Sunday, October 31, 2021

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்

நான்மணிக்கடிகை - கெட்டறிப கேளிரான் ஆய பயன்


யார் உறவு, யார் உறவு அல்லாதார் என்று நமக்கு ஒரு துன்பம் வரும் போதுதான் தெரியும். 


நன்றாக இருக்கும் காலத்தில் எல்லோரும் நட்பாக உறவாக இருப்பார்கள். துன்பம் வந்தால், எங்கே நம்மிடம் ஏதாவது கேட்டு விடுவானோ என்று எண்ணி மெதுவாக நகன்று விடுவார்கள். 


அதிலும் ஒரு நன்மை இருக்கிறது. உண்மையான உறவும் நட்பும் அப்போதுதான் தெரியும். 


உலகில் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. 


நவமணிகளின் தரம் அறிய அவற்றை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். ஒரு குதிரை எப்படி இருக்கிறது என்று அறிய அதன் மேல் சேணம் அமைத்து, ஓட்டிப் பார்த்து அறியலாம். பொன் எவ்வளவு உயர்ந்தது என்று அறிய அதை உருக்கிப் பார்க்க வேண்டும். உறவினர்களின் தரம் நாம் துன்பத்தில் இருக்கும் போது தெரியும். 


பாடல் 


மண்ணி யறிப மணிநலம் பண்ணமைத்து

எறிய பின்னறிப மாநலம் மாசறச்

சுட்டறிப பொன்னின் நலங்காண்பார் கெட்டறிப

கேளிரான் ஆய பயன்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_31.html


(Please click the above link to continue reading)



மண்ணி யறிப மணிநலம்  = கழுவி சுத்தம் செய்து அறிக நவமணிகளின் தரத்தை 


பண்ணமைத்து = சேணம் கடிவாளம் இவற்றை அமைத்து 

எறிய = ஏறி அமர்ந்த 


பின்னறிப = பின்னால் அறிக 


மாநலம் = குதிரையின் தரம் 


மாசறச் = குற்றமற்ற 


சுட்டறிப = உருக்கி அறிக 


பொன்னின் நலங்காண்பார் = தங்கத்தின் தன்மை அறிய வேண்டுபவர் 


கெட்டறிப = கெட்ட பின், அதாவது துன்பம் வந்த காலத்து அறிக 


கேளிரான் ஆய பயன் = உறவினர்களால் உண்டாகும் பயன். 



நல்ல நாளில் நமக்கும் உறவின் அருமை தெரியாது. 


உடம்புக்கு முடியவில்லை என்று படுத்துக் கொண்டால் கணவன் அல்லது மனைவியின் அருமை அப்போது தான் தெரியும். மத்த நாளில் அவரவர் வேலையை அவரவர் பார்த்துக் கொண்டு இருப்பார்கள். உடம்புக்கு முடியவில்லை என்றால் தான் ஒருவரின் அருமை மற்றவருக்குத் தெரியும். 


அது  இரண்டு விதத்திலும் தெரியும். 


உருக்கமாக கவனித்துக் கொண்டால் அருமை தெரியும். 


கண்டு கொள்ளாமல் இருந்தால்,அது அவ்வளவுதான் என்று தெரியும். 


எப்படி என்றாலும் உறவின் தரம் துன்பத்தில் தெரியும். 


இதையே வள்ளுவரும்,


"கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்" என்றார். 


கெடுதலிலும் ஒரு நன்மை இருக்கிறது. அது உறவினர்களை அளக்கும் ஒரு அளவு கோல் என்றார். 



Tuesday, October 26, 2021

வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 2

 

 வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 2 


((இதன் முதல் பாகத்தை கீழே காணலாம்))



பாடல் 

தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/2.html


(Pl click the above link to continue reading)


தப்போதாமற்றம்பியர்க்குந் = தப்பு ஓதாமல் தம்பியற்கும் = தவறாகச் சொல்லி யார் மனதையும் நோகச் செய்யாத தர்மன், தன் தம்பிகளுக்கும் 


தருமக்கொடிக்கும் = தர்மத்தின் கொடி போன்றவளான பாஞ்சாலிக்கும் 



இதமாக  = மனதிற்கு இதமாக, நன்மை உண்டாகும் படி 


அப்போதுணரும்படி = அப்போது உணரும் படி 


யுணர்ந்தான =  உணர்ந்தான் 


சோதைமகனை = யசோதையின் மகனான கண்ணனை 


யறத்தின்மகன் = தர்ம தேவதையின் மகனான தர்மன் 


எப்போதியாவரெவ்விடத்தி லெம்மை = எப்போது, யார், எவ்விடத்தில் எம்மை 


நினைப்பாரெனநின்ற = நினைப்பார்கள் என்று நின்ற 


ஒப்போதரியான்  = ஒப்பு + ஓது + அறியான் = தனக்கு ஒப்பு உவமை சொல்லுதற்கு அரியவனான கிருஷ்ணன் 


உதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே. = உதிட்டிரன் உள்ளத்தில் வந்து அப்போது உதித்தான் 


இறைவன் காத்துக் கொண்டு இருக்கிறான். எப்போது, யார், எந்த இடத்தில் தன்னை அழைப்பார்கள் , போய் உதவி செய்யலாம் என்று. 


கேட்டுத் தான் கொடுக்கணுமா ? அவனுக்கே தெரியாதா? கேட்காமலேயே கொடுத்தால் என்ன?


கொடுக்கலாம் தான். எவ்வளவோ கேட்காமலேயே கொடுத்தும் இருக்கிறான். இந்த அறிவு, இந்த உடல், இந்த மனம், இந்த நாடு, இந்த மொழி என்று எவ்வளவோ நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான்.  இந்த ஊரில், இந்த பெற்றோருக்கு, இந்த காலத்தில், இந்த வடிவில், இப்படி இருக்க வேண்டும் என்று நாம் கேட்டோமா? 


இந்த காற்று, மழை, மரம், நிழல், உணவு, ஆரோக்கியம், கணவன்/மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம் என்று ஆயிரம் ஆயிரம் நல்ல விடயங்கள் நமக்கு கேட்காமலேயே கொடுத்து இருக்கிறான். 


சில சமயம் கேட்டு கொடுப்பதில் சுகம் இருக்கிறது. 


பிள்ளை ஐஸ் கிரீம் வேண்டும் என்று ஆசையாக கேட்கிறான்/ள். ஓடிப் போய் வாங்கி தருகிறோம். அந்தக் குழந்தை சுவைத்து மகிழ்வதை பார்த்து பெற்றோர் மகிழ்வார்கள் அல்லவா? கேட்காமலேயே தினம் ஒரு ஐஸ் கிரீம் வாங்கித் தந்தால், "வேண்டாம் போ " என்று தூக்கி எறிந்து விடும். 


மனைவிக்கு ஆயிரம் பரிசுகள் வாங்கித் தரலாம். ஆனால், அவள் ஆசைப்பட்டு கேட்ட ஒன்றை வாங்கித் தருவதில் உள்ள சுகமே தனி.


இராமனுக்குத் தெரியாதா பொன் மான் என்று ஒன்று இல்லை என்று. வசிட்டரிடமும், விஸ்வாமித்திரரிடமும் பயின்றவனுக்கு இது கூடத் தெரியாதா. 


மனைவி கேட்டு விட்டாள். தன் பொருட்டு எவ்வளவோ துன்பம் அனுபவிக்கிறாள். அவள் ஆசைப் பட்டு கேட்டு விட்டாள். அவளிடம் போய் தர்க்கம் பண்ணிக் கொண்டு இருப்பதில் என்ன சுகம். அவள் கேட்டதை பிடித்துத் தர வேண்டும் என்று கிளம்பி விட்டான். 


அது போல, இறைவனும் காத்துக் கொண்டே இருக்கிறானாம். நினைத்தவுடன் தர்மன் மனதில் வந்து விட்டான்.


கூப்பிடவுடன் யானைக்காக வந்தான், பாஞ்சாலிக்காக வந்தான். 


நமக்கும் வருவான் என்ற நம்பிக்கையை இந்த இலக்கியங்கள் விதைக்கின்றன.


நான் நினைத்தால் வருவானா? எத்தனையோ தரம் நினைத்து இருக்கிறேன். வரவே இல்லை என்றால். 


தர்மன் பிறர் மனம் நோகும்படி தவறாகவே பேச மாட்டானாம். 


இறைவன் மனதில் வர வேண்டும் என்றால் அது தூய்மையாக இருக்க வேண்டாமா. 


நான் மனதை குப்பையாக வைத்து இருப்பேன், இறைவன் வர வேண்டும் என்றால் நடக்குமா?






------------------------------ பாகம் 1 -------------------------------------------------------------------------


வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ? - பாகம் 1





பாண்டவர்கள் காட்டில் இருக்கிறார்கள். துரியோதனன் சூதில் வென்று பாண்டவர்களை கானகம் அனுப்பி விட்டான். 


நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இல்லை. அவனால் முடியாது. எப்போது பொறாமை மனதில் புகுந்து விட்டதோ, நிம்மதி போய் விடும். 


பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறான். 


அப்போது அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அவரை நன்கு உபசரிக்கிறான். அவரும் அதில் மகிழ்ந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...தருகிறேன்" என்றார். 


என்ன கேட்டு இருக்க வேண்டும்? 


ஞானம் கேட்டிருக்கலாம். செல்வம் கேட்டு இருக்கலாம். புகழ் கேட்டு இருக்கலாம். வீடு பேறு கேட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டான். பாண்டவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து "முனிவரே என் மாளிகை வந்து என்னை சிறப்பித்தது போல, பாண்டவர்களிடமும் சென்று நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். 


அவன் எண்ணம் என்ன என்றால், துர்வாச முனிவர் சீடர்களுடன்  அங்கு போவார். பாண்டவர்களால் முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு வழங்க முடியாது. துர்வாச முனிவருக்கு கோபம் வரும். அவர் பாண்டவர்களை சபிப்பார். பாண்டவர்கள் நாசமாகப் போவார்கள். அது தான் அவன் எண்ணம். 


துர்வாச முனிவரும் அவ்வாறே சென்றார். 


அவரை வரவேற்று உபசரித்து, குளித்து விட்டு வாருங்கள் உணவு அருந்தலாம் என்று தர்மன் அவரை அனுப்பி விட்டான். 


அவர்களிடம் அட்சய பாத்திரம் இருந்தது. ஆனால், அதில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு வரும். கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் பின் மறு நாள் தான் அதில் உணவு வரும். 


துர்வாசர் வந்த அன்று, பாண்டவர்கள் உணவு உண்டு, பாத்திரத்தை கழுவி வைத்து விட்டார்கள். 


இப்போது என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_71.html


(Pl click the above link to continue reading)




முனிவர் வருவார். பசிக்கு உணவு இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும்.  சாபம் தருவார். என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருந்தார்கள். 


இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். 


தர்மன் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் வருகிறான். 


இங்கே வில்லிப் புத்தூர் ஆழ்வார் ஒரு அருமையான கவிதை வைக்கிறார். 


பாடல் 


தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.



ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், பொருள் விளக்கத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போமா?



Sunday, October 24, 2021

திருக்குறள் - பிறவியின் நோக்கம்

 திருக்குறள் - பிறவியின் நோக்கம் 


இந்த பிறவி எதற்கு எடுத்ததின் நோக்கம் என்ன? 


தினம் மூன்று வேளை உண்பது, உடுப்பது, படிப்பது, வேலை செய்வது, பணம் சம்பாதிப்பது ...இது போன்ற நோக்கங்களா?


உயிர், உடல் என்று இரண்டு இருக்கிறது என்று ஏற்றுக் கொள்வோம். உயிர் என்று ஒன்று இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 


ஒருவர் மேல் அன்பு செய்ய வேண்டும் என்றால், ஒரு உடல் வேண்டும். வெறும் உயிர் அன்பு செய்யுமா? 


எவ்வளவுதான் அன்பு உள்ள அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்றாலும், இறந்து பல வருடம் கழித்து, ஒரு நாள் இரவு தனியாக ஆவியாக வந்தால் நமக்கு அன்பு வருமா, பயம் வருமா?  


உயிர், ஒரு உடலை தேர்ந்து எடுப்பது அல்லது ஒரு பிறவி எடுப்பது எதற்கு என்றால் அன்பு செய்யத் தான். 


