Tuesday, October 30, 2018

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன்

தேவாரம் - பெறலாகா அருள் பெற்றேன் 


தெரு நாய் பார்த்து இருக்கிறீர்களா? யாரவது காரில் போனால், அந்த காரை துரத்தும். குலைக்கும். எங்கோ வேறு ஒரு தெருவில் ஒரு நாய் குரைத்தால், இந்த நாயும் குரைக்கும். காரணம் இல்லாமல் மற்ற நாய்களோடு சண்டை போடும். இங்கிருந்து அங்கு ஓடும். பின் அங்கிருந்து இங்கு ஓடி வரும். நாள் பூராவும் ஏதோ சுறு சுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும்.

இரவில் களைத்துப் போய் விடும்.

சரி, உருப்படியாக என்ன செய்தாய் என்று கேட்டால் அதற்கு ஒன்றும் தெரியாது. ஓடினேன், வந்தேன், குறைத்தேன், கார்களை துரத்தினேன் என்று சொல்லும்.


அந்த நாய்க்கு அவ்வளவுதான் அறிவு.

நமக்கு ?

இத்தனை வயது வரை என்ன செய்தோம்?

25 வயது வரை ஏதேதோ படித்தோம். படித்ததில் ஏதாவது நினைவில் இருக்கிறதா ? அது வாழ்க்கைக்கு எங்காவது உதவுகிறதா ?

சரி, வேலைக்குப் போனோம். சாதித்தது என்ன?  யாருக்கோ பணம் போனது. யாருக்கோ நன்மை கிடைத்தது. நாம் சாதித்தது என்ன.

திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்றோம். அதனால் கிடைத்த பலன் என்ன?

 இப்படி ஒரு குறிக்கோள் இல்லாமல் அந்தத் தெரு நாய் போல அலைந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நாய் போலத்தான் பேயும். ஒரு குறிக்கோள் இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும்.

சுந்தரர் சொல்கிறார் ...

"நாய் போன்ற நான் ஒரு குறிக்கோள் இன்றி பேய் போலத் திரிந்தேன். எப்படியோ பெற  முடியாத உன் அருளைப் பெற்றேன். இனி உனக்கு அடிமை ஆகிவிட்டேன். இனி, நான் என்று ஒன்று இல்லை "

பாடல்

நாயேன்பல நாளும்நினைப் பின்றிமனத் துன்னைப் 
பேயாய்த்திரிந் தெய்த்தேன்பெறலாகாவருள் பெற்றேன் 
வேயார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்  நல்லூரருட் டுறையுள் 
ஆயாஉனக் காளாய்இனி அல்லேன் என லாமே.

பொருள்

நாயேன் = நாய் போன்றவனான நான்

பல நாளும் = பல நாட்கள்

நினைப் பின்றி = என்ன செய்கிறோம், எதற்கு செய்கிறோம் என்ற நினவு இல்லாமல்

மனத் துன்னைப் = மனதில் உன்னை

பேயாய்த்திரிந் தெய்த்தேன் = பேய் போல திரிந்தும் உன்னை அடையவில்லை

பெறலாகாவருள் பெற்றேன் =  பெற முடியாத அருளைப் பெற்றேன்

வேயார் = மூங்கில் காடுகள் நிறைந்த

பெண்ணைத் = பெண்ணை ஆற்றின் கரையில்

தென்பால் = தெற்கு பக்கம் உள்ள

வெண்ணெய் = திருவெண்ணெய்

நல்லூரருட் டுறையுள் = நல்லூர் என்ற அருள் தலத்தில்

ஆயா = தலைவனே

உனக் காளாய் = உனக்கு எற்றவனானேன்

இனி அல்லேன் என லாமே. = இனி நான் என்று ஒன்றும் இல்லை என்று ஆகி விட்டேன்

வாழ்வின் குறிக்கோள் என்ன என்று அறிந்து பின் செல்லுங்கள். அங்காடி நாய் போல் அலைந்தனையே மனமே என்பார் பட்டினத்து அடிகள்.

இனிமையான பாடல்.

இன்னொரு முறை வாசித்துப் பாருங்கள். உண்மை புலப்படும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_30.html



Monday, October 29, 2018

108 திவ்ய தேசம் - திருவாலி - பாகம் 2

108 திவ்ய தேசம் - திருவாலி - பாகம் 2 



 ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்களை கேட்டால் சொல்லுவார்கள், "நான் இறைவனை நம்புகிறேன். இறைவனிடம் போய் சேர முயல்கிறேன். இறைவன் சொர்க்கத்தில்  இருக்கிறான்  வைகுந்தத்தில் இருக்கிறான் அல்லது கைலாயத்தில் இருக்கிறான் .." என்றது சொல்லுவார்கள். 

இறைவனை தேடுவது என்றால் என்ன  அர்த்தம். எதையோ தொலைத்து விட்டு , பின் தேடினால் அர்த்தம்  இருக்கும். நாம் இறைவனை தொலைத்து விட்டோமா ? இதற்கு முன் அவர் நம்மிடம் இருந்தாரா ? இல்லையே. பின் எப்படி தேட முடியும் ?

 என் கார் சாவி என்னிடம் இருந்தது. எங்கேயோ வைத்து விட்டேன். அதைத் தேடி கண்டு பிடிக்கலாம். அந்த சாவி எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். 

இறைவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியுமா ? தெரியாத ஒன்றை எப்படி தேடுவது ? 

ஒரு நாள் என் வீட்டில் , இரவில் மருந்து சாப்பிட மாத்திரையை எடுத்தேன். கை தவறி கீழே விழுந்து விட்டது. எடுக்கக் குனியும் நேரத்தில் மின்சாரம் போய் விட்டது. ஒரே இருட்டு. ஒன்றும் தெரியவில்லை. 

என்ன செய்வது. வெளியே பார்த்தேன். தெரு விளக்கில் வெளிச்சம் இருந்தது.  சரி, அங்கே போய் தேடலாம் என்று போனால் அது எவ்வளவு பைத்தியகாரத்தனம் ?

அந்த அளவு பைத்தியகாரத் தனம் இறைவனை தேடுவது. எங்கே தொலைத்தோமோ அங்கு தானே தேட முடியும்? தொலைத்த இடம் எது ? கோவிலில் தொலைத்தோமா ? தினமும் அங்கே போய் தேடுகிறார்கள். 

இறைவன் யார், எப்படி இருப்பான், எங்கே இருப்பான், அவன் கருப்பா சிவப்பா, உயரமா குள்ளம்மா, ஆணா பெண்ணா என்று எதுவும் நமக்குத் தெரியாது. தெரியாத ஒன்றை எப்படித் தேடுவது ?

இங்குதான் இந்த பாசுரம் வருகிறது. 

நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்கள் அல்லவா ? அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

ஒரு புதிய ஊருக்குப் போகிறோம். விலாசம் தொலைந்து போய் விட்டது. போய் சேரும் இடம் பற்றி கொஞ்சம் தெரியும். ஆனால் எந்த இடம், எந்தத் தெரு என்பதெல்லாம் தெரியாது. 

என்ன செய்யலாம் ?

அந்த ஊரைப் பற்றி நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். 

நம் சமயங்கள் , அதிலும் குறிப்பாக வைணவ சமயம், ஆசாரியர்களை கொண்டாடுகிறது. அவர்களை , இறைவனுக்கும் ஒரு படி மேலே வைத்து கொண்டாடுகிறார்கள். ஆசாரியன் தான் நம்மை இறைவனிடம் அழைத்துச் செல்ல முடியும் என்று நம்புகிறார்கள். 

மாதா பிதா குரு தெய்வம். 

அம்மா தான் அப்பா யார் என்று அடையாளம் காட்டுகிறாள். 

அப்பா தான் குரு யார் என்று அடையாளம் காட்டுகிறார். 

குரு தான் இறைவனை நமக்கு அடையாளம் காட்ட முடியும். 

எனவேதான் அந்த வரிசை. மாதா, பிதா, குரு , தெய்வம். 

இங்கே வண்டு என்று அவர் கூறுவது, ஆசாரியனை. ஆசாரியனுக்கு ஒரு உவமானம். "நான் அவனை அடைய விரும்புகிறேன். ஆனால், எப்படி என்று தெரியவில்லை. நீ போய் சொல்லி அவனை வரச் சொல்" என்று வண்டை தூது விடுவதாக உள்ள இந்த பாசுரம் சொல்லுவது, "ஆசாரியனே, நீ என்னை அந்த  வரிவில் கொண்ட இலக்குமி கேள்வனோடு சேர்த்து விடு " என்று கூறுவதாக உள்ளது. 

