Tuesday, March 31, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழை இலை

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாழை இலை 


வாழை இலை பார்த்து இருக்கிறீர்களா?

அதன் நடுவில் ஒரு தண்டு மாதிரி இருக்கும். இரண்டு இலையை அந்தத் தண்டுப் பகுதியில் ஒட்டி வைத்த மாதிரி இருக்கும்.

அது எப்படி வந்தது தெரியுமா?

அதற்கு ஒரு கதை இருக்கிறது.

இராவண வதம் முடிந்த பின், தாங்கள் வரும் செய்தியை பரதனுக்கு சொல்லி வரும்படி அனுமனை இராமன் அனுப்பினான். அனுமனும் சொல்லிவிட்டு மீண்டும் இராமனிடம் வருகிறான். இப்படி பரதன் தீக்குளிக்க இருந்தான், அவனை தடுத்து நீங்கள் வரும் செய்தியைக் கூறி விட்டு வந்தேன் என்று சொன்னான்.

அனுமன் வருகிற சமயம் பார்த்து, இராமர் உணவு அருந்திக் கொண்டு இருந்தார். அனுமனுக்கும் பசிக்கும் தானே?

அனுமனுக்கு ஒரு இலை போட்டச் சொல்லலாம். அதற்கு கொஞ்சம் நேரம் ஆகும். பாவம், பக்தன் பசியாக இருப்பான் என்று, தன்னுடைய இலையிலேயே, தான் உண்ணும் உணவையே சாப்பிடும் படி சொன்னாராம் இராமர்.

'இந்தா இந்த உணவு உனக்கு, இந்தப் பகுதி எனக்கு" என்று கையால் இலையில் பிரித்து  வைத்தாராம். அப்படி பிரித்த பின் தான் வாழை இலை இரண்டு பகுதியாக மாறியது என்று   ஒரு கதை உண்டு.

"இராமரும் அனுமனும் ஒரே இலையில் சாப்பிட்டார்களா? கேள்விப் பட்டதே இல்லையே...இராமாயணத்தில் எங்கே வருகிறது இப்படி" என்று கேட்காதீர்கள்.

இராமாயணத்தில் இல்லை, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இருக்கிறது.

திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரம்.

பாடல்

வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து

காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று

கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்

ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.


பொருள்

வாத = வாதம் என்றால் காற்று. வாயு

மாமகன் = வாயு புத்திரனான அனுமன்

மர்க்கடம் = குரங்கு

விலங்கு = விலங்கு

மற்றோர் சாதி  = மனித ஜாதி அல்லாத வேறு ஒரு ஜாதி

யென் றொழிந்திலை = என்று தள்ளி வைக்கவில்லை

உகந்து = மனம் மகிழ்ந்து

காதல் = அன்புடன்

ஆதரம் = அன்பு

கடலினும் பெருகச் = கடலை விட பெரிதாக

செய்த = அனுமன் செய்த

தகவினுக் உதவிக்கு

 கில்லைகைம் மாறென்று = பதில் உபகாரம் ஒன்று இல்லை என்று

கோதில் = குற்றமற்ற

வாய்மையி னாயொடு முடனே  = உண்மையானவனான அனுமனோடு

உண்பன் நான் = நான் உண்பேன்

என்ற = என்ற

ஓண்பொருள் = சிறந்த விஷயம்

எனக்கும் = எனக்கும் (திருமங்கை ஆழ்வாருக்கும்)

ஆதல் வேண்டுமென்று  = வேண்டும் என்று

றடியிணை யடைந்தேன் = உன் திருவடிகளை அடைந்தேன்

அணி பொழில்திரு வரங்கத்தம் மானே. = சோலைகளை அணிகலமாக கொண்ட திருவரங்கத்தில் உள்ள  அம்மானே

போதுமா?

இராமன், அனுமனோடு ஒன்றாக உண்டான் என்று  ஆழ்வார் சொல்கிறார்.

உண்டாரா, இல்லையா என்பதல்ல கேள்வி. இதில் நாம் உள்ளே உள்ள கவி உள்ளதை அறிய வேண்டும்.

முதலாவது,  பக்தன் கேட்கவே இல்லை. எனக்கு பசிக்கிறது என்று அனுமன் சொல்லவே இல்லை.  அவனுக்கு பசிக்குமே என்று அறிந்து, இராமர் அவனுக்கு உணவு  அளிக்கிறார். எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுபவர்கள்  ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று  கூட அறியாத அவனால் அதை எப்படித் தர முடியும்?

இரண்டாவது, என்ன வேண்டும் என்றால் அதை உடனே தர வேண்டும் என்பது  ஆண்டவன் விருப்பம். இன்னொரு இலை போட்டால் அதற்கு நேரம் ஆகும் என்று, என் இலையிலேயே சாப்பிடு என்கிறார்.  எதை, எப்போது தர வேண்டும்  என்று அவனுக்குத்  தெரியும்.

மூன்றாவது,  குரங்குதானே, தாழ்ந்தது தானே என்று இராமர் நினைக்கவில்லை. கணவன் சாப்பிட்ட இலையில் சாப்பிடுவது, அல்லது மனைவி சாப்பிட்ட இலையில்  கணவன் சாப்பிடுவது என்றால் கூட கொஞ்சம்  சங்கடம் இருக்கும். ஒரு குரங்கை, தன்னோடு ஒரே இலையில் சாப்பிடச் சொல்ல முடியுமா?

நான்காவது, ஏதோ கடமைக்கு சொல்லவில்லை. கடல் போன்ற அன்போடு ஒன்றாக  உணவு அருந்தச் சொன்னார்.  மனிதர்களுக்கு மனிதர் வேறுபாடு   காட்டும் இந்த உலகில்,  ஒரு குரங்கோடு அன்போடு ஒன்றாக உணவு உண்டார்.  இராமரை வணங்குபவர்கள், பின் பற்றுபவர்கள் ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும்.

ஐந்தாவது,  "குரங்கையே ஒன்றாக சேர்த்து உணவு உண்ணச் சொன்னாயே இராமா,  நான் குரங்கை விட மோசமானவனா ? எனக்கும் அந்த அருள் வேண்டும் " என்று தாழ்ந்து வேண்டுகிறார் ஆழ்வார்.

அடுத்த முறை வாழை இலையில் உணவு உண்ணும் போது, இந்த பாசுரத்தை  நினைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாசுரம் என்றாலும், மனம் எல்லாம் நிறைந்து போகிறது அல்லவா?

இப்படி கிட்டத்தட்ட 4000 பாசுரம்.

ஒரு நாளைக்கு ஒரு பாசுரம் என்று வைத்துக் கொண்டு படித்தாலும், பத்து பதினோரு வருடம் ஆகி விடும்.

முழுவதும் படிக்க முடியாவிட்டாலும், முடிந்த வரை படிக்கலாமே.

interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_31.html

Thursday, March 26, 2020

திருக்குறள் - வாழ்க்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம்

திருக்குறள் - வாழ்க்கை துணை நலம்  - ஒரு முன்னோட்டம் 


இல்லறத்தை நடத்தும் பொறுப்பை கணவனிடம் கொடுத்து இருக்கிறது நம் கலாச்சாரம்.

அந்தப் பொறுப்பில், அவனுக்கு துணை செய்யும் பொறுப்பை மனைவிக்கு கொடுத்து இருக்கிறது.

இது வள்ளுவர் சொன்னது அல்ல. வள்ளுவர் இதை கண்டு பிடிக்கவில்லை. வள்ளுவர், இருந்த அறத்தை தொகுத்துச் சொன்னார். அது மட்டும் தான் அவர் வேலை.

சரி, அது என்ன ஆண்களுக்கு பொறுப்பு, பெண்களுக்கு வெறும் துணை செய்வது மட்டும் தானா? ஏன் பெண்கள் பொறுப்பு எடுத்துக் கொண்டு, ஆண்கள் துணை செய்யக் கூடாதா என்று கேட்கலாம்.

இதெல்லாம் ஒரு பெண்ணாதிக்க சிந்தனை. பெண்ணடிமைத் தனத்தின் வெளிப்பாடு. வள்ளுவரும் ஒரு ஆணாதிக்க சிந்தனை வாதிதான். திருக்குறள் ஒரு பிற்போக்கு சிந்தனை உள்ள நூல் என்று சில படித்த மேதாவிகள் சொல்லக் கூடும்.

எது யாருக்கு இயல்பாக வருகிறதோ, அதை அவர்கள் செய்ய வேண்டும்.

வலிந்து கொண்டு நானும் செய்கிறேன் என்று  இயற்கைக்கு புறம்பாக செய்யத் தலைப்பட்டால், காலால் நடப்பதை விட்டு விட்டு கையினால் நடப்பதைப் போன்றது அது.

ஏன், கால்தான் நடக்க வேண்டுமா? நாங்களும் நடப்போம் என்று தலைகீழாக  கையை ஊன்றி நடக்கலாம். தப்பில்லை. அது எவ்வளவு அறிவீனமான செயல்  என்று புரிந்து கொள்ள வேண்டும்.

எங்கோ ஒரு பெண் பெரிய பதவியில் இருக்கலாம். சாதனைகள் செய்து இருக்கலாம். இல்லை என்று சொல்வதற்கு இல்லை.

சர்க்கஸில் கரடி சைக்கிள் ஓட்டும்.  "பார், எங்களுக்கும் சைக்கிள் ஓட்டத் தெரியும்.  இத்தனை நாள் எங்களை சைக்கிள் ஓட்ட விடாமல் அடிமையாக வைத்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் காட்டில் சைக்கிளில் தான் போவோம், வருவோம் " என்று எல்லா கரடிய வாதிகளும் கொடி பிடித்தால்  என்ன  செய்வது? சரி ஓட்டுங்கள் என்று விட்டு விட வேண்டியதுதான். பேசுவதால் பயனில்லை.

