Sunday, May 31, 2020

கம்ப இராமாயணம் - தகப்பன் பாசம்

கம்ப இராமாயணம் - தகப்பன் பாசம் 


பிள்ளைப் பாசம் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம். அது என்ன தகப்பன் பாசம்.

பிள்ளை, தந்தை மேல் வைத்த பாசம்.

பிள்ளைகளுக்கு அம்மா மேல் அன்பிருற்கும். அது இயற்கை. அப்பா எங்கேயுமே கொஞ்சம் கண்டிப்பானவர்தான். பிள்ளைகளுக்கு அப்பா மேல் மரியாதை இருக்கும். கொஞ்சம் பயமும் இருக்கும். பாசம்?

பாசம் இருக்கும், அது அவ்வளவாக வெளிப்படுவது இல்லை.

பாசத்தை வெளியே காட்டுவது என்பது என்னவோ பலவீனம் என்று ஆண்கள் நினைப்பதாலோ என்னவோ, அப்பா பிள்ளை பாசம் அவ்வளவாக பேசப்படுவது இல்லை. அப்பா மகள் பாசம் உலகறிந்தது. அப்பா மகன் பாசம் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.

இந்திரசித்து.

இராவணனின் மகன்.

தன்னுடைய தந்தை, அம்மாவை விட்டு விட்டு இன்னொரு பெண்ணை கள்ளத் தனமாக கொண்டு வந்து வைத்து இருக்கிறார் என்று தெரியும். அந்தப் பெண் மேல் அப்பாவுக்கு காதல் என்றும் தெரியும்.

இருந்தும், அப்பா மேல் உள்ள வாஞ்சை போகவில்லை. இராவணன் மேல் இந்திரசித்துக்கு அவ்வளவு  காதல்.

போரில் அடிபட்டு , உடல் எல்லாம் புண்ணாகி, இரத்தம் வழிய, உடல் நடுங்க வந்து   நிற்கிறான் இந்திரசித்து.

சாதாரணாமாக  எந்த தநதைக்கும் உடல் பதறுமா இல்லையா? தன் பிள்ளை  இரத்தம் சொட்ட சொட்ட  வந்து நிற்கிறான் என்றால் அதை காணும் தகப்பனின் மனம்  எப்படி இருக்கும்?

இராவணன் பதறவில்லை.  சீதை மேல் உள்ள மோகம்.

இந்திரசித்தனிடம் கேட்கிறான்

" நீ தொடங்கிய வேள்வி முற்றுப் பெறவில்லை என்பதை உன் தோள்களில் உள்ள அம்புகளே சொல்கின்றன. அழிவு இல்லாத உடம்பு தளர்ந்து நடுங்கிக் கொண்டு நிற்கிறாய். கருடனைக் கண்ட பாம்பு போல நடுங்குகிறாய். நடந்தைச் சொல் "

என்று.


பாடல்

தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில்,
                                  நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் 
                                         யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம் குறை அரவம் ஒத்தாய், உற்றது பகர்தி’ என்றான்.


பொருள்


தொடங்கிய வேள்வி = நீ தொடங்கிய வேள்வி

முற்றுப் பெற்றிலாத் தொழில்  = நல்லபடியாக நிறைநேரவில்லை என்பதை

நின் தோள்மேல் = உன்னுடைய தோள்களில்

அடங்கிய அம்பே = குத்தி இருக்கும் அம்புகளே

என்னை அறிவித்தது; = என்னிடம் சொல்கின்றன

அழிவு இல்  = அழிவு அற்ற

யாக்கை = உடம்பு

நடுங்கினை போலச்  = நடுக்கம் கொண்டு இருக்கிறாய்

சாலத் தளர்ந்தனை; = ரொம்பவும் தளர்ந்து போய் இருக்கிறாய்

கலுழன் நண்ணப் = கருடன் அருகில் வர

படம் குறை அரவம் ஒத்தாய், = தன்னுடைய படத்தை குறைத்துக் கொள்ளும் பாம்பினை போல இருக்கிறாய்

உற்றது பகர்தி’ என்றான். = நடந்தது என்ன என்று சொல் என்றான்


இதை வீரம் என்று சொல்வதா ?  சீதை மேல் கொண்ட காதல் என்று சொல்வதா?

பெற்ற பிள்ளையின் இரத்தம் கண்டும் துடிக்கவில்லை. அப்படி ஒரு காதலா?

இன்னும் சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_31.html


Saturday, May 30, 2020

திருக்குறள் - காதல் சிறப்பு

திருக்குறள் - காதல் சிறப்பு 


காதலன் காதலிக்கு இடையே உள்ள உறவை எத்தனையோ கவிஞர்கள் பாடி இருக்கிறார்கள். .

காதலைப் பாடாத கவிஞன் யார்?


வள்ளுவரும் பாடுகிறார்.

இந்த பெண்ணோடு எனக்கு உள்ள உறவு என்பது உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவைப் போன்றது என்கிறார்.

பாடல்

உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

பொருள்

உடம்பொடு  = உடம்புக்கு

உயிரிடை = உயிரிடம்

என்ன = எப்படி உள்ளதோ

மற்று =  அசைச் சொல்

அன்ன = அது போல

மடந்தையொடு = இந்த பெண்ணோடு

எம்மிடை  = எனக்கு உள்ள

நட்பு = உறவு

இந்த உடம்பு, உயிர் உதாரணம் எல்லாம் நம்ம உள்ளூர் கவிஞர்கள் கூட  எழுதுவர்களே. எது என்ன அவ்வளவு பெரிய உதாரணமா? இதைச் சொல்ல ஒரு வள்ளுவர்  வேண்டுமா?

இருந்தாலும் இது கொஞ்சம் over build up என்று சிலர் நினைக்கலாம்.

ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

காதலன், காதலி உறவு என்றால் காதல் என்று சொல்லி விடலாம்.

கணவன், மனைவி உறவு என்றால் தம்பதிகள், அல்லது தாம்பத்தியம் என்று சொல்லி விடலாம்.

வள்ளுவர் ஆராய்ந்து எடுத்து ஒரு சொல்லைப் போடுகிறார்.

"நட்பு"

எனக்கு அந்த பெண்ணோடு உள்ள உறவு - ஒரு நட்பு

கணவன் மனைவி என்றால் ஏதோ கடமை என்ற உணர்வு வந்து விடும். பிடிக்குதோ இல்லையோ, சில பல நிர்பந்தங்களினால் ஒன்றாக இருந்து தீர வேண்டி இருக்கிறது.

நட்பு என்பது அப்படி அல்ல.  மிக மிக உயர்வானது.

உடுக்கை இழந்தவன் கை போல் அங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

ஒருவருக்கு ஒரு தேவை என்றால், கேட்காமலேயே ஓடிப் போய் உதவி செய்வது நட்பு.

அவளோடு எனக்கு உள்ள உறவு - நட்பு என்கிறான் அவன்.

எவ்வளவு இனிமையானது?

சரி, அடுத்தது உடலும், உயிரும் போல.

அதில் என்ன சிறப்பு?

உடலும் உயிரும் ஒன்றாக இருந்தால்தான் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

உயிர் போய் விட்டால், உடம்புக்கு பிணம் என்று பெயர். ஓரிரு நாட்களில் அது அழுகி  நாற்றம் எடுக்க ஆரம்பித்து விடும்.

உடல் இல்லாத உயிருக்கு பேய், ஆவி என்று பெயர். எல்லோரும் பயந்து ஓடிவிடுவார்கள்.

இரண்டும் சேர்ந்து இருந்தால், ஒன்றால் மற்றதற்கு பெருமை, சிறப்பு, அர்த்தம்.

இரண்டாவது,  உடல் வாடினால் உயிர் வாடும். உடலுக்கு வலித்தால்உயிருக்கு வலிக்கும். தலை வலி வந்தால், "தலை வலி உயிரே போற மாதிரி இருக்கு" என்கிறோம். தலைவலி வந்தால் உயிர் போய் விடுமா? இல்லை. உடம்பு படும் வேதனையை   கண்டு உயிர் சகிக்காமல் வரும் பேச்சு அது.

உயிர் வாடினால் உடலும் வாடும்.

அது போல, அவளுக்கு ஒன்று என்றால் நான் வாடிப் போவேன், எனக்கு ஒன்று என்றால் அவள் வாடிப் போவாள்.

மூன்றாவது, ஒரு உடலுக்குள் ஒரு உயிர் தான் இருக்க முடியும். அது போல, ஒரு உயிர் ஒரு உடலில் மட்டும்தான் இருக்க முடியும்.

அவளுக்கு நான் மட்டும் தான். எனக்கு அவள் மட்டும்தான்.

மூன்றாவது, இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள சொந்தம் இன்று நேற்று வந்தது அல்ல.  யாராவது வந்து, ஒரு உயிரையும் , உடலையும் சேர்த்து வைப்பது இல்ல. "ஏய் உயிரே, எங்க சும்மா சுத்திக்கிட்டு இருக்க...இங்க வா...இந்த உடம்போடு சேர்ந்து வாழ்" என்று யாரும் சேர்த்து வைப்பது இல்லை.  இரண்டும் வேறு வேறுதான். ஆனால், ஒன்றில்லாமல் ஒன்று இல்லை. அவை பிறக்கும் போதே ஒன்றாக பிறக்கின்றன.  ஒன்று பிரிந்தால் மற்றதும் அழிந்து போகிறது.

நான்காவது, பிரிவு என்பதே முடியாத ஒன்று. என்றாவது நம் உயிர் நம்மிடம், "ஒரு நாள்   வெளியூர் போயிட்டு வர்றேன்..." என்று சொல்லி விட்டு போவது உண்டா?  உடலை விட்டு உயிரும் பிரிய முடியாது, உயிரை விட்டு உடலும் பிரிய முடியாது.  பிரிந்தால், மீண்டும் சேர முடியாது.

ஐந்தாவது, உயிரை தக்க வைத்துக் கொள்ள உடல் கிடந்து போராடும். மருந்து, மாத்திரை, அறுவைச் சிகிச்சை என்று எவ்வளவு கஷ்டப்பட்டாலும்  உயிரை தக்கவைத்துக் கொள்ள  உடல் தவிக்கும். அப்படி ஒரு பிணைப்பு. எவ்வளவு வயதான ஆளாக இருக்கட்டுமே?  உயிரை விட யாருக்கு விருப்பம் இருக்கும்?  உடலுக்கு உயிர் மேல் அப்படி ஒரு ஆசை, பற்று.

எவ்வளவு ஒரு இனிமையான குறள்.

அன்யோன்யமான நட்பு.  சுகமானது. சுவையானது.

ஏழு வார்த்தைகளுக்குள் ஒரு இலக்கியம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_30.html

Friday, May 29, 2020

வில்லி பாரதம் - இப்படியும் முடியும்

வில்லி பாரதம் - இப்படியும் முடியும் 


இன்பம் வரும்போது துள்ளிக் குதிக்கிறோம்.

துன்பம் வரும்போது துவண்டு போகிறோம்.

அதுதானே இயற்கை.

துன்பம், எவ்வளவு சின்னதாக இருந்தாலும், தாங்க முடியாததாக இருக்கிறது. சுண்டு விரலில் ஒரு சின்ன அடி பட்டுவிட்டால் கூட "வலி உயிரே போகிறது" என்கிறோம்.

வெயிலில் கொஞ்சம் நடந்து விட்டு வந்தால் "தலை வலி மண்டைய பிளக்கிறது" என்கிறோம்.  மண்டை என்ன பிளந்தா போய் விட்டது?

துன்பத்தை தாங்கும் குணம் இல்லை. துன்பமே வரக் கூடாது என்று நினைக்கிறோம். அப்படி தப்பித் தவறி வந்து விட்டால், உடனே போய் விட வேண்டும் என்று துடிக்கிறோம்.

கொஞ்சம் உடம்பு சரி இல்லை என்றாலும், மருந்தை வாங்கி ஊத்தி, மாத்திரையை போட்டு, இரண்டு ஊசி போட்டு, உடனே குணமாகி விட வேண்டும் என்று நினைக்கிறோம்.

வாழக்கை என்றால் துன்பம் வரும். வந்த துன்பம் உடனே போகாது. அதுதான் இயற்கை.  "வந்து விட்டாயா, சரி...உன்னோடு கொஞ்ச நாள் வாழ்கிறேன்" என்று   வாழ வேண்டுமே அல்லாமல், "ஐயோ வந்து விட்டதே, எப்ப போகுமோ" என்று ஒவ்வொரு நாளும்    துடித்துக் கொண்டு இருக்கக் கூடாது.

நம் இலக்கியங்கள் இதை பல இடங்களில் நமக்குக் காட்டுகின்றன.

இராமன் 14 வருடம் காட்டுக்குப் போனான். போகும் போது அழுது கொண்டேவா போனான்? போகிற வழியெல்லாம் தந்தையையும், கைகேயியையும் திட்டிக் கொண்டுவா போனான்? கூனியை கூட அவன் வசை பாடவில்லை.

வில்லிப் புத்தூரார் ஒரு காட்சியை காட்டுகிறார்..

நாடு, நகரம், செல்வம் அனைத்தும் இழந்து, மனைவியை சபையில் வைத்து அவமானம் செய்த செயல் முடிந்து, பதின்மூன்று வருடம் காட்டுக்குப் போ, அப்புறம் ஒரு வருடம் தலை மறைவு வாழ்க்கை என்று ஆன பின், தம்பிகளையும், மனைவியையும் கூட்டிக் கொண்டு தெருவில் நடந்து (பல்லக்கு இல்லை, இரதம் இல்லை) போகிறான்.

ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது.

அவன் மன நிலை எப்படி இருக்கும்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். அவன் மனதில் என்னவெல்லாம் ஓடி இருக்கும் ?

அவன் மன நிலைக்கு ஒரு உதாரணம் சொல்கிறார் வில்லி புத்தூரார், வியக்க வைக்கும் உதாரணம். இப்படி கூட சிந்திக்க முடியுமா என்று ஆச்சரியப் படவைக்கும் உதாரணம்.

"...நாட்டின் எல்லை கடந்து, கால்கள் சிவக்க, காட்டுக்குள் நுழையும் போது, இந்த உலக வாழ்க்கையை விட்டு ஸ்வர்கம் போகும் போது மெய் ஞானிகள் எவ்வாறு மகிழ்வார்களோ, அப்படி மகிழ்ந்தான்"

என்கிறார்.

என்ன ஒரு உதாரணம்.

உதாரணம் ஒரு புறம் இருக்கட்டும்.

இத்தனையும் இழந்து, அவமானப்பட்டு, காட்டுக்குள் போது மகிழ்ச்சியாக சென்றான் என்கிறார் வில்லியார்.

முடியுமா?

வாங்கி வந்த கத்தரிக்காயில் ஒரு காய் நன்றாக இல்லை என்றால், "சே, அந்தக் கடைக்காரன் நம்மை ஏமாற்றி விட்டான் / நான் ஒரு சரியான லூசு, பாத்து வாங்கி இருக்க வேண்டாமா" என்று மனம் நோகிறது.

அனைத்தையும் இழந்து காடு செல்வதானால், எப்படி இருக்கும்.

பற்று இல்லை. இந்த நாடு என்னோடது என்று நினைத்ததால் தானே, அதை இழக்கும் போது துன்பம் வரும்.

பாடல்

நாட்டிடை யெல்லை பொற்றா ணறுமலர்சிவக்க வேகிக்
காட்டிடை புகுந்த போதுங்கலக்கமற் றுவகை கூர்ந்தான்
கூட்டிடை யின்ப துன்பக்கொழும்பயன் றுய்த்தி மாறி
வீட்டிடை புகுதும் போதுமெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.


பொருள்


நாட்டிடை யெல்லை  = நாட்டின் எல்லை

பொற்றா ணறுமலர்சிவக்க = பொன் + தாள் + நறுமலர் + சிவக்க. பொன் போன்ற, மென்மையான, மலர் போன்ற பாதங்கள் சிவக்க. முன்ன பின்ன நடந்தது இல்லை. பல்லக்கு, இரதம் அப்படி வாழ்ந்து பழகியவன். நடந்தால் கால் சிவக்கிறது.


வேகிக் = ஏகி, சென்று

காட்டிடை = காட்டின் உள்ளே

புகுந்த = செல்லும்

போதுங் = போதும்  , செல்லுகின்ற போதும்

கலக்கமற் று வகை  கூர்ந்தான் = கலக்கம் அற்று , உவகை கூர்ந்தான்
மனதில் கொஞ்சம் கூட கலக்கம் இல்லை. சந்தோஷம் இருந்தது.

