Saturday, September 19, 2026

திருக்குறள் - நோய்

 திருக்குறள் - நோய் 



துன்பமே இல்லாத வாழ்வை யார்தான் விரும்ப மாட்டார்கள்?  துன்பத்தைக் கண்டால் காத தூரம் ஓடுவோம் நாம். சின்ன தலைவலியில் இருந்து பெரிய துன்பங்கள் வரை, எதுவுமே நமக்கு உடன்பாடு இல்லை. 




நமக்கு ஏதாவது துன்பம் வந்து விட்டால், வருந்துவோம். எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று நம் மேலேயே நாம் பரிதாபம் கொள்வோம். யாருக்கு நான் என்ன தீமை செய்தேன், எனக்கேன் இப்படியெல்லாம் நிகழ்கிறது என்று அங்கலாயித்துக் கொள்வோம். 


சரி, துன்பமே இல்லாத வாழ்க்கை சாத்தியமா?  துன்பமே வேண்டாம் என்றால் என்ன செய்ய வேண்டும்?  உடலால், மனதால், பணத்தால், உறவால், இயற்கை சீற்றத்தால் என்று பல வகைகளில் வரும் துன்பத்தை எப்படி வராமல் தடுப்பது?


வந்த துன்பங்களுக்குக் காரணம், இனி துன்பம் வராமல் இருக்க வழி என்ற இரண்டையும் வள்ளுவர் ஒரே குறளில் சொல்லி முடிக்கிறார். ஏழே ஏழு வார்த்தைகளில் துன்பமில்லா வாழ்வுக்கு வழி காட்டுகிறார் ஐயன் வள்ளுவன். 







வள்ளுவர் சொல்கிறார், 


"உனக்கு துன்பம் வருகிறதா?  நீ யாருக்கோ எப்போதோ செய்த துன்பம் இப்போது உன்னிடம் வருகிறது என்று உணர். அது மட்டும் அல்ல, உனக்கு இனி துன்பமே வரக் கூடாது என்று விரும்புகிறாயா?  யாருக்கும் துன்பம் செய்யாதே. உனக்கு துன்பம் வராது"



பாடல் 


நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்

நோய்இன்மை வேண்டு பவர்


பொருள் 


நோய்எல்லாம் = வருகின்ற துன்பம் எல்லாம் 


நோய்செய்தார் மேலவாம் = துன்பம் செய்பவர்களுக்கே வரும் 


நோய்செய்யார் = பிறருக்கு துன்பம் செய்ய மாட்டார்கள் 


நோய்இன்மை = தனக்கு துன்பம் இல்லாமையை 


வேண்டு பவர் = விரும்புகிறவர்கள் 


(நோய் = துன்பம்)


உனக்கு வரும் துன்பங்களுகுக் காரணம், நீ பிறருக்குச் செய்த துன்பம் 


நீ பிறருக்குத் துன்பம் செய்யாவிட்டால் உனக்கு துன்பம் வராது. 


நான் யாருக்கும் ஒரு துன்பமும் செய்யவில்லையே...பின் எனக்கு எப்படி இந்தத் துன்பம் வந்தது என்று கேட்டால், செய்து இருப்பீர்கள். மறந்திருக்கும். 


அல்லது அது துன்பம் என்று கூட உங்களுக்குத் தெரிந்து இருக்காது. 


நம் கணக்கு தவறாகலாம். இயற்கையின் கணக்கு தவறாது. 


எது எப்படியோ, இனி மேல் பிறருக்கு துன்பம் செய்யாமல் இருப்போம். அவர்கள் மேல் உள்ள கருணையால் அல்ல, நமக்கு துன்பம் வரக் கூடாது என்ற சுயநலத்தால். 





Friday, September 18, 2026

50 இலட்சம் page views

 Today, this blog reached 50,00,000 page views.


Thanks to all the readers.