சரி, திருக்குறளுக்கு வருவோம்.

அது என்ன வாழ்க்கை துணை நலம்.

துணை என்றால் கீழே என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. aasisstant அல்ல.

தமிழில் துணை என்றால் ஒரு படி மேலே. ஒரு படி அல்ல, பல படி மேலே உள்ளதைத்தான் துணை என்று  கூறுவது வழக்கம்.

அபிராமி பட்டர், அம்பாளை துணை என்பார்.  தன்னை விட கீழே இருப்பவள் என்ற அர்த்தத்திலா சொல்லி இருப்பார்?

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் – பனி மலர்ப் பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்

அணையும், திரிபுர சுந்தரி – ஆவது அறிந்தனமே!


அருணகிரிநாதர் , துணை என்று எதையெல்லாம் சொல்கிறார் பாருங்கள்


விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.


துணை என்று சிவனைச் சொல்கிறார் அப்பரடிகள்

"துணையா என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ" என்பது அப்பர் வாக்கு.



அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ

ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துணையா என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ

இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே



நல்ல துணை ஆவது நமச்சிவாயவே என்பதும் அப்பர் வாக்கே.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே




"துணையோடு அல்லது நெடு வழி போகேல்" என்பது ஒளவை வாக்கு.






எனக்கு ஒரு இடத்துக்குப் போக பயமாக இருக்கிறது என்றால் எனக்கு துணையாக  யாரை அழைத்துச் செல்வேன்? என்னை விட பயந்த ஒருத்தனையா அல்லது  என்னைவிட தைரியம் உள்ள ஒருவனையா?

துணை என்பது நம்மால் செய்ய முடியாததை செய்ய உதவி செய்வது.

காரியம் செய்வதற்கு முன்னால்

முருகா துணை, பிள்ளையார் துணை என்று எழுதிவிட்டு தொடங்குவோம்.

அவர்கள் நம்மை விட தாழ்ந்தவர்கள் என்பதாலா?

இல்லற பொறுப்பு என்பது மிகப் பெரிய பொறுப்பு. அதை ஒரு ஆடவனால் தனியாக செய்யவே முடியாது. அவனுக்கு துணை வேண்டும். அவனை விட  திறமையான, புத்திசாலியான ஒரு துணை வேண்டும்.

அதை பெண்ணிடம் கொடுக்கிறார் வள்ளுவர். மனைவியிடம் கொடுக்கிறார்.

எனவே அவள் வாழ்க்கை துணை நலம்.

வாழ்க்கையில் நல்லது செய்வதற்கான துணை.

வீடு அதிகாரம் அனைத்தையும் அவள் கையில் தருகிறார் வள்ளுவர்.

இனி வரும் பத்து குறள்களில் அவற்றை விரிவாக காண இருக்கிறோம்.

இருக்கிறோம் தானே?

மாறாக, என்ன தான் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது. வள்ளுவர் ஒரு பிற்போக்கு வாதி.  ஆணாதிக்க சிந்தனை உள்ளவர். அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.  எங்களுக்கு எல்லாம் தெரியும்...என்று நினைப்பவர்கள்,  அடுத்து வரும் பத்து குறள் சம்பந்தப்பட்ட ப்ளாகுகளை தவிர்ப்பது  நலம்.

தெரிந்ததைப் படித்து நேரத்தை வீணாக்குவானேன்?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_26.html

Tuesday, March 24, 2020

நன்னூல் - தாலாட்டு

நன்னூல் - தாலாட்டு 

எப்பப் பார்த்தாலும் பக்தி, காதல், அறம் ...இதை விட்டால் தமிழில் வேற ஒன்றும் இல்லையா ?

ஏன் இல்லை?

தாலாட்டுக்கு மயங்காதவர்கள் யார்? 

குழந்தைகளை தூங்க வைக்க, தாய்மார்ககள் தாலாட்டுப் பாடுவார்கள். 

தாலாட்டு என்றால் என்ன ?

தால் என்றால் நாக்கு 

ஆட்டு என்றால் ஆட்டுவது. 

நாவை ஆட்டுவது தாலாட்டு. 

தாலாட்டில் பெரும்பாலும் 'ல' அல்லது 'ர' என்று எழுத்துக்களே வரும்.

ஆராரோ, ஆரிரரோ 

ரோ ரோ ரோ ....

லல்லாலா லல்லா லல்லா 

என்று இந்த எழுத்துக்களே பெரும்பாலும் வரும். 

ஏன் ஆடா என்றோ ஆபா என்று சொல்லுவது இல்லை. 

தமிழில் எவ்வளவு தூரம் யோசித்து இருக்கிறார்கள் என்று பார்ப்போம்.

தமிழில் ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரிப்பது என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.

ஒரு எழுத்தை அப்படித்தான் உச்சரிக்க வேண்டும். 

ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை எப்படி உச்சரிப்பது என்பதற்கு இலக்கணம் இருப்பதாகத் தெரியவில்லை. 

இந்த ல மற்றும் ர வை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று நன்னூல் கூறுகிறது. 

"அண்ணம் நுனிநா வருட ர ழ வரும் "

அண்ணம் என்றால் மேல் வாய்.  வாயின் மேல் பகுதியை நாக்கு வருட ர மற்றும்  ழ என்ற எழுத்துப் பிறக்கும். 

நாக்கு எங்கே, எதைத் தொடவேண்டும், எப்படித் தொட வேண்டும் என்று இலக்கணம் இருக்கிறது. 

ல்  மற்றும் ள் எப்படி பிறக்கும் தெரியுமா ?


அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும் வருடவும் லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் 

மேல் வாயின், பல்லின் அடிப் பகுதியை நாக்கின் விளிம்பு (அதாவது நாவின் நுனி) அழுத்தமாக தொடவும், வருடவும் லகரம் மற்றும் ளகரம் பிறக்கும்.

ல மற்றும் ர  இந்த இரண்டு எழுத்துக்கும் நாக்கை வருட வேண்டும். 

அப்படி வருடுவதால் அது ஆடுகிறது. 

நா ஆடுவதால் அது தாலாட்டு.

பிள்ளைகளுக்கோ , பேரப் பிள்ளைகளுக்கோ அடுத்த முறை தாலாட்டு பாடும் போது  நன்னூலை நினைத்துக் கொள்ளுங்கள். 


Friday, March 20, 2020

திருக்குறள் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்

திருக்குறள் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் 


இல் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்று சொன்னார். இல் வாழ்வின் கடமைகள் பற்றிச் சொன்னார். பின், அதன் பயன் பற்றிச் சொன்னார். அதன் உயர்வு பற்றி சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், இறுதியாக ஒன்றைச் சொல்லி முடிக்கிறார்.

இல்வாழ்வில், அதற்கு விதிக்கப்பட்ட முறையில் வாழ்பவன், வானில் உள்ள தெய்வங்களுக்கு இணையாக வைக்கப்படும் என்கிறார்.

பாடல்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

பொருள்


வையத்துள் = இந்த உலகில்

வாழ்வாங்கு வாழ்பவன் = இல்லற தர்மத்தின் படி வாழ்பவன்

வானுறையும் = வானில் வசிக்கும்

தெய்வத்துள் = தெய்வங்களுள் ஒன்றாக

வைக்கப் படும். = வைத்து எண்ணப் படுவான்

இது கொஞ்சம் ஓவரா தெரியல? என்னதான் இல்லறம் சிறந்தது என்றாலும், அதற்காக தெய்வத்துக்கு  இணையாக சொல்ல முடியுமா?

பின் ஏன் வள்ளுவர் அவ்வாறு சொல்கிறார்?

வள்ளுவர் எந்த ஒன்றை செய்தாலும் அதற்கு இம்மை மற்றும் மறுமை பயன்கள்  இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

ஏதோ இந்த வாழ்வில் கொஞ்சம் பயன் கிடைத்தால் போதும் என்று நினைக்க மாட்டார்.  மறுமைக்கும் பலன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

இல்லற தர்மத்தில் இருந்து வாழ்பவன், இந்த வாழ்க்கை முடிந்த பின் கட்டாயம்  மேலுலகம் சென்று அங்குள்ள தேவர்கள், தெய்வங்களோடு இருப்பான்  என்பது திண்ணம் என்பதால், அவன் "வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்"  என்றார்.

வானுறையும் தெய்வம் என்று சொல்லவில்லை.

மக்கள் அவனை தெய்வத்துக்கு இணையாக வைப்பார்கள் என்று கூறுகிறார்.

ஏன்?

தெய்வம் என்ன செய்யும்?

உதவி செய்யும். நல்லது செய்யும். துன்பம் துடைக்கும். அருள் செய்யும்.  ஆபத்தில் இருந்து காக்கும்.

இல்லறத்தில் உள்ளவனும் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும். செய்வான். செய்ய வேண்டியது கடமை.

இவற்றை எல்லாம் ஒருவன் செய்வதால், அவன் தெய்வத்துள் ஒன்றாக கருதப்படுவான் என்கிறார்.

"எப்படிடா இந்த சிக்கல் இருந்து தப்பிப்பது என்று தவித்துக் கொண்டிருந்தேன். தெய்வம் போல வந்து உதவி செஞ்சீங்க" என்று கூற கேட்டு இருக்கிறோம் அல்லவா?

அப்படி உதவி செய்பவர்களை, உலகத்தில் உள்ளவர்கள் தெய்வம் போல போற்றுவார்கள் என்பது கருத்து.

இல்லறத்தின் பெருமையை இதைவிட உயர்வாகச்  சொல்ல முடியாது.

மீண்டும் ஒரு முறை பத்து குறளையும் படித்துப் பாருங்கள்.

குடும்பம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியும்.