பாடல் 



அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு

என்போடு இயைந்த தொடர்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_24.html


(pl click the above link to continue reading)



அன்போடு = அன்புடன் 


 இயைந்த  = இணைந்த, சேர்ந்த 


வழக்கென்ப = முறை, காரணம் என்று சொல்லுவார்கள் 


ஆருயிர்க்கு = அருமையான உயிர்க்கு 


என்போடு  = உடலோடு 


இயைந்த = சேர்ந்த 


தொடர்பு. = தொடர்ச்சி 



இந்த உயிர் உடலோடு சேர்ந்து இருக்க காரணம் என்ன என்றால் அன்பு செய்யும் நோக்கம் தான். 


இது மேலோட்டமான கருத்து மட்டும் அல்ல, சற்று தவறான கருத்தும் கூட. 


முதலில் புரிந்து கொள்ள இங்கிருந்து ஆரம்பிப்போம். பின் பரிமேலழகர் எப்படி விளக்கம் தருகிறார் என்று பார்ப்போம். 


"ஆருயிர்க்கு" ... உயிரா அன்பு செய்கிறது? உடல் தான் அன்பு செய்கிறது. உயிர், உடலின் மூலம் அன்பு செய்கிறது. பரிமேலழகர் செய்யும் நுட்பம் மிக மிக வியக்க வைக்கும் ஒன்று. 


ஆருயிர் என்றால் அருமையான உயிர் என்று அவர் பொருள் கொள்ளவில்லை.    " பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு " என்று உரை செய்கிறார். 


உயிர் என்பது ஆகு பெயர் என்று கொள்கிறார். 


அதாவது,  உயிர் எல்லா ஜீவராசிகளிடமும் இருக்கும். பாக்டீரியா, ஈ, எறும்பு, கொசு, என்று அனைத்து பிறவியிலும் உயிர் இருக்கும். தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது. அவை எல்லாம் அன்பு செய்து கொண்டு இருக்கின்றனவா? உயிர் தேவை கருதி சில நாள் செய்யலாம். அன்பின் நீட்சி இருக்காது. மகன், பேரன், என்று தலைமுறை தாண்டி நீளாது. 


எனவே இங்கு உயிர் என்பது மக்கள் உயிர் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


அதெல்லாம் முடியாது. உயிர் என்று ஒன்று கிடையாது. இருக்கிறது என்றால் எங்கே இருக்கிறது? என்ன வடிவில் இருக்கிறது, என்ன நிறம், எடை? காட்டு.அதை பரிசோதிக்காமல் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலர் சொல்லலாம். 


"தொடர்பு" என்றால் என்ன என்று விளக்கம் செய்கிறார்.  " உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை".


அதாவது, உயிர் தொண்டர்ந்து கொண்டே இருக்கும். இந்த உடலை விட்டு இன்னொரு உடலில் போய் சேரும். அந்த தொடர்ச்சியின் காரணம் முற்பிறவிகளில் விடுபட்ட அன்பை தொடர்வதற்காக என்கிறார். 


நிறைய படிப்பு அறிவு இல்லாதவர்கள் கூட, காதலிக்கும் போது "ஏதோ உனக்கும் எனக்கும் முன் ஜன்ம தொடர்பு இருந்திருக்கும் போல இருக்கு..இல்லேனா எப்படி பாத்தவுடன் உன்னை எனக்கு புடிச்சு போச்சு" என்று பேசுகிறார்கள் இல்லையா?


"அடுத்த பிறவியிலும் நீயே என் கணவனாக/மனைவியாக" வர வேண்டும் என்று ஒவ்வொரு தம்பதிகளும் எப்போதாவது நினைத்து இருப்பார்கள். இந்தப் பிறவித் தொடர் என்பது அன்பு பற்றி வருகிறது. நம்மை அறியாமலேயே இது நமக்கு உள்ளுணர்வில் புரிகிறது அல்லவா? 


அடுத்த பிறவியிலும் நீயே எனக்கு எதிரியாக வர வேண்டும் என்று யாராவது விரும்புவார்களா?


சரி, குறளுக்கு வருவோம். 


தீபாவளிக்கு துணி எடுக்க கடைக்குப் போகிறோம். அலசி ஆராய்ந்து துணி எடுத்துவிட்டுத் தான் வருகிறோம் அல்லவா?


உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரைப் பார்க்கப் போகிறோம். பார்த்து, மருந்து வாங்கிக் கொண்டுதானே வருகிறோம். 


போன நோக்கம் நிறைவேற வேண்டும் அல்லவா?


இந்தப் பிறவியின் நோக்கம், அன்பு செய்வதுதான். 


அதைச் செய்யாமல் வேறு ஏதேதோ செய்து கொண்டிருக்கிறோம்.  சண்டை போடுகிறோம், கோபம் கொள்கிறோம், பொறாமை, எரிச்சல், சுயநலம் என்று இருக்கிறோம். அதற்காக அல்ல நாம் வந்தது. 


அன்பு செய்ய வந்திருக்கிறோம். வந்த வேலையை பார்ப்போம். 


எல்லோரும் அன்பு செய்வதுதான் வாழ்வின் நோக்கம் என்று இருந்து விட்டால்,இந்த உலகம் எப்படி இருக்கும். 


பரிமேலழகர் உரை எழுதுகிறார் 


"என்ப" என்றால் "என்று சொல்லுவர் அறிந்தோர்." என்கிறார். 


முட்டாள்கள் எப்படியோ சொல்லிவிட்டுப் போகட்டும். உயிர் என்று ஒன்று இருக்கிறது. அது உடலில் இருக்கிறது. அது உடலில் இருக்கக் காரணம் அன்பு செய்ய என்று அறிந்தோர் சொல்வர் என்கிறார். 


அப்படி இல்லை என்று சொன்னால், நாம் யார் என்று வள்ளுவர் கூறுகிறார் என்று தெரிகிறது அல்லவா?




Wednesday, October 20, 2021

வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ?

 வில்லி பாரதம் - என்னை யார் நினைப்பார் ?


பாண்டவர்கள் காட்டில் இருக்கிறார்கள். துரியோதனன் சூதில் வென்று பாண்டவர்களை கானகம் அனுப்பி விட்டான். 


நிம்மதியாக இருக்க வேண்டியது தானே? இல்லை. அவனால் முடியாது. எப்போது பொறாமை மனதில் புகுந்து விட்டதோ, நிம்மதி போய் விடும். 


பாண்டவர்களை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று நினைக்கிறான். 


அப்போது அங்கு துர்வாச முனிவர் வருகிறார். அவரை நன்கு உபசரிக்கிறான். அவரும் அதில் மகிழ்ந்து, "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்...தருகிறேன்" என்றார். 


என்ன கேட்டு இருக்க வேண்டும்? 


ஞானம் கேட்டிருக்கலாம். செல்வம் கேட்டு இருக்கலாம். புகழ் கேட்டு இருக்கலாம். வீடு பேறு கேட்டு இருக்கலாம். அதை எல்லாம் விட்டு விட்டான். பாண்டவர்கள் நாசமாகப் போக வேண்டும் என்று நினைத்து "முனிவரே என் மாளிகை வந்து என்னை சிறப்பித்தது போல, பாண்டவர்களிடமும் சென்று நீங்கள் அவர்களுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டான். 


அவன் எண்ணம் என்ன என்றால், துர்வாச முனிவர் சீடர்களுடன்  அங்கு போவார். பாண்டவர்களால் முனிவருக்கும் அவருடைய சீடர்களுக்கும் உணவு வழங்க முடியாது. துர்வாச முனிவருக்கு கோபம் வரும். அவர் பாண்டவர்களை சபிப்பார். பாண்டவர்கள் நாசமாகப் போவார்கள். அது தான் அவன் எண்ணம். 


துர்வாச முனிவரும் அவ்வாறே சென்றார். 


அவரை வரவேற்று உபசரித்து, குளித்து விட்டு வாருங்கள் உணவு அருந்தலாம் என்று தர்மன் அவரை அனுப்பி விட்டான். 


அவர்களிடம் அட்சய பாத்திரம் இருந்தது. ஆனால், அதில் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவு வரும். கழுவி கவிழ்த்து வைத்து விட்டால் பின் மறு நாள் தான் அதில் உணவு வரும். 


துர்வாசர் வந்த அன்று, பாண்டவர்கள் உணவு உண்டு, பாத்திரத்தை கழுவி வைத்து விட்டார்கள். 


இப்போது என்ன செய்வது?


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_71.html


(Pl click the above link to continue reading)




முனிவர் வருவார். பசிக்கு உணவு இல்லை என்றால் அவருக்கு கோபம் வரும்.  சாபம் தருவார். என்ன செய்வது என்று தவித்துக் கொண்டு இருந்தார்கள். 


இந்தக் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான். 


தர்மன் கண்ணனை நினைக்கிறான். கண்ணன் வருகிறான். 


இங்கே வில்லிப் புத்தூர் ஆழ்வார் ஒரு அருமையான கவிதை வைக்கிறார். 


பாடல் 


தப்போதாமற்றம்பியர்க்குந் தருமக்கொடிக்குமிதமாக

அப்போதுணரும்படியுணர்ந்தா னசோதைமகனையறத்தின்மகன்

எப்போதியாவரெவ்விடத்தி லெம்மைநினைப்பாரெனநின்ற

ஒப்போதரியானுதிட்டிரன்ற னுளப்போதிடைவந்துதித்தானே.



ப்ளாக் சற்றே நீண்டு விட்டதால், பொருள் விளக்கத்தை அடுத்த பாகத்தில் பார்ப்போமா?



திருக்குறள் - அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

 திருக்குறள் - அன்பிலார் எல்லாம் தமக்குரியர்


அன்பு செலுத்துவது என்றால் என்ன?  


கண்ணே, மணியே என்று கொஞ்சுவதா? வேண்டியது எல்லாம் வாங்கித் தருவதா? நல்லது கெட்டது சொல்லித் தருவதா? 


ஒருவன் அன்புடையவன் என்று எப்படிச் சொல்வது? 


இப்போதெல்லாம் அன்பு என்பது பண்டமாற்று என்று ஆகிவிட்டது. நீ எனக்கு என்ன செய்வாய், நான் உனக்கு இது செய்தால் என்ற கேள்வியில் வந்து நிற்கிறது. எதிர்பார்ப்பில்லாத அன்பு என்று ஒன்றே இல்லை என்று ஆகி விட்டது. அப்படி சொல்பவர்களை பைத்தியகாரர்கள் என்று உலகம் சொல்லத் தொடங்கி விட்டது. 


கணவன் மனைவி அன்பில் கூட, யாருக்கு யார் எவ்வளவு செய்தார்கள் என்று கணக்கு பார்க்கும் காலம். "நான் என்ன வேலைக்காரியா", "நான் என்ன பணம் காய்க்கும் மரமா", என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டோம். 


 பிள்ளை வளர்ப்பதில் கூட, வயதான காலத்தில் பார்த்துக் கொள்வான் என்ற எதிர்பார்ப்பு வந்து விட்டது. 



வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்


பாடல் 


அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_20.html


(Please click the above link to continue reading)



அன்பிலார் = அன்பு இல்லாதவர்கள் 


 எல்லாம் = அனைத்தும் 


தமக்குரியர் = தங்களுக்கு உரியது என்று நினைப்பார்கள் 


 அன்புடையார் = அன்பு உள்ளவர்கள் 


என்பும் = தங்களுடைய எலும்பு கூட 


உரியர் பிறர்க்கு = பிறர்க்கு உரியது என்று நினைப்பார்கள் 


அன்பு இல்லாதவர்கள்  எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பார்கள். 


அன்பு உள்ளவர்கள் அனைத்தும் பிறர்க்கு உரியது என்று நினைப்பார்கள். 


இப்படித்தான் நாம் மேலோட்டமாக பொருள் கொள்வோம். 


பரிமேலழகர் மிக ஆழமான பொருள் சொல்கிறார். 


"அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும் தமக்கே உரியர்"


அன்பு இல்லாதவர்களால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அவர்களிடம் யாரும் போக மாட்டார்கள். எனவே, எந்த விதத்தில் பார்த்தாலும், அவர்கள் தங்களுக்கு மட்டுமே உரியவர்கள். 


"என் கணவன்", "என் மனைவி", "என் அப்பா, அம்மா" என்று அவர்களை யாரும் கூற முடியாது.  அவர்கள் மேல் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அவர்கள் யாருக்கும் உரியவர்கள் அல்ல. தமக்கே உரியர். 


காரணம், அவர்கள் ஒரு கணவனாக, மனைவியாக, தந்தையாக, தாயாக ஒன்றும் செய்ய மாட்டார்கள். 


