Wednesday, April 29, 2015

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை


அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

"டீ , நாளைக்கு காலைல நாம எல்லாம் கோவிலுக்குப் போவோமா "

தோழிகள்: அம்மாடி, நம்மால முடியாதுடி...மார்கழி குளிரு...எலும்பு வர எட்டி பாஞ்சு கடிக்கும்...நம்மால எழுந்திருக்க முடியாதுடி ..நீ வேண்ணா போயிட்டு வா தாயி...

அவள்: சரி, உங்களுக்கு என்ன பிரச்சனை...காலைல எழுந்திருக்கிறது தான...கவலைய விடுங்கடி...நான் வந்து உங்க எல்லாரையும் எழுப்புறேன்...போதுமா

என்று சொன்னவள் தூங்கிப் போனாள் ....அவளுடைய தோழிகள் எல்லோரும் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அவளை எழுப்ப.

தோழிகள்: எங்கள வந்து எழுப்புறேன்னு சொல்லிட்டு, இங்க நல்லா தூங்குறதப் பாரு....எந்திரிடி

அவள்: சரிடி...ஏதோ தூங்கிட்டேன்...ரொம்பத்தான் ரேக்குரீங்களே ...கோவிச்சுகாதடி ...இதோ இப்போ வந்துர்றேன் என்று  குளியல் அறை நோக்கி ஓடினாள் ...

தோழிகள்: ஆமண்டி...உன் பேச்ச கேட்டு வந்தோம் பாரு...எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....


பாடல்

`முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, "என்
அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
`பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
`எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
`சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
`இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!



பொருள்

`முத்து அன்ன = முத்தைப் போன்ற

வெள் = வெண்மையான

நகையாய்! = புன்முறுவலைக் கொண்டவளே

முன் வந்து, = எங்கள் முன்னாள் வந்து

எதிர் எழுந்து, = எங்களுக்கு முன்னால் எழுந்து

"என் அத்தன் = என் தந்தை

ஆனந்தன் = என்  ஆனந்தம் ஆனவன்

அமுதன் = எனக்கு அமுதம் போன்றவன்

என்று = என்று

அள்ளூறித் = வாயில் எச்சில் ஊறி

தித்திக்கப் பேசுவாய் = இனிக்க இனிக்கப் பேசுவாய்

வந்து உன் கடை திறவாய் = வந்து உன் வாசல் கதவை திற

`பத்து உடையீர்! = இறைவன் மேல் பற்று உடையீர்

ஈசன் பழ அடியீர்! = ஈசனுக்கு ரொம்ப நாளாகவே அடியவர்களாக இருப்பவர்களே

பாங்கு உடையீர்! = நல்ல குணம் நலம் உள்ளவர்களே

புத்து அடியோம் = நான் புதிதாக வந்த அடியவள்

புன்மை தீர்த்து = என்னுடைய குறைகளை பொறுத்து

ஆட்கொண்டால், பொல்லாதோ? = என்னையும்  உங்களோடு சேர்த்துக் கொண்டால் பொல்லாதோ

`எத்தோ நின் அன்புடைமை? = "ஆஹா !, என்ன  உன்னுடைய அன்பு"

எல்லோம் அறியோமோ?' = எங்களுக்கு எல்லாம் தெரியும்டி

`சித்தம் அழகியார் , = நல்ல சிந்தனை உள்ளவர்கள்

 பாடாரோ நம் சிவனை?' = நம் சிவனைப் பாடுவார்கள்

`இத்தனையும் வேண்டும் = இத்தனயும் வேண்டும்

எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்! = எங்களுக்கு, என் பாவையே

மிக மிக இனிய பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் சிந்திப்போம்.



Sunday, April 26, 2015

வில்லி பாரதம் - கோபமும் தவமே

வில்லி பாரதம் - கோபமும் தவமே 


தவம் என்பது தன்னை மறந்து ஒன்றில் ஒன்றுவது.

யோகம் என்பது இணைவது. சேர்ப்பது.

நாம் பிரிந்து , சிதைந்து கிடக்கிறோம்.

மனம் ஆயிரம் துண்டுகளாய் சிதறிக் கிடக்கிறது. அது வேண்டும், இது வேண்டும், அது சரியில்லை, இது முடியாது, அதை செய்யலாம் ஆனால் உலகம் ஒத்துக் கொள்ளுமா என்று மனம் ஆயிரம் துண்டுகளாய் இருக்கிறது.

மனமும் உடலும் பிரிந்து கிடக்கிறது.

மனதில் நினைப்பதை எல்லாம் சொல்ல முடிகிறதா ? செய்ய முடிகிறதா  ?

மனம் ஒரு புறம் இழுக்கிறது ...உடல் இன்னொரு புறம் இழுக்கிறது ...கிடந்து அலைகிறோம் .

ஒன்றாகச் சேர்ப்பது தவம், யோகம்.

கோபமும் ஒரு விதத்தில் தவம் தான்.

முழுமையாகச் செய்தால் எதுவும் தவம் தான்...

கோபம் உள்ளவன் தன்னை மறக்கிறான்...

கோபம் தணிந்த பின் "நானா அப்படிச் சொன்னேன் ? நானா அப்படி செய்தேன்  " என்று வியந்து கேட்கிறான். அவன் செய்யவில்லை என்றால் யார் செய்தது...

நான் இல்லாத இடம் அது.

கோபம் மட்டும்தான் இருக்கும். தன்னை மறந்த இடம்.

மகாவீரர் , கோபமும் ஒரு வித தியானம் என்று கூறுகிறார்.

கோபம் வரும் போது "இது சரி இல்லை, நான் கோபப் படக் கூடாது" என்று நீங்கள் இடையில் வராதீர்கள்.

கோபம் மட்டுமே  இருக்கட்டும்.

பாரத்தில் துருவாசர் என்று ஒரு முனிவர் இருந்தார். கோபத்திற்கு  .பெயர் போனவர்.

கோபம் வந்தால் உடனே சாபம் தான். அவர் கோபத்திற்கு எல்லோரும்  பயந்தார்கள்.

அவருக்கு கோபமே ஒரு தவம்.

 கோபத்திலும், சாபத்திலும் அவர் தவம்  வளரும்.

ஒரு நாள் அவரை துரியோதனன் சந்தித்து ,  உபசரித்தான். அப்போது அவர் "உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் "

"எனக்கு என்ன வேண்டும்...நீங்கள் இங்கு வந்து என்னை மகிழ்வித்தது போல  பாண்டவர்களையும்  மகிழ்விக்க வேண்டும் " என்று கேட்டான்.

பாண்டவர்கள் துர்வாசரை உபசரிக்க முடியாமல் அவரின் கோபத்திற்கு ஆளானாவர்கள்...துர்வாசர் சபிப்பார் என்பது அவன் எண்ணம்.

துர்வாசர் பாண்டவர்கள் கானகத்தில் இருக்கும் இடத்திற்கு வருகிறார். ....

பாடல்    

சாபத்தாலும், சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும், 
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன், 
தீபத்தால் மெய் வகுத்தனையான், திகழ் பல் முனிவர் புடை சூழ, 
ஆபத்தால் வந்து அடைந்தவர்போல், அடைந்தான், 
                           அந்த அடவியின்வாய்.


பொருள்

சாபத்தாலும் = சாபம் தருவதினாலும்

சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும் = சாபம் தருவதினால் வரும் தவத்தாலும்


கோபத்தாலும் = கோபத்தாலும்

பேர் படைத்த = பெயர் பெற்ற

கொடிய முனிவன் துருவாசன் = முனிவனான துருவாசன்

தீபத்தால் மெய் வகுத்தனையான் =  தீபத்தால் செய்த உடல் போன்றவன். உடல் தீபம் போல ஜொலிக்கும். கோபம் என்ற தீயால் உடல் ஜொலிக்கும். கோபாக்கினி.

திகழ் = புகழ் பெற்ற

பல் முனிவர் புடை சூழ = பல முனிவர்கள் புடை சூழ

ஆபத்தால் வந்து அடைந்தவர்போல் = ஆபத்து வந்தது போல

அடைந்தான் = அடைந்தான்

அந்த அடவியின்வாய் = அந்த காட்டுக்கு (பாண்டவர்கள் இருக்கும் கானகத்திற்கு)

தன்னை மறக்கும் எதுவும் தவம்தான்....

பக்தியாக இருந்தாலும், காதலாக இருந்தாலும், கலவியாக இருந்தாலும்...கோபமாக  இருந்தாலும்.

பாரதத்தில் இப்படி ஆயிரம் இருக்கிறது....நேரமிருப்பின் படித்துப் பாருங்கள்.





Saturday, April 25, 2015

பட்டினத்தார் - கடவுள் நாள்

பட்டினத்தார் - கடவுள் நாள் 


சில வார்த்தைகள் நம்மை அப்படியே திகைக்க வைக்கும். இப்படியும் இருக்குமா என்று ஒரு வார்த்தை நம்மை கட்டிப் போட்டு விடும்...அப்படி ஒரு பிரயோகம் "கடவுள் நாள்".

கடவுள் நாள் என்றால் என்ன ? கடவுளைப் போல உயர்ந்த நாள்...

எந்த நாள் ?

காலம் கடவுள் போன்றது.

மிக உயர்ந்தது. கிடைக்காது. அருமையானது.

அந்தக் காலத்தை எப்படியெல்லாம் வீணாக்குகிறோம் ?

ஏதோ அது நம்மிடம் மிக மிக அதிகமாக இருப்பது போல, அதை அனாவசியமாக செலவு செய்கிறோம்.

மீண்டும் மீண்டும் அதே இட்லி, தோசை, அரிசிச் சோறு, உப்புமா, காபி, டீ என்று சாப்பிடதையே மீண்டும் மீண்டும் சாப்பிட்டு ....

அதே சட்டை, சேலை, சுடிதார் என்று போட்ட உடைகளையே மீண்டும் மீண்டும் போட்டு

திருப்பி திருப்பி அதே பேச்சு, அரட்டை, பொய்கள்...

அதே வீடு, அதே அலுவலகம், அதே பிள்ளைகள், அதே கணவன், மனைவி என்று அவர்களையே திருப்பி திருப்பி பார்த்து, அவர்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் கேட்டு ....

இப்படி நம் வாழ்வில் நடப்பது எல்லாம் மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.

இதில் புதியதாய் என்ன இருக்கிறது...ஏதோ ஒன்றிரண்டு புதியதாய் இருக்கலாம் நாளடைவில் அதுவும் இதே சக்கரத்துக்குள் வந்து விடும்....

சலிப்பு வரவில்லையா ?

எத்தனை நாள் இதையே செய்து கொண்டு இருப்பது ?

எப்போது இதில் சலிப்பு வந்து இதை விடுவது ?

காலம் கடவுள் போன்றது...அதை இப்படி வீணடிக்கலாமா ?


பாடல்

உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்


பொருள்


இத்தனை நாளும் செய்ததையே செய்து, செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து வாழ் நாளை எல்லாம்   வீணாக்கி விட்டேனே என்று வருந்துகிறார் பட்டினத்தார்....

நாம் என்ன செய்தோம் என்று நாமும் யோசிப்போமே....


Monday, April 20, 2015

வில்லி பாரதம் - பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம்

வில்லி பாரதம் -  பார்க்கும் பார்வையில் இருக்கிறது உலகம் 


நாத்திகம் இன்று நேற்று வந்தது அல்ல. மகாபாரத காலத்தில் இருந்தே இருக்கிறது.

அஸ்வமேத யாகம் முடிந்தபின் முதல் மரியாதை யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

எல்லோரும் கண்ணனுக்கே என்று கூறினார்கள் - சிசுபாலனைத் தவிர.

சிசுபாலன் கண்ணனுக்கு முதல் மரியாதை தரக் கூடாது என்று கூறி வாதாடுகிறான்.

ஒரு தாய் போல முலைப் பால் தர வந்த பூதனை என்ற அரக்கியை இரக்கம் இல்லாமல் கொன்றவன் கண்ணன். பால், நெய், வெண்ணை முதலியவைகளை திருடித் தின்றவன் கண்ணன். அதற்காக உரலில் கட்டுண்டு அழுதவன் கண்ணன். அவனுக்கா முதல் மரியாதை என்று வெகுண்டு எழுகிறான்.

பாடல்

'ஈன்ற தாய் வடிவம் கொண்டு, உளம் உருகி, இணை முலைத்
                               தடத்து அணைத்து,அமுதம்
போன்ற பால் கொடுப்ப, பொழி முலைப் பாலோ, பூதனை
                                உயிர்கொலோ, நுகர்ந்தான்?
சான்ற பேர் உரலால் உறிதொறும் எட்டாத் தயிருடன் நறு
                                நெய் பால் அருந்தி,
ஆன்ற தாய் கண்டு வடத்தினின் பிணிப்ப, அணி உரலுடன்
                                இருந்து அழுதான்!


