Wednesday, October 28, 2020

திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை

 திருக்குறள் - வான் சிறப்பு - எல்லாம் மழை 


மழையின் சிறப்பு பற்றி கூறிக் கொண்டு வருகிறார்  வள்ளுவர். அடுத்த குறளில் 


"கெடுப்பதுவும், அப்படி கெட்டவர்களை மழை பெய்து காப்பதுவும் எல்லாம் மழை " என்கிறார். 

அதாவது, நல்லதும் கெட்டதும் செய்வதும் மழை என்று கூறுகிறார். 


பாடல் 

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_28.html

click the above link to continue reading


கெடுப்பதூஉம்  = ஒருவரின் வாழ்வை கெடுப்பதும் 

கெட்டார்க்குச் = அப்படி வாழ்வு கெட்டவர்களுக்கு 

 சார்வாய் = உதவியாக 

மற்று ஆங்கே = அதே போல் 

எடுப்பதூஉம் = எடுத்து கொடுப்பதுவும் 

எல்லாம் மழை = எல்லாம் மழை 


இதை பார்க்க ஏதோ ஒரு சாதாரண குறள் போல் தெரிகிறது. குறளும் அதற்கு பரிமேல் அழகர் தரும் உரையும் பிரமிப்பு ஊட்டுபவை.


"கெடுப்பதூஉம் " - கெடுப்பதுவும் என்றால் என்ன? எப்படி கெடுப்பது? பெய்யாமல் கெடுப்பது என்கிறார் பரிமேல் அழகர். மழை பெய்யாவிட்டால் பயிர் பச்சை இருக்காது. உணவு உற்பத்தி இருக்காது. பசி பஞ்சம் என்று மக்கள் அவதிப் படுவார்கள். எனவே பெய்யாமல் கெடுப்பது என்று பொருள் சொல்கிறார். 

சரி, பெய்யாமல் கெடுக்கிறது. ஒத்துக் கொள்ளலாம். 

பெய்து கெடுப்பது இல்லையா? அளவுக்கு அதிகமாக பெய்து கார், பைக் எல்லாம் அடித்துக் கொண்டு போகிறது, வீடெல்லாம் சரிந்து விழுகிறது. அறுவடைக்கு வைத்த பயிர் எல்லாம்  அகாலத்தில் மழை பெய்தால் நாசமாகிப் போகாதா.  அது என்ன பெய்யாமல் கெடுப்பது? பெய்து கெடுப்பதை , வெள்ளப் பெருக்கால்  அழிவைத் தருவதை கெடுதல் என்று ஏன் சொல்லவில்லை?

மனித நாகரிகம் ஆற்றங்கரையில் தான் ஆரம்பிக்கிறது.  தண்ணீர் வேண்டும். குடிக்க, விவசாயம் செய்ய, குளிக்க, சுத்தம் செய்ய அனைத்துக்கும் நீர் வேண்டும்.  கரையை ஒட்டி உருவான நாகரீகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விரிந்து  செல்கின்றன. ஆற்றை விட்டு வெகு தூரம் வரை பரவி  விடுகிறது.மக்கள் தொகை  பெருக்கத்தால் எல்லோரும் ஆற்றங்கரையில் இருக்க முடியாது. மனிதர்கள் மட்டும் அல்ல, காடுகள், அதில் உள்ள விலங்குகள், மரம் , செடி கொடிகள் எல்லாவற்றிற்கும் நீர் வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்தால் தான் , அது கரை தாண்டி ஓடினால் தான் எல்லா இடத்துக்கும்  நீர் போய்ச் சேரும். ஆற்றங்கரையில் இருப்பவர்கள் அந்த சில நாட்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்கு போய் விட வேண்டும். வெள்ளம் நமக்குக்குத்தான்.  ஆற்றை விட்டு மிகத் தொலைவில் இருப்பவர்களுக்கு அது வரம். 

பெய்யாமல் தான் கெடுக்கும். பெய்து  கெடுப்பதில்லை. 

கெடுப்பதுவும் அதே போல எடுப்பதுவும் என்கிறார். 


"மற்று ஆங்கே எடுப்பதுவும்" 


கெடுப்பது போலவே எப்படி உதவி செய்ய  முடியும்? 

ஒருவன் கொலை செய்வது போலவே உதவி  செய்தான் என்று எப்படிச் சொல்ல முடியும்? 


திட்டுவது போலவே வாழ்த்தினாள் என்பது சரியா? 

கெடுப்பது போலவே எடுப்பது என்றால் சரியான பிரயோகமா?


நாளை சந்திப்போமா?



Tuesday, October 27, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தானையைக் கண்ணின் நோக்கினான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - தானையைக் கண்ணின் நோக்கினான்


என்ன சொல்லியும் கேட்க மாட்டான் என்று அறிந்து, இராவவணனை விட்டு வீடணன் விலகினான் என்று நேற்றுப் பார்த்தோம். 

வீடணனோடு, அவனுடைய அமைச்சர்களும் உடன் வந்தார்கள். 

அவர்கள் அடுத்து என்ன செய்தார்கள்? 

அது கேள்வி.


அவர்கள் இராமனும் அவன் படையும் இருக்கும் இடமான கடற் கரைக்கு வந்தார்கள். 


நீங்கள் இரவில் ஒரு உயரமான இடத்தில் இருந்து ஒரு ஊரைப் பார்த்தால் எப்படித் தெரியும்?  தெருவெங்கும் விளக்குகள் எரியும். கை நிறைய வைரக் கற்களை எடுத்து விசிறி எறிந்த மாதிரி ஒளி விடும் அல்லவா? 


வீடணனும், அவன் அமைச்சர்களும் கடற்கரைக்கு வந்து பார்க்கிறார்கள்.


இரவு நேரம். தீ பந்தங்கள் எரிகின்றன. நிலவொளியில் அந்த மணற்பரப்பு பால் போல கிடக்கிறது. எரியும் தீப்பந்தங்கள் அந்த பாற்கடலில் முளைத்த தாமரை மலர்களைப் போல்  சிவந்த நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிகிறது. 


கம்பனின் கற்பனை வளம். 

 

பாடல் 

அளக்கரைக் கடந்து, மேல் அறிந்து, நம்பியும்,

விளக்கு ஒளி பரத்தலின், பாலின் வெண் கடல்

வளத் தடந் தாமரை மலர்ந்ததாம் என,

களப் பெருந் தானையைக் கண்ணின் நோக்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_27.html

Pl click the above link to continue reading


அளக்கரைக் = கடற்கரை 

கடந்து = சென்று 

மேல் அறிந்து = மேல் நின்று பார்க்கும் போது 

நம்பியும் = வீடணனும் 

விளக்கு ஒளி பரத்தலின் = தீப்பந்தங்களின் ஒளி அங்கொன்றும் இங்கொன்றுமாக  தெரிவது 


பாலின் வெண் கடல் = பாற்கடலில் 


வளத் = வளமையான , செழிப்பான 

தடந் தாமரை மலர்ந்ததாம் என = குளிர்ந்த தாமரை மலர்கள் மலர்ந்து இருந்ததைப் போல 


களப் = போர் களத்தில் 

பெருந் தானையைக்  = பெரிய படையை 

கண்ணின் நோக்கினான். = கண்ணால் கண்டான் 


பயம், போட்டி, பொறாமை, போன்றவற்றால் நம் மனம் நாளும் குறுகிப் போகிறது. 

குறுகிய மனத்தை விரிவாக்க இலக்கியங்கள் உதவுகின்றன. 


இப்படி ஒரு காட்சியை மனதில் ஓட விட்டுப் பாருங்கள். 


கற்பனை விரியும்.மனமும்தான்.




Monday, October 26, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம் 


பக்தி என்றால் என்னவோ இருக்கிற எல்லாவற்றையும் விட்டு விட்டு, கடவுளே கதி என்று போய் விடுவது அல்ல. எல்லாவற்றையும் துறந்து சாமியாராக போவது அல்ல பக்தி. 

இந்த உலகை, அதன் அழகை, அதன் உயிர்ப்பை இரசிப்பது தான் பக்தி. 

என் பிள்ளையை பாராட்டினால் எனக்கு சந்தோஷம்தானே. உலகை இரசித்துப் பாராட்டினால் அதைப் படைத்த இறைவனுக்கு சந்தோஷம் இருக்காதா? 

அதை விடுத்து, இறைவன் செய்த எல்லாம் தேவை இல்லாதது என்று ஒதுக்கி வைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?


நமது பக்தி இலக்கியத்தில் பார்த்தால் தெரியும். உலகை, இயற்கையை, அதன் அழகை, உயிர்ப்பை மிக நுண்ணியமாக இரசித்து எழுதிய பாடல்களை காணலாம். 

உலகை வெறுத்த ஒருவரால் இவ்வளவு தூரம் இரசித்து இருக்க முடியாது. 


பேயாழ்வார் சொல்கிறார்....

திரு வேங்கட மலையில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அவை , அங்குள்ள மரத்தில் உள்ள பழங்களை பறித்து உண்ணுகின்றன.  அப்படி சாப்பிடும் போது, நடுவில் தாகம் எடுத்தால் அங்குள்ள குளம் அல்லது நீர் நிலைகளை தேடிச் செல்லும். நீர் குடிக்க குனிந்தால், குனியும் அந்த குரங்கின் உருவம் அந்த நீரில் தெரியும். அடடா இன்னொரு குரங்கு உள்ளே இருக்கிறது என்று பயந்து ஓடும். பின், மெல்ல வந்து,  தான் கையில் வைத்து இருப்பது போலவே அந்த நிழல் குரங்கின் கையிலும் ஒரு பழம்   இருப்பதைக் கண்டு, "எனக்கு அதைத் தா"  என்று கை நீட்டி கேட்குமாம்"

அப்படிப் பட்ட குரங்குகள் நிறைந்த மலை திருவேங்கடம் என்று கூறுகிறார். 


பாடல்  


பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்

கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த

களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்

விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_86.html


click the above link to continue reading


பார்த்த கடுவன் = பார்த்த குரங்கு 

சுனைநீர் = சுனையில் உள்ள நீரில் 

நிழற்கண்டு = தன் நிழலைக் கண்டு 

பேர்த்தோர் = வேறு ஒரு 

கடுவனெனப் = குரங்கு என்று 

பேர்ந்து = விலகிச் சென்று 

கார்த்த 

களங்கனிக்குக் = கரிய களங் கனிக்கு 

கைநீட்டும் வேங்கடமே = கையை நீட்டும் வேங்கட மலையே 

மேனாள் = முன்பொரு நாள் 

விளங்கனிக்குக் = விளங்கனிக்கு 

கன்றெறிந்தான் = கன்றாக வந்த அசுரனை அதன் மேல் எறிந்த கண்ணனின் 

வெற்பு = மலை 


உலகை மறுத்து என்ன பக்தி? 

