Tuesday, May 19, 2020

திருக்குறள் - என்ன இருந்தாலும் இல்லை

திருக்குறள் - என்ன இருந்தாலும் இல்லை 


ஒரு ஊரில் ஒரு பெரிய  பணக்காரன் இருந்தான். ஏகப்பட்ட சொத்து. நிலம், பெரிய வீடு, கார், ஆள், அம்பு, சேனை..எல்லாம்.

வருடா வருடம் மூட்டைக் கணக்கில் நெல் வந்து சேர்ந்து விடும்.

பின்னாடி தோட்டத்தில் பத்து பதினைந்து பசு மாடுகள். பாலும், நெய்யும் வீடெங்கும் நிறைந்து கிடக்கிறது.

இலவம் பஞ்சில் செய்த மெத்தை.

மருத்துவர் சொல்லி விட்டார், கேழ்வரகும், கம்பும் தான் சாப்பிட வேண்டும். அரிசி சோறு வாயில் போட்டால் சர்க்கரை கூடி விடும், காலை எடுக்க வேண்டி வரும் என்று.

அவருக்கு பக்கத்து வீட்டில் ஒரு பரம ஏழை. அரிசி வாங்கக் கூட வசதி இல்லை.  எப்போதாவது அரிசி சோறு இருக்கும் வீட்டில்.

செல்வந்தன் வீட்டில் எல்லாம் இருக்கிறது, ஆனால் அரிசிச் சோறு சாப்பிட முடியாது.

வறியவன் வீட்டில், பணம் இல்லை. அரிசிச் சோறு சாப்பிட முடியாது.

இரண்டு பேரும் அரிசிச் சோறு சாப்பிட முடியாது.

வள்ளுவர் சொல்கிறார், செல்வந்தனிடம் இருந்தும் அது இல்லை மாதிரித்தான் என்று.

ஒரு பொருள் நம்மிடம் இருக்கிறது என்றால், அதனால் நமக்கு  ஒரு பயன் இருக்க வேண்டும். இல்லை என்றால், அது இருந்தும் இல்லாத மாதிரிதானே.

பயனில்லாத ஒன்று இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? எல்லாம் ஒன்றுதானே.

அது போல, ஒருவனுக்கு என்னதான் செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தாலும்,  அவன் மனைவி நல்லவளாக இல்லாவிட்டால், அவன் ஒன்றும் இல்லாதவனுக்கு சமம் என்கிறார்.

பாடல்


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்

பொருள்

மனைமாட்சி = இல்லறத்துக்கு வேண்டிய நற்குணங்கள், நற் செய்கைகள்

இல்லாள்கண் = மனைவியிடம்

இல்லாயின் = இல்லாவிட்டால்

வாழ்க்கை = வாழ்க்கையில்

எனை = எவ்வளவு

மாட்சித்  தாயினு மில் = பெருமை இருந்தாலும் அது அவை இல்லாத மாதிரிதான்

வீட்டில் நிறைய செல்வம் இருக்கிறது. கணவனின் நண்பர்களோ, உறவினர்களோ வருகிறார்கள்.  இவள் முகத்தைக் தூக்கி வைத்துக் கொண்டால், அந்தக் கணவன் தன்னிடம் உள்ள அத்தனை செல்வத்தாலும், வந்த உறவினரை  மகிழ வைக்க முடியாது. அந்த செல்வத்தால் ஒரு பயனும் இல்லை.   அது இருந்தாலும் இல்லாத மாதிரிதான்.

இன்னொரு உதாரணம்

கணவனுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் என்று வைத்துக் கொள்வோம்.

மனைவி பன்னிரண்டாயிரம் செலவு செய்பவள் என்றால், அவன் சம்பாதித்தது ஒன்றும் இல்லைதானே.   வந்தது போக, கடனில் இருப்பான்.

எவ்வளவு படித்தாலும், எவ்வளவு வேலை செய்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும்,  எவ்வளவு சொத்து சேர்த்தாலும், மனைவி சரி இல்லை என்றால்,  என்ன இருந்தும் ஒரு பயனும் இல்லை. என்கிறார்.

மாறாக, கொஞ்சம் பணம் இருக்கிறது. கணவனின் உறவினரோ, நணப்ர்களோ வருகிறார்கள்,  அவனின் மனைவி அவர்களை சிரித்த முகத்தோடு வரவேற்று, அவர்களுக்கு வேண்டியதைச் செய்தால் கணவன் எவ்வளவு மகிழ்வான். கோடி பணம் இருந்தாலும், அந்த சந்தோஷம் வராது.

எல்லாம் அவள் கையில் இருக்கிறது.



https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_19.html

No comments:

Post a Comment