Wednesday, July 29, 2020

நான்மணிக் கடிகை - உலக இயற்கை

நான்மணிக் கடிகை  - உலக இயற்கை 


கடிகை என்றால் துண்டு. மணி கடிகை என்றால் மணிகள் அமையப்பெற்ற துண்டு. இந்த நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துக்களை அழகாகச் சொல்லுவதால் இது நான் மாணிக்கடிகை என்று பெயர் பெற்றது.

இனிமையான, அனுபவ மொழிகள்.

நமக்கு இப்போது  சில வலிமைகள் இருக்கும். உடல் நன்றாக இருக்கும். ஞாபகம் சரியாக இருக்கும். நம் வேலையை நாமே செய்து கொள்ளக் கூடிய வலு இருக்கும்.

ஆனால், இந்த வலிமை அப்படியே இருக்காது. ஒரு நாள் கட்டாயம் குன்றும். எழுந்திருக்க முடியாமல் போய் விடலாம். நினைவு குறைந்து பல விட்டுப் போகலாம்.

அதை நினைக்க வேண்டும். என்றும் நாம் இதே வலிமையோடு இருப்போம் என்று நினைக்கக் கூடாது.

உடல் வலிமை மட்டும் அல்ல. எல்லா வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

உலகம் அனைத்தையும் ஆண்ட சர்வாதிகாரிகள் எங்கே? அவர்கள் கட்டிய அரசாங்கம் எங்கே? உலகிலேயே பெரிய நிறுவனம் என்று சொல்லிக் கொண்டிருந்த சில நிறுவனங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

எல்லா வலிமையையும் ஒருநாள் குன்றும்.

அது போல, பிறந்த உயிர்கள் எல்லாம் கட்டாயம் ஒரு நாள் அழியும். சந்தேகமே இல்லை.

அது போல, செல்வம். ஓரிரு தலைமுறைகள் இருக்கும். பின் விட்டுச் சென்று விடும்.  செல்வோம் என்பதால் அது செல்வம்.

இளமை அப்படியே இருக்குமா? இளமை மாறி முதுமை வருவது கட்டாயம்.

இதை எல்லாம் உணர்ந்து என்றும் அறம் செய்ய வேண்டும்.

பாடல்

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவாது
இளமை யிசைந்தாரும் இல்லை - வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்.

பொருள்

(click the link below to read further)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_64.html

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம் = பிறந்த உயிர்கள் சாகாமல் இருக்க முடியாது.


தாவாத இல்லை வலிகளும்  = எல்லாம் வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

மூவாது இளமை யிசைந்தாரும் இல்லை = மூப்பு அடையாமல் எப்போதும் இளமையோடு இருப்பவர் யாரும் இல்லை

வளமையிற் கேடுஇன்றிச் சென்றாரும் இல். = செல்வச் செழிப்போடு இருந்தாலும், அந்தச் செல்வம் நீண்ட நாள் நிற்காமல் போய் விடும்.


பிறந்தது இறக்கும், வலிமைகள் குன்றும், இளமை போய் முதுமை வரும், செல்வம் ஒரு நாள் போய் விடும்.

யாக்கை நிலையாமை
இளமை நிலையாமை
செல்வத்தின் நிலையாமை
வலிமையின் நிலையாமை

இந்த நிலையாமைகளைப் பற்றி ஒரே செய்யுளில் சொல்கிறது நான்மணிக் கடிகை.

இந்த நூலில் உள்ள மற்ற பாடல்களையும் படித்துப் பாருங்கள். 

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து 


நாலடியார் என்றால் ஏதோ தத்துவம், அறம் மட்டும் பேசும் நூல் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

இல்லறம் இனிமையாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும். என்னை பிரிந்து அவள் எப்படி இருப்பாளோ என்று கணவன் நினைக்க வேண்டும். அதே போல் மனைவியும்.

பிரிவு என்பது  அருளிரக்கத்தை தரும் என்பார்கள். "ஐயோ பாவம், அவள் தனியாக எப்படி துன்பப் படுவாளோ" என்று அவள் மேல் இரக்கமும், அதன் காரணமாக அவள் மேல் அருளும் பிறக்குமாம்.

"நான் இல்லாட்டி என்ன, அவ தனியா சமாளிச்சுக்குவா" என்று கணவன் நினைத்தால், பின் பிரிவு என்பதன் அர்த்தம்தான் என்ன?

Independence, equal rights, liberation என்ற பெயரில் மெல்லிய அன்பு உணர்வுகளை சிதைக்க தலைப் பட்டுவிட்டோம். ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்பது என்பது அடிமை தளை என்று நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு, அந்த அடிமை தளையில் இருந்து விடுதலை பெற துடிக்கிறோம்.

அன்புக்கு கட்டுப் படுவதின் சுகம் தெரியாதவர்கள்.

தலைவியை பிரிந்த தலைவன், வேறு ஏதோ ஊரில் இருக்கிறான். தலைவியைப் பற்றி நினைக்கிறான். அவன் மனதில் இரக்கம் பிறக்கிறது.

"பாவம் அவளை தனியே விட்டு விட்டு வந்து  விட்டேன். மாலை நேரத்தில் அவள் என் பிரிவால் மனம் ஏங்கி, கண்ணீர் விட்டு, அந்த கண்ணீரை தன்னுடைய மெல்லிய விரலால் தொட்டு துடைத்து, நான் செய்த இந்த குற்றத்தை நினைத்து, கையை தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு வருந்திக் கொண்டு இருப்பாளோ" என்று ஏங்குகிறான்.

பாடல்

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_29.html

செல்சுடர்  = சுடர் என்றால் சூரியன். செல் சுடர், மாலை நேரச் சூரியன். (தமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன் -பாரதி தாசன்)

நோக்கிச் = அந்த சூரியனைக் கண்டு

சிதரரிக்கண் கொண்டநீர் = சிவந்த கண்களில் வந்த கண்ணீர் சிதற

மெல்விரல் =மெல்லிய விரல்களைக் கொண்ட அவள்

ஊழ்தெறியா =விதி  தெரியாமல்

விம்மித் =விம்மல் கொண்டு

தன் - மெல்விரலின் = தன்னுடைய மெல்லிய விரலின்

நாள்வைத்து =நாட்களை குறித்து

நங்குற்றம் =என்னுடைய குற்றத்தை

எண்ணுங்கொல், = நினைத்து வருந்துவாளோ

அந்தோ = அந்தோ

தன் = தன்னுடைய

தோள்வைத் தணைமேற் கிடந்து. = கையை தலைக்கு தலையணையாகக் கொண்டு

கற்பனை செய்து கொள்ளுங்கள்.

புதிதாக மணம் முடித்த பெண். கணவனை பிரிந்து இருக்கிறாள். மெலிந்து, தரையில் படுத்து இருக்கிறாள். கையை மடித்து தலைக்கு வைத்துக் கொண்டு படுத்து இருக்கிறாள்.

இரவு நேரம் கூட அல்ல. மாலை நேரம்.

சீவி முடித்து, பூ வைத்து, விளக்கு ஏற்றி, அதெல்லாம் அவளுக்குத் தோன்றவிலை. கட்டாந் தரையில் அந்தி சந்தி நேரம் படுத்துக் கிடக்கிறாள்.

கண்ணில் இருந்து நீர் வழிகிறது. விரலால் சுண்டி விடுகிறாள்.

கண்ணீர் நிறைவதால் "ஊழ் தெரியா" என்றார்.

அவள் அப்படி இருப்பாளோ என்னவோ தெரியாது. அப்படி இருப்பாள் என்று  கணவன்  நினைக்கிறான். அவன் மனதில் பச்சாதாபம் ஏற்படுகிறது.

என்னால் தானே அவள் துன்பப் படுகிறாள் என்று இவன் வருந்துகிறான்.

தான் குற்றம் செய்து விட்டதாக பழியை தன் மேல் போட்டுக் கொள்கிறான் "நம் குற்றம் எண்ணும் கொல் "என்று நினைக்கிறான்.

அவளுக்கு என்ன, ஜாலியா ஊர் சுத்திட்டு, swiggy ல order பண்ணி சாப்பிட்டுக்கிட்டு இருப்பாள் என்று  நினைத்தால் காதல் வருமா?

மீண்டும் மீண்டும் அவன் நினைவில் வருவது அவளின் மெல்லிய விரல்கள்.

அவள் வருந்துவாளே என்று அவன் வருந்துகிறான்.

அது தான் தாம்பத்யம். அது தான் காதல்.


இப்படி மெல்லிய, நுணுக்கமான மனித உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது  நாலடியார்.

இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.

மூல நூலை தேடிப் பிடித்து படியுங்கள்.

Tuesday, July 28, 2020

திருக்குறள் - நன்றி மறப்பது நன்றன்று

திருக்குறள் - நன்றி மறப்பது நன்றன்று 


தமிழ் பாடல்களை படித்து புரிந்து கொள்வது என்ன பெரிய கடினமான காரியமா என்று நான் நினைத்தது உண்டு.

எந்தப் பாடலிலும் ஒரு சில கடினமான சொற்கள் இருக்கும். அகராதியில் தேடினால் தெரியாத சொற்களுக்கு பொருள் விளங்கிவிட்டுப் போகிறது.

இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று நினைத்தேன்.

அது எவ்வளவு தவறு என்று பரிமேலழகரின் உரையைப் படிக்கும் போது தெரிகிறது.

நாம் சொல்லில் இருந்து பொருளை பிடிக்க நினைக்கிறோம். அவர் பொருளில் இருந்து சொல்லுக்கு வருகிறார்.

பாடல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

பொருள்

(to continue reading, please click the link below)

interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_50.html

இது என்ன பெரிய சிக்கலான குறளா ? வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்வதானால் இப்படி சொல்லி விடலாம்

நன்றி   = ஒருவன் நமக்குச் செய்த நல்லவைகளை

மறப்பது நன்றன்று = மறப்பது நல்லது அல்ல

நன்றல்லது = நன்மை தராதவற்றை

அன்றே மறப்பது நன்று = அன்றே மறப்பது நல்லது

அவ்வளவுதானே. பொதுவான அர்த்தம் அப்படித்தான் என்று நினைப்போம். இதில் என்ன  நுணுக்கமான பொருள் இருந்து விடப் போகிறது என்று நினைத்து  இதை அலட்சியம் செய்து விட்டு அடுத்து குறளுக்கு தாவி விடுவோம்.

பரிமேலழகர் ஒரு உரை சொல்கிறார். எத்தனை ஆயிரம் வருடம் படித்தாலும் அது  என் மர மண்டைக்கு எட்டி இருக்காது.

அது என்ன தெரியுமா?

நமக்கு நல்லது செய்வதும், அல்லாதன செய்வதும் வேறு வேறு ஆள் என்று நினைத்துக் கொண்டு நாம் பொருள் சொல்கிறோம்.

ஒரே ஆள் இரண்டையும் செய்தால்?

இப்படி யோசிக்க முடியுமா நம்மால்?

ஒருவன் நமக்கு நன்மையையும் செய்து இருக்கிறான், தீமையும் செய்து இருக்கிறான். அப்படி இருந்தால், அவன் செய்த நல்லவைகளை மனதில் வைத்துக் கொள் . அவன் செய்த தீமைகளை உடனேயே மறந்து விடு என்கிறார்.

நம்மில் பலருக்கு சிக்கல் என்ன என்றால், நல்லதை மறந்து விடுகிறோம். தீயவற்றை  நினைவில் வைத்துக் கொள்கிறோம்.

பெரும்பாலான கணவன் மனைவி சிக்கல் ஏன் வருகிறது.

என்றோ எப்போதோ நடந்த ஒன்றை ஞாபகம் வைத்துக் கொண்டு,  நீங்கள் அன்று அப்படி சொன்னீர்களே, அப்படிச் செய்தீர்களே என்று அந்த ஒரு நல்லன அல்லாதாதை  ஆயுள் முடியும் வரை மனதில் வைத்து கொண்டு சொல்லிக் சொல்லி காட்டிக் கொண்டே இருப்பது.

கணவன் எவ்வளவு நல்லது செய்து இருந்தாலும், எல்லாவற்றையும் மறந்து விட்டு, என்றோ சொன்ன ஒன்றை ஞாபகம் வைத்து மறக்காமல் சொல்வது.

நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரும் நமக்கு ஏதோ ஒரு நன்மை செய்து இருப்பார்கள். அறிந்தோ அறியாமலோ சில தீமைகளும் செய்து இருக்கலாம்.

தீமையை மறந்து, நல்லதை மட்டும் மனதில் வைத்து இருந்தால் வாழ்க்கை எவ்வளவு சுகமாக இருக்கும்? உறவுகள் எவ்வளவு இனிமையாக இருக்கும்.

ஒருவன் நமக்கு ஒரு தீமை செய்தால், அதை எப்படி மறக்க முடியும்? வள்ளுவர் சொல்லுவார். அவருக்கு என்ன.

இன்னும் சொல்லப் போனால், தீமை மட்டும் தான் ஆழமாக ஞாபகம் இருக்கிறது.

இந்த மனுஷன் திருவள்ளுவர், இப்படி ஒரு கேள்வி வரும் என்று நினைத்து, அதற்கும் பதில் சொல்லிவிட்டு   போய் இருக்கிறார்.

மறப்பது எப்படி என்று தெரியுமா உங்களுக்கு?

எவ்வளவு யோசித்தாலும் கண்டு பிடிக்க முடியாது. திருவள்ளுவர் ஒருவரால் தான்  அப்படி யோசித்து சொல்ல முடியும்.

மறப்பது எப்படி என்று வள்ளுவர் சொன்னதை நாளை சிந்திப்போமா ...



Monday, July 27, 2020

நாலடியார் - எதைக் கற்பது ?

நாலடியார் - எதைக் கற்பது ?