குரங்கு தன் நிழலைப் பார்த்து பயந்து பின் கனி கேட்டதை வேலை மெனக்கெட்டு  எழுதி இருக்கிறார். இதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? 

பக்தி என்பது வாழ்வை இரசிப்பது. இயற்கையோடு ஒன்றி வாழ்வது. குரங்கும், மலையும் , அது உண்ணும் கனியும், அதன் சேட்டைகளும் எல்லாம் இயற்கைதான். 

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்பதும் பிரபந்தம். 

வாழ்க்கையை கொண்டாட வேண்டும். 



கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - என் பிழை பொறுத்தருளுவாய்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - என் பிழை பொறுத்தருளுவாய்


வீடணன் கூறிய அற உரைகளை ஏற்க மறுத்து அவனையும் விரட்டி விடுகிறான் இராவணனின். 

போவதற்கு முன், கடைசியாக வீடணன் கூறுகிறான் 


"என் தந்தை போன்றவனே. உனக்கு நன்மை தரக்கூடிய நல்லவை பலவும் சொன்னேன். நீ கேட்கவில்லை. என் மேல் ஏதாவது பிழை இருந்தால் பொறுத்து அருள்வாய்" 


என்று கூறி விட்டு, அந்த ஊரை விட்டு விலகினான். 


பாடல் 

'எத்துணை வகையினும் உறுதி எய்தின,

ஒத்தன, உணர்த்தினேன்; உணரகிற்றிலை;

அத்த ! என் பிழை பொறுத்தருளுவாய்' என,

உத்தமன் அந் நகர் ஒழியப் போயினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_26.html

Pl click the above link to continue reading

'எத்துணை வகையினும் = பல வகைகளில் 

உறுதி எய்தின, = உனக்கு நல்லது தருவனவற்றை 

ஒத்தன, = அறத்துக்கு ஒத்தவற்றை 

உணர்த்தினேன் = சொன்னேன் 

உணரகிற்றிலை; = நீ உணரவில்லை 

அத்த ! = என் தந்தை போன்றவனே 

என் பிழை பொறுத்தருளுவாய்' என, = என் பிழை எதுவும் இருந்தால் பொறுத்து அருள்வாய் என்று கூறி விட்டு 


உத்தமன்  = உத்தமனான வீடணன் 

அந் நகர் ஒழியப் போயினான். = அந்த ஊரை விட்டு விலகிப் போனான் 


இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது என்ன என்றால், 


வீடணன் திட்டமிட்டு இராவணனை விட்டு விலகினான். இராவணனுக்கு துரோகம்  செய்தான் என்று ஒரு குற்றச்சாட்டு வீடணன் மேல் உண்டு. 

காப்பியத்தை ஊன்றி படித்தால் தெரியும், அவன் இராவணனை விட்டு போக திட்டம் தீட்ட வில்லை. 


அவனை இராவணன் விரட்டி விட்டான் என்பதே உண்மை. 

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது , நான் மீண்டும் மீண்டும் சொல்வது என்ன என்றால், நாம் நம் தகுதியை அந்த நூலின் உயரத்துக்கு  உயர்த்த முயற்சி செய்ய வேண்டுமே அல்லாமல், நம் நிலைக்கு நூலை கீழே கொண்டு வரக் கூடாது. 

அரை குறையாக படித்து விட்டு, வீடணன் திட்டம் போட்டே இராவணனை கவிழ்த்து விட்டான், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தான், செஞ்சோற்று கடனை மறந்தான்  என்றெல்லாம் வாய்க்கு வந்தமாதிரி  பேசிக் கொண்டு திரிகிறார்கள். 


வீடணனை தன்னை விட்டு  விலக்கியது இராவணனே.


வீடணன் செய்தது சரியா தவறா என்பதல்ல வாதம். வீடணன் திட்டமிட்டு இராவணனை வஞ்சனை செய்யவில்லை.  


"என் முன் நின்றால் கொன்று விடுவேன்..போய் விடு" என்று இராவணன் வீடணனை  விலக்கினான். 


அது தான் நடந்தது. 



Saturday, October 24, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?

அறிவுரை கூறிய வீடணனை இராவணன் கொடும் சொல் கூறி விரட்டி விடுகிறான். வானில் நின்று வீடணன் மேலும் கூறுகிறான். 


"இராவணா, நீ வாழ்க. நான் சொல்வதைக் கேள். உன் வாழ்க்கை உயர நான் வழி சொல்கிறேன். நீண்ட நாள் வாழும் வரம் பெற்ற நீ புகழோடு வாழ வேண்டாமா?  தீயவர்கள் சொல் கேட்டு உனக்கு நீயே கெடுதல் தேடிக் கொள்ளாதே.  அறம் பிழைத்தவருக்கு வாழ்க்கை இருக்குமா? சிந்தித்துப் பார் "


பாடல் 


'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,

கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?

வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_24.html

pl click the above link to continue reading


'வாழியாய் ! = நீ வாழ்க 

கேட்டியால்: = நான் சொல்வதைக் கேள் 

வாழ்வு கைம்மிக = வாழ்வு உயர்வு அடைய 

ஊழி காண்குறு = ஊழிக் காலம் வரை நிலைத்து நிற்கும் 

நினது = உனது 

உயிரை  = உயிரை, வாழ் நாளை 

ஓர்கிலாய், = நீ நினைத்துப் பார்க்கவில்லை 

கீழ்மையோர் சொற்கொடு  = தீயவர்கள் சொல் கேட்டு 

கெடுதல் நேர்தியோ ? = உனக்கு நீயே கேட்டை தேடிக் கொள்ளப் போகிறாயா 

வாழ்மைதான் = வாழ்க்கைதான் 

அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? = அறம் பிழை விட்டவர்களுக்கு வாய்க்குமோ?

இராவணனுக்கு தெரியாத அறம் அல்ல. 


நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவை உடையவன் அவன். 


இருந்தும்  செய்வது தவறு என்று அவனுக்கு ஏன் தெரியவில்லை? 

அல்லது, தெரிந்தும் ஏன் செய்தான்?


இராவணனை விட்டு விடுவோம். அவன் கதை முடிந்த கதை. 

நம் கதையைப் பார்ப்போம்.


நமக்குத் தெரிந்தே நாம் பல தவறுகளைச் செய்கிறோம். அல்லது நல்லதை செய்யாமல் விடுகிறோம். 

ரொம்ப சாப்பிடக் கூடாது, புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு, சர்க்கரை விஷம், எல்லாம் தெரியும். இருந்தும் செய்கிறோம் அல்லவா?


உடற் பயிற்சி முக்கியம். உணவு கட்டுப்பாடு முக்கியம். நிறைய நீர் குடிக்க வேண்டும். நல்ல ஒய்வு வேண்டும். 


செய்கிறோமா? 


இல்லையே. 


பின், இராவணனை குறை சொல்லி என்ன பயன்?  தெரிந்தே தவறுகளை நாம் செய்வது போல  அவனும் செய்தான். 


இது எவ்வாறு நிகழ்கிறது? ஏன் நிகழ்கிறது? 

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். செய்ய மாட்டேன் என்கிறோம். ஏன்?


அது தெரிந்து விட்டால், இராமாயணம் படித்த புண்ணியம் வந்து சேரும்.

ஏன் நாம் நம்மை வழி நடத்த முடியவில்லை? நாம் நினைப்பதை நம்மால் ஏன் செய்ய முடியவில்லை?

ஏன் தெரியுமா? ....


Thursday, October 22, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உறுதி ஓதினான்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உறுதி ஓதினான் 


வீடணனின் அறிவுரைகள் இராவணன் அறிவில் ஏறவில்லை. வீடணனை பலவாறாக பழித்து "என் கண் முன் நில்லாதே...நின்றால் உன்னை கொன்று விடுவேன்" என்று சொல்லி துரத்துகிறான் இராவணன்.

வீடணனுக்கு வேறு வழி இல்லை. 

தன்னுடைய அமைச்சர்களோடு வானில் செல்கிறான். போவதற்கு முன்பும் பலப் பல அறங்களை எடுத்துச் சொல்கிறான். 


காமத்தின் முன் அறிவு எங்கே நிற்கும்? இராவணன் படித்த வேதங்களும், அவன் பெற்ற வரங்களும், அவன் வீரம் எல்லாம் காமத்தின் முன் மண்டியிட்டன . 


பாடல் 

என்றலும், இளவலும் எழுந்து, வானிடைச்

சென்றனன்; துணைவரும் தானும் சிந்தியா -

நின்றனன்; பின்னரும், நீதி சான்றன,

ஒன்று அல பலப்பல, உறுதி ஓதினான்;


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_98.html

pl click the above link to continue reading 

என்றலும் = என் கண் முன் நில்லாதே என்று இராவணன் சொன்னதும் 

இளவலும் = வீடணனும் 

எழுந்து, வானிடைச் சென்றனன்; = எழுந்து, வானத்தில் சென்றான் 

துணைவரும்  = அவனுடைய அமைச்சர்களும் 

தானும் = அவனும் (வீடணனும்) 

சிந்தியா நின்றனன் = சிந்தித்து நின்றான் 

பின்னரும் = அதன் பின்பும் 

நீதி சான்றன = நீதி சார்ந்த 

ஒன்று அல பலப்பல = ஒன்று அல்ல, பலப் பல 

உறுதி ஓதினான்; = உயர்ந்த விஷயங்களைச் சொன்னான் 


அது என்ன "சிந்தியா நின்றான் ". சிந்திக்காமல் நின்றான் என்று அர்த்தமா? இல்லை. 

கொஞ்சம் இலக்கணம் படிப்போம். இலக்கணம் படித்தால், இந்தப் பாடல் மட்டும் அல்ல,  இலக்கியத்தில் எந்த இடத்தில் இது வந்தாலும், புரிந்து கொள்ள உதவும். 


தமிழில் சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 


ஒன்று பெயர்ச் சொல், இன்னொன்று வினைச் சொல். 


வினைச் சொல் காலம் காட்டும் என்பது விதி. 


எந்த வினைச் சொல்லையும் 6 பகுதிகளாகப் பிரிக்கலாம். 


1. பகுதி 

2. விகுதி 

3. இடை நிலை 

4. சாரியை 

5. சந்தம் 

6. விகாரம் 


என்பவை அந்த ஆறு. 


