)


கல்லாமை அச்சம் = கல்வி அறிவு இல்லாமல் இருப்பது ஒரு பயம் 

கயவர் தொழில் அச்சம் = கயவர்கள் செய்யும் கொலை, கொள்ளை போன்ற தீச் செயல்கள் செய்ய அச்சம் 

சொல்லாமையுள்ளும் ஓர் சோர்வு அச்சம் = சொல்லுகின்ற வார்த்தைகளில் தவறான, பயன் இல்லாத வார்த்தை வந்து விடுமோ என்ற அச்சம் 

எல்லாம் = அது எல்லாம் விட 

இரப்பார்க்கு = தன்னிடம் வந்து வேண்டி நிற்பவர்களுக்கு 

ஒன்று ஈயாமை அச்சம் = ஒன்று கொடுக்க முடியாமல் இருப்பது அச்சம் 

மரத்தார் = மரத்தில் செய்த படகு போல 

இம் மாணாக் குடிப் பிறந்தார். = இந்த மாதிரி நல்ல குடியில் பிறந்தவர்கள்  வாழ்க்கை.

கொடுக்க முடியாமல் போவது பற்றி பயந்து இருக்கிறார்கள். 

பயனில்லாதவற்றை பேசி விடுவோமோ என்று பயந்து இருக்கிறார்கள். 


Monday, September 21, 2020

திருக்குறள் - நடுவு நிலைமை

 திருக்குறள் - நடுவு நிலைமை 


திருக்குறளில் நடுவு நிலைமை என்று ஒரு அதிகாரம் இருக்கிறது. அப்படி ஒன்று இருப்பதே கூட சிலருக்குத் தெரியாது. தெரிந்தால் கூட, நடுவு நிலைமை தானே, அதில் என்ன இருக்கப் போகிறது என்று அதை தாண்டிய மேலே சென்று விடுவார்கள். 

மிக மிக முக்கியமான அதிகாரம். அதிலும், இன்றைய கால கட்டத்துக்கு மிகவும் வேண்டிய ஒரு அதிகாரம். 

நடுவு நிலைமை என்றால் பாரபட்சம் பார்க்காமல் , நடு நிலைமையோடு இருத்தல். 

இதில் என்ன பெரிய செய்தி இருக்கிறது?

யோசித்துப் பார்ப்போம்.

நம் பிள்ளை ஒரு தவறு செய்து விடுகிறான். நாம் நடுவு நிலைமையாக அவன் செய்தது தவறு என்று சொல்வோமா அல்லது எப்படியாவது அவன் செய்ததை சரி என்று மல்லுக் கட்டுவோமா?

கணவன் ஒரு தவறு செய்து விடுகிறான். மனைவி விட்டுக் கொடுப்பாளா? (மனைவி = வாழ்க்கை துணை நலம் பேணுபவள்).

இரண்டு மாநிலத்துக்கு இடையே நீர் பகிர்வு பிரச்சனை. நாம் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று வைத்துக் கொள்வோம்.  நாம் நடுவு நிலையாக பேசுவோமா? 

இரண்டு நாடுகளுக்கு இடையே சண்டை. சச்சரவு.  யார் நடு நிலையாக இருக்கிறார்கள்? 

எங்குமே நடு நிலை என்பதே கிடையாது. 

ஒரு குடும்பத்தில் ஏதாவது சிக்கல் வந்தால், வீட்டில் யாரவது ஒரு பெரியவர் சொன்னதை எல்லோரும்  கேட்க வேண்டும். அந்தப் பெரியவர் நடுவு நிலை பேணுபவராக இருக்க வேண்டும். 

ஒரு கிராமத்தில் ஒரு சிக்கல் என்றால், ஊர் பெரியவரிடம் கேட்டு அவர் சொல்கிறபடி செய்ய வேண்டும். அவர் நடுநிலையாளனாக இருக்க வேண்டும். 

இட ஒதுக்கீடு பிரச்சனை. எது நடு நிலைமை? என்னை பாதிப்பதை நான் எதிர்ப்பேன்  என்பது நடு நிலைமை அல்ல. 

மாமியார் மருமகள் சண்டை. கணவன் நடு நிலையாக இருக்க முடியுமா? 

நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணம் மக்கள் நடு நிலை தவறுவதால் தான். 

எனவே தான், வள்ளுவர் ஒரு அதற்கென்று ஒரு அதிகாரம் வைத்து இருக்கிறார். 

அதில் முதல் குறள் :

பாடல் 

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்

பொருள் 

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_21.html


தகுதி = நடுவு நிலைமை என்ற தகுதி 

எனஒன்று = என்று ஒன்று 

நன்றே = நல்லது 

பகுதியால் = பிரிவால் 

பாற்பட்டு = அதற்கேற்றவாறு  

ஒழுகப் பெறின் = நடந்து கொண்டால் 


சரி, இதில் நடுவு நிலைமை என்ற சொல்லே இல்லையே. தகுதி என்று இருக்கிறது. அது எந்தத் தகுதியாக வேண்டுமானாலும் இருக்கலாமே?

அதிகாரம் நடுவு நிலைமை. எனவே அதில் உள்ள குறள்கள் அது பற்றித்தான் பேசும்.

பகுதியால் என்றால் பிரிவால் என்று பொருள் கொள்ளலாம். அது என்ன பிரிவு?
நமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், இரண்டும் இல்லாத பொதுவானவர்கள். இந்த மூன்று பிரிவாக உள்ளவர்களிடமும் நடு நிலையாக இருக்க வேண்டும். 


நமக்கு வேண்டியவர் என்றால் அவருக்கு ஒரு ஞாயம், வேண்டாதவர் என்றால் இன்னொரு  ஞாயம் என்று இருக்கக் கூடாது. 

ஒழுகப் பெறின் என்று கூறுவதில் இருந்து அது எவ்வளவு கடினமானது என்று தெரியும். 

பெறின் என்றால் செய்தால் என்று அர்த்தம். செய்ய முடியாது, அது கடினம் என்ற பொருள் அதில் தொக்கி நிற்கிறது. 

"ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் படித்தால், நல்ல மதிப்பெண் வாங்கலாம்". 
"படித்தால்" என்பதில் இருந்து அது அவ்வளவு எளிது அல்ல என்று தெரிந்து கொள்ளலாம். 



Sunday, September 20, 2020

கம்ப இராமாயணம் - இடைபோல் இடையே குழைவாய்

 கம்ப இராமாயணம் - இடைபோல் இடையே குழைவாய்


அது ஒரு மரங்கள் அடர்ந்த மலை. நடுவில் ஒரு ஓலைக் குடிசை. மழைக் காலம் என்பதால் எந்நேரமும் மழை. வெயிலை பார்த்து நாட்கள் ஆகி விட்டன. 

இன்று கொஞ்சம் மேகம் விலகி லேசாக வெளிச்சம் படர்கிறது. பெய்த மழையில் மரங்கள், செடி கொடிகள் எல்லாம் தள தள என்று சிலிர்த்து சிரித்து நிற்கின்றன. 

மெல்லிய காற்று வீசுகிறது. குளிரில் உடல் சிலிர்த்துப் போகிறது. மரங்களில் இருந்து மழை நீர் தெறிக்கிறது. கொடிகள் காற்றில் வளைந்து நெளிந்து ஆடுகின்றன. 

ஜன்னல் வரை இரு ஒரு கொடி வந்து எட்டிப் பார்க்கிறது. 

"ஏய் கொடியே...என்ன பார்க்கிறாய்? அவ இருக்காளா னு பாக்கறியா? இல்ல. அவ இல்ல. புரியுது...இவ்வளவு பூ இருக்கு உன்னிடம். அவ இல்லையே சூடிக் கொள்ள. பூ இல்லாத சில சமயம், நெற்றிச் சுட்டி சூடி வருவாள். அப்படி ஒரு அழகு. ஆனா இப்ப அவ இல்ல. 

அவ இல்லாம நான் கிடந்து தவிக்கிறேன். நீ என்னடா என்றால் பூ பூத்து, வளைந்து நெளிந்து கை நீட்டி என்னைக் கூப்பிடுகிறாய். அவள் கை நீட்டி கூப்பிடுவது போல இருக்கு உன்னைப் பார்க்கும் போது. 

உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் மனசுக்குள் அவள் நினைவு வந்து மனம் என்னமோ செய்கிறது"


பாடல் 

'மழை வாடையொடு ஆடி, வலிந்து, உயிர்மேல்,

நுழைவாய்; மலர்வாய் நெடியாய் - கொடியே! -

இழை வாள் நுதலாள் இடைபோல் இடையே

குழைவாய்; எனது       ஆவி குழைக்குதியோ?


பொருள் 

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_20.html


'மழை  = மழைக் காலத்தில் 

வாடையொடு = வாடைக் காற்றில் 

ஆடி = ஆடி 

வலிந்து = கட்டாயமாக 

உயிர்மேல் = என் உயிரினுள் 

நுழைவாய் = நுழைகிறாய் 

மலர்வாய் = மலர்களை கொண்டு இருக்கிறாய் 

நெடியாய் =  உயர்ந்து வளர்ந்த 

கொடியே! - = கொடியே 

இழை வாள் நுதலாள் = இழைத்து செய்யப்பட்ட வாளை போன்ற பள பளப்பான நெற்றியை உடைய அவள் 

 இடைபோல்  =  இடையைப் போல 

இடையே = இடை இடையே 

குழைவாய்;  = குழைந்து நெளிகிறாய் 

எனது ஆவி = என்னுடைய ஆவியை 

குழைக்குதியோ? = குழைய விடுகிறாய் 


மழைக் காலத்தில், சீதையைப் பிரிந்த இராமன் கிட்கிந்தையில் தவித்த போது பாடியது. 