நான் எப்போது ஒரு தந்தையாகிறேன்? என் பிள்ளைகளுக்கு வேண்டியதை செய்யும் போது, எனக்கு பசித்தாலும், பிள்ளை சாப்பிடட்டும் என்று அவன்/அவள் சாப்பிடுவதை கண்டு மகிழும் போது நான் தந்தையாகிறேன். அப்போது என் பிள்ளை சொல்லுவான் "...இவர் என் அப்பா" என்று. 


அப்படிச் செய்யாமல், இருந்தால் என்ன ஆகும். பிள்ளைக்கு அப்பா மேல் பாசம் இருக்காது. 


புரிகிறது அல்லவா?


சிலர் இருக்கிறார்கள். பணம் வேண்டுமா, எடுத்துக் கொண்டு போ. என்னை தொந்தரவு செய்யாதே. என் நேரம் எனக்கு முக்கியம். உனக்கு ஊர் சுற்ற வேண்டுமா, போய் கொள், என்னை விட்டு விடு. எனக்கு வேறு வேலை இருக்கிறது என்று தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பார்கள். 


அது அன்பா? 


வேண்டிய பணம் கொடுத்தேனே? படிக்க வைத்தேனே? பாட வைத்தேனே? உடை வாங்கிக் கொடுத்தேன், உணவு, நல்ல பள்ளிக் கூடம், கல்லூரியில் படிக்க வைத்தேன், கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேன்...அது அன்பு இல்லையா என்றால் இல்லை என்கிறார் வள்ளுவர். 


அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 


அன்பு இருந்தால், யார் மேல் அன்பு இருக்கிறதோ அவர்களுக்காக அவர்கள் என்ன கேட்டாலும் கொடுக்க வேண்டும். எலும்பையே கொடுப்பார்கள் என்கிறார். 


நேரத்தை கொடுக்க மாட்டேன் என்றால் அது அன்பு இல்லை. 


மனைவிக்கு புடவை எடுக்க வேண்டும். கணவன் கூட வந்தால் நல்லா இருக்கும் என்று அவள் நினைக்கிறாள். "நான் வந்து என்ன செய்யப் போகிறேன்...நீயே போயிட்டு வா...காரை எடுத்துக் கொண்டு போ" என்று அனுப்பி விடுகிறான் கணவன். 


அன்பில்லை என்றுதான் அர்த்தம். 


சரியா தவறா என்பது வேறு விவாதம். 


அன்பு இருக்கிறதா இல்லையா என்றால், அன்பு இல்லை என்று அர்த்தம். அவ்வளவுதான். 


அன்பு இருந்தால், "இரு நானும் வருகிறேன்...கொஞ்சம் வேலை இருக்கு, அதை வந்து பார்த்துக் கொள்கிறேன்" என்று புறப்பட வேண்டும். 


அப்படிச் செய்தால், எப்பப் பார்த்தாலும் மனைவி பின்னேயே போய் கொண்டு இருக்க வேண்டியது தான். காய் கறி வாங்க, அழகு நிலையம் போக என்று. மற்ற வேலைகளை யார் பார்ப்பது என்றால், மனைவிக்கு அன்பு இருந்தால், அவள் அப்படி இழுத்துக் கொண்டு அலைய மாட்டாள். 


"என் கூட அவர் வந்தால் நல்லா இருக்கும். ஆனால், அவருக்கு தனிமை தேவைப் படுகிறது. என் சந்தோஷத்தை அவருக்காகத் தருகிறேன்" என்று அவளும் நினைக்க வேண்டும். என்பும் உரியர் பிறர்க்கு என்பது அவளுக்கும் பொருந்தும். 


இப்படி ஒருவற்கு ஒருவர் மாறி மாறி அன்பு செய்து கொண்டிருந்தால், இல்லறம் எவ்வளவு இனிமையாக இருக்கும்?


கணவன் மனைவி மட்டும் அல்ல. 


சகோதர்கள் இடையில் அந்த அன்பு இருக்க வேண்டும். 


நாட்டை பரதனுக்கு கொடு என்றவுடன் இராமன் சொன்னான் "என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ" என்று. 


எலும்பையே கொடுக்கலாம் என்றால், இராஜ்யமா பெரிது? கொடுக்கலாம்தானே?


பாதி நாடு கொடு, இல்லை என்றால், ஐந்து ஊர் கொடு, இல்லை என்றால் ஐந்து வீடாவது கொடு என்று துரியோதனிடம் தர்மன் கேட்டான். "ஊசி முனை நிலமும் தர மாட்டேன்" என்றான் துரியோதனன். 


எல்லாம் தமக்கு உரியர். 


ஆழ்ந்த குறள். 


சிந்திப்போம். முடிந்தவரை கடைபிடிப்போம். 


உரை சற்றே நீண்டு விட்டது. மன்னிக்க. 

Sunday, October 17, 2021

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான்

கம்ப இராமாயணம் - கங்குலும் பகல் பட வந்தான் 


இராவணன் பாத்திரத்தை கம்பன் செதுக்கியது போல இன்னொரு பாத்திரத்தை செதுக்கினானா என்று தெரியவில்லை. 


ஒரு புறம் மாபெரும் வீரம், இந்திராதி தேவர்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வீரம், இன்னொரு புறம் அளவுகடந்த சிவ பக்தி, இன்னொரு புறம் இறைவனை இறங்கி வரச் செய்யும் இசை ஞானம், மறு புறம் கல்வி கேள்விகளில் சிறந்த அறிவு....இது எல்லாம் ஒரு புறம். 


இன்னொரு புறம், சீதையின் மேல் அளவு கடந்த காமம், தம்பிகள் மேல் வாஞ்சை, மகன் மேல் உயிர் உருகும் அன்பு....


அறிவு, வீரம், காமம், காதல், பாசம், அன்பு என்று அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறான். 


அவனின் வீரம், கம்பீரம் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் காமத்தால் அவன் எந்த அளவுக்கு ஒரு பெண்ணின் முன்னால் மண்டியிட்டு இறைஞ்சுகிறான் என்று பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. 


இராவணன், சீதையை பார்த்துப் பேசும் இடங்கள்...நான் என்ன சொல்ல அந்த கவிதைகளை நீங்களே பாருங்கள். 


அசோகவனம் நோக்கி இராவணன் வருகிறான்....


"உலகில் உள்ள பெரிய மலைகள் எல்லாம் ஒன்றாக ஒரு இடத்தில் சேர்ந்தால் எப்படி இருக்கும். அது போல இருந்தது பத்துத் தலையோடு இராவணன் வருவது. உடல் எங்கும் ஆபரணங்கள். அதில் இள வெயில் பட்டு ஜொலிக்கிறது. அது கடல் நீரில் சூரிய ஒளி பட்டு மின்னுவது போல இருக்கிறது. அவன் வரும் போது இரவு கூட பகல் போல ஒளி விடும்"


பாடல் 


 சிகர வண்குடுமி நெடு வரை எவையும்

     ஒரு வழித்திரண்டன சிவண,

மகரிகை வயிரகுண்டலம் அலம்பும்

     திண்திறல் தோள் புடை வயங்க,

சகர நீர் வேலைதழுவிய கதிரின்,

     தலைதொறும்தலைதொறும் தயங்கும்

வகைய பல் மகுடம்இள வெயில் எறிப்ப,

     கங்குலும்பகல்பட, வந்தான்.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_17.html


(please click the above link to continue reading)





 சிகர = சிகரங்கள், மலைகள் 


 வண்குடுமி = உயர்ந்த உச்சி, மலை உச்சி 


நெடு வரை = நீண்ட மலைகள் 


எவையும் = அனைத்தும் 


ஒரு வழித்திரண்டன சிவண, = ஓரிடத்தில் சேர்ந்தது போல 


மகரிகை = மீன் வடிவாய் அமைந்த ஆபரணங்கள் 


வயிரகுண்டலம் = வயிரத்தால் அமைந்த காதில் அணியும் குண்டலம் 


அலம்பும் = அசையும் 


திண்திறல் தோள் புடை = புடைத்த, உறுதியான தோள்களில் 


வயங்க = விளங்க 


சகர நீர் வேலை  = சகர புத்திரர்கள் தோண்டியதால் உண்டானது சாகரம். கடல். அந்த கடல் நீரில் 


தழுவிய கதிரின் = பிரதிபலிக்கும் சூரிய ஒளி 


தலைதொறும்தலைதொறும்  = ஒவ்வொரு தலையிலும் 


தயங்கும் = விளங்கும் 


வகைய = விளங்கும் 


பல் மகுடம் = பல மகுடங்கள் (பத்து) 


இள வெயில் எறிப்ப, = இளமையான வெயில் (மாலை நேரமாக இருக்கும்) 


கங்குலும்பகல்பட, வந்தான். = இரவு கூட பகல் போல் வெளிச்சமாக தோன்றும் படி வந்தான். 


என்ன ஒரு buildup.


கடலுக்கு சாகரம் என்று ஒரு பெயர் உண்டு. 


சகர புத்திரர்கள் தோண்டியதால் அதற்கு சாகரம் என்று பெயர்.


அந்தக் கதையை இங்கே காணலாம். 


https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2014/oct/31/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1004451.html





Saturday, October 16, 2021

நாலடியார் - பாற்கூழை மூழை சுவையுணராது

நாலடியார் -  பாற்கூழை மூழை சுவையுணராது 


சிலருக்கு எதைச் சொன்னாலும் அதற்கு எதிர்மறையான ஒன்றைச் சொன்னால்தான் ஒரு திருப்தி. சொல்பவர் யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய கருத்தாக இருந்தாலும், தங்கள் மேதா விலாசத்தை காட்டாவிட்டால் அவர்களுக்கு தூக்கம் வராது.


"வள்ளுவர் தவறாக சொல்லி விட்டார்" 


"கம்பர் பாட்டில் பிழை"


என்று ஏதாவது இடக்கு மடக்காக சொன்னால்தான் தாங்கள் அறிவாளிகள் என்று மற்றவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அவர்கள் எண்ணம். 


பெரியவர்கள், தங்களுக்குத் தெரிந்த உண்மைகளை தாங்களே வைத்துக் கொண்டிருக்கலாம். வருங்கால சந்ததிக்கு பயன் படட்டுமே என்று நம் மேல் உள்ள அன்பினால், அருளினால் அவர்கள் கண்ட அறங்களை நமக்குச் சொல்லி விட்டுப் போனார்கள். 


அதை நன்றி உணர்வோடு ஏற்றுக் கொள்வதுதான் அவர்களுக்கு செய்யும் கைம்மாறு. 


சிலருக்கு அது புரிவதே இல்லை. 


அண்டா நிறைய பால் பாயசம் இருக்கும். பாலும், முந்திரி பருப்பும், நெய்யும்,  சர்க்கரையும் இட்டு சுவையாக செய்த பால் பாயசம். அதை முகந்து பரிமாற அந்த அண்டாவில் ஒரு கரண்டி போட்டு இருப்பார்கள். அந்தக் கரண்டி முழுக்க முழுக்க பால் பாயசதுக்குள்தான் மூழ்கிக் கிடக்கும். 


என்ன பயன். கரண்டிக்கு பாயசத்தின் சுவை தெரியுமா?


அது போல, சிலர் எவ்வளவு படித்தாலும், படித்தவை உணர்வில் ஒட்டாது. அது மட்டும் அல்ல, படித்ததை புரியாமல் இகழவும் செய்வார்கள். தங்கள் நிலைக்கு உயர்ந்த புத்தகங்களை கீழ் இறக்கி விடுவார்கள். 


பாடல் 



அருளின் அறமுரைக்கும் அன்புடையார் வாய்ச்சொல்

பொருளாகக் கொள்வர் புலவர்; -பொருளல்லா

ஏழை அதனை இகழ்ந்துரைக்கும் பாற்கூழை

மூழை சுவையுணரா தாங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_29.html


(Pl click the above link to continue reading)


அருளின் = அருளினால் 


அறமுரைக்கும் = அறத்தினை எடுத்து உரைக்கும் 


 அன்புடையார் = அன்புடைய சான்றோர்களின் 


 வாய்ச்சொல் = வாயில் பிறந்த சொல்லை 


பொருளாகக் கொள்வர் புலவர்; = பெரிய மதிப்பு மிக்க பொருளாகக் கொள்வர் அறிவுடையோர் 


பொருளல்லா = பொருள் புரியாத


ஏழை = பேதை 


அதனை இகழ்ந்துரைக்கும் = அந்த அறங்களை பழித்துக் கூறும் 


பாற்கூழை = பால் பாயசத்தை 


மூழை = கரண்டி 


சுவையுணரா தாங்கு. = சுவை உணராதது போல 


பிறன் மனை நோக்கா பேராண்மை என்கிறார் வள்ளுவர். 