இதில் பகுதி, இடைநிலை, விகுதி என்ற மூன்றை மட்டும் இப்போது படிப்போம். 


ஒரு வினைச் சொல் எப்படி இருக்கும் என்றால் 


பகுதி + இடை நிலை + விகுதி 

என்று இருக்கும். 


தமிழில் உள்ள அனைத்து வினைச் சொற்களும் இந்த மூன்று பகுதிகளாகத்தான் இருக்கும். 


உதாரணமாக 

படித்தான் = படி + (த் என்பது ந் ஆனது விகாரம்) + த் + ஆன் 

இதில் 

"படி" என்பது பகுதி 

"த்" என்பது இடைநிலை 

"ஆன்"  என்பது விகுதி 


வந்தான் = வா + (த்) + த் + ஆன் 


ஓடினான் = ஓடு + இன் +ஆன் 


ஆடினாள் = ஆடு + இன் + ஆள் 


வணங்கினார் = வணங்கு + இன் + ஆர் 


மேய்ந்தது = மேய் + (த்) + த் + அது 


இப்படி எந்த வினைச் சொல்லை எடுத்துக் கொண்டாலும், இந்த மூன்று பிரிவில் அடக்கி விடலாம். 


இது வரை புரிகிறதா? 


புரிந்தால், நாளை மேலே தொடருவோம். 

சந்தேகம் இருந்தால்,  அதை தெளிவு படுத்தி விட்டு மேலே செல்வோம். 





திருக்குறள் - வான் சிறப்பு - உடற்றும் பசி

திருக்குறள் - வான் சிறப்பு - உடற்றும் பசி


வான் சிறப்பில் மூன்றாவது குறள்.


இந்த பூமி கடலால் சூழப் பட்டது. கடல் என்றால் நீர் தானே. மழை பெய்யாவிட்டால் என்ன, எவ்வளவு நீர் இருக்கிறது கடலில். சமாளித்துக் கொள்ள முடியாதா என்றால், முடியாது. 


மழை பெய்யாவிட்டால், இந்த கடல் சூழ்ந்த உலகில் பசி எல்லோரையும் வருத்தும். 


பாடல் 


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உண்ணின்று உடற்றும் பசி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_22.html


Pl click the above link to continue reading


விண்ணின்று = விண்ணில் இருந்து 

பொய்ப்பின் = மழை பெய்யாமல் பொய்த்து விட்டால் 

விரிநீர் = விரிந்த நீரை உடைய கடல் 

வியனுலகத்து = பரந்த உலகில் 

உண்ணின்று = உணவு இன்றி 

உடற்றும் பசி. = வருத்தும் பசி 


பசி என்றால் ஏதோ கொஞ்ச பொறுத்துக் கொண்டால், உணவு தயாராகி விடும்  என்றல்ல.  உணவே வராது. உணவே எங்கும் கிடையாது.


எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்? வீட்டில் உணவுப் பொருள்கள் இல்லை. அரிசி, புளி , கோதுமை, காய் கறிகள், பழங்கள், எண்ணெய் என்று எதுவும் இல்லை. கடைகளிலும் இல்லை. எவ்வளவு பணம் கொடுத்தாலும்  உணவுப் பொருள்கள் இல்லை.  

இன்று போய் விளைவித்தாலும், ஒரு வாரம் பத்து நாள் ஆகும். மழை இல்லாவிட்டால்  அதுவும் முடியாது. 


அப்படி ஒரு பசி வந்தால், அனைத்து உயிர்களும் பசியால் வாடி இறந்து போகும் அல்லவா? 

இந்த உலகில் உயிர்கள் இருக்கக் காரணம், மழை தான். 


மழை என்றால் ஏதோ நீர் ஆவியாகிறது, மழை வருகிறது என்று நாம் எளிதாக நினைத்துக் கொள்கிறோம். அப்படி அல்ல. 

மழை என்பது உயிர். 

நம் உறவுகள் அனைத்தையும் நம்மோடு சேர்த்து வைத்து இருப்பது, மழை.

இந்த உலகம் உயிர்களோடு, அழகாக இருக்கக் காரணம் மழை.

எவ்வளவு ஆழ்ந்து சிந்தித்து எழுதி இருக்கிறார். 

மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும். 





Wednesday, October 21, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒல்லை நீங்குதி

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒல்லை நீங்குதி 

சீதையை விட்டு விடு என்று எவ்வளவோ வீடணன் சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாக இல்லை. மாறாக, வீடணனை பழித்துப் பேசுகிறான். 


கடைசியில், "ஒழிஞ்சு போ. என் கண் முன்னால நிக்காத" என்று அவனை விரட்டி விடுகிறான். 


பாடல் 

பழியினை உணர்ந்து, யான் படுக்கிலேன், உனை; 

ஒழி, சில புகலுதல்; ஒல்லை நீங்குதி; 

விழி எதிர் நிற்றியேல், விளிதி' என்றனன்- 

அழிவினை எய்துவான், அறிவு நீங்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_21.html

click the above link to continue reading



பழியினை உணர்ந்து = உடன் பிறந்தவனைக் கொன்றான் என்ற பழி வரும் என்று உணர்ந்து 

யான் படுக்கிலேன், உனை = உன்னைக் கொல்லாமல் விடுகிறேன் 

ஒழி, சில புகலுதல்; = ஒழிந்து போ. எனக்கு அறிவுரை சொல்வதை விடு. 

ஒல்லை நீங்குதி;  = ஒல்லை என்றால் சீக்கிரம். இங்கிருந்து உடனே போய் விடு 

விழி எதிர் நிற்றியேல் = என் கண் முன் நிற்காதே 

விளிதி' என்றனன்- = நின்றால் உன்னைக் கொன்று விடுவேன் என்றான் 

அழிவினை எய்துவான் = அழிவை அடைய இருப்பவன் 

அறிவு நீங்கினான். = அறிவு இல்லாதவனான இராவணன் 


வீடணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்தான் என்பது நமக்குத் தெரியும். 


வீடணன் நேரே சென்று அடைக்கலம் அடைந்தானா?


முதலில் இராவணன், வீடணனை கோபித்து விரட்டி விடுகிறான். 


வீடணன் தனித்து விடப் படுகிறான். அவன் தனித்து இருந்து இருக்கலாம் அல்லது  இராமனிடம் சென்று அடைக்கலம் அடைந்து இருக்கலாம். 


இராவணன் "என் கண் முன்னே நிற்காதே, நின்றால் உன்னைக் கொன்று விடுவேன்,  ஓடிப் போ " என்று விரட்டிய பின் வீடணன் என்ன செய்தான்?


நேரே இராமனிடம் போனானா?


Tuesday, October 20, 2020

திருக்குறள் - எல்லாம் மழை

 திருக்குறள் - எல்லாம் மழை 

வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் முதல் குறளில் மழையை அமுதம் என்று கூறினார். 

அடுத்த குறள். 

சரியான tongue twister 


பாடல் 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

 பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_20.html

(please click the above link to continue reading)


துப்பார்க்கு = துய்ப்பவர்களுக்கு, அதாவது அனுபவிப்பவர்களுக்கு.

துப்பாய = வலிமை, சத்து ஆகி. 

துப்பாக்கி = துப்பாக்கி என்றால் ஏதோ சுடுவதற்கு பயன்படும் AK 47 போன்ற பொருள் அல்ல. துப்பு + ஆக்கி. துய்க்கக் கூடிய உணவாகி 

துப்பார்க்கு = மீண்டும் துப்பார்க்கு என்கிறார். அதாவது, துய்ப்பவர்களுக்கு 

துப்பாய தூஉம் = துய்க்கும் படியாக இருப்பதும் 

மழை = மழை 

ஒண்ணும் புரியலைல?

ரொம்ப எளிமையானது. 


அதாவது, மழை உணவை உண்டாக்கவும் பயன்படுகிறது, உணவாகவும் இருக்கிறது. 


எப்படி என்று பார்ப்போம். 

அரிசி, கோதுமை, காய் கறிகள், கனிகள் எல்லாம் வளர வேண்டும் என்றால், மழை வேண்டும். 

மழை இல்லாவிட்டால் என்ன, நாங்க நிலத்தடி நீரை பயன் படுத்தி விவசாயம் செய்வோமே  என்று நினைக்கலாம். 

செய்யலாம். ஆனால், ரொம்ப நாளைக்கு செய்ய முடியாது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய் கொண்டே இருக்கும்.  நாளடைவில் தீர்ந்து போகும். 

பயிர் இல்லாவிட்டால் என்ன, நாங்கள் அசைவ உணவு சாப்பிட்டுக் கொள்வோம் என்று நினைக்கலாம்.  அசைவ உணவு வேண்டும் என்றால் அதற்கு வேண்டிய விலங்குகள் உயிர் வாழ வேண்டும். அவை உயிர் வாழ காய் கறிகள், நெல், புல் எல்லாம் வேண்டும். மழை இல்லாவிட்டால், அந்த விலங்குகளும்  இறந்து போகும். 


நமக்கு உணவு வேண்டும் என்றால், உணவை செய்ய வேண்டும் என்றால் மழை வேண்டும். 

ஒரு கவளம் உணவை கையில் எடுக்கும் போது, எங்கோ, எப்போதோ பெய்த மழை  நினைவு வர வேண்டும். 

உண்பவர்களுக்கு உணவை உண்டாக்க பயன் படுகிறது. 

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி.

உண்பவர்களுக்கு வலிமை தரும் உணவாக்கி. 


அடுத்தது, மழை உணவை உண்டாக்க மட்டும் அல்ல, தானே உணவாகவும் இருக்கிறது. 

அது எப்படி?

என்னதான் உயர்ந்த உணவாக இருந்தாலும், தண்ணி இல்லாமல் விருந்தை உண்ண முடியுமா?  

உடம்புக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் நீரும் முக்கியம். ரொம்ப தாகம் எடுக்கும் போது, இரண்டு இட்லி கொஞ்சம் கட்டி சட்னி வைத்து சாப்பிட்டால்  தாகம் அடங்குமா?

என்ன உணவு உண்டாலும், எவ்வளவு சிறப்பான, வலிமை மிக்க உணவு உண்டாலும், நீரும் வேண்டும். 

நீரும் ஒரு உணவு போன்றது.

நமது நாக்கு எப்போதும் ஈரமாக இருக்கும். நாக்கில் நீர் இல்லை என்றால் உணவை உண்ண முடியாது. சுவை தெரியாது.உமிழ் நீர் சுரக்காது. உணவு தொண்டை வழியே   உள்ளே போகாது. 

