Friday, April 30, 2021

 நல்வழி - தீயவற்றை விடுத்து நல்லவற்றைச் செய்க 


நல்வழி என்பது ஔவையார் அருளிச் செய்த நூல். 


சில சமயம் வாழ்கை மிகவும் சிக்கலாகத் தோன்றும். என்ன இது வாழ்கை, ஏன் இப்படி எல்லாம் நிகழ்கிறது, நாம் ஒன்று நினைக்க வேறு ஒன்று நடக்கிறதே,இதுக்கெல்லாம் காரணம் என்ன, என்னதான் செய்வது என்று ஒரு வெறுப்பும் சலிப்பும் உண்டாகலாம். 



"இங்க வா, என் கிட்ட உக்காரு...உனக்கு என்ன குழப்பம், நான் சரி செய்து தருகிறேன்" ஆறுதலாக பேச யாராவது கிடைக்க மாட்டார்களா என்று ஏங்குவோம். 



அந்த ஏக்கத்தை போக்குவது இந்த நூல். சிக்கலான வாழ்கையை எளிமை படுத்தி காட்டுவது இந்த நூல். 



மிகப் பெரிய உண்மைகளை மிக மிக எளிய முறையில் அப்படி போகிற போக்கில் சொல்லிவிட்டு போகிற நூல். "அட இது இவ்வளவுதானா...இதுக்குத்தானா நான் இவ்வளவு குழம்பினேன் " என்று நம் குழப்பம் தீர்க்கும் நூல். 



அதில் இருந்து சில பாடல்கள். 



நமக்கு நாம் எதிர் பார்க்காத நேரத்தில் துன்பம் வருகிறது. எல்லாம் சரியாகச் செய்தாலும் எங்கோ தவறு நிகழ்ந்து விடுகிறது. என்ன செய்வது என்று குழம்பி என்ன செய்யலாம் என்று நூல்களைப் புரட்டினால் ஒவ்வொரு நூலும் ஒன்று சொல்கிறது. எதைப் படிப்பது, எதை விடுவது, எதை கடைப்பிடிப்பது என்று குழப்பம் இன்னும் கூடுகிறது. 



ஔவை மிக எளிதாக்கித் தருகிறாள் நமக்கு. 



"நாம் செய்யும் நன்மை தீமைகள் , புண்ணியமாகவும், பாவமாகவும் மாறி அடுத்த பிறவியில் நமக்கு இன்ப துன்பங்களாக வந்து சேரும். 


இப்போது துன்பம் வருகிறதா, அது முன் செய்த பாவம். 



இப்போது இன்பம் வருகிறதா, அது முன் செய்த புண்ணியம். 



இனி வரும் நாட்களில் இன்பம் வேண்டுமா, புண்ணியம் செயுங்கள. 


பாவம் செய்தால், இனி வரும் நாட்களில் துன்பம் வரும். 


உலகில் உள்ள அத்தனை சமய நூல்களும் சொல்வது இந்த ஒரு உண்மையைத்தான் "தீமையை விட்டு நல்லதை செய்யுங்கள்". அவ்வளவுதான். 


பாடல் 



புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாட் செய்தஅவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லுந்

தீதொழிய நன்மை செயல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_49.html


please click the above link to continue reading



புண்ணியம்ஆம் = புண்ணியம் ஆகும் 


பாவம்போம் = பாவம் போகும் 


போனநாட் செய்தஅவை = முன்பு செய்த அவை 


மண்ணில் பிறந்தார்க்கு = மண்ணில் பிறந்தவர்களுக்கு 


வைத்தபொருள் = கிடைத்தவை எல்லாம் 


எண்ணுங்கால் = யோசித்துப் பார்த்தால் 


ஈதொழிய வேறில்லை = இதைத் தவிர வேறு இல்லை 


எச்சமயத் தோர் = எந்த சமயத்தை சேர்ந்தவர்கள் ஆனாலும் 


சொல்லுந் = சொல்லுவது 


தீதொழிய = தீய செயல்களை விடுத்து 


நன்மை செயல். = நன்மை தரும் செயல்களை செய்வது ஒன்றைத்தான் 




திருக்குறள் - நீத்தார் பெருமை - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - நீத்தார் பெருமை - ஒரு முன்னோட்டம் 


பாயிரவியலில் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு என்ற முதல் இரண்டு அதிகாரங்களை இது வரை சிந்தித்தோம். 


அடுத்தது நீத்தார் பெருமை. 


நீத்தார் என்றால் யார்?


அனைத்தையும் நீத்தார், துறந்தவர். அனைத்து பற்றையும் விட்டவர். 


அவர் விட்டு விட்டுப் போகட்டும். நாம் ஏன் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்? அதற்கும் அற நூலுக்கும் என்ன சம்பந்தம்? 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_30.html


(please click the above link to continue reading)


முதலாவது, அறங்கள் இயற்கையில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை யாரவது கண்டு சொன்னால் தான் மக்களுக்குப் புரியும். உதாரணமாக, மழை பெய்கிறது. பயிர் விளைகிறது. நாம் உண்கிறோம். இது எல்லோரும் காணக் கூடியது. இதன் பின்னால் மறைந்து கிடக்கும் இரகசியம் என்ன? மழைதான் உலகில் அறம் வாழத் தேவையான ஒன்று என்பது. அறத்துக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு எளிதாகத் தெரியாது. அதை கண்டு சொல்ல ஒரு  ஆள் வேண்டும். அது யார்?


இரண்டாவது, நான் ஒரு நிறுவனத்தில் ஒரு பெரிய பதவியில் இருக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கம் நிதி நிலை அறிக்கையை பார்லிமெண்டில் சமர்ப்பிக்கிறது. அதில் உள்ள ஓரிரு விடயங்கள் சரி அல்ல என்று நான் நினைக்கிறேன். ஒரு செய்தி நிறுவனம் என்னை அணுகி என்னுடைய பார்வையில் அந்த நிதி  நிலை அறிக்கை எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். நான் உண்மையைச் சொல்வேனா? சொன்னால், என் நிறுவனத்துக்கு வர வேண்டிய சலுகைகள் வராமல் போய் விடுமோ என்று அஞ்சுவேன் அல்லவா? நான் ஏதோ சொல்லப் போக அதனால் என் நிறுவனத்துக்கு தீங்கு வரலாம் என்ற அச்சம் இருக்கும் அல்லவா? எனவே, நான் என்ன சொல்வேன்...."அருமையான நிதி அறிக்கை, மிகத் தேவையான ஒன்று ...அற்புதம்" என்று சொல்லி விடுவேன். அது உண்மை அல்ல.


அது மக்களுக்கும் தெரியும். எவ்வளவு நல்ல அறிக்கையாக இருந்தாலும், எதிர் கட்சிகள் குறை சொல்லும். ஆளும் கட்சி மிக நல்ல அறிக்கை என்று சொல்லும். காரணம், பயம், பற்று, ஆசை போன்றவை. 


எனவே, ஒன்றின் மேல் பற்று இருந்தால், அது சார்ந்து தான் சொல்ல முடியும். 


என் பிள்ளை என்ன தவறு செய்தாலும், அதை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். காரணம் பிள்ளை மேல் உள்ள பற்று. 


பற்று உள்ளவன், உண்மையே சொன்னாலும், உலகம் என்ன நினைக்கும்? அவனுக்கு அதில் ஏதோ ஒரு பற்று இருக்கிறது. அதனால்தான் அப்படிச் சொல்கிறான் என்று அவன் சொல்வதை நம்பாது. 


அப்படி என்றால் உண்மையை உள்ள படியே யாரால் சொல்ல முடியும்? எதிலும் பற்று இல்லாதவனால்தான் உண்மையை உள்ளபடியே சொல்ல முடியும். 


அந்த உண்மையால் யாருக்கு நல்லது, யாருக்கு கெடுதல் என்று அவன் கவலைப் பட மாட்டான். 


அவன் சொன்னால் அதில் உண்மை இருக்கும் என்று உலகம் நம்பும். 


இவ்வளவு போலிச் சாமியார்கள் இருந்தும், மக்கள் சாமியார்கள் பின் ஏன் போகிறார்கள் என்றால், அவன் அனைத்தும் துறந்தவன். அவன் சொல்வதில் உண்மை இருக்கும் என்ற நம்பிக்கையில் போகிறார்கள். ஆயிரத்தில் ஒருவனாவது உண்மைத் துறவி இருக்கமாட்டானா என்ற நம்பிக்கையில் போகிறார்கள். 


மூன்றாவதாக, இல்லறத்தில் ஈடு பட்டவன் எந்நேரமும் அதிலேயே அவன் கவனம் இருக்கும். மனைவி, மக்கள், பொருள் சேர்ப்பது, அவற்றை பாதுகாப்பது, விருத்தி செய்வது, அதை அனுபவிப்பது, தானம் செய்வது என்பதிலேயே அவன் காலம் போய் விடுகிறது. (அவள் காலமும் தான்). அதைத் தாண்டி அவர்களால் சிந்திக்க முடியாது. சிந்திக்க நேரம் இருக்காது. வினை, கர்மம், யோகம், வீடு பேறு போன்றவற்றை பற்றி சிந்திக்க, அதை அடையும் முயற்சிகள் செய்ய இல்லறம் ஒரு தடை. அந்தத் தடை இல்லாதவனால் தான் அது பற்றி சிந்திக்க முடியும். அதற்கான வழிகளை ஆராய முடியும். ஆராய்ந்து தான் கண்டவற்றை பிறருக்கு சொல்ல முடியும். 


எனவே, இல்லறம், அதன் மூலம் துறவறம், அதன் மூலம் வீடு பேறு என்று போக வேண்டும் என்றால், அந்த வழியில் சென்றவர்கள், நீத்தார் பற்றியும் அவர்கள் பெருமை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். 


எனவே இந்த அதிகாரம். 


திருவள்ளுவர் இரண்டு விதமான துறவு பற்றி பேசுகிறார். 


ஒன்று முற்றும் துறந்தவன், 


இன்னொன்று துறவு நோக்கி முயல்பவன்.  நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் துறவிகள்தான். ஏதோ ஒன்றை நாம் துறந்துதான் இருப்போம். மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைகளுக்காக நாம் சில இன்பங்களை துறந்துதான் இருக்கிறோம். ஆனால், அது முழுமையான துறவு அல்ல. ஒரு படி ஏறி இருக்கிறோம். இன்னும் சிலர் , மேலும் சில படிகள் ஏறி இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் முழுமையான துறவு அல்ல. 


ஒன்றை துறப்பதே எவ்வளவு கடினமாக இருக்கிறது. 


காலையில் எழுந்தவுடன் காப்பி குடிக்க வேண்டும். அதை விட முடிகிறதா. ஒரு நாள் குடிக்க முடியவில்லை  என்றால் எப்படி இருக்கிறது.   ஒரு வேளை உணவை துறக்க முடிகிறதா? வருடத்தில் ஒரு நாள் இரவு தூக்கத்தை விட முடிகிறதா? 


ஒன்றை விடுவதே இவ்வளவு கடினம் என்றால், அனைத்தையும் விடுவது எவ்வளவு கடினமாக இருக்கும். அப்படி ஒருவன் அனைத்தையும் விட்டு விட்டான் என்றால், அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும். 


அவன் என்னதான் சொல்கிறான் என்று கேட்க வேண்டாமா? 


அறம் நிலைக்க வேண்டும் என்றால், எது அறம் என்று தெரிய வேண்டும். 


அந்த அறங்களை எடுத்துச் சொல்பவன் நீத்தார் என்று சொல்லப் படுகின்ற முற்றும் துறந்தவன். 


அவன் சொல்வதில் பிழை இருக்காதா? அவன் பிழை விட மாட்டானா என்றால் மாட்டான் என்கிறார் வள்ளுவர். அதற்கு காரணமும் தருகிறார். 


அவற்றை எல்லாம் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


பரிமேலழகர் வழி காட்ட அவர் கைப் பிடித்து அடுத்த அதிகாரத்துக்குள் நுழைவோம். 


Thursday, April 29, 2021

கம்ப இராமாயாணம் - நினைவும் செய்கையும் மறந்து

 கம்ப இராமாயாணம் - நினைவும் செய்கையும் மறந்து 


ஒரு நொடிப் பொழுதில் இந்திரசித்து பிரமாஸ்திரத்தை இலக்குவன் மேல் எய்து விட்டான். 


அருகில் இருந்த அனுமன் திகைத்தான். இது, யார் இப்படி செய்தது...வந்தவன் இந்திரனா, அவனை அந்த வெள்ளை யானையோடு சேர்த்து எடுத்து எறிந்து விடுகிறேன் பார் என்று வந்தான்...வந்த மாத்திரத்தில் வில்லில் இருந்து புறப்பட்ட ஆயிரம்  கடுமையான  அம்புகள் தைக்க நினைவும், செய்கையும் மறந்து போய் நிலத்தில் சோர்ந்து விழுந்து விட்டான்.


பாடல் 


அனுமன், 'இந்திரன் வந்தவன் என்கொல், 

   ஈது அமைந்தான்? 

இனி என்? எற்றுவென் களிற்றினோடு 

   எடுத்து' என எழுந்தான்; 

தனுவின் ஆயிரம் கோடி வெங் கடுங் 

   கணை தைக்க, 

நினைவும் செய்கையும் மறந்துபோய், 

   நெடு நிலம் சேர்ந்தான். 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_44.html


(please click the above link to continue reading)



அனுமன்,= அனுமன் நினைத்தான் 


 'இந்திரன் வந்தவன் என்கொல் = இந்திரனா வந்தது  


ஈது அமைந்தான்?  = இப்படிச் செய்தவன் 


இனி என்? = இனி என்ன செய்வது 


எற்றுவென்  = தூக்கி எறிவேன் 


களிற்றினோடு  = யானையோடு 


எடுத்து' = எடுத்து 


என எழுந்தான்;  = என்று எழுந்தான் 


தனுவின் = வில்லின் 


ஆயிரம் கோடி  = ஆயிரம் கோடி 


வெங் கடுங்கணை தைக்க,  = வெம்மையான கொடிய அம்புகள் தைக்க 


நினைவும் = நினைவும் 


செய்கையும் = செய்கையும் 


மறந்துபோய்,  = மறந்து போய் 


நெடு நிலம் சேர்ந்தான்.  = நிலத்தில் வீழ்ந்தான் 


அப்பேற்பட்ட அனுமனையும் அந்த பிரம்மாஸ்திரம் சாய்த்தது.


இலக்குவன் விழுந்து விட்டான். 


அனுமனும் பேச்சு மூச்சு இல்லாமல் விழுந்து விட்டான். 


இனி போர் என்ன ஆகும் ?



திருக்குறள் - வான் சிறப்பு - நீர் இன்றி அமையாது உலகு

 திருக்குறள் - வான் சிறப்பு - நீர் இன்றி அமையாது உலகு 


நீர் இல்லாவிட்டால் இந்த உலகம் இல்லை. அது நமக்குத் தெரிகிறது. ரொம்ப தூரம் போக வேண்டாம், வீட்டில் ஒரு நாள் குழாயைத் திறக்கிறீர்கள், நீர் வரவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். எப்படி இருக்கும் ? பதறிப் போய் விட மாட்டீர்கள். உடனே தொலை பேசியில் யார் யாரையெல்லாமோ கூப்பிட்டு தண்ணீர் வர வழி செய்வீர்கள் அல்லவா? வீட்டில் கை கால் கழுவ தண்ணீர் வராவிட்டால் இந்தப் பாடு என்றால் மழை பெய்யாவிட்டால் என்ன ஆகும். உணவு இல்லை. பசி. செடி கொடி தாவரங்கள் இல்லை. நாடே வறண்டு பாலைவனமாகி விடும் அல்லவா. அது தெரிகிறது. நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 


ஆனால், அவ்வளவு தெளிவாக தெரியாத இன்னொன்றும் இருக்கிறது. அதாவது, மழை இல்லை என்றால் உலகில் ஒழுக்கம் கெட்டு விடும் என்பது. உலகில் தர்மமும், அறமும், ஒழுக்கமும் நிலைத்து வாழ மழை தேவை. அது நேரடியாகத் தெரியாது. 


மழை இல்லாவிட்டால் உணவு இல்லை. உணவு இல்லாவிட்டால் பசி. பசி வர பத்தும் பறந்து போகும். அது என்ன பத்து 


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை 

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை - தேனின் 

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும் 

பசி வந்திடப் பறந்து போம் 


என்று ஔவை கூறுகிறாள். 


பாடல் 


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_29.html


(please click the above link to continue reading)


நீர்இன்று = நீர் இன்றி 


அமையாது  = அமையாது, இருக்காது 


உலகெனின் = உலகு எனின் 


யார்யார்க்கும் = எவருக்கும் 


வான்இன்று = மழை இன்றி 


அமையாது ஒழுக்கு = ஒழுக்கம் இல்லை 


நீர் இன்றி அமையாது உலகு என்ற தொடரில் உலகு என்பதற்கு உலகியல் சார்ந்த இன்பங்கள், அது சார்ந்து வரும் வீடு பேறு போன்றவை என்று பரிமேலழகர் பொருள் கொள்கிறார். உலகம் என்றால் ஏதோ மலை, பாறை, மண் என்று சொல்லவில்லை. மழை இல்லாவிட்டாலும்  அவை இருக்கும். உலகியல் சார்ந்த இன்பங்களும் அறங்களும். 


எப்படி வானம் (மேகம்) இல்லாமல் மழை இல்லையோ, அது போல நீர் இல்லாமல் ஒழுக்கம் இல்லை. 


நாம் நினைக்கலாம், மழை இல்லாவிட்டால் என்ன, ஆறு, குளம், கிணறு, கண்மாய், என்று நீர் நிலைகள் இருக்கின்றனவே என்று. அவற்றிற்கும் நீர் மழையில் இருந்துதான் வர வேண்டும். ஊற்று நீர், ஆற்று நீர் எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் வரும். அப்புறம் வறண்டு விடும். 


அமையாது ஒழுக்கு என்பதற்கு "எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது " என்று பொருள் கொள்கிறார்.  


எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனுக்குச் சொன்ன ஒழுக்க நெறிகள் மழை இல்லாவிட்டால் அவனால் கடைபிடிக்க முடியாது போய் விடும் என்கிறார். 


எனவே உலகில் தர்மம் நிலைத்து நிற்க, அறம் செழித்துஓங்க, மழை இன்றி அமையாதது என்று கூறினார். 


மழையையும், அதன் மூலம் கிடைக்கும் நீரையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம். உடலை மட்டும் அல்ல, உயிருக்கு துணையான அறம், ஒழுக்கம் போன்றவற்றிற்கும் துணையாக இருப்பது மழை. 


இந்தக் குறளோடு வான் சிறப்பு என்ற அதிகாரம் முடிவடைகிறது.  


இருபது குறள் படித்து விட்டோம். 


அடுத்த அதிகாரம், நீத்தார் பெருமை. 


களைத்துப் போனால், கொஞ்சம் இடைவெளி விடுவோமா? வேறு ஏதாவது படித்துவிட்டு பின் மீண்டும் குறளுக்கு வரலாம். 


அல்லது அப்படியே தொடரலாமா?

Wednesday, April 28, 2021

கம்ப இராமாயணம் - யுத்தப் படலம் - பிரம்மாஸ்திரம்

 கம்ப இராமாயணம் - யுத்தப் படலம் - பிரம்மாஸ்திரம் 


அரசியல், இயற்கை, மனித மனங்களில் எழும் உணர்சிகளின் போராட்டம் இவற்றை யாரும் கற்பனை செய்ய முடியும். அதை எப்படி எழுத்தில் வடிக்கிறார்கள் என்பது அவரவர் திறமையை பொறுத்தது. 


ஆனால், போர் பற்றி எழுத முடியுமா?  போர் எப்படி நடக்கும், போர்க்களத்தில் என்ன நிகழும், அங்கு இருப்பவர் மன நிலை எப்படி இருக்கும் என்பதெல்லாம் நடை முறை வாழக்கையில் நாம் காணும் காட்சிகள் அன்று. அதை எப்படி கற்பனையில் எழுதுவது?  


இராமனுக்கும், இராவணனுக்கும் பெரிய போர் நடந்தது. முடிவில் இராமன் வென்றான் என்று சொல்லிவிட்டுப் போய் விடலாம். கம்பன் மிக விரிவாக யுத்த காண்டம் எழுதுகிறான். 


கதையோ தெரிந்த கதை. யார் இதை படிக்கப் போகிறார்கள்?  யுத்த காண்டம் பற்றி பெரிய இலக்கிய அரங்ககளோ, பட்டி மன்றமோ நடந்ததாய், நடப்பதாய் தெரியவில்லை. 


இருப்பினும், அதில் கம்பன் காட்டும் நுணுக்கங்கள், உணர்ச்சி போராட்டங்கள், போரின் உக்ரத்தை அவன் காட்டும் விதம், எல்லாம் அந்த போரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. 


கம்பன் காட்டும் போர்க் களங்கள் என்று தனியே ஒரு புத்தகம் எழுதலாம். அவ்வளவு விடயம் இருக்கிறது. 


இலக்குவன் மயங்கி விழுந்து கிடக்கிறான், இராமனைக் காணவில்லை, அந்த சமயத்தில் சீதையை போர் களத்துக்கு கொண்டு வந்து காண்பிக்கிறான் இராவணன். இனியாவது என் ஆசைக்கு இணங்கு. உன்னை காப்பாற்ற யாரும் இல்லை என்று. 

அது எப்படி நடந்தது, இராமன் எங்கே போனான், அனுமன் என்ன ஆனான், சுக்ரீவன், வீடணன் போன்றோர் என்ன ஆனார்கள், சீதை அந்த போர்க் களத்தை கண்டு என்ன ஆனாள் என்று ஆயிரம் கேள்விகளுக்கு பதிலை உள்ளடக்கியது யுத்த காண்டம். 


இங்கே, இந்திரசித்து கண்ட போர்க்களம் பற்றி காணலாம். 


இந்திரசித்து பிரம்மாஸ்திரத்தை இலக்குவன் மேல் விடுகிறான். மாலை வேளையில், இரை தேடிப் போன பறவைகள் எல்லாம் மலையின் மேல் உள்ள தங்கள் கூட்டுக்கு மொத்தமாக வருவது போல, அந்த அஸ்திரம் இலக்குவன் மேனியை பற்றியது


பாடல் 


இன்ன காலையின் இலக்குவன்

    மேனிமேல் எய்தான்,

முன்னை நான்முகன் படைக்கலம்;

    இமைப்பதன் முன்னம்

பொன்னின் மால்வரைக் குரீஇ

    இனம் மொய்ப்பது போல,

பன்னல் ஆம் தரம் அல்லன

    சுடர்க்கணை பாய்ந்த.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_65.html


(click the above link to continue reading)


இன்ன காலையின் = அந்த நேரத்தில் (அது என்ன நேரம் என்றால் இன்னும் பல பாடல்கள் பின்னால் போக வேண்டி இருக்கும்.) 


இலக்குவன் = இலக்குவன் 


மேனிமேல் எய்தான், = உடம்பின் மேல் எய்தான் (யார் ? இந்திரசித்து)


முன்னை = முன்பு, ஆதி, பழம் பெருமை வாய்ந்த 


நான்முகன் படைக்கலம்; = பிரம்மாஸ்திரம் 


இமைப்பதன் முன்னம் = கண் இமைப்பதற்குள் 


பொன்னின் மால்வரைக் = பொன் போல ஒளி விடும் மலையின் மேல் 


குரீஇ  இனம் = பறவை இனங்கள் 


மொய்ப்பது போல, = மொய்ப்பது போல 


பன்னல் ஆம் தரம் அல்லன = சொல்லக் கூடிய தரத்தில் அல்ல 


சுடர்க்கணை பாய்ந்த. = சுடர் விடும் அந்த கணைகள் பாய்ந்த விதம் 


பிரம்மாஸ்த்திரத்துக்கு மேல் ஒரு அஸ்திரம் கிடையாது. அதை வெல்லும் படை எதுவும் இல்லை. 


அப்படி என்றால் என்ன ஆயிற்று? இலக்குவன் இறந்து போனானா? அவனோடு சென்ற படைகள் என்ன ஆயிற்று?


அந்த போர்களத்தை உங்கள் மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். அது எப்படி மேலும் மேலும் விரிகிறது என்று கம்பன் காட்ட காட்ட உங்கள் கற்பனையும் அதனூடே விரியும். அற்புதமான ஒரு அனுபவம்.



திருக்குறள் - வான் சிறப்பு - தானம் தவம் இரண்டும் தங்கா

 திருக்குறள் - வான் சிறப்பு - தானம் தவம் இரண்டும் தங்கா 


மழை பெய்யாவிட்டால், தானமும் தவமும் இந்த உலகில் இருந்து மறைந்து விடும்.


பாடல் 

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_28.html


(please click the above link to continue reading)



தானம் = தானம் 

தவம் = தவம் 

இரண்டும் = என்ற இரண்டும் 

தங்கா = தங்காது, மறைந்து விடும் 

வியன் உலகம் = பெரிய உலகில் 

வானம் = வானம், மேகம் 

வழங்கா தெனின் = தராவிட்டால், மழை பெய்யாவிட்டால் 


இனி, பரிமேலழகரின் உரையை காண்போம். 


தானம் என்றால் என்ன என்பதை மிகத் தெளிவாக, இரத்தின சுருக்கமாக சொல்கிறார் பரிமேலழகர். நம்மைக் கேட்டால் என்ன சொல்லுவோம், தானம் என்றால் மற்றவர்களுக்குத் தருவது என்று சொல்லுவோம். அல்லது வறியவர்களுக்கு உதவுவது என்போம், அல்லது பயன் கருதாமல் உதவி செய்வது என்று சொல்வோம். 


பரிமேலழகர் சொல்கிறார் 


"தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்"


தானம் என்றால் அறநெறியால் சம்பாதித்த பொருளை தகுந்தவர்களுக்கு மகிழ்ச்சியோடு கொடுத்தல் என்கிறார். 


பல பேர் தவறான வழியில் பணம் சம்பாதித்து விட்டு, அதில் ஒரு சிறு பகுதியை கோவில் உண்டியலில் போடுவது, அறக் கட்டளைகளுக்கு தானம் தருவது, என்று செய்வதன் மூலம் தானத்தின் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அது தவறு. அற வழியில் சம்பாதித்த பொருளை தருவதுதான் தானம். 


அதுவும், தகுந்தவர்களுக்குத் தர வேண்டும். கண்டவனிடம் கொடுத்தால் அந்தப் பொருளை வைத்துக் கொண்டு அவன் மேலும் பல தீமைகளைச் செய்வான். பாத்திரம் அறிந்து பிச்சை இட வேண்டும். 


மூன்றாவது, மகிழ்ச்சியோடு கொடுத்தல்.  இருட்டுப் பாதை, ஒத்தையடிப் பாதை, அக்கம் பக்கம் யாரும் இல்லை. தனியாகப் போகிறோம். ஒரு கள்ளன் வழி மறித்து கையில் உள்ளதை எல்லாம் கொடு என்று கேட்கிறான். "இந்தா என்னுடைய மோதிரம், கைக் கடிகாரம், பையில் உள்ள பணத்தை எல்லாம் உனக்கு தானம் தருகிறேன்" என்று கொடுப்பது தானம் ஆகாது. வருத்தத்தோடு கொடுப்பது தானம் ஆகாது. "அறம் செய்ய விரும்பு" என்றாள் ஔவை. விருப்பத்தோடு கொடுக்க வேண்டும். 


தானமும் தவமும் என்பதில் தானம் என்பது பற்றி கூறி விட்டார். 


தவம் என்றால் என்ன என்று அடுத்து கூறுகிறார். 


"தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின. "


தவம் என்றால் மனம் புலன்கள் வழி போகாமால் இருக்க உணவை குறைத்து உண்பது போன்ற விரதங்களை மேற்கொள்வது. 


இதில் பரிமேலழகர் செய்யும் நுட்பம் இன்னொன்றும் உண்டு. 


"பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும், தவம் துறவறத்தின் மேலும் நின்றன"


அதாவது தானம் என்பது இல்லறத்தின் கூறு. தவம் என்பது துறவறத்தின் கூறு. 


அதாவது, மழை இல்லாவிட்டால், இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்களும் இல்லாமல் போய்விடும். 


அறம் இல்லாவிட்டால் பொருள் இல்லை. அறமும் பொருளும் இல்லாவிட்டால் இன்பமும் வீடும் இல்லை. 


எனவே, வீடு பேறு வரை கொண்டு செல்ல மழை அவசியம் என்று முடிவில் உள்ள வீடு பேற்றையும், தொடக்கத்தில் உள்ள மழையையும் ஒன்று சேர்கிறார் பரிமேலழகர். 


அவர் உரை இல்லாவிட்டால் இதெல்லாம் நமக்குப் புரிவது கடினம். 


என்னடா இது அற நூல், வீடு பேற்றுக்கு வழி சொல்லும் நூல் என்று சொல்லி விட்டு இப்படி மழையை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறாரே என்று நினைப்பவர்களுக்கு, மழை இல்லாமல் வீடு பேறு இல்லை, அறங்களும் இல்லை என்று சுட்டுகிறார். 


எவ்வளவு ஆழமான குறள், எவ்வளவு ஆழமான உரை. 





Tuesday, April 27, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - சிறப்பொடு பூசனை செல்லாது

திருக்குறள் - வான் சிறப்பு - சிறப்பொடு பூசனை செல்லாது 


இறை நம்பிக்கை உள்ளவர்கள் அன்றாடம் இறை வழிபாடு செய்வார்கள். பெரிதாக இல்லாவிட்டாலும், ஒரு விளக்கை ஏற்றி, நீர் விளாவி, ஒரு கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி வைத்து, இறைவன் மேல் ஓரிரண்டு தோத்திரம் சொல்லி  வழி படுவார்கள். 


வழிபடுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது. அன்றாடம் அந்த முறையில் வழிபட முடியாது. அது வீட்டுக்கும் பொருந்தும், கோவில்களுக்கும் பொருந்தும். 


அன்றாட வழிப்பாட்டின் குறைகளை தீர்க்க, சில விஷேச நாட்களில் விரிவான பூசனைகள் செய்வார்கள்....திருவிழா, குடமுழுக்கு, போன்றவை. வீட்டில் கூட தீபாவளி, ஆயுத பூஜை, பொங்கல், போன்ற விசேட நாட்களில் சிறப்பான பூஜை செய்யப்படும். 


அன்றாடம் செய்யும் பூஜைக்கு நித்யம் என்று பெயர். 


சிறப்பான பூஜைக்கு நைமித்யம் என்று பெயர். 


இதைத் தமிழில் பூசனை, சிறப்பு என்ற சொற்களால் குறிப்பார்கள். 


மழை இல்லாவிட்டால், இந்த இரண்டு பூசனையும் நடக்காது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_27.html


(click the above link to contitnue reading)


சிறப்பொடு  = சிறப்பானவற்றோடு 

பூசனை  = தினப்படி செய்யும் பூஜையும் 

செல்லாது = நடக்காது 

வானம் = வானம் (மழை) 

வறக்குமேல் = வறண்டு போனால் 

வானோர்க்கும் = வானில் உள்ள தேவர்களுக்கும் 

ஈண்டு = இங்கு 


இதில் பரிமேலழகர் சில நுட்பங்கள் சொல்கிறார். 


முதலாவது, "சிறப்பொடு பூசனை செல்லாது" என்ற தொடரில் செல்லாது என்பது ஒருமை. செல்லா என்று இருந்தால் பன்மை. சிறப்பு, பூசனை என்று இரண்டு இருப்பதால் அது பன்மைதானே வர வேண்டும். 


இலக்கணம் சலிப்பு தரும் என்று நினைப்பவர்கள் இதை விட்டு விடலாம். இது இல்லாமலும் பொருள் புரிந்து விடும். 


தமிழிலிலே வேற்றுமை உருபுகள் என்று ஒன்று உண்டு. அதில் மூன்றாம் வேற்றுமை உருபுகளாவன அன், ஆன், ஒடு, ஓடு என்பன. 


இதில் ஒடு என்ற வேற்றுமை உருபை மட்டும் பார்போம். 


மூன்றாம் வேற்றுமை உருபுக்கு உடனிகழ்ச்சி உருபு என்று ஒரு பெயர் உண்டு. கூடவே நிகழ்வது. 


இராமனோடு குகன் வந்தான் என்றால் இருவரும் ஒன்றாக வந்தார்கள் என்று அர்த்தம். 


பூவொடு சேர்ந்த நாரும் மணக்கும் என்றால் இரண்டும் ஒன்றாக மணக்கும் என்று பொருள். 


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், இராமன், குகன் என்று இரண்டு பேர் இருக்கிறார்கள். அப்படி என்றால் வந்தார்கள் என்ற பன்மை விகுதிதானே இருக்க வேண்டும். 


இராமனோடு குகன் வந்தார்கள் என்றல்லவா இருக்க வேண்டும். ஆனால் அப்படி சொல்வது தவறு என்று நமக்குத் தெரிகிறது அல்லவா?


இராமனோடு குகன் வந்தான் என்பது தான் சரி. காரணம், ஒடு என்ற உருபு வந்தால் ஒருமை முடிவுதான் வரும். 


தலைவரோடு தொண்டன் வந்தான். தலைவரோடு தொண்டன் வந்தார்கள் என்று கூறினால் பிழை. 


இங்கே, சிறப்போடு பூசனை என்று ஒடு உருபு வருவதால் செல்லாது என்ற ஒருமை விகுதி வந்தது. 


இரண்டாவது, ஏன் முதலில் சிறப்பைச் சொல்லி பின் பூசனையை சொன்னார் என்ற கேள்விக்கு பரிமேலழகர் உரை செய்யும் போது "சிறப்பு" என்பது பூசனையில் உள்ள குறைகளை நீக்க வந்ததால் அதை முதலில் கூறினார் என்றார். 


எதை முதலில் கூற வேண்டும், எதை பின்னால் கூற வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 


நாயோடு இராமன் வந்தான் என்று சொல்லக் கூடாது. 


இராமனோடு நாய் வந்தது என்று கூற வேண்டும். 


எது உயர்வோ அதை முதலில் சொல்ல வேண்டும் என்பது மரபு. 


மழை இல்லாவிட்டால், மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் மட்டும் அல்ல, கடவுள்களுக்கு நடக்கும் பூஜையும் நடக்காது என்கிறார். 


தேவர்களுக்கு செல்ல வேண்டிய அவிர் பாகம் போன்றவை சென்று சேராது. அவர்களும் வருந்துவார்கள் என்று கூறுகிறார். 




Monday, April 26, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும்

 திருக்குறள் - வான் சிறப்பு - நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் 


மழை பெய்யாவிட்டால், பெரிய கடலும் தன் நீரை இழக்கும். 


கடல் தண்ணி கொஞ்சம் குறைஞ்சா என்ன ஆகிவிடப் போகிறது ? எவ்வளவு தண்ணி இருந்தாலும், அதுனால என்ன பலன்? எல்லாம் உப்புத் தண்ணி. ஒரு கை அள்ளி குடிக்க முடியாது.  அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது. 


அதுல கொஞ்சம் குறைஞ்சா என்ன ஆயிரும்?


பாடல் 


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_26.html


(please click the above link to continue reading)


நெடுங்கடலும் = பெரிய கடலும் 

தன் = தன்னுடைய 

நீர்மை = இயல்பு 

குன்றும் = குறையும் 

தடிந்து = பெருகி, பெரிதான 

எழிலி = மேகம் 

தான் = அது 

நல்கா தாகி விடின் = கொடுக்காமல் இருந்து விட்டால் 


"நெடுங்கடலும்" என்பதில் உள்ள உம்மை உயர்வு சிறப்பு உம்மை. 


கடலே குறைந்து போய் விடும் என்றால், மத்ததெல்லாம் எந்த மூலை?


ஆறு, குளம், கண்மாய், ஏரி, குட்டை, கிணறு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விடும் என்று குறிக்கவே "நெடுங்கடலும்" என்றார். 


நாடு இப்படியே போனால் ரிசர்வ் வங்கியிலும் பணம் இருக்காது என்று கூறினால் வேறு எங்கும் இருக்காது என்று அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா?


எனவே, இந்த ஏழு பாட்டால் மழையின் மகத்துவம் கூறினார். 


இனி என்ன மழை பற்றிச் சொல்ல இருக்கிறது? எல்லாம் தான் சொல்லி ஆகி விட்டதே? இன்னும் மூணு குறளில் என்ன சொல்லப் போகிறார்? 


உங்களைப் போலவே நானும் ஆவலாய் இருக்கிறேன். 


நாளை சந்திப்போம்.

Sunday, April 25, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - பசும் புல் தலை காண்பது அரிது

 திருக்குறள்  - வான் சிறப்பு - பசும் புல் தலை காண்பது அரிது 


மழை இல்லாவிட்டால், ஒரு புல்லு கூட முளைக்காது என்று சுருக்கமாக சொல்கிறார். 



பாடல் 



விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_25.html

(click the above link to continue reading)


விசும்பின் = ஆகாயத்தின் 

துளிவீழின் = (மழை) துளி வீழ்வது 

அல்லால் = இல்லாவிட்டால் 

மற் றாங்கே = மற்று ஆங்கே 

பசும்புல் = பச்சை புல்லின் 

தலைகாண்பு அரிது = நுனியைக் கூட பார்க்க முடியாது 


இனி பரிமேலழகரின் உரைக்குள் நுழையலாம். 


தமிழிலே ஆகு பெயர் என்று ஒன்று உண்டு. ஒன்றின் பெயர் மற்றதற்கு ஆகி வருவது. 


தை பொறந்தா வழி பிறக்கும் என்று ஒரு பழமொழி இருக்கிறது அல்லவா? தை என்பது  இங்கே தை மாதத்தை குறிக்கும். தை என்ற சொல் தை மாதத்திற்கு ஆகி வந்தது. 


"அப்புறம் அந்த கணக்கு வந்தார்னா அவர் கிட்ட வரி கட்டறத பத்தி கொஞ்சம் ஞாபகப் படுத்துங்க " என்று சொல்லும் போது இங்கு கணக்கு என்பது கணக்கப் பிள்ளைக்கு ஆகி வருவது போல.


விசும்பு என்பது மேகத்துக்கு ஆகி வந்ததால் அது ஆகு பெயர் என்று குறிக்கிறார். 


வானத்தில் இருந்தா மழை வருகிறது? மேகத்தில் இருந்துதானே மழை வருகிறது. இங்கே விசுப்பு என்பது மேகத்திற்கு ஆகி வந்தது. 


"பசும் புல் தலை காண்பது அரிது" என்கிறார். சரி போயிட்டுப் போகட்டும். புல்லு இல்லாட்டி என்ன? நாம என்ன புல்லையா உண்கிறோம்? இல்லையே. புல்லு முளைக்கவில்லை  நமக்கு என்ன நட்டம்?


உரை எழுதும் பொழுது பரிமேலழகர் 

"பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது"

"இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது" 


தலையை"யும்" என்று ஒரு 'உம்" ஐ சேர்கிறார். குறளில் இல்லை. அது தொக்கி நிற்கிறது என்கிறார். தொக்குதல் என்றால் மறைந்து நிற்கிறது. நாம் தான் சேர்த்துக் கொள்ள வேண்டும். 


இந்த 'உம்' என்ற சொல்லுக்கு தனி இலக்கணமே இருக்கிறது. 


உயர்வு சிறப்பு உம்மை = பள்ளி இலக்கிய மன்ற திறப்பு விழாவிற்கு தலைமை நீதிபதியும் வந்திருந்தார் என்றால் அது உயர்வு சிறப்பு உம்மை. 


விழாவிற்கு பேட்டை தாதாவும் வந்திருந்தான் என்றால் அது இழிவு சிறப்பு. 


இன்னொரு உம்மை இருக்கிறது. இறந்தது தழியீய எச்ச உம்மை என்று அதற்குப் பெயர். 


"....இந்த மூணாவது வீட்டில் இருக்கும் அவர் மருத்துவரா..நிறைய நோயாளிகள் வந்து போகிறார்களே?" என்ற கேள்விக்கு

"அவர் மகனும் மருத்துவர்" என்று கூறினால் அவர் மருத்துவர் என்று நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா? 


ஒரு நண்பன் மற்றவனிடம் கேட்கிறான் "...ஏண்டா உனக்கும் பசிக்கிறதா..." என்று. அப்படி என்றால் எனக்குப் பசிக்கிறது. பசி முன்பே வந்து விட்டது. இறந்த காலம். 


இலக்கணம் படிக்காவிட்டால், இந்த பசும் புல்லின் தலையையும் காண்பது அரிது என்று நம்மால் உணர முடியாது. ஏதோ வள்ளுவர் தப்பா எழுதி இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டு போய் விடுவோம். 


புல் என்பது, ஓரறிவு ஜீவன். ஓரறிவு என்றால் குறைந்த அறிவு என்று அர்த்தம் அல்ல. ஒரே ஒரு புலனின் வழியாக அறிவைப் பெறும் உயிரினம். 


நம்மை நாம் ஆறறிவு ஜீவன் என்று கூறிக் கொள்கிறோம். ஏன்? அது என்ன ஆறறிவு?


ஆறுவிதமான அறிவு அல்ல. மெய் வாய் செவி என்ற ஐந்து புலன்கள் வழியாகவும் அறிவு வந்தால் அது ஐந்து அறிவு. அது போக மனம் அல்லது புத்தி என்றும் வேலை செய்து அதன் மூலம் அறிவு வந்தால் அது ஆறாம் அறிவு. 


மனம் வேலை செய்யாவிட்டால் அது ஐந்தறிவு தான். 


மனம் வேலை செய்வதால் தான் அவன் "மனிதன்" என்று அழைக்கப் படுகிறான். 


புல்லு கூட முளைக்காது என்பதால் வேறு ஒன்றும் முளைக்காது என்று அர்த்தம். 


ஓரறிவு ஜீவன் கூட இருக்காது என்றால் மற்ற ஜீவன்களும் இருக்காது என்று அர்த்தம். 





பரிமேலழகர் உரை: விசும்பின் துளி வீழின் அல்லால் - மேகத்தின் துளி வீழின் காண்பது அல்லது; மற்று ஆங்கே பசும்புல் தலை காண்பது அரிது - வீழாதாயின் அப்பொழுதே பசும்புல்லினது தலையையும் காண்டல் அரிது.

(' 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால்தொக்கது. ஓர் அறிவு உயிரும் இல்லை என்பதாம்.)


சூழ்விசும் பணிமுகில்*  தூரியம் முழக்கின*  

ஆழ்கடல் அலைதிரைக்*  கைஎடுத்து ஆடின*

ஏழ்பொழிலும்*  வளம்ஏந்திய என்அப்பன்* 

வாழ்புகழ் நாரணன்*  தமரைக் கண்டுஉகந்தே. 

Saturday, April 24, 2021

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை - பாகம் 2

 

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை - பாகம் 2 



மழை சில பெய்யாமல் கெடுக்கும். பின் அதுவே பெய்து கொடுக்கும். அப்படி கெடுப்பதும், கொடுப்பதும் எல்லாம் மழைதான் இந்த உலகில் என்கிறார். 


பாடல் 


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/2_24.html


(click the above link to continue reading)


கெடுப்பதூஉம் = கெடுபதுவும் 


கெட்டார்க்குச் = கெட்டவர்களுக்கு 


சார்வாய்மற்று = உதவியாக மேலும் 


ஆங்கே = அங்கே 


எடுப்பதூஉம் = துணை செய்வதுவும் 


எல்லாம் மழை = எல்லாம் மழை 



இதன் முதல் பாகத்தை கீழே உள்ள லிங்க் இல் பார்க்கலாம் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/1_23.html



தொடர்ச்சி 


"ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல்."


அது என்ன மறுதலை தொழில் உவமத்தின் கண் வந்த உவமச் சொல்? 



ஒரு வேலையைச் செய்கிறோம். அதை மாற்றிச் செய்தால் அது மறுதலையாக் செய்வது. 


உதாரணமாக,


ஒரு பொருளை கீழே வைக்கிறோம். அது ஒரு வேலை. 



வைத்த பொருளை எடுத்தால், அது மறுதலை. 



கொடுப்பது, வாங்குவது. 



இங்கே, மழை பெய்யாமல் கெடுக்கும். பின் அதுவே பெய்து கொடுக்கும் அல்லது வாழ வைக்கும்.  



கெடுப்பதும்,  கொடுப்பதும் மறுதலை என்பதால் இங்கே அந்த "ஆங்கு" என்ற சொல் மறுதலை தொழிலின் கண் வந்த உவமச் சொல் என்றார். 



சற்று யோசித்துப் பார்த்தால், இந்த குறளில் ஒரு சிக்கல் தெரியும். 



கெடுப்பது போல எடுப்பது என்கிறார். 



அது எப்படி சரியாக இருக்கும். 



பெய்யாமல் இருந்து கெடுத்தது. அதே போல் எடுக்கும் (கொடுக்கும்) என்றால் பெய்யாமல் இருந்து கொடுக்குமா? அது சரி இல்லையே.



நடை முறை வழக்கைப் பார்ப்போம்.



பையன் வீட்டில் இருந்து கடைக்கு சென்று விடுகிறான்.  அங்கிருந்து திரும்பி வர வழி தெரியவில்லை. அங்கிருந்து வீட்டுக்குப் போன் பண்ணி கேட்க்கிறான். அப்பா சொல்கிறார் "எப்படி போனியோ அப்படியே வா" என்று. அது எப்படி முடியும்? போன மாதிரியே எப்படி வர முடியும்?



இன்னும் தெளிவாக சொல்வதனால், பையன் மரத்தின் மேல் ஏறி விடுகிறான். இறங்கத் தெரியவில்லை. அப்பா சொல்கிறார், "எப்படி ஏறிணாயோ, அப்படியே இறங்கு" என்கிறார்.  அது சரியா. ஏறின மாதிரி செய்தால் இன்னும் மேலே தான் போக முடியும். எப்படி கீழே வர முடியும்?



