Monday, February 25, 2019

திருக்குறள் - தவம்

திருக்குறள் - தவம்


நீங்கள் மற்ற குறள்களை படிக்கிறீர்களோ, இல்லையோ அல்லது மற்ற புத்தகங்கள் எதையும் படிக்கிறீர்களோ இல்லையோ, இந்த ஒரு குறளை மட்டும் முழுவதுமாக உணர்ந்து படித்தால் போதும் என்று சொல்லுவேன். அவ்வளவு இருக்கிறது.

அப்படி என்ன குறள் அது?

பாடல்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு


பொருளுக்கு பின்னால் வருவோம்.

அனைத்து உயிர்களும் இன்பத்தையே விழைகின்றன. துன்பம் வேண்டும் என்று யாராவது நினைப்பார்களா ? ஆனால், இன்பம் என்னவோ அத்தி பூத்தாற் போல் என்றோ ஒரு நாள் வருகிறது, சில காலம் இருக்கிறது. பின் மறைந்து விடுகிறது. எப்பப் பாரு துன்பம், வேலை, எரிச்சல், எதிர் காலம் பற்றிய பயம், ஒரு படபடப்பு, இனம் புரியாத ஒரு டென்ஷன், சந்தோஷம் வந்தால் கூட வெளியே காட்டிக் கொள்ள பயம், கண் பட்டு விடுவோமோ என்று, மற்றவர்கள் பொறாமை கொள்வார்களோ என்று பயம்...இன்பத்தில் கூட துன்பமே இருக்கிறது.

இது என்ன வாழ்க்கை? எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை. இன்னும் ஓடு ஓடு   என்று வாழ்க்கை ஓட்டிக் கொண்டே இருக்கிறது.

பணம் இருந்தால், உடல் நிலை சரி இல்லை.

உடல் ஆரோக்கியமாக இருந்தால், உறவுகள் சரி இல்லை.

உறவுகள் சரியாக இருந்தால்,  வேலையில் குழப்பம்.

இப்படி ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டு நம்மை ஒரு பக்கமும் போக விடாமல்  வாழ்க்கை புரட்டி புரட்டி எடுக்கிறது.

வெளியே சந்தோஷமாகக் காட்டிக் கொண்டாலும், உள்ளூர ஆயிரம் சிக்கலில்  கிடந்து தவிக்கிறோம்.

என்ன செய்வது ? இதில் இருந்து எப்படி வழி படுவது ?

இந்த கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.

இலக்கியங்கள் பொதுவாகவே எதையும் மிகைப் படுத்தி கூறும் இயல்பு உடையவை.

ஒருவன் பலசாலி என்று சொல்ல வேண்டும் என்றால், ஆயிரம் யானை பலம் கொண்டவன்  என்று சொல்லும். மலையையே தூக்கி விடுவான் என்று சொல்லும். மலையை தூக்க முடியுமா ? முடியாது. இருந்தாலும், பெரிய பல சாலி என்று சொல்லுவதற்கு  ஒரு உத்தி அது.

பல இலக்கியங்களில் பார்க்கிறோம்....பெரிய சாதனைகளை  செய்பவர்கள், தவம் செய்து , வரம் பெற்று அவற்றை சாதித்தார்கள் என்று பார்க்கிறோம்.

காட்டில் சென்று, முள் முனையில் நின்று, அன்ன ஆகாரம் இன்றி,  உடம்பின் மேல் புற்று வளரும் அளவுக்கு தன்னை மறந்து தவம் செய்வார்கள். கடவுள் நேரில் வருவார்.  வேண்டிய வரங்களை தருவார்...என்றெல்லாம் படித்து இருக்கிறோம்.

தவம் செய்தால், கடவுளே நேரில் வருவார். நாம் நினைத்தது நடக்கும். இந்திர பதவி கிடைக்கும். அகில உலகங்களையும் ஆளலாம். தேவர்களையும் வேலை வாங்கலாம். நீண்ட நாள் வாழலாம். புது உலகையே படைக்கலாம். ரொம்ப ஜாலியாக இருக்கலாம்.

சரி. நம்மால் காட்டில் போய் , ஜடா முடி எல்லாம் வளர்த்துக் கொண்டு தவம் செய்ய முடியுமா ?   அன்னம் தண்ணி இல்லாமல் இரண்டு நாள் இருக்க முடியுமா நம்மால்?  முடியாது தான்.

அப்படி என்றால் நம்மால் தவம் செய்ய முடியாதா ?

ஆயிரம் யானை பலம் மாதிரி, இவை எல்லாம் கொஞ்சம் அதீத கற்பனை தான்.

காட்டுக்கெல்லாம் போக வேண்டாம்.

வள்ளுவர் சொல்கிறார். தவம் என்றால் என்ன என்று.

ரொம்ப ரொம்ப எளிமையான விளக்கம். ஏழே வார்த்தை.

தவம் என்றால் இரண்டு விஷயங்கள் என்று சொல்ல்கிறார் வள்ளுவர்.

ஒண்ணு நமக்கு வந்த துன்பத்தை பொறுத்துக் கொள்வது.

இன்னொன்று

மற்றவர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது.

அம்புட்டுதான்.

இதில் முதல் பகுதியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

துன்பம் வந்தால் பொறுத்துக் கொள்வது.

அதற்கு என்ன அர்த்தம்?

துன்பம் வரும். வந்து கொண்டே இருக்கும். அதை பொறுப்பதுதான் தவம்.

சற்று விரிவாகப் பார்ப்போம்.

புத்தர் சொல்கிறார், வாழ்க்கை என்பது துன்பம் நிறைந்தது என்று. அதற்கு அர்த்தம் எப்ப பார்த்தாலும் ஏதாவது பசி, பிணி, அடி தடி, சண்டை, வழக்கு, வாய்தா என்று அத்தம் அல்ல.

வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றால், முயற்சி வேண்டும். எந்த முயற்சியும் கடினமானது தான்.

உதாரணமாக,

பிள்ளை பரீட்சைக்கு படிக்கிறான். ஒரு இடத்தில் இருந்து, ஒவ்வொரு நாளும், பல மணி நேரம் விடாமல் படிப்பது என்பது கடினமான செயல் தான். துன்பம் தான். வலி அல்ல. வருத்தம் அல்ல. ஆனால், துன்பம். முதுகு வலிக்கும். கை வலிக்கும். தூக்கம் வரும். கழுத்து வலிக்கும். அவற்றைப் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அது தவம்.

கணவன் மனைவி உறவில் ஏதோ சிக்கல். யார் பேசுவது. எப்படி சமாதானம் செய்வது. எப்படி விட்டு கொடுப்பது. தப்பு யார் பேர்ல....இவற்றை எல்லாம் நேருக்கு நேர் இருந்து பேசுவது சங்கடம்தாம். வலி அல்ல. வருத்தம் அல்ல. ஆனாலும், ஒருவித துன்பம் தான். அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொண்டு, பேசினால்தான் சிக்கல் தீரும். இல்லை என்றால் கோர்ட் படி ஏற வேண்டி வரும்.

அலுவலகத்தில், தொழில் செய்யும் இடத்தில், நண்பர்கள் மத்தியில், உறவில் எங்கும்  சிக்கல்கள் வரலாம்...அதை சகித்துக் கொண்டு, அவற்றை களைய வேண்டும். பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் ஒன்றும் நடக்காது.

அலுவலகத்தில் மேலே உயர வேண்டுமா ? மற்றவர்களை விட கடினமாக உழைக்க வேண்டும். அது துன்பம் தான். பெண்டாட்டி, பிள்ளைகளை விட்டு விட்டு, சோறு தண்ணி இல்லாமல் இரவு பகலாக உழைத்தால் பதவி உயர்வு வரும். உழைப்பு துன்பம் தான். அந்தத் துன்பத்தை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால்   சாதிக்க முடியாது.

கணவனுக்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்கு நல்லது செய்வோம். அவர்கள் அதை புரிந்து கொள்ளாமல் ஏதாவது பேசி விடுவார்கள். அந்த வார்த்தை துன்பம்தான். அதைப் பொறுப்பது தவம். தவம் செய்தால் வெற்றி கிடைக்கும்.

விளையாட்டில், படிப்பில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். துன்பம் இல்லாமல் இருக்காது.

இன்னும் சொல்லப் போனால் , நாம் செய்ய வேண்டியது எல்லாம் எந்த துன்பம் வேண்டும் என்று தேர்வு செய்வது தான்.

கடினமாக உழைத்து படிக்கும் துன்பம் வேண்டுமா ?

அல்லது நல்ல வேலை இல்லாமல், நல்ல சம்பளம் இல்லாமல் படும் துன்பம் வேண்டுமா?

இந்த இரண்டு துன்பத்தில் ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்வது மட்டும் தான் நாம் செய்யக் கூடியது. இரண்டுமே வேண்டாம் என்றால் முடியாது.

நேர்ந்த துன்பத்தை பொறுத்துக் கொள்வது தவம் என்கிறார் வள்ளுவர்.

துன்பத்தை பொறுப்பது ஒன்றும் அவ்வளவு எளிதானது அல்லவே. எப்படி துன்பத்தை பொறுத்துக் கொள்வது? சொல்லுவது எளிது. செய்வது எப்படி?

அதற்குத்தான் விரதம் என்று ஒன்று வைத்தார்கள்.