உணவை உண்ண , உண்ட உணவை ஜீரணம் செய்ய நீர் வேண்டும். 


இவை அன்றி, நீர் உணவாகவும் இருக்கும். 

துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

துய்ப்பவர்களுக்கு உணவு ஆவதும் மழை. 

துய்ப்பவர்களுக்கு உணவை உண்டாக்குவது, உணவாகவே இருப்பதும் , எல்லாம் மழை. 

உணவு இல்லாமல் ஒரு வாரம் கூட இருந்து விடலாம். நீர் இல்லாமல் இருக்க முடியுமா? 

துப்பார்க்கு, துப்பு ஆய துப்பு ஆக்கி 

துப்பார்க்கு, துப்பு ஆவதும் மழை. 

என்று வாசித்தால் எளிதாக புரியும். 

நல்லா இருக்குல ?






Monday, October 19, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இடர் யார் படுவார் ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - இடர் யார் படுவார் ?


துன்பத்தை சுமக்க யார் தான் விரும்பவார்கள். ஒருவரும் விரும்ப மாட்டார்கள். அப்படியென்றால், துன்பம் வந்தால் என்ன செய்வது? அதை தூக்கி சுமக்கத்தானே வேண்டி இருக்கிறது. வேண்டாம் என்றால் அது நம்மை விட்டு விட்டு ஓடி விடுமா? 

ஒரு வேளை, அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட வழி இருந்தால்? 

உடனே அதைச் செய்து, துன்பத்தில் இருந்து விடுபட முயல்வோம் அல்லவா?

அப்படி ஒரு வழி இருக்கிறது என்கிறார் பொய்கை ஆழ்வார். 

முன்பு ஒரு முறை, ஒரு யானையை ஒரு முதலை பிடித்துக் கொண்டது. அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட, அந்த யானை திருமாலை கூப்பிட்டது. அவரும் வந்து அதன் இடர் களைந்தார். யானைக்கே உதவி செய்தார் என்றால் நமக்கு செய்யமாட்டாரா?


பாடல் 


இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்

தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை

பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,

கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_53.html

click the above link to continue reading


இடரார் படுவார்? = இடர் (துன்பம்) யார் படுவார் ?

எழு நெஞ்சே = விழித்து எழு என் நெஞ்சே 

வேழம் = யானை 

தொடர்வான் = தொடர்ந்து வந்து 

கொடுமுதலை = கொடுமையான முத்தலையை 

சூழ்ந்த = நெருங்கி வந்து  கொன்ற 

 படமுடை = பெரிய படம் உடைய 

பைந்நாகப் பள்ளியான் = நாகத்தை படுக்கையாக கொண்டவன் 

பாதமே கைதொழுதும், = பாதத்தை கை தொழுது 

கொய்ந் = கொய்த 

நாகப் பூம் = நாகலிங்க பூவின் 

போது  = மொட்டை 

கொண்டு = கொண்டு 


இடர் யார் படுவார்? வேற வேலை இல்லை?




கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறப்பு மாறினை

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறப்பு மாறினை 

பெரிய காவியங்களை படிக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒரு முக்கிய காரணம், அதில் உள்ள முக்கிய கதா பாத்திரங்கள் எப்படி மாறுகின்றன என்று அறிந்து  கொள்வது. எது அந்த கதா பாத்திரங்களை நடத்துகிறது, எது அவர்களை மாற்றுகிறது, அவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். 

சில கதா பாத்திரங்கள், மாறவே மாறாது. உதாரணமாக, இராவணன். யார் என்ன சொன்னாலும், நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று ஒரு பிடிவாதம். 

இராமனைப் பார்த்தால், வசிட்டர் சொன்னார் பெண்ணைக் கொல்லக் கூடாது என்று . விஸ்வாமித்ரர் கூறினார் தாடகை என்ற பெண்ணைக் கொல் என்று. இராமன் பிடிவாதம் பிடிக்கவில்லை. விச்வாமிதரன் கூறினால் அது சரியாக இருக்கும் என்று நினைத்து தான் கொண்ட கொள்கையை மாற்றுகிறான். 


வாலியை மறைந்து இருந்து கொன்றான். இராவணனிடம், இன்று போய் போருக்கு நாளை வா என்றான். 

ஆயிரம் படித்து இருந்தாலும், மனைவியை மகிழ்விக்க, பொய் என்று தெரிந்தும் பொன் மான் பின் போனான். 

அறம் பிறழ்வதை கண்ட வீடணன் மாறுகிறான். கும்ப கர்ணன் மாறவில்லை. 

விதிக்கும் விதி காணும் என் விற் தொழில் காண்டி என்று புறப்பட்ட இலக்குவன், "யாரே விதியை வெல்ல வல்லார்" என்று மண்டியிடுகிறான். 


காலம், அதன் ஓட்டத்தில் எல்லோரையும் ஒரு புரட்டு புரட்டிவிட்டுப் போகிறது. 

என்று சரி என்று தோன்றுவது நாளை தவறென்று தோன்றும். இன்று தவறு என்று தோன்றுவது நாளை சரி என்று தோன்றினாலும் தோன்றலாம். 

யார் அறிவார்? 

இதுதான் சரி என்று அடம் பிடிப்பது எவ்வளவு சரி? 

நான் எது சரி, எது தவறு என்று சொல்ல வரவில்லை.  நாம் கவனிக்க வேண்டும். எது மக்களை மாற்றுகிறது என்று. எவ்வளவு தூரம் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்று. 

சீதையை விட்டு விடு என்று கூறிய வீடணன் மேல் கோபம் கொண்டு இராவணன் வசை மாறி பொழிகிறான். 


"நீ ஒரு சரியான பயந்தாங்கொள்ளி . உன்னால் யுத்தம் செய்ய முடியாது. அதுக்கு நீ ஆள் இல்லை.  மனிதர்களை தஞ்சம் அடைந்து விட்டாய். அவர்களை சார்ந்து வாழ நினைக்கிறாய். அரக்க குலத்தில் பிறந்த நீ குலம் மாறிவிட்டாய். உன்னுடன் வாழ்வது நஞ்சு நிறைந்த பாம்புடன் வாழ்வது போலாகும்" என்று கோபத்தில் குமுறுகிறான் இராவணன்.


பாடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_19.html

(please click the link above to continue reading)


அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை 

தஞ்சு என மனிதர் பால் வைத்த சார்பினை; 

வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாற்றினை 

நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ?


பொருள் 


அஞ்சினை = அச்சம் கொண்டு இருக்கிறாய் 

ஆதலின் = எனவே 

அமர்க்கும் ஆள் அலை  = போர்க்களத்தில் சென்று போரிடும் வீரம் உன்னிடம் இல்லை. 

தஞ்சு என = தஞ்சம் என்று 

 மனிதர் பால் வைத்த சார்பினை;  = மனிதர்களை சார்ந்து நிற்கிறாய் 

வஞ்சனை மனத்தினை = வஞ்ச மனம் கொண்டவன் நீ 

பிறப்பு மாற்றினை  = உன் குலத்துக்கு ஏற்ற குணம் உன்னிடம் இல்லை 

நஞ்சினை  = நஞ்சு உள்ள பாம்பினை 

உடன் கொடு வாழ்தல் நன்மையோ?  = உடன் வைத்துக் கொண்டு வாழ்வது என்ன நன்மை தரும்? ஒரு நாள் அல்லது மற்றொரு நாள் அது கட்டாயம் விஷத்தை கக்கியே தீரும். அது போலத்தான் நீயும் 

வீடணன் அனைத்தையம் கேட்டுக் கொண்டு இருக்கிறான். 

அவனுள் மாற்றம் நிகழ்ந்தது. 

அறிவு வேலை செய்யும் போது மாற்றம் நிகழும். அறிவு உறங்கப் போய் விட்டால், ஒரு மாற்றமும் இல்லை. 

சிலர் இருக்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும், எவ்வளவு படித்தாலும், அறிவில் ஒரு மாற்றமும் இருக்காது. பத்து வயதில் இருந்த அறிவு தான், ஐம்பது வயதிலும். 



Saturday, October 17, 2020

திருக்குறள் - வான் சிறப்பு - அமிழ்தம்

 திருக்குறள் - வான் சிறப்பு - அமிழ்தம் 

மழை பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் நாம் என்ன எழுதுவோம்?

மழை எப்படி உருவாகிறது, நீர் ஆவியாவது, அது மேகமாக மாறுவது, பின் அது குளிர்ந்து மழையாகப் பெய்வது பற்றி எழுதுவோம். எங்கே எவ்வளவு பெய்கிறது போன்ற குறிப்புகளை சேர்க்கலாம்.

மழை பற்றி வள்ளுவர் 10 குறள் எழுதி இருக்கிறார். 

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. 


முதல் குறள் , "வானத்தில் இருந்து உலகுக்கு வழங்கி வருவதால், மழை அமுதம் என்று உணரப் படும்" 


பாடல் 

வானின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_17.html


(please click the link above to continue reading)


வானின்று = வானத்தில் இருந்து 

உலகம் = உலகிற்கு 

வழங்கி வருதலால் = கொடுத்து வருவதால் 

தான் = அது 

அமிழ்தம் = அமிழ்தம் 

என்றுணரற் பாற்று = என்று உணரப் படுகிறது. 


சரி. இதில் என்ன இருக்கிறது? மழை நல்லது தான், அதை அமிழ்தம் என்கிறார். இதில் என்ன பெரிய  விஷயம் இருக்கிறது ?


அர்த்தத்துக்கு அப்புறம் வருவோம். 

மொத்தம் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. இதில் வான் சிறப்பு என்ற மழை பற்றிய அதிகாரத்தை எங்கே வைக்கலாம்?


எங்க வச்சா என்ன என்று நினைக்கக் கூடாது. ஒரு முறை வேண்டும் அல்லவா? 

காமத்துப் பாலில் கொண்டு போய் வான் சிறப்பு வைக்க முடியுமா?

இரண்டாவது அதிகாரமாக இதை வைக்கிறார். 

கடவுள் வாழ்த்து முடிந்த பின் அடுத்ததாக இதை வைக்கிறார். 

என்ன அர்த்தம்?

கடவுளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது மழை என்று அதன் முக்கியத்துவத்தை  காட்ட வேண்டி, இந்த அதிகாரத்தை அங்கு கொண்டு போய் வைக்கிறார். 