Saturday, September 19, 2020

கம்ப இராமாயணம் - மதம் கொண்ட யானை புகுந்த வயல்

கம்ப இராமாயணம்  - மதம் கொண்ட யானை புகுந்த வயல் 


காதல், அன்பு, கோபம், சகோதர பாசம், பெற்றோர் பிள்ளை பாசம், இயற்கை வர்ணனை இவற்றை எல்லாம் கற்பனை செய்து பார்க்க முடியும். அது பற்றி கவிதை எழுதுவது என்பது வேறு விஷயம். நம்மால் அவற்றை கற்பனை செய்து பார்க்க முடியும். 


போர், போர் களம், அங்கு நடக்கும் போர் முறை, இவற்றை எப்படி கற்பனை செய்வது? 

பார்த்திருந்தால் கற்பனை செய்யலாம். அல்லது சண்டையிட்டு இருந்தால் அது பற்றி சிந்திக்க முடியும். 

கம்பனில் போர் களம் என்று ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதலாம். அவ்வளவு இருக்கிறது. 

இராவணினன் தம்பி கும்ப கர்ணன் இறந்து போகிறான். அடுத்து இராவணனின் மகன் அதிகாயன் போருக்கு வருகிறான். 

போர் களத்தைப் பார்த்து மனம் நொந்து போகிறான். 

ஒரு மதம் கொண்ட யானை நெல் வயலில் புகுந்து சென்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தாதாம். 

இராமன் என்ற மத யானை விளையாடிய போர்க் களம் பற்றிய கம்பனின் உவமை அது. 


பாடல் 


கண்டான் அ(வ்) இராமன் எனும் களிமா
உண்டாடிய வெங்களன்; ஊடுருவ
புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத்
திண்டாடினன் வந்த சினத் திறலோன்.


பொருள் 

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_19.html


கண்டான் = அதிகாயன் கண்டான் 

அ(வ்) = அந்த 

இராமன் எனும் = இராமன் என்ற 

களிமா = மதம் கொண்ட யானை 

உண்டாடிய = உண்டு + ஆடிய = உயிர்களை உண்டு ஆடிய 

வெங்களன்; = போர்க்களம் 

ஊடுருவ = ஊடுருவிப் பார்த்தான் 

புண்தான் = மனதில் காயம் உண்டாக 

உறு நெஞ்சு புழுக்கம் உறத் = பெரிய மனம் புழுங்கி 

திண்டாடினன் = திண்டாடினான் 

வந்த சினத் திறலோன். = அங்கு வந்த சினமும், திறமையும் கொண்ட அதிகாயன் 

மதம் கொண்ட யானை, நெல் வயலில் புகுந்து, அங்குள்ள நெல்லை எல்லாம் பறித்து வீசி, உண்டால் அந்த நெல் வயல் எப்படி இருக்குமோ அப்படி இருந்ததாம்  போர்க்களம். 

இன்னும் கம்பன் வர்ணிப்பான். 

Friday, September 18, 2020

வில்லி பாரதம் - கண்ணன் அழுத இடம்

வில்லி பாரதம் - கண்ணன் அழுத இடம் 


உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு. 

அது எந்த இடம் தெரியுமா?


கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனை காத்து நின்றது. அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். 


கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான். 


அப்போதும் கர்ணன் "மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா" என்று வேண்டினான். 

கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை. 

கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான். கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.

கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான். 

கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் 


"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் " என்று வரம் தந்தான். 


பாடல் 

மைத்துனன் உரைத்த வாய்மை கேட்டு, ஐயன், மன மலர் உகந்து உகந்து,  அவனைக்

கைத்தல மலரால் மார்புறத் தழுவி, கண் மலர்க் கருணை நீர் ஆட்டி,

'எத்தனை பிறவி எடுக்கினும், அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி,

முத்தியும் பெறுதி முடிவில்' என்று உரைத்தான்-மூவரும் ஒருவனாம் மூர்த்தி.


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_18.html


மைத்துனன் = தனது அத்தை மகனான கர்ணன் 

உரைத்த = சொல்லிய 

வாய்மை = உண்மையான வார்த்தைகளைக் 

கேட்டு = கேட்டு 

ஐயன் = கண்ணன் 

மன மலர் உகந்து உகந்து = மலர் போன்ற மனம் மகிழ்ந்து 

அவனைக் = கர்ணனனை 

கைத்தல மலரால் = மலர் போன்ற தன் கைகளால் 

மார்புறத் தழுவி = மார்போடு தழுவிக் கொண்டு 

கண் மலர்க் = மலர் போன்ற கண்களில் இருந்து 

கருணை நீர் ஆட்டி = வழிந்த கருணை என்ற கண்ணீரால் அவனை நனைத்து 

'எத்தனை பிறவி எடுக்கினும் = எத்தனை பிறவி எடுத்தாலும் 

அவற்றுள் = அந்தப் பிறவிகளில் 

ஈகையும் = தானம் செய்து 

செல்வமும் எய்தி, = செல்வம் பெற்று 

முத்தியும் பெறுதி முடிவில்' = முடிவில் முக்தியும் பெறுவாய் 

என்று உரைத்தான் = என்று கூறினான் 

மூவரும் ஒருவனாம் மூர்த்தி. = மூன்று பேரும் ஒன்றாய் நின்ற மூர்த்தி. 

இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள். 

கர்ணன் இறைவனை காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று  மெனக்கெட வில்லை. 

இறைவன் அவனைத் தேடி வந்தான். கேட்காதபோதே விஸ்வ ரூப தரிசனம் தந்தான்.  அவனை கட்டி அணைத்துக்  கொண்டான்.  கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான். 

இறைவனை தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மை கட்டி அணைத்துக் கொள்வான். 

அதற்கு என்ன செய்ய வேண்டும்?

கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான். 

எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.

உலகளந்த பெருமாள், அவனிடம் கை நீட்டி நின்றார். 

ஈகை எவ்வளவு பெரிய விஷயம் !

Thursday, September 17, 2020

திருக்குறள் - பொய் சொல்லணும்

 திருக்குறள் - பொய் சொல்லணும் 

சில பேர் ரொம்ப ஞாயவானாக இருப்பார்கள். எப்போதும் மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிவிடுவது.  அதில் ஒரு பெருமையும் கொள்வார்கள். 

அது யாராக இருந்தாலும் சரி. வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசி விடுவது அவர்கள் வழக்கம்.

அது சரி அல்ல என்கிறார் வள்ளுவர். 

சில இடத்தில் பொய் சொல்ல வேண்டும்.  அப்போது தான் நல்லது என்கிறார் அவர். 

என்னது, வள்ளுவர் பொய் சொல்லச் சொன்னாரா?  அறத்துப் பால் எழுதிய வள்ளுவரா அப்படிச் சொன்னார்? இருக்கவே இருக்காது என்று நினைப்பீர்கள். 

கணவன் மனைவி உறவில் போய் சொல்லலாம் என்கிறார். 

உடனே,  மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு சின்ன வீடு வைத்துக் கொள்ளலாம் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. 

வள்ளுவர் சொல்லுவது, பாராட்டுவதில் பொய் சொல்லலாம் என்கிறார். 

அதற்கு அவர் வைத்த பெயர் "நலம் புனைந்து உரைத்தல்"

நல்லதை கொஞ்சம் கற்பனை கலந்து சொல்லுதல். 

உதாரணமாக,

மனைவி அவ்வளவு அழகாக இல்லாவிட்டாலும், "எனக்கு நீ தாண்டி இரதி"  என்று சொல்ல வேண்டும். "அந்த ஒரு தெத்துப் பல்லு இருக்கே, அது தான் உனக்குஅழகு" என்று சொல்ல வேண்டும், அது அழகாக இல்லாவிட்டாலும். 

அது போல கணவன் பெரிய திறமைசாலியாக இல்லாவிட்டாலும், மனைவி  கணவனை புகழ வேண்டும்.  "இந்த வீட்டுக்காக நீங்க எவ்வளவு பாடு படுறீங்க...பாவம்" என்று அவன் மேல் பரிவு கொள்ள வேண்டும். "ஆமா, என்னத்த பெருசா கிழிச்சுடீங்க...அவனவன் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறான்...இங்க ஒரு கார்/நகை/வீடு வாங்க வக்கில்லை" என்று சொல்லக் கூடாது. அது உண்மையாகவே இருந்தாலும். 

"நீ ரொம்ப வெயிட் போட்டுட்ட...வர வர உன் சமையல் வாயில வக்க விளங்கல" என்றெல்லாம் பேசுவது கூடாது. 

நலம் புனைந்து உரைத்தல் என்ற அதிகாரத்தில் பத்து குறள் இருக்கிறது. 

அதில் முதல் குறள் 


பாடல் 

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்

பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_17.html


நன்னீரை  = நல்ல குணங்களை உடைய 

வாழி  = நீ வாழ்க 

அனிச்சமே = அனிச்ச மலரே 

நின்னினும் = உன்னை விட 

மென்னீரள் = மென்மையான இயல்பு உடையவள் 

யாம்வீழ் பவள் = என் காதலி / என் மனைவி 

அனிச்ச மலரே, என் மனைவி உன்னை விட மென்மையானவள்.

அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தாலே வாடி விடும் இயல்பு  கொண்டது. அவ்வளவு மென்மையானது. 

ஒரு பெண்ணும் அவ்வளவு மென்மையாக இருக்க முடியாது. 

இருந்தும், அவன் சொல்கிறான்...என் மனைவி/காதலி உன்னை விட மென்மையானவள் என்று. 

சும்மா. பொய் தான். 


அந்த பொய் தான் உறவை பலப்படுத்தும்.  அதைக் கேட்ட அவள் வெட்கப் படுவாள். பெண் வெட்கப் பட்டால், அது ஒரு அழகு.

அது மட்டும் அல்ல.  அதற்கு பின்னால், ஒரு மனோ தத்துவமும் அடங்கி இருக்கிறது. 

