Thursday, December 31, 2020

திருக்குறள் - விலங்கும் மக்களும்

திருக்குறள் - விலங்கும் மக்களும் 


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

பெரும்பாலானோர் சொல்லுவது, மனிதனுக்கு சிரிக்கத் தெரியும், விலங்குகளுக்கு அது தெரியாது என்பது தான். 


பல வேறு பாடுகள் இருந்தாலும், வள்ளுவர் ஒன்றைச் சொல்கிறார்.


கல்வி அறிவு. அதுதான் வேறுபாடு என்கிறார். விலங்குகள் தானே கற்றுக் கொள்ளவதில்லை. நூல் அறிவு இல்லாதவை. சரி/தவறு, நல்லது/கெட்டது, உயர்ந்தது/தாழ்ந்தது என்று ஒன்றும் தெரியாது. மனதுக்கு பட்டதை செய்யும். 


மனிதராய் பிறந்தும், கல்வி அறிவு இல்லாதவர்களை என்ன என்று சொல்லுவது? விலங்குகளுக்கு கல்வி அறிவு இல்லை. கல்வி அறிவு இல்லாதவை விலங்குகள்.


வள்ளுவர் அப்படி நேரே சொல்லவில்லை. 


விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதோ அந்த அளவு வேறுபாடு நூல் அறிவு பெற்றவர்களுக்கும் , அந்த அறிவு பெறாதவர்களுக்கும் இருக்கிறது என்கிறார். 


நுண்மையான வேறுபாடு. 


பாடல் 

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்


பொருள் 


click the following link to continue reading


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_31.html


விலங்கொடு = விலங்கோடு ஒப்பிட்டு பார்த்தால் 

மக்கள் அனையர் = மக்கள் எப்படியோ அப்படி 

இலங்குநூல் = சிறந்த நூல் 

கற்றாரோடு  = கற்றவர்களோடு 

ஏனை யவர் =கல்லாதவர் 


நாங்களும் தான் எவ்வளவோ வாரப் பத்திரிகை, நாவல், whatsapp இல் வரும் அறிவு பூர்வமான   செய்திகள்,  செய்தித்தாள் போன்றவற்றைப் படிக்கிறோம்  என்று கூறலாம். 


"இலங்கு நூல்" என்றார். இலங்குதல் என்றால் தெளிவு தருதல், வெளிச்சம் தருதல், உண்மையை விளங்கச் செய்தல் என்று பொருள். 


இலங்கு + அண்  = இலக்கணம். மொழியை விளங்கச் செய்வது இலக்கணம். 


இலக்கம் - இருக்கும் இடத்தை சரியாக சுட்டுவது, அளந்து சொல்லுவது. குத்து மதிப்பாக இல்லாமல், சரியாக சொல்லுவதால் அது இலக்கம்.  இலக்கம் என்றால் குறிக்கோள் என்றும் பொருள் உண்டு. 


இலங்கு நூல் என்றால் ஏதோ ஒரு நூல் அல்ல.  தெளிவு தரும் நூல் சந்தேகத்தை தீர்க்கும் நூல், வழி நடத்தும் நூல். 


அவற்றைப் படிக்காதவர்களும், விலங்கும் ஒன்று தான் என்று வள்ளுவர் சொல்லாமல் சொல்கிறார். 

கொஞ்சம் கடினமான வார்த்தைப் பிரயோகம்தான். 

சிந்தித்துப் பார்ப்போம். 


கண்ட நூல்களையும் படிப்பதை விட்டு விட்டு நல்ல நூல்களை தேடிச் சென்று படிப்போம். 


குப்பைகளை படிப்பதை விட படிக்காமல் இருப்பதே நல்லது. 






Tuesday, December 29, 2020

திருக்குறள் - நாள் என்ற வாள்

 திருக்குறள் - நாள் என்ற வாள் 


கொஞ்சம் கொஞ்சமாக நடக்கும் எதுவும் நமக்கு அவை நடப்பதாகவே தெரிவதில்லை. திடீரென்று ஒரு நாள் எல்லாம் மாறிப் போய் இருக்கும்.


நாளும் எடை கூடிக் கொண்டே போகும். ஒரு நாள் 10 கிராம், 15 கிராம் என்று கூடும் போது தெரியாது. ஒரு மாதத்தில் 300 கிராம், மூன்று மாதத்தில் கிட்டத்த்தட்ட ஒரு கிலோ, ஒரு வருடத்தில் 4 கிலோ என்று கூடிய பின் தான் தெரியும், அடடா, உடல் எடை கூடி விட்டதே என்று. 


இனிப்பு, எண்ணெய் பலகாரம் எல்லாம் சாப்பிடும் போது தெரியாது. இன்னிக்கு ஒரு நாள் மட்டும், இந்த ஒரு ஐஸ் க்ரீம் மட்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே போய் , பின் பெரிதாகி விடும். 


அது போல, 


இந்த காலம் ஒன்று இருக்கிறதே, அது கூறு படாதது. நாம், நம் வசதிக்காக  நாள், கிழமை, வாரம், மாதம், வருடம், மணி, நிமிடம், நொடி என்று பெயர் வைத்து  இருக்கிறோம். காலத்தில் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது. இந்தப் பிரிவுகள் இல்லாத காலத்தை  நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். 


நீங்கள் பிறந்தது முதல் இறப்பது வரை உள்ள காலத்தை ஒரு அலகு (unit ) என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு பெயர் வைத்துக் கொள்ளலாம். 


இந்த பூமியில் ஒரு நாள் என்பதும், சனி கிரகத்தில் ஒரு நாள் என்பதும் ஒன்று அல்ல. 


இந்த காலம் என்பது ஒரு நீண்ட துணி போல இருக்கிறது. தொடக்கமும் முடிவும் இல்லை. 


நாம் பிரித்து வைத்துக் கொண்டு  பிறந்த நாள், திருமண நாள், இத்தனை நாள் வாழ்ந்தோம், இந்த உடம்பு வலி சரியாக இத்தனை நாள் ஆகும் என்றெல்லாம் கணக்குப் போடுகிறோம்.


போடலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. 


ஆனால், 


வள்ளுவர் சொல்கிறார்,


இந்த காலம் இருக்கிறதே அது ஒரு கூரிய கத்தி போன்றது. அந்த கத்தியின் கூரான பக்கத்தில்   நம் உயிர் இருக்கிறது. நமக்குத் தெரியாமலேயே அந்த காலம் என்ற  வாள் நம் உயிரை நாளும் வெட்டிக் கொண்டே இருக்கிறது. 


ஒவ்வொரு நாளும், அந்த வாள் கொஞ்சம் வெட்டுகிறது. மிக மிக சிறிய வெட்டு என்பதால்  நமக்குத் தெரிவதில்லை. 


கொஞ்சம் நரைக்கும்,  கண்ணாடி போட வேண்டி வரும்,  அங்கொன்றும், இங்கொன்றும்  பல் ஆடும், தோல் சற்றே சுருங்கும். சட்டென்று சிலவை ஞாபகம் வராது. 


நாம் கண்டு கொள்ளுவதில்லை. 


இந்த வாள் , உயிரை அரிந்து கொண்டே இருக்கிறது. 


ஒரு நாள் மொத்தமாக அரிந்து போட்டு விடும். 


ஒவ்வொரு நாளும் அது அரிவதை உணர்பவர்கள் வெகு சிலரே. மொத்தமாக அரிந்து விடுமே,  அதற்குள் ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைப்பவர்கள் , ஏதாவது செய்வார்கள். 


மற்றவர்கள்,  நாளைக்கு என்ன சமையல் செய்யலாம், என்ன சாப்பிடலாம், என்று  சிந்தித்துக் கொண்டு இருப்பார்களோ?


யாருக்குத் தெரியும்?


பாடல் 


நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_29.html

click the above link to continue reading




நாள்என  = நாள் என்று 

ஒன்றுபோல் காட்டி = ஒன்று உண்மையாக இருப்பது போல காட்டி 

உயிர்ஈரும் = உயிரை அறுக்கும் 

வாளது = வாள் அது 

உணர்வார்ப் பெறின் = உணர்வு உடையவர்கள் அதைப் பெற்றால் 


"காட்டி" என்பதால், அது உண்மையில் இல்லை என்பது புலனாகும். 


"பெறின்" என்பதால், பெற மாட்டார்கள் என்று அர்த்தம். அல்லது, பெறுவது கடினம் என்று அர்த்தம்.  படித்தால் தேர்ச்சி பெறலாம் என்றால், படிப்பது கடினம் என்று  அறிந்து கொள்ளலாம். 


"உணர்வார்" என்பதால், இது உணரப் பட வேண்டிய ஒன்று. படித்து "அறிய" பட வேண்டிய ஒன்று அல்ல.


காலம் உயிரை அறுப்பதை கற்பனை செய்து பாருங்கள். 


ஆழமான குறள் .




Saturday, December 26, 2020

திருக்குறள் - நிலையின என்று உணரும்

திருக்குறள் - நிலையின என்று உணரும் 


ஒரு திருமண வீட்டுக்குப் போகிறோம்.  விழா சிறப்பாக நடந்து முடிந்தது. பொண்ணு மாப்பிள்ளை எல்லோரும் அவரவர் ஊருக்கு கிளம்பிப் போய் விட்டார்கள். நீங்கள் மட்டும், அங்கேயே இருப்பீர்களா அல்லது நீங்களும் கிளம்பி விடுவீர்களா?  அடா, என்ன அருமையான அலங்காரம், சுவையான சாப்பாடு,  நல்ல இசை, எத்தனையோ சொந்த பந்தம்...இவற்றை எல்லாம் எப்படி விட்டு விட்டுப் போவது என்று அங்கேயே இருப்பீர்களா அல்லது, வந்தமா, எல்லோரையும் பார்த்தோமா, மண மக்களை வாழ்த்தினோமா, மொய் எழுதினோமா, சாப்பிட்டோமோ , கிளம்பினோமா என்று இருப்பீர்களா?


ஏன் அந்த கல்யாண மண்டபத்திலேயே இருக்க வேண்டியது தானே. சுகமாகத்தானே இருந்தது. 

இருக்க மாட்டோம். ஏன் என்றால், அது நிரந்தரமான இடம் அல்ல. வந்த வேலை முடிந்தால் கிளம்பி விட வேண்டும். 

சுற்றுலா போகிறோம். புதிய இடம். அற்புதமான சூழ்நிலை. சுவையான உணவு. பெரிய கட்டிடங்கள், மலைகள், அருவி, கடற்கரை.  அங்கேயே இருந்து விடுவோமா? அல்லது ஆயிரம் ஆனால் நம்ம வீடு மாதிரி ஆகுமா என்று கிளம்பி விடுவோமா?


சுற்றுலா சென்ற இடம் எவ்வளவு இனிமையாக இருந்தாலும், அங்கிருந்து கிளம்பி விடுவோம் அல்லவா? 

ஏன் என்றால் அது நிரந்தரமான இடம் அல்ல. 

இல்லை இந்த கல்யாண மண்டபத்திலேயே தான் இருப்பேன் அல்லது இந்த சுற்றுலா தலத்திலேயே தான் இருப்பேன் என்று யாரவது ஆடம் பிடித்தால், அவர்களை பற்றி  என்ன நினைப்பீர்கள்? 


ஏதோ கொஞ்சம் நட்டு கழண்ட கேஸ் என்று தானே நினைப்பீர்கள். 


இந்த உலகில் உங்கள் இடம் நிரந்தரம் என்று உங்களுக்குத் சொன்னது யார்?

இந்த உலகம் தோன்றிய காலம் தொட்டு நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? அல்லது இந்த உலகம் முடியும் வரை இருப்பீர்களா? 


இது உங்களின் நிரந்தர இடம் அல்ல. வந்தீர்கள், பார்த்தீர்கள், அனுபவித்தீர்கள்,  கிளம்ப வேண்டியதுதான். 


இல்லை, இங்கேயே இருப்பேன்.  அது எப்படி, அதுவும் இதுவும் ஒண்ணா, நான் இங்கேயே இருப்பேன், அது மட்டும் அல்ல, இந்த கல்யாண வீட்டுக்கு வந்தவர்கள் யாரும்  போகக் கூடாது, எல்லோரும் எப்போதும் இங்கேயே இருக்க வேண்டும்  என்று சொல்லுவது யாரும் எங்கும் போகக் கூடாது என்று சொல்லுவீர்களா?


அப்படிச் சொன்னால், அது மதியீனம் அல்லவா?


பாடல் 

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்

புல்லறி வாண்மை கடை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_26.html


click the above link to continue reading


நில்லாத வற்றை  = நிலை இல்லாதவற்றை 

நிலையின = நிலையானவை 

என்றுணரும் = என்று உணரும் 

புல்லறி வாண்மை = குறைந்த அறிவு, சிற்றறிவு 

 கடை. = கீழ்மையானது. 


இந்த உலகத்தில் உங்கள் இடம் நிரந்தரமானது அல்ல. கொஞ்ச நாள் சுத்தி பாத்துட்டு  கிளம்பி விட வேண்டும். எல்லோருக்கும் தான். 

இல்லை, நான் என்றென்றும் இங்கேயே இருப்பேன், என் கூட உள்ளவர்களும் இங்கேயே இருக்க வேண்டும்  என்று சொல்லும் அறிவு - "கடை" 


அது மட்டும் அல்ல, எத்தனை நிலை இல்லாதவற்றை பிடித்துக் கொண்டு, அது நிலைக்க வேண்டும்  பாடு படுகிறீர்கள். 


இளமை நிற்குமா? எத்தனை டை அடித்தாலும், பௌடர் போட்டாலும், லிப் ஸ்டிக்,  facial, நகை, நட்டு என்று போட்டாலும், அது நிற்காது. நில்லாது ஓடி விடும். அதுக்கா இந்தப் பாடு?


செல்வம். நிற்குமா? என்ன பாடு பட்டாலும், போகும் போது போய் விடும். வாழ் நாளை எல்லாம்  அதற்காக செலவழிக்க வேண்டுமா?


இந்த உடம்பு?  எப்போது வேண்டுமானாலும் சரியும். எனவே தான் அதற்கு சரீரம் என்று  பெயர். 


நிலை இல்லாதவற்றை , உங்களால் நிலைக்கப் பண்ண ஒரு காலும் முடியாது. 


முதலில் எது எல்லாம் நிலை இல்லாதது என்று அறிய வேண்டும். 


அது, அறிவின் முதல் படி. 



Friday, December 25, 2020

கம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர்

 கம்ப இராமாயணம் - நம் பகை பேர்த்தனர் 


துன்பம் வரும்போது துவண்டு போவது இயற்கை. ஏன் நமக்கு மட்டும் இப்படி நிகழ்கிறது என்று மனம் சோர்ந்து போவதும் இயல்புதான். யாராவது ஆறுதல் சொன்னால் கூட "உனக்கு வந்தால் தெரியும்..." என்று மனம் சலித்துக் கொள்ளும். 

என்ன தான் செய்வது? வந்த துன்பமோ போவதாகத் தெரியவில்லை. நாம் செய்வதற்கோ ஒன்றும் இல்லை. ஆறுதல் சொல்லியும் ஒன்றும் ஆகப் போவது இல்லை. 

மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகும். அது வேறு பல துன்பங்களில் நம்மை ஆழ்த்தி விடும். 


அந்த மாதிரி சமயங்களில் நல்ல இலக்கியங்கள் மனதை சற்றே இளகச் செய்யும். ஒரு புன்முறுவலை கொண்டு வரும். நமக்கு வந்தது ஒன்றும் பெரிதில்லை. இதை விட பெரிய துன்பம் எல்லாம் வந்து இருக்கிறது மற்றவர்களுக்கு என்று மனம் கொஞ்சம் தெம்பு பெரும். 


