Monday, October 5, 2020

திருக்குறள் - நாடு

 திருக்குறள் - நாடு 

தமிழ் படித்து என்ன பலன்? அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கை நலம் தெரியும், அவர்கள் வாழ்ந்த முறை தெரியும். அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? 

நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான அறிவியல், பொருளாதாரம், கணிதம், போன்றவற்றைப் படித்தால் ஏதாவது வேலை கிடைக்கும். நாலு காசு பார்க்கலாம். இல்லையா?


அது ஒரு புறம் இருக்கட்டும். அதற்கு பின்னால் வருவோம். 

ஒரு நாடு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் சில குறிப்புகள் தருகிறார். அவை என்னென்ன  என்று பார்ப்போம்.

பாடல் 

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_5.html

(click the above link to continue reading)


தள்ளா விளையுளும் = குறைவில்லாத விளைச்சலை செய்யும் உழவர்களும் 

தக்காரும் = அற வழியில் நிற்கும் சான்றோர்களும் 

தாழ்விலாச் செல்வரும் = குறைவில்லாத செல்வர்களும் 

சேர்வது நாடு = சேர்ந்து இருப்பது நாடு 


போதுமா ? இந்த மூன்று பேர் மட்டும் இருந்தால் போதுமா? அது ஒரு சிறந்த நாடாகி விடுமா? 


பொருளாதாரத்தின் அடிப்படை சித்தாந்தம் என்ன என்றால் எதை உற்பத்தி செய்வது, எவ்வளவு உற்பத்தி செய்வது, யார் உற்பத்தி செய்வது, யாருக்காக உற்பத்தி செய்வது, உற்பத்தி செய்ததை என்ன விலைக்கு விற்பது? 

இது ஒரு மிக மிக அடிப்படையான  கேள்வி. 

இந்தக் கேள்விகளுக்கு விடை காண பொருளாதாரத்தில் பல கோட்பாடுகள் உண்டு.


முதலாளித்துவம் (capitalism ) என்ற கோட்பாட்டில் எல்லாமே சந்தை நிர்ணயிக்கும். எது, எவ்வளவு, யார், என்ன விலை என்பதெல்லாம் சந்தை  முடிவு செய்யும். 


கம்யூனிசம், சோசியலிசம் போன்ற கோட்பாடுகளில் அரசாங்கம் முடிவு செய்யும். 

இந்தியா போன்ற நாடுகளில் இரண்டும் கலந்து முடிவு செய்யப் படுகிறது. 


யார் முடிவு செய்தாலும், பொருளாதாரத்தில் உள்ள ஒரு சூத்திரம் என்ன என்றால்,  ஒருவரே எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஒருவருக்கு, அல்லது ஒரு நாட்டுக்கு  எது நன்றாக வருமோ அதைச் செய்ய வேண்டும். மற்றதை பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 


உதாரணமாக, நானே உழுது, பயிர் செய்து,  துணி நெய்து, மருத்துவம் பார்த்து, என் வீட்டை நானே கட்டி, எனக்கு நானே மருத்துவம் பார்த்து கொள்வது என்பது நடக்காது. எனக்கு என்ன நன்றாக வருமோ அதை நான் செய்வேன். அதில் கிடைக்கும்  வருமானத்தைக் கொண்டு மற்றவற்றை வாங்கிக் கொள்வேன். 


நாடும் அப்படித்தான். ஒரு நாடு உணவு உற்பத்திச் செய்யும், இன்னொரு நாடு ஆயுதம் செய்யும், இன்னொரு நாடு மென் பொருள் செய்யும். இவற்றை வர்த்தக பரிமாற்றத்தின் மூலம்  பரிமாற்றிக் கொள்ளலாம். (Trade ).


Consumer Surplus, Theory Comparative Advantage, Division of  labour என்று பல சித்தாந்தங்கள் உண்டு. 


உனக்கு உழவு செய்ய முடியாதா, விடு. உனக்கு ஆகாய விமானம் செய்ய வருமா? செய். அதை விற்று, அந்தக் காசில் உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம். 

இப்படித்தான் நாடுகள்  செயல் படுகின்றன. 


ஆனால், வள்ளுவர் சொல்கிறார், அது சரி அல்ல. 


ஒரு நாட்டுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருள்களையும் அந்த நாடே  உற்பத்தி செய்ய வேண்டும் என்று.  இறக்குமதி செய்வதெல்லாம் சரி அல்ல என்கிறார். 


ஏன்?


சாதாரண நாட்களில் இறக்குமதி செய்து கொள்ளலாம். ஒரு நெருக்கடி வந்து விட்டால், போர் வந்து விட்டால், கோரனா போன்ற பேரிடர் வந்து விட்டால், உணவு உற்பத்தி செய்யும் நாடுகள்  ஏற்றுமதியை நிறுத்தி விடும். 

உணவு இல்லாமல் என்ன செய்வது? ஆகாய விமானத்தைச்  சாப்பிட முடியுமா?

உணவுக்கு மாற்று எதுவும் கிடையாது. உணவு இல்லை என்றால் கொஞ்சம் தங்கம் தின்ன முடியுமா? நிறைய அமெரிக்கன் டாலர் இருக்கிறது என்று அதை சாப்பிட முடியுமா? மக்கள் பட்டினியால் இறந்து போவார்கள். அல்லது பெரிய கலவரம்  வெடிக்கும். 


எனவே குறைவில்லா உணவு உற்பத்தி உள்நாட்டிலேயே நடக்க வேண்டும். உணவுக்காக இன்னொரு நாட்டை   எதிர் பார்த்து இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், அது ஒரு நல்ல நாடு அல்ல. 


இன்னும் அந்த இரண்டு வார்த்தைக்கு அர்த்தம் முடியவில்லை....தொடரும் 




1 comment:


  1. இந்த விளக்கத்தின் தொடர்ச்சி எங்கே வரும் என்று தெரியவில்லை. ஆனால், வள்ளுவர் சொல்லி விட்டார் என்று அவருடைய பொருளாதாரக் கொள்கையே சரி என்பவருக்கு, வள்ளுவரின் "எப்பொருள் யார் யார் வாய்க்க கேட்பினும்..." என்ற குறளையே சொல்ல விரும்புகிறேன்.

    ReplyDelete