(http://interestingtamilpoems.blogspot.in/2015/04/blog-post_31.html)

பொருள்

'ஈன்ற = பெற்ற

தாய் = தாயின்

வடிவம் கொண்டு = வடிவம் கொண்டு

உளம் உருகி = உள்ளம் உருகி

இணை = இணையான

முலைத் தடத்து அணைத்து = மார்போடு அனைத்து

அமுதம் போன்ற பால் கொடுப்ப = அமுதம் போன்ற பால் கொடுக்க முனைந்த போது

பொழி முலைப் பாலோ = பொழிந்த முலைப் பாலோடு

பூதனை = பூதனை என்ற அரக்கியின்

உயிர்கொலோ, நுகர்ந்தான் = உயிரையும் சேர்த்து உறிஞ்சினான்

சான்ற பேர் உரலால் = பெரிய உரலால்

உறிதொறும் = உறிகள் தோறும்

எட்டாத் தயிருடன் = எட்டாத தயிருடன்

நறு நெய் = நல்ல நெய்

பால்  = பால்

அருந்தி = அருந்தி

ஆன்ற தாய் = சிறந்த தாயான யசோதை

கண்டு = கண்டு வருந்தி

வடத்தினின் பிணிப்ப = கயிறால் கட்ட

அணி உரலுடன் = உரலுடன்

இருந்து அழுதான்! = இருந்து அழுதான்


உலகளந்த பெருமாள் , சிசுபாலன் கண்ணுக்கு, திருடனாகத் தெரிந்தார்.

உலகம் அவரவர் பார்க்கும் பார்வையில் இருக்கிறது.

ஆணவம் தலைக்கு ஏறினால் அருகில் உள்ள ஆண்டவன் கூடத் தெரியாது.


பிரபந்தம் - பாம்போடு வாழ்வது மாதிரி

பிரபந்தம் - பாம்போடு வாழ்வது மாதிரி 


வெளி ஊரில் உள்ள உங்கள் நண்பர் வீட்டுக்குப் போய் இருக்கிறீர்கள். நண்பர் வசதியானவர். நன்றாக உபசரித்து, உங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார். இரவு வருகிறது. உங்களுக்கு என்று ஒரு தனி அறை தந்து "எங்கே படுத்துக் கொள்ளுங்கள்.  A C இருக்கிறது. இங்கே தண்ணி இருக்கிறது..." என்று எல்லாம்  எடுத்து வைத்துவிட்டு போகிறார். நீங்களும் பயணக் களைப்பு, உண்ட மயக்கம் 'அப்பாட' என்று நிம்மதியாக படுக்கிறீர்கள்.

சிறிது நேரத்தில் நண்பர் வந்து "ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்...இராத்திரி ஒரு பத்து பதினொரு மணிக்கு ஒரு ஆறடி நீள கரிய நாகப் பாம்பு ஒண்ணு இந்த ஜன்னல் வழியா வந்து அந்த ஜன்னல் வழியா போயிரும். உங்களை ஒண்ணும் செய்யாது...நீங்க பாட்டுக்கு தூங்குங்க" என்று சொல்லி விட்டுப் போகிறார்.

அப்புறம் தூக்கம் வருமா ? எப்போ பாம்பு வருமோ, என்ன செய்யுமோ என்று நெஞ்சு திக்கு திக்கு என்று அடித்துக் கொள்ளும் அல்லவா ? களைப்பு போயிரும், தூக்கம் போயிரும்....பயம் மட்டுமே இருக்கும்.

அது போல, இந்த வாழ்கை.

எல்லா சுகமும் இருக்கிறது...உணவு, உடை, மனைவி , மக்கள், நண்பர்கள், உறவு, சொத்து சுகம் எல்லாம் இருக்கிறது...புலன் இன்பம் அல்லது ஆசை என்ற பாம்பு அப்பப்ப வந்து போகும்...மத்தபடி ஒரு பிரச்சனையும் இல்லை....

இன்பங்களை அனுபவிக்க முடியுமா ? பாம்போடு வாழ முடியுமா ?

வேண்டாம்ப்பா இந்த பிறவி ...போதும்,  பட்டது எல்லாம் போதும், இனி ஒரு பிறவி  வேண்டாம் என்கிறார்  திருமங்கையாழ்வார்.

பாடல்


தூங்கார் பிறவிக்க ளின்னம் புகப்பெய்து,
வாங்காயென்று சிந்தித்து நானதற் கஞ்சி,
பாம்போ டொருகூ ரையிலே பயின்றாற்போல்,
தாங்காதுள் ளம்தள்ளும் என்தா மரைக்கண்ணா.

பொருள்


தூங்கார் = சஞ்சலம் மிக்க

பிறவிக்க ளின்னம்= பிறவிகளில் இன்னும் 

புகப்பெய்து = நுழைய வைத்து

வாங்காயென்று = என்னை நீ வாங்கிக் கொள்ள மாட்டாய் என்று

சிந்தித்து = நினைத்து

நானதற் கஞ்சி = நான் அதற்கு அஞ்சி

பாம்போடு = பாம்போடு

ஒரு கூ ரையிலே = ஒரே கூரையின் கீழ் (வீட்டில் )

பயின்றாற்போல் = வசித்தார் போல

தாங்காதுள் ளம்தள்ளும்  = என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியாது

என் தாமரைக் கண்ணா.= தாமரை போன்ற கண்களை உடையவனே


தூங்கும்போது பாம்பு வரும் என்று தெரிந்தும் தூங்குபவர்களை  என்ன செய்ய முடியும் ?


Saturday, April 18, 2015

பிரபந்தம் - வா போ வா

பிரபந்தம் - வா போ வா 


வீட்டில் பிள்ளைகள் இருக்கும் போது , அவர்களை அவ்வபோது கூப்பிட்டு ஏதாவது கேட்போம், சொல்வோம். குழந்தைகள், வீட்டின் வெறுமையை போக்குவார்கள். அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். ஏதாவது சத்தம் இருக்கும், அதைக் காணோம், இதைக் காணோம் என்று தேடுவதும், கண்டு பிடித்தபின் மகிழ்வதும் நிகழும்.

அவர்களின் இருப்பின் அருமை எப்போது தெரியும் என்றால் அவர்கள் மேல் படிப்புக்காக, அல்லது திருமணம் முடித்து வீட்டை விட்டு போன பின் தெரியும். வீடு வெறுமையாக இருக்கும்.

அவர்கள் உபயோகப் படுத்திய பொருள்கள், அவர்களின் சத்தம், அவர்களுக்கு பிடித்த உணவு என்று எல்லாம் அவர்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

அவர்கள் வீட்டை விட்டுப் போகப் போகிறார்கள் என்று தெரிந்த பின் அவர்கள் மேல் பாசம் மிக அதிகமாகும். இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கப் போகிறார்கள் என்று ஏக்கமாய் இருக்கும்.

அது மட்டும் அல்ல, அவர்கள் புது இடத்துக்குப் போய் எப்படி சமாளிப்பார்களோ, உணவு எப்படி இருக்குமோ, அங்குள்ள மக்கள் எப்படி இருப்பார்களோ , என்றெலாம் நம் பிள்ளைகளைப் பற்றிப் கவலைப் படுவோம் அல்லவா ?


இராமன் கானகம் போகப் போகிறான். தசரதனுக்கு துக்கம் தாங்க முடியவில்லை.

இராமன் மாளிகையில்  இருக்கும் போது ஒரு நிமிடம் கூட அவனை பார்க்காமல் இருக்க முடியாது  தசரதனுக்கு.  உடனே அவனை "வா" என்று கூப்பிடுவான். இராமன் வந்து "என்ன " என்று கேட்டால் "ஒண்ணும் இல்லை, சும்மாதான் கூப்பிட்டேன், சரி நீ போ " என்பான். இராமன் போக ஆரம்பித்து கொஞ்ச தூரம் போன பின் "ஒரு நிமிஷம், இங்க வந்துட்டுப் போ " என்பான் . இராமனை பார்க்காமல் தசரதானால் ஒரு நிமிடம் இருக்க முடியாது.



புலம்புகிறான் ....


வாபோகு வாஇன்னம் வந்தொருகால் கண்டுபோ மலராள் கூந்தல்

வேய்போலு மெழில்தோளி தன்பொருட்டா விடையோன்றன் வில்லைச் செற்றாய்

மாபோகு நெடுங்கானம் வல்வினையேன் மனமுருக்கும் மகனே இன்று

நீபோக என்னெஞ்ச மிருபிளவாய்ப் போகாதே நிற்கு மாறே

பொருள்

வா = இராமா, நீ இங்கே வா என்பேன்

போகு = ஒண்ணும் இல்லை போ என்பேன்

வாஇன்னம் = இன்னொரு தரம் வா

வந்தொருகால் கண்டுபோ = ஒரு நிமிஷம் வந்து என்னை பாதுவிட்டுப் போ என்பேன்

மலராள் கூந்தல் = மலர் உள்ள கூந்தலைக் கொண்ட

வேய்போலு = மூங்கில் போல

மெழில் = அழகான

தோளி = தோள்களைக் கொண்ட (சீதையின் )

தன்பொருட்டா = அவளுக்காக

விடையோன்றன் = (விடை = எருது ) எருதின் மேல் ஏறியவனின் (சிவனின்)

வில்லைச் செற்றாய் = வில்லை முறித்தாய்

மாபோகு = யானைகள் அலையும்

நெடுங்கானம் = பெரிய வனம்

வல்வினையேன் = கொடிய வினை உடைய

மனமுருக்கும்  = மனத்தை உருக்கும்

மகனே = மகனே

இன்று = இன்று

நீபோக = நீ போக

என்னெஞ்ச = ஏன் நெஞ்சம்

இரு பிளவாய்ப் = இரண்டு பிளவாகப்

போகாதே = போகாமல்

நிற்கு மாறே = நிற்கின்றேனே



Friday, April 17, 2015

திருக்குறள் - நினைக்கப்படும்

திருக்குறள் - நினைக்கப்படும் 


நல்லவன் எல்லாம் துன்பப் படுகிறான்.

தீமை செய்பவன் நன்றாக சுகமாக இருக்கிறான்.

இதுதான் நாம் வாழ்வில் அன்றாடம் காண்பது.

சட்டத்தை மதிப்பவன், சமுதாயத்திற்கு பயப்படுபவன், நீதி நேர்மையை மதிப்பவன் துன்பத்தில் உழல்கிறான்.

பொய், புரட்டு, இலஞ்சம், இலாவண்யம், கொலை, கொள்ளை, திருட்டு என்று இருப்பவன் பெரிய பணக்காரனாக, பேரும் பெகுழுமாக இருக்கிறான்.

இப்படி இருந்தால் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று யாருக்குத் தோன்றும் ?

அறம் என்று ஒன்று இல்லையா ? இது எப்படி என்று வள்ளுவரிடம் கேட்டால் , இது நினைக்கப்படும் என்கிறார்.

பாடல்

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்.

பொருள்

அவ்விய நெஞ்சத்தான் = கோட்டம் உள்ள மனம் கொண்டவனின்

ஆக்கமும் = செல்வமும், புகழும், பெருமையும்

செவ்வியான் = நேரிய வழியில் வாழ்பவனது


கேடும் = துன்பமான வாழ்கையும்

நினைக்கப் படும் = யோசிக்கப் பட வேண்டிய விஷயம்.


கேள்வி கேட்டால், நீயே யோசித்துக் கொள் என்கிறார் வள்ளுவர்.

காரணம் இல்லாமல் இல்லை.

நாம் யோசிப்போம்.

முதலில் இரண்டு மாணவர்களை எடுத்துக் கொள்வோம்.

ஒருவன் நல்லவன். மற்றவன் கெட்டவன் .

நல்ல மாணவன், தினமும் ஒழுங்காக படிப்பான், அனைத்து வகுப்புகளுக்கும் சென்று ஆசிரியர் சொல்வதை கவனமாக கேட்பான், அவர் சொல்வதை குறிப்பு எடுத்துக்  கொள்வான். வீட்டில் வந்து அவர் சொன்னதை படித்துப் பார்ப்பான். கடினமாக உழைப்பான். பரிட்சையில் ஒழுங்காக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெறுகிறான்.


மற்றவன், படிப்பது இல்லை, பாதி நாள் பள்ளிக்கு வருவது இல்லை, ஆசிரியர் சொல்லவதை கேட்பது இல்லை. பரிட்சையில் காப்பி அடித்து, பிட் வைத்து எழுதி பாஸ் பண்ணி அவன் நல்ல மாணவனை விட அதிகம் மதிப்பெண் பெற்று விடுகிறான்.


இப்போது யோசித்துப் பாருங்கள்.

கெட்டவனின் அதிக மதிப்பெண்களா, நல்ல மாணவனின் குறைந்த மதிப்பெண்களா  எது உயர்ந்தது ?

இருந்தாலும், நல்ல மாணவனுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காதே, நல்ல வேலை  கிடைக்காதே என்று நீங்கள் நினைக்கலாம்.

கெட்ட மாணவன், கல்லூரியிலும் இதையே தான் செய்வான். அப்படியே கல்லூரியில் வெற்றி பெற்று விட்டால் கூட , வேலை கிடைத்தால் கூட, செய்யும்  வேலைகளை தப்பும் தவறுமாக செய்து என்றோ ஒரு நாள் தனக்கும் , தான் வேலை செய்யும் நிறுவனத்திற்கும் கேட்டினையே தேடித் தருவான். அதில்  சந்தேகமே இல்லை. வேலை தெரியாமல் இருந்து கொண்டு அந்த வேலையை தக்க வைத்துக் கொள்ள படாத பாடு படுவான். செய்ய கூடாதனவற்றை எல்லாம் செய்வான். அவனுக்கு கீழேவேலை பார்ப்பவன் அவனை மதிக்க மாட்டான், அவனை ஏமாற்றுவான், அவனை பயமுறுத்துவான். நாளும் செத்து செத்து பிழைக்க வேண்டும்.