கூட்டிடை  = இந்த உடம்பில்

யின்ப துன்பக் = இன்பம் துன்பம்

கொழும்பயன்  = பெரிய பயனை

றுய்த்தி = அனுபவித்து (உய்தி)

மாறி = அதை விட்டு மாறி

வீட்டிடை = வானுலகம்

புகுதும் போது = செல்லும் போது

மெய்ம்மகிழ் = உள்ளம் மகிழும்

விபுதர் = மெய் ஞானிகள்

போல்வான். = போல இருந்தான்.


இதெல்லாம் நடக்கிற காரியமா ? ஏதோ கதையில் வருகிறது. சரிதான் படிச்சிட்டு போறத விட்டுட்டு, அதை எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு வாழ்வில்  கடை பிடிக்க முடியுமா?

முடியுமா, முடியாதா என்பதல்ல கேள்வி.

துன்பத்தையும், இன்பத்தையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதுதான்.

இவ்வளவு பெரிய துன்பத்தைக் கூட, சந்தோஷாமாக ஒருத்தன் பார்த்தான்.

அவ்வளவுதான்.

நமக்கு ஒரு துன்பம் வரும் போது என்ன செய்ய வேண்டும் நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

தையா தக்கா என்று குதிக்கலாம்.

ஊரில் உள்ள எல்லோரையும் ஏசலாம்.

சரி வந்து விட்டது, விதியே என்று மனம் வாடி நிற்கலாம்.

வந்தா என்ன, வந்து விட்டு போகட்டும். போராடி வெற்றி பெறலாம் என்று  துணிவோடு  களம் இறங்கலாம்.

இந்த துன்பத்திலும் என்ன செய்யலாம், என்ன பாடம் படிக்கலாம், எப்படி நம்மை முன்னேற்றிக் கொள்ளலாம் என்றும் சிந்திக்கலாம்.

வந்த துன்பத்துக்கு ஒரே ஒரு வழியில் தான் நாம் சிந்திக்க செயல்பட வேண்டும் என்று இல்லை.

நமக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படியும் இருக்க முடியும் என்று இலக்கியங்கள் கோடு போட்டு காட்டுகின்றன.

எதை எடுப்பது என்பது நம் கையில்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_29.html

Wednesday, May 27, 2020

திருக்குறள் - கேளிர் பிரிப்பர்

திருக்குறள் - கேளிர் பிரிப்பர்


மனதால், வாக்கால், உடலால் நாம் காரியம் செய்கிறோம்.

காரியம் செய்யும் போது சில தவறுகள் நிகழ்ந்து விடலாம்.  அப்படி தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

வாக்கால் என்னென்ன தவறுகள், குற்றங்கள் நிகழலாம்?

நான்கு விதமான குற்றங்களை கூறுகிறார் வள்ளுவர்.

- பொய் சொல்லுதல்
- புறங் கூறுதல்
- கடுஞ் சொல் கூறுதல்
- பயனில சொல் கூறுதல்

இவை நான்கும், வாக்கால் நிகழும் குற்றங்கள். பேசும் போது இந்த குற்றங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாலுக்கும் , நாலு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். 40 குறள். அதை மட்டும் படித்து, புரிந்து  அதன் படி நடந்தால் நம் பேச்சில் வரும் குற்றங்கள் பெரிதும் தவிர்க்கப்படும்.

இந்த குற்றங்களில் தலையாய குற்றம் பொய் சொல்லுவது.

அடுத்த இடம் புறம் கூறுதலுக்கு.

புறம் கூறுதல் என்றால் என்ன?







பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர்

Saturday, May 23, 2020

திருக்குறள் - பெரியார், சிறியார்

திருக்குறள் - பெரியார், சிறியார் 


தமிழ் இலக்கியம் மிகப் பழமை வாய்ந்தது. எவ்வளவு பழமை என்பதில் சில குழப்பங்கள் இருக்கின்றன.

பழைய இலக்கியங்களை படிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.  சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்.

இடைச் செருகல்கள்.  கம்ப இராமாயணத்தை கம்பர் எழுதினார். கம்பரிடம் தமிழ் புலமை இருந்தது. அவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக இனிமையானவை, ஆழமானவை, பொருள் செறிந்தவை.

அவருக்கு பின்னால் வந்தவர்கள், அவரைப் போலவே எழுதி, கம்ப இராமாயணத்துக்குள் சேர்த்து விட்ட அவலங்கள் நடந்து இருக்கின்றன.  இதில் எந்தப் பாடல் யார் எழுதியது என்று தெரியாமல் நாம் தவிக்கிறோம். மேலோட்டாமாகப் படித்தால் புரியாது. மொழி இயல் அறிஞர்கள் இனம் கண்டு சொல்வார்கள். இப்படிப் பட்ட சொற் பிரயோகம் கம்பர் காலத்தில் இல்லை, அல்லது இப்படி ஒரு தொடரை அவர் வேறு எங்கும் எழுதியது இல்லை. எனவே, இந்த ஒரு குறிப்பிட்ட பாடல் கம்பர் எழுதி இருக்க முடியாது என்று நிரூபணம் செய்வார்கள். இது ஒரு சிக்கல்.

இது நிகழ காரணம் தனி மனித மன வக்கிரங்கள்.

தனியே எழுதினால் புகழ் கிடைக்காது என்று தெரிந்து, பெரிய இலக்கியத்துக்குள் தன் பாடலை சேர்த்து விடும் வக்கிரம்.

இரண்டாவது, பின்னால் வந்தவர்கள் தங்கள் ஜாதி , மதம் இவற்றை உயர்த்திப் பிடிக்க, பல உயர்ந்த நூல்களுள் சில வார்த்தைகளை மாற்றிப் போட்டு, தங்களுக்கு தாங்கள் சார்ந்த குழுவுக்கும் நன்மை தேடிக் கொள்ளும் வக்கிரம்.

என்ன செய்வது. மனித மனம்  அப்படி சிக்கலான ஒன்றாக இருக்கிறது.


இன்னொன்று,  பழந்தமிழ் இலக்கியங்கள் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டன. ஓலையில்,  ஆணி கொண்டு எழுதப்பட்டன.  கரையான் அரித்து, ஓலை சிதிலம் அடைந்து என்ன எழுதி இருப்பார் என்று தெரியாமல், பின்னால் வந்தவர்கள்  ஓலையில் இருந்து காகிதத்துக்கு மாற்றிய போது , ஓரிரண்டு எழுத்தோ அல்லது வார்த்தையோ சரியாகத் தெரியாவிட்டால், இதுவாகத்தான் இருக்கும் என்று  அவர்களே யோசித்து ஒரு எழுத்தையோ, வார்த்தையோ  போட்டு விடுவார்கள்.  அர்த்தமே தலைகீழாக மாறிப் போய் விடும்.

வள்ளுவர் இப்படி சொல்லி இருப்பாரா, கம்பர் இப்படி சொல்லி இருப்பாரா என்று நாம்  மண்டையை போட்டு உடைத்துக் கொள்வோம்.

தமிழ் அறிஞர்கள் அந்த மாதிரி சமயத்தில், மாற்றப்பட்ட எழுத்து என்னவாக இருக்கும்  என்று யோசித்து இன்னது என்று சொல்வார்கள்.

ஏற்பதா, அல்லது விடுவதா என்று நாம் தயங்கிக் கொண்டு இருப்போம்.

இங்கே ஒரு குறளைப் பார்ப்போம்.


பாடல்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

பொருள்

செயற்கரிய = செய்வதற்கு அரிய (கடினமான)  செயல்களை

செய்வார்  = செய்வார்கள்

பெரியர் = பெரியவர்கள்

சிறியர் = சிறியவர்கள்

செயற்கரிய = செய்வதற்கு அறிய செயல்களை

செய்கலா தார் = செய்ய மாட்டார்கள்


உரை எழுதிய அனைவருமே, பரிமேல் அழகர் உட்பட, இந்த அர்த்தத்தில் தான் உரை  எழுதி இருக்கிறார்கள்.

அரிய செயல் என்றால் என்ன  என்று கேள்வியை எழுப்பி, பரிமேல் அழகர் யோகம்  செய்வது அரிய செயல் என்று கூறுகிறார்.

பெரியவர்கள் யோகம் செய்வார்கள். சிறியவர்கள் யோகம் செய்ய மாட்டார்கள்   என்று அவர் விளக்கிக் கொண்டு போகிறார்.


அதுதான் அர்த்தம் என்றால் இரண்டாவது முறை ஏன் செயற்கரிய என்ற சொல்லப் போட வேண்டும்?

மேலும், ஒரு காலத்தில் அரிய செயல் பின்னாளில் எளிதாக மாறிவிடும். எதைக் கொண்டு அரிய செயலை அளப்பது?

யானையோடு போராடுவது கடினமான செயல் தான். அதற்காக  எல்லோரும் யானையோடு  போராட முடியுமா?

பெரிய மலையில் ஏறுவது அரிய செயல் தான். அதற்காக மலை ஏறுபவர்கள் எல்லோரும்  பெரியவர்கள் என்று கொள்ள முடியுமா?

தெரு பெருக்குவது, குப்பை அள்ளுவது என்பது போன்றவை பெரிய செயல் இல்லைதான். அதற்காக அந்தத் தொழிலை செய்பவர்களை சிறியர் என்று சொல்ல முடியுமா?

பின் என்ன அர்த்தம்?

உரை எழுதிய தமிழ் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால்,

கு என்ற எழுத்து எப்படியோ மாறி க என்று ஆகிவிட்டது. ஓலை பழுதாக இருந்து இருக்கலாம், ஓலையில் ஆணி கீறிய விதம் சற்று மாறி இருக்கலாம்.

க வை கு வாக மாற்றிப் போட்டு குறளை பார்ப்போம்.


செயற் 'கு' (க) ரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற் 'கு' (க) ரிய செய்கலா தார்

அதாவது

செயற்கு அரிய என்பதை

செயற்கு உரிய  என்று மாற்றினால் அர்த்தம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

என்ன செய்ய வேண்டுமோ, அதை பெரியவர்கள் செய்வார்கள்.

செய்ய வேண்டியதை சிறியவர்கள் செய்ய மாட்டார்கள்.

இன்னிக்கு ஒரு மணி நேரம் உடற் பயிற்சி செய்ய வேண்டும், இன்னிக்கு இந்த பாடத்தை  முடிக்க வேண்டும், இன்னிக்கு அந்த பணத்தை இதில் முதலீடு செய்ய வேண்டும்  என்று எதெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறதோ, அதை  செய்வார்கள்.

ஆனால், சிறியரோ , நாளைக்கு செய்யலாம், இன்னும் நாள் இருக்கே, அதுக்கு இப்ப என்ன அவசரம்  என்று செய்ய வேண்டியதை செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போவார்கள்.

உரிமை என்றால் உரிமையானது, கடமை. நான் தான் அதை செய்ய வேண்டும் .

யோசித்துப் பாருங்கள். நாம் செய்ய வேண்டிய வேலை அனைத்தையும் நாம் செய்து முடித்து  இருந்தால் நாம் பெரியவர்களாக ஆகி இருப்போமா மாட்டோமா?

இன்னொரு விதமாகவும் இதை சிந்திக்கலாம்.

அதாவது, பெரியவர்கள் செயற்கு அரிய செயலை செய்வார்கள்.

சிறியர், செயற்கு உரிய செயலைக் கூட செய்ய மாட்டார்கள்.

அப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்.

ஒரு எழுத்து, குறளின் அர்த்தத்தை எப்படி மாற்றி போடுகிறது பார்த்தீர்களா?

இதில் எது சரி என்று நமக்குத் தெரியாது. (= எனக்குத் தெரியாது). உங்கள் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ, எது உங்கள் வாழ்க்கைக்கு நலம் சேர்க்குமோ, அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_23.html

Friday, May 22, 2020

சித்தர் பாடல் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி

சித்தர் பாடல் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி


நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற தலைப்பில் திரு. ஜெயகாந்தன் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது நான் படிக்கும் போது 12 வகுப்பு, பாட திட்டத்தில் இருந்தது.

பாடல் என்னமோ எளிய பாடல் தான்.

பாடல்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

பொருள்

தோண்டி என்றால் மண் அல்லது தண்ணீர் கொண்டு வரும் ஒரு சிறு மண் பாத்திரம். பொதுவாக அதில் தண்ணீர் கொண்டு வருவார்கள்.

கஷ்ட்டப்பட்டு ஒரு மண் கலயத்தை பெற்று, அதை சரியாக கையாளாமல் கீழே போட்டு உடைத்து விட்டான் அந்த ஆண்டி.

கடுவெளி சித்தரின் பாடல்.

ஆண்டி என்பது நம் உயிர். ஆன்மா.

குயவன், இறைவன்.

தோண்டி, இந்த உடம்பு.

இந்த உடம்பை பெற்று என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?

சாப்பிடுகிறோம். தூங்குகிறோம். பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம். அவர்களை வளர்க்கிறோம். டிவி பார்க்கிறோம். என்று ஒரே ஆட்டமும், பாட்டமுமாக இ இருக்கிறது.

இப்படி கொஞ்ச நாள் போனால், இந்த உடம்பு விழுந்து விடும். அதாவது, மண் பாண்டம் உடைந்து விடும்.

இந்த உடம்பை பெற்றதன் நோக்கம் என்ன என்று அறிந்தோமா?

அல்லது, அப்படி எல்லாம் ஒரு நோக்கமும் இல்லை. இருக்குற வரை ஆண்டு அனுபவித்துவிட்டு போவதுதான்  அதன் நோக்கமா?

இந்த பிளாக் வாசிப்பது, whatsapp படிப்பது, அதை அப்படியே forward செய்வது, டிவி,  போன்றவற்றிற்கு மேலாக ஏதாவது உருப்படியாக செய்ய முடியுமா?

இந்த உடம்பை இன்னும் கொஞ்ச உயர்ந்த வழியில் ஈடுபடுத்த முடியுமா? அல்லது இவ்வளவுதானா?

கடைசியில் போட்டு உடைத்துவிட்டுப் போக வேண்டியதுதானா?

போட்டு உடைத்தால் கூட பரவாயில்லை ..கூத்தாடும் போது கை தவறி விழுந்து  உடைந்து விட்டால்?

அகாலத்தில் உடைந்து போனால்?

யோசிப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_22.html

Thursday, May 21, 2020

சிவ ஞான போதம் - உலகின் தன்மை

சிவ ஞான போதம் - உலகின் தன்மை 


மெய்கண்ட தேவர் அருளியது சிவஞான போதம் என்ற நூல். பன்னிரண்டே சூத்திரங்கள். சைவ சித்தாந்தத்தின் சாரம் அனைத்தும் உள்ளடக்கியது.

விளையாட்டாக சொல்லுவார்கள், அது சிவஞான போதம் அல்ல சிவஞான பூதம் என்று.

சிந்திக்க சிந்திக்க விரிந்து கொண்டே போகும். இந்த நூலுக்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள்.

சூத்திரம் என்னவோ மூன்று வரிகள் தான். உரைகள் விரிந்து கொண்டே போகும். உரைகளை படிப்பதற்கு முன்னால், சைவ சித்தாந்தத்தில் கொஞ்சம் பரிச்சயம் வேண்டும். இல்லை என்றால் தலையும் புரியாது காலும் புரியாது.

என்னால் முடிந்தவரை எளிய தமிழில் தர முயற்சிக்கிறேன்.

இந்த உலகில் உள்ள அனைத்தையும் மூன்றே மூன்று தொகுப்பில் அடக்கி விடலாம்.

மக்கள், கார், பஸ், மின்சாரம், கணனி, வீடு, மாடு, புகைவண்டி, பணம், தாவரங்கள், மலை, மேகம், காடு, கடல், கரை, நண்பன், மனைவி, உணவு..இப்படி உலகில் என்னென்ன இருக்கிறது இவை அனைத்தும் மூன்று தொகுதியில் அடங்கிவிடும். அதற்கு வெளியே ஒன்றும் இல்லை.

அவை என்ன மூன்று தொகுதி? எப்படி இந்த பிரபஞ்சம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்க முடியும்?

முடியும். அந்த சொற்கள்.

"அவன், அவள், அது"

அவ்வளவுதான் இந்த உலகம். எதை எடுத்தாலும் இந்த மூன்றுக்குள் இருந்தாக வேண்டும்.

சரி.  உலகம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்கியாகி விட்டது.

அதனால் என்ன இப்ப?

அடுத்தது, இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

எந்த ஒன்றாக இருந்தாலும், அவற்றிற்கு மொத்தம் மூன்று வேலை தான் உண்டு.

அது கொரான வைரஸ் ஆக இருந்தாலும் சரி, சூரியன், சந்திரன், விண்மீன், நம்ம வீட்டு  டிவி, குளிர்சாதனப் பெட்டி , அடுப்பு, காய் கறி என்று எதுவாக இருந்தாலும், அனைத்துக்கும் மூன்றே தொழில் தான் உண்டு.