ஏன், மற்றவன் மனைவியைப் பார்த்தால் என்ன? அவளுக்கும் பிடித்து இருந்தால், பார்ப்பதில் என்ன தப்பு? ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் முட்டாள்தனம் என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். 


அப்படி இல்லை என்றால், "வள்ளுவருக்கு என்ன சொல்லுவாரு...அதெல்லாம் நடை முறையில் சாத்தியம் இல்லை. அவருக்கு அதெல்லாம் எங்க தெரியப் போகுது" என்று வள்ளுவரின் அறிவை இவர்கள் எடை போடுவார்கள். 


பாற்கூழை சுவை உணரா மூழைகள். 


பாரதியார் சொல்வார், தேன் குடத்தில் இட்ட அகப்பைகள் என்று. 




திருக்குறள் - அடைக்கும் தாழ்

 திருக்குறள் - அடைக்கும் தாழ் 


அழுவது என்பது ஒரு பலகீனம் என்று ஒரு எண்ணம் பரவலாக உண்டு. 


ஆண் என்றால் எது வந்தாலும் அழக் கூடாது. பெண் என்றால் எதற்கு எடுத்தாலும் அழலாம் என்று ஒரு கோட்பாடு நம் மத்தியில் உலவுகிறது. 


சிறு வயதில் பையன்கள் அழுதால், "என்னடா இது பொம்பள புள்ளை மாதிரி அழுகிற" என்று கேலி பேசுவார்கள். அப்படி சொல்லி சொல்லி ஆண்கள் அழக் கூடாது. அது ஆண்மைக்கு அழகு அல்ல என்று செய்து விட்டோம். அப்படி சொல்லி சொல்லி வளர்த்து அவர்களை முரடர்களாக்கி விட்டோம். 


கண்ணீர் என்பது உணர்வின் வெளிப்பாடு. அது துக்கத்தில் வரும், அளவு கடந்த மகிழ்ச்சியில் வரும், எதிர் பாராத ஆச்சரியத்தில் வரும், மிக இனிமையான இசையைக் கேட்டால் வரும், பக்தியில் வரும், பிறர் துன்பம் கண்டு வரும். 


வள்ளுவர் கூறுகிறார், "கண்ணீர் அன்பின் வெளிப்பாடு. அன்பு கொண்டவர்களுக்கு ஒரு துன்பம் வந்தால், உடனே நம் கண்ணில் நீர் வரும். ஐயோ பாவம் அவன்/அவள் எப்படி இதை தங்குகிரானோ/ளோ என்று மனதின் அடியில் இருந்து ஒரு கேவல் பிறக்கும். அதில் இருந்து வரும் கண்ணீர் , மனதில் உள்ள அன்பை காட்டிவிடும். அதை அடைத்து வைக்க முடியாது" என்கிறார். 


பாடல் 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_16.html


(Please click the above link to continue reading)



அன்பிற்கும் உண்டோ  = அன்பிற்கு உண்டா 


அடைக்கும்தாழ் = அடைத்து வைக்கும் தாழ்பாள் (இல்லை) 


ஆர்வலர் = மிகுந்த அன்பு கொண்டவர் 


புன் = துன்பம் கண்டு பிறக்கும் 


கணீர் = கண்ணீர் 


பூசல் தரும் = ஆராவரம் தரும். அறிவிக்கும் 


ஒருவர் மேல் செலுத்தும் அன்பு அதிகமானால் அதற்கு ஆர்வம் என்று பெயர். 


"அன்பீனும் ஆர்வம் உடைமை அது ஈனும் நண்பெனும் நாடாச் சிறப்பு " - குறள் 


அளவு கடந்த அன்பு. தாய்க்கு பிள்ளை மேல் உள்ள அன்பு போல, சில அழ்ந்த நட்பு போல்...ஆர்வம் உண்டானால் அதற்கு ஆர்வம் என்று பெயர். 


யார் மேல் ஆர்வம் உள்ளதோ, அவர்களுக்கு ஒரு துன்பம் என்றால், நமக்கு கண்ணீர் வரும். அதை அடைத்து வைக்க முடியாது. 


உண்மையான அன்புக்கு அடையாளம், கண்ணீர். 


அன்பின் அடையாளம் கூறப்பட்டது. 


மேலும் சிந்திப்போம். 




Friday, October 15, 2021

திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - ஆறாக் காமக் கொடியகனல்

 திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - ஆறாக் காமக் கொடியகனல்


எந்தத் தீயும் சிறிது நாளில் ஆறிவிடும். பெரிய பெரிய எரிமலை கூட வெடித்துச் சிதறி, நெருப்பைக் கக்கினாலும், சில பல மாதங்களில் குளிர்ந்து விடும். 


என்றும் ஆறாத கனல் என்பது காமக் கனல்தான். உடல் உள்ள அளவும், உயிர் உள்ள அளவும் எரிந்து கொண்டே இருக்கும் கனல் அது.


ஏன் அப்படி எரிகிறது? தொடர்ந்து எரிய வேண்டும் என்றால், யாரவது அதில் மேலும் மேலும் எரியும் பொருட்களைப் போட வேண்டும், ஊதி விட வேண்டும் அல்லவா?


ஐந்து புலன்களும் அந்தக் காமக் கனலை அணையவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. 


பார்வையில் காமம், தொட்டால் சுகம், கேட்டால் இனிமை, அருகில் சென்றால் மணம் காமத்தைத் தூண்டும்...ஐந்து புலன்களும் காமம் என்ற தீ அணைந்து விடாமல் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. 


இப்படி ஒரு தீ எரிந்து கொண்டே இருந்தால், அந்த உடம்புதான் என்ன ஆகும். எரிந்து சாம்பலாகிப் போய் விடும் அல்லவா? அப்படி வெந்து நீராகாமல், காம உணர்வுகளை அகற்றி, உன்னை நினைக்கும் அருள் தந்து, என்னைக் காத்தாய் என்று திருக்கருவை என்ற ஊரில் உறையும் சிவ பெருமானே என்று அதி வீர ராம பாண்டியர் பாடுகிறார். 



பாடல் 


ஆறாக் காமக் கொடியகனல்

        ஐவர் மூட்ட அவலமனம்

    நீறாய் வெந்து கிடப்மேனை,

        நின்தாள் வழுத்த நினைவுதந்து

    மாறா நேயத் திரவுபகல்

        மறவா திருக்க வரமளித்தாய் ;

    சீறா டரவம் முடித்தசடைக்

        கருவை வாழும் செழுஞ்சுடரே !


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_15.html


(Pl click the above link to continue reading)


ஆறாக் = தீராத, அணையாத 


காமக்  = காமம் என்ற 


கொடியகனல் = கொடிய தீயை 


ஐவர் = ஐந்து புலன்களும் 


மூட்ட = பற்ற வைக்க 


அவலமனம் = கீழான மனம் 


நீறாய் = சாம்பலாய் 


வெந்து கிடப்மேனை, = வெந்து கிடக்கும் என்னை 


நின்தாள்  = உன் திருவடிகளை 


வழுத்த = போற்றும் படி, வணங்கும் படி 


 நினைவுதந்து = நினைவு தந்து 


மாறா நேயத் = மாறாத அன்பினால் 


திரவுபகல் = இரவும் பகலும் 


மறவா திருக்க வரமளித்தாய் ; = மறவாமல் இருக்க வரம் அளித்தாய் 


சீறா டரவம் = சீரும் அரவத்தை (பாம்பை) 


 முடித்தசடைக் = முடித்த சடையில் கொண்ட 


கருவை = திருக்கருவை என்ற தலத்தில் 


வாழும் செழுஞ்சுடரே ! = எழுந்து அருளி இருக்கும் உயர்ந்த சுடரே, ஒளியே 


காமத்தில் இருந்து நாமே எங்கு வெளி வருவது.


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்று மணிவாசகர் அருளியது போல, காமத்தை மாற்றி அவனை நினைக்க அவன் தான் அருள் புரிய வேண்டும். 


மேலும், அதிவீரராம பாண்டியர் கூறுகிறார்,  ஒரு தீய எண்ணம் போக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அதை மாற்ற முடியாது. அதோடு போராட முடியாது. தீய எண்ணங்களை மாற்ற எளிய வழி நல்லதை நினைப்பதே. 


whatsapp பார்க்கக் கூடாது என்று நினைத்தால் முடியாது. மனம் அங்கு தான் போகும். அதற்குப் பதில் நல்லதை எதையாவது படிக்க வேண்டும். மனம் நல்லதில் போகும். 


தவறான இடத்துக்குப் போகக் கூடாது என்று சொன்னால் மனம் கேட்காது. அந்த நேரத்தில் கோவிலுக்குப் போய் விட வேண்டும். 


காம எண்ணம் வருகிறதா, அது தவறு என்று தெரிந்தால், அதை மாற்ற மனதை வேறொன்றின் மேல் செலுத்த வேண்டும். 


இதை யோக சாத்திரத்தில் ப்ரத்யாகாரம் என்று சொல்லுவார்கள். 


மனதை மடை மாற்றும் வேலை.


மிக எளிய பாடல்கள் . 


நூறு பாடல்கள் பாடி அருளி இருக்கிறார். 


மூல நூலை படித்துப் பாருங்கள். 


Thursday, October 14, 2021

திருக்குறள் - அன்புடைமை - ஒரு முன்னோட்டம்

திருக்குறள் - அன்புடைமை - ஒரு முன்னோட்டம் 


வாழ்வின் நோக்கம் அன்பின் விரிவாக்கம். 


அவ்வளவுதான். 


எப்படி பார்த்தாலும், அடிப்படை அன்பு மேலும் மேலும் விரிந்து கொண்டே போவதுதான் நோக்கம். 


குழந்தையாக, சிறுவனாக இருக்கும் போது, அதன்  அன்பு எல்லாம் தன் மேலேயே இருக்கிறது. எல்லாம் தனக்கு வேண்டும் என்று குழந்தை நினைக்கும். 


வளர்ந்து, திருமணம் ஆன பின், தனக்கென்று ஒருத்தி (வன்) வந்த பின், அவள் மேல் அன்பு பிறக்கிறது. அவளுக்கு பிடிக்கும் என்று சிலவற்றை செய்கிறான். அவளுக்கென்று நேரம் ஒதுக்குக்கிறான். 


ஆனால், கணவன் மனைவி அன்பு பரிமாற்றத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அவள் எனக்கு இன்பம் தருகிறாள், எனக்கு உதவி செய்கிறாள் எனவே நான் அவள் மேல் அன்பு செய்கிறேன் என்று அன்பு செலுத்துவதில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. 


பிள்ளை வந்த பின் அந்த அன்பு மேலும் விரிகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பிள்ளை மேல் அன்பு பிறக்கிறது. பிள்ளையை பார்க்கும் போது அன்பு, அது பேசும் போது, அதை தழுவிக் கொள்ளும் போது இன்பம் பிறக்கிறது. அன்பு வருகிறது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_14.html


(Please click the above link to continue reading)



இல்வாழ்க்கை, 

வாழ்க்கைத் துணைநலம், 

புதல்வர்களைப் பெறுதல் 


என்று மூன்று அதிகாரங்களை பார்த்தோம்.


அடுத்தது, அன்பு, குடும்பத்தைத் தாண்டி, சமுயாத்தின் மேலும் பரவுகிறது. தன் பிள்ளையை போல் மற்ற பிள்ளைகள் மேலும் அன்பு பிறக்கும். அடுத்த வீட்டுக் காரன், அயல் வீட்டுக் காரன், நட்பு, சுற்றம் என்று அன்பு மேலும் விரிகிறது. 


பிள்ளை வந்த பின் தான் அன்பு என்றால் என்ன என்றே ஒருவனுக்கு புலப்படுகிறது.  அந்த அன்பு சமுதாயத்தின் மேலும் விரியும். 


எனவே அடுத்த அதிகாரம் 


"அன்புடைமை"


அன்பு அருளாக வேண்டும். 


தொடர்புடையார் மாட்டு செய்வது அன்பு. 


தொடர்பிலார் மாட்டும் செய்வது அருள். 


அன்பு அருளாக வேண்டும். 


இனி, அன்புடைமை பற்றி காண இருக்கிறோம். 



Wednesday, October 13, 2021

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?