உலகத்தில் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடியுமா?  அதுவும் நன்றாக இருக்கிறது, இதுவும் சுவாரசியமாக இருக்கிறது, அது பயனுள்ளதாக இருக்கும், இது ஆன்மீகத்துக்கு உரிய நூல் என்று அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது.

சரி, ஏதோ ஒன்றை படிக்கலாம் என்று உட்கார்ந்தால் , "டொய்ங்" என்று whatsapp சத்தம். என்ன தான் வந்திருக்கிறது என்றுர் பார்ப்போம் என்று மனம் அதன் பின்னே போகிறது. பார்த்தால் அதோடு நிற்குமா மனம்? அதுக்கு ஒரு பதில் போடுவது. நாம் போட்டால் மற்றவன் சும்மா இருப்பானா? அவன் பதிலுக்கு ஒன்று சொல்லுவான். இப்படி கொஞ்ச நேரம் போகிறது.

சரி, அதை எல்லாம் முடித்து விட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,இந்த செய்திகளை கொஞ்சம் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று மனம் போகிறது.  கொரோனா என்ன ஆச்சோ, கிரிக்கட் மேட்ச் எப்படி வருமோ, தங்கம் விலை என்ன ஆயிற்றோ என்று கவலை. சரி அதை எல்லாம் பார்த்துட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,

இந்த hotmail / gmail ஒருக்க சீக்கிரம் பாத்ருவோம் என்று மனம் போகிறது.

அப்புறம், இந்த facebook update கொஞ்சம் பாக்கணும்.

இது உருப்படுமா?



நாலடியார் சொல்கிறது....

"கல்விக்கு கரை இல்லை. நம் வாழ்நாளோ மிகவும் சொற்பமானது. அதிலும் பல நாட்கள் நோயில் போய் விடுகிறது. எனவே, ஆராய்ந்து, தெளிந்து சிறந்தவனவற்றையே படிக்க வேண்டும். எப்படி என்றால், நீரும் பாலும் கலந்து இருந்தாலும், நீரை விடுத்து பாலை மட்டும் உண்ணும் அன்னம் போல."

பாடல்

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

click the link below to continue reading

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_34.html

பொருள்

கல்வி கரையில = கல்வி கரை காண முடியாதது. நாலடியார் காலத்திலேயே அப்படி என்றால், இப்போது எவ்வளவு வளர்ச்சி நிகழ்ந்து இருக்கிறது?

கற்பவர் நாள்சில; = கற்றுக் கொள்ள நினைப்பவர்களின் நாடுகளோ வெகு சில.


மெல்ல நினைக்கின்  = ஆராய்ந்து பார்த்தால்

பிணிபல = நோய் பல.உடல் நோயும், மன நோயும்.

தெள்ளிதின் =  தெளிந்து

ஆராய்ந்து =ஆராய்ந்து

அமைவுடைய = பொருத்தமானவற்றை

கற்பவே = கற்க வேண்டும்

நீரொழியப் = நீரை நீக்கி

பாலுண் = பாலை மட்டும் உண்ணும்

குருகின் தெரிந்து. = அன்னப் பறவையைப் போல

வாசிக்கின்ற ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க வேண்டும். நான் இப்போது வாசிப்பது எனக்கு  எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்று.

தனக்கும், பிறருக்கும் இம்மைக்கும், மறுமைக்கும் அறம் பொருள் இன்பம் என்றான பலன்களை தராத நூல்களை ஒரு போதும் படிக்கக் கூடாது.

என்ன ? சரியா?



கம்ப இராமாயணம் - பெண் எனும் மென்மை

கம்ப இராமாயணம் - பெண் எனும் மென்மை 


கார் காலம் முடிந்த பின் சீதையை தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து போனான். அவனுக்கு, அதை நினைவு படுத்த இலக்குவனை இராமன் அனுப்புகிறான்.

கோபத்தோடு வருகிறான் இலக்குவன்.

என்ன செய்வது என்று அறியாமல் வானரங்கள் சிதறி ஓடுகின்றன.

அனுமன் ஒரு உபாயம் செய்து, இலக்குவன் முன் தாரையை அனுப்புகிறான்.

ஒரு ஆண் எவ்வளவு முரடனாக, வலிமையானவனாக இருந்தாலும், ஒரு பெண்ணின் முன் அவன் கோபம், வீரம், ஆத்திரம் எல்லாம் அடங்கி விடுகிறது.  அதுதான் பெண்ணின் பெருமை.

ஆனால் அதை எல்லாம் இப்போது எதிர் பார்க்க முடியாது.

உனக்கு கோபம் வந்தால் பொய் சுவற்றில் முட்டிக் கொள் என்கிறார்கள். உனக்கு மட்டும் தான் வலிமையா, என் biceps ஐ பார் என்று முட்டியை மடக்குகிறாரகள்.

தவறில்லை.

பெண் வடிவில் பிறந்து விட்டதற்காக பெண்மை குணம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.

சில ஆண்கள், பெண் வடிவத்தில் அடை பட்டுப் போய் விடுகிறார்கள்.

சில பெண்கள், ஆண் வடிவத்தில் அடை பட்டுப் போய் விடுகிறார்கள்.

நானும் துப்பாக்கி சுடுவேன், மல் யுத்தம் செய்வேன், கயிறு கட்டி மரத்தில் ஏறுவேன்  என்று தங்கள் பெண்மையின் மென்மையை சிதைத்துக் கொண்டு ஒரு கூட்டம்  அலைகிறது.

பின் ஏன் ஓரினச் சேர்க்கை என்பது வராது?

இங்கே இரண்டு பால் எங்கே இருக்கிறது ?

ஆண்கள் இருக்கிறார்கள். ஆண்களாக வேண்டும் முயற்சி செய்யும் பெண்கள் இருக்கிறார்கள்.

பெண்ணாக இருப்பதில் பெண்ணுக்கு சந்தோஷம் இல்லை. தானும் ஒரு ஆண் போன்றவள் என்று நிலை நிறுத்த பல முயற்சிகள் நடக்கின்றன. அந்த எண்ணமே, முயற்சியே சொல்கிறது அந்தப் பெண் ,  ஆண் என்பவன் தன்னை  விட உயர்ந்தவன் என்று ஒப்புக் கொண்டு விட்டதை. இல்லை என்றா எதற்கு இத்தனை   பாடுபட வேண்டும்? தன்னை விட தாழ்ந்த ஒன்றாக மாற யார் விரும்புவார்கள்?

தாரை வந்து எதிரில் நிற்கிறாள்.

இலக்குவன் வெட்கப் படுகிறான். சங்கடப் படுகிறான். தலை கவிழ்ந்து நிற்கிறான்.  அவன் கால்கள் பலவீனமாகி விட்டன. கீழே விழுந்து விடமால் இருக்க கையில் உள்ள வில்லை தரையில் அழுத்தமாக ஊன்றி , அதைப் பற்றிக் கொண்டு நிற்கிறான். மாமியார் முன்னால் நிற்கும்  மருமகனைப் போல வெட்கி நிற்கிறான்.     அப்போது தோழிகள் மத்தியில் இருந்து வெளிப்பட்டு தாரை சொல்கிறாள் ....

பாடல்                       


தாமரை வதனம் சாய்த்து,
    தனுநெடுந் தரையின் ஊன்றி,
மாமியர் குழுவின் வந்தான்
    ஆம் என, மைந்தன் நிற்ப,
பூமியில் அணங்கு அனார்தம்
    பொது இடைப் புகுந்து, பொன்தோள்
தூமன நெடுங்கண் தாரை,
    நடுங்குவாள், இனைய சொன்னாள்.


பொருள்

(to continue reading, pleae click the link below)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_27.html

தாமரை = தாமரை போன்ற

வதனம்  = முகத்தை

சாய்த்து, = மெல்ல சாய்ந்து

தனு = வில்

நெடுந் தரையின் ஊன்றி, = நீண்ட பூமியில் ஊன்றி

மாமியர்  குழுவின் = மாமியார்கள் உள்ள குழுவின் முன்

வந்தான் = இலக்குவன் வந்தான். அந்தக் காலத்தில் மருமகன் முன் மாமியார்கள் வரமாட்டார்கள். இப்போதெல்லாம் மருமகன் கூட பைக்கில் மாமியார்கள் போகிறார்கள்.

ஆம் என = என்பதைப் போல

மைந்தன் நிற்ப, = இலக்குவன் நிற்க


பூமியில் = பூமியில்

அணங்கு அனார்தம் = தேவதைகளைப் போல உள்ள பெண்கள்

பொது இடைப் புகுந்து = மத்தியில் இருந்து புறப்பட்டு

பொன்தோள் = பொன்னைப் போன்ற தோள்களை உடைய

தூமன = தூய்மையான மனதைக் கொண்ட

நெடுங்கண் தாரை, = நீண்ட கண்களைக் கொண்ட

நடுங்குவாள் = நடுக்கம் கொண்டவளாக

, இனைய சொன்னாள். = இவற்றைச் சொன்னாள்

தாரையைக் கண்டவுடன் , இலக்குவனின் கோபம் மறைந்து விட்டது. அது தான் பெண்ணின் மகத்துவம். அதாவது பெண்ணாக இருக்கும் பெண்களின் மகத்துவம்.






Thursday, July 23, 2020

கம்ப இராமாயணம் - தவறுகளும் பிராயச்சித்தங்களும்

கம்ப இராமாயணம் - தவறுகளும் பிராயச்சித்தங்களும் 


தவறு செய்வது மனித இயல்பு. தவறே செய்யாத மனிதன் எங்கும் இல்லை.

தவறு செய்து விட்டால், அது தவறு என்று உணர்ந்து விட்டால், அதில் இருந்து எப்படி வெளிப்படுவது?

செய்த தவறு உறுத்திக் கொண்டே இருக்கும். ஐயோ, அப்படி செய்து விட்டோமே , இப்படிச் சொல்லி விட்டோமே,  அப்படி செய்து இருக்கக் கூடாது என்றெல்லாம் மனம் கிடந்து உழலும்.

இதில் இருந்து வெளி வர வழி சொல்ல வேண்டும். இல்லை என்றால் இரண்டு நிகழ வாய்ப்பு இருக்கிறது.

முதலாவது, அதிலேயே அழுந்தி மனிதன் மன அழுத்தம் காரணமாக, மன நோயாளியாகப் போய் விடலாம். குற்ற உணர்வு ஒரு புறம் அழுத்த, மறு புறம் மனசாட்சி உறுத்த, வெளியே சொல்ல முடியாமல் உள்ளேயே புழுங்கி மனிதன் மன நோயாளியாக மாறி விடலாம்.

இரண்டாவது, சரி, தவறு செய்தது செய்தாகி விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி, செய்த தவறுக்கு ஞாயம் கற்பித்து மேலும் மேலும் அதையே செய்து கொண்டிருப்பான்.

இரண்டுமே தவறான முடிவு.

எனவே, இதில் இருந்து வெளிவர ஒவ்வொரு மதமும் ஒரு வழியைச் சொல்கின்றன.

பாவ மன்னிப்பு, புனித நீராடல், புனித இடங்களுக்குச் செல்லுவது, தானம் செய்வது, என்று எவ்வளவோ பிராயச்சித்தங்கள் சொல்கின்றன.

காசிக்குப் போனால், கங்கையில் நீராடினால் அது வரை செய்த பாவம் எல்லாம் போய் விடும்  என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.

எல்லா பாவத்துக்கும் ஒரு பிராயச்சித்தம் இருக்கிறது - ஒரே ஒரு பாவத்தைத் தவிர.

அது பாவத்தில் அனைத்திலும் கொடுமையான பாவம் ஆகும் என்பது நம் முன்னோர் முடிவு.

அது என்னவாக இருக்கும்?

மழைக் காலம் முடிந்த பின் சீதையைத் தேடித் தருவதாக இராமனிடம்  வாக்களித்து விட்டு சென்றான்  சுக்ரீவன்.  மழைக் காலம் முடிந்தும் வரவில்லை. கோபம் கொண்டு இலக்குவன் போகிறான்.

மிகவும் சுவையான பல பாடல்கள் உள்ள இடம்.

அப்போது அங்கு வந்த அனுமனிடம் இலக்குவன் கேட்கிறான்...."நீயுமா  செய் நன்றி  மறந்தாய்" என்று.

அப்போது அனுமன் கூறுவான்


"பெற்றோரை, ஆசிரியரை, தெய்வம் போல் போற்றத்தக்க அந்தணர்களை, பசுவை, குழந்தைகளை, பெண்களை கொன்றவர்களுக்குக் கூட உய்வு உண்டு. ஆனால், செய் நன்றி மறந்தவர்களுக்கு ஒரு உய்வும் இல்லை" என்பதை நான் அறிவேன்.எனவே , நான் செய் நன்றி மறக்கமாட்டேன் என்று உணர்த்துகிறான்.

பாடல்


'சிதைவு அகல் காதல் தாயை,
      தந்தையை, குருவை, தெய்வப்
பதவி அந்தணரை, ஆவை,
      பாலரை, பாவைமாரை,
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்
      ஆம் ஆற்றல்; மாயா
உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
      ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?'


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_23.html

'சிதைவு அகல் = குற்றம் அகற்றிய

காதல் = அன்புள்ள

தாயை = தாயை

தந்தையை = தந்தையை

குருவை = குருவை

தெய்வப் பதவி அந்தணரை = தெய்வம் போல போற்றத்தக்க அந்தணர்களை

ஆவை, = பசுவை

பாலரை = குழந்தைகளை

பாவைமாரை, = பெண்களை

வதை புரிகுநர்க்கும் = கொன்றவர்களுக்கு

உண்டாம் = உண்டு

மாற்றல் ஆற்றல் =  அந்த பாவத்தில் இருந்து தப்பிக்க ஒரு மாற்று வழி உண்டு

மாயா = அழியாத

உதவி கொன்றார்க்கு = செய்த உதவியை மறந்தவர்க்கு

ஒன்றானும் = ஒருவழியிலும்

ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?' = அதை மறைக்க ஒரு வழி உண்டோ? (இல்லை என்பது பொருள் )

எந்நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு

என்பது பொய்யா மொழி


நன்றி மறந்தால் என்றால் யார், யாருக்குச் செய்த நன்றி என்ற கேள்வி வரும்.