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார். அது துன்பம் தான். பசிக்கத்தான் செய்யும். சட்டியில் சாதம் இருக்கிறது. வேண்டுமானால் போட்டு சாப்பிடலாம். சாப்பிடாமல் இருந்து பார். இப்படி ஒவ்வொரு மாதமும் பசி என்ற துன்பத்தை பொறுத்து பழகிக் கொள்கிறோம்.

தூக்கம் வரும். சிவ இராத்திரி. தூங்காமல் இருந்து பார். துன்பம் தான். பொறுத்துப் பழகு. கண் விழித்து வேலை செய்ய வேண்டிய நாட்கள் வரும். அப்போது, இந்த பழக்கம் கை கொடுக்கும்.

மலை ஏறு. பாத யாத்தரை போ. விரதம் இரு. தூக்கம் முழி.

இதெல்லாம் ஒரு பயிற்சி.

"உற்ற நோய் பொறுத்தல்"

நோய் என்றால் துன்பம். துன்பம் வந்தால் தையா தக்கா என்று குதிக்காமல், அமைதியாக அதை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். அதுதான் தவம்.

தவம் வெற்றிக்கு வழி வகுக்கும்.

வெற்றி இன்பத்தை கொண்டு வந்து தரும்.

யோசித்துப் பாருங்கள். துன்பம் என்று எவ்வளவு விஷயங்களை நீங்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறீர்கள் என்று. செய்யணும். செஞ்சால் நல்லது. அப்புறம் செய்யலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகும் செயல்களின் பட்டியலை தயார் செய்யுங்கள்.

ஒவ்வொன்றாக செய்யுங்கள். ஒவ்வொன்றும் கஷ்டம் தான். செய்து முடிக்க செய்து முடிக்க  மனதில் நிம்மதி பிறக்கும். வெற்றி வரும். இன்பம் வரும்.

செய்து பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_25.html

Saturday, February 23, 2019

பட்டினத்தார் பாடல்கள் - காதற்ற ஊசியும் வாராது காண்

பட்டினத்தார் பாடல்கள் - காதற்ற ஊசியும் வாராது காண்


நாம் செல்கின்ற வழியில் ஒரு பள்ளம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நேரே சென்றால் அதில் தடுக்கி விழுந்து விடுவோம் என்று தெரியும். இருந்தாலும், நேரே போய் அதில் தடுக்கி விழுந்து முட்டியை உடைத்துக் கொள்வது எவ்வளவு அறிவான செயல் ?

மருத்துவர் சொல்கிறார் , "நீங்க நிறைய இனிப்பு சாப்பிடக் கூடாது. மாவு பொருள்களை சாப்பிடக் கூடாது. நிறைய உடற் பயிற்சி செய்ய வேண்டும் " என்று. இருந்தும், அவர் சொல்வதை கேட்காமல், கண்டதையும் தின்பது அறிவான செயலா ?

தெரிந்தும் ஏன் தவறான செயல்களை செய்கிறோம் ?

கேட்டால், "இனிப்பு சாப்பிடாதே என்பது நல்ல அறிவுரை தான். இருந்தாலும் நடை முறைக்கு ஒத்து வராது " என்ற ஒரு பெரிய வேதாந்தம் வைத்து இருக்கிறோம். நம்மால் செய்ய முடியாதவற்றை எல்லாம், நம் சோம்பேறித்தனத்தை எல்லாம் இந்த ஒரு வரியில் சொல்லி விட்டு, மனம் போன படி நடக்கிறோம். அது அறிவான செயலா ?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அரசர்கள் ஆண்ட காலத்தில் , இப்போது உள்ளது போல அல்ல பொருளாதார முறை. எவ்வளவு வரி வசூல் ஆனதோ அவ்வளவுதான் செலவு செய்ய முடியும். சில சமயம் போர், வெள்ளம், வறட்சி என்று வரும்போது செலவு அதிகமாகி விடும்.  அப்போது அரசர்கள், பெரிய வணிகர்களிடம் கடன் வாங்குவார்கள்.  அரசனுக்கு  கடன் கொடுப்பது என்றால் எவ்வளவு செல்வம் வேண்டும் ? அப்படிப் பட்ட செல்வ குடும்பத்தில் பிறந்தவர் பட்டினத்தார்.

செல்வத்தின் நிலையாமை ஒரே வரியில் அவருக்கு புரிந்து போனது. இத்தனை செல்வத்தை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறேன் என்று நினைத்தார். இதை எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு போகவா முடியும் என்று நினைத்தார். நம் கூட வராத இந்த செல்வத்தை சம்பாதிக்க, காக்க  ஏன் இந்தப் பாடு பட வேண்டும் என்று நினைத்தார்.

ஒரே நொடியில் அத்தனை செல்வத்தையும் உதறி தள்ளி விட்டு கட்டிய கோவணத்துடன் தெருவில் இறங்கி விட்டார்.

அது அறிவு.

தேவை இல்லை என்று தெரிந்த பின், அதை கட்டிக் கொண்டு போராடுவானேன்?  தூக்கி எறிந்து விட்டு கிளம்பி விட்டார்.

பாடல்

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

பொருள்

வாதுற்ற = வாதம் என்றால் தருக்கம். போர்.


திண்புயர் = திண்மையான புயங்கள். தோள்கள்

அண்ணாமலையர் = அண்ணா மலையில் வீற்று இருக்கும் சிவனின்

மலர்ப் பதத்தைப் = மலர் போன்ற பாதங்களை

போதுற்ற = மலர் தூவி

எப்போதும் = எப்போதும்

புகலுநெஞ் சே! = புகழ்வாய் நெஞ்சே

இந்தப் பூதலத்தில் = இந்த உலகில்

தீதுற்ற செல்வமென்? = தீமையான செல்வம் என்ன

தேடிப் புதைத்த = அரும்பாடு பட்டு தேடி, பின் புதைத்து வைத்த

திரவியமென்? = திரவியங்கள் என்ன

காதற்ற ஊசியும் = காது இல்லாத ஊசியும்

வாராது = வராது

காணுங்  =காண் , உம்

கடைவழிக்கே! = இறுதி வழிக்கே

செல்வம் தீமை கொண்டது.

அந்தக் காலத்தில் வங்கிகள் கிடையாது. கம்பெனிகள் கிடையாது. shares , fixed டெபாசிட், bonds எல்லாம் கிடையாது.

வீட்டில் செல்வத்தை வைத்து இருந்தால் , கள்ளர்கள் கொண்டு போய் விடுவார்கள் என்று பயந்து, பணத்தை பானையில் போட்டு கட்டி, புதைத்து வைத்து விடுவார்கள்.

வயதான காலத்தில் வைத்த இடம் மறந்து போகும்.

கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தினால் என்ன பயன்?

இப்போதும் கூட பாடு பட்டு பணத்தை தேடி, ஷேர் மார்க்கெட்டில் போடுகிறார்கள். அது விலை குறைந்து நட்டத்தில் போகும். சம்பாதித்த பணம் வீணாகிப் போகும்.

கஷ்டப் பட்டு சம்பாதித்து அதை மூலதனம் பண்ணி, அது காணாமல் போகும்.  இது என்ன அறிவற்ற செயல்.....

தெரிந்தும் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஊசி செய்யும் ஒரே வேலை தைப்பது. அந்த ஊசியின் காது (நூல் கோர்க்கும் ஓட்டை) உடைந்து போனால், அந்த ஊசியால் ஒரு பலனும்  .இல்லை.  அப்படி ஒரு    பயனும் இல்லாத ஊசி கூட நம் கூட வராது. அப்படி இருக்க, எதுக்கு இந்தப் பாடு ?

பணம் சேர்ப்பதா வாழ்வின் குறிக்கோள்?


படிப்பவை நம்மை பாதிக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் படிப்பேன்,  ஆனால் படித்தவற்றின் படி நடக்க மாட்டேன் என்றால் எதற்கு படித்து  நேரத்தை வீணாக்க வேண்டும் ?

காதற்ற ஊசியும் வாராது காண் , உம் கடை வழிக்கே 

நீதி நூல் - இனிய சொல்

நீதி நூல் - இனிய சொல் 


நாம் என்ன பேசுகிறோம் என்பது நம் கையில் தான் இருக்கிறது. அப்படி இருக்க, நல்ல இனிய சொற்களை விட்டு விட்டு தேவை இல்லாத தீய சொற்களை ஏன் பேச வேண்டும் ?

எப்போதும் இனிய சொற்களையே பேசி வந்தால் என்ன கிடைக்கும் என்று கூறுகிறது இந்த நீதி நூல் பாடல்.

முதலில் புகழ் கிடைக்கும். " அவரு ரொம்ப நல்லவரு. எப்ப போனாலும் சந்தோஷம், சிரிச்சு பேசி, மனசுக்கு இதமா நாலு வார்த்தை சொல்லுவார்..." னு நம்மைப் பற்றி புகழ்ந்து பேசுவார்கள். இனிய வார்த்தை சொல்லாவிட்டால் "அதுவா, எப்ப பாரு எரிஞ்சு எரிஞ்சு விழும்...வாயில நல்ல வார்த்தையே வராதே " என்ற இகழ் வரும்.

இரண்டாவது, நம்மை பிடிக்காதவர்கள், வேண்டாதவர்கள் இருத்தால் கூட, இனிமையாக பேசினால் நாளடைவில் அவர்களும் நமக்கு நண்பர்காளாகி விடுவார்கள். இனிய சொல் பகையை முறிக்கும். கொடிய சொல் நட்பை பிரிக்கும்.