நினைத்துப் பாருங்கள்,  அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம் சிறந்ததா ? அப்படி ஒரு  வாழ்கை உங்களுக்கு வேண்டுமா ?

ஊரை ஏமாற்றி வாழ்பவன் சிறப்பாக இருக்கிறானே என்று நாம் நினைக்கலாம் ?

அவன் சிறப்பு என்ன என்று அவனுக்குத் தெரியும். என்றோ ஒரு நாள் சிறை செல்ல வேண்டி  இருக்கும் என்று அவனுக்குத் தெரியும். மரியாதை இழக்க வேண்டி வரும்.  மனைவியின் முன், பெற்ற பிள்ளைகளின் முன் தலை குனிந்து நிற்க வேண்டும் என்று நாளும் அவன் மனதுக்குள் புளுங்குவான். நிம்மதி  இருக்காது.

கெட்டவன் பெற்ற செல்வம் எப்படி வந்தது ? பல கெட்டவர்களின் கூட்டால் வந்தது. கெட்டவர்களின் சகவாசம் எங்கே கொண்டு போய் விடுமோ என்று அவன்  நாளும் நடுங்கிக் கொண்டிருப்பான். நம்மைப் போலத்தானே அவனும் ஒரு அயோக்கியன். நாளை என்னை காட்டி கொடுத்து விட்டால் என்ன செய்வது  என்று யாரைப் பார்த்தாலும் பயப் படுவான். நாளும் பயந்து பயந்து வாழ்வான்.

கெட்ட வழியில் பணம் சேர்த்தவன் எல்லோருக்கும் பயப்படவேண்டும்..

அதுமட்டும் அல்ல, எப்போ இந்த செல்வம் போகுமோ என்று மனதுக்குள் வருந்திக் கொண்டு  இருப்பான்.  இருக்கும் போதே அனுபவித்து விடுவோம் என்று  என்னென்ன தீய வழிகள் இருக்கிறதோ அத்தனையும் முயல்வான். அது அவனை மேலும் தீய வழியில் செலுத்தும்.

அது மட்டும் அல்ல, தீய வழியில் வந்த செல்வம் போகும்போது, அது நல்ல வழியில்  சேர்த்த கொஞ்ச நஞ்ச செல்வத்தையும் சேர்த்து கொண்டு போகும்.

கெட்ட வழியில் வந்த செல்வத்தை பாதுகாக்க மேலும் பல கெட்ட வழிகளில் செல்ல  வேண்டி இருக்கும். பணத்தை பதுக்க வேண்டும், மற்றவன் பேரில் சொத்து  வாங்க வேண்டி வரும், அவன் ஏமாற்றி விடாமல் இருக்க அவனை தாஜா செய்ய வேண்டும், மீறினால் அவனை கொலையும் செய்ய வேண்டும், எங்கே இந்த  கெட்டவன் தன்னை கொலை செய்து விடுவானோ என்று மற்றவன்  கெட்டவனை கொலை செய்ய வழி தேடிக் கொண்டிருப்பான்.

தூக்கம் போகும்.

நிம்மதி போகும்.

மானம் மரியாதை போகும்.

யாரைப் பார்த்தாலும் பயமாக இருக்கும்.

மாறாக, நல்லவன் சேர்த்த சொத்து கொஞ்சமாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழ  முடியும். நிம்மதியாக இருக்க முடியும். மரியாதையுடன் வாழ முடியும்.

நினைத்துப் பாருங்கள் - செவியான் கேடு உண்மையிலேயே கேடா ?

ஆழ்ந்த அர்த்தங்களை கொண்ட குறள் இது. இது பற்றி மேலும் சிந்திப்போம்.



Thursday, April 16, 2015

பிரபந்தம் - நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா ?

பிரபந்தம் - நீ என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா ?



கவிதைகளைப்  படிக்க, அது எழுதப் பட்ட மொழி மட்டும் தெரிந்தால் போதாது. கவிதைக்குப் பின்னால் இருக்கும் கவியின் மனநிலை புரியவேண்டும். அதை உணர வேண்டும்.

தமிழில் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் திருவாசகம் படிக்கும் போது இந்த எண்ணம் மீண்டும் மீண்டும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.

எவ்வளவு ஆழமான நம்பிக்கை, குழைந்த மனம், பொங்கி பொங்கி வரும் சந்தோஷம், உருகும் பக்தி என்று அனைத்தையும் காணலாம்....காணும் மனம் இருந்தால்.

நாம் இறைவனை  வணங்குகிறோம்.சில பல பாடல்களை அவன் முன்னால் பாடுகிறோம். முடிந்த நாட்களில் கோவிலுக்குப் போகிறோம். மற்ற நேரம் எல்லாம், தினசரி வாழ்கை பிரச்சனைகளில் கிடந்து உழல்கிறோம். பிரச்னை மட்டும் இல்லை, வாழ்கை தரும் சந்தோஷங்களையும் அனுபவிக்கிறோம்  ....அப்பப்ப திரைப் படம் , டிவி , நல்ல தின்பண்டங்ள் , கணவன் மனைவியோடு இன்பம் , குழந்தைகளோடு, நண்பர்களோடு, உறவினர்களோடு என்று ஒன்றையும் விடுவது இல்லை.

இது என்ன பக்தி ?

கடவுளையும், வாழ்க்கையையும் போட்டு குழப்பிக் கொண்டிருக்கிறோம்.

நமக்கு இறை அருள் கிடைக்குமா ? நாம் செய்வது உண்மையான பக்தியா ?

கிடைக்கும் என்கிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் சொல்கிறார்...

எனக்கு பக்தி ஒன்றும் இல்லை. உலக பற்று ஒன்றும் விடவில்லை. கண்ணா, உன்னை எப்படி வணங்க வேண்டும் என்று கூடஎனக்குத்  தெரியாது. எல்லோரும் செய்கிறார்களே என்று நானும்  உன்னை புகழ்ந்தேன். என்ன ஆச்சரியம், என் பொய்யான பக்தியைக் கூட உண்மை என்று கொண்டு எனக்கு நீ அருள் புரிந்தாய். உன் அருளைப் பெற்று விட்டேன். இனி மேல் நீ என்னை விட்டு போவதானால் போய் கொள்.  எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால், உன்னால் போக முடியாதே என்று ஆனந்தத்தில் மிதக்கிறார் அவர்.

பாடல்

கையார் சக்கரத்தெங்கருமாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மைசொல்லிப்புறமேபுற மேயாடி,
மெய்யே பெற்றொழிந்தேன், விதிவாய்க்கின்று காப்பாரார்,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே.


சீர் பிரித்த பின்

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி,
மெய்யே பெற்று ஒழிந்தேன் , விதிவாய்கு இன்று காப்பார் யார் ,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே.


பொருள் 

கையார் = கையில்

சக்கரத்து = சக்கரத்தைக் கொண்ட

என் கரு மாணிக்கமே = என் கரு மாணிக்கமே

என்றென்று = என்று என்று

பொய்யே கைம்மை சொல்லிப்  = பொய்யாகச் சொல்லி

புறமே புறமே ஆடி = உலக விஷயங்களில் மூழ்கி  (இருந்தாலும்)

மெய்யே பெற்று ஒழிந்தேன் = உண்மையான உன்னை பெற்றேன்

விதிவாய்கு இன்று காப்பார் யார் = உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும்

ஐயோ = ஐயோ

கண்ணபிரான் = கண்ணபிரான்

அறையோ இனிப் போனாலே = நீ என்னை விட்டுப் போய் விடுவாயா ? (போகமாட்டாய், போக முடியாது )

பொய்யாகவேனும் பக்தி செய்து   பாருங்கள்.நாளடைவில் அதுவே உண்மையாக  மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது. 


Wednesday, April 15, 2015

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?

வில்லி பாரதம் - அவனை யார் அறிவார் ?


இறைவன் யார் ? அவன் எப்படி இருப்பான் ? கருப்பா? சிவப்பா ? உயரமா ? குள்ளமா ? 

நமக்கு ஒன்றும் தெரியாது. சிலைகளும் படங்களும் யாரோ கற்பனையில் செய்தவை. நேரில் பார்த்து வந்து யாரும் அதைச் செய்யவில்லை. 

எனவே, இறைவன் நேரில் வந்தால் கூட நமக்கு அவன் இறைவன் என்று தெரியாது. 

நமக்குத் தெரியாது. தெரிந்தவர்கள் சொன்னாலாவது ஏற்றுக் கொள்வோமா என்றால் அதுவும் சந்தேகம்தான். 

உனக்கு  எப்படித் தெரியும் என்று அவர்களை மேல் கேள்வி கேட்போம்.

அப்படி ஒரு முறை நிகழ்ந்தது. 

இறைவன் நேரில் வந்தான். 

அங்கிருத்த பெரியோர்கள் எல்லாம் அவன் இறைவன் என்றே ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அங்கிருந்த ஒரு சிலர் ஏற்றுக்  கொள்ளவில்லை. அவர்களில் ஒருவன் சிசுபாலன். 

வந்த இறை கண்ணன். 

ஏற்றுக் கொண்ட பெரியவர்கள் பீஷ்மர், துரோணர் போன்றோர்.

நடந்த இடம் தர்மனின் அசுவமேத யாகம் பூர்த்தி அடைந்த மண்டபத்தில், முதல் தாம்பூலம் யாருக்கு தருவது என்ற சிக்கல் எழுந்த போது .

 எல்லோரும் கண்ணனுக்கே முதல் தாம்பூலம் என்று ஏற்றுக் கொண்டார்கள். சிசு பாலனுக்கு பொறுக்கவில்லை. 

அரசர்கள் இருக்கும் அவையில் ஒரு இடையனுக்கு முதல் தாம்பூலமா என்று கொதித்து எழுந்தான். 

பாடல் 

பூபாலர் அவையத்து முற்பூசை பெறுவார், 
                                புறங்கானில் வாழ் 
கோபாலரோ'' என்று உருத்து, அங்கு அதிர்த்து, 
                                கொதித்து, ஓதினான்-
காபாலி முனியாத வெங் காமன் நிகரான கவின் 
                                எய்தி, ஏழ் 
தீ பால் அடங்காத புகழ் வீர கயம் அன்ன சிசுபாலனே.

பொருள் 

பூபாலர் அவையத்து = பூலோகத்தை காக்கும் அரசர்கள் இருக்கும் அவையில் 

முற்பூசை பெறுவார் = முதல் பூசை (தாம்பூலம்) பெறுவது 
 
புறங்கானில் = ஊருக்குப் புறத்தே காட்டில் 

வாழ் = வாழும் 
 
கோபாலரோ'' = மாடு மேய்பவனோ (கோ என்றால் பசு. பாலர் என்றால் காப்பவன்) 

என்று உருத்து = என்று கூறி 

அங்கு அதிர்த்து = அதிரச் சொல்லி 

கொதித்து = உள்ளம் கொதித்து 

ஓதினான் = கூறினான் 

காபாலி = சிவன் 

முனியாத = கோபம் கொள்ளாத 

வெங் காமன் = மன்மதன் 

நிகரான  = நிகரான , சமமான  

கவின் எய்தி =  அழகு கொண்ட  

ஏழ் தீ பால் = ஏழு தீவுகளிலும் 

அடங்காத புகழ் = அடங்காத புகழ் கொண்ட 

வீர = வீரனான 

கயம் அன்ன = யானையைப் போன்ற பலம் பொருந்திய 

சிசுபாலனே = சிசுபாலனே 


அது கதை. 

அழகு, வீரம், புகழ் இருக்கிறது. ஆணவம் தலைக்கு ஏறுகிறது. என்னை விட உயர்ந்தவன்  யார் என்ற எண்ணம் வருகிறது. 

இறைவனே வந்தால் கூட ஆணவம் கண்ணை மறைக்கிறது. 

திருமாலை இடையன்   என்று சொல்லி அழிந்தான் சிசுபாலன். 

திருமாலை மனிதன் என்று சொல்லி அழிந்தான் இராவணன்.

ஆணவம். 

ஆணவம் கண்ணை மறைக்கிறது. அறிவை மயக்குகிறது. அழிவைத் தருகிறது. 

தெளிந்த பார்வை வேண்டுமா ? எங்கேயாவது ஆணவம் இருக்கிறதா என்று பாருங்கள். ஆணவம் இருக்கும்வரை உண்மை தெரியாது. 

இறைவன் அருகில் இருந்தால் கூட உணர முடியாமல் போகும். 

யாருக்குத் தெரியும் ?  இறைவனுக்கு எவ்வளவு அருகில் நீங்கள் இருக்கிறீர்கள்  என்று ?


Tuesday, April 14, 2015

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை

வில்லி பாரதம் - சரி தவறு அறியாத பொறாமை 


கணவனுக்கு சர்க்கரை வியாதி. இனிப்புப் பண்டங்களை சுவைக்க முடியாது. அதற்காக மனைவியும் இனிப்பு சாபிடாமல் இருக்க முடியுமா ? அப்படியே இருந்தாலும் எத்தனை நாள் இருக்க முடியும் ?

வாழ் நாள் பூராவும் இருந்தாள் காந்தாரி.

கணவனுக்கு கண் தெரியாது என்று அறிந்ததும், தன் கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டாள் . கணவனுக்கு கிடைக்காத காட்சி இன்பம் எனக்கும் வேண்டாம் என்று வாழ் நாள் பூராவும் கண்ணைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தாள் . கணவன் மேல் அவ்வளவு அன்பு.