திருவருட்பா - நான் ஏன் பிறந்தேன் ?


சின்னக் கேள்வி. விடை தெரியுமா?


ஏன் பிறந்தோம், எதற்குப் பிறந்தோம், என்ன சாதிக்கப் பிறந்தோம், பிறந்ததின் நோக்கம் என்ன? 


தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை. 


வள்ளலார், விடை காணாமால் தவிக்கிறார். 


எல்லாம் வல்ல இறைவன், ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் என்னைப் படைத்து இருக்க வேண்டும். காரணம் இல்லாமல் அவன் எதையும் செய்ய மாட்டான். அப்படியானால், என்னை ஏன் படைத்தான் என்று விடை காணாமல் தவிக்கிறார். 


"ஒரு சின்னக் குழந்தை. நடக்கும் பருவம் வரவில்லை. தவழும். திடீரென்று மின்சாரம் போய் விடுகிறது. அருகில் யாரும் இல்லை. அந்தக் குழந்தை என்ன செய்யும். பயத்தில் அழும். வேறு என்ன செய்ய முடியும்? 


அந்தக் குழந்தையை விட சிறியவனாக இருக்கிறேன். இந்த அஞ்ஞான இருளில் கிடந்து தவிக்கிறேன். இருள் மட்டும் அல்ல, கரை காண முடியாத கடலில் கிடந்து தவிக்கிறேன். ஏதோ இப்ப கப்பல் உடைந்து கடலில் விழவில்லை. பல காலமாய் இந்தக் கடலில் கிடக்கிறேன். கடலில் தவிக்கும் திரும்பு போல கிடக்கிறேன். எத்தனையோ கொடுமைகள் எல்லாம் செய்து விட்டேன். நான் எதற்காகப் பிறந்தேன் என்று சொல்வாய்" என்று இறைவனை நோக்கிப் பிரார்த்திக்கிறார். 


பாடல் 


 விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது

விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்

அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்

அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்

கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்

கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்

களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ

கருணைநடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_13.html


(Click the above link to continue reading)



விளக்கறியா = விளக்கு எங்கு இருக்கிறது, சுவிச் எங்கு இருக்கிறது என்று அறியாத 


இருட்டறையில் = இருண்ட அறையில் 


கவிழ்ந்துகிடந் தழுது விம்முகின்ற = கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற 


 குழவியினும் = குழந்தையை விட 


மிகப்பெரிதும் சிறியேன் = ரொம்ப ரொம்ப சிறியவன் 


அளக்கறியாத் = அளவிட முடியாத 


துயர்க்கடலில் = துயரம் என்ற கடலில் 


விழுந்துநெடுங் காலம்  = விழுந்து, நெடுங் காலம் 


அலைந்தலைந்து = அலைந்து அலைந்து 


மெலிந்த = மெலிந்த 


துரும் பதனின் = துரும்பை விட 


மிகத் துரும்பேன் = கீழான துரும்பானேன் 


கிளக்கறியாக்  = சொல்ல முடியாத 


கொடுமை எலாம் = கொடுமைகள் எல்லாம் 


கிளைத்த = விளைந்த 


பழு மரத்தேன் = பழுத்த மரம் போன்றவன் 


கெடுமதியேன் = கெட்ட மதி கொண்டவன் 


கடுமையினேன் = கடுமையானவன் 


கிறிபேசும் = பொய் பேசும் 


வெறியேன் = வெறி கொண்டவன் 


களக்கறியாப் = குற்றம் அற்ற 


புவியிடை = பூமியில் 


நான் ஏன் பிறந்தேன்  = நான் ஏன் பிறந்தேன் 


அந்தோ = ஐயோ 


கருணை = கருணை உள்ள 


நடத் தரசே = நடனத்துக்கு அரசனே (நடராஜன்) 


நின் கருத்தைஅறி யேனே. = உன் கருத்தை நான் அறிய மாட்டேனே 



ஒரு வரி பட்டினத்தாரை மாற்றியது.


ஒரே ஒரு கேள்வி போதும், வாழ்கையின் திசையை மாற்ற.






Monday, October 11, 2021

திருக்குறள் - மகன் தந்தைக்கு செய்யும் உதவி

திருக்குறள் - மகன் தந்தைக்கு செய்யும் உதவி 


இதுவரை பிள்ளைகளை பெறுவதனால் உள்ள பயன், அவர்களால் பெற்றோருக்கு கிடைக்கும் இம்மை, மறுமை பயன்கள் பற்றி கூறினார். பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்பது பற்றியும் கூறினார். 


கடைசியில், மகன் தந்தைக்கு செய்யும் கடமை பற்றி கூறுகிறார். 


"தன்னை கல்வி , ஒழுக்கங்களில் உயர்ந்தவனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு என்பது, இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று மற்றவர்கள் சொல்லும்படி வாழ்வது" என்கிறார். 



பாடல் 


மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை

என்னோற்றான் கொல்எனும் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_11.html


(Please click the above link to continue reading)



மகன் = கல்வி ஒழுக்கங்களில் உயர்ந்தவனாகிய மகன் 


தந்தைக்கு = அவ்வாறு உயர வழி செய்த தந்தைக்கு 


ஆற்றும்உதவி = செய்யும் கைம்மாறு 


இவன்தந்தை = இவனுடைய தந்தை 


என்னோற்றான் = என்ன தவம் செய்தானோ 


கொல் = அசைச் சொல் 


எனும் சொல் = என்று ஊரார் சொல்லும் பேச்சு 


இதில் சில விடயங்களை கவனிக்க வேண்டும். 


முதலாவது, பிள்ளை நிறைய சொத்து சேர்பதோ, பெரிய பதவி அடைவதோ கைம்மாறு அல்ல. இவனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என்று ஊர் சொல்ல வேண்டும். 


இரண்டாவது, மிக முக்கியமானது, பிள்ளை வளர்ப்பது என்பது நம் கையில் மட்டும் அல்ல.  பெற்றோர்கள் நினைக்கலாம், நம் சாமர்த்தியத்தில் பிள்ளைகளை நன்றாக வளர்த்து விடலாம் என்று. அப்படி அல்ல. முன் செய்த தவத்தால் தான் நல்ல பிள்ளைகள் வருவார்கள். 


"இவன் தந்தை எப்படி வளர்த்தான் எனும் சொல் " என்று சொல்லவில்லை. 


நல்ல பிள்ளைகள் வேண்டும் என்றால் தவம் செய்ய வேண்டும். 


இப்போது செய்தால் அடுத்த பிறவியில் நல்ல பிள்ளைகள் வருவார்கள். 


மூன்றாவது, மகன், தந்தைக்கு ஆற்றும் உதவி என்றுதான் இருக்கிறது. மகள், தாய் எல்லாம் இல்லை.  சிந்திக்க வேண்டிய விடயம்.  பிள்ளைகளை வளர்ப்பது என்பது தந்தையின் கடமை என்று இருந்தது. பிள்ளை எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், தாய் அவனை விட்டுக் கொடுக்க மாட்டாள். என் பிள்ளை அப்படி செய்திருக்க மாட்டான் என்று அவனுக்கு வேண்டித்தான் பேசுவாள். கண்டிப்பு இல்லாத இடத்தில் ஒழுக்கம் நிற்காது. தாய்மை என்பது உணர்ச்சி மிகுந்தது. அது பிள்ளையை அறிவுக் கண் கொண்டு பார்க்காது. 


பெண்கள் பிள்ளைகளை வளர்க்கத் தலைப்பட்டார்கள். தன் பிள்ளை எல்லாவற்றிலும், முதலாவதாக வர வேண்டும் என்று அழுத்தம் தரத் தொடங்கினார்கள். விளையாட்டு, பாட்டு, இசை, நடனம், படிப்பு, என்று எதை எடுத்தாலும் என் பிள்ளை முதலில் வர வேண்டும் என்று தாய்மை விரும்பும். முடியுமா? 


ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,

ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,

களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.


என்கிறது புறநானுறு. 


ஈன்று புறந்தருதல் = பிள்ளையை பெறுவது என்னுடைய தலையாய கடமை 

சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடமை 

வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லனுக்கு கடமை 


அது ஒரு காலம். 





Sunday, October 10, 2021

கந்தர் அநுபூதி - பாடும் பணியே

கந்தர் அநுபூதி - பாடும் பணியே 


ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். நீண்ட நாளாக அந்த ஊரில் பிச்சை எடுத்து வந்தான். அவன் மேல் பரிதாபப்பட்ட அந்த ஊர் பணக்காரர் ஒருவர், "சரி, இனி மீதி இருக்கும் நாட்களிலாவது அவன் சந்தோஷமாக இருக்கட்டும்" என்று எண்ணி, அவனுக்கு நிறைய பணம் கொடுத்தார்.  நிறைய என்றால் நிறைய. வாழ் நாள் முழுவதும் இருந்து சாப்பிடும் அளவுக்கு. 



சில நாள் கழித்து அவன் எப்படி இருக்கிறான் என்று வந்து பார்த்தார். 


அவர் கொடுத்த பணத்தில் ஒரு நல்ல நாற்காலி, ஒரு குடை, ஒரு செருப்பு, நல்ல பிச்சை பாத்திரம் எல்லாம் வாங்கி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். 


 அப்படி சிலர் இருக்கிறார்கள். 


என்ன உயர்ந்த நூல்களைப் படித்தாலும், என்ன சொற்பொழிவு கேட்டாலும், மீண்டும் மனம் பழைய வேலைக்குத்தான் போகும். 


கோடி கொடுத்தாலும், பிச்சைக்காரன் புத்தி பிச்சையில்தான் இருக்கும். 


அது கூடப் பரவாயில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். வேலை மெனக்கெட்டு, நேரம் செலவழித்துப் படிப்பார்கள். தங்களை முன்னேற்றிக் கொள்ள அல்ல, அந்த நூலில் என்ன தவறு கண்டு பிடிக்கலாம்? அதில் என்ன பிழை இருக்கிறது என்று கண்டு சொல்ல. 


அதைக் கண்டு பிடித்து சொல்வதால் அவனுக்கு என்ன பயன்? ஒரு பயனும் இல்லை. அதில் ஒரு சந்தோஷம். 



சில அரக்கர்கள் இருந்திருக்கார்கள். நல்லவர்களை, முனிவர்களை, யோகிகளை தேடி கண்டு பிடிப்பார்ர்கள். எதற்கு? அவர்களிடம் இருந்து அறிவைப் பெற அல்ல. அவர்களை கொன்று தின்ன. எங்கே வேள்வி நடக்கிறது, எங்கே நல்ல காரியம் நடக்கிறது என்று தேடிப் போய், அதில் குழப்பம் விழைவிப்பது. 



வேள்வியில் மாமிசம், இரத்தம் இவற்றை கொட்டுவதுதான் வேள்வியை தடை செய்வது என்று நினைக்காதீர்கள். ஒரு நல்ல புத்தகத்தை படித்துவிட்டு அதை பற்றி தவறாக புரிந்து கொள்வதோ, தவறாக பேசுவதோ அதற்கு சமமானதுதான். 



அருணகிரிநாதர் சொல்கிறார் 


" தேடும் கயமா முகனைச் செருவிற் சாடும்"


கயமுகன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் முனிவர்களை தேடி கண்டு பிடித்து அவர்களை கொன்று தின்று விடுவான். அந்த அரக்கனை விநாயகப் பெருமான் கொன்றார். 


பாடல் 


ஆடும் பரிவே லணிசே வலெனப்

 பாடும் பணியே பணியா வருள்வாய்

 தேடும் கயமா முகனைச் செருவிற்

 சாடுந் தனியானை சகோதரனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_62.html


(please click the above link to continue reading)



ஆடும் பரி = ஆடி ஆடி நடக்கும் குதிரை 


வேல் = வேல் 


அணி சே வலெனப் = சேவல் என்று அணி வகுத்து நிற்கும் உன்னை 


 பாடும் பணியே = பாடி துதிக்கும் வேலையையே 


 பணியா வருள்வாய் = நான் எப்போதும் செய்யும் பணியாக அருள்வாய் 


 தேடும்= கொன்று தின்பதற்காக முனிவர்களை தேடும் 


கயமா முகனைச் = கயமாமுகன் என்ற அரக்கனை 


செருவிற் =போரில் 


 சாடுந் = சண்டையிட்டு வென்ற 


தனியானை சகோதரனே! = தனித்துவம் மிக்க யானை முகம் கொண்ட விநாயகனின் சகோதரனே, முருகனே 


முருகனுக்கு மயில் தானே வாகனம். குதிரை எங்கிருந்து வந்தது?