சைவ சமயமும் குருவை பிரதானமாக ஏற்றுக் கொண்டுள்ளது. 

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" 

என்று இறைவனே குரு வடிவில் வருவதாக நம்பியது. 

இன்னொன்றையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். 

ஆழ்வார் "என்னை அங்கே கூட்டிப் போ " என்று வண்டிடம் (ஆசாரியனிடம்) கூறவில்லை. என் நிலைமையை அவனிடம் கூறு என்று தான் வேண்டுகிறார். 

அவன் இருக்கும் இடம் தெரிந்தாலும் நம்மால் அங்கே போக முடியாது. அவன் வந்து கூட்டிக் கொண்டு போனால் தான் உண்டு. 

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். 

பாலைக் கொடுத்து ஆட்கொண்டான் திரு ஞான சம்பந்தரை 

ஓலை கொடுத்து ஆட்கொண்டான் சுந்தர மூர்த்தி நாயனாரை 

காலை காட்டி ஆண்டு கொண்டான் மணிவாசகரை 

அவன் வந்து ஆட் கொண்டால் தான் உண்டு. 

சிந்திப்போம் 



------------------------------------ பாகம் 1 --------------------------------------------------------------------


ஆணின் உலகம் கரடு முரடானது. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, நம்பிக்கை துரோகம் போன்றவற்றால் நிறைந்தது. ஆணின் உலகம் போராட்டம் நிறைந்தது.

ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி, சிக்கி சின்னா பின்னாமாகி வீட்டுக்கு வருவான். கோபம், ஏக்கம், வலி இவற்றோடு வருவான். வந்தவுடன் , அவன் முகத்தைப் பார்த்தவுடன் அவன் மனைவிக்குத் தெரியும். இன்னிக்கு என்னமோ நடந்திருக்கு என்று புரிந்து கொள்வாள்.

அவளால் முடிந்தவரை அவன் வலியை நீக்கி, அவனை சாந்தப் படுத்த முயல்வாள்.

"சரி விடுங்க...இது போனா இன்னொன்னு. இன்னிக்கு இல்லேனா நாளைக்கு கிடைத்து விட்டுப் போகிறது. எதுக்கு போட்டு மனச குழப்பிக்கிறீங்க " என்று ஆறுதல் சொல்லி அவனுக்கு அமைதி தர முயல்வாள்.

பெண்ணின் அருகாமை ஆணை அமைதிப் படுத்தும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த அரக்கர்கள் இருக்கிறார்களே சரியான முட்டாள்கள். மரணம் என்பதை வெல்லவே முடியாது என்று தெரிந்தும், எத்தனையோ விதங்களில் மரணத்தை வெல்ல வரம் வாங்குவார்கள். பின், அந்த வரங்களை எல்லாம் மீறி அவர்கள் கொல்லப் படுவார்கள்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் மிக மிக கடினமான வரம் வாங்கினான். நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.

பெருமாள், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை கொன்றார்.

கொன்ற பின்னும், நரசிம்மத்தின் கோபம் அடங்கவில்லை. அந்தக் கோபம் அடங்காவிட்டால் உலகமே அழிந்து விடும் என்று பயந்த தேவர்கள், நேராக இலக்குமியிடம் சென்று "தாயே, நீ தான் பெருமாளின் கோபத்தை தணித்து இந்த உலகை  காக்க வேண்டும் " என்று வேண்டினார்கள்.

பெண்ணின் அன்பில் உருகாத மனமும் உண்டோ ?

இலக்குமி ஒன்றுமே செய்யவில்லை. நேராக சென்று அந்த நரசிம்மத்தின் மடியில் அமர்ந்து விட்டாள்.. அவ்வளவுதான்.

அப்படி மடியில் அமர்ந்த இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார் (கட்டிப் பிடித்துக் கொண்டார்). அப்படி கட்டிப் பிடித்தவுடன் அவரின் கோபம் எல்லாம்  மறைந்தே போய் விட்டது. அமைதி ஆனார்.

அப்படி அவர் இலக்குமியை ஆலிங்கனம் செய்து கொண்ட தலம் திரு ஆலி அல்லது திருவாலி என்று அழைக்கப் படுகிறது.

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. மூணு கிலோமீட்டர் தூரம்தான்.

மூலவர் இலட்சுமி நரசிம்மன். அமர்ந்த திருக்கோலம்.

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.


"மலரின் மெல்லிய இதழ்களை பிரித்து அதில் உள்ள தேனை , உன் துணையோடு அருந்தும் வண்டே,  மறையவர்கள் ஓமம் வளர்த்து வேதங்களை ஓதும் புகழ் கொண்ட திருவாலி நகரில் உள்ள அந்த பெருமாளிடம் என் நிலைமையை சென்று சொல்லாயோ "

என்று வண்டை தூது விடுகிறார்.



பாடல்

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
 பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
 தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
 ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே - (1198)
                     
பெரியதிருமொழி 3-6-1


பொருள்

தூவிரிய = சிறகுகள் விரிய

மலருழக்கித்  = மலரின் உள்ளே சென்று

துணையோடும் = உன் துணையோடு

பிரியாதே = எப்போதும் பிரியாமல்

பூவிரிய = மலர் விரிந்து

மதுநுகரும் = அதில் உள்ள தேனை அருந்தும்

பொறிவரிய = புள்ளிகளும், கோடுகளும் கொண்ட

சிறுவண்டே = சிறு வண்டே

தீவிரிய = தீ வளர்த்து

மறைவளர்க்கும் = வேதங்களை போற்றும்

புகழாளர் = புகழ் படைத்தவர்கள்

திருவாழி = திருவாலி என்ற திருத்தலத்தில்

ஏவரி = சிறந்த , கட்டுக் கோப்பான

வெஞ்சிலையானுக் = வலிமை வாய்ந்த வில்லை கையில் கொண்ட அவனிடம்

கென்னிலைமை யுரையாயே  = என் நிலைமையை சொல்ல மாட்டாயா

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாயகன் நாயகி பாவத்தில் , காதல் வயப்பட்ட தலைவி , வண்டை தலைவனிடம் தூது விடும் பாடல் மாதிரி தெரியும்.

உண்மை அது அல்ல. மிக ஆழமான அர்த்தம் கொண்ட பாசுரம்.

அது என்ன அர்த்தம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/108.html




Sunday, October 28, 2018

108 திவ்ய தேசம் - திருவாலி

108 திவ்ய தேசம் - திருவாலி 


ஆணின் உலகம் கரடு முரடானது. போட்டி, பொறாமை, சண்டை, சச்சரவு, நம்பிக்கை துரோகம் போன்றவற்றால் நிறைந்தது. ஆணின் உலகம் போராட்டம் நிறைந்தது.

ஏதோ ஒரு சிக்கலில் மாட்டி, சிக்கி சின்னா பின்னாமாகி வீட்டுக்கு வருவான். கோபம், ஏக்கம், வலி இவற்றோடு வருவான். வந்தவுடன் , அவன் முகத்தைப் பார்த்தவுடன் அவன் மனைவிக்குத் தெரியும். இன்னிக்கு என்னமோ நடந்திருக்கு என்று புரிந்து கொள்வாள்.

அவளால் முடிந்தவரை அவன் வலியை நீக்கி, அவனை சாந்தப் படுத்த முயல்வாள்.

"சரி விடுங்க...இது போனா இன்னொன்னு. இன்னிக்கு இல்லேனா நாளைக்கு கிடைத்து விட்டுப் போகிறது. எதுக்கு போட்டு மனச குழப்பிக்கிறீங்க " என்று ஆறுதல் சொல்லி அவனுக்கு அமைதி தர முயல்வாள்.

பெண்ணின் அருகாமை ஆணை அமைதிப் படுத்தும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்த அரக்கர்கள் இருக்கிறார்களே சரியான முட்டாள்கள். மரணம் என்பதை வெல்லவே முடியாது என்று தெரிந்தும், எத்தனையோ விதங்களில் மரணத்தை வெல்ல வரம் வாங்குவார்கள். பின், அந்த வரங்களை எல்லாம் மீறி அவர்கள் கொல்லப் படுவார்கள்.

இரணியன் என்று ஒரு அரக்கன் இருந்தான். அவன் மிக மிக கடினமான வரம் வாங்கினான். நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.

பெருமாள், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனை கொன்றார்.

கொன்ற பின்னும், நரசிம்மத்தின் கோபம் அடங்கவில்லை. அந்தக் கோபம் அடங்காவிட்டால் உலகமே அழிந்து விடும் என்று பயந்த தேவர்கள், நேராக இலக்குமியிடம் சென்று "தாயே, நீ தான் பெருமாளின் கோபத்தை தணித்து இந்த உலகை  காக்க வேண்டும் " என்று வேண்டினார்கள்.