அவை

தோன்றுதல், நிலைத்தல் , அழிதல்

உலகில் உள்ள எந்த ஒன்றும் இந்த மூன்று நிலைகளை அடைந்தே தீர வேண்டும்.

நான் தோன்றுகிறேன், இருக்கிறேன் ஆனால் அழிய விரும்பவில்லை என்று  யாரும், எதுவும் கூற முடியாது.   தோன்றியது, இருந்தே ஆக வேண்டும். இருந்தது அழிந்தே  ஆக வேண்டும். யாராலும் மாற்ற முடியாத விதி.

நான் பிறக்க மாட்டேன், ஆனால் இறக்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது.

சரி, இறக்கிறேன், ஆனால் பிறக்க மாட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது.

தோன்றிய ஒன்று அழிந்தே ஆக வேண்டும்.

பிறப்பு இருந்தால் இறப்பு இருந்தே ஆக வேண்டும்.

இறப்பு வேண்டாம் என்றால், பிறக்காமல் இருக்க வேண்டும்.

இறைவன் பிறப்பது இல்லை. எனவே அவன் இறப்பதும் இல்லை.

செம்மான் மகளை திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்

என்பார் அருணகிரி.

உயிர்களும், பொருள்களும் தோன்றி, இருந்து பின் மறைகின்றன.

ஒரு பொருள் தன்னைத்தானே தோற்றிக் கொள்ள முடியுமா?

என் பிள்ளைகள் தோன்ற நான்  ஒரு காரணம்.

என்னை நானே தோற்றிக் கொள்ள முடியுமா?

நான் தோன்ற என் பெற்றோர் வேண்டும் அல்லவா?

நான் இருக்கிறேன் என்றால், எனக்கு ஒரு பெற்றோர் இருக்க வேண்டும் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?

என்ன இப்போதே கொஞ்சம் தலை சுற்றுகிறதா?

யோசித்துக் கொண்டு இருங்கள்.  இது எல்லாம் முதல் சூத்திரத்துக்கு விரிவுரை.

மேலும் சிந்திக்க இருக்கிறோம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_72.html

கந்தர் அநுபூதி - மனைவி மக்கள் என்னும் விலங்கு

கந்தர் அநுபூதி - மனைவி மக்கள் என்னும் விலங்கு 


கந்தர் அநுபூதியை சிறுவயதில் வீட்டில் உள்ள பெரியவர்கள் பாராயணம் பண்ணுவார்கள். அவர்கள் பாட்டுக்கு கட கட என்று சொல்லிக் கொண்டே போவார்கள். கேட்டு கேட்டு மனப்பாடம் ஆகிப் போனது.

பல பாடல்களுக்கு அர்த்தமும் விளங்கியது என்றே நினைத்தேன்.

நாள் ஆக ஆகத்தான், நான் அர்த்தம் என்று நினைத்துக் கொண்டிருந்தது சரி அல்ல என்று புலப்படத் தோன்றியது.

அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று தான் கீழே உள்ளது.

பாடல்

வளைபட்ட கைம் மாதொடு, மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே.

பொருள்


வளை பட்ட = வளையல் அணிந்த

கை (ம்)  = கைகளை உடைய

மாதொடு = மாது என்றால் பெண். அதாவது மனைவியுடன்

மக்கள் எனும் = பிள்ளைகள் என்ற

தளைபட்டு = விலங்கில் அகப்பட்டு

அழியத் தகுமோ? தகுமோ? = நான் அழிய தகுமோ தகுமோ ? (தகாது)

கிளைபட்டு = உறவினர்களோடு

எழு = போருக்கு எழுந்த

சூர்  = சூரனும்

உரமும் = அவன் வீரமும், மார்பும்

கிரியும், = கிரௌஞ்ச மலையும்

தொளைபட்டு = துளைத்துக் கொண்டு செல்லும்படி

உருவத்  = உருவிக் கொண்டு செல்லும்படி

தொடு வேலவனே. = வேலைத் தொட்டவனே

மனைவி மக்கள் என்ற குடும்ப சிக்கலில் மாட்டி நான் அதிலேயே அழுந்திப் போவது சரிதானா ?  நான் அப்படி அழிந்து போகாமல் இருக்க அருள் செய்வாய் என்று வேண்டுகிறார்.

ஆசைப் பட்டு திருமணம் செய்து கொண்டு, பின் பிள்ளைகளை பெற்று, அவர்களை  வளர்க்கிறோம். அவர்கள் எப்படி விலங்காக முடியும்?

ஏதோ மனைவியும், பிள்ளைகளும் நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு ஒரு தடைக் கல் போல சொல்கிறாரே...ஒரு வேளை அப்படித்தானோ?

திருமணம் செய்து இருக்கக் கூடாதோ? அப்படியே திருமணம் செய்து இருந்தாலும், பிள்ளைகள் பெற்று இருக்கக் கூடாதோ? அப்படியே பெற்றாலும், ஒரு அளவுக்கு மேல் அவர்களை கழட்டி விட்டு விட வேண்டுமோ? என்றெல்லாம் தோன்றியது உண்டு.

"மாதொடு மக்கள் எனும் தளை " என்று சொல்கிறாரே. தளை என்றால் விலங்கு. கையில் விலங்கை மாட்டிக் கொண்டு அலைய யாருக்கு ஆசையாக இருக்கும்? விடுதலை அடையத்தானே எல்லோரும் விரும்புவார்கள்.

சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆண்களுக்கு , வளை பட்ட கை மாது ஒரு விலங்கு சரி.

பெண்களுக்கு?

மனைவிக்கு, கணவன் விலங்கா? அப்படியென்றால் ஏன் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை?

யாருமே திருமணம் செய்து கொள்ளக் கூடாதா? அதுவா உபதேசம்?

இதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது பற்றி மேலும் சிந்திப்போம்.....

(தொடரும்)

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_21.html

Wednesday, May 20, 2020

கந்தர் அநுபூதி - குருவாய் வருவாய்

கந்தர் அநுபூதி - குருவாய் வருவாய் 



பாடல்

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.


இந்தப் பாடலை என் சிறுவயது முதல் எனக்குத் தெரியும். படித்து இருக்கிறேன். பல முறை கேட்டும் இருக்கிறேன். அடடா என்னமா எழுதி இருக்கிறார், ஒவ்வொரு சொல்லும் "வாய்" என்று முடியும்படி என்று வியந்தும் இருக்கிறேன்.

இத்தனை வருடம் ஆனது அதன் உள்ளே பொதிந்து கிடக்கும் அர்த்தம் தட்டுப்பட.

முதலில் அருஞ்சொற் பொருளை பார்த்து விடுவோம். அப்புறம் அர்த்தத்துக்குப் போவோம்.


பொருள் 

உருவாய் = உருவத்துடன்

அருவாய் = உருவம் இல்லாமல்

உளதாய் = இருக்கக் கூடியதாய்

இலதாய் = இல்லாததாய்

மருவாய்  = மலரின் வாசமாக

மலராய் = மலராக

மணியாய் = மணியாக

ஒளியாய்க் = மணியில் இருந்து வரும் ஒளியாக

கருவாய்  = கருவாக

உயிராய்க்  =உயிராக

கதியாய் =  வழியாக 

விதியாய்க் = விதியாக

குருவாய் = குரு வடிவில்

வருவாய் = வருவாய்

அருள்வாய் = அருள் செய்வாய்

குகனே. = முருகா

கடினமான சொல் ஒன்றும் இல்லை.

இதில் என்ன புதிதாக கண்டுவிட்டேன் என்று கேட்கிறீர்களா?

"குருவாய் வருவாய்"

நாம் இறைவனை, உண்மையை தேடி அலைகிறோம். நிறைய புத்தகங்கள் வாசிக்கிறோம். பலர் சொல்வதைக் கேட்கிறோம். நமக்கு இவர் தான் குரு, ஆச்சாரியார்  என்று ஒருவரை ஏற்றுக் கொண்டு அவர் சொல்கிற படி கேட்கிறோம். துறவிகள், சாமியார்கள், உபன்யாசம் செய்பவர்கள் என்று எவ்வளவோ பேர்.  இப்போதெல்லாம், youtube வந்து விட்டது. வீட்டில் இருந்த படியே  அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்ள முடியும்.

இருந்தும் ஒன்றும் ஆன மாதிரி தெரியவில்லை. அது ஒரு பாட்டுக்கு போகிறது. வாழ்க்கை இன்னொரு பக்கம் நம்மை இழுத்துக் கொண்டு போகிறது.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

"நீ குருவை தேடி அலையாதே.  குரு உன்னைத் தேடி வருவார். நீ எப்போது பக்குவப் படுகிறாயோ அப்போது  குரு உன்னைத் தேடி வருவார்" என்று.

ஆங்கிலத்தில் சொல்லுவார்கள், "The teacher will appear when the student is ready" என்று.

நீங்கள் தேடி கண்டுபிடிக்கும் யாரும் உங்கள் குரு அல்ல. உங்களுக்கு எப்படித் தெரியும், அவர் தான் குரு என்று?

"வருவாய்" அவனே வருவான்.

வருவான் என்று எப்படி சொல்ல முடியும்? என்ன உத்தரவாதம் இருக்கிறது?

'கதியாய் விதியாய்"

"உன் விதிப்படி அவன் வருவான். உனக்கு எப்போது விதித்து இருக்கிறதோ, அப்போது வருவான். வந்து உன்னை நல்ல கதிக்கு கொண்டு செல்வான். "


சரி, எப்படி வருவான்?  எந்த வடிவில் வருவான் ?

எனக்கு எத்தனையோ குரு மார்கள். பாடம் சொல்லித் தந்தவர்கள் சிலர். வாழக்கையை சொல்லித் தந்தவர்கள் சிலர்.  வழி கட்டியவர்கள் சிலர். அவன் எப்படி  வேண்டுமானாலும் வருவான்.

புரியலையே !

"உருவாய்"

அவன் மானிட உருவில் வருவான்.

"அருவாய்"

உருவம் இல்லாமல் வருவான். அது எப்படி உருவம் இல்லாமல் வருவான்? அப்படி வந்தால்  நாம் எப்படி அவனை அறிய முடியும்?

ஒரு உயர்ந்த புத்தகத்தை வாசிக்கிறீர்கள், நல்ல சொற்பொழிவை கேட்கிறீர்கள், நாள் எழுத்தை வாசிக்கிறீர்கள்...உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழ்கிறது. 'சே, இது தெரியாமல் இத்தனை நாள் வாழ்ந்து விட்டேனே..இனியாவது  கொஞ்சம் மாற வேண்டும் " என்று நினைக்கிறீர்கள் அல்லவா....அந்த எழுத்துதான் உங்கள் குரு. அதற்கு மானுட வடிவம் இல்லை. ஒளி வடிவம், ஒலி வடிவில் வந்து அருள் தருவான்.

mp3 file, youtube வீடியோ, dvd , vcd என்று ஏதோ ஒரு வழியில். அருவமாக வந்து அருள் தருவான்.

மருவாய், மலராய்

மலர் தெரியும், அதன் வாசம் தெரியுமா? சில சமயம் வாசம் மட்டும் வரும், எங்கிருந்தோ.  அது போல, ஆள் தெரியாது, எங்கிருந்து, எப்படி வருகிறது என்று தெரியாது.  அவன் அருள் வந்து சேரும்.

மணியாய் ஒளியாய்

மணி தெரியும். அதன் உள்ளே ஆடும் அதன் நா தெரியும். அது ஆடுவது தெரியும். ஒலி தெரியுமா?  காதில் வந்து விழும்.  ஒரு வார்த்தை. ஒரு சொல். ஒரு வாக்கியம் ,

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே"

என்று ஒரு வாக்கியம், பட்டினத்தாரை மாற்றிப் போட்டது.

அந்த வாக்கியம் தான் அவருக்கு குரு.

அந்த வாக்கியம் நமக்கு கிடைத்து இருந்தால், "சரி, வராட்டி போகட்டும், அதனால் என்ன" என்று ஓலையை தூக்கி குப்பையில் போட்டு விட்டு வேலையை பார்க்க போய் விடுவோம்.   பட்டினத்தாரின் மனம் பக்குவப் பட்டிருந்தது. ஒரு வாக்கியம், அருள் செய்தது.

"அருள்வாய் குகனே"

அது அருள்தான்.  காசு கொடுத்து வாங்க முடியாது. வண்டி வண்டியாக புத்தகங்களை படித்து  அறிய முடியாது. அந்த அருள், grace, வர வேண்டும்.

அவனே அருள்வான்.

ஞான சம்பந்தருக்கு மூன்று வயதில் வந்தான்.

திருநாவுக்கரசருக்கு 80 வயதில் வந்து அருள் தந்தான்.

என்ன சொல்லுவது?

யார் குரு என்று எப்படி அறிவது?

ஆதி சங்கரருக்கு புலையனாக வந்தான்.

சங்கரர் அறிந்தார் இல்லை.

அவர் பாடு அப்படி என்றால், நாம் எம்மாத்திரம்?

மாணிக்க வாசகருக்கு அருள் புரிய வந்தான், மணிவாசகர் அறிந்தார் இல்லை. விட்டு விட்டார்.

அவன் உருவாய், அருவாய், உளதாய், இலதாய் , மருவாய், மலராய், மணியாய், ஒளியாய் எப்படி வேண்டுமானாலும் வருவான்.

அவன் வந்தால்தான் உண்டு. நாம் போய் கண்டு பிடிக்க முடியாது.

மனம் பக்குவப் பட வேண்டும்.

நீங்கள் தேடிப் பிடித்த எந்த குருவும் உங்கள் உண்மையான குரு அல்ல என்று தெரிகிறது அல்லவா? அவர் வேண்டுமானால் வழி காட்டலாம், அவர் ஒரு படியாக இருந்து உதவி செய்யலாம்....உண்மையான குரு, அவர் உங்களைத் தேடி வருவார்.

இப்படி எத்தனை பாடல்களை, "இதில் என்ன இருக்குறது" என்று அறியாமல் தள்ளி விட்டு வந்தேனோ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_20.html

Tuesday, May 19, 2020

திருக்குறள் - என்ன இருந்தாலும் இல்லை

திருக்குறள் - என்ன இருந்தாலும் இல்லை 


ஒரு ஊரில் ஒரு பெரிய  பணக்காரன் இருந்தான். ஏகப்பட்ட சொத்து. நிலம், பெரிய வீடு, கார், ஆள், அம்பு, சேனை..எல்லாம்.

வருடா வருடம் மூட்டைக் கணக்கில் நெல் வந்து சேர்ந்து விடும்.

பின்னாடி தோட்டத்தில் பத்து பதினைந்து பசு மாடுகள். பாலும், நெய்யும் வீடெங்கும் நிறைந்து கிடக்கிறது.

இலவம் பஞ்சில் செய்த மெத்தை.

மருத்துவர் சொல்லி விட்டார், கேழ்வரகும், கம்பும் தான் சாப்பிட வேண்டும். அரிசி சோறு வாயில் போட்டால் சர்க்கரை கூடி விடும், காலை எடுக்க வேண்டி வரும் என்று.

அவருக்கு பக்கத்து வீட்டில் ஒரு பரம ஏழை. அரிசி வாங்கக் கூட வசதி இல்லை.  எப்போதாவது அரிசி சோறு இருக்கும் வீட்டில்.

செல்வந்தன் வீட்டில் எல்லாம் இருக்கிறது, ஆனால் அரிசிச் சோறு சாப்பிட முடியாது.

வறியவன் வீட்டில், பணம் இல்லை. அரிசிச் சோறு சாப்பிட முடியாது.

இரண்டு பேரும் அரிசிச் சோறு சாப்பிட முடியாது.

வள்ளுவர் சொல்கிறார், செல்வந்தனிடம் இருந்தும் அது இல்லை மாதிரித்தான் என்று.

ஒரு பொருள் நம்மிடம் இருக்கிறது என்றால், அதனால் நமக்கு  ஒரு பயன் இருக்க வேண்டும். இல்லை என்றால், அது இருந்தும் இல்லாத மாதிரிதானே.

பயனில்லாத ஒன்று இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே.

அது போல, ஒருவனுக்கு என்னதான் செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தாலும்,  அவன் மனைவி நல்லவளாக இல்லாவிட்டால், அவன் ஒன்றும் இல்லாதவனுக்கு சமம் என்கிறார்.