ஏதோ ஒரு ஆணும் பெண்ணும்  கூடி, சுகம் அனுபவிப்பது என்பது அல்ல இல்லறம். அது ஒரு பகுதிதான்.

கோவிலுக்குப் போனால் சுண்டல் கிடைக்கும். சுண்டலுக்காக கோவிலுக்குப் போக முடியுமா ? அது போல, ஆண் பெண் சுகம் என்பது ஒரு சிறிய பகுதி அவ்வளவுதான்.

இல்லறம் என்பது மிகப் பெரிய விஷயம். நாம் அதை நீர்த்துப் போக வைத்து விட்டோம்.  அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று ஆக்கி விட்டோம்.

திருக்குறள் மனிதனை குடும்பத்தோடு பிணைக்கிறது.

குடும்பத்தை சமுதாயத்தோடு இணைக்கிறது.

மனிதன் , தான் என்ற வட்டத்தை விட்டு, குடும்பம் என்ற பெரிய வட்டத்துக்குள் வருகிறான். பின், சமுதாயம் என்ற இன்னும் பெரிய வட்டத்துக்குள் வருகிறான். பின், ஒட்டு மொத்த மனித சமுதாயத்தை நேசிக்கத் தலைப்படுகிறான்.  அங்கிருந்து வானுலகம், வீடு பேறு என்பதெல்லாம் வரும்.

வள்ளுவர்  சொர்க்கத்துக்கு எட்டு வழி சாலை போட்டுத் தருகிறார்.

அதில் அப்படியே போய் கொண்டே இருந்தால், இறைவன் திருவடி அல்லது சுவர்க்கம்  சென்று விடலாம்.

மேப் போட்டுத் தருகிறார்.

போக வேண்டியது மட்டும் தான் பாக்கி.

சரி, இத்தனை வேலை சொல்கிறார். இதை எல்லாம் ஒருவன் எப்படி செய்வது?  அதற்கு ஒரு வழி சொல்ல வேண்டாமா?

வள்ளுவர் அப்படி விட்டு விடுவாரா?

இதை எப்படி செய்வது என்றும் சொல்லித் தருகிறார்.

கேட்போமா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_20.html

Wednesday, March 18, 2020

திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான்

திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான் 


மொத்த வாழ்க்கையை இரண்டாக பிரித்துக் கொண்டார்கள் நம் முன்னவர்கள்.

ஒன்று இல்லறம், இன்னொன்று துறவறம்.

இல் + அறம்

துறவு + அறம்

எந்த வழியில் போனாலும் அறம் சார்ந்தே வாழ்க்கை இருக்க வேண்டும் என்பது விதி.

இந்த இரண்டில் எது சிறந்த அறம் ? எது உயர்ந்தது என்ற கேள்வி வரும் அல்லவா?

அறம் என்றாலே அது இல்லறம்தான் என்று அடித்துச் சொல்கிறார் வள்ளுவர்.

பாடல்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

பொருள்


அறன் = அரம்

எனப் பட்டதே = என்று சொல்லப் பட்டதே

இல்வாழ்க்கை = இல் வாழ்க்கைதான்

அஃதும் = துறவறம்

பிறன் = மற்றவர்கள்

பழிப்பது = பழித்துச் சொல்லாமல்

இல்லாயின் நன்று = இல்லாமல் இருந்தால் நல்லது


"அறன் எனப் பட்டது இல் வாழ்க்கை" என்று சொல்லி இருக்கலாம் தானே?  ஏன்

"அறன் எனப் பட்டதே" என்று என்று சொன்னார் ?

பட்டது, பட்டதே ...என்ன வேறுபாடு?

பட்டதே என்ற சொல்லில்  வரும் ஏகாரம் பிரிநிலை ஏகாரம். பிரிநிலை என்றால் ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்துக் காட்டுவது.

சில உதாரணங்கள் பார்ப்போம்

அனைத்து மாணவர்களிலும்  அவனே சிறந்த மாணவன்

இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.

இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.

பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.

ஓடுவதே சிறந்த உடற் பயிற்சி

அறம்  பல உண்டு. அதில் இருந்து இல்லறத்தை பிரித்துக் காட்டுகிறார். ஏன் என்றால்,  மற்ற அறங்களை பற்றி பின்னால் சொல்லப் போகிறார்.

என்ன சொல்கிறார்

"அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று"

இங்கே வரும் "அஃதும்" என்பது துறவறத்தை குறித்தது.

துறவறம் பழிப்புக்கு உள்ளாவது இயற்கை. ஏன் என்றால், புலன்களை அடக்கி  வாழ்வது என்பது கடினமான செயல். புலன்களை அனுபவிக்க விடாமல் அவற்றை கட்டுப் படுத்துவது என்பது இயற்கைக்கு மாறான செயல். அதை எளிதில் யாரும் நம்ப மாட்டார்கள்.

பெண் ஆசையை துறந்து விட்டேன் என்று ஒருவன் சொன்னால், அவனை யார்   நம்புவார்கள்? "நமக்குத் தெரியாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பான்" என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்யும். ஒரு சின்ன தவறு நிகழ்ந்தால் கூட, "நான் சந்தேகப் பட்டது சரியாகப் போய் விட்டது" என்று உலகம்  இகழ தலைப் படும். அப்படி கொஞ்சம் கூட பழி சொல் வரமால் இருந்தால் , துறவறமும் சிறந்ததுதான் என்கிறார்.

இல்வாழ்க்கை புலன் இன்பங்களை அனுபவிக்க அனுமதி தருகிறது.

அளவோடு, மென்மையாக, தேவையான அளவு அனுபவித்துக் கொள்ள வழி செய்கிறது. எனவே, இல்லறத்தில் இருப்பது என்பது ஒரு இயற்கையான செயல். இல்லறத்தின் வழியே எளிதாக செல்ல முடியும். துறவறம் கடக்க கடினமான பாதை.  பாதை தவறிவிட நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

எனவே, அறம் என்றாலே இல்லறம் தான் என்று சொல்கிறார் வள்ளுவர்.

அதுவே உயர்ந்த அறம்.

துறவி எல்லாம், இல்லறத்தானுக்கு ஒரு படி கீழே.  இல்லறத்தில் இருக்கும் நீங்கள்  துறவியைப் போய் பார்க்க வரிசையில் நிற்க வேண்டாம். துறவி என்றால் ஏதோ பெரிய ஆள்  என்று அவரை சென்று வணங்க வேண்டியது இல்லை. துறவறத்தை விட இல்லறம் சிறந்தது.

"அது என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? அவர் பெரிய மகான். துறவி...சாமியார்...அவரை விட நான் எப்படி உயர்ந்தவனாக இருக்க முடியும்"

என்று நீங்கள் கேட்கலாம்.

வள்ளுவர் அதையும் விளக்குறார்.

நாளை?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_18.html

Tuesday, March 17, 2020

திருக்குறள் - ஆற்றின் ஒழுக்கி

திருக்குறள் -  ஆற்றின் ஒழுக்கி


தவம் செய்வது என்பது லேசான காரியம் இல்லை. வீடு, வாசல், மனைவி, மக்களை துறந்து மேலும் பசி, தாகம், வெயில், குளிர் இவற்றை எல்லாம் பொறுத்து தவம் செய்வது என்பது எளிதான காரியமா?

பிரம்மச்சரியம் என்பதும் எளிதான காரியம் இல்லை. உடம்பு படுத்தும். ஹார்மோன்கள் உந்தித் தள்ளும். அவற்றைக் கட்டுக்குள் வைத்து இருப்பது என்பதும் எளிதான காரியம் இல்லை.

இப்படி எல்லாம் தங்கள் வாழ்க்கை முறையில் கஷ்டப் படுபவர்களை விட, இல்லறத்தில் இருப்பவனின் வாழ்க்கை மேலானது என்கிறார் வள்ளுவர்.

வீட்டில் சந்தோஷமாக மனைவி, பிள்ளைகள், சுற்றம் என்று இருப்பது அப்படி என்ன கடினமான காரியமா ?

ஆம் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

பொருள்

ஆற்றின் ஒழுக்கி = சரியான வழியில் செலுத்தப்பட்டு

அறனிழுக்கா = அறன் இழுக்கு இல்லா

இல்வாழ்க்கை = இல் வாழ்க்கை

நோற்பாரின் = தவம் மேற் கொள்வாரில்

நோன்மை உடைத்து = பெருமை உடைத்து

ஆற்றின் ஒழுக்கி = ஆறு என்றால் வழி. வழி என்றாலே நல்ல வழி தான். நல்ல வழியில்  சென்று. அல்லது செலுத்தப்பட்டு.



ஆற்றின் ஒழுகி என்று சொல்லி இருந்தால், அற வழியில் நடந்து என்று பொருள் கொள்ளலாம்.

ஒழுக்கி என்றால் செலுத்தி. அதாவது மற்றவர்கள் அற வழியில் செல்ல உதவி செய்து என்று அர்த்தம்.

இல்லற வாழ்க்கையில் இருந்து, அதை அற வழியில் நடத்தி, ஒரு குற்றமும் இல்லாமல்  செலுத்திக் கொண்டு போவது என்பது மற்ற அனைவரையும் விட சிறந்தது.

ஏன்?

ஒரு துறவி தனக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறான்.

ஒரு பிரம்மச்சாரி தனக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறான்.

ஆனால், இல்லறத்தில் இருப்பவனோ, இவர்களை துன்பத்தில் இருந்து காப்பது மட்டும் அல்ல,  தன் துன்பத்தையும், தன் உறவினர் துன்பத்தையும்  ஏற்று, அவற்றை போக்கும் வழி காண்கிறான்.

வீட்டுக்கு ஒரு துறவி வந்தால், அவன் பசியை போக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை.

