கம்ப இராமாயணம் - ஆவி நாயகன்
https://interestingtamilpoems.blogspot.com/2026/06/blog-post_30.html
எது நல்ல சகுனம். வலது கண் துடிப்பதா, இடது கண் துடிப்பதா?
எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சுருக்கு வழி.
பெண்கள் முதன் முதலாக வீட்டுக்கு வரும் போது வலது காலை எடுத்து வைத்து வர வேண்டும் என்பார்கள். வலது கால் எடுத்து வைப்பது நல்லது. அதோடு இடது கண் துடிப்பது நலம். இது ஐதீகம்.
பெண்ணுக்கு வலது கண் துடித்தால் நல்லது அல்ல என்பது ஒரு நம்பிக்கை.
சீதை சொல்கிறாள்
"என் ஆவி நாயகன் இராமன், தனக்கு வர வேண்டிய அரசை தம்பிக்குத் தந்து, கானகம் புறப்பட்ட அந்த நாள் எனக்கு வலது கண் துடித்தது. அது நல்ல சகுனம் அல்ல."
இன்று இடது கண் துடித்தது. அது நல்லது என்று சொல்ல வருகிறாள் சீதை.
பாடல்
'மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்;
அறம் தரு சிந்தைஎன் ஆவி நாயகன்,
பிறந்த பார்முழுவதும் தம்பியே பெறத்
துறந்து, கான்புகுந்த நாள், வலம் துடித்ததே.
பொருள்
'மறந்தனென்; = இன்னொன்னு சொல்ல மறந்து விட்டேன்
இதுவும் = இதையும்
ஓர் மாற்றம் கேட்டியால் = ஒரு மாற்றம் நிகழ்ந்தது, அதையும் கேள் ;
அறம் தரு சிந்தை = அறத்தை தரும், செய்யும் மனம் கொண்ட
என் ஆவி நாயகன் = என் உயிர் நாயகன்
பிறந்த பார்முழுவதும் = தலை மகனாக பிறந்ததால் அடைய வேண்டிய உலகம் முழுவதையும்
தம்பியே பெறத் = தம்பியான பரதனே பெற்றுக் கொள்ள
துறந்து = அவற்றைத் துறந்து ,
கான்புகுந்த நாள் = காட்டுக்குப் போன அந்த நாள்
வலம் துடித்ததே = வலக் கண் துடித்தது
இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது ?
நமக்கு இரண்டு விதமான ஞாபகங்கள் இருக்கிறது என்கிறது.
ஒன்று தர்க ரீதியாக, நாம் யோசித்து, அலசி ஆராய்ந்து அறிந்து, அதை மனதில் நிறுத்திக் கொள்வது.
இன்னொன்று உணர்ச்சி பூர்வமான அறிவு. சில விடயங்கள் மனதில் அழியாமல் இடம் பிடித்துக் கொள்கின்றன. நாம் வேண்டி விரும்பி பதிய வைப்பதால் அல்ல. அது உணர்வு சம்பந்தப் பட்டது.
ஒரு உதாரணம் பார்ப்போம்.
சில பேரைக் கண்டாலே நமக்குப் பிடிக்காது. ஒரு வெறுப்பும், கோபமும், எரிச்சலும் வரும். ஏன்? தெரியாது. எங்கோ நம் மனதில், அது போன்ற அல்லது அவர் செய்வது போன்ற, அல்லது அவர் குரல் போல உள்ள ஒருவர் மீது நமக்கு என்றோ, ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பு நிகழ்ந்து இருக்கலாம். நமக்கு தெரிந்த ஞாபகத்தில் அது இல்லை. ஆனால், நம் உடல் அதை நினைவு வைத்து இருக்கும். காரணம் சொல்லத் தெரியாது. இருந்தும் அவரைப் பிடிக்காது. அல்லது சில பேரை பார்த்தவுடனேயே பிடித்துப் போய் விடும். அதற்கும் காரணம் தெரியாது.
நம் அறிவுக்குத் தெரியாது. உடம்புக்குத் தெரியும். உடம்புக்குத் தெரியும் என்பது அறிவுக்குத் தெரியாது.
ஒரு வாசனை, ஒரு சத்தம், ஒரு வார்த்தை ஏதேதோ நினைவுகளை கொண்டு வரும். நாம்
முயற்சி செய்து ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டோம்.
இது பற்றி நிறைய ஆராய்சிகள் செய்து இருக்கிறார்கள்.
நேரம் இருப்பின், ஒரு நாள் அவற்றை பற்றி சிந்திக்கலாம்.
கண் துடிக்கிறது என்றால், உடல் அறிந்து இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் உடம்பில் அந்த சக்தி இருக்கிறது.
இந்த சகுனம் என்பது அப்படித்தான்.
சீதைக்கு, இடது கண் துடிக்கிறது. ஏதோ நல்லது வரப் போகிறது என்று நினைக்கிறாள்.