Tuesday, October 31, 2023

திருக்குறள் - ஈயும் இன்பம்

 திருக்குறள் - ஈயும் இன்பம் 


நீங்கள் ஏதோ ஒரு அயல்நாட்டுக்கு சென்று திரும்பி வந்திருகிறீர்கள். உங்கள் நண்பரைப் பார்த்து, அந்த நாட்டில் உண்ட ஒரு புது மாதிரியான, மிகச் சுவையான ஒரு உணவைப் பற்றி விலாவாரியாக விவரிகிரீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் நண்பருக்கு ஏதாவது புரியுமா? 


நீங்கள் எவ்வளவுதான் விளக்கிச் சொன்னாலும் அந்த உணவின் சுவை அவருக்கு புரியவே புரியாது. 


அதற்கு ஒரே வழி அவரும் அதை சுவைத்துப் பார்பதுதான். 


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எத்தனை ஆயிரம் பக்கம் விளக்கினாலும் விளங்காது. ஒரு துண்டு அதை எடுத்து வாயில் போட்டால் உடனே தெரிந்து விடும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் நமக்கு விருப்பம் இல்லாத செயலை செய்வோமா? மாட்டோம் அல்லவா?  


பிறருக்கு நம் பொருளை கொடுப்பது இன்பமான செயலா?  மிக முயன்று சேர்த்த பொருளை மற்றவர்களுக்கு கொடுப்பதில் என்ன இன்பம் இருக்க முடியும்? வள்ளுவர் சொல்கிறார் என்பதற்காக இருக்கின்ற பொருளை எல்லாம் தானம் செய்ய முடியுமா?  


நமக்கு துன்பம் தரும் செயலை நாம் ஒருபோதும் செய்ய மாட்டோம். 


பொருளை இழப்பது இன்பமா? துன்பமா? துன்பம்தான். சதேகம் இல்லை. 


யாருக்கும் கொடுக்காமல் நம் பொருளை நாம் ஏதோ ஒரு விதத்தில் முதலீடு செய்கிறோம். அதில் இருந்து வட்டி வரும், வருவாய் வரும், நாளை அதன் விலை உயரும், இலாபம் வரும் என்று. 


ஒரு வேளை முதலீடு செய்த ஒன்று நட்டம் ஆகிவிட்டால்? முதலீடு செய்த நிறுவனம் மூடப் பட்டு விட்டால்?


இன்று ஏதேதோ நாடுகளில் யுத்தம் நடக்கிறது. அங்கெல்லாம் உள்ள மக்கள் எவ்வளவோ முயன்று, சேமித்து, வீடு வாங்கி இருப்பார்கள், நிலம் வாங்கி இருப்பார்கள். இன்று யுத்தம் என்று குண்டு போட்டு அவற்றை அழிக்கிறார்கள். என்ன செய்வது. 


சில சமயம் வெள்ளம் வருகிறது. 


பண வீக்கம் வந்து சேமித்து வைத்த செல்வம் செல்லா காசாகி விடுகிறது. 


திருடு போய் விடலாம். 


இப்படி பல விதங்களில் நம் செல்வம் நமக்கு பயன்படாமல் போய் விடலாம். 


பசி என்று ஒருவன் வந்து நிற்கிறான். அவன் பசியை போக்க உதவி செய்கிறோம். அவன் வயிறார உண்கிறான். அதை பார்க்கும் போதும் நம் மனம் நெகிழாதா. என்னால் அவன் பசியை போக்க முடிந்தது என்று மனதுக்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி, பெருமிதம் வரும் அல்லவா?


இனி இதை எல்லாம் ஒன்றாக சேர்த்து சிந்தித்து ஒரு குறள் எழுதுகிறார் வள்ளுவ ஆசான். 


பாடல் 

 

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை

வைத்துஇழக்கும் வன்க ணவர்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_31.html

(pl click the above link to continue reading)


ஈத்துவக்கும் இன்பம் = ஈந்து உவக்கும். ஈவதனால் வரும் இன்பத்தை அனுபவித்தல் 


 அறியார்கொல் = தெரியாதவர்கள் போலும் 


 தாம்உடைமை = தங்களுடைய பொருளை 


வைத்துஇழக்கும் = சேர்த்து வைத்து, பின் இழக்கும் 


வன்க ணவர் = கல் நெஞ்சக் காரார்கள் 


வன்கணவர் என்பதை அருள் இல்லாதவர்கள் என்கிறார் பரிமேலழகர். 


அன்பு என்பது நம்மைச் சார்ந்தவர்களிடம் காட்டும் பரிவு. 


அருள் என்பது நம்மைச் சார்தவர்களிடமும் காட்டும் பரிவு. 


தெருவில் போகும் பிச்சைகாரனுகும் நமக்கும் என்ன உறவு? அவனுக்கு செய்யும் உதவி, அருள்.


அந்த அருள் நெஞ்சம் இல்லாதவர்கள், கொடுப்பதனால் வரும் இன்பத்தை அனுபவிக்கத் தெரியாதவர்கள்.. அது தெரிந்து இருந்தால், அனாவசியமாக பொருளை சேர்த்து வைத்து, பின் இழப்பார்களா? 


கொடுப்பது இன்பம் என்று தெரியாவிட்டால் கொடுக்க முடியாது. 


கொடுப்பதற்கு நெஞ்சில் அருள் வேண்டும். 


முதலில் அன்பு வேண்டும். அன்பில் இருந்து அருள் பிறக்க வேண்டும்.


சில பேர் பெற்ற பிள்ளைகளுக்கும், கட்டிய மனைவிக்குமே கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். உடன் பிறந்த உறவுகளுக்கு உதவ மாட்டேன் என்கிறார்கள். அவர்கள் எப்படி மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள்?


இல்லறம், அன்பை பெருக்க வேண்டும். அது பெருகி அருளாக மாற வேண்டும்.


ஒருவன் நல்ல இல்லறம் செய்கிறானா இல்லையா என்பது அவன் செய்யும் தான தர்மத்தில் இருந்து தெரியும். 


முதலில் அன்பு, பின் அது முதிர வேண்டும், முதிர்ந்து அருளாக வேண்டும். 



 


Monday, October 30, 2023

நான் மணிக்கடிகை - செய்யக் கூடாத நான்கு

 நான் மணிக்கடிகை - செய்யக் கூடாத நான்கு 


நான் மணிக்கடிகை என்ற நூல் நான்கு மணி போன்ற விடயங்களை எடுத்துக் கொண்டு, அவற்றைக் கோர்த்து மாலை போல் தருகிறது. 


மிகவும் பயனுள்ள, வாழ்க்கைக்குத் தேவையான, சில சமயம் நாம் மறந்தோ அல்லது தெரியாமலோ செய்துவிடும் விடயங்கள். 


ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வது பயன் தரும். 


நம்மைவிட செல்வத்தில், படிப்பில், பதவியில், அறிவில் குறைந்தவர்கள் நிறைய பேர் இருப்பார்கள். அவர்களை நாம் தினமும் சந்திப்போம். 


நம்மைவிட எளியவர்கள் தானே என்று ஒரு போதும் அவர்களை ஏளனம் செய்து விடக் கூடாது. காரணம், காலம் யாரை எப்போது எங்கே கொண்டு வைக்கும் என்று தெரியாது. 


கூனி தானே, வயதானவள், பெண், கூன் விழுந்தவள், பணிப்பெண் நானோ சக்கரவர்த்தி திருமகன் என்று இராமன் நினைத்து அவள் மேல் விளையாட்டாக மண் உருண்டையை அடித்தான். 


அவள் நேரம் பார்த்து தாக்கினாள். இராமன் அரசை இழந்து, காட்டில் பதினாலு வருடம் துன்பப் பட்டான். அதை அவனே சுக்ரீவனிடம் சொல்கிறான். 


இரண்டாவது, எவ்வளவு நல்ல பொருள் என்றாலும், தீயவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளக் கூடாது. காரணம், இன்று உயர்ந்த பொருளை கொடுத்தவன் பதிலுக்கு நாளை ஏதாவது தீய செயலில் நம்மை இழுத்து விட்டுவிடுவான். எவ்வளவு அவசரமாக இருந்தாலும்,  தீயவர்களிடம் இருந்து  ஒரு பொருளை பெற்றுக் கொள்ளக் கூடாது. 


மூன்றாவது,  தாழ்ந்தவர்கள் நம் உள்ளம் சுடும்படி பேசினாலும் பதிலுக்கு பேசக் கூடாது. காரணம், அவன் நிலைக்கு அவன் பேசுகிறான். நாம் ஏன் நம் நிலையை தாழ்த்திக் கொள்ள வேண்டும். நாய் குரைக்கிறது என்றால் பதிலுக்கு குரைக்க வேண்டுமா?  


நான்காவது,  கூறக் கூடாத சொற்களை ஒரு போதும் கூறிவிடக் கூடாது. கோபத்தில் வார்த்தை விழுந்து விட்டால் பின் அதை மீட்க முடியாது. மிகப் பெரிய துன்பத்தில், உறவில் பெரிய குழப்பத்தை அது ஏற்படுத்தி விடும். வார்த்தைகளை பேசும் போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தீய சொற்கள், சுடு சொற்கள், உண்மை அல்லாத சொற்கள், புறம் சொல்லும் சொற்கள் போன்றவற்றை ஒரு காலும் பேசக் கூடாது. 


பாடல் 


எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்

கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்

சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க

கூறல் லவற்றை விரைந்து.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_30.html


(pl click the above link to continue reading)



எள்ளற்க = ஏளனம் செய்யாமல் இருக்க 


என்றும் = எப்போதும் 


எளியாரென் = எளியவர் என்று எண்ணி, நினைத்து 


என் பெறினும் = எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் 


கொள்ளற்க = பெற்றுக் கொள்ளக் க் கூடாது 


கொள்ளார்கைம் மேலவா = பெற்றுக் கொடுக்கும் தகுதி இல்லாதவர் கை மேலே இருக்கும் படி 


உள்சுடினும் = உள்ளம் சுட்டாலும் 


சீறற்க = கோபிக்கக் கூடாது 


சிற்றிற் பிறந்தாரைக் = சின்ன + இல்லத்தில் + பிறந்தவரை = அதாவது தாழ்ந்தவர்களை, ஏழைகளை, வசதி இல்லாதவர்களை 


கூறற்க = சொல்லக் கூடாது 


கூறல் லவற்றை = கூறக் கூடாதவற்றை 


விரைந்து = விரைவாக 


சில சமயம் மற்றவர்கள ஏதாவது பேசும் போது, அது நம்மை சுட்டு விடலாம். கோபித்து, உடனே பதிலுக்கு நாம் ஏதாவது சொல்லிவிடுவோம்.  பொறு. கொஞ்சம் பொறுமையாக இரு. அவசரப்படாதே. 


"விரைந்து" சொல்லாதே.  ஆறப் போடு என்கிறது செய்யுள். 


யோசித்துப் பார்த்தால் நம் வாழ்வில் இந்தத் தவறுகளை எவ்வளவு செய்து இருக்கிறோம் என்று தெரியும். 


கிண்டல் செய்கிறேன், சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் என்று எதையாவது சொல்லி சிக்கலில் மாட்டி இருப்போம்.


கோபத்தில் வார்த்தையை விட்டு, பின்னால் வருந்தி இருப்போம். ச்சே, அப்படி சொல்லி இருக்கக் கூடாது என்று நாமே நம்மை கண்டித்து இருப்போம். 


அலுவலகத்தில் நமக்கு கீழே இருக்கும் ஒருவரை பற்றி நாம் ஏதோ சொல்லப் போக, அதை அவர் மனதில் வைத்துக் கொண்டு, நம்மை பற்றி மேலிடத்தில் இல்லாததும் பொல்லாததும் சொல்லி நமக்கு ஒரு சங்கடத்தை உண்டாக்கி இருப்பார். 


இது எல்லாம் ஏதோ நமக்கு மட்டும் நிகழ்வது என்று நினைக்கக் கூடாது. எல்லோருக்கும் எப்போதும் நிகழும் ஒன்று.  எனவேதான் அதை ஒரு நீதியாக போதிக்கிறது இந்த நூல். 


மொத்தம் நூற்றி நான்கு பாடல்கள் இருக்கின்றன. 


எல்லாவற்றையும் ஒரு முறை வாசித்து விடுங்கள். நல்ல விடயம்தானே. 



Sunday, October 29, 2023

திருக்குறள் - பசிப்பிணி தீண்டாது

 திருக்குறள் - பசிப்பிணி தீண்டாது 


ஒரு பல்வலி மருத்துவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் பல் வலியால் துன்பப் படுவாரா? அவருக்குத் தெரியும் பல் வலி எதனால் வருகிறது, அதை எப்படி போக்குவது என்று. உடனே அந்த வலிக்கு தகுந்த சிகிச்சையை மேற் கொள்வார் அல்லவா?


இன்னும் ஒரு படி மேலே போய், அப்படி பல் வலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தெரியும். அந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பல் வலி வராமல் தடுத்து விடுவார் அல்லவா?


அதை ஏன் சொல்கிறேன் என்றால்....


தான தர்மம் செய்வதால் எழையாகிப் போய் நாமும் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டி வருமோ என்று சிலர் பயப்படலாம். ஊரில் உள்ளவருகெல்லாம் உணவு கொடுத்து ஒரு நாள் தனக்கு உணவு இல்லாமல் ஆகி விடுமோ என்ற பயம் வரலாம் அல்லவா?


வள்ளுவர் சொல்கிறார் 


"பகுத்து உண்பதை பழக்கமாக கொண்டவனை பசி என்ற பிணி ஒரு போதும் தீண்டாது" என்கிறார். 


பாடல் 


பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்

தீப்பிணி தீண்டல் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_29.html


(please click the above link to continue reading)



பாத்தூண் = பகுத்து + ஊன் = உணவை பகுத்து 


மரீஇ யவனைப் = அணைத்துக் கொண்டவனை, பழக்கமாக கொண்டவனை 


பசிஎன்னும் = பசி என்ற 


தீப்பிணி = தீமையான பிணி (நோய்) 


தீண்டல் அரிது = தீண்டாது 


அது எப்படி ? மற்றவர்களுக்கு உணவு அளித்தால் நாம் பசியால் வாட மாட்டோம்?


வீட்டில் மனைவி சமையல் செய்வாள் (சில பல வீடுகளில்). சில சமயம் உணவு பத்தாமல் போய் விடும். கணவனோ, பிள்ளைகளோ கொஞ்சம் அதிகம் உண்டால், மனைவிக்கோ, அம்மாவுக்கோ உணவு இல்லாமல் போய் விடும். அதற்காக அவர்கள் பட்டினியாக இருப்பது இல்லை. அவர்களுக்குத் தெரியும் எப்படி உணவு சமைப்பது என்று. இருக்கின்ற பொருட்களை வைத்து ஏதாவது செய்து ஒரு உணவு செய்து விடுவார்கள். சில சமயம் அது மற்ற உணவை விட சுவையாகக் கூட இருக்கும். 


உணவு செய்யத் தெரிந்தவன் ஏன் பசியாக இருக்கப் போகிறான். 


பல் வைத்தியம் தெரிந்தவன் ஏன் பல் வலியால் துன்பப் படப் போகிறான். 


அது போல மற்றவர்களுக்கு உணவு தரத் தெரிந்தவன் தான் ஏன் பசியோடு இருக்கப் போகிறான்?


மேலும், எல்லோருக்கும் உணவு அளித்தவன் ஒரு நாள் உணவு இல்லாமல் இருந்தால், அவனால் உதவி பெற்றவர்கள் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா?


எனவே, அவனுக்கு எப்படியும் உணவு கிடைத்து விடும். பசியால் வருந்தமாட்டான். 


இந்தக் குறளை நாம் சற்று விரித்து நோக்க வேண்டும். 


இது ஏதோ உணவு, பசி, பட்டினி என்று இருக்காமல், மற்றவர்களுக்கு உதவி செய்தால் நாம் ஏழையாகி விடுவோமா என்ற பயம் இருந்தால், அது தேவையில்லாத பயம் என்கிறார் வள்ளுவர். 


மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் யாரும் கெட்டு போவதில்லை என்பது அவர் தரும் உறுதி. 