பாடல்


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்

பொருள்

மனைமாட்சி = இல்லறத்துக்கு வேண்டிய நற்குணங்கள், நற் செய்கைகள்

இல்லாள்கண் = மனைவியிடம்

இல்லாயின் = இல்லாவிட்டால்

வாழ்க்கை = வாழ்க்கையில்

எனை = எவ்வளவு

மாட்சித்  தாயினு மில் = பெருமை இருந்தாலும் அது அவை இல்லாத மாதிரிதான்

வீட்டில் நிறைய செல்வம் இருக்கிறது. கணவனின் நண்பர்களோ, உறவினர்களோ வருகிறார்கள்.  இவள் முகத்தைக் தூக்கி வைத்துக் கொண்டால், அந்தக் கணவன் தன்னிடம் உள்ள அத்தனை செல்வத்தாலும், வந்த உறவினரை  மகிழ வைக்க முடியாது. அந்த செல்வத்தால் ஒரு பயனும் இல்லை.   அது இருந்தாலும் இல்லாத மாதிரிதான்.

இன்னொரு உதாரணம்

கணவனுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் என்று வைத்துக் கொள்வோம்.

மனைவி பன்னிரண்டாயிரம் செலவு செய்பவள் என்றால், அவன் சம்பாதித்தது ஒன்றும் இல்லைதானே.   வந்தது போக, கடனில் இருப்பான்.

எவ்வளவு படித்தாலும், எவ்வளவு வேலை செய்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும்,  எவ்வளவு சொத்து சேர்த்தாலும், மனைவி சரி இல்லை என்றால்,  என்ன இருந்தும் ஒரு பயனும் இல்லை. என்கிறார்.

மாறாக, கொஞ்சம் பணம் இருக்கிறது. கணவனின் உறவினரோ, நணப்ர்களோ வருகிறார்கள்,  அவனின் மனைவி அவர்களை சிரித்த முகத்தோடு வரவேற்று, அவர்களுக்கு வேண்டியதைச் செய்தால் கணவன் எவ்வளவு மகிழ்வான். கோடி பணம் இருந்தாலும், அந்த சந்தோஷம் வராது.

எல்லாம் அவள் கையில் இருக்கிறது.



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_19.html

Sunday, May 17, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அச்சுவை பெறினும் வேண்டேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அச்சுவை பெறினும் வேண்டேன் 


நாக்கில் நல்ல உணவு பட்டால் அதன் சுவை தெரியும். நாம் அதை அனுபவிக்கலாம்.

நாவினால் ஒரு பெயரைச் சொன்னால் அது சுவை தருமா?

தரும் என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.

ஸ்ரீராம நீ நாம ஏமி ருச்சிரா...ஓ ராமா நீ நாமம் என்தோ ருச்சிரா...என்பார் பத்ராச்சல இராமதாஸர்.

அந்தப் பாடலை திரு. பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒலிப்பதிவை இங்கே கேட்டுப் பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=DCyshbQUgAE


இராம உன் நாமம் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது, என்ன ஒரு சுவை என்று ரசிக்கிறார்.


தொண்டரடிப் பொடி ஆழ்வார் சொல்கிறார்,

"பச்சைமா மலைபோல்மேனி"

"பவளவாய் கமலச் செங்கண்"

"அச்சுதா"

"அமர ரேறே"

"ஆயர்தம் கொழுந்தே"

அப்படினு சொல்லிகிட்டே இருந்தால், அந்த சுவையே போதும். அதை விட்டு விட்டு,  பரமபதம் கிடைத்தாலும் வேண்டாம் என்கிறார்.

பாடல்

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பொருள்

பச்சை = பச்சை நிறம் கொண்ட

மா = பெரிய

மலைபோல் = மலையை போன்ற

மேனி = உடல்

பவளவாய் = பவளம் போல் சிவந்த உதடுகள்

கமலச் செங்கண் = தாமரை போல் சிவந்த கண்கள்

அச்சுதா = அச்சுதன் என்றால் தன்னை பற்றியவர்களை கை விடாதவன் என்று அர்த்தம்

அமர ரேறே = தேவர்களில் எருது போன்று வலிமையானவனே

ஆயர்தம் கொழுந்தே = ஆயர்களின் கொழுந்தே

என்னும் = என்று சொல்லும்

இச்சுவை = இந்த சுவையை

தவிர = விட்டு விட்டு

யான்போய் = நான் போய்

இந்திர லோக மாளும் = இந்திர லோகத்தை ஆளும்

அச்சுவை = அந்த சுவையை

பெறினும் =  பெற்றால் கூட

வேண்டேன் = விரும்ப மாட்டேன்

அரங்கமா நகரு ளானே. = திருவரங்கம் என்ற பெரிய திருத்தலத்தில் உள்ளவனே

அது என்ன "ஆயர்தம் கொழுந்தே". ஆயர்தம் வேறே என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?  ஆயர் குலத்துக்கு வேர் போன்றவன் அல்லவா அவன்?  பின் கொழுந்தே என்றார்?

உரை எழுதிய பெரியவர்கள் கூறுவார்கள் "கொழுந்து வாடினால் வேர் வாடாது. ஆனால், வேர் வாடினால் கொழுந்து வாடிவிடும்...எனவே, ஆயர் குலத்தில் உள்ளவர்கள்  எல்லோரும் வேர். அவன் கொழுந்து. அந்தக் குலத்தில் யார் வாடினாலும், அவன் வாடிவிடுவான்" என்று.

வியாக்கியானம் எழுதுவதில் வைணவ உரை ஆசிரியர்களை மிஞ்ச ஆள் இல்லை.

கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறோம். இறைவன் அங்கே இருக்கிறான் என்று யாராவது நம்புகிறார்களா? இறைவன் எங்கோ இருக்கிறான்...கைலாயத்தில், பாற்கடலில் எங்கோ இருக்கிறான். இங்கே எங்கே இருக்கிறான் என்பது தான் அவர்கள் நம்பிக்கை. இறந்த பின், அங்கே போகலாம் என்பது எதிர்பார்ப்பு.

ஆனால், ஆழ்வார் சொல்கிறார், அதெல்லாம் இல்லை. அந்த பரந்தாமன் இங்கேதான் இருக்கிறான். அவனைத் தேடி இந்திரன் முதலான தேவர்கள் இங்கே வந்து விட்டார்கள். நான் அங்கு போய் என்ன செய்யப் போகிறேன்? எனவே, அந்த வெறுமையான உலகை ஆளும் பதவி தந்தாலும் வேண்டேன்,  இங்கேயே இருக்கிறேன் என்கிறார்.

இறந்த பிறகு இல்லை, இப்போதே, இங்கேயே காணலாம். இது தான் வைகுண்டம், இதுதான் கைலாயம். அங்கே போக வேண்டிய அவசியமே இல்லை.

இப்பவே அனுபவிக்கலாம்.

யோசித்துப் பாருங்கள். அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது , நீங்கள் வணங்கும் இறைவன் அங்கே இருக்கிறான் என்றால் எப்படி இருக்கும் என்று....

தொண்டரடிப் பொடி ஆழ்வார் கண்டார்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_17.html

Saturday, May 16, 2020

திருக்குறள் - பெண் பார்க்கும் படலம்

திருக்குறள் - பெண் பார்க்கும் படலம் 


திருமணத்துக்கு என்று ஒரு பெண்ணை தேர்ந்து எடுப்பது என்றால் எப்படி தேர்ந்து எடுப்பது?

அழகு, கல்வி, செல்வம், உயரம், நிறம், எடை, இதெல்லாம் தேவை இல்லை என்று சொல்லிவிட்டார் வள்ளுவர்.

போன பிளாகில் வளத்தக்காள் என்றால் என்ன என்று பார்த்தோம்.

வரவுக்கு ஏற்ப செலவு செய்வது.

சரி, அது மட்டும் போதுமா?

"மனைத்தக்க மாண்புடையள் ஆகி" என்று சொல்கிறார். அது என்ன?

சிலருக்கு நல்ல குணம்  இருக்கும். ஆனால், சில செயல் நன்றாக இருக்காது.

வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு நல்ல சாப்பாடு தருவாள், நல்ல துணிமணி தருவாள் ஆனால் ஒவ்வொரு நாளும் அவளை ஏதாவது குற்றம் கண்டு பிடித்து திட்டிக் கொண்டே இருப்பாள்.

உதவுகின்ற குணம் இருக்கிறது.  மட்டு மரியாதை இல்லாமல் திட்டும் கெட்ட செயல் இருக்கிறது.

நல்ல குணமும், நல்ல செயலும் சேர்ந்ததைத் தான் "மனைத்தக்க மாண்பு என்கிறார் வள்ளுவர்.


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


சரி, அது என்ன நல்ல குணம், நல்ல செயல் ?

பரிமேல் அழகர் உரை எழுதுகிறார் ...

"நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின.

நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின"

துறந்தார் பேணல் என்றால், துறவிகளை போற்றுதல், பாதுகாத்தல்

விருந்து அயர்தல்  என்றால் விருந்தை வரவேற்று, உபசாரம் செய்தால்.

ஏழைகள் மேல் அன்பு.

முதலாயின என்று சொல்லும் போது, அது போன்ற குணங்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, தேவைப்படும் தனி மனிதர்களுக்கு உதவுதல். பெண்ணிடம் அந்த அருள், அன்பு இருக்க வேண்டும்.

பிச்சைக்காரன் வந்தால், போ போ என்று விரட்டி அடிக்கும் பெண்ணிடம் அந்த அன்பு இல்லை என்று அர்த்தம்.

அவை நல்ல குணங்கள்.

நல்ல செயல்கள் என்றால் என்ன ?

முதலாவது, வாழ்க்கைக்கு வேண்டிய பொருள் அறிந்து கடை பிடித்தல்.

கடை பிடித்தல் என்றால் கடைசிவரை பிடித்துக் கொள்ளுதல். எது வாழ்கைக்குத் தேவையோ, அதை கடைசிவரை பிடித்துக் கொள்ளுதல்.

"நான் வியாழக்கிழமை மாமிசம் சாப்பிட மாட்டேன்"

"வெள்ளிக் கிழமை பொய் சொல்ல மாட்டேன்"

"புதன் கிழமை தண்ணி அடிக்க மாட்டேன்"

இதெல்லாம் , கடைசிவரை கை கொள்ளுதல் அல்ல. பெண்கள், ஒன்றைப் பிடித்தால், கடைசிவரை அதை விட மாட்டார்கள்.

மனைவி எவ்வளவு அழகாக, அறிவாக இருந்தாலும், ஆணின் மனம் மற்றொரு பெண்ணின்  மேல் போவது பற்றி நாம் அறிந்து இருக்கிறோம்.

கணவன் எவ்வளவு மோசமானவாக இருந்தாலும், அவனை அவன் மனைவி விட்டு விடுவதில்லை என்றும் பார்க்கிறோம் .

விரதம், ஆசாரம், பக்தி, அன்பு, என்று பெண்கள் ஒன்றை நினைத்து விட்டால், அதை விடாப்பிடியாக பிடித்துக் கொள்வார்கள். அதில் இருந்து எளிதில் மாறமாட்டார்கள். ஆண்கள், எளிதில் மாறி விடுவார்கள்.

இரண்டாவது, அட்டில் தொழில் வன்மை. அட்டில் என்றால் சமையல். சமையல் செய்வதில் திறமை இருக்க வேண்டும். சமையல் செய்தால் போதாது. அதில் திறமை இருக்க வேண்டும்.

ருசி, இருப்பதைக் கொண்டு நல்ல உணவு தயாரித்தல், திடீரென்று உறவினர்களோ, நண்பர்களோ வந்து   விட்டால் சட்டென்று ஏதோ ஒரு நல்ல உணவை தயார் செய்து தருவது  போன்றவை.

கடையில் வாங்கித் தர மனைவி வேண்டுமா?

மனைவி கையின் மணம் , பக்குவம் சாப்பாட்டில் தெரிய வேண்டும்.

மூன்றாவது, ஒப்புரவு.

ஒப்புரவு என்றால் சமுதாயத்துக்கு செய்யும்  நன்மை. தனி மனிதனுக்கு செய்யும் நன்மைகளுக்கு  ஈகை என்று பெயர். சமுதாயத்துக்கு செய்யும் நன்மைகளுக்கு ஒப்புரவு என்று பெயர்.

அது என்ன ஒப்புரவு?

ஊரில் ஒரு விஷேஷம், கோவில் திருவிழா, குடியிருக்கும் அபார்ட்மெண்டில் ஏதோ ஒரு  கொண்டாட்டம், என்றால் அதற்கு தன்னால் ஆன உதவிகளை செய்வது. நமக்கும் அதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று இருக்கக் கூடாது.

நல்ல குணம், நல்ல செயல், வரவு அறிந்து செலவழிக்கும் பெண் நல்ல வாழ்க்கைத் துணை.

மற்றது?

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_16.html

Thursday, May 14, 2020

திருக்குறள் - வளத்தக்காள்

திருக்குறள் - வளத்தக்காள் 


குடும்பத்தில், குறிப்பாக கணவன் மனைவி உறவில் விரிசல் விழ காரணம் என்ன?

பல காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் பொருளாதாரம் தான் காரணமாக இருக்கும்.

மனைவிக்கு பல ஆசைகள் இருக்கும்.

- இருக்க ஒரு நல்ல வீடு வேண்டாமா? இப்படி ஒரு சின்ன புறா கூண்டில் இருந்து கொண்டு மூச்சு முட்டுது

- எப்பப் பாரு, ஒரே நகை. எந்த விழாவுக்கு போனாலும் திருப்பி திருப்பி ஒரே நகையை போட்டுக் கொண்டு போக வேண்டி இருக்கிறது.

- மிஞ்சி மிஞ்சி போனா ஒரு சினிமா, ஒரு ஹோட்டல்...அவ்வளவு தான். எத்தனை அயல் நாடுகள் இருக்கு. அங்கெல்லாம் என்ன மாதிரி இருக்கு. வருஷம் ஒரு தரம் இல்லாட்டியும், ரெண்டு அல்லது மூணு வருஷத்துக்கு ஒரு தடவையாவது அங்கெல்லாம் போய் பாக்க வழி இல்லை.

- பெரிய, விலை உயர்ந்த கார் வேண்டாம்...அதுக்காக எத்தனை நாள் தான் இந்த இரண்டு சக்க வண்டியிலேயே போறது

- பிள்ளைகளை அயல் நாட்டுக்கு அனுப்பி படிக்க வைக்கவிட்டாலும் பரவாயில்லை, உள்ளூரில் ஒரு நல்ல காலேஜில் படிக்க வைக்கலாம்ல

என்று மனைவிக்கு ஆயிரம் ஆசை இருக்கும்.

கணவன்மார்களும் இதில் சளைத்தவர்கள் அல்ல....

பெரிய வீடு, பெரிய கார், குடும்பத்தோட அயல் நாடு சுற்றுலா, என்று அவர்களுக்கும்  ஆசை இருக்கும்.

வசதி வேண்டாமா?

மனைவி ஆராய்ச்சி செய்ய வேண்டும். எது முடியும் , எது முடியாது என்று.

முடியாத ஒன்றை விட்டு விட்டு, முடிந்ததில் மகிழ்ச்சியாக இருக்க பழக வேண்டும்.

முடியாதுனா பரவாயில்லை என்று முகத்தை மூணு முழத்துக்கு நீட்டி வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது.

கணவன் சொன்னால் கூட, "அதெல்லாம் வேண்டாங்க....நம்ம லெவலுக்கு அது ரொம்ப  அகலக் கால்...அதை விட குறைவான ஒன்றைப் பார்ப்போம் " என்று சொல்ல  வேண்டும்.  "கடன உடன வாங்கிகிட்டு, வாங்குற சம்பளத்துல பாதி வட்டி கட்டியே ஓஞ்சு போவோம்...வேண்டாம், நமக்கு அது சரிப்படாது" என்று   எடுத்துச் சொல்ல வேண்டும்.

கணவனை உசுப்பேத்தி விட்டு, இராவா பகலா உழைக்க விட்டு, கடனை வாங்கி, வட்டி கட்டி, எல்லோரையும் சங்கடத்தில் ஆழ்த்தக் கூடாது.

வள்ளுவர் காட்டும் மனைவியின் தகுதிகளில் ஒன்று "கணவனின் வரவு அறிந்து செலவு செய்தல்"

பாடல்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

பொருள் 


"வளத்தக்காள்" - கணவனின் வளமை அறிந்து செலவு செய்பவள். வரவுக்கு மீறிய செலவை தானும் செய்யக் கூடாது, கணவனையும் செய்ய விடக் கூடாது. 


3 பெட் ரூம் ரொம்ப விலை. நமக்கு கட்டுப்படி ஆகாது. பின்னால் வசதி வந்தால் பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு 2 பெட் ரூம் வீடே போதும் என்று சொல்ல வேண்டும். 

செலவு கட்டுக்குள் இருந்தால், வீட்டில் பாதி சிக்கல் இருக்காது. 

