Tuesday, August 31, 2021

திருக்குறள் - ஒரு சின்ன இடைச் செருகல்

 திருக்குறள் - ஒரு சின்ன இடைச் செருகல் 


இந்த ப்ளாகை படிக்கும் சிலர், சில கேள்விகளை முன் வைக்கிறார்கள். 


அந்தக் கேள்விகள் பெரும்பாலும் எப்படி திருக்குறள் வழி நடந்து நம்மை முன்னேற்றுவது என்பது பற்றி அல்ல. 


திருக்குறளில் குறை கண்டு பிடிப்பது, வள்ளுவருக்கு ஒன்றும் தெரியாது என்று நிரூபிக்க நினைப்பது, தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவது என்று போகிறது. 


விமர்சினங்கள், ஆராய்சிகள், கேள்விகள் எல்லாம் தேவை தான். அப்படித்தான் அறிவு வளரும். அது கூடவே கூடாது என்று சொல்ல முடியாது. 


ஆனால், அந்த கேள்விகள் அறிவை வளர்க்க பயன் பட வேண்டும். அறியாமையை வெளிச்சம் போட்டு காட்ட அல்ல. 


பெரும்பாலான கேள்விகள் வரக் காரணம் திருக்குறளை முழுமையாக ஒரு வரிசையாக படிகாதாதல் வரும் கேள்விகள். 


ஒரு ஐந்து வயது மாணவனை பன்னிரெண்டாம் வகுப்பில் கொண்டு போய் அமர்த்தினால் எப்படி இருக்கும்? அவனுக்கு எல்லாவற்றிலும் சந்தேகம் வரும், கேள்வி வரும், குழப்பம் வரும். 


ஒவ்வொரு வகுப்பாக படித்துக் கொண்டு வந்தால் தெளிவு பிறக்கும். 


அது போல குறளை வரிசையாக படிக்க வேண்டும். முதலில் படித்ததை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். 


முதல் வகுப்பில் படித்த அ ஆ மறந்து விட்டது என்று பத்தாம் வகுப்பில் வந்து உட்கார்ந்தால், எப்படி மேலே படிப்பது? 


திருக்குறளை ஒரு கோர்வையாக, ஆதி முதல் அந்தம் வரை படிக்க வேண்டும். அதுவும் வரிசையாக படிக்க வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_31.html


(Please click the above link to continue reading)


திருக்குறள் ஒரு நீதி நூல் அல்ல. அது வாழ்கை நெறிமுறை நூல். 


வாழ்க்கை என்பது ஒரு ஒழுங்கில் இருப்பது. 


பிறப்பு - பின் வளவர்து - பின் கல்வி கற்பது - பின் திருமணம் - பிள்ளைகள் - வயதாவது - மரணம் என்று போகிறது அல்லவா. 


இல்லை, நான் அப்படி வாழ மாட்டேன். முதலில் பிள்ளை பெற்றுக் கொள்வேன், அப்புறம் கல்வி கற்பேன், பின் திருமணம் செய்து கொள்வேன் என்று மனம் போனபடி வாழ முடியுமா? ஐந்து வயதில் திருமணம், எட்டு வயதில் பிள்ளை பெற்றுக் கொள்வேன் என்றெல்லாம் ஆரம்பிக்க முடியாது. 


அதே போல் ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டும், அல்லது அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் அல்லது அது சரி இல்லை என்றால் விட்டு விட்டு வேறு வேலை செய்யப் போய் விட வேண்டும். 


மாறாக, பிள்ளை வளர்ப்பது இப்படி என்று சொன்னால், அப்படி என்றால் வீட்டுக்கு வரும் விருந்தினரையும் அப்படித்ததான் நடத்த வேண்டுமா என்று கேட்கக் கூடாது. 


ஆணின் வேலை இது, பெண்ணின் வேலை இது என்று சொன்னால், அப்படி என்றால் ஆண்கள் அந்த வேலை செய்யக் கூடாதா, பெண்கள் இந்த வேலை செய்யக் கூடாதா என்று குதர்க்கம் பேசித் திரியக் கூடாது. 


பேசலாம். எப்போது என்றால், அப்படி மாறிச் செய்வது பற்றி முழுமையாக ஆராய்ந்து, ஒரு வாழ்கை முறையை கூறி, அந்த வாழ்க்கை முறை முன்னதை விட சிறப்பானது என்று நிறுவும் திறம் இருந்தால். 


திருக்குறள் எதையும் புதிதாக கண்டு சொல்லும் நூல் அல்ல. எங்கும், எப்போதும் நிறைந்து இருக்கும் அறத்தை தொகுத்துச் சொன்ன நூல். அவ்வளவுதான். 


நெருப்பில் கை வைக்காதே. சுடும் என்று அம்மா சொல்கிறாள். பிள்ளை "அது எப்படி சுடும் " என்று கை வைக்கிறான். சுடுகிறது. அம்மா சொன்னதால் சுடவில்லை. அம்மா சொல்லாவிட்டாலும் சுட்டிருக்கும். 


அது போல வள்ளுவர் செய்திருப்பது "சுடும்" என்ற செய்தியை சொல்வது. வாழ்க்கையை மிக நுணுக்கமாக ஆராய்ந்து, அதன் இரகசியங்களை அறிந்து தொகுத்துச் சொன்னது.   


பொருளை போட்டால் அது புவி ஈர்ப்பு காரணமாக கீழே விழும் என்று சொன்னது நியூட்டன். அவர் சொல்லாவிட்டாலும் புவி ஈர்ப்பு இழுக்கத்தான் செய்யும்.  அது ஒரு அறிவியல் உண்மை. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது நடந்தே தீரும். 


எனக்கு நியூட்டனின் சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லை. நான் பத்தாவது மாடியில் இருந்து குதிக்கப் போகிறேன் என்று சொல்பவர்களை நாம் என்ன செய்ய முடியும். அவர்கள் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்யலாம். அவ்வளவுதான். 


பெண் ஒழுங்காக இருந்தால் ஆணுக்குச் சிறப்பு என்றால், அப்படி என்றால் ஆண் ஒழுங்காக இருந்தால் பெண்ணுக்கு சிறப்பு இல்லையா என்று கேட்டால், சிறப்புத்தான். பின் ஏன் அதை வள்ளுவர் சொல்லவில்லை. பெண் மட்டும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொல்கிறாரே என்று கேட்டால், ஆணுக்கு பதினொரு கடமைகள் சொல்லி இருக்கிறார். அவற்றை ஊன்றிப் படித்தால், அவர் ஆண் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார் என்று புரியும். 


உடனே, அந்த வேலையெல்லாம் ஏன் பெண்கள் செய்யக் கூடாது என்று ஆரம்பிக்கக் கூடாது. 


சிரார்த்தம் ஆண்கள் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஏன் பெண்கள் செய்யக் கூடாது? 


துறவிகளுக்கும், பிரம்மச்சாரிகளுக்கும் உணவு, உடை, மருந்து இவற்றை தந்து உதவ வேண்டும் என்று ஆணுக்குச் சொல்லி இருக்கிறது. அதை ஏன் பெண்கள் செய்யக் கூடாது? செய்யலாம். ஒரு பெண் தினம் நாலு ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்து விருந்து போட்டு அனுப்பலாம். அந்தப் பெண்ணை உலகம் என்ன சொல்லும்? 


சரி, ஒரு ஆண் மட்டும் நாலு பெண்களை அழைத்து வந்து விருந்து போடலாமா என்றால், வள்ளுவர் அதற்கும் சம்மதம் சொல்லவில்லை. அந்த உபசரிப்பை ஆண் தனித்து செய்ய முடியாது. பெண்ணின் துணை வேண்டும் என்று வைத்து இருக்கிறார். 


அதனால், வள்ளுவரின் ஒவ்வொரு குறளும், அந்த குறளின் அர்த்தம் மட்டும் அல்ல, அது வைத்திருக்கும் இடமும் மிக முக்கியமானது. 


ஏன் முதலில் இன்பத்துப் பாலை வைக்கக் கூடாது?  துறவு கடைசியில் வருவது தானே. அதை கடைசியில் வைத்து முதலில் இன்பத்துப் பாலை வைத்து இருக்க வேண்டியது தானே. 


சரி, அது கூட வேண்டாம், முதலில் பொருள் பாலையாவது வைத்து இருக்கலாமே? பொருள் சேர்த்து, இல்லறத்தில் இன்பம் அனுபவித்து பின் தானே துறவு, வீடு பேறு எல்லாம். 


பின் ஏன் நீத்தார் பெருமையை முன்னால் சொல்லி பின் இன்பத்துப் பாலை வைக்கிறார்? வள்ளுவருக்கோ தெரியாதோ? நமக்கு தெரிந்த இந்த சின்ன விஷயம் கூட அவருக்குத் தெரியவில்லை போலும் என்று நினைக்கக் கூடாது. 


திருக்குறள் வைப்பு முறையே மிக மிக நுட்பமான விஷயம்.


திருக்குறள் படித்து நம்மை மேலேற்றிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே அல்லாது நம் நிலைக்கு அந்த நூலை கீழே இரக்கக் கூடாது. 


இனி அடுத்த குறளுக்குள் போவோம்.



Sunday, August 29, 2021

திருவரங்க கலம்பகம் - அற்றவர் சேர் திருவரங்கப் பெருமான்

திருவரங்க கலம்பகம் - அற்றவர் சேர் திருவரங்கப் பெருமான் 


பிள்ளை பெருமாள் ஐயங்கார் என்ற வைணவ இலக்கிய வல்லுநர் அருளிச் செய்த நூல் திருவரங்கக் கலம்பகம். 


அதில் இருந்து ஒரு பாடல்.


ஒரு அரசன், தன்னுடைய மகனுக்கு மறவர் குடியில் பிறந்த ஒரு பெண்ணை மணம் பேசி முடிக்க ஓலை அனுப்புகிறான். அந்தப் பெண்ணுக்கோ திருவரங்கத்து பெருமாள் மேல் தீராக் காதல். அந்தப் பெண்ணின் தகப்பன், ஓலை கொண்டு வந்தவனைப் பார்த்துக் கேட்கிறான் 


"அரசனின் திருமுகத்தை (ஓலையை. ஓலைக்கு இன்னொரு பேர் திருமுகம்) கொண்டு வந்த தூதனே, எங்களை யார் என்று நினைத்தாய்? பற்று அனைத்தையும் விட்டவர்கள் சேரும் திருவரங்கனின் தோழர் (குகன்) பரம்பரையில் வந்தவர்கள். 


சரி திருமுகம் கொண்டு வந்ததுதான் வந்தாய், மூக்கு, செவி, கண் எல்லாம் எங்கே? 


இளவரசனுக்கு (இள + அரசு) பெண் வேண்டும் என்றால் அரசுக்கு ஏற்ற ஏதாவது ஒரு ஆல மரத்தை கட்டி வைக்க வேண்டியது தானே"


என்று ஏளனம் செய்து திருப்பி அனுப்புவதாக அமைந்த கவிதை. 


பாடல்  


கொற்றவன் தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூதா!

குறை உடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்!

அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்

அவதரித்த திருக்குலம் என்றறியாய் போலும்!

மற்றதுதான் திருமுகமே ஆனால் அந்த

வாய், செவி, கண், மூக்கு எங்கே? மன்னர்மன்னன்

பெற்ற இளவரசு ஆனால் ஆவின் கொம்பைப்

பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_29.html


(Please click the above link to continue reading)


கொற்றவன் தன் = அரசனுடைய 


திருமுகத்தைக் = ஓலையை 


கொணர்ந்த தூதா! = கொண்டு வந்த தூதா 


குறை உடலுக்கோ = குறை உள்ள உடலுக்கோ (முகம் மட்டும் தானே இருக்கிறது) 


மறவர் = மறவர் குடியில் பிறந்த 


கொம்பைக் கேட்டாய்! = பெண்ணைக் கேட்டாய் 


அற்றவர்சேர் = பற்று அற்றவர்கள் சேரும் 


 திருஅரங்கப் பெருமாள் = திரு அரங்கப் பெருமாளின் 


 தோழன் = தோழன் (குகன்) 


அவதரித்த = பிறந்த 


திருக்குலம் = குலம் 


என்றறியாய் போலும்! = என்று நீ அறியவில்லை போலும் 


மற்றதுதான் திருமுகமே ஆனால் = அது திருமுகம் என்றே வைத்துக் கொண்டாலும் 


அந்த = அதன் 


வாய், செவி, கண், மூக்கு எங்கே?  = வாய், செவி, கண், மூக்கு எங்கே 


மன்னர்மன்னன் = மாமன்னர் 


பெற்ற இளவரசு = பெற்ற பிள்ளையாகிய இளவரசன்


ஆனால் = என்றால் 


ஆவின் கொம்பைப் = ஆலமரத்தின் கொம்பை  அல்லவா 


பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே! = பிறந்த குலத்துக்கு ஏற்ப பேசி முடிக்க வேண்டியது தானே 


என்பது கவிதை. 