அடுத்ததது, 

"உலகுக்கு"...உலகம் என்றால் என்ன? உலகம் என்றால் இங்கு உயிரினங்களை குறிப்பது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகள்,பறைவைகள், தாவரங்கள்  என்று அனைத்து உயிர்களுக்கும் மழை வேண்டும். எனவே "உலகுக்கு"  துன்று கூறுகிறார். 


"அமிழ்து"...அமிழ்தம் என்றால் உயிரையும், உடலையும் ஒன்றாக வைத்த்து இருப்பது.  அதாவது அமிழ்தம் உண்டவர்கள் சாக மாட்டார்கள். அவர்களின் உடலும், உயிரும் ஒன்றாகவே இருக்கும். 


ஆஹா , மாட்டுனார் வள்ளுவர். மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் சாகமலா இருக்கிறார்கள். பின்ன எப்படி மழையை அமிழ்தம் அப்படினு  சொல்ல முடியும்? தப்பு தான?  

வள்ளுவர் பிழை செய்வாரா?

ஒரு தனி மனிதன் இறந்து போகலாம். ஆனால், மனித குலம் சாகாமல் உயிரோடு இருக்கிறதே. அதனால் அதை அமுதம் என்றார் . மனித குலம் மட்டும் அல்ல, தாவரங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாம் நிலைத்து அவற்றின் உடலும் உயிருமாக இருக்கிறது அல்லவா? மழை இல்லாவிட்டால், எல்லாம் அழிந்து போகும். எனவே அதை அமுதம் என்றார். 

நமக்கு ஒரு விலைமதிப்பற்ற பொருள் கிடைத்தால் அதை என்ன செய்வோம். அதை எப்படி போற்றி பாதுகாப்போம்? மழை அமுதம் என்றதனால், அது எவ்வளவு உயர்ந்தது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதை போற்றி பாதுகாக்க வேண்டும். 

ஆற்றில் மணல் அள்ளுவது, ஏரியில் பிளாட் போட்டு குடி இருப்பது, கழிவு நீரை குடி நீர் தரும் நீர் நிலைகளில் கொண்டு போய் சேர்ப்பது, வீணாக மழை நீரை கடலில் போய் சேர விடுவது என்பதெல்லாம் மழைக்கு நாம் தரும் மரியாதைகள் அல்ல. அமுதத்தில் அழுக்கு தண்ணீரை விடுவோமா? 

உயிர் காக்கும் அமுதம் போல அதை பாதுகாக்க வேண்டும். 

"வான் நின்று". நின்று என்றால் நிலையாக, உறுதியாக என்று பொருள். எப்போதும் பெய்வதால். ஏதோ அஞ்சு வருடத்துக்கு ஒரு முறை, பத்து வருடத்துக்கு ஒரு முறை என்று இல்லாமல், எல்லா வருடமும் பெய்யும். கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம். ஆனால், வரும்.

"உணரப் படும்" என்றார். சொல்லிப் புரியாது. பார்த்து, அனுபவித்து, உணர வேண்டும். தண்ணீரின் மகத்துவம் அது இல்லாத போது தான் உணர முடியும். தாகத்தில் நாக்கு வரளும் போதுதான் ஒரு குவளை நீரின் அருமை தெரியும். 


ஒரு குறள் இது. இன்னும் ஒன்பது இருக்கிறது. 


சிலிர்கிறது அல்லவா?






Friday, October 16, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் செறுநர் வேண்டுமோ?

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் செறுநர் வேண்டுமோ?

சாகப் போகிறவனுக்கு மருந்து கசக்கும் என்பார்கள். அதாவது இனிப்பு மருந்து கூட கசக்குமாம். 

தீயவர்களுக்கு, நல்லது சொன்னால் கூட, அது அவர்களுக்கு துன்பம் நிறைந்ததாகவே தெரியும். அப்படி தங்களுக்கு துன்பம் தந்தவர்களை அவர்கள் பதிலுக்கு துன்பம் செய்யத் தயங்க மாட்டார்கள். 

எனவே, தீயவர்களிடம் அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. 

அதனால் தான், ஒளவை சொன்னாள், "மற்றவர் தம் கண்ணில் படாது தூரத்து நீங்குவதே நல்ல நெறி" என்று. 


சீதையை விட்டு விடு என்று வீடணன் சொன்னது இராவணன் காதில் ஏறவில்லை. மாறாக அவன் வீடணனின் நல்ல எண்ணத்தை சந்தேகப் படுகிறான். 


"எங்கு வந்த மனிதர்களை நீ விரும்புகிறாய். அவர்களோடு நட்பு பாராட்டுகிறாய். என்னை வெற்றி அடைய நினைக்கிறாய். என்னை வென்று இந்த இலங்கைக்கு அரசனாக நினைக்கிறாய். உன் செயல்கள் எல்லாம் மிக வன்மை உள்ளது. உன்னை போல் ஒருவர் இருந்தால் எனக்கு வேறு ஒரு பகைவர் வேண்டாம். நீ ஒருவனே போதும்"


என்று சுடு சொற்கள் கூறுகிறான். 

பாடல் 

நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை;

எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு

உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;

திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ ?


பொருள் 

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_16.html


நண்ணின = நெருங்கி இங்கு வந்த 

மனிதர்பால் = மனிதர்கள் பால் 

நண்பு பூண்டனை; = நட்பு கொண்டாய் 

எண்ணினை செய்வினை = அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை சிந்தித்து வைத்து இருக்கிறாய் 

 என்னை வெல்லுமாறு = என்னை வெற்றி கொள்ள 

உன்னினை = நினைக்கிறாய் 


அரசின்மேல் ஆசை ஊன்றினை; = இந்த இலங்கை அரசின் மேல் ஆசை வைத்து இருக்கிறாய் 


திண்ணிது உன் செயல் = உறுதியானது உன் செயல் 

பிறர் செறுநர் வேண்டுமோ ? = வேறு பகைவர்களும் வேண்டுமோ? (வேண்டாம் நீ ஒருவனே போதும்) 


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

என்பார் வள்ளுவப் பேராசான். திண்ணியர் என்ற சொல் எப்படி கையாளப் படுகிறது  என்பதற்கு ஒரு உதாரணம்.  

"நீ என்னை வென்று, இந்த அரசை அடையும் முயற்சியில் திண்ணமாக இருக்கிறாய் " என்று சொல்கிறான்  இராவணன். 



Thursday, October 15, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உன் புகல் அவர்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உன் புகல் அவர் 

சீதையை சிறை பிடித்தது அறம் அன்று, அவளை விட்டு விடு என்று இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறினான் வீடணன். அத்தனையும் வீணாகப் போயிற்று. 

கோபத்தில் இராவணன், வீடணனை தகாத வார்த்தைகள் பேசுகிறான். 


"முன்பே அவர்கள் (இராம இலக்குவனர்கள்) மேல் உனக்கு அன்பு உண்டு. அந்த பகை கொண்ட மனிதர்கள் மேல் உள்ள அன்பினால் உனக்கு எலும்பு உருகுகிறது. அவர்களை போற்றுகிறாய். உனக்கு புகல் இடம் அவர்கள்தான். நான் வேற என்ன சொல்ல" 


பாடல் 

முன்புற அனையர்பால் அன்பு முற்றினை;

வன் பகை மனிதரின், வைத்த அன்பினை;

என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;

உன் புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ ?

பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_15.html


(pl click the above link to continue reading)

முன்புற = முன்பே 

அனையர்பால் = அவர்களிடம் 

அன்பு முற்றினை; = உனக்கு நிறைய அன்பு உண்டு 

வன் பகை  = கொடுமையான பகை 

மனிதரின் = மனிதர்கள் மேல் 

 வைத்த அன்பினை = வைத்த அன்பினால் 

என்பு உற உருகுதி = எலும்பு வரை உருகுகிறாய் 

அழுதி = அன்பின் மிகுதியால் அழுகிறாய் 

ஏத்துதி; = அவர்களைப் போற்றுகிறாய் 

உன் புகல் அவர் = அவர்கள்தான் நீ சென்று புகல் அடைய சிறந்த இடம் 

பிறிது உரைக்க வேண்டுமோ ? = வேறு என்ன சொல்ல?


வீடணன் சொன்னது, "சீதையை விட்டு விடு" என்று. 


பதிலுக்கு இராவணன் சொல்லுவது "இராமனிடம் சரண் அடைந்து விடு"  என்று. 


கண் முன்னே நின்ற பாரா பொருள் வீடணனுக்கு கடவுளாகத் தெரிந்தது. இராவணனுக்கு மனிதனாகத் தெரிந்தது. 


பார்க்கும் பார்வையில் இருக்கிறது எல்லாம். 


கண்ணனை இடையனாக பார்த்தான் துரியோதனன் என்ற மடையன். 

இராமனை மனிதனாகப் பார்த்தான் இராவணன் என்ற ஒரு அரக்கன். 

முருகனை குழதையாகப் பார்த்தான், சூரபத்மன். 

அழிந்தார்கள் என்பது வரலாறு. 


வீடணன், இராமனிடம் அடைக்கலம் போக வேண்டும் என்ற முடிவை முதலில் எடுத்தது  இராவணன். "உனக்கு அவர்கள்தான் புகலிடம்" என்று வீடணனிடம் முதலில் கூறியது இராவணன். 

                               

காப்பிய நீரோட்டம் எப்படி போகிறது பாருங்கள். 

உன்னிப்பாக கவனித்தால் இந்த இடத்தில் காப்பிய ஆறு சற்று வழி மாறுவது  தெரியும். 

வீடணனை, இராமனை நோக்கி நகர்த்துகிறான் இராவணன்.

மேலும் எப்படி போகிறது என்று சிந்திப்போம். 







Wednesday, October 14, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழவோ கருத்து ?

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழவோ கருத்து ?


சீதையை விட்டு விடும்படி வீடணன் இராவணனுக்கு எவ்வளவோ சொன்னான். இரணியன் கதையைக் கூறினான். 

இராவணன் ஏற்கவில்லை. 

இரணியன் கதையை அப்படியே தலை கீழாக புரிந்து கொள்கிறான் இராவணன்.


இராவணன் கூறுகிறான் 


"எப்படி தந்தை இறந்த பின் பிரகலாதன் அரசை ஏற்று அனுபவித்தானோ, அது போல நான் தோற்று இறந்த பின் இந்த அரசை நீ அனுபவிக்கலாம் என்று நினைக்கிறாய். அது நடக்காது" என்று 


என்ன செய்வது. நல்லது கூறினாலும், அதை அப்படியே தலை கீழாக மாற்றி தவறாக புரிந்து கொள்வது இன்றும் நடக்கிறது. 


