Thursday, December 30, 2021

திருக்குறள் - பற்றற்றெம் என்பர்

திருக்குறள் - பற்றற்றெம் என்பர்


செல்வத்தை ஈட்டுவது, சேமிப்பது, செலவழிப்பது என்ற மூன்றையும் திறம்பட செய்பவர்கள் வெகு சிலரேhi.


சிலர் பணம் சம்பாதிப்பதில் திறமை உள்ளவர்களாக இருப்பார்கள். அதை சரிவர பாதுக்காக, முதலீடு செய்து அதை விருத்தி செய்ய, நல்ல வழியில் செலவழிக்க...அதெல்லாம் தெரியாது.


சிலர் நன்றாக செலவழிப்பார்கள். சில சமயம் கடன் வாங்கிக் கூட செலவழிப்பார்கள். செல்வம் சேர்க்க, முதலீடு செய்யத் தெரியாது. 


அதெல்லாம் சரி, 


வள்ளுவர் சொல்கிறார், " பணத்தை கஷ்டப்பட்டு சம்பாதித்து, அதை மேலும் துன்பப்பட்டு காவல் செய்து பின்னால் எனக்கு யாரும் துணை இல்லை என்று வருந்துவார்கள். யார் வருந்துவார்கள்? பணத்தை விருந்தோம்பலில் செல்வழிக்காதவவ்ர்கள்" என்று.


பாடல் 


 பரிந்தோம்பிப் பற்றற்றெம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_30.html


(Please click the above link to continue reading)



பரிந்தோம்பிப்  = வருந்தி, பாதுகாத்து 


பற்றற்றெம் = துணை இல்லை 


என்பர் = என்று சொல்லுவார்கள் 


விருந்தோம்பி = விருந்தைப் போற்றி 


வேள்வி தலைப்படா தார் = விருந்து என்ற அந்த வேள்வியை செய்யாதவர்கள். 


பணம் இருக்கும் போது நண்பர்களையும், சுற்றத்தையும் அழைத்து, அவர்களோடு ஒன்றாகக் கலந்து, அளவளாவி, உண்டு மகிழ்ந்து இருக்கத் தெரியாதவர்கள், இருக்கின்ற பணத்தை எல்லாம் எதெதிலோ முதலீடு செய்து, இறக்கும் தருவாயில், அல்லது இறுதிக் காலத்தில் யாருடைய துணையும் இல்லாமல் தனித்து வருந்துவார்கள். 


பணம் இருக்கும் போது சுற்றமும் நட்பும் சூழ வாழாவிட்டால், இறுதிக் காலத்தில் யார் கூட இருப்பார்கள்? 


விருந்தோம்பலில் ஒரு சுயநலமும் இருக்கிறது. 




Wednesday, December 22, 2021

திருக்குறள் - வேள்விப் பயன்

 திருக்குறள் - வேள்விப் பயன் 


விருந்தைப் போற்றுவதால் இம்மை மறுமை பயன்கள் பற்றி கூறினார். 


பயன் என்றால் எவ்வளவு என்று சொல்ல வேண்டும் அல்லவா. சம்பளம் தருகிறேன் என்றால் எவ்வளவு சம்பளம் என்று சொல்ல வேண்டும் அல்லவா? 


வள்ளுவர் சொல்கிறார், "விருந்தின் பயன் இவ்வளவு என்று அறுதி இட்டு கூற முடியாது. அது சொல்லில் அடங்காத அளவுக்கு பெரியது" என்கிறார்.


பொதுவாக வள்ளுவர் பெரியது என்றால் மலை போன்றது, கடல் போன்றது, பனை போன்றது என்று கூறுவார். விருந்தின் பயன் என்பது இவ்வளவு என்று கூற முடியாது, மிகப் பெரியது, அதற்கு ஒரு உதாரணம் கூட சொல்ல முடியாது என்கிறார். 


பாடல் 




இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_22.html


(Please click the above link to continue reading)


இனைத் = இன்ன, இவ்வளவு 


துணைத்து = அளவுடையது 


என்பது ஒன்று இல்லை = என்று சொல்லும் அளவுக்கு ஒன்று இல்லை. உதாரணம் சொல்ல ஒன்றும் இல்லை 


விருந்தின் = விருந்தைப் பேணுவதின் 


துணைத்துணை = உதவிய அளவு 


வேள்விப் பயன் = வேள்வியின் பயன் 


நமக்கு பொதுவாக வேள்வி என்றால் ஏதோ பூஜை சம்பந்தப் பட்டது என்றுதான் தெரியும்.  


ஐந்து விதமான வேள்விகள் இருக்கின்றன. 

கடவுள் வேள்வி, 

பிரம வேள்வி, 

பூதவேள்வி, 

மானிட வேள்வி, 

தென்புலத்தார் வேள்வி


வேள்வி என்றால் இன்னொரு உயிருக்கு பலன் தருவது. 


கடவுள் வேள்வி - இறைவனுக்கு செய்வது 


பிரம வேள்வி - வேதம் முதலிய அறிவு பொக்கிஷங்களை நமக்குத் தந்த ரிஷிகள், பெரியவர்களுக்கு செய்யும் நன்றி. வள்ளுவருக்கு நீங்கள் ஒரு பூ போட்டால் அது பிரம வேள்வி. 