அது பற்றி ஆராய முற்பட்டால் பிளாக் நீண்டு விடும்.

செய் நன்றி கொன்ற குற்றத்தை முதல் குற்றமாக வைக்கிறார்கள் நம் முன்னவர்கள்.

மனித மனம் மறக்கும் இயல்பு   உடையது.

எனவே, இதுவரை பெற்ற நன்றிகளை ஒரு பட்டியல்  போடுங்கள்.  இனி பெருபவற்றையும்  குறித்துக் கொள்ளுங்கள்.

நன்றி மறவாமல் இருப்போம்.



Wednesday, July 22, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - எங்கும் போய்க் கரை காணா - 108 திவ்ய தேசம் 


சில பேர் அதைச் செய், இப்படிச் செய் என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள். தங்கள் வாழ்க்கையில் கடை பிடிக்க மாட்டார்கள்.

குலசேகர ஆழ்வார், ஒரு நாட்டின் அரசராக இருந்தவர். ஆன்மீக பக்குவம் வர, அரச போகங்களை துறந்து விட்டு ஆன்மீகத்தில் இறங்கி விட்டார்.

ஒரு அரசனாக இருந்தவன், ஆன்மீகத்தில் வருவது என்பது கடினமான காரியம்.

அரசன் என்ற அந்தத் திமிர், ஆணவம், கோவம், ஆசை, வேகம் எல்லாம் இருக்கும். பக்திக்கு அது ஒன்றுமே ஆகாது.

எப்படியோ நிகழ்ந்த இரசவாதம்.

நமக்கு இன்பம் வந்த போது, எல்லாம் என் சாமர்த்தியம் என்று நினைக்கிறோம். என் உழைப்பு, என் அறிவு, என் திறமை இந்த வேலை கிடைத்தது, இந்த பதவி கிடைத்தது, இந்த இலாபம் கிடைத்தது என்று மகிழ்கிறோம்.

துன்பம் வரும் போது ? கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய், இந்தத் துன்பத்தில் இருந்து என்னை காப்பாற்று, என்று இறைவனை நோக்கி ஓடுகிறோம்.

ஆழ்வார் பார்க்கிறார். உலகில் பல பேர், இறைவனை விட்டு வெகு தூரம் சென்று விட்டதாக , சென்று கொண்டு இருப்பதாகப் படுகிறது அவருக்கு.

உலகில் உள்ளவர்களை பார்த்துச் சொல்கிறார், "நீங்கள் எவ்வளவு தூரம் சென்றாலும், மீண்டும் இங்கு தான் வர வேண்டும்" என்று.

மேலும்,  ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள் கூட, துன்பம் வந்தால், இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா,  இந்த ஆன்மா, பக்தி, இறைவன் என்பது எல்லாம் பொய் தானோ  என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுக்கும்   அவர் சொல்கிறார் "தினம் வரும் போது நீங்கள் ஆண்டவனை விட்டு  விலகிப் போனாலும், மீண்டும் இங்கே தான் வர வேண்டும்" என்று.

அதை ஒரு உதாரணத்தில் விளக்குகிறார்.

அது ஒரு பெரிய கப்பல். அந்தக் கப்பலின் கொடி மரத்தில் சில பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. கப்பல் நங்கூரம் எடுத்து கடலில் செல்லத் தொடங்கி விட்டது. கொஞ்ச தூரம் சென்ற பின், மாலுமிகள் கப்பலின் பாய் மரத்தை மாற்ற வேண்டி  கொடி கம்பத்தைப் பார்க்கிறார்கள். அங்கே பறவைகள் அமர்ந்து இருக்கின்றன. அவற்றை அவர்கள் விரட்டுகிறார்கள்.

அந்தப் பறவைகளும் சிறகடித்து பறந்து போய் விடுகின்றன. போனால், எங்கு பார்த்தாலும் தண்ணீர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் தான். எங்கு போகும் அந்தப் பறவைகள். மீண்டும் அந்தப் கப்பலுக்கே திரும்பி வந்து விடுகின்றன.

அது போல, இறைவா, நீ என்னை எவ்வளவு தான் துன்பம் தந்து என்னை அடித்து விரட்டினாலும், எனக்கு போவதற்கு ஒரு இடமும் இல்லை. நான் உன்னிடம்தான் வருவேன்  என்கிறார்.

பாடல்


வெங்கண்தின் களிற்டர்த்தாய்
          விற்றுவக் கோட்டம்மானே
     எங்கு போ யுய்கேனுன்
          இணையடியே யடையலல்லால்
     எங்கும் போய்க் கரை காணா
          தெறிகடல் வாய் மீண்டேயும்
     வங்கத்தின் கூம்பேறும்
          மாப்பறவை போன்றேனே
           (692) பெருமாள் திருமொழி 5 - 5


பொருள்

(click the link below to  continue reading....)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/108.html

வெங் = வெம்மையான
கண் = கண்களைக் கொண்ட
தின் = திடமான
களிற்டர்த்தாய் = களிற்றை + அடர்ந்தாய் = களிறு என்றால் யானை. அடர்தல் சண்டை போடுதல். குவாலயபீடம் என்ற யானையை கண்ணன் சண்டையிட்டு கொன்றான்

விற்றுவக் கோட்டம்மானே = வித்துவக்கோடு என்ற இடத்தில் உள்ள என் அம்மானே

எங்கு போ யுய்கேனுன் = எங்கு போய் பிழைப்பேன்

இணையடியே = உன்னுடைய இரண்டு திருவடிகளே

யடையலல்லால் = அடைக்கலம் அல்லாமல்

எங்கும் போய்க்  = எங்கு போனாலும்

கரை காணா = கரையை காணாத

தெறிகடல் வாய்  = அலைகள் தெறிக்கும் கடலின் நடுவே

மீண்டேயும் = மீண்டும் வரும்

வங்கத்தின் = கப்பலின்

கூம்பேறும் = கூம்பில் ஏறும். கொடி மரத்தில் ஏறும்

மாப்பறவை போன்றேனே = பெரிய பறவை போன்று இருந்தேனே

அவர்  சொல்வது அவரை மட்டும் அல்ல. நம்மையும் சேர்த்துதான்.

பிறவி என்ற கடலில் விழுந்து விட்டோம். எங்கும் தண்ணீர். எங்கு  போவது?

அவன் திருவடிகளே தெப்பம் என்று பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

துன்பம் வரும். அதற்காக தெப்பத்தை விட்டு விடக் கூடாது.

இந்தப் பாடல் 108  திவ்ய தேசங்களில் ஒன்றான திரு வித்துவகோடு என்ற தலத்தில் மங்களா சாசனம் செய்யப் பட்டது.

இது போல 10 பாசுரங்கள் பாடி இருக்கிறார். மூல நூலை தேடிப் படியுங்கள்.

கண்ணில் நீர் பணிக்கும் பாசுரங்கள்.

படித்துப் பாருங்கள். விழி ஓரம் நீர் திரளவில்லை என்றால் மூடி வைத்து விடுங்கள். அதைப் படிக்க உங்களுக்கு நேரம் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

சரி, அந்த இடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போவது?

கேரளாவில், பாலக்காடு என்ற இடத்துக்கு அருகில் உள்ளது.

பாலக்காட்டில் இருந்து பட்டாம்பி போய்விட்டால், அங்கிருந்து பக்கம்.

பட்டாம்பி வரை இரயில் இருக்கிறது. அங்கிருந்து சுமார் 2  கிமி தான்.

பஞ்ச பாண்டவர்கள் சிலை அமைத்து பூஜித்த தலம் என்று சொல்கிறார்கள்.

சிவனுக்கும், திருமாலுக்கும் ஒரே இடத்தில் கோவில். இது போல 10 திவ்ய தேசங்கள் இருக்கிறதாம்.

கேரளா பாணியும் , தமிழ் பாணியும் கலந்து நிற்கும் தலம்.


பெருமாள் - உய்ய வந்த பெருமாள்.
தாயார் - வித்துவ கோட்டு வல்லி



இந்த வைரஸ் பிரச்சனை எல்லாம் முடியட்டும்.

ஒரு நடை இந்த கோவிலுக்கு போய் விட்டு வரலாம். 

Tuesday, July 21, 2020

ஔவையார் பாடல் - நன்றே

ஔவையார் பாடல் - நன்றே 


தீயாரைக் காண்பதும், அவர்கள் சொல்வதை கேட்பதும் தீதே, அவரோடு இணங்கி இருப்பதும் தீதே என்றார்.

ஆனால் நம்மைச் சுற்றி இருப்பது எல்லாமே தீமை பயப்பதாகத்தானே இருக்கிறது. தொலைக்காட்சிப் பெட்டி, திரைப்படம், வலை தளங்கள், செய்தித் தாள்கள், என்று எங்கு பார்த்ததாலும் பொய்யும், புரட்டும், வஞ்சனையும், கொலை, கொள்ளை, ஏமாற்று வேலை என்று தானே இருக்கிறது.

இதை விட்டால் ஒன்றும் இல்லையே. பின் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு ஔவை தரும் விடை

மனம் சும்மா இருக்காது. எதையவாது பிடித்துக் கொள்ளும் இயல்பு உடையது. அதை அறிந்த ஒளவை சொல்கிறாள்....

(click below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_21.html

பாடல் 

நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றேஎ - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று


பொருள்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே  = நல்லவர்களை காண்பதும் நன்றே. நேரில் பார்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தொலைக் காட்சியில், வலை தளங்களில் பார்த்தால் கூட போதும்.

நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே = அவர்கள் சொல்வதை கேட்பதும் நன்றே

நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே;  = அவர்களுடைய குணங்களை சொல்வதும் நல்லதே

அவரோ(டு) இணங்கி இருப்பதுவும் நன்று = அவர்களோடு சேர்ந்து இருப்பதும் நல்லது

அதாவது,


கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பதை விடுத்து நல்லவற்றை பார்க்க வேண்டும்.

எவன் எவனோ பேசுவதை கேட்பதை விட்டு விட்டு, நல்லவர்கள் பேசுவதை கேட்க வேண்டும்.

அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அரட்டை அடிப்பதை விட்டு விட்டு, நல்லவர்களைத் தேடிப் போய்   கண்டு அவர்களோடு பேச வேண்டும்.

பார்க்க முடியவில்லையா, பேச முடியவில்லையா, அவர்களின் நல்ல குணத்தையாவது  மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இராமன் இப்படி வாழ்ந்தான்.

தர்மன் இப்படிச் செய்தான்.

அரிச்சந்திரன் இப்படி பொய் பேசாமல் இருந்தான் என்று நல்லவர்களின்  குணங்களை  பேச வேண்டும்.

அப்படிச் செய்வதன் மூலம், நாளடைவில் அந்த குணங்கள் நம்மோடு ஒட்டிக் கொள்ளும்.



Monday, July 20, 2020

ஒளவையார் பாடல் - தீதே

ஒளவையார் பாடல் -  தீதே 


பாடல்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள்

மிக எளிய பாடல்.

தீயாரைக் காண்பதுவும் தீதே = தீயவர்களை காண்பதும் தீது

திரு அற்ற = சிறப்புகள் அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே = தீயவர்கள் சொல்வதை கேட்பதும் தீது

தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே = தீயவர்களின் குணங்களை உரைப்பதும் தீதே

அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. = அத்தகைய தீயவர்களோடு சேர்ந்து இணக்கமாக இருப்பதும் தீதே


சரியாத்தானே சொல்லி இருக்கிறாள் கிழவி. இதில் என்ன சொல்ல இருக்கிறது என்று கேள்வி எழலாம்.

அதுவும் இல்லாமல் நாம எங்க தீயவர்களோடு பழகுகிறோம், பேசுகிறோம், பார்க்கிறோம்.  இதெல்லாம் நமக்கு இல்லை. நாம் பாக்குறது, பேசுறது எல்லாம் நம்ம அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நன்பர்கள், உறவினர்கள் அவ்வளவுதான்.  அவங்க எல்லாம் தீயவர்கள் இல்லை. எனவே, நமக்குச் சொன்ன அறிவுரை இல்லை   என்று எடுத்துக் கொள்ளலாமா?

சற்று யோசியுங்கள்.

நீங்கள் தீயவர்களை  பார்ப்பதே இல்லையா?  அவர்கள் சொல்வதை கேட்பதே இல்லையா?

நீங்கள் தினமும் தீயவர்களை பார்க்கிறீர்கள், அவர்கள் சொல்வதை கேட்கிறீர்கள் , அவர்களோடு இணக்கமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

எத்தனை டிவி பார்க்கிறீர்கள்?

அதில் எத்தனை சீரியல்கள், நாடகங்கள், அரசியல் அலசல்கள், "பெரியவர்களின்" பேச்சுகள் - அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

அவர்கள் நல்லதைத்தான் சொல்கிறார்களா? நல்லதைத்தான் செய்கிறீர்களா?

யாரை எப்படி கொல்லுவது , யாரை எப்படி ஏமாற்றுவது, எப்படி வஞ்சகம் செய்வது,  ஆட்களை கடத்துவது, கொலை செய்வது, திருடுவது என்று உலகில்  உள்ள அத்தனை வக்ரங்களும் அவற்றில் இல்லையா?

அவற்றை பார்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் மனம் பாதிக்கப் படாதா?

இல்லை பாதிக்காது என்று நீங்கள் சொன்னால், பின் நீங்கள் ஆன்மீக சொற்பொழிவுகளை  கேட்பதிலோ, படிப்பதிலோ அர்த்தம் இல்லை.

நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் அனைத்தும் நம்மை பாதிக்கத்தான் செய்யும்.

