Thursday, September 10, 2020

நாலடியார் - பையெனப் பையெனவென்று அஞ்சிப்பின் வாங்கும் அடி.

நாலடியார் - பையெனப் பையெனவென்று அஞ்சிப்பின் வாங்கும் அடி.



இந்த பெண் பிள்ளைகளை பெற்று விட்டு, பெற்றோர் படும் பாடு இருக்கிறதே அது சொல்லி மாளாது. அப்படி ஆசை ஆசையாக வளர்ப்பார்கள். கட்டிக் கொடுப்பார்கள். போன இடத்தில், பிறந்த வீடு மாதிரி செல்லம் இருக்குமா? எல்லோரையும் போல வேலை செய்ய வேண்டி இருக்கும்.

"ஐயோ, என் பிள்ளையை எப்படியெல்லாம் பொத்தி பொத்தி வளர்த்தேன்...இப்ப இப்படி கஷ்டப் படுகிறாளே " என்று வருந்துவார்கள்.

இந்தக் கவலை இன்று வந்தது அல்ல. நாலடியார் காலத்தில் இருந்து வருகிறது.

அவள் ஒரு செல்லப் பிள்ளை.

அந்தக் காலத்தில் பெண்களின் பாதங்களை அழகு செய்வார்கள். பஞ்சில் சிவந்த வண்ணங்களை முக்கி, விரலில், பாதத்தின் ஓரங்களில் வண்ணம் தீட்டுவார்கள். பார்க்க பாதம் சிவந்து அழகாக இருக்கும்.

அப்படி, அந்த பெண்ணுக்கு காலில் வண்ணம் தீட்ட முயன்ற போது , "மெல்ல, மெல்ல, கால் வலிக்குது" என்று காலை இழுத்துக் கொள்வாளாம்.

சிவந்த குழம்பை பஞ்சில் நனைத்து பாதத்தில் வைத்தால் அது அவளுக்கு வலிக்குமாம்.

அப்படி இருந்த பெண், இன்று என்னடா என்றால், செருப்பு கூட போடாமல், கல்லும் முள்ளும்  உள்ள கட்டாந்தரையில் நடக்கிறாள்.  பெற்றோர்கள் கண் கண்  கலக்குகிறார்கள்.

நாமும் தான்.


பாடல்


அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
பரற்கானம் ஆற்றின கொல்லோ, -அரக்கார்ந்த
பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
அஞ்சிப்பின் வாங்கும் அடி.



பொருள்

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/09/blog-post_10.html


அரக்காம்பல் = சிவந்த  ஆம்பல் போன்ற மலர்கள்

நாறும்வாய் = போல வாசம் வீசும் அவளது வாய்

அம்மருங்கிற் கன்னோ =  இடையில்.  இங்கு பாதம்

பரற் கானம் = சரளை கற்களை கொண்ட காட்டில்

ஆற்றின கொல்லோ = உள்ள வழியில் எப்படி நடப்பாள்

அரக்கார்ந்த = சிவந்த குழம்பை

பஞ்சிகொண் டூட்டினும் = பஞ்சில் நனைத்து காலில் தடவினாலும்

பையெனப் பையெனவென்று = பைய, பைய என்று

அஞ்சிப்பின் வாங்கும் அடி. = அச்சம் கொண்டு காலை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ளும் அந்த  மென் பாதம் 

1 comment: