Sunday, May 17, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அச்சுவை பெறினும் வேண்டேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அச்சுவை பெறினும் வேண்டேன் 


நாக்கில் நல்ல உணவு பட்டால் அதன் சுவை தெரியும். நாம் அதை அனுபவிக்கலாம்.

நாவினால் ஒரு பெயரைச் சொன்னால் அது சுவை தருமா?

தரும் என்கிறார் தொண்டரடிப் பொடி ஆழ்வார்.

ஸ்ரீராம நீ நாம ஏமி ருச்சிரா...ஓ ராமா நீ நாமம் என்தோ ருச்சிரா...என்பார் பத்ராச்சல இராமதாஸர்.

அந்தப் பாடலை திரு. பாலமுரளி கிருஷ்ணா பாடிய ஒலிப்பதிவை இங்கே கேட்டுப் பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=DCyshbQUgAE


இராம உன் நாமம் எப்படி இவ்வளவு சுவையாக இருக்கிறது, என்ன ஒரு சுவை என்று ரசிக்கிறார்.


தொண்டரடிப் பொடி ஆழ்வார் சொல்கிறார்,

"பச்சைமா மலைபோல்மேனி"

"பவளவாய் கமலச் செங்கண்"

"அச்சுதா"

"அமர ரேறே"

"ஆயர்தம் கொழுந்தே"

அப்படினு சொல்லிகிட்டே இருந்தால், அந்த சுவையே போதும். அதை விட்டு விட்டு,  பரமபதம் கிடைத்தாலும் வேண்டாம் என்கிறார்.

பாடல்

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பொருள்

பச்சை = பச்சை நிறம் கொண்ட

மா = பெரிய

மலைபோல் = மலையை போன்ற

மேனி = உடல்

பவளவாய் = பவளம் போல் சிவந்த உதடுகள்

கமலச் செங்கண் = தாமரை போல் சிவந்த கண்கள்

அச்சுதா = அச்சுதன் என்றால் தன்னை பற்றியவர்களை கை விடாதவன் என்று அர்த்தம்

அமர ரேறே = தேவர்களில் எருது போன்று வலிமையானவனே

ஆயர்தம் கொழுந்தே = ஆயர்களின் கொழுந்தே

என்னும் = என்று சொல்லும்

இச்சுவை = இந்த சுவையை

தவிர = விட்டு விட்டு

யான்போய் = நான் போய்

இந்திர லோக மாளும் = இந்திர லோகத்தை ஆளும்

அச்சுவை = அந்த சுவையை

பெறினும் =  பெற்றால் கூட

வேண்டேன் = விரும்ப மாட்டேன்

அரங்கமா நகரு ளானே. = திருவரங்கம் என்ற பெரிய திருத்தலத்தில் உள்ளவனே

அது என்ன "ஆயர்தம் கொழுந்தே". ஆயர்தம் வேறே என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?  ஆயர் குலத்துக்கு வேர் போன்றவன் அல்லவா அவன்?  பின் கொழுந்தே என்றார்?

உரை எழுதிய பெரியவர்கள் கூறுவார்கள் "கொழுந்து வாடினால் வேர் வாடாது. ஆனால், வேர் வாடினால் கொழுந்து வாடிவிடும்...எனவே, ஆயர் குலத்தில் உள்ளவர்கள்  எல்லோரும் வேர். அவன் கொழுந்து. அந்தக் குலத்தில் யார் வாடினாலும், அவன் வாடிவிடுவான்" என்று.

வியாக்கியானம் எழுதுவதில் வைணவ உரை ஆசிரியர்களை மிஞ்ச ஆள் இல்லை.

கோவிலுக்கு சென்று வழிபாடு செய்கிறோம். இறைவன் அங்கே இருக்கிறான் என்று யாராவது நம்புகிறார்களா? இறைவன் எங்கோ இருக்கிறான்...கைலாயத்தில், பாற்கடலில் எங்கோ இருக்கிறான். இங்கே எங்கே இருக்கிறான் என்பது தான் அவர்கள் நம்பிக்கை. இறந்த பின், அங்கே போகலாம் என்பது எதிர்பார்ப்பு.

ஆனால், ஆழ்வார் சொல்கிறார், அதெல்லாம் இல்லை. அந்த பரந்தாமன் இங்கேதான் இருக்கிறான். அவனைத் தேடி இந்திரன் முதலான தேவர்கள் இங்கே வந்து விட்டார்கள். நான் அங்கு போய் என்ன செய்யப் போகிறேன்? எனவே, அந்த வெறுமையான உலகை ஆளும் பதவி தந்தாலும் வேண்டேன்,  இங்கேயே இருக்கிறேன் என்கிறார்.

இறந்த பிறகு இல்லை, இப்போதே, இங்கேயே காணலாம். இது தான் வைகுண்டம், இதுதான் கைலாயம். அங்கே போக வேண்டிய அவசியமே இல்லை.

இப்பவே அனுபவிக்கலாம்.

யோசித்துப் பாருங்கள். அடுத்த முறை கோவிலுக்குப் போகும் போது , நீங்கள் வணங்கும் இறைவன் அங்கே இருக்கிறான் என்றால் எப்படி இருக்கும் என்று....

தொண்டரடிப் பொடி ஆழ்வார் கண்டார்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_17.html

1 comment:

  1. பகவான் நாமத்தின் மகிமை பகவானை விட வலிமை என சொல்லுவார்கள்.
    ஆழ்வாரோ நாமத்தின் ருசியே இந்திரா லோகத்தை விட அதிகம் என அடித்து கூறுகிறார்.தியாகராஜரும் இந்த நாமம் ஜென்ம ரக்ஷக மந்திரம் என்கிறார். ".ராம நாமமு ஜன்ம ரக்ஷக மந்த்ரமு,தாமஸமு ஸேயக ப4ஜிம்பவே மனஸா..."
    அருமையான பதிவு

    ReplyDelete