சரி. நான் தான் தொலைக்காட்சியே பார்ப்பதே இல்லையே . அப்படியே பார்த்தாலும்  செய்தி, பாடல், நகைச்சுவை என்று மட்டும் தானே பார்ப்பேன்  என்று சொல்லலாம்.

அந்தச் செய்திகளில் தீயவை இல்லையா?  அதை சொல்பவர்கள் நல்லவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?  யார் யாரோ பேசியதை காட்டுகிறார்கள் செய்தியில்.  அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

சார், தொலைக் காட்சியே பார்ப்பதே இல்லை. எங்கள் வீட்டில் தொலைக் காட்சிப் பெட்டியே இல்லை என்று சொல்லலாம்.

சினிமா?

செய்தித்தாள் ?

தீமைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அவை தீமை என்று கூடத் தெரியாமல்   வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சரி பார்த்தால் என்ன? கேட்டால் என்ன? அதில் சொன்ன மாதிரியா செய்கிறோம் . நமக்குன்னு ஒரு அறிவு இருக்குல்ல என்று சொல்லலாம்.

ஒரு நடிகர் சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கிறார். எத்தனை சிறுவர்கள்  அது ஒரு பெரிய  விடயம் என்று அது போல நாமும் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள் ?

தங்கள் தங்கள் ஆதர்ச கதாநாயகர்கள் என்ன செய்கிறார்க்ளோ  அதே போல்  நாமும் செய்ய வேண்டும் விரும்புவது இல்லையா?

அது தான்  இணக்கமாக இருப்பது.

சரி, சினிமாவும் பார்ப்பது இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

Youtube ? வாட்ஸாப்ப்?

இவற்றில் இல்லாத வக்கிரங்களா?

அப்படியெல்லாம் இல்லை. எனக்கு வரும் செய்திகள் அப்படி ஒன்றும் மோசமானவை இல்லை  என்று நாம் நினைக்கலாம்.

சொல்லில் வரும் குற்றங்கள் நான்கு.

முதலாவது - பொய் சொல்லுதல்

இரண்டாவது - புறம் கூறுதல்

மூன்றாவது - பயனில சொல்லுதல்

நான்காவது = கடும் சொல் சொல்லுதல்

உங்களுக்கு வரும் செய்திகளில் இவை இல்லை என்று சொல்ல முடியுமா?

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் சிலர் புறம் சொல்லுபவர்களாக இருக்கலாம். அது ஒரு தீய செயல் தானே? அதைச் செய்பவர்களதீயவர்கள் தானே?

அவர்களை நாம் பார்ப்பது இல்லையா? அவர்களோடு பேசுவது இல்லையா? அவர்களோடு இணக்கமாக இருப்பது இல்லையா?

பேச்சின் மூலம் சாதிச் சண்டையை, மதச் சண்டையை தூண்டுகிறான் ஒருவன்.அவன் சொல்வதை youtube ல் கேட்பது இல்லையா?

ஒளவையார் தீயவர்களை நேரில் சென்று காண்பது தீது, அவர்கள் சொல்வதை நேரே  நின்று கேட்பது தீது என்றெல்லாம் சொல்லவில்லை.

ஒருவன் தவறான எண்ணத்தோடு ஒரு புத்தகம் எழுதுகிறான். அதை வாசித்து,  அவன் சொல்லுவதும் சரியாத்தானே இருக்கிறது என்று நாம் நினைத்தால்,  நாம் அந்த தீயவனோடு இணக்கமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

யோசித்துப் பாருங்கள். உங்களை அறியாமலேயே எவ்வளவு தீயவர்களோடு  நீங்கள் தொடர்பு  வைத்து இருக்கிறீர்கள் என்று புரியும்.

இது ரொம்ப நாள் நடந்து கொண்டிருப்பதால் நமக்குத் தெரிவதில்லை.

சற்று தள்ளி நின்று யோசித்தால் இதன் விபரீதம் புரியும்.

சரி, அப்படினா என்னதான் செய்றது?

டிவி கூடாது, செய்தித் தாள் கூடாது, whatsapp , youtube கூடாது, அக்கம் பக்கம் அரட்டை அடிக்கக் கூடாது  என்றால் பின் என்னதான் செய்றது?

கிழவி அதற்கும் வழி சொல்லி விட்டுப் போய் இருக்கிறாள்.

அது என்ன தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_20.html

10 இலட்சம் page views - நன்றி

10 இலட்சம் page views - நன்றி 



ஒரு நல்ல செய்தி. இன்று எனது தமிழ் blog 1 million page view வைத் தாண்டி விட்டது.  இதில் என் பெருமை ஒன்றும் இல்லை. அவ்வளவு பேர் தமிழ் படிக்கிறார்கள். நல்ல விடயங்களை படிக்கும் ஆர்வம் உள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. தொடர்ந்து படித்து வரும் உள்ளங்களுக்கு நன்றி


Sunday, July 19, 2020

கம்ப இராமாயணம் - இராமன் தோள்களை வெல்லலாம்

கம்ப இராமாயணம் - இராமன் தோள்களை வெல்லலாம்


யாப்பு இலக்கணத்திலே இல் பொருள் உவமை அணி என்று ஒன்று உண்டு.

பொதுவாக உவமை என்றால் ஒரு உயர்ந்த அல்லது நல்ல பொருளை உதாரணமாக கூறி அழகு படக் கூறுவது.

தேன் போல் இருந்தது அவர் குரல்

நிலவு போல் இருந்தது அவள் முகம்

என்றெல்லாம் உவமை கூறக் கேட்டு இருக்கிறோம்.

இல் பொருள் உவமை என்பது, இல்லாத ஒன்றைக் காட்டி அதை உவமையாகக் கூறுவது.

"தலையில் சம்மட்டியால் அடிப்பது போல வலிக்கிறது" என்று கூறினால், அதற்கு முன்னால் தலையில் சம்மட்டியால் அடி வாங்கி இருந்து, அது போல இருக்கிறது என்று கூறுகிறார் என்று அர்த்தமா? இல்லை. தலையில் சம்மட்டியால் அடிப்பது என்பது இல்லாத ஒன்று . அதை உவமையாக கூறுவது.

ஆயிரம் ஏரி மலை வெடிச்சது மாதிரி அப்படி ஒரு கோபம்.

ஆயிரம் அம்மாவாசையை ஒன்றாக சேர்த்து வச்சது மாதிரி ஒரு கறுப்பு

என்றெல்லாம் கூறுவது போல.

கம்பர் ஒரு இல் பொருள் உவமை கூறுகிறார்.

அதுவும் எப்படி இரண்டு நடவாத ஒன்றை , ஒன்றுக்கு மற்றொன்றாக உவமை படுத்திக் கூறுகிறார்.

இராவணன் அவையில் உள்ள கும்ப கர்ணன் , இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான்.

"இராவணா , நீ இராமனை வெல்லலாம் என்று நினைப்பது எப்படி இருக்கிறது தெரியுமா ? அது சீதையை அணைக்கலாம் என்று நினைப்பது போல இருக்கிறது " என்று இரண்டு நடவாத விடயங்களை காட்டுகிறான்.


பாடல்

கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால்--ஐயா!

பொருள்


கல்லலாம் உலகினை; = இந்த உலகையே பெயர்த்து எடுத்து விடலாம்


வரம்பு கட்டவும் சொல்லலாம்;  = இந்த உலகம் அனைத்துக்கும் வேலி போடக் கூட சொல்லலாம்

 பெரு வலி  = பெரிய வலிமையான

இராமன் தோள்களை = இராமனின் தோள்களை

வெல்லலாம் என்பது, = வென்று விடலாம் என்று நினைப்பது

சீதை மேனியைப் = சீதையின் உடலை

புல்லலாம் = அணைக்கலாம்

என்பது போலுமால்--ஐயா! = என்பது போன்றது ஐயா

இராமனை வெல்லவும் முடியாது. சீதையை புல்லவும் முடியாது.

இதற்கு அது உவமை.

நல்லா இருக்குல்ல ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_19.html

Thursday, July 16, 2020

திருவாசகம் - அஞ்சுமாறே

திருவாசகம் - அஞ்சுமாறே 


சமயப் பெரியவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் கொண்ட மதமும் கடவுளும் தான் உயர்ந்தது, மற்றது எல்லாம் தாழ்ந்தது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

உன் கடவுள் உயர்ந்தது என்று சொல்ல உனக்கு உரிமை இருக்கிறது. மற்றவன் கடவுளை தாழ்ந்தது என்று சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது.

வைணவர்களை கேட்டால் பெருமாள் தான் உயர்வு மற்ற கடவுள் எல்லாம் தாழ்ந்தது என்பார்கள்.

சைவர்களை கேட்டால் சிவனுக்கு மிஞ்சிய கடவுள் ஒன்று இல்லை என்பார்கள்.

எல்லா மதத்திலும் இதே நிலை தான்.

இப்படி பெரியவர்கள் சொன்னதால், பின்னால் வந்தவர்கள் என் மதம், என கடவுள் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

இது சரியா?

இறை தரிசனம் பெற்ற பெரியவர்கள், இப்படி சொல்லலாமா?  ஒன்றே கடவுள் என்று அவர்களுக்குத் தெரியாதா?

காரணம் இருக்கிறது.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல பல வழிகள் இருக்கலாம். வழி கேட்பவனுக்கு ஒரு வழியைச் சொல்ல வேண்டும்.

"நீ இப்படிப் போகலாம், அப்படியும் போகலாம், இது அதைவிடச் சிறந்தது, ஆனால் அந்த நாலாவது வழி இருக்கே அதுல் இப்படி சில சௌகரியங்கள் இருக்கு "

என்று ஒரு பத்து வழி சொன்னால், கேட்டவன் குழம்பிப் போவான்.

சில பேர் எல்லா வழிகளையும் ஆராய்ந்து தனக்கு சௌகரியப் பட்ட  வழியை தேர்ந்து எடுப்பான்.   எல்லாராலும் முடியாது.

பத்து வழி சொன்னால், எதில் போவது என்று தெரியாமல் குழம்பி ஒரு வழியிலும் போக மாட்டான்.

எனவே தான், அடித்துச் சொன்னார்கள். இது தான், வேற வழியே கிடையாது. இதுல போனால் நீ போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்து விடலாம்.

ஆனால், மக்களின் அறியாமை என்ன செய்வது. உன் வழி சரியா, என் வழி சரியா என்று சண்டை பிடித்துக் கொண்டு இருந்தார்கள். போகும் இடத்தை விட்டு விட்டு, எது நல்ல வழி என்று சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இருக்கிறார்கள்.

வழியா முக்கியம்? போய் சேரும் இடம் தானே முக்கியம்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமக்கு எதில் எல்லாமோ பயம் இருக்கிறது. இப்ப புதிதாய் இந்த வைரஸ். எப்ப நமக்கு வருமோ என்று பயமாக இருக்கிறது.

மணிவாசகர் எதற்கு பயப்பட்டார் தெரியுமா ?

"புற்றில் வாழும் பாம்புக்கு அஞ்ச மாட்டேன். ஒன்றும் தெரியாவிட்டாலும், எல்லாம் தெரிந்தது மாதிரி பேசும் பொய்யர்களின் பேச்சுக்கு பயப்பட மாட்டேன். சிவன் இருக்கும் போது மற்றும் ஒரு தெய்வம் என்று எண்ணி சிவனை அறியாமல் விடுபவர்களை கண்டால் எனக்கு பயமாக இருக்கிறது" என்கிறார்.

பாடல்


புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்


புற்றில்வாள் = புற்றில் வாழும்

அரவும் = பாம்புக்கும்

அஞ்சேன் = அஞ்சேன்

 பொய்யர்தம்  = பொய் சொல்பவர்களின்

மெய்யும் = மெய் சொல்லுக்குச்

அஞ்சேன் = அஞ்சேன்

கற்றை = கற்றையாக இருக்கும்

வார் சடை = நீண்ட சடை முடியை கொண்ட

எம் அண்ணல் = எம் தலைவன்

கண்ணுதல் = நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண் கொண்ட அவர்

பாதம் நண்ணி = பாதத்தை பற்றி, நெருங்கி

மற்றும் ஓர் தெய்வந் தன்னை = மற்றும் ஒரு தெய்வம் தன்னை

உண்டென நினைந்து = உண்டு என்று நினைத்து

தெம் பெம்மாற் = எம் பெருமான்

கற்றிலா தவரைக் கண்டால் = அறியாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே. = ஐயோ, நான் அச்சப் படுகிறேன்

ஒன்றைப் பிடித்தால், அதைப் பிடித்துக் கொண்டு போக வேண்டும்.

சிவன் என்றால் சிவன்.

திருமால் என்றால் திருமால்.

அலை பாயக் கூடாது.

இங்கு இருக்கும் போதே, ஒரு வேளை அந்தக் கடவுள் இன்னும் நல்லவரோ? வலிமையானவரோ என்று மனம் சிந்திக்கக் தொடங்கினால், ஒன்றும் நடக்காது.

அப்படி அங்கும் இங்கும் அலைபவர்களை கண்டால், எனக்கு பயமாக இருக்கிறது என்கிறார் மணிவாசகர்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_16.html

Tuesday, July 14, 2020

நளவெண்பா - திருமால் துதி - பாகம் 2

நளவெண்பா - திருமால் துதி - பாகம் 2


(இதன் முதல் பகுதி கீழே உள்ளது. மீண்டும் ஒரு முறை அதை படித்து விட்டு இதைப் படிப்பது நல்லது)

வேதம் என்பது எழுதா மறை, எழுதா கிளவி என்று பார்த்தோம்.

ஏன் என்றால், ஒலி வடிவம்தான் உயர்ந்தது. அதை அப்படியே வரி வடிவத்துக்கு மாற்ற முடியாது. வேதம் ஒலி வடிவம் ஆனது. அதை எழுதி வைத்தாலும்,  அதை ஒரு  குருவின் மூலம் தான் படிக்க வேண்டும் என்று விதி செய்து வைத்தார்கள். வரி வடிவத்தில் உள்ளதை படித்தால் தவறு நிகழ்ந்து விடலாம் என்பதால். 

