Monday, February 28, 2022

கம்ப இராமாயணம் - வீபிஷண சரணாகதி

 கம்ப இராமாயணம் - வீபிஷண சரணாகதி 


சரணாகதி என்பது மிகப் பெரிய விஷயம். கதி என்றால் பாதை, வழி. சரணமே கதி. அது தான் வழி என்று அதில் போவது. 


சரணாகதி என்பது எளிதான காரியம் இல்லை. என்னால் ஆவது ஒன்று இல்லை, எல்லாம் நீ தான் என்று இருப்பது மிக மிக கடினம். 


நான் யார், நான் எவ்வளவு பெரிய ஆள், என் படிப்பு என்ன, சாமர்த்தியம் என்ன, விவேகம் என்ன, வீர தீரம் என்ன...என்னை போல் யாரால் முடியும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். 


நான் ஒரு சாதாரண ஆள் என்று யாருமே நினைப்பது இல்லை. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தான் உயர்ந்தவன், பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 


கம்ப இராமாயனத்தை தொடங்கும் போதே கம்பர் "தலைவர் அன்னவர்க்கே சரணாங்களே" என்று சரணத்தோடு தான் ஆரம்பிக்கிறார்.


செஞ்சோற்று கடன் கழிக்காமல் இராமன் பின் போனது துரோகம் இல்லையா என்று இன்றும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். 


"நான் சரணாகதி அடைகிறேன்" என்ற நினைப்பு வந்து விட்டால் அது சரணாகதி அல்ல. நான் செய்கிறேன் என்ற எண்ணமே அகம்பாவம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_20.html


(pl click the above link to continue reading)


காதலியிடம், மனைவியிடம் சரண் அடைவது என்பது எவ்வளவு இனிமையான விஷயம்.


பாரதி சொல்கிறான் ....



நின்னயே ரதி என்று நினைகிறேனடி கண்ணம்மா!

தன்னையே சகி என்று சரணம் எய்தினேன் !... கண்ணம்மா!....(நின்னையே!)


"உன் பற்றன்றி ஒரு பற்று இல்லேன் இறைவா கச்சி ஏகம்பனே" என்பார் பட்டினத்தார். 


வேதம் நான்கும் சரண் அடைவது அபிராமியின் பாதங்களில் என்று கூறுகிறார் 



ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்

வானந்தமான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்

தானந்தமான சரணாரவிந்த தவள நிறக்

கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே



"மறை நான்கினுக்கும் தான் அந்தமான சரண் அரவிந்த"


தாயின் தோளில் தூங்கும் குழந்தை போல, சரணாகதி அவ்வளவு சுகமானது. 


பக்தியில் இரண்டு விதமான பக்தி பற்றி கூறுவார்கள். .


பூனை பக்தி, குரங்கு பக்தி என்று. 


பூனை தன் குட்டியை தானே வாயில் கவ்விக் கொண்டு ஒரு ஒரு இடமாகச் செல்லும். குட்டி ஒன்றும் செய்ய வேண்டாம்.


குரங்கு அப்படி இல்லை. குட்டிதான் இறுக பற்றிக் கொள்ள வேண்டும். தாய் குரங்கு அங்கும் இங்கும் தாவும். விழுவதும் விழாமல் இருப்பதும் குட்டியின் சாமர்த்தியம். 


எது எளிது? பூனை குட்டியின் வாழ்க்கை எளிது. 


"எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுர பூபதியே"


என்கிறார் அருணகிரி.


நான் எல்லாவற்றையும் இழந்து விட்டேன். என்னையும் இழந்து விட்டேன். அதனால் அந்த சுகம் எப்படி இருக்கிறது என்று என்னால் சொல்ல முடியாது. நான் தான் இல்லையே. நான் எப்படி சொல்ல முடியும். எனவே, அதை நீயே சொல் முருகா என்கிறார் "சொல்லாய் முருகா". 


எல்லாம் இழப்பது ஒரு சுகமா? 


கோவிந்தா என்று கை உயர்த்தினாள் பாஞ்சாலி. அவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை. 


ஆதி மூலமே என்று அலறியது யானை. அவன் வருவான், அவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை. 


சரணாகதி என்பதை வைணவம் கொண்டாடுகிறது. 


வீபிஷ்ண சரணாகதி பற்றி சிந்திக்க இருக்கிறோம். 





திருக்குறள் - அடுத்து என்ன?

 திருக்குறள் - அடுத்து என்ன? 


திருக்குறளில் ஒவ்வொரு அதிகாரமும் ஒரு முறைப்படி, வரிசைப்படி ஒரு ஒழுங்கு முறையில் வைத்து எழுதப் பட்டு இருக்கிறது. திருக்குறளைப் படிக்க வேண்டும் என்றால் அந்த முறையில் படிக்க வேண்டும். 


அதிகாரம் மட்டும் அல்ல இயலும் அப்படித்தான்.


அறம், பொருள், இன்பம் என்ற வரிசையில் எழுதி இருக்கிறார். இதில் என்ன முறை இருக்கிறது? பொருள், அறம், இன்பம் என்று எழுதி இருக்கக் கூடாதா? அல்லது இன்பம், பொருள், அறம் என்று எழுதி இருக்கக் கூடாதா? இன்பம் தானே எல்லோரும் தேடுவது? அதை முதலில் சொல்லி, அந்த இன்பம் அடைய பொருள் வேண்டும், அதை அற வழியில் ஈட்ட வேண்டும் என்று சொல்லி இருக்கலாம் தானே?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நமக்கு சில வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. எல்லா வேலையையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. எதை முதலில் செய்வோம்? எது நமக்கு அதிக பலன் தருமோ அதை முதலில் செய்வோம் அல்லவா? 


இல்லை, எது எளிதாக இருக்கிறதோ அதை முதலில் செய்வோம் என்று சிலர் வாதிக்கலாம். 


சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். 


நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது. அதை எதில் செலவழிப்போம்? எது நமக்கு அதிக ஆதாயம் தருமோ, அதில்தானே செலவழிப்போம்?


குறிப்பிட்ட தொகைக்கு இரண்டு படுக்கை அறை கொண்ட வீடும் இருக்கிறது, மூன்று படுக்கை அறை கொண்ட வீடும் இருக்கிறது என்றால் எதை வாங்குவோம்? 


பணம் என்பது உழைப்பின் பலன். எனவே, நம் உழைப்பும் எதில் அதிக ஆதாயம் தருகிறதோ, அதை விரும்புவோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_28.html


(please click the above link to continue reading)


இங்கே, (குறளில் ) இன்பம் என்பது இந்த பிறவிக்கு மட்டும் இன்பம் தருவது. அதுவும் கொஞ்ச காலத்துக்கு மட்டும் தான். 


பொருள் இம்மைக்கும், மறுமைக்கும் இன்பம் தருவது, சரியான வழியில் அதை செலவழித்தால். 


அறம், இம்மை, மறுமை மட்டும் அல்ல வீடு பேற்றுக்கும் வழி செய்யும். 


இப்போது சொல்லுங்கள் எதை முதலில் செய்ய வேண்டும். 


இன்பம், இன்பம் என்று அலைந்து கொண்டிருந்தால் மறுமை, வீடு பேறுக்கு வழி இல்லாமல் போகும் 


எனவே, முதலில் அறத்துப் பால் பற்றி கூறினார். 


சரி, அறத்துப் பால் முக்கியம். அதை எப்படிச் சொல்லுவது? 


முதலில் பிள்ளை பெறுவது, அப்புறம் மனைவி, அப்புறம் இல்லறம் என்று சொல்லலாமா? அல்லது முதலில் துறவறம், பின் இல்லறம் என்று சொல்லலாமா? எப்படிப் படித்தால் என்ன என்று கேட்கக் கூடாது. எதுக்கும் ஒரு முறை இருக்கிறது. 


அறம் சொல்ல வந்த வள்ளுவர், முதலில் இல்லறத்தை எடுத்துக் கொள்கிறார். 


அறத்துப் பால் - இல்லறவியல். 


அதில், முதலில் பாயிரவியல் - இறை வணக்கம், வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்று சொல்ல்கிறார். 


பின், இல்லறதுக்குள் நுழைகிறார். 


இல்வாழ்கை (இல்வாழ்வின் நோக்கம், கடமைகள்), வாழ்க்கைத் துணை நலம் (மனைவி), புதல்வர்களைப் பெறுதல், அன்புடைமை,  விருந்தோம்பல், இனியவை கூறல் என்று சொன்னார். 


அடுத்து என்ன?


என்னவாக இருக்கும்?


இல்வாழ்வில் பெற்றோர், உடன் பிறப்பு, சுற்றம், நட்பு, அண்டை, அயல், விருந்து என்று எல்லாம் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து வாழ்கிறோம். 