கிட்கிந்தா காண்டம்.  கார் காலம். 


மழை பொழிகிறது. காடு.  குளிர். எங்கும் ஈரம். மரம் செடி கொடிகளில் நீர்   சொட்டிக் கொண்டு இருக்கிறது. தரை எல்லாம் சேறும் சகதியுமாக இருக்கிறது. சில நாட்களாக மழை விட்ட பாடில்லை.  

இராமன் தனித்து இருக்கிறான். 

இதில் எங்காவது சந்தோஷத்துக்கு இடம் இருக்கிறதா? சீதையைக் காணவில்லை. இராமன் தனித்து இருக்கிறான். மழைக் காலம். இதில் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? 

கம்பன் ஆரவாரமான மகிழ்ச்சியை காட்டுகிறான் இந்த இடத்தில்.


எப்படி?


"இராமனும்,  வானரங்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள். இனி நம் பகைவர்கள் எல்லோரும் அழிந்தார்கள் என்று தேவர்கள் பேசி, ஆராவாரம் செய்தது போல மேகம் இடி இடித்தது. இராமனையும் வானரங்களையும் தேவர்கள் வாழ்த்தி மலர் பொழிவது போல மழை பொழிந்தது" 

என்று கம்பன் இந்த இடத்தைக் காட்டுகிறான். 


பாடல் 


தீர்த்தனும் கவிகளும் செறிந்து, நம் பகை

பேர்த்தனர் இனி' எனப் பேசி, வானவர்

ஆர்த்தென, ஆர்த்தன மேகம்; ஆய் மலர்

தூர்த்தன ஒத்தன, துள்ளி வெள்ளமே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_81.html

click the above link to continue reading


தீர்த்தனும் = இராமனும் 

கவிகளும் = வானரங்களும் 

செறிந்து = ஒன்று சேர்ந்ததால் 

நம் பகை = நம் (தேவர்ககளின்) பகை 

பேர்த்தனர் இனி' = அழித்தனர் இனி 

எனப் பேசி, = என்று பேசிக் கொண்டு 

 வானவர் = தேவர்கள் 

ஆர்த்தென, = சந்தோஷத்தில் சப்தம் எழுப்பிய மாதிரி 

ஆர்த்தன மேகம் = மேகங்கள் இடி இடித்தன 

ஆய் மலர் = ஆராய்ந்து எடுக்கப்பட்ட மலர்களை 

தூர்த்தன ஒத்தன = பொழிந்ததை போன்று இருந்தது 

துள்ளி வெள்ளமே. =துள்ளி வரும் மழை துளிகள் 


இதனால் இராமனின் சோகம் போய் விட்டது என்று கூறவில்லை. 


இந்த சோக சூழ்நிலையிலும் இப்படி ஒரு அழகான பாடலைத் தரும் கம்பனின்  கவித் திறம்  இரசிக்கும் படி இருக்கிறது அல்லவா.


ஏதோ ஒரு வகையில், இலக்கியங்கள் மனதுக்கு ஒத்தடம் தருகின்றன. 


"வாழ்க்கைனா அப்படித்தான் இருக்கும் " என்று ஒரு பக்குவத்தைத் தருகின்றன. 


உண்டா, இல்லையா?

திருக்குறள் - செல்வத்தின் இயல்பு

 திருக்குறள் - செல்வத்தின் இயல்பு 


ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயல்பு இருக்கும். நீரின் இயல்பு கீழ் நோக்கி பாய்வது. நெருப்பின் இயல்பு சுடுவது.


செல்வத்தின் இயல்பு? 


செல்வத்தின் இயல்பு, ஒரு இடத்தில் நில்லாமல் சுற்றிக் கொண்டே இருப்பது. செல்வம் என்றாலே "செல்வோம்" என்று தான் அர்த்தம். 


செல்வம் நம் கையில் வந்தவுடன், அது நம்மை விட்டு செல்வதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். 

செல்வம் சக்தி வாய்ந்தது. அதை வைத்து நாம் பலவற்றை சாதித்துக் கொள்ளலாம். என்ன சாதிப்பது என்பது தான் கேள்வி. 

பெரும்பாலானோர் அதை பல விதமான சொத்துக்களில் முதலீடு செய்வார்கள். வீடு, மனை, நிலம், தங்கம், ஷேர், bonds என்று முதலீடு செய்வார்கள். வட்டி வரும், சிலவற்றின் மதிப்பு உயரும். உங்கள் பணத்தைக் கொண்டு யாரோ   அதை நல்ல விதமாக செலவழித்து அதன் மூலம் நிறைய பணம்   சம்பாதித்து, அந்த இலாபத்தில் உங்களுக்கு கொஞ்சம் தருகிறார்கள். 


அதாவது, நீங்கள் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக வாழ் நாள் எல்லாம் உழைக்கிறீர்கள். 


வள்ளுவர் சொல்கிறார், "நிலையற்ற செல்வத்தை பெற்றால், நிலையான செயல்களை செய்ய வேண்டும்" என்று. 


பாடல் 


அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப ஆங்கே செயல்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_25.html

Click the aove link to continue reading


அற்கா = நிலையில்லா 

இயல்பிற்றுச் = இயல்பை உடையது 

செல்வம் = செல்வம் 

அதுபெற்றால் = அந்த செல்வத்தைப் பெற்றால் 

அற்குப = நிலைத்தவற்றை 

 ஆங்கே = அப்போது 

செயல் = செய்ய வேண்டும்.


"அது பெற்றால்" ....பெற்றால் என்பது சந்தேகமானது. கடினமானது என்று பொருள்.  "நன்றாக படித்தால், முதல் மாணவனாக வரலாம்" என்று சொன்னால், படிப்பது என்பது எளிதான காரியம் அல்ல என்பது புலப்படும். 


"நிலையான" என்றால் என்ன?


இதுதான் மிகப் பெரிய கேள்வி. வாழ்வில், எது நிலையானது? 


எவை நிலையானவை என்று வள்ளுவர் சொல்லவில்லை. நாம் தான் சிந்தித்து கண்டு பிடிக்க வேண்டும். 


இளமை? ஆரோக்கியம் ? பிள்ளைகள் ? வீடு ? தங்கம், தகரம் போன்ற உலோகங்கள்? சுவர்க்கம்? புண்ணியம் ?  பாவம் ? அறிவு?


எது நிலையானது? எப்போதும் இருப்பது? மாறாதது?


இதற்கு விடை கண்டு பிடித்து விட்டால், நிலையில்லாதவற்றை நாம் செய்து கொண்டு இருக்க மாட்டோம். 


இவ்வளவு சொன்ன வள்ளுவர் அதை ஏன் சொல்ல்லாமல் விட்டார்? அவருக்கே தெரியாதோ?


இல்லை. வள்ளுவர் எதைச் சொன்னாலும், " அது எப்படி நிலையானது ?" என்று நம்  மனம் கேள்வி கேட்கும். வாதம் செய்யும். எதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளாது. 


நாமே கண்டு பிடித்தால்தான் உண்டு. 


கண்டு பிடிப்பது மிக எளிமையானது. வாதம் செய்யாமல் இருந்தால். 


முயன்று பாருங்கள்.  முரண்பாடு கொண்டு, எதிர் வாதம் செய்யாமல், அமைதியாக  தேடினால் கிடைக்கும். 




Monday, December 21, 2020

திருக்குறள் - செல்வம்

 திருக்குறள் - செல்வம் 


நிலை இல்லாதவற்றை நிலை என்று நினைக்கும் புல்லறிவாண்மை கடை என்று முதல் குறளில் கூறினார்.


அப்படி என்றால் எது எல்லாம் நிலை இல்லாதது என்ற கேள்வி பிறக்கும் அல்லவா?


இரண்டு விடயங்கள் நிலை இல்லாதவை - ஒன்று செல்வம் , இன்னொன்று இந்த உடம்பு. 


நாம் இரண்டும் நிலையானவை என்று நினைத்து அவற்றை சேர்க்க, பாதுகாக்க படாத பாடு படுகிறோம்.


மருந்து, மாத்திரை, ஸ்கேன், அது இது என்று இந்த உடம்பை எப்படியாவது நிரந்தரமாக இருக்கப்  பண்ணி விடலாம் என்று நினைக்கிறோம். 


இந்த உடம்பு அழியும்.  என்ன செய்தாலும் அழியும். மாற்றவே முடியாது. 


அதே போல் தான் செல்வம். பணத்தை அதில் முதலீடு செய்யலாம், இதில் போடலாம் என்று போட்டு, அதை எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும் அது  நம்மை விட்டு போகத்தான் போகிறது. 

அது எப்படி போகும். அங்க வீடு வாங்கி போட்டு இருக்கிறேன், இங்கே மனை, அந்த  கம்பெனி ஷேர், இந்த வங்கியில் நிரந்தர வைப்பு , கொஞ்சம் தங்கம் என்று  பிரித்து பிரித்து போட்டு இருக்கிறேன். எப்படி இந்த செல்வம் என்னை விட்டுப் போகும்  என்று கேட்கலாம்.

நம்மை விட ஆயிரம் மடங்கு செல்வம் இருந்த அரசர்கள் இருந்தார்கள். அவர்களிடம் கோட்டை, கொத்தளம், ஆள், அம்பு, சேனை என்று எல்லாம் இருந்தது. எங்கே அந்த செல்வம்?


இராஜ இராஜ சோழனின் வாரிசுகள் எங்கே? அசோக சக்ரவர்த்தியின் பிள்ளைகள் எங்கே?  

வரலாறு பேரரசுகளை புரட்டிப் போட்டு இருக்கிறது. பெரும் பணக்காரர்கள் இருந்த இடம் இடம் தெரியாமல் செத்தார்கள். 

நாம் நம் செல்வத்தை காத்து விட முடியும் என்று நினைக்கிறீர்களா? ஒருக்  காலும் முடியாது. 


உள்ளங்கை நீர் போல அது ஒழுக்கிக் கொண்டே இருக்கும். 

நன்றாக சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கு செல்வம் எப்படி வந்தது என்று.  வருகின்ற காலத்தில் பல இடங்களில் இருந்து வரும். 

சம்பளம் வரும், வட்டி வரும், வாடகை வரும்,  ஷேர் இருந்தால் டிவிடெண்ட் வரும்,  வாங்கிப் போட்ட சொத்துக்களின் மதிப்பு உயரும். இப்படி பல வழிகளில்  செல்வம் வரும். இங்கிருந்து கொஞ்சம், அங்கிருந்து கொஞ்சம் என்று  பல விதங்களில் வந்து குவிந்து விடும். எனக்கு இவ்வளவு சொத்தா என்று நீங்களே வியப்பீர்கள்.


மனதில் நன்றாக பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு நாள் இவை அனைத்தும் போகும். 


வள்ளுவர் அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்.


சினிமா தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறது என்று வைத்துக் கொள்வோம். படம் பார்க்க பலர் வருவார்கள். வரும்போது ஒவ்வொருவராக வருவார்கள். ஆறு மணி படம் என்றால் சிலர்  ஐந்து மணிக்கு வருவார்கள், சிலர் 5:10 க்கு வருவார்கள், சிலர் 5:30 வருவார்கள். 


படம் முடிந்தவுடன் எல்லோரும் ஒன்றாகப் போய் விடுவார்கள். முதலில் வந்தவன் முதலில் போகவும், கடைசியாக வந்தவன் கடைசியாகப் போகவும் என்று இருக்காது. 


வரும் போது ஒன்று ஒன்றாக வருவார்கள். போகும் போது ஒன்றாகப் போவார்கள். 


அது போல, செல்வம் வரும் போது தனித்தனியாக வரும். போகும் போது மொத்தமாக போய் விடும். 

பாடல் 


கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_21.html

(click the above link to continue reading)

பொருள் 


கூத்தாட்டு = கூத்தாடும் 

அவைக் = கொட்டகை, இன்று தியேட்டர் 

குழாத்து = கூட்டம் 

அற்றே  = போல 

பெருஞ்செல்வம் = பெரிய செல்வம் 

போக்கும்  = போகும் 

அது = அந்த செல்வம் 

விளிந் தற்று = ஒழிந்து போகும். 


கொட்டகைக்கு எப்படி பல இடங்களில் இருந்து ஆட்கள் வருவார்களோ, அது போல  செல்வம் பல இடங்களில் இருந்து வரும். 


படம் முடிந்தவுடன் எல்லோரும் அவரவர் இடத்துக்குப் போவது போல, செல்வம் வந்த வழியே போய் விடும். 


தனித்தனியே வந்து, ஒன்றாகப் போய் விடும்.


சரி, ஒத்துக் கொள்வோம். அதுக்கு என்ன இப்ப? இருக்கிற செல்வத்தை எல்லாம் தூக்கி தெருவில் போட்டு விடுவோமா?  செல்வம் சேர்க்காமலே இருந்து விடுவோமா? பொருள் என்பதற்கு ஒரு அதிகாரமே வைத்து இருக்கும் வள்ளுவர் என்னதான் சொல்கிறார்   என்று கேட்டால்...


மேலும் சிந்திப்போம்....




Sunday, December 20, 2020

திருவாசகம் - நான் யார் ?

திருவாசகம் - நான் யார் ?

நமக்கு ஊரில் உள்ள அனைவரையும் அறிந்து கொள்ள ஆசை. 

எந்த நடிகர்/நடிகை எந்தப் படத்தில் நடிக்கிறார்கள், அது எப்போது வெளி வருகிறது. 


நடிகர் இல்லாவிட்டால் அரசியல் தலைவர். இல்லை என்றால் ஆன்மீகத் தலைவர். அவர் எங்கே எப்போது உபன்யாசம் செய்யப் போகிறார். 

அதுவும் இல்லாவிட்டால் "என் மனைவியை புரிந்து கொள்ளவே முடியவில்லை", "அவருக்கு என்னதான் வேண்டும்", "வர வர இந்தக் காலத்துப் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லை" ....

என்று மற்றவர்களை புரிந்து கொள்ளவே நாம் முயற்சி செய்கிறோம். அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

நம்மை நாம் புரிந்து கொள்ள சிறிதும் முயற்சி செய்வது இல்லை. 


"என்னைப் பற்றி எனக்கு என்ன புரியாது. என்னைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும்" என்று நாம் நினைக்கிறோம். அது சரி அல்ல. நாம் நம்மை புரிந்து கொள்ள முயற்சி செய்வதே இல்லை. 


"நான் யார்" என்ற இரண்டு வார்த்தை தான் இரமண மகரிஷியின் உபதேசமாக இருந்தது. 

எப்போதாவது நாம் "நான் யார்" என்ற கேள்வியை கேட்டது உண்டா? 

நான் என்பது இந்த உடலா, நினைவா, உயிரா, உறவுகளின் கலவையா? கணவனா? மனைவியா? பிள்ளையா? அறிவாளியா? முட்டாளா? பணக்காரனா? ஏழையா?


நான் என்பது யார்? 


நமக்குள் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் பல விஷயங்களை திணித்து வைத்து இருக்கிரறார்கள். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், நாம் பார்த்த சினிமாக்கள்,  படித்த புத்தகங்கள் என்று எல்லோரும் சேர்ந்து நம் மண்டைக்குள்   உட்கார்ந்து இருக்கிறார்கள். நான் என்பது தனி ஒருவன் இல்லை. பெரும் கும்பல் உள்ளே இருக்கிறது. 


இதில் உண்மையான நான் யார்?


நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா? நீங்கள் நம்பவில்லை, உங்களுக்கு சின்ன வயது முதல்  அப்படி நம்பும்படி சொல்லப் பட்டது. நீங்களும் அதை கடை பிடிக்கிறீர்கள். ஒரு நாத்திக குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தால், நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். நீங்கள் நம்புவது என்பது பெரிய விஷயம் இல்லை.  


சுத்த சைவம், ரொம்ப ஆச்சாரம், எல்லாமே கற்பித்தவை. நமது என்று சொந்தமாக  எதுவம் இல்லை.  சைவ வீட்டில் பிறந்ததால் நான் சைவமாக இருக்கிறேன். இதில் என் பெருமை என்ன? 


இந்த கும்பலை விரட்டி விட்டு யோசித்துப் பாருங்கள். நீங்கள் யார் என்று தெரியும். 


மாணிக்க வாசகர் தன்னைத்தானே கேட்கிறார்.  


"நான் யார்? என் உள்ளம் என்பது என்ன? என் அறிவு/ஞானம் என்பது என்ன? என்னை யார் அறிவார்" என்று. 


மாணிக்கவாசகருக்கு அந்த கேள்வி எழுந்து இருக்கிறது. 


பாடல் 


நானார்என் உள்ளமார் ஞானங்களாரென்னை யாரறிவார்

வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ.


சீர் பிரித்த பின்


நான் யார் ? என் உள்ளம் யார் ? ஞானங்கள் யார் ? என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதி மயங்கி 

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் 

தேனார் கமலமே சென்று ஊதாய் கோத்தும்பீ 


என் ஞானங்கள் இல்லாமல் போனது.

இவை அனைத்தும் போன பின் என்னை யார் அறிவார் ? 

அந்த இறைவன் என்னை ஆட்கொள்ளவில்லை என்றால் இதுவெல்லாம் என்னவாகி இருக்கும் ?

ஆட் கொண்டபின் என்ன ஆயிற்று ?


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_20.html


click the above link to continue reading

நான் யார் ? = நான் யார்

என் உள்ளம் யார் ? = என் உள்ளம் யார்

ஞானங்கள் யார் ? = ஞானங்கள் யார் அல்லது எது 

என்னை யார் அறிவார் ? = என்னை யார் அறிவார் ?

வானோர் பிரான் = வானில் உள்ள பிரான்

என்னை ஆண்டிலனேல் = என்னைஆட் கொள்ளவில்லை என்றால்

மதி மயங்கி = மதி மயங்கி

ஊனாரும் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் = இறைச்சி இருந்த உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை எடுத்து உண்ணும் அம்பலத்தில் ஆடும் அவன்

தேனார் கமலமே = தேன் உள்ள தாமரை மலருக்கு

சென்று ஊதாய் கோத்தும்பீ = சென்று பாடுவாய் தும்பியே 


இறைவன் என்னை ஆட்கொள்ளமால் விட்டு விட்டால், நான் என்ன ஆகி இருப்பேன் என்று பதறுகிறார். 


தேடுங்கள். நீங்கள் யார் என்று அறிய முயற்சி செய்யுங்கள். 


Know Thyself என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். 


நம்மை அறிவதை விட்டு விட்டு, உலகில் உள்ள எல்லோரையும் அறிய நினைக்கிறோம்.  என்ன ஒரு அறிவீனம்.


Thursday, December 17, 2020

திருக்குறள் - தூக்கமும் விழிப்பும்

 திருக்குறள் - தூக்கமும் விழிப்பும் 


எந்த ஒரு காரியத்தையும் முதன் முதலில் செய்யும் போது ஒரு பயம் இருக்கும். கார் ஓட்ட கற்றுக் கொள்ளும் போது, நீச்சல் கற்றுக் கொள்ளும் போது, புதிதாக ஒன்றை சமைக்கும் போது ஒரு பயம் இருக்கத்தான் செய்யும். 


பழக பழக பயம் போய் விடும். 


உள்ளதுக்குள் பெரிய பயம் மரண பயம் தான். நாம் பழகியவர்களை விட்டு விட்டுப் போக வேண்டும். அல்லது நாம் நேசிப்பவர்கள் நம்மை விட்டு விட்டுப் போய் விடுவார்களோ என்ற பயம். கொஞ்சம் பழகினால் பயம் விட்டுப் போய் விடும். ஆனால், மரணத்தை எப்படி பழகுவது? 

இயற்கை அதற்கும் ஒரு வழி செய்து வைத்து இருக்கிறது. 


தினம் தினம் தூங்கி எழும்புகிறோம் அல்லவா? 


தூக்கத்தில் என்ன நடக்கிறது? பிள்ளைகள், கணவன்/மனைவி, அப்பா, அம்மா உடன் பிறப்பு, நட்பு  என்று ஏதாவது தெரிகிறதா? அருகில் உறங்கும் கணவனோ மனைவியோ கூட தெரிவது இல்லை. மரணத்துக்கும் அந்த தூக்கத்துக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?  


ஐயோ, தூங்கப் போனால், என் பிள்ளையின் நினைவு எனக்கு அற்றுப் போய் விடுமே, என் பெற்றோரை நான் மறந்து போவேனே என்று யாராவது தூங்காமலே இருப்பார்களா? அல்லது, பிள்ளையை, கணவனை , மனைவியை தூங்க விடாமல் இருப்பார்களா?


அந்த தூங்கும் நேரத்தில் உங்களுக்கும் இந்த உலகுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. உறவு இல்லை. நினைவு இல்லை. பழக்கம் இல்லை. இன்ப துன்ப அனுபவம் இல்லை. 


இருந்தும் ஒரு பயமோ, தயக்கமோ இல்லாமல் தினமும் தூங்கப் போகிறோம். மற்றவர்களை தூங்கப் பண்ணுகிறோம். 

வள்ளுவர் சொல்கிறார்

பாடல் 

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_17.html

click the above link to continue reading 


உறங்கு வதுபோலும் = தூங்குவதைப் போல 

 சாக்காடு  = இறப்பு 

உறங்கி = தூங்கிய பின் 

விழிப்பது போலும் = விழித்து எழுவதைப் போல 

பிறப்பு = பிறப்பு 


நித்தம் நித்தம் இறந்து பிறக்கிறோம். இதில் என்ன பயம். இறந்தால் பிறக்க மாட்டோம் என்ற பயம் இருக்கிறதா? உறங்கினால், விழிப்போம் என்று யாராவது உங்களுக்கு உத்தரவாதம் தந்து இருக்கிறார்களா? இல்லையே?  

சரி, ஒரு நாள் சரியாக உறங்காவிட்டால் மறு நாள் எப்படி இருக்கும்? எவ்வளவு சோர்வாக இருக்கும்? 

ஒரு நாள் நன்றாக உறங்கினால், "நேற்று சுகமாக உறங்கினேன்" என்று சொல்கிறோம். உறங்கின அனுபவம் இருக்குமா?  உறங்கும் போது ஒன்றுமே தெரியாது. இருந்தும் அது சுகமாக இருந்தது என்று சொல்கிறோம். 


உறக்கம் ஒரு சுகம். உறக்கம் சரியாக வராதவர்களை கேட்டுப் பாருங்கள் தெரியும். உறக்கம் ஒரு வரம். 


அது போல, இறப்பும் ஒரு சுகம். ஒரு வரம். அதை அறிந்து கொண்டால் வாழ்கை சுகமாக இருக்கும். தூக்கத்துக்கு பயந்து கொண்டு தூங்காமல் இருக்க முடியுமா? 


அது  போலத்தான் இறப்பும். 


ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். உண்மை புலப்படும். 







Saturday, December 12, 2020

நாலடியார் - எது வறுமை?

நாலடியார் - எது வறுமை?


நிறைய பேர் நினைக்கிறார்கள், படிப்பது எதற்கு? பணம் பண்ணத்தானே என்று. பணம் எப்படி பண்ணினால் என்ன? சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்யாமல் செல்வம் சேர்க்க முடியும் என்றால், படிப்பு எதற்கு? 


படிக்காத முட்டாள்கள் எவ்வளவோ பேர் பெரும் செல்வம் சேர்க்கவில்லையா? அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் என்று படிப்பு அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்கள் செல்வத்தில் புரள்கிறார்களே, பின் படிப்பின் தேவை தான் என்ன?


பலருக்கு இந்த கேள்வி ரோ சங்கடமான ஒன்று. 


சில பேர் நிறைய படிப்பார்கள். பலப் பல பட்டங்கள் இருக்கும். நாலு காசு பண்ணத் தெரியாது. புத்தக அறிவு, பட்டங்கள் இவை தான் கல்வியா?


நாலடியார் விளக்குகிறது. 


சில பேர் ஆண்கள் போல் தோற்றம் அளிப்பார்கள். ஆனால் அவர்களிடம் ஆண்மைக் குணம் இருக்காது. பெண் குணம் மிகுந்து இருக்கும். பேடிகள் என்று சொல்லுவார்கள். அவர்கள், பெண்கள் அணியும் நகைகளை அணிந்து கொள்வார்கள். அவர்களைப் போல உடை உடுத்துவார்கள். 


அது பார்த்து இரசிக்கும் படியாகவா இருக்கும்? அதே நகைதான், அதே உடை தான். இருந்தாலும் சற்று அருவெறுப்பாக இருக்காது? ஆண் தோற்றத்தில் உள்ள ஒரு அலி உதடுச் சாயம் பூசிக் கொண்டு வந்தால் பார்க்க எப்படி இருக்கும்?


அறிவில்லாதவன் கையில் உள்ள செல்வம் அப்படி இருக்குமாம்?  அவனிடம் செல்வம் இருக்கும். அளவுக்கு அதிகமாக செல்வம் இருக்கும். ஆனால், அலி அணிந்த நகைகள் போல பொருத்தம் இல்லாமல் இருக்கும். 


சரி, அறிவு உள்ளவன் என்றால் யார்? படித்து பட்டம் பெற்றவனா? உலகத்தில் உள்ள பெரிய பெரிய நிறுவங்களின் தலைவர்கள் ரொம்ப படித்தவர்கள் அல்ல. நாட்டின் தலைவர்கள் படித்தவர்கள் அல்ல. அவர்கள் முட்டாள்களா என்றால் இல்லை. 


நாலடியார் கூறுகிறது, "நுண்ணர்வு இன்மை வறுமை" என்று. 

அது இருந்தால் பெரும் செல்வம் உள்ளது மாதிரி. 

நுண் அறிவு அல்ல, நுண் உணர்வு.

ஒரு மருத்துவரிடம் போகிறீர்கள். இந்த இடத்தில், இந்த மாதிரி வலி இருக்கிறதுஎன்று சொல்கிறீர்கள். உடனே அவர் மனதில் அந்த வலிக்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று முடிவு பண்ணுகிறார். அதை உறுதி செய்ய சில பல சோதனைகள் செய்கிறார். அந்த முடிவு செய்யும் ஆற்றல் தான் நுண்ணர்வு. 

படிப்பு, அனுபவம், இவற்றைத் தாண்டி வருவது. 

என்ன சாப்பிட்டால் உடம்பில் என்ன நடக்கும் என்று பல பேருக்குத் தெரியும். ஆனால், நாம் உண்ட உணவினால் நம் மன நிலை எப்படி பாதிக்கப் படுகிறது என்ற நுண் உணர்வு வெகு சிலருக்கே இருக்கும். 


நம் உணர்வுகள், செயல் பாடுகள், சிந்தனை, எல்லாம் நாம் உண்ணும் உணவில் இருந்து வருகிறது. எந்த உணவை உண்டால், எப்படி நம் மனம் மாறுகிறது என்ற நுண் உணர்வு இருக்க வேண்டும். யாரிடம் பேசினால் நம் மனம் எப்படி மாறுகிறது என்று தெரிய வேண்டும். எதைப் படித்தால் எப்படி பாதிக்கப் படுகிறோம் என்று அறியும் அறிவு வேண்டும்.


கூர்மையான அறிவு. அது இல்லாவிட்டால், அது தான் வறுமை என்கிறது நாலடியார். அந்த உணர்வு இருந்தால், அது தான் செல்வம். 


பாடல் 


 நுண் உணர்வு இன்மை வறுமை; அஃது உடைமை

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்;-எண்ணுங்கால்,

பெண் அவாய், ஆண் இழந்த பேடி அணியாளோ,

கண் அவாத் தக்க கலம்?


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_12.html

Please click the above link to continue reading



நுண் உணர்வு இன்மை வறுமை; = நுண் உணர்வு இல்லாமல் இருப்பது வறுமை.  இருப்பது செல்வம். 

 அஃது உடைமை = அது இருந்தால் 

பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் =  அது கிடைத்தற்கு அரிய் பெரிய செல்வம் 

எண்ணுங்கால், = நினைத்துப் பார்த்தால் 

பெண் அவாய் = பெண்மை குணம் நிறைந்து 

ஆண் இழந்த பேடி = ஆண்மைக் குணம் இழந்த பேடி 

அணியாளோ, = அணிந்திருக்கும் 

கண் அவாத் தக்க  = கண்கள் விரும்பும் 

கலம்? = அணிகலம் 


நுண் உணர்வு இல்லாதவன் பெற்ற செல்வம், பேடி அணிந்த அணிகலன் போல.


என்ன ஒரு உதாரணம்!




Thursday, December 10, 2020

திருக்குறள் - முப்பால்

 திருக்குறள் - முப்பால் 


வாழ்வின் அடிப்படை துறவறம் என்று பார்த்தோம். துறவறம் தான் நோக்கமா? எல்லாவற்றையும் விடுவதற்கா வாழ்கை என்றால் இல்லை. 

வாழ்வின் நோக்கம் வீடு பேறு. வீடு பேறு அடைய துறவறம் வேண்டும். வீட்டின் வாயில் துறவறம். அதன் வழியாகத்தான் போயாக வேண்டும். 

வீடு என்றால் என்ன, அதை ஏன் அடைய வேண்டும் என்று பின்னால் சிந்திக்க இருக்கிறோம். 

இப்போது, துறவறம் நோக்கம் , முக்கியம் என்றால் பின் இல்லறம் எதற்கு? நேரே துறவுக்கு போய் விட்டால் என்ன? 

பிரமச்சரியம், துறவறம், வீடு என்று இருந்தால் என்ன? எதுக்கு நடுவில் இல்லறம்? 

சரி இல்லறம் இருந்து விட்டுப் போகிறது. இந்த அறம் பொருள், இன்பம் என்று மூன்றாக பிரித்து இருக்கிறாரே, பொருளும் இன்பமும் எதற்கு? 

இப்படி பல சிக்கலான கேள்விகள் எழுகின்றன.


சிக்கலை அவிழ்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_10.html


click the above link to continue reading


வாழ்வின் நோக்கம் - வீடு பேறு.


வீடு பேறு அடைய முக்கியமான தேவை - துறவு. 


துறவு நிலைக்குப் போகவேண்டுமானால் - அருள் வேண்டும். 


அருள் வர வேண்டும் என்றால் முதலில் அன்பு வேண்டும். 


அன்பு மனதில் சுரக்க வேண்டும் என்றால் பிள்ளை வேண்டும். 


பிள்ளை வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு வேண்டும். இன்பம் வேண்டும்.  


குடும்பம் நன்றாக நடக்க வேண்டும் என்றால் பொருள் வேண்டும். 


எனவே முதலில் இல்லறம். இல்லறம் சிறப்பாக நடக்க, காமம், இன்பம் என்ற ஒரு எதிர்பார்ப்பு, தேவை. அவை செவ்வனவே நடக்க பொருள். இவற்றை அனுபவித்து கடக்கும் போது தானே துறவறம் வந்து நிற்கும். 


துறவு வந்தால், வீடு வரும். 