சரி, வேதம் உயர்ந்தது. ஏற்றுக் கொள்வோம்.  

அந்த வேதம் எதைச் சொல்கிறது. அது சொல்லும் பாடம் என்ன? அதில் நமக்கு அறிந்து கொள்ள என்ன இருக்கிறது ?

புகழேந்தி புலவர் கூறுகிறார் 

திருமாலின் திருவடிதான் மறை நூல்களின் முடிபு என்கிறார். 

அந்தத் திருவடி எப்படிப்பட்ட திருவடி திருவடி தெரியுமா?

"மறை நூல்களுக்கெல்லாம் முடிவானது, நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியின் அர்த்தம் அதுதான். அந்தத் திருவடி, ஆதிமூலமே என்று அலறிய யானைக்கு உதவவும், அன்று ஆயர் பெண்களின் குரலுக்கும் கூப்பிடுவதற்கு முன்னே செல்வதற்கு தயாராக இருந்த அடி " என்கிறார். 

பாடல் 


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


பொருள்

முந்தை = பழமையான

மறைநூல் = வேதங்களின்

முடியெனலாம்  = முடிந்த முடிபு எனலாம்

தண் = குளிர்ச்சியான

குருகூர்ச் = குருகூர் என்ற திருத்தலத்தில் அவதரித்த நம்மாழ்வார் அருளிச் செய்த

செந்தமிழ் = செந்தமிழ் நூலான திருவாய் மொழி என்ற

வேத = வேதத்தின்

சிரமெனலாம்  = தலை என்று கூறலாம்

நந்தும் = வருந்திய

புழைக்கைக்கும்  = யானைக்கும்

நேயப் = நேசம் கொண்ட

பொதுவர் மகளிர்க்கும் = ஆயர் குல பெண்களுக்கும்

அழைக்கைக்கு = அழைப்பதற்கு

முன்செல் அடி. = முன்பே சென்ற திருவடிகள்

அவனை அழைக்கக் கூட வேண்டாமாம். அழைக்க வேண்டும் என்று நினைத்த உடனேயே ஓடி வந்து விடுவானாம்.

"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்று மணிவாசகர் கூறியது போல.

குழந்தை பசித்து அழுவதற்கு முன்பே, அதற்கு இப்போது பசிக்கும் என்று அறிந்து ஓடி வந்து  அமுது அளிக்கும் தாயைப் போல,

நினைத்தால் போதும் அவன் திருவடிகள் நம் முன் வந்து தோன்றும் என்கிறார்.

வேதத்தின் தலையிலும், நம்மாழ்வார் பாடல்களின் முடியிலும்,  உள்ள அந்த திருவடி, யானைக்கும், ஆயர் குல பெண்களுக்கும் உதவி என்று சொல்லும் முன்னே ஓடி வந்த திருவடி.

உரையை விட்டு விடுங்கள். அர்த்தம் பிடி பட்டு விட்டது அல்லவா, இனி உரை தேவை இல்லை.  நேரடியாக பாடலைப் படித்துப் பாருங்கள்.

சுவை தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/2.html

------------- பாகம் ஒன்று கீழே ---------------------------------------------------------------------



செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை 

என்று ஒரு குறள் இருக்கிறது.

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த குறள் மேல் ஒரு சந்தேகம் உண்டு.

ஏன் செவிச் செல்வம் பெரிய செல்வம் என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர். காதை விட கண் தானே சிறந்தது? கண்ணால் எவ்வளவு காண முடியும். கண்ணால் காண்பதை எல்லாம் சொல்லில் வடிக்க முடியுமா?

ரொம்ப வேண்டாம், ஒரு மலர்ந்த ரோஜா மலரைப் பார்க்கிறோம். அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி புரிய வைக்க முடியுமா? கண்ணால் எவ்வளவோ வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாமே. பின் ஏன் காதை பெரிதாகச் சொன்னார்?

இன்று வள்ளுவர் நம்மிடம் இல்லை. அவர் "சொல்வதை'  நம்மால் கேட்க முடியாது. ஆனால், அவர் சொன்னதை நம்மால் வாசிக்க முடியும். இன்றும், குறளைப் படித்தது நாம் பயன் பெறுகிறோம். அப்படி இருக்க செவிச் செல்வம் எப்படி பெரிய செல்வமாக முடியும்?

இன்று நாம் கணனியில் ( கம்ப்யூட்டர்) எவ்வளவோ பார்த்து தெரிந்து கொள்கிறோம்.  தொலைக் காட்சியில் எவ்வளவு விடயங்கள் வருகிறது?

அந்தக் காலத்தில் இவை எல்லாம் இருந்திருக்காது. எனவே, வள்ளுவர்  செவிச் செல்வத்தை பெரிதாக சொல்லி இருப்பாரோ?

இல்லை.

மகான்களுக்கு, உண்மைகள் கேட்டது. அவர்கள் தவம் செய்த போது அரிய பெரிய உண்மைகள் அவர்களுக்கு கேட்டது. யாரும் எழுதிக் கொண்டு வந்து  காட்டவில்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நினைக்கலாம்.

நம் மதத்தில் மட்டும் அல்ல, பிற மதங்களிலும் உண்மைகள் சொல் வடிவாகாவே வெளிப்பட்டு இருக்கிறது.

"ஆதியில் சப்தம் இருந்தது. அது தேவனோடு இருந்தது. தேவன் சப்த வடிவமாக இருந்தார்" என்று கிறித்துவம் பேசுகிறது.

முகமது நபிக்கு குரான் சொல்லப்பட்டது. அவர் எழுதிக் கொண்டு வரவில்லை. அவருக்கு அவை கேட்டன.

நம்முடைய வேதங்களுக்கு "சுருதி" என்று ஒரு பெயர் இருக்கிறது. சப்த வடிவம்.

தமிழிலே வேதத்துக்கு இரண்டு பெயர்கள் சொல்கிறார்கள்

"எழுதா மறை", "எழுதா கிளவி" (கிளவி என்றால் சொல். இரட்டைக் கிளவி)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். - "எழுதாமறை"யின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

என்பார் அபிராமி பட்டர். 

எழுதாத  ஒன்று எப்படி தலை முறை தலை முறையாக காக்கப் பட்டு வந்திருக்கிறது?

ஒருவர் சொல்லி, மற்றவர் கேட்டு, பின் அவர் சொல்லி, அடுத்தவர் கேட்டு  கர்ண   பரம்பரையாக வந்திருக்கிறது. 

நமது வேதங்கள் ரிஷிகளுக்கு கேட்டது.  அவர்கள் கேட்டதை அவர்கள் தங்களுடைய  சீடர்களுக்குச் சொன்னார்கள். பின் அந்த சீடர்கள், தங்களின்  சீடர்களுக்குச் சொன்னார்கள். இப்படி குரு பரம்பரையாக இந்த வேதங்கள்  இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. 

யோசித்துப் பார்த்தால் பிரம்மிப்பாய் இருக்கிறது. 

இவற்றை காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, ஒரு தலை முறையில் இருந்து அடுத்த  தலை முறைக்கு அதை கொண்டு செல்வதற்கென்றே ஒரு சமுதாயமே பாடு பட்டு இருக்கிறது. 

இதில் நடுவில் யாராவது, "எனக்கு வேற நல்ல வேலை இருக்கிறது. இதைப் போய்  எவன் படிப்பான் " என்று ஒரு தலை முறை சொல்லி இருந்தாலும்,  அந்தத் தொடர்பு அறுந்து போய் இருக்கும். அந்த வேதம்  நமக்குக் கிடைக்காமலேயே போய் இருக்கும். 

இவற்றை காலம்  காலமாக காப்பாற்றிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் நாம் நன்றி  சொல்ல கடமை பட்டவர்கள் ஆவோம். 

இப்போது புரிகிறதா ஏன் செவிச் செல்வம் உயர்ந்தது என்று. 

மேலும்,  சில ஒலி அளவுகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. 

தமிழில் ஒரு க, ஒரு ப தான் இருக்கிறது. 

ஹிந்தியில், சமஸ்க்ரிதத்தில் மூன்று இருக்கிறது.  மூன்று போதும் என்று யார் சொன்னது?  இந்த மூன்று சப்தங்களுக்கு வெளியேயும், நடுவிலும் ஆயிரம் சப்த்தங்கள் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் ஒரு எழுத்து வடிவம் தர முடியாது.  

சரி, எழுத்து வடிவம்  இல்லாவிட்டால்,   இருக்கின்ற எழுத்தை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா   என்றால், சப்தம் மாறி விடும். சப்தம் மாறினால் பொருள் மாறி  விடும். 

வேதம் உண்மையின் வெளிப்பாடு. அது சப்த ரூபமாக சிலருக்கு கேட்டு அவர்  சொல்லி, அப்படியே வந்திருக்கிறது. 

எனவே, வேதம் என்பது யாரும் உட்கார்ந்து எழுதிய நூல் அல்ல.  

சரி, எதுக்கு இவ்வளவு பெரிய அறிமுகம்? நளவெண்பாவுக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம்? 

பாடல் கீழே இருக்கிறது.

அதன் பொருளை நாளை பார்ப்போமா?


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_10.html

Monday, July 13, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே 


நாம் வைகுந்தம் போவோமா அல்லது மாட்டோமா என்ற கேள்வி பக்தர்கள் மனதில் இருப்பது இயற்கை.

நாம் பாவம் செய்கிறோமா? புண்ணியம் செய்கிறோமா ? நல்வினையா அல்லது தீவினையா நாம் செய்வது?

சாத்திரங்களில் சொன்னதை நாம் சரியாக கடை பிடிக்கிறோமா இல்லையா என்ற சந்தேகங்கள் வரமால் இருக்காது.

சாத்திரங்கள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒன்றைச் சொல்கின்றன. சில ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன. நாம் எதைச் செய்வது, எதை விடுவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்து விடுகிறோம்.

மேலும், இல்லறத்தில் ஈடுபடும்போது, அனைத்து அறங்களையும் கடை பிடிக்க முடியுமா ? சில பல நிர்பந்தங்களினால் தெரிந்தோ தெரியாமலோ தவறுகள் நிகழ்ந்து விடலாம்.

அதுக்கெல்லாம் பரிகாரம் உண்டா?

அதுக்கெல்லாம் கவலைப் படாதீர்கள். நீங்கள் வைகுந்தம் போவது என்பது விதி. நீங்கள் கட்டாயம் போவீர்கள். போகாமல் இருக்க வழியே இல்லை. போய் தான் ஆக வேண்டும் ஏன் என்றால் நீங்கள் திருமாலின் உறவினர் என்கிறார் நம்மாழவார்.

வைகுந்த வாசலுக்குப் போனவுடன், அங்குள்ள தேவர்களும் முனிவர்களும் உங்களை வரவேற்று, நீங்கள் எமது சொந்தக் காரர் என்று உறவு கொண்டாடி, அழைத்துக் கொள்வார்களாம்.

இந்த மண்ணுலகில் பிறந்த உங்களின் விதி வைகுந்தம் அடைவதே. அதில் ஒரு சந்தேகமும் வேண்டாம் என்கிறார்.

பாடல்



வைகுந்தம் புகுதலும்* வாசலில் வானவர்*
வைகுந்தன் தமர்எமர்* எமதிடம் புகுதென்று*
வைகுந்தத்து அமரரும்* முனிவரும் வியந்தனர்*
வைகுந்தம் புகுவது* மண்ணவர் விதியே. 10.9.9 (நம்மாழவார்)



பொருள்

வைகுந்தம் புகுதலும் = வைகுந்தத்தில் புகும் பொழுது

வாசலில் = அதன் வாசலில்

வானவர் = வானவர்கள்

வைகுந்தன் =  வைகுண்ட வாசன் திருமால்

தமரெமர் = தமர் + எமர் = தமர் என்றால் சொந்தம். திருமால் நம்ம சொந்தக் காரன். அதாவது , உமக்கும் எமக்கும் அவன் பொதுவான சொந்தக்காரன். அவன் மூலம் நீரும் நாமும் சொந்தமாகி விட்டோம்.

எமதிடம் புகுகென்று = எங்கள் இடத்திருக்கு வாருங்கள் என்று

வைகுந்தத் தமரரும் = வைகுந்தத்து + அமரரும். வைகுந்தத்தில் உள்ள அமரர்களும்.

முனிவரும் = அங்குள்ள முனிவர்களும்

வியந்தனர் = ஆச்சரியத்தோடு அழைத்தனர்

வைகுந்தம் புகுவது = வைகுந்தம் செல்வது

மண்ணவர் விதியே = மண்ணில் வாழ்பவர்களின் விதியே

எல்லோரும் வைகுந்தம் போகலாம். அது நமக்கு விதிக்கப்பட்ட விதி என்கிறார்.



பரமபதத்தின் திருவாயிலை அடைந்தபோது, அங்கு நின்ற தேவர்களும் முனிவர்களும், "வைகுந்தனின் அடியார்கள் எங்கள் தலைவர்கள்! உங்களை வரவேற்பதில் எமக்கு பெருமகிழ்ச்சி!" என்று வியந்து போற்றி வரவேற்றார்கள். அத்துடன், "பூவுலக மாந்தர் பரமபதம் அடைவதும் விதிக்கப்பட்ட நற்செயலே!" என்றும் ஆனந்தப்பட்டனர்!

நாம் விரும்பும் ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் நாம் எப்படி அவரை ஆச்சரியத்தோடு, ஆர்வமாக "வாங்க வாங்க" என்று வரவேற்போம், அது போல  திருமாலின் பக்தர்களை முனிவர்களும் தேவர்களும் வரவேற்பார்களாம்.