காந்தாரிக்கும் திருதராஷ்டினருக்கும் 100 பிள்ளைகள் பிறந்தார்கள். எப்படி ? வருடத்திற்கு ஒன்று என்றாலும் நூறு வருடம் ஆக வேண்டுமே ?

காந்தாரியும், குந்தியும் ஒரே சமயத்தில் கருவுற்றார்கள். முதலில் குந்திக்கு பிள்ளை பிறந்தது.

இதை அறிந்த காந்தாரி , பொறாமையால், தன் வயிற்றில் கல்லால் இடித்துக் கொண்டாள் . அதனால் அவளின் கர்ப்பம் கலைந்தது. உதிரம் வெளிப்பட்டது. அந்த உதிரத்தை 100 கலன்களில்  சேமித்து வைத்தார்கள். அதனோடு கூட வெளிப்பட்ட திசுக்களையும் தனியாக சேர்த்து வைத்தார்கள். வியாதன் என்பவன்  கை படாமல் அவற்றை வளர்த்து 100 பிள்ளைகளாகச் செய்தான்.

இதைத்தான், பொறாமையில் காரியம் செய்தால் , "காந்தாரி இடித்துக் கொண்டு பிள்ளை பெற்றது போல " என்று சொல்லுவார்கள்.

பாடல்


அற்றனள் துயரம் எல்லாம்; அருந் தவப் பயனால், மைந்தற் 
பெற்றனள், குந்தி' என்னும் பேர் உரை கேட்ட அன்றே, 
உற்றனள் பொறாமை; கல்லால் உதரம் உள் குழம்புமாறு 
செற்றனள், தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள்.


பொருள்

அற்றனள் துயரம் எல்லாம் =துன்பம் எல்லாம் தொலைத்தாள்

அருந் தவப் பயனால் = தான் செய்த பெரிய தவத்தால்

மைந்தற் பெற்றனள், குந்தி' = மைந்தனைப் பெற்றனள் குந்தி

என்னும் பேர் உரை கேட்ட அன்றே = என்ற பெரிய செய்தியைக் கேட்ட உடனே

உற்றனள் பொறாமை = பொறாமை உற்றாள் (காந்தாரி)

கல்லால் = கல்லால்

உதரம் = வயறு

உள் குழம்புமாறு =உள்ளே குழம்புமாறு

செற்றனள் = இடித்துக் கொண்டாள்

 தனது கேடும் ஆக்கமும் சிந்தியாதாள் = தனக்கு நல்லது எது கெட்டது எது என்று சிந்திக்காமல்

.
இதில் உள்ள நுண்ணிய பொருளை சிந்திப்போம்:

பொறாமை - மற்றவர்கள் நன்மை அடைவதைக் கண்டு பொறுத்துக் கொள்ளாமை. 

பொறாமை கொண்டவன் தனக்குத் தானே தீமை தேடிக் கொள்வான். காந்தாரி  கல்லால் தன்  வயிற்றில் அடித்துக் கொண்டாள் குந்திக்கு என்ன தீங்கு வந்து விடும் ?  துன்பம் காந்தாரிக்குத் தான்.  பொறாமை  யாரிடம் இருக்கிறதோ அது அவர்களுக்குத்தான்  தீமை செய்யும். 

இரண்டாவது, பொறாமை கொண்டவர்கள் எது சரி எது தவறு என்று அறியமாட்டார்கள். "ஆக்கமும் கெடும் சிந்தியாதாள் " என்றார் வில்லிபுத்துராழ்வார்.  பொறாமை அறிவை மறைக்கும். 

மூன்றாவது, பொறாமை கொண்டவனுக்கு தீமை விளைவிக்கும். பொறாமையில்  இருந்து விளைவது ஊருக்குத் தீமை விளைவிக்கும். பொறாமையில் பிறந்தவர்கள் கௌரவர்கள். அவர்களால் அரச குலம் முற்றாக  அழிந்தது. 

நான்காவது, பொறாமை கஞ்சத் தனத்தை  தரும்.யாரும் நன்மை அடைந்து விடக் கூடாது  என்று நினைக்கும். எல்லாம் தனக்கே என்று நினைக்கும். 

பாண்டவர்கள் ஐந்து வீடுதான் கேட்டார்கள்.  ஐந்து வீடு கொடுத்து இருந்தால் சண்டையே இல்லை.  ஊசி முனை நிலம் கூட தர மாட்டேன் என்று கூறினான் துரியோதனன். 35,00,000 பேர் மாண்டு போனார்கள்....ஐந்து வீட்டுக்காக. 

பொறாமை தந்த கஞ்சத்தனம். 

எது வந்தாலும் வரலாம், பொறாமை வரவே கூடாது. 

அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்று,
தீயுழி உய்த்துவிடும்.

அழுக்காறு என்றால் பொறாமை. பொறாமை என்ற ஒரு பாவி நம் செல்வத்தை  அழித்து, தீராத துன்பத்தில் நம்மை தள்ளி விடும் என்கிறார்  வள்ளுவர்.

குந்தியின் பெருமை கண்டு பொறாமை கொண்ட காந்தாரியின் செயல் அவளின்  பிள்ளைகளை  கொன்று,அரசை இழந்து, தீராத பழியையும் தேடித் தந்தது. 

ஒரு பாட்டில் இவ்வளவு அர்த்தம் - என் சிற்றறிவுக்கு எட்டிய வரை. இன்னும் எவ்வளவு  அர்த்தங்களோ. இப்படி எத்தனையோ பாடல்களைக் கொண்டது வில்லிப்புத்துராழ்வார் அருளிச் செய்த மகா பாரதத்தில். 

நேரம் இருப்பின்,  மூல நூலை படித்துப் பாருங்கள். 

பருக பருக திகட்டாத தேன்.  


Monday, April 13, 2015

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது

நான் மணிக்கடிகை - ஒழுக்கம் செல்வம் போன்றது 


நிறைய செல்வம் இருந்தால் நமக்கு என்ன என்ன இன்பம் எல்லாம் கிடைக்கும் ?

புகழ், மதிப்பு, இன்பம், துன்பம் இல்லா வாழ்க்கை, பயமற்ற வாழ்க்கை, பெரிவர்களின் தொடர்பு ...இது போன்றவை கிடைக்கும் அல்லவா ?

அது போல, நல்ல ஒழுக்கத்தில் வாழ்ந்தால் இவை எல்லாம் கிடைக்கும். நல்ல ஒழுக்கம் வாழ்வில் முன்னேற்றம் தரும், நல்லவர்களின் தொடர்பைத் தரும், வாழ்கை சுகமாக இருக்கும், யாரைப் பற்றியும் பயம் இருக்காது, அது நம்மை முன்னேற்றி செல்வமும் தரும். எனவே, நல்ல ஒழுக்கம் செல்வத்தைப் போன்றது. செல்வம் இருந்தால் தான் வாழ்க்கை என்று சிலர் ஒழுக்கம் அற்ற வழியில் அதை தேட முயல்கிறார்கள். அது தவறான வழி. ஒழுக்கமான வாழ்வே செல்வம் நிறைந்த வாழ்வை போன்ற திருப்தியும் நிம்மதியும் தரும்.

துறவறம் இனிமையானது. எதிலும் பற்று இல்லாமல் இருப்பது. இதற்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு கானகம் போக வேண்டிய அவசியம் இல்லை. இல்லறத்தில் இருந்து, எதையும் அளவோடு அனுபவித்து வாழ்வது துறவம் போன்றது. எதிலும் நிதானம். எதிலும் ஒரு அளவு. கிடைக்கும் போது அளவோடு அனுபவிப்பது. கிடைக்கவில்லை என்றால் அதற்காக வருந்துவது இல்லை. இது துறவறம் போன்றது ஆகும்.

ஒருவரிடம் நடப்பாக இருக்கும் போது அவர் தன்னைப் பற்றியும், தனக்கு நிகழும் நல்லது கெட்டது பற்றியும் நம்மிடம் சொல்லி இருப்பார். பின், அந்த நட்பு முறிந்து விலக நேரிட்டால், அவர் சொன்ன அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்வது அவரை கொலை செய்வது போன்றது ஆகும்.

நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றி சொல்வது, இழிவான செயலாகும்.

பாடல்

திருவொக்குந் தீதில் ஒழுக்கம் பெரிய
அறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு.

பொருள்


திருவொக்குந் = திரு ஒக்கும். செல்வத்தை போன்றது.

தீதில் ஒழுக்கம் = தீது இல்லாத ஒழுக்கம்

பெரிய அறனொக்கும் = பெரிய அறத்தைப் போன்றது. அது என்ன பெரிய அறம் ? துறவறம் உள்ள அறங்களில் பெரிய அறம்

ஆற்றின் ஒழுகல் = முறையோடு வாழ்தல்.  முறையோடு வாழ்தல் என்பது இல்லறத்தில் இருந்து முறைப் படி வாழ்தல்.

பிறனைக் கொலையொக்குங் = பிறனை + கொலை + ஒக்கும் = பிறனை கொலை செய்வதற்கு ஒப்பாகும்

கொண்டு = முதலில் நட்பு கொண்டு

கண் மாறல்= பின் அது மாறி, நடப்புக்கு எதிரான செயல்களை செய்வது

புலையொக்கும் = இழிவானதாகும்

போற்றாதார் முன்னர்ச் செலவு = நம்மை மதிக்காதவர் முன் சென்று நம்மைப் பற்றிச்  சொல்வது


அது எப்படி ஒழுக்கமாக இருப்பது செல்வத்திற்கு ஒப்பாகும் ? இன்னும் சொல்லப் போனால் ஒழுக்கமாக வாழ்பவன் செல்வம் இல்லாமல் துன்பப் படுவதைப் பார்க்கிறோம். ஒழுக்கம் இல்லாதவன் அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்த்து  சந்தோஷமாக இருப்பது கண்ணெதிரில் தெரிகிறது. அப்படி இருக்கும் போது இதெல்லாம் நம்பும் படி இல்லை. கேட்க வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடை முறைக்கு ஒத்து வராது ...என்று நாம் நினைக்கலாம்.

இது பற்றி நாளை மேலும் சிந்திப்போம்.





Sunday, April 12, 2015

இராமாயணம் - முற்றிய சொல்லின் எல்லையான்

இராமாயணம் - முற்றிய சொல்லின் எல்லையான் 


முன்பெல்லாம் ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்றால், யாருக்கு அது நிகழ்கிறதோ அவருக்கு , பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள்.

திருமணம் என்றால் மாப்பிளைக்கும், பெண்ணுக்கும் அந்த வீட்டில் உள்ள முதியவர்கள் திருமணம், வாழ்க்கை, குழந்தை, சமுதாயப் பொறுப்பு என்பவை பற்றி அறிவுரை, அறவுரை கூறுவார்கள். அது அந்த பையனையும், பெண்ணையும் குடும்ப வாழக்கைக்கு தயார் படுத்தும்.

அதே போல, ஒருவன் முடி சூட்டுகிறான் என்றால் அந்த இராசாவுக்கு மந்திரிகள், சான்றோர் எல்லோரும் அறவுரை சொல்வார்கள்.

சுக்ரீவன் முடி சூட்டப் போகிறான். அவனுக்கு இராமன் அறவுரை சொல்கிறான்.

சுக்ரீவன் குரங்குதான். குரங்குக்குச் சொன்ன அறவுரை என்றாலும் அது நமக்கும் பொருந்தும்தானே.

பாடல்

பொன்மா மௌலி புனைந்து பொய் இலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நல் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்லின் எல்லையான்.

பொருள்

பொன் = பொன்னால் ஆன

மா = சிறந்த

மௌலி = மகுடம்

புனைந்து = அணிந்து

பொய் இலான் = பொய் இல்லாத (இராமனின்)

தன் மானக் கழல் தாழும் வேலையில் = சிறந்த திருவடிகளில் விழுந்து ஆசி பெறும் வேளையில்

நல் மார்பில் =பரந்த நல்ல மார்பில்

தழுவுற்று = (அவனை) தழுவிக் கொண்டு

நாயகன் = இராமன்

சொன்னான் = சொன்னான்

முற்றிய சொல்லின் எல்லையான் = சிறந்த சொல்களின் எல்லையில் உள்ளவன்.

கடைசி வரி சிந்தக்கக் தக்கது.

ஒரு வார்த்தை சொன்னால் அது சிறந்த வார்த்தையாக இருக்க வேண்டும். அதற்கு மேல்  அதை சிறப்பாக சொல்ல முடியாது என்று இருக்க வேண்டும்.


சொல்லுக சொல்லை-பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.

என்பார் திருவள்ளுவர். 

ஒரு சொல் சொன்னால், அதை விட இன்னொரு சிறந்த சொல் இல்லை என்று இருக்கும்படி  சொல்ல வேண்டும். 

இராமன் முற்றிய சொல்லின் எல்லையான்.  சிறந்த சொற்களின் எல்லை அவன்தான்.  அவனைத் தாண்டி அந்த சொற்களுக்கு வேறு அர்த்தம் இல்லை. 

அவன் சொன்ன அறவுரைகளை பார்ப்போம். 


Saturday, April 11, 2015

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே

நான் மணிக்கடிகை - சிறியவர்களை ஏளனம் செய்யாதே 


நான் மணிகடிகை  நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துகளை உள்ளடக்கி    இருக்கிறது.

