Friday, August 13, 2021

கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கோபிங்க..அவனை ஒண்ணும் சொல்லாதீங்க

கம்ப இராமாயணம் - எல்லாரும் என்னையே கோபிங்க..அவனை ஒண்ணும் சொல்லாதீங்க 


அசோக வனத்தில் தனித்து இருக்கும் சீதை புலம்புகிறாள். 


அவளை யாரும் ஒண்ணும் சொல்லவில்லை. இருந்தாலும் அவளுக்கு எல்லோரும் அவளையே குறை சொல்வது போல இருக்கிறது. 


எல்லோரும் என்றால் அங்கே யார் இருக்கிறார்கள். அவள் இயற்கையைப் பார்த்து கேட்கிறாள். 


"ஏய், அறிவு இல்லாத சந்திரனே, கத்தி போல கூர்மையாக வெட்டும் கதிர்களை கொண்ட சந்திரனே, செல்லாமல் அப்படியே நிற்கும் இரவே, குறையாமல் இருக்கும் இரவே, எல்லோரும் என் மேலேயே கோபம் கொள்கிறீர்கள். இராமனை யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டீர்களா?'


என்று கேட்கிறாள். 


பாடல் 



'கல்லா மதியே ! கதிர் வாள் நிலவே !

செல்லா இரவே !சிறுகா இருளே !

எல்லாம் எனையேமுனிவீர்; நினையா

வில்லாளனை,யாதும் விளித்திலிரோ ? 


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_13.html


(please click the above link to continue reading)



'கல்லா மதியே ! = கற்காத நிலவே 


கதிர் வாள் நிலவே ! = வாள் போல் கூர்மையாக குத்தும் கதிர்களை கொண்ட நிலவே 


செல்லா இரவே ! = செல்லாமல் அப்படியே இருக்கும் இரவே 


சிறுகா இருளே ! = குறையாமல் இருக்கும் இருளே 


எல்லாம் =எல்லோரும் 


எனையேமுனிவீர் = என்னையே கோபிக்கிறீர்கள் 


நினையா = என்னை நினைக்காமல்  இருக்கும் 


வில்லாளனை = இராமனை 


யாதும் விளித்திலிரோ ?  = யாரும் கூப்பிட்டு சொல்ல மாட்டீர்களா ?


கல்லா மதி - பாவம் இந்த பெண் தனியாக தவிக்கிறாளே என்று இரக்கம் காட்டாமல் அவளை படுத்துவதால், கல்லா மதி 


கதிர் வாள் நிலவு = குளிர்ந்த நிலவின் கதிர்கள் வாள் போல அறுக்கிறது 


செல்லா இரவு - நீண்டு கொண்டே போகும் இரவு. போய்த் தொலைய மாட்டேன் என்கிறது. 


சிறுகா இரவே - வெளிச்சம் வந்தால் இரவு குறைந்து முடியும். இது எங்க முடியுது? 


என்னை வந்து சிறை மீட்டிக் கொண்டு போகச் சொல்லி இராமனிடம் சொல்லாமல் என்னையே எல்லாரும் குறை சொல்லுங்க என்று அங்கலாய்க்கிறாள் சீதை. 


ஒரு வேளை இராமன் வில்லுக்குப் பயந்து அவனிடம் சொல்லாமல் மறைந்து இருக்கின்றனவோ என்று நினைக்கிறாள். 


இனிமையான பாடல்...


சோகத்திலும் ஒரு சுகம்...




3 comments:

  1. தன்னை மீட்டுக்கொண்டு போகாத ஏமாற்றம் இராமனிடம் ஒருபுறம் இருக்க, தனிமையின் கொடுமை இன்னொரு புறம் இருக்க, சந்திரன், சூரியன், இரவு, இருள் இவற்றின் மூலம் இந்த இரண்டையும் கம்பர் எவ்வளவு அழகாக இணைத்திருக்கிறார்!அருமையான பாடல். நன்றி.

    ReplyDelete
  2. அருமை, ரசித்தேன்

    ReplyDelete