கையில் பணம் மிச்சம் இருக்கும். வாழ்வில் ஒரு தைரியம் இருக்கும். 

மாறாக, சொத்துக்கு மேல் கடன் இருந்தால், வாழ்வில் பற்று இருக்காது. பயம் தான் இருக்கும். 

இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லி இருக்கார். 

நமக்கு இதெல்லாம் சரிப்படாது இல்ல? வள்ளுவர் அந்தக் காலத்து ஆளு. அவருக்கு என்ன தெரியும்? பாவம். 

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_70.html


தேவாரம் - குரங்கு கை பூமாலை

தேவாரம் - குரங்கு கை பூமாலை 


பள்ளிக் கூடத்தில் முதலாவது வகுப்பில் படித்த பாடம்.

ஒரு ஊரில் ஒரு தொப்பி வியாபாரி இருந்தான். அவன் ஊர் ஊராக சென்று தொப்பி விற்று வந்தான். அப்படி செல்லும் வழியில், ஒரு நாள் அவனுக்கு மிகுந்த களைப்பாக இருக்கவே, ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து சற்று இளைப்பாறினான்.

நடந்த களைப்பு, மர நிழல், சுகமான காற்று..அப்படியே கண் அயர்ந்து தூங்கி விட்டான்.

சற்று நேரம் கழித்து விழித்துப் பார்த்தால், கூடையில் ஒரு தொப்பி கூட இல்லை. எங்கடா போச்சு என்று சுத்தி முத்தி பார்த்தான். ஒன்றும் புலப்படவில்லை.

அப்போது மரத்தின் மேல் ஏதோ சப்த்தம் கேட்கவே அண்ணாந்து பார்த்தான்.

பார்த்தால், மரத்தில் பல குரங்குகள், இவனுடைய தொப்பியை தலையில் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தன.

அந்த குரங்குகளிடம் இருந்து தொப்பியை எப்படி வாங்குவதும் என்று சிந்தித்த அந்த வியாபாரி, தன் தலையில் இருந்த தொப்பியை தூக்கி தரையில் எறிந்தான். அவன் செய்வதைப் பார்த்த குரங்குகள், தங்கள் தலையில் இருந்த தொப்பியை கழற்றி தரையில் எறிந்தன. வியாபாரி எல்லா தொப்பியையும் எடுத்துக் கொண்டு இடத்தை காலி பண்ணினான்.

குரங்கு புத்தி.  பார்த்ததை அப்படியே செய்யும்.

திருமுதுகுன்றம் என்ற இடத்துக்கு திருஞானசம்பந்தர் போகிறார்.

அந்த ஊரில் உள்ள கோவிலில், அர்ச்சகர் சென்று நடையை திறப்பதற்கு முன், சாமிக்கு பூவால் அர்ச்சனை செய்த மாதிரி அவர் மேல் ஒரே பூ.

அங்கு வரும் பக்தர்கள்  பூ போட்டு வணங்குவதை கண்ட அந்த ஊர் குரங்குகள், எல்லோரும் போன பின், ஸ்வாமி மேல் உள்ள மாலையை எடுத்து, அதில் உள்ள பூக்களை பிய்த்து, ஸ்வாமி மேல போட்டன. பக்தி எல்லாம் இல்லை. சும்மா, எல்லோரும் போடுகிறார்களே என்று அவையும் போட்டன.

இராத்திரி எல்லாம் இதுதான் வேலை. மரத்தில் உள்ள பூவை எல்லாம் பறித்து, சுவாமி மேல போட வேண்டியது...அது ஒரு விளையாட்டு .....

பாடல்


எந்தை இவன் என்று இரவி முதலா  இறைஞ்சுவார் 
சித்தை யுள்ளே  கோயிலாகத் திகழ்வானே 
மந்தி ஏறி இனமா  மலர்கள் பல கொண்டு 
முந்தித்  தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே.

பொருள்


எந்தை = என்னுடைய தந்தை

இவன் என்று  = இவன் என்று

இரவி = சூரியன்

முதலா = முதலான தேவர்கள்

இறைஞ்சுவார்  = வணங்குவர்

சித்தை யுள்ளே = அவர்களின் சிந்தையில் உள்ள அவன்

 கோயிலாகத் திகழ்வானே  = இங்கு கோவில் கொண்டு திகழ்கிறான்

மந்தி ஏறி = குரங்குகள் ஏறி

இனமா  மலர்கள் பல கொண்டு  = ஒத்த மலர்கள் பலவற்றைக் கொண்டு

முந்தித் = முன்னாடியே

தொழுது வணங்கும் = தொழுது வணங்கும்

கோயில் முதுகுன்றே. = முதுகுன்றில் உள்ள கோவில்.

நாமும் குரங்கில் இருந்து வந்தவர்கள்தானே.

அந்த குரங்கின் புத்தி நமக்கும் இருக்கும் தானே?

நல்லவர்களோடு சேர்ந்தால், அவர்கள் செய்வதை நாமும் செய்யத் தலைப்படுவோம்.

மற்றவர்களோடு சேர்ந்தாலும் அப்படியே.

நமது மூளையில் mirror neuron என்று ஒன்று உண்டு. மற்றவர்கள் செய்வதை நம்மை அறியாமலேயே  நாம் செய்வோம்.

சிறு குழந்தை, ஒருவாரம், இரண்டு வாரம் ஆன குழந்தை முன்னால் நாம் சென்று   சிரித்தால், அதுவும் சிரிக்கும். நாம் அழுவது போல பாவனை செய்தால், அதுவும் அழும்.

காரணம் தெரியாது.

சினிமா, டிவி பார்க்கும் போது, நம்மை அறியாமலேயே நாம் அழுவோம், சிரிப்போம், நம் தசைகள் முறுக்கு ஏறும், தளரும்...காரணம் அங்கே திரையில் நடப்பதைப் பார்த்து  நம் mirror neurons அப்படியே இங்கே செய்யும்.

நேரம் இருந்தால், இது பற்றி google செய்து பார்க்கவும். சுவாரசியமான ஒன்று.

பாடலுக்கு வருவோம்.

நாம் யாரோடு சேர்கிறோமா, அவர்கள் செய்வதை, அவர்கள் பேசுவதை போலவே நாமும் பேசத் தலைப்படுவோம்.

யாருடன் பழகுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்.

நான் யாரோட பழகினாலும், நான் உறுதியாக இருப்பேன் என்று சொல்லாதீர்கள். இவை நிகழ்வது உங்கள் செயல்பாட்டில் இல்லை. உங்களையும் அறியாமல் அவர்கள் வழியில் சென்று விடுவீர்கள்.

அடியார்  கூட்டம் அடியார் கூட்டம் என்று மீண்டும் மீண்டும் சொல்லக் காரணம், ஒரு காலத்தில் அடியார்கள் நல்லவர்களாக இருந்தார்கள்.

அதை விட்டு விடுவோம்.

நல்லவர்களை தேர்ந்து எடுத்து, அவர்களோடு பழகுங்கள்.

மற்றவர்கள் சகவாசத்தை விடுங்கள்.

இரவி முதலாய தேவர்களுக்கு முன்னே சென்று குரங்குகள் வழிபட்டன. குரங்குகளே அவ்வாறு  நல்ல காரியம் செய்ய முடியும் என்றால், நம்மால் எவ்வளவு செய்ய முடியும்.

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_54.html

Wednesday, May 13, 2020

திருக்குறள் - பெண் பார்க்கும் படலம்

திருக்குறள் - பெண் பார்க்கும் படலம் 


பையனுக்கு கல்யாண வயது வந்து விட்டது. ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.

அந்த பையனுக்கு ஆயிரம் கனவு இருக்கும் அல்லவா ...பெண் அழகா இருக்கணும், அந்த நடிகை மாதிரி மூக்கு, இந்த நடிகை மாதிரி கண் , அப்புறம் உயரம், நிறம், எடை, கூந்தல் என்று கற்பனை விரிந்து கொண்டே போகும்.

அதோடு கூட, நல்ல படித்த பெண்ணாக இருக்க வேண்டும்.

வீட்டில் பெற்றோர் கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும்....நம்ம ஜாதியில் இருந்தால் பரவாயில்லை. அப்புறம் கொஞ்சம் சொத்து பத்து இருந்தால் பின்னாடி உதவும். நல்ல குடும்பமா இருக்கணும். அண்ணன் தம்பி எல்லாம் நல்லா படிச்சு நல்ல வேலையில இருக்கணும் என்று கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கும்.

வீட்டில் பெரியவர்கள் இருந்தால், ஜாதக பொருத்தம் பார்ப்பார்கள். கட்டுப் பெட்டியான குடும்பமாக இருந்தால் பெற்றோரும் பார்ப்பார்கள்.

சரி, இப்படி அழகு, படிப்பு, குடும்பம், சொத்து, சீதனம், ஜாதகம் எல்லாம் பார்த்து செய்த திருமணம் சரியாக இருக்குமா?

அதுக்காக, இது எல்லாம் பாக்காம கண்ணை மூடிக் கொண்டு பெண் எடுக்க முடியுமா?

வள்ளுவர் சொல்கிறார், இதெல்லாம் தேவை இல்லாதது.

அழகு எவ்வளவு நாள் இருக்கும்? சொத்து நம் கையில் இருக்கும் என்று ஏதாவது உத்திரவாதம் உண்டா?  படித்த பெண்கள் எப்படி இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும்.

இதெல்லாம் கொஞ்ச நாள்.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.

அப்புறம் சலித்து விடும். அந்த ஆர்வம், அந்தத் தேடல், அந்த பரபரப்பு  சீக்கிரம்  அடங்கி விடும்.

அப்புறம் என்ன செய்வது?

70 அல்லது 80 வருடம் அந்த பெண்ணோட வாழ வேண்டுமே?

அவள் படித்தது எல்லாம் காலாவதியாகி இருக்கும். அழகு நாளுக்கு நாள் தேய்ந்து போய் கொண்டே இருக்கும்.

மொத்தம் மூன்று முக்கிய அம்சங்கள் ஒரு வாழ்க்கைத் துணைவிக்குத் தேவை என்கிறார்.

அது ....

பாடல்

மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


பொருள்


மனைத்தக்க = மனைக்கு தக்க. அதாவது இல்லறத்துக்கு ஏற்ப

மாண்புடையள் ஆகித் = மாண்பு உடையவள் ஆகி

தற் கொண்டான் = தன் கணவனின்

வளத்தக்காள் = வளமைக்கு  தக்கபடி வாழ்பவள்

வாழ்க்கைத் துணை  = நல்ல வாழ்க்கைத் துணை

அது என்ன மனைக்கு தக்க மாண்பு, வளமைக்கு தக்க வாழ்வு?

இதெல்லாம் புரியாமல் தான் கல்யாணம் பண்ணிக் கொண்டு  அல்லாடுகிறோம்.

ஒரு மனைவியாக தான் என்ன செய்ய வேண்டும் அவளுக்கும் தெரியவில்லை.

அவளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அவனுக்கும் தெரியவில்லை.

கல்யாணம் ஆனபின் தனிக் குடித்தனம் போய் , எல்லாம் தானே சாதித்து விடலாம்  என்று அந்த பெண் நினைக்கிறாள்.

என்னமோ செஞ்சிட்டுப் போகட்டும். என்னை நிம்மதியா விட்டால் சரி என்று அவன்  நினைக்கிறான்.

இதுவா குடும்பம் ?

ஒரு மனைவி செய்ய வேண்டியது என்ன?

வள்ளுவர் சொன்னதை, பரிமேல் அழகர் சொன்னதை சொல்லி விடலாம்.

ஆனால், இந்த பெண் விடுதலை அறிஞர்களை நினைத்தால் சற்று பயமாக இருக்கிறது.

வள்ளுவர் சொன்னால் நாங்க கேட்கணுமா என்று கொடி பிடித்துக் கொண்டு ஊர்வலம்  கிளம்பி விட்டால் என்ன செய்வது ? ஊர் இருக்கும் நிலையில் இது வேறா   என்று தயக்கமாக இருக்கிறது...

என்ன சொல்றீங்க?



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_13.html

Tuesday, May 12, 2020

கந்தர் அலங்காரம் - நான் செய்த குற்றம் என்ன ?

கந்தர் அலங்காரம் - நான் செய்த குற்றம் என்ன ?


நல்ல கார் ஒன்று வாங்கி வருகிறோம். சிறிது நாளில் சரியாக ஓட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஸ்டார்ட் ஆக மாட்டேன் என்கிது. இல்லை என்றால் பிரேக் பிடிக்காமல் எங்கோ சென்று மோதி விடுகிறது. பின்னொரு நாள் முன் விளக்கு எரியாமல் போகிறது.....

தப்பு யார் பேரில்? நம் பேரிலா, அல்லது அந்த ஓட்டை வண்டியை செய்த அந்த கார் கம்பெனி பேரிலா?

சரியானபடி தயார் செய்யாத அந்த கம்பனிதானே பொறுப்பு?

அது போல,

நம் புலன்களும், இந்திரியங்களும் சரியான படி வேலை செய்யாமல் கண்டமேனிக்கு திரிந்தால் அதற்கு யார் பொறுப்பு? அவற்றைப் படைத்த அந்த பிரம்மன் தானே பொறுப்பு ஏற்க வேண்டும்? நாம் என்ன செய்ய முடியும் ? என்று கேட்கிறார் அருணகிரிநாதர்.

பாடல்


கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்ததாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டையந்தாள்சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே.



பொருள்


கோடாத = கோணல் இல்லாத, குற்றம் இல்லாத

வேதனுக்கு = வேதங்களைக் கொண்டு பிறப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மனுக்கு

யான்செய்த குற்றமென் = நான் என்ன குற்றம் செய்தேன்

 குன்றெறிந்த = கிரௌஞ்ச மலை என்ற குன்றின் மேல் வேல் எறிந்தவனே

தாடாள னே = விடா முயற்சி உள்ளவனே

தென் தணிகைக் குமர = தென் புரத்தில் உள்ள தணிக்கை மலையில் உள்ள குமரனே

நின் = உன்னுடைய

றண்டையந்தாள் = தண்டை அணிந்த திருவடிகள்

சூடாத சென்னிம் = வைத்துக் கொள்ளாத தலையும்

நாடாத கண்ணுந் = உன்னை வந்து காணாத கண்களும்

தொழாதகையும் = உன்னை தொழாத கைகளும்

பாடாத நாவு = பாடாத நாவும்

மெனக்கே = எனக்கே

தெரிந்து = தெரிந்து

படைத்தனனே. = படைத்தானே

சரி, செய்த கார் நிறுவனத்தின் பிழைதான். அதற்காக, அந்த நிறுவனத்தின் மேலாளரை வாய்க்கு வந்த படி  பேச முடியுமா?

அவரிடம் மெல்ல, மென்மையாக எடுத்துச் சொல்லி, காரியத்தை முடிப்பதுதானே சாமர்த்தியம்?

பிரம்மன் தவறு செய்து விட்டான்.

அவன் தான் குற்றவாளி என்று சொன்னால், பிரம்மனுக்கு கோபம் வரும்.  அடுத்த பிறவியில் குரங்காகவோ, கொரோனா வைரஸ் ஆகவோ படைத்து விட்டால் என்ன செய்வது?

எனவே, "கோடாத வேதனுக்கு" என்று ஆரம்பிக்கிறார்.

அவன் எப்போதும் தவறு செய்ய மாட்டான்.

"எனக்கே தெரிந்து படைத்ததனனே"...நான் மோசமான ஆளுன்னு தெரிஞ்சு எனக்கு இப்படி ஒரு  டப்பா காரை கொடுத்து விட்டான்.

பிழை என்பேரில் இல்லை.  அவர் பேரிலும் இல்லை. நீ பார்த்து ஏதாவது செய்  என்று   வேண்டுகிறார்.

நான் வேணும்னு உன்னை வணங்காமல் இருக்க வில்லை. இந்த வண்டி கொஞ்சம்  டப்பா. எனவே என் மேல் கோபிக்காதே என்று முருகனிடம் வேண்டுகிறார்.

வண்டிய service க்கு விடணும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_12.html

Monday, May 11, 2020

கம்ப இராமாயணம் - நீயும் அந்த வஞ்சனை நினைத்தாயா?

கம்ப இராமாயணம் - நீயும் அந்த வஞ்சனை நினைத்தாயா?


பெண்ணின் மனதில் என்ன ஓடுகிறது என்று யார் அறிவார்? அந்த பெண்களே அறிவார்களா என்பது சந்தேகம்.

அசோக வனத்தில், சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளைக் காண்கிறான். "பேசாமல் என் கூட வந்து விடு. உன்னை இங்கிருந்து நான் கொண்டு போய் விடுகிறேன். இராவணனை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.