மூன்றாவது, இனிய சொல் பேசுவதனால் நமக்கு என்ன இழப்பு வந்து விடப் போகிறது? ஒன்றும் இல்லை. பின் எதற்கு தயங்க வேண்டும். எப்போதும் இனிய சொற்களையே பேச வேண்டும்.

நான்காவது, நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நம்மோடு எப்போதும் இணை பிரியாமல் கூடவே இருப்பார்கள்.

பாடல்


வட்டவுல கெட்டுமிசை மட்டற நிரப்பும்
வெட்டவரு துட்டரை விலக்கிவச மாக்கும்
நட்டமிலை யெட்டனையு நட்டுநர ரெல்லாம்
இட்டமுறு கட்டுதவும் இன்மொழிய தன்றோ.


பொருள் 


வட்டவுல = வட்ட உலகில்

கெட்டு = எட்டு திசையும்

மிசை = இசை, இசை என்றால் புகழ்

மட்டற நிரப்பும் = அளவு இல்லாமல் நிரப்பும். புகழ் வந்து சேரும்.

வெட்டவரு = நம்மை வெட்ட வரும்

துட்டரை = தீயவர்களை, கொடியவர்களை

விலக்கி = நம்மை விட்டு விளக்கி

வச மாக்கும் = அவர்களை நம் வசமாகும்

நட்டமிலை = இனிய சொல் சொல்வதானால் நமக்கு ஒரு நட்டமும் இல்லை

யெட்டனையு = எத்துணையும்

நட்டுநர ரெல்லாம் = நாட்டில் உள்ள மக்களை எல்லாம்

இட்டமுறு = விருப்பத்துடன்

கட்டுதவும் = கட்ட உதவும். பிணைக்க உதவும்

இன்மொழிய தன்றோ. = இனிய மொழி அல்லவா ?


இனிய சொற்களை கூறுவதானால் என்னவெல்லாம் பயன் இருக்கிறது.

எனவே, எப்போதும் இனிய சொற்களையே பேச பழக வேண்டும்.

இனிய சொற்களை பேச வேண்டும் என்றால், முதலில் இனிய சொற்களை கேட்க வேண்டும். நல்லவற்றை கேட்க கேட்க அது நம்மையும் அறியாமல் நம்மிடம்  ஒட்டிக் கொள்ளும்.

கேளுங்கள். 


Friday, February 22, 2019

கச்சி கலம்பகம் - தூயவளே

கச்சி கலம்பகம் - தூயவளே 


காதல்வயப் பட்ட ஆண்களுக்குத் தெரியும், அவர்களின் மயக்கம். தான் காதலிக்கும் பெண் தேவதையா, கடவுளா, இப்படியும் ஒரு அழகான பெண் இருக்க முடியுமா என்று மயங்குவார்கள்.

அப்படி ஒரு காதல் போதை.

கச்சி கலம்பகத்தில் வரும் காதலன் , அவனுடைய காதலியை கண்டு மயங்குகிறான். இவள் மானிடப் பெண்னே அல்ல. இரம்பையோ, ஊர்வசியோ, மேனகையோ என்று திகைக்கிறான். இருந்தும் இவள் கண் இமைக்கிறது, அவள் சூடிய பூ வாடுகிறது எனவே இவள் மானிடப் பெண் தான் என்று முடிவுக்கு வருகிறான்.


பாடல்


பொங்கும் அருணயனப் பூவின் இதழ்குவியும்
இங்கு மலர்க்கோதை இதழ்வாடு - மங்குறவழ்
மாடக் கச்சியில் வாழுமெம் பெருமான்
குறையா வளக்கழுக் குன்றில்
உறைவா ளிவள்பூ வுதித்ததூ யவளே

பொருள்

பொங்கும் = பொங்கி வரும்

அருள் = கருணை , அன்பு

நயனம் = கண்கள்

பூவின் = பூ போன்று

இதழ்குவியும் = இதழ் குவியும். பூவின் மடல் குவிவது போல அவள் கண்கள் (இமைகள்) குவிகின்றன)

இங்கு = இங்கு

மலர்க்கோதை = மலர் மாலை

இதழ்வாடு = இதழ் வாடும். அவள் அணிந்த மாலையில் உள்ள மலர்கள் வாடும்

மங்குறவழ் = மங்குல் தவழ்  = மேகம் தவழும்

மாடக் = மாடம்

கச்சியில் = காஞ்சீபுரத்தில்

வாழுமெம் பெருமான் = வாழும் எம் பெருமான்

குறையா = குறையாத

வளக்கழுக் குன்றில் = வளம் பொருந்திய திருக்கழுக்குன்றம் என்ற இடத்தில்

உறைவா ளிவள் = வசிப்பவன் இவள்

பூ வுதித்த = பூ உலகில் உதித்த

தூ யவளே = தூய்மையானவளே

அவள் கண்கள் கருணையை வடிக்கின்றன.

"பொங்கும் அருள் நயனம்"

இந்த பூலோகத்தில் வந்து உதித்தாள்.

உதிப்பது என்றால், உள்ளது மீண்டும் தோன்றுவது என்று அர்த்தம்.

சூரியன் உதித்தது என்று சொல்வோம். சூரியன் எங்கேயும் போய் விடவில்லை. அது இரவில் நம் பார்வையில் படாமல் இருந்தது. காலையில் நமக்குத் தெரிகிறது. எனவே அதை  உதித்தது என்கிறோம்.

அது போல, அவள் இந்த பூ உலகில் வந்து உதித்தாள். வேறு ஏதோ உலகத்தில் உள்ளவள். இங்கு வந்து உதித்தாள் என்று அர்த்தம்.

நம்ம ஆட்கள் (முன்னோர்கள்) இரசித்து இரசித்து காதலித்து இருக்கிறார்கள்.

பாடலை வாசித்துப் பாருங்கள். காதலியை எந்த அளவுக்கு உயரே கொண்டு போகிறான் என்று தெரியும்.

Lovesu ....

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_22.html




Thursday, February 21, 2019

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ 


உயிர்களை வருத்தக் கூடாது என்ற எண்ணம் நமக்கு உண்டு. ஆனால் , அதற்காக நாம் ரொம்ப சிரமம் எடுத்துக் கொள்வது கிடையாது. ஒரு கொசு கண் முன் பறந்தால் , ஒரே அடி.

குசேலர். கண்ணனின் தோழன். மிகுந்த வறுமையில் வாடினார். நிறைய பிள்ளைகள். வருமானம் இல்லை. பசி. பட்டினி. "கண்ணன் உங்கள் நண்பர் தானே, அவரிடம் சென்று ஏதாவது உதவி கேட்டால் என்ன " என்று கொஞ்சம் அவலை ஒரு பழைய துணியில் முடிந்து குசேலரை கண்ணனிடம் அனுப்பி வைக்கிறாள்.

குசேலர் கண்ணனை காண புறப்பட்டுப் போகிறார்.

போகிற வழியில் நல்ல வெயில். நிழல் பார்த்து மரத்தடியிலேயே போகலாம். நமக்கு எப்படி நிழல் வேண்டுமோ அது போலத்தானே எறும்பு போன்ற சின்ன உயிர்களுக்கும் நிழல் வேண்டும். அவைகளும் மர நிழலில் தானே நகரும். நாம் அந்த வழியில் சென்றால், அவற்றின் மேல் மிதித்து அவை இறந்து போகாதா? அவை பாவம் இல்லையா என்று நினைத்து, நிழலை விட்டு விட்டு வெயிலில் நடக்கிறார். வெயில் மண்டையைப் பிளக்கிறது. குடை எல்லாம் வாங்க வசதி இல்லை. தன் கையை விரித்து தலைக்கு குடை போல வைத்துக் கொண்டு நடந்து போகிறார். ....

பாடல்

சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
     போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
     ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
     காத லங்கை விரித்துக் கவித்தரோ.

பொருள்

சீத = குளிர்ந்த

நீழற் = நிழல்

செலிற் = செல்லும்

சிற் றுயிர் = சின்ன உயிர். ஈ எறும்பு போன்றவை

தொகை = கூட்டம்

போதச்  = அறிவு. இங்கே அறிந்து அல்லது எண்ணி என்று கொள்ளலாம்

 சாம்பும் = வருந்தும்

மென் றெண்ணிய = என்று எண்ணிய

புந்தியான் = புத்தி உள்ளவன்

ஆத வந்தவழ் = ஆதவன் + தவழ் = சூரியன் தவழும்

ஆறு = வழி

நடந்திடுங் காதல்  = நடக்க விரும்பி

அங்கை = அவருடைய கையை

விரித்துக் = விரித்து

கவித்தரோ. = குடை போல கவிழ்த்துக் கொண்டார்

ஜீவ காருண்யத்தின் உச்சம். தன்னால் ஒரு எறும்புக்குக் கூட தீங்கு வரக் கூடாது என்று எண்ணி, தன்னை வருத்திக் கொண்டு வெயிலில் நடந்தார்.

ஏழ்மை ஒரு புறம்.  பசி ஒரு புறம். வீட்டில் பிள்ளைகள் பசியால் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரு புறம் நினைத்துப் பார்ப்போம். நாமாக இருந்தால் என்ன எல்லாம் நினைத்துப் பார்ப்போம் என்று.

ஏழையாக பிறந்ததற்காக பெற்றோரை ஏசுவோம், இந்த சமுதாயத்தை திட்டுவோம்,  அந்த கடவுளை தூற்றுவோம்.