Friday, October 27, 2023

திரிகடுகம் - அறியாமையால் வரும் கேடு

 திரிகடுகம் - அறியாமையால் வரும் கேடு 


திரிகடுகம் என்பது மூன்று மூலிகைகளின் தொகுதி. 


திரிகடுகம் என்ற நூலில், ஒவ்வொரு செய்யுளும் மூன்று செய்திகளை எடுத்துக் கொண்டு அவை நல்லதா, கெட்டதா என்று கூறும். 


அதன் மூலம், எதை நாம் செய்யலாம், செய்யக் கூடாது என்று அறிந்து கொள்ளலாம். 


வாழ்க்கைக்கு, நடைமுறைக்கு மிகத் தேவையான, உபயோகப் படும் நூல். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


"கல்வி அறிவில்லாதவர்களோடு பழகுவதும், கற்புடைய மனைவியை அடிப்பதும், வீட்டுக்குள் ஒழுக்கம் இல்லாதவர்களை அனுமதிப்பதும், இந்த மூன்றும் அறியாமையால் வரும் கேடுகளாகும்."


பாடல் 


கல்லார்க் கினனாய் ஒழுகலும் காழ்கொண்ட

இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம்

சிறியாரைக் கொண்டு புகழுமிம் மூன்றும்

அறியாமை யான்வருங் கேடு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_27.html


(please click the above link to continue reading)



கல்லார்க் கினனாய் = கல்லார்க்கு + இனனாய் = கல்லாதவர்களோடு  சேர்ந்து நட்பாய்  


ஒழுகலும்  = இருப்பதும் 


காழ்கொண்ட = உறுதி கொண்ட, கற்புள்ள 


இல்லாளைக்  = மனைவியை 


கோலாற்  = கம்பால் 


புடைத்தலும் = அடிப்பதும் 


இல்லம் = வீட்டில் 


சிறியாரைக் = ஒழுக்கமில்லா சிறியாரை 


கொண்டு  = கொண்டு வருவதும் 


புகழுமிம் மூன்றும் = முக்கியமான இந்த மூன்றும்  


அறியாமை யான்வருங் கேடு. = அறியாமையால் வரும் கேடு 


அதாவது, அறிவு இருந்தால் இந்த தவறுகளை செய்ய மாட்டோம். 


ஒருவேளை ஒருவன் மற்றவற்றை படிக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை, இது போன்ற நூல்களைப் படித்தால், சரி எது, தவறு எது என்று அறிந்து கொள்ள முடியும். 


இப்படி நூறு பாடல்கள் இருக்கின்றன.


ஒரு நாளைக்கு ஒன்று என்று வைத்துக் கொண்டால் கூட, மூன்று மாதத்தில் படித்து முடித்து விடலாம். 




Thursday, October 26, 2023

திருக்குறள் - பணத்தை எங்கே முதலீடு செய்வது ?

 திருக்குறள் - பணத்தை எங்கே முதலீடு செய்வது ?


சேமித்த பணத்தை எங்கே முதலீடு செய்வது? 


வங்கிக் கணக்கில் போடலாம், பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம், நகை, நட்டு வாங்கிப் போடலாம், நிலத்தில் போடலாம், அல்லது நல்ல வீடு வாங்கலாம்....இப்படி பல வழிகளில் முதலீடு செய்யலாம். 


ஆனால் இதெல்லாம் சிறந்த முதலீடு அல்ல என்கிறார் வள்ளுவர். 


பின் எதுதான் நல்ல முதலீடு என்று பார்ப்பதற்கு முன்னால், சற்று யோசிப்போம். ஈகை என்ற அதிகாரத்துக்கும் முதலீடுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?  ஒரு வேளை பொருட்பாலில் வர வேண்டியது மாறி இங்கு வந்து விட்டதோ என்ற சந்தேகம் வரலாம். 


வள்ளுவர் சொல்கிறார், 


"மிகுந்த பசி உள்ளவன் வயிற்றிக்கு உணவு இடுவதுதான் ஆகச் சிறந்த முதலீடு"


என்று. 


சேமித்த பணத்தை உணவாக மாற்றி, பசி உள்ளவனுக்கு அதை கொடுப்பதுதான் சரியான முதலீடு 


பாடல் 


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_26.html



(pl click the above link to continue reading)


அற்றார் = பொருள் அற்றவர், உணவு அற்றவர் 


அழிபசி = அழிக்கின்ற பசியை 


தீர்த்தல் = தீர்ப்பது 


அஃதொருவன் = அது ஒருவன் 


பெற்றான் = பெற்ற 


பொருள்வைப் புழி = பொருள் + வைப்புழி = பொருளை சேமித்து வைக்கும் இடம் 


அழிபசி = அழிக்கின்ற பசி. பசி பலவற்றை அழித்து விடும். கல்வி, புகழ், மானம், காமம், என்ற பலவற்றை அழித்து விடும். பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பார்கள். 


அப்படிப்பட்ட பசியை தீர்க்க உதவும் பொருள் தான் சிறந்த வழியில் சேமிக்கப்பட்ட பொருள் என்கிறார். 


அதிலும், பரிமேலழகர் சில நுண்மையான விடயங்களைச் சொல்கிறார்.


"அறன் நோக்கி அழி பசி தீர்த்தல்" என்பார். கொடுப்பது அறம் என்று நினைத்து கொடுக்க வேண்டும். பதிலுக்கு ஏதாவது கிடைக்கும் என்று நினைத்து கொடுக்கக் கூடாது. 


அதெல்லாம் சரி, அப்படி செலவழித்த பணம், செல்வில்தானே சேரும். எப்படி, அது சேமிப்பாக மாறும்?  வள்ளுவர் சொன்னா கேட்டுக்க வேண்டியதுதானா?


இல்லை, அதற்கு காரணம் இருக்கிறது என்று பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 


சேமிப்பு என்றால் பிற்காலத்தில் வட்டியோடு முதலும் பத்திரமாக திரும்பி வர வேண்டும் அல்லவா?  


பசித்தவனுக்கு செலவழித்த பணம் புண்ணியமாக மாறி, ஒன்றுக்கு பல மடங்கு செய்தவனுக்கே திரும்பி வரும் என்கிறார். 


எப்படி நம்புவது?  


வள்ளுவர் போன்ற அறிஞர்கள் உலகை நன்கு உற்று கவனித்து அங்கு நடப்பவற்றை நமக்குச் சொல்கிறார்கள். 


ஒன்று ஏற்றுக் கொள்ளலாம். அல்லது, சோதனை செய்து பார்க்கலாம். 


எனது குறுகிய அனுபவத்தில் இது உண்மை நான் பல முறை உணர்ந்து இருக்கிறேன். 


நீங்களும் சோதனை செய்து பாருங்கள். 




Wednesday, October 25, 2023

கம்ப இராமாயணம் - என் மகளைக் காப்பாற்று

 கம்ப இராமாயணம் - என் மகளைக் காப்பாற்று 


பெண்ணை கட்டிக் கொடுத்தாகி விட்டது. 


பின், அந்தப் பெண்ணுக்கு ஒரு துன்பம் என்றால் அந்தப் பெண்ணின் தாயின் மனம் என்ன பாடுபடும். என் மகள் இப்படி கிடந்து துன்பப் படுகிராளே என்று தவிக்கும் அல்லவா?  என்ன செய்வது என்று அறியாமல் தவிப்பாள். 


மருமகனைப் பார்த்து "நீங்க ஏதாவது செய்யக் கூடாதா...அவ இவ்வளவு கஷ்டப் படுகிராளே" என்று மாப்பிளையிடம் புலம்புவாளா மாட்டாளா?


என் வயிற்றில் வந்து பிறந்ததனால்தானே, அவளுக்கு இவ்வளவு கஷ்டம்.வேறு எங்காவது பிறந்திருந்தால் நல்லபடியாக வாழ்ந்திருப்பாள். பாழாய்ப்போன எனக்கு மகளாக வந்து வாய்த்து இப்படி துன்பப்படுகிறாளே என்று தாயின் மனம் தவிக்கும்தானே. 


பாற்கடலில் தோன்றியவள் திருமகள். திருமகளின் அம்சம் சீதை. கடல், சீதைக்கு தாய். 


அந்த கடல்தாய் புலம்புகிறாள் 


" சந்திரனின் பிறை போன்ற நெற்றியை உடைய சீதை, ஒரு நாளும் தொலையாத துன்பத்தைக் கொண்ட நான் பெற்ற பெண், தவம் இருந்து பெற்ற பெண், இப்படி தனிமையில் (அசோகவனத்தில்) கிடந்து தவிப்பது சரிதானா?" 


என்று புலம்பி, தளர்ந்து,  கண்ணீர் சிந்தி, தன் அலை என்ற கரத்தை நீட்டி இராமனின் காலில் விழுந்து புலம்பினாள். 


பாடல்  


இந்து அன்ன நுதல்பேதை இருந்தாள் நீங்கா இடர் கொடியேன்

தந்த பாவை தவப் பாவை தனிமை தகவோ எனத் தளர்ந்து

சிந்துகின்ற நறுந்தரளக் கண்ணீர் ததும்பி திரைத்து எழுந்து

வந்து வள்ளல் மலர்த் தாளின் வீழ்வது ஏய்க்கும் மறிகடலே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_25.html

(pl click the above link to continue reading)


இந்து அன்ன = பிறைச் சந்திரனைப் போன்ற 

 

நுதல் = நெற்றியைக் கொண்ட 


பேதை இருந்தாள் = சீதை இருந்தாள் 


நீங்கா = ஒரு நாளும் தீராத 


இடர் = துன்பங்களைக் கொண்ட 


கொடியேன் = கொடியவளாகிய நான் (கடல்) 


தந்த பாவை = பெற்ற பெண் (சீதை)  


தவப் பாவை = தவம் இருந்து பெற்ற பெண் (சீதை) 


தனிமை தகவோ = தனிமையில் கிடந்து இப்படி தவிப்பது சரிதானா 


எனத் = என்று 


தளர்ந்து = தளர்ந்து, 


சிந்துகின்ற = சிந்தும், வழியும் 


நறுந்தரளக் = தரளம் என்றால் முத்து. நல்ல முத்துப் போன்ற 


கண்ணீர் ததும்பி = கண்ணீர் ததும்பி 


திரைத்து = அலையானது 


எழுந்து = மேலே எழுந்து 


வந்து = வந்து 


வள்ளல் = இராமனின் 


மலர்த் தாளின் = மலர் போன்ற பாதங்களில் 


வீழ்வது = வீழ்ந்து 


ஏய்க்கும் = முறையிடும் 


மறிகடலே = அலைபாயும் கடலே 


மகளின் துன்பம் கண்டு இரங்கும் தாயின் சோகத்தை கம்பன் படம் பிடித்து காட்டுகிறான். 



 

Tuesday, October 24, 2023

திருக்குறள் - எது பெரிது?

 திருக்குறள் - எது பெரிது?


உலகில் பெரிய செயல், சிறப்பான செயல் எது என்று கேட்டால் நாம் என்ன சொல்லுவோம்?


படிப்பது, செல்வம் சேர்ப்பது, பெரிய பதவிகளைப் பெறுவது, புகழ் பெறுவது என்றெல்லாம் சொல்லுவோம். 


தவம் செய்து, ஞானம் பெற்று, இறைவனை அடைவது இதில் எல்லாம் பெரியது என்று கூட சொல்லலாம். 


ஆனால், வள்ளுவர் இதுக்கு எல்லாம் மேலான ஒன்று இருக்கிறது என்கிறார்.


எவ்வளவு தவம் செய்து, என்ன வரங்களைப் பெற்றாலும், அதுக்கு எல்லாம் மேலான ஒன்று இருக்கிறது.


அது என்ன என்றால், பசித்தவனின் பசியைப் போக்கும் செயல் என்கிறார். 


பாடல் 


ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_24.html


(please click the above link to continue reading)


ஆற்றுவார் = செய்யகூடியவற்றுள் 


ஆற்றல் = பெரிய ஆற்றல் 


பசியாற்றல் = பசியை பொறுத்துக் கொள்வது. அதாவது, தவம் செய்வது 


அப்பசியை = அந்தப் பசியை 


மாற்றுவார் = போக்குபவர்களின் 


ஆற்றலின் பின் = ஆற்றலுக்கு அடுத்து பின்னே வருவது அந்த மேலே சொன்ன பசியைப் பொறுத்து கொண்டு தவம் செய்வது. 


என்னதான் முள்ளு முனையில், தீக்கு நடுவில், பசி தாகம் மறந்து தவம் செய்து பிரம்ம ரிஷி பட்டம் பெற்றாலும், அது மற்றவர் பசியைத் தீர்பவரின் ஆற்றலுக்கு முன் பெரிய விடயம் ஒன்றும் இல்லை. பசி தீர்பவரின் ஆற்றலுகுப் பின் தான் அந்த தவ வலிமை எல்லாம் என்கிறார். 


சரி, அப்படின்னு வள்ளுவர் சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா. அதுக்கு ஒரு காரணம் சொல்ல வேண்டாமா?


பரிமேலழகர் சொல்கிறார் 


தவம் செய்பவர்கள், தங்கள் பசியையும் போக்கிக் கொள்ள முடியவில்லை, மற்றவர் பசியையும் போக்குவது இல்லை. 


மாறாக, இல்லறத்தில் இருந்து தானும் நன்றாக உண்டு பசியாறி, பசிக்கிறது என்று வந்தவனின் பசியையும் போக்குகிறானே அந்த இல்லறத்தான் அவன் தவம் செய்தவனை விட உயர்ந்தவன் என்கிறார். 


தானும் பசி இல்லாமல், மற்றவர் பசியையும் போக்குபவன் தன் பசியையும் தீர்க்காமல், மற்றவர் பசியையும் போக்காதவனை விட உயர்ந்தவன் தானே?


இதில் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாக பார்த்தால் மேலும் சில விடயங்கள் புலப்படும். 


முதலாவது, துறவறத்தை விட இல்லறம் சிறந்தது என்று இங்கு கூறுகிறார். 


இரண்டாவது, கஷ்டப்பட்டு தவம் செய்வதை விட, வீட்டில் இருந்து கொண்டே அதைவிட பெரிய பலன்களைப் பெறலாம்.


மூன்றாவது, நாம் எப்போதும் நினைப்போம். கடினமான செயல் உயர்ந்தது என்றும் எளிதாகச் செய்யும் செயல்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது அல்ல என்றும். இங்கே வள்ளுவர் அதை மறுக்கிறார். வீட்டில், மனைவி மக்களோடு இருந்து, விருந்து உண்டு, பசி என்று வந்தவனுக்கு அவன் பசியாற உணவு கொடு. அது எல்லாவற்றையும் விட சிறந்தது என்கிறார். எதுக்கு வேலை மெனக்கெட்டு காட்டில் போய் தவம் செய்து கொண்டு கஷ்டப்பட வேண்டும்?


நான்காவது, பசித்தவனுக்கு பணம் கொடு என்று சொல்லவில்லை. அவன் பசியை மாற்று என்கிறார். உணவு கொடு. அவன் பசி மாறினால் அதுவே சிறந்த புண்ணியம் என்கிறார். 


நமக்கெல்லாம் பசி என்றால் என்ன என்று தெரியாது. சில சமயம் சாப்பிடுவதற்கு எதாவது கொஞ்சம் நேரம் ஆகலாம். பசி இருக்கும். அதெல்லாம் ஒரு பசி இல்லை. வீட்டில் வேண்டும் அளவுக்கு உணவு இருக்கிறது. குளிர் சாதன பெட்டியைத் திறந்தால் மூணு நாளைக்கு வேண்டிய உணவு இருக்கும்.  அதெல்லாம் ஒரு பசி இல்லை. இல்லையா, on-line ல் ஆர்டர் பண்ணி சாப்பிடலாம். இல்லை என்றால் வண்டியை எடுத்துக் கொண்டு போய், அருகில் உள்ள உணவு விடுதியில் உண்டுவிட்டு வரலாம். ஒரு கவலையும் இல்லை. அதெல்லாம் பசியில் சேர்ந்தது அல்ல. 