பூத வேள்வி - பஞ்ச பூதங்களுக்கு செய்யும் வேள்வி. நீர், ஆகாயம், தீ போன்ற பூதங்களுக்கு நன்றி சொல்வது. அவற்றின் உதவியை நாடுவது. அவற்றின் மூலம் தீங்கு வரமால் இருக்க பிரார்த்தனை செய்வது. இரண்டு மூணு வருடம் மழை என்றால் எவ்வளவு பூஜை செய்கிறார்கள்?  பக்கத்து ஊரில் நில நடுக்கம் வந்தால் "ஆண்டவா, என் பிள்ளைகளுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது" என்று  பிரார்த்தனை செய்வது பூத வேள்வி. 


மானிட வேள்வி - மனிதர்களுக்கு செய்வது. 


தென் புலத்தார் வேள்வி - நம் முன்னோர்களுக்கு செய்வது. 


விருந்தோம்பல் என்பது மனித வேள்வி. அந்த வேள்வியின் பயன் இவ்வளவு என்று உதாரணம் கூற முடியாது என்கிறார். 




Sunday, December 19, 2021

திருக்குறள் - சுவர்க்கம் செல்ல எளிய வழி

திருக்குறள் - சுவர்க்கம் செல்ல எளிய வழி 


சொர்கத்திற்கு போக வேண்டும் என்று விரும்பாதார் யார்? அல்லது நரகத்துக்கு போக வேண்டும் என்று விரும்புவர் யார்? 


இதை எல்லாம் நம்பாதவர்களை விட்டு விடுவோம். நம்புபவர்களைப் பற்றி பேசுவோம். 


எப்படி சொர்க்கம் போவது?


நிறைய சாமி கும்பிடணுமா? கோயில், குளம் னு திரியனுமா? பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்யனுமா? இருக்கிற ஆன்மீக புத்தகம் எல்லாம் படிக்கணுமா?  எல்லாவற்றிலும் ஏதோ கொஞ்சம் செய்கிறோம். நம் சக்திக்கு ஏற்றவாறு. அது போதுமா? 


"நீ செஞ்ச புண்ணியத்துக்கு ஒரு அஞ்சு ஆறு வருஷம் சொர்கக்த்தில இருந்திட்டு போ" ன்னு சொல்லிட்டா என்ன பண்றது? திருப்பியும் வந்து பிறக்கனுமா? 


சரி, எப்படியோ தத்தி முத்தி போய் விட்டோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மை அங்கே ஏற்றுக் கொள்வார்களா? நம்மை விட பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் அங்கே இருப்பார்கள். நம்மை யார் மதிக்கப் போகிறார்கள். 


பெரிய ஞானிகள், சமூக சேவகர்கள், நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள், பிறர் துன்பம் தீர்த்தவர்கள் என்று எவ்வளவோ பெரிய ஆட்கள் எல்லாம் இருப்பார்கள். நாம் ஒரு மூலையில் போய் இருந்து கொள்ள வேண்டியது தான். 


அது தேவையா நமக்கு? 


வள்ளுவர் சொல்கிறார், சொர்கத்திற்கு போகும் வழி மட்டும் அல்ல. அங்கே போகும் போது தேவர்கள் எல்லாம் சொர்கத்தின் வாசலில் நின்று நம்மை வரவேற்கவும் செய்வார்கள். அதுக்கு ஒரு வழி இருக்கிறது என்கிறார். 


மிக மிக எளிமையான வழி. 


"வீட்டுக்கு வந்து பின் செல்கின்ற விருந்தினர்களை போற்றி வழி அனுப்பிவிட்டு, அடுத்த விருந்தினர் எப்போது வருவார் என்று எதிர் பார்த்து காத்திருப்பவன் சொர்க்கம் கட்டாயம் போவது மட்டும் அல்ல, அவன் போகும் போது அவனை அங்குள்ள தேவர்கள் ஒரு விருந்தினனை போல வரவேற்பார்கள்" என்கிறார். 


பாடல் 


செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_19.html


(Please click the above link to continue reading)



செல்விருந்து ஓம்பி = செல்கின்ற விருந்தை போற்றி வழி அனுப்பிவிட்டு 


வருவிருந்து = இனி அடுத்து எப்போது விருந்து வரும் என்று 


பார்த்திருப்பான் = காத்து இருப்பவன் 


நல்விருந்து = நல்ல விருந்தினன் ஆவான் 


வானத் தவர்க்கு = தேவர்களுக்கு 


"நல் விருந்து" என்றால் மிக முக்கியமான விருந்தினர் என்று பொருள். நம் வீட்டுக்கு இந்த நாட்டின் பிரதமர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம், அது "நல் விருந்து".  அது போல சென்ற விருந்தை போற்றி, வரும் விருந்துக்காக காத்திருப்பவன், வானில் உள்ள தேவர்களுக்கு "நல் விருந்து". 


காத்து கிடப்பார்களாம். ஒரு பிரதம மந்திரி வருகிறார் என்றால் வீட்டை எப்படி அலங்கரிப்போம். எப்படி பரபரப்பாக இருக்கும்.  அது போல நாம் வருவதை எதிர் பார்த்து அவர்கள் இருப்பார்களாம்.


எவ்வளவு எளிமையான வழி. 


இது விருந்தின் மறுமைப் பயன் பற்றி கூறியது. 


வள்ளுவர் எதைக் கூறினாலும் இம்மை, மறுமை பயன்கள் பற்றி கூறுவார். 


முந்தைய குறள்களில் இம்மைப் பயன் பற்றி கூறினார்.


இந்தக் குறளில் மறுமை பயன் பற்றிக் கூறுகிறார். 


விருந்து அவ்வளவு உயர்ந்தது.