பெண்ணின் அன்பில் உருகாத மனமும் உண்டோ ?

இலக்குமி ஒன்றுமே செய்யவில்லை. நேராக சென்று அந்த நரசிம்மத்தின் மடியில் அமர்ந்து விட்டாள்.. அவ்வளவுதான்.

அப்படி மடியில் அமர்ந்த இலக்குமியை , பெருமாள் ஆலிங்கனம் செய்து கொண்டார் (கட்டிப் பிடித்துக் கொண்டார்). அப்படி கட்டிப் பிடித்தவுடன் அவரின் கோபம் எல்லாம்  மறைந்தே போய் விட்டது. அமைதி ஆனார்.

அப்படி அவர் இலக்குமியை ஆலிங்கனம் செய்து கொண்ட தலம் திரு ஆலி அல்லது திருவாலி என்று அழைக்கப் படுகிறது.

சீர்காழிக்கு பக்கத்தில் இருக்கிறது. மூணு கிலோமீட்டர் தூரம்தான்.

மூலவர் இலட்சுமி நரசிம்மன். அமர்ந்த திருக்கோலம்.

திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.


"மலரின் மெல்லிய இதழ்களை பிரித்து அதில் உள்ள தேனை , உன் துணையோடு அருந்தும் வண்டே,  மறையவர்கள் ஓமம் வளர்த்து வேதங்களை ஓதும் புகழ் கொண்ட திருவாலி நகரில் உள்ள அந்த பெருமாளிடம் என் நிலைமையை சென்று சொல்லாயோ "

என்று வண்டை தூது விடுகிறார்.



பாடல்

தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே
 பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே
 தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி
 ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலைமை யுரையாயே - (1198)
                       
பெரியதிருமொழி 3-6-1


பொருள்

தூவிரிய = சிறகுகள் விரிய

மலருழக்கித்  = மலரின் உள்ளே சென்று

துணையோடும் = உன் துணையோடு

பிரியாதே = எப்போதும் பிரியாமல்

பூவிரிய = மலர் விரிந்து

மதுநுகரும் = அதில் உள்ள தேனை அருந்தும்

பொறிவரிய = புள்ளிகளும், கோடுகளும் கொண்ட

சிறுவண்டே = சிறு வண்டே

தீவிரிய = தீ வளர்த்து

மறைவளர்க்கும் = வேதங்களை போற்றும்

புகழாளர் = புகழ் படைத்தவர்கள்

திருவாழி = திருவாலி என்ற திருத்தலத்தில்

ஏவரி = சிறந்த , கட்டுக் கோப்பான

வெஞ்சிலையானுக் = வலிமை வாய்ந்த வில்லை கையில் கொண்ட அவனிடம்

கென்னிலைமை யுரையாயே  = என் நிலைமையை சொல்ல மாட்டாயா

மேலோட்டமாக பார்த்தால் ஏதோ நாயகன் நாயகி பாவத்தில் , காதல் வயப்பட்ட தலைவி , வண்டை தலைவனிடம் தூது விடும் பாடல் மாதிரி தெரியும்.

உண்மை அது அல்ல. மிக ஆழமான அர்த்தம் கொண்ட பாசுரம்.

அது என்ன அர்த்தம் ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/108.html





Saturday, October 27, 2018

இராமானுஜர் நூற்றந்தாதி - கள்ளம் கழற்றி

இராமானுஜர் நூற்றந்தாதி - கள்ளம் கழற்றி 



உடம்பு சரி இல்லை என்றால் மருத்துவரிடம் செல்வோம். அவர் ஸ்கேன், X Ray , blood test எல்லாம் எடுத்து பார்த்து விட்டு, சாதாரண வியாதி என்றால் மருந்து மாத்திரை தருவார்.


அதுவே கொஞ்சம் சிக்கலான வியாதி என்றால், "இதற்கு அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் " என்று சொல்லி அதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விடுவார்.


அறுவை சிகிச்சை என்றால் என்ன சும்மாவா ?


இரத்த அழுத்தம் பார்க்க வேண்டும், சர்க்கரை அளவு பார்க்க வேண்டும் , எல்லாம் சரியாக இருந்தால் தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அறுவை சிகிச்சை செய்யும் போது வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து தருவார்கள். சிகிச்சை முடிந்து உடம்பு பழைய படி வர அதற்கு வேண்டிய மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும்.


உடம்பில் ஒரு உபாதை என்றாலே இந்தப் பாடு.


மனதில் சிக்கல் என்றால் என்ன செய்வது?


மனதுக்கு எவ்வளவு வியாதி வருகிறது - கோபம், தாபம், பொறாமை, பயம், காமம், என்று ஆயிரம் வியாதி வருகிறது. மனதுக்குள் போய் இவற்றை அறுவை சிகிச்சை செய்து அறுத்து அகற்ற வேண்டும். அதுவும் வலி இல்லாமல்.  யார் செய்வது ? எப்படி செய்வது ?


அது மட்டும் அல்ல, நமக்கு அப்படி ஒரு மனோ வியாதி இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. உடம்பில் நோய் என்றால் தெரியும். வலிக்கும். சோதனை செய்து கண்டு பிடித்து விடலாம். மனதில் ஒரு வியாதி வந்தால் தெரியக் கூட செய்யாது.


அது மட்டும் அல்ல, ஒரு முறை சரி செய்தால் மீண்டும் அந்த வியாதி வரக் கூடாது. அப்படி ஒரு மருத்துவம் செய்ய வேண்டும்.


யார் செய்வார்கள் ? எப்படி செய்வார்கள் ?


ஒரு நல்ல ஆசிரியன், ஆசாரியன் தான் நம்மை அறிந்து, நம் மனதில் உள்ள குற்றங்களை களைந்து, நம்மை கொண்டு போய் இறைவனிடம் சேர்ப்பிக்க முடியும்.


எங்கு போய் அப்படி ஒரு ஆச்சரியனை நாம் தேடி கண்டு பிடிப்பது? தேவையே இல்லை. நாம் தயாராக இருந்தால், ஆசாரியன் நம்மைத் தேடி வருவான்.


திருவரங்கத்தமுதனார் சொல்கிறார்


"இராமானுஜரே , நீர் என் மனதுக்குள் நான் அறியாமல் புகுந்து, என் மனதில் உள்ள குற்றங்களை எல்லாம் நீக்கி விட்டீர். அது மட்டும் அல்ல, இனி அக்குற்றங்கள் என்னிடம் வரமால் செய்து விட்டீர். மேலும், என்னை அந்த திருமகள் துணைவனிடம் கொண்டு சேர்த்தும் விட்டீர் "


என்ன உன் கருணை என்று உருகுகிறார்.


பாடல்


கருத்திற் புகுந்துள்ளிற் கள்ளம் கழற்றிக் கருதரிய
வருத்தத்தி னால்மிக வஞ்சித்து நீயிந்த மண்ணகத்தே
திருத்தித் திருமகள் கேள்வனுக் காக்கிய பின்னென்னெஞ்சில்
பொருத்தப் படாது, எம் இராமா னுச! மற்றோர் பொய்ப் பொருளே.

பொருள்


கருத்திற் புகுந்து = என் மனதினில் புகுந்து

உள்ளிற் = உள்ளத்தில் உள்ள

கள்ளம் கழற்றிக் = கள்ளம் (குற்றம்) நீக்கி

கருதரிய = நினைத்தும் பார்க்க முடியாத

வருத்தத்தி னால் = சிரமப் பட்டு

மிக வஞ்சித்து = என்னை ஏமாற்றி

நீயிந்த = நீ இந்த

மண்ணகத்தே = மண்ணுலகில்

திருத்தித் = என்னை திருத்தி

திருமகள் = இலக்குமி தேவியின்

ள்வனுக் காக்கிய பின் = துணைவனுக்கு என்று என்னை ஆக்கிய பின்

என் நெஞ்சில் = என் நெஞ்சில்

பொருத்தப் படாது = பொருந்தாது

எம் இராமா னுச! = எம் இராமானுச

மற்றோர்  = வேறு ஒரு

பொய்ப் பொருளே.= பொய் பொருளே

ஒருவரின் மனதால், அவரே அறியாமல் போய் அதில் உள்ள குற்றங்களை களைவது என்றால்  எளிதான காரியம் அல்ல. இராமானுசர் அப்படி , திருவரங்கத்து அமுதனார்  மனதில், அவரே அறியாமல் கள்ளத்தனமாக புகுந்து, அவர் மனதில் உள்ள குற்றங்களை நீக்கினாராம். அது மட்டும் அல்ல, குற்றங்களை நீக்கி  அவரை கொண்டு போய் இறைவனிடம் சேர்ப்பித்தும் விட்டார்.