ஒருவர் செய்த உதவியை மறக்கக் கூடாது. இல் வாழ்வின் அடி நாதம் இது. 


எனவே, அடுத்த அதிகாரமாக "செய்நன்றி அறிதல்" என்ற அதிகாரத்தை வைக்கிறார். 


ஒரு அதிகாரத்தை அங்கே இங்கே மாத்தி வைக்க முடியாது. அப்படி ஒரு கட்டமைப்பு. 


செய்த உதவியை மறக்கக் கூடாது. அவ்வளவுதானே. புரிஞ்சு போச்சு. இதுக்கு எதுக்கு ஒரு அதிகாரம், பத்து குறள், அதுக்கு உரை, உரைக் குறிப்பு எல்லாம் என்று நாம் நினைப்போம். 


வள்ளுவர் செய்திருக்கும் வேலை பிரமிக்க வைக்கக் கூடியது. 


செய்நன்றி அறிதல் பற்றி இன்னும் கொஞ்சம் சிந்தித்தப் பின், அதிகாரத்துக்குள் நுழைவோம். 



Sunday, February 27, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - காலம் இனி இல்லை

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - காலம் இனி இல்லை 


எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம், ஏதோ பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கப் போவது போல. 


இதைச் செய்ய வேண்டும், அதைச் செய்ய வேண்டும், என்று பலப் பல காரியங்கள். முக்கியமானவற்றை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். 


இந்த சில்லறை வேலைகளை எல்லாம் செய்து முடித்து விட்டு பெரிய வேலை பார்க்க நினைக்கும் போது நாள் ஓடி இருக்கும். நாமே இருக்க மாட்டோம். இருந்தாலும், மனத்திலும், உடலிலும் வலு இருக்காது. 


எனவே, மனமும், உடலும் உறுதியாக இருக்கும் போது முக்கியமான காரியங்களை செய்து விட வேண்டும். சில்லறைக் காரியங்களை செய்யாமல் விட்டாலும் பரவாயில்லை. 


நாம் முக்கியமான காரியங்களை செய்ய விடாமல் நம்மை தடுப்பது எது?


கோபமும், ,காமமும். 


காமம் புரிகிறது. கோபம் எப்படி காரணம் ஆகும்? கோபம் என்றால் முகம் சிவக்க, உதடு துடிக்க, வார்த்தைகள் அனல் போல கொட்ட, சாமான்களை தூக்கி அடிக்கும் செயல் மட்டும் அல்ல. 


சத்தமே போடாமல், யார்மேலும் எரிந்து விழாமலும் கோபம் கொள்ளலாம். 


நம் மேலேயே நமக்கு கோபம் வரும் சில சமயம். 


நம் இயலாமையை நினைத்து, நம் உறுதி அற்ற தன்மையை நினைத்து, நம்முடைய பலவீனங்களை நினைத்து கோபம் வரலாம். 


கோபத்தால் சிந்தனை தெளிவு மாறும். தவறான முடிவுகள் எடுக்க வேண்டி வரும். பின் அதைச் சரி செய்ய மேலும் கால விரயம் ஆகலாம்.  


கோபம் பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும். 


இதுகெல்லாம் நேரம் இல்லை. இதை எல்லாம் விட்டு விட்டு வாருங்கள்.  சிவலோகத்தின் கதவு சாத்தப்படும் முன், சீக்கிரமாக போய் சேர்வோம் என்று அந்த பயணத்துக்கு நம்மை அழைக்கிறார் மணிவாசகப் பெருந்தகை. 


பாடல் 





விடுமின் வெகுளி, வேட்கை நோய்; மிகவே, காலம் இனி இல்லை;

உடையான் அடிக்கீழ், பெரும் சாத்தோடு உடன் போவதற்கே ஒருப்படுமின்;

அடைவோம், நாம் போய்ச் சிவபுரத்துள், அணி ஆர் கதவு அது அடையாமே;

புடைபட்டு உருகிப் போற்றுவோம், புயங்கன் ஆள்வான் புகழ்களையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_27.html


(click the above link to continue reading)



விடுமின் = விட்டு விடுங்கள் 


வெகுளி = கோபம் 


வேட்கை நோய் = காம நோய், ஆசை என்ற நோய் 


மிகவே = ரொம்ப 


காலம் இனி இல்லை; = காலம் இனி இல்லை. இருந்த காலம் எல்லாம் போய் விட்டது. 


உடையான் = நம்மை உடையவன் (சிவன்) 


அடிக்கீழ் = திருவடியின் கீழே 


பெரும் சாத்தோடு = பெரிய கூட்டத்தோடு 


உடன் போவதற்கே = ஒன்றாக போவதற்கு 


ஒருப்படுமின்; = ஒன்றாக வாருங்கள் 


அடைவோம் = கட்டாயம் அடைவோம் 


 நாம் போய்ச் = நாம் போய் 


சிவபுரத்துள் = சிவபுரத்துள் 


அணி = அணிகலன்கள் கொண்டு வேலைப்பாடு செய்யப்பட்ட 


ஆர் கதவு = பெரிய கதவு 


அது அடையாமே; = அது அடை படுவதற்கு முன் 


புடைபட்டு  = நீக்கமற எங்கும் நிறைந்த 


உருகிப் போற்றுவோம் = உருகி போற்றுவோம் 


புயங்கன் = பாம்பை அணிந்த கரங்களை உடைய அவன் 


 ஆள்வான் = நம்மை ஆழிபவன் 


புகழ்களையே. = புகழைப் (போற்றுவோம்)


போகும் இடத்துக்கு வழி தேடுவதுதானே முக்கியமான வேலை. 


ஏதோ ஒரு காரணமாக வெளியூர் போய் இருக்கிறோம். வேலை முடிந்து எப்படி பழையபடி ஊர் போய் சேர்வது என்று சிந்திக்க வேண்டாமா? வந்த இடத்தில் சுத்திக் கொண்டு இருந்தால் எப்படி ஊர் போய் சேர்வது? 


இந்த உலகில் நாம் ஏதோ ஒரு காரணத்துக்காக வந்து இருக்கிறோம். 


எப்படியும் ஒரு நாள் போகத்தான் வேண்டும். நிரந்தரமாக இங்கே இருக்க முடியாது. 


எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்ல வழியை ஆராய வேண்டாமா?


யாத்திரைப் பத்து. 


நம் பயணம் தொடர வேண்டும். எங்கு எப்படி என்று மணிவாசகர் சொல்கிறார். 




Wednesday, February 23, 2022

திருக்குறள் - இனியவை கூறல் - காயும் கனியும்

திருக்குறள் - இனியவை கூறல் - காயும் கனியும் 


இனிய சொற்கள் இருக்கும் போது இன்னாத சொற்களை கூறுவது கனி இருக்கும் போது காயை விரும்பவது போல என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_23.html


(please click the above link to continue reading)



இனிய உளவாக = இனிய சொற்கள் இருக்கும் போது 


இன்னாத கூறல் = இன்னாத சொற்களை கூறுவது 


கனியிருப்பக் = கனி இருக்கும் போது 


காய்கவர்ந் தற்று = காயை உண்பது போல, காயின் மேல் விருப்பம் உண்டானது போல, காயை திருடி உண்பது போல 


காயிருக்க கனி உண்பது எவ்வளவு  சிறந்த செயல் இல்லையோ, அது போல இனிய சொற்கள் இருக்க இன்னாத சொற்களை கூறுவது. இப்படித்தான் இதுவரை அர்த்தம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


பரிமேலழகர் இல்லை என்றால் இது எல்லாம் புரிவதே கடினம். 


அது என்ன கனி, காய்?


மாங்காய் ஊறுகாய் போட வேண்டும் என்றால், மாங்காய் தானே வேண்டும். மாம்பழத்தை வைத்து ஊறுகாய் போட முடியுமா? 


வாழக்காய் பொறியல் பண்ண வேண்டும் என்றால் காய் தான் வேண்டும். வாழைப் பழத்தை வைத்து பொறியல் பண்ண முடியுமா? 


அப்படி இருக்க கனி உயர்ந்தது, காய் தாழ்ந்தது என்று எப்படிச் சொல்லலாம்? 


மேலும், காய் இல்லாமல் கனி இல்லை. அப்படி என்றால் இன்னாத சொல்லில் இருந்தா இனிய சொல் பிறக்கும்?


சிக்கல். 


பரிமேலழகர் சிக்கலை விளக்குகிறார். 


கனி என்றால் ஔவை உண்ட நெல்லிக் கனி போன்ற உயர்ந்த பலன் தரும் கனிகள். 


காய் என்றால் காஞ்சிரங்காய் போன்ற நஞ்சு உள்ள காய்கள் என்று பொருள் சொல்கிறார். 


