இன்னா செய்யாமை - சிறப்பு ஈனும் செல்வம்
- அணிமா: அணுவைப் போல் உடலை மிகச் சிறியதாக மாற்றுதல்.
- மகிமா: மலையைப் போல் உடலைப் பெரிதாக்குதல்.
- லகிமா (இலகிமா): காற்றைப் போல் உடல் எடையை மிகவும் இலேசாக மாற்றுதல்.
- கரிமா:மலையைப் போல் உடலை மிகவும் கனமாக்குதல்.
இனியது என்பதின் எதிர்மறை இன்னாதது. இன்னா செய்யாமை என்றால் துன்பம் செய்யாமை. பிறருக்கு துன்பம் செய்யாமல் இருத்தல்.
நாம் ஏன் பிறருக்கு துன்பம் செய்கிறோம்?
பிறருக்கு துன்பம் செய்வதில் பெரிதாக விருப்பம் இருப்பது இல்லை. இருந்தும் துன்பம் செய்கிறோம். சில சமயம் தெரிந்து செய்கிறோம். சில சமயம் தெரியாமல் செய்கிறோம்.
முதலாவது, கோபத்தில், நம்மையும் அறியாமல் பிறருக்கு துன்பம் செய்து விடுகிறோம். வார்த்தையால் துன்பம் செய்கிறோம். சில சமயம் உடல் வலிமையால் கை நீட்டியும் விடுகிறோம். இது பெரும்பாலும் நிகழக் கூடிய ஒன்று. கோபம் மிகுந்து, யோசனை அற்றுப் போய், பிறருக்குத் துன்பம் செய்து விடுகிறோம்.
எனவே தான், இந்த இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தை வெகுளாமை என்ற அதிகாரத்திற்கு அடுத்து வைத்தார்.
சில சமயம் நமக்கு ஒரு இலாபம், நன்மை வேண்டி பிறருக்கு துன்பம் செய்து விடுவோம். இலஞ்சம் கொடுத்து வேலையை செய்து கொள்வது இந்த வகையில் அடங்கும். என்னிடம் பணம் இருக்கிறது. அதைக் கொடுத்து எனக்கு ஒரு நன்மை செய்து கொள்கிறேன். இதனால் மற்றவர்கள் பாதிக்கப்படலாம். பணம் இல்லாத அவர்களுக்கு அது துன்பம். பணம் இல்லாத ஏழைகள், கோவிலில் நீண்ட நேரம் நின்று துன்பப் படவேண்டும். பணம் இருப்பவர்கள் சிறப்பு வழி வழியாக ஒரு துன்பமும் இல்லாமல் தரிசனம் செய்து கொள்கிறார்கள். இது இலாபம் பற்றி செய்யும் துன்பம்.
சில சமயம் மறதியால், பிறருக்கு துன்பம் செய்து விடுவோம். தெரியாமல் நிகழும் செயல்களால் துன்பம் நிகழலாம். கொடுக்க வேண்டிய பணத்தை சரியான நேரத்தில் கொடுக்க மறந்திருப்போம். அது அவர்களுக்கு துன்பத்தை விளைவிக்கலாம். வேண்டும் என்று செய்வது அல்ல. மறதியால்.
சில சமயம் பகைமையால் துன்பம் செய்யலாம். முன்பு செய்த தீமையை மனதில் வைத்துக் கொண்டு, சரியான சமயம் பார்த்து, பழி தீர்க்க , மற்றவர்களுக்கு துன்பம் செய்யலாம்.
இவற்றைப் பற்றி எல்லாம் மிக ஆழமாக வள்ளுவர் சிந்தித்து எழுதி இருக்கிறார்.
காலம் இருப்பின் அவற்றை ஒவ்வொன்றாக சிந்திப்போம்.
https://interestingtamilpoems.blogspot.com/2026/01/blog-post.html
பின் வரும் ஒரு சூழ்நிலையை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
பெரிய, திருத்தப்பட்ட வனம். சுற்றிலும் பயங்கர தோற்றம் கொண்ட அரக்கியர். இடையிடையே இராவணன் வேறு வந்து தொந்தரவு செய்கிறான். இராமன் எப்போது வருவானோ, வரமாட்டானோ என்ற ஐயம். பேச்சு துணைக்குக் கூட ஒரு ஆள் இல்லை. சீதையோ, செல்லமாக வளர்ந்த ஜனக மகாராஜனின் செல்லப் பிள்ளை. அவளுக்கு எப்படி இருக்கும் அந்த சிறை?