"என் உள்ளம் கவர் கள்வன் " என்பார் திரு ஞான சம்பந்தர். இறைவனோ, ஆச்சாரியனோ , நம்மை கேட்டு நமக்கு நல்லது செய்வது இல்லை. நமக்குத் தெரியாமலேயே பல நன்மைகளை செய்து விடுகிறார்கள்.


வீட்டுக்கு வரும் திருடன் , நம்மை கேட்டு விட்டா வருகிறான். நமக்குத் தெரியாமல் நம் வீட்டுக்குள் புகுந்து நல்லதை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.


இங்கே, ஆசாரியன் , வஞ்சககமாக நம் மனதில் நுழைந்து, நம் மனதில் உள்ள  வேண்டாத விஷயங்களை எடுத்துக் கொண்டு போய் விடுகிறான்.


"பொய்யாயின எல்லாம் போய் அகல வந்தருளி " என்பார் மணிவாசகர்.


நல்லது எது கெட்டது எது என்று நமக்கு எங்கே தெரிகிறது?


நல்ல ஆசாரியன், குரு நமக்கு எது நல்லதோ அதைச் செய்வான், அதுவும் நாம் அறியாமலேயே.


எல்லாம் குருவருள்.


ஆச்சரியனின் அருள் எப்படி எல்லாம் நமக்கு உதவுகிறது என்று இராமானுச நூற்றந்தாதியில்  திருவரங்கத்து அமுதனார் உருகி உருகி நூறு பாடல்கள் பாடி இருக்கிறார். வாசித்துப் பாருங்கள்.


குருவருள் சேரட்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_27.html

Friday, October 26, 2018

கம்ப இராமாயணம் - இராமனின் அழகு

கம்ப இராமாயணம் - இராமனின் அழகு 


பெண்ணின் அழகை எளிதாக வர்ணித்து விடலாம். பெண் அழகின் வடிவம். ஓர் ஆண் மகனின் அழகை வர்ணிப்பது சற்று கடினமான செயல்தான்.

ஆனால், கம்பனுக்கு இராமனை வர்ணிப்பது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. ஏதோ தான் பெற்ற பிள்ளையை வர்ணிப்பது மாதிரி அனுபவித்து எழுதுவான்.

வைணவர்கள் சொல்லும் போதே, "ஆண்டவனை அனுபவித்தார்கள்" என்றே கூறுவார்கள்.

இராமன் அலங்காரம் செய்து கொண்டு திருமணத்திற்கு புறப்படுகிறான். அழகோ அழகு. அவனை வர்ணிக்க கம்பர் அன்றி யாரால் முடியும் ?

தேவர்களுக்கு , இமையவர்கள் என்று ஒரு பெயர் உண்டு. காரணம், அவர்கள் கண் இமைக்காது. இராமனின் அழகைப் பார்த்த மக்கள் எல்லோரும் தேவர்களாக மாறி விட்டார்களாம். அவர்கள் கண் அமைப்பது நின்று போனதால்.

பாடல்


அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனத்தினால் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம்; தக்கது ஆகுக-
இமையவர் ஆயினார் இங்கு உளாருமே!

பொருள்


அமைவு அரு மேனியான் = அமைவதற்கு இல்லாத மேனியை உடையவன். இப்படி ஒரு மேனி அழகு யாருக்கும் அமையாது.

அழகின் ஆயதோ? = அந்த அழகினால் வந்ததோ ? அல்லது

கமை உறு மனத்தினால் = பொறுமையான மனத்தினால்

கருத வந்ததோ? = நினைத்ததால் வந்ததோ

சமைவு உற அறிந்திலம்; = சரியாகத் தெரியவில்லை

தக்கது ஆகுக = எது சரியோ, அதையே வைத்துக் கொள்ளலாம்

இமையவர் = இமைக்காத தேவர்கள்

ஆயினார் = ஆனார்கள்

இங்கு உளாருமே! = இங்கு உள்ள எல்லா மக்களும்.

மக்கள் ஏன் கண் அமைக்கவில்லை ?

ஒன்று இராமனின் அழகு காரணமாக இருக்கலாம். அல்லது அவனை பொறுமையாக அவன்  அழகை இரசிக்கும், அனுபவிக்கும் அந்த மக்களின் மனம் காரணமாக இருக்கலாம். எது எப்படியோ, எனக்குத் தெரியாது...எல்லோரும்  கண் இமைக்காத தேவர்களாகி விட்டார்கள் என்று கம்பர் முடிக்கிறார்.

கண் இமைப்பது என்பது இயல்பாக நிகழக் கூடிய ஒன்று. நாம் ஒன்றும் அதற்காக  வலிந்து வேலை  செய்ய வேண்டாம். அப்படி தானே நிகழும் ஒன்று கூட , இராமனின் அழகைப் பார்த்தவுடன் இமைப்பது மறந்து போனதாம்.

இலக்கியங்கள் , மனிதனின் கற்பனையின் எல்லைகளை விரிவாக்க வல்லவை. இலக்கியங்களை படிக்கும் போது மனம் விரியும். கற்பனை விரியும். அட, இப்படி கூட ஒன்றை சொல்லலாமா என்று வியப்பு மேலிடும்.

குறுகிக் கிடக்கும் மனம் விரிந்து படும்.

விரியாத மனதால் , எங்கும் விரிந்து கிடக்கும் அதை எப்படி புரிந்து கொள்ள முடியும்.

நல்ல இலக்கியங்களை தேடி படிக்க வேண்டும். மனம் சிறகடித்து விண்ணில் பறக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_74.html



நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் கண் பாசம் வைத்தவன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் கண் பாசம் வைத்தவன் 


அன்பு, பாசம்...இதெல்லாம் மிக அற்புதமானவை. நம் மேல் எவ்வளவு பேர் அன்பு வைத்திருக்கிறார்கள். அவர்கள் நம் மேல் அன்பு வைக்க நாம் என்ன சாதித்து விட்டோம். என்ன செய்து விட்டோம். ஒரு வேளை நம் மனைவி, கணவன், பிள்ளைகள் எல்லாம் நம் மேல் அன்பு வைப்பதற்கு வேண்டுமானால் ஒரு காரணம் நாம் கண்டு பிடிக்க முடியும்.

இறைவன் இந்த உயிர்கள் மேல் வைத்திருக்கும் அன்புக்கு எதை காரணமாக சொல்ல முடியும். அந்த அன்பை பெறுவதற்கு நாம் என்ன செய்து விட்டோம்.

"என்னத்த பெரிய அன்பு செய்து விட்டான் அந்த இறைவன். எவ்வளவோ துன்பப் படுகிறேன். பணம் பத்தவில்லை. உடல் நிலை சரியில்லை....வேலை முதுகை முறிக்கிறது ..." என்று நாம் ஆயிரம் சாக்குச் சொல்லலாம்.

அவை எல்லாம் நிஜமா ?

நமக்கு நல்லதே நடக்கவில்லையா ?

யோசித்துப் பாருங்கள். பெற்றோர், கணவன்/மனைவி, சகோதரர்கள், சகோதரிகள், நட்பு, செல்வம், ஆரோக்கியம், ஆயுள்...என்று எவ்வளவோ நல்லது நமக்கு கிடைத்து இருக்கிறது.

அதுவும் இல்லையா ...விடுங்கள்...இந்த இனிமையான பூமி, காலை நேரம், அவ்வப்போது பெய்யும் மழை, சுவையான காய் கறிகள், பழங்கள், மணம் வீசும் பூக்கள், மனம் வருடும் இசை,  உயிர் உரசும் குழந்தையின் , பேரக் குழந்தையின் ஸ்பரிசம், இப்படி ஆயிரம் ஆயிரம் இன்பங்கள் அள்ளித் தெளித்து இருக்கிறது இந்த உலகில்.  இவை எல்லாம் நாம் காசு போட்டு வாங்கியதில்லை. வாங்கவும் முடியாது.

இத்தனையும் அருள் கொடை.

உங்களை சுற்றிப் பாருங்கள். அவ்வளவு இன்பம் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் இறைவன் நம் மேல் கொண்ட பாசத்தினால் தந்த அருள் கொடை.