அதாவது, உடலுக்கும், உயிருக்கும் நன்மை தரும் கனிகளை விடுத்து, நஞ்சு பொருந்திய காய்களை யாராவது உண்பார்களா என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார். 


மேலும், காஞ்சிரங்காய் போன்ற நச்சுக் காய்களை பறிக்கும் போது அதில் உள்ள முட்கள் குத்தி நமக்கே கேடு விளைவிக்கும். பிறருக்கு தீமை தரும் என்று நினைத்து நாம் சொல்லும் தீய சொற்கள் நமக்கே தீமையாக முடியும் எனவே அந்த மாதிரி சொற்களை பயன்படுத்தக் கூடாது என்கிறார். 


ஒருவர் மேல் கோபம் கொண்டு வார்த்தைகளை அள்ளி வீசுகிறோம், அவதூறு பேசுகிறோம், பொய் சொல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த சொற்கள் அவர்களுக்கு மட்டும் அல்ல, நமக்கும் தீமை விளைவிக்கும் என்கிறார். 


நம்மால் துன்பப்பட்ட ஒருவன் சும்மா இருப்பானா? அவன் முறை வரும் வரை காத்து இருப்பான், நமக்கு துன்பம் செய்ய. 


எனவே, இனியவை அல்லாத சொற்களை சொல்லுவது மற்றவர்களுக்கு மட்டும் அல்ல, சொல்பவர்களுக்கும் தீமை பயத்தலால், அதை சொல்லக் கூடாது என்கிறார். 


இந்தக் குறளில் ஒரு இலக்கணச் சிக்கல் இருக்கிறது. 


முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. 


இனிய உளவாக இன்னாத கூறல் 


என்பது முதல் வரி. 


கனி இருப்ப காய் கவர்ந்தற்று என்பது இரண்டாவது வரி. 


ஏதாவது தொடர்பு இருக்கிறதா?  


எப்படி இரண்டையும் இணைப்பது?


பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 


"பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. "


கனி ,காய் என்பது உவமை. 


இனிய சொல், இன்னாத சொல் என்பன பொருள். 


இனிய, இன்னாத என்று சொல்லுக்கு கூறிய பண்புகள் உவமைக்கும் செல்லும் என்கிறார். அதாவது, இனிய சொல் என்பதில் உள்ள இனிமை இனிய கனி என்று செல்லும். அது போல, இன்னாத சொல் என்பதில் உள்ள இன்னாத என்பது இன்னாத காய் என்று செல்லும். 


எனவே, குறளை எப்படி படிக்க வேண்டும்?

இனிய உளவாக இன்னாத கூறல் 

இனிய கனி இருக்க இன்னாத காய் கவர்ந்தற்று 


என்று படிக்க வேண்டும். 


இனிய உளவாக இன்னாத என்றால் இனிமையான தின்பண்டங்கள் இருக்க கசப்பானவற்றை தின்பது போல என்று பொருள் கொள்ளலாம் அல்லவா?


"கூறல் என்றதனால் அது சொற்களை குறிக்கும்" என்கிறார் பரிமேலழகர். 


இன்னும் குறளை விரித்துப் படித்தால் எப்படி இருக்கும்?


இனிய சொற்கள் இருக்க இன்னாத சொற்களை கூறல் 

இனிய கனி இருக்க இன்னாத காய் கவர்ந்தற்று 


என்று விரியும். 


எவ்வளவு சொற் சிக்கனம் பாருங்கள். பயனில சொல் பாராட்டாமை. 


சரி மேலே போவோம். 


கவர்ந்தற்று என்கிறார். 


கவர்தல் என்றால் இரண்டு பொருள். கவர்ச்சி, விருப்பம் என்று கொள்ளலாம். 


இன்னொன்று தெரியாமல் எடுத்துக் கொள்வது. 


"என் உள்ளம் கவர் கள்வன்" என்பார் திரு ஞான சம்பந்தர். 


தீய சொற்கள் நாம் அறியாமல் வந்து விடும். வேண்டும் என்று சொல்லுவதில்லை. கோபத்தில், எரிச்சலில், சில சமயம் நம்மையும் அறியாமல் வந்து விடும். அப்படி வர விடக் கூடாது. காவல் செய்ய வேண்டும். 


சிலருக்கு இன்னாத சொற்களை சொல்லுவதில் ஒரு ஆர்வம் இருக்கும். நான் பல பேரை பார்த்து இருக்கிறேன். சில கெட்ட வார்த்தைகளை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் சொல்லுவார்கள். 


சென்னை போன்ற இடங்களில் ஆத்தா என்ற சொல்லைக் கூட தவறாக பயன் படுத்துவதை கண்டு இருக்கிறேன். சிலர் ஆங்கிலத்தில் அந்த f என்று தொடங்கும் அந்த நான்கு எழுத்துச் வார்த்தையை மிக எளிதாக கையாள்வார்கள். அதில் ஒரு விருப்பம். இயல்பு வந்து விடுகிறது. அது இல்லாமல் பேச முடியாது என்று ஆகி விடுகிறது. பல ஆங்கிலப் படங்களில் இவை சர்வ சாதரணமாக புழங்குகிறது. 


நா காக்க வேண்டும். 


தீய சொற்களின் மேல் ஆர்வம் கூடாது. அதில் உள்ள கவர்ச்சியில் மயங்கக் கூடாது. 


அவை நம்மை அறியாமலும் வந்து விடக் கூடாது. 


அப்படிப்பட்ட சொற்கள் மற்றவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, சொல்பவர்களை பாதிக்கும். எனவே, அவற்றை விலக்க வேண்டும் என்கிறார். 


இந்தக் குறளோடு இனியவை கூறல் என்ற அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


எப்போதும் கேட்பது தான்..கொஞ்சம் இடை வெளி வேண்டுமா? அலுப்பாக இருக்கிறதா? கனமாக இருக்கிறதா?  சிறிது இடைவெளி விட்டு பின் தொடர்வோமா அல்லது இடை வெளி இல்லாமல் தொடர்வோமா?


இரண்டாவது, இந்த ப்ளாகில் சில வார்த்தைகளை உதாரணம் காட்ட வேண்டி இருந்தது. கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது. விட்டுவிடலாம என்றும் தோன்றியது. உயர்ந்த விடயங்களை பற்றிப் பேசும் போது, கீழான வார்த்தைகளை கையாள்வது தவறுதான். சபை நாகரிகமும் அல்ல. 


உங்களுக்கு அவை சங்கடம் விளைவித்து இருந்தால், மன்னிக்கவும். 



Tuesday, February 22, 2022

நளவெண்பா - திருமாலை எங்கு காணலாம்?

 நளவெண்பா - திருமாலை எங்கு காணலாம்? 


வைகுந்தத்தில் காணலாம். சரி, வைகுந்ததுக்கு எப்படி போவது? யாருக்குத் தெரியும் அந்த வழி? 


அதைவிட எளிய வழி சொல்கிறார் புகழேந்தி, நளவெண்பாவில். 


"வேதங்களின் முகப்பில், முன்னால் காணலாம். அல்லது, ஆநிரைகளின் (பசுக் கூட்டத்தின்) பின்னால் காணலாம்" என்கிறார். யாரைக் காணலாம் என்றால் "ஆதி மூலமே என்று அழைத்த யானைக்கு முந்தி வந்து அருள் புரிந்த அந்த செந்தாமரை போன்ற திருவடி உடையவனை" என்கிறார். 


அற்புதமான பாடல் 


பாடல் 


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை

முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப

வந்தருளும் செந்தா மரை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_22.html


(please click the above link to continue reading)



மூலப் = அனைத்துக்கும் மூலமான 


பழ = பழமையான 


மறைக்கு = வேதங்களுக்கு 


முன்னேயும் காணலாம் = முன்பும் காணலாம் 


காலிக்குப் = கால்நடைகளான பசுக் கூட்டத்தின் 


 பின்னேயும் காணலாம் = பின்னாலும் காணலாம் 


மால்யானை = அன்பு கொண்ட யானை (கசேந்திரன்) 


முந்தருளும் = முந்தி வந்து அருள் புரியும் 


வேத முதலே எனஅழைப்ப = வேதத்தின் முதலே (ஆதி மூலமே) என்று அழைக்க 


வந்தருளும்  = வந்து அருள் செய்யும் 


செந்தா மரை. = சிவந்த தாமரை போன்ற திருவடிகளை 


யானைக்கு இறைவன் பெயர் தெரியாது. யாருக்குத் தான் தெரியும்? இறைவனுக்கு யார் பெயர் சூட்டுவது?  அந்த யானை "ஆதி மூலமே" என்று அழைத்தது. 


கூப்பிட வேண்டும் என்று நினைத்தாலே போதுமாம், கூப்பிடுவதற்குள் ஓடி வந்து உதவி செய்வானாம். "முந்தருள்" முந்திக் கொண்டு வந்து அருள் செய்வாராம். 


பால் நினைந்து ஊட்டும் தாய் போல. குழந்தை பசித்து அழ வேண்டாம். அதுக்கு பசிக்குமே, பசி வேளை வந்து விட்டதே என்று நினைத்து பால் தரும் தாயைப் போன்றவன் இறைவன். 


"ஐயோ, அந்த உயிருக்கு ஒரு துன்பம் வந்து விட்டதே...அது என்னை அழைக்கப் போகிறதே...என்று அது அழைக்கும் முன்  ஓடிச் சென்று உதவுவானாம் "


அறிவு கொண்டு காண வேண்டுமா ? வேதத்தைப் படித்து, அது என்ன சொல்ல வருகிறது என்று அறிந்து கொள்ளலாம். ஞான யோகம் 


முடியவில்லையா? 


ஆடு மாடு மேய்பது போன்ற காரியங்களின் பின்னாலும் அவன் இருக்கிறான்.  கர்ம யோகம். 


அதுவும் முடியவில்லையா?  படிக்கவும் முடியாது, வேலை செய்யவும் தெம்பு இல்லையா? 


உயிர்களின் மேல் அன்பு கொண்டு, அவற்றிற்கு உதவும் அந்த கருணை புரியுமா? பக்தி யோகம். 


தேடல் தான் முக்கியம். தாகம்தான் முக்கியம். 


எங்கும் இருக்கும் அந்த அன்பின் வெளிப்பாடு...எப்படியும் கண்டு கொள்ளலாம். 




Monday, February 21, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கட்டமே காதல்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - கட்டமே காதல் 


காதல் இன்பமானதா? துன்பம் நிறைந்ததா? 


காதல் செய்தவர்களுக்குதன் தெரியும் அதன் கஷ்டம்.  காதலை சொல்வது கடினம். சொன்னால் ஏற்றுக் கொள்ளப் படுமோ, நிராகரிக்கப் படுமோ என்ற பயம், கவலை. ஏற்றுக் கொள்ளப் பட்டாலும், தினம் தினம் பார்க்காவிட்டால் கவலை. தினம் தினம் பேச முடியாவிட்டால் கவலை. யாராவது ஒருவர் வெளியூர் சென்றுவிட்டால் திரும்பி வரும் வரை கவலை. மற்றவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் கவலை. 


இதில் பெரிய கவலை என்ன என்றால், மற்றவர் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்து விட்டால், பார்க்க வராமல் இருந்து விட்டால்...அது போல் பெரிய கவலை இல்லை. 


நான் சொல்லவில்லை. ஆழ்வார் சொல்கிறார். 


ஆழ்வார் தன்னை ஒரு பெருமாள் மேல் காதல் வயப்பட்ட ஒரு பெண்ணின் தாயக நினைத்துக் கொண்டு, அந்த பெண் பிள்ளை படும் பாட்டை சொல்கிறார். 


"பெருமாளே, என் மகள் உன் மேல் காதல் கொண்டு விட்டாள். நீயோ அவளை பார்க்க வர மாட்டேன் என்கிறாய். அவளும் கிடந்து புலம்புகிறாள். இந்த காதல் மிகக் கடினமானது என்று சொல்லி மயங்கி விழுகிறாள். உன் பேரை அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறாள். நீ வராவிட்டாலும், ,நீ வந்து விட்டதாகவே நினைத்து  மயங்கும். இவள் மேல் உனக்கு இரக்கம் இல்லையா? இவளை நீ என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறாய்?"


என்று கேட்கிறார். 


பாடல் 


இட்டகால் இட்ட கையளாய் இருக்கும்;

             எழுந்துலாய் மயங்குங்கை கூப்பும்;

        ‘கட்டமே காதல்’ என்றுமூர்ச் சிக்கும்;

             ‘கடல்வண்ணா! கடியைகாண்’ என்னும்;

        ‘வட்டவாய் நேமி வலங்கையா!’ என்னும்

             ‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்;

        சிட்டனே! செழுநீர்த் திருவரங் கத்தாய்!

             இவள்திறத் தென்சிந்தத் தாயே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_21.html


(Please click the above link to continue reading)




இட்டகால் = கால் இட்ட இடத்தில் அசைவில்லாமல் இருக்கும். 


இட்ட கையளாய் = கைகள் இருக்கும் இடத்தில் அசைவு இல்லாமல் இருக்கும் 


இருக்கும்; = இருக்கும் 


எழுந்துலாய்  = எழுந்து உலாவி 


மயங்குங்  = மயங்குவாள் 


கை கூப்பும்; = கைகளை கூப்புவாள் 


‘கட்டமே காதல்’ = இந்தக் காதல் ரொம்ப கஷ்டம் 


என்று மூர்ச் சிக்கும்; = என்று பெருமூச்சு விடுவாள் 


‘கடல்வண்ணா! = கடல் போன்ற வண்ணம் உடையவனே 


கடியைகாண்’ என்னும் = இந்தக் கடுமையை, கொடுமையை பார் என்று பிதற்றுவாள் 


‘வட்டவாய் நேமி  = வட்டமான சக்கரத்தை 


வலங்கையா!’ என்னும் = வலக் கையில் கொண்டவனே என்று சொல்லும் 


‘வந்திடாய்’ என்றென்றே மயங்கும்; = வந்து விட்டாய் என்று மயங்குவாள் 


சிட்டனே! = சிஷ்டனே 


செழுநீர்த் திருவரங் கத்தாய்! = செழுமையான நீரைக் கொண்ட திருவரங்கத்தில்  உறைபவனே 


இவள்திறத் தென்சிந்தத் தாயே? = இவளைப் பற்றி நீ என்ன நினைத்து வைத்து இருக்கிறாய் உன் மனத்தில் 


சிட்டனே என்பதற்கு சீடர்களுக்கு, பக்தர்களுக்கு அருள் புரிபவனே, நீ இப்படி அருள் புரியாமல் இருக்கலாமா என்று பொருள் சொல்கிறார்கள். 


ஒரு பெண்ணின் காதல் அவஸ்த்தையை எவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறார். 


அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே இருப்பது, போட்டது போட்டபடி இருப்பது, அவன் பேரைச் சொல்லி மகிழ்வது, செல் போனில் டிங் என்று சத்தம் வந்தால் ஒரு வேளை அவன் கிட்ட இருந்து ஏதாவது செய்தி வந்திருக்குமோ என்று ஆவலோடு பார்ப்பது, ஒரு வேளை நம்மை பிடிக்கவில்லையோ, மறந்து விட்டானோ, நம்மை வேண்டாம் என்று நினைத்து விட்டானோ என்று கவலைப் படுவது....எல்லாம் சொல்கிறார். 


பக்தி என்பது காதலின் அடுத்த படி தான் போலும். 


ஆதலினால் காதல் செய்வீர் என்று பாரதி சொன்னது போல், காதல் செய்வீர். 


சிற்றின்பமே புரியவில்லை என்றால் பேரின்பம் எப்படி புரியப் போகிறது?


Saturday, February 19, 2022

திருக்குறள் - வன்சொல்

திருக்குறள் - வன்சொல் 


நம்மிடம் யாராவது இனிமையாக, அன்பாக, ஆதரவாகப் பேசினால் நமக்கு எவ்வளவு இன்பமாக இருக்கிறது. அப்படி பேசுபவர்களிடம் நமக்கு ஒரு அன்பு பிறக்கிறது அல்லவா? அவர்களிடம் மேலும் மேலும் பேச வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா? 


நம்மிடம் எரிந்து எரிந்து விழுபவர்களிடம், கோபம் கொள்பவர்களிடம், தவறான யோசனை சொல்பவர்களிடம் நமக்கு அன்பு பிறக்குமா? அப்படிப் பட்டவர்களை நாம் விரும்புவோமா? 


இது நம் அனுபவப் பாடம். யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை. நம்மிடம் இனிமையாக பேசுபவர்களிடம் நாம் அன்போடு நட்போடு இருப்போம். மாறாக வேறு விதமாக பேசுபவர்களை விட்டு விலகி இருப்போம். 


அதுதானே யதார்த்தம். 


வள்ளுவர் அந்த யதார்த்தை அப்படியே திருப்பிப் போடுகிறார். 


உனக்கு ஒருவன் இன்சொல் சொன்னால் அது உனக்கு இனிமையாக இருக்கிறது அல்லவா? அப்படி இருக்க நீ எதற்கு மற்றவர்களுக்கு வன் சொல் சொல்கிறாய்? நீ அப்படி வன் சொல் சொன்னால், மற்றவர்கள் உன்னை வெறுப்பார்கள், உன்னை விட்டு விலகிப் போய் விடுவார்கள். வன் சொல் சொல்ல ஒரு காரணமும் இல்லை. அப்படி இருக்க, ஏன் வன் சொல்லை சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். 