(உலகிலேயே மிகக் கடினமான காரியம் எது என்றால் கேட்டால் இது போன்ற மிக எளிமையான பாடலுக்கு உரை எழுதுவதுதான் போலும்....:))


எங்கோ ஒரு குகன், இராமன் மேல் அன்பு வைத்ததால், அவன் பின் வந்த எல்லோரும் இராமன் மேல் அன்பு பாராட்டுகிறார்கள். 


நல்லது என்றால் பின்பற்ற வேண்டியது தானே. 


பழைமை எல்லாம் மூடத்தனம் என்று ஒதுக்கும் ஒரு நிலை வந்து விட்டது. 


இது போன்ற இலக்கியங்கள் நாம் எப்படி வாழ்ந்தோம், நம் கலாசாரம் எப்படி இருந்தது என்று நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. 

Saturday, August 28, 2021

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

நந்திக் கலம்பகம் - பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்


நந்திக் கலம்பகம் ஒரு இனிய இலக்கியம். படிக்க படிக்க சுவை தரும் இலக்கியம். மிக எளிய அதே சமயத்தில் கருத்து ஆழமும், உவமை நயமும், உணர்ச்சிகளின் வெளிப்பாடும் கொண்டது. 


தலைவனைப் பிரிந்த தலைவி தனிமையில் வருந்துகிறாள்.


எப்படியோ, இரவு போய் விட்டது. பகல் வந்து விட்டது. எல்லோரும் விழித்து விடுவார்கள். வேலை தொடங்கி விடும். தலைவனின் பிரிவை கொஞ்சம் மறந்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், இந்த இரவும் நிலவும் மீண்டும் வேகமாக் வந்து விட்டது. 


இப்ப தான் விடிஞ்ச மாதிரி இருக்கு, அதுக்குள்ள திரும்பியும் நிலவு வந்து அவளை வருத்தத் தொடங்கி விட்டது. 


நிலவு வேகமாக வந்ததற்கு ஒரு உதாரணம் கூறுகிறாள் தலைவி. 


ஒரு ஊரில் பெண்களே இல்லை என்றால் அந்த ஊர் எப்படி இருக்கும்? 


அந்த ஊரில் அன்பு இருக்காது. கருணை இருக்காது. அரவணைப்பு இருக்காது. ஈரம் இருக்காது. அருள் இருக்காது. 


அம்மா இல்லை, அக்காள் தங்கை இல்லை, மகள் இல்லை, காதலி இல்லை, மனைவி இல்லை...அது என்ன ஊர்? 


அங்குள்ள மக்கள் ஈவு இரக்கம் அற்று கொடியவர்களாக இருப்பார்கள் அல்லவா?


அப்படிப் பட்ட கொடியவர்களைப் போல நீ வேகம் வேகமாக வந்து என்னைத் துன்பப் படுத்துகிறாய் என்கிறாள். 



பாடல் 


 மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்

 தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்

பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்

வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_28.html


(Please click the above link to continue reading)


மண்ணெலாம் = இந்த மண் உலகம் எல்லாம் 


உய்ய = பிழைக்க 


மழைபோல் = மழையைப் போல 


வழங்குகரத் = வழங்கும் கைகளைக் கொண்ட 


தண்ணுலாமாலைத் = குளிர்ச்சி நிலவும் மாலையை அணிந்த 


தமிழ் நந்தி நன்னாட்டில் = நந்திவர்மன் உள்ள இந்தத் தமிழ் நாட்டில் 


பெண்ணிலா = பெண்களே இல்லாத 


ஊரில் = ஊரில் 


பிறந்தாரைப் போலவரும் = பிறந்தாரைப் போல வரும் 


வெண்ணிலாவே = வெண்ணிலாவே 


இந்த வேகம் உனக்காகாதே. = இத்தனை வேகம் உனக்கு ஆகாதே 


என்ன ஒரு கவிதை!


சமயம் இருப்பின் மூல நூலை தேடித் பிடித்து படியுங்கள். அத்தனையும் தேன்.


Friday, August 27, 2021

திருக்குறள் - ஏறுபோல் பீடு நடை

 திருக்குறள் - ஏறுபோல் பீடு நடை 


ஒருவனிடம் எல்லா செல்வமும் இருக்கிறது. 


பெரிய வீடு, வீட்டில் உள்ளேயே நீச்சல் குளம், நாலைந்து கார், வீட்டைச் சுற்றி தோட்டம், பெரிய பதவி, ஊருக்குள் பெரிய மனிதன் என்ற பேர், படிப்பறிவு எல்லாம் இருக்கிறது. 


ஆனால், அவன் மனைவி மட்டும் கொஞ்சம் சரி இல்லை. 


பொழுது விடிந்தால் போதும் சண்டை ஆரம்பித்து விடும், வேலைகாரர்கள், அக்கம் பக்கம் என்று கத்தி சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். ஆடம்பரச் செலவு. வீட்டுக்கு யாராவது வந்தால் ஏண்டா வந்தோம் என்று வருத்தித்தான் திரும்பிப் போவார்கள். மரியாதை கிடையாது. அன்பு கிடையாது. 


அப்படி ஒரு மனைவி இருந்தால், அவன் ஊருக்குள் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா ?


"அதோ போறாரே, அவர் மனைவி...ஒரு பெரிய இராட்சஷி..." என்று அவர் காது பட பேசினால், அவரால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?


மாறாக, இன்னொருவன் இருக்கிறான். பெரிய படிப்பு, செல்வம் எல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அவன் மனைவி பத்தரை மாத்துத் தங்கம். வீட்டுக்கு யார் வந்தாலும் அப்படி ஒரு உபசரிப்பு, யார்க்கு ஒரு துன்பம் என்றாலும் முதலில் போய் நிற்பாள், கணவன் மேல் அளவற்ற அன்பு,  எல்லா உறவையும் அணைத்துக் கொண்டு செல்லும் பாங்கு, யார் என்ன சொன்னாலும் புன்னகையோடு பேசும் பாங்கு,  சிக்கனமான செலவு...


அவன் ஊருக்குள் போகும் போது என்ன சொல்வார்கள் ?


"அதோ போறாரே...அவர் படிப்பு, பணம் காசு இல்லைனாலும், குடுத்து வச்ச மனுஷன்...இலட்சுமி மாதிரி ஒரு பொண்டாட்டி...வேற என்ன வேணும் " என்று சொன்னால், நெஞ்சு நிமிர்த்தி ஒரு பெருமிதத்துடன் நடக்க முடியும் அல்லவா அவனால்...


ஒரு மனிதன் ஏறு போல் கம்பீரமாக நடப்பதற்கும், தலையை தொங்கப் போட்டுக் கொண்டு போவதற்கும் அவன் கையில் ஒன்றும் இல்லை. அவன் மனைவி கையில் தான் எல்லாம் இருக்கிறது என்கிறது அடுத்த குறள். 


பாடல் 


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்

ஏறுபோல் பீடு நடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_27.html


(Please click the above link to continue reading)


புகழ்புரிந்த இல்லிலோர்க்கு = புகழை விரும்பும் மனைவி இல்லாதவர்களுக்கு 


இல்லை = கிடைக்காது 


இகழ்வார்முன் = அவனை இகழ்பவர் முன்னால் 


ஏறுபோல் = ஏறு போல 


பீடு நடை = பெருமிதமான நடை 



ஒரு மனிதனின் பெருமையும், சிறுமையும் அவன் மனைவியின் கையில் இருக்கிறது. 


அப்படி என்றால் என்ன அர்த்தம்? 


மனைவியிடம் எல்லாவற்றையும் விட்டு விட்டு இவர் ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அர்த்தம் இல்லை. 


அவள் கையில்தான் எல்லாம் இருக்கிறது என்றால், அவளை போற்றி பாதுகாக்க வேண்டும், அவளை அன்போடு நடத்த வேண்டும், அவளுக்குத் துணை செய்ய வேண்டும். அவளை மதிக்க வேண்டும். 


இது இல்லறம். 


இதில் யார் பெரியவர், யார் சிறியவர்  என்ற போட்டி இல்லை. 


யாருக்கு பலம் அதிகம் என்று நிர்ணயம் செய்யும் மல்யுத்த களம் அல்ல. 


இருவரும் சேர்ந்து நடத்தும் அறம் இது. 



Wednesday, August 25, 2021

கம்ப இராமாயணம் - ஆவியை உண்ணுதியோ

 கம்ப இராமாயணம் - ஆவியை உண்ணுதியோ 


அசோகவனத்தில் இருக்கும் சீதை இராமனை நினைத்து புலம்புகிறாள். 


"இராமா !, நீ காட்டுக்குப் போகப் போகிறேன் என்று சொன்ன போது நானும் வருகிறேன் என்று அடம் பிடித்தேன். நீ வர வேண்டாம், இங்கே நகரத்திலேயே இரு என்று சொன்னாய். நான்தான் கேட்கவில்லை. அதனால், இப்போது இந்த நகரத்தில் (இலங்கையில்) இருக்கட்டும் என்று என்னை விட்டுவிட்டாயா?  உன் அருளின் அளவு இவ்வளவுதானா? என் உயிரை வாங்குகிறாய் நீ" 


என்று புலம்புகிறாள். 


பாடல் 


தரு ஒன்றிய கான் அடைவாய், "தவிர் நீ;

வருவென சில நாளினில்; மா நகர்வாய்

இரு" என்றனை;இன் அருள்தான் இதுவோ ?

ஒருவென் தனிஆவியை உண்ணுதியோ ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_25.html


(Please click the above link to continue reading)


தரு ஒன்றிய = மரங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி இருக்கும் அடர்ந்த 


கான் = கானகத்தை 


அடைவாய், = நீ அடைவாய் 


"தவிர் நீ; = நீ (சீதையாகிய நீ) அதை தவிர்ப்பாய் 


வருவென = நான் (இராமன்) வருவேன் 


சில நாளினில் = கொஞ்ச நாளில் 


மா நகர்வாய் = பெரிய நகரத்தில் 


இரு " = இரு 


என்றனை = என்னைச் (சீதையை) சொன்னாய் 


இன் அருள்தான் இதுவோ ? = நீ காட்டும் அருள் இது தானா? 


ஒருவென் தனி = தனி ஆளாக இருக்கும் 


ஆவியை உண்ணுதியோ ? = உயிரை எடுக்கிறாய் 


நான் காட்டில் கிடந்து துன்பப் படக் கூடாது என்று என்னை இந்த நாட்டில் தனியாக இருக்க வைத்து விட்டாயா? இவ்வளவுதானா  உன் அருள். உன் பிரிவு என் உயிரை உருக்குகிறது என்கிறாள். 


உயிரை, உணர்வைத் தொடும் கவிதை. 

Tuesday, August 24, 2021

ஏலாதி - நூல் வேண்டா விடும்

ஏலாதி - நூல் வேண்டா விடும் 


தமிழில் எத்தனை ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன? அவற்றை எல்லாம் படித்து, தெளிவாக அறிந்து, அதன் படி நடப்பது என்பது நடக்கிற காரியமா? 


திருக்குறள் ஒன்று படிக்கவே ஒரு வாழ்நாள் போதாது போல் இருக்கிறது. இதில் மற்றவற்றை எப்போது படிப்பது. 


தமிழ் மட்டுமா? சமஸ்க்ரிதம், ஆங்கிலம் என்று எத்தனை மொழிகள் இருக்கின்றன. அவற்றில் எத்தனை நல்ல புத்தகங்கள் இருக்கும். எல்லாவற்றையும் என்று படித்து தீர்வது?


பக்தி நூல்களைப் படித்தால் பாதிக்கு மேல் இறைவன் பற்றிய வர்ணனையாக இருக்கிறது. நீ அதைச் செய்தாய், நீ இதைச் செய்தாய், நீ அப்படி இருப்பாய், இப்படி இருப்பாய். அதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? அவர் எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். 