Tuesday, December 14, 2021

திருக்குறள் - விதைக்காமல் விளையும் பயிர்

திருக்குறள் - விதைக்காமல் விளையும் பயிர் 


நேரடியாக புரிந்து கொள்ள முடியாத குறள்களில் இதுவும் ஒன்று. 


"விருந்தினர்களை போற்றி, அவர்களுக்கு உணவு அளித்து அதில் உள்ள மிச்சத்தை உண்பவன் நிலத்தில் விதை போடவும் வேண்டுமா? என்று குறள் கேட்கிறது. 


வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்?


விதை போடாமலேயே அவன் நிலத்தில் பயிர் விளையும் என்கிறார். 


பாடல் 


வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சின் மிசைவான் புலம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_14.html


(Please click the above link to continue reading)



வித்தும் = விதையும் 


இடல்வேண்டும்  = இட வேண்டுமா? நட வேண்டுமா? 


 கொல்லோ  = அசைச் சொல் 


விருந்தோம்பி = விருந்தைப் போற்றி 


மிச்சின் = மிச்சம் இருப்பதை 


மிசைவான் = உண்பவன் 


புலம் = தோட்டம், வயல், நிலம் 


வீட்டுக்கு வந்த விருந்தினர்களை உபசரித்து, அவர்கள் உண்டது போக மிச்சம் இருப்பதை உண்டு வாழ்பவன் வீட்டுத் தோட்டத்தில் விதை போடாமலேயே பயிர் வளரும் என்கிறார். 


அது எப்படி என்று சொல்லவில்லை. பல உரை ஆசிரியர்கள் உரை செய்தாலும் யாரும் அது எப்படி என்று சொல்லவில்லை. பரிமேலழகரும் சொல்லாமல் மேலே சென்று விடுகிறார். 


ஒன்று, ஒரு அழகுக்காக, மிகுதியாக சொல்லி இருக்கலாம். நிலா போல முகம் என்று கூறுவது இல்லையா. 


அல்லது, ஏதோ ஒரு ஆழ்ந்த பொருள் இருக்கலாம், நமக்குத் தெரியவில்லை. 


அல்லது, ஏதேனும் எழுத்து அல்லது சொல் காலப் போக்கில் மாறி இருக்கலாம். நமக்குத் தெரியவில்லை. 


எப்படியாக இருந்தாலும், விருந்தை உபசரிப்பதன் இம்மைப் பலன் பற்றி கூறுகிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 


மேலே செல்வோம். 




Wednesday, December 8, 2021

திருக்குறள் - நல்விருந்து ஓம்புவான் இல்

திருக்குறள் -  நல்விருந்து ஓம்புவான் இல்


விருந்தினர்களை உபசாரம் செய்தால், அதனால் வறுமை வராது, வாழ்க்கை பாழ் படாது என்று முந்தைய குறளில் பார்த்தோம். 


அது எப்படி என்ற கேள்வி வரும் அல்லவா?


அது ஒரு பக்கம் இருக்கட்டும். 


நம்மிடம் உதவி கேட்டு நமக்குத் தெரிந்தவர் ஒருவர் வருகிறார். அவர் கூடவே தன் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு வருகிறார். "என் பையனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் பணம் கட்ட வேண்டும். கையில் காசு இல்லை. நீங்கள் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?" என்று நம்மிடம் கேட்கிறார். நாமும் அவருக்கு உதவி செய்கிறோம். ஆறு மாதம் கழித்து, அதே பையனை அழைத்துக் கொண்டு வருகிறார். "சார், நீங்க செஞ்ச உதவியால என் பையனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. முதல் ஆறு மாதத்தில் ஐந்து பேப்பரில் அவன் வகுப்பில் முதலாதவாக வந்து இருக்கிறான். அதான் உங்களைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு, இனிப்பும் கொடுத்து விட்டு போகலாம் என்று வந்தேன்" என்கிறார். அந்தப் பையனும் பெட்டியை திறந்து நமக்கு இனிப்பை வழங்குகிறான், நமக்கு சந்தோஷம். அவர் மேலும் உதவி கேட்டாலும் செய்ய தயாராக இருப்போம். 


அதே மாதிரி இன்னொரு நண்பர். ஆறு மாதம் கழித்து வருகிறார். "என்ன சார் செய்றது. பையன் படிக்க மாட்டேன் என்கிறான். எப்ப பாரு வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறான். புகை பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களும் படித்து விட்டான்" என்று வருத்தப் படுகிறார். அவர் மேலும் உதவி கேட்டால் நாம் செய்வோமா? செய்ய மாட்டோம் அல்லவா? 


அதாவது நாம் கொடுத்த பணத்தை நல்ல வழியில் செலவழித்து ஒருவன் முன்னேறுகிறான் என்றால் நாம் மேலும் மேலும் உதவி செய்யத் தயாராக இருப்போம். 


மாறாக, நம்மிடம் பெற்ற உதிவியை ஒருவன் தவறான வழியில் செலவழித்தால் நாம் மேலும் உதவி செய்ய மாட்டோம் அல்லவா?


வள்ளுவர் கூறுகிறார், "நீ செல்வதை நல்ல வழியில் விருந்தினர்களை உபசரித்தால், திருமகள் உன் மீது அன்பு கொண்டு, நாம் அவனுக்கு கொடுத்த செல்வதை நல்ல வழியில் செலவழிக்கிறான். அவனுக்கு மேலும் கொடுப்போம் என்று நினைப்பாள். மாறாக, நாம் கொடுத்த செல்வதை எல்லாம் இவன் யாருக்கும் கொடுக்காமல் பெட்டியில் வைத்து பூட்டி வைத்து இருக்கிறான். இவனுக்கு செல்வம் தந்தால் அது அவனுக்கும் பயன் இல்லை. வேறு யாருக்கும் பயன் இல்லை. எதுக்கு இவனுக்கு தர வேண்டும் என்று தராமல் இருந்து விடுவாள்" என்கிறார். 