எறும்புக்கு அருள் செய்ய மனம் வருமா அந்த சூழ்நிலையில் ?

அப்படிப்பட்ட அருளாளர்கள் பிறந்த மண் இது.

இவற்றை எல்லாம் படிப்பதன் மூலம், நம் மனத்திலும் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம்  அருள் சுரக்கத்தான் செய்யும்.

இல்லையா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_21.html

Wednesday, February 20, 2019

கைந்நிலை - நீந்தும் நெஞ்சு

கைந்நிலை - நீந்தும் நெஞ்சு 


அது ஒரு பெரிய காடு.

அந்த காட்டில் உள்ள மரங்களில் உள்ள பொந்துகளில் ஆந்தைகள் வசிக்கும். அவை இரவில் இரை தேடும். பகலில் , மர பொந்துகளில் வசிக்கும். வெயில் ஏற ஏற சூடு தாங்காது. கொஞ்சம் கொஞ்சமாய் பொந்தின் உள்ளே போகும். எவ்வளவு தான் போக முடியும். ஓரளவுக்கு மேல போகவும் வழி இருக்காது. மேலே வந்தால் சூடு வேற. பொந்துக்குள் இருந்து கொண்டு சத்தம் எழுப்பும். அது ஏதோ அந்த மரம் அனத்துவதைப் போல இருக்கும்.  டொக் டொக் என்று மரத்தை தன் அலகால் கொட்டி சத்தம் எழுப்பும்.

அந்த வழியாக போனால், கொஞ்சம் பயமா இருக்கும் அல்லவா ?

அது இருக்கட்டும் ஒரு பக்கம். பின்னால் வருவோம்.

வீட்டில், கணவனோ பிள்ளையோ வெளியூர் போய் இருப்பார்கள். இல்லத்தரசியின் மனம் பூராவும் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கும். உடம்பு மட்டும் தான் இங்கே இருக்கும்.

இப்ப எந்திரிச்சிப்பாரு. இப்ப காப்பி குடிச்சிருப்பாரு. காலையில அந்த மாத்திரை சாப்பிடணும். ஞாபகம் இருக்குமோ இல்லையோ....

பிள்ளை காலையில தானே எழுந்திருக்க மாட்டானே. அவனை எழுப்பணுமே....

இந்த பொண்ணு தனியா அங்க போய் என்ன பண்ணுதோ....

என்று மனம் பூராவும் அங்கேயே இருக்கும்.

அது போல, இந்தப் பாட்டில், ஒரு தலைவி இருக்கிறாள். அவள் கணவன் பொருள் தேடி வெளியூர் போய் இருக்கிறான். அவன் போகிற வழியில் ஆந்தைகள் வாழும் காடு இருக்கிறது.

இவள் மனம் அவன் பின்னேயே போகிறது....


பாடல்



ஆந்தை குறுங்கலி கொள்ள நம் மாடவர்
காய்ந்து கதிர்தெறூஉங் கானங் கடந்தார்பின்
னேந்த லிளமுலை யீரெயிற்றா யென்னெஞ்சு
நீந்து நெடுவிடைச் சென்று.


பொருள்


ஆந்தை = ஆந்தை

குறுங்கலி கொள்ள = சிறிய ஒலி எழுப்ப

நம் மாடவர் = நம் ஆடவர் = நம்ம ஆளு (தோழியிடம் சொல்லுகிறாள் )

காய்ந்து = தீய்க்கும்

கதிர்தெறூஉங் கானங் = சூரிய கதிர்கள் தெறிக்கும் கானகம்

கடந்தார் = கடந்து செல்லுவார்

பின் = அவர் பின்

னேந்த லிளமுலை = ஏந்தல் இள முலை கொண்ட

யீரெயிற்றா  = எயிறு என்றால் பற்கள்.  இளமையான பற்களை கொண்டவளே

யென்னெஞ்சு = என் நெஞ்சு

நீந்து = நீந்துகின்றது

நெடுவிடைச் சென்று = நீண்ட அந்த வழியில்  சென்று


மனம் , நடந்து போகவில்லையாம். நீந்தி சென்றதாம். தவிப்பை மேலும் அடிக் கோடிட்டு காட்டுகிறது. நடந்து போனால், வழியில் எங்காவது நின்று இளைப்பாறிப் போகலாம்.  நீந்தும் போது எங்கே இளைப்பாறுவது.

தோழியை புகழ்கிறாள். அழகான பற்கள், இளமையான மார்பு என்று. "நீயும் என்னைப் போல சின்ன பெண் தானே. இந்தத் தவிப்பு உனக்கும் புரியும் தானே" என்று கேட்காமல் கேட்கிறாள்.

அந்தக் காலத்தில் இருந்து பெண்கள் இந்த பாடு தான் படுகிறார்கள்.

கணவனையும் பிள்ளைகளையும் அனுப்பி வைத்து விட்டு, உடல் இங்கும், மனம் அங்குமாய்  மருகுகிறார்கள்.

அந்தக் காலத்தில் , தோழிகளிடம் இவ்வளவு வெளிப்படையாக பேசினார்கள். இப்ப, அதெல்லாம் இருக்கிறதா என்ன ? இவ்வளவு அன்யோன்யமாக பெண்கள் தங்கள் தோழிகளிடம் பேசிக் கொள்கிறார்களா ?


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_20.html

Monday, February 18, 2019

குறுந்தொகை - இனியவோ ?

குறுந்தொகை - இனியவோ ?


காரிலோ, பஸ்ஸிலோ, விமானத்திலோ ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போகலாம். ஆனால், ஒரு காலத்தில் இருந்து இன்னொரு காலத்துக்குப் போக முடியுமா ? ஆயிரம் ஆண்டுகள் முன்னோ பின்னோ போக முடியுமா ? அப்படி போக இதில் ஏறிப் போக வேண்டும்? அதற்கு ஒரு வாகனம் இருக்கிறதா என்ன?

இருக்கிறது. அதன் பெயர் இலக்கியம்.

இலக்கியம் படைக்க மட்டும் அல்ல, படிக்கவும் நிறைய கற்பனை வளம் வேண்டும்.  இலக்கியங்கள் காலத்தால் மிக முந்தியவை. அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியம் காலத்தால் மிக முந்தியது. இலக்கியங்கள் நம்மை வேறு ஒரு கால கட்டத்திற்கு மிக எளிதாக கொண்டு செல்லும் வல்லமை வாய்ந்தவை. நாமும் கொஞ்சம் ஒத்துழைத்தால். அந்த வண்டியில் போக கற்பனை என்ற டிக்கெட் வாங்க வேண்டும். அவ்வளவுதான்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

என்றாவது சாப்பாட்டில் உப்பு இல்லாமலோ, அல்லது மிகக் குறைவாகவோ போட்டு சாப்பிட்டு இருக்கிறீர்களா? எப்படி இருக்கும்? வாயில் வைக்க விளங்காதல்லவா? உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று சொல்லுவார்கள்.

நமக்கு உப்பு மிக எளிமையாக கிடைத்து விடுகிறது.

ஆயிரம்    ஆண்டுகள் பின்னோக்கி போங்கள். பெட்ரோல் கிடையாது. டீசல் கிடையாது. லாரி , டெம்போ வேன் கிடையாது. மின்சாரம் கிடையாது. கம்ப்யூட்டர் கிடையாது. உப்பு எங்கோ ஒரு கடற்கரையில் உருவாகும். அது கடற்கரையை விட்டு தள்ளி இருக்கும் ஒரு ஊருக்கு எப்படி வரும்? யோசித்துப் பாருங்கள் ?

உப்பு விற்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருந்தது. அவர்களுக்கு உமணர்கள் என்று பெயர்.   அவர்கள், கடற்கரையில் இருந்து உப்பு வாங்கிக் கொண்டு ஊர் ஊராய் சென்று    விற்பார்கள்.

அப்படி போகும் வழியில், ஹோட்டல் எல்லாம் கிடையாது. அக்கம் பக்கம் ஊர் ஒன்றும் இருக்காது. ஊர் வேண்டும் என்றால், நீர் வேண்டும், விவசாயம் வேண்டும், அதெல்லாம் இருந்தால் தான் ஊரு உருவாகும். தண்ணி இல்லாத காட்டில்  ஊர் ஏது ? ஒரே வறண்ட நிலமாக இருக்கும்.

அவர்களே ஏதாவது பாழடைந்த ஒரு வீட்டின் நிழலிலோ அல்லது மரங்களின் நிழலிலோ தங்கி, கற்களை கூட்டி, அடுப்பு செய்து உணவு ஆக்கி உண்பார்கள். உண்ட பின், அவற்றை அப்படியே போட்டு விட்டுப் போய் விடுவார்கள். கருகிய விறகும், சாம்பலும், அந்த கூட்டு கற்களும் அங்கே கிடக்கும்.

அந்த வழியாக தலைவன் சென்று வேறு ஒரு ஊருக்குச் சென்று பொருள் தேடப் போகிறான். அவளும், அவன் கூட வருவேன் என்று மல்லுக்கு நிற்கிறாள். அவன் இதை எல்லாம் எடுத்துச் சொல்லி..."வேண்டாண்டா...உன்னால முடியாது. ரொம்ப கஷ்டம். நீ பேசாம, இராஜாத்தி மாதிரி இங்க இரு.  நான் போய் சம்பாதித்து பொருள் கொண்டு வருகிறேன் "  என்று எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். அவள் சம்மதிக்கவில்லை.