அது மட்டும் அல்ல,  திருமால் தான் பூலோகத்திலே வாசம் செய்கிறாரே, அதை விட்டு விட்டு  நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள் என்று "ஆச்சரியத்தோடு  வரவேற்பார்களாம்"

அது மட்டும் அல்ல,  இந்த மண்ணில் மனிதர்களாக ப் பிறந்து, அவன் அடியார்களாக  ஆன பின், வைகுந்தம் போவது என்பது சர்வ நிச்சயம் என்கிறார் ஆழ்வார்.

திருமாலின் பக்தர்கள் என்று கூட சொல்லவில்லை. திருமாலின் உறவினர் என்று  அவ்வளவு அன்யோன்யமாக உறவு கொண்டாடுகிறார். நம்ம சொந்தக் காரர் வீட்டுக்கு நாம் செல்ல என்ன தயக்கம். எப்ப வேண்டுமானாலும் போகலாம்  என்பது போலச்  சொல்கிறார்.

இது போன்ற பாடல்களை  வாசிக்கும் போது , வார்த்தைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது. அந்த உணர்ச்சியை, அந்த பாவத்ததை, அந்த அனுபவத்தை  உணர வேண்டும்.

கண்மூடி இரசித்துப் பாருங்கள். அந்தப் பாசுரம் அப்படியே மனதுக்குள் இறங்கும். முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டாகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_13.html

Sunday, July 12, 2020

திருக்குறள் - தவம்

திருக்குறள் - தவம் 


நமக்கு எப்போதும் இன்பம் வேண்டும். இன்பம் இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, துன்பம் கொஞ்சம் கூட வந்து விடக் கூடாது என்று நினைக்கிறோம்.

நம்மால் சிறு துன்பத்தைக் கூட சகித்துக் கொள்ள முடிவதில்லை.

செல்லும் போது, போக்கு வரத்து நெரிசலில் சற்று கால தாமதம் ஆனால், எரிச்சலும், கோபமும் வருகிறது. என்ன இந்த நாடு, ஒரு சாலை வசதி இல்லை, ஒருவரும் சாலை விதிகளை கடை பிடிப்பது இல்லை என்று எல்லோர் மேலும் எரிச்சல் கொள்கிறோம்.

சின்ன தலைவலி வந்தால் போதும், "தலை வலி மண்டையே வெடித்து விடும் போல் இருக்கிறது, தலை வலி மண்டையைப் பிளக்கிறது " என்று அதை பெரிது படுத்தி அங்கலாய்க்கிறோம்.

ஏதோ ஒரு வரிசையில் நிற்கிறோம். அந்த வரிசை சற்று மெல்லமாக சென்றால், "என்ன இது,  இவ்வளவு நேரம் ஆகிறது, வேலை தெரியாத ஆட்களைப் போட்டு நம் உயிரை வாங்குகிறார்கள் " என்று கோபிக்கிறோம்.

சிறிது நேரம் மின்சார தடை வந்தால் போதும். நாடு, மக்கள், நடை முறை (process ) என்று எல்லாவற்றின் மேலும் கோபம் கொள்கிறோம்.

பால் காய்ச்சும் போது பால் பொங்கி விட்டால், கோபம் வருகிறதா இல்லையா?

ஒரு சின்ன துன்பத்தைக் கூட சகிக்க முடியவில்லை.

அப்படியே வளர்ந்து விட்டோம். அப்படியே பிள்ளைகளையும் வளர்க்கிறோம்.


இப்படி இருந்தால், வாழ் நாள் முழுவதும் எப்போதும் எரிச்சல், கோபம், வெறுப்பு இதுதானே மிஞ்சும்.  ஏதாவது தடங்கல், ஏதாவது கால தாமதம் எங்காவது நிகழ்ந்து கொண்டே தானே இருக்கும்.

இப்படி எடுத்ததுக்கெல்லாம் கோபப் பட்டால் வாழ்க்கை இனிமையாக இருக்குமா?

சரி, அதுக்கு என்ன செய்வது? போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டால்  கோபமும், எரிச்சலும் படாமல் என்ன செய்வது?

வள்ளுவர் வழி சொல்லித் தருகிறார்.

துன்பம் வரும். சின்ன துன்பங்கள், தடங்கல்கள், கால தாமதங்கள், தோல்விகள், நட்டங்கள் , ஏமாற்றங்கள் இவை எல்லாம் வாழ்வில் சாதாரணமாக நடக்கும்.  அவற்றை ஏற்று வாழப் பழக வேண்டும்.

துன்பத்தை எப்படி பழகுவது?  இதுக்காக எங்காவது போய் எனக்கு துன்பம் செய்யுங்கள்  என்று கேட்டு வாங்க முடியுமா?

முடியாது.

எனவே தான், நாமே நமக்கு சில துன்பங்களை வரவழைத்து அதில் இருந்து , அவற்றை அனுபவித்துப் பழக வேண்டும்.


எப்படி?

விரதம் இருப்பது என்பது அப்படிப்பட்ட ஒரு பழக்கம்.

பசிக்கும்.  உடம்பு சாப்பாட்டைக் கொண்டு வா என்று சொல்லும், "முடியாது..இன்று உனக்கு   சாப்பாடு கிடையாது " என்று பழக்க வேண்டும். பசி ஒரு துன்பம் தான்.  அந்தத் துன்பத்தை ஏற்றுப் பழக வேண்டும்.

அது போல, தூக்கம் வரும். தூங்காமல் இருந்து பழகுவது.

குளிர் காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது.

சூடாக இருக்கும் போது , குளிர் சாதனத்தை (air conditionar ) கொஞ்ச நேரம் கழித்து  on செய்வது.  மின் விசிறியை சற்று நேரம் கழித்து ஓட விடுவது. அந்த சிறிது நேரத்தில்  உடம்பு சங்கடப்படும். படட்டும் என்று விட வேண்டும். அப்படி செய்து பழகி விட்டால், பின்னால் வேறு ஏதாவது துன்பங்கள் வந்தாலும், அவற்றை ஏற்று பழகி விடுவோம்.

காய்ச்சல் வந்தால், ஒரு நாள் பொறுத்துப் பழக வேண்டும்.

இது ஒரு விதத்தில் உடம்பை துன்பங்களுக்கு பழக்குவது.

இன்னொரு விதம் என்ன என்றால், பிறர்க்கு துன்பம் செய்யாமல் இருப்பது.

கணவனோ/மனைவியோ/உடன் பிறப்போ, கீழே வேலை செய்பவர்களோ,  யாராவது நமக்குத் தவறு செய்தால்,  அவர்கள் மேல் எரிந்து விழாமல், அவர்களை திட்டாமல், வெறுக்காமல் (மனதளவில்) பொறுமை காப்பது.  அதுவும் ஒரு வித பழக்கம்.

தனக்கு வந்த துன்பத்தைக் தாங்கிக் கொள்வது.

மற்றவர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது.

இது இரண்டும் தான் தவம் என்கிறார் வள்ளுவர்.

பாடல்


உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு


பொருள்


உற்றநோய்  = தனக்கு வந்த துன்பத்தை (நோய் = துன்பம்)

நோன்றல்  = பொறுத்துக் கொள்ளுதல்

உயிர்க்கு = மற்ற உயிர்களுக்கு

உறுகண் = துன்பம்

செய்யாமை =செய்யாமல் இருப்பது

அற்றே தவத்திற்கு உரு = அது தான் தவத்தின் அடையாளம்

அவ்வளவுதான் தவம் என்பது.தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல். பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது. அவ்வளவு தான்.

அடுத்த முறை

- நீங்கள் நிற்கும் வரிசை மெல்லமாகப் போனால்
- போக்கு வரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டால்
- ஏதாவது விடயத்தில் கால தாமதம் நிகழ்ந்தால்
- சிறு உடற் வலி ஏற்பட்டால்
- மற்றவர்கள் நாம் நினைத்தபடி செய்யாமல் இருந்தால்

கோபப் ப்டாமல் அமைதி காக்க. அப்படி இருப்பதே பெரிய தவம்.

தவம் செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று நினையுங்கள்.


கொஞ்சம் உடலையும் மனதையும்  பழக்கப் படுத்துங்கள். திடீரென்று ஒரு துன்பம் வந்தால்  அதை தாங்க முன்னமேயே பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.

துன்பத்தைத் தாங்க பயிற்சி வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_12.html

Friday, July 10, 2020

நளவெண்பா - திருமால் துதி

நளவெண்பா - திருமால் துதி 


செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் 
செல்வத்துள் எல்லாம் தலை 


என்று ஒரு குறள் இருக்கிறது.

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த குறள் மேல் ஒரு சந்தேகம் உண்டு.

ஏன் செவிச் செல்வம் பெரிய செல்வம் என்று சொல்லி இருக்கிறார் வள்ளுவர். காதை விட கண் தானே சிறந்தது? கண்ணால் எவ்வளவு காண முடியும். கண்ணால் காண்பதை எல்லாம் சொல்லில் வடிக்க முடியுமா?

ரொம்ப வேண்டாம், ஒரு மலர்ந்த ரோஜா மலரைப் பார்க்கிறோம். அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சொல்லி புரிய வைக்க முடியுமா? கண்ணால் எவ்வளவோ வாசித்து அறிவை வளர்த்துக் கொள்ளலாமே. பின் ஏன் காதை பெரிதாகச் சொன்னார்?

இன்று வள்ளுவர் நம்மிடம் இல்லை. அவர் "சொல்வதை'  நம்மால் கேட்க முடியாது. ஆனால், அவர் சொன்னதை நம்மால் வாசிக்க முடியும். இன்றும், குறளைப் படித்தது நாம் பயன் பெறுகிறோம். அப்படி இருக்க செவிச் செல்வம் எப்படி பெரிய செல்வமாக முடியும்?

இன்று நாம் கணனியில் ( கம்ப்யூட்டர்) எவ்வளவோ பார்த்து தெரிந்து கொள்கிறோம்.  தொலைக் காட்சியில் எவ்வளவு விடயங்கள் வருகிறது?

அந்தக் காலத்தில் இவை எல்லாம் இருந்திருக்காது. எனவே, வள்ளுவர்  செவிச் செல்வத்தை பெரிதாக சொல்லி இருப்பாரோ?

இல்லை.

மகான்களுக்கு, உண்மைகள் கேட்டது. அவர்கள் தவம் செய்த போது அரிய பெரிய உண்மைகள் அவர்களுக்கு கேட்டது. யாரும் எழுதிக் கொண்டு வந்து  காட்டவில்லை.

இது என்ன புது கதையாக இருக்கிறது என்று நினைக்கலாம்.

நம் மதத்தில் மட்டும் அல்ல, பிற மதங்களிலும் உண்மைகள் சொல் வடிவாகாவே வெளிப்பட்டு இருக்கிறது.

"ஆதியில் சப்தம் இருந்தது. அது தேவனோடு இருந்தது. தேவன் சப்த வடிவமாக இருந்தார்" என்று கிறித்துவம் பேசுகிறது.

முகமது நபிக்கு குரான் சொல்லப்பட்டது. அவர் எழுதிக் கொண்டு வரவில்லை. அவருக்கு அவை கேட்டன.

நம்முடைய வேதங்களுக்கு "சுருதி" என்று ஒரு பெயர் இருக்கிறது. சப்த வடிவம்.

தமிழிலே வேதத்துக்கு இரண்டு பெயர்கள் சொல்கிறார்கள்

"எழுதா மறை", "எழுதா கிளவி" (கிளவி என்றால் சொல். இரட்டைக் கிளவி)

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள். - "எழுதாமறை"யின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

என்பார் அபிராமி பட்டர். 

எழுதாத  ஒன்று எப்படி தலை முறை தலை முறையாக காக்கப் பட்டு வந்திருக்கிறது?

ஒருவர் சொல்லி, மற்றவர் கேட்டு, பின் அவர் சொல்லி, அடுத்தவர் கேட்டு  கர்ண   பரம்பரையாக வந்திருக்கிறது. 

நமது வேதங்கள் ரிஷிகளுக்கு கேட்டது.  அவர்கள் கேட்டதை அவர்கள் தங்களுடைய  சீடர்களுக்குச் சொன்னார்கள். பின் அந்த சீடர்கள், தங்களின்  சீடர்களுக்குச் சொன்னார்கள். இப்படி குரு பரம்பரையாக இந்த வேதங்கள்  இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன. 

யோசித்துப் பார்த்தால் பிரம்மிப்பாய் இருக்கிறது. 

இவற்றை காதால் கேட்டு, மனப்பாடம் செய்து, ஒரு தலை முறையில் இருந்து அடுத்த  தலை முறைக்கு அதை கொண்டு செல்வதற்கென்றே ஒரு சமுதாயமே பாடு பட்டு இருக்கிறது. 

இதில் நடுவில் யாராவது, "எனக்கு வேற நல்ல வேலை இருக்கிறது. இதைப் போய்  எவன் படிப்பான் " என்று ஒரு தலை முறை சொல்லி இருந்தாலும்,  அந்தத் தொடர்பு அறுந்து போய் இருக்கும். அந்த வேதம்  நமக்குக் கிடைக்காமலேயே போய் இருக்கும். 

இவற்றை காலம்  காலமாக காப்பாற்றிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் நாம் நன்றி  சொல்ல கடமை பட்டவர்கள் ஆவோம். 

இப்போது புரிகிறதா ஏன் செவிச் செல்வம் உயர்ந்தது என்று. 

மேலும்,  சில ஒலி அளவுகளை எழுத்தில் கொண்டு வர முடியாது. 

தமிழில் ஒரு க, ஒரு ப தான் இருக்கிறது. 

ஹிந்தியில், சமஸ்க்ரிதத்தில் மூன்று இருக்கிறது.  மூன்று போதும் என்று யார் சொன்னது?  இந்த மூன்று சப்தங்களுக்கு வெளியேயும், நடுவிலும் ஆயிரம் சப்த்தங்கள் இருக்கலாம்.  எல்லாவற்றிற்கும் ஒரு எழுத்து வடிவம் தர முடியாது.  