பாடல் 



அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_8.html


(please click the above link to continue reading)


அகனமர்ந்து =அகத்தில் அமர்ந்து; வீட்டில் இருந்து 


செய்யாள் = திருமகள் 


உறையும் = நிரந்தரமாக வசிப்பாள் 


முகனமர்ந்து =  முகம் மலர்ந்து 


நல்விருந்து  = நல்ல விருந்தினை 


ஓம்புவான் இல். = போற்றுபவன் இல்லத்தில் 


ஒருவன் நல்ல விருந்தை போற்றுவான் என்றால், அவன் வீட்டில் இலக்குமி நிரந்தரமாக வாசம் செய்வாள். அவனுக்கு ஒரு குறையும் வராது


சரி வள்ளுவரே சொல்லிவிட்டார் என்று, தினமும் நண்பர்களை அழைத்து வந்து, தண்ணி, குடி, புகை பிடித்தல் என்று கும்மாளம் போட்டால் திருமகள் இருப்பாளா ? அவர்களும் விருந்தினர்கள் தானே?


வள்ளுவர் கூறுகிறார் "நல் விருந்து". 


நல்ல விருந்தை. அது என்ன நல்ல விருந்து?


ஞான மற்றும் ஒழுக்கங்களில் உயர்ந்து நிற்றல் என்று உரை கூறுகிறார் பரிமேலழகர். 


அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்களை விருந்தினர்களாகப்  பெற்றவன் எப்படி இருப்பான்?


அவர்கள் அறிவில் உயர்ந்தவர்கள். அவனுக்கு நல்லவற்றை எடுத்துச் சொல்லுவார்கள், பணத்தை இதில் முதலீடு செய், இதில் முதலீடு செய்யாதே, இதை உண், இது உடம்புக்கு நல்லது, அது நல்லது இல்லை என்று அவனுக்கு வேண்டிய அனைத்து நல்லவைகளும் இலவசமாக கிடைக்கும் அல்லவா? ஒரு பிரச்னை என்றால் அவர்களிடம் யோசனை கேட்கலாம். சிறந்த யோசனை தருவார்கள். அது அவன் மேலும் சிறக்க உதவும். 


எனவே ஞான, ஒழுக்கங்களில் உயர்ந்தவர்களை விருந்தாகப் பெற்று அவர்களை போற்றுபவன் இல்லத்தில் திருமகள் எப்போதும் இருப்பாள் என்றார்.


விருந்தோம்பல் மூலம் வாழ்வு சிறக்க எப்படி ஒரு எளிய வழியை சொல்லித் தருகிறார் வள்ளுவர். 


பூஜை செய்யும் போது அவருக்கு ஒரு பூ போட்டு வணங்க வேண்டாமா?




Saturday, December 4, 2021

திருக்குறள் - விருந்து ஓம்புவான் பாழ் படுதல் இல்லை

 திருக்குறள் - விருந்து ஓம்புவான் பாழ் படுதல் இல்லை 


நமக்கு வரும் வருமானம் நமக்கே போத மாட்டேன் என்கிறது. வீட்டுக் கடன்,  பிள்ளைகளின் படிப்புச் செலவு, அவர்களின் திருமணச் செலவு, எதிர்காலத்திற்கு என்று சேமிக்க வேண்டிய கட்டாயம் என்று பார்த்தால் நம் வருமானம் நமக்கு கட்டுபடி ஆவதில்லை. இதில் எங்கிருந்து விருந்தினரை உபசரிப்பது?



ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்தால் சரி. இதே வேலையாக ஓயாமல் வந்து கொண்டிருந்தால் நம்மால் தாங்க முடியுமா? வசதி வேண்டாமா? 


வள்ளுவருக்கு என்ன சொல்லிவிட்டுப் போய் விடுவார். நடைமுறை சாத்தியம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா? 


இப்படி எல்லோருக்கும் தோன்றுவது இயல்பு. வள்ளுவர் காலத்திலேயே இந்த கேள்வி எழுந்திருக்கிறது. 


வள்ளுவர் சொல்கிறார் 


"...என்ன சொல்கிறாய்? விருந்து உபசரித்தால் ரொம்ப செலவு ஆகி எழ்மையாகி விடுவேன். அதனால் பல துன்பங்கள் வரும் எனவே விருந்தோம்பல் என்பதற்கெல்லாம் ஒரு வரை முறை, ஒரு எல்லை, ஒரு வரம்பு வேண்டும் என்கிறாயா...நான் சொல்கிறேன் கேள் நீ எப்போதும் விருந்தை உபசரித்துக் கொண்டிருந்தால் உன் வாழ்வில் துன்பமே வராது "


என்று


பாடல் 


வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_4.html


(click the above link to continue reading)



வருவிருந்து = வருகின்ற விருந்தை 


வைகலும் = தினமும் 


ஓம்புவான் = போற்றுவான் 


வாழ்க்கை = அவனது வாழ்கை 


பருவந்து = துன்பம் அடைந்து 


பாழ்படுதல் இன்று = பாழ்படுதல் இல்லை 


நீ விருந்தை உபசரித்தால் பெரிய பணக்காரன் ஆகி விடுவாய் என்று சொல்லவில்லை. 


உனக்கு துன்பம் வராது. உன் வாழ்கை பாழாகாது என்கிறார். 


இதை எப்படி ஏற்றுக் கொள்வது? வள்ளுவர் சொல்கிறார் என்பதற்காக ஏற்றுக் கொள்ள முடியுமா? 


இப்படி சிந்திப்போம். 


முதலாவது, விருந்தை உபசரிக்க வேண்டும் என்று நினைப்பவன், அதற்கான பொருளை கட்டாயம் தேடுவான். நமக்கு ஒரு பிள்ளை கூட இருந்தால் அதற்கும் சேர்த்து சம்பாதிப்போமா மாட்டோமா? எனவே, அவன் எப்போதும் முயற்சி உடையவனாக இருப்பான்.  எனவே அவனுக்கு பொருள் சேரும். துன்பம் வராது. 


இரண்டாவது,  அவனுடைய பரோபோகாரம் கண்டு மற்றவர்கள் அவனுக்கு முடிந்தவரை உதவி செய்வார்கள். இப்போது கூட நாம் காணலாம், "இந்த பொருளின் விற்பனையில் இத்தனை சதம் தர்ம காரியங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும்" என்று விளம்பரம் செய்கிறார்கள். அது நட்டம் தான். இருந்தும், பலர் அதன் காரணமாக அந்தப் பொருளை வாங்குவார்கள். அதனால் அந்த நிறுவனத்துக்கு நிகர இலாபம் கிடைக்கும். 


மூன்றாவது, எல்லோரையும் நன்றாக உபசரிப்பவனுக்கு ஒரு தீங்கு வந்தால் மற்றவர்கள் வந்து கை கொடுப்பார்கள். "அவனா, சரியான கஞ்சன். எச்சில்  கையால் காக்காய் ஓட்ட மாட்டான்" என்று பெயர் எடுத்தவனுக்கு ஒரு துன்பம் என்று வந்தால் யார் முன் வந்து உதவி செய்வார்கள்? யாரும் செய்ய மாட்டார்கள்.  எனவே விருந்தை போற்றுபவனுக்கு துன்பம் வந்தாலும் மற்றவர்கள் உதவியால் விலகும் என்பதால் "பருவருதல் இல்லை" என்றார்.


நான்காவது, யாரையும் கிட்ட அண்ட விடாமல் எல்லாம் தனக்கு தனக்கு என்று சேர்த்து வைத்தால், நாளை அவன் பிள்ளைகளும் அவனை பார்த்துத் தான் படிக்கும். எதற்கு பெற்றோருக்கு செய்ய வேண்டும் ? நான் என் மனைவி மக்களை பார்த்துக் கொள்ளவே பணம் இல்லை. இதில் அப்பா அம்மாவை எப்படி வைத்து பார்ப்பது என்ற எண்ணம் அந்தப் பிள்ளையின் மனதில் ஆழத்தில் இருக்கும். பெற்றோரை பார்க்காமல் விடுவான். துன்பம் வந்து சேரும். 


ஐந்தாவது, விருந்தைப் போற்றியவனுக்கு, மறுமையிலும் நன்மை கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.  நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று நம்புவது கடினமா? இல்லையே?


இப்படி பல காரணங்களை நாம் சிந்திக்க முடியும். 


எனவே, விருந்தைப் போற்றியதால் ஒருவன் துன்பப் பட்டு அவன் வாழ்க்கை பாழாகாது என்று கூறுகிறார். 


நாம் யதார்தமாக யோசித்துப் பார்ப்போம். 


விருந்தினர்களை போற்றி ஏழையாகி துன்பப் பட்டவர்கள் என்று யாரையாவது நமக்குத் தெரியுமா? கதையில், வாழ்வில் கேள்வி பட்டதுண்டா? 


"உங்க அப்பா, தாத்தா எல்லாம் எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ செய்திருக்காங்க தம்பி ..." என்று விருந்தோம்பியவனின் பிள்ளையும், பேரப் பிள்ளையும் பயன் பெறுவார்கள். 


அதுதான் யதார்த்தம். 



சிந்திப்போம். 



Friday, December 3, 2021

திருவாசகம் - யாத்திரைப் பத்து - போக விடுமின்கள்

திருவாசகம்  - யாத்திரைப் பத்து - போக விடுமின்கள் 


சின்ன வயதில் ஒரு விதமான உடைகளை அணிந்து இருப்போம். வயதான பின்னும் அதையே அணிய முடியுமா? வயதுக்கு ஏற்ப உடை அணிய வேண்டாமா? 


சிறு வயதில் குச்சி மிட்டாய், போன்ற தின் பண்டங்களை விரும்பி உண்டிருப்போம். வயதாக வயதாக அவற்றில் உள்ள பற்றை விட வேண்டாமா? என்பது வயதிலும் குச்சி மிட்டாய் வேண்டும் என்றால் எப்படி?


உடை, உணவு போல மற்றவற்றையும் நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள். ஒரு வயதில் அது சரி. பின் அதை விடப் பழக வேண்டும். 


நம் சிக்கல் என்ன என்றால், பிள்ளைகளுக்கு சமமாக, பேரப் பிள்ளைகளுக்கு சமமாக நாமும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்கையை வாழ நினைக்கிறோம். 


இயற்கை நமக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. உனக்கு வயதாகிறது. உன் வாழ்வை சீராக்கு என்று. பல் சொத்தை விழுகிறது. பல் விழுந்து விடுகிறது. பொய் பல் கட்டியாவது முறுக்கு சீடை சாப்பிட வேண்டுமா? 


ஏன், சாப்பிட்டால் என்ன? என்று கேட்கலாம்.