நம்மாழ்வார் சொல்கிறார்,

"வானில் உள்ளவர்களுக்கு எல்லாம் அந்த திருவேங்கடத்தானே தலைவன் அப்படின்னு நான் சொன்னால் அதில் அவனுக்கு என்ன பெருமை இருக்க முடியும் ? நான் அவன் பெருமையை பற்றிக் கூற. மிகவும் கடையவன் நான். சிறந்தது என்று சொல்லக் கூடியது என்று ஒன்றும் இல்லை என்னிடம். ஆனால், அந்த திருவேங்கடத்தான் என் மேல் போய் பாசம் வைத்திருக்கிறானே" என்று வியக்கிறார்.



பாடல்

ஈசன் வானவர்க் கென்பனென் றால்,அது
தேச மோதிரு வேங்கடத் தானுக்கு?,
நீச னென் நிறை வொன்றுமி லேன்,என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.

பொருள்


ஈசன் = தலைவன்

வானவர்க்கு = வானில் உள்ளவர்களுக்கு

கென்பனென் றால் = என்பன் என்றால். என்று நான் சொன்னால்

அது = அது

தேச மோ = பெருமையோ

திரு வேங்கடத் தானுக்கு? = திரு வேங்கட மலையில் உள்ளவனுக்கு ?

நீச னென் = தாழ்மையாவன்

நிறை வொன்றுமி லேன் = சிறப்பு என்று சொல்லக் கூடியது என்று ஒன்றும் இல்லாதவன்

என்கண் = என் மேல்

பாசம் வைத்த = பாசம் வைத்த

பரஞ்சுடர்ச் சோதிக்கே = உயர்ந்த ஜோதி வடிவானவனுக்கு

என் மேல் பாசம் வைத்து, எனக்கு என்னவெல்லாம் அவன் செய்து தந்திருக்கிறான். எனக்கு அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இருந்தும் என் மேல் பாசம் வைத்திருக்கிறானே என்று எண்ணி எண்ணி உருக்குகிறார்.


https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_26.html


Saturday, October 20, 2018

திருவாசகம் - கலக்கம் தெளிவித்த

திருவாசகம் - கலக்கம் தெளிவித்த 



நம்முடைய குழப்பங்களுக்கு ஒரு அளவு இருக்கிறதா? முதலில் நமது சொத்து மற்றும் உடமைகள்.


எவ்வளவு சொத்து சேர்ப்பது? பெரிய வீடு,  அதில் ஒரு நீச்சல் குளம், நாலைந்து காரு, பத்து பதினைந்து வேலைகாரர்கள் என்று  ஒரு பட்டியல் நீளும். ஆசை ஒரு புறம். பயம் ஒரு புறம். நம்மை விட அதிகம் இருப்பவனைப் பார்த்து பொறாமை, நம்மை விட குறைவாக உள்ளவனைப் பார்த்து ஒரு பெருமை....இப்படி கொஞ்சம் குழப்பங்கள்.


மனைவி ... என் மனைவியை விட அவன் மனைவி அழகாக இருக்கிறாள், அவளுக்கு பாட வரும், வீட்டை எப்படி பார்த்துக் கொள்கிறாள்,  எனக்கும் ஒன்று வாய்த்து இருக்கிறதே என்று கவலைப் படாதவர் யார்?


பிள்ளைகள் ... என்ன படித்தாலும் , இன்னும் படிக்கவில்லையே என்ற ஆதங்கம். நன்றாகக் படித்தால் பார்க்க இன்னும் கொஞ்சம் அழகாக இருந்திருக்கலாம் என்று ஒரு எண்ணம். இப்படி கொஞ்சம் குழப்பம்.


குலம்...உயர் குலத்தில் பிறந்தால் பெருமை, ஆணவம். இல்லை என்றால் தாழ்வு மனப்பான்மை.


கல்வி ... வித்யா கர்வம், படித்ததால் வரும் கர்வம், இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆசை, அதனால் மற்றவர்கள் தன்னை மதிக்க வேண்டும் என்ற எண்ணம்


பிறப்பு...இறப்பு ....இது பற்றிய குழப்பங்கள். இறப்புக்குப் பின் என்ன, பிறவியின் நோக்கம் என்ன, மறு பிறப்பு உண்டா ?


இந்த குழப்பங்களில் இருந்து எப்படி தெளிவு பெறுவது ?


தண்ணீர் கலங்கி இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் செய்யக் கூடாது. பொறுமையாக இருக்க வேண்டும். அதுவே தெளியும். வண்டல் எல்லாம் அடியில் சென்று தங்கி விடும். தெளிந்த நீர் மேலே நிற்கும்.


மாறாக, அது தெளிந்து விட்டதா, இல்லையா என்று ஓயாமல் அதில் கரண்டியை விட்டு கிண்டிக் கொண்டே இருந்தால் அது தெளியவே தெளியாது.


எதைப் படிப்பது, யாரைக் கேட்பது, எந்த கடவுளை கும்பிடுவது, எப்படி கும்பிடுவது, எந்தக் கோவில், என்ன பூஜை என்று அலை பாயக் கூடாது.


பொறுமை. அமைதி.


பதட்டம் கொள்ளாமல், அமைதியாக இருக்கப் பழகினால், சித்த சலனங்கள்
அடங்கும். தெளிவு பிறக்கும்.


மணிவாசகர் சொல்கிறார்.


பாடல்


வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 24


பொருள்


வைத்த நிதி = சேர்த்து வைத்த செல்வம்


பெண்டிர் = மனைவி


மக்கள் = மக்கள் , பிள்ளைகள்


குலங் = குலம்


கல்வியென்னும் = கல்வி என்று


பித்த உலகிற் = பித்துப் பிடித்த உலகில்


பிறப்போ டிறப்பென்னுஞ் = பிறப்போடு இறப்பு என்னும்


சித்த = சித்த


விகாரக் = மாற்றம்


கலக்கம் = கலக்கம்


தெளிவித்த = தெளிவு அடையும்படி செய்த


வித்தகத் தேவற்கே = உயர்ந்த தேவற்கே


சென்றூதாய் = சென்று நீ ஊதுவாய்


கோத்தும்பீ = கோ + தும்பி , உயர்ந்த வண்டே


மண்டையை போட்டு கிண்டாதீர்கள். மேலும் குழப்பம் தான் விளையும். தேடல் தொடர தொடர குழப்பம் அதிகரிக்கும்.


வரும்போது வரட்டும்.


மாலும் அயனும் தேடியே கிடைக்கவில்லை. நம்மாலா தேடிவிட முடியும்.  தேடினால்  கிடைக்காது என்பது அதன் பொருள்.


தேடுவது நிற்கும் போது உடலிலும் மனத்திலும் ஏறிய முறுக்கு குறையும். இரண்டும் லேசாகிப் போகும்.


தேடுதல் வியர்த்தம் என்று அறிந்த அன்று சித்தார்த்தன், புத்தன் ஆனான்.


மனதை தெளிய விடுங்கள். கலக்கங்கள் மறையும். அமைதி பிறக்கும்.


https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_20.html

Saturday, October 13, 2018

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்றொன்றினை காணாதே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்றொன்றினை காணாதே 


வீட்டில் சின்ன குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும். சீருடை உடுத்து, பையை தூக்கிக் கொண்டு போவார்கள். அப்படி குழந்தைகளை பள்ளியில் விட்டு விட்டு வரும் பெற்றோர்களுக்கு வரும் வழியில் உள்ள பிள்ளைகளை பார்ப்பார்கள். எல்லா பிள்ளைகளும் , தங்கள் பிள்ளைகளைப் போலவே இருக்கும்.


காதலிப்பவர்களுக்கு தெரியும்...காதலிப்பவர் ஆணாக இருந்தால் ..எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவர்களின் காதலி போலவே தோன்றும். யாராவது பெண் எதிரில் வந்தால், தங்கள் காதலியே வருவது போல இருக்கும்.


இவை மானுட அனுபவங்கள்.


இறை அனுபவங்கள் உள்ளவர்களுக்கு உலகில் எதைப் பார்த்தாலும் இறைவனை பார்ப்பது போலவே இருக்கும். எல்லாம் இறை மயமாகத் தெரியும்.


காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்
கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா - நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா

கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா - நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா - நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா


என்பார்  பாரதியார். காக்கைச் சிறகினிலே, பார்க்கும் மரங்களில், கேட்கும் ஒலியில் எல்லாம், தீயின் சூட்டில் எல்லாம் கண்ணனை கண்டார் பாரதியார்.


"எங்கெங்கும் காணினினும் சக்தியடா தம்பி அவள் ஏழு கடல் அவள் வண்ணமடா" என்பார் பாரதிதாசன்.


மனமெல்லாம் எது நிறைந்திருக்கிறதோ, அதுவே எங்கும் தெரியும்.


பாணாழ்வார் பாடுகிறார்...அவனைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே என்று.


பாடல்



கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் 
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!