அவளுடைய தோழியிடம் சென்று சொல்கிறாள் "என்ன விட்டு விட்டு அவன் மட்டும் தனியா போறேன்னு சொல்றான். நானும் கூடப் போறேன். அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. சரியான மர மண்டையா இருக்கான்....நீயாவது அவனிடம் சொல்லேன் " என்று. தோழி "சரி...சரி..நீ அழாத, நான் பேசுறேன்" என்று சொல்லிவிட்டு, அவனிடம் சென்று பேசுகிறாள்

" நீ சொல்வதெல்லாம் சரி தான். ஆனா உனக்கு ஒண்ணு புரிய மாட்டேங்குது. அது தான் பெண்ணின் மனசு. நீ இல்லாமல் அவள் இங்கே சந்தோஷமா இருப்பான்னு நினைக்கிறியா  ?" என்று ஒரு போடு போடுகிறாள்.

பாடல்

உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை
ஊர்பாழ்த் தன்ன வோமையம் பெருங்கா
டின்னா வென்றி ராயின்
இனியவோ பெரும தமியோர்க்கு மனையே

பொருள்

உமணர் = உப்பு விற்பவர்கள். உப்பு விற்பவர்கள் என்று குறிப்பாக சொன்னாலும், விற்பவர்கள், வியாபாரிகள் என்று பொதுவாக பொருள் கொள்வது நன்றாக இருக்கும்.

சேர்ந்து = ஒன்றாகச் சேர்ந்து

கழிந்த = விற்று முடித்தவுடன் விலகி சென்ற பின்

மருங்கின் = இடத்தின்

அகன்தலை = விலகிய இடத்தில்

ஊர் பாழ்த்தன்ன = பாழ் பட்ட, வெறிச்சோடிப் போன ஊர் போல

ஓமை = ஒரு விதமான மரம். (tooth brush tree என்று பொருள் சொல்கிறார்கள். ஒரு வேளை சவுக்கு மரமாக இருக்குமோ ?)

அம் பெருங்காடு = ஊருக்கு வெளியே உள்ள அந்த பெரிய காடு

இன்னா = கொடியது

என்றிர் ஆயின் = என்று நீ சொன்னால்

இனியவோ = இனிமையானதா ?

பெரும = பெரியவனே

தமியர்க்கு மனையே = தனித்து நிற்கும் எங்கள் வீடே

நீ இல்லாத வீடு வெறிச்சோடிப் போய் இருக்கும். தனியாக அவள் என்ன செய்யவாள். அதை எல்லாம் நீ சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்று கூறுகிறாள்.

சொன்னது பாதி. சொல்லாமல் விட்டது மீதி.

ஒருவேளை அவர்களுக்கு சமீபத்தில் திருமணம் ஆகி இருக்கலாம். குழந்தைகள் இல்லாமல் இருக்கலாம். குழந்தைகள் இருந்தால் அவைகளையும் தூக்கிக் கொண்டு வருவேன் என்று சொல்லுவாளா?  கணவனும் இல்லை. பிள்ளைகளும் இல்லை என்றால், தனிமையில் அவள் என்ன செய்வாள்?

பெண்களின் சங்கடங்களை ஆண்கள் புரிந்து கொள்வதே இல்லை போலும், சங்ககாலம் தொட்டு.

கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். காலம் கடந்து, இன்னொரு உலகத்துக்கு உங்களை இந்த இலக்கியங்கள் கொண்டு செல்லுவதை நீங்கள் உணரலாம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_18.html


Sunday, February 17, 2019

திருக்குறள் & ஆத்திச் சூடி - படிக்கணும்

திருக்குறள் & ஆத்திச் சூடி - படிக்கணும் 


இன்றைய சூழ்நிலையில், நிறைய இளம் பையன்களும் பெண்களும்  அயல் நாட்டுக்குப் போய் படிக்க வேண்டும். அயல் நாட்டுக்குப் போய் வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்கா. கனடா. ஐரோப்பா. ஆஸ்திரேலியா. என்று கண்டம் விட்டு கண்டம் சென்று படிக்க மற்றும் வேலை தேடி செல்கிறார்கள்.

நாளடைவில் அந்த நாட்டிலேயே குடியுரிமை பெற்று விடுகிறார்கள். அங்கேயே வீடு வாசல் வாங்கி, பிள்ளைகளை அங்கேயே படிக்க வைத்து மொத்தமாக குடி பெயர்ந்து விடுகிறார்கள்.

அது நல்லது தான்.

உயர்ந்த கல்வி. நிறைய சம்பளம். சிறப்பான சுற்றுப் புற சூழ்நிலை. எல்லாமே நல்லது தான்.

இப்படி பிறந்த நாட்டை விட்டு விட்டு, இன்னொரு நாட்டுக்குப் போகலாமா ? பிறந்த நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா? தாய் நாடு அல்லவா என்ற கேள்வி ஒரு புறம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. சில பெரியவர்கள், வயதானவர்கள் "ஆயிரம் தான் இருந்தாலும், நம்ம ஊரு போல வருமா " என்று அங்கலாய்ப்பார்கள். "உள்ளூரில் விலை போகாத மாடு தான் வெளி ஊரில் விலை போகும் " என்று குதர்க்கம் பேசுபவர்களும் உண்டு. "இங்க பத்து ரூபாய் இட்லி, அங்க நூறு ரூபாய். இங்க பத்து ஆயிரம் சம்பாதிப்பதும் ஒன்று தான் , அங்க போய் இலட்ச ரூபாய் சம்பாதிப்பதும் ஒன்று தான் " என்று கூறும் பொருளாதார மேதைகளும் உண்டு.

இதற்கு விடை யார் தருவது? வள்ளுவரிடமே கேட்போம்.

என்னது வள்ளுவரா ? அவருக்கு என்ன தெரியும் இந்த பாஸ்போர்ட், விசா, workpermit , immigration, citizenship பத்தி எல்லாம் என்று நினைக்கிறீர்களா?

அவரு பெரிய ஆளு.

போற போக்கில ஏழு வார்த்தைகளில்  நமக்கு விடை சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

பாடல்

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையும் கல்லாத வாறு 


பொருள்


யாதானும் = எதானாலும் (எந்த இடம் ஆனாலும்)

நாடாமால் = நாடு ஆம்

ஊராமால் = ஊர் ஆம்

என்னொருவன்  = ஏன் ஒருவன்

சாந்துணையும் = சாகும் வரையில்

கல்லாத வாறு  = கல்வி கற்காமல் இருப்பது

அதாவது, படித்தவனுக்கு, எல்லா நாடும், எல்லா ஊரும் தன் நாடு, தன் ஊர் போலத்தான். அப்படி இருக்க, எவனாவது சாகும் வரையில் படிக்காமல் இருப்பானா என்று கேட்கிறார்.

மிக மிக ஆழமான பொருள் கொண்ட குறள் . ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

முதலாவது, படித்தவனுக்கு எல்லா ஊரும், தன் சொந்த ஊர் போல. எல்லா நாடும் தன் சொந்த நாட்டைப் போல. எனவே, எங்கு ஒரு வேறுபாடும் இல்லை. அவன் எங்கு வேண்டுமானாலும் போய் தங்கலாம், படிக்கலாம், வேலை செய்யலாம். வள்ளுவர் விசா தந்து விட்டார்.

இரண்டாவது,  ஒருவன் பிறந்த நாட்டில் அவனுக்கு குடி உரிமை இருக்கிறது.  படித்தவன்  எந்த நாட்டுக்கு சென்று அங்கு குடி உரிமை கேட்டாலும், அந்த நாடு அவனை தன் குடிமகனாக / மகளாக ஏற்றுக் கொண்டு குடி உரிமை வழங்கி விடும். எல்லா நாடும் அவனை தங்கள் நாட்டு குடிமகனாக ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கும். அவனுக்கு பிறந்த ஊரும் ஒன்றும் தான், மற்ற ஊரும் ஒன்று தான். ஒரு வேறுபாடும் இல்லை.

மூன்றாவது, அடடா, அந்தக் காலத்திலேயே யாரும் எனக்கு இதை சொல்லவே இல்லையே. சொல்லி இருந்தால் நானும் படித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று போய் செட்டில் ஆகியிருப்பேனே என்று நினைத்து வருந்த வேண்டாம். வள்ளுவர் சொல்கிறார், இன்னைக்கு ஆரம்பி. இன்றிலிருந்து படிக்கத் தொடங்கு. இளமையில் கல் என்று சொன்னது சரிதான். எப்போது நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. "சாம் துணையும்" . சாகும் வரை படிக்க வேண்டும் என்கிறார். இன்று ஆரம்பித்து , சாகும் வரை படித்துக் கொண்டே இருந்தால், எல்லா நாடும் நம் நாடு ஆகும்.  40 , 50, 60 வயதுக்கு மேல் படிக்கத் தொடங்கி சாதித்தவர்கள் இல்லையா ? இதுவரை படிக்காவிட்டாலும் பரவாயில்லை. இன்று நல்ல நாள் ஆரம்பிக்கலாம்.

நான்காவது, சரி வெளி நாட்டுக்குப் போய் , தத்தி முத்தி குடியுரிமை வாங்கியாச்சு. அப்புறம்  என்ன. ஜாலிதான். புத்தகத்தை எல்லாம் மூட்டை கட்டி போட்டுற வேண்டியதுதானா ? இல்லை. சாகும் வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும்.  புதிது புதிதாக ஏதாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

ஐந்தாவது, சில பேர் நினைப்பார்கள்...ஆமா இப்பவே இவ்வளவு வயாசாச்சு...இனிமேல் படிச்சு ...என்னத்த செய்ய ...என்று. அப்படி நினைக்கக் கூடாது. கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். சாகும் வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்..