அதே போல் விருந்து, உறவினர், என்று அனைவரின் துன்பத்தையும் ஏற்று அவற்றை களைவது  இல்லற தர்மம்.

அதுவும் அற வழியில் ஈட்டிய பொருளால் களைய வேண்டும்.

தான் அற வழியில் நின்றால் போதாது, மற்றவர்களும் அற வழியில் செல்ல உதவ வேண்டும்.

மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், நட்பு, விருந்து, துறவிகள், என்று எல்லோரின் பாரத்தையும் சுமக்க வேண்டியது  இல்லறத்தானின் கடமை.

'தனிக் குடித்தனம்' போய் தானும் தன்  மனைவி மக்கள் மட்டும் இன்பமாக இருப்போம் என்று நினைப்பது இல்லற தர்மம் இல்லை.

எவ்வளவு பெரிய சுமையை ஒரு இல்லறத்தானின் தலையில் வள்ளுவர் வைக்கிறார்.

நீ இதையெல்லாம் செய். இது உன் கடமை என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு போய் விடவில்லை.

இதெல்லாம் செய்தால் என்ன கிடைக்கும் என்று பலன் சொல்கிறார்.

இவற்றை செய்ய யார் துணை செய்வார்கள் என்று வழி சொல்கிறார்.

அதையம் கேட்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_17.html

Friday, March 13, 2020

ஆத்திச் சூடி - பேச்சு

ஆத்திச் சூடி - பேச்சு 


மிக மிக கடினமான செயல் என்றால் அழகாக பேசுவதுதான். சரியாக பேசத் தெரியாமல், எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்?

கணவன் - மனைவி
பெற்றோர் - பிள்ளைகள்
உயர் அதிகாரி - கீழே வேலை செய்பவர்கள்
உறவினர் கள் - நண்பர்கள்

என்று எங்கும் இனிமையாக பேசுவதால் உறவுகள் பலப்படும், வாழ்க்கை இனிமையாகும்.

ஆனால், எப்படி இனிமையாக பேசுவது?

அது பெரிய விஷயம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்கு பல கருத்துகள் கிடைக்கின்றன.

ஒளவை சொல்கிறாள்

"வெட்டென பேசேல்"

அப்படினா என்ன?

மனைவி: ஏங்க , இன்னிக்கு சாயங்காலம் சினிமாவுக்குப் போகலாமா?

கணவன்: முடியாது.  மனுஷனுக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு, இதுல சினிமாவாம்  சினிமா...நல்ல நேரம் பாத்தியே சினிமா போக

இது வெட்டென பேசுவது.

மாறாக,

கணவன்: இன்னிக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கும்மா....நிறைய வேலை இருக்கு. நாளைக்கு போகலாமா? என்ன சொல்ற...

செய்தி ஒண்ணுதான், சொல்லுகிற விதம் வேற.

அதிகாரி:  இந்த வருஷம் கணக்கு முடிக்கும் போது , எப்படியாவது  10% இலாபம் வரணும்...இல்லைனா பங்குதார்களிடம் பதில் சொல்ல முடியாது...

கீழே வேலை செய்பவர்:  அது எப்படிங்க முடியும். முடியவே முடியாது. ஏற்கனவே ரொம்ப   நட்டத்தில் இருக்கு, இதுல 10% சதவீதம் இலாபமா...முடியவே முடியாது.

இது வெட்டென பேசுவது.

மாறாக

"10% சதவீதமா ? கொஞ்சம் கஷ்டம் தான்...இருந்தாலும் முயற்சி செஞ்சு பாக்குறேன்...ஒரு நாள் அவகாசம் கொடுங்க...பாத்துட்டு நாளைக்கு சொல்றேன்"

மறு நாள் வந்து

"நீங்க சொன்னதால ரொம்ப முயற்சி செஞ்சு பாத்தேன்...10% சதவீதம் வராது போல இருக்கு...அதிக பட்சம் 3% சதவீதம் வரலாம்...."

இப்படி மென்மையா எடுத்துச் சொன்னால் கேட்க இதமாக இருக்கும்.

முகத்தில் அடிப்பது மாதிரி பேசக் கூடாது.

முடியாது, நடக்காது, ஆகாது, என்று பேசக் கூடாது.

அதையே மென்மையாக பேசிப் பழக வேண்டும். மற்றவர் முகம் வாடும் படி  பேசக் கூடாது.

மரத்தில் கோடாலி போடுவது மாதிரி பேசக் கூடாது. பூ பறிப்பது போல மென்மையாக இருக்க வேண்டும் பேச்சு.

அழகாக பேச ஒளவை சொல்லும் வழி.

நல்லதுன்னு தெரிஞ்சா முயற்சி செஞ்சு பாக்காமலா இருக்கப் போறீங்க? கட்டாயம் பண்ணுவீங்க தான?



https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_13.html

Wednesday, March 11, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - 100 திவ்ய தேசம் - திருநீர் மலை

நாலாயிர திவ்ய பிரபந்தம் - 100 திவ்ய தேசம் - திருநீர் மலை 


இடமும் இலக்கியமும் பக்தியும் கலந்த ஒரு பிரமிப்பூட்டும் ஒரு இலக்கியம் நம் பக்தி இலக்கியம்.

ஒவ்வொரு இடத்திலும் ஒரு கோவில். அந்த கோவிலுக்குப் பின்னால் ஒரு கதை. அந்த ஊர்களுக்கு சென்ற சமய பெரியவர்கள். அவர்கள் அந்த ஊரையும், அந்த தலத்தில் உள்ள இறைவனையும் போற்றி பாடிய பக்திப் பாடல்கள்.

ஆச்சரியம் என்ன என்றால், அந்த ஊர்களும், அந்த கோவில்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. இன்றும் அந்த ஊர்களுக்குப் போனால், அந்த கோவில், அந்த கதைகள், அந்த பாசுரங்கள் நம் முன்னால் நிழலாடுவதை நாம் உணர முடியும்..

பெருமாளை நின்ற கோலத்தில் சில திருத்தலங்களில் காணலாம்.

இருந்த கோலத்தில் சில தலங்களில்.

கிடந்த கோலத்தில் சில தலங்களில்.

நடந்த கோலம் கூட உண்டு.

ஆனால், நான்கு கோலத்திலும் இருக்கும் ஒரு தலம் உண்டு என்றால், அது திருநீர் மலை தான்.


திருநீர் மலை.

சென்னையில், பல்லாவரத்தில் இருந்து 5 கி மீ தொலைவில் உள்ளது. சிறிய கிராமம்.

அதற்கு ஏன் திருநீர் மலை என்று பெயர் வந்தது?

ஒரு முறை திருமங்கை ஆழ்வார், அந்த கோவிலில் உள்ள பெருமாளை தரிசனம் செய்ய வந்திருந்தார். பயங்கர மழை.  கோவில் இருப்பதோ மலை மேல். மலையைச் சுற்றி மழை.

நெருங்க முடியவில்லை. மழை நின்றால் நீர் வடியும். வடிந்த பின் பெருமாளை  தரிசனம் பண்ணலாம் என்று அங்கு தங்கி இருந்தார். மழை நின்றபாடில்லை.

இன்று நாளை என்று நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.

என்ன ஆனாலும் சரி, பெருமாளை தரிசனம் செய்யாமல் போவதில்லை என்ற முடிவோடு அங்கேயே தங்கி விட்டார் திருமங்கை.

ஆறு மாதம் ஆனது - மழை நின்று நீர் வடிய.

மழை நீர் சூழ்ந்த மலை என்பதால், திருநீர் மலை என்று அழைக்கப் பட்டது.


பாடல்

அன்றாயர் குலக்கொடி யோடனிமா
          மலர் மங்கை யொடன்பளாவி, அவுணர்க்
     கென்றானு மிரக்க மில்லாதவனுக்
          குறையு மிடமாவது, இரும்பொழில் சூழ்
     நன்றாய புனல் நறையூர் திருவா
          லிகுடந்தை தடந்திகழ் கோவல் நகர்
     நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற்
          கிடம் மாமலையாவது நீர்மலையே (1078)

பொருள்

அன்றாயர் = அன்று ஆயர்

குலக் கொடியோடு  = குலத்தில் பிறந்த கொடி போன்ற பெண்ணோடு

அணி மாமலர் மங்கையோடு  =  சிறந்த தாமரை மலரில் உள்ள திருமகளோடு

அன்பளாவி = அன்புடன் பேசி

அவுணர்க் கென்றானு மிரக்க மில்லாதவனுக் = அவுணர்க்கு ஒன்றானும் இரக்கம் இல்லாதவனுக்கு  (பக்தர்கள் மேல் இரக்கம். இராக்கதர்கள் மேல் இரக்கம் இல்லை)

குறையு மிடமாவது = உறையும் (இருக்கும்) இடம் எது என்றால்

இரும்பொழில் சூழ் = பெரிய சோலைகள் சூழ்ந்த

நன்றாய புனல் = நன்று ஆராய்ந்து செம்மையாக்கப்பட்ட தீர்த்தங்கள் உள்ள

 நறையூர் = நறையூர்

திருவாலி  = திருவாலி

குடந்தை = குடந்தை என்ற கும்பகோணம்

தடந்திகழ் கோவல் நகர்  = பெருமை கொண்ட கோவல் நகர்

நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற் = நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்

கிடம் = இடம்

மாமலையாவது  = மாமலை ஆவது

நீர்மலையே  = திருநீர் மலையே

கொஞ்சம் சீர் சேர்க்க வேண்டும்.

நான்கு திருத்தலங்கள். - நறையூர், திருவாலி, குடந்தை, கோவல் நகர்

நான்கு கோலங்கள் - நின்றது, இருந்தது, கிடந்தது, நடந்தது

இப்போது ஒன்றோடு ஒன்றை பொருத்திப் பார்க்க வேண்டும்.

