Wednesday, September 9, 2020

கம்ப இராமாயணம் - நம்பிக்கு ஒரு நன்மகனோ ?

கம்ப இராமாயணம் - நம்பிக்கு ஒரு நன்மகனோ ?


இராமாயணத்தில் பல கதா பாத்திரங்கள், கதை ஓட்டத்தில் முக்கியத்வம் பெறாமல் போய் விடுகின்றன.

நுணுகிப் பார்த்தால் அவை கிடைக்கலாம்.

வால்மீகி இராமாயணத்தை தழுவி எழுதும் போது கம்பனுக்கு எதை எடுப்பது, எதை விடுவது என்ற படைப்புச் சிக்கல் வந்திருக்கும்.

கம்பன் ஒன்றை விடாமல் தன் காப்பியத்தில் சேர்கிறான் என்றால், அதில் ஏதோ சிறப்பு இருக்கும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.

அப்படிப்பட்ட ஒரு கதா பாத்திரம் அதிகாயன் என்ற பாத்திரம்.  இராவணனின் இன்னொரு பிள்ளை. நமக்கு இந்திரஜித்தை நன்றாகத் தெரியும்.

அதிகாயன் பற்றி அவ்வளவாக தெரிந்திருக்காது.

கும்பகர்ணன் போரில் இறந்து போனான். இன்னொரு தம்பி வீடணன், இராமன் பக்கம் போய் விட்டான்.

கும்பகர்ணனை இழந்து வருந்தும் இராவணனைப் பார்த்து அதிகாயன் கூறுகிறான்.

"உன் தம்பியை கொன்று உன்னை வருந்த வைத்த அந்த இராமனை, அவன் தம்பியை கொன்று  அதே போல் வருந்த வைக்கிறேன். அப்படி இல்லை என்றால்,  ஆடவரில் சிறந்த உனக்கு நான் ஒரு நல்ல பிள்ளையாவேனா ?"

என்று வஞ்சினம் கூறி போருக்கு புறப்படுகிறான்.


பாடல்

‘உம்பிக்கு உயிர் ஈறு செய்தான் ஒருவன்
தம்பிக்கு உயிர் ஈறு சமைத்து அவனைக்
கம்பிப்பது ஒர் வன்துயர் கண்டிலெனேல்
நம்பிக்கு ஒரு நன்மகனோ இனி நான்?


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_9.html


‘உம்பிக்கு = உன் தம்பிக்கு

உயிர் ஈறு செய்தான் = உயிருக்கு இறுதி (முடிவு) செய்தான்

ஒருவன் = இராமன்

தம்பிக்கு = அவனுடைய தம்பிக்கு (இலக்குவனுக்கு)

 உயிர் ஈறு சமைத்து = உயிருக்கு இறுதி செய்து

அவனைக் = அவனை

கம்பிப்பது = நடுங்கும்படி

ஒர் வன்துயர் கண்டிலெனேல் = ஒரு வலிமையான துயரை தரவில்லை என்றால்

நம்பிக்கு = ஆடவரில் சிறந்த உனக்கு

 ஒரு நன்மகனோ இனி நான்? = ஒரு நல்ல மகனாக நான் இருப்பேனா?


அம்மா உயிரோடு இருக்கும் போது , அப்பா இன்னொரு பெண்ணை, அதுவும் மற்றொருவன் மனைவியை  கவர்ந்து வந்து சிறை வைத்து இருக்கிறான்.

அவனுக்காக தம்பி, மகன் என்று எல்லோரும் சண்டைக்குப் போகிறார்கள்.

அவன் செய்வது தவறு என்று தெரிந்தும், அந்தக் குடும்பத்தில் ஒரு ஒற்றுமை  இருக்கிறது.

மாறாக, இராமன் குடும்பத்தைப் பார்த்தால் நமக்கு சற்று சங்கடம் வரும்.

மூத்தவள் மகனுக்கு மகுடம் என்றதும் பொறாத இளைய மனைவி.

கணவன் பேச்சை கேட்காத இளம் மனைவி.

பரதனை திட்டி தீர்க்கும் இலக்குவன்.

தயரதனையும், கைகேயியையும் திட்டும் இலக்குவன்.

நீ என் மனைவி இல்லை,  பரதன் என் பிள்ளை இல்லை என்று வெறுத்துப் பேசும்  தயரதன்.

இராமன் பரம் பொருள் என்பதால் இவற்றை நாம் கவனிப்பது இல்லை.

கசப்பான உண்மை இது.



2 comments:

  1. இன்னொரு கண்ணோட்டத்தில் பார்க்கலாமே.ராமனின் உடன் பிறந்தோர்,மனைவி,தாய்மார்கள் எல்லோரும் சாதரணமாக நாம் பார்க்கும் மனித உணர்வுகளை வெளிப் படுத்தி இருக்கிறார்கள்.
    ராவணனை சேர்ந்தவர்களோ அசுரர் கூட்டம். பாகுபாடு இல்லாமல் மிருகங்கள் மாதிரி தன இனத்தோடு மட்டும் சேர்கின்ற இயல்பு. விபீஷணன் இதில் ஒரு விலக்கு.

    ReplyDelete
  2. பார்த்தசாரதி அவர்கள் சொன்னது நல்ல சொல்!

    ReplyDelete