ஆறாவது, வயதான காலத்தில் மிக பெரிய சிக்கல் எது என்றால் நோய் , உடல் வலிமை குன்றுவது, காது கேட்காமல் போவது, கண் சரியாக தெரியாமல் போவது போன்றவை அல்ல. தனிமை.  தனிமை தான் மிகப் பெரிய கொடுமை. சிறையில் போட்டது மாதிரி இருக்கும். பேசக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் எல்லாம் அவர்கள் வாழ்வில் மும்மரமாக இருப்பார்கள். நம்மோடு இருந்து பேச அவர்களுக்கு நேரம் இருக்காது.  என்ன செய்வது ? சாகும்  வரை கற்றுக் கொண்டே இருந்தால், அந்தத் தனிமை தெரியாது.  கற்பது என்பது அவ்வளவு இனிமையான விஷயம்.  படுக்கையில் கிடந்து கடைசி மூச்சு வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.

வள்ளுவராவது ஏழு வார்த்தை எடுத்துக் கொண்டார்.

நம்ம கிழவி, ஒளவை இரண்டே வார்த்தையில் சொல்லி விட்டுப் போய்விட்டாள்.

ஓதுவது ஒழியேல் 

படிப்பதை விட்டு விடாதே. ஓதுவது என்றால், படிப்பது, படித்தையே மீண்டும் மீண்டும் படிப்பது. நன்றாக மேடையில் ஏறும்வரை படிப்பது. ஓதுவார் என்று சொல்லுவார்கள். அவர் படித்து. படித்ததை பல முறை சொல்லிப் பார்த்து, மற்றவர்களுக்கும்  சொல்லுவார். அவர் சொல்லுவதை, பாடுவதை கேட்டு கேட்டு நமக்கு பாடம் ஆகி விடும். படி. திரும்பத் திரும்பப் படி. மனதில் தெளிவாகும் வரை படி. படித்ததை மற்றவர்களுக்கு சொல். இதை ஒரு நாளும் விட்டு விடாதே என்கிறாள் ஒளவை.

ஏதாவது சால்ஜாப்பு சொல்லாமல், படிக்கத் தொடங்குங்கள்.

என்ன படிக்கப் போகிறீர்கள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_17.html

Saturday, February 16, 2019

குறுந்தொகை - நோமென் நெஞ்சே

குறுந்தொகை - நோமென் நெஞ்சே 


வீட்டில் பிள்ளைகள் சில சமயம் சொன்ன பேச்சு கேட்காமல் ஓடி ஆடி கீழே விழுந்து முட்டியை சிராய்த்துக் கொண்டு வந்து நிற்பார்கள். ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் "வேணும், சொன்னா கேட்டாத்தான...இப்படி ஒரு தடவை காயம் பட்டுக்கிட்டு வந்தா தான் உனக்கு புத்தி வரும் " என்று அவர்கள் மேல் நாம் கோபம் கொள்வதும் உண்டு.  என்ன தான் கோபம் வந்தாலும், பிள்ளை பாசம் போகுமா. "வா இங்க...எப்படி அடி பட்டுக்கிட்டு வந்திருக்க பாரு...பாத்து விளையாடக் கூடாதா" என்று ஆறுதலும் சொல்லுவம், அடி பட்ட இடத்துக்கு மருத்துவமும் செய்வோம்.

காதலன் அவளை விட்டு பிரிந்து விட்டான். ஒரேயடியாக இல்லை. என்னமோ கொஞ்ச நாளா பேச்சே இல்லை. அவளுக்கு வருத்தம் தாங்கவில்லை. அழுகிறாள். யாரிடம் சொல்ல முடியும் ?

அவள் நெஞ்சிடம் கூறுகிறாள்


"நல்லா அழு. இவ்வளவு கண்ணீர் விட்டு அழுதாலும் வராத காதலர் நமக்கு அமைந்திருக்கிறார். அதை நினைத்து நல்லா அழு. எனக்கென்ன " என்று தன் நெஞ்சோடு நொந்து கொள்கிறாள் அவள்.

பாடல்

நோமென்  னெஞ்சே  நோமென்  னெஞ்சே 
இமைதீய்ப்  பன்ன  கண்ணீர்  தாங்கி 
அமைதற்  கமைந்தநங்  காதலர் 
அமைவில  ராகுத  னாமென்  னெஞ்சே.


சீர் பிரித்த பின்


நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே

பொருள்


நோம் = நொந்து கொள்

என் நெஞ்சே = என் மனமே

நோம் = நொந்து கொள்

என் நெஞ்சே = என் மனமே

இமை = இமைகள்

தீய்ப்பு அன்ன = தீய்ந்து போகும் அளவுக்கு

கண்ணீர் தாங்கி = கண்ணீர் தாங்கி

அமைதற்கு அமைந்த = இருக்கும்படி நமக்கு கிடைத்த

நம் காதலர்  = நம்முடைய காதலர்

அமைவிலர் ஆகுதல் = நமக்கு சரியாகவில்லை என்றால்

நோம் என் நெஞ்சே  = நொந்துகொள் என் நெஞ்சே

சூடான கண்ணீர். அது கண்ணிலேயே தங்கி விட்டது. கண்ணீர் காயவே இல்லை. அந்த சூட்டில் கண் தீய்ந்து விடும் போல் இருக்கிறது.

என்ன அழுது என்ன பயன்? அவன் தான் வரவே மாட்டேன் என்கிறானே.

"நீ வருத்தப் பட்டுக் கொள் . வேறு என்ன செய்ய "

நம் முன்னவர்கள் உருகி உருகித்தான் காதலித்து இருக்கிறார்கள்.

அவர்களின் மரபணு நம்மிடமும் இருக்கும் அல்லவா. எங்கே போகும்?

அந்த காதல் என்ற  ஜீவ நதி அன்றில் இருந்து வரை , வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த மண், அதனால் தான் இன்னமும் ஈரமாகவே இருக்கிறது.

அவள் அன்று அழுத கண்ணீர் இன்னமும் காயவில்லை. இந்த பிளாகின் மூலம் இன்றும் கசிந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் நாட்டில், ஏதோ ஒரு கிராமத்தில், என்றோ அவள் அழுத கண்ணீர், காலம் பல கடந்து, இன்று இன்டர்நெட்டில் , கண்டம் விட்டு கண்டம் போய் கொண்டிருக்கிறது.

அவள் இல்லை.  அவன் இல்லை. அந்த கண்ணீர் மட்டும் இன்னும் மிச்சம் இருக்கிறது.


https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_16.html

Wednesday, February 13, 2019

புறநானுறு - நரை முடி இல்லாமல் இருக்க

புறநானுறு - நரை முடி இல்லாமல் இருக்க 


நரை வந்தால் யாருக்குத்தான் பிடிக்கும்? முதல் நரை கண்டவுடன் நமக்கெல்லாம் தலையில் இடி விழுந்த மாதிரி இருக்கும். அதை யாருக்கும் தெரியாமல் பறித்து எறிந்து விடுவோம். அப்புறமும் அது வந்து கொண்டேதான் இருக்கும். நமக்கு வயதாவதை கட்டியம் கூறும் அது.

கம்பர் நரை முடிக்கு ஒரு பாடலே எழுதி இருக்கிறார். தசரதன் காதின் ஓரம் ஒரு நரை முடி கண்டான். மறு வினாடி , நாட்டை இராமனுக்கு கொடுத்து விட்டு கானகம் போக முடிவு செய்தான். கொஞ்சம் வெட்டி விடுவோம். கொஞ்சம் டை அடித்துக் கொள்வோம் என்று நினைக்கவில்லை. வயதாவதை நாம் ஏற்றுக் கொள்ளுவது இல்லை.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பிசிராந்தையார் என்று ஒரு புலவர் இருந்தார். அவருக்கு வயது ஆகிக் கொண்டே இருந்தது. இருந்தும், முடி நரைக்கவே இல்லை. அவரிடம் கேட்டார்கள், "எப்படி உங்களுக்கு மட்டும் முடி நரைக்கவே இல்லை" என்று.

அதற்கு அவர் சொன்னார் "என் மனைவியும் பிள்ளைகளும் மாண்பு உடையவர்களாக இருக்கிறார்கள். ஊரில் உள்ள மற்றவர்களும், அரசனும் அறம் பிறழாமல் வாழ்கிறார்கள். அறிவு நிறைந்த சான்றோர் அடக்கத்துடன் இருக்கிறார்கள் என் ஊரில். எனவே எனக்கு முடி நரைக்கவில்லை" என்றார்

பாடல்

யாண்டுபல  வாக  நரையில  வாகுதல்
யாங்கா  கியரென  வினவுதி  ராயின்
மாண்டவென்  மனைவியொடு  மக்களு  நிரம்பினர்
யாண்கண்  டனையரென்  னிளையரும்  வேந்தனும்
அல்லவை  செய்யான்  காக்கு  மதன்றலை
ஆன்றவிந்  தடங்கிய  கொள்கைச்
சான்றோர்  பலர்யான்  வாழு  மூரே.

கொஞ்சம் கடினமான பாடல் தான்.

சீர் பிரித்தால் எளிமையாக இருக்கும்.