சிறியவர்களை ஏளனம் செய்யக் கூடாது.

எவ்வளவு அருமையான பொருளாக இருந்தாலும் கெட்டவர்களிடம் இருந்து வாங்கக் கூடாது.

நம்மை விட தாழ்ந்தவர்கள் நம்மைப் பற்றி தவறாகச் சொன்னாலும் அவர்கள் மேல் சீறி விழக் கூடாது

எப்போதும் நல்லன அல்லாதவற்றைக் கூறக் கூடாது.


பாடல்

எள்ளற்க என்றும் எளியாரென் றென்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

சீர் பிரித்த பின்

எள்ளற்க என்றும் எளியார் என் பெறினும் 
கொள்ளற்க கொள்ளார்கைம் மேலவா - உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை கூறற்க
கூறல் லவற்றை விரைந்து.

பொருள்

எள்ளற்க = குறை சொல்லாதே

என்றும் எளியார் = எப்போதும் எளியவரை

என் பெறினும் = என்ன ஆனாலும்

கொள்ளற்க = பெற்றுக் கொள்ளாதே

கொள்ளார்கைம் மேலவா = பெறக் கூடாதவர்களிடம் இருந்து

உள்சுடினும் = உள்ளம் சுடினும்

சீறற்க = கோபம் கொள்ளாதே

சிற்றில் பிறந்தாரை = கீழ் குடியில் பிறந்தவர்களை

கூறற்க = சொல்லதே

கூறல் லவற்றை விரைந்து.= சொல்லக் கூடாதவற்றை

சரி.

இது என்ன பெரிய விஷயமா. மத்தவங்களை கேலி பேசாதே, கெட்டவங்ககிட்ட எதையும் வாங்காதே,  கீழ் குடியில் பிறந்தவர்கள் தவறாக பேசினாலும் சீறி விழாதே, சொல்லக் கூடாததை சொல்லாதே என்பதெல்லாம் ஒரு  அறிவுரையா. இது யாருக்குத்தான் தெரியாது என்று நாம் நினைக்கலாம்.

கேட்க என்னவோ எளிதாகத்தான் இருக்கிறது.

நடை முறை சிக்கல் எவ்வளவு இருக்கிறது தெரியுமா.

சக்கரவர்த்தியின் மகன். அதுவும் மூத்த மகன். சின்ன பிள்ளையாக இருந்த போது , அரண்மனையில் வேலை பார்த்த ஒரு கூன் விழுந்த கிழவியின் முதுகில் மண் உருண்டை வைத்த அம்பால் அடித்து விளையாடினான்.

அவள் என்ன செய்தாள் ?

பதினாலு வருடம் இராமனையும், அவன் மனைவியியையும், தம்பியையும் காட்டுக்கு  விரட்டினாள். அங்கே சீதை சிறை பிடிக்கப் பட்டு இராவணனிடம் சிறை இருந்தாள். இத்தனையும்  எதனால் ? எளியவள் என்று கூனியை ஏளனம் செய்து அவள் முதுகில் அம்பு அடித்ததால்.

கானகம் போனது இராமனுக்கு வருத்தமா என்றால், ரொம்ப வருந்தினான்.

வருந்தியது மட்டும் அல்ல, சிறியவர்களை இகழாதே. அப்படி இகழ்ந்ததால் நாடிழந்து, காட்டுக்கு வந்து படாத பாடு படுகிறேன் என்று சுக்ரீவனிடம் சொல்லி  வருந்தினான் இராமன்.

சிறியர் என்று இகழ்ந்து நோவு
    செய்வன செய்யல்; மற்று, இந்
நெறி இகந்து, யான் ஓர் தீமை
    இழைத்தலால், உணர்ச்சி நீண்டு,
குறியது ஆம் மேனி ஆய
    கூனியால், குவவுத் தோளாய்!
வெறியன எய்தி, நொய்தின்,
    வெம் துயர்க் கடலின் வீழ்ந்தேன்.

சிறியர் என்று இகழ்ந்து மற்றவர்களை நோகச் செய்யாதே. இதை மறந்து நாம் ஒரு  தீமை செய்ததால் கூனியின் செயலால் வெந்துயர் கடலில் விழுந்தேன் என்று  நொந்து  கூறுகிறான்.

கேட்க என்னவோ எளிய அறம் தான். எல்லாம் தெரிந்த இராமன் அதை கடை பிடிக்கவில்லை. கஷ்டப் பட்டான். கஷ்டம் என்றால் கொஞ்ச நஞ்சம் இல்லை. 

இதெலாம் எனக்குத் தெரியாதா என்று அப்படி எளிதாக  தள்ளி விடாதீர்கள்.

சரி, அது மட்டும் அல்ல, 

வள்ளுவர் கூறுகிறார்.....

பீலி பெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின் என்று. 

அளவுக்கு அதிகமாக சேர்த்தால் மயில் இறகு கூட ஒரு வண்டியின் அச்சை முறித்து  விடும்.

இது எங்களுக்குத் தெரியாதா என்று நினைக்கக் கூடாது.

வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார் என்றால், எளியவர்கள்தானே என்று ஏளனம் செய்து  சின்ன சின்ன பகைகளை தேடிக் கொண்டால், ஒரு நாள் அவை எல்லாம்  ஒன்றாகச் சேர்ந்து உன்னை அழித்து விடும் என்கிறார். 

உலகம் யாரை  எப்போது எங்கே கொண்டு சேர்க்கும் என்று தெரியாது. 

யாரையும் ஏளனம் செய்யாமல் இருப்பது நலம். 

இராமனுக்கே அந்த கதி என்றால் , நாம் எம்மாத்திரம் ?





Thursday, April 9, 2015

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை

நாலடியார் - அந்தி மாலை, இந்த மாலை 



அது ஒரு சின்ன கிராமம்.

அங்குள்ள மக்கள் காலையில் வயலுக்கு, காட்டுக்கு என்று வேலைக்குப் போய் விட்டு மாலையில் வீடு திரும்புவார்கள்.

அவளுடைய காதலனும் அவள் இருக்கும் வீட்டின் வழியாகத்தான் தினமும் வருவான்.

இன்று ஏனோ இன்னும் வரவில்லை. மாலை மங்கிக் கொண்டே போகிறது. இன்னும் வரவில்லை.

ஒரு வேளை வேறு வழியில் போய் இருப்பானோ ?

ஒரு வேளை அவனுக்கு எதுவும் ஆபத்து நேர்ந்திருக்குமோ ?

ஏன் இன்னும் வரவில்லை ?

தவிக்கிறாள் அவள்.

அவன் வருவான், அவனுக்குத் தர வேண்டும் என்று ஆசை ஆசையாக பூக்களைச் சேர்த்து மாலையாக செய்து, அவன் வரும் வழி பார்த்து காத்திருக்கிறாள்.

ஒரு வேளை வர மாட்டானோ ?

இந்த மாலையை என்ன செய்வது ?

பாடல்

கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள், துணையில்லார்க்கு
இம்மாலை என்செய்வ தென்று.

பொருள்

கம்மஞ்செய் மாக்கள் = வேலை செய்த பின் மக்கள்

கருவி ஒடுக்கிய = அவர்களின் அரிவாள், மண்வெட்டி போன்றவற்றை எடுத்துக் கொண்டு

மம்மர்கொள் மாலை = மயக்கம் தரும் மாலை நேரத்தில்

மலராய்ந்து பூத்தொடுப்பாள் = ஒவ்வொரு பூவாக தேர்ந்து எடுத்து மாலை தொடுப்பாள்

கைம்மாலை = கையில் உள்ள மாலை

இட்டுக் = தரையில் நழுவ விட்டு

கலுழ்ந்தாள் = கவலைப் பட்டாள்

துணையில்லார்க்கு = துணை இல்லாதவர்க்கு

இம்மாலை என்செய்வ தென்று = இந்த மாலை என்ன செய்வது என்று

காதல், தவிப்பு, ஏக்கம் என்று அனைத்தையும் நாலு வரியில் அடக்கி பல நூற்றாண்டுகளை தாண்டி உங்களை வந்து அடைகிறது இந்தப் பாடல்.

பெயர் தெரியாத, முகம் தெரியாத அந்த பெண்ணின் சோகம்  நம்மையும் என்னவோ செய்கிறது.

காதல் என்றும் பசுமையானதுதான்.





திருவாசகம் - யாரைப் பார்த்து பயப்பட வேண்டும் ?

திருவாசகம் - யாரைப் பார்த்து பயப்பட வேண்டும் ?


சாமி கும்பிட கோவிலுக்குப் போனாலோ , அல்லது வீட்டிலேயே கும்பிட்டாலோ சிலருக்கு பக்தி இருக்கும், சிலருக்கு பயம் இருக்கும், சிலருக்கு குழப்பம் இருக்கும்....

யாருக்காவது இறைவன் மேல் அன்பு இருக்கிறதா ?

அன்போடு யார் வழி படுகிறார்கள் ?

இறைவனை வழிபடுதல் என்றால் இந்த அனைத்தையும் வழிபடுதல் என்றே பொருள்.

இந்த உலகம், இதில் உள்ள உயிர்கள் அனைத்தின் தொகுதி இறைவன்.

மரம், செடி, கொடி , மழை, மலை, காதலன், காதலி, பிள்ளைகள், யுத்தம், சத்தம்...எல்லாம்...எல்லாம் ...நிறைந்த ஒன்றுதான் இறைவன்.

அவனை, அவளை, அதை நினைத்தால் அன்பு பிறக்காதா ?

நீங்கள் எதன் மேல் அன்பு செலுத்தினாலும் அது இறைவன் மேல் அன்பு செலுத்தியதாகததான்  அர்த்தம் ஏன் என்றால் அணித்திலும் இறைவன் இருக்கிறான்.

எதிலுமே அன்பு இல்லாதவர்களை கண்டால் எனக்கு பயமாக இருக்கிறது என்கிறார் மணிவாசகர்.

என்பில் அதனை வெயில் போலச் சுடுமே 
அன்பிலதனை அறம் 

என்பார் வள்ளுவர்.

அன்பில்லாதவனை, அறம் சுடும் எப்படி என்றால் புழுவை வெயில் சுடுவது போல.

அன்பு இல்லாதவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்.  அவனைப் பார்த்து பயப்படத்தான் வேண்டும்.

பாடல்

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடு கின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்

வன்புலால் வேலும் அஞ்சேன் = மாமிசம் ஒட்டி இருக்கும் வேலுக்கு அஞ்சேன்

வளைக்கையார் = வளையல் அணிந்த கையை உள்ள பெண்களின்

கடைக்கண் அஞ்சேன் = கண்ணுக்கு அஞ்சேன்

என்பெலாம் = எலும்பு எல்லாம்

உருக = உருக

நோக்கி = பார்த்து

அம்பலத் தாடு கின்ற = அம்பலத்தில் ஆடுகின்ற

என் = என்னுடைய

பொலா மணியை  = துளை இடப்படாத மணியை

ஏத்தி = புகழ்ந்து

இனிதருள் = அவனுடைய இனிய அருளை

பருக மாட்டா = பருகாமல் இருக்கும்

அன்பிலா தவரைக் கண்டால் = மனதில் அன்பு இல்லாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே = நான் அச்சப் படுகிறேன்

அன்பில்லாதவர்களை கண்டால் விலகிப் போங்கள்.

அன்பு செய்யுங்கள். பக்தி வரும் பின்னால்.

அன்பு கருணையாக மாறும்.

கருணை துறவில் கொண்டு விடும்.

துறவு முக்தி தரும்.

ஆரம்பம் அன்புதான்.

அன்பே சிவம்.


Wednesday, April 8, 2015

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க

இன்னிலை - தூமலரின் மென்மை அறிந்து துய்க்க 


கணவன் மனைவி உறவு என்பது மிக மிக அந்தரங்கமானது. மென்மையானது. காதலும், காமமும் கலந்தது.

கணவன் மனைவி உறவு சிக்கல் நிறைந்ததும் கூட. யார் பெரியவர், யார் வீட்டுக்காக அதிகம் உழைக்கிறார், கருத்து வேறுபாடு வரும்போது எப்படி அவற்றை சரி செய்வது போன்ற சிக்கல்கள் வரமால் இருக்காது.

இந்த கணவன் மனைவி உறவு பற்றி இன்னிலை ஒரு பாடலில் சொல்ல்கிறது.

கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர் என்ற எண்ணம் வேண்டும்.

இருவரில் யாரும் மற்றவரை விட உயர்ந்தவர் அல்ல.

ஒருவர் மேல் ஒருவர் விருப்பப்பட வேண்டும்.

அந்த விருப்பம் நிலையானதாக இருக்க வேண்டும்.

அப்படி உயர்வு தாழ்வு இல்லாமல், ஒருவர் மேல் ஒருவர் நிலைத்த அன்போடும் விருப்போடும் இருந்து செய்யும் இல்லற செயல்களை உலகம் அறியும்.

அவர்கள் தங்களுக்குள் உள்ள காதலை, காமத்தை ஒரு மென்மையான மலரை கையாள்வது போல கையாள வேண்டும்.

மனைவி வாழ்வின் துணை, வாழ்க்கைக்கு துணை என்று அறிந்து அவளோடு இல்லறம் நடத்த வேண்டும்.