இது வள்ளுவர் வகுத்துக் காட்டும் அறம், வாழ்கை நெறி. 


நீங்கள் நினைக்கலாம், "வீடு பேறு என்று ஒன்று கிடையாது. அல்லது வேண்டாம்" என்று வைத்து விட்டால், பின் வள்ளுவம் பூராவும் விழுந்து விடும் அல்லவா?


ஆம். சரிதான். ஆனால், வீடு பேறு வாழ்வின் நோக்கம் இல்லை என்று எடுத்துக் கொண்டால், பின் வேறு என்ன என்று சொல்ல வேண்டும். அந்த புதிய நோக்கத்தை அடைவது எப்படி என்று சொல்ல வேண்டும். 


வள்ளுவர் மிக மிக ஆழமாக சிந்தித்து திருக்குறளைப் படைத்து இருக்கிறார். 


அதற்கு இணையாக ஒன்றை சிந்திப்பது என்பது மிக மிக கடினமான காரியம். 


அறத்துப் பால். 

அதன் உள்ளே இல்லறம், துறவம் என்ற இரண்டு பெரிய அறங்கள். 


இல்லறம் நடக்க  இன்பத்துப் பால். 


இல்லறம், இன்பம், பிள்ளை இவற்றை கொண்டு செல்ல பொருட் பால் என்று பிறந்தது முதல், வீடு பேறு வரை ஒவ்வொரு கட்டமாக பிரித்து கை பிடித்து கூட்டிச் செல்கிறார். 


பால், இயல், அதிகாரம், குறள் என்று முதலில் இருந்து இறுதி வரை ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டது. 


ஒரு முழு வாழக்கைக்கும் ஒரு வழிகாட்டி. 


இப்படி ஒரு நூலை காணவே முடியாது.


இனி திருகுறளுக்குள் போவோம். 


Tuesday, December 8, 2020

திருக்குறள் - அன்பும் அருளும்

 திருக்குறள் - அன்பும் அருளும் 


துறவத்துக்கு அன்பு எப்படி அடிப்படையாக இருக்கிறது என்று பார்த்தோம். அன்பு இருந்தால், எதையும் மகிழ்வோடு துறக்க முடியும். 


அதெல்லாம் சரி, நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நாம் தருகிறோம். அது எல்லாம் துறவறம் என்று எப்படிச்  சொல்லுவது? 


நாம் ஒரு பூங்காவில் அமர்ந்து இருக்கிறோம். நம் பிள்ளையோ, பேரப் பிள்ளையோ அங்கு விளையாடிக் கொண்டு இருக்கிறது. ஓடும் போது கால் தடுக்கி கீழே விழுந்து விடுகிறது. பதறிப் ஓடிப் போய் தூக்குவோம் இல்லையா. 


சரி. 


வேறு யாரோ ஒரு பிள்ளை கீழே விழுந்து விடுகிறது. நமக்கு என்ன, நம்ம பிள்ளை இல்லையே என்று இருப்போமா அல்லது அந்தப் பிள்ளையையும் அதே மாதிரி ஓடிப் போய் தூக்குவோமா? 


பெரும்பாலானோர் தன் பிள்ளை மாதிரியே மற்ற பிள்ளைகள் விழுந்தாலும் பதறிப் போய் தூக்குவார்கள். சிலர் தூக்காமல் இருக்கலாம். 


நம் பிள்ளை மேல் நாம் செய்வது அன்பு. மற்ற பிள்ளை மேல் நாம் செய்வது கருணை. 


இது எப்படி ஆரம்பிக்கிறது என்றால், முதலில் தான் தான் என்று இருந்தவன், (ள்), பின் தன் மனைவிக்கு என்று பாடு படுகிறான். அவள் என்ன சொன்னாலும், அவளை பாதுகாக்க, அவளை மகிழ்ச்சிப் படுத்த பாடு படுகிறான்.  

அடுத்த கட்டம் பிள்ளைகள்.  ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல், பிள்ளைகள் மேல் அன்பு படர்கிறது. 


அடுத்த நிலை, தன் குடும்பம் தாண்டி மற்றவர்கள் மேலும் பரிவு கொள்வது. ஒரு ஏழைக்கு சோறு போடுவது, பணம் தானம் செய்வது, பக்கத்து வீட்டில் முடியாவிட்டால் ஓடிப் போய் உதவி செய்வது என்று அந்த வட்டம் பெரிதாகிக் கொண்டே வருகிறது. 

https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_8.html

click the above link to continue reading 


அன்பு கொஞ்சம் கொஞ்சமாக அருளாக மாறும். வீடு தாண்டி அது தன் கிளை விரிக்கும். 


தனக்கு தனக்கு என்பது சுயநலம் என்றால், என் மனைவி, என் பிள்ளை என்பதும் சற்றே பெரிய சுயநலம். அவ்வளவுதான். 

எப்படி பிள்ளைக்கு கொடுப்பதில் மகிழ்ச்சி இருக்கிறதோ, அந்த மகிழ்ச்சி மற்றவருக்கு செய்யும் போதும் வரும். 


வரணும். வரவில்லை என்றால், மனம் விரியவில்லை என்று அர்த்தம். 


குகனையும், சுக்ரீவனையும், வீடனனையும் தம்பியாக, தன் குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அந்த அருள் வரும். 


எல்லாம் என் குடும்பம்தான் என்ற எண்ணம் வரும். அப்படி வரும் போது, கொடுப்பது எளிதாகும். விடுவது சுகமாகும். 


மனம் விரிய விரிய மகிழ்ச்சி பொங்கும். 


நாம் ஒரு ஐஸ் கிரீம் சாப்பிடுவதை விட நம் பிள்ளை சாப்பிடுவதை இரசிப்பது எவ்வளவு சுகம். பேரப் பிள்ளை சாப்பிடுவதை இரசிப்பது இன்னும் சுகம். 


தான் ஈட்டிய பொருளால் இன்னொரு உயிர் சுகப் படுவதை காண்பது இன்னொரு சுகம். 


அது துறவிக்கு மட்டுமே வாய்த்த வரம். 


துறவு என்பது சுகம். துறக்காமல் இருப்பதுதான் கடினம். துன்பம். 


சரி, இதெல்லாம் திருக்குறளில் எங்கே இருக்கிறது?  


நாளை முதல் அதை சிந்திக்க இருக்கிறோம். 

 


Monday, December 7, 2020

திருக்குறள் - துறவறம் நோக்கிய வாழ்க்கை

 திருக்குறள் - துறவறம் நோக்கிய வாழ்க்கை 


வாழ்க்கையின் ஒவ்வொரு படியும் துறவறம் நோக்கித்தான் அமைகிறது. 


துறவறம் என்றால் ஏதோ கடினமான ஒன்று என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இல்லவே இல்லை. அது போல் சுகம் எதுவும் இல்லை. 


துறவறம் என்றால் என்ன? நமக்கு வேண்டியதை, விரும்பியதை மகிழ்ச்சியோடு விடுவது. சர்க்கரை நோய் வந்தவன் "நான் சர்க்கரையை துறந்து விட்டேன்" என்று சொல்லுவது பெரிய துறவறம் அல்ல. அதைத் துறக்காவிட்டால் உயிர் போய் விடும். 


பந்தயத்தில் கடைசியில் வந்தவன் "நான் தங்கப் பதக்கத்தை துறந்து விட்டேன் " என்று சொல்லுவது நகைப்பு இடமானது. 


ஆசைப் பட்டதை, விரும்பியதை, ஒரு நிர்பந்தமும் இல்லாமல், மகிழ்ச்சியோடு விட்டு விடுவது. 

நடக்கிற காரியமா?


நடக்கும். 


வாலிப வயதில், வெளியே போய் விட்டு வந்தவுடன், நேரே குளிர் சாதன பெட்டியை திறந்து அதில் என்ன இருக்கிறதோ அதை உண்பது வழக்கமாக இருக்கும். நல்ல பலகாரம் செய்தால் இன்னும் இரண்டு கொடு என்று இருப்பது எல்லாம் தனக்கு என்று உண்ணும் ஆர்வம் இருக்கும். 


அவனுக்கு திருமணம் ஆகி விடுகிறது. மனைவி வந்து விடுகிறாள். வீட்டுக்கு வருகிறான். பசி. குளிர் சாதன பெட்டியைத் திறக்கிறான். டப்பாவில் ஏதோ ஒரு இனிப்பு ஒரே ஒரு துண்டு இருக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. சாப்பிடப் போனவன், ஒரு கணம் நினைப்பான். 'அட, அவளுக்கு இதை ஊட்டி விட்டால் எப்படி இருக்கும்" என்று. அவள் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பான். சரி, இருக்கட்டும், அவளுக்கு என்று வைத்து விடுவான். 


அவளும் அப்படித்தான். "இது அவருக்கு ரொம்ப பிடிக்கும்" என்று அவனுக்கு என்று எடுத்து வைத்து விடுவாள். 

பிடித்த ஒன்றை, மகிழ்வோடு மற்றவர்க்கு என்று துறந்து விடுவது. 

'அதெல்லாம் ஒண்ணும் இல்லை...அவளுக்கு எதுக்கு...அவ நல்லா சாப்பிட்டு இருப்பாள்...' என்று நினைத்தால் கூட 


கொஞ்ச நாள் கழித்து,அவர்களுக்கு பிள்ளை பிறக்கிறது....


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_7.html

click the above link to continue reading.


ஏதோ ஒரு நல்ல தின் பண்டம். "அடடா இதை பிள்ளைக்கு கொடுக்கலாமே" என்று இருவரும் நினைப்பார்களா மாட்டார்களா? 


கணவன் மனைவி இடையிலாவது ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதனால் அவளுக்கு அல்லது அவனுக்கு கொடுத்தேன் என்று இருக்கலாம். 


சின்ன பிள்ளையிடம் என்ன எதிர்பார்ப்பு இருக்கும்? அது சந்தோஷப் படுவதை பார்ப்பது  ஒரு சந்தோஷம்.


தான் பசித்து இருந்தாலும்,பிள்ளைக்கு என்று எடுத்து வைப்பார்கள்தானே? அப்படி எடுத்து வைக்காத பெற்றோரை நாடு கடத்தினாலும் தகும். தனக்கு தனக்கு என்று பிள்ளைக்கு முன் உண்ணும் பெற்றோரை எதில் சேர்ப்பது? 


துறக்கிரோமா இல்லையா?  மனைவிக்காக, கணவனுக்காக, பிள்ளைக்காக துறக்கிரோமா இல்லையா?


எவ்வளவு நேரம், பணம், உடல் உழைப்பு, சந்தோஷம் என்று அனைத்தையும் துறக்கிரோமா இல்லையா? அதும் மகிழ்ச்சியோடு. சரி தானே. 


ஏன் அப்படி செய்கிறோம்? 


காரணம் அன்பு. 


யோசித்துப் பாருங்கள், இதுவரை எத்தனை துறந்து இருக்கிரீர்கள் என்று. 


கடினமாக உழைத்து, யாரி யாரிடமோ ஏச்சும் பேச்சும் வாங்கி, சம்பாதித்து மனைவிக்கு நகை, புடவை, பிள்ளைகளுக்கு உடை,  கல்வி, என்று எத்தனை வருடம் நமக்கு வேண்டியதை துறக்கிறோம், குடும்பத்துக்காக. 


எல்லாவற்றையும் விட பெரிய துறவறம், அழகை துறப்பது. கொஞ்சம் பணம் போனாலும் போகட்டும், நேரம் போனாலும் போகட்டும்....அழகு போனால் போகட்டும் என்று யாராவது சொல்வார்களா? 


பிள்ளை பெறும் போது பெண்கள் தங்கள் அழகை எவ்வளவு துறக்கிறார்கள். 


வயிறு பெருத்து, பெற்ற பின் வயிறு எல்லாம் சுருக்கம் விழுந்து, மார்பகங்கள் கட்டு தளர்ந்து...எவ்வளவு கஷ்டம். சட்டென்று பத்து பதினைந்து வயது கூடிய மாதிரி இருக்கும். 


எந்தப் பெண்ணாவது மாட்டேன் என்று சொல்கிறாளா? பிள்ளை பெறுவது பெரிய மகிழ்ச்சி தான். இளமை போனாலும் பரவாயில்லை என்று பெறுகிறார்களே? 


சாபத்தால் முதுமை அடைந்தான் யயாதி. முடியவில்லை. அவனால் அதை தாங்க முடியவில்லை. பிள்ளையிடம் இளமையை யாசகம் பெற்றான்.  அத்தனை தாய் மார்களும் இளமையை பணயம் வைத்துத்தான் பிள்ளை பெறுகிறார்கள். 


அதுவும் மகிழ்வுடன். 


காரணம் அன்பு. 


வாழ்கை என்ற ஜீவ நதி அன்பென்ற கடலை நோக்கி காலம் காலமாக ஓடிக் கொண்டே இருக்கிறது. 


அதன் போக்கில் எத்தனை இழப்புகள், துறப்புகள்..எல்லாம் மன நிறைவோடு, திருப்தியோடு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 


துறவு நோக்கித்தான் வாழ்கை நகர்கிறது. 


மேலும் சிந்திப்போம்.....




Sunday, December 6, 2020

திருக்குறள் - அறமெனும் வாழ்க்கை

 திருக்குறள் - அறமெனும் வாழ்க்கை 


பொதுவாகச் சொல்லப்படும் பிரம்மச்சரியம், இல்வாழ்கை, வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற வாழ்க்கையின் நான்கு கூறுகளை வள்ளுவர் இரண்டுக்குள் அடக்குகிறார். 


இல்லறம், துறவறம் என்ற இரண்டில் அதை அடக்குகிறார். 


எப்படி ?


பிரம்மச்சரியம் என்பது இல்வாழ்வின் முதல் பகுதி. எனவே அதை இல்லறத்தில் சேர்த்து விட்டார். 


வானப்ரஸ்தம், சன்யாசம் என்ற இரண்டும் துறவறத்தின் இரண்டு படிகள் என்பதால் அவற்றை துறவரத்தோடு சேர்த்து விட்டார். 


இல்லறம், துறவறம் - இதுதான் வாழ்கை. 


எங்கே இதற்கு வெளியே ஒரு அமைப்பை சிந்தியுங்கள் பார்ப்போம்? முடியாது. 


எப்படி சுத்தினாலும், இந்த இரண்டுக்குள் வந்துதான் ஆக வேண்டும். 


இந்த இரண்டில் வேண்டுமானால் மேலும் சில பிரிவுகளை நாம் உண்டு பண்ணிக் கொள்ளலாம். பெரும் பகுதி என்பது இது தான். 


வள்ளுவர் பார்வையில் இல்லறத்த்தின் நோக்கம் துறவறம் தான். 


அதானே...கடைசியில் எல்லோரையும் கையில் ஒரு சட்டியை கொடுத்து சாமியாராகப் போகச் சொல்லுவதுதான் இந்த இலக்கியங்களின் நோக்கம். 


எப்பப் பாரு, நிலையாமை, துறவறம், சாவு என்று இதையே பேசிக் கொண்டு இருப்பது. 


சந்தோஷமாக வாழ வழி சொல்லுவதே இல்லை. யார் இதை எல்லாம் படிப்பார்கள் என்ற அலுப்பு வரலாம்.


நம்பினால் நம்புங்கள்....நம்பாவிட்டால் உங்கள் இஷ்டம்...நாளும் நீங்கள் துறவறம் நோக்கித் தான் நகர்ந்து கொண்டு இருக்கிரீர்கள். நீங்கள் அறிவது இல்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_6.html

click the above link to continue reading 


நீங்கள் விரும்பி சில அடிகள், நீங்கள் விரும்பாமல் சில அடிகள் என்று ஒவ்வொரு நாளும் துறவறம் நோக்கித் தான் நடை போட்டுக் கொண்டு இருக் கிறீர்கள்.