பேசாமல், அனுமன் கூட போக வேண்டியது தானே.

விமானத்தில்,  ஒரு பெண் போகிறாள். அந்த விமானம் கடத்தப் படுகிறது. கமாண்டோ படை வீரர்கள் வந்து எல்லோரையும் மீட்கிறார்கள். அப்போது அந்தப் பெண், "அதெல்லாம் முடியாது. உங்களோடு வர மாட்டேன். என் கணவன் வந்து தான் என்னை மீட்க வேண்டும். அப்போது தான் வருவேன் " என்று அடம் பிடித்தால் என்ன செய்வது?

சீதை சொல்கிறாள் அனுமனிடம்

"நீ என்னை மீட்டுக் கொண்டு போய் விட்டால், அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு சேர்க்கும். இராமனை ஏமாற்றி இராவணன் என்னை இங்கே கொண்டு வந்து விட்டான். அது போல நீயும் இராவணனை ஏமாற்றி என்னை கொண்டு போக நினைக்கிறாயா. அப்படி கொண்டு போனால் அவனுக்கும், உனக்கும் என்ன வேறுபாடு? " என்று.


பாடல்

'அன்றியும், பிறிது உள்ளது ஒன்று; ஆரியன்
வென்றி வெஞ்சிலை மாசுணும்; வேறு இனி
நன்றி என் ?பதம் வஞ்சித்த நாய்களின்
நின்ற வஞ்சனை,நீயும் நினைத்தியோ ?


பொருள்


'அன்றியும், = அது மட்டும் அல்லாமல்

பிறிது உள்ளது ஒன்று = வேற ஒண்ணும் இருக்கு

ஆரியன் = இராமன்

வென்றி = வெற்றி கொள்ளும்

வெஞ்சிலை  = வெம்மையான வில்

மாசுணும் = மாசு படும்

வேறு இனி = இனி மேல்

நன்றி என் ?பதம் = நல்லது என்ன இருக்கு ?

வஞ்சித்த நாய்களின் = வஞ்சனை செய்த நாய்களின்

நின்ற வஞ்சனை = அவர்கள் மனதில் நின்ற வஞ்சனை

நீயும் நினைத்தியோ ? = நீயும் செய்ய நினைக்கிறாயா?

அவர்கள்தான் இராமனின் வில்லுக்கு மாசு உண்டாக்கி விட்டார்கள் என்றால், நீயும்  அதையே நினைக்கிறாயா ?

என்று கேட்கிறாள்.

கணவனின் பெருமை கெட்டுப் போய் விடக் கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருக்கிறாள்.

இருப்பதோ அரக்கனின் சிறையில்.

அக்கம் பக்கம் துணைக்கு யாரும் இல்லை.

மிகக் கடினமான நிலை. அதற்கு முன்னால் தற்கொலைக்கு கூட சீதை முயன்று இருக்கிறாள். அவ்வளவு துன்பமான நிலை.

அனுமன் அழைத்துக் கொண்டு போகிறேன் என்கிறான். சீதை இடத்தில் வேறு யாராவது இருந்து இருந்தால், தப்பித்தால் போதும்டா சாமி என்று கிளம்பி இருப்பார்கள்.

கணவனின் பெருமை தன்னால் கெட்டு விடக் கூடாது என்பதற்காக  அந்தத் துன்பத்தையும்  சீதை பொறுத்துக் கொள்கிறாள்.

ஆண்களின் உலகில் தனி ஒரு பெண்ணாக சீதை நிற்கிறாள்.

இராவணனின் காமம் ஒருபுறம்.

மான் பின் போன இராமன் மறுபுறம்.

தவறு என்று தெரிந்தும், சீதையை தனியே விட்டு விட்டுப் போன இலக்குவன் இன்னொரு புறம்.

வா, கூட்டிக் கொண்டு போகிறேன் என்று வந்து நிற்கும் அனுமன் மறுபுறம்.

இவர்களுக்கு மத்தியில் சீதை தனியாளாக நின்று கொண்டு, எது சரி, எது தவறு  என்று முடிவு எடுத்து, அந்த முடிவில் உறுதியாக இருக்கிறாள்.

"எங்க வீட்டு காராருக்கு ஒண்ணும் தெரியாது...பேரு தான் பெரிய பெரிய பேரு...ஒண்ணு சாதிக்கத் தெரியாது...ஒரு சாமர்த்தியம் கிடையாது" என்று கணவனை   மற்றவர்கள் முன் ஏளனமாக பேசும் பெண்கள், சற்று யோசிக்க வேண்டும்.

இது போன்ற நல்ல நூல்களை சிறுவயது முதலே சொல்லி கொடுத்து வளர்த்தால், நல்ல குணங்கள் வந்திருக்குமோ என்னவோ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_48.html

தேவாரம் - மிகு கொடை வடிவினர்

தேவாரம்  -  மிகு கொடை வடிவினர் 


ஒவ்வொரு துறையிலும் மிக மிக திறமை வாய்ந்தவர்களை பார்த்தால் தெரியும், அந்தத் திறமையே ஒரு அழகாகத் தெரியும்.

சில பாடகர்களை பார்த்தால்,  சராசரி ஆளை விட அழகு கொஞ்சம் குறைவாகவே இருக்கும். ஆனால், அவர்களுக்கு பின்னால் இருக்கும் திறமை, அதுவே ஒரு அழகைக் கொடுக்கும்.

பெரிய பெரிய அறிவியல் அறிஞர்களை பார்க்கிறோம். தலையெல்லாம் கலைந்து, சவரம் செய்யாமல் தாடி மீசையோடு இருப்பார்கள். அனால், அவர்கள் கண்டு பிடித்த உண்மைகளை நாம் அறியும் போது அவர்களின் வசீகரம் கூடியது போல இருக்கும்.

தானம் கொடுப்பதே ஒரு அழகாம். பிறருக்கு உதவுவது ஒரு அழகைத் தரும் என்கிறார் சேக்கிழார் பெருமான்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

பிள்ளையார் எப்படி வந்தார் என்பதற்கு பல கதைகள் இருக்கின்றன. பார்வதி மஞ்சள் தூளை பிடித்து வைத்து, அதற்கு உயிர் கொடுத்து, சிவன் அந்த பிள்ளையை வெட்ட, பின் யானையின் தலையை கொண்டு வந்து பொருத்தி என்றெல்லாம் கதை போகும்.

திருஞான சம்பந்தர் சொல்கிறார்....

ஒரு முறை சிவனும், பார்வதியும், யானை வடிவம் கொண்டு இன்பம் அனுபவித்தார்களாம். அதில் பிறந்தவர் தான் கணபதி என்கிறார்.

பாடல்

பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.


பொருள்

பிடியத னுரு = பிடி அதன் உரு = பிடி என்றால் பெண் யானை. அதன் உருவத்தை

வுமை கொள = உமை கொள்ள. உமா தேவி கொள்ள.

மிகு = பெரிய

கரியது =கரி + அது = கரி என்றால் ஆண் யானை.

வடிகொடு = வடிவம் கொண்டு

தனதடி = தனது அடியார்

 வழிபடு = வழிபட

மவரிடர் = அவர் இடர். அவர்களின் துன்பங்களை

கடி = கடிய, மாற்ற

கண பதிவர = கணபதி வர (பிறக்க)

வருளினன் = அருளினன். அருள் செய்தான்

 மிகுகொடை = சிறந்த கொடை

வடிவினர் = அதனால் அழகிய வடிவம் கொண்டவர்கள்

பயில் = வாழும்

வலி வல = வலிவலம் என்ற ஊரில்

முறை யிறையே = உறையும் இறையே. வாழும் இறைவனே

பிறருக்கு உதவி செய்தால், அதனால் ஒரு அழகு வரும் என்பது ஒரு செய்தி.

அது மட்டும் அல்ல, கொஞ்சம் இலக்கணம் பார்ப்போம்.

தமிழ் எழுத்துக்களில் குறில் எழுத்து, நெடில் எழுத்து என்று உண்டு.

குறுகிய ஓசை கொண்டது குறில் எழுத்து. ஒரு மாத்திரை அளவு என்பார்கள். மாத்திரை என்பது  கண் சிமிட்டும் நேரம் அல்லது கை நொடிக்கும் நேரம்.  அ, இ, உ, எ, ஒ என்பவை குறில் எழுத்துக்கள்.

நெடிய ஓசை கொண்டது நெடில் எழுத்து. இரண்டு மாத்திரை அளவு உள்ளது.  ஆ, ஈ, ஊ, ஏ , ஐ, ஓ  ...இவை நெடில் எழுத்துக்கள்.

மேலே உள்ள பாடலைப் பாருங்கள்.

குறில் எழுத்து மட்டும் தான் இருக்கும். நெடில் எழுத்தே கிடையாது.

நம்மால் இப்படி ஒரு வாக்கியம் எழுத முடியுமா என்பது சந்தேகம். முழு பாடல் அதிலும் ஒரு கதை, ஒரு கருத்து என்று.

ஞான சம்பந்தர்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_11.html

Saturday, May 9, 2020

அபிராமி அந்தாதி - மத்தில் சுழலும் என் ஆவி

அபிராமி அந்தாதி - மத்தில் சுழலும் என் ஆவி 


எது இன்பம், எது துன்பம் என்று அறியாமல் உயிர்கள் தடுமாறுகின்றன.

அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இன்பம் எது துன்பம் எது என்று கூடவா தெரியாமல் இருப்பார்கள், அதெல்லாம் தெரியும் எங்களுக்கு என்று சிலர் கூறலாம். சிந்திப்போம்.

இனிப்பு சாப்பிடுவது இன்பமா, துன்பமா?

சந்தேகம் என்ன? இன்பம் தான்.லட்டு, பூந்தி, பாதுஷா, ஜாங்கிரி, ஐஸ் கிரீம் இதெல்லாம் சாப்பிடுவது இன்பம்தான்.

அப்படியா? யோசித்துப் பாருங்கள்.

அவை எவ்வளவு துன்பம் தருகிறது என்று தெரியும்.

அதே போல் உடற் பயிற்சி செய்வது இன்பமா, துன்பமா?

புகை பிடிப்பது, மது அருந்துவது, திருமணம் செய்து கொள்வது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது....?

துன்பத்தை, இன்பம் என்று நினைத்துக் கொண்டு உயிர்கள் அவற்றின் பின்னால் போகின்றன.

உள்ளத்துக்குள்ளேயே பெரிய துன்பம், இந்தப் பிறவியில் மீண்டும் மீண்டும் பிறந்து, வளர்ந்து, இறந்து, மீண்டும் அதே போல்...எவ்வளவு பெரிய துன்பம்.   அது தெரியாமல்,  காதல், கல்யாணம், பிள்ளைகள், வீடு, வாசல் என்று உயிர்கள்  அறியாமையில் கிடந்து உழல்கின்ற.

நாம், துன்பத்தில் இருக்கிறோம் என்று கூட தெரியாமல், அதுவே இன்பம்  என்று   நினைத்துக் கொண்டு இருக்கின்றன.

பெரிய பெரிய ஞானிகள் எல்லாம், இந்த பிறவி  என்பது துன்பம் நிறைந்தது, அதில் இருந்து  விடுதலை பெற வேண்டும் என்றே நினைத்தார்கள்.

"அம்மா, அபிராமி, என்னால் முடியவில்லை. இந்த பிறப்பு, இறப்பு என்று பிறவிச் சுழலில் கிடந்து  தளர்கின்றேன்.  தயிர் மத்தில் அகப்பட்ட தயிர் போல, வெளியே போவதும், உள்ளே வருவதுமாக கிடந்து அலைகின்றேன் . என்னை இந்தத் துன்பத்தில்  இருந்து  காப்பாற்று"

என்று வேண்டுகிறார்.

பாடல்


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே


பொருள்


ததியுறு = தயிரை கடையும்

மத்தின்  = மத்தில் கிடந்து

சுழலும் என் ஆவி = சுழல்கின்றது என் ஆவி

தளர்விலதோர் = தளர்வில்லாத ஒரு

கதியுறு வண்ணம் = வழியை

கருது  = கருதுவாய். நினைப்பாய் .

கண்டாய் = நீ கண்டாய்

கமலாலயனும் = தாமரை மலரில் இருக்கும் அயனும் (ப்ரம்மா)

மதியுறு = திங்களை

வேணி  = சடை (சடையில் சூடிக் கொண்ட )

மகிழ்நனும் =  மகிழ்ந்து இருக்கும் சிவனும்

மாலும் = திருமாலும்

வணங்கி = உன்னை வணங்கி

என்றும் = எப்போதும்


துதியுறு = துதிக்கும்

சேவடியாய் = சிறந்த திருவடிகளை கொண்ட

சிந்துரானன  = சிவந்த மேனியைக் கொண்ட

சுந்தரியே = அழகானவளே

திரும்ப திரும்ப பிறவி எடுப்பது நமக்கு ஒன்றும் தெரிவது இல்லை. போன பிறவியில் என்னவாக இருந்தோம்? தெரியாது. எனவே, அதில் வரும் களைப்பு தெரிவதில்லை.

நம்மை விட பல படி மேலே போனவர்கள் அவற்றை உணர்கிறார்கள்.

என் வீடு வாசலில் இருந்து  பார்த்தால், ஒரு பத்தடி தூரம் தெரியும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு  இருபது அடி தூரம் தெரியும். எனக்குத் தெரியவில்லை என்பதற்காக, அந்த இருபதடிக்கு மேல் உலகமே கிடையாது என்று சொல்ல முடியுமா?

வீட்டு மாடி மேல் ஏறி நின்று பார்த்தால், சில பல கிலோ மீட்டர் தூரம் தெரியும்.

பெரிய கோபுரத்தின் மேல் நின்று பார்த்தால், இன்னும் கொஞ்சம் தூரம் தெரியும்.

மலை மேல் நின்று பார்த்தால், வெகு  தூரம் தெரியும்.

ஆகாய விமானத்தில் இருந்து பார்த்தால் மிகப் பெரிய பரப்பை பார்க்க முடியும் அல்லவா.

அது போல, நமக்கு கொஞ்சம் ஞாபகம் இருக்கிறது.

ஞானிகளுக்கு பல பிறவிகள் ஞாபகம் இருக்கிறது....

"புல்லாய் புழுவாய்..." என்று ஆரம்பித்து....

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் "

என்பார் மணிவாசககர்.  பிறந்து  இறந்து , பிறந்து இறந்து இளைத்துப் போனேன் என்பார்.

"தளர்ந்தேன் என்னைத்  தாங்கிக் கொள்ளேன்" என்று கெஞ்சுவார் நீத்தல் விண்ணப்பத்தில்.

"புனரபி ஜனனம், புனரபி மரணம்..." என்பது ஆதி சங்கரர் வாக்கு.

ப்ரம்மா, திருமால் இருவரும் அபிராமியை தொழுதார்கள். சரி.

சிவன் ஏன் தொழ வேண்டும்?  சிவனின் மனைவி தானே அபிராமி? மனைவியை போய் யாராவது  தொழுவார்களா?

பெண்ணின் பெருமை அப்படி.

அவள் மனைவியாக இருப்பாள், சில நேரம் தோழியாக, சில நேரம் தாயாக இருந்து பார்த்துக் கொள்வாள், சில நேரம் சகோதரியாக இருப்பாள், சில நேரம் மகளாக கூட மாறி அடம் பிடிப்பாள், மந்திரியாக யோசனை சொல்வாள்.

பட்டர் ஒரு படி மேலே போகிறார்.

இத்தனையாகவும் இருக்கும் அவள், ஏன் தொழும் தெய்வமாகவும் இருக்க முடியாது?

அவளின் அன்பை, கருணையை, வாஞ்சையை, தியாகத்தை எண்ணி, சிவனே அவளே தொழுதார் என்கிறார் பட்டர்.

சிவன் அவளை தொழுதது அவளிடம் இருந்து ஏதோ வரம் வேண்டி அல்ல. அது ஒரு நன்றிக் கடன்.

அபிராமி.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_9.html

Friday, May 8, 2020

திருவாசகம் - வா என்ற வான் கருணை

திருவாசகம் - வா என்ற வான் கருணை 


மணிவாசகர் உயர் குடியில் பிறந்தவர். நன்கு படித்தவர்.பாண்டிய மன்னனிடம் அமைச்சராக இருந்தவர்.  தமிழில் புலமை பெற்றவர். ஊன் உருக,உயிர்  உருக பாடல்கள் பாடி இருக்கிறார்.

மாறாக,

கண்ணப்பன் வேடுவர் குலத்தில் பிறந்தவர். படிப்பறிவே இல்லாதவர்.  வேட்டை ஆடுவதும், உயிர் கொலை புரிவதும் தான் அவர் தொழில்.