இராமன் அனுபவித்தது ஒரு துயர் என்றால், சீதை அனுபவித்தது அதனினும் பல மடங்கு.
அத்தகைய சூழ் நிலையில் மனதுக்கு ஆறுதலாக பேச ஒருவர் கிடைத்தால் எப்படி இருக்கும்? பாலைவனத்தின் நடுவில் ஒரு நீர் ஊற்றை கண்ட மாதிரி இருக்கும் அல்லவா.
வீடணனின் மகள் திரிசடை அப்படி வருகிறாள். சீதைக்கு ஆறுதல் சொல்கிறாள்.
அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தைகளை காண இருக்கிறோம்.
அதற்கு முன்,
நம்மைச் சுற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ கவலைகளில் இருக்கிறார்கள். நம்மிடம் எல்லாம் சொல்லி இருக்க மாட்டார்கள். சொல்லாத, சொல்ல முடியாத வேதனைகள் பல இருக்கும்.
எப்போதுமே, யாரிடம் பேசினாலும், அவர்களிடம் இனிமையாக பேசினால் என்ன. நம் வார்த்தை அவர்கள் கவலைக்கு ஒரு மருந்தாக இருக்கக் கூடும். மனதுக்கு ஒரு ஆறுதலாக இருக்கலாம்.
நம் வார்த்தைகள் ஆறுதல் தருவதாக, நம்பிக்கை ஊட்டுவதாக, இதம் தருவதாக இருக்கட்டும்.
திரிசடை மூலம் கம்பன் ஏதோ சொல்ல வருகிறான் என்றால், நான் இதைத்தான் சொல்வேன்.
கவலைப் படுபவர்களுக்கு உங்கள் வார்த்தை இனிமை சேர்க்கட்டும்.
நம்பிக்கை இழந்தவர்களுக்கு உங்கள் வார்த்தை தைரியத்தைத் தரட்டும்.
சோர்ந்தவர்களுக்கு, உங்கள் வார்த்தை உற்சாகத்தைத் தரட்டும்.
இனி, காப்பியத்துக்குள் நுழைவோம்.
இந்தத் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி போன்ற பாடல் தொகுதிகளைப் படிக்கும் போது, இதில் என்ன சொல்ல வருகிறார்கள்.
தூங்கும் பெண்களை எழுப்பி கோவிலுக்குப் போவோம் என்று சொல்லுவது ஒரு செய்தியா. அதை ஏன் இந்த தமிழ் உலகம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. சரி, தோழிகள் எல்லோரும் குளித்து, கோவிலுக்குப் போய் இறைவனை வழிபட்டார்கள். அதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது?
ஏதோ ஒன்று இருக்க வேண்டும்.
சாவிகளை வைத்துக் கொண்டு பூட்டைத் தேடிக் கொண்டு இருக்கிறோமோ என்ற சந்தேகம் வரும்.
இந்தப் பாடல்கள் இருக்கிறது. ஆனால் அவை என்ன சொல்ல வருகின்றன என்று தெரியவில்லை.
ஒரு வேளை இப்படி இருக்குமோ?
ஏதோ பிறந்தோம், என்ன ஏது என்று புரிவதற்குக்குள் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். ஒரு பத்து பதினைந்து வருடங்கள் ஓடி விட்டன.
படிச்சாச்சு, அடுத்து என்ன? வேலை தேட வேண்டும். வேலை கிடைச்சாச்சு.
காலையில் எழுந்து வேலைக்குப் போக வேண்டும், மதியம் உணவு, மாலை வீடு வர வேண்டும், மீண்டும் நாளை இதே வேலை, உணவு, வீடு என்று ஒரு முப்பது வருடம் போகிறது.
ஒரு நிறுவனத்தை விட்டு இன்னொரு நிறுவனத்துக்குப் போகலாம். வேலை ஒன்றுதான்.
இதில் நடுவில் திருமணம், பிள்ளைகள் என்று அது ஒரு பாகம் ஓடிக் கொண்டு இருக்கும்.
எதுவும் நம் கையில் இருப்பது இல்லை. சாவி கொடுத்த பொம்மை மாதிரி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.
தூக்கத்தில் நடப்பவர்கள் எப்படி எங்கே போகிறோம், எதற்குப் போகிறோம் என்று தெரியாமல் நடந்து போவதைப் போல, போய் கொண்டே இருக்கிறோம்.