சரி, எழுத்து வடிவம்  இல்லாவிட்டால்,   இருக்கின்ற எழுத்தை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா   என்றால், சப்தம் மாறி விடும். சப்தம் மாறினால் பொருள் மாறி  விடும். 

வேதம் உண்மையின் வெளிப்பாடு. அது சப்த ரூபமாக சிலருக்கு கேட்டு அவர்  சொல்லி, அப்படியே வந்திருக்கிறது. 

எனவே, வேதம் என்பது யாரும் உட்கார்ந்து எழுதிய நூல் அல்ல.  

சரி, எதுக்கு இவ்வளவு பெரிய அறிமுகம்? நளவெண்பாவுக்கும் இதுக்கும் என்ன  சம்பந்தம்? 

பாடல் கீழே இருக்கிறது.

அதன் பொருளை நாளை பார்ப்போமா?


முந்தை மறைநூல் முடியெனலாம் தண்குருகூர்ச்
செந்தமிழ் வேத சிரமெனலாம் - நந்தும்
புழைக்கைக்கும் நேயப் பொதுவர் மகளிர்க்கும்
அழைக்கைக்கு முன்செல் அடி.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_10.html

Sunday, July 5, 2020

திருக்குறள் - அருளாள்வாற்கு இல்லை

திருக்குறள் - அருளாள்வாற்கு இல்லை 


பெரும்பாலானோர் இறைவனிடம் என்ன வேண்டுவார்கள்?

"என்னை காப்பாற்று...எனக்கு எந்த வித ஆபத்து இல்லாமலும் பார்த்துக் கொள். எல்லாவற்றிற்கும் மேலாக என் பிள்ளைகளுக்கு ஒரு துன்பமும், ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்" என்பதுதானே.

கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, அது தானே விருப்பமாக இருக்கும்.

அது நடக்குமா ?

எத்தனை உயிர்களை கொல்கிறோம். அத்தனை உயிர்களை கொன்று விட்டு,
என் பிள்ளைகளை காப்பாற்று என்றால் அதில் என்ன ஞாயம் இருக்கிறது?

கொலையா? நானா? அப்படியெல்லாம் ஒன்றுர் செய்வது இல்லையே என்று நாம் நினைக்கலாம். செய்யாமலா இருக்கிறோம்?

கோழி, ஆடு, மாடு, என்று அடித்துத்  தின்ன வேண்டியது.  சிக்கன் 65, சிக்கன் லாலி பாப்,  சில்லி சிக்கன், என்று வகை வகையாக விலங்குகளை கொன்று தின்பது.

அப்புறம், எனக்கும் என் பிள்ளைகளுக்கும் துன்பம் வரக்கூடாது என்று விரும்புவது....


"இல்லையே, நான் மாமிசம் சாப்பிடுவது இல்லையே...உயிர் கொலை செய்வதே இல்லை " என்று கூறினால் ...

சீனி டப்பாவில் எறும்பு வந்தால், வெயிலில் கொண்டு கொட்டுவது. அடுப்பில் தூக்கி வைத்து அவற்றைக் கொல்வது.

மேலே ஊறும் எறும்பை நச் சென்று அடித்துக் கொல்வது.

இதெல்லாம் பெரிய கொலையா ?

கொலை செய்வதை விட்டு விடுவோம்.

வீட்டில் வேலை செய்யும் ஆட்களை, நமக்கு கீழே வேலை ஆட்களை மனம் புண் படும்படி பேசுவது...எவ்வளவு வலிக்கும் என்று யோசித்துப் பார்ப்பது இல்லை.

மனைவியை, பிள்ளைகளை, கணவனை, வீட்டில் உள்ள பெரியோர்களை எடுத்து எறிந்து  பேசுவது. மனம் நோகும்படி பேசுவது.

மனதில் அன்பில்லாமல், அருள் இல்லாமல் நடந்து கொள்வது...பின் எனக்கு ஒரு துன்பமும் வரக் கூடாது  என்று விரும்புவது சரிதானா?

மற்ற உயிர்களை வதைத்து விட்டு, என் உயிருக்கு துன்பம் வரக்கூடாது என்று நினைப்பது  எந்த ஊர் ஞாயம்.?


பாடல்

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை


பொருள்

மன்னுயிர் = நிலைத்து நிற்கின்ற உயிர்களை

ஓம்பி = போற்றி

அருளாள்வாற்கு  = அவற்றின் மேல் அன்பு செய்பவர்களுக்கு

இல்என்ப = இல்லை என்று சொல்லுவார்கள்

தன்னுயிர் = அவர்களுடைய உயிர்

அஞ்சும் வினை = அஞ்சுகின்ற செயல்

இந்த உலகில் உடல் தான் பிறக்கும், இறக்கும். உயிர் என்றும் நிலைத்து நிற்பது. எனவே தான் மன்னுயிர் என்றார்.

மேலும்,

உயிர் என்று சொன்னதன் மூலம், மனிதர்களை மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், போன்ற உயிர்களையும் சேர்த்துச் சொன்னார்.

சரி ஏதோ மாமிசம் சாப்பிடுவது இல்லை என்றால் போதுமா என்றால் போதாது.

"ஓம்பி அருள் ஆள்வார்க்கு"

உயிர்களை போற்ற வேண்டும். நம் உயிர் போலத்தான் மற்ற உயிர்களும் என்று  அவற்றை போற்ற வேண்டும். அவற்றின் மேல் அருள் கொள்ள வேண்டும்.

தெருவில் செல்லும் நாய் மேலும் அருள் செய்ய வேண்டும்.

அப்படி செய்தால், என்ன நடக்குமோ, எப்போது நடக்குமோ என்ற பயம் வராது.

அந்த பயம் வரமால் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

உயிர் கொலை செய்யக் கூடாது, மற்ற உயிர்களை போற்றி அவற்றின் மேல்  அருள் செய்ய வேண்டும்.

அடுத்த முறை மாமிசம் உண்ணும் போது நினைக்க வேண்டும். இது என் உயிருக்கு அச்சத்தைத் தரப் போகிறது  என்ற எண்ணம் வர வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_5.html

Friday, July 3, 2020

திருக்குறள் - அறிவினுள் எல்லாம் தலை

திருக்குறள் - அறிவினுள் எல்லாம் தலை


பாடல்

அறிவினுள் எல்லாம் தலைஎன்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

பொருள்

அறிவினுள் =  அறிவினிற்குள்

எல்லாம் =  அனைத்திலும்

தலைஎன்ப = தலை சிறந்தது என்று சொல்லுவார்கள்

தீய = (தமக்கு)  தீமை

செறுவார்க்கும் = செய்தவர்களுக்கும்

செய்யா விடல் = மறு தீங்கு செய்யாமல் விடுவது

அறிவினில் எல்லாம் தலையாய அறிவு எது என்றால், நமக்கு தீமை செய்தவர்களுக்கும் தீமை செய்யாமல் விடுவது என்று சொல்லுவார்கள்.

ஹை, இது என்ன நல்ல போங்காக இருக்கிறதே. நமக்கு ஒருவன் தீமை  செய்தால், பதிலுக்கு அவனுக்கு தீமை செய்யாவிட்டால் அவன் நமக்கு மீண்டும் மீண்டும் தீமை செய்து கொண்டே இருப்பானே ...அவனை தண்டிக்காமல் விடுவது எப்படி  சிறந்த அறிவாகும்?  வள்ளுவர் சொல்லுகிறார்  என்பதற்க்காக ஏற்றுக் கொள்ள முடியுமா ?

செல்லாது ...செல்லாது ....வள்ளுவரே தீர்ப்பை மாத்திச் சொல்லும் என்று நாம் சொல்லலாம்  வள்ளுவர் பிழை செய்வாரா.

ஒருவன் தனக்குத் தானே தீமை செய்து கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம், அவனை அறிவுள்ளவன் என்று நாம் ஏற்றுக் கொள்வோமா?

எரிகிற தீக்குள் விரலை விடுகிறான், மின்சாரம் செல்லும் கம்பியை கையால் பிடிக்கிறான்,  தினம் நாலைந்து சிகரெட் பெட்டியை ஊதித் தள்ளுகிறான்...இப்படி எல்லாம்  ஒருவன் செய்தால் அவனைப் பற்றி என்ன நினைப்போம்?  சரியான முட்டாளா இருப்பான் போல் இருக்கே என்று தானே நினைப்போம்.

அறிவு இருந்தால் என்ன செய்ய வேண்டும்? நமக்கு வரும் துன்பத்தை நீக்கி நமக்கு  இன்பம் தர வேண்டும். அது தானே அறிவின் வேலை?

மீண்டும் குறளுக்குப் போவோம்.

ஒருவன் நமக்குத் தீமை செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

முதலில் என்ன நடக்கும், "எனக்கு இப்படி செய்து விட்டானே..." என்று அவன் மேல் கோபம் வரும். எப்போது கோபம் வருகிறதோ, அப்போதே மனதில் இருந்த சந்தோஷமும், சிரிப்பும் போய் விடும். கடு கடு என்று இருப்போம்.

இரண்டாவது, "எப்படியாது அவனுக்கு பதிலுக்குப் பதில் தீமை செய்ய வேண்டும் என்று பழி உணர்ச்சி பொங்கும்.  அது மனதை மேலும் வன்மையாக்கும் .

எப்படி அவனுக்கு தீமை  செய்வது என்று சிந்திக்கிறோம். தீமை செய்தால் எப்படி மாட்டிக் கொள்ளாமல்  தப்பிப்பது என்று திட்டம் போடுகிறோம். மாட்டிக் கொண்டாலும், எப்படி வெளியே வருவது என்று மனம் வழி தேடும்.

இப்படி மிக ஆழமாக சிந்தித்து தீமை செய்வதால் தீமை பற்றிய அச்ச உணர்வு போய் விடுகிறது.

முன்பே கூறியது போல, தீவினையில் அச்சம் போய் விட்டால், பின் தீவினைகள் செய்வது  மிக எளிதாக போய் விடுகிறது.

இப்பிறப்பில் செய்த தீமை, இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கும் தொடர்ந்து வந்து துன்பம்   தரும்.

இப்படி இருமைக்கும் துன்பம் தரும் செயலை செய்வது அறிவான செயலா?

அவனோ நமக்கு இம்மைக்கு மட்டும் தான் துன்பம் செய்தான். நாம் ஒரு படி மேலே போய் நமக்கு மறுமைக்கும் துன்பம் தேடிக் கொள்கிறோம்.

மாறாக, அவன் செய்த தீவினையை மறுத்து அவனுக்கு நாம் பதில் தீவினை செய்யாமல் விட்டால்  , நமக்கு இருமைக்கும் துன்பம் வராது அல்லவா?  எனவே தான்  அதை

"அறிவினுள் எல்லாம் தலை" என்றார்.

நம்மை ஒரு  பெரிய சண்டியர் தெருவில் போகும் போது அடிக்கிறான். அவனுக்கு  நாம் பதில் தீமை செய்யாமல் விடுகிறேன் என்று சொல்வதில் என்ன பெரிய  அறிவு இருக்கிறது. அவனை நான் அடித்தால், அவன் பதிலுக்கு பத்துத் தரம் அடிப்பான்.

வள்ளுவர் ஒரு சொல்லை தேர்ந்து எடுத்துப் போடுகிறார்

'செய்யாது விடல்".

பதிலுக்கு தீமை நம்மால் செய்ய முடியும், இருந்தும் செய்யாமல் விடல் என்பதில் இருக்கிறது  அறிவு.

செய்ய முடியாவிட்டால், எங்கிருந்து "விடுதல்" வரும். .

"விடல்" என்றால் விட்டு விட வேண்டும். மனதுக்குள் கருவிக் கொண்டே இருக்கக் கூடாது.


அப்படி யாராவது வாழ்ந்து இருக்கிறார்களா? சும்மா சொன்னால் போதாது, நிரூபணம்  வேண்டும் அல்லவா?

அந்த நிரூபணத்தை நாளை பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_3.html

Thursday, July 2, 2020

திருக்குறள் - தீயினும் அஞ்சப்படும்

திருக்குறள் - தீயினும் அஞ்சப்படும் 


பாடல்

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்

பொருள்

தீயவை  = தீய செயல்கள்

தீய பயத்தலால் = தீமை தருவதால்

தீயவை = அத் தீய செயல்கள்

தீயினும் = தீயை விட

அஞ்சப் படும் = அஞ்சத் தகுந்தவை

எளிமையான குறள். நேரடியாக பொருள் விளங்கக் கூடியது.

சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.

பலர், பல குற்றங்களை செய்கிறார்கள். அதாவது தீமைகளைச் செய்கிறாரகள். அவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள். நிறைய சொத்து சேர்த்து விடுகிறார்கள். பெரிய வீடு, கார், தோட்டம், வேலையாள், புகழ், அதிகாரம் எல்லாம் தூள் பறக்கிறது.  அவர்களுக்கு ஒரு குறையும் இல்லை.

தீயவை செய்கிறவன் நல்லாத்தான் இருக்கிறான்..இந்த வள்ளுவர் சொல்வதை எல்லாம் எப்படி  நம்புவது என்ற சந்தேகம் எழலாம்.

இந்த குறளுக்கு உரை எழுதிய பரிமேல் அழகர் சொல்கிறார்

"பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின், தீயினும் அஞ்சப்படுவதாயிற்று"

என்று.

என்ன அர்த்தம்?

தீ இன்று கை வைத்தால் என்று தான் சுடும். இரண்டு மாதம் கழித்து சுடாது போன வருடம் எண்ணெய் சட்டியில் கை வைத்தாயே, அதற்கு இப்போது சுடுகிறேன் என்று ஒரு வருடம் கழித்து  சுடாது.

ஆனால், நாம் செய்த தீமை இருக்கிறதே, அது காலம் பார்த்து சுடும்.

