Tuesday, March 3, 2020

அபிராமி அந்தாதி - சயமானது அபசயம் ஆக

அபிராமி அந்தாதி - சயமானது அபசயம் ஆக 


பார்ப்பதற்கு அபிராமி எப்படி இருப்பாள்? மற்ற பெண்களைப் போல இருப்பாளா? திடீரென்று நாளை நம் முன் வந்து நின்றால், அவள் தான் அபிராமி என்று நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா?

பட்டர் சொல்கிறார்....

அதிசயமான வடிவு உடையாள் ...என்ன அதிசயம் ? மூன்று கண், ஐந்து தலை என்று அதிசயமான வடிவமாக இருக்குமோ ?

மலர்களில் அழகியது தாமரை மலர். உலகில் உள்ள அனைத்து தாமரை மலர்களும் அவளுடைய முக அழகைப் பார்த்து வணங்குமாம். அப்படி ஒரு அதிசயம்.

அது மட்டும் அல்ல...

இரதி, மிக அழகானவள். அவளுடைய பதி மன்மதன், அவனும் சிறந்த அழகன். இராம பானத்துக்கு தப்பியவர்கள் கூட உண்டு, மன்மத பானத்துக்கு தப்பியவர் யாரும் கிடையாது. கரும்பு வில்லையும், மலர் அம்புகளையும் எடுத்துக் கொண்டு போருக்குப் போனால், தோல்வி என்பதே கிடையாது. வெற்றி மட்டும்தான். அப்படி எப்போதும் வெற்றி பெற்ற மன்மதன் தோற்ற இடமும் ஒன்று உண்டு. அது சிவனிடம். சிவன் மேல் மலர் அம்பை எறிந்தான். சிவனுக்கு காமம் வரவில்லை. கோபம் வந்தது. மன்மதனை எரித்து விட்டார்.

முதன் முதலில்  மன்மதனின் சயம் , அபசயம் ஆனது.

அப்படி மன்மத பானத்துக்கு மயங்காத சிவனும், அபிராமியின் அழகில் மயங்கி, தன் உடலில் இடப் பாகத்தை அவளுக்கு கொடுத்து விட்டார் என்றால், அபிராமி எவ்வளவு அழகாக இருக்க வேண்டும்?

பாடல்


அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?


பொருள்


அதிசயம் ஆன வடிவு உடையாள் = அதிசயமான வடிவு உடையாள்

அரவிந்தம் எல்லாம் = தாமரை மலர்கள் எல்லாம்

துதி சய ஆனன = துதிக்கும்

சுந்தரவல்லி = அழகான பெண்

துணை இரதி பதி = இரதியின் துணையான பதி (மன்மதன்)

சயமானது = வெற்றியானது

அபசயம் ஆக = தோல்வியாக

முன் = முன்பு

பார்த்தவர்தம் =  நெற்றிக் கண்ணால் பார்த்தவருடைய

மதி சயம் ஆக அன்றோ = அறிவை வெற்றி கொண்டதால் அல்லவா

வாம பாகத்தை வவ்வியதே? = இடப்பாகத்தை பெற்றுக் கொண்டது

என்ன ஒரு தமிழ்.

"துணை இரதி பதி சயமானது , அபசயமக பார்த்தவர் தம் மதி சயமாக "


மன்மத அம்புக்கு மயங்காதவரையும் மயங்க வைக்கும் அழகு.



அதிசயமான வடிவு உடையாள் ....அபிராமி



https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_35.html


2 comments:

  1. பிரமாதம்! பக்தியின் அளவு மிகுந்தால் கவித்திறனும் நயமும் தானாகவே வந்துவிடுமோ? வைணவ சைவ பாசுரங்களை எல்லாம் பார்க்கின்ற போது இந்த எண்ணம் வலுப் பெருகிறது

    ReplyDelete
  2. அபிராமியின் அழகை எவ்வளவு சொக்கிப் போய் இரசித்திருக்கிறார்!

    அருமை.

    ReplyDelete