ஒரு நாள் உடம்பு முடியாமல் போய் விடுகிறது. என்ன நடந்தது என்று விழித்துப் பார்க்கிறோம்.
நாட்கள், வாரங்கள்,மாதங்கள், வருடங்கள் உருண்டோடி இருக்கும். மனமும் உடலும் வலு இழந்து இருக்கும். என்ன செய்வது என்ற திகைப்பாய் இருக்கும்.
அந்த நிலை வருமுன், விழித்துக் கொள்ளுங்கள் என்று நம்மை துயில் எழுப்புகின்றனவா இந்தப் பாடல்கள்?
எல்லோரையும் போல, மந்தை போல் போகாமல், சற்றே விழித்துப் பார், என்ன நடக்கின்றது என்று பார், என்ன செய்கிறாய் என்று பார் என்று நம்மை தட்டி எழுப்புகின்றனவோ என்று தோன்றும்.
பாடல்
செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்,
எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக,
கொங்குண் கருங்குழலி, நந்தம்மைக் கோதாட்டி,
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்,
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை,
அங்கண் அரசை, அடியோங்கட்கு ஆரமுதை,
நங்கள் பெருமானைப் பாடி, நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.
பொருள்
செங்கணவன்பால் = செம்மை + கண்களைக் கொண்ட அவன் பால். சிவந்த கண்களை உடைய திருமாலிடம்
திசைமுகன்பால் = நான்கு திசைகளைப் பார்க்கும் , நான்கு தலைகளை கொண்ட பிரமனிடம்
தேவர்கள்பால் = தேவர்களிடம்
எங்கும் = எங்கு சென்றாலும்
இலாததோர் இன்பம் = கிடைக்காத ஒரு இன்பம்
நம் பாலதாக = நம்முடையதாக
கொங்குண் = நறுமணம் வீசும்
கருங்குழலி = கருமையான குழலை உடைய பெண்ணே
நந்தம்மைக் = நம்மை எல்லாம்
கோதாட்டி = குற்றங்களில் இருந்து நீக்கி
இங்கு = இங்கே
நம் இல்லங்கள் தோறும்= நம் எல்லோர் வீட்டிலும்
எழுந்தருளிச் = வந்து அருளி
செங்கமலப் = சிவந்த தாமரை போன்ற
பொற்பாதம் = பொன் போன்ற திருவடிகளை
தந்தருளும் = தந்து அருளும்
சேவகனை = சேவகனை
அங்கண் அரசை = அழகிய கண்களை உடைய எம் அரசனை
அடியோங்கட்கு = அடியவர்களுக்கு
ஆரமுதை = அருமையான அமுதம் போன்றவனை
நங்கள் = நம்முடைய
பெருமானைப் பாடி = பெருமானைப் பாடி
நலம் திகழப் = நல்லவை நிகழ
பங்கயப் பூம்புனல் = தாமரை நிறைந்த குளத்தில்
பாய்ந்து ஆடு , ஏலோர் எம்பாவாய் = பாய்ந்து, நீராடுவோம், வா பெண்ணே
இறைவனை தேடுகிறேன் என்கிறார்கள். தேடுகிறேன் என்றால் அவன் எப்படி இருப்பான் என்று தெரிய வேண்டும் அல்லவா? எங்கே தேடுவது? தொலைத்த இடத்தில் தானே தேட முடியும்? எங்கே தொலைத்தார்கள்? அப்படி என்றால் முதலில் அவர்களிடம் இறைவன் இருந்தானா?
அதெல்லாம் புரியாமல் சொல்லுவது.
அவன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான் என்றெல்லாம் நமக்குத் தெரியாது.
ஆனால், நாம் யார், நாம் எங்கே வசிக்கிறோம், நம் வீட்டு விலாசம் என்ன என்று அவனுக்குத் தெரியும்.
மணிவாசகர் சொல்கிறார், "கவலைப் படாதீர்கள், அவனே நம் எல்லோர் வீடுகளுக்கும் வருவான்" என்கிறார். நாம் தேடிப் போக வேண்டாம். அவனே வருவான்.
"நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி"
அவனிடம் எல்லாம் இருக்கிறது. நம்மிடம் ஒன்றும் இல்லை. அது வேண்டும், இது வேண்டும் என்று அவனிடம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். உள்ளதிலேயே பெரிய பேராசைக்காரர்கள் யார் என்றால் உள்ளதிலேயே பெரிதாக கேட்பவர்கள்.