பொருள்


கொண்டல் = நீர் கொண்ட மேகம்

வண்ணனைக் = அது போல கரிய வண்ணம் கொண்டவனை

கோவலனாய் = கோகுலத்தில் பிறந்து

வெண்ணெய் = வெண்ணெய்

உண்டவாயன் = உண்ட வாயை உடையவனை

என் உள்ளம் கவர்ந்தானை = என் உள்ளம் கவர்ந்தவனை

அண்டர்கோன் = தேவர்களுக்கு தலைவனை

அணி அரங்கன் = திருவரங்கத்தின்

என் அமுதினை = என் அமுதம் போன்றவனை

கண்ட கண்கள் = கண்ட கண்கள்

மற்றொன்றினைக் காணாதே! = வேறு எதையும் காணாதே

இதில் கடைசி வரிக்கு, "அவனை மட்டுமே பார்க்கும். வேறு யாரையும், எதையும் பார்க்க மாட்டேன் " என்று ஆழ்வார் கூறியதாகத்தான் பல பெரியவர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்.

எனக்கு சற்று வேறு விதமாக தோன்றுகிறது.

ஒரு முறை இறை அனுபவம் பெற்றவர்களுக்கு உலகில் உள்ள அனைத்துமே இறைவனின்  வெளிப்பாடாகவே தோன்றும். எதைப் பார்த்தாலும் அவனாகவே தோன்றுவதால், "அவனை கண்ட கண்கள் மற்றொன்றினை காணாதே" என்று கூறியதாகத்தான் தோன்றுகிறது.

பிள்ளைகளிடம் பெற்றோரின் சாயல் இருக்கும்.

பூனை குட்டி பூனை மாதிரி இருக்கும்.

புளியங்கன்று புளிய மரம் போல இருக்கும்.

இதில் இருந்து ஒன்று தோன்றுகிறதோ, மூலத்தின் சாயல் அதில் இருந்து தோன்றியதில் இருக்கத்தானே  செய்யும்.

இந்த உலகம் எல்லாம் இறைவன் படைத்தது என்றால், இறைவனின் சாயல் அனைத்திலும்  இருக்கும் அல்லவா ?

மலத்தில் இறைவன் இருக்கிறான். அதையும் கும்பிடு என்கிறார் பாரதியார்.  இந்த உலகம்  அனைத்தும் இறைவன் என்றால், மலமும் இறைவன் படைப்புத்தான் , அதிலும் அவன் இருக்கிறான் என்ற மிக உயர்ந்த இறை அனுபவம் அவருக்கு.

கீழான பன்றியில், குப்பை கூளத்தில் இறைவனை கண்டவர் அவர்.

கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்
கீழான்பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.


கழுதை, பன்றி, தேள், கூளம் , மலத்தினையும் வணங்க வேண்டும் என்கிறார்.


சரி இப்படித்தான் பாணாழவார் நினைத்துப் பாடி இருப்பாரா? தெரியாது.


கொண்டல் வண்ணனை என்கிறார்.


கரிய மேகம் என்று பொருள் சொல்லி விடலாம்.


சற்று யோசித்தால் தெரியும்...மேகம் நல்லவன், கெட்டவன் என்று பாகுபாடு பார்ப்பது இல்லை. உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், முட்டாள் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக பெய்கிறது.


அது போல இறைவனுக்கு எந்த பேதமும் இல்லை. எல்லோரும் சமம் அவன் முன்னால் என்பதற்காக "கொண்டல் வண்ணன்" என்று கூறியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.


பாணாழ்வார் பத்து பாடல்கள் பாடி இருக்கிறார். அந்த பத்து பாடல்களை ஆராய்ச்சி செய்து  முனைவர் (doctr ) பட்டம் பெற்று இருக்கிறார்கள். அவ்வளவு அர்த்தம் இருக்கிறது. அவ்வளவு ஆழம்.


படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_13.html


Wednesday, October 10, 2018

திருக்கடைக் காப்பு - சில மந்தி முகில் பார்க்கும்

திருக்கடைக் காப்பு - சில மந்தி முகில் பார்க்கும் 


பாடல்

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.


பொறி என்றால் கருவி. குறிப்பாக எதையும் பிடிக்கும் கருவிக்கு பொறி என்று பெயர். எலிப் பொறி என்றால் எலியை பிடிக்கும் கருவி. பொறி  வைத்து பிடிக்க வேண்டும் என்று சொல்லுவார்கள்.


நமக்கு ஐந்து பொறிகள் இருக்கின்றன. கண், காது, மூக்கு, தோல், வாய் என்ற ஐந்து பொறிகள். இவை ஏன் பொறிகள் என்று அழைக்கப் படுகின்றன? வெளி உலகில் இருந்து வரும் செய்திகளை, உணர்வுகளை பிடிப்பதால். மூக்கு வாசத்தைப் பிடிக்கிறது. கண், காட்சிகளை பிடித்து மூளைக்கு செய்தி அனுப்புகிறது. இப்படி ஒவ்வொரு பொறியும் , ஒவ்வொன்றை பிடிக்கின்றன.


இந்த பொறிகள் பிடித்து அனுப்பும் செய்திகளை அறியும் செயலுக்கு புலன்கள் என்று சொல்லுகிறோம்.


கண் என்ற பொறி செய்யும் செயல் காண்பது.


காது என்ற பொறி செய்யும் செயல் கேட்பது.


இப்படி பொறிகளும் புலன்களும் ஒன்று சேர்ந்து நமக்கு இந்த உலகையும் ஏன் நம்மையும் நமக்கு அறிய உதவுகின்றன.


வயதாகும் போது, எந்த புலன் எந்தப் பொறியில் இருக்கிறது என்று தெரியாது.


கண்ணால் பார்த்து அறிய வேண்டியதை கையால் தொட்டு தொட்டு அறிய முயல்வோம். காதால் கேட்டு அறிய வேண்டியதை எழுதிக் காட்ட வேண்டி இருக்கும்.


புலன்கள் செயல் இழக்கத் தொடங்கும்.


உடம்புக்கு வேண்டிய சக்தியை உணவை உண்டு ஜீரணம் செய்ய முடியாமல், உடம்புக்குள் நேராக ஊசி குத்தி அனுப்ப வேண்டி இருக்கும். இப்படி புலன்கள் எல்லாம் தட்டுத் தடுமாறி தவிப்போம்.


அது மட்டும் அல்ல,


பொறிகளும் புலன்களும் தள்ளாடும் போது அறிவு அழியும். சொன்னது மறக்கும். அறிவை புதுப்பிக்க முடியாது. புது செய்திகள்  மண்டையில் ஏறாது. அறிவு கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கும்.


வாயில் எச்சில் வழியும். அதை தடுத்த நிறுத்த முடியாது.


பரிதாபமாக இருக்கும்.


எல்லோரும் நம்மை வெறுப்பார்கள். எல்லோருக்கும் பாரமாக .இருப்போம். என்ன செய்வது தெரியாமல் தெரியாமல் திகைப்போம்.


யார் நம்மை புரிந்து கொள்ளுவார்கள் ? யார் நமக்கு உதவி செய்வார்கள் என்று தவிப்போம்.


அப்போது....


"அச்சப் படாதே நான் இருக்கிறேன்" என்று சொல்லும் அந்த இறைவன் இருக்கும் கோவில் உள்ள இடம் திருவையாறு.


அந்த திருவையாற்றில், கோவில் பிரகாரத்தில், மத்தளம் முழங்குகிறது. சங்கம் ஒலிக்கிறது. அந்த இசைக்கு ஏற்ப இளம் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள்.


கோவிலிக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, வந்தோமா என்று இல்லாமல் இது என்ன கூத்து, பாட்டு, மோளம் என்று ?


எந்த கலையாக இருந்தாலும் அதை இறைவனுக்கு படைப்பது என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. இசை, நடனம் என்று எந்த கலையாக இருந்தாலும் இறைவனை முன்னிறுத்தி அவனுக்காக செய்வது என்பது ஒரு வழக்கம்.


அப்படி பெண்கள் ஆடிக் கொண்டு வருகிறார்கள்.

அந்த கோவிலில் நந்தவனம் இருக்கிறது. அங்கே பல மரங்கள் இருக்கின்றன. அந்த மரங்களில் குரங்குகள் வசிக்கின்றன.


இந்த மேள சத்தத்தை கேட்டு, சில குரங்குகள் ஏதோ இடி இடிக்கிறது, மழை வருமோ என்று  மரத்தின் மேல் ஏறி மேகங்களை நோட்டம் விட்டனவாம்.


இப்போது பாடலை மீண்டும் பார்ப்போம்


புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட் டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.