பசி இருக்கும். உணவு இருக்காது. எப்போது கிடைக்கும் என்றும் தெரியாது. அதுதான் பசி. அந்தப் பசியை மாற்றுவது இருக்கிறதே, அதுதான் பெரிய செயல் என்கிறார். 


இந்தக் குறளின் முழு அத்தமும் புரிய வேண்டும் என்றால், இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் தெரியும். 



 


Monday, October 23, 2023

கம்ப இராமாயணம் - அவனோடு உனக்கு என்ன உறவு ?

 கம்ப இராமாயணம் - அவனோடு உனக்கு என்ன உறவு ?


உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை மிகக் கொடுமையானது. 


ஆணோ, பெண்ணோ, அவர்களின் உணர்வுகளை தங்களின் துணையிடம் தானே பகிர்ந்து கொள்ள முடியும். 


சோகம் என்ன என்றால், இராமனும் சீதையும் பிரிந்து இருக்கிறார்கள். இராமன் யாரிடம் சொல்லி தன் உணர்சிகளை பகிர்ந்து கொள்வான்?


இராமனின் சோகத்தை நம் மமீது ஏற்றுகிறான் கம்பன். 


தென் கடற்கரையில், தனியாக நிற்கும் இராமனை முதலில் தென்றல் வருத்தியது, பின் பவளம் வருத்தியது, இங்கு, இப்போது முத்து வருத்துகிறது. 


பவளம், சீதையின் உதடுகளை ஞாபகப் படுத்தி அவனை வருத்தியது. 


முத்து, சீதையின் பல் வரிசையை நினவு படுத்தி வருத்துகிறது. 


கம்பன், அந்த முத்தைப் பார்த்து கேட்கிறான் 


"ஏய் முத்தே, 


சீதை இருக்கும் தூரம் ரொம்பத் தொலைவு இல்லை.  எப்படியாவது இராவணனை வென்று சீதையை மீட்டு வந்து விடலாம் என்று அவன் வீரம் துணை நிற்க. ஒரு பக்கம் நம்பிக்கை, இன்னொரு பக்கம் வீரம் என்று இருந்தாலும், பிரிவும் அவனை வாட்டுகிறது. நாளும் மெலிந்து போகிறான்.

அப்படி இருக்க, எதற்காக சீதையின் பல் வரிசையை ஞாபகப் படுத்தி அவனை நீ வதைக்கிறாய். ஒரு வேளை இராமனை துன்பம் செய்வதால் உனக்கும் அந்த அரக்கர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறாதா" 


என்று. 


பாடல் 




தூரம் இல்லை, மயில் இருந்த சூழல்' என்று மனம் செல்ல,

வீர வில்லின் நெடு மானம் வெல்ல, நாளும் மெலிவானுக்கு,-

ஈரம் இல்லா நிருதரோடு என்ன உறவு உண்டு உனக்கு? -ஏழை

மூரல் முறுவல் குறி காட்டி, முத்தே! உயிரை முடிப்பாயோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_23.html


(pl click the above link to continue reading)


தூரம் இல்லை = ரொம்ப தூரம் இல்லை 


மயில் இருந்த சூழல் = மயில் போன்ற சீதை இருக்கும் இடம் 


என்று மனம் செல்ல = என்று இராமனின் மனம் சொல்ல 


வீர வில்லின் = வீரம் நிறைந்த வில்லின் 


நெடு மானம் வெல்ல = வென்று விடலாம் என்ற ஆண்மை கொப்பளிக்க 


நாளும் மெலிவானுக்கு = நாளும் மெலிகின்ற இராமனுக்கு 


ஈரம் இல்லா  = மனதில் ஈரம் (கருணை ) கொஞ்சம் கூட இல்லாத 


நிருதரோடு = பகைவர்களோடு 


என்ன உறவு உண்டு உனக்கு = உனக்கு என்ன உறவு ? 


ஏழை = சீதையின் 


மூரல் முறுவல் = பல் தெரியும் புன்சிரிப்பைக்


குறி காட்டி = குறித்து ஞாபகப் படுத்தி 


முத்தே = முத்தே 


உயிரை முடிப்பாயோ? = அவன் உயிரை முடிப்பது என்றே முடிவு செய்து விட்டாயோ ?


ஆண்கள் கவலைப் படுவதை பற்றி பல கதைகளில் படித்து இருக்கிறோம். 


ஆனால் அது பொதுவாக அரசு பறிபோனது, போரில் தோல்வி, வியாபாரத்தில் நட்டம், உடல் நிலை, என்று இருக்கும். 


மனைவியை பிரிந்த கணவனின் சோகத்தை அதிகமாக பார்க்க முடியாது. 


காதலனைப் பிரிந்த காதலியின் சோகம், கணவனை பிரிந்த மனைவியின் சோகம் எளிதாக காணக் கிடைக்கும். 


உடல் மெலிந்து, வளையல் கழண்டு, இடுப்பில் ஆடை நிற்காமல் நெகிழ என்று பிரிவு ஒரு பெண்ணை வாட்டுவதை விவரித்து காட்டும் இலக்கியம் பல. 


மனைவியப் பிரிந்த கணவன் உடல் மெலிந்தான் என்று எங்காவது இருக்கிறதா? 


இராமன் நாளும் மெலிந்தான் என்று கம்பன் மீண்டும்  மீண்டும் சொல்கிறான். 


அதுவும், யுத்த காண்டத்தின் முன்னுரையில்....




Saturday, October 21, 2023

திருக்குறள் - ஈகை - இரக்கப்படுவது தவறு

 திருக்குறள் - ஈகை - இரக்கப்படுவது தவறு 


என்னது, இரக்கப்படுவது தவறா? 


ஒருவன் வறுமையில் வாடுகிறான் என்றால் அவனைப் பார்த்து இரக்கபடுவது எப்படி தவறாகும். அப்படி இரக்கப்படாவிட்டால் அவனுக்கு எப்படி உதவி செய்யவேண்டும் என்று தோன்றும்?


ஆனால் வள்ளுவர் சொல்கிறார் இரக்கப்படுவது தவறு என்று. 


இது என்ன புதுக் கதையாக இருக்கிறது?


பாடல் 


இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்

இன்முகம் காணும் அளவு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_21.html


(pl click the above link to continue reading)


இன்னாது = இனியது என்பதன் எதிர்பதம் இன்னாது. அதாவது, நல்லது அல்ல, கெட்டது 


இரக்கப் படுதல் = ஒருவர் மேல் இரக்கம் கொள்வது 


இரந்தவர் = நம்மிடம் உதவி என்று கேட்டு வந்தவர் 


இன்முகம் காணும் அளவு = இனிய முகத்தை காணும் வரை 


யோசித்துப் பாருங்கள். 


வீட்டில் வேலை பார்க்கும் பெண், தன்னுடைய மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப் பட்டு இருக்கிறது, ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று நம்மிடம் கேட்கிறாள். வேலை செய்யும் பெண் நல்லவள். அவளுடைய மகளையும் நாம் பார்த்து இருக்கிறோம். நல்ல பெண். பாவமாக இருக்கிறது. பணம் இல்லை என்றால் திருமணம் நடக்காது. அந்தப் பெண்ணின் வலி நமக்குத் தெரிகிறது. 


சரி, இந்தா என்று ஒரு பத்து உரூபாய் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். 


அந்தப் பெண்ணின் வலி தீர்ந்து விடுமா? பிரச்சனை தீர்ந்து விடுமா? வேண்டாம் என்று சொல்ல மாட்டாள். ஆனால், அவள் முகத்தில், அவள் வலியில், ஒரு மாற்றமும் இருக்காது. அவளைப் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றும்? அப்பாட, ஒருவழியாக அந்த பெண்ணின் பிரச்சனையை தீர்த்து  விட்டோம் என்று ஒரு நிம்மதி வருமா?  


வராது. 


அவள் முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் நமக்கு ஒரு சங்கடம் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், நம்மிடம் உதவி என்று ஒருவன் கேட்டு வந்தால், அவன் முகம் மாறி, சிரித்த முகமாக மாறும் வரை உதவி செய்ய வேண்டும். 


அது வரை, இரக்கப் படுகிறேன் என்று சொல்லுவது நமக்குத் துன்பம் தரும் ஒன்றுதான். 


மேலே சொன்ன உதாரணத்தில், அந்த வேலைக்கார பெண்ணிடம், "இந்தா இதை கல்யாண செலவுக்கு வைத்துக் கொள்" என்று ஒரு பத்தாயிரம் கொடுத்தால் , அவள் முகம் மலரும் தானே. "ரொம்ப நன்றிமா/நன்றி ஐயா" என்று கண்ணீர் மல்க சொல்லிவிட்டுப் போவாள். 


அப்படி அவள் முகம் மலர்ந்து, இனிமையானதாக மாறும்வரை, இரக்கப் படுவது நமக்கும் துன்பம் தருவதுதான் என்கிறார். 


இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு. இரசிக்கலாம். நடைமுறையில் சாத்தியமா என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்ல ஆசை. 


நல்ல விதை என்றாலும், போடுகின்ற இடத்தில் எல்லாம் விளைவது இல்லை. நல்ல நிலத்தில் விழுந்தால், அது முளைத்து பலன் தரும். 


திருக்குறள் ஒரு நல்ல விதை. அது எந்த மனத்தில், எந்த நிலத்தில் விழுகிறது என்பதைப் பொறுத்து அது எப்படி வளரும் என்பது. 


அது முடியாது, இது சாத்தியம் இல்லை, இது நடைமுறைக்கு ஒத்து வராது என்று படிப்பதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால்,  ஒன்றும் விளையாத உவர் நிலமாகப் போய் விடும் மனம். 


மனதை பண் படுத்தி வைப்போம், விதை விழுந்தால் முளைக்கும். மனதை கட்டாந்தரையாக மாற்றி வைத்து இருந்தால் ஒரு விதையும் முளைக்காது. 




Friday, October 20, 2023

கம்ப இராமாயணம் - உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ ?

கம்ப இராமாயணம் - உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ ?


வானர படைகளோடு தென் இந்தியாவின் கடற்கரையில் இராமன் வில்லோடு தனித்து நிற்கிறான். 


தனியனாய் - மனைவியைப் பிரிந்து.


யாரிடம் சொல்ல முடியும்?  சில சோகங்களை வெளியே சொல்ல முடியாது. உள்ளுக்குள் வைத்துக் கொண்டு மறுக வேண்டியதுதான் .


"கடற்கரையில் பவளக் கொடி படர்ந்து இருக்கிறது. அதில் பவளம் இருக்கிறது. பவளம் சிவப்பாக இருக்கும். அந்தப் பவளம் இராமனை பார்க்கிறது. மலை போல உயர்ந்த தோள்கள். மெலிந்த உருவம். பவளத்தை, இராமன் பார்க்கிறான். சீதையின் உதடு போல சிவந்து இருக்கிறது.  அதைப் பார்க்கும் போது இராமனுக்கு சீதையின் நினைவு மேலும் எழுகிறது. சோகம் அவனை கொல்கிறது. ஆனால், அந்த பவளத்துக்கு, நாம் இராமனை இப்படி வதைக்கிரோமே என்ற கவலை ஒன்றும் இல்லை..."


பாடல் 


சிலை மேற்கொண்ட திரு நெடுந் தோட்கு உவமை மலையும் சிறிது ஏய்ப்ப,

நிலை மேற்கொண்டு மெலிகின்ற நெடியோன் தன்முன், படி ஏழும்

தலை மேல் கொண்ட கற்பினாள் மணி வாய் என்ன, தனித் தோன்றி,

கொலை மேற்கொண்டு, ஆர் உயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ-கொடிப் பவளம்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_20.html


(please click the above link to continue reading)


சிலை மேற்கொண்ட = கையில் வில்லை ஏந்தி நிற்கும் 


திரு = சிறந்த 


நெடுந் தோட்கு = நெடிது உயர்ந்து தோள்களுக்கு 


உவமை = உவமையாக 


மலையும்  = மலையை 


சிறிது ஏய்ப்ப = சிறிது உவமையாக சொல்லும்படி 


நிலை மேற்கொண்டு = நிலைத்து நின்ற, அசையாமல் நின்ற 


மெலிகின்ற = உடல் மெலிந்து 


நெடியோன் = உயர்ந்து நிற்கும் இராமன் 


தன்முன் = முன் 


படி ஏழும் = உலகம் ஏழும் 


தலை மேல் கொண்ட = தலையின் மேல் வைத்துக் கொண்டாடும் 


கற்பினாள் = கற்பினை உடைய 


மணி வாய் என்ன = சீதையின் ஒளி வீசும் அதரங்களைப் போல 


தனித் தோன்றி = தனித்துத் தோன்றி 


கொலை மேற்கொண்டு = கொலைத் தொழிலை கொண்டு 


ஆர் உயிர் குடிக்கும் = உயிரை குடிக்கும் 


கூற்றம் கொல்லோ = கூற்றம் (எமன்) போன்றதோ 


கொடிப் பவளம் = இந்த கொடி பவளம் 


அரசை இழந்து,  மனைவியை இழந்து, தனித்து நிற்கும் இராமன். 


அப்பா, அம்மாவின் கட்டளை, அதை செய்து முடிக்க வேண்டிய கடமை ஒரு புறம். 


மனைவியை இழந்த சோகம் மறு புறம். 


அரசனாக, ஒரு வீரனாக, எதிரியை வீழ்த்தி மனைவியை மீட்க வேண்டிய கடமை மறுபுறம். 


இதை எல்லாம் பகிர்ந்து கொள்ளக் கூட முடியாத சோகம் மறுபுறம். 


இராமனை அந்தப் புள்ளியில் காலம் நிறுத்தி இருக்கிறது. 


அவன் என்ன செய்யப் போகிறான்? 




 


Thursday, October 19, 2023

நீதி நெறி விளக்கம் - ஆணியே புடுங்க வேண்டாம்

நீதி நெறி விளக்கம் - ஆணியே புடுங்க வேண்டாம் 


சில விடயங்கள் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். 


அது என்ன விடயங்கள்?


நிறைய படித்து இருப்பான். ஒரு சபையில், நாலு பேர் முன்னால் படித்ததை சொல் என்றால் நடுங்குவான். அவையைக் கண்டால். அப்படிப் பட்டவன் படிப்பதை விட படிக்காமல் இருப்பதே மேல். 


சில பேர் மிக அழகாக பேசுவார்கள். அடுக்கு மொழி, எதுகை மோனை, குரலில் ஏற்ற இறக்கம், நகைச்சுவை எல்லாம் இருக்கும். ஆனால் அவர்கள் பேச்சில் ஒரு துளியும் பயன் இருக்காது. ஏதோ கேட்டோம், இரசித்தோம், சிரித்தோம் என்று வர வேண்டியதுதான். கல்வி அறிவு இல்லாதவன் பேசுவதை விட பேசாமல் இருப்பது நல்லது. 


சில பேர் எச்சில் கையால் காக்கை ஓட்ட மாட்டார்கள். ஒருத்தருக்கு ஒரு பைசா தந்து உதவி செய்ய மாட்டான். அவனிடம் செல்வம் இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல். 


சில பேர் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்வார்கள். ஆனால், கையில் அவ்வளவாக செல்வம் இருக்காது. அவனிடம் உள்ள வறுமை, அது இல்லமால் இருப்பதே நல்லது. 


பாடல்  


அவை அஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்

அவை அஞ்சா ஆகுலச் சொல்லும் - நவை அஞ்சி

ஈத்து உண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன் நலமும்

பூத்தலின் பூவாமை நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_42.html


(pl click the above link to continue reading)


அவை அஞ்சி = அவையை அஞ்சி அல்லது அவைக்கு அஞ்சி. (அவை = சபை, கூட்டம்) 


மெய்விதிர்ப்பார் = உடம்பு உதறும் 


கல்வியும் = கற்ற கல்வியும் 


கல்லார் = படிக்காதவன் 


அவை அஞ்சா = சபைக்கு கொஞ்சம் கூட பயம் இல்லாமல் 


ஆகுலச் சொல்லும் = ஆரவாரமாக பேசும் பேச்சும் 


நவை அஞ்சி = பாவத்துக்குப்   பயந்து, குற்றத்துக்குப் பயந்து 


ஈத்து உண்ணார் செல்வமும் = பிறருக்கு கொடுத்து, தான் உண்ணாதவன் செல்வமும் 


நல்கூர்ந்தார் = வறுமையில் வாடும் நல்லவர்களின்  


இன் நலமும் = இனிய குணமும் 


பூத்தலின் பூவாமை நன்று = இருப்பதை விட இல்லாமல் இருப்பதே மேல் 


ஏன் என்றால் அதனால் யாருக்கும் ஒரு பயனும் இல்லை. அது இருந்தாலும் ஒண்ணுதான் இல்லாவிட்டாலும் ஒண்ணுதான். 