பாடல் 


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_19.html


(Please click the above link to continue reading)



இன்சொல்  = தன்னிடம் சொல்லப் பட்ட இனிய சொல் 


இனிதீன்றல் = தனக்கு இனிமை தருவதை 


காண்பான் = அறிந்து கொண்டவன் 


எவன்கொலோ = எவன்?


வன்சொல் வழங்கு வது. = மற்றவர்களுக்கு வன் சொல்லை வழங்குவது? சொல்லுவது? 


நம்மை மாதிரித் தானே மற்றவர்களும். 


இனிய சொல்லினால் ஆயிரம் பலன் இருக்கலாம். ஆனால், வன் சொல் சொல்லுவதால் ஒரு பலன் கூட இல்லை. பலன் இல்லாத ஒன்றைச் செய்வானேன்? 



இனியவை கூறல் என்ற அதிகாரத்தில், இனியவை கூறுவதை மட்டும் அல்ல. இனியவை அல்லாதவற்றையும் கூறக் கூடாது என்கிறார் வள்ளுவர். 


எப்போதும் இனியவை கூறுவேன், இடையிடையே கொஞ்சம் வன் சொல்லும் வரும் என்றால் அது கூடாது என்கிறார். 


எதிர்மறையானதையும் கூறி, அவற்றை விலக்கும் படியும் கூறுவார். 


கல்வி பற்றி கூறினால் போதாது என்று கல்லாமை பற்றியும் கூறுவார். 


ஈகை,ஒப்புரவு பற்றி கூறினால் மட்டும் போதாது என்று பொறாமை, சினம் பற்றியும் கூறுவார். 


இன் சொல் கூற வேண்டும். 


வன் சொல் கூறவே கூடாது. 


இதை விட எப்படி தெளிவாகச் சொல்வது?


இன்சொல் சொல்ல முடியவில்லையா, பேசாமல் இருந்து விட வேண்டும். வன் சொல் சொல்லக் கூடாது. 


ஒரு முறை திருப்பிப் பார்ப்போம்.


கடவுள் வாழ்த்து 

வான் சிறப்பு 

நீத்தார் பெருமை 

அறன் வலியுறுத்தல் 

இல்வாழ்க்கை 

வாழ்க்கைத் துணை நலம் 

புதல்வர்களைப் பெறுதல் 

அன்புடைமை

விருந்தோம்பல் 


வரை பார்த்தோம். இப்போது இனியைவை கூறல் பற்றி படித்துக் கொண்டு இருக்கிறோம். 


கல்யாணம் பண்ணி, மனைவி, குழந்தைகள் என்று குடும்பம் வந்த பின், அன்பு பெருகும். அது வீட்டைத் தாண்டி வெளியிலும் பெருகும். சுற்றமும் நட்பும் வீடு தேடி வரும். விருந்தை உபசரிக்க வேண்டும். 


எப்படி என்றால், இனிய சொல் வேண்டும். இனிமையாக பேசாவிட்டால் நம்மை நாடி ஒருவரும் வரமாட்டார்கள். விருந்து என்பது இல்லாமல் போகும். 


விருந்து தடைப்பட்டால் இல்லறம் என்ற தேர் மேலே செல்லாது. 


தன் மனைவி, குழந்தை என்று வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்.  


வீடு பேறு என்பதெல்லாம் மறந்து விட வேண்டும். 


நம்மை கை பிடித்து வீடு பேற்றுக்கு அழைத்துச் செல்கிறார் வள்ளுவர். இனியவை கூறல் என்பது ஒரு படி. அதைத் தாண்டி மேலே போக நிறைய இருக்கிறது. 


இவற்றை எல்லாம் பழகிக் கொள்ள வேண்டும். நடைமுறையில் கொண்டு வர வேண்டும். 


Friday, February 18, 2022

திருக்குறள் - சிறுமையுள் நீங்கிய இன்சொல்

 திருக்குறள் - சிறுமையுள் நீங்கிய இன்சொல் 


கிண்டல் செய்வது, நையாண்டி, நக்கல், இதெல்லாம் ஒரு சிறந்த பேச்சாற்றல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு. 


ஒருவரை கிண்டல் செய்கிறோம் என்றால் அந்த நேரத்தில் அவரும் சேர்ந்து சிரித்து விட்டுப் போவார். ஆனால், உள்ளே அவர் மனம் வாடும். வலி இருக்கும். வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். 


நக்கல், நையாண்டி எல்லாம் அதே மாதிரித்தான். 


சில சமயம், முன் இருந்த கோபம் காரணமாக நல்லதே சொன்னாலும், அதில் ஒரு குதர்க்கம் வந்து விடலாம். 


"நல்லா படிச்சா நல்லா இருக்கலாம்...நீ எங்க படிக்கப் போற ..." என்று சொல்லும் போது, முதலில் சொன்ன இனிய சொல் பின்னால் வந்த சொல்லால் அடி பட்டுப் போய் விடுகிறது. 


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 


என்ன ஆனாலும் சரி, ஒருவரை சிறுமைப் படுத்தும் சொல், இழிவான சொல், புண் படுத்தும் சொல் இவற்றை ஒரு போதும் சொல்லக் கூடாது. அப்படி சிறுமை நீங்கிய இன்சொல் கூறினால், அது இம்மைக்கும், மறுமைக்கும் நமக்கு நன்மை தரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_18.html


(Please click the above link to continue reading)



சிறுமையுள் = சிறியன, இழிந்தன, குற்றம் உள்ளன 


நீங்கிய = இல்லாத 


இன்சொல் = இனிய சொல் 


மறுமையும் = மறுமைக்கும் 


இம்மையும்  = இம்மைக்கும் 


இன்பம் தரும் = இன்பம் தரும் 


இனிய சொல் சொல்ல வேண்டும்.அதோடு சேர்ந்து மற்ற குற்றம் உள்ள சொல் சேர்ந்து விடக் கூடாது. 


"இன்னிக்கு காப்பி நல்லா இருக்கு. ஒரு வழியா நல்ல காப்பி போட படிசிட்ட" என்று சொல்லும் போது, இனிய சொல்லோடு சிறுமை கலந்து விடுகிறது. 


இழிவான சொற்களை, ஒருபோதும் சொல்லக் கூடாது. 


விளையாட்டுக்கு, "அதுக்கு கூட உரிமை இல்லையா?",  என்றெல்லாம் சப்பை கட்டு கட்டக் கூடாது. 


உரிமை இருக்கிறது, ஜாலி, விளையாட்டு என்பதற்காக சொல்லலாம். அப்படிச் சொன்னால், இந்தப் பிறவியிலும், மறு பிறவியிலும் நமக்கு இன்பம் வராது. 


இன்பம் வேண்டாம் என்றால் சொல்லலாம். 


பிறர் மனம் புண் படும்படியோ, அவர்களை சிறுமைப் படுத்தவோ, இழிவாக சொல்லவோ ஒரு போதும் சொற்களை பயன்படுத்தக் கூடாது. 


நாம், வேற்றாளிடம் அப்படி சொல்வதை விட, நெருங்கிய சொந்தம், நட்பில் அப்படி சொல்லிவிடுவோம். 


மனைவிதானே, பிள்ளைதானே, மருமகள் தானே, என்று உரிமையில் ஏதேதோ சொல்லி விடுவோம். அது தவறு.  


சிந்திப்போம். 



Thursday, February 17, 2022

திருவாசகம் - குயிற் பத்து - மணிவாசகர் பாடிய மண்டோதரி

 திருவாசகம் - குயிற் பத்து - மணிவாசகர் பாடிய மண்டோதரி 


இது என்ன புதுக் கதை. 


மணிவாசகர் எதற்காக மண்டோதரியைப் பற்றி பாட வேண்டும்? 


ஒரு முறை மண்டோதரி சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தாள். சிவனும் அவளுக்கு காட்சி தந்தார். "என்ன வரம் வேண்டும்" என்று கேட்ட போது, "பெருமானே நீ குழந்தையாக வேண்டும். நான் உன்னை எடுத்து பிள்ளை போல் கொஞ்ச வேண்டும்" என்று வரம் கேட்டாள்.  அவளின் தாய்மை அப்படி. இறைவனையே குழந்தையாக பார்த்தது.


சிவனும், அவளுக்கு அந்த வரத்தைத் தந்தார். அவள் குழந்தை வடிவான சிவ பெருமானை எடுத்து கொஞ்சி மகிழ்ந்தாள் என்பது ஒரு கதை. 


அதை மணிவாசகர் குறிப்பிடுகிறார். 