முக்தி கொடு, கைலாயத்தில் இடம் கொடு, வைகுந்தத்தில் இடம் கொடு மிகப் பெரிதாக கேட்கிறார்கள். கேட்டால் எங்களுக்கு ஆசையே இல்லை என்பார்கள்.
எது எப்படியோ...நாம் கேட்டதை எல்லாம் நமக்கு செய்து கொடுக்கும் சேவகனாக இருக்கிறான் இறைவன்
ஆதி மூலமே என்று ஒரு யானை கூப்பிட்டால் கூட ஓடோடி வருகிறான்.
பக்தன் எப்போது என்ன கேட்ப்பான் என்று இறைவன் காத்துக் கிடக்கிறான்.
"செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை"
சேவகன் என்றால் வீரன் என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறது. இறைவன் யாரிடம் வீரத்தைக் காட்டப் போகிறான். அவனுக்கு நிகர் யார்? எனவே, அதை விட்டு விடலாம். அவன் நமக்கு உதவி செய்வான் என்பது சரியாக இருக்கும்.
திருமால், பிரமன், மற்றைய தேவர்களை நாம் தேடிப் போக வேண்டும். சிவன், வீடு தேடி வருவான்.
இது ஏதோ அவர்கள் மோசமானவர்கள், சிவன் நல்ல கடவுள் என்று சித்தரிப்பதாகப் படும். அப்படி அல்ல.
திருமால், இலக்குமியின் கணவன். அவள் செல்வத்துக்கு அதிபதி. எனவே, திருமாலிடம் போவது என்றால் செல்வத்தைத் தேடிப் போவது.
பிரமன், கலைமகளின் கணவன். அவள் அறிவுக் கடவுள். எனவே, பிரமனிடம் போவது என்றால் அறிவைத் தேடிப் போவது.
இப்படி ஒவ்வொரு தேவர்களும் ஏதோ ஒன்றின் அதிபதியாக இருக்கிறார்கள். நாம் அந்த செல்வங்களை நோக்கிப் போய் கொண்டே இருக்கிறோம் என்பது ஒரு குறியீடு.
அவர்களிடம் இல்லாத ஏதோ ஒரு இன்பம் நமக்குக் கிடைக்கும்.
"எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக"
அப்படி அலையாமல், பேசாமல் வீட்டிலேயே இருங்கள். சிவன் உங்கள் வீட்டுக்கு வருவான்.
புற அழுக்குகளை நீக்கி, மனதை தூய்மைப் படுத்தி, அவனை நினைத்துப் பாடுவோம். அவன் வருவான்.
சொல்வது, மணிவாசகர்.
மனிதர்களை பல வகைகளில் வகைப் படுத்தலாம்.
ஏழை, பணக்காரன்,
நல்லவன், கெட்டவன்
படித்தவன், முட்டாள்
என்று ஒரு கோடியில் இருந்து இன்னொரு கோடிக்கு மக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
வள்ளுவர், இன்னொரு வழி சொல்கிறார்.
சினத்தின் எல்லையில் இருப்பவன் ஒருபக்கம்.
சினத்தை அறவே விட்டவன் மறுபக்கம்.
நாம் எந்தப் பக்கத்துக்கு அருகில் இருக்கிறோம் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நமக்கு நல்ல உடல் இருக்கிறது. உறுப்புகள் எல்லாம் சரியாக வேலை செய்கிறது. மூளையும் மனமும் நன்றாக இயங்குகிறது.
இறந்த ஒருவனுக்கு இவை எல்லாம் வேலை செய்வது இல்லை.
ஒருவனுக்கு கோபம் வந்து விட்டால், அவன் அறிவு வேலை செய்வது இல்லை. அவன் அவயங்கள் அவன் கட்டுக்குள் இருப்பது இல்லை. எல்லாம் இருந்தும் அவன் ஒன்றும் இல்லாத பிணத்துக்கு சமம் என்கிறார் வள்ளுவர்.
சினத்தின் எல்லையில் இருப்பவன், செத்த பிணத்துக்கு ஒப்பானவன் என்கிறார்.
சரி, சினத்தை அறவே விட்டவன் ?
அவன் முற்றும் துறந்த துறவிக்கு ஒப்பாவன். சினத்தை துறந்ததால் அவனை அனைவரும் விரும்புவார்கள். அவன் அறிவு இழந்து தவறு செய்ய மாட்டான். எனவே அவன் இம்மையிலும் மறுமையிலும் நன்மை அடைவான். என்கிறார்.