சரி, சங்க இலக்கியம் படிக்கலாம் என்றால், அந்தக் கால வாழ்க்கை வரலாறு தெரியும். தெரிந்து என்ன செய்ய? காலம் எவ்வளவோ மாறி விட்டது. கைப் பேசியும், கணணியும் உள்ள காலத்தில் வளையல் நெகிழ்ந்த கதைகள் பெரிதாக ஒரு தாக்கத்தை உண்டு பண்ணப் போவதில்லை. 


சரி, அதுவும் வேண்டாம், அற நூல்களைப் படிக்கலாம் என்றால், அவை நடை முறைக்கு சாத்தியமாகுமா என்று தெரியவில்லை. படிக்க நன்றாக இருக்கும். ஆனால் கடை பிடிக்க முடியுமா என்ற சந்தேகம் வருகிறது. 


பின் எதைத்தான் படிப்பது?


எப்படி நம்மை முன்னேற்றுவது?


எதை ஒன்றை அறிந்து கொண்டால், மற்றவை எல்லாம் தேவை இல்லையோ, அதை மட்டும் படித்தால் போதும் அல்லவா?


ஏலாதி அதற்கு ஒரு வழி சொல்கிறது. 


இதை மட்டும் தெரிந்து அதன் படி நடந்தால் வேறு எந்த நூலும் படிக்க வேண்டாம் என்கிறது. 


பாடல் 


இடர்தீர்த்த லெள்ளாமை கீழினஞ்சே ராமை

படர்தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் - நடைதீர்த்தல்

கண்டவர் காமுறுஞ்சொற் காணிற் கலவியின்கண்

விண்டவர்நூல் வேண்டா விடும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_24.html


(pl click the above link to continue reading)


இடர்தீர்த்தல் = பிறர்க்கு வந்த துன்பங்களைப் போக்குதல் 


எள்ளாமை = பிறரை பரிகாசம் செய்யாமல் இருத்தல். மற்றவர்களை கேலி பேசக் கூடாது 


கீழினஞ்சே ராமை = கயவர்களோடு சேராமல் இருத்தல் 


படர்தீர்த்தல் = பிறர் பசியைத் தீர்த்தல் 


யார்க்கும் = யாராய் இருந்தாலும் (இதை முந்தைய பசி தீர்த்தலோடு சேர்த்து, 

பசி என்று யார் வந்தாலும் அந்தப் பசியைப் போக்குதல்) 


பழிப்பின்  நடை  = பழி வரக் கூடிய செயல்களை 


தீர்த்தல் = செய்யாமல் இருத்தல் 


கண்டவர் = எதிரில் நம்மைக் கண்டவர்கள் 


காமுறுஞ்சொற் = விரும்பும் சொல்லைச் கூறுதல், 


காணிற் = ஒருவன் செய்வானானால் 


கலவியின்கண் = உலகப் பற்றில் இருந்து (இங்கே கலவி என்பது உலகத்தோடு கலந்து இருப்பது) 


விண்டவர் = விடுபட்டவர்கள் , துறவிகள், முனிவர்கள், சான்றோர் 


நூல் வேண்டா விடும். = அவர்கள் எழுதிய எந்த ஒரு நூலும் வேண்டாம் (படிக்க வேண்டாம்).



இது கடினமே இல்லை. 


துன்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். 


பசித்தவர்களுக்கு உணவு தர வேண்டும். 


தீயவர்களோடு பழகக் கூடாது 


எல்லோரிடத்தும் இனிமையாக பேச வேண்டும். 


உலகம் பழிக்கும் செயலகளைச் செய்யக் கூடாது.


அவ்வளவுதான். 


இவற்றை ஒருவன் செய்தால், அவன் வேறு ஒரு நூலையும் படிக்க வேண்டாம். 


அனைத்து நூல்களும் சொல்வது இதைத் தான். 


இதை செய்து பழகுவது கஷ்டமா? 


Monday, August 23, 2021

திருக்குறள் - சொர்கத்திலும் மதிப்பு பெறுவர்

 திருக்குறள் - சொர்கத்திலும் மதிப்பு பெறுவர் 



பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்


புத்தேளிர் வாழும் உலகு


இது ஒரு குழப்பமான குறள். இந்தக் குறளுக்கு பல பேர் பல விதங்களில் உரை எழுதி இருக்கிறார்கள். எதுவுமே முழுவதும் சரி என்று படவில்லை. ஏதோ குறை இருப்பது போலவே படுகிறது. 


ஏன் என்று பார்ப்போம்.


பாடல் 


பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_23.html


(Please click the above link to continue reading)


பெற்றார்ப்  = அடையப்  பெற்றவர்கள் 

பெறின் = பெற்றால் 

பெறுவர் = அடைவர் 

பெண்டிர் = பெண்கள் 

பெருஞ்சிறப்புப் = பெரிய சிறப்பு 

புத்தேளிர் = தேவர்கள் 

வாழும் உலகு = வாழும் உலகு 


பெற்றார் என்றால் யார் பெற்றார், எதைப் பெற்றார் என்ற கேள்வி வரும். 


பெறுவர் என்றால் யார் பெறுவார்கள்? 


அதிகாரம் "வாழ்க்கைத் துணை நலம்". எனவே இது மனைவியைப் பற்றியது என்று கொள்ளலாம். 


மனைவியைப் கணவன்  பெற்றால் என்று கொண்டால், "பெறுவர் பெண்டிர்" என்று மீண்டும் வருகிறது.  குழப்பமாக இருக்கிறது அல்லவா?


பரிமேலழகர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 

"பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர் வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர் வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப் பெறுவர்."


அதாவது,  தன்னைத் தொழுது எழும் மனைவியை ஒரு கணவன் பெற்றால், அவன் சொர்கத்திலும் பெரிய சிறப்பைப் பெறுவான் என்று பொருள் சொல்கிறார். 


இது ஒரு பெண்ணடிமைத் தனம் இல்லையா என்று கேள்வி கேட்கலாம். 


இதற்கு வேறு விதத்திலும் பொருள் சொல்கிறார்கள். 


ஒரு மனைவி, தன்னை மட்டுமே நேசிக்கும் கணவனைப் பெறுவாள் என்றால், அவள் சொர்கத்திலும் சிறந்த பேறு பெறுவாள் என்றும் பொருள் சொல்கிறார்கள். 


கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், இயற்கைக்கு முரண்பாடாகத் தெரிகிறது. 


இந்த ஒரு பெண் (ஆண்)  மேல் மட்டும்தான் நீ அன்பு செலுத்த வேண்டும். வேறு யார் மேலும் அன்பு செலுத்தக் கூடாது என்று ஒருவரைக் கட்டுப் படுத்த முடியுமா? 


சட்டம் போடலாம். ஆனால், அதை அமல் படுத்துவது கடினம். 


"இது ஒரு சிறந்த உணவு. உடம்புக்கு நல்லது. எனவே, வாழ் நாள் பூராவும் இதை மட்டும் தான் மூன்றும் வேளையும் சாப்பிட வேண்டும்" என்று சொன்னால் நடக்குமா? 


சரி, அப்படியே ஒரு நெறிப் படுத்தினாலும், அதில் இன்பம் இருக்குமா? இங்கே இன்பம் இல்லை என்றால் பின் சொர்க்கத்தில் போய் என்ன இன்பம் வரப் போகிறது? 


மனைவி கற்புள்ளவளாக இருப்பது மாதிரி கணவனும் கற்புள்ளவனாக இருந்து விட்டால் இருவருக்கும் சொர்கத்திலும் சிறந்த பெருமை கிடைக்கும் என்று பொருள் கொள்ளலாம். அதில் எதிர் கருத்து ஒன்றும் இருக்காது. 


ஆனால், அதுதான் குறளின் கருத்தா என்று தெரியவில்லை. 


மேலும் உண்மை அறிய விருப்பம் உள்ளவர்கள் தேடிக் கண்டைவார்களாக.





Friday, August 20, 2021

கம்ப இராமாயணம் - ஆயிரம் கோடி துன்பத்தைத் தாங்குவேன்

 கம்ப இராமாயணம் - ஆயிரம் கோடி துன்பத்தைத் தாங்குவேன் 


அசோகவனத்தில் சீதை தனித்து இருக்கிறாள். இராமனை நினைத்து புலம்புகிறாள். 


"அவன் (இராமன்) வராமல் இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் ஆயிரம் துன்பத்தை நான் தாங்குவேன். என் வலியை தீர்க்க மாட்டாயா. வீரனே. நாராயணனே. தனித்துவம் மிக்க நாயகனே"


என்று இராமனை நினைத்து புலம்புகிறாள். 


பாடல் 



வாராது ஒழியான் எனும் வன்மையினால்

ஓர் ஆயிரம் கோடி இடர்க்கு உடைவேன் :

தீரா ஒரு நாள் வலி; சேவகனே!

நாராயணனே! தனி நாயகனே!


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_20.html


(please click the above link to continue reading)


வாராது ஒழியான் = வராமல் இருக்க மாட்டான் 


எனும் வன்மையினால் = என்ற தைரியத்தில் 


ஓர் ஆயிரம் கோடி = ஒரு ஆயிரம் கோடி 


இடர்க்கு உடைவேன் : = துன்பங்களைத் தாங்குவேன் 


தீரா ஒரு நாள் வலி = என் வலியை ஒரு நாள் அல்லது மற்றொரு நாள் தீர்ப்பாய் 


சேவகனே! = வீரனே 


நாராயணனே! = நாராயணனே 


தனி நாயகனே! = சிறப்பு மிக்க தலைவனே 


ஓரிரண்டு செய்திகளை பார்ப்போம். 


அது என்ன திடீரென்று நாராயணனே என்று அழைக்கிறாள் என்று நமக்கு கொஞ்சம் தூக்கி வாரிப் போடத்தான் செய்கிறது. 


மும்மூர்த்திகளில் திருமாலின் தொழில் காத்தல். காத்தல் தொழிலை யார் செய்தாலும் அவர்கள் திருமாலின் தொழிலைச் செய்கிறார்கள். அவர்கள் திருமாலின் ஒரு அம்சமாகவே கருதப் படுவார்கள். 


அந்தக் காலத்தில் அரசர்களை "இறைவன்" என்றே குறிப்பிட்டார்கள். ஏன் என்றால் குடிகளை காப்பது அவன் கடமை. இறைமாட்சி என்ற ஒரு அதிகாரமே வைத்தார் வள்ளுவர். 


இராமன், ஒரு அரசன் என்பதால், அவனை நாராயணனே என்று அழைக்கிறாள். 


எவ்வளவு பெரிய துன்பம்! ஜனகனின் மகளாக பிறந்து, தசரதனின் மருமகளாக ஆகி, இராமனின் மனைவி என்று பட்டத்து இராணியாக வேண்டியவள், காடு மேடெலாம் திரிந்து, கடைசியில் யாரோ ஒரு அரக்கன் தூக்கிக் கொண்டு வந்து பலவந்தப் படுத்துகிறான். 


கணவன் எங்கே என்று கூடத் தெரியாது. 


ஆனால், அவளுக்கு ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் இருக்கிறது. இராமன் எப்படியும் வருவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை இருப்பதால், ஆயிரம் கோடி துன்பம் வந்தாலும் தாங்குவேன் என்கிறாள். 


கணவன் , மனைவியின் மேலும். மனைவி, கணவனின் மேலும் கொண்ட காதல் தான் இல்லறத்தில் வரும் அத்தனை துன்பங்களையும், சவால்களையும் எதிர் கொள்ள உதவும். 


பணம் காசு இருந்தால் எந்த சிக்கலையும் சரி செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.  இராமனிடமும் , சீதையிடமும் இல்லாத செல்வமா. அந்த செல்வம் அவர்கள் துன்பத்தைத் தீர்கவில்லை. அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்புதான் அவர்கள் சந்தித்த துன்பங்களை தாங்கிக் கொள்ள உதவியது.


அதுதான் பாடம். 


படித்துக் கொள்வோம். 

Wednesday, August 18, 2021

திருக்குறள் - பெண்ணுக்குக் காவல்

 திருக்குறள் - பெண்ணுக்குக் காவல் 


கற்பு என்பதை உடல் சார்ந்த விடயமாகவே வைத்துக் கொண்டாலும், அது ஏன் பெண்ணுக்கு மட்டும் பெரிதாகச் சொல்லப் படுகிறது? ஆணுக்கு கற்பு வேண்டும் என்று எந்த இலக்கியமும் கூறவில்லை. 


கோவலன், மாதவியோடு சென்றான் என்றால் அவனை ஒரு கெட்டவனாக சிலப்பதிகாரம் சித்தரிக்கவில்லை. ஏன், அவன் மனைவியே கூட அவனை திட்டவில்லை. 


தசரதனுக்கு பதினாறாயிரம் மனைவிகள் என்றால் கேட்டுவிட்டு சிரித்து விட்டு நகர்ந்து விடுகிறோம். சீ என்று யாரும் சொல்லுவதில்லை. அவன் மகனா இராமன் என்று யாரும் இராமனை கேலி செய்யவில்லை. 


ஆயிரம் உதாரணம் சொல்லலாம். இந்து கடவுள்கள் கூட பலதாரம் மணம் செய்து கொள்கிறார்கள். கேட்டால் ஏதாவது ஒரு கதை சொல்கிறார்கள். ஒன்று இச்சா சக்தி, இன்னொன்று கிரியா சக்தி என்கிறார்கள். நாங்களும் அந்த இரண்டு சக்திகளை வைத்துக் கொள்கிறோம் என்று பக்த கோடிகள் ஆரம்பித்து விட்டால்?


பெண்ணுக்கு கற்பு ஏன் பெரிதாக கூறப்பட்டது என்றால், பெண் கற்பு நிலை பிறழ்ந்தால் குடும்பம் சிதைந்து விடும்.  குடும்பம் சிதைந்தால் சமுதாயமும், நாடும் சிதையும். 


எப்படி. 


ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்கிறாள் அல்லது பல ஆண்களிடம் தொடர்பு வைத்து இருந்தால், அவளுக்கு பிறக்கும் பிள்ளைக்கு யார் தகப்பன் என்ற கேள்வி வரும். யாரும் பொறுப்பு எடுக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளைக்கு படிப்பு, உணவு, உடை, மருத்துவம், நல்லது கெட்டது சொல்வது என்று யாரும் பொறுப்பு எடுக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளை அனாதை போலத்தான் வளரும். இன்னும் சொல்லப் போனால், தகப்பன் பெயர் தெரியாதவன் என்று பழியோடு வளரும். 


அப்படி வளர்ந்தவன்தான் கர்ணன். அவன் எவ்வளவு சங்கடப்பட்டான் என்று பாரதம் கூறுகிறது. 


இப்படி நாடு பூராவும் தகப்பன் பெயர் தெரியாத பிள்ளைகள் இருந்தால் எப்படி இருக்கும். 


எனவே தான், அதில் ஆழமாகச் செல்லாமல், பெண்ணுக்கு கற்பை பெரிய விடயமாக சொன்னார்கள். 


சரி, பெண் வெளியில் சென்றால் தானே, நாலு பேரிடம் பழகினால் தானே அவள் மனம் சலனப் பட வாய்ப்பு இருக்கிறது? கற்பு நெறி பிறழ வாய்ப்பு இருக்கிறது? எனவே அவளை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே வைத்து பூட்டி வைத்து விட்டால் ஒரு குழப்பமும் வராது தானே என்று நினைத்து பெண்ணை பூட்டி வைக்க நினைப்பவர்களைப் பற்றி இங்கே கூறுகிறார். 


"ஒரு பெண், அவளே நினைத்தால் அல்லது அவளை கற்பு நெறியில் நிற்க வைக்க யாராலும் முடியாது. சிறை வைத்தாலும் நடக்காது" என்கிறார். 


பாடல் 


சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_18.html


(please click the above link to continue reading)


சிறைகாக்கும் = சிறையில் வைத்து காக்கும் 


காப்பு = காவல் 


எவன் செய்யும் = யாரால் செய்ய முடியும் 


மகளிர் = பெண்கள் 


நிறைகாக்கும் = கற்பு என்ற என்ற நெறியில் நின்று காக்கும் 


காப்பே தலை = காவலே தலை சிறந்தது 


பெண்கள் கற்பு நெறியில் நிற்க வேண்டும் என்றால் அது அவர்கள் மேல் செலுத்தும் அன்பால் தான் முடியும். மாறாக கணவன், அவனுடைய புகழ், செலவாக்கு, உடல் பலம், இவற்றைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்கிறார் வள்ளுவர். 


இதுவும் கூட கொஞ்சம் நெருடலான குறள் தான். கற்பு என்று வந்து விட்டாலே கூடவே சச்சரவும் வரத்தான் செய்யும். 


தாண்டிப் போவோம். 


Tuesday, August 17, 2021

நாலடியார் - வருந்தியும் கேட்பர்

 நாலடியார் - வருந்தியும் கேட்பர் 


வீட்டிலோ, அலுவலகத்திலோ நமக்கு வேண்டிய ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால் நாம் என்ன செய்வோம்?


உடனே, சுறுசுறுப்பாக அந்தத் தவற்றைச் சுட்டி காட்டுவோம். அப்படி காட்டினால் நமது புத்திசாலித்தனம் வெளிப்படும் என்று நாம் நினைக்கிறோம். 


"வள்ளுவர் சொன்னது தவறு" என்று சொல்லுவதன் மூலம், நாம் வள்ளுவரை விட பெரிய அறிஞர் என்று காட்டிக் கொள்ள முனைவோம். 


அது நாகரிகம் அல்ல. பண்பாடு அல்ல. 


ஒருவர் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், ஒரு சபையில் வைத்து அவனை திருத்தக் கூடாது. படித்தவர்கள், பெரியவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். தனியாக கூப்பிட்டு, அதை சுட்டிக் காட்டுவார்கள். 


"கற்றறிந்தோர் சபையில் ஒரு கல்லாதவன் ஏதாவது உளறினால், அங்குள்ள பெரியவர்கள், கஷ்டப்பட்டாவது அவன் சொல்வதைக் கேட்பார்கள். ஏன் என்றால், அவன் பிழையை சுட்டிக் காட்டினால் அவன் பல பேர் முன்னிலையில் வெட்கப் பட வேண்டி வரும் என்று நினைத்து "



பாடல் 


புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி

கல்லா வொருவ னுரைப்பவுங் - கண்ணோடி|

நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்

பல்லாரு ணாணல் பரிந்து. 


பொருள் 



(please click the above link to continue reading)


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_17.html


புல்லா = பொருந்தாத, சரி இல்லாத 


வெழுத்திற் = எழுத்தை, 


பொருளில் = பொருள் இல்லாமல் 


வறுங் = வீணாகப் பேசி 


கோட்டி = கற்றறிந்தோர் சபையில் 


கல்லா = கல்வி அறிவு இல்லாத 


வொருவ னுரைப்பவுங்  = ஒருவன் உரைப்பவும் = ஒருவன் சொல்லக் கேட்டும் 


கண்ணோடி| = கருணையினால் 


நல்லார் = நல்லவர்கள் 


வருந்தியுங் கேட்பரே  = துன்பப் பட்டாவது கேட்பார்கள் 


மற்றவன் = அவன் 


பல்லாரு ணாணல் பரிந்து.  = பல பேர் முன் நாணப்படுதலை சிந்தித்து 


ஒருவன் தவறாக ஒன்றைச் சொல்லி விட்டால், சொல்லிவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட வேண்டும். 


முட்டாளோடு வாக்குவாதம் செய்து என்ன ஆகப் போகிறது. 


மேலும், அந்தக் கல்லாதவன் நமக்கு வேண்டியவனாகப் போய் விட்டால், அவனை திருத்தப் போய், அவன் உறவும் முறியும்.


அவன் பலரால் கேலி செய்யப் படுவானே என்று நினைந்து நல்லவவர்கள் வருந்தியும் கேட்பார்களாம். 


நாகரீகத்தின் உச்சம். 


"வருந்தியும் கேட்பர்"  என்ன ஒரு அழகான சொற் கையாளல். 




Monday, August 16, 2021

திருக்குறள் - மனைவி என்பவள் யார்?

 திருக்குறள் - மனைவி என்பவள் யார்? 


ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் மனைவி ஆகி விடுவாளா?  இல்லை. 


பிள்ளை பெற்று விட்டால் தாயாகி விடுவாளா? இல்லை. 


மனைவி என்றால் யார் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார். 


அவர் யார் எங்களை சொல்ல என்று நினைப்பவர்கள் மேலே படிக்காமல் வேறு ஏதாவது உயர்ந்த விடயங்களை படிப்பது நல்லது.


"தன்னைக் காத்துக் கொண்டு, பின் தன்னை கொண்ட கணவனையும் காத்து, இருவரின் இல்லறம் பற்றி மற்றவர்கள் புகழ்ந்து பேசும்படி இறுதிவரை கடைப் பிடிப்பவளே பெண் (மனைவி)"


என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_16.html


(Please click the above link to continue reading)


தற்காத்துத் = தன்னை காத்துக் கொண்டு 

தற்கொண்டாற் = தன்னைக் கொண்ட கணவனை 

பேணித் = போற்றி, பாதுகாத்து 

தகைசான்ற = பெருமை அமைந்த 

சொற்காத்துச் = புகழைக் காத்து 

சோர்விலாள் பெண் = சோர்வு இல்லாதவள் பெண் (மனைவி)


கொஞ்சம் ஆழமாக சிந்திப்போம். 


தற்காத்துத் = முதலில் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். பரிமேலழகர் உரையில் "கற்பினின்று வழுவாமல் தன்னைக் காத்துக் கொண்டு" என்று குறிப்பிடுகிறார். சற்று விரிவாகப் பொருள் கொண்டால், தன்னை அனைத்து விதத்திலும் காத்துக் கொண்டு என்று கூறலாம். 


பட்டினி கிடந்து, சரியான உணவை, சரியான நேரத்தில் உண்ணாமல் தியாகச் சுடராக இருக்கச் சொல்லவில்லை. அவள் தன்னைக் காத்துக் கொண்டாள் தான் குடும்பத்தை காக்க முடியும் என்பதால், முதலில் அவள் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். 


அடுத்து, "தற்கொண்டான் பேணி". கணவனை பேண வேண்டும். "உணவு முதலியன கொடுத்து" என்கிறார் பரிமேலழகர். 


அடுத்து, "தகை சான்ற சொற் காத்து". இது மிக மிக முக்கியமான ஒன்று. அவர்கள் இல்லறத்தைப் பற்றி எல்லோரும் புகழ வேண்டும். கணவனோ மனைவியோ தங்களுக்குள் ஏற்படும் மன வேற்றுமைகளை வெளியே சொல்லக் கூடாது. சொன்னால், குடும்பத்தின் பெருமைக்கு கேடு வரும். சொல் என்பது இங்கே புகழ். மாமனார்,மாமியார், கணவன், என்று குடும்பத்தில் உள்ள நபர்களின் குறைகளை வெளியே சொன்னால், குடும்பத்தின் புகழ் குறையும்.


இதோடு நிறுத்தி இருந்தால், வள்ளுவர் பெரிய ஆள் இல்லை. 


அடுத்து ஒரு வார்த்தை சேர்கிறார். 


"சோர்விலாள்".  சோர்வு என்றால் மறதி என்கிறார் பரிமேலழகர்.  இடை விடாமல் கடை பிடிக்க வேண்டும். ஏதோ கொஞ்ச காலம் கடை பிடித்தோம் அப்புறம் விட்டு விட்டோம் என்று இருக்கக் கூடாது. வேலை செய்யும் வரை கணவனுக்கு மரியாதை இருக்கும்...அப்புறம் அவனை தூக்கி ஒரு மூலையில் வைத்து விடுவது என்பது "சோர்வில்" வரும். இறுதிவரை குடும்பத்தின் புகழை நிலை நிறுத்த வேண்டும். 


"அடடா, வீடு என்றால் அது, குடும்பம் என்றால் அது " என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும். 


அப்படி செய்பவள்தான் "பெண்" (மனைவி) என்கிறார். 


அதெல்லாம் இல்லை. எங்கள் மனதுக்குப் பட்டதை நாங்கள் சொல்லுவோம். குடும்ப மானத்தைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. கணவனோ, மாமியாரோ யாராக இருந்தாலும், தவறு செய்தால் நாலு பேருக்குத் தெரியும் படி உரக்கச் சொல்வோம் என்று கொடி பிடிப்பவர்களுக்கு அல்ல இந்தக் குறள். 