படிக்காதவனுக்கு, நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லத் தெரியாது.எனவே சொல்ல மாட்டான். படித்தவனுக்கு சபையை கண்டால் பயம், எனவே அவனும் சொல்ல  மாட்டான். இரண்டுக்கும் என்ன வித்தியாசம். படிக்காமல் இருந்திருந்தால், அந்த நேரமாவது மிச்சமாயிருக்கும். 


எல்லாருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த குணம் இருக்கும். கையில் காலணா இருக்காது. அந்த நல்ல குணத்தால் யாருக்கு என்ன பயன்?  


உலோபியின் செல்வத்தால் என்ன பயன். அந்த செல்வம் அவனிடம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? 


எனவே, படித்தால் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும், செல்வம் சேர்த்தால், மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும் என்பது பெறப் பட்டது. 




திருக்குறள் - எவ்வம் உரையாமை

திருக்குறள் - எவ்வம் உரையாமை 


மற்றவர்களுக்கு உதவி செய்வது நல்லது. 


இது எல்லா நாட்டினரும், மதத்தினரும் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு நடைமுறை உண்மை. 


ஆனால், தமிழர்கள் அதை அறமாக கொண்டிருந்தார்கள். ஈகை செய்வது ஏதோ ஒரு வாய்ப்பு (option) அல்ல. செய்தே ஆக வேண்டும், அது இல்லறம் என்று வகுத்தார்கள். 


சரி, ஈகை செய் என்றால் எவ்வளவு செய்வது? 


சில மதங்களில் ஒரு குறிப்பிட்ட பங்கை கொடு என்று குறிப்பிடப்படுகிறது. 


வள்ளுவர் உச்சம் தொடுகிறார். இப்படி கூட ஒருவன் சிந்திக்க முடியுமா என்று வியக்கும் அளவுக்கு  அதைச் சொல்கிறார். 


பாடல்  


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_19.html


(pl click the above link to continue reading)


இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலன்உடையான் கண்ணே உள


பொருள் 


இலன்என்னும்  = இல்லை என்று சொல்லும் 


எவ்வம் = துன்பம் 


உரையாமை = சொல்லாமல் இருத்தல் 


ஈதல் = கொடுத்தல் 


குலன்உடையான் = நல்ல குடியில் பிறந்தவன் 


கண்ணே உள = இடத்தில் மட்டும் தான் இருக்கும். 


நல்ல குடும்பத்தில் பிறந்தவன் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பான் என்கிறது குறள்.


இதில் என்ன பெரிய அர்த்தம் இருக்கிறது? இதுக்கு எதுக்கு அவ்வளவு build  up என்று நீங்கள் நினைக்கலாம். 


பரிமேலழகர் உரையைப் பார்ப்போம். 


"இலன் என்று" 


சில பேர், பிச்சைக்காரன் பிச்சை கேட்டால், சில்லறை "இல்லை", பொ போ போ என்று விரட்டி விடுவார்கள். பிச்சைக்காரன் தன்னிடம் இல்லை என்று கேட்டால், இவனும் தன்னிடம் இல்லை என்கிறான். இதில் யார் பெரிய பிச்சைகாரன்? 


இல்லை என்று ஒருவன் வந்தால், அவனிடம், என்னிடமும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்க வேண்டும். 


இரண்டாவது, 


ஒருவன் நம்மிடம் வந்து இல்லை என்று அவன் சொல்லுவதற்கு முன்னே கொடுக்க வேண்டும்.  தெருவில் பிச்சைக்காரன் நிற்கிறான். பார்த்தாலே தெரிகிறது அவன் சரியாக சாப்பிட்டு பல நாள் ஆகியிருக்கும் என்று. அவன் நம்மிடம் வந்து "எனக்கு சாப்பிட காசு "இல்லை" ஏதாவது பிச்சை போடுங்கள்" என்று சொல்லுவதற்கு முன் கொடுத்துவிட வேண்டுமாம். 


வீட்டில் வேலை பார்க்கும் பெண், அவளுடைய மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்த செய்தியை சொல்கிறாள். அவளுக்கு கட்டாயம் பணம் தேவைப்படும் என்று அறிந்து, அவள் கேட்கும் முன்னே கொடுக்க வேண்டும். உதவி செய்கிறேன் பேர்வழி என்று "சரி இந்தா பத்து உரூபாய், இதை வைத்து கல்யாணத்தை சிறப்பாக நடத்து" என்று சொல்வது சரியா? அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர், மூன்றாவது அர்த்தம் என்ன என்று பாருங்கள். 


உதவி கேட்பது என்பது மிகவும் வருத்தமான செயல். அதை செய்ய விடக் கூடாது.  உலகளந்த பெருமாள் கூட மூன்றடி நிலம் யாசகம் கேட்க்க வந்த போது கூனி குறுகி, குள்ள வாமன அவதராமாக வந்தார். 


ஈகை என்ற தத்துவத்தை கொஞ்சம் நாம் விரிவுபடுத்தினால், நண்பர் வீட்டில் யாருக்கோ உடம்பு சரி இல்லை. மருத்துவ மனையில் அனுமதித்து இருக்கிறார்கள். அவர் கூப்பிட்டு கேட்க வேண்டும் என்று அல்ல, நாமே போய் நிற்க வேண்டும். நான் பார்த்துக் கொள்கிறேன், நீ போய் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள் என்று முன்னே போய் நிற்க வேண்டும். இது ஈகை இல்லைதான் என்றாலும், சற்று விரித்து சிந்தித்தால் தப்பு இல்லையே. 



மூன்றாவது, 


பசி என்று ஒருவன் வந்து யாசகம் கேட்கிறான். அவனுக்கு ஒரு ஒரு உரூபாய் தானம் கொடுப்பது. அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும்? ஒரு காப்பி கூட குடிக்க முடியாது.  அவன் மேலும் பத்து பேரிடம் சென்று "எனக்கு பசிக்கு காசு இல்லை, உதவி செய்யுங்கள் " என்று கேட்க வேண்டும். நம்மிடம் ஒருவன் உதவி என்று வந்து கேட்டால் அவன் மற்றொருவரிடம் சென்று "இல்லை" , மேலும் உதவி வேண்டும் என்று கேட்க்கக் கூடாது. அப்படி உதவி செய்ய வேண்டும் .


உதாரணமாக, பசி என்று ஒருவன் வந்தால், அவன் வயிறார உணவு இட வேண்டும். நன்றாக சாப்பிட்டுவிட்டால் பின் ஏன் இன்னொருவரிடம் சென்று உணவு இல்லை என்று சொல்லப் போகிறான். சில மணி நேரம் கழித்து மீண்டும் பசிக்கும், அப்போது சொல்வான். அது வேறு விடயம். முடிந்தால் அவன்  யாரிடமும் எப்போதும் இல்லை என்று சொல்லாத வண்ணம் உதவி செய்யலாம். 


மூன்று விடயங்கள் சொல்கிறார்: 


முதலாவது, ஒருவன் இல்லை என்று சொல்லும் முன் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் .


இரண்டாவது, இல்லை என்று வந்தவனிடம் என்னிடமும் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்ய வேண்டும். 


மூன்றாவது, நம்மிடம் இல்லை என்று வந்தவன், வேறு யாரிடமும் அந்தச் சொல்லை சொல்லா வண்ணம் உதவி செய்ய வேண்டும். 


இதை எல்லாம் சொல்லிவிட்டு, வள்ளுவர் ஒரு குறிப்பும் வைக்கிறார். 


இப்படி யார் செய்வார்கள் என்றால், நல்ல குடியில் பிறந்த ஒருவனால் மட்டுமே இப்படிச் செய்ய முடியும் என்கிறார். 


அப்படிச் செய்யாவிட்டால் நாம் எந்த குடியில் பிறந்தவர்கள் என்று நாமே முடிவு செய்து கொள்ளலாம். 


எல்லோருக்கும், தங்கள் குலம், குடி, குடும்பம் உயர்ந்தது என்று சொல்லிக் கொள்ளத் தானே ஆசை இருக்கும். அப்படியானால், இதைச் செய் இல்லை என்றால் நீ மட்டும் அல்ல உன் குலமே கீழான குலம். அப்புறம் உன் இஷ்டம் என்று விட்டு விடுகிறார் வள்ளுவர். 


இப்போது சொல்லுங்கள். வியப்பாக இல்லை? எவ்வளவு ஆழமாக , அழகாக, இத்தனை சுருக்கமாக சொல்லி இருக்கிறார் என்று....


    


Wednesday, October 18, 2023

நீதி நெறி விளக்கம் - கல்வி

 நீதி நெறி விளக்கம் - கல்வி 


ஒரு பொருளைச் சிறப்பித்து கூற வேண்டும் என்றால், அதை விட உயர்ந்த ஒன்றைச் சொல்லி, அது போல இது இருக்கிறது என்று கூறுவது மரபு. 


உதாரணமாக, ஒரு பெண்ணின் முகம் அழகாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என்றால், அது நிலவு போல இருக்கிறது, தாமரை மலர் போல இருக்கிறது என்று சொல்வது மரபு. 



கல்வின்னா என்ன, அதை அடைவதால் என்ன பலன், என்ன சுகம், அது இல்லாவிட்டால் என்ன ஆகிவிடும் என்று எப்படி விளக்குவது? படித்து அறிவு பெற்றால் நல்லது என்று சொன்னால் என்ன புரியும்?  மலங்க மலங்க விழிக்க வேண்டியதுதான். 


அதைவிட சிறந்த ஒன்றை உதாரணமாகச் சொல்லி விளங்க வைக்கிறார்.


கல்வியை விட சிறந்தது எது ?


ஒருவனுக்கு வாழ்வில் மிகுந்த இன்பத்தைத் தரக்கூடியது எது என்று சிந்திக்கிறார். 


அன்புள்ள மனைவி, அருமையான பிள்ளைகள், தேவையான அளவு செல்வம்.. இதைத் தவிர வேறு என்ன என்ன வேண்டும். கல்வி இந்த மூன்றுக்கும் ஒப்பானது என்கிறார். 


பாடல் 



கல்வியே கற்பு உடைப் பெண்டிர் அப்பெண்டிர்க்குச்

செல்வப் புதல்வனே தீங்கவியாச் - சொல்வளம்

மல்லல் வெறுக்கையா மாண் அவை மண்ணுறுத்தும்

செல்வமும் உண்டு சிலர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_18.html


(pl click the above link to continue reading)



கல்வியே = கல்விதான் ஒருவனுக்கு 


கற்பு உடைப் பெண்டிர்  = கற்பு உள்ள மனைவி 


அப்பெண்டிர்க்குச் = அந்த அன்பான மனைவியின் 


செல்வப் புதல்வனே = அருமையான பிள்ளையே 


தீங்கவியாச் = கல்வியால் பிறக்கும் அழகான கவிதை 


சொல்வளம் = அந்தக் கவிதையில் உள்ள சொல் வளம் (அர்த்தம், அழகு, நயம்) 


மல்லல் வெறுக்கை = மிகுந்த செல்வம் 


யா = அவை 


மாண் அவை மண்ணுறுத்தும் = மற்றவருக்குச் சொல்லுதல் 


செல்வமும் = அந்த செல்வமும் 


உண்டு சிலர்க்கு = உண்டு சிலருக்கு 


அன்பான மனைவி, அருமையான பிள்ளைகள், செல்வச் சிறப்பு இது ஒரு புறம். 


கல்வி, கல்வியால் விளையும் கவிதை, அந்தக் கவிதையை சபையில் மற்றவர்க்கு சொல்லும் ஆற்றல் இது மறு புறம். 


அன்பான மனைவி இருந்தாலும், பிள்ளை இல்லாவிட்டால் அந்த இல்லறம் சிறக்குமா?  கணவன் மனைவி அன்பாகத்தான் இருக்கிறார்கள். குழந்தை இல்லை என்றால் எவ்வளவு தவிக்கிறார்கள். எத்தனை கோவில், எத்தனை மருத்துவம் ? 


செல்வம் இருக்கலாம். அதை மற்றவருக்கு கொடுக்கும் குணம் எத்தனை பேருக்கு இருக்கும். படிப்பார்கள். இரசிப்பார்கள். அதை மற்றவர்களோடு அவர்களுக்கு புரியும்படி சொல்லும் திறம் எத்தனை பேருக்கு இருக்கும். 


கல்வி கற்றால் மட்டும் போதாது, அதை கவிதை/கட்டுரை போன்றவற்றின் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும்  ஆற்றலும் வேண்டும். அப்போதுதான் கல்வி பூரணப்படும் என்கிறார். 


மனைவியும் வேண்டும், பிள்ளைகளும் வேண்டும், செல்வமும் வேண்டும், அந்த செல்வம் எல்லோருக்கும் பயன்படவும் வேண்டும். 


கல்வியும் வேண்டும், அது கவிதை, கட்டுரையாக வெளிப்படவும் வேண்டும், அதுவும் மற்றவர்களுக்கு பயன்படவும் வேண்டும். 




Tuesday, October 17, 2023

திருக்குறள் - ஈகை - கொடுக்கல் வாங்கல்

 திருக்குறள் - ஈகை - கொடுக்கல் வாங்கல் 


ஈகை, அதாவது மற்றவர்களுக்கு கொடுப்பது, நல்லது. 


சரி. ஏற்றுக் கொள்ளலாம். 


வாங்குவது நல்லதா? ஒருவர் நமக்கு ஏதோ ஒன்றைத் தருகிறார் என்றால், அதை வாங்கிக் கொள்வது நல்லதா? ஈகை என்றால் கொடுப்பதும், வாங்குவதும் இருக்கும் தானே. வாங்க யாரும் இல்லை என்றால் எப்படி ஈகை ஒன்று இருக்க முடியும்?


என்ன ஒரு சிக்கல். 


வள்ளுவர் சொல்கிறார், 


"வாங்குவது நல்லது என்று யாரவது சொன்னாலும், அதை வாங்காமல் இருப்பது நல்லது. கொடுப்பது தீமை என்று யாராவது சொன்னாலும், கொடுக்காமல் இருக்கக் கூடாது" 


பாடல்  


நல்லாறு எனினும் கொளல்தீது மேல்உலகம்

இல்லெனினும் ஈதலே நன்று


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_17.html

(pl click the above link to continue reading)



நல்லாறு = ஆறு என்றால் வழி. நல் + ஆறு = நல்ல வழி 


எனினும் = என்றாலும் 


கொளல்தீது = மற்றவர் கொடுத்து அதைப் பெற்றுக் கொள்வது தீது 


மேல்உலகம் = சொர்கமே 


இல்லெனினும் = இல்லை என்றாலும் 


ஈதலே நன்று = கொடுப்பதே சிறந்தது 


எனினும் என்ற சொல்லுக்கு "என்று சொல்பவர்கள் இருந்தாலும்" என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். 


வாங்குவது நல்லது, கொடுப்பது தீது என்று யாராவது சொன்னாலும், அதை நம்பக் கூடாது. வாங்குவது தீது, கொடுப்பது நல்லது என்கிறார். 


"எனினும்" என்பதில், யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள், ஒருவேளை "சொன்னாலும்" என்று பொருள் கொள்ள வேண்டும். 


சில மதங்களில், அல்லது சில மத உட் பிரிவுகளில் பிச்சை பெற்று வாழ்வது சிறந்தது என்று ஒரு சமய கோட்பாடாகவே சொல்லப் படுகிறது. இந்த குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் யாசகம் பெற்றுத்தான் வாழ வேண்டும் என்று விதி செய்கிறது. 