இல்லியே...நான் வாழ்கையை அனுபவிக்க அல்லவா துடித்துக் கொண்டு இருக்கிறேன். மனைவி, பிள்ளைகள், சொத்து, சுகம், உறவு, பட்சணம், விருந்து, பூஜை, புனஸ்காரம், டிவி, whatsapp என்று வாழ்க்கையை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டு தானே இருக்கிறேன். எங்கே துறவறம் நோக்கி நடக்கிறேன் என்று நீங்கள் கேட்கலாம்.


சொல்கிறேன். ஆச்சரியப் பட்டுப் போவீர்கள்.



Saturday, December 5, 2020

திருக்குறள் - வாழ்க்கை எப்படி நகர்கிறது?

 திருக்குறள் - வாழ்க்கை எப்படி நகர்கிறது?


ஒரு நல்ல வாழக்கை என்பது எப்படி இருக்கும் என்று வள்ளுவர் வடிவமைத்துக் காட்டுகிறார். அவர் புதிதாக ஒன்றும் கண்டு பிடித்துச் சொல்லவில்லை. இருப்பதை ஆழ்ந்து , உன்னிப்பாக கவனித்து வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிறார். 


அவர் காட்டும் வாழ்க்கைக்கு வெளியே ஒன்றை நம்மால் சிந்திக்க முடியுமா என்பது சந்தேகமே.


சரி, அப்படி என்ன தான் சொல்லி இருக்கிறார்? 


பொதுவாக நமது இந்திய வாழ்க்கை முறை என்பது நான்கு கூறுகளாக பிரிக்கப் படுகிறது. நாம் அறிந்தது தான். 


பிரம்மச்சரியம் - இளமைக் காலம், கல்வி கற்கும் காலம். 

க்ரஹஸ்தம் - திருமணம் முடித்து, இல்வாழ்க்கையில் ஈடுபடுவது 

வானப்ரஸ்தம் - பொறுப்புகளை அடுத்த தலைமுறையிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கி வழி விடுவது

சன்யாசம் - வீடு, சமூகம் இவற்றை துறந்து கானகம் செல்வது 


இதில் ஒன்றும் பெரிய மாற்றம் நாம் கண்டுவிட முடியாது. இளமையில் கல்வி கற்காமல் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது. 


வாழ்க்கை இப்படித்தான் போகும். ஆற்றோட்டம் போன்ற இயற்கை கதி இது. சிலர் திருமணம் முடிக்காமல் இருக்கலாம், சிலர் சாகும் வரை வீட்டுப் பொறுப்பை சுமந்து கொண்டு அடுத்த தலைமுறைக்கு வழி விடாமல் இருக்கலாம். அது அங்கொன்றும், இங்கொன்றுமாக விதி விலக்காக இருக்கமே அன்றி அதுவே பொது விதியாக இருக்காது. 


வள்ளுவர் இந்த நான்கை சுருக்கி இரண்டாக ஆக்கினார். 


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post_5.html


click the above link to continue reading



இல்லறம், துறவறம் என்று. வாழ்க்கை இந்த இரண்டுக்குள் அடங்கிவிடும் என்கிறார். 


இரண்டுமே அறம் தான். 


இல்லறம் - எல்லாம் சேர்ப்பது, உறவுகள், பொருள், என்று சேர்ப்பது. 


துறவறம் - எல்லாவற்றையும் விடுவது. 


சேர்ப்பதும் அறம், விடுவதும் அறம். 


அது எப்படி இரண்டும் அறமாக முடியும்? 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும்...அறம் மட்டும் தான் குறிக்கோள் என்றால் பின் ஏன் பொருள், இன்பம் என்று மேற்கொண்டு சொன்னார்? அது எப்படி இங்கே பொருந்தும்? 


துறவறத்துக்கும் காமத்துப் பாலுக்கும் என்ன சம்பந்தம் ? 


இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்கள் இருந்தால் எதை எடுப்பது, எதை விடுவது ?


எல்லாரும் துறவியாக போக முடியுமா? 


இப்படி பல கேள்விகள் இருக்கின்றன.


அனைத்துக்கும் விடை காண்போம். 


Tuesday, December 1, 2020

திருக்குறள் - வாழ்வின் நோக்கம்

 திருக்குறள் - வாழ்வின் நோக்கம் 


இந்த வாழ்வின் நோக்கம் என்ன? நாம் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்று நினைத்துப் பிறக்கவில்லை. இந்த நாட்டில், இந்த மதத்ததில், இந்த மொழி பேசும் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று நினைத்து நாம் பிறக்கவில்லை. நம் பிறப்பு நம் கையில் இல்லை. 


ஒரு நோக்கமும் இன்றி பிறந்து விடுகிறோம். பிறந்த பின் என்ன செய்வது? எப்படி வாழ்வது? இந்த வாழ்கையை எப்படி செம்மையாக கொண்டு செல்வது? என்று எப்படி கண்டு பிடிப்பது?

நம் வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்க்கைக்கு என்று பொதுவாக ஏதாவது குறிக்கோள் இருக்கிறதா? 


சரி அப்படி இருந்தால், எல்லார் வாழ்கையும் ஒரே மாதிரி ஆகி விடாதா?  திருக்குறள் என்று இல்லை, எந்த ஒரு நூலும் வாழ்கை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா ?


இப்படி யோசிப்போம். எத்தனையோ அறிவியல் விதிகள் இருக்கின்றன. உலகில் உள்ள பொருள்கள், உயிர்கள் உட்பட அந்த விதிகளுக்கு உட்பட்டுத்தான் இயங்குகின்றன. அதனால் என்ன குறைந்து போய் விட்டது? 


எப்படி அறிவியல் விதிகள் உலகியல் பொருள்களை விளக்கம் செய்கின்றனவோ, அது போல் திருக்குறள் போன்ற நூல்கள் வாழ்வியலை நமக்கு விளக்கம் செய்கின்றன. 


ஆயிரக்கணக்கான பேரின் வாழ்க்கைகளை கூர்ந்து நோக்கி, வாழ்வின் பின்னால் இப்படி ஒரு சில விதிகள் இருக்கின்றன என்று கண்டு சொல்கின்றன இந்த நூல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/12/blog-post.html

click the above link to continue reading



அவை என்ன விதிகள் ? அந்த விதிகளை தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன பயன்? தெரியாவிட்டால் என்ன ஆகி விடும்?  அந்த விதிகளை எப்படி நம் வாழ்வில், நமக்கு இன்பம் தரும் படி பயன் படுத்திக் கொள்வது?


இவை பற்றி சிந்திப்போம். 


விதிகளை தெரிந்து கொள்வதால் அதன் படி நடக்க வேண்டும் என்று இல்லை. 

உயரத்தில் இருந்து குதித்தால் கீழே விழுவோம், விழுதால் அடி படும், வலிக்கும் என்பது விதி. 


இல்லை நான் குதித்துப் பார்கிறேன். ஒருவேளை நான் கீழே விழாமல் காற்றில் மிதந்தாலும் மிதக்கலாம்...யார் கண்டது என்று குதித்து முயற்சி செய்து பார்க்கலாம். தவறு ஒன்றும் இல்லை. 


விதிகள் தெரிந்தால், அதை கடை பிடித்தால் , வாழ்கை நன்றாக இருக்கும். அவ்வளவுதான். 


அப்படி என்ன பெரிய விதிகளை திருக்குறள் கண்டு சொல்லி விட்டது?


பார்ப்போம். 



Monday, November 30, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் தலை மேல் அசைமின்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் தலை மேல் அசைமின்கள் 


Poetry is the language of hearts என்று சொல்லுவார்கள். கவிதையை இதயத்தில் இருந்து படிக்க வேண்டும். மூளையில் இருந்து அல்ல. கவிதையின் உயிர் அது சொல்லம் உணர்சிகளில் இருக்கிறது. 


அந்த உணர்வை தொட்டு விட்டால், "அட" என்று வியக்க வைக்கும். இல்லை என்றால் "இதுல என்ன இருக்கு" என்று கேள்வி கேட்கத் தோன்றும். 


பெரும்பாலான பிரபந்தப் பாடல்களை படிக்கும் போது, அர்த்தம் கை நழுவிப் போய் விடுகிறது. உணர்ச்சி ஒட்டிக் கொண்டு விடுகிறது. 


அப்படிப்பட்ட பாசுரம் ஒன்று கீழே. 


அது அந்தக் காலம். அவளுக்கு அவன் மேல் அவ்வளவு காதல். செல் போன்களும், whatsapp களும் இல்லாத காலம். கார் பஸ் கிடையாது. தபால் தந்தி கிடையாது. அவன் இருப்பதோ வெகு தொலைவில். அவளால் நினைத்தால் கூட அங்கே செல்ல முடியாது. என்ன செய்வாள் பாவம். 


மறுகிக் கொண்டு இருக்கிறாள். காதல் ஒரு பக்கம். ஏக்கம் ஒரு பக்கம். காண முடியவில்லையே என்ற தவிப்பு மறு பக்கம். 


யார் கிட்டவாவது சொல்லி விடலாம் என்றால் யாரிடம் சொல்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாள். 


அங்கே சில மேகங்கள் மிதந்து சென்று கொண்டிருந்தன. ஒரு வேளை இந்த மேகங்கள் அவன் இருக்கும் இடம் போகுமோ ? இதுக கிட்டா சொல்லி விட்டால் ஒரு வேளை அவனுக்கு என் காதல் எண்ணம் போய்ச் சேருமோ என்று நினைக்கிறாள். 


அவள்: ஏய் மேகங்களே, எனக்கு ஒரு உதவி செய்வீங்களா? 

மேகம்: என்ன உதவி சொல்லு..

அவள்: நீங்க அவன் இருக்கும் ஊருக்குப் போனால், என் நிலை பற்றி அவனிடம் சொல்லுவீர்களா?


மேகம்: அதெல்லாம் முடியாது. எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு. இதெல்லாம் முடியாது. நேரம் இல்லை. 


அவள் யோசிக்கிறாள். இந்த மேகங்களை விட்டால் வேறு வழியும் இல்லை. என்ன செய்யலாம் என்று. 


அவள்: சரி, ஒண்ணு செய்யுங்க. போற போக்கில் உங்க காலை என் தலை மேல் வச்சிட்டு போங்க. அவன் இருக்கிற ஊர்ல போய் நீங்க மழை பெய்யும் போது, என் கூந்தலின் வாசம் அவனுக்குத் தெரியும். அதில் இருந்து அவனுக்கு என் நினைவு வரும். அது போதும் எனக்கு. 


என்ன இது ஏதோ தமிழ் பட சீன் மாதிரி இருக்கு. இதுக்கும் நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கும் என்ன சம்பந்தம்? இப்படி எல்லாம் கூடவா பாசுரம் இருக்கு? இருக்காது. 


பாடல் 

இசைமின்கள் தூதென் றிசைத்தா லிசையிலம், என்தலைமேல்

அசைமின்க ளென்றா லசையிங்கொ லாம்,அம்பொன் மாமணிகள்

திசைமின் மிளிரும் திருவேங் கட்த்துவன் தாள்சிமயம்

மிசைமின் மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.


சீர் பிரிக்காமல் புரியாது 


இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம், என் தலை மேல்

அசைமின்கள் என்றால்  அசையும் கொல்லோ ? அம் பொன் மா மணிகள்

திசை மின்மிளிரும் திருவேங் கட்த்து அவன் தாள் சிமயம்

மிசை மின்மிளிரிய போவான் வழிக் கொண்ட மேகங்களே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_30.html

(click the above link to continue reading)

இசைமின்கள் = சொல்லுங்கள் 

தூது = தூது 

என்று இசைத்தால் = என்று கூறினால் 

இசையிலம் = ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள் 


என் தலை மேல் = என் தலை மேல் 


அசைமின்கள் என்றால் = உங்கள் காலை வைத்து விட்டு போங்கள் என்றால் 

அசையும் கொல்லோ ?  = கேட்பீர்களா? 

அம் பொன் மா மணிகள் = பொன்னும் மணியும் 

திசை = திசைகள் தோறும் 

மின்மிளிரும் = மின்னல் போல் வெளிச்சம் தரும் 

திருவேங் கட்த்து = திரு வேங்கடத்தில் 

அவன் தாள் சிமயம் = சிகரத்தின் மேல் உள்ள அவன் திருவடிகளில் 

மிசை மின்மிளிரிய = மின்னல் அடித்துக் கொண்டு

போவான்  = போகும் 

வழிக் கொண்ட மேகங்களே. = அந்த வழியாக (போகும்) மேகங்களே 


என்னையும் தொட்டு, அவனையும் தொடும் போது, அவன் என்னை தொட்டதாகவே நான் உணர்வேன். அவன் நேரில் வந்து என்னைத் தொட விட்டால் என்ன. இந்த மேகங்களின் ஊடாக அவன் என்னைத் தொடுவதாக உணர்வேன் என்கிறாள். 


வருகின்ற அருள் நேராக அவனிடம் இருந்து வர வேண்டும் என்று அல்ல. எப்படியோ, யார் மூலமோ, எந்த வடிவிலோ வந்து சேரும். 


வந்து சேர்ந்து கொண்டு இருக்கிறது. 


காற்றாக, நீராக, உணவாக, உறவாக எத்தனையோ வகைகளில்...


உணர்வுடையார் பெருவறுனர் ஒன்றும் இல்லார்க்கு ஒன்றும் இல்லை. 

Sunday, November 22, 2020

திருக்குறள் - எண்ணும் எழுத்தும்

 திருக்குறள் - எண்ணும் எழுத்தும் 


பாடல் 


எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்என்ப வாழும் உயிர்க்கு


பொருள் 


எண்ணென்ப = எண்கள் என்று சொல்லப்படுபனவும் 

ஏனை = மற்ற 

எழுத்தென்ப = எழுத்து என்று சொல்லப் படுவதும் 

இவ்விரண்டும் = இந்த இரண்டும் 

கண்என்ப = கண் போன்றது என்று சொல்லுவார்கள் 

வாழும் உயிர்க்கு = வாழும் உயிர்களுக்கு 


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_22.html


click the above link to continue reading


எண்ணும் , எழுத்தும் இரண்டு கண் போன்றது. உயர்வானது, சிறப்பானது....என்று தானே நமக்கு பொருள் தெரிகிறது? அப்படித்தான் நமக்குச் சொல்லித் தந்து இருப்பார்கள். 

இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா? யாருக்குத்தான் தெரியாது? 


அதற்கு பின் வருவோம்...

எதற்காக படிக்கிறோம்? பள்ளிக்கூடம், கல்லூரி அதன் பின் மேல் படிப்பு என்று படிக்கிறோமே எதற்காக? பெரும்பாலானோர் சொல்லுவது "நல்லா படித்தால் நல்ல வேலை கிடைக்கும், நல்ல வருமானம் கிடைக்கும், நல்ல வாழ்கை வாழலாம்". அது ஓரளவு உண்மையும் கூட. 

ஆனால், படிப்பின் நோக்கமே வேறு. நாம் அதை வருமானத்துக்குப் பயன் படுத்துகிறோம் என்பது வேறு விடயம். படிப்பின் நோக்கம் அறத்தை அறிந்து கொள்வது. உண்மையை புரிந்து கொள்வது. 

பணம் எப்படியும் வரும். படித்துதான் வர வேண்டும் என்று இல்லை. எனவே, பணம் சம்பாதிக்க படிக்க வேண்டிய அவசியம் இல்லை. 