"இந்த அழகிய உலகம் போற்றும் படி, நினைத்த உருவத்தை எடுக்கும் கடல் சூழ்ந்த இலங்கை வேந்தன் மனைவி மண்டோதரிக்கு பேரருள் இன்பம் அளித்த திருபெருந்துறை என்ற தலத்தில் எழுந்து அருளி இருக்கும் சிவனை, குயிலே நீ அவன் பெயரைச் சொல்லிக் கூவுவாய்" என்கிறார். 



பாடல் 


ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாம்

ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்

பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்

சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_17.html


(please click the above link to continue reading)


ஏர்தரும் = அழகிய 


ஏழுல கேத்த = ஏழு உலகும் போற்ற 


எவ்வுரு வுந்தன் னுருவாம் = எந்த உருவும் தன் உருவமாய் ஆக்கிக் கொள்ளும் 


ஆர்கலி  = கடல் 


சூழ் = சூழ்ந்த 


தென் னிலங்கை  = தென் புறம் உள்ள இலங்கை 


அழகமர் வண்டோ தரிக்குப் = அழகு குடி கொண்டிருக்கும் மண்டோதரிக்கு 


பேரரு ளின்ப மளித்த = பேரருள் இன்பம் அளித்த 


பெருந்துறை மேய = திருப்பெருந்துறையில் உள்ள சிவனை 


பிரானைச் = என்னைப் பிரியாதவனை 


சீரிய வாயாற் = உன் சிறந்த வாயால் 


குயிலே = குயிலே 


தென்பாண்டி நாடனைக் கூவாய்.  = தென் பாண்டி நாட்டானை (வரக்) கூவுவாய் 


நாமெல்லாம் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்போம். 


மண்டோதரி, இறைவனை பிள்ளை போல் கொஞ்ச வேண்டும் என்று ஆசைப் பட்டாள். இறைவனை அப்படியே கொஞ்ச முடியுமா? எனவே அவனை பிள்ளையாக்கி கொஞ்சி மகிழ்ந்தாள். 


காரைக்கால் அம்மையாரை சிவ பெருமான் "அம்மை" என்று அழைத்தார். 


இங்கே, மண்டோதரி தாயாகி சிவனை கொஞ்சினாள்.


தாய்மைக்கு இணை ஏது? 


Wednesday, February 16, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - விளையாட்டை விடுமின்

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - விளையாட்டை விடுமின் 


நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, மாலையில் விளையாடப் போவோம். விளையாட்டு மும்முரத்தில் நேரம் போவது தெரியாது. அப்போது, அம்மா வந்து "விளையாடினது போதும், விளக்கு வைக்கும் நேரம், வந்து கை கால் முகம் கழுவி படிக்க உக்காரு" என்று கூப்பிடுவாள். 


நாமும், இந்த உலகில் ஏதோ விளையாட்டாகத் தொடங்கினோம். ஒன்றில் இருந்து மற்றொன்றாக விளையாட்டு போய்க் கொண்டே இருக்கிறது. நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறோம். இரவு நெருங்குகிறது. விளையாட்டை நிறுத்திவிட்டு வேலையைப் பார்க்க வேண்டாமா? 


மணிவாசகர் அழைக்கிறார். "போதும் விளையாடியது. அடியவர்களாகிய நீங்கள், இந்த உலக விளையாட்டை விட்டுவிட்டு, இறைவன் திருவடியை அடைந்து, அவன் உளக் குறிப்பை அறிந்து அதன் படி நடவுங்கள். துன்பத்துக்கு இடமான இந்த உடலை விடுத்து, நம்மை சிவலோகம் கொண்டு செல்லும், அந்த பாம்பை அணிந்தவனது திருவடிகளை சரண் அடையுங்கள்" என்கிறார். 



பாடல் 




அடியார் ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை;

கடி சேர் அடியே வந்து அடைந்து, கடைக்கொண்டு இருமின் திருக் குறிப்பை;

செடி சேர் உடலைச் செல நீக்கி, சிவலோகத்தே நமை வைப்பான்

பொடி சேர் மேனிப் புயங்கன் தன், பூ ஆர் கழற்கே புகவிடுமே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_16.html


(Please click the above link to continue reading)


அடியார் ஆனீர் எல்லீரும் = அடியவர்களான நீங்கள் எல்லோரும் 


அகலவிடுமின் = தூர தள்ளிப் போடுங்கள் 


விளையாட்டை = விளையாட்டை 


கடி சேர் அடியே = சிறந்த திருவடிகளை 


வந்து அடைந்து = வந்து அடைந்து 


கடைக்கொண்டு இருமின் = கடைசி வரை பற்றிக் கொண்டு இருங்கள் 


திருக் குறிப்பை = எதை? அவன் உள்ளக் குறிப்பை 


செடி சேர்  உடலைச் = துன்பத்துக்கு இடமான இந்த உடலை 


செல நீக்கி = விட்டு நீங்கி 


சிவலோகத்தே நமை வைப்பான் = நம்மை சிவலோகத்தில் வைக்கும் 


பொடி சேர் மேனிப்  = சாம்பலை உடலில் பூசிக் கொண்ட 


புயங்கன் = பாம்பை அணிந்தவன் 


தன், பூ ஆர் கழற்கே = அவனுடைய பூக்கள் அணிந்த திருவடிகளில் 


புகவிடுமே = புக விடுவான் 


சிறு பிள்ளைகள் கடற்கரையில் விளையாட்டும் போது அங்குள்ள சிப்பி, சங்கு இவற்றை எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ பெரிய பொக்கிஷம் கிடைத்த மாதிரி மகிழ்வார்கள். கொஞ்சம் வயது ஆகும் போது தெரியும் அது ஒண்ணும் அவ்வளவு பெரிய செல்வம் அல்ல என்று. அதை தூக்கிப் போட்டு விடுவார்கள். 


அது போலத்தான், சிகரெட் பெட்டி, குளிர்பானங்களின் மூடிகள், பேனா, கை கடிகாரம், என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை சேர்ப்பதும்,  பின் அது ஒன்றும் இல்லை என்று அதை தூக்கி போட்டுவிட்டு மற்றதின் போவதும் இயற்கையாக இருக்கிறது. 


அப்படி என்றால், இன்று நாம் சிறந்தது, உயர்ந்தது, முக்கியமானது என்று எதைக் கருதிக் கொண்டு இருக்கிறோமோ அது இன்னும் கொஞ்சக் காலத்தில் அர்த்தம் இல்லாதது என்று நாமே தூக்கி எறிவோம்.


பிள்ளையிடம் கேட்டால் சங்கும், சிப்பியும் விலை மதிக்க முடியாத ஒன்று என்று தான் சொல்லும். அதே பின்னொரு நாளில் அதை தூக்கி குப்பையில் போடும்.  அறிவு வளர்ச்சி.  அறிவு வளராமல் இருந்தால் நாற்பது வயதிலும் சங்கையும், சிப்பியையும் சேர்த்துக் கொண்டு இருக்கும். 


உறவுகள், பணம், பதவி, புகழ் என்று நாம் இன்று இன்றியமையாதது என்று நினைப்பவற்றை நாளை நாமே வேண்டாம் என்று தள்ளி வைப்போம்.  


அப்படி வேண்டாம் என்று தூக்கி போடுவதை இன்று ஏன் இவ்வளவு மெனக்கெட்டு தேடி பாதுகாப்பனேன்? அதை விட்டு விட்டு என்றும் மதிப்பு குறையாத ஒன்றை தேடலாம் அல்லவா?


அது, இறைவன் திருவடி என்கிறார் மணிவாசகர். இந்த பணம், புகழ், பதவி என்று தேடும் விளையாட்டு விளையாடினது போதும். நல்லதை தேடுவோம் என்கிறார். 


இல்லை, இறைவன் திருவடி ஒன்றும் உயர்ந்தது அல்ல, பணமும், பதவியும், புகழும் தான் உயர்ந்தது, நிரந்தரமானது என்றால், நம் பிள்ளை பருவத்தை நாம் நினைக்க வேண்டும். அப்போது எது நிரந்தரம் என்று நினைத்தோம்? பின் ஏன் அதை விட்டுவிட்டோம் என்று. 


ஊர் போக நேரம் ஆகிவிட்டது. வில்லையாட்டை விட்டுவிட்டு, பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் யாத்திரைக்கு என்று அழைக்கிறார். 


Sunday, February 13, 2022

திருக்குறள் - இன் சொல் சொல்வதால் என்ன பயன் ?

 திருக்குறள் - இன் சொல் சொல்வதால் என்ன பயன் ?


திருவள்ளுவர் இன்சொல் சொல் என்கிறார். அப்படி சொல்வதால் என்ன பயன். எதுக்காக அவ்வளவு முயன்று இன்சொல் சொல்ல வேண்டும்? 


அல்லவை தேய அறம் பெருகும் என்று முந்தைய குறளில் கூறினார். 