வள்ளுவர் அதை மறுக்கிறார். நல்லது என்று சமயம் கூறினாலும், அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று கூறினாலும், "கொள்வது தீது" என்கிறார். 


உழைக்காமல், பிறர் கையை எதிர்பார்த்து வாழ்வது ஏற்புடையது அல்ல என்பது அவர் கருத்து. 


மேலும், 


எதற்காக ஈகை செய்ய வேண்டும்? அப்படிச் செய்வது புண்ணியம், அப்படி புண்ணியம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்று நினைத்து செய்தால் அது ஈகையா? ஒன்றை எதிர்பார்த்து செய்வது ஈகை அல்ல. வியாபாரம். 


"மேல்உலகம் இல்லெனினும் ஈதலே நன்று". சொர்க்கம் இல்லை என்றால், ஈகை செய்யக் கூடாதா? ஈகை செய்வதை நிறுத்தி விடவேண்டுமா?


இல்லை, ஈகை செய்வது சமுதாயக் கடமை. அதற்கு ஒரு பலன் இல்லை என்றாலும் செய்யத்தான் வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. 


பிற்காலத்தில் அறிவியல் வளரலாம். சொர்க்கம் என்பதெல்லாம் ஒன்று இல்லை என்று நிரூபணம் செய்யப் படலாம். அப்போது என்ன செய்வது? சொர்க்கம் இல்லை என்றால் ஈகை நின்று விடுமே. 


அதை யோசித்து வள்ளுவர் சொல்கிறார், "மேல் உலகம் இல்லை என்றாலும் ஈதல் செய்வது நல்லது" என்று. 


எனவே, யார் என்ன சொன்னாலும், எது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், ஏற்பது இகழ்ச்சி, ஈகை செய்வது கடமை. 


 



Monday, October 16, 2023

கம்ப இராமாயணம் - பூசாது போகாது

கம்ப இராமாயணம் - பூசாது போகாது  


வானர படைகளோடு தென் கடற்கரையில் இராமன் நிற்கிறான். தனியனாக கடலைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். 


அவன் மேல் கம்பனுக்கு அவ்வளவு பரிதாபம் பிறக்கிறது. 


ஒவ்வொரு நாளும் சீதையின் பிரிவால் அவன் உடல் வாடுகிறது. நேற்று இருந்தது போல இன்று இல்லை. அந்த அவலத்தைக் கண்டு கடல் கதறுகிறது. ஐயோ, என் இராமனுக்கா இந்த கதி என்று. அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், தென்றல் காற்று பூக்களில் உள்ள மகரந்தகளை கொண்டு வந்து இராமன் மேல் பூசுகிறது. 


காதல், பிரிவு, சோகம், காமம், தன்னிரக்கம் என்று அனைத்தையும் குழைத்து தமிழில் ஊட்டுகிறான் கம்பன். 


பாடல் 


நென்னல் கண்ட திருமேனி இன்று பிறிது ஆய், நிலை தளர்வான்-

தன்னைக் கண்டும், இரங்காது தனியே கதறும் தடங் கடல்வாய்,

பின்னல் திரைமேல் தவழ்கின்ற பிள்ளைத் தென்றல், கள் உயிர்க்கும்

புன்னைக் குறும் பூ நறுஞ் சுண்ணம் பூசாது ஒருகால் போகாதே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_16.html


(please click the above link to continue reading)


நென்னல் = நேற்று 


கண்ட = பார்த்த 


திருமேனி = இராமனின் உருவம் 


இன்று = இன்று 


பிறிது ஆய்= வேறு மாதிரி 


நிலை தளர்வான்= தன் இயல்பு நிலையில் இருந்து தளர்ந்து 


தன்னைக் = தளர்வான் தன்னை. தளரும் இராமனை 


கண்டும் = பார்த்த போதும் 


இரங்காது = இரக்கம் கொள்ளாமல் 


 தனியே கதறும்  = தனியே கதறும் 


தடங் கடல்வாய் = பெரிய கடலின் கரையில் 


பின்னல் திரைமேல் = பின்னல் போல் எழும் அலைகள் மேல் 


தவழ்கின்ற = தவழ்ந்து வருகின்ற 


பிள்ளைத் தென்றல் = இளம் தென்றல் 


கள் உயிர்க்கும் = தேனை சொரியும் 


புன்னைக் = புன்னை மரத்தின் 


குறும் பூ = சின்ன சின்ன பூக்களின் 


நறுஞ் = மணம் வீசும் 


சுண்ணம் = பொடிகள் (மகரந்தப் பொடிகள்) 


பூசாது = இராமன் மேல் பூசாது 


ஒருகால் போகாதே = ஒரு காலத்திலும் போகாது 


பூசாமல் போகாது என்றால், பூசிவிட்டுப் போகும் என்று அர்த்தம். 


"உன்னிடம் கொடுத்த கடனை வாங்காமல் விட மாட்டேன் என்றால் வாங்கியே தீருவேன் என்று அர்த்தம்". 


இராமன் வாடுகிறான். 


கடல் அழுகிறது. 


தென்றலுக்கு அது எல்லாம் தெரியவில்லை. 


"பிள்ளைத் தென்றல் தவழ்ந்து" என்கிறான் கம்பன். 


அலை வருகிறது. அதன் மேல தென்றல் உட்கார்ந்து கொண்டு வருகிறது. அது சிறு பிள்ளை தவழ்ந்து வருவது போல இருக்கிறதாம். அலையை , குழந்தையின் தவழ்தலுக்கு உவமை சொல்லி கேட்டு இருக்கிறோமா? 


இவ்வளவு நுணுக்கமான அழகான பாடலை எங்கு வைக்கிறான் கம்பன்? யுத்த காண்டத்தில். 


வாழ்வில் எத்தனை சிக்கல் வந்தால் என்ன?  இரசிப்பதற்கு இடம் இருக்கிறது என்று கோடு போட்டு காட்டுகிறான். 


G K Chesterson என்று ஒரு ஆங்கில கட்டுரையாளர் இருந்தார். ஏதோ ஒரு காரணத்தால் அவருக்கு ஒரு கால் போய்விட்டது அல்லது முறிந்து விட்டது. நாமாக இருந்தால் எவ்வளவு வருத்தப் படுவோம் .


அவர், The advantages of having one leg என்று ஒரு கட்டுரை எழுதினார். பள்ளிப் பருவத்தில் படித்த ஞாபகம். 


துன்பம் என்பது நாம் பார்க்கும் விதத்தில் இருக்கிறது. 


கோடிகணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு தூக்கமில்லாமல், பசி இல்லாமல் துன்பப் படுபவர்களும் இருக்கிறார்கள். 


கையில் காலணா காசு இருக்காது. நன்றாக உண்டு, தன்னை மறந்து தூங்குபவர்களும் இருக்கிறார்கள். 


வாழ்க்கை, நம் பார்வையில் இருக்கிறது. 


 


Sunday, October 15, 2023

நாலடியார் - தன் போல் ஒருவன் முகம் நோக்கி

நாலடியார் - தன் போல் ஒருவன் முகம் நோக்கி 


படித்தவர்கள், அறிஞர்கள் சொல்வதைக் கேட்பது கடினம். அவர்கள் சொல்வதை கேட்டுப் புரிந்து கொள்ள புத்தியை செலவிட வேண்டும். 


யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது அதை விட கடினம். 


"அதெல்லாம் நடை முறை சாத்தியம் அல்ல" என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டி கழிக்க வேண்டும். 


எதுக்கு இவ்வளவு சிக்கல்?


நம்ம அளவுக்கு அறிவு (குறைந்த) ஒருவனை கண்டு பிடித்து அல்லது அது போல ஆட்கள் உள்ள ஒரு whatsapp குழுவில் சேர்ந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் செய்திகள், துணுக்குகள், போன்றவற்றை பரிமாறி மகிழலாம். 


புத்திசாலிகள் ஒரு குழு வைத்து இருப்பதைப் போல, அறிவு குறைந்தவர்களும் ஒரு குழு வைத்து அவர்களுக்குள் மகிழ்ந்து கொள்வார்கள் என்கிறது இந்தப் பாடல்:


பாடல் 


 கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி

பற்றாது தன்னெஞ் சுதைத்தலால், - மற்றுமோர்

தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர்

புன்கோட்டி கொள்ளுமாம் கீழ்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_15.html


(please click the above link to continue reading)



 கற்றா ருரைக்குங் = கற்றார் உரைக்கும் (சொல்லும், கூறும்) 


கசடறு = கசடு + அறு = குற்றம் இல்லாத 


நுண்கேள்வி = நுண்மையான செய்திகள் 


பற்றாது = பற்றிக் கொள்ளமால், கேட்காமல், படிக்காமல் 


தன்னெஞ் சுதைத்தலால் = தன் + நெஞ்சு + உதைத்ததால் = தன்னுடைய மனம் அதை உதைத்து தள்ளி விடுவதால் 



மற்றுமோர் = வேற ஒரு 


தன்போ லொருவன் = தன்னை போன்ற ஒருவன் (முட்டாள்) 


முகநோக்கித் = முகத்தைப் பார்த்து, அவனுடன் சேர்ந்து 


தானுமோர் = தானும் ஓர் 


புன்கோட்டி = புல்லிய அவையை, குழுவை 


கொள்ளுமாம் கீழ் = கீழ் மக்கள் கொள்வார்கள் 


கீழ் மக்கள், அவர்கள் நிலையில் உள்ளவர்களிடமே சேர்ந்து கொள்வார்கள். 


அந்த நிலையை விட்டு மேலே வர வேண்டும் என்றால், தன்னை விட அறிவில் உயர்ந்தவர்களிடம் பழக வேண்டும். அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அவற்றை புரிந்து கொள்ள முயல வேண்டும். முடிந்தால் அதன் படி நடக்க வேண்டும். 


மாறாக, முட்டாள்களிடம் சேர்ந்து பொழுதைக் கழித்தால், அந்த நிலையிலேயே இருக்க வேண்டியதுதான். 


உயரும் வழி சொல்லித் தருகிறது இந்தப் பாடல். 



Saturday, October 14, 2023

திருக்குறள் - வறியார்க்கு ஈவதே ஈகை

 திருக்குறள் - வறியார்க்கு ஈவதே ஈகை 


ஈகை என்றால் என்ன என்று ஒரு வரைவிலக்கணம் (definition) தருகிறார் முதலில். 


நம் வீட்டில் ஒரு பண்டிகை என்றால் சில பல பலகாரங்கள் செய்வோம். அண்டை அயல் வீடுகளுக்கும் கொடுப்போம். 


அது ஈகையா?


நாம் இன்று கொடுத்தால் அவர்கள் அடுத்த முறை அவர்கல் வீட்டில் ஒரு விசேடம் வரும் போது நமக்கு பலகாரங்கள் அனுப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. 


அப்படி எல்லாம் இல்லை. அதுக்காக ஒன்றும் நான் தருவது இல்லை என்று வாதம் செய்யலாம். ஒவ்வொரு வருடமும் நீங்கள் பலகாரம் அனுப்புகிறீர்கள். அடுத்த வீட்டுக்காரர் பெற்றுக் கொள்கிறார். ஒரு முறை கூட பதிலுக்கு செய்வது இல்லை என்றால் எத்தனை காலம் அனுப்புவீர்கள்? 


அது போல் நம்மை விட பெரிய ஆள்களுக்கு விருந்து கொடுப்பது, அவர்கள் வீட்டு கல்யாணத்துக்கு போய் முறை செய்வது எல்லாம் அவர்களால் பின்னால் நமக்கு ஒரு காரியம் சாதித்துக் கொள்ள முடியும் என்ற எதிர்பார்ப்பில். 


இன்றெல்லாம் திருமண வீடுகளில் மொய் எழுதுகிறார்கள்.  எதற்கு? பின்னால் திருப்பிச் செய்ய வேண்டும். பொருளாகக் கொடுத்தாலும் அதை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். இன்னார், இத்தனை பவுனில் நகை அன்பளிப்பாக அளித்தார் என்று. பின்னால் செய்ய வேண்டுமே. 


இதெல்லாம் ஈகை இல்லை.


பின் எதுதான் ஈகை?


ஒன்றும் இல்லாத வறியவர்களுக்கு ஒரு பலனும் எதிர்பார்க்காமல் ஒன்று கொடுப்பதுதான் ஈகை. 


பாடல் 



வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்

குறிஎதிர்ப்பை நீரது உடைத்து.


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_14.html


(please click the above link to continue reading)


வறியார்க்கொன்று = வறியவர்களுக்கு ஒன்று 


ஈவதே = கொடுப்பதே 


ஈகை = ஈகை 


மற்று எல்லாம் = மற்றவை எல்லாம் 


குறிஎதிர்ப்பை = பிரதி பலனை எதிர்பார்த்து செய்யும் 


நீரது உடைத்து. = தன்மை கொண்டது. 


தெருவில் ஒரு பிச்சைகாரன் போகிறான். அவனுக்கு ஒரு பத்து உரூபாய் தருகிறோம். அது ஈகை. காரணம், அவன் பதிலுக்கு நமக்கு ஏதாவது செய்வான் என்ற நம்பிக்கையில் தந்தது அல்ல என்பதால். 


இரண்டு விடயங்கள் சொல்கிறார். 


ஒன்று, வறியவனுக்கு கொடுக்க வேண்டும். உள்ளூர் அரசியல் பெரும் புள்ளிக்கு விருந்து கொடுத்தால் அது ஈகை அல்ல. 


இரண்டாவது, எதிர்பார்ப்பு இல்லாமல் கொடுக்க வேண்டும்.  வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு ஒரு பழைய ஆடையை கொடுக்கலாம். அது ஈகை அல்ல. காரணம், நாம் அவளுக்கு இதைச் செய்தால் அவள் நம்மிடம் விசுவாசமாக இருப்பாள், வேலையை விட்டு போய் விட மாட்டாள் என்ற நம்பிக்கையில் கொடுப்பது. 


கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?


"நீரது" என்றால் என்ன?  பொதுவாக நீர்மை என்றால் தன்மை. இயற்கை குணம்.  சரி, புரிகிறது. அது என்ன நீர் + அது?


பகுபத உறுப்பிலக்கணம் என்று ஒன்று இருக்கிறது. ஒரு சொல்லை பகுத்து, அதாவது பிரித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வது. 


ஒரு சொல் மூன்று பகுதிகளைக் கொண்டது. 


பகுதி + இடைநிலை + விகுதி 


பகுதி என்பது முதலில் வருவது. விகுதி எனபது கடைசியில் வருவது. இடைநிலை என்பது நடுவில் வருவது. 


ஒரு வினைச்சொல்லில் (verb), பகுதி என்பது வினையைக் குறிக்கும், விகுதி என்பது யார் செய்தார்கள் என்பதைக் குறிக்கும். இடை நிலை என்பது காலத்தை குறிக்கும். அதாவது அது எப்போது நடந்தது என்று சொல்லும். 


ஒரே சொல்லில் மூன்றும் வரும். 


உதாரணமாக:


வந்தான் என்ற சொல்


வா + த் + த் + ஆன் 


என்று பிரியும். 


வா என்ற பகுதி வருகின்ற செயலைக் குறிக்கும். 


இரண்டாவது வரும் த் என்பது சந்தி, அது ந் என திரிந்தது விகாரம். அது என்ன என்று இன்னொரு நாள் பார்ப்போம். 


அடுத்து வரும் த் காலம் காட்டும் இடை நிலை. அது இறந்த காலத்தைக் குறிக்கும். 


இறுதியில் வரும் ஆன் என்பது ஆண்பால், படர்கை, வினை முற்று விகுதி.


இங்கே, நீரது என்பது நீர்+ அது என்று பிரியும். 


நீர் என்றால் நீர்மை. அது என்ற விகுதி, தனியாக ஒரு பொருளைத் தராமல் பகுதியின் பொருளையே தந்தது என்கிறார் பரிமேலழகர். 


  " 'நீரது' என்புழி, 'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி."


அதாவது, நீரது என்றால் (என்புழி) அது என்பது பகுதியான நீர்மையையே மீண்டும் குறிக்கும் விகுதி. 