நின்றது, நறையூரில்
இருந்தது, திருவாலியிலே
கிடந்தது, குடந்தையிலே
நடந்தது, கோவல் நகரிலே

இந்த நான்கு கோலங்களிலும் இருப்பது திருநீர் மலையிலே.

இந்தா இருக்கு சென்னை. சென்னைக்குப் பக்கத்தில் பல்லாவரம். பல்லாவரத்தில்  ஒரு எட்டு எடுத்து வைத்தால் திருநீர் மலை.

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் அருள் தரும் பெருமாளை ஒரு நடை போய் பார்த்துவிட்டு வாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/100.html



Monday, March 9, 2020

திருக்குறள் - இயல்பான இல்வாழ்க்கை

திருக்குறள் - இயல்பான இல்வாழ்க்கை 


புலன்கள் எதற்கு இருக்கின்றன? இன்பங்களை அனுபவிக்கத்தானே? இயற்கை அதற்க்காகத்தானே புலன்களை தந்து இருக்கிறது.

சுவையான உணவை இரசித்து உண்பது, இனிய இசையை கேட்பது, நல்ல நறுமணத்தை நுகர்வது, இயற்கையை, அழகை பார்த்து இரசிப்பது என்று இதற்கெல்லாம் தானே புலன்கள் இருக்கிறது.

அதை விட்டு விட்டு, சாப்பிடாதே, தூங்காதே, இசை கேட்காதே, பாட்டு பாடாதே என்று எப்பப் பார்த்தாலும் புலன்களை கட்டுப் படுத்து என்று கட்டளை போட்டுக் கொண்டே இருந்தால் வெறுப்பு வருமா வராதா?

"என்னய்யா இது, மனுஷனை சந்தோஷமா இருக்கவே விட மாட்டேன் என்கிறார்களே..." என்று ஒரு சலிப்பு வரும்.

வள்ளுவர் சொல்கிறார், "இல்வாழ்க்கையை அனுபவி. அந்த இல் வாழ்க்கைக்கு ஒத்த இயல்போடு அதை அனுபவி" என்கிறார்.  அப்படி செய்பவன், மற்ற அனைத்து முயற்சி செய்பவர்களை விட உயர்ந்தவன் என்கிறார்.



பாடல்


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

பொருள்


இயல்பினான்  = இயல்பாக

இல்வாழ்க்கை = குடும்ப வாழ்க்கை

வாழ்பவன் என்பான் = வாழ்பவன் என்பவன்

முயல்வாருள் = துறவறம் , வீடு பேறு போன்றவற்றிற்கு முயல்வாருள்

எல்லாம் தலை = தலையானவன் , முதன்மையானவன்

இயல்பினான் ...இயல்பாக இருக்க வேண்டும். இயற்கைக்கு புறம்பாக செல்லக் கூடாது. எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் இருக்க வேண்டும்.அது தான்  இயல்பு. மூக்கு முட்ட உண்பது, அளவுக்கு அதிகமாக தூங்குவது..என்பதெல்லாம் இயல்பான செயல் அல்ல. அனைத்து  இன்பங்களையும்  அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள். அற வழியில் செல்வது இயல்பான வாழ்க்கை.  அறம் அல்லாத வழியில் செல்வது (திருட்டு, கொள்ளை முதலியன)  இயல்பு அல்லாத வாழ்க்கை.

இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு இன்பமயமான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பவன்,  துறவி, சாது, சாமியார், போன்ற ஸ்வர்கம், வீடு பேறு போன்றவற்றை  அடைய "முயல்வாரை" விட உயர்ந்தவன்.

காரணம் என்ன?

புலன்களை அடக்குவது இயல்பான செயல் அல்ல.

மூக்கு எதற்கு இருக்கிறது? மூச்சு விட. நான் மூச்சு விட மாட்டேன், மூக்கை அடைத்துக் கொள்வேன் , மூச்சை அடக்கி, பிராணாயாமம் செய்து சுவர்க்கம் போகிறேன்  என்று முயல்பவரை விட, இல்லறத்தான் தலையானவன்.

அது மட்டும் அல்ல,

சுவர்க்கம் போகிறேன், வீடு பேறு அடையப் போகிறேன், இறைவனை அடையப் போகிறேன் என்று  எல்லோரும் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பந்தயத்தில் முதலாவது  வருபவன் இல் வாழ்வான்.

"எல்லாம் தலை" என்றார். எல்லாரையும் விட அவனே முந்தி நிற்பான்.

அப்ப , எந்த வழி சிறந்த வழி? இல்லறமா? துறவறமா?

வள்ளுவர், போட்டு குழப்புறாரே...பற்றை விடு என்கிறார், பற்றுக பற்றற்றான் பற்றினை என்கிறார்....அப்புறம் அனுபவி இராஜா அனுபவி னு பாட்டு பாடுறார்...கொஞ்சம் குழப்பமாக இல்லை?

இல்லை. ஒரு குழப்பமும் இல்லை.

எப்படி என்று பார்க்க, நீங்கள் தயாரா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_9.html

Sunday, March 8, 2020

ஆத்திச் சூடி - முன்னேறும் வழி

ஆத்திச் சூடி - முன்னேறும் வழி

ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னேற முடியும். 

குடும்ப உறவில், உடல் ஆரோக்கியத்தில், செல்வம் சேர்ப்பதில், புகழ் அடைவதில், அறிவை பெருக்குவதில் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் நாம் அதில் பெரிய முன்னேற்றம் காண முடியும். 

இருந்தும், நாம் அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்த மாதிரி தெரியவில்லையே. 

ஏன்? 

நம்மிடம் போதுமான அறிவு இருக்கிறது. நம்மை விட அறிவு குறைந்தவர்கள் எல்லாம் எப்படியெல்லாமோ உயர்ந்து இருக்கிறார்கள். 

நல்ல உடல் வலிமை இருக்கிறது. கை , கால், கண், மூக்கு, மூளை எல்லாம் சரியாக செயல்படுகிறது. 

இருந்தும் ஏன் சாதிக்க முடியவில்லை?

காரணம், ஒரு வேலையை செய்வதால் வரும் துன்பத்தை சகித்து கொள்ள முடியாமல் அதை தொடங்குவது இல்லை அல்லது தொடங்கினால் முடிவு வரை தொடர்வது இல்லை. 

ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, தள்ளிப் போட்டு விடுவது அல்லது அது சரியா வரல , சரிப்படாது என்று கூறி தொடங்கியதை பாதியில் விட்டு விடுவது. 

படிப்பதாக இருக்கட்டும், உடற் பயிற்சியாக இருக்கட்டும்,  உணவு கட்டுப்பாடாக இருக்கட்டும், உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பணத்தை எதில் , எப்படி முதலீடு செய்வது என்று அறிந்து கொண்டு செயல்படுவதாக இருக்கட்டும்...எல்லாவற்றிலும் ஓரளவுக்கு மேல் அதை செய்வதால் வரும் துன்பத்தை  பொறுத்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறோம். 

சாதனை செய்தவர்கள் எல்லாம், அந்த வலியை , துன்பத்தை பொறுத்துக் கொண்டு மேலே  சென்றவர்கள். 

சாதிக்க வேண்டும் என்றால் உடல் உழைப்பு வேண்டும், தூக்கம் குறைக்க வேண்டும், சோம்பல் இருக்கக் கூடாது, தோல்வியை தாங்கும் பக்குவம் வேண்டும். 

"முடியல...கால் வலிக்குது, முதுகு வலிக்குது, கண் வலிக்குது," என்று விட்டு விட்டால், எங்கிருந்து சாதனை வரும். 

ஒளவை ரெண்டே வார்த்தையில் சொன்னாள் 


"துன்பத்திற் கிடங்கொடேல்"

துன்பம் வரும். அதுக்கு இருக்க இடம் கொடுக்கக் கூடாது. விரட்டி அடித்து விட வேண்டும். 

"சீ போ...இங்க வராத...வேற எங்காவது போ " என்று விரட்டி விட வேண்டும். 

கொஞ்சம் துன்பம் வந்தவுடன் 

"ஐயோ, முடியலையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது. எடுத்தது எல்லாம் தடங்கல், ஒண்ணாவது போன உடனே நடக்குதா" என்று அலுத்துக் கொண்டு தொடங்கிய வேலையை விட்டு விடுவது.

துன்பம் வந்தால், அது என்னவோ அழையா விருந்தாளி மாதிரி வந்துட்டுப் போகட்டும் நாம் நம்  வேலையை பார்ப்போம் என்று முயற்சியை கை விட்டு விடக் கூடாது. 


தடங்கல் வரும், தோல்வி வரும், காலம் இழுக்கும், பண விரயம் ஆகும், உடல் சோர்வு வரும், மனச் சோர்வு வரும். 

இவற்றால் வரும் துன்பத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. 

தொடங்கிய வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிக்கோளை எட்டும் வரை. 

துன்பத்தைக் கொண்டு துவண்டு விடக் கூடாது.  துன்பத்தை சகிக்க படிக்க வேண்டும். அதை உதாசீனப் படுத்த பழக வேண்டும். 

"ஏய் துன்பமே, இதுக்கெல்லாம் அசர்ற ஆள் நான் இல்லை"  என்று அதைப் பார்த்து கை ஆட்டி விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். 

"துன்பத்திற்கு இடம் கொடேல்"

இடம் கொடுப்பீர்களா?


Saturday, March 7, 2020

திருக்குறள் - பெறுவது என்?

திருக்குறள்  - பெறுவது என்?


இந்த தமிழ் இலக்கியம் எப்பப் பார்த்தாலும் ஏதாவது அறிவுரை சொல்லும், இல்லை என்றால் பக்தி, கடவுள், வீடு பேறு , அறம் என்று பஜனை மடம் போல இருக்கும் என்ற நினைப்பு பலருக்கு வரலாம்.

