திருக்குறள் - தானே வரும்
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
எல்லோருக்கும் தெரிந்த குறள் தான்.
மற்றவர்களுக்கு நாம் துன்பம் செய்தால், நமக்கு துன்பம் தானே வரும்.
அதுவும், காலையில் செய்தால், மாலையில் வரும் என்கிறார் வள்ளுவர்.
மற்றவர்களுக்குத் துன்பம் செய்தால் நமக்கு துன்பம் வரும் என்பது தெரிந்த விடயம் தானே. இதைச் சொல்வதற்கு வள்ளுவர் வேண்டுமா என்று நினைக்கலாம்.
பாடல்
பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்
பொருள்
பிறர்க்கு = மற்றவர்களுக்கு
இன்னா = துன்பத்தை
முற்பகல் = காலையில்
செய்யின் = செய்தால்
தமக்குஇன்னா = செய்தவனுக்கு துன்பம்
பிற்பகல் = மாலையில்
தாமே வரும் = தானே வரும்
இதற்கு பரிமேல் அழகர் சொல்லும் விளக்கத்தைப் பார்ப்போம்.
இந்தக் குறள், துறவறத்தில் உள்ளது. எனவே இது துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்கிறார்.
ஒரு துறவி, முனிவன், பிறருக்கு துன்பம் செய்யவே கூடாது. எல்லார் மேலும் அவன் அன்பு செலுத்த வேண்டும். துறவிகள் பிறருக்கு துன்பம் செய்யமாட்டார்கள் என்பதால்
"செய்யின்" என்று கூறினார். அதாவது செய்தால் என்ற அர்த்தத்தில். செய்ய மாட்டார்கள், ஒருவேளை செய்தால்.
அது என்ன முற்பகல் , பிற்பகல் ?
ஒரு துறவி தவறு செய்தால், அவன் செய்த தவம் உடனே அழியும் என்பதால், முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்றார்.
இன்று ஒரு தவறு செய்தால், ஒரு நாலைந்து வருடம் கழித்து அதற்கு உண்டான தண்டனை கிட்டும் என்று அல்ல. இன்று செய்தால், இன்றே விளையும்.
செய்யின், தானே. என்று இரண்டு வார்த்தைகள்.
செய்வது - நாமே சென்று செய்வது.
ஆனால், நமக்குத் துன்பம் யாரும் செய்ய வேண்டாம். அது தானே வரும். நம்மை விட எளிய ஒரு ஆளுக்கு துன்பம் செய்கிறோம். இவன் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறோம். அவன் பதிலுக்கு துன்பம் செய்ய வேண்டாம். நமக்குத் துன்பம் தானே வரும்.
மனைவியை சுடு சொல் கூறுகிறாயா? அவளால் திருப்பிச் சொல்ல முடியாமல் இருக்கலாம்...ஆனால் அலுவலகத்தில் மேலதிகாரி உன்னை திட்டலாம். அது வலிக்கும். ஏன் இவர் நம்மைத் திட்டுகிறார் என்று நினைத்தால், யாரையோ, எங்கேயோ நம் சொல்லால் வருத்தி இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
வலி வரும்போது தெரியாது ஏன் அது வருகிறது என்று. எப்போதோ செய்த வினை, இப்போது வருகிறது. சில சமயம் உடனே வரும், சில சமயம் நேரம் தாழ்த்து வரும். ஆனால், கட்டாயம் வரும்.
"தானே" என்பதற்கு பரிமேலழகர் , "நீ (துறவி) ஒருவனுக்கு துன்பம் செய்கிறாயா? உனக்கு இன்னொருவன் , வேறு ஒரு துன்பம் செய்ய வேண்டாம். நீ செய்த துன்பமே, உன் தவத்தை அழித்து உனக்கு துன்பத்தைத் தரும். தானே என்றால் நீ செய்த அந்த துன்பமே" என்று பொருள் கூறுகிறார்.
பிறருக்கு துன்பம் செய்யும் போது, நினைத்துக் கொள்ள வேண்டும்....இது எனக்கு திருப்பி வரும் என்று.
அந்த நினைவு வந்தால், துன்பம் செய்வோமா?
யாருக்குமே துன்பம் செய்யாமல் இருக்கும் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும். நாம் யாருக்கும் துன்பம் செய்யாவிட்டால், எல்லோரும் நம்மிடம் அன்போடு இருப்பார்கள். அந்த வாழ்க்கை எவ்வளவு இனிதாக இருக்கும் ?
நாளை பூஜை செய்யும் போது, வள்ளுவரை நினைத்து ஒரு பூ எடுத்துப் போட வேண்டும்.