இது தேவையா?...:)


வேலை மெனக்கெட்டு ஒரு வார்த்தைக்கு இவ்வளவு விளக்கம். இலக்கணத்துக்கு அவ்வளவு முக்கியத்வம் கொடுத்து இருக்கிறார்கள். 



Friday, October 13, 2023

கம்ப இராமாயணம் - காமன் பூங்கணைக்கும்

கம்ப இராமாயணம் - காமன் பூங்கணைக்கும்


வானர சேனைகளோடு தென் கடற்கரையில் நிற்கிறான் இராமன். ஒரு புறம் மனைவியைத் துறந்த வருத்தம். இன்னொரு புறம் இந்த சேனையை நடத்திச் சென்று இராவணனை போரிட்டு வெல்ல வேண்டிய வேலை. இரண்டுக்கும் நடுவில் நிற்கிறான் இராமன். 


அந்தக் கடல் நீர், எப்படி வந்தது என்றால், இராமனைப் பிரிந்த சீதை அழுத கண்ணீர் கடல் நீராக மாறி இராமனை நோக்கி வந்ததாம். அல்லது அவனுக்கு அப்படித் தெரிகிறது. 


இன்னொரு புறம் மன்மதன் வீசும் கணைகள். 


இரண்டுக்கும் இலக்காகி நின்றான் இராமன். 


பாடல்  


வழிக்கும் கண்ணீர் அழுவத்து  வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த

பழிக்கும், காமன் பூங்கணைக்கும்  பற்றாநின்றான் பொன் தோளைச்

சுழிக்கும் கொல்லன் ஒல் உலையில்  துள்ளும் பொறியின் சுடும் அன்னே!

கொழிக்கும் கடலின் நெடும் திரைவாய்த்  தென்றல் தூற்றும் குறுந்து திவலை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_13.html


(please click the above link to continue reading)



வழிக்கும் கண்ணீர் = வழியும் கண்ணீர் 


அழுவத்து = கடலில் (அழுவம் = கடல்) 


வஞ்சி  = பெண், சீதை 


அழுங்க = வருந்தி 


வந்து அடர்ந்த = வந்து சேர்ந்த (கடல் நீர்)  


பழிக்கும் = அந்த பழிக்கும் 


காமன் பூங்கணைக்கும் = மன்மதனின் பூங் கணைகளுக்கும் 


பற்றாநின்றான் = பற்றி நின்றான் 


பொன் தோளைச் = அழகிய தோள்களை 


சுழிக்கும் = சுழித்து எழும் 


கொல்லன் = கொல்லனுடைய (நகை செய்பவன்) 


ஒல் உலையில் = கொதிக்கும் உலையில் 


துள்ளும்  = துள்ளி வெடித்து தெறிக்கும் 


பொறியின் = தீப் பொறியை போல 


சுடும் அன்னே! = சுட்டது 


கொழிக்கும் கடலின் = ஆராவரிக்கும் கடலின்


நெடும் திரைவாய்த்  = நீண்ட பெரிய கரையில் 


தென்றல் = தென்றல் 


தூற்றும் = மேலே அள்ளி வீசும் 


குறுந்து திவலை = சிறு சிறு நீர் துளிகள் 


கையை நீரில் நனைத்து மற்றொருவர் மேல் தெளித்தால் எப்படி இருக்கும்? அது போல, தென்றல் , கடலில் தன் கையை முக்கி இராமன் மேல் தெளித்தது போல இருந்ததாம்.


மனைவியை பிரிந்ததில் இரண்டு விடயங்களை கம்பன் காட்டுகிறான்.. 


ஒன்று, வருத்தம். 


இன்னொன்று, காமன் கணைகள். அன்பை செலுத்த, பகிர்ந்து கொள்ள, கொஞ்ச, அவள் இல்லையே என்ற ஏக்கம். 


எவ்வளவு துல்லியமாக கம்பன் உணர்சிகளை படம் பிடிக்கிறான் !






Thursday, October 12, 2023

கந்தரனுபூதி- என்று விடப் பெறுவேன்?

கந்தரனுபூதி- என்று விடப் பெறுவேன்?


பள்ளியில் படிக்கும் போது முதலாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று படித்து மேலே போவோம். எனக்கு நான்காம் வகுப்பு ரொம்ப பிடித்து இருக்கிறது. எனவே, நான் நான்காம் வகுப்பை விட்டு மேலே வர மாட்டேன் என்று யாராவது சொல்வார்களா?


அலுவலகத்தில் வேலையில் சேரும் போது ஒரு ஆரம்ப நிலையில் சேர்வோம். பின் நன்றாக வேலை செய்து மேலும் மேலும் பெரிய பெரிய பதவிகளை அடைவோம். நடுவில் ஏதோ ஒரு பதவியில் இருந்து கொண்டு, இது ரொம்ப பிடித்து இருக்கிறது. இனிமேல் எனக்கு ஒரு பதவி உயர்வும் வேண்டாம். இங்கேயே இருந்து விடுகிறேன் என்று யாராவது சொல்வார்களா?  


ஆனால், வாழ்வில், பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலையில் சேர்ந்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகள் பெற்றோம்..அவற்றை வளர்த்தோம்...வளர்த்தோம்..வளர்ந்தன...என்று ஒரு இடத்தில் தங்கி விடுகிறோம். அடுத்து என்ன?  


இல்லறம் தான் இறுதியா? அதற்கு மேல் ஒன்றும் இல்லையா?


அதற்கு மேல் போகத் தெரியவில்லையா அல்லது போக விருப்பம் இல்லையா?


சில பேருக்கு மேலே போக விருப்பம் இருக்கும், ஆனால் எப்படி போவது, எங்கே போவது என்று தெரியாது. குழப்பமாக இருக்கும். 


சிலருக்கு, நாலாவது வகுப்பு பிடித்து போய் விடுவதைப் போல, இல்லறமே இறுதி என்று இருந்து விடுகிறார்கள். 


இதில் இருந்து விடுபட்டு மேலே செல்வது எப்படி?


பாடல் 


சிந்தா குல இல் லொடு செல்வ மெனும் 

விந்தா டவி யென்று விடப் பெறுவேன் 

மந்தா கினி தந்தி வரோதயனே 

கந்தா முருகா கரு ணாகரனே . 


பொருள்



(please click the above link to continue reading)


 

சிந்தா குல = சிந்தை + ஆகுலம் = ஆகுலம் என்றால் வருத்தம், குழப்பம், துன்பம் என்று பொருள். சிந்தனை + ஆகுலம் என்றால் மனதுக்கு வருத்தம், குழப்பம் தரும் என்று பொருள்   


இல் லொடு = இல்லறத்தோடு 


செல்வ மெனும் = செல்வம் என்ற 

 

விந்தா டவி = விந்தை + அடவி =  அடவி என்றால் காடு. விந்தா அடவி என்றால் விந்தையான காடு 


யென்று = என்று 


விடப் பெறுவேன் = விடுவேன் 

 

மந்தா கினி = கங்கை 


 தந்தி = தந்த 


வரோதயனே = வரம் + உதயன் = தேவர்கள் பெற்ற வரத்தினால் உதயம் ஆனவனே 

 

கந்தா = கந்தா 


முருகா = முருகா 


கரு ணாகரனே = கருணையே வடிவானவனே 


இந்த இல்லறம் இருக்கிறதே அது சிந்தையை மயக்கும். ஒரு நாள் இனிமையாக இருப்பது போலத் தெரியும். இன்னொரு நாள் என்னடா இது என்று வெறுப்பு வரும். முன்னும் போக விடாது. பின்னும் போக விடாது. செக்கு மாடு சுத்தி சுத்தி வர வேண்டியதுதான். 


அதை ஒரு விந்தையான காடு என்கிறார். 


ஏன் விந்தை என்றால், காட்டுக்குள் போனவன், வெளியே வர வழி தெரியாமல் தவிப்பான். அவன் தான் போனான். போகும் போது காடு, மலை, மரம், அருவி என்று பார்த்துக் கொண்டே போனவன் திரும்ப வழி தெரியாமல் சிக்கிக் கொண்டு தவிப்பான். அது போல இந்த இல்லறமும். உள்ளே நுழையத் தெரியும். வெளியே வரத் தெரியாது. 


இன்னொன்று, காட்டுக்குள் போவது, அங்கேயே தங்கி விட அல்ல. ஆனால், சிலர் அடடா அருவி எவ்வளவு அழகாக இருக்கிறது, குயில் கூவுகிறது, மயில் ஆடுகிறது என்று அதன் அழகில் மயங்கி அங்கேயே இருந்து விடுகிறார்கள். பின்னால் புலி, சிங்கம் வரும், பாம்பு வரும், கள்ளர்கள் வருவார்கள், பல துன்பங்கள் வரும். அது தெரியாமல் சிக்கிக் கொண்டு தவிப்பார்கள். 


எனவே, ஆபத்து நிறைந்தது தெரியாமல் அழகால் மயக்கும் காடு வினோதமான ஒன்று என்கிறார். இல்லறமும் அது போலத்தான். 


நம் வாழ்க்கை முறையை வகுத்த நம் முன்னவர்கள்

அறம், பொருள், இன்பம், வீடு என்று பாதை போட்டார்கள். 


அறம் என்பது இல்லறம், துறவறம் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக பிரியும். 


இரண்டு அறத்துக்கும் பொருள் வேண்டும். வெறும் பொருளும், அறமும் இருந்தால் போதாது, ஆணும் பெண்ணும் கூடும் இன்பம் வேண்டும். 


ஆனால், இவை எல்லாம் முடிவு அல்ல. முடிவு என்பது வீடு. அதை அடைய இவை எல்லாம் படிக்கட்டுகள். மாடிக்கு போகாமல் படிக்கட்டிலேயே உட்கார்ந்து இருக்கலாமா?


மேலே போக வேண்டாமா?


அதெல்லாம் இருக்கட்டும், இப்ப சுட சுட ஒரு strong காப்பி கொஞ்சம் சர்க்கரை தூக்கலா போட்டு குடிச்சா எப்படி இருக்கும்....:)


 



திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம் 


தனி மனிதனுக்கு செய்யும் உதவி ஈகை எனப்படும். ஊருக்காக செய்யும் உதவி ஒப்புரவு எனப்படும். 


கேள்வி என்ன என்றால் ஒப்புரவு உயர்ந்ததா, ஈகை உயர்ந்ததா? 


ஒரு தனி மனிதனுக்கு செய்வதை விட ஊருக்கே செய்வது தானே உயர்ந்தது என்று நாம் நினைப்போம். ஆனால் வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. 


ஊருக்காக செய்யும் எந்த உதவிக்கும், ஒரு விளம்பரம் கிடைக்கும். ஒரு பேருந்து நிலையம், ஒரு தண்ணீர் பந்தல், இலவச மருத்துவமனை என்று எது செய்தாலும் ஒரு புகழ் கிடைக்கும். அந்த உதவிக்கு பலன் கிடைக்கும். 


நாம் ஒன்று செய்தோம். பதிலுக்கு நமக்கு ஒன்று கிடைத்தது என்றால் அது வியாபாரம். இலாபம் நட்டம் அப்புறம். கொடுத்ததற்கு பலன் கிடைத்தது அல்லவா?


மாறாக, ஒரு பிச்சைகாரனுக்கு ஒரு பத்து உரூபாய் பிச்சை போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நம் பெயர் கூட அவனுக்குத் தெரியாது. அந்த உதவியால் நமக்கு ஒரு பலனும் இல்லை. இப்படி பலன் எதிர்பாராமல் செய்யும் உதவி பலன் பெறும் உதவியை விட உயர்ந்தது அல்லவா?


எனவே, ஈகை என்ற அதிகாரத்தை ஒப்புரவு என்ற அதிகாரந்த்தின் பின் வைக்கிறார். 


சரி, ஈகை என்றால் என்ன என்று தெரிந்து விட்டது. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_12.html


(please click the above link to continue reading)


ஈகை பற்றி ஒரு கட்டுரை எழுது என்றால் நாம் எப்படி எழுதுவோம்?


யோசித்துப் பார்ப்போம். 


வள்ளுவர் எப்படி எழுத்கிறார் என்று பாருங்கள். 


முதலில், ஈகை என்றால் என்ன, அதன் இலக்கணம் என்ன, பொருள் என்ன என்று வரையறை செய்கிறார். முதல் குறளில் இதை சொல்லி விடுகிறார். 


அடுத்த ஆறு குறள்களில் ஈகையின் சிறப்பு பற்றி கூறுகிறார். 


ஆறு ஒண்ணும் ஏழு குறள் ஆகி விட்டது. இன்னும் மூன்று குறள்கள் இருக்கின்றன. 


அடுத்த மூன்று குறள்களில் ஈயாமையின் குற்றம் பற்றி கூறுகிறார். ஈயாமல் என்ன ஆகும், யார் அப்படி இருப்பார்கள் என்று விளக்குகிறார். 


மிக மிக அருமையான ஆழமான அர்த்தம் கொண்ட அதிகாரம். 


ஒவ்வொன்றாக சிந்திப்போம். 


 



Wednesday, October 11, 2023

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்


எந்நேரமும் ஒரு பதற்றம். ஒரு அவசரம். ஏதோ ஒரு சிந்தனை. குழப்பம். 


எதையும் நிறுத்தி, நிதானமாக, பொறுமையாக கையாள நேரம் இல்லை. இரசிக்க நேரம் இல்லை. 


வாழ்வின் வேகத்தை குறைக்க வேண்டும். இனிய காலைப் பொழுது, மரத்தின் இலைகளில் இருந்து சொட்டும் மழை நீர், மென்மையான தென்றல், சூடான காப்பி, சுவையான உணவு, மயக்கும் பாடல், குழந்தையின் மழலை...என்று எவ்வளவோ இருக்கிறது. 


வீட்டில், மனைவியோ, அம்மாவோ இரண்டு மணி நேரம் போராடி உணவு தயாரித்து இருப்பார்கள் . அது என்ன என்று கூட பார்க்காமல், டிவி பார்த்து கொண்டே உள்ளே அள்ளிப் போடுவது. நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. சொல்லக் கூடாது என்று இல்லை. பழக்கம் இல்லை. இரசிக்கப் பழகவில்லை. 



இரசனை என்பது ஒரு நாளில் வந்து விடாது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியின் மூலம் வளர்க்க வேண்டும். 


இலக்கியங்கள் அந்தப் பயிற்சியை நமக்குத் தருகின்றன. 


யுத்த காண்டம் சொல்ல வந்த கம்பன், எங்கு, எப்படி ஆரம்பிக்கிறான் பாருங்கள். 


இராமன் கடற்கரையில் நிற்கிறான். அவ்வளவுதான் செய்தி. அதை கம்பன் எப்படிச் சொல்கிறான் பாருங்கள். 


"பாற்கடலில் இருந்து பிரிந்து வந்த திருமால், எங்கெங்கோ போய் விட்டு, இப்போது நம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்து இருக்கிறான். அவன் கண் மூடி தூங்க நல்ல மென்மையான பாய் போடுவோம் என்று அலை என்ற பாயை உதறி உதறிப் போடுகிறதாம்..வா இராமா வந்து படுத்துக் கொள்" என்று. 


பாடல் 


சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால்,

மாயன், வந்தான்; இனிவளர்வான்' என்று கருதி, வரும் தென்றல்

தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்தி, புடை சுருட்டிப்

பாயல் உதறிப் படுப்பதே ஒத்த-திரையின் பரப்பு அம்மா


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_11.html


(pl click the above link to continue reading)


சேய காலம் = நீண்ட காலம் 


பிரிந்து = பிரிந்து இருந்து 


அகலத் திரிந்தான் = அகன்று திரிந்தான் (இராமன்) 


மீண்டும் = மீண்டும் 


சேக்கையின்பால் = படுக்கையின் பக்கம் 


மாயன் = மாயனான இராமன் 


வந்தான் = வந்தான் 


இனி = இனிமேல் 


வளர்வான்' = கண் வளர்வான் (தூங்குவான்) 


என்று கருதி = என்று நினைத்து 


வரும் தென்றல் = மெல்ல வரும் தென்றல் 


தூய மலர்போல்  = தூய்மையான மலர் போன்ற 


நுரைத் தொகையும் = நுரைகளை  


முத்தும் சிந்தி = முத்துப் போல சிதறி 


புடை சுருட்டிப் = அருகில் சுருட்டி  


பாயல் = பாயை 


உதறிப் படுப்பதே = உதறி படுப்பதற்கு போட்டது 


ஒத்த = மாதிரி இருந்தது 


திரையின் = அலைகளின் 


பரப்பு = விரிந்த பரப்பு 


அம்மா = ஆச்சரியச் சொல் 


அலைகளைப் பார்த்தால் அதன் மேல் பரப்பில் நீர் குமிழிகள் இருக்கும். அந்தக் குமிழிகள் முத்துப் போல இருக்கிறதாம். 