அவள் ஏதோ ஒரு உடை, அல்லது நகை அணிந்த போது  பாராட்டினால், "அட...அவர்  இதை எல்லாம் கவனிக்கிறாரா..." என்று தன்னை அழகு படுத்திக் கொள்வதில்  மேலும் ஆர்வம் காட்டுவாள்.  சமையலில் இன்னும்  ஈடுபாடு  அதிகம் ஆகும். 

இல்லை என்றால், "என்ன செஞ்சு என்ன...ஒரு வார்த்தை சொல்றது கிடையாது...செஞ்சாலும் ஒண்ணு தான், செய்யாட்டாலும் ஒண்ணு தான் " என்று  ஒரு சலிப்பு வந்து விடும். 

பாராட்டு ஒரு ஊக்கம் தரும். சலிப்பை போக்கும். உறவை பலப்படுத்தும். 

பொய் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்காதீர்கள். 

கணவனையோ, மனைவியையோ பாராட்டி (பொய்யாக இருந்தாலும்) சொல்லிப் பாருங்கள்.  வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தெரியும். 



Monday, September 14, 2020

திருக்குறள் - பொய் தீர் ஒழுக்க நெறி

திருக்குறள்   - பொய் தீர் ஒழுக்க நெறி 

இலக்கியம் படிக்க இலக்கணம் இன்றி அமையாதது. இலக்கணம் தெரிந்தால் இலக்கியத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதை நுணுக்கமாக இரசிக்க முடியும். இல்லை என்றால்  ஂமேல் எழுந்த வாரியாக வாசிக்கத்தான் முடியும். இலக்கணம் தெரியாவிட்டால் சில சமயம் தவறான அர்த்தம் கூட வந்து விடும்.

பாடல்
 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_14.html

பொறி = கண் மூக்கு வாய் செவி உடல் என்ற ஐந்து பொறிகள்

வாயில் = வழியாக

ஐந்து = ஐந்து விதமான புலன்கள் வழியாக செல்லும் அவாவினை  (சுவை,

ஒளி,ஊறு , ஓசை, நாற்றம்)

அவித்தான் = அடக்கியவன்

பொய்தீர்= பொய்மை தீர்ந்த

ஒழுக்க நெறி = ஒழுக்கமான வழியில்

நின்றார் = வாழ்பவர்

நீடுவாழ் வார் = நீண்ட நாள் வாழ்வார்

ஐந்து புலன்கள் வழியாக செல்லும் ஆசைகளை அடக்கியவனின் ஒழுக்கமான வழியில் நிற்பவர் நீண்ட நாள் வாழ்வார். 

ஆசை ஒன்றா அல்லது பலதா?

நல்ல உணவை கண்டால் உண்ண வேண்டும் என்ற ஆசை, நல்ல இடங்களை பார்த்தால் அங்கு  போக வேண்டும் என்ற ஆசை, இப்படி ஆசை பலவிதமாக  இருக்கிறதே என்றால் இல்லை.

ஆசை என்பது ஒன்றுதான். அது வெவ்வேறு புலன்கள் வழியாக வெவ்வேறு விதமாக  வெளிப்படுகிறது. அவ்வளவுதான். 

ஐந்து புலன்கள் என்பதால் ஐந்து ஆசை என்பது இல்லை. ஒரே ஆசை ஐந்து விதமாக வெளிப்படுகிறது. 

சரி. 

 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறி
என்பதில்  

"பொறிவாயில் ஐந்தவித்தான்" " பொய்தீர் ஒழுக்க நெறி"

என்ற இரண்டு சொல் தொடர்கள் இருக்கின்றன. 

ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதே.

ஐந்து அவித்தான் ஒரு பக்கம். ஒழுக்க நெறி இன்னொரு பக்கம். இதை எப்படி பொருள் கொள்வது?

இங்குதான் இலக்கணம் நமக்கு உதவி செய்யும். 

கிழமை என்றால் உரிமை என்று பொருள். 

முருகனை குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லுவார்கள். குறிஞ்சி நிலத்துக்கு  உரியவன், தலைவன் என்று பொருள். 

ஞாயிற்றுக் கிழமை என்றால் சூரியனுக்கு உகந்த கிழமை, சூரியனுக்கு உரிய கிழமை.

அதே போல் செவ்வாய், புதன், சனி என்று பொருள் கொள்க. 

இந்த கிழமை என்பது மூன்று வகைப்படும்.

தற் கிழமை 
பிறிதின் கிழமை 
செய்யுட் கிழமை 

என்று மூன்று விதமான கிழமைப் பொருள்கள் உண்டு. 

அது என்ன?

என்னுடைய கை என்று நான் சொன்னால், அது என்னுடையதுதான். அது ஒரு போதும்  மற்றவரின் பொருளாக ஆகாது. எனவே அது தற் கிழமை. 

என் பணம் என்று சொன்னால். என்னிடம் இருக்கும் வரை அது என் பணம்.  என்னை விட்டு சென்று விட்டால் அது மற்றவர் பணம். எனவே அது பிறிதின் கிழமை. 

இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். 

இதை இரண்டையும் தவிர்த்து வேறு என்ன இருக்க முடியும் என்று.

யோசித்து இருக்கிறார்கள். அதற்கு ஒரு இலக்கணமும் எழுதி இருக்கிறார்கள். 

அது தான் செய்யுட் கிழமை என்பது. 

திருக்குறளை திருவள்ளுவர் எழுதினார். அந்தப் புத்தகம் என்னிடம் இருக்கிறது. என்னிடம் இருக்கிறது என்பதற்காக அது நான் எழுதியது என்று ஆகி விடுமா?  யாரிடம் அது போனாலும், அது திருவள்ளுவர் எழுதியதுதான். அது அவருடையது தான். 

அதாவது, அதை அவர் செய்தார். என்னவே அது அவருடைய உடமை. செய்ததால் வந்த  உரிமை செய்யுட் கிழமை.

மனைவி நினைக்கிறாள் கணவன் தன் உரிமை என்று. 

தாய் நினைக்கிறாள், அவன் செய்யுட் கிழமை என்று. என் பிள்ளையை அவள் கொண்டு போய் விட்டாள் . என்ன இருந்தாலும் அவன் என் பிள்ளை. செய்யுட் கிழமை. 

சரி, குறளுக்கு வருவோம். 

திருவள்ளுவரது குறள்.
கம்ப காவியம் என்றால் கம்பனின் காப்பியம். 
கபிலரது பாட்டு 

என்பது போல, ஐந்து அவித்தானது ஒழுக்கம். 

இந்த ஒழுக்க என்பது இறைவன் செய்தது. நாம் கடை பிடிக்கலாம், எழுதலாம்,   உபதேசம் செய்யலாம் , ஆனால், அது யாருக்கு உரியது என்றால் இறைவனுக்கு உரியது. 

அவன் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவன். அவனுடைய ஒழுக்க நெறியில்  நின்றவர்கள்  நீண்ட நாள் வாழ்வார்கள். நீண்ட நாள் என்றால், இறைவன் திருவடிக் கீழ் வாழ்வார்கள் என்று  அர்த்தம். மற்றவை எல்லாம் சிறிது நாள்தான். 

இலக்கணம் புரிந்தால், இலக்கியம் எவ்வளவு சுவையாக இருக்கிறது. 


தனியே இலக்கணம் படிப்பது என்பது சற்று கடினமான விஷயம். இலக்கியத்தோடு சேர்ந்து படித்தால், இலக்கணமும் எளிமையாக விளங்கும், இலக்கியமும் சுவைக்கும். 

Sunday, September 13, 2020

திருக்குறள் - மாணடி சேர்ந்தார் - பாகம் 2

திருக்குறள் - மாணடி சேர்ந்தார் - பாகம் 2


நேற்று இந்த குறள் பற்றி சிந்தித்த போது ஒரு வார்த்தையை விட்டு விட்டேன். நேற்றைய பதிவு கீழே இருக்கிறது. படிக்காதவர்கள் வாசித்துக் கொள்ளலாம்.

"ஏகினான்" என்று ஒரு வார்த்தை வருகிறது. ஏகினான் என்றால் சென்றான் என்று அர்த்தம். அது இறந்த கால வினை. அப்படி என்றால் இறைவன் ஏற்கனவே வந்து விட்டானா என்ற கேள்வி எழும்.

சில சமயம், கணவனும் மனைவியும் எங்காவது வெளியே செல்ல வேண்டும் என்று புறப்பட்டுக் கொண்டு இருப்பார்கள். ஒரு திருமண வீட்டுக்கு செல்ல இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

மனைவி தயாராகிக் கொண்டே இருப்பாள். கணவன் வாசலில் நின்று கொண்டு, "என்ன, தயாரா, போகலாமா?" என்று கேட்பான். அதற்கு மனைவி, "இதோ வந்துட்டேங்க" என்று பதில் சொல்லுவாள். பதில் தான் வரும்,  ஆள் வர மாட்டாள்.

இன்னும் சிறிது நேரம் கழித்து கணவன் மறுபடியும் கேட்பான். "அதான் வந்துட்டேனு சொல்றேன் ல ...ஏன் அவசரப் படுத்தறீங்க " என்று குரல் வரும்.

வரவே இல்ல, ஆனால் "வந்துட்டேன்" என்று சொல்லுவதை நாம் கேட்கிறோம், அனுபவித்து இருக்கிறோம்.

இது கணவவன் மனைவி மட்டும் அல்ல.

நண்பர்கள் இடையிலும் இந்த பேச்சு வழக்கு உண்டு. ஒரு நண்பன் வெளியில் இருந்து குரல் கொடுப்பான்...உள்ளிருந்து அவன் நண்பன் சொல்வான் "வந்துட்டேண்டா"  என்று.

அவசரம் கருதி, எதிர் காலத்தில் நடக்க இருப்பதை இறந்த காலத்தில் சொல்லலாம் என்று  தொல்காப்பிய சூத்திரம் இருக்கிறது.

