Monday, October 26, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - களங்கனிக்கு கை நீட்டும் வேங்கடம் 


பக்தி என்றால் என்னவோ இருக்கிற எல்லாவற்றையும் விட்டு விட்டு, கடவுளே கதி என்று போய் விடுவது அல்ல. எல்லாவற்றையும் துறந்து சாமியாராக போவது அல்ல பக்தி. 

இந்த உலகை, அதன் அழகை, அதன் உயிர்ப்பை இரசிப்பது தான் பக்தி. 

என் பிள்ளையை பாராட்டினால் எனக்கு சந்தோஷம்தானே. உலகை இரசித்துப் பாராட்டினால் அதைப் படைத்த இறைவனுக்கு சந்தோஷம் இருக்காதா? 

அதை விடுத்து, இறைவன் செய்த எல்லாம் தேவை இல்லாதது என்று ஒதுக்கி வைத்தால் அவனுக்கு எப்படி இருக்கும்?


நமது பக்தி இலக்கியத்தில் பார்த்தால் தெரியும். உலகை, இயற்கையை, அதன் அழகை, உயிர்ப்பை மிக நுண்ணியமாக இரசித்து எழுதிய பாடல்களை காணலாம். 

உலகை வெறுத்த ஒருவரால் இவ்வளவு தூரம் இரசித்து இருக்க முடியாது. 


பேயாழ்வார் சொல்கிறார்....

திரு வேங்கட மலையில் நிறைய குரங்குகள் இருக்கின்றன. அவை , அங்குள்ள மரத்தில் உள்ள பழங்களை பறித்து உண்ணுகின்றன.  அப்படி சாப்பிடும் போது, நடுவில் தாகம் எடுத்தால் அங்குள்ள குளம் அல்லது நீர் நிலைகளை தேடிச் செல்லும். நீர் குடிக்க குனிந்தால், குனியும் அந்த குரங்கின் உருவம் அந்த நீரில் தெரியும். அடடா இன்னொரு குரங்கு உள்ளே இருக்கிறது என்று பயந்து ஓடும். பின், மெல்ல வந்து,  தான் கையில் வைத்து இருப்பது போலவே அந்த நிழல் குரங்கின் கையிலும் ஒரு பழம்   இருப்பதைக் கண்டு, "எனக்கு அதைத் தா"  என்று கை நீட்டி கேட்குமாம்"

அப்படிப் பட்ட குரங்குகள் நிறைந்த மலை திருவேங்கடம் என்று கூறுகிறார். 


பாடல்  


பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, பேர்த்தோர்

கடுவனெனப் பேர்ந்து, - கார்த்த

களங்கனிக்குக் கைநீட்டும் வேங்கடமே, மேனாள்

விளங்கனிக்குக் கன்றெறிந்தான் வெற்பு.




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_86.html


click the above link to continue reading


பார்த்த கடுவன் = பார்த்த குரங்கு 

சுனைநீர் = சுனையில் உள்ள நீரில் 

நிழற்கண்டு = தன் நிழலைக் கண்டு 

பேர்த்தோர் = வேறு ஒரு 

கடுவனெனப் = குரங்கு என்று 

பேர்ந்து = விலகிச் சென்று 

கார்த்த 

களங்கனிக்குக் = கரிய களங் கனிக்கு 

கைநீட்டும் வேங்கடமே = கையை நீட்டும் வேங்கட மலையே 

மேனாள் = முன்பொரு நாள் 

விளங்கனிக்குக் = விளங்கனிக்கு 

கன்றெறிந்தான் = கன்றாக வந்த அசுரனை அதன் மேல் எறிந்த கண்ணனின் 

வெற்பு = மலை 


உலகை மறுத்து என்ன பக்தி? 

குரங்கு தன் நிழலைப் பார்த்து பயந்து பின் கனி கேட்டதை வேலை மெனக்கெட்டு  எழுதி இருக்கிறார். இதைத் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? 

பக்தி என்பது வாழ்வை இரசிப்பது. இயற்கையோடு ஒன்றி வாழ்வது. குரங்கும், மலையும் , அது உண்ணும் கனியும், அதன் சேட்டைகளும் எல்லாம் இயற்கைதான். 

இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் என்பதும் பிரபந்தம். 

வாழ்க்கையை கொண்டாட வேண்டும். 



No comments:

Post a Comment