Showing posts with label Thempaavani. Show all posts
Showing posts with label Thempaavani. Show all posts

Wednesday, May 8, 2024

தேம்பாவணி - ஊர் வர்ணனை

 தேம்பாவணி - ஊர் வர்ணனை 



தேம்பாவணி என்ற இந்த நூலை எழுதியவர் வீரமாமுனிவர் என்ற வெளிநாட்டவர். 


இயேசுவின் தந்தை பற்றிய ஒரு கிறித்துவ நூல். 1700-களில் எழுதப்பட்டது. 


தேன் + பா + அணி எனக் கொண்டால் தேன் போன்ற பாடல்களைக் கொண்ட நூல் என்று ஆகும். 


மிக மிக இனிமையான பாடல்களைக் கொண்டது. 


நாட்டு வளம் பற்றி கூற வந்த வீரமாமுனிவர், 


மக்கள் எப்போதும் அலைந்து கொண்டு இருப்பார்கள். படிப்பு, வேலை, தொழில்,  என்று ஏதேனும் ஒன்று பற்றி அலைந்து கொண்டே இருப்பார்கள். தெருவில் பார்த்தால் தெரியும். எவ்வளவு பேருந்துகள், இரயில், கார், பைக், ஆட்டோ என்று எவ்வளவு அலைச்சல். இயேசுவின் தந்தை பிறந்த அந்த ஊரில் நீர் மட்டும்தான் அலை அலையாக அடிக்கும் அல்லது வேறு ஒன்றும் அலைவது இல்லையாம். 


பொருள் சம்பாதிக்க மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இருப்பார்கள். சண்டை, சச்சரவு, போர், என்று பொருள் வேண்டி ஆயிரம் சிக்கல்கள். அவர் காட்டும் நாட்டில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்று பணக்காரர்கள் சண்டை போடுவார்களாம். நான் உதவி செய்வேன், நீ உதவி செய்வாய் என்று சண்டை போடுவார்களாம். அதைத் தவிர வேறு எந்த வித சண்டையும் கிடையாது. 


மழை பொழியும் மேகம் அல்லது வேறு எங்கும் கறை கிடையாது. நீர் மேகம் மட்டும் கறுத்து கறை படிந்து இருக்கும். 


அந்த நாட்டில் சிறைச்சாலைகளே கிடையாது. காவல் என்பது அற வழியில் மக்களே செலுத்துவதற்கே அன்றி குற்றம் புரிந்தவர்களை அடைக்கும் சிறை கிடையாது. 


பாடல் 



நீர் அல்லதும் அலை இல்லது; நிறை வான் பொருள் இடுவார்

போர் அல்லது பகை இல்லது; புரிவான் மழை பொழியும்

கார் அல்லது கறை இல்லது; கடி காவலும் அறனால்

சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர் இடையே 

 

பொருள் 




நீர் அல்லதும் = நீரைத் தவிர 


அலை இல்லது = வேறு எதுவும் அலைவது இல்லை 


நிறை = நிறைந்த 


வான் பொருள் = வான் வரை குவிந்து கிடக்கும் பொருள் கொண்டோர் 


இடுவார் = தானம் செய்வார்  


போர்   அல்லது = அதற்கு போட்டி போட்டு செய்யும் போர் அல்லது 


பகை இல்லது = வேறு எந்த பகையும் இல்லாத நாடு 


புரிவான் மழை பொழியும் = வானில் இருந்து பொழியும் 


கார் = கரிய மேகம் 


அல்லது = தவிர 


கறை இல்லது = வேறு எங்கும் கறை கிடையாது 


கடி காவலும் = சிறந்த காவலும் 


அறனால் = அற வழியில் 



சீர் = நெறி படுத்தல் 


அல்லது = தவிர 


சிறை இல்லது = சிறை என்பது கிடையாது 


திரு மா நகர் இடையே = அந்தத் திரு நகரில்