"வாராக் காலத்தும் நிகழும் காலத்தும் ஓராங்கு வரூஉம் வினைச் சொற் கிளவி இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் விரைந்த பொருள் என்மனார் புலவர்" (தொல், சொல், வினை, 44)

தொல்காப்பியத்தை கொஞ்சம் இளக்க வேண்டும்.

வாராக் காலம் என்றால் வருகின்ற காலம். அதாவது இனி வரப்போகின்ற காலம். எதிர் காலம்.

நிகழ் காலம் என்றால் இப்போது நிகழ்வது.

""வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்" என்றால் நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும்

ஓராங்கு = ஒரு சில சமயத்தில்

வரூஉம் = வருகின்ற

வினைச் சொற்  = செயலை குறிக்கின்ற சொற்கள் (வந்துட்டேங்க )

கிளவி = சொல்

இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல் = இறந்த கால குறிப்போடு இருப்பது

விரைந்த பொருள் என்மனார் புலவர்" = வேககமாக நிகழ்வதை குறிப்பதற்காக என்று   புலவர்கள் கூறுவார்கள் என்கிறார் தொல்காப்பியர்.

அவசரமாக கிளம்பி வருவதை ஏற்கனவே வந்துவிட்டதாக சொல்லும் வழக்கம்  உண்டு என்று கூறுகிறார்.

இறைவன் வேகமாக வருவானாம்.  எனவே வந்து விட்டான் என்ற சொல்லால் குறிக்கிறார்.

இரவி வர்மாவின் படங்களை பார்த்தால் தெரியும்.  யானையின் காலை முதலை பற்றிக் கொண்டது.  யானை "ஆதி மூலமே" என்று பிளிறியது.  திருமால்  சக்கரத்தோடு கிளம்பி வருவது போல இருக்கும். அதில் அவருடைய முடி கலைந்து , மேலே போட்டிருக்கும் பட்டு உடை பறக்கும். அவசரம் அவசரமாக கிளம்பி வருவதை குறிக்கும்.

எழுந்து, தலை சீவி, கொஞ்சம் வாசனை திரவம் போட்டு, நல்ல உடையை தேர்ந்து எடுத்து (அதுக்கு ஒரு , ஒரு மணி நேரம்), அப்புறம் அதுக்கு பொருந்தும் படி மத்த அலங்காரம் எல்லாம் செய்து கிளம்பவில்லை. போட்டது போட்டபடி கிளம்பி வருவார்.

அது போல, அன்பர்கள் மனதில் இறைவன் அடித்து புரண்டு வருவானாம். எனவே  "ஏகினான்" என்ற இறந்த கால வினைச் சொல்லை வள்ளுவர் போட்டு இருக்கிறார் என்று பரிமேல் அழகர் கூறுகிறார்.

எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள்.

ஏகினான் என்ற ஒரு வார்த்தையை விளக்க இவ்வளவு சொல்ல வேண்டி இருக்கிறது.

அப்படி எழுதவும், பேசவும் கற்றுக் கொள்ள வேண்டும்.




மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இந்தக் குறளை நாம் எப்படி புரிந்து கொள்வோம்?


மலரின் கண்ணே சென்றவனின் மாட்சிமை மிக்க திருவடிகளை சேர்ந்தவர் இந்த நில உலகில் நீண்ட நாள் வாழ்வார்கள்

என்று நாம் அர்த்தம் செய்வோம்.

வார்த்தைகளை கொண்டு அர்த்தம் செய்தால் அவ்வளவுதான் வரும்.

இதற்கு பரிமேலழகர் செய்து இருக்கின்ற உரையை படித்தால், இனி மேல் நமக்கு திருக்குறள் தெரியும் என்று சொல்லக் கூட கூச்சமாக இருக்கும்.

இனி அவர் பார்வையில் இதற்கு அர்த்தம் காண்போம்.

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_12.html

மலர்மிசை ஏகினான்.

இறைவன் ஒரு மலரில் சென்று சேர்கிறான் என்றால் அது எப்படிப்பட்ட மலராக இருக்கும்?

ஒரு நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ ஒரு இடத்துக்குப் போகிறார் என்றால்  அவர் எந்த மாதிரி இடங்களில் தங்குவார்?   மிகச் சிறந்த  இடத்தில் தானே  தங்குவார்?

இறைவன் ஒரு மலரில் போய் தங்குகிறான் என்றால் அது சிறந்த மலராகத்தானே  இருக்க வேண்டும்? அது என்ன மலர்?

அவருடைய அடியவர்களின் அன்பு கொண்ட மனம் தான் அந்த மலர்.

எனவே, அடியவர்களின் மனதில் இருக்கும் இறைவனின் மாண்புமிக்க  திருவடிகளை  சேர்ந்தார் நிலத்திடை "நீடு" வாழ்வார்.

நீடு வாழ்வார் என்றால் நீண்ட நாள் வாழ்வார் என்று பொருள்.

நீண்ட நாள் என்றால் எத்தனை நாள்.

மனித உயிரின் வாழ் நாள் ஒரு 100 வருடம் என்று வைத்துக் கொண்டால், 36500  நாள். இது ஒரு நீண்ட நாளா?

மனித பிறப்பை விட்டு விடுவோம்.

இந்த  பூமியே எப்போதும் இருக்காது. ஒரு நாள் அதுவும் அழியும். பல கோடி வருடம்  ஆகலாம். அதுவும் நீண்ட நாள் என்று சொல்ல முடியாது.

எனவே, நம் வாழ்நாளும் நீண்ட நாள் இல்லை.  நாம் வாழும் பூமியின் வாழ் நாளும்  நீண்ட நாள் இல்லை.

பின் எதுதான் நீண்ட நாள் ?

ஸ்வர்கம் என்று சொல்கிறார்களே  அங்கு சென்றால் நீண்ட நாள் வாழ முடியுமா என்றால்  அதுவும் இல்லை.

நாம் செய்த புண்ணிய பலன்கள் தீர்ந்து விட்டால், நாம் மீண்டும் இங்கே வர வேண்டியதுதான்.  அதுவும் நீண்ட நாள் கிடையாது.

பின் எது தான் நீண்ட நாள்.

வீடு பேறு என்று சொல்கிறார்களே, அதாவது இறைவனை அடைந்து விட்டால் பின் பிறப்பு  கிடையாது. அங்கே சென்று விட்டால் எப்போதும் அங்கேயே இருக்கலாம். அவனுக்கு அழிவு கிடையாது. எனவே, நீண்ட நாள். அங்கு போய் விட்டால்,  நாம் வேறு எங்கும் போக வேண்டாம். எனவே நீண்ட நாள்.

எனவே, அன்பர்கள் மனதில் வாழும் இறைவனுடைய திருவடிகளைப் பற்றி விட்டால்,  அவனோடு ஒன்றாகி நீண்ட நாள் வாழலாம்.

என்று பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்.

நம்மால் சிந்திக்கக் கூட முடியுமா இந்த அளவு?

பரிமேல் அழகர் உரை வாசிக்கக் கொஞ்சம் கடினம்தான். பழகிக் கொண்டால் சுகமாக இருக்கும். அதில் ஒரு வசீகரம் இருக்கும்.

திருக்குறளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பரிமேல் அழகர் வேண்டும்.

திருக்குறளையும், பரிமேல் அழகர் உரையையும் தேடி கண்டு பிடித்துப் படியுங்கள்.

அதில் ஒரு ஆர்வம் வந்து விட்டால், இந்த கதை, கட்டுரை, நாவல் போன்றவற்றின் மேல் ஒரு வெறுப்பே வந்து விடும்.  என்ன குப்பை இது என்று.

குப்பைகளை மூளைக்குள் திணிப்பது நிற்கும். அறிவும் மனமும் சுத்தமாகும்.

Saturday, September 12, 2020

திருக்குறள் - மாணடி சேர்ந்தார்

திருக்குறள் - மாணடி சேர்ந்தார் 




மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

இந்தக் குறளை நாம் எப்படி புரிந்து கொள்வோம்?


மலரின் கண்ணே சென்றவனின் மாட்சிமை மிக்க திருவடிகளை சேர்ந்தவர் இந்த நில உலகில் நீண்ட நாள் வாழ்வார்கள்

என்று நாம் அர்த்தம் செய்வோம்.

வார்த்தைகளை கொண்டு அர்த்தம் செய்தால் அவ்வளவுதான் வரும்.

இதற்கு பரிமேலழகர் செய்து இருக்கின்ற உரையை படித்தால், இனி மேல் நமக்கு திருக்குறள் தெரியும் என்று சொல்லக் கூட கூச்சமாக இருக்கும்.

இனி அவர் பார்வையில் இதற்கு அர்த்தம் காண்போம்.

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_12.html

மலர்மிசை ஏகினான்.

இறைவன் ஒரு மலரில் சென்று சேர்கிறான் என்றால் அது எப்படிப்பட்ட மலராக இருக்கும்?

ஒரு நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ ஒரு இடத்துக்குப் போகிறார் என்றால்  அவர் எந்த மாதிரி இடங்களில் தங்குவார்?   மிகச் சிறந்த  இடத்தில் தானே  தங்குவார்?

இறைவன் ஒரு மலரில் போய் தங்குகிறான் என்றால் அது சிறந்த மலராகத்தானே  இருக்க வேண்டும்? அது என்ன மலர்?

அவருடைய அடியவர்களின் அன்பு கொண்ட மனம் தான் அந்த மலர்.

எனவே, அடியவர்களின் மனதில் இருக்கும் இறைவனின் மாண்புமிக்க  திருவடிகளை  சேர்ந்தார் நிலத்திடை "நீடு" வாழ்வார்.

நீடு வாழ்வார் என்றால் நீண்ட நாள் வாழ்வார் என்று பொருள்.

நீண்ட நாள் என்றால் எத்தனை நாள்.

மனித உயிரின் வாழ் நாள் ஒரு 100 வருடம் என்று வைத்துக் கொண்டால், 36500  நாள். இது ஒரு நீண்ட நாளா?