குதிரை போல நடக்கும் மயில் என்று பொருள்.


ஆடும் என்ற வார்த்தைக்கு கி.வா.ஜா அற்புதமான விளக்கம் எழுதி இருக்கிறார். 


ஓம் என்பது பிரணவ மந்திரம்.


அது அகர, உகர, மகர சம்மேளனம் என்று சொல்லுவார்கள். 


அதாவது அ + உ + ம் சேர்ந்தால் ஓம் என்ற சப்தம் வரும். 


அ உ ம் என்று திருப்பி திருப்பி வேகமாக சொல்லிக் கொண்டிருந்தால் அது ஓம் என்ற ஒலியைத் தரும்.


ஒலி பிறக்கும் இடம் அ 


பிறந்த ஒலியை நிலை நிறுத்த வேண்டும் என்றால் உ என்று கூற வேண்டும். 


அ என்றால் அதோடு நின்று விடும். 


உ என்றால் நீட்டிக் கொண்டே போகலாம். 


ம் என்றால் முடிந்து விடும்.


அதாவது பிறப்பு, நிலைத்தல், மறைதல் என்ற முத்தொழிலையும் உள்ளடக்கியது பிரணவ மந்திரம் என்று கூறுவார்கள். 


ஆடும் என்ற சொல்லைப் பிரித்துப்  பார்ப்போம். 


அ (ஆ என நீண்டது) + 

ட் + உ = டு  +

ம் 


அகர உகர மகர சம்மேளனம் வந்து விட்டது அல்லவா? 


அதை மறை பொருளாகக் கூறினார் என்கிறார் கி. வா. ஜா 


எழுத்து எண்ணிப் படித்தவர்கள். 







திருக்குறள் - சான்றோன் எனக் கேட்ட தாய்

திருக்குறள் - சான்றோன் எனக் கேட்ட தாய் 


பெண் விடுதலையாளர்கள் தங்கள் கொடிகளை எடுத்துக் கொள்ளலாம். கொடி பிடிக்கும் நேரம் இது. 


"தன்னுடைய புதல்வனை மற்றவர்கள் சான்றோன் என்று சொல்லக் கேட்டத் தாய், அவனை ஈன்ற பொழுதை விட மிக மகிழ்வாள்" 


என்கிறது அடுத்த குறள். 


அது என்ன தாய்க்கு மட்டும் தனியாக சொல்லுவது? அவளுக்கே தெரியாதா? மற்றவர்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? 


ஆணாதிக்கம். பெண்ணடிமை...என்று கொடி பிடிப்பவர்கள் ஒரு புறம் பிடிக்கட்டும். 


நாம் குறளைப் பார்ப்போம். 


பாடல் 


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_53.html


(Please click the above link to continue reading)



ஈன்ற பொழுதிற் = பெற்றெடுத்த நேரத்தை விட 


பெரிதுவக்கும் = மிக மகிழும் 


தன்மகனைச் = தன்னுடைய மகனை 


சான்றோன் = சான்றோன் 


எனக்கேட்ட தாய் = என்று சொல்லக் கேட்டத் தாய் 


இதன் ஆழமும், நுணுக்கமும் பரிமேலழகர் இல்லாமல் புரியாது. 


முந்தைய குறளில் 


தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 

மன்னுயிர்க்கெலாம் இனிது 


என்று கூறினார். 


மாநிலத்து மன்னுயிரில் தாய் கிடையாதா? சொன்னதையே ஏன் திருப்பி திருப்பிக் கூற வேண்டும்? கூறியது கூறல் குற்றம் இல்லையா?


பரிமேலழகர் விளக்கம் சொல்கிறார். 


"தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது இதனான் பிரித்துக் கூறப்பட்டது"


என்கிறார். 


எல்லோரும் மகிழ்வார்கள். ஆனால், ஒரு தாயின் மகிழ்ச்சிக்கு அளவு இருக்காது. அவளின் மகிழ்ச்சி அளவிடமுடியாத தனி மகிழ்ச்சி என்பதால் அதற்கென்று ஒரு தனிக் குறள் வைக்கிறார் வள்ளுவர்.  பெண்ணடிமை? 


சொல்லக் கேட்டத் தாய் - "பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட தாய்' எனவும் கூறினார். "


ஒரு தாய்க்கு, தன் மகன் என்ன பெரியவன் ஆனாலும் அது தெரியாது. அவளுக்கு அவன் பிள்ளை. அவ்வளவுதான் தெரியும் அவளுக்கு. தன் மடியில் படுத்து பால் அருந்திய பிள்ளையாகத் தான் அவன் தெரிவான். மற்றவர்கள் வந்து சொல்லும் போது தான் "அட, இவனா இவ்வளவு பெரியவனாகி விட்டான்...பார்ரா" என்று மகிழ்வாளாம். அவன் என்ன சாதித்தாலும், சாதிக்காவிட்டாலும் அவளுக்கு அவன் எப்பவுமே "ராசா" தான். மற்றவர்கள் சொல்லும் போது தான் தெரியும், அவன் உண்மையிலேயே 'ராசா" என்று.  அதனால்தான் "கேட்ட தாய்" என்றார்.   ஆணாதிக்கம்? 


"பெரிதுவக்கும்" - சான்றோன் என்று கேட்டால் பெரிதாக மகிழ்வாள். அப்படி என்றால் சாதரணமாக மகிழ்ந்த தருணம் ஒன்று இருந்திருக்க வேண்டும். அது எது? அது ஈன்ற பொழுது.  பிள்ளையை பெற்ற அந்தக் கணத்தில் மகிழ்ந்தாள். அவனை சான்றோன் என்று கேட்ட போது அதனினும் மகிழ்ந்தாள் என்கிறார். 


"சான்றோன்" - பிள்ளை கோடீஸ்வரன் ஆகி விட்டான், பட்டம் பெற்று விட்டான் என்பதில் எல்லாம் மகிழ்ச்சி கிடையாது. சான்றோன் என்பது ஒரு மனிதனுக்கு தரும் அதிகபட்ச உயர்வு அடை மொழி. கல்வியிலும், ஒழுக்கத்திலும் உயர்ந்த ஒருவனைத்தான் சான்றோன் என்று உலகம் கூறும். படித்தால் மட்டும் போதாது, பணம் சேர்த்தால் மட்டும் போதாது, ஒழுக்கமும் வேண்டும்.  நிறைய படித்து, நிறைய பணம் சம்பாதித்து இப்போது உன் மகன் சிறையில் இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் எந்தத் தாய் மகிழ்வாள்? 


"மகனை" என்று இருக்கிறது. மக்களை என்று இல்லை. சான்றோன் என்று இருக்கிறது. சான்றோர் என்றோ சான்றோள் என்றோ இல்லை. என்ன செய்யலாம்? இருக்கவே இருக்கிறது கொடி. பிடிக்க வேண்டியதுதான். 


"சான்றோன் எனக் கேட்ட தாய்": சான்றோன் என்று யார் சொல்லக் கேட்டத் தாய்?  யார் வேண்டுமானாலும் சொல்லலாமா? பரிமேலழகர் சொல்கிறார் "தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்ட தாய்" என்று. 


ஏன்? 


ஒருவன் சான்றோனா இல்லையா என்பது அறிவுடையாற்குத் தான் தெரியும் என்பதால்.  


உலகம், தந்தை என்று எல்லோரையும் ஒதுக்கிவிட்டு, தாய்க்கு என்று ஒரு தனிக் குறள் வைத்து சிறப்பிக்கிறார் வள்ளுவர். 


தாய் தந்தை என்ற பாகுபாடெல்லாம் மறைந்து வரும் காலம் இது. பெண்கள், ஆண்களாக மாற படாத பாடெல்லாம் படுகிறார்கள். வரும் காலங்களில் மீசை, தாடி எல்லாம் கூட வைத்துக் கொண்டு வருவார்கள் போலத் தெரிகிறது. 


ஏன், நாங்கள் மீசை வைக்கக் கூடாதா? எங்களுக்கு அந்த உரிமை இல்லையா என்று கேட்கும் காலம் வரலாம். கூந்தலை குறைத்தாகி விட்டது. மீசையும் வளர்த்து விட்டால் என்ன ஆகி விடும். 


ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை 

சான்றோன் எனக் கேட்ட தாய்



 





கம்ப இராமாயணம் - அவதார நோக்கம்

கம்ப இராமாயணம் - அவதார நோக்கம்


எனக்கு இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு.


இராம அவதாரத்தின் நோக்கம் என்ன? இராவணனை அழிப்பது. 


இராவணனை ஏன் அழிக்க வேண்டும் ?  ஏன் என்றால் அவன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். தேவர்களை சிறை பிடித்தான். அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தான். 


இராவணன் தேவர்களை துன்பம் செய்ததாக நேரடி தகவல் இல்லை. அவ்வப்போது தேவர்கள் இராமனுக்கு உதவி செய்கிறார்கள். முடிந்த வரை மலர் மாரி பொழிகிறார்கள். 


சரி, இராவணன் தேவர்களை துன்பம் செய்தான் என்றே இருக்கட்டும். அவன் தண்டிக்கப்பட வேண்டியவன் என்றே இருக்கட்டும்.  


அவன், அதற்காக தண்டிக்கப் பட்டானா? 


இல்லை. ...


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_10.html

(please click the above link to continue reading)



இராவணன் தண்டிக்கப்பட்டது பிறன் மனைவியை நயந்த குற்றதுக்குகாக. தேவர்களை துன்பம் செய்ததற்காக அல்ல.


கடைசிவரையில், வீடணனும், கும்பகர்ணனும் சொல்கிறார்கள் ..."சீதையை விட்டுவிடு...இராமன் மன்னித்து விடுவான்" என்று. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். இராமன் கருணை உள்ளவன். அடைக்கலம் என்று வந்தால் ஏற்றுக் கொள்வான் என்றுதான் சொல்கிறார்கள். 


ஒரு வேளை இராவணன் மனம் மாறி சீதையை விட்டு இருந்தால், இராமன் மன்னித்து இருப்பான். எல்லோரும் நிம்மதியாக் இருந்து இருப்பார்கள். 


தேவர்கள் கதி? 


மற்ற அரக்கர்கள் கதையை பார்ப்போம். அவர்கள் எல்லோரும் தேவர்களுக்கு துன்பம் செய்தார்கள். அவதாரம் நிகழ்ந்தது. அவர்கள் கொல்லப் பட்டார்கள். 


சூரபத்மன் தேவர்களை படாதபாடு படுத்தினான். முருகன் அவதாரம் நிகழ்ந்தது. போர் நடந்தது. அவன் கொல்லப் பட்டான். 


இரணியன் கதி அதே. தூணில் இருந்து நரசிம்மம் வெளிப்பட்டு அவனை கொன்றது. 


கம்சன் கதியும் அதே. 


முப்புரம் எரி செய்த சிவன் செய்ததும் அதே.


ஆனால் இராமயணத்தில் மட்டும், இராவணன் கொல்லப் பட்டது பிறன் மனை நோக்கிய  அறப் பிழையினால். தேவர்களை கொடுமை படுத்திய பிழையினால் அல்ல. 


அப்படி இருக்க, அவதார நோக்கம் என்பது பிறன் நோக்கும் கயவர்களை தண்டிப்பது என்றுதான் இருக்க வேண்டும். 


வாலி, சுக்ரீவனின் மனைவியை நயந்தான். கொல்லப் பட்டான். பின், சுக்ரீவன் வாலியின் மனைவியை நயந்தான் என்று வான்மீகம் சொல்வதாகச் சொல்கிறார்கள். கம்பனில் அப்படி இல்லை. 


இராவணன், இராமனின் மனைவியை நயந்தான், கொல்லப் பட்டான். 


இதில் தேவர்கள் எங்கே வந்தார்கள் ? 


கைகேயிக்கு தெரியுமா, இராவணன், சீதை மேல் காமம் கொள்வான் என்று? தெரிந்தே செய்திருந்தால், அவள் முதலில் தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் கற்பை வைத்து சூதாடுவதா?


இராவணனை கொல்வதற்கு இராமனுக்கு ஒரு காரணமும் இல்லை. ஒரு வேளை இராமனுக்கு பட்டம் கட்டி இருந்தால், அவன் பாட்டுக்கு நாட்டை ஆண்டு கொண்டு இருந்திருப்பான்.