எப்பப்பாரு, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, பெண்களை கண்டபடி ஏசுவது, இல்லைனா இறைவா நீ அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன், உனக்குத் தெரியாதா, என்னை காப்பாற்று என்று ஓலம் இடுவது. இதுதான் வாழ்க்கையா.

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா. எவ்வளவு இன்பம் இருக்கிறது. எல்லாவற்றையும் விட்டு விட்டு சாமியாரா போ, காட்டுக்குப் போ, கோயில் குளம் னு திரினு சொன்னா யார் கேட்பா என்று ஒரு எண்ணம் வரலாம்.

அவர்கள், தமிழ் இலக்கியத்தை முழுமையாக படிக்காதவர்கள்.

வள்ளுவர் சொல்கிறார்.

கல்யாணம் பண்ணிக் கொள். மனைவி கூட சந்தோஷமா இரு. பிள்ளைகளை பெற்றுக் கொள். குடும்ப வாழ்வில், அன்பு திகட்ட திகட்ட அனுபவி. தப்பு தண்டா செய்யாதே. உனக்கு கிடைத்ததை பகுத்து உண்டு வாழ்.

அப்படி எல்லாம் வாழ்ந்தால், இந்த துறவறம், சாமியாரா போவது, காட்டுக்குப் போவது, எல்லாம் எதுக்கு? தேவையே இல்லை. இதுதான் சுவர்க்கம். இதுதான் வீடு பேறு . இதுதான் ஆனந்தம். அனுபவி என்கிறார்.

பாடல்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

பொருள்


அறத்தாற்றின் = அறத்து + ஆற்றின் என்று இரண்டா பிரிச்சுக்கணும். அறத்தின் வழியில். ஆறு என்றால் வழி.

இல்வாழ்க்கை ஆற்றின்  = இல்வாழ்க்கை சென்றால், நடத்தினால்

புறத்தாற்றில் = புற வழிகளில். அதாவது இல்லறம் அல்லாத புற வழிகளில்

போஒய்ப் = சென்று

பெறுவது எவன்? = பெறுவது என்ன? (ஒன்றும் இல்லை)



இல்வாழ்க்கை இனிமையாக அமைந்து விட்டால், வீடு பேறு ,சுவர்க்கம், வானுலகம்  எல்லாம் தானே வரும். இதுக்காக தனியா முயற்சி எல்லாம் செய்ய வேண்டாம்  என்கிறார்.  இல்லறமே போதும் என்கிறார்.

இல்லறம் என்று அவர் சொல்வது முன் சொன்ன 6 குறள்கள்.

11 கடமைகள். அன்பும் அறனும் நிறைத்த குடும்ப வாழ்க்கை. பகுத்துண்டு வாழும் வாழ்க்கை.

இங்கே ஒரு முக்கியமான ஒன்றைச் சொல்ல வேண்டும்.

பொதுவாக நாம் திருக்குறள் படிக்கும் போது , ஒவ்வொரு குறளும் தனியானது என்று  அவற்றை தனித்தனியே படிக்கிறோம்.

அது தவறு.

ஒவ்வொரு அதிகாரமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு அதிகாரத்தில் , ஒவ்வொரு குறளும் தொடர்பு கொண்டவை.

இந்தக் குறளில் சொல்லப்பட்ட "அறத்தாற்றின் இல் வாழ்க்கை" என்பது முந்தைய 6 குறளிலும் சொல்லப்பட்டவை. அவற்றை ஒரு முறை மீண்டும் படித்து விடுங்கள்.

இன்னும் வர இருக்கின்ற குறள்களும், இவற்றோடு தொடர்பு கொண்டவை.

தனித்தனியே படிக்கக் கூடாது.

திருக்குறள் வாழ்க்கையை சொல்லிக் கொண்டு வருகிறது. அது எப்படி தனியாக இருக்க முடியும்.

சரியா ?

மீண்டும் குறளுக்கு வருவோம்.

அப்படி என்றால், இந்த சாமியாராகப் போனவர்கள், துறவிகள் எல்லாம் செய்வது தவறா?

இல்லறம் நன்றாக இருந்தால், வேற வழி ஒன்றும் வேண்டாம் என்கிறார். அப்படி என்றால்,  வேற வழியில் போனவர்கள் யாராக இருக்கும் என்பதை நம்  சிந்தனைக்கு விட்டு விடுகிறார்.

இல்வாழ்க்கை இனிமையாக இருந்தால், இந்த  கோவிலுக்குப் போவது, கிரி வலம் வருவது, மொட்டை அடிப்பது, பாத யாத்திரை போவது, அர்ச்சனை செய்வது, அபிஷேகம் செய்வது, பாராயணம் செய்வது என்பது எல்லாம் தேவையே இல்லை.

"எவன் செய்யும்?" என்று கேட்கிறார்.

அதெலாம் யார் செய்வா? எதற்காக செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

உன் இல்லறத்தை நீ கவனி. மத்ததெல்லாம் தேவையே இல்லை என்கிறார்.

சரி, நல்ல குடும்ப வாழ்க்கை நடத்தினால் போதுமா? அவ்வளவு தானா?

பொறுங்கள். வள்ளுவர் கூட்டிக் கொண்டு போகிறார் நம்மை. அவர் கை பிடித்துச் செல்வோம்.

interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_7.html


Friday, March 6, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வான் மறந்த காலத்தும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வான் மறந்த காலத்தும் 


எத்தனையோ சோதனைகள், எத்தனையோ சிக்கல்கள், கவலைகள் வருகின்றன. என்ன சாமி கும்பிட்டு என்ன பயன். நடக்கிறது என்னமோ நடந்துக்கிட்டுதான்  இருக்கு. இந்த சாமி என்பதெல்லாம் ஒரு வேளை சும்மா கற்பனைதானோ என்ற எண்ணம் அவ்வப்போது எழலாம்.

என்ன செய்வது?

சில சமயம் வானம் பொய்த்துப் போவது உண்டு.  மழை பெய்யாமல் போய் விடும். பயிர் பச்சை எல்லாம், "சரி தான், இந்த மேகத்தை நம்பி பயன் இல்லை, நாம் வேறு வழி பார்க்க வேண்டியதுதான்" என்று கிளம்பி விடுவது இல்லை.  வானம் என்னதான் பொய்த்தாலும், அந்த மேகத்தை, அது தரும் மழையை எதிர்பார்த்தே பயிர்கள் வாழும்.

வித்துவக்கோட்டம்மானே, நீ எனக்கு எவ்வளவு தான் துயரம் தந்தாலும், என் துயரத்தை போக்கா விட்டாலும், என் மனம் என்னவோ எப்போதும் உன் மேல் தான் இருக்கும்..

என்கிறார் குலா சேகர ஆழ்வார்.

பாடல்


எத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்

மைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்

மெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட்

டம்மாஎன் சித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே

பொருள்

எத்தனையும் = எவ்வளவுதான்

வான் = வானம்

மறந்த காலத்தும் = மழை பெய்ய மறந்த காலத்தும்

பைங்கூழ்கள் = பசுமையான தாவரங்கள்

மைத்தெழுந்த = மை போல கறுத்து எழுந்த

மாமுகிலே  = பெரிய மேகங்களையே

பார்த்திருக்கும் = பார்த்து இருக்கும்

மற்றவைப் போல் = அவற்றைப் போல

மெய்த்துயர் = உண்மையான துன்பத்தை

வீட் டாவிடினும் = தீர்க்காவிடினும்

விற்றுவக்கோட் டம்மா  = வித்துவக்கோட்டத்தில் உள்ள என் அம்மானே

என் சித்தம் = என் மனம்

மிக வுன்போலே  = மிகவும் உன் மேலே

வைப்ப னடியேனே = வைப்பன் அடியேனே

மனதை உருக்கும் பாடல்கள்.

காதலும் பக்தியும் அப்படித்தான். துன்பம் தந்தாலும், யார் மேல் பக்தி உள்ளதோ, அவர்களையே நினைத்து உருகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_23.html

தேவாரம் - குறிக்கோள் இல்லாது கெட்டேன்

தேவாரம் - குறிக்கோள் இல்லாது கெட்டேன் 


யாரைக் கேட்டாலும், "நேரமே இல்லை" என்பதே பதிலாக இருக்கிறது.

எதுக்குமே நேரம் இல்லை. ஆனால்,எல்லோரும் பரபரப்பாக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் அறிவியல் , நேரத்தை சேமிக்க புது புது சாதனங்களை தந்து கொண்டே இருக்கிறது. இன்னொரு புறம், மனிதன் நேரம் இல்லை என்று தவித்துக் கொண்டு இருக்கிறான்.

இருக்கிற அதே நேரத்தில் பில் கேட்ஸ், இளைய இராஜா, என்று சிலர் மிகப் பெரிய பேரும் புகழும் படைக்கிறார்கள். நமக்கும் அதே அளவு நேரம் தான் இருக்கிறது. ஏன், நம்மால்  அந்த அளவு பெரிய சாதனைகள் செய்ய முடியவில்லை?

திருநாவுக்கரசர் சொல்கிறார்.

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை.  என்ன செய்யப் போகிறோம், என்ன சாதிக்கப் போகிறோம் என்ற குறிக்கோள் இல்லாத வாழ்க்கை. இன்று இப்படி, நாளை எப்படியோ என்று வாழ்க்கையை  ஒவ்வொரு நாளாக கழிப்பது. எப்படி, எதையும் அடைய முடியும் ?


