கம்ப இராமாயணம் - நலம் துடிக்கின்றதோ ?
https://interestingtamilpoems.blogspot.com/2026/05/blog-post_26.html
வெளியில் இருந்து வரும் செய்திகள் நம் மூளைக்கு சென்று , அது அந்த செய்திகளை அலசி ஆராய்ந்து பார்த்து விடை சொல்வதற்கு முன்பே, நம் உடல் அந்த செய்தியின் தரத்தை அறிந்து விடுகிறது.
உதாரணமாக, ஒரு சிலரை பார்த்தவுடன் சட்டென்று பிடித்து விடும். சிலரை பார்த்த உடனேயே ஒரு வெறுப்பு வரும். இவன் சரி இல்லை என்று ஏதோ ஒன்று நமக்குச் சொல்லும். The first impression is the best impression என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
நாம் அவர்களைப் பற்றி ஆராயவில்லை. பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது. அது நம் உடல் சார்த்த கணிப்பு. அதில் மூளையின் பங்கு இல்லை. நம் உடலில் ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது. நமக்கு வேண்டியவர்கள் எங்கோ இருப்பார்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் இங்கு நம் மனதுக்கு என்னவோ செய்யும். வயிறு சரியா இருக்காது. மனம் எதிலும் ஒட்டாது. இது உடல் சார்ந்த அறிவு.
ஆபத்து வரும் முன்னே வயற்றைக் கலக்கும். ஏன்? உடல் சார்ந்த அறிவு என்று ஒன்று இருக்கிறது.
வயதான ஒற்றுமையாய் வாழும் தம்பதிகளை பாருங்கள். ஒருவரின் குணம் மற்றவரிடம் இருக்கும். குரல், நடை , பாவனை, சில குறிப்பிட்ட சொற்களை கூறுவது, என்று. எப்படி இது நிகழ்கிறது. நம் வயிற்றில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் செயல்களை தீர்மானிக்கின்றன. வயிற்றில் சில பல மில்லியன் நியுரான்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கணவன், மனைவி இடையே இந்த நியுரான்கள் இட மாற்றம் நிகழ்கின்றன. எப்படி என்று திருமணம் ஆனவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
நியூரான்கள் இடம் மாறும் போது, ஒருவரின் உடல் சார்ந்த பழக்க வழக்கங்கள் இன்னொருவருக்கு வந்து விடுகிறது.
நம் உடல் சொல்வதை உற்றுக் கேட்டால் நமக்கு பல விடயம் புரியும்.
ஏன் திடீரென்று தலைவலை வருகிறது ? ஏன் சிலரிடம் பேசிவிட்டு வந்தால் ஒரு எரிச்சல் வருகிறது, சிலரிடம் பேசிவிட்டு வந்தால் ஒரு உற்சாகம் வருகிறது? உன்னித்துப் பார்க்க வேண்டும். உடல் சொல்வதை கேட்க வேண்டும். உடலின் மொழியை நாம் மறந்து விட்டோம்.
இதை முன்பு சகுனம் என்றார்கள். புருவம் துடிப்பது, கண் துடிப்பது போன்றவை இந்த உடல் சார்ந்த அறிவின் கூறுகள்.
அசோகவனத்தில் சீதை தனித்து இருக்கிறாள்.
திடீரென்று அவளது இடது கண்ணும் புருவமும் துடிக்கின்றன. அப்படி என்றால் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். சீதை கேட்கிறாள், திரிசடையிடம்
"என்னுடைய வலப்பக்கக் கண்ணும், புருவமும் துடிக்கவில்லை. இடப்பக்கம் துடிக்கின்றது. ஏதோ நல்லது வரப் போகிறது போல இருக்கு. அல்லது, நான் செய்த தீவினை தான் இன்னும் வந்து என்னை துன்பம் செய்யப் போகின்றதோ ? ஒன்றும் விளங்கவில்லையே "
என்று.
பாடல்
‘நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை
சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ?
பொலம் துடி மருங்குலாய்! புருவம் கண் நுதல்
வலம் துடிக்கின்றில : வருவது ஓர்கிலேன்!