மணிவாசகர் சொல்கிறார், "அந்த கண்ணப்பன் மாதிரி என்னால் அன்பு செய்ய முடியாமல் இருந்தும், என்னையும் நீ ஆண்டு கொண்டாயே, உன் கருணையை என்ன என்று சொல்வேன்" என்று உருகுகிறார்.

பாடல்

கண்ணப்பன் ஒப்பதோர்
    அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில்
    என்னையும் ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை
    வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே
    சென்றூதாய் கோத்தும்பீ 


பொருள்


கண்ணப்பன் = கண்ணப்பன்

ஒப்பதோர் = போல் ஒப்பு நோக்கக் கூடிய

அன்பின்மை  = அன்பு இன்மை. என்னிடம் அன்பு இல்லாமை

கண்டபின் = (இறைவா நீ) கண்டு கொண்ட பின்னும்

என்னப்பன் = என்னுடைய தந்தையான

என்னொப்பில் = என்னுடைய ஒப்பில்லாத ஒருவன்

என்னையும் = என்னையும்

ஆட் கொண்டருளி = ஆட்கொண்டு அருளி

வண்ணப் பணித்  = பணித்த வண்ணம்.

தென்னை = என்னை

வாவென்ற  = வா என்ற

வான் கருணைச் = வான் போல பரந்த கருணை

சுண்ணப்பொன் நீற்றற்கே = சுண்ணம் + பொன் + நீற்றற்கே. சுண்ணாம்பு போல வெண்மையான திரு நீற்றை அணிந்த பொன் போன்ற மேனி உடைய அவருக்கே

சென்றூதாய் கோத்தும்பீ  = சென்று ஊதுவாய் அரச தும்பியே


கடவுள் எங்கோ இருக்கிறார். எப்படியோ இருக்கிறார். நமக்கு ஒன்றும் தெரியாது.

அவருக்கு இது பிடிக்கும், இது பிடிக்காது என்று நாமே நினைத்துக் கொண்டு ஏதேதோ செய்கிறோம்.

அவருக்கு கொழுக்கட்டை பிடிக்கும்,  சுண்டல் பிடிக்கும்,  துளசி பிடிக்கும்,  வடை பிடிக்கும்,  பொங்கல் பிடிக்கும், தேங்காய், பழம் எல்லாம் பிடிக்கும் என்று  நாமே ஏதேதோ கற்பனை செய்து கொண்டு செய்கிறோம்.

நாம் வைக்கும் பொங்கலை வைத்துக் கொண்டு அவர் என்ன செய்யப் போகிறார்?

நாம், நமக்கு பிடித்ததை, அவருக்கும் பிடிக்கும் என்று நினைத்து படைக்கிறோம்.

கண்ணப்பன் அவருக்குப் பிடித்த மாமிசம், கறி போன்றவற்றை  இறைவனுக்கும் பிடிக்கும் என்று  படைத்தார்.

தவறு என்ன?  யாருக்குத் தெரியும் ஆண்டவனுக்கு என்ன பிடிக்கும் என்று? ஒருவேளை  கடவுள் non -வெஜிடேரியனாக இருந்தால்?

நாம் முகம் சுளிக்கிறோம்.

என்னது, சாமிக்கு போய் மாமிசம் படைப்பார்களா என்று?

கண்ணப்பனுக்கு முன்னால் , அந்தக் கோவிலில் தினம் பூஜை செய்யும் சிவ கோசரியார்   என்ற குருக்கள் ஆகம முறைப்படி பூஜை செய்து வந்தார்.

நீரால் அபிஷேகம் செய்வது, தூப தீபம் காட்டுவது, பொங்கல், பழம் போன்றவற்றை நைவேத்தியம் செய்வது என்று.

சிவன், அவருக்கு முக்தி கொடுக்கவில்லை. கண்ணப்பனுக்கு கொடுத்தார்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

கண்ணப்பன் செய்த பூஜையை கடவுள் ஏற்றுக் கொண்டார். காரணம், அவனிடம் இருந்த அன்பு.

அது போல, நான் செய்யும் பூஜையிலும் ஆயிரம் தவறு இருக்கலாம். அவற்றை மன்னித்து ஏற்று க்கொள்ள வேண்டும் என்றால், கண்ணப்பன் அளவு நானும்  அன்பு செய்ய வேண்டும். என் மனதில் அவ்வளவு அன்பு இல்லையே.  இருந்தும் என்னையும் ஒரு பக்தனாக ஏற்றுக் கொண்டு "வா" என்று அழைத்த   உன் கருணையை என்ன சொல்லுவேன் என்று உருகுகிறார்  மணிவாசகர்.

குலம் , பிறப்பு, படிப்பு, தொழில், அதிகாரம், செல்வாக்கு...எதுவும் இறைவனுக்கு பொருட்டு அல்ல.  அன்பு ஒன்றையே அவன் காண்கிறான்.

அன்பே சிவம்.

மத்தது எப்படி இருந்தாலும் பரவாயில்லை...அன்பு மட்டும் இருந்தால் போதும்.

அன்புதானே எல்லாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_8.html

Thursday, May 7, 2020

இராமானுஜர் நூற்றந்தாதி - யார் அரண் ?

இராமானுஜர் நூற்றந்தாதி - யார் அரண் ?



முன்ன பின்ன தெரியாத ஒரு ஊருக்குப் போகிறோம். போய் இறங்கியாச்சு. போய் சேர வேண்டிய இடம் தெரியும் ஆனால் வழி தெரியாது. வெளி நாடு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தாச்சு. இந்தப் பக்கம் போவது என்று தெரியவில்லை. முன்ன பின்ன இந்த ஊருக்கு வந்ததும் இல்லை.

என்ன செய்யணும்?

தெரிஞ்ச யார் கிட்டயாவது கேக்கணும். யார் கிட்ட என்றால், நம்மைப் போல முதன் முதலாய் அந்த ஊருக்கு வந்த இன்னொரு பயணியிடம் அல்ல. வழி தெரிந்த ஆளிடம் கேட்கணும்.

சரி, கேட்டாச்சு. அவரும் சரியான வழி சொல்லி விட்டார்.

போக வேண்டியதுதான் பாக்கி.

அங்க தான் சிக்கல் இருக்கு.

"அவரு சொல்ற வழி நல்லாத்தான் இருக்கு. ஆனா, அது எனக்கு சரிப் பட்டு வருமான்னு தெரியல. அந்த வழி எல்லாம், நடை முறைக்கு சரியா வராது..." என்று சொல்லி விட்டு, கால் போன போக்கில் நாம் போய் கொண்டிருந்தால் அது எவ்வளவு புத்திசாலித்தனம்?

அது போல,  முன்ன பின்ன தெரியாத இந்த பூவுலகில் வந்து பிறந்து விட்டோம்.  முக்தி, வீடு பேறு என்று சொல்லும் இடத்துக்குப் போக வேண்டும்.

போக வழி சொல்லி இருக்கிறார்கள்.  பெரியவர்கள், ஆச்சாரியர்கள்,குருமார்கள், ஞானிகள், துறவிகள்...எல்லோரும்.

வழி எல்லாம் கேக்க வேண்டியது. அப்புறம், "...அது வந்து, வழி நல்லாத்தான் சொல்றாரு....ஆனா பாருங்க...நமக்கு அது சரிப்பட்டு வருமான்னு தெரியல "...என்று சொல்லி விட்டு  நாம் அன்றாட வேலைகளை பார்க்கப் போய் விடுகிறோம்.

புத்திசாலித்தனம்?

"சரணம் என்று அடைத்த தருமனுக்காக முன்பு கௌரவர்களை அழித்த மாயனை, நம்மை எல்லாம் வணங்க வைத்த இராமானுஜன் இல்லை என்றால் நமக்கெல்லாம் வேறு துணை ஏது "

என்று பாடுகிறார் திருவரங்கத்து அமுதனார்.

பாடல்


சரணம் அடைந்த தருமனுக்காப்,பண்டு நூற்றுவரை
மரணம் அடைவித்த மாயவன் தன்னை வணங்கவைத்த
கரண வையுமக் கன்றென்றி ராமா னுசனுயிர்கட்கு
அரணங் கமைத்தில னேல்,அர ணார்மற்றிவ் வாருயிர்க்கே?

பொருள்


சரணம் அடைந்த தருமனுக்காப் = தன்னைச் சரணம் அடைந்த தருமனுக்காக

பண்டு  = முன்பு

நூற்றுவரை = நூற்றுக்கணக்கான கௌரவர்களை

மரணம் அடைவித்த = கொன்ற

மாயவன் தன்னை  = திருமாலை

வணங்கவைத்த = வணங்க வைத்த

கரணம்  இவை  = கரணங்கள் (புலன்கள்) இவை

யுமக் கன்று = உமக்கு அன்று

என்று = என்று

இராமா னுசன் = இராமானுஜன்

னுயிர்கட்கு = உயிர்களுக்கு

அரணங் கமைத்தில னேல் = அரண் வேலி ) அமைதிராவிட்டால்

அர ணார் = அரண் (வேலி ,காவல்) யார்

மற்றிவ் வாருயிர்க்கே? = மற்ற இந்த ஆருயிர்க்கே

நமக்கு புலன்கள் எதற்காக இருக்கின்றன?

ஆண்டு, அனுபவிக்கத்தானே ? எல்லாவற்றையும், ஒன்று விடாமல் அனுபவிக்கத்தானே இந்த புலன்கள் இருக்கின்றன?

இல்லை.

எல்லாவற்றையும் அளவுக்கு அதிகமாக அனுபவிக்க இறங்கினால் என்ன ஆகும்?

எதிலும் ஒரு அளவு வேண்டும். வரை முறை வேண்டும்.

இன்பங்களின் பின்னால் போகும் புலன்களை, தடுத்து,  அரண் அமைத்து, இறைவன் பால்  வழி நடத்திய, இராமானுசன் இல்லை என்றால், இந்த உயிர்களை யார் காப்பாற்றி இருப்பார்கள்?

ஐந்து புலன்களும், உலகில் கிடந்து துன்பப் படுகின்றன.

அவனை சரண் அடைந்து விட்டால்,  நூற்றுக்கணக்கான கௌரவர்களை அழித்தது போல, நம் புலன்களுக்கு எதிரான அனைத்தையும் அவன் அழித்து விடுவான். புலன்கள் தறி கெட்டு ஓடாது.

அதற்கு, முதலில் அவனிடம் சரண் அடைய வேண்டும்.

அவன் யார், எப்படி சரண் அடைவது என்று நமக்குத் தெரியாது. அதைச் சொல்லித் தரத்தான்  இராமானுஜர் போன்ற மகான்கள்  அவதரித்தார்கள். அவர்கள் மட்டும் இல்லை என்றால்,  நாம் சரண் அடையப் போவதும் இல்லை, எதிரிகள் அழியப் போவதும் இல்லை.

குருவை நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும். பின் ,அவர் சொல்வதை அப்படியே கேட்க வேண்டும்.

உடம்பு சரி இல்லை என்று மருத்துவரிடம் போகிறோம். அவர் மருந்து எழுதித் தருகிறார்.  வாங்கி சாப்பிட வேண்டியதுதானே?

"...அவரு சொல்லுவாரு ...நம்மால முடியுமா...." என்று நமக்குத் தெரிந்த மாத்திரைகளை  வாங்கி தின்று கொண்டு இருந்தால், நோய் குணமாகுமா?

சாதாரண ஜலதோஷம் காய்ச்சலுக்கே இந்த கதி என்றால், மிகப் பெரிய நோயான பிறவிப் பிணிக்கு  என்ன சொல்ல?

வழி தான் சொல்ல முடியும். அதில் பயணிப்பதும், அல்லது வேறு திசையில் போவதும்  அவரவர் விருப்பம், விதி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_14.html

திருக்குறள் - பெண்ணை விட பெரியது எது?

திருக்குறள் - பெண்ணை விட பெரியது எது?


வாழ்க்கை துணை நலம் பற்றி கூறிக் கொண்டு வந்த வள்ளுவர் அடுத்த குறளில்

"பெண்ணை விட பெரியது எது? அதுவும் கற்பென்ற உறுதி உண்டானால்" என்கிறார்.

பாடல்

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்


பொருள்


பெண்ணின் = பெண்ணை விட

பெருந்தக்க = பெருமையானது

யாவுள  = எது இருக்கிறது ?

கற்பென்னும் = கற்பு என்ற

திண்மை = உறுதி

யுண் டாகப் பெறின் = உண்டாகப் பெற்றால்

ஆஹா, வள்ளுவர் சரியான ஆணாதிக்கவாதியாக இருப்பார் போல் இருக்கிறதே.  அது என்ன பெண்ணுக்கு மட்டும் கற்பு, கத்திரிக்காய் என்று.  ஆணுக்கு ஒன்றும் இல்லையா?  அவன் மட்டும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா?  இப்படி கற்பு, கருப்பு என்று சொல்லியே பெண்களை அடிமை படுத்தி வைத்து இருக்கிறார்கள் என்று  சில அறிஞர்கள் கூறக் கூடும்.

என்ன என்று ஆராய்வோம்.

அது ஏன் "பெண்" என்று கூறியிருக்கிறார் ? பேசாமல் மனையாள் , இல்லாள், மனைவி  என்று கூறி இருக்கலாமே?  பொதுவாக பெண் என்று எதற்கு கூற வேண்டும்.  காரணம் இல்லாமல் ஒரு வார்த்தையை வள்ளுவர் போடுவாரா?

பெண் என்றால் பெருமையானவள் தான்.  அவள் மனைவியாக இருக்க வேண்டும் என்று  அவசியம் இல்லை. பெண் பிறவி என்பதே பெருமையான பிறவி தான் . என்கிறார். எனவே, ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டும், கல்லானாலும் கணவன்,  புல் ஆனாலும் புருஷன் என்று இருந்தால் தான்  பெண் பெருமையானவள்   என்று வள்ளுவர் சொல்ல வரவில்லை.

அது எப்படி, "கற்பென்னும் திண்மை" என்று சொல்லி இருக்கிறாரே.  அது கணவன் மேல் கொண்ட  உறுதியான அன்பைத்தானே குறிக்கும் என்று மேலும் சில   அறிஞர் பெருமக்கள் கூறலாம்.

கற்பென்னும் பண்பு, குணம் என்று சொல்லாமல் கற்பென்னும் திண்மை என்று ஏன் சொல்லி இருக்கிறார்.

கற்பு என்ற சொல் கல் + பு என்று உருவானது.

நடிப்பு, படைப்பு, படிப்பு என்பது போல.

சரி...கற்பு என்றால், கல்வி, படிப்பு என்றே வைத்துக் கொள்வோம். அதில் திண்மை எங்கிருந்து வந்தது?  கூர்மை இருக்கலாம், விரிவு இருக்கலாம், ஆழம் இருக்கலாம்...கல்விக்கும் திண்மைக்கும் என்ன சம்பந்தம் ?

எவ்வளவோ படிக்கிறோம். நல்லது எது கெட்டது எது என்று தெரிகிறது. இருந்தும்  அதன் படி நடக்கிறோமா? காரணம், உறுதி இன்மை. படித்தால், அறிந்தால் மட்டும் போதாது.  அதன் படி நடக்கும் உறுதி வேண்டும்.

வீட்டை எப்படி நடத்த வேண்டும், உறவு, நட்பு இவற்றை எப்படி அரவனைத்துச் செல்ல வேண்டும்   என்பதை அறிந்த பெண், அதன் படி நடக்க வேண்டும்.

ஆணுக்கு எவ்வளவோ கடமைகளை சொன்ன வள்ளுவர் பெண்ணுக்கும் சிலவற்றைச் சொல்கிறார்.

பெண் கொஞ்சம் மனம் தளர்ந்து அப்படி இப்படி நடந்து கொண்டால்  என்ன ஆகும் என்பதை வாசகர்களின் எண்ணத்துக்கே விட்டு விடுகிறேன்.

"யாவுள" என்று கேட்கிறார்? அதன் அர்த்தம் என்ன?

பெருமையான விடயங்கள் என்று எவற்றை நாம் சொல்லுவோம்?

அறம் , பொருள், இன்பம், வீடு ....இவைத்தானே பெருமையான விடயங்கள்?

இவற்றை எல்லாம் விட பெண் பெருமை வாய்ந்தவள் என்பதால் பெண்ணின் பெருந்தக்க யாவுள என்று  கேட்கிறார்.

இல்லை என்றால் எப்படி சொல்லி இருப்பார்?

பெண்ணின் பெருந்தக்க அறம் உள

பெண்ணின் பெருந்தக்க பொருள் உள

பெண்ணின் பெருந்தக்க வீடு பேறு உள

என்று சொல்லி இருப்பார்.