வள்ளுவர் சொற்களை தேர்ந்து எடுத்துப் போடக் கூடியவர்.


"சோர்விலாள் மனைவி" என்று சொல்லி இருக்கலாம். "சோர்விலாள் பெண்" என்று கூறுகிறார். 


இந்தக் குணம் இல்லாதவளை அவர் பெண் என்ற பட்டியலிலேயே சேர்க்கத் தயாராக இல்லை. தற்கொண்டான் என்று வருவதால், இங்கே பெண் என்பதை மனைவி என்று நாம் புரிந்து கொள்கிறோம். 


இது ஒரு வழிகாட்டி. எங்களுக்கு ஒரு வழி காட்டியும் வேண்டாம், நாங்கள் மனம் போன படி போவோம் என்று செல்பவர்களுக்கு நாம் கை அசைத்து விடை தருவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?



 தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்



Sunday, August 15, 2021

கம்ப இராமாயணம் - அவன் கிட்ட பேச மாட்டீங்களா ?

 கம்ப இராமாயணம் - அவன் கிட்ட பேச மாட்டீங்களா ?


கணவன் மனைவிக்கு இடையே ஏதோ காரணத்தால் பிரிவு. ஒருவருக்கு ஒருவர்  பேசுவதில்லை. யார் பேசுவது என்று ஒரு வீராப்பு இரண்டு பக்கமும். 


மனைவி, கணவனின் நெருங்கிய நண்பரை கூப்பிட்டுச் சொல்கிறாள் "நீங்க அவர் நெருங்கிய நண்பர் தானே...நீங்களாவது அவர்கிட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா?" என்று அந்த நண்பரிடம் வேண்டுகிறாள். 


இது இயல்பாக நடக்கக் கூடியது தான். 


அசோகவனத்தில் சிறை இருக்கும் சீதை சொல்கிறாள் 


"ஏய் நிலவே, இருளே, நீங்கள் எல்லாம் என் மேல் நெருப்பை அள்ளி வீசி அலைந்து கொண்டு இருக்கிறீர்கள். என் உயிரைப் பற்றி உங்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை. நீங்கள் இராமனுடன் பழகுகிறீர்கள் தானே. என் நிலைமை பற்றி அவனிடம் பேச மாட்டீர்களா? "


என்று. 


பாடல் 


தழல் வீசி உலாவரு வாடை தழீஇ

அழல்வீர்; எனது ஆவி அறிந்திலிரோ?

நிழல் வீரை அனானுடனே நெடுநாள்

உழல்வீர்; கொடியீர்! உரையாடிலிரோ?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_15.html


(pl click the above link to continue reading)



தழல் வீசி = நெருப்பை வீசி 


உலாவரு = உலவுகின்ற நீங்கள் 


வாடை தழீஇ = வாடைக் காற்றை தழுவி 


அழல்வீர் = என்னைச் சுடுகின்றீர்கள் 


எனது ஆவி அறிந்திலிரோ? = என் உயிரைப் பற்றி அறிய மாட்டீர்களா? 


நிழல் வீரை அனானுடனே = ஒளி வீசும் அவனுடன் (இராமனுடன்) 


நெடுநாள் = நீண்ட நாள் 


உழல்வீர்; = ஒன்றாகத் தானே இருக்கிறீர்கள் 


கொடியீர்! = கொடுமையானவர்களே 


உரையாடிலிரோ? = அவனுடன் என் நிலைமை பற்றிபேசுவது இல்லையோ ?


வாடைக் காற்றை வீசி நெருப்புப் போல என்ன சுடுகிறீர்கள் என்கிறாள். பாவம். குளிரின் கொடுமையும், பிரிவின் தனிமையும் அனுபவித்தால் தான் தெரியும். 


ஒரே ஒரு முறை குளிர் என்றால் என்ன என்று அறிந்து இருக்கிறேன். 


வட இந்தியாவில் வேலை பார்க்கும் போது, ஒரு தரம் பணி நிமித்தமாக மற்றோர் இடத்துக்கு செல்ல நேர்ந்தது. பணி முடித்து திரும்பி வரும் போது இரயில் தாமதமாக வந்து சேர்ந்தது. நள்ளிரவு இருக்கும். 


இரயில் நிலையத்தில் இருந்து நான் பணி செய்யும் இடம் கிட்டத்தட்ட ஒரு நாற்பது கிமீ இருக்கும். 


பேருந்து எதுவும் கிடையாது அந்த நள்ளிரவில். சரி என்று ஒரு லாரியைப் பிடித்து இருப்பிடம் சென்று கொண்டிருந்தேன். 


முக்கால்வாசி தூரம் வந்த பின், அந்த லாரி ஓட்டுனர், "இதற்கு மேல் நாங்கள் வேறு வழியில் போய் விடுவோம் ...நீங்கள் இங்கே இறங்கிக் கொள்ளுங்கள். வேறு லாரி பிடித்துப் போங்கள்" என்று ஒரு அத்துவான காட்டில் இறக்கி விட்டுவிட்டுப் போய் விட்டார். 


குளிர்காலம். - 4 degree C. குளிருக்கு ஏற்ற ஆடை ஒன்றும் இல்லை. வெடவெட என நடுங்குக்கிறது உடம்பு. விரல் எல்லாம் விரைக்கிறது. பெட்டியைத் திறந்து இருக்கிற சட்டை pant எல்லாம் ஒண்ணுக்கு மேல் ஒண்ணு போட்டுக் கொண்டேன். கொஞ்ச நேரம் தாங்கியது. பின் மீண்டும் குளிர். வழியில் செல்லும் லாரியை நிறுத்த கை காட்டினால், நிறுத்தாமல் போய் விடுகிறார்கள். போவது மட்டும் அல்ல, அந்த போகும் வேகத்தில் அடிக்கும் குளிர் காற்று இருக்கிறதே....


அப்போது யாராவது ஒரு குவளை சூடான தேனீர் தந்தால் என் இராஜ்யத்தில்  பாதியையும், என் மந்திரியின் மகளையும் அவருக்கு தந்து இருப்பேன். 


அப்படி ஒரு குளிர். எலும்பு வரை எட்டிப் பாய்ந்த குளிர். 


இதைப் படிக்கும் போது, அன்றைய குளிரின் ஞாபகம் வந்தது. 


என்றோ கம்பன் எழுதியது, என்றோ எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்,


இரண்டும், ஒரு புள்ளியில் சந்திப்பது தான் இலக்கியத்தின் அதிசயம்.






Saturday, August 14, 2021

திருக்குறள் - பெய்யெனப் பெய்யும் மழை

திருக்குறள் - பெய்யெனப் பெய்யும் மழை


தெய்வத்தை தொழ மாட்டாள். கொண்ட கணவனை தொழுது எழுவாள். அவள் "பெய்" என்றால் மழை பெய்யும் என்கிறது அடுத்த குறள். 


பாடல் 


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_14.html


(click the above link to continue reading)




தெய்வம் தொழாஅள் = தெய்வத்தை தொழ மாட்டாள் 


கொழுநன் = கணவனை 


தொழுதெழுவாள் = தொழுது எழுவாள் 


பெய்யெனப் = அவள் பெய் என்று சொல்ல 


பெய்யும் மழை. = மழை பெய்யும் 


மிகவும் சிக்கலான குறள். 


கணவனை மனைவி தொழுதாள் என்பதற்கு அந்தக் காலத்திலும் சான்றுகள் இல்லை. பெண்கள் கோவிலுக்குப் போவதும், இறை வழிபாடு செய்வதும் அன்றும், இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 


தெய்வத்தை தொழாமல், கணவனை தொழும் பெண்கள் பற்றி சில கதைகள் இருக்கலாம்.  அதுவே எல்லோராலும் பின் பற்றப்பற்ற ஒன்று என்று சொல்ல முடியாது. 


பின் ஏன் வள்ளுவர் அப்படி எழுதினார்? 


வள்ளுவர் பெண்மையை சிறுமை படுத்துகிறவர் அல்ல. 


பெண்களை இழிவு படுத்த வேண்டும், அவர்களை ஆண்களின் அடிமைகளாக வைக்க வேண்டும் என்று நினைப்பவர் அல்லர். அவர் நினைத்தாலும் அது நடக்காது என்பது வேறு விஷயம். 


பின் ஏன் இந்தக் குறள் இப்படி சொல்கிறது. 


வள்ளுவரை போற்றும் பலரும் இந்த குறளுக்கு உரை சொல்லும் போது தடுமாறத்தான் செய்திருக்கிறார்கள். 


ஒரு வேளை இடைச் செருகலாக இருக்குமோ என்று நினைத்தால் அதற்கும் இடம் இல்லை. காரணம், வெவ்வேறு காலக் கட்டங்களில் எழுதப் பட்ட பல்வேறு நூல்களில் இந்தக் குறள்மேற்கோள் காட்டப் பட்டிருக்கிறது. 



தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளைத்

தெய்வம் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாம்

மண்ணக மாதர்க்கு அணியாய கண்ணகி

விண்ணக மாதர்க்கு விருந்து


என்று சிலப்பதிகாரம் பேசுகிறது. 


"பெய்யெனப் பெய்யும் மழை" அருமையான வரி. 


அவள், பெய் என்றால் உடனே மழை பெய்தால் அது எந்த அளவு இன்பமாக இருக்குமோ, அப்படி இன்பமானவள் என்று கூட பொருள் சொல்லிப் பார்த்தார்கள். 


அதெல்லாம் சரி. முதல் வரிக்கு என்ன பதில் என்றால் சரியான பதில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 


இதுவரை, அந்த வரிக்கு ஒரு முழுமையான தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. 


எழுந்து தொழுவாள் என்று கூட சொல்லவில்லை. தொழுது பின் எழுவாளாம். தூக்கத்தை விட்டு எழும்பும் முன்னே தொழுது விடுவாளாம். 


நம் இலக்கியம் அனைத்திலும் கற்புடைய பெண்களின் அபரிமிதமான ஆற்றல் பற்றிப் பேசப் பட்டு இருக்கிறது. 


ஏதோ ஒரு புலவர் பாடினால் மிகைக் கற்பனை என்று விட்டு விடலாம். 


"எல்லை நீத்த இந்த உலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன்" என்கிறாள் சீதை. 


சொன்னாளே, சுட்டாளா என்று கேட்டால்....


சுட்டுக் காட்டினால் ஒரு பெண். 


கண்ணகி. 


மதுரையை எரிந்து போ என்றாள். எரிந்தது. 


ஆண்கள் யாரும் அப்படி செய்தது மாதிரி தெரியவில்லை. 


"தீயே (அனுமனை" சுடுதியேல்" என்றாள் சீதை. வாலில் இட்ட நெருப்பு அனுமனை சுடவில்லை. 


இயற்கை கட்டுப்பட்டது. 


"நான் கற்புள்ள பெண் என்பது உண்மையானால், சூரியனே நீ நாளை உதிக்காதே" என்றாள் ஒருத்தி, அது உதிக்கவில்லை. 


கதையாக இருக்கலாம். 


கற்பு பலம் தந்திருக்கிறது. 


இந்த அளவு என்பது கற்பனை என்றாலும், ஏதோ ஒரு அளவு தந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். 


கற்பு என்பது கணவனை தொழுவதிலா இருக்கிறது? 


விடை காண முடியாத கேள்வி இது. 


இதற்கு ஆண்கள் என்ன பதில் சொன்னாலும், அது தவறாகவே பார்க்கப் படும். 


யாரவது ஒரு பெண் தான் விளக்கம் சொல்ல வேண்டும். 


"வள்ளுவர் சொன்னது பிழை" என்பதல்ல பதில். நமக்கு புரியாத, தெரியாத எல்லாவற்றையும் பிழை என்று ஒதுக்கி விட முடியாது. 


இவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக எழுதிய வள்ளுவர் பிழை செய்வாரா? 


பின் என்னதான் இதற்கு அர்த்தம்?




Friday, August 13, 2021

கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கோபிங்க..அவனை ஒண்ணும் சொல்லாதீங்க

கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கோபிங்க..அவனை ஒண்ணும் சொல்லாதீங்க 


அசோக வனத்தில் தனித்து இருக்கும் சீதை புலம்புகிறாள். 


அவளை யாரும் ஒண்ணும் சொல்லவில்லை. இருந்தாலும் அவளுக்கு எல்லோரும் அவளையே குறை சொல்வது போல இருக்கிறது. 