பல்லுக்கு பதில் பொய் பல் கட்டி விடலாம். சீரண உறுப்புகளுக்கும் வயதாகுமே. அவைகளும் செயல் இழக்கத் தொடங்குமே. அதற்கு என்ன செய்வது?


உலக பற்றுகளை கொஞ்சம் கொஞ்சமாக விட வேண்டும். போதும், அனுபவித்து ஆகி விட்டது. எவ்வளவு தான் அனுபவித்தாலும் ஆசை தீரப் போவது இல்லை. நெய்யை விட்டா நெருப்பை அணைக்க முடியும். 


பொருள்கள், அனுபவங்கள் மேல் உள்ள பற்றை விட்டு இறை நாட்டம், ஆத்ம முன்னேற்றத்துக்கு முயல வேண்டும். 


நமக்கு இறை நாட்டம் வந்து விட்டால் போதுமா? இறைவனை அடைய முடியுமா? அப்படி என்றால் எல்லோரும் அடைந்து விடுவார்களே. 


மணிவாசகர் சொல்கிறார்...."அதை ஏன் கேட்கிறீர்கள். நம்மை போல மோசமானவர்கள் யாரும் இந்த உலகில் கிடையாது. நம்மை ஆட்கொள்ள அந்த இறைவனே இறங்கி இரங்கி வருகிறான். ஊரில் உள்ளவர்கள் எல்லாம் அவனைப் பார்த்து சிரிக்கிறார்கள். 'உனக்கு என்ன பைத்தியமா..? அவனை போய் ஆட்கொள்ள செல்கிறாயே...நீ எவ்வளவு பெரிய ஆள்...அவன் ஒண்ணுக்கும் உதவாதவன் .. அவனுக்கு அருள் செய்யப் போகிறாயே' என்று இறைவனை பார்த்து எல்லோரும் நகைக்கிறார்கள். இருந்தும் அவன் நமக்கு அருள் செய்ய வருகிறான்" என்று உருகுகிறார் மணிவாசகர்.


நமக்கு அருள் செய்ய வேண்டும் என்று ஒரு நிர்பந்தமும் இல்லை இறைவனுக்கு. அருள் செய்யா விட்டாலும் யாரும் ஏன் என்று அவனை கேட்கப் போவதும் இல்லை. 


இருந்தும் அவன் கருணை, நமக்கு அருள் செய்கிறான். மற்றவற்றை விட்டு விட்டு அவன் தாளைப் பற்றுங்கள் என்கிறார் மணிவாசகர். 


பாடல் 




புகவே வேண்டாம் புலன்களில் நீர்; புயங்கப் பெருமான் பூம் கழல்கள்

மிகவே நினைமின்; மிக்க எல்லாம் வேண்டா; போக விடுமின்கள்;

நகவே, ஞாலத்து உள் புகுந்து, நாயே அனைய நமை ஆண்ட,

தகவே உடையான் தனைச் சாரத் தளராது இருப்பார் தாம் தாமே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_3.html

(please click the above link to continue reading)



புகவே வேண்டாம் புலன்களில் நீர் = நீங்கள் புலன்கள் தரும் இன்பத்தின் பின்னால் போய்த் திரிய வேண்டாம் 


புயங்கப் பெருமான் = பாம்பணிந்த பெருமான் 


பூம் கழல்கள் = பூ போன்ற திருவடிகளை 


மிகவே நினைமின்  = ஆழ நினையுங்கள் 


மிக்க எல்லாம் வேண்டா = மற்றவை எல்லாம் வேண்டாம் 


போக விடுமின்கள் = போகட்டும், விட்டு விடுங்கள் 


நகவே = உலகில் உள்ளவர்கள் சிரிக்க 


ஞாலத்து உள் புகுந்து = இந்த உலகத்தின் உள்ளே வந்து 


நாயே அனைய = நாய் போன்ற 


நமை ஆண்ட = நம்மை ஆட்கொண்ட 


தகவே உடையான் = பெருமை உடையவன் 


தனைச் சாரத் = அவனை சார்ந்தவர்கள் 


தளராது இருப்பார் தாம் தாமே. = ஒரு தளர்ச்சியும் இல்லாமல் அவரவர்கள் இருப்பார்கள். 


இதுவரை நம் பயணம் புலன் இன்பங்களை நாடி சென்று கொண்டு இருந்தது. இனி, அந்தத் திசையை விட்டு இறை நோக்கி நம் பயணம் அமையட்டும் என்கிறார் யாத்திரைப் பத்தில் இரண்டாவது பாடலில் 



Thursday, December 2, 2021

திருக்குறள் - சாவா மருந்தெனினும் வேண்டாம்

திருக்குறள் - சாவா மருந்தெனினும் வேண்டாம் 


உலகில் மூன்று வகையான மருந்துகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். 


நோவா மருந்து 

மூவா மருந்து 

சாவா மருந்து 


என்று மூன்று வகை மருந்துகள் இருக்கிறதாம். நமக்கு நோவா மருந்து மட்டும் தான் தெரியும். எப்போதும் இளமையாக இருபதற்கு ஒரு மருந்து இருந்தால் எப்படி இருக்கும். இளமையாகவும் இருந்து சாகாமலும் இருந்தால் அது எப்படி இருக்கும்? 


ஆசை தான். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சாவா மருந்து என்பதை பொதுவாக அமுதம் என்று சொல்வார்கள். அமுதம் உண்டால் சாவு கிடையாது. 


நமக்கு கொஞ்சம் அமுதம் கிடைத்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நாம் உண்ண தொடங்கும் அந்த நேரத்தில் ஒரு விருந்தினர் வந்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். நாம் என்ன செய்வோம்? 