இன்று சுட்டால் நம்மால் சமாளித்துக் கொள்ள முடியும். கையில் காசு இருக்கிறது.உடம்பில் தெம்பு இருக்கிறது.  இப்ப சுடாது. "பிறிதொரு காலத்து" என்கிறார்  பரிமேல் அழகர்.

வயதான காலத்தில்,  யாரும் இல்லாத தனிமையில், அங்கு வந்து சுடும். அப்போது சுட்டால் தான்  வலி தெரியும் என்பதால்.

இல்லையே. கடைசிவரை நல்லாத்தான் இருந்து செத்தான். நாடே கூடி அவனுக்கு  மரியாதை செய்ததே. எங்கே அவன் செய்த தீமைகள் அவனை சுட்டன என்று  நாம் சந்தேகப் படலாம்.

"பிறிதோர் தேசத்தில், பிறிதொரு உடம்பில்" என்கிறார் பரிமேல் அழகர்.

இந்த உடம்பில், இந்த நாட்டில், சுட வேண்டும் என்று இல்லை.

நாம் எவ்வளவோ பேரை பார்க்கிறோம்.

ஆட்களை விடுங்கள். கசாப்பு கடைக்கு கோழி ஆடெல்லாம் எப்படி கொண்டு போவார்கள் தெரியுமா?  கொண்டு போய் துள்ள துடிக்க வெட்டுவார்கள். துடிக்க துடிக்க கழுத்தை அறுப்பார்கள்.

போர் மேகங்கள் எப்போதும் சூழ்ந்து இருக்கும் நாட்டில் பிறந்து,  எப்போது தலையில்   குண்டு விழுமோ, இந்த பிள்ளைகளை எப்படி காப்பாற்றப் போகிறோமோ  என்ற தவிப்பில் வாழ்பவர்கள் எத்தனை பேர்.

ஏன் அந்த துக்கம்?

முன்பு செய்த தீவினை.

கண் முன்னால் பிள்ளைகளுக்கு நடக்கும் கொடுமைகளை பார்க்க நேர்வது. 

இங்கே தப்பி விடலாம் என்று எண்ணி தீவினை செய்யக் கூடாது.

சாட்சிகளை வாங்கிவிடலாம், சட்டத்தை வாங்கி விடலாம் என்று இறுமாந்து இருக்கக் கூடாது.

தேசிய நெடுஞ்சாலையில் அடி பட்டு குத்து உயிரும் குலை உயிருமாய் கிடக்கும் நாய்களை பார்க்கும் போது   நினைவு வர வேண்டும். என்று செய்த தீவினையோ,  இன்று வந்து மூண்டது என்று.

யாரும் தப்ப முடியாது.

நல்லதே செய்து கொண்டிருப்பான். வறுமை  வாட்டும்.ஏன்? முன்பு செய்த தீ வினை.

இரண்டாவது,

தீயை தொட்டால், அது தொட்டவனை மட்டுமே சுடும். ஆனால் தீவினை இருக்கிறதே அது  சுற்றத்தையும் நட்பையும் சுடும்.

ஒருவன் களவாடி பொருள் சேர்கிறான். ஒரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான்.  தண்டனை அவனுக்கு மட்டுமா?

அவன் மனைவிக்கு இந்த சமுதாயத்தில் என்ன அங்கீகாரம் கிடைக்கும்? அவன் மகனுக்கு  என்ன மரியாதை கிடைக்கும்? அவன் மகளுக்கு எப்படி திருமணம் ஆகும்?  அவன் பெற்றோர்கள்  வெளியே தலை காட்ட முடியுமா?

எனவே தான் தீவினை , தீயை விட அஞ்சப்படும் என்றார்.

மற்றவன் எப்படியோ போகட்டும். நாம் செய்யும் தீவினை நம்மை வந்து சேரும்  என்பதால், தீவினை செய்யாமல் இருப்பது நலம்.

அவன் செய்கிறானே, நல்லாத்தானே இருக்கிறான் , நானும் செய்தால் என்ன  என்று நினைப்பவர்கள்  , அவர்கள் வழி செல்லட்டும்.

நாம் நல் வழியில் செல்வோம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_2.html


Wednesday, July 1, 2020

வில்லி பாரதம் - கண் மலரில் கை படாதோ ?

வில்லி பாரதம் - கண் மலரில் கை படாதோ ?



உறவுகளுக்குள்ளும், நட்பினிலும் சில சமயம் சிக்கல்கள் வந்து விடுகின்றன. உணர்ச்சி வேகத்தில் ஏதோ சொல் வந்து விழுந்து விடுகிறது அல்லது செயல் நிகழ்ந்து விடுகிறது.

அதையே நினைத்துக் கொண்டு இருந்தால், அந்த உறவும் நட்பும் அற்றுப் போய் விடும்.

சரி சரி என்று ஏற்றுக் கொண்டு போகப் பழக வேண்டும்.

பதிலுக்கு பதில் சொல்வது, செய்வது என்று இருக்கக் கூடாது.

சில சமயம் தவறி நம் விரல் நம் கண்ணில் பட்டு விடுகிறது. வலி தான். கண் கலங்கித்தான் போகிறது. அதற்காக நாம் விரலை வெட்ட முடியுமா?

நம்மையும் அறியாமல் நம் பல் நம் நாக்கை நறுக்கென்று கடித்து விடுகிறது. என்ன செய்ய. சில சமயம் இரத்தம் கூட வரும். "என் நாக்கையா கடித்தாய்" என்று அந்தப் பல்லை பிடுங்கி வீச முடியுமா?

அது போல நண்பர்களும், உறவினர்களும் சில சமயம் நமக்குத் தவறு இழைத்து விடலாம். மன்னித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வனவாசம், அஞ்ஞாத வாசம் எல்லாம் முடிந்த பின் பாண்டவர்கள் கௌரவர்களிடம் கண்ணனை தூது அனுப்புகிறார்கள்.

அப்போது, தர்மன் சொல்கிறான்.

"கௌரவர்கள் செய்தது தவறுதான். பாஞ்சாலியின் துகிலை பற்றியது தவறுதான். என்ன செய்ய. சில சமயம் கண்ணில் கை படுவது போல  நிகழ்ந்தது அது.  நாங்கள் ஒருவருக்குள் ஒருவர். என் கண்ணில் என் கை பட்டால்  என் விரலை நான் வெட்டுவேனா. அது போல அவன் மேல் கோபித்து சண்டை போட வேண்டாம். சமாதானமாகப் போய் விடலாம்"

என்கிறான்.

பாடல்


'உரிமையுடன் தம்பியர் அன்று, உணர்வு அறியாமையின்,
                  அவைக்கண் உரைத்த மாற்றம்
பரிபவமோ? கேட்டோர்க்குப் பரிபவம் என்பது பிறரால்
                  பட்டால் அன்றோ?
கருதில், இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? கண் மலரில்
                  கை படாதோ?
பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே!' என
                  மொழிந்தான்-புகழே பூண்பான்.

பொருள்


'உரிமையுடன் = உரிமையுடன் (பகையினால் அல்ல)

தம்பியர் அன்று = கௌரவர்கள் அன்று

உணர்வு அறியாமையின் = உணர்வு அல்லாமல்

அவைக்கண் = அரசவையில்

உரைத்த மாற்றம் = சொன்ன சொற்கள்

பரிபவமோ? = அவமானமா?

கேட்டோர்க்குப் = கேட்பவர்களுக்கு (அதாவது நமக்கு)

பரிபவம் என்பது  = அவமானம் என்பது

பிறரால் = நமக்கு உறவு அல்லாத பிறரால்

பட்டால் அன்றோ? = வருவது அன்றோ

கருதில் = இதை கருத்தில் கொண்டால்

இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ? = இதை புரிந்து கொண்டால், இது எல்லோருக்கும் பொருந்தும் என்பது புரியும்

கண் மலரில் = கண்ணின் மேல்

கை படாதோ? = கை பட்டு விடாதா ?

பொரு தொழிலும் = பொருதல் சண்டை பிடித்தல். சண்டை பிடிக்கும் தொழில்

கடை நிலத்தில் கிடந்ததே!'  = கடைசியாக வருவது

என மொழிந்தான் = என்று கூறினான்

புகழே பூண்பான். = புகழை மட்டுமே அடைபவன்

இந்தப் பாட்டில் சில விடயங்களை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

நாம் படிப்பது நமக்கு பயன் தர வேண்டும். சும்மா படித்து கொண்டே போவது. எவ்வளவு நல்ல நூல்களை படித்தாலும் வாழ்வில் ஒரு துளி கூட மாறாமல் அப்படியே செல்வது என்பது அறிவீனம்.

"அதெல்லாம் படிக்க நல்லா இருக்கும். நடை முறைக்கு சாத்தியம் இல்லை " என்று செக்கு மாடு மாதிரி பழைய வாழ்க்கையிலே சுத்தி சுத்தி வரக் கூடாது.

"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்று படித்து இருக்கிறோம்.

குற்றம் பார்க்காமல் இருக்கிறோமா? பின் படித்ததின் பயன் என்ன?

தர்மன் அதை நடைமுறை படுத்திக் காட்டுகிறான்.

தனக்கும் தன் தம்பிகளுக்கும் எவ்வளவோ துன்பம் செய்து இருந்தாலும், அது கை விரல் கண்ணைக் குத்துவது மாதிரித்தான் என்று சொல்கிறான். கோபமே இல்லை.

இரண்டாவது,

"இது மற்று எவர்க்கும் ஒவ்வாதோ?"

இது கௌரவர்களுக்கு மட்டும் அல்ல, எல்லோரும் நம் சொந்தம்தான்.  அப்படி   நினைத்து விட்டால், பின் யார் நம்மை அவமானம் செய்ய முடியும்?  சொல்பவன் அல்லது செய்பவன்  மற்றவன் என்று நினைத்தால்தானே கோபம் வரும்,  பகை வரும்..எல்லோரும் ஒரு குடும்பம் என்று நினைத்து விட்டால் பின் எங்கிருந்து அவமானம் வரும்.

இன்றைய சிக்கல் என்ன என்றால், பெற்றோர் பிள்ளைகள், கணவன் மனைவி, உடன் பிறப்புகள் ஏதாவது சொன்னால் கூட தவறாக எடுத்துக் கொண்டு பகைமை பாராட்டும் ஒரு உலகிற்குள் வந்து விட்டோம் நாம்.

தர்மன், இந்த உலகத்தில் எல்லோரும் என் குடும்பம் தான். அவர்கள் சொன்னால் என்ன , செய்தால் என்ன என் தம்பிதானே என்று நினைக்கும் பக்குவத்துக்கு வந்து விட்டான்.

நம்மால் அந்த அளவு முடியாவிட்டாலும், நெருங்கிய சொந்தத்திற்குள்ளாவது  நாம் இதை கடை பிடிக்க முயல வேண்டும்..

மூன்றாவது,


"பொரு தொழிலும் கடை நிலத்தில் கிடந்ததே"

சிக்கல் என்று வந்து விட்டால் சாம, தான, பேத , தண்டம் என்று சொல்லப் படும் நான்கு உபாயங்களில், தண்டம் அதாவது தண்டனை, சண்டை என்பது  நான்காவதாக, கடைசியில் வருவது. முதலில் சமாதானத்தை  செய்ய முயல்வோம்  என்கிறான்.

படித்ததை செயல் வாழ்க்கையில் கடை பிடிக்கிறான்.

நான்காவது,


"உரிமையுடன் தம்பியர் அன்று"


அவர்கள் செய்தது  கோபத்தால்,பொறாமையால். ஆனால் தர்மன் சொல்வதோ, "தம்பி என்ற உரிமையில் அப்படி செய்து விட்டார்கள்" என்று பெருந்தன்மையோடு  பார்க்கிறான். "சொன்னது யாரு, கணவன் தானே / மனைவி தானே/ பெற்றோர் தானே/ நம் பிள்ளை தானே...அவர்களுக்கு இல்லாத உரிமையா ...அவர்கள் என்னோடு இல்லாவிட்டால் வேறு யாரோடு சண்டை போடுவார்கள் " என்று நினைக்கும் பரி பக்குவம் வேண்டும்.

ஐந்தாவது,

உரிமை என்றால் ஏதோ நல்லது செய்வதற்கு மட்டும் தான் உரிமை என்று அல்ல. சில சமயம் கோபிக்கவும், அதனால் சில பல சொற்கள் வந்து விழுவதும், செயல் நிகழ்வதும் கூட உரிமையால் தான்.

ஆறாவது

"உணர்வு அறியாமையின்"

குழந்தைக்கு பல்  வளரும் போது  நம் கை விரலை இழுத்து வாயில் வைத்து  கடித்து விடும். கடிப்பது மட்டும் அல்ல, கடித்து விட்டு சிரிக்கவும் செய்யும்.  அது வலிக்கத்தான் செய்யும். அதற்காக குழந்தையை அடிக்க முடியுமா?  "நீ என் விரலை கடித்தாய் அல்லவா,  பார் பதிலுக்கு நான் உன் விரலை கடிக்கிறேன்" என்று  குழந்தையின் விரலை நாம் எடுத்துக்  கடிக்க முடியுமா?

நமக்கு வலிக்கும் என்று குழந்தைக்குத் தெரியாது. அதுக்கு ஈறு உறுத்தும். எதையாவாவது   கடிக்கும். தெரியாமல் செய்து விடும்.

அது போல, நம் சுற்றத்தார் நமக்கு ஏதாவது தவறு செய்தால், "தெரியாமல் செய்து விட்டார்கள் " என்று நினைத்து அதை பெரிது படுத்தக் கூடாது.

இதெல்லாம் வாழ்க்கையில் நடைமுறை படுத்த வேண்டும்.

இல்லை என்றால், பாடவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த குடும்பப் பகையை  அறிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? என்றோ நடந்த குடும்பச் சண்டை.  அதை ஏன் வேலை மெனக்கெட்டு படிக்க வேண்டும்?

கதையாகப் படிக்கக் கூடாது.

வாழ்க்கைப் பாடமாக படிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post.html