ஆண்டு  பலவாக நரை இல  ஆகுதல்
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
யான் கண்ட அனையர் இளையரும் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்க அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே.


பொருள்

ஆண்டு = வருடங்கள்

பலவாக = பல கழிந்தாலும்

நரை இல = நரை இல்லாமல்

 ஆகுதல் = இருப்பது

யாங்கு = எப்படி

ஆகியர் = ஆகினாய்

என  = என்று

வினவுதிர் = கேட்பீர்கள்

ஆயின் = ஆனால்

மாண்ட = மாட்சிமை பொருந்திய

என் மனைவியோடு = என் மனைவியோடு

மக்களும் = பிள்ளைகளும்

நிரம்பினர் = நிரம்பி இருந்தனர். மாட்சிமை பொருந்தி விளங்கினார்கள்

யான் கண்ட = நான் பார்த்த

அனையர்  = அனைவரும்

இளையரும் = இளையவர்களும்

வேந்தனும் = அரசனும்

அல்லவை = நல்லது அல்லாததை

செய்யான் = செய்யாமல்

காக்க = காப்பாற்றி வந்தார்கள்

அதன்தலை = அது மட்டும் அல்ல

ஆன்று  = நிறைந்து

அவிந்து = பணிவுடன்

அடங்கிய = அடக்கமான

கொள்கைச் = கொள்கையை கொண்ட

சான்றோர் = பெரியவர்கள்

பலர் = பலர்

யான் வாழும் ஊரே = நான் வாழும் ஊரில் இருக்கிறார்கள்

எனவே எனக்கு வயதே ஆகவில்லை என்கிறார்.

மனிதனுக்கு கவலையால் வயதாகிறது.

சிறந்த மனைவி. நல்ல பிள்ளைகள். செங்கோல் செலுத்தும் அரசன். அடாவடி பண்ணாத  ஊர் மக்கள். நல்லதை எடுத்துச் சொல்லும் பெரியவர்கள் இருந்தால் ஏன் கவலை வருகிறது. ஏன் முதுமை வருகிறது.

நமக்கு முதுமை வந்திருக்கலாம். நம்மால் மற்றவர்களுக்கு முதுமை வராமல் இருக்க  என்ன செய்ய முடியும் என்று சிந்திப்போம்.

சிறந்த மனைவியாக, கணவனாக இருக்க முடியுமா ?

நல்ல பிள்ளையாக இருக்கும் முடியுமா ?

நாம் செய்யும் வேலையை (அரசன்) திறம்பட செய்ய முடியுமா ?

நாளும் அறிவைப் பெருக்கி நமக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ்வை வாழ முடியுமா ?

மண்டை கனம் இல்லாமல், அடக்கமாக இருக்க முடியுமா ?

என்று சிந்திப்போம்.

நல்லது தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_13.html


Tuesday, February 12, 2019

இராமாயணம் - பொருள் ஒன்று, சொல் இரண்டு

இராமாயணம் - பொருள் ஒன்று, சொல் இரண்டு 


சில சமயம் ஒரு பொருள், வேறு வேறு விதமான உணர்ச்சிகளை நமக்குத் தரும். பொருள் ஒன்று தான். அது இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து அதன் தன்மை மாறும்.

உதாரணமாக, பூ மாலையை எடுத்துக் கொள்வோம். அது கடவுள் சிலை மேல் இருந்தால் ஒரு அழகு. புது மண தம்பதிகள் மேல் இருந்தால் ஒரு அழகு. அதுவே ஒரு பிணத்தின் மேல் கிடந்தால் நமக்கு வேறு பல உணர்ச்சிகளைத் தரும். மாலை என்னவோ ஒன்றுதான். அது இருக்கும் இடத்தைப் பொறுத்து நமக்கு பல்வேறு உணர்ச்சிகளை தூண்டுகிறது.

மரங்கள் பல உண்டு. சில மரங்கள் வெட்டி வீழ்த்தப் பட்டாலும், அது மரம்தான். நல்ல தேக்கு மரத்தில் செய்த கதவு என்று தான் சொல்வோம். பனை மரத்தில் செய்த உத்திரம் என்று தான் சொல்லுவோம். ஆனால் சில மரங்கள் இருக்கின்றன. இருக்கும் வரை மரம், இறந்த பின் அது விறகு என்று அழைக்கப் படும். வீட்டில் அடுப்பு எரிக்கும் விறகு எந்த மரம் என்று யாருக்குத் தெரியும்.

பாரதியார் சொல்லுவார், கொடுங்கோல் மன்னன் ஜார்ஜ் இறந்த பின் அவன் கூட இருந்த ஆட்கள் எல்லாம் வீழ்ந்தார்கள். மரம் விழுந்து விறகானது போல என்பான்.

இமயமலை வீந்ததுபோல் வீழ்ந்துவிட்டான் 
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து 
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி 
அறங்கொன்று சதிகள் செய்த 
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார், 
புயற்காற்றுங் சூறை  தன்னில் 
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம் 
விறகான செய்தி போலே! 

மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்தி போல...

இராமாயணத்தில், கைகேயிடம் கூனி சொல்கிறாள். "இரண்டு வரம் கேள். ஒன்றில் இராமனை காட்டுக்கு அனுப்பு. இன்னொன்றில் பரதனுக்கு அரசாட்சியைக் கேள். இதனால் 'செழு நிலம் எல்லாம்" உன் மகனுக்கு கிடைக்கும் என்கிறாள். 

கூனியின் நோக்கில் அது செழு நிலம். செழுமையான நிலம்.

'இரு வரத்தினில் , ஒன்றினால் அரசு கொண்டு , இராமன் 
பெரு வனம் அத்து இடை ஏழ் இரு பருவங்கள் பெயர்ந்து 
திரிதரச் செய்தி ஒன்றினால் ; செழும் நிலம் எல்லாம் 
ஒரு வழி படும் உன் மகற்கு ; உபாயம் ஈது ' என்றாள் 


அது கேட்ட கைகேயி மனம்  மாறுகிறாள்.

கூனியை அப்படியே கட்டிக் கொள்கிறாள். அவளுக்கு பரிசுகள் எல்லாம் தருகிறாள். இந்த உலகம் முழுவதையும் என் மகனுக்குத் தந்தாய். இந்தத் தரைக்கு நாயகனின் தாய் இனி நான்" என்கிறாள்.

அவளை அறியாமலேயே அவள் வாயில் இருந்து சொற்கள் வந்து விழுகின்றன. செழு நிலம், "தரை" என்று ஆகி விட்டது. செழுமையான நிலத்தில் எல்லாம் முளைக்கும். தரையில் என்ன என்ன விளையும்?

பாடல்

உரைத்த கூனியை உவந்தனள் , உயிர் உறத் தழுவி , 
நிரைத்த மா மணி ஆரமும் நிதியமும் நீட்டி , 
'இரைத்த வேலை சூழ் உலகம் என் ஒரு மகற்கு ஈந்தாய் ! 
தரைக்கு நாயகன் தாய் இனி நீ ; எனத் தணியா . 


பொருள்

உரைத்த கூனியை = அவ்வாறு சொன்ன கூனியை

உவந்தனள் = உவகை கொண்டாள்

உயிர் உறத் தழுவி  = இறுக்க கட்டிப் பிடித்து

நிரைத்த மா மணி = பெரிய மணிகள் நிறைந்த

ஆரமும் = சங்கிலியும்

நிதியமும் = மற்ற செல்வங்களும்

 நீட்டி = கொடுத்து

'இரைத்த வேலை = எப்போதும் இரைந்து கொண்டே இருக்கும் கடல்

சூழ் = சூழ்ந்த

உலகம் = இந்த உலகை எல்லாம்

என் ஒரு மகற்கு ஈந்தாய் ! = என் ஒரு மகனுக்கு தந்தாய்

தரைக்கு = இந்த தரைக்கு

நாயகன் = தலைவனின்

தாய் இனி = தாய் இனிமேல் நான்

நீ ; எனத் தணியா . = நீ (மேலும் சொல்ல இருக்கிறாள் அடுத்து வரும் பாடல்களில்).

இது வரை இராமனும் தனக்கு மகன் என்று நினைத்துக் கொண்டிருந்த கைகேயி, இப்போது பரதன் மட்டும் தான் தனக்கு மகன் என்று நினைக்கத் தொடங்குகிறாள்

"என் ஒரு மகற்கு ஈந்தாய்" என்கிறாள்.

கம்பனின் சொல் நயம். நிலம் தரையானது. இராமன் இல்லாத அயோத்தி வெறும் கட்டாந்தரை தான் என்று சொல்லாமல் சொல்கிறான்.

ஒரு சொல்லுக்குள் காப்பியத்தின் போக்கை காட்டிவிட்டுப் போகிறான் கம்பன்.

இப்படி படித்து இரசிக்க நிறைய இருக்கிறது. ஒரு வாழ் நாள் போதாது. இருக்கிற கொஞ்ச நாளில் நல்லவற்றைப் படிப்போம். இரசிப்போம். 


Monday, February 11, 2019

ஒளவையார் - அரியது

ஒளவையார் - அரியது 


அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே

இந்தப் பாடல் பள்ளிக்கூடத்தில் படித்து இருப்பீர்கள். பெரிய சிக்கலான பாடல் ஒன்றும் இல்லை. சில சமயம், மிக எளிமையாக இருப்பதால் அதில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களை நாம் அறியத் தவறி விடுகிறோம்.