அறம் பெருகிட்டு போகட்டும். அதனால் என்ன பயன் என்ற கேள்வி வரும் அல்லவா? அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர்.


"பிறருக்கு பயன் தரும் இனிய சொல்லைச் சொன்னால், விரும்பபட்டதைத் தந்து ஒருவனுக்கு நன்மை தரும்"


என்கிறார். 


பாடல் 


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_13.html


(pl click the above link to continue reading)


நயன் ஈன்று = விரும்பியதை தந்து 


நன்றி பயக்கும் = நலன் விளைவிக்கும் 


பயன்ஈன்று = பயன் தரக்கூடிய 


பண்பின் = இனிய சொல்லை 


தலைப்பிரியாச் சொல் = சேர்த்துச் சொன்னால் 



தெரிந்த சொற்கள் என்றாலும் புரியாத மாதிரி இருக்கும். 


நயன், நன்றி, பயன், தலைப்பிரியா என்ற சொற்கள் புரிந்த மாதிரி இருந்தாலும் கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. 


சொல்லுக்குப் பொருள் தெரிந்தாலும், குறளுக்கு பொருள் தெரிய வேண்டும் என்றால் பரிமேலழகரைத்தான் பிடிக்க வேண்டும். 


முதலாவது, "பண்பின்" என்ற சொல்லுக்கு இனிய சொற்களை கூறும் பண்பு என்று பொருள் சொல்கிறார். அது எப்படி, பண்பு என்றால் இனிய சொல் என்று கூறலாம்? பண்பு என்றால் எந்த பண்பாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லவா? "அதிகார முறைமையால் பெறப் பட்டது" என்கிறார். அதாவது, இந்த அதிகாரம் "இனியவை கூறல்" என்ற அதிகாரம். எனவே, இங்கே பண்பு என்பது இனிய சொற்களை கூறும் பண்பு என்று கொள்ள வேண்டும் என்கிறார். 


இலையில் இட்லி, சட்னி, சாம்பார், கேசரி இருக்கிறது. "இனிப்பு கொஞ்சம் கூட" என்றால் எதில் என்று கேட்க மாட்டோம் அல்லவா? கேசரியில் இனிப்பு கூட என்று அறிந்து கொள்கிறோம் அல்லவா? 


இரண்டாவது, "தலைப்பிரியா" என்றால் ஒரு வார்த்தை என்கிறார். தலை + பிரியா என்று பிரிக்கக் கூடாது. தலைப்பிரியா என்றால் சேர்ந்தே இருத்தல் என்று பொருள். 


எது சேர்ந்து இருக்க வேண்டும் ?


மூன்றாவது "பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியா". நாம் சொல்லும் சொல்லினால் பயனும் இருக்க வேண்டும். அதை இனிமையாகவும் சொல்ல வேண்டும். பயனும், இனிமையும் சேர்ந்தே இருக்க வேண்டும். 


நான்காவது, "பயன் ஈன்று" என்றால் என்ன? பயன் என்றால் பலன். புரிகிறது. என்ன பலன்? புரியவில்லை. பரிமேலழகர் கூறுகிறார் "கேட்பவனுக்கு இம்மை, மறுமை பயன் தந்து" என்கிறார். யாருக்குச் சொல்கிறோமா, அவனுக்கு இம்மைப் பயன் இருக்க வேண்டும் அல்லது மறுமைப் பயன் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாத சொல்லை சொல்லவே கூடாது. 


நாம் என்ன சொல்லப் போகிறோம். அதனால் கேட்பவருக்கு இம்மை, மறுமைப் பயன் ஏதாவது விளையுமா என்று யோசிக்க வேண்டும். எனக்குத் ஏதோ தெரியும் என்பதை காட்டுவதற்காக எதையும் சொல்லக் கூடாது. கேட்பவருக்கு பலன் விளைய வேண்டும். 


நான் பல பேரிடம் தேவை இல்லாமல் வாதம் செய்து இருக்கிறேன். அதனால் என்ன விளைந்தது என்று யோசிக்கிறேன். கேட்பவருக்கு ஒரு பலனும் இல்லை. அத்தனையும் வீண். இனிமேலாவது பயன் தராத சொற்களை பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். 


நான்காவது, பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியா சொல்லை சொன்னால் என்ன ஆகும்? "நயன் ஈன்று நன்மை பயக்கும்" என்கிறார். பரிமேலழகர் சொல்கிறார் "ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்" என்று. 


நீதி என்றால் உலகுடன் ஒத்து வாழ்தல். பயனுள்ள சொல்லை இனிமையாக கூறினால் உலகில் எல்லோரும் நம்மிடம் அன்பாக இருப்பார்கள். எனவே அதை "நீதி" என்றார். நீதி என்றால் ஏதோ சட்டம், நீதி, ஒழுங்கு என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ஊருடன் ஒத்துப் போகாததுதான் அநீதி. மறுமைக்கு அறத்தைத் தரும் என்கிறார். அதவாது இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் என்கிறார். 


இப்போது குறளை மீண்டும் வாசிப்போம், கொஞ்சம் சொற்களை மாத்திப் போட்டு. 


பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச்  சொல் 

நயன் ஈன்று நன்மை பயக்கும் 


முயற்சி செய்வோம். 





Wednesday, February 9, 2022

திருக்குறள் - நல்லதையும் எப்படிச் சொல்ல வேண்டும்

திருக்குறள் -  நல்லதையும் எப்படிச் சொல்ல வேண்டும் 


பேசுவதில்தான் எவ்வளவு இருக்கிறது !


நல்லதை பேசுவதற்கும் ஒரு முறை இருக்கிறது. 


"நீ நல்லா படிக்கேலேனா மாடு மேய்க்கத்தான் போற" என்று பல வீடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளை கடிந்து கொள்வார்கள். அவர்கள் நினைவு நல்லதுதான். பிள்ளை நல்லா படித்து பெரியவனாக வேண்டும் என்பதுதான் எண்ணம். சொன்னதும் நல்லது நடக்க வேண்டும் என்றுதான். ஆனால், சொல்லிய முறை சரி அல்ல. 


இது ஒரு உதாரணம். இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். 


மனைவிக்கு ஏதோ விடயத்தில் செலவழிக்க வேண்டும் என்று ஆசை - ஒரு வெளிநாடு சுற்றுலா, ஒரு வீடு, நல்ல கார் என்று ஏதோ ஒன்று வாங்க வேண்டும். கணவனுக்கோ பணத்தை சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் என்று. ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து மனக் கசப்பு ஏற்படலாம். இருவரும் நல்லதுக்குத்தான் பாடு படுகிறார்கள். ஆனால், அதை இனிமையாக பேசுவது இல்லை. 


வேலை பார்க்கும் இடத்தில், உறவில், நட்பில் என்று அனைத்து இடங்களிலும், நல்லதுதானே சொல்கிறேன் என்று அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கக் கூடாது. அதையும் இனிமையாக கூற வேண்டும். 


அது மட்டும் அல்ல, நாம் இன்று பார்க்க இருக்கும் குறள் பல ஆழ்ந்த அர்த்தங்களை உள்ளடக்கியது. விரிவாக பார்ப்போம்.


பாடல் 

 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_9.html


(Please click the above link to continue reading)


அல்லவை தேய = பாவம் தொலைய 


அறம்பெருகும் = அறம் பெருகும் 


நல்லவை = நல்லவற்றை 


நாடி = விரும்பி 


இனிய சொலின் = இனிமையாக சொன்னால் 


மேலோட்டமான பொருள் இவ்வளவுதான். 


இதில் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? ப்ளாகின் முடிவில் உங்களுக்கே ஒரு பிரமிப்பு வரும். 


முதலாவது, "அல்லவை தேய". அல்லவை என்றால் மற்றவை என்று அர்த்தம். அது என்ன மற்றது? அது புரிய வேண்டும் என்றால் அடுத்த சொல்லைப் பார்க்க வேண்டும். "அறம் பெருகும்" என்கிறார். அப்படி என்றால் அறத்துக்கு எதிரான பாவம் தேயும் என்று அர்த்தம். பெருகுதல். அதன் எதிர்பதம் தேய்தல். அறம் பெருகும் என்றதால் அதன் எதிர்பதமான பாவம் தேயும். 


இரண்டாவது, நம்மால் புண்ணியத்தை தேட முடியும். நல்ல காரியங்கள் செய்தால் புண்ணியம் வளரும். ஆனால், முன் செய்த பாவம் எப்படி போகும்? ஒரு புண்ணியத்துக்கு ஒரு பாவம் என்று கணக்கை நேர் செய்ய முடியாது. அது வேறு கணக்கு, இது வேறு கணக்கு. நாம் முன் செய்த பாவம் நம்மை தேடி வரும். ஆனால், புண்ணியம் செய்தால் அந்த பாவம் நம்மை பற்ற எண்ணி, முயன்று முயன்று தேய்ந்து போகும். அதன் வலிமை குன்றும் என்கிறார். நேற்றைய ப்ளாகில் "தவத்தின் முன் நில்லா பாவம்" என்ற நாலடியார் பற்றி சிந்தித்தோம்.  அறம் வளர பாவம் தேயும். 