அறிவின் நோக்கம், அடிப்படை அறத்தை அறிந்து கொள்வது. 

வாழ்வில் அறம் இல்லாவிட்டால் எவ்வளவு செல்வம் இருந்தாலும், புகழ், செல்வாக்கு இருந்தாலும் மனதில் நிம்மதி, மகிழ்ச்சி இருக்காது. 


தவறான வழியில் பணம் வந்து விட்டால், நிம்மதியும், சந்தோஷமும் இருக்குமா? 


சரி, அதுக்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம்?


"கண் என்ப வாழும் உயிர்க்கு"...கண் என்ன செய்யும்? பார்க்கும். கண் என்பது தானே அறிந்து கொள்ளும் கருவி. காது அப்படியல்ல. யாராவது சொன்னால் தான் கேட்டுக் கொள்ள முடியும். தானே காது ஒன்றை கேட்டுக் கொள்ள முடியாது. 


அறம் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன? என்று கேட்டால், பதிலை வேறு யாரோ சொல்ல வேண்டும், நீங்கள் கேட்கத் தயார் என்று ஆகி விடுகிறது அல்லவா?


வள்ளுவர் சொல்கிறார், யாரிடமும் கேட்காதே. நீயே "பார்". உன்னைச் சுற்றி உள்ளவற்றைப் பார். நீ எதைப் பார்கிராயோ, அதில் இருந்து அறம் என்பது என்ன என்று அறிந்து கொள்...என்கிறார். 


இல்லையே, அப்படி ஒண்ணும் குறளில் இல்லையே? அறம் என்ற வார்த்தையே குறளில் இல்லையே. வள்ளுவர் அறத்தைப் பார்க்கச் சொன்னார் என்று எங்கு இருக்கிறது?


வருவோம்...


எல்லோருக்கும் கண் இருக்கிறது. ஆனால், பார்வை ஒன்றாக இருக்கிறதா? ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி பார்க்கிறார்கள். 


ஒரு பெண் ஒரு பையனை அடிக்கிறாள் அல்லது கண்டிக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். 


"என்ன இவ...சரியான இராட்சசியா இருப்பா போல இருக்கே...அந்தச் சின்னப் பிள்ளையை இப்படியா அடிப்பது/திட்டுவது" என்று சிலர் சொல்லலாம். 


"அடா, அந்த பெண்ணுக்குத் தான் அந்தப் பிள்ளையின் மேல் எவ்வளவு அக்கறை. நாளை பின்ன இப்படி தவறு செய்து ஊருக்குள்ள கெட்ட பேர் வாங்கிரக் கூடாதே என்று அடிப்பது கடினமாக இருந்தாலும், அதைச் செய்கிறாளே..." என்று சிலர் பாராட்டலாம். 


செயல் ஒன்றுதான். "பார்வை" வேறு படுகிறதுஅல்லவா ?


படித்தவனின் பார்வை ஊடுருவி உண்மை என்ன, அறம் என்ன என்று பார்க்கும்.


அப்படிப் பார்க்க கண்ணுக்குப் பின்னால், கண் காண்பதை சரியாக விளக்கம் சொல்ல அறிவு வேண்டும். 


அந்த அறிவு எண்களையும் , எழுத்துக்களையும் ஒழுங்காக படித்தால் தான் வரும். 


மொத்தம் மூன்று பேரைச் சொல்கிறார் வள்ளுவர் இந்தக் குறளில்...


எண் என்ப -  எண் என்று சொல்லுவார்கள் 

எழுத்து என்ப - எழுத்து என்று சொல்லுவார்கள் 

கண் என்ப - கண் என்று சொல்லுவார்கள். 


இதில் முதல் சொன்ன இருவரையும் பரிமேல் அழகர் "அறிவில்லாதவர்கள்" என்று சொல்கிறார். காரணம், அறிவு என்பது எண் , எழத்து என்று பிரிந்து இருப்பது அல்ல. எல்லாம் ஒன்று தான். 


எண் என்று சொல்லுபவர்களையும், எழுத்து என்று சொல்லுபவர்களையும் விட்டு விட்டு, "கண்" என்று சொல்லுபவர்களை சிறந்தவர்கள் என்கிறார் பரிமேல் அழகர். 


இரண்டு கண் தான், அதில் எது சிறந்து, எல்லாம் ஒன்று தான். அதில் பேதம் பார்க்க முடியாது என்பதால். 


எதுக்கு எடுத்தாலும், அறம் என்றால் என்ன, அது எப்படி இருக்கும், அது காலத்துக்கு காலம் மாறுமா, எல்லாருக்கும் ஒரே அறமா என்றெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டுத் திரியாமல், நீயே "பார்"த்து தெரிந்து கொள் என்கிறார். 


அந்தப் பார்வை சரியாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு பின் புலத்தில் எண்ணும் எழுத்தும் இருக்க வேண்டும். 


பார்வையில் உள்ள பழுதை, அறிவு நீக்கும். 




Thursday, November 19, 2020

திருக்குறள் - எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து

 திருக்குறள் - எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து


ரொம்ப பாடு பட்டு பணம் சம்பாதிக்கிறோம். நமக்கு நன்றாகத் தெரியும் நாம் சேர்த்த செல்வம் எல்லாம் நாம் செலவழிக்கப் போவது இல்லை என்று. நமக்குப் பின் நம் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் உதவும் என்று சேர்கிறோம். 


நமக்குப் பின்னும் நம் பிள்ளைகள் துன்பப் படக் கூடாது என்று சொத்து சேர்த்து வைத்து விட்டுப் போக நினைக்கிறோம். 


ஆனால், நாம் சேர்த்தது வைத்த சொத்து அவர்களுக்கு போகும் என்பது என்ன நிச்சயம்? அது பத்திரமாக அவர்களுக்கு சென்று சேர்வதற்கு ஏதாவது உத்தரவாதம் இருக்கிறதா? 


இருக்கிறது என்கிறார் வள்ளுவர். யாருடைய சொத்து அவர்களின் வாரிசுகளுக்கு பயன் படும் என்று சொல்கிறார். 


யார் ஞாயமாக, நடுவு நிலையில் நின்று வாழ்கிறார்களோ அவர்கள் சொத்து சிதைவின்றி அவர்களின் வாரிசுகளுக்குப் போய் சேரும் என்கிறார். 


பாடல் 


செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_19.html


click the above link to continue reading


செப்பம் = நடுவு நிலைமை 

உடையவன் = உள்ளவன் 

ஆக்கம் = சேர்த்த சொத்து 

 சிதைவின்றி = ஒரு குறைவும் இன்றி 

எச்சத்திற்கு = அவனின் வாரிசுகளுக்கு 

ஏமாப்பு = காவல், இன்பம் தரும் 

உடைத்து  = உடையது 


நடுவு நிலைமை என்றால் ஒரு பாற் சாராமல், நீதி, நேர்மை, ஞாயம் என்று இருப்பது. 


இது மிக மிக கடினம். 

ஒரு சமுதாயத்தில் நாம் வாழும் போது நமக்கு உதவி செய்தவர்கள் இருப்பார்கள். கொஞ்சம் உதவி செய்தவர்கள், அதிகம் உதவி செய்தவர்கள், நெருங்கியவர்கள், உறவினர், நண்பர் என்று பலர் இருப்பார்கள். நமக்கு வேண்டியவருக்கும், மற்ற ஒருவர்க்கும் ஒரு சிக்கல் என்றால் நாம் நடுவு நிலைமையாக இருக்க முடியுமா? நமக்கு வேண்டியவர்களுக்கு சாதமாகத்த்தானே பேசுவோம். 


அப்படிச் செய்தால், நாம் நடு நிலை பிறழ்ந்தவர்கள் ஆவோம். 

ஒரு வீட்டின் தலைவன்/தலைவி, ஒரு பெரிய குடும்பத்தின் தலைவன், தலைவி, ஒரு நிறுவனத்தின் தலைவர், ஒரு நாட்டின் தலைவர் , ஒரு அதிகாரி, நீதிபதி என்று அனைவரும் நடு நிலையோடு இருக்க வேண்டும். 


தனக்கு ஒரு ஞாயம் பிறருக்கு ஒரு ஞாயம் என்று இருக்கக் கூடாது. 


அம்மாவுக்கும், மனைவிக்கும் இடையிலேயே நடு நிலை பேண முடிவதில்லை. 


தெரிந்தே நடு நிலை மாறி செயல் படுபவர்களின் செல்வம் அவர்களின் வாரிசுகளுக்குப் போய் சேராது என்கிறார் வள்ளுவர். 

போகிறதே, போகிறதை பார்கிறோமே என்றால், போகலாம், அது அவர்களுக்கு நன்மை செய்யாது, அது அவர்களுக்கு காவல் இருக்காது. ஏமாப்பு என்றால் அது தான் அர்த்தம். 


அப்பாவின் சொத்தை குடித்தே அழித்த பிள்ளைகள் எத்தனை, சூதில் விட்ட பிள்ளைகள் எத்தனை, கண்ட விதத்தில் ஊதாரித்தனமாக செலவழித்த பிள்ளைகள் எத்தனை, அந்த சொத்துக்காக, அந்தப் பிள்ளையை கொன்று அதை அபகரித்தவர்கள் எத்தனை...


என் கணவன்/மனைவி, என் பிள்ளை, என் பெற்றோர், என் உடன்பிறப்பு என்று நடு நிலை தவறி மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது. 


பெரிய விஷயம். நாம் அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவது இல்லை. 


கவலைப் பட வேண்டும். 



Wednesday, November 18, 2020

கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க

கந்தர் அலங்காரம் - தலை எழுத்தை அழிக்க

விதி என்று ஒன்று இருக்கிறதா? அப்படி இருந்தால் அதை மாற்ற முடியுமா? மாற்றவே முடியாது என்றால் எதற்கு இந்த கோவில், பூஜை, கடவுள் எல்லாம். அனைத்தும் விதிப்படித்தான்  நடக்கும் என்றால், நாம் வெறும் பொம்மைகள் தானா?

விதியை மதியால் வெல்ல முடியுமா என்ற கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கிறது. 

அது இருக்கட்டும். பின்னால் வருவோம். 

நமது பக்தி இலக்கியங்களில் எங்கெல்லாம் இறைவன் திருவடி என்று வருகிறதோ, அங்கெல்லாம் "ஞானம்"  என்று போட்டுக் கொள்ளலாம்.  இறைவன் திருவடி என்பது ஞானத்தின் குறியீடு. 

ஞானத்தை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்.  படித்து வருவது, அனுபவ அறிவு. 

பர ஞானம், அபர ஞானம் என்று சொல்லுவார்கள்.

நமது கடவுள்களைப் பார்த்தால், பல தலைகள், பல கரங்கள் இருக்கும். ஆனால் எல்லா  கடவுளுக்கும் இரண்டு கால்கள்தான். பத்து கால், பன்னிரண்டு கால் உள்ள தெய்வங்கள் கிடையாது. விஸ்வ ரூபம் எடுத்தால் கூட ஆயிரம் தலைகள், ஆயிரம் கைகள் வரும்,ஆனால் திருவடிகள் இரண்டு மட்டும் தான். 

ஞானம் வரும் போது தலை எழுத்து அழியும். அல்லது, ஞானத்தைக் கொண்டு 
தலை எழுத்தை அழிக்கலாம். 


 
பாடல் 

-------------------------------------------------------------------------------------- 
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே
-------------------------------------------------------------------------------------
 
சீர் பிரிச்சு பார்க்கலாம்
 
------------------------------------------------------------------------------------------------
சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேன் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங் கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
-------------------------------------------------------------------------------------------------
 
பொருள் 


click the above link to continue reading

 
 
சேல் பட்டு - மீன்கள் துள்ளி விளையாடியதில்

அழிந்தது - அழிந்தது

செந்தூர் வயல் பொழில் - திரு செந்தூரில் உள்ள வயல்கள் (அவ்வளவு தண்ணி 
இருக்குமாம் வயலில் , மீன் நீந்தும் அளவுக்கு)

தேன் கடம்பின் - தேன் வழிகின்ற கடம்ப பூ உள்ள

மால் பட்டு - மாலை பட்டு

அழிந்தது - அழிந்தது

பூங் கொடியார் மனம் - பெண்களின் மனம்

மா மயிலோன் - பெரிய மயில் மேல் உள்ள முருகன்

வேல் பட்டு - வேலினால்

அழிந்தது - அழிந்தது

வேலையும் சூரனும் வெற்பும்  - காவலை உடைய சூர பத்மனின் கோட்டையும், மலையும்

அவன் - அந்த முருகனின்

கால் பட்டு - திருப் பாதம் பட்டு

அழிந்தது - அழிந்தது

இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே
 
முருகப் பெருமானின் திருவடி பட்டு நம் தலை எழுத்து மாறும் என்கிறார் அருணகிரிநாதர்.

ஞானம் பெருகட்டும். பண்டை வினைகள் ஓயட்டும். 


Monday, November 16, 2020

கம்ப இராமாயணம் - அமிழ்தால் செய்த நஞ்சு

 கம்ப இராமாயணம் - அமிழ்தால் செய்த நஞ்சு 


இராவணன் சீதையை கொண்டு வந்ததை கண்டித்து வீடணன் சொன்னான், கும்பகர்ணன் சொன்னான், இந்திரசித்து சொன்னான், மாரீசன் சொன்னான். 


ஆனால் மண்டோதரி ஒரு இடத்தில் கூட சொன்ன மாதிரி தெரியவில்லை. 

மண்டோதரி கண்டித்து இருக்க வேண்டாமா? ஒரு வேளை சம உரிமை இல்லாதோ காலமோ? வாழ்கை துணை நலம் என்கிறார்களே. கணவன் செய்வதெல்லாம் சரி என்று ஏற்றுக் கொள்வது சரிதானா? மண்டோதரியை கற்பில் சீதைக்கு இணையாக காட்டுவான் கம்பன். அனுமனே முதலில் மண்டோதரியைக் கண்டு சீதை என்று ஒரு கணம் மயங்கினான் என்று கம்பன் பதிவு செய்கிறான். 

கற்பின் எல்லைதான் என்ன? 


கணவன் இன்னொரு பெண்ணை பலவந்தமாக கொண்டு வந்தால், பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா?


கணவன் தீயில் குதி என்றால் குதிப்பதா? 


சிந்திக்க வேண்டிய விஷயம். 


இந்திரசித்து இறந்து போகிறான். தலையில்லா அவன் உடலை இராவணன் சுமந்து வருகிறான். இறந்த தன் மகனைப் பார்த்து மண்டோதரி அழுகிறாள். அந்த ஒரு இடத்தில் சீதை பற்றி அவள் பேசுகிறாள். 


"அஞ்சினேன் அஞ்சினேன் அந்த சீதை என்ற அமிழ்தால் செய்த நஞ்சால் நாளை இலங்கை வேந்தனும் இப்படி தலை இல்லாமல் இறந்து கிடப்பானே என்று நினைத்து அஞ்சினேன் அஞ்சினேன் " என்றாள்.