பாடல்
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
பொருள்
இறந்தார் இறந்தார் அனையர் = இங்கே உள்ள இரண்டு இறந்தார் என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. பொதுவாக பெரும்பாலோனோர் சொல்லும் விளக்கம் முதல் இறந்தார் என்ற வார்த்தைக்கு மிகுதியான என்றும் இரண்டாவது இறந்தார் என்ற வார்த்தைக்கு இறந்தவர் என்றும் பொருள் சொல்கிறார்கள்.
அதாவது, "இறந்தார் அனையர்" என்றால் இறந்தவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று பொருள். அதில் குழப்பம் இல்லை.
"இறந்தார் இறந்தார் அனையர்" என்றால் சினத்தை மிகுதியாக உள்ளவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பானவர்கள் என்று பொருள் சொல்கிறார்கள்.
சினத்தைத் துறந்தார் = சினத்தை விட்டவர்கள்
துறந்தார் துணை = முற்றும் துறந்த துறவிகளுக்கு ஒப்பானவர்கள்.
இதோடு, வெகுளாமை என்ற அதிகாரம் முற்றுப் பெற்றது.
https://interestingtamilpoems.blogspot.com/2025/11/blog-post_13.html
ஒழுக்கமாக வாழ வேண்டும்.
ஒழுக்கம் என்றால் என்ன? எதை ஒழுக்கம் என்று கொள்வது? அந்த ஒழுக்கம் எப்படி வரும்?
இளைய தலைமுறைக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்று எப்படிச் சொல்லுவது? பெரியவர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்ல முடியும். இளையவர்கள் பல கேள்விகள் கேட்பார்கள். எல்லாவற்றிற்கும் தக்க பதில் சொல்ல வேண்டும். அதற்கு ஆழ்ந்த அறிவு வேண்டும்.
எங்கும் தேடி அலைய வேண்டாம். தமிழில் இவற்றை போதிக்க பல நூல்கள் உள்ளன. ஆசாரக் கோவை அதில் ஒரு நூல்.
ஒழுக்கத்திற்கு அடிப்படை என்னென்ன என்று அது கூறுகிறது.
மொத்தம் எட்டு குணங்களை ஒழுக்கத்தின் அடிப்படை என்று கூறுகிறது.
அவை என்னென்ன ?
பாடல்
நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ
டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ
டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்
சொல்லிய ஆசார வித்து
கொஞ்சம் சீர் பிரிப்போம்
நன்றி அறிதல் பொறை உடைமை இன் சொல்லோடு
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்ல இனத்தாரோடு நட்டல் இவை எட்டும்
சொல்லிய ஆசார வித்து
பொருள்
நன்றி அறிதல் = ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் இருத்தல்
பொறை உடைமை = பொறுமை
இன் சொல்லோடு = இனிய சொல் பேசுதல்
இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை = மற்ற எந்த உயிர்க்கும் துன்பம் செய்யாமல் இருந்தல்
கல்வியோடு = கல்வி அறிவு
ஒப்புரவு ஆற்ற அறிதல் = உலகோடு ஒத்துப் போகும் ஆற்றல்
அறிவுடைமை = அறிவுடைமை
நல்ல இனத்தாரோடு நட்டல் = நல்லவர்களோடு சேர்ந்து இருத்தல்
இவை எட்டும் = இந்த எட்டு குணங்களும்
சொல்லிய = ஆன்றோர் சொல்லிய
ஆசார = ஆசாரத்துக்கு
வித்து = அடிப்படை
இவை எல்லாம் இருந்தால் ஒழுக்கம் தானே வரும்.
கோபம் நல்லது அல்ல. நமக்குப் புரிகிறது. அதை விட்டால் நல்லதுதான். அதுவும் புரிகிறது. எப்படி விடுவது?
கோபத்தை விட்டு விடு, விட்டு விடு, என்று சொன்னால் போதாது. எப்படி விடுவது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா.
சரி, கோபத்தை விடுவதற்கு வழியும் சொல்லியாகி விட்டது. ஏன் விட வேண்டும்? விட்டால் என்ன பயன். கோபித்து மனைவியை, கணவனை, பிள்ளைகளை, கீழே வேலை செய்யும் ஆட்களை நாலு திட்டு திட்டினால் பயந்து போய் வேலை செய்வார்கள். அதனால் ஒரு பலன் உண்டு. கோபத்தை விட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று அதையும் சொல்ல வேண்டும் அல்லவா?