மனித பிறப்பை விட்டு விடுவோம்.

இந்த  பூமியே எப்போதும் இருக்காது. ஒரு நாள் அதுவும் அழியும். பல கோடி வருடம்  ஆகலாம். அதுவும் நீண்ட நாள் என்று சொல்ல முடியாது.

எனவே, நம் வாழ்நாளும் நீண்ட நாள் இல்லை.  நாம் வாழும் பூமியின் வாழ் நாளும்  நீண்ட நாள் இல்லை.

பின் எதுதான் நீண்ட நாள் ?

ஸ்வர்கம் என்று சொல்கிறார்களே  அங்கு சென்றால் நீண்ட நாள் வாழ முடியுமா என்றால்  அதுவும் இல்லை.

நாம் செய்த புண்ணிய பலன்கள் தீர்ந்து விட்டால், நாம் மீண்டும் இங்கே வர வேண்டியதுதான்.  அதுவும் நீண்ட நாள் கிடையாது.

பின் எது தான் நீண்ட நாள்.

வீடு பேறு என்று சொல்கிறார்களே, அதாவது இறைவனை அடைந்து விட்டால் பின் பிறப்பு  கிடையாது. அங்கே சென்று விட்டால் எப்போதும் அங்கேயே இருக்கலாம். அவனுக்கு அழிவு கிடையாது. எனவே, நீண்ட நாள். அங்கு போய் விட்டால்,  நாம் வேறு எங்கும் போக வேண்டாம். எனவே நீண்ட நாள்.

எனவே, அன்பர்கள் மனதில் வாழும் இறைவனுடைய திருவடிகளைப் பற்றி விட்டால்,  அவனோடு ஒன்றாகி நீண்ட நாள் வாழலாம்.

என்று பரிமேல் அழகர் உரை எழுதுகிறார்.

நம்மால் சிந்திக்கக் கூட முடியுமா இந்த அளவு?

பரிமேல் அழகர் உரை வாசிக்கக் கொஞ்சம் கடினம்தான். பழகிக் கொண்டால் சுகமாக இருக்கும். அதில் ஒரு வசீகரம் இருக்கும்.

திருக்குறளை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், பரிமேல் அழகர் வேண்டும்.

திருக்குறளையும், பரிமேல் அழகர் உரையையும் தேடி கண்டு பிடித்துப் படியுங்கள்.

அதில் ஒரு ஆர்வம் வந்து விட்டால், இந்த கதை, கட்டுரை, நாவல் போன்றவற்றின் மேல் ஒரு வெறுப்பே வந்து விடும்.  என்ன குப்பை இது என்று.

குப்பைகளை மூளைக்குள் திணிப்பது நிற்கும். அறிவும் மனமும் சுத்தமாகும்.


Friday, September 11, 2020

பெரிய புராணம் - நம்பர் அருளாமை யினால்

பெரிய புராணம் - நம்பர் அருளாமை யினால்


நம்மை அறியாமலேயே நாம் பல தவறுகளை செய்து விடுகிறோம்.

செய்யும் போது அது தவறு என்று தெரிவதில்லை.

பின்னாளில், ஐயோ, இப்படி தவறு நிகழ்ந்து விட்டதே என்று நினைந்து வருந்தி இருக்கிறோம்.

இப்போது நாம் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் அனைத்தும் சரியானவைதானா? நாளை, இன்று நாம் செய்கின்ற காரியங்கள் தவறானது என்று நினைத்து வருந்த மாட்டோம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது.

பின், எப்படித்தான் சரியான பாதையை தேர்ந்து எடுத்து அதில் செல்வது?

இந்தக் குழப்பம் நமக்கு மட்டும் அல்ல...மிகப் பெரியவர்கள் வாழ்விலும் நிகழ்ந்து இருக்கிறது.

திருநாவுக்கரசர், இளம் வயதில், சைவ சமயத்தை துறந்து, சமண சமயத்தில் சேர்ந்தார். சேர்ந்தது மட்டும் அல்ல, சைவ நிந்தனை, சிவ நிந்தனை போன்றவற்றையும் செய்தார்.

ஏன்? ஏன் அப்படி ஒரு தவறான பாதையில் போனார்?

சேக்கிழார் பெருமான் சொல்கிறார்

"இறைவன் அருள் இன்மையால்"

இறைவன் அருள் இல்லாததால், நல்ல பாதையை விட்டு தவறான பாதையில் சென்றார் என்று.

பாடல்

நில்லாத உலகு இயல்பு கண்டு நிலையா வாழ்க்கை
அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆன வற்றின்
நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமை யினால்
கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்.


பொருள்


நில்லாத = நிலை இல்லாத

உலகு = உலகின்

இயல்பு கண்டு = இயல்பினை உணர்ந்து

நிலையா = நிலையற்ற

வாழ்க்கை = வாழ்க்கையை

அல்லேன் என்று = பற்றி வாழ்தல் சரி அல்ல என்று

அறத் துறந்து = முற்றுமாக  துறந்து

சமயங்கள் ஆன வற்றின் = உள்ள சமயங்களில்

நல் ஆறு தெரிந்து = சரியான வழி தெரிந்து

உணர = உணர்ந்து கொள்ள

நம்பர் அருளாமை யினால்  = இறைவன் அருளாமையால்

கொல்லாமை = கொல்லாமை

மறைந்து  உறையும் = அதன் பின் மறைந்து வாழும்

அமண் சமயம் குறுகுவார். = சமண சமயத்தை சென்று அடைந்தார் (நாவுக்கரசர்)

சில பேரிடம் ஒரு சில நல்ல குணங்கள் இருக்கும். நாம் அவற்றால் கவரப் பட்டு  அவர்கள்பால் ஈர்க்கப் படுவோம். அவர்களோடு பழகிய பின்னால் தான் தெரியும் அவர்களிடம் உள்ள மற்ற தீய குணங்கள் என்னென்ன என்று.

வேறு வழி இல்லாமல் அவர்களிடம் மாட்டிக் கொள்வோம்.

அது போல சமண சமயம், கொல்லாமை என்ற ஒரு நல்ல குணத்தின் பின்னால் பல  தீய செயல்களை செய்து வந்தது. ஆனால், வெளியில் இருந்து பார்பவர்களுக்குத் தெரியாது.  நாவுக்கரசரும், அது தெரியாமல் அந்த சமயத்தில் சென்று  சேர்ந்தார்.

சொல்ல வந்த செய்தி இதுதான்...

இறைவன் அருள் இல்லாவிட்டால், எவ்வளவு அறிவு இருந்தாலும் வழி தவறிச் செல்ல  வாய்ப்பு இருக்கிறது.

நாவுக்கு அரசர், அவ்வளவு படித்தவர். தடம் மாறிப் போனார். காரணம், இறை அருள் இன்மை.

எவ்வளவோ படித்தவர்கள், அறிவாளிகள் பெரிய பெரிய தவறு செய்கிறார்கள். காரணம் இறை அருள் இன்மை என்கிறார் சேக்கிழார்.




Thursday, September 10, 2020

நாலடியார் - பையெனப் பையெனவென்று அஞ்சிப்பின் வாங்கும் அடி.

நாலடியார் - பையெனப் பையெனவென்று அஞ்சிப்பின் வாங்கும் அடி.



இந்த பெண் பிள்ளைகளை பெற்று விட்டு, பெற்றோர் படும் பாடு இருக்கிறதே அது சொல்லி மாளாது. அப்படி ஆசை ஆசையாக வளர்ப்பார்கள். கட்டிக் கொடுப்பார்கள். போன இடத்தில், பிறந்த வீடு மாதிரி செல்லம் இருக்குமா? எல்லோரையும் போல வேலை செய்ய வேண்டி இருக்கும்.

"ஐயோ, என் பிள்ளையை எப்படியெல்லாம் பொத்தி பொத்தி வளர்த்தேன்...இப்ப இப்படி கஷ்டப் படுகிறாளே " என்று வருந்துவார்கள்.

இந்தக் கவலை இன்று வந்தது அல்ல. நாலடியார் காலத்தில் இருந்து வருகிறது.

அவள் ஒரு செல்லப் பிள்ளை.

அந்தக் காலத்தில் பெண்களின் பாதங்களை அழகு செய்வார்கள். பஞ்சில் சிவந்த வண்ணங்களை முக்கி, விரலில், பாதத்தின் ஓரங்களில் வண்ணம் தீட்டுவார்கள். பார்க்க பாதம் சிவந்து அழகாக இருக்கும்.

அப்படி, அந்த பெண்ணுக்கு காலில் வண்ணம் தீட்ட முயன்ற போது , "மெல்ல, மெல்ல, கால் வலிக்குது" என்று காலை இழுத்துக் கொள்வாளாம்.

சிவந்த குழம்பை பஞ்சில் நனைத்து பாதத்தில் வைத்தால் அது அவளுக்கு வலிக்குமாம்.

அப்படி இருந்த பெண், இன்று என்னடா என்றால், செருப்பு கூட போடாமல், கல்லும் முள்ளும்  உள்ள கட்டாந்தரையில் நடக்கிறாள்.  பெற்றோர்கள் கண் கண்  கலக்குகிறார்கள்.

நாமும் தான்.


பாடல்


அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ, -அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.



பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_10.html


அரக்காம்பல் = சிவந்த  ஆம்பல் போன்ற மலர்கள்

நாறும்வாய் = போல வாசம் வீசும் அவளது வாய்

அம்மருங்கிற் கன்னோ =  இடையில்.  இங்கு பாதம்

பரற் கானம் = சரளை கற்களை கொண்ட காட்டில்

ஆற்றின கொல்லோ = உள்ள வழியில் எப்படி நடப்பாள்

அரக்கார்ந்த = சிவந்த குழம்பை

பஞ்சிகொண் டூட்டினும் = பஞ்சில் நனைத்து காலில் தடவினாலும்

பையெனப் பையெனவென்று = பைய, பைய என்று

அஞ்சிப்பின் வாங்கும் அடி. = அச்சம் கொண்டு காலை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் அந்த  மென் பாதம் 

Wednesday, September 9, 2020

கம்ப இராமாயணம் - நம்பிக்கு ஒரு நன்மகனோ ?