பாடல் 


‘பஞ்சு எரி, உற்றது என்ன

    அரக்கர்தம் பரவை எல்லாம்

வெஞ்சின மனிதர் கொல்ல,

    விளிந்ததே மீண்டது இல்லை;

அஞ்சினேன் அஞ்சினேன்; அச்

    சீதை என்று அமிழ்தால் செய்த

நஞ்சினால் இலங்கை வேந்தன்

    நாளை இத்தகையன் அன்றோ? ‘


பொருள்

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_16.html

click the above link to continue reading 

‘பஞ்சு எரி, உற்றது என்ன = பஞ்சில் தீ பற்றியது போல 

அரக்கர்தம் = அரக்கர்களின் 

பரவை எல்லாம் = படைகள் எல்லாம் 

வெஞ்சின மனிதர் கொல்ல = கொடிய சினம் கொண்ட மனிதர்கள் கொல்ல 

விளிந்ததே மீண்டது இல்லை; = இறந்தன, மீண்டும் வரவில்லை 

அஞ்சினேன் அஞ்சினேன்;  = அஞ்சினேன், அஞ்சினேன் 

அச் சீதை என்று = அந்த சீதை என்ற 

அமிழ்தால் செய்த = அமிழ்தால் செய்த 

நஞ்சினால்  = விஷத்தால் 

இலங்கை வேந்தன் = இராவணன் 

நாளை இத்தகையன் அன்றோ? ‘ = நாளை இந்த மாதிரி தலை துண்டிக்கப்பட்டு இறந்து கிடப்பானே என்று 


கணவன் செய்வது தவறு என்று தெரிகிறது. அதனால் அவன் அழிவான் என்று தெரிகிறது. இருந்தும் அவனோடு சண்டை போடவில்லை. 

மண்டோதரி நினைத்து இருக்கலாம்....


இராவணனுக்குத் தெரியாதா ? முக்கோடி வாழ்நாள், முயன்று உடைய பெரிய தவம், நாரதர் முனிவருக்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவு, கூற்றையும் ஆடல் கொண்ட வீரம், அட்ட திக்கு யானைகளோடு போரிட்ட தோள் வலி, அவனுக்குத் தெரியாததையா தான்  சொல்லி விடப் போகிறேன் என்று நினைத்து இருக்கலாம். 


சுக்ரீவனின் மனைவியை வாலி வைத்துக் கொண்டான். வாலியின் மனைவி தாரை அதை எதிர்த்து ஒன்றும் சொல்லவில்லை. 


வலிமையான ஆண்களின் பின்னால் இருக்கும் பெண்கள் ஒன்றும் சொல்லுவது இல்லையோ? 









Sunday, November 15, 2020

திருக்குறள் - நோக்கக் குழையும் விருந்து

 திருக்குறள் - நோக்கக் குழையும் விருந்து


விருந்து என்பதை ஒரு அறமகாச் சொன்னவர்கள் நம்மவர்கள். விருந்தின் மேன்மைப் பற்றி சொல்லாத இலக்கியம் இல்லை. கணவனை பிரிந்த மனைவி கூட, அவள் பிரிவை பற்றி கவலைப் படாமல், "ஐயோ, நான் யாரையும் விருந்துக்கு அழைக்க முடியவில்லையே, அவர் எப்படி விருந்தினர் வந்தால் சமாளிப்பாரோ" என்று வருந்துகின்ற காட்சிகளை காண்கிறோம். 


அதெல்லாம் சரி, விருந்து கொடுப்பவன் எப்படி கொடுக்க வேண்டும், என்பதற்கு ஆயிரம் விதிமுறை சொல்லி இருக்கிறார்கள். இந்த விருந்தினன் எப்படி இருக்க வேண்டும் என்று ஏதாவது சொல்லி இருக்கிறார்களா? 


வீட்டுக்கு விருந்துக்கு வருபவன் எப்படி இருக்க வேண்டும்? அவனுக்கு ஏதாவது விதி இருக்கிறதா ?


சிலர் இருக்கிறார்கள். 


முதலில், சொல்லாமல் கொள்ளாமல் வந்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்துவார்கள். வந்தவனை போ என்றா சொல்ல முடியும். நாம் ஏதோ ஒரு அவசரத்தில் அல்லது ஒரு சங்கடத்தில் இருப்போம்.  அவன் பாட்டுக்கு வந்து உட்கார்ந்து கொண்டு ஊர் கதை எல்லாம் பேசிக் கொண்டு இருப்பான். நம் அவஸ்தை தெரியாமல். 


இன்னும் சிலர் இருக்கிறார்கள்,  வீட்டில் வந்து என்ன பேசலாம், என்ன பேசக் கூடாது என்ற இங்கிதம் தெரியாதவர்கள். மனைவி, பிள்ளைகள் இருக்கும் போது எதைப் பேசலாம், எதைப் பேசக் கூடாது என்ற பாகுபாடு இல்லாமல், கண்டதையும் பேசிக் கொண்டு இருப்பது. நாம் இங்கே நெளிந்து கொண்டு இருப்போம். அதைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லாமல், பேசிக் கொண்டே போவான். 


மூன்றாவது, நேரத்தின் அருமைதெரியாதவர்கள். நாம் எப்படி எல்லாமோ எடுத்துச் சொல்லி பார்ப்போம். "அவசரமா வெளியே போகணும், ஒருவரை பார்க்கப் போகணும்" என்றெல்லாம் சொல்லிப் பார்போம். ம்ஹும்...ஒரு அசைவும் இருக்காது. 


நான்காவது, வீட்டின் நிலைமை புரியாமல் சில பேர் உட்கார்ந்து கழுத்தை அறுத்துக் கொண்டு இருப்பார்கள். மனனவி எங்கோ வெளியே போக கிளம்பிக் கொண்டு இருப்பாள். "நல்ல காப்பி கிடைக்குமா" என்று உரிமையோடு கேட்டு நடு வீட்டில் உட்கார்ந்து கொள்வார்கள். 


இன்னும் சிலர், ஒரு வீட்டில் எவ்வளவு சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாம், என்ற இங்கிதம் தெரியாதவர்கள். வீட்டுக்கு வந்தால், ஹாலில் உட்கார வேண்டும். அடுப்படிக்கு உள்ளே போவது, படுக்கை அறையை எட்டிப் பார்ப்பது, அங்குள்ள புத்தகங்களை எடுத்துப் போட்டு புரட்டுவது, என்று அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.  சொல்லவும் முடியாது, மெல்லவும் முடியாது. 


இன்னும் சிலர், நாசூக்கு என்பது அணு அளவும் இல்லாத ஆட்கள். சாப்பிட ஏதாவது கொடுத்தால், "ரொம்ப நல்லா இருக்கே, இன்னும் கொஞ்சம் இருக்கா" என்று நேரடியாக கேட்டு நம்மை சங்கடத்தில் ஆழ்த்துவார்கள். 


வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால், "இங்க வா, மாமா கிட்ட வா என்று அதை கன்னத்தைப் பிடித்து கிள்ளுவது " போன்ற அநாகரீகமான செயலில் ஈடு படுபவர்களும் உண்டு. 


இப்படிப் பட்ட ஆட்களுக்கு வள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா? 


சொல்லாமல் இருப்பாரா?


பாடல் 

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_83.html

(please click the above link to continue reading)


மோப்பக் = முகர்ந்து பார்த்தால் 

குழையும் =  வாடி விடும் 

அனிச்சம்  = அனிச்சம் மலர் 

முகந்திரிந்து = முகம் சற்றே மாறி 

நோக்கக் = பார்த்தால் 

குழையும் = வாடி விடும் 

விருந்து. = விருந்தினர் 


மலர்களில் மிக மென்மையானது அனிச்சம் மலர். அதை பறிக்கக் கூட வேண்டாம். முகர்ந்து பார்த்தாலே வாடி விடும். அவ்வளவு மென்மை. விருந்தினர்கள் அதை விட மென்மையானவர்கள். வீட்டில் இருப்பவர்கள் கொஞ்சம் முகம் மாறி பார்த்தாலே விருந்தினர்கள் வாடி விடுவார்கள். 


அதெல்லாம் சரி, அதுக்கும் இந்த விருந்தினர்க்கும் என்ன சம்பந்தம். 


வள்ளுவர் சொல்கிறார், ஒரு விருந்தினன் அந்த அளவுக்கு மென்மையா,  இருக்கணும். 

விருந்துக்கு போன வீட்டின் நிலை என்ன, அங்குள்ள கணவன் மனைவி உறவு எப்படி இருக்கு, எங்காவது கிளம்பிக் கொண்டு இருக்காங்களா, பேசலாமா, கூடாதா, என்று எல்லாவற்றிலும் ஒரு நாசுக்கு, பண்பாடு, ஒரு மென்மை இருக்க வேண்டும். 


அவன் தான் விருந்தினன். அவனைத்தான் விழுந்து விழுந்து உபசரிக்கச் சொல்கிறது நம் இலக்கியங்கள். 


மாறாக, இங்கிதம் தெரியாமல், பண்பாடு இல்லாமல், வீட்டின் சூழ் நிலை தெரியாதவனை விருந்து பாராட்டச் சொல்லவில்லை. 

எனவே, அப்படிப்பட்டவர்கள் வந்தால், தயங்காமல் மனதில் பட்டதைச் சொல்லி அவர்களின் எல்லையை காட்டுவது தவறு இல்லை. நீங்கள் செய்வதும் செய்யாததும் உங்கள் விருப்பம். நம் கலாச்சாரம், பண்பாடு, எல்லா விருந்தினரையும் ஒரு சேர பார்க்கச் சொல்லவில்லை. 







தேவாரம் - பறி நரி கீறுவது அறியீர்

 தேவாரம் - பறி நரி கீறுவது அறியீர் 


எப்ப வெளியே போனாலும் ஒரு ஐம்பது அல்லது அறுபது கிலோ மூட்டையை தூக்கிக் கொண்டுதான் போக வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? கல்யாண வீட்டுக்குப் போனாலும், காய் கறி வாங்கப் போனாலும், அலுவலகம் போனாலும், கோவிலுக்குப் போனாலும் அந்த மூட்டையை சுமந்து கொண்டுதான் போக வேண்டும். 


முடியுமா?


ஆனால் , செய்கிறோமே. இந்த உடம்பை தூக்கிக் கொண்ண்டுதானே போகிறோம். எங்கு போனாலும், இந்த உடம்பை தூக்கிக் கொண்டு தான் போக வேண்டி இருக்கிறது. விட்டு விட்டுப் போக முடியுமா? 


நம்ம உடம்பு நமக்கு பாரமா? என்று கேட்கலாம். 


நாம் வெகு தூரம் நடப்பது இல்லை. எனவே தெரிவது இல்லை. பத்து கிலோ மீட்டர் நடந்து பாருங்கள் தெரியும், இந்த உடம்பு பாரமா இல்லையா என்று. பத்து மாடி ஏறிப் பாருங்கள் தெரியும். இந்த உடம்பை தூக்கிக் கொண்டு ஏற முடியாது என்று. மூச்சு வாங்கும். நின்று விடுவோம். 


இந்த உடம்பு ஒரு நாள் படுத்து விடும். இதை வைத்து எதாவது நல்லது செய்யலாம். நல்லவற்றை அறிந்து கொள்ளலாம். அறிந்தவற்றை பகிர்ந்து கொள்ளலாம். நாலு நல்ல வார்த்தை பேசலாம். ஏதாவது உருப்படியாக செய்யலாம். அதை விடுத்து சும்மா இந்த உடம்பை தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருக்கிறோம். 


ஒரு நாள், இந்த உடம்பை தீ கொள்ளும், அல்லது நிலம் கொள்ளும். 


சுந்தரர் சொல்கிறார் 


"இந்த உடம்பை சுமந்து கொண்டு திரிந்து துன்பப் படுகிறீர்கள். ஒரு நாள், இந்த உடம்பை புதைத்து விடுவார்கள். புதைத்த உடம்பை நரி தோண்டி எடுத்து கீறி தின்னும். அது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. கூற்றுவன் ஒரு நாள் வருவான். அவன் வரும் போது அடடா நல்லது செய்யாமல் காலத்தை போக்கி விட்டோமே என்று வருந்தினால், செய்ய நினைத்த நல்ல காரியங்களை செய்திருந்தால் வரும் பலன் கிட்டாமல் போய் விடும். இருக்கிற போதே, வாழ் நாளின் குறைவை எண்ணி நல்லதை செய்யுங்கள். பசித்தவர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நல்ல நீரோடு, உணவு அளித்து, அவர்கள் மனம் மகிழும் படி பேசி இருப்பவர்கள் வணங்கும் கேதாரம் என்ற திருத் தலத்தில் உள்ள ஈசனை வழி படுங்கள் "


பாடல் 


பறியேசுமந் துழல்வீர்பறி நரிகீறுவ தறியீர்

குறிகூவிய கூற்றங்கொளு நாளால் அறம் உளவே

அறிவானிலும் அறிவான்நல நறுநீரொடு சோறு

கிறிபேசிநின் றிடுவார்தொழு கேதாரமெ னீரே


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_15.html

(pl click the above link to continue reading)



பறியேசுமந் துழல்வீர் = பறி என்றால் உடம்பு. உடம்பை சுமந்து கொண்டு துன்பப் படுவீர்கள் 


பறி = இந்த உடம்பை 

நரிகீறுவ தறியீர் = நரி தனது கூரிய நகங்களால் கீறுவதை அரிய மாட்டீர்கள் 

குறி = குறித்த நாளில் 

கூவிய = கூவிக் கொண்டு வந்து 

கூற்றங்கொளு நாளால் = கூற்றுவன் உங்கள் உயிரை கொண்டும் செல்லும் நாளில் 


அறம் உளவே = அறம் உங்களுக்கு உளவாகுமா ? ஆகாது. செய்தால் தானே பலன் கிட்டும்.

அறிவானிலும் அறிவான்  = அறிந்து கொள்ளக் கூடியவர்களில் ஒருவராக 


நல நறுநீரொடு  சோறு = நல்ல நறுமணம் மிக்க நீரோடு, சோறும் தந்து 

கிறிபேசி  = அவர்கள் மனம் மகிழும் படி பேசி 

நின் றிடுவார்  = இருப்பவர்கள் 


தொழு = தொழும் , வணங்கும் 

கேதாரமெ னீரே = கேதாரம் என்று சொல்லுங்கள். 


திருவாசகத்தில், திரு அம்மாணையில் , மணிவாசகர் பாடுவார் 


கேட்டாயோ தோழி "கிறி" செய்த வாறொருவன்

தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்

காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டி

தாள்தா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி

நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடெய்த

ஆட்டான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய் 


கிறி செய்தவாறு  ஒருவன் = மனதை மயக்கும் படி பேசி ஒருவன். சிற்றின்பத்தின் உச்சம் தொட்டுக் காட்டிய பாடல் இது. ஒரு பெண் முதன் முதலாக ஒரு ஆடவனின் அருகாமை உணரும் பாடல். 


மாவலியிடம், அவன் மனம் மயங்கும் படி பேசி மூன்றடி நிலம் பெற்ற அந்தத் திருமாலை அல்லால் என் மனம் வேறு ஒன்றையும் போற்றாதே என்கிறது பிரபந்தம். 


சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்

ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு

இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற

பெருங்"கிறி" யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே


இதில் உள்ள இறுதி இரண்டு சொற்கள் "நெஞ்சம் பேணலதே" . நெஞ்சம் பேணாது. நெஞ்சம் போற்றாது என்று பொருள். 


பேணுதல், போற்றுதல். 


தந்தை தாய் பேண். தாய் தந்தையரை போற்று. 


பெண் என்ற சொல் பேண் என்ற சொல்லில் இருந்து பிறந்தது. 


போற்றப் படுபவள், போற்றப்  பட வேண்டியவள் என்ற அர்த்தத்தில். 

Friday, November 13, 2020

கம்ப இராமாயணம் - பொன் மான்

 கம்ப இராமாயணம் - பொன் மான் 

சீதை பொன் மானைக் கண்டதும், அதைப் பற்றித் தருமாறு இராமனை வேண்டியதும், இராமன் போனதும் அந்தக் கதை எல்லாம் நமக்குத் தெரியும். 