ஒரே வாயில் அந்த அமுதத்தை உண்டு விட்டு, விருந்தினரை "வாங்க வாங்க " என்று உபசரிப்போம். அப்படிதான் பெரும்பாலானோர் செய்வார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அமுதமே என்றால் கூட, விருந்து வீட்டில் காத்து இருக்க தனித்து உண்பது என்பது கூடாது என்று. 


பாடல் 


விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_2.html


(Please click the above link to continue reading)



விருந்து = விருந்தினர் 


புறத்ததாத் = புறத்தில் இருக்க 


தானுண்டல் = தான் மட்டும் உண்பது 


சாவா மருந்தெனினும்  = சாக மருந்து என்று சொல்லப்படும் அமுதம் என்றாலும் 


வேண்டற்பாற் றன்று. = அது வேண்டுவது/விரும்புவது முறை அன்று 


இதில் சில தர்க்க ரீதியான சிக்கலும், நயமும் இருக்கிறது. 


சரி, விருந்து வந்து விட்டால் என்ன?  உள்ளே தூக்கி வைத்து விட்டு, விருந்தினர் போன பின் உண்ணலாமே என்றால், தனித்து உண்டல் கூடாது என்கிறார். 


சரி, விருந்தினருக்கு கொஞ்சம் கொடுத்து, நாமும் கொஞ்சம் உண்டால் என்ன என்றால், அமுதம் என்பது பெரிய அண்டாவில் கிடைக்கும் பொருள் அல்ல. ஏதோ கொஞ்சம் கிடைத்து இருக்கும். அதை முழுமையாக உண்டால்தான் பலன் கிடைக்கும். விருந்தினர்க்கு கொஞ்சம் கொடுத்து, நாம் கொஞ்சம்உண்டால் இரண்டு பேருக்கும் பலன் இருக்காது. 


அப்படி என்றால் என்ன செய்வது?


வள்ளுவர் சொல்கிறார், "அப்படிப் பட்ட அமுதம் வேண்டாம்" என்று. வேண்டற் பாற்று. 


அமுதத்தை உண்ணா விட்டால் உயிர் போய் விடும். இப்ப இல்லாவிட்டாலும் பின் ஒரு நாள் உயிர் கட்டாயம் போகும். 


உயிரே போனாலும் பரவாயில்லை, விருந்தினர் புறத்து இருக்க நான் மட்டும் தனியாக உண்ண மாட்டேன் என்று இருக்க வேண்டும் என்கிறார். 


அமுதம் என்று ஒன்று இல்லை தான். இது ஒரு இல் பொருள் உவமை தான். 


இருந்தும், எவ்வளவு உயர்ந்த பொருளாக இருந்தாலும், விருந்தினரை வெளியே இருக்க வைத்து விட்டு தான் மட்டும் உண்பது என்பது அறம் அல்ல என்கிறார்.


அமுதமே உண்ணக் கூடாது என்றால் மற்றவற்றைப் பற்றி என்ன சொல்லுவது.


விருந்தோம்பலின் உச்சம் தொட்டுக் காட்டுகிறார் வள்ளுவர். 


விருந்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது நம் பாரம்பரியம். 


முடிந்தவரை எட்டிப் பிடிப்போம். 






Wednesday, December 1, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எண்ணாத பொழுது

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - எண்ணாத பொழுது 


நாம் யாரையெல்லாம் அடிக்கடி நினைக்கிறோம்?


கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உடன் பிறப்பு, சில பல நண்பர்கள் என்று ஒரு கூட்டம் வைத்து இருக்கிறோம்.


அது போக 


பள்ளியில், கல்லூரியில், அலுவலகக்தில், உடன் வேலை செய்பவர்கள், அரசாங்க அதிகாரிகள் என்று கொஞ்சம் பேரை நினைக்கிறோம். 


மேலும் 


தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று எடுத்தால் அரசியல் தலைவர்கள்,  விளையாட்டு வீரர்கள், கொலை கொள்ளை செய்த நபர்கள் என்று பலரை நினைவில் கொண்டு வருகிறது. 


நல்லவர்களை நினைக்கிறோமா? 


நல்லவர்கள் என்றால் யார்?


படித்தவர்கள், நாலு பேருக்கு நல்லது செய்பவர்கள், சுய நலம் இல்லாதவர்கள் என்று கொஞ்ச பேரையாவது நினைக்கிறோமா?


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார், "இறைவனை நினைக்காதவர்களை பற்றி நினைக்காமல் இருப்பதே சுகம்" என்று. 


இறைவன் நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான். அந்த நன்றியை மறந்து அவனை நினைக்காதவர்களை நான் ஏன் நினைக்க வேண்டும். அப்படி நன்றி மறந்தவர்களை நினைக்காமல் இருப்பதே இனிமையான அனுபவம் என்கிறார். 


பாடல் 


மண்ணாடும் விண்ணாடும் வானவரும் தானவரும் மற்றுமெல்லாம்


உண்ணாத பெருவெள்ளம் உண்ணாமல் தான் விழுங்கி உய்யக் கொண்ட,


கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் கழல் சூடி, அவனை உள்ளத்து


எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனியவாறே.