திருமாலாலும், சிவனாலும், பிரம்மனாலும் முடியாத காரியத்தை முடிக்க உன்னிடம் வருவோம் என்று தசரதனைப் பார்த்து கௌசிகன் கூறுகிறான். அந்த தசரதன், இராவணன் மேல் படை எடுக்கவில்லை. 


ஜனகன், இராவணன் மேல் படை எடுக்கவில்லை. 


இராமனுக்கு இராவணன் இருக்கும் இடம் கூடத் தெரியாது. சீதையை தேடும் போது இராவணன் இருக்கும் இடத்தில் இருந்ததை கண்டு பிடித்தார்கள். ஜடாயு சொன்னான். 


அவதார நோக்கம் இராவண வதை என்றால் எப்படி இருந்திருக்க வேண்டும்?


இராமன், இராவணனுக்கு தூது அனுப்பி, "நீ தேவர்களை விட வில்லை என்றால் உன்னை யுத்தத்தில் சந்திப்பேன்" என்று சொல்லி இருக்க வேண்டும். சண்டை போட்டு, இராவணனை கொன்று தேவர்களை சிறை மீட்டு இருக்க வேண்டும். 


அப்படி எல்லாம் ஒன்றும் நிகழவில்லை. 


அவதார நோக்கம் என்ன என்று சரியாக எனக்கு விளங்கவில்லை. 


உங்கள் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆவல். 





Saturday, October 9, 2021

திருக்குறள் - தன்னை விட அறிவான பிள்ளைகள்

 திருக்குறள் - தன்னை விட அறிவான பிள்ளைகள் 


தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையராக இருப்பது எந்த பெற்றோருக்கும் மகிழ்ச்சிதானே. என் பிள்ளை எவ்வளவு படித்து பெரிய ஆளாகி இருக்கிறான் என்று நினைத்து பெருமை படாத பெற்றோர் யார் இருக்கிறார்கள்? 


பாடல் 


தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_9.html


(Please click the above link to continue reading)



தம்மின் = தம்மைவிட 


தம் மக்கள் = தங்களுடைய பிள்ளைகள் 


அறிவுடைமை = அறிவு உள்ளவர்களாக இருப்பது 


மாநிலத்து = பெரிய உலகில் 


மன்னுயிர்க் கெல்லாம் = நிலைத்த உயிர்களுக்கெல்லாம் 


 இனிது = இனிமை பயப்பது 


இப்படித்தான் நாம் பொருள் கொள்வோம். 


இதற்கு பரிமேலழகர் உரையை படித்தால்தான் தெரியும் அதன் நுணுக்கம். இன்னொரு நூறு பிறவி எடுத்தால் கூட நம்மால் அந்த அளவுக்கு சிந்திக்க முடியுமா என்பது சந்தேகமே.


"அறிவுடமை" என்றால் என்ன? படித்து பட்டம் வாங்கி வருவதா? நிறைய பட்டம் வாங்குவது, மெடல் வாங்குவது போன்றவையா? அப்படிப் பார்த்தால் வருடத்துக்கு ஒரு பல்கலை கழகத்தில் ஒரு சில பேருக்குத்தான் கிடைக்கும். மற்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் வருத்தப் படுவார்களா?


அது ஒரு புறம் இருக்க, படித்து பட்டம் பெற்று விட்டால் போதுமா? 


பரிமேலழகர் சொல்கிறார் 


"ஈண்டு 'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை"


அறிவு வேறு, கல்வி வேறு.   


அறிவு என்பது இயற்கையாகவே இருப்பது. கல்வி என்பது படித்து வருவது. 


கல்வி, அறிவுடைமை என்று தனித் தனி அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். அது பற்றி பின்னால் மிக விரிவாக பார்க்க இருக்கிறோம். 


இயல்பான அறிவு இருக்க வேண்டும், அதோடு கூட கல்வியும் சேர வேண்டும். ஒன்று இருந்து மற்றது இல்லாவிட்டால் பலன் இல்லை. 


"மன்னுயிர்க்கு" ...


தம்மில் தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து 

தமக்கு என்றும் இனிமை

என்று எழுதி இருக்க வேண்டும். 


என் பிள்ளை அறிவுடையவனாக இருந்தால் பக்கத்து வீட்டு காரனுக்கு என்ன அதில் இன்பம்? 


பின் ஏன் மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் என்று எழுதினர்?


ஒரு பிள்ளை அறிவுடையவனாக இருந்தால், அது அந்தப் பிள்ளையின் பெற்றோருக்கு மட்டும் அல்ல, அனைத்து உயிர்களுக்கும் இன்பம் என்கிறார். 


எப்படி?


ஒரு அறிவியல் அறிஞர் ஒரு நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கிறார். அவருக்கு பேரும் புகழும் கிடைக்கிறது. அவருடைய பெற்றோர்கள் அதனால் பெருமை அடைவார்கள். சரி. அதோடு நிற்கிறதா? அந்த மருந்தினால் உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பயன் பெறுகின்றன அல்லவா? 



யாரோ கண்டு பிடித்த கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பயன் தருகிறது அல்லவா? உயிர்கள் எல்லாம் மகிழ்கின்றன அல்லவா?


யாரோ ஒரு இசை கலைஞன் பாடுகிறான். அவனுக்கு பேரும் புகழும் கிடைப்பது ஒரு புறம் என்றாலும், உலகம் முழுவதும் உள்ள மக்கள் அதைக் கேட்டு இன்புறுகிறார்கள் தானே. 


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 


நிலைத்து நிற்கும் உயிர்களுக்கு எல்லாம் என்கிறார்.  காரணம், ஒருவன் இப்போது ஏதோ ஒன்று கண்டு பிடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். து இப்போது உள்ள மக்களுக்கு மட்டும் அல்ல, இனி வரும் சந்ததிகளுக்கும் பயன் தரும் அல்லவா? பென்சிலின் என்ற மருந்து எப்போதோ கண்டு பிடிக்கப்பட்டது. இப்போதும் அது உயிர்களை காத்துக் கொண்டு இருக்கிறது அல்லவா?  


எப்போதோ எழுதிய குறள். இன்றும் நமக்கு இன்பம் தருகிறதா இல்லையா.  நிலைத்து நிற்கும் உயிர்களுக்கு எல்லாம் இன்பம் என்றார். 


அது மட்டும் அல்ல


"மாநிலத்து" என்றால், ஒருவன் அறிவுடையவனாக இருந்தால் அதன் பயன் அவன் பிறந்த ஊருக்கு மட்டும் அல்ல, உலகம் அனைத்துக்கும் பலன் தரும். யாரோ கண்டு பிடித்த கணணி (கம்ப்யூட்டர் ), உலகம் அனைத்துக்கும் பயன் தருகிறது அல்லவா?


எனவே, பெற்றோர்களை விட, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்பம் அடையும் என்கிறார். 


இப்படி எல்லாம் நம்மால் சிந்திக்கக் கூட முடியாது. 


"இதனான் தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது கூறப்பட்டது"


என்று முடிக்கிறார் பரிமேலழகர். 


பிள்ளைகளைப் பெற்று, அவர்களை அறிவுடையவர்களாக ஆக்கி விட்டால், உலகம் இன்புறும். 


சரி, நம்மை விட நம் பிள்ளகைள் அறிவானவர்களாக இருந்தால் உலகம் இன்புறும்  அவர்கள் பிள்ளைகள், அவர்களை விட அறிவாளிகளாக இருப்பார்கள் அல்லவா? இப்படி ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகள் அறிவுடையவர்காக இருந்தால், ஒரு பத்து தலைமுறையில் இந்த உலகம் எவ்வளவு சிறந்து இருக்கும்? 


"தம்மில் தம் மக்கள்". 


அப்பாவை விட மகன் 

மகனை விட பேரன் 


எவ்வளவு நீண்ட, ஆழமான சிந்தனை.


ஒன்றே முக்கால் அடியில். 



Friday, October 8, 2021

சிலப்பதிகாரம் - முறை இல் அரசன் வாழும் ஊர்

சிலப்பதிகாரம் - முறை இல் அரசன் வாழும் ஊர் 


தன் கணவன் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு கொலையுண்ட செய்தியை கேட்கிறாள் கண்ணகி. அவளுக்குத் தெரியும் கோவலன் கள்வன் அல்ல என்று. 


இருந்தும், சூரியனைப் பார்த்துப் கேட்கிறாள்..."காய் கதிர் செல்வனே, கள்வனோ என் கணவன்" என்று. 


"உன் கணவன் கள்வன் அல்லன், இந்த ஊரை தீ தின்னும்" என்று ஒரு அசரீரி கேட்டது. 


‘கள்வனோ அல்லன்; கருங் கயல் கண் மாதராய்!

ஒள் எரி உண்ணும், இவ் ஊர்’ என்றது ஒரு குரல்.


கேட்டவுடன் எழுகிறாள் கண்ணகி. 


ஒரு பெண்ணின் முழு ஆளுமையை, அவள் கோபத்தை, யாருக்கும் அஞ்சாத அவள் துணிச்சலை, தன் கணவன் மேல் விழுந்த பழியை துடைக்க அவள் துடித்த துடிப்பை இளங்கோ கட்டுகிறார். 


மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள். உணர்சிகளோடு பின்னிச் செல்லும் கவிதை வரிகள். 


"உன் கணவன் கள்வன் அல்ல என்று சூரியன் சொன்னவுடன், அதன் பின் ஒரு கணம் கூட கண்ணகி தாமதம் செய்ய வில்லை. தன்னிடம் இருந்த மற்றொரு சிலம்பை ஒரு கையில் ஏந்திக் கொண்டு...முறை இல்லாத அரசன் வாழும் இந்த ஊரில் வாழும் பத்தினிப் பெண்களே, இது ஒன்று " என்று புறப்படுகிறாள்...



பாடல் 


என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி


நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி:


‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்


நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று:


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_8.html


(Please click the above link to continue reading)


என்றனன் வெய்யோன் = உன் கணவன் கள்வன் அல்லன் என்று கூறினான் பகலவன் 


இலங்கு ஈர் = அறுத்து செய்யப்பட்ட 


வளைத் தோளி = வளையல்களை அணிந்த தோள்களை உடைய கண்ணகி 


நின்றிலள் = நிற்கவில்லை 


நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி: = மீதம் இருந்த ஒரு சிலம்பை கையில் ஏந்தி 


‘முறை இல் அரசன் = முறை இல்லாத அரசன் 


தன் ஊர் = உள்ள ஊரில் 


இருந்து வாழும் = இருந்து வாழும் 


நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்!  = நிறையுடை பத்தினி பெண்களே  


ஈது ஒன்று: = இது ஒன்று, அதாவது அந்த இரண்டு சிலம்பில், இது ஒன்று 


என்று கூறி கிளம்புகிறாள். 




Wednesday, October 6, 2021

கம்ப இராமாயணம் - தசரதன் ஏன் இறந்தான் ?

 கம்ப இராமாயணம் - தசரதன் ஏன் இறந்தான் ?


தசரதன் ஏன் இறந்தான்? 


இராமனைப் பிரிந்த துக்கத்தால் இறந்தானா? அவனுக்கு ஏற்கனவே ஒரு சாபம் இருந்தது.  பிள்ளையை பிரிந்த சோகத்தில் நீ இறப்பாய் என்ற சாபம். அந்த சாபம் பலித்து தசரதன் இறந்தானா?


தசரதன் இறப்பதற்கு சற்று முன் போவோம். 


கண்ணாடியில் ஒரு நரை முடியை பார்க்கிறான் தசரதன். வயது ஆகி விட்டது, பொறுப்பை இராமனிடம் தந்து விட்டு, கானகம் சென்று வீடு பேறு அடைய முயலும் நேரம் வந்து விட்டது என்று உணர்ந்து, உடனேயே மந்திரி சபையை கூட்டி, இராமனுக்கு அரசு என்று அறிவிக்கிறான். 


அது நடந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்?


இராமன் முடி சூட்டி இருப்பான். தசரன் கானகம் போய் இருப்பான். பிரிவு நிகழ்ந்து இருக்கும். சாபத்தின் காரணமாக தசரதன் இறந்திருப்பான். 


மாறாக, என்ன நிகழ்ந்தது? 


இராமன் கானகம் போக வேண்டும் என்று கைகேயி வரம் வேண்டினாள். நல்லதா போச்சு நு தசரதனும் இராமன் உடன் கானகம் போய் இருக்கலாம். பிரிவு எங்கே வந்தது? தசரதன் மகிழ்ந்து இருக்க வேண்டும். உயிர் போய் இருக்காது. 