உலகம் யாவையும் என் சொல்லினால் சுடுவேன் என்ற அளவுக்கு ஆற்றல் கொண்ட சீதை, பொன் மான் உண்மையானது அல்ல என்று அறிய மாட்டாளா? 

சரி, அவள் தான் பெண், ஏதோ ஆசைப் பட்டுவிட்டாள், இராமனுக்குத் தெரியாதா? பொன் மான் என்று ஒன்று கிடையாது என்று அவனுக்குத் தெரியாதா? வசிட்டரிடமும், விச்வாமித்ரரிடமும் படித்த கல்வி அதைச் சொல்லவில்லையா? இலக்குவனுக்குத் தெரிந்தது இராமனுக்குத் தெரியாதா? 


பின் ஏன் அது நிகழ்ந்தது?


அப்படி போனால், இராவணன் வந்து சீதையை தூக்கிக் கொண்டு போவான், அது தேவையான ஒன்று என்று அவர்கள் நினைத்து இருந்தால், அவர்கள் மேல் பரிதாபப் பட ஒன்றும் இல்லை. வேண்டும் என்றே செய்த ஒன்று. 


சரியான விளக்கமாகப் படவில்லையே. எப்படி போனாலும் இடிக்கிறதே. 

அது ஒரு புறம் இருக்கட்டும். 


பொன் மான் உண்மை அல்ல என்று தெரிந்தும் அதை விரட்டியது அறிவீனமான செயல் என்றால், நாம் எத்தனை பொன் மான்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம்?

கடைசி காலத்தில் பிள்ளை பார்த்துக் கொள்வான் என்று ஒரு பொன் மான். 

வயதான காலதத்தில் கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் துணையாக இருப்பார்கள் என்று ஒரு பொன் மான். 

சுவர்க்கம், நரகம், பரமபதம், கைலாசம் என்று சில பொன் மான்கள். 

நல்லது செய்தால் நல்லது நடக்கும், தீயது செய்தால் தீயது நடக்கும், கர்ம வினை,  என்று சில பொன் மான்கள். 


அதெப்படி, அதெல்லாம் இல்லை என்று சொல்ல முடியும்? நம் முன்னோர்கள் மூடர்களா என்று கேட்கலாம். அப்படித்தான் சீதை நினைத்தாள். அப்படித்தான் இராமன் நினைத்து அதன் பின் போனான். பட்ட துயரம் வராலாறு. 


இவை எல்லாம் உண்மையான மான்கள் என்று நினைப்பது அவரவர் உரிமை.  


வீடு வாங்கினால் நிம்மதியாக இருக்கலாம் என்று கணவனை அந்த வீடு என்ற பொன் மானை பிடித்துத் தரச் சொல்லி விரட்டும்  சீதைகள் எத்தனை. 


ஒவ்வொருவரும் சில பல பொன் மான்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம். 


இந்த பொன் மான்களின் பட்டியல் மிக நீண்டது. நமக்குத் தெரிவவதில்லை. 


நம் பெற்றோர், அவர்களின் பெற்றோர் என்று வழி வழியாக துரத்திக் கொண்டு இருக்கிறோம். 


இந்த பொன் மானை துரத்துவது நின்றால் தான் நிம்மதி, அமைதி பிறக்கும். 

எல்லா பொன் மானும், நிஜ மான் போலவே தெரிவதுதான் சிக்கல். 

பாடல் 

'ஆணிப் பொனின் ஆகியது;      ஆய் கதிரால்

சேணில் சுடர்கின்றது; திண்      செவி, கால்,

மாணிக்க மயத்து ஒரு      மான் உளதால்;

காணத் தகும்' என்றனள்,      கை தொழுவாள்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_13.html

(click the above link to continue reading)


'ஆணிப் பொனின் ஆகியது = ஆராய்ந்து எடுக்கப்பட்ட பொன்னால் ஆனது 

ஆய் கதிரால் = சூரிய ஒளியில் 

சேணில்  = தூரத்தில் இருந்து பார்க்கும் போது 

சுடர்கின்றது = ஒளி விடுகிறது 

 திண்  செவி, கால், = உறுதியான காது, மற்றும் கால்கள் 

மாணிக்க மயத்து  = மாணிக்கம் போல 

ஒரு  மான் உளதால்; = ஒரு மான் உள்ளது 

காணத் தகும்' என்றனள்,    = காணத் தகும் என்று 

கை தொழுவாள். = கை கூப்பி நின்றாள் 


பெண்ணின் ஜாலம். வேண்டும் என்று சொல்லவில்லை. "பாத்தா அப்படி நல்லா இருக்கு " என்று கூறி விட்டு கை கூப்பி நின்றாள். 


அதற்கு என்ன அர்த்தம் ? அதை எனக்கு பிடித்துத் தா என்பதுதான் அர்த்தம். 

அவ ஒண்ணும் அப்படிச் சொல்லவில்லை, இராமனாகத்தான் பிடிக்கப் போனான் என்று சொல்லும் முன் சற்று பொறுங்கள். முழுவதையும் படித்து விடுவோம். 


மாய மான்களை விரட்டிக் கொண்டு கையில் வலையோடு அலைந்து கொண்டு இருக்கிறோம்.  


ஒரு மானைப் பிடித்தால் புதிதாக நாலு மான்கள் வருகின்றன. 


இந்த மான் பிடி ஓட்டம் என்று நிற்கும்? 


Thursday, November 12, 2020

வில்லி பாரதம் - தரு வரம் எனக்கும் இரண்டு உள

 வில்லி பாரதம் - தரு வரம் எனக்கும் இரண்டு உள 


காப்பியங்களில் எவ்வளவோ அவலச் சுவையை நாம் பார்த்து இருக்கிறோம்.  கதா நாயகனும், கதா நாயகியும் படாத பாடு படுவார்கள்.  கடைசியில் வெற்றி பெறுவார்கள். 

நான் படித்த வரை, மிகவும் வருந்துதற்கு உரிய அவலமான நிலை கர்ணனின் நிலை. 


தன் தாயிடம் ஒரு பிள்ளை கேட்கும் வரம்...


"நான் இறந்த பிறகு எனக்கு நீ பாலூட்ட வேண்டும்" என்று ஒரு பிள்ளை தாயிடம் கேட்கும் அவலம், அவலத்தின் உச்சம். 


செத்த பிறகாவது தாயன்பு கிடைக்காதா என்று ஏங்கும் அவன் அன்பின் தாகம் எவ்வளவு இருக்க வேண்டும்?  

சிலருக்கு அப்படி ஒரு அவலம் நிகழ்து விடுகிறது. விதி. 


பாடல் 


பெரு வரம் இரண்டும் பெற்றபின், தன்னைப் பெற்ற

                தாயினைக் கரம் குவித்து,

'தரு வரம் எனக்கும் இரண்டு உள: உலகில் சராசரங்களுக்கு

                எலாம் தாயீர்!

வெருவரும் அமரில் பார்த்தனால் அடியேன் வீழ்ந்தபோது,

                அவனிபர் அறிய,

மரு வரும் முலைப்பால் எனக்கு அளித்து, உம்தம் மகன்

                எனும் வாய்மையும் உரைப்பீர்.


பொருள் 


பெரு வரம் = பெரிய வரம் 

இரண்டும் பெற்றபின் = (குந்தி) இரண்டையும் பெற்ற பின் 

தன்னைப் பெற்ற = தன்னைப் பெற்ற 

தாயினைக் = தாயிடம் 

கரம் குவித்து, = கை கூப்பி 

'தரு வரம் = தரக்கூடிய வரம் 

எனக்கும் இரண்டு உள = எனக்கும் இரண்டு உள்ளது 

உலகில் சராசரங்களுக்கு = இந்த உலகுக்கு

எலாம் தாயீர்! = எல்லாம் தாய் போன்றவளே 

வெருவரும் அமரில்  =  அஞ்சத்தக்க போரில் 

பார்த்தனால் = அர்ஜுனனால் 

அடியேன் வீழ்ந்தபோது, = நான் வீழ்ந்த பின் 


அவனிபர் அறிய, = உலகில் உள்ள அனைவரும் அறிய 

மரு வரும் = மனம் மகிழ்ந்து 

முலைப்பால்  = உன் தாய் பாலை 

எனக்கு அளித்து = எனக்கு அளித்து 

உம்தம் மகன் = நான் உன் மகன் 

எனும்  = என்ற 

வாய்மையும் உரைப்பீர். = உண்மையை உரைப்பீர் 


குழந்தை பசித்து தாய் பாலுக்கு அழலாம். 


ஒரு வளர்ந்த பிள்ளை, தான் இறந்த பின், எனக்கு தாய் பால் தா என்று ஏங்கும் ஏக்கம் இருக்கிறதே ....




திருக்குறள் - நீர் இன்றி அமையாது உலகு

திருக்குறள் - நீர் இன்றி அமையாது உலகு 

நாம் எல்லாம் ஒழுக்கமானவர்கள். ஒரு தப்பு தண்டா செய்வது இல்லை. சட்டம், நீதி, நேர்மை, சமுதாய பண்பாடு இவற்றிற்கு பயப்படுபவர்கள்.  அதில் நமக்கு ஒரு பெருமையும் உண்டு. 


நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், நம் பண்பாடு, ஒழுக்கம், ஆசாரம் எல்லாம் நம் குலத்தில் இருந்து வந்தது, நம் பெற்றோர்கள் நமக்குத் தந்தது, நாம் படித்து உணர்ந்தது என்று. 

வள்ளுவர் சொல்கிறார், வானம் பொய்த்தால், இந்த உலகில் யாரும் ஒழுக்கமாக இருக்க முடியாது என்று. 


இந்த உலகில் ஒழுக்கம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், மழை இடை விடாது பெய்ய வேண்டும். அது தன் விருப்பத்துக்குப் பெய்தால், அல்லது பெய்யாமல் இருந்தால், உலகில் ஒரு ஒழுக்கமும் இருக்காது. 

உண்ண உணவும், குடிக்க நீரும், உடுக்க உடையும் இல்லை என்றால் என்ன ஒழுக்கம் இருக்கும் ?


அனைத்து அறங்களும் , பூஜைகளும், ஆசார அனுஷ்டானங்களும், தர்மங்களும், நீதி, நேர்மை, வாய்மை போன்ற உயர் குணங்களும் மழையினால் நிலை பெற்று நிற்கின்றன. 


பசி வந்து விட்டால் என்ன தர்மம் நிற்கும். 


உலகுக்கு காயத்ரி மந்திரம் தந்த விச்வாமித்ரனை நாய் கறி தின்னத் தூண்டியது பசி. அப்படி என்றால், ஒழக்கம் எங்கே நிற்கிறது என்று புரிகிறதா?


பாடல் 


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/11/blog-post_12.html

(click the above link to continue reading)



நீர்இன்று = நீர் இல்லாமல் 

அமையாது  = இருக்காது, இயங்காது 

உலகெனின் = உலகம் என்றால், என்று கூறினால் 

யார்யார்க்கும் = யாராக இருந்தாலும் 


வான்இன்று = வானம் இன்றி , மழை இன்றி 

அமையாது ஒழுக்கு = அமையாது ஒழுங்கு , அறம் 


நீர் இல்லாமல் உலகம் இல்லை. அது போல், மழை இல்லாமல் ஒழுக்கம் இல்லை. 


உயிர் வாழ மட்டும் அல்ல, ஒழுக்கத்தோடு, பண்போடு, அறத்தோடு வாழவும் மழை வேண்டும். 

மழை எவ்வளவு உயர்ந்தது என்று புரிந்து கொள்ள உதவும் பாடல். 

இவ்வாறாக, வான் சிறப்பு என்ற அதிகாரம் பற்றி நாம் கொஞ்சம் சிந்தித்தோம். 

இனி, மற்றுமொரு அதிகாரம் பற்றி சிந்திப்போமா ?


Tuesday, November 10, 2020

கம்ப இராமாயணம் - இல்லை ஆயினன் உன் மகன்

 கம்ப இராமாயணம் - இல்லை ஆயினன் உன் மகன் 


இந்திரஜித்து போர்க் களத்தில் இறந்து போகிறான். அதை இராவணனிடம் சொல்ல வேண்டும். 

உன்  பிள்ளை இறந்து விட்டான் என்று தக்கபனிடம் எப்படிச் சொல்வது? அதுவம் இராவணன் போன்ற பேரரசனிடம்? சொன்னவன் தலையை சீவி விட மாட்டானா?

அது ஒரு புறம் இருக்கட்டும். 


சில நாள் நம் பிள்ளை வீடு வந்து சேர நேரம் ஆனால், நமக்கு ஒரு லேசான பதற்றம் வரும் தானே.

அவன் நண்பர்கள் வீட்டுக்கு எல்லாம் தொடர்பு கொண்டு அவன் அங்க இருக்கானா, அங்க வந்தானா என்று கேட்போம் அல்லவா? 

அவன் அங்கு இல்லை என்றால், அவன் நண்பர்கள் என்ன சொல்லுவார்கள் ?

"அவன் இங்க இல்லையே" என்று சொல்லுவார்கள் அல்லவா?


ஒரு இடத்தில் இல்லாவிட்டால், இன்னொரு இடத்தில் இருக்கலாம். 


இந்திரஜித்து இறந்ததை கம்பன் சொல்லுவதைக் கேளுங்கள். 

"இன்று இல்லை" 

என்று சொல்கிறான். 

நேற்று இருந்தான், இன்று இல்லை. 

போர்க்களத்தில் இல்லை என்றால், அரண்மனையில் இருக்கலாம், அரண்மனையில் இல்லை என்றால் கோவிலில் இருக்கலாம்...எங்காவது இருக்கலாம், தேடுங்கள் என்று சொல்லலாம். 

"இன்று இல்லை" என்றால் என்ன செய்வது.

அவலத்தின் உச்சம். 

அதைச் சொல்ல, அந்த படை வீரர்கள் நடுநடுங்கி வருகிறார்கள். வந்து சொல்கிறார்கள். 


பாடல் 



பல்லும் வாயும் மனமும் தம் பாதமும்

நல் உயிர்ப் பொறையோடு நடுங்குவார்

‘இல்லை ஆயினன்; உன்மகன் இன்று ‘எனச்

சொல்லினார் பயம் சுற்றத் துளங்குவார்.


பொருள் 


(click the above link to continue reading)

பல்லும் = பல்லு 

வாயும்  = வாய் 

மனமும் = மனம் 

தம் பாதமும் = அவர்கள் கால்கள் 

நல் உயிர்ப் = அவர்களின் உயிர் 

பொறையோடு = கனமாக உணர்ந்து 

நடுங்குவார் = நடுங்கினார்கள் 

‘இல்லை ஆயினன்; = இல்லை என்று ஆகி விட்டான்  

 உன்மகன் இன்று = உன் மகன் என்று 

‘எனச் சொல்லினார் = என்று சொல்லினார்கள் 

 பயம் சுற்றத் = பயம் அவர்களை சூழ்ந்து கொள்ள 

துளங்குவார். = நடுங்கினார்கள் 


பல்லு, காலு, மனம், உயிர் எல்லாம் தந்தி அடிக்கிறது. 


"இன்று உன் மகன் இல்லை" என்று சொனார்கள். 


இந்திரஜித்து இறந்த பின் மண்டோதரியும் இராவணனும் அழுத அழுகை இருக்கிறதே, கல் மனதையும் கரைக்கும். 


சீதை மேல் கொண்ட காமம் மகனின் மறைவோடு இராவணனுக்கு போய் விட்டது. 

இவ்வளவு பெரிய வலி வேண்டி இருந்திருக்கிறது, அந்தக்  காமம் போக. அப்படி என்றால் அது எவ்வளவு வலிமையாக இருந்திருக்கும் ?