உயந்த கருத்துகளை படிக்கும் போது, நம்மை அந்த அளவுக்கு நாம் உயர்த்திக்கொள்ள முயல வேண்டுமே அன்று அவற்றை நம் நிலைக்கு கீழே இரக்கக் கூடாது. 


பெரிய நூல்களை இப்படி ஜனரஞ்சகமாக எழுதுவது சில சமயம் தவறோ என்று தோன்றும். இவற்றைப் படிக்கும் சிலர் என்னிடமே கேட்டு இருக்கிறார்கள், "வள்ளுவர்  அப்படி சொன்னது தவறு இல்லையா?" என்று.  அதாவது, வள்ளுவரை விட  அவர்களுக்கு அறிவு அதிகம் என்று சொல்ல வருகிறார்கள். 

அரக்க குணம். என்ன செய்வது?


பாடல் 


பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என,

சூழ்வினை முற்றி, யான் அவர்க்குத் தோற்றபின்,

ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்தி, பின்

வாழவோ கருத்து ? அது வர வற்று ஆகுமோ ?


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_14.html


(pl click the above link to continue reading)

பாழி சால் = வலிமை மிகக் கொண்ட 

இரணியன் = இரணியனின் 

புதல்வன் = புதல்வன், பிரகலாதன் 

பண்பு என = குணத்தைப் போல 

சூழ்வினை முற்றி = சூழ்ச்சி செய்து 

யான் அவர்க்குத் தோற்றபின் = நான் அந்த இராம இலக்குவனர்களிடம் தோற்ற பின் 

ஏழை = கோழை, ஏழையான நீ 

நீ என் பெருஞ் செல்வம் எய்தி = என்னுடைய அளவவற்ற செல்வத்தை பெற்று 

பின் வாழவோ கருத்து ? = அதன் பின் வாழவா கருதி இருக்கிறாய் 

அது வர வற்று ஆகுமோ ? = அது நடக்க முடியுமா ? (முடியாது என்று கருத்து)


வரம் கேட்டது இரணியன் 

தன்னை வணங்கும்படி எல்லோரையும் இம்சை செய்தது இரணியன் 

இந்தத் தூணில் இருக்கிறானா உன் ஹரி என்று கேட்டவன் இரணியன் 

தூணை பிளந்தவவன் இரணியன் 

நரசிம்மத்தால் கொல்லப்பட்டவன் இரணியன்.


இதில் பிரகலாதனின் பங்கு என்ன? பிரகலாதன் என்ன தவறு செய்தான்?


அதே போல், சீதை மேல் காமம் கொண்டது இராவணன், அவளைத் தூக்கி வந்தது இராவணன்,  அவளை விட மறுத்தது இராவணன். 


இதில் வீடணன் பங்கு என்ன?


தாங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழி போடுவது ஒரு அரக்க குணம் போலும். 


நம்மிடம் அந்தக் குணம் இருந்தால், அது பற்றி சிந்திக்க வேண்டும். 


Tuesday, October 13, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் நிகர்க்க நேர்வரோ

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் நிகர்க்க நேர்வரோ

 

இராவணனுக்கு வீடணன் எவ்வளவோ அறிவுரை கூறுகிறான். இரணியன் மற்றும் பிரகலாதன் கதையைக் கூறுகிறான்.

பதிலுக்கு இராவணன் கேட்கிறான், 


"என்னதான் இருந்தாலும், இரணியன், பிரகலாதனின் தந்தை. தன்னுடைய தந்தையை ஒருவன் வயிற்றைக் கிழித்து குடலை உருவி இரத்தத்தைக் குடிப்பதை கண்டு ஒரு மகனால் மகிழ முடியுமா? ஆனால் பிரகலாதன் மகிழ்ந்தான். தன் தந்தையை கொடூரமாக கொன்றவனை வணங்கினான் பிரகலாதன். அவனைப் போலவே நீயும் நம் பகைவன் பால் அன்பு செய்கிறாய்..." என்று இராவணன் வீடணனைப் பார்த்து கூறுகிறான். 


இராவணன் கூறுவதை மறுக்க முடியாது. அவன் வாதத்தில் ஞாயம் இல்லாமல் இல்லை. 

எல்லா நிகழ்வுக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. 

பாடல் 


ஆயவன் வளர்த்த தன் தாதை ஆகத்தை

மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்

ஏயும் நம் பகைவனுக்கு இனிய நண்பு செய்

நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_13.html

(click the above link to continue reading)


ஆயவன் = அவன் (பிரகலாதன்) 

வளர்த்த தன் தாதை = தன்னை வளர்த்த தந்தையின் 

ஆகத்தை = உடலை 

மாயவன் = திருமால் 

பிளந்திட = பிளக்க 

மகிழ்ந்த மைந்தனும் = அதில் மகிழ்ந்த மைந்தனும் 

ஏயும் = நமக்கு ஏற்பட்ட 

நம் பகைவனுக்கு = நம்முடைய பகைவனான இராமனிடம் 

இனிய நண்பு செய் = இனிய நட்பு பாராட்டும் 

நீயுமே நிகர்;  = நீ தான் அந்த பிரகலாதனுக்கு நிகர் 

பிறர் நிகர்க்க நேர்வரோ = வேறு யார் சமமாவார்கள் ?

அதர்மத்தின் கருவில் தர்மம் பிறக்கிறது. 

இரணியன் வீட்டில் ஒரு பிரகலாதன்.

இராவணன் வீட்டில் ஒரு வீடணன். 

அதர்மம் தன்னை தானே அழித்துக் கொள்ளும். 

இராவணனை அழிக்க வேண்டும் என்று இராமன் அயோத்தியில் இருந்து கிளம்பவில்லை. அவன் பாட்டுக்கு காட்டில் சுத்திக் கொண்டு இருந்தான். 

சூர்பனகை போய் வம்பில் மாட்டி, இராவணனை பலி கொடுத்தாள். 

என்பில் அதனை வெயில் போல காயுமே 
அன்பில் அதனை அறம் 

என்பார் வள்ளுவர். 

சூரிய ஒளியில் புழுக்கள் மாண்டு போகும். புழுவை அழிக்க வேண்டும் என்று சூரியன் வருவது   இல்லை. சூரியனின் நோக்கம் அது அல்ல. புழு தானே வெளியில் சென்று  சூட்டில் மாண்டு போகும். (என்பில் = எலும்பு இல்லாதது - புழு) 

இராமன் என்ற சூரிய ஒளியில் இராவணன் என்ற புழு தானே சென்று மடிந்தது. 

அறம் தேடிப் போனால், அறம்.

கதை தேடிப் போனால், கதை.

கவிதை தேடிப் போனால், கவிதை.

அதுதான் காப்பியம். 

மேலும் படிப்போம். 



Monday, October 12, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய்


சில பேருக்கு நல்லது சொன்னாலும், நாம் சொன்னதை அப்படியே தலை கீழாக மாற்றிப் பொருள் கொண்டு மேலும் தவறு செய்வார்கள். 


தீயவர்களோடு சேராதே என்று சொன்னால், அப்படி நாம் பெறாவிட்டால் அந்த தீயவர்களை யார் திருந்துவார்கள்? நாம் தானே திருத்த வேண்டும். எனவே நான் அவர்களோடு சேருவேன் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.


இரணியன் வரலாற்றை வீடணன் மிக விரிவாகச் சொன்னான். அப்பேற்பட்ட இரணியனை திருமால் அழித்தார். அந்த திருமாலின் அவதாரம்தான் இராமன். எனவே, அவனோடு நீ பகை கொள்ளாதே என்று வீடணன் அறிவுரை கூறினான்.


அதற்கு இராவணன் "...அதான் நீயே சொல்றியே...அவ்வளவு வீரமும் பெருமையும் உள்ள நம் இன முன்னோன் ஒருவனை கொன்றவன் அந்தத் திருமால். அவனோடு நாம் கூட்டு வைக்க முடியுமா? என்ன பேசுகிறாய்" என்று வீடணன் கூறிய அற உரையை அப்படியே மாற்றினான் இராவணன். 


அது மட்டும் அல்ல, உயர்ந்த விஷயங்களை கீழானவர்களுக்கு சொன்னால், அதை அவர்கள் பற்றிக் கொண்டு மேலேற மாட்டார்கள். மாறாக, அந்த உயர்ந்த விஷயங்களையும், அதைச் சொன்னவர்களையும் கீழே இழுக்கப் பார்ப்பார்கள்.  நம்மால் உயர முடியாவிட்டால் என்ன, ஏதாவது குதர்க்கம் பேசி, உயர்ந்த விஷயங்களை நம் உயரத்துக்கு கீழே இறக்கி விடுவோம் என்று முயற்சி செய்வார்கள். சிறு மதி.


இங்கே இராவணனும், அதையே செய்கிறான். அவன் வீடணனைப் பார்த்துக் கூறுகிறான்  "நீ மரணத்தைக் கண்டு பயந்து விட்டாய். அதனால் தான், இராமனுக்கு ஏதுவாகப் பேசுகிறாய்" என்று பழிக்கிறான். 


பாடல் 


 "இரணியன் என்பவன் எம்மனோரினும்

முரணியன்; அவன்தனை முருக்கி முற்றினான்,

அரணியன்" என்று, அவற்கு அன்பு பூண்டனை -

மரணம் என்று ஒரு பொருள் மாற்றும் வன்மையோய் !


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_12.html

Click the above link to continue reading


 "இரணியன் என்பவன் = இரணியன் என்பவன் 

எம்மனோரினும் = நமது முன்னோன் 

முரணியன்; = வலிமை உடையவன் 

அவன்தனை = அவனை 

முருக்கி = கொன்று 

முற்றினான் அரணியன்" = தீர்த்தவன் நமக்கு பாதுகாப்பான அரண் போன்றவன்  

என்று, =என்று 

அவற்கு அன்பு பூண்டனை - அவன் (இராமன்)  மேல் அன்பு கொண்டாய் 

மரணம் என்று ஒரு பொருள் = மரணம் என்ற ஒன்றை 

மாற்றும் வன்மையோய் ! = மாற்றும் வல்லமை படைத்தவனே. அதாவது, கிண்டல் செய்கிறான். நீ மரணத்தை வென்று விடுவாயா என்ற தொனியில். 


கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே என்று சொல்லுவார்கள். அது போல  இராவணனின் மதி கெடுகிறது. 


அடுத்து என்ன ஆயிற்று?