எல்லோரும் என்றால் அங்கே யார் இருக்கிறார்கள். அவள் இயற்கையைப் பார்த்து கேட்கிறாள். 


"ஏய், அறிவு இல்லாத சந்திரனே, கத்தி போல கூர்மையாக வெட்டும் கதிர்களை கொண்ட சந்திரனே, செல்லாமல் அப்படியே நிற்கும் இரவே, குறையாமல் இருக்கும் இரவே, எல்லோரும் என் மேலேயே கோபம் கொள்கிறீர்கள். இராமனை யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டீர்களா?'


என்று கேட்கிறாள். 


பாடல் 



'கல்லா மதியே ! கதிர் வாள் நிலவே !

செல்லா இரவே !சிறுகா இருளே !

எல்லாம் எனையேமுனிவீர்; நினையா

வில்லாளனை,யாதும் விளித்திலிரோ ? 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_13.html


(please click the above link to continue reading)



'கல்லா மதியே ! = கற்காத நிலவே 


கதிர் வாள் நிலவே ! = வாள் போல் கூர்மையாக குத்தும் கதிர்களை கொண்ட நிலவே 


செல்லா இரவே ! = செல்லாமல் அப்படியே இருக்கும் இரவே 


சிறுகா இருளே ! = குறையாமல் இருக்கும் இருளே 


எல்லாம் =எல்லோரும் 


எனையேமுனிவீர் = என்னையே கோபிக்கிறீர்கள் 


நினையா = என்னை நினைக்காமல்  இருக்கும் 


வில்லாளனை = இராமனை 


யாதும் விளித்திலிரோ ?  = யாரும் கூப்பிட்டு சொல்ல மாட்டீர்களா ?


கல்லா மதி - பாவம் இந்த பெண் தனியாக தவிக்கிறாளே என்று இரக்கம் காட்டாமல் அவளை படுத்துவதால், கல்லா மதி 


கதிர் வாள் நிலவு = குளிர்ந்த நிலவின் கதிர்கள் வாள் போல அறுக்கிறது 


செல்லா இரவு - நீண்டு கொண்டே போகும் இரவு. போய்த் தொலைய மாட்டேன் என்கிறது. 


சிறுகா இரவே - வெளிச்சம் வந்தால் இரவு குறைந்து முடியும். இது எங்க முடியுது? 


என்னை வந்து சிறை மீட்டிக் கொண்டு போகச் சொல்லி இராமனிடம் சொல்லாமல் என்னையே எல்லாரும் குறை சொல்லுங்க என்று அங்கலாய்க்கிறாள் சீதை. 


ஒரு வேளை இராமன் வில்லுக்குப் பயந்து அவனிடம் சொல்லாமல் மறைந்து இருக்கின்றனவோ என்று நினைக்கிறாள். 


இனிமையான பாடல்...


சோகத்திலும் ஒரு சுகம்...




Thursday, August 12, 2021

திருக்குறள் - பெண்ணின் பெருந்தக்க யாவுள

 திருக்குறள் - பெண்ணின் பெருந்தக்க யாவுள


வாழ்க்கைத் துணை நலம் என்ற அதிகாரம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். 


முதலில் குறளைப் பார்த்து விடுவோம். இது கொஞ்சம் சிக்கலான குறள். 


பாடல் 


பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மையுண் டாகப் பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_72.html


(please click the above link to continue reading)


பெண்ணின் = பெண்ணைப் போல 


பெருந்தக்க = பெருமையுள்ளது 


யாவுள = எது இருக்கிறது? (ஒன்றும் இல்லை) 


கற்பென்னும் = கற்பு என்கின்ற 


திண்மையுண் டாகப் பெறின் = கலங்கா அல்லது உறுதி உண்டாகப் பெற்றால் 


இதற்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள்.  சில உரைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாகவும் உள்ளன. 


சற்று ஆழ்ந்து யோசிக்க வேண்டிய குறள் இது. 


கற்பு என்ற உடனேயே கொடி பிடிப்பவர்கள் வந்து விடுவார்கள். ஏன், பெண்ணுக்கு மட்டும் தான் கற்பா ? ஆணுக்கு கற்பு வேண்டாமா? என்று ஆரம்பித்து விடுவார்கள். இது பெண்களை அடிமைப் படுத்தும் குறள் என்று சிலர் குரல் கொடுக்கலாம். 


இங்கே பெண் என்பது மனைவியைக் குறிக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். காரணம், அதிகாரம் வாழ்கை துணை நலம். எனவே, இங்கே பெண் என்பதை மனைவி என்று சொல்வது சரியாக இருக்கும். 


கற்புள்ள மனைவியை விட ஒருவன் வேறு என்ன சிறப்புப் பொருளை பெற்று விட முடியும்?  என்று பொருள் விரியும். 


ஒருவனுக்கு ஆகச் சிறந்த உயர்ந்த, சிறந்த பொருள் என்பது கற்புள்ள மனைவிதான். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்கிறார். இது முந்திய இரண்டு குறள்களோடு இயைந்து வருகிறது. 


இங்கே வள்ளுவர், 


பெண்ணின் பெருந்தக்க யாவுள  கற்பு உண்டாகப் பெறின் 


என்று சொல்லவில்லை. கற்பு எனும் திண்மை உண்டாகப் பெறின் என்கிறார்.


கற்பு என்ற கலங்கா நிலை, உறுதியான நிலை. 


துன்பம் வந்தாலும், சிக்கல்கள் வந்தாலும் கலங்காமல், உறுதியாக இருக்கும் தன்மை. 


மேலும்,


கணவனோ, பிள்ளைகளோ தவறு செய்வார்களேயானால், உறுதியாக அவர்களை திருத்தும் தன்மை.  கணவன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்கிறான் என்றால், நல்லது தானே, கார், வீடு, நகை கிடைக்கிறது என்று மகிழாமல் இது தவறான வழியில் வரும் பணம், இது நமக்கு வேண்டாம் என்று கணவனை திருத்தி நல் வழி படுத்தும் தன்மையுள்ள  பெண் மனைவியாக வந்து விட்டால, அதை விட பெரிய சிறப்பு ஒருவனுக்கு என்ன இருக்க முடியும். 


பல ஆண்கள் தவறு செய்ய அடிப்படை காரணம் பெண்ணின் ஆசை. "உங்க அளவு தான படித்து இருக்கிறார் அவர், அவரைப் பாருங்கள் வீடு, காருன்னு எப்படி வசதியாக இருக்கிறார் ..." என்று மனைவி ஆரம்பித்து விட்டால், ஒரு நாள் அல்லது ஒரு நாள் கணவன் தவறு செய்யும் வாய்ப்பு இருக்கிறது. 


"வீடு வாங்கித் தா, நகை வாங்கித் தா, வெளிநாட்டுக்கு சுற்றுலா கூட்டிக் கொண்டு போ" என்று முடிவில்லா பட்டியலை நீட்டினால், கணவன் என்ன செய்வான் ?


இதுதான் வரவு, இதற்குள் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று ஒரு பெண் முடிவு எடுத்து விட்டால், அதை விட சுவர்க்கம் என்ன இருக்கிறது. 


"பெறின்" என்றால் "அமைந்தால்", "கிடைத்தால்" என்று பொருள். 


பொதுவாக கிடைக்காது என்று அர்த்தம். 


எனக்கு லாட்டரியில் பத்து கோடி விழுந்தால்,  நான் படித்த பள்ளிக்கு ஒரு இலட்சம் நன்கொடை தரலாம் என்று இருக்கிறேன் என்று சொன்னால், ஒரு இலட்சம் தருவது நடக்காது என்று புரிகிறது அல்லவா? 


ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் படித்தால், நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடையலாம். 


படிக்கணுமே.


பெறின் என்பதன் அர்த்தத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். 



கம்ப இராமாயாணம் - வலியார் வலியே

 கம்ப இராமாயாணம் - வலியார் வலியே 


அசோகவனத்தில் சீதை சிறை இருக்கிறாள். அனுமன் அவளை அடையாளம் கண்டு கொள்கிறான். மறைந்து இருந்து அவள் செய்வதை/பேசுவதை கேட்கிறான். 


சீதை புலம்புகிறாள். 


"கரிய மேகம், பெரிய கடல், காடு போன்ற கரிய இராமன் என் உயிரை திருப்பித் தருவானா? பேரிடி போல் கேட்கும் அவன் வில்லின் நாண் ஒலி தான் நான் கேட்பேனா? இராம இலக்குவனர்களிடம் உள்ள வலிமையே, நீ சொல்வாய்" 


என்கிறாள் 


பாடல் 


கரு மேகம்,நெடுங் கடல், கா அனையான்

தருமே, தனியேன்எனது ஆர் உயிர்தான் ?

உரும்ஏறு உறழ்வெஞ் சிலை நாண் ஒலிதான்

வருமே ? உரையாய், வலியார் வலியே !


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_12.html


(Please click the above link to continue reading)


கரு மேகம் = கரிய மேகம் 


நெடுங் கடல் = நீண்ட பெரிய கடல் 


கா  = அடர்ந்த காடு 


அனையான் = போன்றவன் 


தருமே = தருவானா 


தனியேன் எனது = தனியாக இருக்கும் எனது 


ஆர் உயிர்தான் ? = அருமையான உயிரைத்தான் 


உரும்ஏறு உறழ் = பேரிடி போல சப்தம் செய்யும் 


வெஞ் சிலை = கொடிய வில்லின் 


 நாண் ஒலிதான் = நாண் ஒலி தான் 


வருமே ? = இங்கே இலங்கைக்கு வருமா ? 


உரையாய் = நீ சொல்வாய் 


வலியார் = வலிமை பொருந்திய இராம, இலக்குவர்கள் 


வலியே ! = இடம் உள்ள வலிமையே 



இராமன் வந்து தன்னை சிறை மீட்டிச் செல்வான் என்ற நம்பிக்கையில் இருக்கிறாள். அவன் வருவானா, எப்போது வருவான் என்று ஏங்குகிறாள். 


சோகத்தில், துன்பத்தில் தான் மனதின் அடியில் உள்ள உணர்சிகள் மேலே வருகின்றன. 


மேலும் என்னென்ன சொல்கிறாள் என்று பார்ப்போம். 



Tuesday, August 10, 2021

திருக்குறள் - இல்லதும், உள்ளதும்

 

திருக்குறள் - இல்லதும், உள்ளதும் 



முந்தைய குறளில் ஒருவனுக்கு மனைவி சரியாக அமையாவிட்டால் அவனிடம் என்ன இருந்தும், அவன் ஒன்றும் இல்லாதவனாகவே கருதப்படுவான் என்று பார்த்தோம்.  


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினு மில்


இதன் பொருளையும் விளக்கத்தையும் இறுதியில் உள்ள உள்ள இணைய தளத்தில் காணலாம். 






இனி அடுத்த குறளுக்குப் போவோம். 


மனைவி நல்லவளாக அமையாவிட்டால் என்ன இருந்தும் அது ஒன்றும் இல்லாதது போலத்தான் என்று கூறி விட்டார். 


சரி, அவள் நல்லவளாக அமைந்து விட்டால்? 


நல்லவளாக அமைந்து விட்டால் அவளுடைய கணவனுக்கு இந்த உலகில் அதை விட வேறு என்ன செல்வம் இருக்க முடியும் என்று கேட்கிறார். 


அதாவது, அவள்தான் அனைத்து சிறப்புக்கும் காரணம். அவன் பெருமை, புகழ், மானம், செல்வம் அனைத்தும் அவள்  கையில் தான் உள்ளது என்கிறார். 


கணவன் என்னதான் படித்து, உழைத்து உயர்ந்தாலும், மனைவி சரி இல்லை என்றால் அதனால் ஒரு பயனும் இல்லை. 


கணவன் படிக்கவில்லை, பெரும் பொருள் சேர்க்கவில்லை, புகழ் இல்லை என்றாலும், அவனுக்கு ஒரு நல்ல மனைவி வாய்த்து விட்டால் அவனிடம் இல்லாதது ஒன்றும் இல்லை. எல்லாம் அவனுக்கு வாய்த்தது போல என்கிறார். 

பாடல் 


இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்

இல்லவள் மாணாக் கடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_10.html


(please click the above link to continue reading)



இல்லதென் = இல்லது என்? என்ன இல்லை? 