பாடல்


ஒப்புயர்வில் வேட்டோ னொருநிலைப்பட் டாழ்ந்தசெயல்
நப்பின்னை ஞால மொருங்கறிக-துப்பாராய்த்
தூமலரின் மென்மையுறு தோற்றத்தே வைத்துய்க்க
ஏமக் கிழத்தி யறிந்து.

சீர் பிரித்த பின்

ஒப்பு உயர்வு இல் வேட்டோன் ஒரு நிலைப்பட்டு ஆழ்ந்த செயல்
நப்பின்னை ஞால ஒருங்கு அறிக - துப்பாராய்த்
தூமலரின் மென்மை உறு  தோற்றத்தே வைத்து துய்க்க 
ஏமக் கிழத்தி அறிந்து 

பொருள்

ஒப்பு = ஒருவருக்கு ஒருவர் ஒப்பானவர்கள், சமமானவர்கள்

உயர்வு இல் = ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவர் அல்ல

வேட்டோன் = ஆசைப் பட்டவன், காதலன்

ஒரு நிலைப்பட்டு = ஒரு நிலையில், மனம் அலையாமல்

ஆழ்ந்த செயல் = உறுதியுடன் செய்யும் இல்லறம் சம்பந்தப் பட்ட செயல்கள்

நப்பின்னை  = நப்பின்னை (?) . இதை நப்பினையின் (கண்ணனின் மனைவி ) வாழ்வால் அறியலாம் என்று உரை சொல்கிறார்கள். அவ்வளவு சரியாகப் பட வில்லை.

ஞால = உலகு

ஒருங்கு அறிக = ஒன்றாக அறிக

 துப்பாராய்த் = மனத் தூய்மையுடன்

தூமலரின்  = தூய மலரின்

மென்மை உறு  தோற்றத்தே  = மேனமியான தோற்றத்தை

வைத்து  = மனதில் வைத்து

துய்க்க = இன்பம் அனுபவிக்க

ஏமக் = இல்லத்துக்கு காவலாய் இருக்கும்

கிழத்தி =தலைவியின்

அறிந்து = தன்மை அறிந்து



Tuesday, April 7, 2015

நாலடியார் - இம் என பெய்யும் மழை

நாலடியார் - இம் என பெய்யும் மழை 


காமம் !

காமம் என்றால் ஏதோ பேசக் கூடாத ஒன்று, மறைத்து வைக்கப் படவேண்டியது என்று ஒதுக்கி வைக்கிறோம்.

பெற்றோரும் பிள்ளைகளும், சகோதரனும் சகோதரியும், ஆசிரியரும் மாணவரும் ஒன்றாக படிக்கும் காமம் சம்பந்தப் பட்ட புத்தகம் ஏதேனும் இருக்கிறதா ?

திருக்குறளில் உள்ள காமத்துப் பாலை, ஒரு தகப்பனும் மகனும் ஒன்றாக இருந்து படிக்கலாம்.  அதில்  இல்லாத காமம் இல்லை. காதல் , காமம் , ஊடல், பிரிவு, கனவு, நாணம், வெட்கம், கூடல், களவு, ஊர் பேசும் பேச்சு என்று எல்லாம் இருக்கிறது.

இருந்தும், கொஞ்சம் கூட விரசம்  இல்லாதது.

நம் இலக்கியம், காமத்தை விலக்கி வைக்க வில்லை.

அறம் - பொருள் - இன்பம் என்று அறவழியில் நின்று ஈட்டிய பொருளை குடும்ப வாழ்வில் நின்று எப்படி இன்பம் அனுபவிப்பது என்று சொல்கிறது நம் இலக்கியம்.

நாலாடியாரில் வரும் ஒரு பெண்.


காதலனை பிரிந்து இருக்கிறாள்.

மழைக் காலம்.

"சோ " மழை பெய்கிறது.

இடி மின்னல்.

காதலனின் நினைவு அவளை வாட்டுகிறது.

இந்த இடி சத்தம் ஏதோ இழவு வீட்டில் அடிக்கும் பறை ஒலி போல இருக்கிறது அவளுக்கு.

பிரிவு அவ்வளவு வாட்டுகிறது அவளை.

பாடல்


தம்மமர் காதலர் தார்சூழ் அணியகலம்
விம்ம முயங்குந் துணையில்லார்க் - கிம்மெனப்
பெய்ய எழிலி முழங்குந் திசையெல்லாம்
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

கொஞ்சம் சீர் பிரிப்போம்

தம் தமர்  காதலர் தார் சூழ் அணி அகலம் 
விம்ம முயங்கும்  துணை இல்லார்க்கு  - "இம்" என 
பெய்ய எழிலி முழங்கும்  திசை எல்லாம் 
நெய்தல் அறைந்தன்ன நீர்த்து.

பொருள்

தம் = தம்முடைய

தமர் = உறவான

காதலர் = காதலர்

தார் = மாலை

சூழ் = அணிந்த

அணி அகலம் = அணிகலன்களை அணிந்த அகன்ற மார்பில்

விம்ம முயங்கும் = விம்மி எழும் மார்பு அழுந்த கட்டி அணைக்கும்

துணை இல்லார்க்கு = துணை இல்லாதவர்களுக்கு (பிரிந்து இருப்பவர்களுக்கு)

"இம்" என = "இம்" என்ற ஒலியோடு

பெய்ய = பெய்யும்

எழிலி = மழை மேகம் (என்ன அழகான பெயர் சொல்)

முழங்கும்= ஒலிக்கும்

திசை எல்லாம் = எல்லா திசைகளிலும்

நெய்தல் = மழை

அறைந்தன்ன நீர்த்து = பறை அறைவது போல இருக்கிறது





Monday, April 6, 2015

தேவாரம் - அப்புறம் செய்யலாம்

தேவாரம் - அப்புறம் செய்யலாம் 


அப்புறம் செய்யலாம் , அப்புறம் செய்யலாம் என்று எவ்வளவோ நல்ல காரியங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்.

"நிறைய படிக்கணும்...எங்க நேரம் இருக்கு...எல்லாம் retire ஆனதுக்குப் பிறகு படிக்கலாம் என்று இருக்கிறேன் ..."

"போகணும்...காசி, இராமேஸ்வரம்..இப்படி நாலு தலங்களுக்கு போகணும். எங்க நேரம் இருக்கு....பிள்ளைங்க படிப்பு, அவங்க பள்ளிக் கூடம் ...எல்லாம் முடிந்த பின் போகணும்..."

இப்படி பலவற்றை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம்...

பின்னாளில், நாம் நினைக்கும் நாள் வரை நாம் இருக்க வேண்டுமே ? நாம் செல்லும் நாள் என்றென்று நமக்குத் தெரியாதே ? நாம் நினைத்து வைத்த நாளை வராமலே போய் விட்டால் ?

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க; மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.

என்றார் வள்ளுவர். நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று நினைத்து நல்லது செய்வதை தள்ளிப் போடாதீர்கள்.

நாளெல்லாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? இந்த உடம்பை சுமந்து திரிந்து கொண்டிருக்கிறோம். எத்தனை நாள் இந்த உடம்பு நம்மோடு இருக்கும் ? நாயோ, நரியோ, தீயோ, கொண்டு செல்லும் உடல் இது. இதன் மேலா இத்தனை ஆசை ? இத்தனை பற்று. இதற்காகவா நல்ல விஷயங்களை தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறீர்கள் ?

வறியவர்களுக்கு, இல்லை என்று வந்தவர்களுக்கு சோறும் நீரும் நல்ல வார்த்தை சிலதும் சொல்லுங்கள். அப்படி செய்யும் நல்லவர்கள் வணங்கும் தலம் கேதாரிநாத்.


பாடல்

பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்
குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு
கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே

பொருள்

பறியே = உடலையே

சுமந் து = சுமந்து 

உழல்வீர் = துன்பப் படுவீர் 

பறி = இந்த உடலானது

நரி கீறுவ தறியீர் = நரி கீறுவது அறியீர்

குறி = குறித்த நாளில்

கூவிய = சொல்லிய படி

கூற்றங்கொளு நாளால் = எமன் வந்து உங்கள் உயிரை கொண்டு செல்லும் நாளில்

அறம் உளவே = அறம் (செய்ய) முடியுமா ?. முடியாது

அறிவானிலும் அறிவான் = நாம் ஒன்றை அறிகிறோம் என்று சொன்னால் அறிவது எது ? அறிந்து கொள்ளப் படுவது எது ? அறியும் செயல் எது ? அறிவுக்கு அப்பால் நின்று நம் அறிவை செலுத்துபவன்

நல நறுநீரொடு =நல்ல தூய்மையான நீரோடு 

சோறு = சோறும்

கிறிபேசி = நல்ல வார்த்தைகள் பேசி

நின் றிடுவார் = எப்போதும் மற்றவர்களுக்கு வழங்கும் அவர்கள்

தொழு கேதாரமெ னீரே = தொழும் தலம் கேதாரம் என்ற தலமாகும்.


இந்த கோடை விடுமுறைக்கு குளிர்ச்சியாக கேதாரநாத் சென்று வாருங்கள். 

பின்னால் முடியுமோ என்னவோ ?

Sunday, April 5, 2015

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும்

இன்னிலை - சிற்றின்பமும் பேரின்பமும் 


நம் புலன்களுக்கு இன்பம் தருவன பல.

அவற்றில் சில, ஒரு புலனுக்கு மட்டும் இன்பம் தரும். இசை, காதுக்கு மட்டும் இன்பம் தரும். அதை தொட முடியாது, நுகர முடியாது.

நல்ல உடை கண்ணுக்கும், உடலுக்கும் இன்பம் தரும். பார்க்கவும் அழகாக இருக்கும், அணியும் போது உடலுக்கும் சுகமாக இருக்கும்.

லட்டு - பார்க்க அழகாக இருக்கும், வாயில் போட்டால் சுவையாக இருக்கும். அதில் உள்ள ஏலக்காய் , கிராம்பு போன்றவை நல்ல மணத்தைத் தந்து மூக்குக்கும் இன்பம் தரும்.

இப்படி ஒரு புலனுக்கு, இரு புலனுக்கு , மூன்று புலனுக்கு என்று இன்பம் தரும் பொருள்கள் உள்ளன.

ஐந்து புலன்களுக்கும் இன்பம் தரும் ஒன்று உண்டா  என்றால் , உண்டு.

அது ஆணுக்கு பெண்ணும், பெண்ணும் ஆணும் தரும் இன்பம்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

என்பார் திருவள்ளுவர்.  கண்டும், கேட்டும், உண்டும், உயிர்த்தும், தொட்டு அறியும்  ஐந்து புலன்களுக்கு இன்பமும் வளையல் அணிந்த அவளிடம் உள்ளது என்கிறார் வள்ளுவர்.

அது ஆணுக்கும் பொருந்தும்.

ஆணும் , பெண்ணும் சேர்ந்து அடையும் அந்த சிற்றின்பம் , பேரின்பத்திற்கு வழி வகுக்கும் என்கிறது இன்னிலை என்ற நூல்.

திருமணம் ஆன புதிதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் காமத்தின் தாக்கம் அதிகம் இருக்கும். நாள் ஆக நாள் ஆக அது குறையும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக முக்தி அடைய உதவுவார்கள்.

காம விருந்து படைத்த கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் துணையாவார்கள். எப்போது என்றால், கலவி இன்பத்தில் குற்றம் ஏதும் வந்து விடாமல்,  அளவு கடக்காமல் இருந்தால். குற்றம் வராமல் என்றால், மற்ற ஆணையோ பெண்ணையோ நாடாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்தல்.

அப்படி குற்றம் இல்லமால், அளவோடு காமத்தை சுகிப்பவர்கள்,பின்னாளில் முக்தி அடைய ஒருவருக்கு ஒருவர் துணையாவார்.

அந்த சிற்றின்பமே அவர்களுக்கு ஒரு படகு போல அமைந்து முக்தி கரை சேர்க்கும்.

இளைமையில், மணம் புரிந்த போது இருந்த இளமையும் அழகும் அதன் மூலம் கிடைக்கும் கலவி இன்பமும், கசப்பான மருந்துக்கு இனிப்பு தடவி தருவது போல.

பாடல்

துணையென்ப காம விருந்துய்ப்பார் தோமில்
இணைவிழைச்சின் மிக்காகா ராகல்-புணைதழீஇக்
கூட்டுங் கடுமிசையான் கட்டியிற் கொண்டற்றால்
வேட்டபோழ் தாகு மணி.

பொருள்

துணையென்ப = துணை என்று சொல்லுவார்கள்

காம விருந்துய்ப்பார் = காம விருந்து உய்ப்பார் (அடைவார்)

தோமில் = குற்றம் இல்லாமல்

இணைவிழைச்சின் = கலவி இன்பத்தில்

மிக்காகா ராகல் = அளவுக்கு அதிகமாக போகாமல் இருந்தால்

புணைதழீஇக் = ஆற்றைக் கடக்க உதவும் புணை போல (படகு போல )

கூட்டுங் கடுமிசையான்  = கசப்பான மருந்தை

கட்டியிற் கொண்டற்றால் = கற்கண்டு கொண்டு அதன் ஆற்றாலால் (கசப்பை மறைப்பது போல )

வேட்டபோழ் தாகு மணி = மனந்த போது உண்டான அழகு

சிற்றின்பமே பேரின்பத்திற்கு வழி வகுக்கும். 