பொருள் 





(Please click the above link to continue reading)


மண்ணாடும் = பூ உலகும் 


விண்ணாடும் = வானுலகமும் 


வானவரும் = தேவர்களும் 


தானவரும் = அசுரர்களும் 


மற்றுமெல்லாம் = மற்றும் உள்ள அனைத்தும் 


உண்ணாத பெருவெள்ளம் = அடங்காத பெரு வெள்ளம் (பிரளயம்) 


உண்ணாமல் = அவர்களை எல்லாம் உண்டு விடாமல் 


தான் விழுங்கி = தானே விழுங்கி, வயிற்றில் வைத்து இருந்து 


உய்யக் கொண்ட, = பின் உமிழ்ந்து அவை பிழைத்து இருக்கும் படி செய்த 


கண்ணாளன் = கண்ணாளன் (என்ன ஒரு அழகான சொல்) 


கண்ணமங்கை நகராளன் = திருக் கண்ணபுரம் என்ற தலத்தில் இருப்பவன் 


கழல் சூடி = திருவடிகளைப் போற்றி 


அவனை உள்ளத்து = அவனை தங்கள் உள்ளத்தில் 


எண்ணாத மானிடத்தை  = நினைக்காத மனிதர்களை 


எண்ணாத போதெல்லாம் = நான் நினைக்காமல் இருக்கும் பொழுது எல்லாம் 


இனியவாறே. = இனிய பொழுதே 


யோசித்துப் பாருங்கள். 


நமக்கு மனதுக்கு பிடித்தவர்களை நினைக்கும் போது நமக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது அல்லவா? 


சில பேரை நினைத்தாலே ஒரு கோபமும், எரிச்சலும், வெறுப்பும் வருகிறது அல்லவா?


இறைவனை நினைக்கும் அடியார்களை விடுத்து மற்றவர்களை நினைக்காமல் இருப்பதே சுகமான அனுபவம் என்கிறார். 


என்ன ஒரு அழகான சிந்தனை. 


கண்டவர்களையும் ஏன் நினைக்க வேண்டும்? 


திருக்குறள் - விருந்தோம்பல் - இல்லறத்தின் நோக்கம்

 திருக்குறள் - விருந்தோம்பல் - இல்லறத்தின் நோக்கம் 


நாம் படித்துக் கொண்டு இருப்பது இல்லறம். 


எதற்காக கல்யாணம், மனைவி, பிள்ளைகள், பொருள் சேர்ப்பது, அதற்காக துன்பப் படுவது என்று இப்படி அல்லாட வேண்டும்? 


பெண் இன்பம் எப்படியோ கிடைத்து விடலாம். 


குழந்தைகள் இல்லாவிட்டால் என்ன? குழந்தைகள் இருந்தாலும், அவர்கள் கொஞ்ச நாள் தான் குழந்தைகளாக இருப்பார்கள். பின் அவர்கள் வளர்ந்த பின், "சிறு கை அளாவிய கூழ்" என்று சொல்லிக் கொண்டு இருக்க முடியுமா? சிறிது காலத்தில் திருமணம் ஆகி போய் விடுவார்கள். 


பின் நாம் தனித்து விடப் படுவோம். 


எதற்கு இதனை பொறுப்புகள், சிக்கல்கள், துன்பங்கள். இவற்றின் பலன்தான் என்ன என்ற கேள்விக்கு வள்ளுவர் விடை தருகிறார். 


இல்வாழ்கை என்பது கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவன் தரும் சுகத்தை பெற்றுக் கொள்ளவோ, அல்லது குழந்தைகளை கொஞ்சி விளையாடவோ அல்ல. 


இல்வாழ்க்கையின் நோக்கம், விருந்தினர்களை போற்றி பேணுவது என்கிறார். 


பாடல் 


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post.html


(please click the above link to continue reading)


இருந்தோம்பி = இருந்து பொருள்களைப் போற்றி 


இல்வாழ்வ தெல்லாம்  = இல்லத்தில் வாழ்வது எல்லாம் 


விருந்தோம்பி = விருந்தினர்களைப் போற்றி 


வேளாண்மை = அவர்களுக்கு உபசாரம் 


செய்தற் பொருட்டு = செய்வதற்காக 


பொருள் சேர்த்து, வீட்டில் மனைவி பிள்ளைகளோடு இருக்கிறாயா? நீ இருப்பதற்கு காரணமே விருந்தினர்களை உபசரிக்கதான். 


இதற்கு பரிமேலழகர் உரையில், 


"மனைவி, பிள்ளை, பொருள் இவ்வளவுதானே...இவற்றை வைத்துக் கொண்டு பேசாமல் காட்டில் போய் இருக்கலாமே? எதற்கு வீடு, ஊரு என்று இருக்க வேண்டும்?" 


இல்லறம் என்றால் அது விருந்தை உபசரிக்கத் தான். இல்லை என்றால் துறவியாகப் போய் விடலாம் என்கிறார். 


என் பொருள், என் மனைவி, என் பிள்ளை எல்லாம் எனக்கு என்று இருப்பதா இல்லறம்? 


மனைவி, பிள்ளைகள் இவர்களைத் தாண்டி, இல்லறம் விரிய வேண்டும். வீடென்றால் நாலு பேர் வந்து போக வேண்டும். சுற்றமும் நட்பும் சூழ இருக்க வேண்டும். 


இல்லறத்தில் இருந்து வீடு பேற்றை பிடிக்க பாலம் போடுகிறார் வள்ளுவர். 


அடுத்த கேள்வி வரும், எதற்காக விருந்தை உபசரிக்க வேண்டும் என்று. அதனால் என்ன பயன் என்று? 


பொறுமை. வள்ளுவர் எதையும் விட்டு வைக்கவில்லை. 


நம்மை கொண்டு போய் பத்திரமாய் கொண்டு போய் சேர்க்கும் வழி அமைத்துத் தருகிறார்.