அது தான் வினை மாற்று. செய்த வேலையை மாற்றிச் செய்வது. 



புரிகிறது அல்லவா?



அடுத்ததாக 



"கெட்டார்க்குச் சார்வாய்மற்று"


கெட்டார்க்கு என்று கூறும் போது அது மனிதர்களை மட்டும் தான் குறிக்கும். மழை பெய்யாவிட்டால் விலங்கினங்களும், செடி கொடிகளும் வாடும் அல்லவா? பின் ஏன் கெட்டார்க்கு என்று மனிதர்களை மட்டும் குறிப்பிடுகிறார்? "கெட்டவகைகளுக்கு" என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும்?



பரிமேலழகர் கூறுகிறார் 




"கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. "



கெடுதலும் ஆக்கமும் முயற்சி இன்மை மற்றும் முயற்சியால் வருவது. எனவே அது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் "கெட்டார்க்கு" என்றார். 



ஒரு சிங்கமோ, புலியோ முயற்சி செய்து ஒரு உயரிய நிலையை அடைய முயல்வது இல்லை. 



"எல்லாம் மழை"



குறளிலே எல்லாம் மழை என்று தான் இருக்கிறது. ஆனால், பரிமேலழகரோ "எல்லாம் வல்லது மழை" என்று சொல்கிறார்.  வல்லது என்ற வார்த்தை குறளில் இல்லை. இல்லாத ஒன்றை எவ்வாறு அவர் கூறலாம் என்ற கேள்விக்கு அவர் விடை தருகிறார். 



"'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது"



என்று. 



அது என்ன "அவாய்" ?



பேசும் பொழுதோ, எழுதும் பொழுதோ ஒரு சொல் இன்னொரு சொல்லை தானே கூட்டிக் கொண்டு வரும். 



உதாரணமாக...



"குதிரை வேகமாக...." என்று விட்டு விட்டால், நமக்கு என்ன தோன்றும் "ஓடும்" என்று நாமே அதை முடிக்கிறோம் அல்லவா?



"பக்தர்  இறைவனை ....."



என்று விட்டு விட்டால் "வழிபட்டார்" என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?



பக்தர் என்ற சொல், வழிபாடு என்ற செயலை கொண்டு வருகிறது 



அப்படி ஒரு சொல் இன்னொரு சொல்லைக் கூட்டிக் கொண்டு வந்தால் அதற்கு அவாய பலன் என்று பொருள். 



எல்லாம் மழை என்று கூறினால், எல்லாம் "வல்லது" மழை என்று நாம் உணர முடியும்.  வல்லது என்பது அவாய் நிலையான் வந்தது என்று உரை எழுதுகிறார். 



இவ்வளவு நீண்ட இலக்கணம் தேவை இல்லைதான். இவை இல்லாமலே குறள் புரிந்து விடும். 



இலக்கணம் புரிய புரிய குறளின் ஆழமும், நுணுக்கமும் புரியும். 



அது மட்டும் அல்ல, நாம் பேசும் போதும், எழுதும் போது நம்மை அறியாமலேயே நம் மொழித் திறன் உயரும். 



குறள் படிக்கும் போது நிறைய அறம், கொஞ்சம் தமிழ் கலாச்சாரம் , கொஞ்சம் தமிழ் இலக்கணம் இவற்றையும் நாம் கூடவே படிக்கலாம்....



Friday, April 23, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - சேறு செய் தொண்டர் சேவடி

நாலாயிர திவ்ய பிரபந்தம்  - சேறு செய் தொண்டர் சேவடி


பக்தி உலகம்.  அது ஒரு தனி உலகம்.  


இப்படி இருக்குமா? இப்படி கூட நடக்க முடியுமா? இது சாத்தியம் தானா? எப்படி அவர்களால் இப்படி உருக முடிகிறது என்று நம்மை வியக்க வைக்கும் உலகம். 


திருவரங்கத்தில் உள்ள பெருமாளின் அவதார லீலைகளை அவனுடைய பக்தர்கள் நினைத்துப் பார்க்கிறார்கள். அவர்களுடைய கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொன்னி ஆறு போல பாய்கிறது. அது நிலத்தில் விழுந்து, கோயில் முற்றத்தை எல்லாம் ஈரமாக்குகிறது. அப்புறம் வேறு சில பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள் நிலையம் அதே தான். ஈரமான நிலத்தில் இன்னும் நீர் ஓடி அது சேறாகிறது. பின் கொஞ்சம் காய்கிறது. முழுவதும் காய்வதற்குள் அடுத்த குழு வருகிறது. நிலம் மீண்டும் சேறாகிறது. 


குலசேகர ஆழ்வார் சொல்கிறார், அந்த சேற்றை அள்ளி என் தலையில் ஒரு அணிகலனைப் போல அணிந்து கொள்வேன் என்கிறார். 


பாடல் 


ஏறடர்த்ததும் ஏனமாய்நிலம் கீண்டதும்முன்னி ராமனாய்

மாறடர்த்ததும் மண்ணளந்ததும் சொல்லிப்பாடிவண் பொன்னிப்பே

ராறுபோல்வரும் கண்ணநீர்கொண்ட ரங்கன்கோயில் திருமுற்றம்

சேறுசெய்தொண்டர் சேவடிச்செழுஞ் சேறெஞ்சென்னிக் கணிவனே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_23.html


(Please click the above link to continue reading)


ஏறடர்த்ததும் = ஏறுகளை சண்டையிட்டு அடக்கியதும் 


ஏனமாய் = பன்றியாய் 


நிலம் கீண்டதும் = நிலத்தைக் பிளந்ததும் 


முன்னி ராமனாய் = முன்பு இராமனாய் 


மாறடர்த்ததும்  = அரக்கர்களுடன் போர் செய்ததும் 


மண்ணளந்ததும் = வாமனனாய் உலகை அளந்ததும் 


சொல்லிப்  = சொல்லி 


பாடி = பாடி 


வண் = பெருமை உடைய 


பொன்னிப் = பொன்னி 


பே ராறு = பெரிய ஆறு 


போல் வரும் = போல வரும் 


கண்ணநீர்  =கண்களில் இருந்து சொரியும் நீர் 


கொண்ட  = கொண்ட 


ரங்கன் கோயில் திருமுற்றம் = திருவரங்க நாதர் கோவில் முற்றம் 


சேறு செய் = சேறாகும் படி செய்த 


தொண்டர் = தொண்டர்களின் 


சேவடிச் = சிவந்த அடிகளின் 


செழுஞ் சேறெஞ்சென்னிக்  கணிவனே = செழுமையான சேற்றை என் தலையில் அணிந்து கொள்வேனே 



அந்தக் காட்சியை மனக் கண்ணின் முன்னால் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பாட்டின் அர்த்தத்தை உணர முடியும். 



திருக்குறள் - வான் சிறப்பு - - எல்லாம் மழை - பாகம் 1

 திருக்குறள் - வான் சிறப்பு -  - எல்லாம் மழை - பாகம் 1 



மழை சில பெய்யாமல் கெடுக்கும். பின் அதுவே பெய்து கொடுக்கும். அப்படி கெடுப்பதும், கொடுப்பதும் எல்லாம் மழைதான் இந்த உலகில் என்கிறார். 


பாடல் 


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/1_23.html


(click the above link to continue reading)


கெடுப்பதூஉம் = கெடுபதுவும் 

கெட்டார்க்குச் = கெட்டவர்களுக்கு 

சார்வாய்மற்று = உதவியாக மேலும் 

 ஆங்கே = அங்கே 

எடுப்பதூஉம் = துணை செய்வதுவும் 

எல்லாம் மழை = எல்லாம் மழை 


இது என்ன குறள்? இதில் பெரிதாக என்ன இருக்கிறது? அடுத்த குறளுக்கு போவோமா என்று நினைப்பதன் முன்னம், பரிமேலழகர் உரையை படித்து விடுவோம். 


பரிமேலழகர் உரை படிப்பது என்றால் கொஞ்சம் இலக்கணமும் படிக்க வேண்டும். 


வேண்டாம் வேண்டாம் எங்களுக்கு இலக்கணமும் வேண்டாம்,  பரிமேலழகர் உரையும் வேண்டாம். இந்த சுருக்கமான உரையே போதும் என்பவர்கள் மேலே தொடர்வதை விட்டு விடலாம். 


அதில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தொடரலாம். 



பரிமேலழகர் உரை: 


கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்;  கெட்டார்க்குச்சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற் போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை - இவை எல்லாம் வல்லது மழை.

('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, ஆங்குஎன்பது மறுதலைத் தொழிலுவமத்தின்கண் வந்த உவமச்சொல்.  கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு என்றார்'. 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)


ஒவ்வொன்றாக பிரித்துப் படிப்போம். 


"கெடுப்பதூஉம்" - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்;


குறளில் கெடுப்பதூஉம்  என்று மட்டும் தான் இருக்கிறது.  "பெய்யாது நின்று கெடுப்பதூஉம்"என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார். அப்படி என்றால் பெய்து கெடுக்காதா என்ற கேள்வி வரும். எவ்வளவு வெள்ளத்தால் வரும் நாசங்களை, அழிவுகளை பார்க்கிறோம். அது எல்லாம் கெடுதல் இல்லையா?  அது எப்படி பெய்யாமல் கெடுப்பதை மட்டும் சொல்லலாம் என்றால்,


மழை அதிக அளவு பெய்தால் அது சிலரைத் தான் பாதிக்கும். அந்த ஆற்றங்கரையில் உள்ளவர்களை, நீர் வரும் வழியில் வீடு கட்டிக் கொண்டவர்களை, தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை அது பாதிக்கும். ஆனால், அதிக மழை பொழிந்தால் நிலத்தடி நீர் மேலே வரும், ஏரி, குளம், கண்மாய், குட்டை எல்லாம் நிறையும். அணைக்கட்டுகள் நிறையும். அதனால் பல பேருக்கு பல ஆண்டுகள் பயன் உண்டு. 


மாறாக, மழை பெய்யவே இல்லை என்றால் அது எல்லோரையும் பாதிக்கும்.  எனவே தான், பெய்யாமல் கெடுப்பது என்றார். 


"'மற்று' வினை மாற்றின்கண் வந்தது,". அப்படி என்றால் என்ன? 


குறளில் 


"சார்வாய்மற்று ஆங்கே" என்று வருகிறது.  மற்று என்றால் என்ன? 


நாம் அன்றாடம் உபயோகப் படுத்தும் சொல்தான்.


உதாரணமாக, எழுத்தாளர் சுஜாதா அவர்கள் நிறைய அறிவியல் சார்ந்த கட்டுரைகள் எழுதி இருக்கிறார். அது மட்டும் அல்ல, அவர் சில நகைச்சுவை கதைகளும் எழுதி இருக்கிறார்" என்று சொல்கிறோம் அல்லவா? 


இதில் "மட்டும் அல்ல" என்ற வார்த்தை எதற்கு? ஒன்றில் இருந்து ஒன்றை வேறு படுத்த அதை நாம் பயன் படுத்துகிறோம். 


"தம்பி, கடைக்குப் போய் அரிசி, புளி, மிளாகாய் எல்லாம் வாங்கிகிட்டு மத்தது வர்ற வழியில பேங்க் ல மீதிப் பணத்தை போட்டுட்டு வந்துரு" 


இரண்டு ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாதவற்றை பற்றிச் சொல்லும் போது, நடுவில்  "மற்று" என்ற வார்த்தையை உபயோகப் படுத்த வேண்டும். 