இந்தப் பாடலில் அப்படி என்ன ஆழ்ந்த கருத்து இருக்கிறது என்று பார்ப்போம்.

மானிடராதல் அரிது - சரி தான். நாம் மானிடராகப் பிறப்பதற்கு நாம் என்ன செய்தோம்? ஒன்றும் செய்யவில்லை. பிறந்து விட்டோம். அவ்வளவுதான். நம் முயற்சி ஒன்றும் இல்லை.

பேடு நீங்கி பிறத்தல் அரிது - அதுவும் சரி தான். ஆனால், அதற்காக நாம் என்ன செய்ய முடியும். தாயின் கருவில் இருக்கும் போதே குருடு, செவிடு போன்ற குறைகளை நாம்  சரி செய்து கொள்ள முடியுமா ? முடியாது. ஏதோ, நம் நல்ல காலம் , குறை ஒன்றும் இல்லாமல் பிறந்து விட்டோம்.

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது....ஞானமும் கல்வியும் பெறுதல் அரிது என்று சொல்லவில்லை.  அடைதல் அரிது என்று சொல்லவில்லை. நயத்தல் அரிது  என்று சொல்கிறாள் ஒளவை.  நயத்தல் என்றால் விரும்புதல், இன்புறுதல், பாராட்டுதல், மகிழ்தல், சிறப்பித்தல் என்று பொருள். ஞானமும் கல்வியும்  எங்கு இருந்தாலும் அதை கண்டு முதலில் மகிழ வேண்டும், அதை அடையும் போது   மனதில் இன்பம் பிறக்க வேண்டும். "ஐயோ, இதை படிக்க வேண்டுமே " என்று மனம் நொந்து படிக்கக் கூடாது. "அடடா, எவ்வளவு நல்ல விஷயம்..இத்தனை நாளாய் இது தெரியாமல் இருந்து விட்டேனே ...நல்லது இப்பவாவது தெரிந்ததே " என்று மகிழ வேண்டும்.

ஞானம் வேறு, கல்வி வேறு. கல்வி கற்பதன் மூலம் வருவது. ஞானம் உள்ளிருந்து வருவது. உள்ளே செல்லும் கல்வி, உள்ளிருக்கும் ஞானத்தை வெளியே கொண்டு வர வேண்டும்.

"தானமும் தவமும் தான்செயல் அரிது"


படிப்பதாவது எப்படியாவது தத்தி முத்தி படித்து விடலாம்.  தானமும் தவமும்  செய்வது இருக்கிறதே  மிக மிக கடினமான செயல்.

இலட்சக் கணக்கில் செல்வம் இருந்தாலும், நூறு ரூபாய் தருமம் செய்ய மனம் வருமா ? தானம் கூட ஒரு வழியில் செய்து விடலாம். வெள்ள நிவாரண நிதி, முதியோர்  பாதுகாப்பு, பிள்ளைகள் பாதுகாப்பு நிதி என்று ஏதோ ஒன்றிற்கு நாம் தானம் கூட செய்து விடுவோம்.

தவம் ? தவம் செய்வது எளிதான செயலா ? யாராவது தவம் செய்வதைப் பற்றி நினைத்தாவது பார்த்தது உண்டா ? தவம் என்றால் ஏதோ காட்டுக்குப் போய் , மரத்தடியில் அன்ன ஆகாரம் இல்லாமல் இருப்பது என்று நினைக்கக் கூடாது. அது என்ன என்று  பின்னால் ஒரு blog இல் பார்க்க இருக்கிறோம்.

தானமும் தவமும் செய்து விட்டால், வானவர் நாடு வழி திறக்குமாம்.

சொர்கத்துப் போக வேண்டும், இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று விரும்பாதவர் யார்.

சொர்கத்துப் போக என்ன வழி ? எப்படி போவது ?

ஔவை சொல்கிறாள் - தானமும் தவமும் செய்யுங்கள். சொர்கத்துக்கான வழி தானே திறக்கும் என்கிறாள்.

சம்பாதிப்பதை எல்லாம் வீடு வாசல், நகை, நட்டு , கார், shares , bonds என்று சேமித்து வைத்து விட்டு, சொர்கத்து எப்படி போவது ?

"காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே " என்றார் பட்டினத்தார்.

தானமும் தவமும் எப்போது வரும் என்றால்,

ஞானத்தையும், கல்வியையும் நயத்தால் வரும். முதலில் கல்வி, அப்புறம் ஞானம். அது வந்தால், செல்வத்தின் நிலையாமை தெரியும். இளமையின் நிலையாமை தெரியும். அப்போது தானமும் தவமும் செய்யத் தோன்றும்.

ஞானத்தையும் கல்வியையும் எப்படி நயப்பது ?

கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்தால் , ஞானத்தையும், கல்வியையும் நயக்க முடியும்.

உங்களுக்கு கூன், குருடு, செவிடு போன்ற குறை ஒன்றும் இல்லையே ?

அப்படி என்றால், அடுத்த இரண்டையும் செய்யுங்கள், வானவர் நாடு வழி திறந்து  உங்களுக்காக காத்து நிற்கும்.

ஔவைப் பாட்டியின் ஞானத்தின் வீச்சு புரிகிறதா ?

எளிமையான பாடல் தான். எவ்வளவு ஆழம்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/02/blog-post_11.html

Saturday, February 2, 2019

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல்

நாலடியார் - காக்கை கடிவதோர் கோல் 



பற்றிலேயே பெரிய பற்று இந்த உடல் மேல் கொண்ட பற்றுதான்.

இந்த உடம்புக்கு ஒரு சின்ன வலி, உபாதை என்றாலும் பதறிப் போகிறோம். "காலையில் இருந்து ஒரே தலைவலி ...சூடா காப்பி போட்டு குடிச்சேன், ரெண்டு ஸாரிடான் போட்டேன், தலைவலி தைலம் போட்டேன்...ஒண்ணுக்கும் அடங்க மாட்டேங்குது " என்று ஒரு சின்ன தலைவலி வந்தால் கூட நாம் இந்த உடம்புக்காக கவலைப் படுகிறோம்.

அது மட்டும் அல்ல, அதுக்கு வயதாகிக் கொண்டே போகிறேதே என்ற கவலை...முடி நரைத்ததால் கவலை, தோல் சுருங்கினால் கவலை, கண் பார்வை மங்கினால் கவலை, காது கொஞ்சம் கேட்காவிட்டால் கவலை...

வயதான படுத்திருவோமோ ? மறதி வந்திருமோ ? பிள்ளைகளுக்கு பாரமா போயிருவோமோ என்ற பயம்.

இந்த உடம்பை வைத்துக் கொண்டு நாம் எவ்வளவு அல்லாடுகிறோம்....

காரணம் என்ன ?

காரணம், நாம், இந்த உடம்புதான் நாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த உடம்பு பெரிய விஷயம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படியா ? அது நிஜமா ?

ஒரு ஈ இருக்கிறதே, அதன் சிறகு இருக்கிறதே, அது எவ்வளவு சின்னது? அந்த அளவுக்கு ஒரு சின்ன கீறல் உடம்பில் விழுந்தால் கூட, அதில் இருந்து இரத்தம் வரும், சீழ் பிடிக்கும், அதில் ஈ மொய்க்கும், கொஞ்சம் விட்டால் அதை காக்காய் கூட கொத்தும். அந்த காகத்தை விரட்ட, ஒரு குச்சி வேண்டி இருக்கும். அந்த அளவுக்கு மோசமானது இந்த உடம்பு. அதுக்கு நாம் இந்தப் பாடு படுகிறோம்.

முடிக்கு டை அடிக்கிறோம், பவுடர், லிப் ஸ்டிக், ஷாம்பு, சோப்பு, எண்ணெய் , சென்ட், அது இது என்ன என்று கொட்டி முழக்குகிறோம்.

பாடல்

மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர்
நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர்
ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.

பொருள்

மா = பெரிய, சிறந்த, அழகு உடைய

கேழ் = உறவு

மட = இளமையான

நல் = நல்ல

ஆய் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணே

என்றரற்று = என்று அரற்றும்

சான்றவர் = பெரியவர்

நோக்கார்கொல் = பார்க்க மாட்டார்களா ? அறிய மாட்டார்களா ?

நொய்யதோர் = இழிவான

புக்கிலை  = இடம் இல்லை

யாக்கைக்கோர் = இந்த உடம்புக்கு

ஈச்சிற கன்னதோர் = ஈ + சிறகு + அன்னது ஓர் = ஈயின் சிறகைப் போல

தோல் = தோலில்

அறினும்  = சின்ன வெட்டு காயம் ஏற்பட்டாலும்

வேண்டுமே = வேண்டுமே

காக்கை  = காக்கையை

கடிவதோர் = விரட்ட  ஓர்

கோல் = கோல் , குச்சி

இளமை நிலையானது அல்ல.

சரி, அதுக்காக எப்ப பார்த்தாலும் வயதான பெரிசுக மாதிரி கவலைப் பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா ?

இல்லை. அது நிலையானது அல்ல என்று தெரிந்து கொண்டால் போதும்.

மரண பயம் போய் விடும். நம் மரணம் மட்டும் அல்ல, மற்றவர்களின் மரணமும்  நம்மை வருத்தாது.

"அதெல்லாம் சரி, இருந்தாலும் ...." என்று இழுப்பது கேட்கிறது...என்ன செய்ய...

மருந்தைக் கொடுக்கலாம்...யார் குடிப்பது?