கம்ப இராமாயணம் - நம்பிக்கு ஒரு நன்மகனோ ?


இராமாயணத்தில் பல கதா பாத்திரங்கள், கதை ஓட்டத்தில் முக்கியத்வம் பெறாமல் போய் விடுகின்றன.

நுணுகிப் பார்த்தால் அவை கிடைக்கலாம்.

வால்மீகி இராமாயணத்தை தழுவி எழுதும் போது கம்பனுக்கு எதை எடுப்பது, எதை விடுவது என்ற படைப்புச் சிக்கல் வந்திருக்கும்.

கம்பன் ஒன்றை விடாமல் தன் காப்பியத்தில் சேர்கிறான் என்றால், அதில் ஏதோ சிறப்பு இருக்கும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

அப்படிப்பட்ட ஒரு கதா பாத்திரம் அதிகாயன் என்ற பாத்திரம்.  இராவணனின் இன்னொரு பிள்ளை. நமக்கு இந்திரஜித்தை நன்றாகத் தெரியும்.

அதிகாயன் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்காது.

கும்பகர்ணன் போரில் இறந்து போனான். இன்னொரு தம்பி வீடணன், இராமன் பக்கம் போய் விட்டான்.

கும்பகர்ணனை இழந்து வருந்தும் இராவணனைப் பார்த்து அதிகாயன் கூறுகிறான்.

"உன் தம்பியை கொன்று உன்னை வருந்த வைத்த அந்த இராமனை, அவன் தம்பியை கொன்று  அதே போல் வருந்த வைக்கிறேன். அப்படி இல்லை என்றால்,  ஆடவரில் சிறந்த உனக்கு நான் ஒரு நல்ல பிள்ளையாவேனா ?"

என்று வஞ்சினம் கூறி போருக்கு புறப்படுகிறான்.


பாடல்

‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனைக்
கம்பிப்பது ஒர் வன்துயர் கண்டிலெனேல்
நம்பிக்கு ஒரு நன்மகனோ இனி நான்?


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_9.html


‘உம்பிக்கு = உன் தம்பிக்கு

உயிர் ஈறு செய்தான் = உயிருக்கு இறுதி (முடிவு) செய்தான்

ஒருவன் = இராமன்

தம்பிக்கு = அவனுடைய தம்பிக்கு (இலக்குவனுக்கு)

 உயிர் ஈறு சமைத்து = உயிருக்கு இறுதி செய்து

அவனைக் = அவனை

கம்பிப்பது = நடுங்கும்படி

ஒர் வன்துயர் கண்டிலெனேல் = ஒரு வலிமையான துயரை தரவில்லை என்றால்

நம்பிக்கு = ஆடவரில் சிறந்த உனக்கு

 ஒரு நன்மகனோ இனி நான்? = ஒரு நல்ல மகனாக நான் இருப்பேனா?


அம்மா உயிரோடு இருக்கும் போது , அப்பா இன்னொரு பெண்ணை, அதுவும் மற்றொருவன் மனைவியை  கவர்ந்து வந்து சிறை வைத்து இருக்கிறான்.

அவனுக்காக தம்பி, மகன் என்று எல்லோரும் சண்டைக்குப் போகிறார்கள்.

அவன் செய்வது தவறு என்று தெரிந்தும், அந்தக் குடும்பத்தில் ஒரு ஒற்றுமை  இருக்கிறது.

மாறாக, இராமன் குடும்பத்தைப் பார்த்தால் நமக்கு சற்று சங்கடம் வரும்.

மூத்தவள் மகனுக்கு மகுடம் என்றதும் பொறாத இளைய மனைவி.

கணவன் பேச்சை கேட்காத இளம் மனைவி.

பரதனை திட்டி தீர்க்கும் இலக்குவன்.

தயரதனையும், கைகேயியையும் திட்டும் இலக்குவன்.

நீ என் மனைவி இல்லை,  பரதன் என் பிள்ளை இல்லை என்று வெறுத்துப் பேசும்  தயரதன்.

இராமன் பரம் பொருள் என்பதால் இவற்றை நாம் கவனிப்பது இல்லை.

கசப்பான உண்மை இது.



Tuesday, September 8, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கவளம் உந்துகின் றார்களே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கவளம் உந்துகின் றார்களே


நம் உடலை நாம் எப்படி பயன் படுத்தலாம்?

நல்ல விஷயத்துக்கும் பயன் படுத்தலாம், அல்லாத விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம்.

சிக்கல் என்ன என்றால், எது நல்லது, எது அல்லாதது என்று நமக்குத் தெரிவது இல்லை.

அல்லாததை நல்லது என்று நினைத்துக் கொண்டு நாளும் அதைச் செய்கிறோம்.

அல்லது, எது நல்லது என்று தெரியாமல் குழம்புகிறோம்.

அந்த மாதிரி மயக்கம், குழப்பம் வரும் போது உயர்ந்த நூல்களை எடுத்துப் படிக்க வேண்டும். தெளிவு பிறக்கும்.

வள்ளுவரைக் கேட்டால் சொல்லுவார், செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றிற்கும் ஈயப் படும் என்று.

அவரே சொல்லுவார், தலை எதற்கு இருக்கிறது என்றால் இறைவனை வணங்க என்று.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை

பிரபந்தத்தில் (362) பெரியாழ்வார் சொல்கிறார்


"இந்த கையும் வாயும் எதற்கு இருக்கிறது என்றால் அவன் நாமங்களை சொல்லவும், எத்தனை தரம் சொன்னோம் என்று எண்ணிக் கொள்ளவும் தான் இருக்கின்றன. அதை விடுத்து சிலர், இந்த கை உணவை எடுத்து வாயில் போடவும், இந்த வாய் அந்த உணவை தின்பதற்கும் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு சதா சர்வ காலமும் எதையாவது எடுத்து வாயில் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்"  என்கிறார்.


பாடல்

வண்ணநல்மணி யும்மரகதமும் அழுத்தி கிழலெழும்
திண்ணைசூழ்திருக் கோட்டியூர்த்திரு மாலவன்திரு நாமங்கள்
எண்ணக்கண்ட விரல்களால் இறைப் பொழுதும் எண்ணகி லாதுபோய்
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம் உந்துகின் றார்களே.


பொருள்

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_8.html


வண்ணநல்மணி யும் = வண்ண மயமான நல்ல மணியும்

மரகதமும்  = மரகதமும்

அழுத்தி = பதித்து

கிழலெழும் =  ஒளி விடும்

திண்ணைசூழ்  = திண்ணைகள் சூழ்ந்த

திருக் கோட்டியூர்த்  = திருக்கோட்டியூர்

திரு மாலவன்  = திருமாலவன்

திரு நாமங்கள் = திரு நாமங்கள்

எண்ணக் கண்ட விரல்களால்  = எண்ணிக் கொள்ளும் விரல்களால்

இறைப் பொழுதும் = இமைப் பொழுதும்

எண்ணகி லாதுபோய் = எண்ணுவதை விட்டு விட்டு

உண்ணக் கண்ட = உண்பதற்கும்

தம் = தம்முடைய

ஊத்தைவாய்க்குக் = ஊத்தை வாய்க்கு

கவளம் = கவளம் கவளமாக

உந்துகின் றார்களே. = அள்ளிப் போடுகிறார்களே

பொதுவாகச் சொல்லப் போனால், இந்த உடலை நல்ல விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம். தீய விஷயங்களுக்கும் பயன் படுத்தலாம்.

எப்படி பயன் படுத்துகிறோம் என்று எப்போதும் சிந்தித்துச் செயல் பட வேண்டும்.



Monday, September 7, 2020

பட்டினத்தார் - உய்யுமாறு அருளே

பட்டினத்தார் - உய்யுமாறு அருளே 


கடந்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகளில், நாம் புதிதாகச் செய்தது என்ன?

உணவு, உடை, பேச்சு, நாம் கண்ட பொருள்கள், மனிதர்கள், கேட்ட செய்திகள்?

திருப்பி திருப்பி அதே தோசை, வடை, பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார்...

அதே உடை....சேலை,  சுடிதார், pant , shirt , டீ-ஷர்ட் ....

மீண்டும் மீண்டும் அதே பேச்சு...மாமியார் சரி இல்லை, வீட்டு காரருக்கு ஒண்ணும் தெரியாது, மனைவிக்கு சரியா சமைக்கத் தெரியாது, அந்த கட்சி மோசம், இந்த கட்சி நல்லது, வெயில், மழை.....

அதே டிவி, அதே சீரியல், அதே blog , அதே பாட்டு

சலிப்பு வராதா?

ஏதாவது புதிதாகச் செய்ய வேண்டும், முன்னேற வேண்டும், நல்லது செய்ய வேண்டும், நமக்கும் பிறருக்கும் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் படும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றாதா?

இப்படி செக்கு மாடு போல சில விஷயங்களில் சுத்தி சுத்தி வருகிறேனே, என்னக்கு ஒரு நல்ல வழியை காட்டுவாய் என்று சிவனை வேண்டுகிறார் பட்டினத்தடிகள்.

பாடல்

உண்டதேயுண்டு முடுத்ததேயுடுத்து மடுத்தடுத்துரைத்த யுரைத்தும்,
கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனக நாளெல்லாம்,
விண்டதா மரைமேலன்னம் வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா,
அண்டரேபோற்ற வம்பலத்தாடுமையனேயு மாறருளே.