மருத்துவரைப் பார்த்து கொஞ்சம் மாத்திரை, மருந்து , ஒரு கிலோ தக்காளி வாங்கிட்டு வா நு சொல்லக் கூடாது.  


மருத்துவரைப் பார்த்து மாத்திரை மருந்து வாங்கிட்டு மத்தது (வர்ற வழியில) ஒரு கிலோ தக்காளியும் வாங்கிட்டு வா" என்று சொல்ல வேண்டும். 


"மற்று" என்ற வார்த்தையை படித்தவுடன் நமக்கு மனதுக்குள் "இனி வேறு ஏதோ ஒன்று வரப் போகிறது " என்று தோன்றி விடும். 


இங்கே "மற்று வினை மாற்றின் கண் வந்தது" என்கிறார். 


மழை கெடுத்தல், கொடுத்தல் என்ற இரண்டு எதிரிடையான வேலைகளை செய்வதால் "மற்று" என்று ஒரு வார்த்தையை போடுகிறார். 


சரி, "ஆங்கு" என்றால் என்ன ?

Thursday, April 22, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வேட்கை என்னாவதே ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வேட்கை என்னாவதே ?


திருவரங்கத்துக்குப் போகணும், திருப்பதிக்குப் போகணும், காசிக்குப் போகணும் என்று எங்கும் நிறைந்த இறைவனை ஏதோ ஒரு இடத்தில் சென்றுதான் தரிசிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கல்லாம். 


எங்கேயும் போக வேண்டியது இல்லை. இருந்த இடத்திலேயே, அவனை மனதில் நினைத்து வழிபட்டால் போதும் என்கிறார் குலசேகர ஆழ்வார். 


"விரிந்த இதழ்களை உடைய மலரில் வாசம் செய்யும் ததிருமகளின் தோள்களை அணைத்துக் கொண்டதும், அம்பால் ஏழு மரா மரங்களை துளைத்ததும், ஆடு மாடு மேய்த்ததும் , இவற்றையெல்லாம் நினைத்து, ஆடிப் பாடி, "அரங்கா" என்று அழைக்கும் தொண்டர்களின் பாதத்தில் இருந்து பறக்கும் பாதத் துளிகள் மேலே படும் பாக்கியம் பெற்றால், கங்கை சென்று நீராட வேண்டும் என்ற எண்ணம் என்னாவது?"


பாடல் 


தோடுலாமலர் மங்கைதோளிணை தோய்ந்ததும்சுடர் வாளியால்

நீடுமாமரம் செற்றதும்நிரை மேய்த்துமிவை யேநினைந்து

ஆடிப்பாடி அரங்கவோஎன்ற ழைக்கும்தொண்ட ரடிப்பொடி

ஆடனாம்பெறில் கங்கைநீர்குடைந் தாடும்வேட்கையென் னாவதே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_11.html

(click the above link to continue reading)



தோடுலாமலர் = இதழ் விரிந்த மலர்கள் 


மங்கை = அதில் வாசம் செய்யும் திருமகளின் 


தோளிணை = தோள்களை 


தோய்ந்ததும் = அணைத்துக் கொண்டதும் 


சுடர் வாளியால் = ஒளி வீசும் அம்புகளால் 


நீடுமாமரம் = பெரிய மரா மரங்களை 


செற்றதும் = துளைத்ததுவும் 


நிரை மேய்த்தும் = பசுக்களை மேய்த்ததும் 


இவையே நினைந்து = இவற்றை மட்டுமே நினைத்து 


ஆடிப்பாடி = ஆடிப் பாடி 


அரங்கவோ = அரங்காவோ 


என்ற ழைக்கும் = என்று அழைக்கும் 


தொண்ட ரடிப்பொடி = தொண்டர்களின் பாதம் பட்டு தெறிக்கும் தூசு 


ஆடனாம்பெறில் = அதில் ஆடப் பெற்றால் 


கங்கை நீர் = கங்கை ஆற்றிலே 


குடைந் தாடும் = குதித்து விளையாடும் 


வேட்கை = ஆசை 


யென் னாவதே = என்னாகும் ?


அடியவர்களின் பாதத் துளிகள் கங்கை ஆற்றை விட புனிதமானது என்பது பொருள்.


எங்கேயும் போகத் தேவையில்லை. அவனை மனதால் நினைத்தால் போதும் என்பதும் பெற்றாம். 


ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், கவிதை நடை. 


"அப்படி எல்லாம் இருந்தால், அந்த கங்கை போற எண்ணம் என்னாகும்?" என்று நம்மை பார்த்து நேரில் கேட்பது போன்ற ஒரு நடை, பாவனை. 


"இதெல்லாம் இருக்கும் போது, அங்க எதுக்கு போக நினைக்கிற" என்று நம்மைப் பார்த்து கேட்பது போன்ற நடை சற்று வித்தியாசமானது. 


திருமகள் மேல் காதல் 

மரம் துளைத்த வீரம் 

பசுக்களுக்கும் இரங்கும் கருணை 


வேறென்ன வேண்டும்?


நான் மீண்டும் மீண்டும் சொல்வது போல, நாலாயிர திவ்ய பிரபந்தம் படிப்பது என்பது ஒரு அனுபவம்.  உங்களுக்கும், அந்த பாசுரத்துக்கும் உள்ள நேரடித் தொடர்புதான் அந்த அனுபவம். 


வார்த்தைகள், இலக்கணம், போன்றவற்றை விட்டு விட்டு நேரடியான அனுபவம் இருந்தால், அதன் சுகமே தனி. 


அதை என்னென்று சொல்லி விளங்க வைப்பது ? 



திருக்குறள் - வான் சிறப்பு - ஏரின் உழாஅர் உழவர்

 திருக்குறள் - வான் சிறப்பு - ஏரின் உழாஅர் உழவர் 


அறம் நிலைக்க வேண்டும் என்றால் உயிர்கள் நிலைக்க வேண்டும். அதுவும் பசி இன்றி இருக்க வேண்டும். அதற்கு மழை வேண்டும். 


மழை வளம் குன்றினால் உழவர்கள் உழவுத் தொழிலை செய்ய மாட்டார்கள் என்கிறார் வள்ளுவர்.  


அதாவது, உலகில் உணவு உற்பத்தி நின்று போய் விடும் என்கிறார்.  இருக்கின்ற உணவை சிறிது காலம் உண்ணலாம். அதன் பின், பட்டினிதான். 


மழை இல்லாவிட்டால், உழவு இல்லை. உழவு இல்லாவிட்டால் உணவு இல்லை. 


பாடல் 


ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்

வாரி வளங்குன்றிக் கால்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_22.html


(click the above link to continue reading)



ஏரின் = ஏரினால் 


உழாஅர் = நிலத்தை உழ மாட்டார்கள் 


உழவர் = உழவர்கள் 


புயலென்னும் = மழை என்ற 


வாரி = வருவாய் 


வளங்குன்றிக் கால் = வளம் குன்றிய பொழுது 


உழவர்கள் நிலத்தை உழலாம், அதை பண்  படுத்தலாம். விதை விதைக்கலாம். ஆனால், மழை இல்லாவிட்டால் இவை ஒன்றினாலும் பயன் இல்லை. பயிர் விளையாது. 


ஏன், மழை இல்லாவிட்டால், ஆற்றுப் பாசனம், ஊற்றுப் பாசனம், கண்மாய் பாசனம் போன்றவை இல்லையா என்றால் இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் நம்பி உழவு செய்ய முடியாது. ஆற்றுக்கு நீர் எங்கிருந்து வரும்? ஊற்று நீர் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? ஆற்றில் நீர் இல்லாவிட்டால் எரி , குளம் , குட்டை, கண்மாய் எல்லாம் எப்படி நிறையும். 


நீர் மேலாண்மைக்கு (water management) மழைதான் அடிப்படை. அது இல்லாவிட்டால், உழவர்கள் சோர்ந்து போவார்கள். 


ஏதோ ஓரிரண்டு தூறல் போட்டது என்று உழவர்கள் உழவு செய்யத் தொடங்க மாட்டார்கள். "புயல் எனும் வாரி". நல்லா அடிச்சுப் பெய்ய வேண்டும். காத்தும் மழையுமாக இருக்க வேண்டும். நீர் நிலைகள் எல்லாம் நிறைய வேண்டும். 


உழவுக்கு அடிப்படை மழை. 


ஒரு நாடு எவ்வளவுதான் பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தாலும், பணத்தை உண்ண முடியாது. உணவுப் பொருள் வேண்டும். அதற்கு மழை அவசியம் என்று மழையின் பெருமை கூறுகிறார். 

Wednesday, April 21, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணீர் மழைசோர நினைந்து உருகி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்ணீர் மழைசோர நினைந்து உருகி 


அன்பு அதிகமாகிக் கொண்டே போகும் போது ஒரு இடத்தில் வார்த்தைகள் பயனற்றுப் போய், கண்ணீர் ஒன்றே அந்த அன்பை வெளிப்படுத்தும் ஊடகமாக மாறி விடுகிறது. 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் என்பார் வள்ளுவப் பெருந்தகை. 


காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பார் திரு ஞானசம்பந்தர். 


அன்பின் உச்சம் கண்ணீராகத்தான் இருக்கிறது. 


கிணறு வெட்ட நிலத்தை தூர்த்துக் கொண்டே போவோம். ஒரு இடத்தில் நிலத்தடி நீர் மேலே வந்து விடும். பெருமாள் மேல் பக்தர்கள் கொண்ட காதல் இருக்கிறதே அது எவ்வளவு தூரம் ஆழமாகப் போகும் என்று யாருக்கும் தெரியாது. தூராத மனக் காதல் அது. 


தாய்ப் பசுவைக் கண்டதும் கன்றுக் குட்டி துள்ளி குதித்துக் கொண்டு ஓடும். அதுக்கு ஆனந்தம் தாங்காது. சரியாக குதிக்கிரோமா என்று கூடத் தெரியாது. கண் மண் தெரியாமல் குதிக்கும். கீழே விழும். புரண்டு எழும். மீண்டும் துள்ளும். அப்படி ஒரு பாசம். அன்பு. துடிப்பு. 


ஆண்டவனைக் கண்டதும் பக்தர்களுக்கும் அப்படி ஒரு பரவசம் வருமாம். கண்ணில் நீர் தாரை தாரையாக வழியும். அவனை கண்டு கொண்டேன் என்று ஒரே ஆனந்தம். துள்ளிக் கொண்டு ஒடுவார்களாம். தரையில் விழுந்து புரள்வார்களாம். 


அப்படி ஒரு பரவச நிலை எனக்கு வரவில்லையே.  அவர்களோடு சேர்ந்து தானும் அவ்வாறு பரவசம் அடையும் நாள் அது என்று வருமோ என்று ஏங்குகிறார் குலசேகர ஆழ்வார். 


பாடல் 


தூராத மனக்காதல் தொண்டர் தங்கள் குழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி


ஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர் மழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்


சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்


போராழி யம்மானைக் கண்டு துள்ளிப் பூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_34.html


(click the above link to continue reading)


தூராத மனக்காதல்  = ஆழம் காண முடியாத காதல் 


தொண்டர் தங்கள் = தொண்டர்கள் 


குழாம் = குழு 


குழுமித் = ஒன்றாகச் சேர்ந்து 


திருப்புகழ்கள் பலவும் பாடி = இறைவனுடைய திருப்புகழ்கள் பலவும் பாடி 


ஆராத  = தீராத 


மனக்களிப்போ டழுத  கண்ணீர் = தீராத மனக் களிப்போடு அழுது கண்ணீர் 


மழைசோர = மழை போல வடிய 


நினைந்துருகி யேத்தி = நினைந்து உருகி போற்றி 


நாளும்= ஒவ்வொரு நாளும் 


சீரார்ந்த முழவோசை = சிறந்த வாத்தியங்களின் முழவு ஓசை 


பரவை காட்டும் = கடல் போல் ஒலிக்க 


திருவரங்க தரவணையில் = திருவரங்கத்தில், பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டிருக்கும் 


போராழி யம்மானைக் = பெரிய சக்கரத்தை உடைய அம்மானை 


கண்டு = கண்டு 


துள்ளிப் = பரவசத்தில் துள்ளி 


பூதலத்தி லென்றுகொலோ  = இந்த பூமியில் என்றோ 


புரளும் நாளே = புரளும் நாளே 


உலகியல் இன்பங்கள் கொஞ்ச நேரத்தில் ஆறி விடும். திருப்தி வந்து விடும். இன்னும் சொல்லப் போனால் ஆசை மாறி வெறுப்பே வந்து விடும். 