பொருள் 


புலனைந்தும் = ஐந்து புலன்களும்

பொறிகலங்கி = தத்தம் பொறிகளில் கலங்கி

நெறிமயங்கி = வழி தெரியாமல் மயங்கி

அறிவழிந்திட்டு = அறிவு அழிந்து

ஐம்மேலுந்தி = ஐ என்றால் வாந்தி. வாந்தி மேல் நோக்கி வந்து

அலமந்த போதாக = பரி தவிக்கும் போது

அஞ்சேலென்று = அஞ்சேல் என்று

அருள்செய்வான் = அருள் செய்வான்

அமருங்கோயில் = இருக்கும் கோவில்

வலம்வந்த = சுற்றி வரும்

மடவார்கள் = இளம் பெண்கள்

நடமாட = நடனம் ஆட

முழவதிர = முழவு அதிர

மழையென்றஞ்சிச் = மழை வருமோ என்று அஞ்சி

சிலமந்தி  = சில குரங்குகள்

அலமந்து = பயந்து

மரமேறி  = மரத்தின் மேல் ஏறி

முகில்பார்க்குந் = மேகத்தை பார்க்கும்

திருவையாறே.= திருவையாரே



சரி குரங்குகள் மரம் ஏறி முகில் பார்த்த வரை சரி. அது என்ன சில மந்தி என்று ஒரு வார்த்தையை திரு ஞான சம்மந்தர் போடுகிறார். எல்லா குரங்குகளும் தானே பார்த்திருக்க வேண்டும் ?


காரணம், அந்த ஊரிலேயே உள்ள குரங்குகளுக்குத் தெரியும் இது மத்தள ஓசை என்று. புதிதாக வந்த குரங்குகள் இன்னும் சரியாக பழகாததால், அவற்றிற்கு தெரியாது. எனவே சில மந்தி என்று கூறினார் என்று விளக்கம் சொல்லுவார்கள்.


அது போகட்டும்.


யோசித்துப் பாருங்கள். வயதாகும். புலன்களும் தள்ளாடும். அறிவு மயங்கும். யாருக்கும் நம்மை பிடிக்காமல் போகும் காலம் ஒன்று வரும்.


அப்போதும் நம்மை வெறுக்காமல் நம்மை ஏற்றுக் கொள்ளுவான் இறைவன் மட்டுமே.


தாய் கூட ஒரு காலம் வரை தான் பால் ஊட்டுவாள், சோறு ஊட்டுவாள்.


அப்புறம் "என்ன தடி மாடு மாதிரி வளந்திருக்க தன்ன தான போட்டு சாப்பிடு" என்று கூறி விடுவாள்.


அவன் தாயினும் சாலப் பரிந்து நமக்கு கடைசி காலம் வரை கூடவே இருப்பவன்.

எனவே தான் மாணிக்க வாசகப் பெருந்தகை கூறினார்

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று.

தாய் கூட ஒரு கால கட்டத்தில் விட்டு விடுவாள். இறைவன் நம்மை விடவே மாட்டான்.

"உன் பற்று அன்றி ஒரு பற்று இல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே " என்று கண்ணீர் விட்டார் பட்டினத்தார்.

மேலே உள்ளது ஞான சம்பந்தரின் உயிர் உருக்கும் பாடல்.

ஒரு பாடலுக்கு, எனக்குத் தெரிந்தவரை இவ்வளவு. மொத்தமும் படித்துப் பாருங்கள்.

இதையெல்லாம் படித்து அனுபவிக்க

மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....



https://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_10.html

Sunday, October 7, 2018

திருவாசகம் - விட்டிடுதி கண்டாய்

திருவாசகம் - விட்டிடுதி கண்டாய்


அது ஒரு அடர்த்த காடு. அதில் தனியாக நீங்கள் போய் கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று ஐந்து பெரிய கரிய மதம் கொண்ட யானைகள் உங்களை வளைத்து விடுகிறது. என்ன செய்வீர்கள்?

எதிர்த்து போராட முடியுமா? ஒரு யானையோடு போரிடுவதே முடியாத காரியம். ஒருவேளை ஒரு யானையை எப்படியாவது சமாளித்து விடலாம் அல்லது அதனிடம் இருந்து தப்பி ஓடி விடலாம் என்றால் இங்கே ஐந்து யானைகள். ஐந்தும் மதம் கொண்ட பெரிய யானைகள்.

சிக்கினால் சட்னி தான்.

நீங்கள் ஒண்ணும் காட்டுக்குப் போகப் போவது இல்லை. யானையும் வரப்போவது இல்லை. ஒரு வேளை அப்படி ஒன்று நடந்தால் என்ன செய்வீர்கள் என்று யோசியுங்கள்.

ஏன் என்றால்....

நீங்கள் அப்படி ஒரு சிக்கலில் நாளும் இருக்கிறீர்கள். யானை பக்கத்திலேயே இருக்கிறது. உங்களுக்குத் தெரியவில்லை. அவை உங்களை தூக்கிப் போட்டு பந்தாடிக் கொண்டிருக்கிறது. அது தெரியாமல் இருக்கிறீர்கள்.

மாணிக்கவாசகர் சொல்லுகிறார்.

"என்னுடைய ஐந்து புலன்களும் பெரிய கரிய யானைகள் போல என்ன மிரட்டுகின்றன...அவற்றிற்கு அஞ்சி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எப்ப  எந்த யானை வந்து என்னை தூக்கிப் போட்டு மிதிக்குமோ தெரியாது...என்னை காப்பாற்று " என்று கதறுகிறார்.

ஆபத்து தெரிந்ததால் அலறுகிறார். நம்மக்குத் தெரியவில்லை....

பாடல்

அடற்கரி போல்ஐம் புலன்களுக் கஞ்சி அழிந்தஎன்னை
விடற்கரி யாய்விட் டிடுதிகண் டாய்விழுத் தொண்டர்க்கல்லால்
தொடற்கரி யாய்சுடர் மாமணி யேசுடு தீச்சுழலக்
கடற்கரி தாய்எழு நஞ்சமு தாக்கும் கறைக்கண்டனே.


பொருள்

அடற்கரி போல் = அடல் + கரி = மிக வலிமையான யானையைப் போல

ஐம் புலன்களுக் கஞ்சி = ஐந்து புலன்களுக்கு அஞ்சி

அழிந்த என்னை = நாளும் அழியும் என்னை

விடற்கரி யாய் = விட்டு விட முடியாதவனே

விட்டிடுதி கண் டாய் = என்னை விட்டு விடாதே

விழுத் தொண்டர்க்கல்லால் = விழுமிய தொண்டர்களுக்கு அல்லாமல்

தொடற்கரி யாய் = மற்றவர்கள் உன்னை நெருங்க முடியாது

சுடர் மாமணியே = சுடர் விடும் மணி போன்றவனே

சுடு தீச்சுழலக் = சுடுகின்ற தீ சுழல

கடற்கரி தாய் = கடல் + அரிதாய் = கடலில் அபூர்வமாக

எழு நஞ்சமு தாக்கும் = எழுந்த நஞ்சை அமுதாக்கியவனே

கறைக்கண்டனே = கண்டத்தில் (கழுத்தில்) கறை உள்ளவனே


இறைவன் விடுவதற்கு அறியதானவன். ஒரு முறை அவனை பிடித்து விட்டால், பின் அவனை விட முடியாது.

அப்படி அவனை கண்டு கொண்டவர்கள் வேறு எதுவும் வேண்டாம், உன்னை பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன் என்று சொல்லுகிறார்கள்.

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

உன்னுடைய பச்சை மேனியும், பவளம் போல் சிவந்த வாயும், தாமரை போல் சிவந்த கண்ணும்...இவற்றை பார்த்துக் கொண்டு இங்கேயே இருந்து விடுகிறேன். அந்த சுவர்க்கம் எல்லாம் வேண்டாம் என்கிறார் ஆழ்வார்.


குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.


என்பார் நாவுக்கரசர்.

குனித்த (வளைந்த) புருவம், கொவ்வை செவ்வாய், அதில் குமிழியிடும் சிறப்பும், குளிர்ந்த சடையும், சிவந்த மேனியில் பால் போன்ற திருவெண்ணீறும், இனிமையாக எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால், மீண்டும் மீண்டும் இங்கு மனிதராக பிறக்கும் வரமே வேண்டும் என்கிறார்.

மணி வாசகர் சொல்கிறார்,  இறைவா உன்னை விட முடியாது என்று.

நாளும் ஐந்து புலன்களுக்கு அஞ்சி வாழ்கிறேன். என்னை இந்த பயத்தில் இருந்து காப்பாற்று என்கிறார்.