நமக்கு இரட்டிப்பு பலன். ஒரு புறம் அறம் வளர்கிறது. இன்னொரு புறம் பாவம் தேய்கிறது. 


மூன்றாவது, "நல்லவை நாடி". ஒருவரிடம் பேசப் போகிறோம் என்றால் அவருக்கு அதனால் ஏதாவது ஒரு நன்மை கிடைக்க வேண்டும். மற்றவருக்கு நல்லது கிடைக்கும் என்றால் மட்டும் தான் பேச வேண்டும். அடுத்தவருக்கு இம்மை, மறுமை பலன் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே பேச வேண்டும். இதைச் சொன்னால் அவருக்கு இன்ன நன்மை கிடைக்கும் என்று அறிந்து, சொல்ல வேண்டும். சும்மா வெட்டிப் பேச்சு பேசக் கூடாது. மற்றவருக்கு நன்மை தரும் அளவுக்கு பேச நம் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். 


நான்காவது, "நாடி". நல்லது மட்ட்டும் இருந்தால் போதாது. அவர் அந்த நன்மை அடைய வேண்டும் என்ற விருப்பம் நம்மிடம் இருக்க வேண்டும். கடமைக்கு சொன்னது மாதிரி இருக்கக் கூடாது. "படி" நு சொல்ல வேண்டியது என் கடமை. சொல்லியாச்சு. அப்புறம் உன் விருப்பம் என்றால் அவன் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற விருப்பம் இல்லை. ஏதோ கடமை இருக்கிறது. அது அல்ல வள்ளுவர் சொல்ல வந்தது. ஒரு ஆசை, விருப்பம், நாட்டம் இருக்க வேண்டும். 


ஐந்தாவது, "இனிய சொலின்". நல்லது தான், நாட்டம் இருக்கிறதுதான் என்றாலும், அதையும் இனிமையாக சொல்ல வேண்டும். வார்த்தையில் மென்மை, அன்பு, உண்மை, வஞ்சனை இல்லாமை எல்லாம் இருக்க வேண்டும். எப்படிச் சொன்னால் என்ன?  என்ன சொல்றோம் என்பதுதானே முக்கியம். எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம் இல்லை என்று வாதம் செய்யக் கூடாது. நல்லதையும், இனிமையாக சொல்ல வேண்டும். 


அப்படிச் சொன்னால் என்ன ஆகும், 


வள்ளுவர் சொல்கிறார் அறம் வளரும், பாவம் தேயும் என்று. 


நாம் நடைமுறையில் சிந்தித்துப் பார்ப்போம். 


ஆறாவது, மற்றவர்களுக்கு நல்லது செய்யக் கூடிய ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்வோம்.  


ஏழாவது, நாம் மற்றவர்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்வதால் மற்றவர்கள் நம்மை விரும்புவார்கள். நமக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். நமக்கு ஒரு துன்பம் வந்தால் ஓடி வந்து காப்பாற்றுவார்கள். கை கொடுப்பார்கள். நாம் செய்த பாவம் நம்மை துரத்தி வந்து துன்பம் செய்தாலும், மற்றவர்கள் நமக்கு உதவி செய்து அந்த துன்பத்தில் இருந்து நம்மை காப்பார்கள். 


எட்டாவது, நமக்கு மட்டும் அல்ல. நம் சந்ததிக்கும், உறவுக்கும் பலன் தரும். "அந்தக் காலத்ல உங்க அண்ணன்/ அப்பா/தாத்தா/ அம்மா எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ செய்து இருக்கிறார்கள்..." என்று நாம் இன்று  மற்றவர்களுக்கு செய்யும் உதவி அடுத்த தலைமுறைக்கும் வரும். என் அனுபவத்தில் இதை நான் பல முறை கேட்டு இருக்கிறேன்.  நாம் போன பிறகும், நாம் செய்த நன்மைகள் நம் குடும்பத்தை எப்படியோ காத்து நிற்கும். 


ஏழே ஏழு சொல். ஒண்ணே முக்கால் அடி. எவ்வளவு கருத்துச் செறிவு. 


இன்னும் கூட இருக்கலாம். நான் படித்தவரை, எனக்கு தெரிந்தவரை இவ்வளவு. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ. 


ஒவ்வொரு குறளும் நம் வாழ்கையை நல்ல முறையில் திசை திருப்பி செம்மையாக வாழ வழி செய்யும். 


ஒரு குறளை நடை முறை படுத்தினால் போதும். 


"நல்லாத்தான் இருக்கு....அடுத்து என்ன குறள் " என்று தொடர்கதை வாசிப்பது போல வாசிக்காமல், குறளை வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்சி செய்ய வேண்டும். 




Wednesday, February 2, 2022

நாலடியார் - தவமும் பாவமும்

நாலடியார் - தவமும் பாவமும் 


இருள் இருந்தால் அதை எப்படி போக்குவது? 


அதை அடித்து விரட்ட முடியுமா? ஒரு பெட்டியில் போட்டு அடைத்து தூக்கி எறிந்து விட முடியுமா? இருளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நம்மால் ஒளியை கொண்டு வர முடியும். இருள் அது பாட்டுக்கு ஒரு புறம் இருக்கட்டும். நாம் ஒரு விளக்கை கொண்டுவந்து ஏற்றினால், இருள் தானே ஓடி விடும். இருளை பிடித்து தள்ள முடியாது. ஒளியைக் கொண்டு வந்தால் அது தானே ஓடிவிடும்.


அது போல,


நாம் முன் செய்த பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. செய்த நல்வினையும், தீ வினையும் பாவ புண்ணியமாக மாறி இந்தப் பிறவியில் இன்ப துன்பங்களைத் தரும். 


முன் செய்த நல் வினை, தீவினை 

பாவ புண்ணியம் 

இப்பிறவியில் இன்பம் துன்பம் 


வந்து நிற்கும் பாவத்தை என்ன செய்வது? பிடித்துத் தள்ள முடியுமா? வேண்டாம் என்று பயந்து ஓட முடியுமா? முடியாது. 


நாலடியார் சொல்கிறது 


"எப்படி விளக்கின் முன்னால் இருள் நிற்காதோ அது போல தவத்தின் முன்னால் பாவம் நிற்காது"


என்று. 


நம்மால் பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், தவம் செய்ய முடியும். தவம் செய்தால், பாவம் ஓடி விடும். 


சரி, இருள் விலகி விட்டதே என்று விளக்கை அணைத்தால் என்ன ஆகும்? ஓடிய இருள் உடனே வந்து விடும். அது போல, தவம் செய்வதை நிறுத்தினால் பாவம் மீண்டும் வந்துவிடும். 


விளக்கில் ஒளி குறைந்தால் இருள் வருவது போல, தவம் குறைந்தால் பாவம் வரும். 


பாடல் 


 விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்

தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை

தீர்விடத்து நிற்குமாம் தீது.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post.html


(pl click the above link to continue reading)



விளக்குப் = ஒளி பொருந்திய விளக்கு 


புக = வந்தவுடன் 


இருள் மாய்ந்தாங் = இருள் மாய்ந்து ஆங்கு 


கொருவன் = ஒருவன் 


தவத்தின்முன் = தவத்தின் முன் 


நில்லாதாம் பாவம் = பாவம் நிற்காது 


விளக்குநெய் = விளக்கின் நெய் 


தேய்விடத்துச் = குறைந்த போது 


சென்றிருள் = சென்ற இருள் 


பாய்ந்தாங்கு = பாய்ந்து அங்கு 


நல்வினை = நல்லவினை 


தீர்விடத்து = தீரும் இடத்தில் 


நிற்குமாம் தீது. = நிற்குமாம் தீது 


அதாவது, தவம் என்ற நல்வினை தீரும் இடத்தில், மீண்டும் பாவம் என்ற தீவினை வந்து நிற்கும். 


தவம் செய்வதை ஒருகாலும் நிறுத்தக் கூடாது என்பது கருத்து. 


நல்ல காரியங்களை எப்போதோ ஒரு தரம், நம் வசதிக்கு செய்வதும், நிறுத்துவதும் கூடாது. 


தமிழில் "கடைபிடிக்க வேண்டும்" என்று ஒரு சொல் வழக்கம் உண்டு. 


கடைபிடித்தல் என்றால் கடைசிவரை பிடிக்க வேண்டும். விட்டுவிடக் கூடாது.