லட்டு நன்றாக சுவையாக இருக்கும். ஒன்றிரண்டு உண்ணலாம். அதற்கு மேல் முடியாது. அந்த ஆசை ஆறி விடும். 


ஆனால், இறைவனை கண்டு மகிழும் ஆசை ஆறவே ஆறாது. மேலும் மேலும் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் என்கிறார். 


"ஆறாத  மனக் களிப்பு " 


அதே போல், "தூராத மனக் காதல்" ஆழம் காண முடியாத காதல். 


பிரபந்தத்தை வார்த்தைகளால் உணர முடியாது. வார்த்தைகளைத் தாண்டிய அனுபவம் அது.  


வாய்த்தால் நல்லது. 


திருக்குறள் - உடற்றும் பசி

 திருக்குறள் - உடற்றும் பசி 


மழை பெய்யாவிட்டால், இந்த உலகில் நிலைத்து வாழும் உயிர்களை பசி வருத்தும். 


பாடல் 

விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உண்ணின்று உடற்றும் பசி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_21.html


(please click the above link to continue reading)



விண்ணின்று = வின் + இன்று = இன்று என்றால் இல்லாமல். 


பொய்ப்பின் = பொய்த்து விட்டால் 


விரிநீர் வியனுலகத்து = விரிந்த நீரை கொண்ட (கடல்) இந்த பெரிய உலகில் 


உண்ணின்று  = உள் + நின்று = உள்ளே இருந்து 


உடற்றும் பசி. = வருத்தும் பசி 


பொய்ப்பின் என்றால் ஒரு பருவ மழை பொய்ப்பித்து போவது அல்ல. நீண்ட நாட்களாய் பெய்யாமல் விட்டால். 


விரிநீர் வியனுலகு என்று ஏன் கூறினார் என்றால், உலகில் கடல் நீர் தான் அவ்வளவு இருக்கிறதே. மழை பெய்யாவிட்டால் என்ன என்று சிலர் நினைக்கக் கூடும். கடல் நீர் எவ்வளாவு இருந்தாலும், அதை குடிக்க முடியாது, அதை வைத்து உழவு செய்து பயிர் வளர்க்க முடியாது. 


இன்று அறிவியலில் கடல் நீரை குடி நீராக்க முயற்சிகள் செய்கிறார்கள். ஆனால், அவை ஏதோ ஒரு சிறிதளவு பயன் தரலாம். உலகம் அனைத்துக்கும் தேவையான நீரை கடலில் இருந்து நம்மால் தர முடியாது. 


மழை வந்தால் தான் உண்டு. 


பசி வருத்தும் என்கிறார்.  பசி என்பதை அனுபவித்தால் தான் தெரியும். நமக்கெல்லாம் வரும் பசி என்பது ஒரு சில மணி நேர தாமதம்தான். உணவு கட்டாயம் கிடைக்கும் என்ற உறுதி வேறு உண்டு. 


அடுத்த வேளை உணவு இல்லை. அதற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று இருக்கிறானே, அவன் உணர்வதுதான் பசி. 


"அழிபசி" என்பார் திருவள்ளுவர்.  அழிக்கின்ற பசி. எதையெல்லாம் அது அழிக்கும் என்று பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். 


பசி நின்று வருத்தும் என்கிறார். ஏதோ கொஞ்ச நேரம் வருத்தி விட்டு பின் போய்விடும் என்று அல்ல. விடாமல், நின்று வருத்தும் என்கிறார். 


மழை எவ்வளவு பெரிய விஷயம்.





Tuesday, April 20, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்றோ ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்றோ ?


நாம் ஒருவரிடம் ஒரு உதவியை எதிர் பார்த்துப் போகிறோம். அவர் எவ்வளவு செய்வார், எப்படி செய்வார் என்று தெரியாது. நம் எதிர்பார்ப்பு என்னவோ கொஞ்சம் தான். அதுவும் சந்தேகத்தோடுதான்.


அவரைப் பார்த்தவுடன், அவர் நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு உதவியை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரின் அன்பு நினைத்து நம் மனம் எப்படி இளகும். அடடா, அந்த மனிதனுகுத்தான் என் மேல் எவ்வளவு அன்பு, கரிசனம். அவர் செய்த மாதிரி யார் செய்வார் என்று நினைந்து நினைத்து உருகுவோம் அல்லவா?


அது போல உருகுகிறார் குலசேகர ஆழ்வார். 


"நம் மனமோ எப்போதும் ஏதாவது தீய எண்ணங்களிலேயே மூழ்கிக் கிடக்கிறது. அதை விட்டுவிட்டு, மனதில் உள்ள வஞ்சனை எண்ணங்களை துடைத்து எறிந்து விட்டு , ஐந்து புலன்களை அடக்கி, சாகும் வரை அவனையே நினைத்துக் கொண்டிருக்கும், முடிவு இல்லாத பழைய நெறிகளை பின் பற்றி அதில் நிலைத்து நிற்கும் அடியவர்களுக்கான கதியான திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் மாயோனை கண்ணில் நீர் மல்க நின்று காணும் நாள் எதுவோ"


என்று உருகுகிறார்.


பாடல் 


மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்


துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான


அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_70.html


(click the above link to continue reading)


மறந்திகழு  = மறம் + திகழும் = எப்போதும் சண்டை சச்சரவு என்றே அலைந்து கொண்டிருக்கும் 


மனமொழித்து = மனதை ஒழித்து. அதாவது, அந்த எண்ணங்களை ஒழித்து 


வஞ்ச மாற்றி  = வஞ்சக எண்ணங்களை மாற்றி 


ஐம்புலன்க ளடக்கி = ஐந்து புலன்களை அடக்கி 


இடர்ப் பாரத் துன்பம் = பெரிய பாரமான துன்பம். அதாவது பழைய வினைகள். 


துறந்து  = அறுத்து 


இருமுப் பொழுதேத்தி = இருமும் பொழுதில் போற்றி. அதாவது, இறக்கும் தருவாயில் போற்றி 


 எல்லை யில்லாத் = முடிவு இல்லாத. இங்கே, ஆரம்பம் இல்லாத 


தொன்னெறிக்கண் = தொன்மையான நெறியின் கண் 


நிலைநின்ற = நிலைத்து நின்ற, அதாவது, அதை இடைவிடாமல் கடை பிடித்து 


தொண்ட ரான = தொண்டர்களான 


அறம்திகழும் = அறம் எப்போதும் மனதில் இருக்கும் 


மனத்தவர்தம் = மனதை உடையவர்களுடைய 


கதியைப் = கதியை, வழியை, செல்லும் பாதையை 


பொன்னி = பொன்னி நதி 


அணியரங்கத் தரவணையில் = அணி செய்யும் பாம்பணையில் 


பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும் 


நிறம்திகழும் = கரிய நிறத்தோடு திகழும் 


மாயோனைக் = மாயோனை 


கண்டென் = கண்டு என் 


கண்கள் = கண்கள் 


நீர்மல்க = நீர் நிறைந்து நிற்க 


என்றுகொலோ நிற்கும் நாளே = எப்போது அப்படி நிற்கப் போகிறேன் 



"இருமுப் பொழுதேத்தி" அது என்ன இருமும் பொழுது போற்றி. அப்படி என்றால் மற்ற நேரங்களில் போற்றக் கூடாதா? சாகும் போதுதான் போற்ற வேண்டுமா?


எப்போதும் போற்றிக் கொண்டே இருந்தால் தான், சாகும் தருவாயில் அது வரும். 


"சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே." என்பார் அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் 


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி

காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்

சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.



புலவர் கீரன் இது பற்றி ஒரு நகைச்சுவை கதை ஒன்று சொல்லக் கேட்டு இருக்கிறேன். 


சாகும் போது எதை நினைத்துக் கொண்டே சாகிறோமா, அதை நாம் மறு பிறவியில் அடைவோம் என்பது நம்பிக்கை. அப்படி என்றால், பெரும் பணக்காரனாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இறந்தால், மறு பிறவியில் பெரும் பணக்காரனாகி விடலாமே என்றால், சாகும் போது அந்த நினைப்பு வர வேண்டுமே? அந்த நேரத்தில் தொண்டை அடைக்கும், மல சலம் துடைக்காமல் உறுத்திக் கொண்டு இருக்கும். இருமி இருமி நெஞ்சு வலிக்கும். பணம் எங்கே நினைவு வரும்?


கீரன் சொல்வார்,


ஒரு கிழவி சாகக் கிடந்தாளாம்.  அருகில் இருந்தவர்கள் எல்லோரும், "கிழவி நல்லதா நாலு வார்த்தை சொல்லு " என்று சொல்லிக் கொண்டு இருந்தார்களாம். 


அந்தக் கிழவியும், மிக முயற்சி செய்து "மு" என்று சொன்னாளாம். 


உடன் இருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ந்து, "ம்ம்...மேல சொல்லு மேல சொல்லு" என்றார்களாம். 


கிழவியும் "முரு" என்று இரண்டு எழுத்தை சொன்னாளாம். எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. ஆஹா முருகன் பெயரைச் சொல்லப் போகிறாள். அவளுக்கு முக்தி தான் என்று நினைத்து, "ம்ம்...மேல சொல்லு மேல சொல்லு " என்றார்களாம்...


கிழவியும், தன் சக்தியெல்லாம் கூட்டி "முருக முருக இரண்டு தோசை கொண்டு வாருங்கள் என்றாளாம்" 


அவளுடைய பசி அவளுக்குத் தான் தெரியும். 


மீண்டும் பாசுரத்துக்கு வருவோம். 


இறைவனை அடைய வழி சொல்கிறார் ஆழ்வார். ஏதோ பாசுரம் படித்தோம், இரசித்தோம், என்று இருக்காமல், அவை என்ன என்று சிந்திப்போம். முடிந்தவரை அவற்றை செயல் படுத்த முனைவோம். 


முதலாவது, மனதில் உள்ள "மற" எண்ணங்களை மாற்ற வேண்டும். துவேஷம்,  போட்டி, பொறாமை போன்றவை. 


இரண்டாவது, வஞ்சக எண்ணங்களை போக்க வேண்டும். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் வஞ்சக மனதை விட்டு ஒழிக்க வேண்டும். 


மூன்றாவது, ஐந்து புலன்களை அடக்க வேண்டும். 


நான்காவது, எப்போதும் இறை நாமத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். 


ஐந்தாவது, வேத நெறிகளில் நின்று ஒழுக வேண்டும். 


ஆறாவது, மனதில் அறச் சிந்தனைகள் நிறைந்து இருக்க வேண்டும். 


இதில் ஆழ்வார் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறார். இது வரை கேள்விப் பட்டிராத ஒன்று. வியாக்கியானங்களை புரட்டிப் பார்த்தேன், தெளிவாகவில்லை. 


அன்பர்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன். 


"அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப்"


கதி என்றால் வழி.  அதோகதி, பிரகதி என்று சொல்கிறோம் அல்லவா.  இங்கே கதி என்றால் விதி என்றும் கொள்ளலாம். 


இறைவன் என்பவன் சென்று அடையும் ஒரு இடமோ, பொருளோ, ஆளோ அல்ல. அவன் தான் வாழ்கை நெறி  என்கிறார். இங்கே "அவன் தான்" என்று சொல்லே சரி இல்லை. 


ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம்.  இப்போதைக்கு விடை கிடைக்கவில்லை.  என்றேனும் கிடைக்கலாம்.



  திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை 


வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் முதல் குறளில் மழையை அமுதம் என்று கூறினார். 


அடுத்த குறள். 


சரியான tongue twister 


பாடல் 


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை


 பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_20.html

(please click the above link to continue reading)


துப்பார்க்கு = துய்ப்பவர்களுக்கு, அதாவது அனுபவிப்பவர்களுக்கு.

துப்பாய = வலிமை, சத்து ஆகி. 

துப்பாக்கி = துப்பாக்கி என்றால் ஏதோ சுடுவதற்கு பயன்படும் AK 47 போன்ற பொருள் அல்ல. துப்பு + ஆக்கி. துய்க்கக் கூடிய உணவாகி 

துப்பார்க்கு = மீண்டும் துப்பார்க்கு என்கிறார். அதாவது, துய்ப்பவர்களுக்கு 

துப்பாய தூஉம் = துய்க்கும் படியாக இருப்பதும் 

மழை = மழை 

ஒண்ணும் புரியலைல?

ரொம்ப எளிமையானது. 


அதாவது, மழை உணவை உண்டாக்கவும் பயன்படுகிறது, உணவாகவும் இருக்கிறது. 


எப்படி என்று பார்ப்போம். 


அரிசி, கோதுமை, காய் கறிகள், கனிகள் எல்லாம் வளர வேண்டும் என்றால், மழை வேண்டும். 


மழை இல்லாவிட்டால் என்ன, நாங்க நிலத்தடி நீரை பயன் படுத்தி விவசாயம் செய்வோமே  என்று நினைக்கலாம். 


செய்யலாம். ஆனால், ரொம்ப நாளைக்கு செய்ய முடியாது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய் கொண்டே இருக்கும்.  நாளடைவில் தீர்ந்து போகும். 


பயிர் இல்லாவிட்டால் என்ன, நாங்கள் அசைவ உணவு சாப்பிட்டுக் கொள்வோம் என்று நினைக்கலாம்.  அசைவ உணவு வேண்டும் என்றால் அதற்கு வேண்டிய விலங்குகள் உயிர் வாழ வேண்டும். அவை உயிர் வாழ காய் கறிகள், நெல், புல் எல்லாம் வேண்டும். மழை இல்லாவிட்டால், அந்த விலங்குகளும்  இறந்து போகும். 


நமக்கு உணவு வேண்டும் என்றால், உணவை செய்ய வேண்டும் என்றால் மழை வேண்டும். 


ஒரு கவளம் உணவை கையில் எடுக்கும் போது, எங்கோ, எப்போதோ பெய்த மழை  நினைவு வர வேண்டும். 


உண்பவர்களுக்கு உணவை உண்டாக்க பயன் படுகிறது. 


துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி.


உண்பவர்களுக்கு வலிமை தரும் உணவாக்கி. 


அடுத்தது, மழை உணவை உண்டாக்க மட்டும் அல்ல, தானே உணவாகவும் இருக்கிறது. 


அது எப்படி?


என்னதான் உயர்ந்த உணவாக இருந்தாலும், தண்ணி இல்லாமல் விருந்தை உண்ண முடியுமா?  


உடம்புக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் நீரும் முக்கியம். ரொம்ப தாகம் எடுக்கும் போது, இரண்டு இட்லி கொஞ்சம் கட்டி சட்னி வைத்து சாப்பிட்டால்  தாகம் அடங்குமா?


என்ன உணவு உண்டாலும், எவ்வளவு சிறப்பான, வலிமை மிக்க உணவு உண்டாலும், நீரும் வேண்டும். 


நீரும் ஒரு உணவு போன்றது.


நமது நாக்கு எப்போதும் ஈரமாக இருக்கும். நாக்கில் நீர் இல்லை என்றால் உணவை உண்ண முடியாது. சுவை தெரியாது.உமிழ் நீர் சுரக்காது. உணவு தொண்டை வழியே   உள்ளே போகாது. 


உணவை உண்ண , உண்ட உணவை ஜீரணம் செய்ய நீர் வேண்டும். 


இவை அன்றி, நீர் உணவாகவும் இருக்கும். 


துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை


துய்ப்பவர்களுக்கு உணவு ஆவதும் மழை. 


துய்ப்பவர்களுக்கு உணவை உண்டாக்குவது, உணவாகவே இருப்பதும் , எல்லாம் மழை. 


உணவு இல்லாமல் ஒரு வாரம் கூட இருந்து விடலாம். நீர் இல்லாமல் இருக்க முடியுமா? 


துப்பார்க்கு, துப்பு ஆய துப்பு ஆக்கி 


துப்பார்க்கு, துப்பு ஆவதும் மழை. 


என்று வாசித்தால் எளிதாக புரியும். 


துப்பார்க்கு என்று உயர் திணையில் கூறினாலும் அது சிறப்பு கருதி கூறப் பட்டது. அது மற்றைய விலங்குகள், பறவைகள், தாவரங்களுக்கும் பொருந்தும் என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர். 


நல்லா இருக்குல ?






Monday, April 19, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ வாழ்த்தும் நாளே !

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என்று கொலோ வாழ்த்தும் நாளே !


Rembrandt போன்ற மேலை நாட்டு ஓவியர்கள் ஆகட்டும், இரவி வர்மா போன்ற இந்திய ஓவியர்கள் ஆகட்டும், அவர்களின் ஓவியங்கள் தத்ரூபமாக இருக்கும். படகு கவிழ்வது போன்ற ஒரு  Rembrandt வரைந்த படம் ஒன்று இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால், ஏதோ நாம் அந்த படகில் இருப்பது போல இருக்கும். 


அதை எல்லாம் விட குலசேகர ஆழ்வார் பாடிய பாசுரம் இருக்கிறது. படித்துப் பாருங்கள். அதன் பிரமாண்டம், மெய் சிலிர்க்கும் வர்ணனை தெரியும். பாடிய பின் குலசேகர ஆழ்வாரே சொல்கிறார், இது எனக்கே மயக்கம் தருகிறது. தூணை கொஞ்சம் பிடித்துக் கொள்கிறேன் என்கிறார். 


கம்பன், நரசிம்மத்தை காட்டிய மாதிரி ஒரு மெய் சிலிர்க்கும் அனுபவம். 


பாடல் 

 வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ


வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்


காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!


நேரடியாக படித்தால் புரியாது. அந்தக் காலத்து தமிழ். 


முதலில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று பார்ப்போம். அப்புறம், சொல்லுக்குச் சொல் அர்த்தம் பார்ப்போம். 


"ஒரு இருண்ட கர்ப்ப கிரகம். ஓரத்தில் ஒரு சின்ன விளக்கு எரிந்து கொண்டு இருக்கிறது. வெளியில் இருந்து வந்த நம் கண்கள் சற்று சிரமப் படுகின்றன என்ன இருக்கிறது என்று அறிந்து கொள்ள. கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இருப்பது தெரிய வருகிறது. 


ஒரு பெரிய பாம்பு. ஆயிரம் தலை. அதன் வாயில் இருந்து நெருப்பு பறக்கிறது. சில வாய்கள் மந்திரம் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. அந்த நெருப்பு பொறி பட்டுத் தெறித்து கீழே விழுகிறது. அது ஏதோ சிவந்த மலர் கொண்டு அர்சிப்பதைப் போல இருக்கிறது.  


நெளியும் தலைகள். நெருப்பு உமிழும் வாய்கள். மந்திரம் சொல்லும் வாய்கள். அந்த மந்திர உச்சாடன சப்த்தம் நம்மை வேறு ஒரு உலகுக்கு கொண்டு செல்கிறது. 


கீழே, இதைப் பற்றி ஒரு கவலையும் இல்லாமல் கண் மூடி மோன தவம் இருக்கும் ஒரு உருவம். 


பார்க்கவே ஏதோ பெரிய அமானுஷ்யமான , பயம் தரும் தோற்றம். பார்த்துக் கொண்டிருந்த குலசேகர ஆழ்வாருக்கு உலகமே சுத்துவது போல இருக்கிறது.  எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்று அருகில் உள்ள தூணை பற்றிக் கொள்கிறார். 


அந்த உருவத்தின் மேல் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை. அப்படி ஒரு வசீகரம். பயம் கலந்த வசீகரம். 


இப்படி ஒரு நிலையில், அந்த தரிசனத்தை வாயார வாழ்த்தும் நாள் எந்த நாளோ என்று ஏங்குகிறார். 


இப்போது அர்த்தத்தை பார்ப்போம் 


பாடல் 

 வாயோரீ ரைஞ்ஞூறு துதங்க ளார்ந்த வளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ


வீயாத மலர்ச்சென்னி விதான மேபோல் மேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்


காயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக் கடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்


மாயோனை மணத்தூணே பற்றி நின்றென் வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_19.html


(click the above link to continue reading)

 

வாயோரீ ரைஞ்ஞூறு  = வாயோ + ஈரைந்து நூறு = அதாவது 500 x 2 = 1000 வாய். 


துதங்க ளார்ந்த = துதம் என்றால் ஸ்தோத்திரம். மந்திரங்கள் ஆர்பரிக்க 


வளையுடம்பி னழல்நாகம் = வளை + உடம்பின் + அழல் + நாகம் = வெளுத்த உடம்பைக் கொண்ட அனல் கக்கும் நாகம் 


உமிழ்ந்த செந்தீ = வாயில் இருந்து புறப்பட்ட சிவந்த நெருப்பு 


வீயாத மலர்ச்  = அழிவில்லாத, வாடாத மலர் 


சென்னி = தலை மேல் உள்ள 

விதான மேபோல் = கூரை போல.  அதாவது, அந்த ஆயிரம் தலைகளும் கூரை போல இருக்கிறதாம். 


மேன்மேலும் = மேலும் மேலும் 


மிகவெங்கும் = எல்லா இடத்திலும் 


பரந்த தன்கீழ் = விரிந்து, பரந்து இருக்க 



காயாம்பூ = காயம் பூ 


மலர்ப்பிறங்கல்  = மலரால் செய்த மாலை 


அன்ன = போல 


 மாலைக் = பெருமை மிக்க 


கடியரங்கத் தரவணையில் = கடி அரங்கத்து அரவவனையில் = காவலை உடைய திருவரங்கத்தில் நாக சயனத்தில்  


பள்ளி கொள்ளும் = பள்ளி கொண்டிருக்கும்



மாயோனை = மாயோனை 


மணத்தூணே பற்றி = மணத் தூணே பற்றி 


நின்றென் வாயார = நின்று என் வாயார 


என்றுகொலோ = என்று 


வாழ்த்தும் நாளே! = வாழ்த்தும் நாளே 


(குறிப்பு: மணத் தூண் பற்றி வைணவ பெரியவர்கள் பல வியாக்யானங்கள் எழுதி இருக்கிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் அவற்றை கண்டு தெளிக). 


கண் மூடி அந்த காட்சியை ஒரு முறை மனதில் ஓட விட்டுப் பாருங்கள். 


ஆழ்வார் எந்த அளவுக்கு பெருமாளை அனுபவித்து இருக்கிறார் என்று தெரியும்.