Friday, October 9, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - கோட்டிய சிந்தையான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - கோட்டிய சிந்தையான் 

இலக்கியம் படிக்க பொறுமை வேண்டும். அவசரம் அவசரமாக வாசித்து விட்டுப் போவதற்கு அல்ல இலக்கியங்கள். 

நேரம் ஒதுக்கி, நிதானமாக, ஆழ்ந்து, இரசித்துப் படிக்க வேண்டும். 

மொபைல் screen இல் மேலும் கீழும் இரண்டு இழுப்பு இழுத்து விட்டு, "ஹா இதுதானா " என்று சொல்லி விட்டுப் போக அல்ல இலக்கியங்கள். 


அதில் அழகு உண்டு, உண்மை உண்டு, மனித மனத்தின் பிரதி பலிப்பு உண்டு, அறம் உண்டு, மொழியின் சிறப்பு உண்டு, வாழ்க்கைப் பாடம் உண்டு...

முதல் வாசிப்பில் சில சமயம் இவை பிடி படமால் போகலாம். படிக்க படிக்கப் புதுப் புது அர்த்தங்கள் வரும். 


வீடணன் அடைக்கலம் அடைந்தால் என்ன, அடையாவிட்டால் நமக்கு என்ன. அது தெரிந்து என்ன ஆகப் போகிறது நமக்கு...என்று நினைக்கக் கூடாது. 


அறிவு வளர ஆயிரம் வழிக்கள் இருக்கிறது.  மனம் வளர இலக்கியமும், மதமும் மட்டும் தான் இருக்கின்றன.  அதிலும் மதம் இப்போது பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு இருக்கிறது.  எனவே, நமக்கு கிடைத்தது எல்லாம், இலக்கியம் மட்டும் தான். 


மன வளர்ச்சி பெற, கற்பனை விரிய, எண்ணங்கள் பக்குவப் பட...இலக்கியத்தை  ஆழ்ந்து படிக்க வேண்டும். அனுபவித்து படிக்க வேண்டும். 


அப்படி படிக்க நேரம் இல்லை என்றால், நேரம் கிடைக்கும் போது படிப்பது நலம்.  


கதைக்கு வருவோம்....


இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறுகிறான் வீடணன். பிரகலாதன் கதை பூராவும் சொல்கிறான். (பிரகலாதன் மற்றும் நரசிம்ம அவதாரம் பற்றி தனியே blog எழுதி இருக்கிறேன்.).

அதை எல்லாம் கேட்ட இராவணன் கோபம் கொள்கிறான். 

வரலாற்றில் இருந்து பாடம் படிக்க மறுக்கிறான் இராவணன். எனக்கு அது நிகழாது என்ற இறுமாப்பு. 

குப் பென்று தீ பிடித்தால் எப்படி இருக்குமோ அப்படி கோபம் கொள்கிறான். உருகிய அரக்கு போல அவன் கண்கள் சிவக்கின்றன. சிந்தை எல்லாம் சீதை மட்டுமே. ஒன்றும் அறிவில்  ஏற மறுக்கிறது. 


பாடல் 


கேட்டனன் இருந்தும், அக் கேள்வி தேர்கலாக்

கோட்டிய சிந்தையான், உறுதி கொண்டிலன், -

மூட்டிய தீ என முடுகிப் பொங்கினான் -

ஊட்டு அரக்கு ஊட்டிய அனைய ஒண் கணான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_9.html


click the above link to continue reading

கேட்டனன் = வீடணன் கூறிய அறிவுரைகளை கேட்டான் இராவவனன் 

இருந்தும் = இருந்தாலும் 

அக் கேள்வி தேர்கலாக் = கேட்டதின் பொருள் ஒன்றும் புரியவில்லை. 

கோட்டிய சிந்தையான் = கோட்டம் என்றால் வளைவு. சிந்தனை நேராக இல்லை அவனுக்கு 


உறுதி கொண்டிலன் = வீடணன் கூறியவை எல்லாம் தனக்கு நல்லது என்று உறுதியாக  அவன் நினைக்கவில்லை 


மூட்டிய தீ என = மூட்டப்பட்ட தீ போல 

முடுகிப் பொங்கினான் = சுழன்று எழுந்தான் 


ஊட்டு அரக்கு  = உருகிய அரக்கு  

ஊட்டிய அனைய  ஒண் கணான். = கண்ணில் விட்டது போல சிவந்த கண்களை உடையவன் 


என்னென்ன பாடங்கள்...


முதலாவது, நல்லவர்கள் சொன்ன அறிவுரைகளை மனம் ஏற்காமல் இருப்பது. 

இரண்டாவது, நடந்தவற்றில் இருந்து பாடம் படிக்காமல் இருப்பது 

மூன்றாவது, சிந்தை நேர்மையாக இல்லாமல் இருப்பது 

நான்காவது, கோபம் கொள்வது 


அழிவுக்கு வேறு என்ன வேண்டும்? 


காமம் ஒரு புறம். கோபம் மறு புறம். மூளை வேலை செய்யுமா? 


சரி, அது போகட்டும், அதுக்கும் வீடணன் அடைக்கலத்துக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கே...அது என்னன்னா ....


Thursday, October 8, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒரு முன்னுரை

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - ஒரு முன்னுரை 


வாழ்கிற காலம் எல்லாம் வாழ்ந்து விட்டு, நன்றாக அனுபவித்து விட்டு, போர் என்று வந்த போது, இராவணனை விட்டு விட்டு இராமன் பால் வீடணன் போனது சரியா?  தவறோ சரியோ, இறுதி வரை கூட இருந்திருக்க வேண்டாமா?


என்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்று வள்ளுவம் பேசுகிறதே. 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_8.html

Pl click the above link to continue reading


ஊருக்கு ஒரு ஞாயம், இராமன் அடியார்களுக்கு ஒரு ஞாயமா? என்ற கேள்வி பிறக்காமல் இல்லை. 

கும்பகர்ணனும், இந்திரஜித்தும் இராவணனுடன் போரிட்டு உயிர் விட்டார்கள். வீடணன் மட்டும் இராவணனை விட்டு விட்டு இராமன் பக்கம் போய் விட்ட்டான்.


போனது மட்டும் இல்லை, இராவணனைப் பற்றிய இரகசியங்களை எல்லாம் இராமானுக்குச் சொல்லித் தந்தான். இது எந்த ஞாயத்தில் சேர்ந்தது? 


இது துரோகம் இல்லையா? உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த வேலை இல்லையா?


இப்படி ஒரு நிகழ்வு ஏன் நிகழ்ந்தது? இதன் மூலம் காப்பியம் நமக்குச் சொல்ல வரும்  செய்திதான் என்ன?


வாருங்கள், ஆராய்வோம்.



Monday, October 5, 2020

திருக்குறள் - நாடு

 திருக்குறள் - நாடு 

தமிழ் படித்து என்ன பலன்? அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நலம் தெரியும், அவர்கள் வாழ்ந்த முறை தெரியும். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? 

நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான அறிவியல், பொருளாதாரம், கணிதம், போன்றவற்றைப் படித்தால் ஏதாவது வேலை கிடைக்கும். நாலு காசு பார்க்கலாம். இல்லையா?


அது ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம். 

ஒரு நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சில குறிப்புகள் தருகிறார். அவை என்னென்ன  என்று பார்ப்போம்.

பாடல் 

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_5.html

(click the above link to continue reading)


தள்ளா விளையுளும் = குறைவில்லாத விளைச்சலை செய்யும் உழவர்களும் 

தக்காரும் = அற வழியில் நிற்கும் சான்றோர்களும் 

தாழ்விலாச் செல்வரும் = குறைவில்லாத செல்வர்களும் 

சேர்வது நாடு = சேர்ந்து இருப்பது நாடு 


போதுமா ? இந்த மூன்று பேர் மட்டும் இருந்தால் போதுமா? அது ஒரு சிறந்த நாடாகி விடுமா? 


பொருளாதாரத்தின் அடிப்படை சித்தாந்தம் என்ன என்றால் எதை உற்பத்தி செய்வது, எவ்வளவு உற்பத்தி செய்வது, யார் உற்பத்தி செய்வது, யாருக்காக உற்பத்தி செய்வது, உற்பத்தி செய்ததை என்ன விலைக்கு விற்பது? 

இது ஒரு மிக மிக அடிப்படையான  கேள்வி. 

இந்தக் கேள்விகளுக்கு விடை காண பொருளாதாரத்தில் பல கோட்பாடுகள் உண்டு.


முதலாளித்துவம் (capitalism ) என்ற கோட்பாட்டில் எல்லாமே சந்தை நிர்ணயிக்கும். எது, எவ்வளவு, யார், என்ன விலை என்பதெல்லாம் சந்தை  முடிவு செய்யும். 


கம்யூனிசம், சோசியலிசம் போன்ற கோட்பாடுகளில் அரசாங்கம் முடிவு செய்யும். 

இந்தியா போன்ற நாடுகளில் இரண்டும் கலந்து முடிவு செய்யப் படுகிறது. 


யார் முடிவு செய்தாலும், பொருளாதாரத்தில் உள்ள ஒரு சூத்திரம் என்ன என்றால்,  ஒருவரே எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஒருவருக்கு, அல்லது ஒரு நாட்டுக்கு  எது நன்றாக வருமோ அதைச் செய்ய வேண்டும். மற்றதை பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 


உதாரணமாக, நானே உழுது, பயிர் செய்து,  துணி நெய்து, மருத்துவம் பார்த்து, என் வீட்டை நானே கட்டி, எனக்கு நானே மருத்துவம் பார்த்து கொள்வது என்பது நடக்காது. எனக்கு என்ன நன்றாக வருமோ அதை நான் செய்வேன். அதில் கிடைக்கும்  வருமானத்தைக் கொண்டு மற்றவற்றை வாங்கிக் கொள்வேன். 


நாடும் அப்படித்தான். ஒரு நாடு உணவு உற்பத்திச் செய்யும், இன்னொரு நாடு ஆயுதம் செய்யும், இன்னொரு நாடு மென் பொருள் செய்யும். இவற்றை வர்த்தக பரிமாற்றத்தின் மூலம்  பரிமாற்றிக் கொள்ளலாம். (Trade ).


Consumer Surplus, Theory Comparative Advantage, Division of  labour என்று பல சித்தாந்தங்கள் உண்டு. 


உனக்கு உழவு செய்ய முடியாதா, விடு. உனக்கு ஆகாய விமானம் செய்ய வருமா? செய். அதை விற்று, அந்தக் காசில் உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம். 

இப்படித்தான் நாடுகள்  செயல் படுகின்றன. 