நமக்கு இருக்கும் சொற்ப வாழ்நாளில்,கொஞ்சம் சிறு பிள்ளை வயதில், ஒன்றும் தெரியாமல் போய் விடுகிறது. பின்னாளில் வயதாகி, கண் தெரியாமல், காது கேட்காமல் வயோதிகத்தில் கொஞ்சம் போய் விடுகிறது. நடுவில் நாட்களில் காதல், கல்யாணம், பிள்ளை வளர்ப்பு என்று பெரும் பகுதி போய் விடுகிறது.  இதையெல்லாம் விடுத்து, இருக்கிற நேரத்தில் நல்ல குறிக்கோள் இல்லாமல்  ஏனோ தானோ என்று வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு போவது சரிதானா?

பாடல்

பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே.


பொருள்

பாலனாய்க் கழிந்த நாளும் = சிறு பிள்ளையாய் கழிந்த நாட்களும்


பனிமலர்க் கோதை மார்தம் = குளிர்ந்த மலர் போன்ற பெண்கள் தம்

மேலனாய்க் கழிந்த நாளும் = அவர்கள் பின் சென்றும், திருமணம் முடித்து அவர்களோடு செலவழித்த நாட்களும்

மெலிவொடு மூப்பு வந்து = மெலிந்து, மூப்பு வந்து வயதாகி

கோலனாய்க் கழிந்தநாளுங் = கோல் ஊன்றி கழித்த நாட்களும்

குறிக்கோளி லாதுகெட்டேன் = எந்தவிதமான குறிக்கோளும் இல்லாமல் கெட்டேன்

சேலுலாம் = மீன்கள் உலாவும்

பழனவேலித் = நீர் நிறைந்த நிலங்களை வேலியாகக் கொண்ட

திருக்கொண்டீச் சரத்துளானே. = திரு கொண்டீச்சரம் என்ற தலத்தில் உள்ளவனே

வாழ்வில் ஏதாவது ஒரு குறிக்கோள் வேண்டும். அதை நோக்கி தினம் நகர வேண்டும்.

வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் என்று வாழ்வது ஒரு வாழ்க்கையா?

திருமணம் முடிக்காமல், பிள்ளை குட்டிகள் இல்லாத, திருநாவுக்கரசர் சொல்கிறார்.

அவர் பாடே அப்படி என்றால், நாம் எல்லாம் .... என்ன சொல்ல?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_15.html
கம்ப இராமாயணம் - கொன்று இறந்த பின் கூடுதியோ?

சீதையிடம் தன்னை ஏற்றுக் கொள்ளும்படி இராவணன் வேண்டுகிறான்.

அந்த அநாகரீகமான வேண்டுகோளை கூட இராவணன் வாயிலாக கம்பன் எவ்வளவு அழகாகச் சொல்கிறான்.



பாடல்


இன்று இறந்தன நாளை இறந்தன
என் திறம் தரும் தன்மை இதால்; எனைக்
கொன்று இறந்தபின் கூடுதியோ? குழை
சென்று இறங்கி மறம் தரு செங்கணாய்!

பொருள்


இன்று இறந்தன = இன்றைய நாள் இறந்து போனது

நாளை இறந்தன = நாளையும் இப்படி இறந்து போகும்

என் திறம் = எனக்கு

தரும் தன்மை இதால் (நீ) தரும் தன்மை இது என்றால்

எனைக் = என்னை

கொன்று = கொன்று

இறந்தபின் கூடுதியோ? = நான் இறந்த பின் என்னிடம் கூடுவாயா ?

குழை = காதில் அணிந்த அணிகலன்

சென்று இறங்கி = சென்று திரும்பி

மறம் தரு = அதோடு சண்டை செய்யும்

செங்கணாய்! =  சிவந்த கண்களை உடையவளே



சீதையின் கண்கள் காது வரை செல்லுமாம். 

அது போகட்டும். 

அவன் பேசுகின்ற பேச்சிலும் ஒரு அவலச் சுவை தொனிப்பதை நாம் காண முடிகிறது அல்லவா?

இன்று போய், நாளை போய் என்று சொல்லவில்ல. 

இன்று இறந்து, நாளை இறந்து என்று சொல்லிக் கொண்டு போனவன்...

நான் இறந்த பின்பு தான் என் காதலை ஏற்றுக் கொள்வாயா ?

என்று கேட்கிறான். 



Wednesday, March 4, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் மால் கண்டாய் இவை

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கள் மால் கண்டாய் இவை 


நம்மாழ்வார் பாசுரம்.


புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்
இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்
மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்
எங்கள்மால் கண்டாய் இவை.

என்ன இது? ஒண்ணுக்கு ஒண்ணு முரணா இருக்கே. புகழ்வோம் அப்படினு சொல்லிட்டு, அடுத்த வார்த்தையில் பழிப்போம் அப்படினு சொல்கிறார்.

அதே மாதிரி, புகழோம், பழியோம், இகழ்வோம், மதிப்போம், மதியோம் என்று போட்டு குழப்புகிறாரே.

இறைவன் மேல் உள்ள பல பாசுரங்கள், பாடல்கள் எல்லாம் அவனை போற்றி மகிழ்கின்றன. நாம் போற்றி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ?

நமச்சிவாய வாழ்க என்று சொன்னால் அவர் வாழப் போகிறாரா?

பல்லாண்டு பல்லாண்டு  பல்லாயிரத்தாண்டு என்று வாழ்த்தினதால் அவர் வாழப் போகிறாரா?

இல்லையே. பின் எதற்கு இந்த வாழ்த்து?

S P பாலசுப்ரமணியம், கே ஜே யேசுதாஸ் போன்ற பெரிய பாடகர்கள் பாடலை கேட்டுவிட்டு, சங்கீதம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் நான், "நீங்க நல்லா பாடுனீங்க " என்று  புகழ்ந்தால் அது அவர்களுக்கு பெருமையா, சிறுமையா? "இவன் எல்லாம் வந்து சொல்ற அளவுக்கு நம் நிலைமை மோசமா ஆயிருச்சா " என்று தலையில் அடித்துக் கொள்வார்கள் இல்லையா?. அவர்கள் பாடல் நன்றாக இருக்கிறது என்று சொல்ல எனக்கு கொஞ்சமாவது சங்கீதம் தெரிய வேண்டும் அல்லவா?

அது போல, இறைவனை நாம் புகழ்வது, அவரை இகழ்வது போலத்தான். 

சரி, புகழ்வது தான் இகழ்வது போல இருக்கிறது என்றால், புகழாமல் இருந்து விட்டாலோ? புகழாமல் இருந்தால், அந்த இகழ்ச்சி வராது அல்லவா?

சரி, அப்படினு சும்மா இருந்தால், அதுவும் ஒரு இகழ்ச்சி தானே.

வீட்டில் மனைவி ருசியாக சமைத்துப் போடுகிறாள். சாப்பிட்டுவிட்டு, சும்மா வாயை மூடிக் கொண்டு போனால், அது அந்த சாப்பாட்டைப் பற்றி சிறப்பாக சொல்ல   ஒன்றும் இல்லை. அதனால் பேசாமல் எழுந்து விட்டேன் என்று சொல்லுவது போல  ஆகிவிடும் அல்லவா?

அல்லது, "நல்லா இருக்குனு சொல்லிட்டா  என்ன, வாயில இருந்து முத்தா உதிந்திரும்...பெரிய ஆளுன்னு நினைப்பு" என்று நாம் மௌனம் கூட ஏதோ நாம் அந்த   சாப்பாட்டை இகழ்வது மாதிரி தோணலாம்.




புகழ்வோம் பழிப்போம்  = நாம் புகழ்வது பழிப்பது மாதிரித்தான்.


புகழோம் பழியோம் = சரி, புகழாமல் இருந்து விட்டால், பழிக்காமல் இருந்து விடலாம்  என்று நினைத்தால்

இகழ்வோம் = இவ்வளவு செய்த கடவுளை புகழ்ந்து ஒரு வார்த்தையை சொல்லாமல்  வாய் மூடி இருந்தால், அது அவரை இகழ்ந்த மாதிரி ஆகிவிடும்.

எனவே, சும்மா இருக்கும் போது, இறைவனை இகழ்வது மாதிரி.

மதிப்போம் =  வெளியே சொல்ல வேண்டாம். மனதுக்குள்ளேயே ஒரு மதிப்பும்  மரியாதையும் வைத்துக் கொள்வோம் என்று பார்த்தால்.


மதியோம் = நம்மைப் போன்ற சிற்றறிவு உள்ளவர்கள் அவனை மனதில் வைத்து இருப்பது, அவனுக்கு ஒரு மதிப்பற்ற செயல் தான். இல்லையா?

இகழோம் = சரி, அப்படியா சங்கதி, அவனை நாம் மனதில் நினைப்பது அவனுக்கு இகழ்ச்சி என்றால், நாம் அவனை இகழ மாட்டோம்

மற்றெங்கள் = மாற்று எங்கள்

மால்  = மயக்கம் கொண்டவனே

செங்கண்மால் = சிவந்த கண்களை கொண்ட திருமாலே

சீறல் நீ = எங்கள் மேல் கோபம் கொள்ளாதே

தீவினையோம் = தீய வினைகள் உடைய நாங்கள்

எங்கள்மால் = நீ எங்க ஆளு

கண்டாய் இவை. = இதெல்லாம் உனக்குத் தெரியும்தானே

பக்தியின் உன்மத்த நிலை. என்ன செய்வது அறியாத தவிப்பு.

செய்தாலும் தப்பு. செய்யாவிட்டாலும் தப்பு.

நான் என்ன செய்தாலும் தப்பாகத்தான் போகப் போகிறது.

என் மேல கோபப் படாதே....என்று உருகுகிறார் நம்மாழ்வார்

இந்த ஒரு பாட்டுக்கே கண் கலங்குது. 4000 பாசுரம் இருக்கு இப்படி.

ஒரு வாழ்நாள் போதுமா?

தினம் ஒரு பாசுரம் படித்தாலும், பத்து வருடம் ஆகும் 3650 பாசுரம் படித்து முடிக்க.

அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு.

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_4.html



Tuesday, March 3, 2020

அபிராமி அந்தாதி - சயமானது அபசயம் ஆக

அபிராமி அந்தாதி - சயமானது அபசயம் ஆக 


பார்ப்பதற்கு அபிராமி எப்படி இருப்பாள்? மற்ற பெண்களைப் போல இருப்பாளா? திடீரென்று நாளை நம் முன் வந்து நின்றால், அவள் தான் அபிராமி என்று நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா?

பட்டர் சொல்கிறார்....

அதிசயமான வடிவு உடையாள் ...என்ன அதிசயம் ? மூன்று கண், ஐந்து தலை என்று அதிசயமான வடிவமாக இருக்குமோ ?

மலர்களில் அழகியது தாமரை மலர். உலகில் உள்ள அனைத்து தாமரை மலர்களும் அவளுடைய முக அழகைப் பார்த்து வணங்குமாம். அப்படி ஒரு அதிசயம்.

அது மட்டும் அல்ல...

இரதி, மிக அழகானவள். அவளுடைய பதி மன்மதன், அவனும் சிறந்த அழகன். இராம பானத்துக்கு தப்பியவர்கள் கூட உண்டு, மன்மத பானத்துக்கு தப்பியவர் யாரும் கிடையாது. கரும்பு வில்லையும், மலர் அம்புகளையும் எடுத்துக் கொண்டு போருக்குப் போனால், தோல்வி என்பதே கிடையாது. வெற்றி மட்டும்தான். அப்படி எப்போதும் வெற்றி பெற்ற மன்மதன் தோற்ற இடமும் ஒன்று உண்டு. அது சிவனிடம். சிவன் மேல் மலர் அம்பை எறிந்தான். சிவனுக்கு காமம் வரவில்லை. கோபம் வந்தது. மன்மதனை எரித்து விட்டார்.

முதன் முதலில்  மன்மதனின் சயம் , அபசயம் ஆனது.

அப்படி மன்மத பானத்துக்கு மயங்காத சிவனும், அபிராமியின் அழகில் மயங்கி, தன் உடலில் இடப் பாகத்தை அவளுக்கு கொடுத்து விட்டார் என்றால், அபிராமி எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்?

பாடல்


அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?


பொருள்


அதிசயம் ஆன வடிவு உடையாள் = அதிசயமான வடிவு உடையாள்

அரவிந்தம் எல்லாம் = தாமரை மலர்கள் எல்லாம்

துதி சய ஆனன = துதிக்கும்

சுந்தரவல்லி = அழகான பெண்

துணை இரதி பதி = இரதியின் துணையான பதி (மன்மதன்)

சயமானது = வெற்றியானது

அபசயம் ஆக = தோல்வியாக

முன் = முன்பு

பார்த்தவர்தம் =  நெற்றிக் கண்ணால் பார்த்தவருடைய

மதி சயம் ஆக அன்றோ = அறிவை வெற்றி கொண்டதால் அல்லவா

வாம பாகத்தை வவ்வியதே? = இடப்பாகத்தை பெற்றுக் கொண்டது

என்ன ஒரு தமிழ்.

"துணை இரதி பதி சயமானது , அபசயமக பார்த்தவர் தம் மதி சயமாக "


மன்மத அம்புக்கு மயங்காதவரையும் மயங்க வைக்கும் அழகு.



அதிசயமான வடிவு உடையாள் ....அபிராமி



https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_35.html


ஆத்திச் சூடி - படிப்பது

ஆத்திச் சூடி - படிப்பது


படிப்பது.

என்ன படிக்கிறீர்கள் என்று கேட்டால்


சில இளம் வயது ஆண்களையும் பெண்களையும் கேட்டால் "படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு try பண்ணிக்கிட்டு இருக்கேன் " என்பார்கள்.  படித்து முடிக்க முடியுமா?

குடும்பத் தலைவிகளை கேட்டால், "வீட்டைப் பாக்கவே நேரம் பத்தலை, இதுல எங்க போட்டு படிக்கிறது..." என்று அலுத்துக் கொள்வதை கேட்டு இருக்கிறோம்.

வயதானவர்களைக் கேட்டால்  "..ஆமா..இத்தனை வயசுக்கு அப்புறம் படிச்சு என்ன செய்யப் போறேன்...வேலைக்கா போகப் போறேன் " என்பார்கள்.

வேலைக்கு போகும் ஆண் / பெண்களைக் கேட்டால், "வேலை, வீடு, பிள்ளைகள், குடும்பம் ...இதுக்கே நேர பத்தலை...இதுல எங்கிருந்து படிக்கிறது ..." என்பார்கள்.

ஆக மொத்தம், படிப்பது என்பது ஏதோ ஒரு சிலர்க்கு மட்டும் வாய்த்த வாய்ப்பாக இருக்கிறது.

அது சரிதானா?

வள்ளுவரிடம் கேட்டால்

யாதானும் நாடாமல் ஊராமால் எவனொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு

என்று நீட்டி முழக்கி ஒண்ணே முக்கால் அடியில் சொல்லுவார்.

அவருக்கு சுருக்கமாகச் சொல்லாத் தெரியாது.

நம்ம கிழவி தான் சரி.

இரண்டே வார்த்தை.

"ஓதுவது ஒழியேல் "

நாங்களும் தான தினமும் whatsapp துணுக்குகள், வதந்திகள் எல்லாம் படிக்கிறோமே ,  facebook ல யார் என்ன செய்றாங்கன்னு படிக்கிறோம்...அதெல்லாம் படிப்புல வராதா என்றால்,  வராது.

ஓதுவது என்றால் மனப்பாடம் செய்ய வேண்டி மீண்டும் மீண்டும்  சொல்லுவது.

மனதுக்குள் ஏற வேண்டும்.

எதை திருப்பி திருப்பி படிப்போம்?

எது கடினமானதோ, எது நமக்கு மிகவும் தேவைப் படுகிறதோ , எது பயன் உள்ளதோ, அதை திருப்பி திருப்பி படிப்போம்.

அப்படி நல்லதை, உயர்ந்ததை படிப்பதை ஒரு நாளும் விட்டு விடக் கூடாது  என்கிறாள் ஒளவை.


"ரொம்ப பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது"

"நாலு நாளா உடம்பு சரியில்லை"

"வீட்டுல கொஞ்சம் விருந்தாளிங்க வந்துட்டாங்க ..கொஞ்சம் பிஸி " (என்ன நாலஞ்சு நாளா பிளாக் படிக்கல போல அப்படினு கேட்டா)

"அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, பக்கத்து வீட்டு மாடு கன்னு போட்டு இருக்கு,  ஊருக்குள்ள நல்ல மழை, மாமனார் திவசம், "

என்று காரணங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள், படிக்காமல் இருப்பதற்கு.

ஒரு சாக்கும் சொல்லக் கூடாது.

ஓதுவது ஒழியேல்.

படிப்பதை நிறுத்தாதே.

வாழ்வின் கடைசி நாள் வரை, நாழிகை வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சாப்பிடுவது ஒழியேல், ஊர் சுற்றுவது ஒழியேல் அப்படினு சொல்ல வில்லை.

ஓதுவது ஒழியேல் என்று கூறினாள்.

தினம் ஒரு பத்து பக்கமாவது நல்ல செய்திகளை படியுங்கள்.

பாட்டி சொல்லைத் தட்டாதே.


https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_3.html

Sunday, March 1, 2020

கம்ப இராமாயணம் - கூசிக் கூசி இவை இவை கூறினான்

கம்ப இராமாயணம் - கூசிக் கூசி இவை இவை கூறினான் 


தான் ஆசைப்படுவது சரி அல்ல என்று இராவணனுக்குத் தெரியும். என்ன செய்ய? ஆசை அவனை உந்தித் தள்ளுகிறது. எப்படியாவது சீதையிடம் பேசி அவளை சம்மதிக்க வைத்து விடு என்று அவன் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.

தவறு என்று அறிவு சொல்கிறது.

அது கிடக்கட்டும், நீ போய் கேள் என்று மனம் சொல்கிறது.

இரண்டுக்கும் நடுவில் கிடந்து தள்ளாடுகிறான்.

ஆசை ஒரு பக்கம், இப்படி ஒரு தவறான செயலை செகிறோமே என்ற நாணம் ஒரு புறம்...மிகுந்த கூச்சத்துடன் சீதையை அணுகுகிறான்....

பாடல்

ஈசற்கு ஆயினும் ஈடு அழிவுற்று இறை
வாசிப்பாடு அழியாத மனத்தினான்
ஆசைப்பாடும் அந்நாணும் அடர்த்திடக்
கூசிக் கூசி இவை இவை கூறினான்.

பொருள்


ஈசற்கு ஆயினும் = சிவனே என்றாலும்

ஈடு அழிவுற்று = இணை இல்லாத

இறை = பெருமிதம், பெருமை

வாசிப்பாடு அழியாத  = கொஞ்சம் கூட குறையாத

மனத்தினான் = மனத்தை உடையவன்

ஆசைப்பாடும் = ஆசை ஒரு பக்கம்

அந்நாணும் = நாணம் ஒரு பக்கம்

அடர்த்திடக் = சேர்ந்து நெருக்கிட

கூசிக் கூசி  = கூச்சத்துடன்

இவை இவை கூறினான். = இவற்றை கூறினான்

இராவணன், சீதையிடம் பேசப் போகிறான்.

ஒரு தகாத வேண்டுகோளை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் பேச்சு.

பேச்சு ஒரு கலை.  உணர்சிகளை வார்த்தையில் அழகாக வடிப்பது என்பது  கடினமான வேலை.

கம்பனின் தமிழ் எப்படி இருக்கிறது என்று பார்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post.html