இல்லவள் மாண்பானால் = இல்லவள் (மனைவி) மாண்பு உடையவள் ஆனால் (நற்குண நற்செய்கைகள் உள்ளவள் ஆனால்) 


உள்ளதென் = உள்ளது என்? என்ன இருக்கிறது? 


இல்லவள் = மனைவி 


மாணாக் கடை = மாண்பு இல்லாதவள் ஆன போது 


இல்லது என், உள்ளது என் என்று இரண்டு கேள்விகள் கேட்கிறார். 


மனைவி மாண்பு உடைவள் ஆனால் இல்லாது ஒன்றும் இல்லை. 


மாண்பு இல்லாதவள் ஆனால் உள்ளது ஒன்றும் இல்லை. 


உடனே, நம்ம உள்ளூர் கொடி பிடிக்கும் கும்பல் ஒன்று "பார்த்தீர்களா...நாங்க தான் எல்லாம்...நீங்க ஒன்றும் இல்லை" என்று கோஷம் போடத் தொடங்கி விடும். 


வள்ளுவர் எல்லா மனைவிகளையும் சொல்லவில்லை. 


நற்குண, நற்செய்கைகள் உள்ள பெண்களை மட்டும் தான் சொல்கிறார். 


மாண்பு என்ற சொல்லை குறித்துக் கொள்ள வேண்டும். 


சமைத்து போடுவது, துணி துவைப்பது,  வீட்டை சுத்தம் செய்வது மட்டும் மாண்பு என்ற பட்டியலில் இல்லை. 


நற்குண நற்செய்கைகள் என்னென்ன என்று முந்தைய ப்ளாகில் படித்து அறிந்து கொள்க. 


மாண்புடைய மனைவியை பற்றி மட்டும் தான் சொல்கிறார். 


கொடி பிடிக்கும் முன் அதை சிந்திக்க வேண்டும்.  


ஊருக்கே நன்மை செய்யும் மனைவிகளைப் பற்றிக் கூறுகிறார். தனிக் குடித்தனம் போக நினைக்கும் பெண்களைப் பற்றி அல்ல. 


பெண்ணின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் வள்ளுவர், அதற்கான தகுதி பற்றியும் கூறுகிறார்.


முந்தைய ப்ளாகின் முகவரி 



https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_8.html

Monday, August 9, 2021

கம்ப இராமாயணம் - குறையாத அன்பு

 கம்ப இராமாயணம் -  குறையாத அன்பு 


எனக்கு சில சமயம் தோன்றும், இராமயணத்தை பேர் மாற்றி சீதாயணம் என்று வைத்து இருக்கலாம் என்று. 


யோசித்துப் பார்ப்போம். 


கணவன் அலுவலகத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருகிறேன் என்று சொல்கிறான். ஆனால், வீடு வந்து சேரும் போது நேரம் தாழ்ந்து விடுகிறது. எத்தனை மனைவிகள் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள்? 


மனைவியின் பிறந்த நாளை மறந்து விடுகிறான்...


எங்கோ அழைத்துப் போகிறேன் அல்லது வாங்கித் தருகிறேன் என்று சொல்லிவிட்டு அதைச் செய்யாமல் எவ்வளவு கோபமும் வருத்தமும் வரும் அவன் மனைவிக்கு. 


அப்படியே சீதையை பார்ப்போம். பெரிய சக்ரவர்த்தியின் மூத்த மகன், பெரிய பலசாலி (வில்லை ஒடித்தவன்), அவனை திருமணம் செய்து கொள்கிறாள். அவள் மனதில் என்னவெல்லாம் ஆசைகள் இருந்திருக்கும்? 


ஆனால், கிடைத்தது என்ன? வன வாசம். அங்கேயும் கணவனோடு இருக்க முடியவில்லை. இராவணன் வந்து தூக்கிக் கொண்டு போய் விட்டான். 


இன்றைய பெண்களை (பெரும்பாலனா) நினைத்துப் பார்ப்போம். "நீங்க வேணும்னா காட்டுக்குப் போயிட்டு வாங்க, நான் என் அப்பா வீட்டுக்குப் போகிறேன். திரும்பி வந்து என்னைக் கூட்டிக் கொண்டு போங்கள் " என்று பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி இருப்பார்கள். "உங்க தலை எழுத்து காட்டுல போய் அவதிப் படணுமுன்னு எழுதி இருக்கு ..." என்று அங்கலாய்த்துக் கொண்டு போய் விடுவார்கள். 


சீதை ஒரு இடத்தில் கூட இராமனையோ, மாமியார் மாமனரையோ குறை சொல்லவில்லை. 


அசோக வனத்தில் சிறை இருக்கிறாள். அனுமன் வருகிறான். சீதையை கண்டு கொள்கிறான். சீதை அவனைப் பார்க்கவில்லை. அனுமன் ஒரு மந்திரத்தின் மூலம் அங்கே காவலுக்கு இருந்த அரக்கிகளை உறங்கப் பண்ணி விடுகிறான். 


அப்போது சீதை தனக்குத் தானே பேசத் தொடங்குகிறாள்....


பாடல் 


துஞ்சாதாரும் துஞ்சுதல் கண்டாள் துயர் ஆற்றாள்

நெஞ்சால் ஒன்றும் உய்வழி காணாள் நெகுகின்றாள்

அஞ்சா நின்றாள் பல்நெடு நாளும் அழிவுற்றாள்

எஞ்சா அன்பால் இன்ன பகர்ந்து ஆங்கு இடர் உற்றாள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_9.html


(please click the above link to continue reading)



துஞ்சாதாரும் = உறங்காதவர்களும் (காவல் அரக்கிகள்) 


துஞ்சுதல் கண்டாள் = தூங்குவதை பார்த்தாள் 


துயர் ஆற்றாள் = துக்கம் தாளாமல் 


நெஞ்சால் = மனதில் 


ஒன்றும் உய்வழி காணாள் = துயரில் இருந்து விடுபடும் வழி ஒன்றையும் காண 

முடியாமல் 



நெகுகின்றாள் = வருந்தினாள் 


அஞ்சா நின்றாள் = அஞ்சி நின்றாள் 


பல்நெடு நாளும் = ரொம்ப நாளாக 


அழிவுற்றாள் = துன்புற்று இருந்தாள் 


எஞ்சா அன்பால் = குறைவு படாத அன்பால் 


இன்ன பகர்ந்து = இவற்றை சொல்லி 


ஆங்கு இடர் உற்றாள். = அங்கு துன்பம் அடைந்து நின்றாள் 


இவ்வளவு துயரத்துக்கு இடையிலும், அவள் மனதில் அன்பு குறையவே இல்லை.


அன்பு மட்டும் இருந்து விட்டால், எந்த பெரிய துயரையும் தாங்கிவிடலாம் போல. 



Sunday, August 8, 2021

திருக்குறள் - என்ன இருந்தும் ஒன்றும் இல்லை

திருக்குறள் - என்ன இருந்தும் ஒன்றும் இல்லை 


வீடு என்று வந்து விட்டால், அது மனைவியின் கையில் தான் இருக்கிறது என்கிறது குறள். 


கணவன் என்னதான் படித்து, பட்டம் பெற்று, பெரிய பதவி, ஆள், அம்பு, சேனை, செல்வாக்கு, புகழ், பணம், சொத்து என்று இருந்தாலும், அவனுக்கு மனைவி சரி இல்லை என்றால், அவனுக்கு ஒன்றுமே இல்லை என்று அர்த்தம் என்கிறார். 


பாடல் 


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினு மில்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_8.html


(please click the above link to continue reading)



மனைமாட்சி = மனையறத்துக்கு தக்க நற்குண நற்செய்கைகள் 


இல்லாள்கண் = ஒரு மனைவியிடம் 


இல்லாயின் = இல்லாமல் போனால் 


வாழ்க்கை = வாழ்க்கையில் 


எனை = எந்த 


மாட்சித் = மாட்சிமை, பெருமை, புகழ், செல்வம் 


தாயினு மில் = ஆயினும், இல். இருந்தாலும், இல்லை. 



கோடி உரூபாய் சொத்து இருக்கிறது. அவரைத் தேடி நண்பர் வருகிறார். கணவன் மனவியை அழைக்கிறான், நண்பரிடம் அறிமுகப் படுத்த. அவள் வருவதாய் இல்லை. ஒரு முறை, இரண்டு முறை கூப்பிட்டுப் பார்கிறான். அவள் வர மறுக்கிறாள். அந்தக் கணவனுக்கு எப்படி இருக்கும். 


அல்லது வருகிறாள், வந்து தண்ணீர் குவளியை நங் என்று வைக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம்.  என்ன ஆகும்?


அவர் வெளியில் போகிறார், ஊரில் உள்ளவர்கள் "இதோ போறாரே அவர் மனைவி ஒரு மாதிரி" என்று சொன்னால் அவரால் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா? 


மனைவி  சரி இல்லை என்றால், என்ன இருந்தாலும், இல்லை என்று அர்த்தம் என்கிறார்.


அது எப்படி, இருந்தாலும் இல்லை என்று சொல்ல முடியும். என் பெயரில் இத்தனை கோடிக்கு வங்கியில் பணம் இருக்கிறது. என் மனைவி எப்படி இருந்தால் என்ன, அந்தப் பணம் என் பணம் தானே. அதை எப்படி வள்ளுவர் இல்லை என்று சொல்ல முடியும் என்று கேட்டால், அதற்கு பரிமேலழகர் பதில் சொல்கிறார். 


"பயன் படாமையின் இல் என்றார்" என்று.


பணம் இருக்கும், அதை வைத்து என்ன செய்வது?


ஒரு நல்ல உடை வாங்கி உடுத்திக் கொண்டு வந்தால், மனைவி "ஆமா..இது ஒண்ணு தான் குறைச்சல்" என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால், அந்த உடையை உடுக்க முடியுமா? 


நல்ல உணவு மேஜை மேல் இருக்கிறது, எடுத்து ஒரு வாய் வைக்கப் போகிறான், "இதுக்குத்தான் இலாயக்கு" என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டால், அந்த உணவை வாயில் வைக்க முடியுமா?


உணவு இருக்கிறது, அதனால் பயன் இல்லை என்பதால் அது இருந்தும் ஒன்றுதான் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான் என்ற அர்த்தத்தில் "எனை மாட்சித்தாயினும் இல்" என்றார். 


கணவனின் அத்தனை புகழுக்கும் அல்லது இகழுக்கும் மனைவிதான் பொறுப்பு என்று அவ்வளவு பெரிய பொறுப்பை மனைவியிடம் தருகிறது குறள். 


இதில் ஆணாதிக்கம், பெண்ணடிமை என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது? பார்ப்பவர் கண்ணின் குறை நூலில் உள்ளது போலத் தெரியும்.


எங்காவது ஒரு அடிமையின் கையில் இருக்கிறது எஜமானனின் பெருமை என்று சொல்லி இருக்கிறதா? 


பெண் அடிமை இல்லை. ஒருஆணின் அத்தனை புகழுக்கும் அவளே காரணம் என்று அவளை உயர்த்திப் பிடிக்கிறது குறள். 


அதே சமயம், பெண் மேல் ஒரு பெரும் பொறுப்பை ஏற்றுகிறது. "நீ தான் ஒரு குடும்பத்தின் பெருமைக்கு காரணம். அதைத் தெரிந்து, புரிந்து நடந்து கொள்" என்று சொல்கிறது. 


எங்களுக்கு அந்தப் பொறுப்பு வேண்டாம். அது ஒரு பெரிய சுமை. நாங்க எங்க இஷ்டத்துக்கு இருப்போம். பெண் சுதந்திரம் என்று பேசுபவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். 


பொறுப்பு என்றால் அதற்கு தக்க அதிகாரம் இருக்கும், மரியாதை இருக்கும். 


பொறுப்பு வேண்டாம் என்றால்....


சிந்திக்க வேண்டும். 



Saturday, August 7, 2021

திருக்குறள் - வாழ்க்கைத் துணை

 திருக்குறள் - வாழ்க்கைத் துணை 


இல்லறத்துக்கு துணையாக வரும் மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார். 


குறள் என்ன சொல்கிறது என்றால், வீட்டின் மொத்தப் பொறுப்பையும் மனைவியிடம் கொடுத்து விடுகிறது. வீட்டின் வரவு செலவை பார்பதில் இருந்து விருந்து, போன்றவற்றை பார்த்துக் கொள்வது எல்லாம் மனைவி கையில் கொடுத்து விடுகிறது. ஆணுக்கு அதில் ஒரு பங்கும் இல்லை. 