ஆனால், வள்ளுவர் சொல்கிறார், அது சரி அல்ல. 


ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருள்களையும் அந்த நாடே  உற்பத்தி செய்ய வேண்டும் என்று.  இறக்குமதி செய்வதெல்லாம் சரி அல்ல என்கிறார். 


ஏன்?


சாதாரண நாட்களில் இறக்குமதி செய்து கொள்ளலாம். ஒரு நெருக்கடி வந்து விட்டால், போர் வந்து விட்டால், கோரனா போன்ற பேரிடர் வந்து விட்டால், உணவு உற்பத்தி செய்யும் நாடுகள்  ஏற்றுமதியை நிறுத்தி விடும். 

உணவு இல்லாமல் என்ன செய்வது? ஆகாய விமானத்தைச்  சாப்பிட முடியுமா?

உணவுக்கு மாற்று எதுவும் கிடையாது. உணவு இல்லை என்றால் கொஞ்சம் தங்கம் தின்ன முடியுமா? நிறைய அமெரிக்கன் டாலர் இருக்கிறது என்று அதை சாப்பிட முடியுமா? மக்கள் பட்டினியால் இறந்து போவார்கள். அல்லது பெரிய கலவரம்  வெடிக்கும். 


எனவே குறைவில்லா உணவு உற்பத்தி உள்நாட்டிலேயே நடக்க வேண்டும். உணவுக்காக இன்னொரு நாட்டை   எதிர் பார்த்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அது ஒரு நல்ல நாடு அல்ல. 


இன்னும் அந்த இரண்டு வார்த்தைக்கு அர்த்தம் முடியவில்லை....தொடரும் 




Saturday, October 3, 2020

பெரிய புராணம் - இளையான் குடி மாற நாயனார் புராணம்

 பெரிய புராணம் - இளையான் குடி மாற நாயனார் புராணம்


இறைவனை  அடைய என்ன வழி?  என்ன வழி என்று எத்தனையோ பேர் தேடி த் தேடி அலைகிறார்கள். 


பூஜை, ஆச்சாரம், அனுஷ்டானம், பாராயணம், ஷேத்ராடனம் என்று என்னென்ன முடியுமோ செய்கிறார்கள். படிப்பு ஒரு பக்கம், பெரியவர்கள் பேசுவதை கேட்பது ஒரு பக்கம். மிகப் பெரிய முயற்சிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள். 

அவர்கள் ஒரு பக்கம். 


இதெல்லாம் பத்தி ஒண்ணும் கவலைப் படாமல், தான் வேலையை ஒழுங்கா செய்து கொண்டு இருந்தவர்களைத் தேடி இறைவன் வந்து கூட்டிக் கொண்டு போன கதைகள் நிறைய இருக்கின்றது.


கடவுள், சுவர்க்கம், ஞானம், யோகம் என்று இதைப் பற்றியெல்லாம் அவர்கள் அலட்டிக் கொள்ளவே இல்லை. அவர்களைத் தேடி இறைவன் வந்தான். 


பெரிய புராணத்தில் இளையான் குடி மாற நாயனார் என்று ஒருவர் இருந்தார். அவர் ஒண்ணுமே செய்யல. அடியவர்களுக்கு உணவு அளிப்பார். அவ்வளவுதான். வேற ஒரு ஒன்றும் செய்யவில்லை. 


சிவ பெருமான் நேரில் வந்து, கூட்டிக் கொண்டு போனார். 


எவ்வளவு எளிய வழி? எதுக்கு கிடந்து கஷ்டப்படனும் ?


அவருடைய வரலாற்றை 27 பாடல்களில் சேக்கிழார்  வடிக்கிறார். 


அந்த தர்ம வேலைக்கு நடுவில், அவருக்கும் அவர் மனைவிக்கும் இருந்த அந்த அற்புதமான  உறவையும் கோடி காட்டி விட்டுப் போகிறார் சேக்கிழார். 


அவருடைய வரலாற்றை சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_3.html

திருக்குறள் - இன்சொல் - முகனமர்ந்து இன்சொல்

 திருக்குறள் - இன்சொல் - முகனமர்ந்து இன்சொல் 


நம்மிடம் ஒரு உதவி வேண்டி ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு கொஞ்சம் பொருள் உதவி செய்வது பெரியதா அல்லது அவருடன் சிரித்த முகத்தோடு இனிமையாக பேசி அனுப்புவது பெரியதா?


பொருள் கொடுப்பதுதான் கடினம் என்று நாம் நினைப்போம். ஆனால், வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. இன்முகத்தோடு இனிய சொல் பேசுவதுதான் பெரிய விஷயம் என்று கூறுகிறார். 


பாடல் 

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனஅமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post.html


அகன் = அகம், உள்ளம், மனம் 

அமர்ந்து = விரும்பி 

ஈதலின் = கொடுத்தலை விட 

நன்றே = நல்லது 

முகன = முகம் 

அமர்ந்து = மலர்ந்து 

இன்சொலன் = இனிய சொல்லை சொல்பவன் 

ஆகப் = ஆகும்படி 

பெறின் = இருக்கப் பெற்றால் 


அது சரி, வள்ளுவர் சொல்லிவிட்டால் அது சரியாகி விடுமா?  நாலு காசு கொடுக்குறது எப்படி, சும்மா சிரிச்சு பேசி அனுப்பி விடுவது எப்படி ? சும்மா, ஏதோ இன் சொல்  அப்படினு ஒரு அதிகாரம் வைத்து விட்டார். எனவே, இன்சொல் சிறந்து என்று  சொலிக்கிறார். இதை எல்லாம் எப்படி நம்புவது? நாட்டாமை  தீர்ப்பை மாத்திச் சொல்லு என்று சொல்லத் தோன்றுகிறது அல்லவா?


வள்ளுவர் அப்படியெல்லாம் சும்மா சொல்பவர் அல்ல. 


சிந்திப்போம். 


முதலாவது, இன்சொல் என்றால் ஏதோ பல்கலைக் காட்டி சிரிக்க சிரிக்க பேசுவது அல்ல.  இன்சொல் என்றால் என்ன என்று முந்தைய குறளில் பார்த்தோம்.  இன்சொல் என்றால் ஈரம் அளவி ( ,அன்புடன், கருணையுடன்), படிறு இன்றி  (குற்றம் இல்லாமல்), செம்பொருள் (அறத்துடன் கூடிய உயர்ந்த சொற்கள்). இதைச் சொல்ல முடியுமா நம்மால்?  


அறம் வேண்டாம், குற்றம் கூட இருந்து விட்டுப் போகட்டும். அன்போடு பேச முடியுமா?  

நம்மிடம் உதவி என்று ஒருவன் வந்து நின்றால் மனதுக்குள் என்னவெல்லாம் ஓடுகிறது?

"எப்படி ஆடுனான் ...வேணும் நல்லா...இப்ப பாரு உதவின்னு வந்து நிக்கிறான்"

"சொன்னா கேட்டாத்தானே...எல்லாம் எனக்குத் தெரியும்னு அகம்பாவம் புடிச்சு அலையறது" 

"எனக்கு அப்பவே தெரியும்...இது ஒரு நாள் என் வாசல்ல வந்து நிக்கும்னு"

"இவனுக்கெல்லாம் பட்டாத்தான் தெரியும் " 


என்று மனதுக்குள் எவ்வளவோ ஓடும்.


இதில் அன்பு எங்கே இருக்கிறது. 


முன்பு என்ன நடந்து இருந்தாலும், அவற்றை மறந்து அன்போடு பேச வேண்டும். 

இரண்டாவது, சிலர் நல்ல விஷயத்தைக் கூட கடுமையாகச் சொல்லுவார்கள்.  

"நல்லா படிடா...படிச்சு பெரிய ஆளாகி, எல்லாருக்கும் நல்லா உதவி செய்..அது உன்னால முடியும் " என்று சொல்வதை விடுத்து 


"படிக்கலேனா மாடு மேய்க்கத்தான் போற...நீ பிச்சை எடுக்கத்தான் போற...தெருத் தெருவா  அலையப் போற" என்று சொல்லுவார்கள். 


அர்த்தம் ஒன்றுதான். இரண்டுக்குப் பின்னாலும் பிள்ளை மேல் உள்ள அன்பு இருக்கிறது. ஆனால், முகம் மலர்ந்து இனிமையாக சொல்லவில்லை. அன்பு இருந்தால் மட்டும் போதாது, அதை அழகாக வெளிப்படுத்தவும் தெரிய வேண்டும். 


மூன்றாவது, பல பேர் உதவி செய்யும் போது , உதவி பெறுபவனை ஏதோ ஒரு விதத்தில் அவமானப் படுத்திதான் உதவி செய்கிறார்கள். பெறுபவன் மனம் வருந்தும்படி  செய்கிறார்கள். அதை விட, அன்போடு, இனிமையாக பேசி அனுப்புவது நல்லது. 


நான்காவது,  பொருள் பெறுபவன் அதை வைத்து என்ன செய்யப்போகிறான் என்பது முக்கியம்.  சீட்டு விளையாடனும், தண்ணி அடிக்கணும், ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்கள்  என்றால், அன்போடு கொடுத்து உதவலாமா அல்லது  அப்படி செய்வது தவறு என்று  அன்போடு, இதமாக சொல்லி மறுத்து அனுப்புவது நல்லதா?   இன்சொல்லில் அறம் இருக்கிறது. (அன்பு, குற்றம் அற்ற , அறச்சொல் தான் இன்சொல் எனப்படுவது). 


ஐந்தாவது, இன்சொல் சொல்வது மிகக் கடினம். அதனால் தான் வள்ளுவர் சொல்கிறார்  "பெறின்". செய்ய முடிஞ்சால் என்று அர்த்தம். ஒரு நாளைக்கு  பத்து மணி நேரம் படித்தால்  அந்த பரீட்சை பாஸ் பண்ணி விடலாம் என்றால், 10 மணி நேரம் படிப்பது என்பது  முடியாது என்று அர்த்தம். 


நாம் வார்த்தைகளின் மதிப்பு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். அதனால் தான்  அதை விரயம் பண்ணிக் கொண்டு இருக்கிறோம். மதிப்பு தெரிந்தால்  அதை அனாவசியமாக விரயம் பண்ணுவோமா? 


குழந்தை கையில் உள்ள பொற் கிண்ணம் போல என்று மணிவாசகர் கூறியது போல,  மதிப்பு தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 


இனிய சொல் , பொருளை விட உயர்ந்தது. 

இன்சொல் பேசிப் பழகுவோம்.