தேவாரம் - மண்ணாவது திண்ணம்

தேவாரம் - மண்ணாவது திண்ணம் 



கேதாரம். கேதர்நாத் என்று அழைக்கப்படும் தலம் . புது டெல்லிக்கு அருகில் உள்ள தலம் . பனிபடர்ந்த மலைச் சாரலில் அமைந்த தலம் .

இந்த வாழ்வு ஒரு மாயம். நிலைத்து இருப்பது போலத் தோன்றும். சட்டென்று ஒரு நாள் மாயமாய் மறைந்து விடும்.

"அவரா ? நேத்து வரை நல்லாத்தான இருந்தாரு ...என்ன ஆச்சு " என்று கேட்கும் படி ஆகும்.

படுத்தவர் எழுந்திருக்கவில்லை....ஏன் ? அது தான் magic ...மாயம்.

கடைசியாய் விட்ட மூச்சை உள்ளே இழுக்க முடியவில்லை...ஏன் ? மாயம்.

அன்போடு இருந்த பிள்ளைகளும் மனைவியும் அன்பு மாறுவார்கள்...ஏன் ? மாயாஜாலாம்.

இந்த உடல் மண்ணாவது உறுதியிலும் உறுதி.

இந்த பிறவி நாளும் பாழாகிக் கொண்டு இருக்கிறது. வேலை, உணவு, படிப்பு, சம்பளம், சேமிப்பு என்று செக்கு மாடு போல சுத்தி சுத்தி வந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாள் வாழ்ந்தோமே, என்ன நிகழ்ந்தது என்று யோசித்துப் பார்த்தால் எவ்வளவு நாளை வீணாகக் கழித்து விட்டோம் என்றும் தெரியும்.

இந்த உடல் உணவு போட்டு வளர்த்தது. பசி, அதனால் உணவு , அதனால் வளர்ந்த உடல் இது. பசி என்ற நோய் செய்த உடல் இது. நோயில் வளர்ந்த உடல்.

இருக்கும் வரை குறையாமல் அறம் செய்யுங்கள். "தாழாது அறம் செய்யுங்கள்". வருடத்துக்கு ஒரு முறை நன்கொடை கொடுத்தாலும் பரவாயில்லை. அதை குறைத்து விடாதீர்கள். தாழாது செய்யுங்கள்.

திருமாலும், பிரமனும் கீழும் மேலும் அறிய நின்றவன் இருக்கும் இடம் திருக் கேதாரம்.

பாடல்

வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனும்
கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னீரே.                                            - (சுந்தரர்)

பொருள்

வாழ்வாவது மாயம் = இந்த வாழக்கை ஒரு மாயம்

மிது மண்ணாவது திண்ணம் = இது மண்ணாவது திண்ணம்

பாழ்போவது பிறவிக்கடல் = பாழாகிறது இந்த பிறவிக் கடல்

பசிநோய்செய்த பறிதான் = இந்த உடல் (பறி ) பசி என்ற நோய் செய்தது

தாழாதறஞ் செய்ம்மின் = குறையாமல் அறம் செய்யுங்கள்

தடங் கண்ணான் = தாமரைக் கண்ணன் (திருமால்)

மல ரோனும் = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

கீழ்மேலுற = கீழும் மேலும் செல்ல

நின்றான் = நின்றவன்

திருக் கேதாரமெ னீரே = திருக் கேதாரம் என்று சொல்லுங்கள்

பசி நோய் செய்த பறிதான் என்பதற்கு தாய் தந்தையரின் காமப் பசியில் விழைந்தது இந்த உடல் என்றும் கொள்ளலாம்.

நேரம் இருப்பின், கேதார்நாத் ஒரு முறை சென்று வாருங்கள்.

சுந்தரரும், ஞான சம்பந்தரும் சென்றிருக்கிறார்கள்.

 

இராமாயணம் - ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்

இராமாயணம் - ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் 


இராமாயணம் என்றால் என்ன ?

இராமன் + அயனம் = அயனம் என்றால் வழி. உத்தராயணம், தக்ஷினாணயம் என்று சூரியனின் வழியைச் சொல்லுவது போல, இராமனின் வழியை சொல்லுவது இராமாயணம்.

எது அவன் வழி ? அவன் நடந்து சென்ற பாதை எது ? அதில் போய் அவன் எதை அடைந்தான் ?

"நல் அறம் நிறுத்த" நல்ல அறங்களை நிலை நிறுத்த அவன் வந்தான்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் மனித குலம் எது சரி , எது தவறு என்று தெரியாமல் தவிக்கின்ற நேரத்தில் எல்லாம் அற வழியை காண்பிக்க பெரியவர்கள் தோன்றுகிறார்கள்.

வெயில் அதிகமா இருந்தால் மழை வருவது போல.

இருள் அதிகமாக இருந்தால் பகல் வருவது போல.

காலம் காலமாய் இது நிகழ்கிறது.

அப்படி வந்தவன் இராமன். அவனை பலர் புரிந்து கொள்ளவில்லை. அன்று மட்டுமல்ல, இன்றும்.

யாருக்கு அவன் புரிவான் ?

"ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும் " - ஒருங்குதல் என்றால் ஒன்று படுத்தல், சேர்தல், இணைதல், கூடுதல், குவிதல், ஒருபடியாதல், அழிதல் மற்றும்  ஒடுங்குதல்  என்று பல பொருள் உள்ளது. உணர்வு ஒன்று பட்டால், அவனை உணரலாம். உணரலாம் என்று தான் சொன்னாரே தவிர அறியலாம் என்று சொல்லவில்லை. இறை என்பது ஒரு உணர்ச்சி. அது ஒரு பொருள் இல்லை. அது ஒரு தனிப்பட்ட அனுபவம்.

விராதன் என்ற அரக்கன் இராமனோடு சண்டை இட வருகிறான். அந்த இடத்தில் இராமனைப் பற்றி கம்பர்  கூறுகிறார்.

பாடல்


ஓம் அராமரை, ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை,  நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா அணை துறந்து தரை நின்றவரை, ஓர்
மா மராமரம் இறுத்து, அதுகொடு எற்ற வரலும்.


பொருள் 

ஓம் அராமரை = ஓம் என்ற பிரணவத்தின் பொருளான அந்த இராமனை

ஒருங்கும் = ஒன்று படும்

உணர்வோர் உணர்வுறும் = உணர்வுகளை உடையவர்கள் உணரும்

நாமர் ஆம் அவரை = நாமம் கொண்ட அவரை

நல் அறம் நிறுத்த = நல்ல அறங்களை நிலை நிறுத்த

நணுகித் = ஒன்று சேர்ந்து, அருகில் வந்து, அணுகி.

தாம் அரா அணை துறந்து = தன்னுடைய பாம்பணையை துறந்து

 தரை நின்றவரை, = தரையின் மேல் நின்ற அவரை

ஓர் = ஒரு

மா மராமரம் = பெரிய மரா மரத்தை

இறுத்து = பெயர்த்து எடுத்து

அதுகொடு எற்ற வரலும் = அதைக் கொண்டு போருக்கு வரும் போது

அரக்கரகளுக்கு இறைவன் எதிரில் நின்றபோதும் தெரிவது இல்லை.

இறைவனை அறியாதவர்கள் தான் அரக்கர்களோ ?



Friday, April 3, 2015

விவேக சிந்தாமணி - விருந்தினர்களை உபசரிக்கும் முறை

விவேக சிந்தாமணி - விருந்தினர்களை உபசரிக்கும் முறை 


விருந்தினர்களை உபசரிப்பது என்பது தமிழரின் பண்பாடு. விருந்தோம்பல் என்று அதற்கு ஒரு அதிகாரமே வைத்திருக்கிறார்  வள்ளுவர். விருந்தோம்புதலை ஒரு அறம் என்றே நம் முன்னவர்கள் கொண்டார்கள்.

இன்று நம் பிள்ளைகளுக்கு விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று தெரிவதில்லை.

வீட்டிற்கு ஒருவர் வந்தால் கூட, அவர்கள் பாட்டுக்கு அவர்கள் அறையில் இருக்கிறார்கள். ...அவர்களின் கை பேசி, கணணி, youtube , facebook என்று இருக்கிறார்கள்.

இப்படி ஒரு இரண்டு தலைமுறை சென்றால் விருந்து என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்.

அவர்களை விட்டு விடுவோம். எதற்கு எடுத்தாலும் இளைய தலைமுறையையே ஏன் குற்றம் சொல்ல வேண்டும். எப்படி விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் என்று  நமக்கே சரியாகத் தெரியுமா ? நமக்குத் தெரிந்தால் அல்லவா  அதை பிள்ளைகளுக்குச் சொல்லி தர.

விவேக சிந்தாமணி சொல்லித் தருகிறது....எப்படி விருந்தினர்களை உபசரிக்க வேண்டும் என்று.

முதலில் விருந்தினரை ஆவலோடு, ஆச்சரியத்தோடு, வியந்து நோக்க வேண்டும்.

இரண்டாவது, நல்ல வார்த்தைகளை இனிமையாக சொல்ல வேண்டும்.

மூன்றாவது, அவர்களை நன்றாகப் பார்க்க வேண்டும். முகத்தை எங்கேயோ வைத்துக் கொண்டு, டிவி பார்த்துக் கொண்டு, கை பேசியில் chat பண்ணிக்கொண்டு "ம்ம்..சொல்லுங்க...அப்புறம் " என்று விருந்தினர்களோடு பேசக் கூடாது. சில பேர் விருந்தினர்களை அழைத்துக் கொண்டு உயர்ந்த உணவு விடுதிக்குப் (hotel ) போவார்கள்..அங்கு போய் அமர்ந்து கொண்டு, ஆளாளுக்கு ஒரு   கை பேசியில் (cell போன்) குறுஞ் செய்தி (sms ) அனுப்பிக் கொண்டு இருப்பார்கள். எல்லார் கவனமும் அவர்களின் கை பேசி மேல். அப்படி அல்ல, வந்த விருந்தினர்களை நேருக்கு நேர் பார்க்க வேண்டும்.

நான்காவது, அவர்களை "வாருங்கள்" என்று அழைக்க வேண்டும்

ஐந்தாவது, அவர்களை எழுந்து சென்று வரவேற்க வேண்டும். இருந்த இடத்தில் இருந்து கொண்டே "வாங்க" என்று சொல்லக் கூடாது.

ஆறாவது, அவர்களோடு முன்னாளில் எப்படி எல்லாம் மகிழ்வாக இருந்தோம் என்று நினைவு படுத்த வேண்டும்.

ஏழாவது, விருந்தினர்களின் அருகில் இருக்க வேண்டும். அவர்களை விட்டு விலகக் கூடாது. "இது தான் உங்கள் அறை ...ஏதாவது வேண்டும் என்றால் கூப்பிடுங்கள் " என்று சொல்லிவிட்டு நாம் பாட்டுக்கு நம் வேலையை பார்க்கக் போய் விடக் கூடாது.

எட்டாவது, அவர்கள் செல்லும் போது அவர்கள் கூடவே கொஞ்ச தூரம் போய் வழி அனுப்ப வேண்டும். "சரி, கிளம்புறீங்களா, அப்புறம் பாக்கலாம், போகும் போது அந்த கதவை அப்படியே சாத்தி விட்டு போங்க " என்று சொல்லக் கூடாது.

ஒன்பதாவது, அவர்கள் போகும் போது நல்லதாக அவர்கள் மனம் மகிழும்படி சில நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்ப வேண்டும் "நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம்....அடிக்கடி வந்து போங்க...வீட்டுல எல்லோரையும் கேட்டதாகச் சொல்லுங்க..பத்திரமா போயிட்டு வாங்க " என்று சில நல்ல வார்த்தைகளை சொல்லி அனுப்ப வேண்டும்.

பாடல்

"விருந்தின னாக ஒருவன்வந் தெதிரில்
வியத்தல்நன் மொழியினி துரைத்தல்
திருந்துற நோக்கல் வருகென வுரைத்தல்
எழுதல்முன் மகிழ்வன செப்பல்
பொருந்துமற் றவன்தன் அருகுற இருத்தல்
போமெனிற் பின்செல்வ தாதல்
பரிந்துநன் முகமன் வழங்கலிவ் வொன்பான்
ஒழுக்கமும் வழிபடு பண்பே."


பொருள்

"விருந்தின னாக = விருந்தினனாக

ஒருவன் = ஒருவன்

வந் தெதிரில் = எதிரில் வந்தால்

வியத்தல் = முக மலர்ச்சியுடன் வரவேற்றல்

நன் மொழியினி துரைத்தல் = நல்ல வார்த்தைகளை இனிமையாக உரைத்தல்

திருந்துற நோக்கல் = நன்றாக அவர்களை பார்த்தல்

வருகென வுரைத்தல் = "வருக" என்று உரைத்தல்

எழுதல் = இருந்த இடத்தை விட்டு எழுந்திரித்தித்தல்

முன் மகிழ்வன செப்பல் = முன்பு மகிழ்ந்த நிகழ்வுகளை சொல்லுதல்

பொருந்து = பொருந்தும்படி

மற் றவன்தன்  அருகுற இருத்தல் = அவர்கள் அருகில் இருத்தல்

போமெனிற் = திரும்பி போகின்ற போது

பின்செல்வ தாதல் = பின்னால் போதல்

பரிந்து = அன்போடு

நன் முகமன் வழங்கல் = நல்ல புகழுரைகளை கூறுதல்

இவ் வொன்பான் =  இந்த ஒன்பது

ஒழுக்கமும் = ஒழுக்கமும்

வழிபடு பண்பே. = விருந்தினர்களை போற்றும் முறை

இதை ஒரு ஒழுக்கமாகவே சொல்லி இருக்கிறார்கள் நம்  முன்னவர்கள்.