அவரால் காப்பாற்ற முடியுமா ?

முடியும் என்றும் சொல்கிறார்.

தேவர்களும் அசுரர்களும் பாற் கடலை கடைந்த போது கொதிக்கும் கொடுமையான நஞ்சு வந்தது. அந்த நஞ்சையே அமுதமாக எண்ணி உண்டு அதனால் கழுத்தில் கரிய கறை கொண்டவனே, அவ்வளவு பெரிய ஆபத்தையே நீ எளிதாக சமாளித்து விட்டாய். என்ன காப்பதா பெரிய பிரமாதம் உனக்கு என்று ஆண்டவனுக்கு ஐஸ் வைக்கிறார்.

இறைவனை எப்படி அடைவது என்றும் இடையில் சொல்லுகிறார். புத்தகங்களை படித்து , ஆராய்ந்து, தர்க்கம் பண்ணி புத்தியால் அவனை அடைய முடியாது. மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவன்.

சித்தமும் செல்லா சேயோன் காண்க

என்பார் மணிவாசகர். சித்தத்தால் அவனை அறிய முடியாது.


"விழுத் தொண்டர்க்கல்லால் தொடற்கரி யாய்" தொண்டு செய்வதன் மூலம், பக்தியின் மூலமே அவனை அடைய முடியும் என்கிறார்.

இறைவனைத் தவிர வேறு யாரும் நம்மை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்ற முடியாது என்றும் சொல்லாமல் சொல்கிறார்.

நீத்தல் விண்ணப்பம் நூறு பாடலைகளை கொண்டது. மூல நூலை படித்துப் பாருங்கள். வேறு எதையும் படிக்கத் தோன்றாது.

http://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post_7.html

Friday, October 5, 2018

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஓர் அடியானும் உளன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஓர் அடியானும் உளன் 


தினமும் நூற்றுக் கணக்கான பேர் கோவிலுக்குப் போகிறார்கள். வருகிறார்கள்.

கோவிலில் என்ன செய்கிறார்கள் ?

ஆண்டவா, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு என்று வேண்டுவார்கள்.

அல்லது

என்னை இந்த சோதனையில் இருந்து காப்பாத்து, எனக்கு ஏன் இந்த சோதனை என்று அவனிடம் முறை இடுவார்கள்.

அல்லது

இன்னும் சில பேர் சொல்லக் கூடும்,  "நான் அப்படி எல்லாம் இல்லை...நான் கோவிலுக்குப் போனால் இறைவனுக்கு நன்றி சொல்லி விட்டு வருவேன்...எவ்வளவோ எனக்கு கிடைத்து இருக்கிறது. அனைத்துக்கும் நன்றி சொல்வேன்" என்று பெருமிதமாகச் சொல்வார்கள்.

எல்லாம் சுயநலம் தானே ?

நம்மாழ்வார் கேட்கிறார், யாராவது ஒருத்தர் , உலகில் எவ்வளவோ பேர் துன்பப்  படுகிறார்கள். அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை பண்ணியது உண்டா என்று ?

நம் கவலைதான் நமக்கு பெரிதாக தெரிகிறது. நம்மை விட ஆயிரம் மடங்கு கவலை உள்ளவர்கள் எவ்வளவோ பேர் இருப்பார்கள், சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், உயிருக்கு போராடிக் கொண்டு, நெருங்கிய உறவுகள் மருத்துவமனையில் நோயோடு துன்பப் பட்டுக் கொண்டு, நாளை என்ன ஆகப் போகிறதோ என்ற பயத்தோடு எவ்வளவு பேர் எவ்வளவு துன்பம் அனுபவிக்கிறார்கள்.  அவர்களுக்காக நாம் ஒரு கணம் பரிந்து இறைவனிடம்  வேண்டுகிறோமா ? நாம் மற்றவர்களுக்கு இரங்கா விட்டால், இறைவன் நம் மேல் எப்படி இரக்கம் கொள்ளுவான் ?

ஆழ்வார், திருவண்பரிசாரம் என்ற ஊரில் இருக்கிறார். அந்த ஊரில் நிறைய பேர் கோவிலுக்கு போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். ஒருத்தராவது பெருமாளிடம் போய் "பெருமாளே, உம்மை காண வேண்டும், உம்மோடு இருக்க வேண்டும்   என்று துடித்துக் கொண்டு ஒருவன் வெளியே இருக்கிறான். அவனுக்கு அருள் செய்யும் " என்று எனக்காக வேண்டுவார் யாரும் இல்லையே. அவர்கள் பாட்டுக்கு வருகிறார்கள், போகிறார்கள். அவர்கள் வேலையை பார்த்துக் கொண்டு போகிறார்கள் என்று வருந்துகிறார்.

பாடல்

வருவார் செல்வார்*  வண்பரிசாரத்து இருந்த*  என் 
திருவாழ்மார்வற்கு*  என்திறம் சொல்லார் செய்வதுஎன்*
உருவார் சக்கரம்*  சங்குசுமந்து இங்குஉம்மோடு* 
ஒருபாடுஉழல்வான்*  ஓர்அடியானும் உளன்என்றே.  

பொருள்


வருவார் = (கோவிலுக்கு) வருகிறார்கள்

செல்வார் = செல்கிறார்கள்

வண்பரிசாரத்து = வண்பரிசாரம் என்ற திருத்தலத்தில்

இருந்த = எழுந்து அருளி இருக்கும்

என் = என்னுடைய

திருவாழ்மார்வற்கு = திருமகள் இதயத்தில் வசிக்கும் திருமாலுக்கு

என்திறம் = என்னுடைய  நிலைமையை

சொல்லார் = சொல்ல மாட்டார்கள். சொல்லாமல் பின் அவர்கள்

செய்வதுஎன் = வேறு என்னதான் செகிறார்கள்

உருவார் சக்கரம் = அழகிய உருவான சக்கரம்

சங்கு = சங்கு

சுமந்து = கைகளில் ஏந்தி

இங்கு உம்மோடு = இங்கு உம்மோடு

ஒருபாடுஉழல்வான் = இருக்க அலை பாயும், தவிக்கும்

ஓர்அடியானும் = ஒரு அடியவன் ஒருவன்

உளன் என்றே = இருக்கிறான் என்று

எனக்காக அந்தப் பெருமாளிடம் சொல்லுங்கள் என்று சொல்லுகிறார்.

சங்கதி அது அல்ல.

அவருக்கு இறைவனிடம் போக நாம் யார் இடையில். அவர் சொல்ல வருவது என்ன என்றால்,

முதலாவது, உலகில் எவ்வளவோ பேர் மிக துன்பப் படுகிறார்கள். அவர் களுக்காக பெருமாளிடம்  வேண்டிக் கொள்ளுங்கள்

இரண்டாவது, மற்றவர்களுக்காக இரக்கம் கொள்ளுங்கள்

மூன்றாவது, எப்போதும் சுயநலமாக எனக்கு எனக்கு என்று இருக்காதீர்கள்.

நான்காவது, மற்றவர்கள் துன்பத்தைப் பார்க்கும் போது , நம் துன்பம் பெரிது அல்ல என்று தெரியும். அப்படி தெரியும் போது , அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றும். அது மட்டும் அல்ல, நமக்கு இவ்வளவு கிடைத்தே, இதெல்லாம் கிடைக்காமல் எவ்வளவு பேர் துன்பப் படுகிறார்கள். அவர்களுக்கு ஒரு சந்தோஷம் வரட்டும் என்று நெஞ்சார நினைக்கத் தோன்றும்.

ஐந்தாவது, எல்லாவற்றிற்கும் மேலாக, இறைவனை சென்று அடையும் போது , நாம் மட்டும் போனால் போதாது. மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு போக நினைக்க  வேண்டும். இராமானுஜர் அப்படித்தான் நினைத்தார். எல்லோருக்கும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் என்று நினைத்தார்.

"சேர வாரும் ஜெகத்தீரே" என்று உலகில் உள்ள அனைவரையும் அழைத்தார் தாயுமானவர்.

 "தலைவர் அன்னவருக்கே சரண் நாங்களே" என்றது எல்லோரையும் அவன் திருவடிகளில்  சரணம் அடைய வைத்தார் கம்ப நாட்டாழவார்.

அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது தனியாகப் போகாதீர்கள். யாரையாவது கூட அழைத்துக் கொண்டு போங்கள்.

உங்களுக்காக மட்டும் பிரார்த்தனை பண்ணாதீர்கள். எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை பண்ணுங்கள்.

அது ஆழ்வார் காட்டிய நெறி.

http://interestingtamilpoems.blogspot.com/2018/10/blog-post.html