அலை சுருண்டு, சுருண்டு எழுவதும், விழுவதும் ஏதோ கடல் பாயை உதறிப் போடுவது போல இருக்கிறதாம். 


பின்னாடி இரத்த ஆறு ஓடப் போகிறது. யுத்தம் என்றால் வலியும், இழப்பும் இருக்கும் தானே. கம்பனுக்கு அது தெரியாதா.


அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இதை இரசிப்போம் என்று கற்பனையை தவழ விடுகிறான். 


நம் வாழ்வில், நாளை என்ன வரும் என்று நமக்குத் தெரியாது. விபத்து, உடல் நலக் குறைவு, துக்க செய்தி, தோல்வி, என்று எது வேண்டுமானாலும் வரலாம். 


இன்றை, இந்த நொடியை இரசித்துப் பழக வேண்டும். 


வாழ்வை இரசிக்க காரணம் எல்லாம் வேண்டாம். அனைத்தையும் இரசிக்கப் பழக வேண்டும். 


Tuesday, October 10, 2023

திருக்குறள் - விற்றும் கொளல் வேண்டும்.

 திருக்குறள் - விற்றும் கொளல் வேண்டும். 


ஒப்புரவு என்றால் ஊருக்கு நல்லது செய்வது. தனி மனிதனுக்கு அல்ல, ஊருக்கு. 


சரி, ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று இறங்கினால், நம்மிடம் உள்ள செல்வம் எல்லாம் சீக்கிரம் கரைந்து போய் விடாதா? அப்புறம் நமக்கு யார் உதவி செய்வார்கள்? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி வரும். 


இந்த மாதிரி சந்தேகம் வரும் போது நாம் இரண்டு விதத்தில் அதைப் போக்கிக் கொள்ளலாம். 


முதலாவது, இதுவரை அப்படி நாட்டுக்கு நல்லதுசெய்து ஏழையாகி துன்பப் பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று ஆராயலாம். நாட்டுக்கு நல்லது செய்து நொடித்துப் போனவர் யார்?


எனக்குத் தெரிந்து கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் நாட்டுக்காக தன் செல்வம் அனைத்தையும் கொடுத்து, சிறையில் கிடந்து துன்பப்பட்டார். அவர் அப்படி செய்யாமல் இருந்திருந்தால், சொத்தோடு சுகமாக வாழ்ந்து இருக்கலாம். 


பணம் போனது என்னவோ உண்மைதான். அவர் வாங்கிய கப்பலும் போனது. வியாபாரம் நொடித்துப் போனது. இனிய வாழ்நாளை சிறையில் கழித்தார். 


என்ன ஆயிற்று?  


இந்தத் தமிழனம் உள்ள வரை, அவர் புகழ் நிலைத்து நிற்கும் அல்லவா?  ஒரு வேளை அவர் இது ஒன்றையும் செய்யாமல் இருந்து இருந்தால் அப்படி ஒரு ஆள் இருந்தார் என்றே தெரியாமல் போய் இருக்கும். 


இன்னொருவர், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். தன் சொந்த செலவில் ஊர் ஊராக சுற்றி அலைந்து, படாத பாடு பட்டு பழைய தமிழ் ஓலைச் சுவடிகளை கண்டு பிடித்து அச்சில் ஏற்றினார். அவர் அப்படி ஊருக்கு நல்லது செய்யாமல் இருந்திருந்தால், எவ்வளவு நாம் இழந்து இருப்போம். 


தேடினால் இன்னும் பலர் கிடைக்கலாம். ஊருக்கு நல்லது செய்து வருந்தியவர் யாரும் இல்லை 


இன்னொரு வகை, இதையெல்லாம் ஆராய்ந்து ஒருவர் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளலாம்.. 


வள்ளுவர் சொல்கிறார், 


"ஒப்புரவு செய்வதானால் வறுமை வரும் என்று யாராவது சொன்னால், அந்த வறுமையை தன்னைக் விற்றாவது பெற வேண்டும்"


என்று. 


பாடல் 


ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_10.html


(please click the above link to continue reading)

ஒப்புரவி னால் = ஒப்புரவு செய்வதானால் 


வரும் = வருவது 


கேடெனின்= கேடு என்றால் 


அஃதொருவன் = அந்தக் கேட்டினை ஒருவன் 


விற்றுக்கோள் = விலைக்கு வாங்கிக் கொள்ளும் 


தக்கது உடைத்து = தகுதி உடையது 


இந்த குறளுக்கு பரிமேலழகர் மிக நுணுக்கமாக உரை செய்து இருக்கிறார். அது என்ன என்று பார்ப்போம். 


"ஒப்புரவி னால்வரும் கேடெனின் " = ஒப்புரவு செய்வதனால் கேடு வரும் என்று கூறினால். "கூறினால்" என்றால் யார் கூறினார் என்ற கேள்வி வரும் அல்லவா. அப்படி ஒரு வேளை யாரவாது கூறினால் என்று பொருள் சொல்கிறார். 


அதாவது, யாரும் சொல்ல மாட்டர்கள். ஆனால், சில வம்பு செய்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு வேளை கேட்கலாம். அப்படி யாராவது கூறினால்....


"விற்றுக்கோள் தக்கது உடைத்து": அந்த கேட்டினை விற்றாவது பெற்றுக் கொள்ளும் தகுதி உடைத்து.. அவன் தான் ஒப்புரவு செய்து, எல்லாம் இழந்து நிற்கிறானே. அவன் எதை விற்பான் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்கு பதில் சொல்கிறார். "தன்னை விற்றாவது" அந்த செயலை செய்ய வேண்டும். 


தன்னை விற்று செய்யும் காரியம் உலகில் ஒன்றும் இல்லை. எனவே, அப்படி ஒன்றும் நிகழ்ந்து விடாது என்பதை குறிப்பால் உணர்த்தினார். 


இந்தக் குறளோடு, இந்த அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


நாளை, இதன் தொப்புரையை காண்போம். 





Monday, October 9, 2023

கம்ப இராமாயணம் - துயிலாத கண்ணன்

 கம்ப இராமாயணம் - துயிலாத கண்ணன் 



உணர்சிகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமம்தான். இருந்தாலும், நாம் சில உணர்ச்சிகளை பெண்களுக்கு உள்ளது என்றும், சிலவற்றை ஆண்களுக்கு உள்ளது என்றும் சொல்லி சொல்லி பிள்ளைகளை வளர்க்கிறோம்.


உதாரணமாக, ஆண் பிள்ளை அழக் கூடாது. சிறு வயதில் அழுதால் கூட "..சீ, என்ன இது பொம்பள பிள்ளை மாதிரி அழுதுகிட்டு" என்று கேலி செய்வார்கள். நாளடைவில் அழுவது அசிங்கம் என்று அந்தப் பையன் புரிந்து கொள்கிறான். அழுவது பலவீனத்தின் வெளிப்பாடு என்று நினைத்துக் கொள்கிறான். அது மட்டும் அல்ல, தான் அழுதால் பலவீனம் என்று நினைத்தால் பரவாயில்லை. அழுகை என்பதே பலவீனம் என்று நினைக்கிறான். நாளை அவன் மனைவி அழுதாலும், அவள் பலவீனமானவள் என்று எடை போடும் அவன் மனது. 


அது மட்டும் அல்ல, ஒரு துக்கம், கவலை என்றால் வெளியே சொல்லக் கூடாது, தைரியமாக இரு என்று சொல்லி வளர்க்கப் படுகிறான். சிறு வயதில் சரி. வயதாகும் போது பெரிய பிரச்சனைகள் வரும் போது, தனக்குத் தானே மனதில் வைத்துக் கொண்டு புளுங்குவான். மனைவி கேட்டால் கூட, "சும்மா இரு, ஒண்ணும் இல்ல" என்று எரிந்து விழுவான். 


இராமன் தனித்து நிற்கிறான். வானர படையை கொண்டு வந்தாகி விட்டது. இலங்கைக்குப் போக வேண்டும். 


கடலைப் பார்க்கிறான். சீதையை பிரிந்த துயர் அவனை வாட்டுகிறது. 


எவ்வளவு பெரிய, வலிமையான ஆளாக இருந்தாலும், மனைவியைப் பிரிந்த துயர் அவனுக்கும் இருக்கும் தானே. 


இரவெல்லாம் தூக்கம் இல்லை. அதிகாலையில் எழுந்து விட்டான். இன்னும் சூரியன் வெளி வரவில்லை. இராமன் வெளியே வந்து பார்க்கிறான். தாமரை மலர்கள் இன்னும் விரிய வில்லை...பொழுது இன்னும் சரியாக புலரவில்லை ....



பாடல் 




பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச்

சங்கின் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனமாம்

கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வு உற்று, இதழ் குவிக்கும்

கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_9.html


(pl click the above link to continue reading)



பொங்கிப் பரந்த = பொங்கி, பெரிதாக உள்ள 


பெருஞ்சேனை  = பெரிய சேனை, பெரிய படை


புறத்தும் அகத்தும் = உள்ளும் வெளியும், எங்க பார்த்தாலும் 


புடைசுற்றச் = சுற்றி நிற்க 


சங்கின் = சங்கைப் போல 


பொலிந்த = பொலிவான, அழகான 


கையாளைப் = கைகளை உடைய சீதையைப்  


 பிரிந்த பின்பு= பிரிந்த பின்பு 


தமக்கு இனமாம் = தனக்கு நிகரனா (எது எதற்கு நிகர் என்று பின்னால் பார்ப்போம்)


கொங்கின் பொலிந்த = தேன் நிறைந்து விளங்கும் 


தாமரையின்  = தாமரைப் பூக்கள் 


குழுவும் = கூட்டம் அத்தனையும் 


துயில்வு உற்று = தூங்கி 


இதழ் குவிக்கும் = இதழ் மூடி இருக்கும் 


கங்குல் பொழுதும்= இரவு நேரத்திலும் 


துயிலாத கண்ணன் = தூக்கம் வராத கண்களை உள்ள இராமன் 


கடலைக் கண்ணுற்றான் = கடலை பார்த்தான் 


கண்களுக்கு தாமரையை உவமையாக சொல்வார்கள்.  அதிகாலையில் குவிந்து இருக்கும் தாமரை மலர். தாமரை கூட தூங்குகிறது. இராமனின் கண்கள் தூக்கம் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. 


எந்த ஒரு மன நிலையில் இருந்து யுத்தம் செய்யப் போகிறான் என்று கம்பன் காட்டுகிறான். 


இராமனின் சோகத்தை பாட்டில் வழிய விட இருக்கிறான் கம்பன். 


அவற்றையும் காண்போம். 




Sunday, October 8, 2023

திருக்குறள் - வறுமை என்றால் என்ன?

 திருக்குறள் - வறுமை என்றால் என்ன?


வறுமை என்றால் என்ன?  


சொந்த விமானத்தில் போக முடியாத அளவுக்கு ஏழையாக இருக்கிறேனே என்று யாராவது கவலைப் படுவார்களா? அது வறுமை இல்லை. 


சரி, பத்து படுக்கை அறை உள்ள ஒரு வீடு இல்லையே என்ற வறுமையில் யாராவது வருந்துகிரார்களா?


இல்லை.


வறுமை என்றால் நமக்கு ஒன்று வேண்டும் ஆனால் அதை அடைய முடியவில்லை என்றால் வருவது. 


ஒரு கார் வேண்டும், இரண்டு அல்லது மூன்று படுக்கை அறை கொண்ட வீடு வேண்டும், மூணு வேளை நல்ல உணவு வேண்டும், இதெல்லாம் இல்லை என்றால் வறுமை என்று சொல்லலாம். 


ஒரு பிச்சைகாரன் ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் வறுமை என்பான். 


எனவே, தான் அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாமல் போனால் அது வறுமை. 


இப்படி பார்ப்போம். 


ஒருவனுக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. ஊர் பக்கம் பத்து பதினைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. வருடா வருடம் நெல் வருகிறது. வீட்டின் பின் புறம் பத்து பசு நிற்கிறது. பாலும், தயிரும் செழிப்பாக இருக்கிறது. 


ஆனால், மருத்துவர் சொல்லி இருக்கிறார் "அரிசியை கையில் எடுத்தால், சர்க்கரை கூடும், அப்புறம் அந்த கையையே எடுக்க வேண்டி வரும்" என்று. 


வீட்டு வேலைகாரர்கள் சோறு, குழம்பு என்று உண்டு மகிழ்வார்கள். முதலாளிக்கு கேப்பை களி தான் உணவு. அதுவும் ஒரு உருண்டைதான். 


யார் வறுமையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும். 


அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாவிட்டால் அது வறுமை. 


வள்ளுவர் சொல்கிறார், 


ஒரு ஒப்புரவு செய்பவனுக்கு வறுமை எது என்றால், அவன் ஒப்புரவு செய்ய முடியாமல் போவதுதான். 


ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறான். ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த வருத்தம் தான் அவனுக்கு வறுமை என்று. 


பாடல் 


நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_8.html


(please click the above link to continue reading)


நயனுடையான் = நயன் + உடையான் = நல்லது உள்ளவன், நல்லவன், ஒப்புரவு செய்பவன் 


நல்கூர்ந்தான் ஆதல் = ஏழையாக ஆகி விடுதல் 


செயும்நீர = செய்யும் தன்மை, அதாவது ஒப்புரவு செய்யும் தன்மை 


செய்யாது = செய்ய முடியாமல் 


அமைகலா வாறு = அமைந்து விட்டால் 


இரண்டு விடயங்களை நாம் சிந்திக்க வேண்டும்.


ஒன்று, இவ்வளவு பணம் இருந்து என்ன பலன்? யாருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படி ஊருக்கு நல்லது செய்து அதனால் வரும் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்துவானம். இந்த பணம் இருந்தும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். இல்லை என்றால் வறுமை. இருந்தும் ஒன்றும் பலன் இல்லை என்றால், அதுவும் வருமைதானே. 


இரண்டாவாது, ஒப்புரவு செய்தால் வறுமை வந்துவிடுமே என்ற பயந்து, பணத்தை இறுக்க கட்டிப் பிடித்துக் கொண்டால், அந்த பணத்தை நல்ல வழியில் செலவழிக்க முடியாததும் ஒரு விதத்தில் வறுமைதான் என்கிறார்.


எந்த அளவுக்கு சிந்தித்து இருக்கிறார்கள். 


பொது நலம் என்பதின் உச்சம் தொட்டு இருக்கிறார்கள். 


ஏதோ கம்யூனிசம் , சோசியலிசம் என்பதெல்லாம் மேலை நாடுகளின் கண்டு பிடிப்புகள் என்று நாம் நினைக்கிறோம். அல்ல. வள்ளுவப் பெருந்தகை அவற்றைப் பற்றி எல்லாம் என்றோ சிந்தித்து இருக்கிறார். 


இதில் ஆச்சரியம் என்ன என்றால், இந்த பொது நல சிந்தனையை ஒரு அரசாங்கம் செய்ய வேண்டும், சட்டம் போட்டு கொண்டு வர வேண்டும் என்று இல்லாமல், அதை இல்லற தர்மமாக நம்மவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். 


கார்ல் மார்க்ஸ், angels எல்லாம் சிந்திக்காத பகுதி. 


தனி  மனித சொத்துரிமை கூடாது என்று சோசியலிசம் கூறுகிறது. அபப்டி என்றால் எதற்காக உழைக்க வேண்டும் என்ற கேள்வி வரும். உழைப்ப கட்டாயமாக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும். அதெல்லாம் நடக்காது. 