Thursday, April 2, 2015

இராமாயணம் - மாலையும் பாம்பும்

இராமாயணம் - மாலையும் பாம்பும் 


கடவுள் வாழ்த்து என்பது ஒரு நூலில் முதலில் பாடப் படுவது. கம்பரோ, ஒவ்வொரு காண்டத்திலும் ஒரு கடவுள் வாழ்த்துப் பாடுகிறார். நல்லதை எத்தனை முறை செய்தால் என்ன என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது.

அவருக்கு இன்னொரு சௌகரியம். கடவுள் அவரது காப்பியத்தின் நாயகன் இராமன். இராமன் மேல் அவருக்கு அவ்வளவு பிரியம். இழைத்து இழைத்து பாடுகிறார்.



அலங்கலில் தோன்றும் பொய்ம்மை 
     அரவு என, பூதம் ஐந்தும் 
விலங்கிய விகாரப்பாட்டின் 
     வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால் ?
     அவர், என்பர்- கைவில் ஏந்தி,
இலங்கையில் பொருதார்; அன்றே,

     மறைகளுக்கு இறுதி யாவார்!

நாம் பலவற்றின் மேல் ஆசை கொள்கிறோம். அவற்றை அடைய வேண்டும் என்று பல முயற்சிகள் செய்கிறோம். செய்யும் முயற்சிகள் சில பலன் அளிக்கின்றன. பல பலன் அளிப்பதில்லை.

ஆசையோ மிக அதிகம். எவ்வளவு முயன்றாலும் நம்மால் நமது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

முயற்சியினால் வரும் துன்பம், சோர்வு ஒரு புறம்.

நிறைவேறாத ஆசைகளினால் வரும் துன்பம் இன்னொரு புறம்.

இப்படி கிடந்து அலைகிறோம் .

இது ஏன் நிகழ்கிறது ? இது தெரிந்தும் நாம் ஏன் இதிலிருந்து விடு பட முடியவில்லை ?

காரணம், அறிவு மயக்கம்.

வேறு வேறாக திரிவது எல்லாம் ஒன்றுதான் என்ற தெளிவு இல்லாததால்.

இந்த லட்டு பிடிக்கிறது, அந்த பூந்தி பிடிக்கிறது, பாதுஷா, ஜிலேபி, மைசூர் பாகு என்று  எத்தனையோ இனிப்பு பலகாரங்கள் இருந்தாலும், அடிப்படை ஒன்றுதான்.

மனைவியை பிடிக்கிறது. அந்தப் பெண்ணும் அழகாகத்தான் இருக்கிறாள். இவளும்  அழகு தான். எல்லாம் ஒன்றுதான் என்ற எண்ணம் வருவது இல்லை.

இப்படி இது வேண்டும், அது வேண்டும் என்று மனம் தாவிக் கொண்டே இருக்கக் காரணம்   பொருள்களின் வெளி வடிவத்தில் நாம் மயங்குவதுதான்.

சரி இது ஒரு புறம் இருக்கட்டும்.

ஒவ்வொரு புலனுக்கும் ஒரு இன்பம் இருக்கிறது...சுவைத்தல், கேட்டல், காணல் என்று ஒவ்வொரு இன்பம் இருக்கிறது.

இவை எல்லாம் வேறு வேறானதா என்றால் பார்க்க அப்படி இருக்கும். ஆனால் அனைத்து இன்பங்களுக்கும் அடிப்படை ஒன்று தான்.

இந்த தெளிவு வரும்போது துன்பம் தானாகவே போய் விடுகிறது.

இந்த மயக்கம் எப்படி போகும் ?

மாலையை பாம்பு என்று   பயப்படுகிறோம்.   அது பாம்பு அல்ல  மாலை தான் என்ற தெளிவு  வந்த பின் பயம் போய் விடுகிறது.

அறியாமை பயம்.

அறிவின் தெளிவு நிம்மதி, மகிழ்ச்சி.

இந்த அறிவின்  மயக்கம் எப்படி போகும் என்றால் இராமனைக் கண்டால்,

பொருள்


அலங்கலில் = மாலையில்

தோன்றும் பொய்ம்மை = தோன்றும் பொய்மையான தோற்றம்

அரவு என = பாம்பு என்று

பூதம் ஐந்தும் = ஐந்து பூதங்களும்

விலங்கிய விகாரப்பாட்டின் = ஒன்றோடு ஒன்று கலந்து வெளிப்பட்ட வடிவங்களின்

வேறுபாடு உற்ற வீக்கம் = வேறு பட்ட வடிவங்களின் பன்மை தோற்றம்

கலங்குவது எவரைக் கண்டால் ? = கலங்கி மறைவது யாரைக் கண்டால் ?

 அவர், என்பர் = அவர் என்று சொல்லுவார்கள்

கைவில் ஏந்தி = கையில் வில் ஏந்தி

இலங்கையில் பொருதார் = இலங்கையில் சண்டை போட்ட

அன்றே = அன்றே


மறைகளுக்கு இறுதி யாவார் = வேதங்களுக்கு முடிவான பலன் ஆவார்

இன்னும் ஆழமான பொருள் கொண்ட பாடல் இது.

இராமனைக் கண்டால் பஞ்ச பூதங்களும் தங்களின் வெளித் தோற்றத்தை விட்டு கலங்கி நிறுக்கும் என்று சொன்ன கம்பர்,  அது யாரைப் பார்த்து என்றால்  இராமனைப் பார்த்து என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். இலங்கையில் சண்டைப் போட்ட இராமன் என்று ஏன் சொல்ல வேண்டும் ?

இராவணன் , இராமனை மனிதன் என்று இகழ்ந்து , ,மதிக்காமல் அழிந்தான்.  இராமன் பரம்பொருள் என்று முதல் சில அடிகளில் சொன்ன கம்பர், அடுத்த சில வரிகளில் , இராவணனைப் போல இராமனை மனிதன் என்று நினைத்து ஏமாந்து  போகாதீர்கள் என்று நினைவு படுத்த "இலங்கையில் சண்டை போட்ட இராமன் " என்று நமக்கு நினைவு படுத்துகிறார்.



விகாரப்பாட்டின் 
     வேறுபாடு உற்ற வீக்கம்

அது என்ன   விகாரம் ?

உள்ளதை இல்லாததாக நினைப்பது.

இல்லாததை உள்ளதாக நினைப்பது.

நிரந்தரம் இல்லாததை நிரந்தரம் உள்ளதாக நினைப்பது.

நிரந்தரமானதை நிரந்தரம் அற்றதாக நினைப்பது.

இவை எல்லாம்  விகாரங்கள்.

வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப
ஆற்றேன்; "எம் ஐயா," "அரனே! ஓ!" என்று என்று
போற்றி, புகழ்ந்திருந்து, பொய் கெட்டு, மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து, வினைப் பிறவி சாராமே,

என்பார் மணிவாசகர். 

     மறைகளுக்கு இறுதி யாவார்!


வேதங்கள்,அவற்றை விளக்க வந்த உபநிடதங்கள், அவற்றை விளக்க வந்த இதிகாச புராணங்கள்  என்று இவை அனைத்திற்கும் இறுதி ஆனவன்  
அவன்.

படிப்பது எதற்கு ? அவனை அடைய.

கற்றதனால் ஆய பயன் என் கொல் , வாலவறிவன் நற்றாள் தொழார் எனின்.

கல்வியின், அறிவின் முடிவு அவனைத் தொழுவது என்று முடிக்கிறார் வள்ளுவர். 

அள்ள அள்ள குறையாத அர்த்தங்கள் கொண்டவை கம்ப இராமயணப் பாடல்கள். 

கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசித்துப் பாருங்கள். 

Wednesday, April 1, 2015

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்

இராமாயணம் - ஊனும் உயிரும் உணர்வும்




வான் நின்று இழிந்து
    வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல்
    உள்ளும் புறனும் உளன் என்ப;
கூனும் சிறிய கோத் தாயும்
    கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
    இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை.

எல்லாமே கடவுள் தான் என்றால், எவ்வளவு வறுமை, எவ்வளவு துன்பம், எவ்வளவு ஏமாற்று , பொய், பித்தலாட்டம் , அநியாயம், அக்கிரமம் என்று இவை அனைத்திற்கும் காரணமும் கடவுள் தானா ?

அப்படி என்றால் கடவுள் இருந்து என்ன பயன் ?

என்று சில பேர் கேட்கலாம்.

இது ஏதோ கடவுள் என்றால் ஒரு தனிப்பட்ட ஆள் என்று நினைத்துக் கொண்டு , அவர் தான் இது அனைத்திற்கும் காரணம் என்று  கேட்கப்படும் கேள்வி.

கடவுள் என்பதை ஒரு உருவத்துக்குள் அடக்க முடியாது. அப்படி அடக்க முடிந்தால்  அந்த உருவத்துக்கு வெளியே இருப்பது கடவுள் இல்லையா என்ற கேள்வி வரும்.

உள்ளே இருப்பதும் கடவுள் தான்

வெளியே இருப்பதும் கடவுள் தான்

இந்த உள்ளே இருப்பதற்கும் வெளியே இருப்பதற்கும் உள்ள தொடர்பும் கடவுள்தான் என்று சொல்ல்கிறார் கம்பர்.


ஊனும் உயிரும் உணர்வும் போல்
    உள்ளும் புறனும் உளன் என்ப;


ஊன் = உடல் 
உயிர் = உயிர் 
உணர்வு = இந்த உடலும் உயிரும் சேர்ந்து அனுபவிக்கும் அந்த அனுபவம் என்ற உணர்வு  

இந்த மூன்றும் அவன் தான். 

பார்பவனாக இருக்கிறான். 

பார்க்கப் படுபவனாக இருக்கிறான் 

பார்க்கும் அந்த செயலாக இருக்கிறான். 

உள்ளும் அவன். புறமும் அவன். 

சரி , அது ஒரு புறம்  இருக்கட்டும்.

உள்ளும் புறமும் ,  ஊனும், உயிரும் , உணர்வும்  எல்லாம் ஒன்றாக அல்லது ஒருவனாக  இருக்க முடியும் ?

அதை முதல் வரியில் சொல்கிறார்....

வான் நின்று இழிந்து
    வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,


நாம் எல்லாம் எங்கிருந்து வந்தோம் ? நம்மை சுற்றியுள்ள இந்த அனைத்து பொருள்களும்  உயிர்களும் எங்கிருந்து வந்தன ? 

வானத்தில் இருந்து வந்தது ...ஏதோ ஒரு புள்ளி வெடித்து சிதறி, இந்த சூரியன், பூமி, கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் என்று எல்லாம் உண்டாயின. 

இந்த ஐந்து பூதங்களும் வானத்தில் இருந்து ஏதோ ஒன்று வெடித்துச் சிதறி வந்தவைதான்.

நீங்களும், நானும், நான் எழுதும் இந்த கணணியும், நீங்கள் படிக்கும் உங்கள் கணணியும் எல்லாம்  ஏதோ ஒரு பொருளில் இருந்து வந்தவைதான். 

வானில் இருந்து வந்த , எல்லை இல்லாத இந்த பூதங்களின் தொகுப்பு எங்கும்  

ஊனும், உயிரும், உணர்வும், உள்ளும் , புறமும் ஒன்றானவன் அவன்.

அவன்,  கூனியும்,சிறிய தாயாரும் கொடுமை இழைக்க செங்கோல் துறந்து, காட்டையும் , கடலையும் தாண்டிப் போய் , தேவர்களின் துன்பம் துடைத்தவன்.

வான் இகந்து வந்த பூதங்களின் வைப்பு எங்கும் இருப்பவனுக்கு ஒரு கூனியும், சிறிய தாயாரும்   கொடுமை செய்ய முடியுமா ? அப்படி என்றால் அவன் என்ன பெரிய ஆள்   ?

எல்லாம் ஒரு விளையாட்டுத்  தான்.

அப்பா பெரிய கம்பெனியில் பெரிய பதவியில் இருப்பார்....வீட்டில் பிள்ளை அவன் முதுகில் யானை ஏறும். அவ்வளவு பெரிய ஆள் இது என்ன சின்னப் பிள்ளைத் தனமாய்   யானை மாதிரி செய்து கொண்டு என்று கேட்க்கக் கூடாது. 

பிள்ளைக்கு சந்தோஷம். அப்பா விளையாடுகிறார். 

உயிர்களுக்கு சந்தோஷம். இறைவன் விளையாடுகிறான். 

நான் முன்பே சொன்னது போல, இந்த பாடலை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.  நான் எழுதிய எல்லாவற்றையும் மறந்து நேரடியாக பாடலை அனுபவியுங்கள். 

 தோன்றியது, இறைவனின் தன்மை, அவன் லீலை என்று அனைத்தையும்   ஒருங்கே கொண்ட பாடல். 

 வாசிக்க வாசிக்க ஆழமான அர்த்தங்களை அள்ளித் தரும் பாடல். 

இன்னும் ஒரு முறை நுரையீரல் முழுவதும் காற்றை இழுத்து பெருமிதம் கொள்ளுங்கள்....உங்களுக்கும் தமிழ் தெரியும் என்று பெருமிதம் கொள்ளுங்கள்.