அந்த இரண்டையும் இந்தக் குறளில் வள்ளுவப் பேராசான் கூறுகிறார்.
பாடல்
உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்
பொருள்
உள்ளியது = மனதில் நினைத்தவை
எல்லாம் = அனைத்தையும்
உடன்எய்தும் = ஒன்றாக அடைவான்
உள்ளத்தால் = மனத்தால்
உள்ளான் = நினைக்காமல்
வெகுளி எனின் = கோபத்தை என்றால்.
கொஞ்சம் சொற்களை இடம் மாற்றிப் போட்டால்,
மனதாலும் கோபத்தை ஒருவன் நினைக்காமல் இருந்தால், அவன் விரும்பியது எல்லாம் அவனுக்குக் கிடைக்கும்.
சரி, இதில் எங்கே கோபத்தை விட வழி சொல்லி இருக்கிறது? கோபத்தை விட்டால் வரும் பலன் எங்கே சொல்லி இருக்கிறது.
ஒருவனுக்கு அவன் நினைத்தது எல்லாம் கிடைக்கும் என்பது பெரிய நன்மைதானே?
அறம், பொருள் இன்பம், வீடு என்ற அனைத்தும் அவனுக்கு ஒருங்கே கிடைக்கும்.
யோசித்துப் பார்ப்போம்.
நேர்மையான வாழ்க்கை - அற வழியில் செல்லும் வாழ்வு. ஒரு பொய் கிடையாது, திருட்டு கிடையாது, சூது வாது கிடையாது...அறம் சார்ந்த வாழ்க்கை.
என்னவெல்லாம் தேவையோ அவற்றை வாங்க பொருள்
கணவன், மனைவி, பிள்ளைகள், நட்பு, சுற்றம் என்ற இல்லற சுகம்.
எல்லாவற்றையும் அனுபவித்து பின் வீடு பேறு.
இவை அனைத்தையும் தரும் என்றால் அது நல்லதுதானே?
மனதால் கூட கோபத்தை நினைக்காவிட்டால், இவை எல்லாம் கிடைக்கும் என்கிறார். இதற்கு மேல் கேட்க என்ன இருக்கிறது ?
சரி, எப்படி கோபத்தை விடுவது ?
அதற்கு பரிமேலழகர் வேண்டும். அவர் இல்லாமல் நம்மால் இதை புரிந்து கொள்ள முடியாது.
"உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்" என்று குறள் சொல்கிறது. கோபத்தை மனதால் நினைக்காமல் என்று பொருள்.
பரிமேலழகர் கேட்கிறார், நினைப்பது என்றாலே அது மனதால் நினைப்பது தானே. பின் எதற்கு "உள்ளத்தால் உள்ளான் " எனின் என்று போட்டு இருக்கிறார். அதற்கு அவரே பதில் சொல்கிறார்.
இந்தக் குறள் இருப்பது துறவறம் என்ற பிரிவில்.
துறவியின் உள்ளம் அருள் உள்ளம். உயிர்கள் மேல் அன்பு கடந்து அருள் செலுத்தும் உள்ளம். அந்த அருள் நிறைந்த உள்ளத்தில் கோபம் வர வழியே இல்லை. கோபம் வருகிறது என்றால் அருள் முழுவதும் இல்லை என்று அர்த்தம்.
எனவே, கோபத்தை விட வேண்டும் என்றால், மனதில் அருள் வேண்டும்.
பிள்ளை தவறு செய்து விட்டால், அதன் மேல் உள்ள அன்பால் நாம் குழந்தையை கோபிப்பது இல்லை. அந்த அன்பு விரிந்து விரிந்து அருளாக மாற வேண்டும். அருள் உள்ளத்தில் நிறைந்து இருந்தால் அங்கே கோபம் இருக்க வழி இல்லை.
ஒளி உள்ள இடத்தில் இருள் எங்கனம் இருக்கும்.
அருளை வளர்த்துக் கொண்டே போனால், கோபம் குறைந்து கொண்டே போகும்.
"ஆருயிர்கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும் " என்று இறைவனை வேண்டுவார் வள்ளல் பெருமான்.
அன்பு பெருக பெருக, அருள் வளரும்.
அருள் வளர, வளர கோபம் தேயும்.
கோபம் தேய தேய மனதில் நினைத்தது எல்லாம் கிடைக்கும்.
எவ்வளவு அழகான, ஆழமான குறள்.