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_7.html


உண்டதேயுண்டு  = உண்டதே உண்டு

முடுத்ததேயுடுத்து = உடுத்ததே உடுத்து

மடுத்தடுத்து = அடுத்து அடுத்து

உரைத்த யுரைத்தும்,  = சொன்னதையே சொல்லி

கண்டதேகண்டுங் = பார்த்ததையே பார்த்து

கேட்டதேகேட்டுங் = கேட்டதையே கேட்டு

கழிந்தனக நாளெல்லாம், = கழிந்தன நாட்கள் எல்லாம்

விண்டதா மரைமேலன்னம் = விண்ணில் தாமரை மேல் அன்னம்

வீற்றிருக்கும்விழ வீதிவெண்காடா, = அதன் மேல் வீற்று இருக்கும் திரு வெண்காட்டில் உறையும் சிவனே

அண்டரே = தேர்வர்களே

போற்ற = போற்ற

வம்பலத்தாடு = அம்பலத்து ஆடும்

உமையனே = உமை ஒரு பங்கனே

உய்யு மாறருளே. = உய்யுமாறு அருள் செய்யேன்

வேறு ஒன்றும் தெரியாததால், தெரிந்ததையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருக்கிறோம்.

புதிதாக ஏதாவது செய்தி வந்தால் கூட, அதை நாம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை. "அதெப்படி? நான் நம்புவதற்கு எதிராக அல்லவா இருக்கிறது...அதை எப்படி ஏற்றுக் கொள்ளுவது"  என்று எந்த புதிய செய்தி வந்தாலும், அதை புறம் தள்ளி விடுகிறோம்.

அறிவு எப்படி வளரும்?

ஐந்து வயதில் தெரிந்தது தான் ஐம்பது வயதிலும் தெரியும் என்றால், 45 வருடம்  வீணாகி விட்டது என்று அர்த்தம்.

அறிவு வளர வேண்டாமா?

உய்யு மாறருளே...வேறு என்ன செய்வது....அவன் காப்பாற்றினால் தான் உண்டு.





Sunday, September 6, 2020

இலக்கியமும், சினிமா பாடல்களும்

இலக்கியமும், சினிமா பாடல்களும்


ஏதோ அந்தக் காலத்தில் தான் உயர்ந்த பாடல்கள் எழுதப்பட்டன, இப்போதெல்லாம் அப்படி தரமான பாடல்கள் எழுத ஆள் இல்லை என்று நாம் நினைக்கலாம்.

பல சினிமா பாடல்களை கேட்கும் போது, அட, என்ன ஒரு அருமையான வரி என்று நான் பல முறை வியந்திருக்கிறேன். இந்த சினிமா பாடல் வரிகள் இலக்கியத்தில் இருந்து வந்ததா, அல்லது இலக்கியம் இந்த வரிகளுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்ததா என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

மனித மனதின் உணர்வுகளை, உறவின் பிரிவை, பரிவை,  அதில் எழும் சிக்கல்களை அன்றும் பாடி இருக்கிறார்கள், இன்றும் பாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது.

அன்று பாடியவை கொஞ்சம் கடினமான தமிழாக இருக்கிறது. காரணம், அதில் உள்ள பல தமிழ் வார்த்தைகள் இன்று பழக்கத்தில் இல்லை. மேலும், நாம் நமது மொழிப் புலமையை வளர்த்துக் கொள்வது இல்லை. எத்தனை பேர் தமிழ் அகராதி பார்த்து இருப்பீர்கள்?

வாலி இறந்து கிடக்கிறான்.  தாரை அவன் மேல் விழுந்து அழுது புலம்புகிறாள்.

"நீயும் நானும் ஒருவர் உள்ளத்தில் மற்றவர் இருப்பதாக சொல்லிக் கொண்டு எவ்வளவு அன்போடு இருந்தோம். நான் உன் என் நெஞ்சில் இருப்பதாக இருந்தால், இராமன் விட்ட அம்பு என் மேல் குத்தி இருக்க வேண்டும். நீ என் நெஞ்சில் இருப்பதாக இருந்தால் , இப்படி இறந்து கிடக்க மாட்டாய். நாம் ஒருவர் மனதில் இன்னொருவர் இருந்தோம் என்று சொன்னது எல்லாம் பொய் தானா? " என்று புலம்புகிறாள்

பாடல்

செரு ஆர் தோள! நின்
      சிந்தை உளேன் எனின்,
மருவார் வெஞ் சரம்
      எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை
      ஆகின், உய்தியால்;
இருவே முள்
      இருவேம் இருந்திலேம்.

பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_6.html

செரு ஆர் = போர் செய்ய சிறந்த

தோள!  = தோள்களை உடையவனே

நின் = உன்னுடைய

சிந்தை உளேன் எனின், = மனதில் நான் உள்ளேன் என்றால்

மருவார்  = பகைவரது (இராமனின்)

வெஞ் சரம் = கொடிய அம்பு

எனையும் வவ்வுமால்; = என்னையும் கொன்றிருக்க வேண்டும்

ஒருவேனுள் = தனியான என்

உளை ஆகின், =  (நீ ) உள்ளாய் என்றால். அதாவது, என் மனதில் நீ இருந்தால்

உய்தியால்; = நீ தப்பித்து இருப்பாய்

இருவே முள் = இருவருக்குள்

இருவேம் = இருவரும்

இருந்திலேம். = இருக்க வில்லை

இன்று வருவோம்.

முதல்வன் படப் பாடல்.

காதலி பாடுகிறாள்.

உன் உயிருக்கு ஒரு ஆபத்தும் வராது. ஏன் என்றால், உன் உயிர் எனக்குள் இருக்கிறது. என் உயிர்  உனக்குள் இருக்கிறது. 

உன்னை கொல்ல வந்த கூற்றுவன், உன் உயிர் உன் உடம்பில் இல்லாததை கண்டு  குழம்பிப் போய் விடுவான்.  உன் உயிரை எடுக்க வேண்டும் என்றால் என்னைக் கொல்ல வேண்டும். என்னை கொல்ல வேண்டும் என்றால் என் உயிர் உனக்குள் இருக்கிறது. பாவம், எமன் என்ன செய்வான் என்று தன் காதலை வெளிப்படுத்துகிறாள்.


(உன்) உசிா் என்னோட இருக்கையிலே
நீ மண்ணோட போவதெங்கே
அட உன் சீவனே நானில்லையா
கொல்ல வந்த மரணம் கூடக் குழம்புமைய்யா


(முழுப் பாடலையும் தரவில்லை. பல முறை கேட்ட பாடல் தான்).

youtube link கீழே இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=gYD0jmmZtJU&ab_channel=TamilFilmSongs

கம்ப இராமாயணமாக இருந்தால் என்ன,  சினிமா பாடலாக இருந்தால் என்ன,  அன்பு வெளிப்படும் விதம் எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கிறது.

திறந்த மனதோடு எல்லாவற்றையும் அணுகுவோம், இரசிப்போம்.




Saturday, September 5, 2020

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்

நாலடியார் - குழவி யிடத்தே துறந்தார்


நம்மிடம் பணம் இருந்தால் என்ன செய்யலாம்?

பணத்தை நாம் விரும்பிய விதத்தில் செலவழித்து இன்பம் அடையலாம். நல்ல உடை வாங்கலாம், சிறப்பான உணவை உண்டு மகிழலாம்,  சினிமா, ட்ராமா, உல்லாச பயணம் என்று செலவழிக்கலாம்.

அல்லது

அதை சேமித்து வைக்கலாம், கார், வீடு, நிலம், நகை என்று முதலீடு செய்யலாம்.

அவரவர் விருப்பம்.

பணம் மட்டும் அல்ல, நம் நேரமும் அப்படியே. நம்மிடம் இருக்கும் நேரத்தை எப்படி செலவழிக்கலாம் என்று நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

whatsapp , facebook , டிவி, அரட்டை என்று செலவழிக்கலாம்.

அல்லது,

அறிவை வளர்க்க, உடல் ஆரோக்கியத்தை வளர்க்க , நமக்கும் , பிறருக்கும் பயன்படும் வகையில் செலவழிக்கலாம்.

இது  நமக்குத் தெரியும். இருந்தும், நல்ல பெரிய விஷயங்களை செய்யாமல் சில்லறை  விஷயங்களில் நம் நேரத்தை செலவழிக்கிறோம்.

ஏன்?

அப்புறம் செய்து கொள்ளலாம். என்ன அவசரம். இப்ப தலைக்கு மேல வேற விஷயங்கள் இருக்கின்றன.  நல்லதை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் கொள்ளலாம்  என்று நினைக்கிறோம்.

அந்த "அப்புறம்" என்பது வருவதே இல்லை.

நேரம் ஓடி விடுகிறது.  ஐயோ, நேரத்தை வீணடித்து விட்டேனே என்று நாம் வருந்த நேரலாம்.

பாடல்


நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர்
குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா
மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி
இன்னாங் கெழுந்திருப் பார்.


பொருள்

(click below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_5.html



நரைவரும் என்றெண்ணி  = நரை வரும் என்று எண்ணி. அதாவது முதுமை வரும் என்று நினைத்து

நல்லறி வாளர் = நல்ல அறிவு உள்ளவர்கள்

குழவி யிடத்தே = சிறு வயதிலேயே

துறந்தார் = பயன் தராதவற்றை துறந்தார்

புரைதீரா = குற்றம் அற்ற

மன்னா = மன்னவனே

இளமை மகிழ்ந்தாரே = இளமை காலத்தில், மகிழ்ந்து , காலத்தை வீணே போக்கியவர்கள்

கோல் ஊன்றி = கோல் ஊன்றி

இன்னாங் கெழுந்திருப் பார். = துன்பத்தில் இருந்து எழுந்திருப்பார்


இளமையும், ஆரோக்கியமும் எப்போதும் இருக்காது. இருக்கும் போதே அதை நல்ல வழியில் செலவழிக்க வேண்டும்.




Friday, September 4, 2020

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி

திருவாசகம் - கையில் வாங்கவும் நீங்கி 


சிவ பெருமான் நேரில் வந்து, மாணிக்க வாசகருக்கு உபதேசம் தருகிறேன் என்றார்.