குறள் என்ன  சொல்கிறது என்று பார்பதற்கு முன்னால், நாம் சிறிது சிந்திப்போம். ஒரு நல்ல மனைவி என்றால் அவள் எப்படி இருக்க வேண்டும்? 


அழகாக இருக்க வேண்டும், படித்து இருக்க வேண்டும், அன்பாக பேச வேண்டும், கணவன் மனம் அறிந்து நடக்க வேண்டும், மாமனார் மாமியாரை மதிக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு போவோம். 


ஒன்றே முக்கால் அடியில் வள்ளுவர் சொல்கிறார் - இது எல்லாம் ஒன்றுமே அவர் சொல்ல வில்லை. பின் என்னதான் சொன்னார் ?



பாடல் 


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_7.html


(Please click the above link to continue reading)



மனைத்தக்க = இல்லறத்துக்கு ஏற்ற 


மாண்புடையள் =மாண்பு (பண்புகள்) உடையவள் 


ஆகி = ஆகி 


தற் கொண்டான் =தன்னைக் கொண்டவனது (கணவனது) 


வளத்தக்காள் =வளமைக்கு தக்க வாழ்பவள் 


வாழ்க்கைத் துணை = வாழ்க்கைத் துணை 


இல்லறத்தின் பண்புகள் என்றால் என்ன ?  பரிமேலழகர் இல்லை என்றால் நமக்கு ஒன்றும் புரிந்து இருக்காது 


"மனைத் தக்க மாண்பு" என்றால் நற்குண நற்செய்கைகள் என்கிறார். 


நல்ல குணம், நல்ல செய்கை இது இரண்டும் மனையறத்துக்கு தேவையான பண்புகள் என்கிறார். 


உடனே கேள்வி வரும்....நற்குணம், நற்செய்கைகள் என்றால் என்ன என்று?


"நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின"


துறவிகளை பேணுதலும், விருந்தை உபசரிப்பதிலும், வறியவர்களுக்கு அருள் செய்வதும் போன்றவை. 


"நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின"


நற்செய்கைகள் என்பன வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களை அறிந்து கடைப் பிடிப்பதும், சமையல் தொழிலில் தேர்ச்சியும், ஊருக்கு நன்மை செய்தாலும் போன்றவை. 


பெண் சமையல் செய்வதில் கெட்டிக்காரியாக இருக்க வேண்டும்.  ஏன் பெண் சமையல் செய்ய வேண்டும்? பெண் என்றால் ஏதோ பொங்கி ஆக்கி போடுவது தான் பெண்களின் வேலையா என்று கேட்கலாம். 


கணவனை விட்டு விடுவோம். அந்தப் பெண், பிள்ளைகளை பெறுவாள். பிள்ளை பசித்து அழும். பிள்ளை வளரும் போது, அம்மா பசிக்குது என்று உணவு கேட்கும். ஏதோ கடையில் வாங்கிக் கொடுக்கலாம். அல்லது அப்பாவிடம் போய் கேள் என்று சொல்லலாம். அல்லது பிள்ளைக்கு ருசியாக செய்து தரலாம். 


பரிமேலழகர் சொல்கிறார், ஒரு குடும்பத்தை நன்றாக கொண்டு செல்ல, பெண்ணின் சமையல் திறமை மிக முக்கியமானது என்கிறார். 


ஏற்றுக் கொள்ளாதவர்கள், நாளும் வெளியில் கடையில் வாங்கித் தரலாம். 


மனைத்தக்க மாண்பு பற்றி பார்த்தோம். 


வளத்தக்காள் என்றால் கணவனின் வருமானத்துக்கு ஏற்ப வாழ வேண்டும். வருமானத்துக்கு மேலே வாழ மனைவி நினைத்தால், அங்கு தான் சிக்கல் ஆரம்பிகிறது? கணவன் கடன் வாங்க வேண்டும், அல்லது வேறு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும். 


கணவனின் வருமானம் பற்றி மனைவி கொஞ்சம் குறைவாக பேசினால் கூடப் போதும், கணவனின் தன்மானம் முறியும். மனைவி மேல் கோபம் வரும். இல்லறம் முறியும். 


நல்ல குணம் +

நல்ல செய்கை +

வருமானத்துக்குள் வாழ்வது 


இந்த மூன்றும் அமைந்தவள் தான் "வாழ்க்கைத் துணை" (மனைவி).


இந்த மூன்றும் இல்லை என்றால் அவள் மனைவி இல்லை. 


அழகு, படிப்பு, செல்வம், வேலை, இதெல்லாம் இந்தப் பட்டியலில் இல்லை. 


எவ்வளவு தீர்கமான சிந்தனை !


சிந்திப்போம். 



Friday, August 6, 2021

திருக்குறள் - வாழக்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - வாழக்கை துணை நலம் - ஒரு முன்னோட்டம் 


கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என பாயிரவியலில் நான்கு அதிகாரங்களைத் தந்தார். 


பின் இல்லறவியலுக்குள் நுழைகிறோம். 


இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தைப்  பற்றி சிந்தித்தோம். இல்லறம் என்றால் என்ன, அதன் பதினொரு கடமைகள், அதன் சிறப்பு, எல்லாம் பார்த்தோம். 


அடுத்தது, வாழ்க்கை துணை நலம் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


இல்லறக் கடமைகளை ஒரு ஆடவனை முன்னிறுத்தித்தான் சொல்லி இருக்கிறார். 


பெண் விடுதளையாரளர்கள், விடுதளையாளிகள் உடனே கொடி பிடிக்கலாம். ஏன், நாங்கள் செய்ய மாட்டோமா அந்தக் கடமைகளை என்று.


செய்யலாம்.....


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_6.html

(Please click the above link to continue reading)


ஒரு பெண் தனித்து இருக்கிறாள். 


நான் துறவிகளை பேணும் இல்லறக் கடமைகளை செய்கிறேன் என்று தினம் சில பல துறவிகள் அவள் வீட்டுக்கு வந்து போனால் எப்படி இருக்கும்? அக்கம் பக்கம் என்ன சொல்லும். 


நானும் ஏனைய மூன்று நிலைகளில் உள்ளவர்களை பேணுவேன் என்று தினம் ஒரு பிரம்மச்சாரியை வீட்டுக்கு அழைத்து வந்து உபசரித்தால் என்ன ஆகும்? 


செய்வோம் என்று கொடி பிடிப்பவர்கள் செய்து பார்க்கட்டும். அவர்களை விட்டு விடுவோம். 


சரி, ஒரு பெண்ணால் இவற்றைச் செய்ய முடியாது என்றே வைத்துக் கொள்வோம். ஆணால் மட்டும் செய்ய முடியுமா? ஒரு துறவி வீட்டுக்கு வந்தால் ஒரு பெண்ணின் துணை இல்லாமல் ஆண் அந்தத் துறவிக்கு உணவு படைக்க முடியுமா? மல்லுக் கட்டிக் கொண்டு ஒரு நாள் செய்யலாம். அது இயல்பாக வராது. ஆணாலும் முடியாது. 


இல்லற தர்மங்களை ஒரு ஆணோ, பெண்ணோ தனித்துச் செய்ய முடியாது. ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்தால் தான் இல்லறம் நடக்கும். நானா நீயா என்று போட்டி வந்தால் இல்லறத் தேர் அங்கேயே நின்று விடும். 


இங்கே யார் பெரியவர் என்ற போட்டி இல்லை. இல்லறம் என்பது மல்யுத்த மைதானம் அல்ல. சண்டை போட்டு யார் வென்றார்கள் என்று முடிவு செய்ய. 


அன்பும், அறமும் உடையது இல்வாழ்க்கை. 


அது நம் கலாச்சாரம். நாம் மேலை நாட்டு பழக்கங்களை பார்த்து, அது நன்றாக இருக்கிறதே என்று மயங்குகிறோம். அது சரியா தவறா என்பதல்ல கேள்வி. அவர்களுக்கு அது சரி. நாம் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெரிய கலாச்சாரத்தோடு வாழ்ந்தவர்கள். நாம் ஏன் அவர்களைப் பார்த்து படிக்க வேண்டும்? 


திருக்குறள் படிப்பதன் நோக்கம் எந்த பண்பாடு அல்லது கலாசாரம் உயர்ந்தது என்று பட்டி மன்றம் நடத்த அல்ல. 


நம் வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ள. நம் அறம், தர்மம் பற்றி புரிந்து கொள்ள. எவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக அலசி ஆராயிந்து வாழ்கை நெறியை அமைத்து இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள. 


பின் முடிவு செய்யலாம், எதை பின் பற்றுவது என்று. 


பெண் விடுதலை என்று பேசுபவர்கள், அடுத்த கட்டம் என்ன என்று சிந்தித்து இருப்பார்களா என்று தெரியவில்லை. சரி விடுதலை அடைந்து ஆகி விட்டது. அடுத்து என்ன? 


வள்ளுவர் ஒவ்வொரு படியாக கொண்டு செல்கிறார். 


ஒரு ஆடவன் இல்லற தர்மங்களை தனித்து செய்ய முடியாது என்பதால், அவனுக்கு ஒரு துணை வேண்டும் என்றும், அவன் மனைவி அவனுக்கு ஏற்ற துணை என்றும், அவளின் கடமைகள், சிறப்புகள் பற்றி இந்த அதிகாரத்தில் கூற இருக்கிறார். 


விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு வாசிப்போம்.


ஒரு பெண்ணை எந்த அளவுக்கு உயர்த்திப் பிடிக்கிறார் என்பது இந்த அதிகாரம் முழுவதும் படித்த பின் தெரியும். 


வாழ்க்கைக்கு துணை - அவளின் நலம் பற்றி கூறும் அதிகாரம். 


வாழ்க்கைத் துணை நலம். 


இனி, அதிகாரத்துக்குள் நுழைவோம். 



Wednesday, August 4, 2021

நாலடியார் - யாரிடம் தான் குறை இல்லை ?

 நாலடியார் - யாரிடம் தான் குறை இல்லை ?


யாரிடம் தான் குறை இல்லை? குறை இல்லாத மனிதனே இந்த உலகில் இல்லை. குறை உள்ளவர்களை விலக்கி நடந்தால், நாம் தனியாகத்தான் நடக்க வேண்டி வரும். நம்மிடம் குறை இல்லையா?


நட்பிலும், உறவிலும் குறை இருந்தால் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 


நட்பு மட்டும் அல்ல, வீட்டுக்கு வந்த மருமகள்/ன் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் பொறுத்துதான் போக வேண்டும். விலக்கி விட முடியாது. 


மனிதர்களை விடுங்கள், "நெல்லில் உமி உண்டு, நீரில் நுரை உண்டு, மணம் மிக்க அழகான பூவில் கூட வாடி, நிறம் இல்லா ஓரிரு இதழ்கள் இருக்கலாம்...அதற்காக அவற்றை வெறுக்க முடியுமா? " ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்கிறது நாலடியார். 


பாடல் 


நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை,

அல்லார் எனினும், அடக்கிக் கொளல்வேண்டும்;-

நெல்லுக்கு உமி உண்டு; நீர்க்கு நுரை உண்டு;

புல் இதழ் பூவிற்கும் உண்டு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post.html


(Please click the above link to continue reading)


நல்லார் = நல்லவர் 


எனத் = என்று 


தாம் = நாம் 


நனி = மிக 


விரும்பிக் கொண்டாரை, = விரும்பி ஏற்றுக் கொண்டவரை 


அல்லார் எனினும் = அப்படி நல்லவர்கள் இல்லை என்றாலும் 


அடக்கிக் கொளல்வேண்டும்;- = வெளியே காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொள்ள வேண்டும் 


நெல்லுக்கு உமி உண்டு = நெல்லில் பயன் படாத உமி உண்டு 


நீர்க்கு நுரை உண்டு; = நீரிலே நுரை உண்டு 


புல் இதழ் பூவிற்கும் உண்டு. = பயன் தராத இதழ்கள் பூவிலும் உண்டு 



ஏதோ ஒரு கெட்ட குணம் இருக்கிறது என்பதற்காக நட்பை கை விட்டுக் விடக் கூடாது. 


எல்லாவற்றிலும் நிறை குறை இருக்கத்தான் செய்யும். 


சரி சரி என்று அணைத்துக் கொண்டு போக வேண்டியதுதான்...


என்ன, சரி தானே?