பெண்ணை விட உயர்ந்தது ஒன்றும் இல்லை என்பதால் "யாவுள" என்று கேட்கிறார்?  "அவளை விட உயர்ந்தது எது என்று எனக்குத் தெரியவில்லை. எது என்று நீங்கள் சொல்லுங்கள் " என்று நம்மைப் பார்த்து கேட்கிறார் வள்ளுவர்.

அவருக்கே தெரியவில்லை என்றால், நமக்கும் தெரியாதுதான்.

எல்லா பெண்களும் உயர்ந்தவர்களா என்று கேட்டால் இல்லை.

பெண்களிலும் மோசமானவர்கள் உண்டு.

கற்பு என்ற திண்மை இருந்து விட்டால், அவளை விட உயர்ந்தது ஒன்றும் இல்லை என்கிறார்.

"உண்டாகப் பெறின்" என்றால் என்ன?

கற்பு என்பது பாடமாக சொல்லித் தர முடியாது.  மக்களுக்கு தாயோ, பேத்திக்கு பாட்டியோ சொல்லித் தர முடியாது.

அது அவள் கூடவே உண்டாவது.

அது அவளின் உள்ளுணர்வு.

இது சரி. இது தான் என் குடும்பத்துக்கு நல்லது என்று ஒரு பெண் உணர்ந்து அதன் படி  உறுதியாக நின்றால் , அவளை விட உயர்ந்தது இந்த உலகில் ஒன்றும் இல்லை  என்பது கருத்து.

ஆணாதிக்கம்,  பெண்ணடிமை, சம உரிமை,  என்று கொடி பிடிப்பதன் முன்னம், சிறிதேனும் படிப்பது நலம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_7.html

Tuesday, May 5, 2020

வில்லி பாரதம் - சிக்கல்களும் சமாதானங்களும்

வில்லி பாரதம் - சிக்கல்களும் சமாதானங்களும் 


உறவுகளில் சிக்கல் வருவது இயல்பு.  அது எந்த உறவாக இருந்தாலும் அதில் அவ்வப்போது ஏதோ ஒரு இடைவெளி வருவது இயல்பு.

கோபம், வேறுபாடு, மனக் கசப்பு, நம்மை  புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம், ஏன் எப்போதும் நானே விட்டு கொடுக்க வேண்டும்? இந்த தடவை என்ன ஆனாலும் சரி, நான் விட்டு கொடுக்கப் போவதில்லை.  விட்டு கொடுத்து, விட்டு கொடுத்து எல்லாரும் என்னை ஒரு ஏமாளி என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்....என்று ஒரு கோபத்தின், வெறுப்பின் உச்சம் தொடும் நேரங்களும் நம் வாழ்வில்  வந்திருக்கும்.

பொதுவாகவே, சண்டை, மனக் கசப்பு, எண்ண வேறுபாடு என்று வந்து விட்டால், நமக்கு இது தான் வேண்டும் என்று இரு சாராரும் அடம் பிடிப்பது வழக்கம். தாங்கள் பிடித்த ஒன்றை விட்டு இறங்கி வர இரண்டு பக்கத்திலும் ஒத்துக் கொள்வதில்லை.

கொடுப்பதனால் முழுவதும் கொடு, இல்லை என்றால் ஒன்றும் வேண்டாம்...என்ற அடம் சரியானதா?

எல்லாம் நடந்த பின்னால், கண்ணனை தூது அனுப்புகிறான் தர்மன்.

என்ன கேட்டு இருக்க வேண்டும் ? தாங்கள் சூதில் வைத்து இழந்த நாட்டை திருப்பி கேட்டு இருக்க வேண்டும். அதுதானே முறை? எங்கள் நாட்டைக் கொடு, இல்லை என்றால் யுத்தம் என்று அறிவித்திருக்க வேண்டும்.

தர்மன் அப்படிச் செய்யவில்லை.

"நாடு கேள். நாடு தராவிட்டால், ஐந்து ஊரு கேள். ஊரும் தராவிட்டால், ஐந்து வீடாவது  கேள்.   வீடும் தராவிட்டால், யுத்தம் கேள்"

என்று சொல்லி அனுப்புகிறான்.

தர்மனின் நோக்கம் யுத்தம் அல்ல. யார் பெரியவன், யார் சிறியவன் என்ற போட்டி இல்லை. எல்லோரும் அன்போடு, சண்டை இல்லாமல் சமாதானமாகப் போக வேண்டும் என்பது. 


பாடல்

முந்தூர் வெம்பணிக் கொடியோன்மூதூரி னடந்துழவர்
                                    முன்றிறோறு,
நந்தூரும் புனனாட்டின் றிறம்வேண்டு நாடொன்றுநல்கானாகில்,
ஐந்தூர்வேண்டவையிலெனி லைந்திலம்வேண்டவை மறுத்தாலடு
                                  போர் வேண்டு,
சிந்தூரத் திலகநுதற் சிந்துரத்தின் மருப்பொசித்த
                                  செங்கண்மாலே.

பொருள்


முந்தூர் = முந்தி ஊர்ந்து. வேகமாக செல்லும்

வெம்பணிக் கொடியோன்  = கொடிய பாம்பின் கொடியைக் கொண்ட துரியோதனன்

மூதூரி னடந்து  = பழமையான ஊரில்

உழவர் = உழவர்கள்

முன்றிறோறு, = முன்றில் தோறும். முன்றில்  = இல்லத்தின் முன்

நந்தூரும் = சங்குகள் ஊறும்

புனனாட்டின் = புனல் + நாட்டில் = நீர் வளம் நிரம்பிய நாட்டில்

திறம்வேண்டு = பங்கை வேண்டு

 நாடொன்றுநல்கானாகில் = நாடு ஒன்று நல்கானாகில் (நாடு தராவிட்டால்)

ஐந்தூர் வேண்டு = எங்கள் ஐந்து பேருக்கும் ஐந்து ஊர் வேண்டு

அவையிலெனி ல் = அதுவும் இல்லை என்றால்

ஐந்திலம்வேண்டு = ஐந்து இல்லம் வேண்டு

அவை மறுத்தால்  = அதையும் மறுத்தால்

அடு  போர் வேண்டு = மோதும் போரை வேண்டு

சிந்தூரத் திலக நுதற்  = சிவந்த திலகம் முடிந்த நெற்றியை உடைய

 சிந்துரத்தின் மருப்பொசித்த = யானையின் தந்தத்தை ஒடித்த

செங்கண்மாலே. = சிவந்த கண்களை உடைய திருமாலே

இது தான் வேண்டும் , இல்லை என்றால் வேறு எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கக் கூடாது.  அப்படி இருந்தால் எங்கும் எப்போதும் சண்டை சச்சரவோடு தான்  வாழ வேண்டி வரும்.

இது இல்லை என்றால், அது என்று கொஞ்சம் வளைந்து கொடுத்து போக வேண்டும்.

சரி தவறு என்பதல்ல வாழ்க்கை.  அனுசரித்து போவது.

தர்மன் எவ்வளவு வளைந்து கொடுக்கிறான். அரசில் பாதி கேள் என்று ஆரம்பித்து  கடைசியில் ஐந்து வீடாவது கொடு என்று கேட்கிறான்.

துரியோதனன் முட்டாள்.  ஐந்து வீட்டைக் கொடுத்து இருக்கலாம். அதற்கு பதிலாக தன்னையும், 99 தம்பியாரையும், மாமன், மைத்துனன், பீஷ்மர், துரோணர்,  கர்ணன் என்று அனைவரையும் பலி கொடுத்தான்.

தர்மன் எவ்வளவு இறங்கி வந்தான். கொஞ்சம் பெருந்தன்மையாக ஐந்து ஊரை கொடுத்து இருக்கலாம். எவ்வளவு அழிவு. கடைசியில் முழு இராஜ்யமும் போனது.


பாரதம் சொல்லும் பாடம் - உலோப குணம் அழிவைத் தரும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_5.html

Monday, May 4, 2020

கம்ப இராமாயணம் - பெண்ணுக்கொரு வாசம்

கம்ப இராமாயணம் - பெண்ணுக்கொரு வாசம் 


இந்த கொரானா வைரஸ் வந்தாலும் வந்தது, வீட்டுக்குளேயே அடை பட்டு கிடப்பது, மூச்சு முட்டுவது போல இருக்கிறது அல்லவா.

இது மட்டும் அல்ல, வாழ்வில் பல சமயங்களில் துன்பம் வரலாம். வேலை போய் விடலாம். கையில் உள்ள செல்வம் கரைந்து போய் விடலாம். எதிர் காலம் பற்றிய பயம் தொற்றிக் கொள்ளலாம். என்ன செய்வது என்று தவித்துப் போவோம்.

கவலையே வேண்டாம். தேவைகளை குறைத்துக் கொண்டால், எல்லாம் சரியாகப் போய் விடும்.

"ஆமா...சொல்றது ரொம்ப எளிது. மின்சார விசிறி இல்லாம, செல் போன் இல்லாம, குளிர் சாதன பெட்டி இல்லாமல், கார் இல்லாமல் எப்படி இருப்பது...பழகிப் போச்சே ...விட முடியுமா "

என்று கேட்கலாம்.

விடை கம்பர் தருகிறார்.

இராமன் எத்தனை செல்வச் செழிப்பில் வாழ்ந்து இருப்பான்? அவன் வாழ்ந்த செல்வ நிலை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டு காட்டுக்குப் போனான்.

ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம்.

நாமாக இருந்தால் என்ன செய்வோம்? அழுது புலம்புவோம். எல்லாரையும்  திட்டி தீர்ப்போம்.  எப்படா இது முடியும் என்று வெறுத்துப் போய் இருப்போம்.

ஆனால், இராமன் என்ன செய்தான் தெரியுமா?

சீதையோடு மிக மகிழ்ச்சியாக, இயற்கையை இரசித்துக் கொண்டு செல்கிறான். காட்டில், சீதைக்கு ஒவ்வொன்றாக காட்டி காட்டி, இதைப், அதைப் பார்  என்று சின்ன பிள்ளை மாதிரி சந்தோஷப் படுகிறான்.

அது மட்டும் அல்ல, இடை இடையிடையே சீதையின் அழகை வர்ணிக்க வேறு செய்கிறான்.

சீதைக்கு பெருமையாகவும் இருக்கும், சந்தோஷமாகவும் இருக்கும், கொஞ்சம் வெட்கமும் வந்திருக்கும். 

"காந்தள் மலரில் இருக்கும் அந்த கிளியைப் பார். மாந்தளிர் போல மணம் வீசும் மேனியைக் கொண்ட சீதையே, அது உன் கையில் அமர்ந்து இருப்பதைப் போல இருக்கிறது"

என்கிறான்.

சீதையின் கை வருணனை. அவள் மேனியின் வாசம். என்று இராமன் மிக மகிழ்வுடனேயே காணப் படுகிறான். ஐயோ, இராஜ்யம் போய் விட்டதே என்று இடிந்து போய் விடவில்லை. எது கிடைக்கிறதோ, அதில் சந்தோஷமாக இருக்க பழக வேண்டும்.

பாடல்

‘சேந்து ஒளி விரி செவ் வாய்ப்
     பைங் கிளி, செறி கோலக்
காந்தளின் மலர் ஏறிக்
     கோதுவ, - கவின் ஆரும்
மாந் தளிர் நறு மேனி
     மங்கை! - நின் மணி முன்கை
ஏந்தின எனல் ஆகும்
     இயல்பின; இவை காணாய்!


பொருள்


‘சேந்து = சிவந்த

ஒளி விரி = விரிந்த ஒளி வீசும்

செவ் வாய்ப் = சிவந்த அலகைக் கொண்ட

பைங் கிளி = அந்தப் பச்சைக் கிளி

செறி கோலக் = சிறந்த அழகைக் கண்டால்

காந்தளின் மலர் ஏறிக் = காந்தள் மலரில் ஏறி

கோதுவ, = அந்த மலரைக்  கோதி

கவின் ஆரும் = அழகு உடைய

மாந் தளிர் = மா மரத்தின் தளிரின்

நறு மேனி = வாசம் கொண்ட மேனியை உடைய

மங்கை!  = பெண்ணே


நின் = உன்

மணி முன்கை = அழகிய முன் கையில்

ஏந்தின எனல் ஆகும் இயல்பின; = ஏந்தியது போல இருக்கிறது

 இவை காணாய்! = இவற்றைக் காண்பாய்


காந்தள் மலர் மென்மையானது. அதை பெண்களின் கைகளுக்கு உவமையாக கூறுவது மரபு.


இராஜ்யம் போனால் என்ன. வேலை போனால் என்ன. அன்புக்கு உரியவர்கள் பக்கத்தில் இருந்தால் வேறு ஒன்றும் வேண்டாம்.

போனதை நினைத்து புலம்பிக் கொண்டு இருக்கக் கூடாது. இருப்பதில் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்று பார்க்க வேண்டும்.

அழுது புலம்புவது என்றால்   இராமனுக்கும், சீதைக்கும் எவ்வளவு நேரம் இருந்தாலும் போதாது. அவர்கள் அதைச் செய்ய வில்லை.

இயற்கையை இரசித்துக் கொண்டு சந்தோஷமாக  இருந்தார்கள்.

யோசியுங்கள்.

எப்பப் பார்த்தாலும் புலம்பிக் கொண்டே இருப்பதா அல்லது என்ன நடந்தாலும் சரி, சந்தோஷமாக இருப்பேன் என்று வாழ்க்கையை நடத்துவதா என்று.

இரண்டும் உங்கள் கையில்.

கம்ப இராமாயணம் படிப்பதில் இப்படி சில வழி காட்டுதல்களும் கிடைக்கும்.



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_4.html



Sunday, May 3, 2020

திருக்குறள் - மனைவியும் இல்லறமும்

திருக்குறள் - மனைவியும் இல்லறமும் 



தமிழில் மனைவிக்கு இல்லாள் என்று ஒரு பெயர் உண்டு. இல்லத்தை ஆள்பவள் என்ற அர்த்தத்தில்.

இல்லான் என்று ஒரு வார்த்தை கிடையாது. இல்லான் என்றால் ஒன்றும் இல்லாதவன் என்று பொருள் படும்.

இல்லறத்தில் கடமை எல்லாம் கணவன் மேல் இருந்தாலும், அதை நிறைவேற்றும் பொறுப்பை மனைவியிடம் தந்திருக்கிறது நம் கலாச்சாரம்.

"மனைவி மாண்பு உடையவளாக இருந்தால், ஒருவனுக்கு எல்லாம் இருக்கும். மனைவி சரி இல்லை என்றால், என்ன இருந்தும் ஒன்றும் இல்லாதது மாதிரிதான்" என்கிறார் வள்ளுவர்.

மனைவி சரி இல்லை என்றால், இல்லறம் என்பதே கேலி கூத்தாகி விடும்.

பாடல்

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

பொருள்

இல்லதென் = இல்லாதது என்ன ?

இல்லவள் = இல்லத்தில் இருப்பவள்

மாண்பானால் = மாண்பு உடையவள் ஆனால்

உள்ளதென் = உள்ளது என்ன?

இல்லவள் = இல்லத்தில் இருப்பவள்

மாணாக் கடை = மாண்பு இல்லாதவள் ஆனால்

இல்லாதது ஒன்றும் இல்லை.

உள்ளது ஒன்றும் இல்லை.

எல்லாம் மனைவியைப் பொறுத்தது.

கணவன் பெரிய பதவியில்  இருக்கலாம். மிகத் திறமையானவர் என்று பெயரும் புகழும்  பெற்று இருக்கலாம். நிறைய பொருளும் சம்பாதித்து இருக்கலாம்.  என்ன இருந்து என்ன பயன்? மனைவி சரி இல்லை என்றால், இவை அனைத்தும் இருந்தும்  ஒன்றும் இல்லாததற்கு சமம்.

கணவன் பெரிதாக ஒன்றும் படித்து இருக்க மாட்டான். பெரிய பதவியும் இல்லை. ஏதோ மிகச் சாதாரண வேலையாக இருக்கும். பணமும் பொருளும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. ஆனால், அவனுக்கு ஒரு அன்பான , குடும்ப பொறுப்பு உள்ள மனைவி அமைந்து விட்டால், அவனிடம் இல்லாதது ஒன்றும் இல்லை.

நல்ல மனைவி இருப்பது, பொருள், புகழ், தைரியம், மரியாதை, செல்வாக்கு, ஆரோக்கியம் எல்லாம் இருப்பதற்கு சமம்.

அவள் ஒருத்தி எல்லாவற்றையும் ஈடு செய்வாள்.

ஆவதும் அவளால். அழிவதும் அவளால்.

பெண்ணுக்கு மிகப் பெரிய பொறுப்பை, மதிப்பை வள்ளுவர்  தந்திருக்கார்.



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_3.html