மாணிக்க வாசகருக்கு ஆயிரம் வேலை.  முதன் மந்திரி வேலையில் இருந்தார். எனவே, இறைவன் வந்ததையும், அருள் தர இருந்ததையும் தெரியாமல் கை நழுவ விட்டு விட்டார்.

பின் அதை நினைத்து நினைத்து புலம்பிய புலம்பலின் தொகுப்பு தான் திருவாசகம்.

உருகி உருகி பாடியிருக்கார்.

நீத்தல் விண்ணப்பம் என்ற அந்தாதியில் இருந்து ஒரு பாடல்


பாடல்

வளர்கின்ற நின் கருணைக் கையில் வாங்கவும் நீங்கி, இப்பால்
மிளிர்கின்ற என்னை விடுதி கண்டாய்? வெண் மதிக் கொழுந்து ஒன்று
ஒளிர்கின்ற நீள் முடி உத்தரகோசமங்கைக்கு அரசே,
தெளிகின்ற பொன்னும், மின்னும், அன்ன தோற்றச் செழும் சுடரே.

பொருள்

( click the following link to continue reading )

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_4.html



வளர்கின்ற = எப்போதும் வளர்ந்து கொண்டு இருக்கின்ற

நின் கருணைக் கையில் = உன் கருணை நிறைந்த கைகளால்

வாங்கவும் = என்னை வாங்கி, அருள் தர நினைத்தாய். ஆனால் நானோ

நீங்கி = உன்னை விட்டு நீங்கி

இப்பால் = இந்த உலக வாழ்க்கையில்

மிளிர்கின்ற = கிடந்து வாழ்கின்ற

என்னை  = என்னை

விடுதி கண்டாய்? = விட்டு விடுவாயா ?

வெண் மதிக் கொழுந்து ஒன்று = பிறை நிலவு ஒன்று

ஒளிர்கின்ற = ஒளி வீசும்

 நீள் முடி = நீண்ட சடை முடியை உடைய

உத்தரகோசமங்கைக்கு அரசே = உத்தரகோசமங்கைக்கு அரசே

தெளிகின்ற பொன்னும் = தெளிவான சிறந்த பொன் போலவும்

மின்னும் = மின்னல் போலவும்

அன்ன = போன்ற

தோற்றச் செழும் சுடரே. = தோன்றுகின்ற செழுமையான சுடரே

இதில் என்ன இருக்கிறது.  மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்த நினைத்தான்.  அவர் மறுத்து விட்டார். அதனால் புலம்புகிறார். அதனால் நமக்கு என்ன?

இதை நாம் ஏன் உட்கார்ந்து படிக்க வேண்டும். இதில் நமக்கு என்ன பயன்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் எவ்வளவு படிக்கிறோம்.   திருக்குறள், கம்ப இராமாயணம், ஆத்திச் சூடி,  கொன்றை வேந்தன்,  கீதை, மற்ற எத்தனையோ நல்ல நல்ல புத்தகங்கள் எல்லாம் படிக்கிறோம்.

படித்து விட்டு என்ன செய்கிறோம்?

செல் போனில் என்ன செய்தி வந்து இருக்கிறது,  என்ன ஜோக் வந்து இருக்கிறது என்று  பார்ப்போம் , இன்னைக்கு என்ன சமையல், அந்த fixed deposit  போடணும், அந்த பில் கட்டணும், அலுவலக வேலை, என்று நம்ம வேலையை பார்க்கப் போய் விடுகிறோம்.

ஒரு புத்தகம் நம் வாழ்க்கையை மாற்றக் கூடும். படித்துத் தள்ள வேண்டியது. ஒரு சதவீதம் கூட  அது நம்மை பாதிக்காமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வது.

மாணிக்க வாசகருக்கு இறைவன் அருள் செய்ய வந்தும், அவர் அதை கண்டு கொள்ளாமல்  குதிரை வாங்கப் போய்விட்டார்.

இத்தனை புத்தகங்களும் அருள் தர வரிசையில்  நின்று கொண்டு இருக்கின்றன.

எல்லாவற்றையும் எட்டி எட்டி பார்த்து விட்டு நாம் நம் குதிரைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.

மணி வாசகரை இறைவன் விடவில்லை. துரத்தி துரத்தி வந்து அருள் செய்தார்.

ஆனால், அதற்கு முன்னால் சிறைத் தண்டனை, சுடு மணலில் நிற்க வைத்தல் என்று  அத்தனை துன்பமும் பட்டார்.

தேவையா? 

முதலிலேயே கேட்டிருந்தால் இத்தனை துன்பம் வந்திருக்குமா?

அது இருக்கட்டும், ஏதோ மெசேஜ் வந்த மாதிரி இருக்கே, என்னனு பார்ப்போம்.



Tuesday, September 1, 2020

கம்ப இராமாயணம் - வளைத் தோள் வளவி உண்டவன்

கம்ப இராமாயணம் - வளைத் தோள் வளவி உண்டவன் 


கடவுள் போல் ஆக வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா?

மாட்டார்கள்.

ஏன் என்றால், கடவுள் போல் நம்மால் ஆக முடியாது. எதுக்கு வீணா நேரத்தை வீணாக்குவானானேன் என்று இருந்து விடுவார்கள்.

இராமன் கடவுள் என்று சொன்னால், "அப்படியா, அப்படி என்றால் இராமன் செய்தை எல்லாம் நம்மால் செய்ய முடியாது.  கடவுள் எல்லாம் செய்வார். நம்மால் ஆகாது. நம்ம வேலையை பார்ப்போம்" என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விடுவார்கள்.

இராமன் காட்டிய வழியில் செல்ல வேண்டும் என்றால், இராமனும் நம்மைப் போல ஒரு மானிடனாக இருக்க வேண்டும். அதற்காகவே இராமனில் பல மனித குணங்களை ஏற்றிக் காட்டுகிறார்கள். "பார்த்தாயா, அவனும் உன்னைப் போலத்தான்" என்று காட்டுவது, அவனை கீழே இறக்க அல்ல, நம்மை மேலே ஏற்ற. உன்னைப் போன்ற ஒருவன் அப்படி இருக்க முடியும் என்றால், நீயும் அப்படி இருக்கலாம் என்று நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு செல்லவும் தான்.

அப்படி காட்டும் இடங்களில் இராமன், சீதையை பிரிந்து வாடுவதாக வரும் இடங்கள்.

தவிக்கிறான். ஒரு சாதாரண மானிடன் இப்படி துணையை பிரிந்து தவிப்பானோ, அப்படி தவிக்கிறான்.


வாலி வதம் முடிந்து விட்டது. சீதையைத் தேட வேண்டிய கார் காலம் வந்து விட்டது. சுக்ரீவன் வந்த பாடில்லை. கார்காலம் (மழைக் காலம்) பெரும் தவம் செய்த முனிவர்களையே வாட்டும் என்றால், இராமன் பாடு எப்படி இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ என்கிறான் கம்பன்.


பாடல்

அளவு இல் கார் எனும் அப்பெரும்
    பருவம் வந்து அணைந்தால்
தளர்வர் என்பது தவம் புரிவோருக்கும்
    தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
    குழைத்தவள் வளைத் தோள்
வளவி உண்டவன் வருந்தும் என்றால்
    அது வருத்தோ?


பொருள்

(pl click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post.html

அளவு இல் = நீண்ட

கார் எனும்  = கார் காலம் என்று சொல்லப் படும்

அப்பெரும் பருவம் = அந்த பெரிய பருவ நிலை

வந்து = வந்து

அணைந்தால் = சேர்ந்து கொண்டால்

தளர்வர் என்பது = தளர்ந்து போவார்கள் என்பது

தவம் புரிவோருக்கும் = தவம் புரியும் முனிவர்களுக்கும்

தகுமால்; = ஏற்படும் என்றால்

கிளவி = மொழி, சொல், குரல்

தேனினும் அமிழ்தினும் = தேனையும், அமுதத்தையும் விட

குழைத்தவள் = குழைத்து தந்ததைப் போல உள்ள

வளைத் தோள் = மூங்கில் போன்ற நீண்ட தோள்கள்

வளவி = தழுவி

உண்டவன் = இன்பம் அனுபவித்தவன்

வருந்தும் என்றால் = (அவளைப் பிரிந்து ) வருந்துகிறான் என்றால்

அது வருத்தோ? =  அது என்ன சாதாரண வருத்தமா?


பெண்களின் குரல் தேனையும், அமுதத்தையும் கலந்த மாதிரி இனிமையாக இருந்ததாம்.  அந்தக் காலத்தில்.

அகத்தில் இருப்பது, புறத்தில் வரும்.

மனம் இனிமையாக இருந்தால், குரல் இனிமையாக இருக்கும்.

அன்பும், கருணையும், பாசம், காதலும் இருந்தால் குரலில் அது வெளிப்படும்.

இப்போதெல்லாம்  அப்படி எதிர் பார்க்க முடியாது.  ஆணும் பெண்ணும் சமம். ஆணின் முரட்டுக் குரல்தான் பெண்ணுக்கும் வரும். குரல் மட்டும் வேறாக ஏன் இருக்க வேண்டும்?


அது ஒரு புறம் இருக்கட்டும்.


"கார் எனும் பெரும் பருவம்" என்கிறார் கம்பர்.

சீதையை பிரிந்து இருப்பதால், ஒவ்வொரு நொடியும் நீண்டு இருப்பதைப் போல இராமனுக்குத் தெரிகிறது. அந்த கார் காலமே நீண்டு இருப்பதாகப் படுகிறது.



"வளைத் தோள் வளவி உண்டவன் வருந்தும்"

வளவி உண்டவன் என்றால் இன்பம் துய்த்தவன் என்று ஒரு பொருள்.

அவள் கைகளால் உணவு ஊட்ட உண்டவன் என்று பொருள்.

வருத்தம் இருக்காதா?