வள்ளுவர் வழி தனி வழி. நீ நன்றாக உழை. பொருள் சேர். அதை அனுபவி. அதே சமயம் அந்த பொருளால் சமுதாயத்துக்கும் ஏதாவது நன்மை செய் என்கிறார். 


இதை அறமாக நம்மவர்கள் கருதினார்கள். 


அப்படி ஒரு பரம்பரை நம்முடையது. பெருமை கொள்வோம். 





Saturday, October 7, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - கடற்கரை சேர்தல் - 2

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - கடற்கரை சேர்தல் - 2 


இராமன் வானர சேனைகளோடு இந்தியாவின் தென் கோடிக்கு வந்து விட்டான். இனி கடல்தான் இருக்கிறது. கடலைத் தாண்ட வேண்டும். ஒரு ஆள் தாண்டினால் போதாது. எழுபது வெள்ளம் வானர சேனையை அந்தக் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும். 


சாதரணமான காரியமா? 


மிகப் பெரிய வேலை. சிக்கலானதும் கூட. 


இராமனின் மனநிலை என்ன. அவன் நாடு பிடிக்க புறப்பட்டவன் அல்ல. மனைவியை பறி கொடுத்து, அந்தக் கவலையில் இருக்கிறான். 


நாமாக இருந்தால் என்ன செய்து இருப்போம். 


தளர்ந்து போய் இருப்போம். ஒரு சின்ன விடயம் கொஞ்சம் மாறிப் போனால் கூட சோர்ந்து விடுகிறோம். "ஆமா, அது கிடக்குது, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் ...இப்ப அது ரொம்ப முக்கியமா" என்று அலுத்துக் கொள்வோம். 


கவலை ஒரு புறம் இருந்தாலும், செய்ய வேண்டிய வேலை மிகப் பெரியதாக இருந்தாலும், மனம் தளராமல் இராமன் அதை செய்து முடிக்கிறான். 


இராமன் செய்து முடித்தான் என்று ஒரு வரியில் நாம் சொல்லிவிட்டு மேலே போய் விடுகிறோம். அவன் எந்த அளவு மனத் துயரத்தில் இருந்தான் என்று கம்பன் பின்னால் காட்டுவான். பார்ப்போம்.  


சீதை போன்ற அன்பான மனைவியை பிரிந்து இருப்பது என்பது எவ்வளவு துயரம். அந்த துயரம் ஒரு புறம் இருந்தாலும், எடுத்துக் கொண்ட வேலையை இராமன் சரியாக செய்து முடிக்கிறான். 


அது ஒரு பாடம். 


பாடல் 


ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும்,

வாழி வற்றா மறி கடலும், மண்ணும், வட பால் வான் தோய,

பாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ, பரந்து எழுந்த

ஏழு-பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/2.html


(pl click the above link to continue reading)



ஊழி திரியும் காலத்தும் = ஊழித் தீ பிடித்து எரியும் காலத்திலும் 


 உலையா = மாறாத, சிதையாத 


நிலைய = நிலையான 


உயர் கிரியும் = உயர்ந்த மலையும் (இமய மலை) 


வாழி வற்றா மறி கடலும்= என்றும் வாழும் வற்றாத பெரிய கடலும் (இந்தியப் பெருங் கடல்) 


மண்ணும் = அந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மண், இந்திய நிலப் பரப்பு 


வட பால் வான் தோய = வடக்குப் பக்கம் உயர்ந்து வானத்தைத் தொட 


பாழித் = பெருமை உள்ள 


தெற்கு உள்ளன கிரியும் = தெற்குப் புறம் உள்ள மலை (விந்திய மலை) 


நிலனும் தாழ = தென் இந்தியாவும் தாழ 


பரந்து எழுந்த = புறப்பட்டு எழுந்த 


ஏழு-பத்தின் = எழுபது 


பெரு வெள்ளம் = வெள்ளம் என்பது இங்கே பெரிய கணக்கில் அடங்காத என்று பொருளில் வந்தது. பெரு வெள்ளம் என்றால் எண்ணில் அடங்கா 


மகர வெள்ளத்து இறுத்ததால் = மீன்கள் நிறைந்த தென் கடற்கரையை அடைந்தது. 


கொஞ்சம் குழப்பமாக இருக்கும். 


பெரிய படை வந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். மற்ற புலவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் - கடல் போன்ற பெரிய படை, இதுவரை யாரும் காணாத பெரிய படை, அந்த படை நடந்து வந்த தூசி வானைத் தொட்டது என்றெல்லாம் எழுதி இருப்பார்கள். 


கம்பன் அவ்வளவு சாதாரண புலவன் இல்லை. 


அவன் சொல்கிறான் 


"இவ்வளவு பெரிய படை வடக்கில் இருந்து தெற்கில் வந்து விட்டது. எனவே, தெற்கில் பாரம் அதிகம் ஆகி தென் புறம் தாழ்ந்து விட்டது. அதனால் வட புறம் உயர்ந்து விட்டது. இமய மலையும் அது சார்ந்த இடங்களும் மேலே ஏறி வானைத் தொட்டது, விந்திய மலையும் அது சார்ந்த தென் பகுதியும் தாழுந்து விட்டது"


என்று. 


கற்பனை பண்ணிப் பாருங்கள். முழு இந்தியாவை ஒரு சீசா பலகை போல ஆக்கிக் காட்டுகிறான். இந்த பிரமாண்டத்தை நம்மால் சிந்திக்க முடியுமா?  


மனம் விரிய வேண்டும். சின்ன சின்ன விடயங்களை விட்டு விட்டு மனம் இப்படி ஒரு பிரமாண்டத்தை யோசிக்க வேண்டும். இப்படி யோசிக்க யோசிக்க மனம் விரியும். இப்படி பழக பழக எல்லாவற்றிலும் பெரிய இறைவனை உணர முடியும். 


மேலும் சிந்திப்போம். 



Thursday, October 5, 2023

திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்

 திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்


ஒப்புரவு, அதாவது பொதுநலம் என்பது கட்டாயமா? எல்லோரும் செய்ய வேண்டுமா? செல்வம் இருப்பவர்கள், அரசியல் அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் செய்யலாம். அவர்களால் செய்ய முடியும். 


சாதாரண மக்களால் செய்ய முடியுமா? நம் வீட்டை பார்க்கவே நமக்கு செல்வம் இல்லை. இதில் எங்கிருந்து ஊருக்கு நல்லது செய்வது என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் எழும். 


இந்த வாதம் சரி என்று எடுத்துக் கொண்டால், உலகில் யாருமே செய்ய மாட்டார்கள். ஆயிரம் உரூபாய் உள்ளவன், பத்தாயிரம் இருப்பவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான் பத்தாயிரம் உள்ளவன், இலட்சம் உள்ளவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான். இப்படி போய்க் கொண்டே இருந்தால், உலகில் யாருமே மிஞ்ச மாட்டார்கள். உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனிடம் கேட்டால், நான் எவ்வளவு வரி கொடுக்கிறேன். அந்த வரி எல்லாம் அரசாங்கம் பொது நன்மைக்குத்தானே செலவழிக்கிறது. அதற்கு மேலும் வேறு நான் என்ன செய்ய வேண்டும் என்று பதில் கேட்பான். 


இதை அறிந்த வள்ளுவர் சொல்கிறார், 


ஒப்புரவு என்பது கடமை இல்லை. சட்டம் இல்லை. யாரும் ஒருவர் மீது திணிக்க முடியாது.. ஆனால், நீயே சுற்றிமுற்றிப் பார். நீ சார்ந்த சமுதாயம் எப்படி இருக்கிறது என்று பார். அதை உயர்த்துவது அந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவர் கடமை என்று உனக்கே புரியும். நீ செய், நான் செய் என்பதிற்கு பதில், எல்லோரும் செய்ய வேண்டும் என்ற இயற்கை அறிவு தானே வரும் உனக்கு. அந்த அறிவில் இருந்து நீ செய்வாய் என்கிறார். 


பாடல் 



இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_5.html

(pl click the above link to continue reading)



இடனில் = இடம் + இல் = இடம் இல்லாத. அதாவது ஒப்புரவு செய்ய இடம் இல்லமால், செல்வம் இல்லாமல் 


பருவத்தும் = இருக்கின்ற காலத்திலும் 


 ஒப்புரவிற்கு = ஒப்புரவு செய்ய 


 ஒல்கார் = தயங்க மாட்டார்கள் 


கடனறி = கடன் (கடமை) + அறி = அது கடமை என்று 


காட்சி யவர் = கண்டு கொண்டவர்கள், அறிந்தவர்கள்


அதாவது, ஒப்புரவு என்பது ஒவ்வொருவரது கடமை. 


பணம் இல்லை என்றால் என்ன? மனம் இருந்தால் போதும். அருகில் உள்ள பள்ளியில் சென்று பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித் தரலாம், வருடம் இரண்டு முறையாவது இரத்த தானம் செய்யலாம், தெருவில் நடந்து செல்லும் போது, பெரிய கல் சாலையில் கிடந்தால் அதை ஓரமாக தள்ளிப் விட்டுப் போகலாம், குப்பையை கண்ட இடத்தில் போடாமல், சுத்தமாக வைத்து இருக்கலாம், முடிந்த வரை தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கலாம்...இதெல்லாம் சமுதாய நன்மை கருதித்தான்.


என்னிடம் பணம் இருக்கிறது என்று 24 மணி நேரமும் குளிர் சாதனத்தை ஓடவிடாமல், குறைத்து செலவழிக்கலாம். 


வீட்டில் ஏதோ விசேடம் என்றால் அருகில் உள்ள அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லத்துக்கு ஒரு வேளை உணவை இலவசமாகத் தரலாம். ஒரு இடத்தில் எல்லோரும் இதைச் செய்தால், வருடம் முழுவதும் அந்த பிள்ளைகள் பசியால் வாடாமல் இருக்கும். 


இப்படி ஆயிரம் வழியில் ஒப்புரவு செய்யலாம்.. 



சமுதாய அக்கறை என்பது பணம் மூலம் தானம் செய்வது மட்டும் அல்ல. எவ்வளவோ வழியில் செய்யலாம். செய்ய வேண்டும். அது கடமை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. 




Wednesday, October 4, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - அதிகம் பேசப்படாத பகுதி

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - அதிகம் பேசப்படாத பகுதி 


யுத்த காண்டத்தில் என்ன இருக்கப் போகிறது. இவன் அவனை வெட்டினான், அவன் இவனைக் கொன்றான் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும். "இன்று போய் நாளை வா" போன்ற பஞ்ச் டயலாக் ஓரிரண்டு இருக்கலாம் என்பதுதான் பொதுவான அப்பிராயம். 


அது ஒரு புறம் இருக்க....


கணவன் மனைவி உறவு, அதில் எழும் சிக்கல்கள், அண்ணன் தம்பி பாசம், அப்பா மகன் வாஞ்சை, பாகப் பிரிவு, நட்பு இதெல்லாம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு வகையில் இருக்கும். அதைப் பற்றி எல்லாம் எல்லோருக்கும் அனுபவம் இருக்கும். கம்பன் அவற்றை மிக நுணுக்கமாக, அழகாக, ஆழமாக சொல்லி இருக்கிறான்.  அவை நித்தமும் நம்மை சுற்றி நிகழ்பவை. 


கம்பன் வாழ்விலும், அவன் வாழ்ந்த சூழ் நிலையிலும் இவை எல்லாம் இருந்து இருக்கும். 


யுத்தம் என்பதை எத்தனை பேர் நேரில் பார்த்து இருக்கிறோம். அது பற்றி நமக்கு என்ன அனுபவம் இருக்கிறது. ஏதோ கதையில், சினிமாவில் பார்த்து இருக்கலாம். யுத்தம் என்றால் ஏதோ கத்தி, துப்பாக்கி கொண்டு சண்டை போடுவது மாத்திரம் அல்ல. யுத்தம் பற்றி சிந்திப்பது, எப்படி ஆலோசனை செய்வது, யாரை எப்படி அனுப்புவது, இழப்புகளை எப்படி சமாளிப்பது, எதிரியை எப்படி எடை போடுவது, இப்படி பல விடயங்கள் இருக்கின்றன. சண்டை போடும் வீரனுக்குக் கூட இது எல்லாம் தெரியாது. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_4.html


(click the above link to continue reading)


கம்பன் விவரிக்கும் யுத்த காண்டம் மிக விரிவானது, ஆழமானது, அதிசயிக்கும் படி இருக்கிறது. எப்படி இந்த மனிதனால் இவ்வளவு தூரம் சிந்திக்க முடிந்திருக்கிறது. ஏதோ நேரில் பார்த்த மாதிரி எழுதி இருக்கிறாரே என்று நமக்கு வியப்பாக இருக்கும். கம்பன் போர் களத்துக்குப் போய் இருக்க மாட்டான். கத்தி எடுத்து சண்டை போட்டிருக்க மாட்டான். பின் எப்படி இவ்வளவு நுணுக்கமாக எழுத முடிந்தது. அவன் ஒரு தெய்வப் புலவன் என்பதற்கு இந்த யுத்த காண்டம் இன்னொரு சாட்சி. 


ஆடு மட்டும் அல்ல, சண்டையை எப்படி அழகாகச் சொல்ல முடியும்? தலையை வெட்டினான், இரத்தம் பீரிட்டு வந்தது, கை உடைந்தது, கால் முறிந்தது என்பதை அழகாக எப்படி சொல்வது? 


சொல்கிறானே. படு பாவி, அதையும் இவ்வளவு அழகாகச் சொல்லி இருக்கிறானே. 


உதரணத்துக்கு, இந்திர சித்து இறந்து போகிறான். இராவணன் அவன் மேல் விழுந்து அழுகிறான். ஒரு பத்துப் பாடல் இருக்கிறது. அதைப் படித்து விட்டு இரசிகமணி டி கே சி கூறினார் "இப்படி பத்துப் பாடல் கிடைக்கும் என்றால் இன்னும் இரண்டு மூணு பிள்ளைகளை போரில் இழக்கலாமே" என்று. அவ்வளவு  அருமையான பாடல்கள். உலகையே புரட்டிப் போட்ட இராவணனை புரட்டிப் போட்ட சோகம் அது. 


அவன் சோகத்தை கண்டு வருந்துவதா, அதை இப்படி அழகாகச் சொல்லி இருக்கிறானே என்று வியப்பதா என்று நாம் செயலற்று நிற்கும் இடங்கள் அவை.  


யுத்தத்தில், வீரம், சந்தேகம், பாசம், கண்ணீர், இறுமாப்பு, உறுதி என்ற உணர்சிக் கொந்தளிப்புகள் உண்டு. 


கம்பன் அத்தனையையும் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறான். 


ஒரு புறம் மனைவியை இழந்து, வருந்தி, கோபம் கொண்டு, சண்டை போட வந்திருக்கும் இராமன். 


மறுபுறம் சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லை, குரங்கு வந்து நாட்டை எரித்து விட்டுப் போய் விட்டது, மனிதர்களை எதிர்த்து சண்டை செய்ய வேண்டும், நம் பலம் என்ன, வரம் என்ன, பராகிரமம் என்ன என்று தோள் தட்டி நிற்கும் இராவணன் மறு புறம். 


காய் நகர்த்த வேண்டும். 


ஒரு தேர்ந்த டைரக்டர் மாதிரி, காமெராவை அங்கும் இங்கும் நகர்த்துகிறான் கம்பன். 


யுத்த காண்டத்தில் இவ்வளவு இருக்கிறதா என்று வியந்து போவீர்கள் என்பதில் அணுவளவும் எனக்கு சந்தேகம் இல்லை. 


வாருங்கள், கம்பன் காட்டும் யுத்தத்தை காண்போம். 


இதுவரை நீங்கள் பார்த்த அத்தனை போர் சம்பந்தப்பட்ட படங்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சுவாரசியமாக கம்பன் அதைக் காட்டுகிறான். 


கம்ப இராமாயணத்தின் கிளைமாக்ஸ் அது. 


அதற்குப் பின், அக்னிப் பரீட்சை, முடி சூட்டு விழா, என்று படம் முடிந்து விடும். யுத்த காண்டம் தான் கம்ப இராமாயணத்தின் மகுடம் என்பேன்.