பின் ஏன்  தசரதன் இறந்தான்? 


அதற்கு பதிலை வாலியின் வாயிலாக கம்பன் சொல்கிறான். 


தசரதன் இறந்தது பிரிவினால் அல்ல, மூத்த மகனுக்கு பட்டம் தரவேண்டும் என்ற நீதியை, முறையை மீறியதற்காக. தான் தவறு இழைத்து விட்டேன் என்று உணர்ந்து உயிரை விட்டான். நீதிக்காக, நெறிக்காக உயிரையும் கொடுத்த அந்த தசரத சக்ரவர்த்தியின் மகனா என்று வாலி இராமனைப் பார்த்து கேட்கிறான். 



பாடல் 


வாய்மையும் மரபும் காத்து

    மன் உயிர் துறந்த வள்ளல்

தூயவன் மைந்தனே! நீ

    பரதன் முன் தோன்றினாயே;

தீமைதான் பிறரைக் காத்துத்

    தான் செய்தால் தீங்கு அன்று ஆமோ?

தாய்மையும் அன்றி நட்பும்

    தருமமும் தழுவி நின்றாய்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_6.html


(Please click the above link to continue reading)



வாய்மையும் = உண்மையையும் 


 மரபும் = அரச மரபும் 


 காத்து = காத்து, காவல் செய்து 


மன் உயிர் = நிலைத்து நிற்கும் உயிரை 


துறந்த வள்ளல் = கொடுத்த வள்ளல் 


தூயவன்  மைந்தனே!  = தூயவனான தசரதனின் மகனே 


நீ = நீ 


பரதன் முன் தோன்றினாயே; = பரதன் முன் பிறந்தாயே 


தீமைதான் பிறரைக் காத்துத்  = பிறரை தீமை செய்யாமல் தடுத்து 


தான் செய்தால் = தான் தீங்கு செய்தால் 


தீங்கு அன்று ஆமோ? = அது தீமை இல்லை என்று ஆகுமா? 


தாய்மையும்  அன்றி = தாய்மையும் இல்லாமல் 


 நட்பும்  தருமமும் = நட்பும் தருமமும் 


தழுவி நின்றாய். = கொண்டு நின்றாய் 


சட்டம், தர்மம் இவற்றில் இருந்து வழுவியதால், அதற்கு பயந்து உயிரை விட்டான் தசரதன். 




Tuesday, October 5, 2021

Monday, October 4, 2021

திருக்குறள் - எப்படி பிள்ளைகளை வளர்ப்பது ?

 திருக்குறள் - எப்படி பிள்ளைகளை வளர்ப்பது ?


எப்படி பிள்ளைகளை வளர்ப்பது என்று தெரியாமலேயே பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறோம். நாம் எப்படி வளர்ந்தோம் என்றும் தெரிவதில்லை. எது சரி, எது தவறு என்று தெரியாமலேயே பிள்ளைகளை வளர்க்கிறோம். 


ஏதோ பள்ளிக்கு அனுப்பினோம், கல்லூரிக்கு அனுப்பினோம், வேலை தேடிக் கொண்டார்கள், திருமணம் செய்து வைத்தோம்...அத்தோடு நம் வேலை தீர்ந்தது என்று பெரும்பாலான பெற்றோர்கள் நினைக்கிறார்கள். 


வேறு சிலரோ, பிள்ளைக்கு அவ்வளவா படிப்பு வரல. என்ன பண்றது. கொஞ்சம் சொத்து சேர்த்து வைத்து விட்டுப் போவோம். நமக்குப் பின் பிள்ளை துன்பப் படாமல் இருக்கட்டும் என்று நினைப்பார்கள். 


பிள்ளை வளர்ப்பை எங்கு போய் படிப்பது ?


ஒரு வரியில் வள்ளுவர் சொல்லித் தருகிறார். 


"பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்றால், அவர்கள் வளர்ந்த பின், கற்றறிந்த சான்றோர் அவையில் அவர்களுக்கு முதலிடம் கிடைக்க வேண்டும்...அப்படி பிள்ளைகளை வளர்க்க வேண்டும் " என்கிறார். 


பாடல் 


தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி யிருப்பச் செயல்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post_4.html


(please click the above link to continue reading)



தந்தை = தந்தை 


மகற்கு = மகனுக்கு 


ஆற்றும் நன்றி = செய்யும் உதவி 


அவையத்து = உலகில் 


முந்தி யிருப்பச் செயல் = மகனை முந்தி இருக்கும் படி செய்வது. 


அவையம் என்றால் உலகம். 


உலகில் பல தீயவர்கள், கொடியவர்கள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் போற்றும் பெரிய கொள்ளைக்காரனாக இருந்தால் பரவாயில்லையா?  டான் (Don), பாஸ் (Boss) என்று சொல்கிறார்களே அது ஒரு பெருமையா?


அவையம் என்பதற்கு பரிமேலழகர் சொல்கிறார் "கற்றார் அவையின்கண் ". படித்தவர்கள் நிறைந்த அவை என்கிறார். 


"முந்தி இருப்பச் செயல் " என்றால் என்ன? முதல் வரிசையில் இடம் போட்டு வைப்பதா?  


"அவரினும் மிக்கு இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்"


என்கிறார். 


கற்று அறிந்தவர்கள் சபையில், அவர்களை விட அறிவில் மிகுந்தவனாக இருக்கும் படி செய்வது என்கிறார். 


ஏதோ பள்ளியில், கல்லூரியில் முதல் மாணவனாக வருவது அல்ல. 


கற்று அறிந்தவர்கள் உள்ள எந்த சபைக்கு சென்றாலும், அவர்களை விட இவன் அறிவில் மிகுந்தவனாக இருக்கும் படி செய்வது. 


எவ்வளவு பெரிய வேலை. 



"தந்தை மகற்குஆற்றும் நன்றி " என்ற தொடரில், 'நன்றி' என்ற சொல்லுக்கு 'உதவி' என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். 


தந்தை உதவி செய்ய வேண்டும். படிப்பது பிள்ளையின் கையில். 


பிள்ளை பெறுவதற்கு முன் , பிள்ளை பெற்றால் அவனை கல்வியில் உயர்ந்தவனாகச் செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டு, முடியும் என்றால் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும். 


ஒரு வரி. கால காலத்துக்குமான உபதேசம். 


பரிமேலழகர் அதோடு நிற்கவில்லை. 


பிள்ளைக்கு நாலு காசு சேர்த்து வைத்தால், அது உதவி இல்லையா? படிப்பு மட்டும்தானா உதவி என்று சிலர் கேட்கலாம். 



"பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம் பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து."


என்கிறார் பரிமேலழகர். 


பிள்ளையை நிறைய செல்வம் சேர்க்க சொல்லிக் கொடுத்தால், அது துன்பம் தருவது என்கிறார். 


பணம் சம்பாதிப்பது துன்பம். அதை பாதுகாப்பது துன்பம். முதலீடு செய்தால் பத்திரமாய் திரும்பி வர வேண்டுமே என்ற பயம்.வட்டி குறைந்தால் வருத்தம். வரும் வருமானத்துக்கு வரி போட்டால் துன்பம். மற்றவர்கள் அதிகம் சேர்த்து விட்டால், வரும் பொறாமை. 


"பொருளுடையான் ஆக்குதல் முதலாயின"


"முதலாயின" என்றதன் மூலம், பொருள், அதிகாரம், செல்வாக்கு, என்பன எல்லாம் துன்பம் தருவன என்கிறார். 


வியக்க வைக்கும் குறள். எவ்வளவு தெளிவான, ஆழமான குறள். 


படிப்போம். 


Sunday, October 3, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்டு இன்பக் கலவி எய்தி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்டு இன்பக் கலவி எய்தி 


இறைவன் எல்லாம் வல்லவன். அவனுக்கு எல்லாம் தெரியும் என்றாலும், அவன் மேல் பக்தி, பக்தி என்று கூட சொல்லமுடியாது, ஒரு காதல், கொள்ளும் பக்தர்கள், அவனுக்கு ஏதேனும் ஆபத்து வந்து விடுமோ என்று பதறுவது, வைணவ இலக்கியத்தில் நாம் காணும் காட்சி. 



கணவன் பட்டாளத்தில் பெரிய வேலையில் இருப்பார். அவர் போகும் போது முன்னால் நாலு வண்டி, பின்னால் நாலு வண்டி பாதுகாப்புக்கு போகும். அவர் கண் அசைத்தால் பெரிய படையே நகரும். இருந்தும் அவர் வெளியே போய்விட்டு வரும் வரை, மனைவிக்கு கவலையாகத்தான் இருக்கும். அவருக்கு ஒண்ணும் ஆகி விடக் கூடாதே என்று. 


அது அன்பின் அடையாளம் . காதலின் வெளிப்பாடு. 


அதே அன்பை, அன்யோன்யத்தை, காதலை பிரபந்தத்தில் பல இடத்தில் காணலாம். இப்படி கூட அன்பு இருக்குமா என்று வியக்க வைக்கும் நம்மை. 


குலசேகர ஆழ்வார் நினைக்கிறார், 


"பெருமாளுக்கு ஏதாவது தீங்கு வந்து விடுமோ? எதற்கும் ஒரு முறை போய் பார்த்து விட்டு வந்து விடுவோம். ஹ்ம்ம்...அவர் கையில் கூரிய அம்புகள் இருக்கிறது, அதை செலுத்தும் பெரிய சாரங்கம் என்ற வில் இருக்கிறது.  அது போதுமா? அம்பு ஒரு தூரத்துக்குத் தான் போகும். அதற்கு அப்பால் ஏதாவது துன்பம் , தீங்கு வந்து விட்டால்? ...கையில சக்கரம் இருக்கு. அது எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகும். இது இரண்டும் போதுமா? அது போக கதையும் இருக்கு, அதுக்கும் மேல ஒரு வாளும் இருக்கு. ரொம்ப தூரம் போக வேண்டும் என்றால் அதுக்கு கருடன் இருக்கு. இது எல்லாம் என் பெருமாளை காப்பாற்றும். அவருக்கு ஒரு துன்பமும் வராது. அப்பாட, நிம்மதி" என்று நிம்மதி பெருமூச்சு விட்ட பின், சுற்றி வர பார்க்கிறார். 


அவர் இருக்கும் இடம் திருவரங்கம். எங்கு பார்த்தாலும் சோலை. வயல். பச்சை பசேல் என்று இருக்கிறது. நீர் வளம் நிரம்பி இருக்கிறது. வயக்காட்டில் உள்ள நீரில், மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. பெருமாள் அரவணையில் பள்ளி கொண்டிருக்கிறார். பார்க்க பார்க்க அவருக்கு ஆனந்தம் தாளவில்லை. அப்படியே ஓடிப் போய் கட்டி பிடித்துக் கொள்ள மாட்டோமா என்று மனம் காதலில் மிதக்கிறது. 


எனக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா என்று கிடைக்குமோ என்று ஏங்குகிறார். 


பாடல் 




கோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம் கொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்


காலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக் கடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப


சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்


மாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி வல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/10/blog-post.html


(Please click the above link to continue reading)




கோலார்ந்த = கூரிய அம்புகள் உள்ள 


நெடுஞ்சார்ங்கம் = பெரிய சாரங்கம் என்ற வில் 


கூனற் சங்கம் = வளைந்த சங்கு 


கொலையாழி = சக்கரம் 


கொடுந்தண்டு = தண்டாயுதம் 


கொற்ற வொள்வாள் = வெல்லும் வாள் 


காலார்ந்த = காற்றில் 


கதிக்கருட னென்னும்  = வேகமாகச் செல்லும் கருடன் என்ற 


வென்றிக் கடும்பறவை = வெற்றி பெறும் சிறந்த பறவை 


யிவையனைத்தும் = இவை அனைத்தும் 


புறஞ்சூழ் காப்ப = சுற்றி இருந்து காவல் செய்ய 



சேலார்ந்த = மீன்கள் நிறைந்த 


நெடுங்கழனி = பெரிய கழனி 


சோலை = சோலைகள் 


சூழ்ந்த = சூழ்ந்த 


திருவரங்க தரவணையில் = திருவரங்கத்தில், பாம்பு அணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


மாலோனைக் = திருமாலை 


கண்டின்பக் கலவி யெய்தி = கண்டு இன்பக் கலவி எய்தி 


வல்வினையே னென்றுகொலோ = வலிய வினையை உடைய நான் என்றோ 


வாழும் நாளே = வாழும் நாளே