கம்ப இராமாயணம் - அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே

கம்ப இராமாயணம் - அரவணைத் துயிலின் நீங்கிய தேவனே 

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post_18.html



தீதும் நன்றும் பிறர் தர வாரா 


என்பது கணியன் பூங்குன்றனார் வாக்கு. 


நமக்கு வரும் நன்மையும் தீமையும் நாமே தேடிக் கொள்வது அல்லாமல் பிறர் நமக்குச் செய்வது அல்ல. 


ஆனால், நாம் நினைப்பது வேறு மாதிரி. 


நன்மை வந்தால், எல்லாம் என் செயல் என்று இறுமாப்பு கொள்கிறோம். என் திறமை, என் அறிவு, என் ஆற்றலால் வந்தது என்று நினைக்கிறோம். 


துன்பம் வந்தால், விதி, மற்றவர்கள் செய்த சதி, பொறாமை பிடித்தவர்கள் செயல், காலம் சரி இல்லை, நாளும் கோளும் சரி இல்லை, தெய்வ குற்றம் என்று எல்லாவற்றின் மேலும் பழி போடுகிறோம்.


என்ன செய்வது. மனிதனின் பலவீனம். 


இராவணன் பேராற்றல் பெற்றவன். அவனை யாராலும் அழிக்க முடியாது. 


முக்கோடி வாழ்நாள், முயன்று உடைய பெரும் தவம், எக்கோடி யாராலும் வெள்ளப்படாய் என்ற வரம் எல்லாம் உடையவன். 


அவனை அழிக்கும் ஆற்றல் ஒரே ஒரு சக்த்திக்குத்தான் உண்டு. 


அதுதான் - அறம். 


அறம் பிறழ்ந்தால் அழிவு வரும். அது யாராக இருந்தாலும். எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும், எவ்வளவு தவம் இருந்தாலும் , அறம் தப்பினால் அழிவு நிச்சயம். 


இராவணன் அழிவு, அவன் மாற்றான் மனைவியை அபகரித்து வந்தது. 


"தான் கெட்டது மட்டும் அல்லாமல், இந்த மூன்று உலகங்களையும் அறம் தவறி நடக்க வைத்த பாவியான இராவணனின் உயிரைக் கொல்ல நடந்தது இது.  பாம்பணையில் துயின்ற பரமன் இராமனே. இந்த சீதை அந்தக் கமலச் செல்வியே"


என்று அனுமன் நினைக்கிறான். 


பாடல்  


 'மூவகை உலகையும் முறையின் நீக்கிய

பாவி தன் உயிர்கொள்வான் இழைத்த பண்பு

                                  இதால்;

ஆவதே;அரவணைத் துயிலின் நீங்கிய

தேவனே அவன்;இவள் கமலச்செல்வியே.


பொருள் 


 'மூவகை  = மூன்று வகைப்பட்ட 


உலகையும்= உலகங்களையும் 


முறையின் நீக்கிய = அறத்தில் இருந்து விலகிச் செல்லும் படி செய்த 


பாவி = பாவியான இராவணன் 


தன் உயிர்கொள்வான் = தன்னுடைய உயிரைப் போக்கிக் கொள்ள 


 இழைத்த பண்பு  இதால்; = செய்த செயல் இது (சீதையைக் கடத்தி வந்தது) 


ஆவதே = நடக்கப் போகிறது 


அரவணைத் = பாம்பு அணையில் 


 துயிலின் நீங்கிய = உறக்கம் விட்டு நீங்கிய 


தேவனே அவன் = கடவுளே அந்த இராமன் 


இவள் = இந்த சீதை 


 கமலச்செல்வியே = தாமரையில் வசிக்கும் செல்வத்தின் திருமகளே 


பணம் இருந்தால், அதிகாரம் இருந்தால், பக்தி செய்தால், தான தர்மம் செய்தால் செய்த பாவம் போய் விடும், சமாளித்துக் கொள்ளலாம் என்று பலர் நினைக்கிறார்கள். 


இராவணனிடம் இல்லாத செல்வமா, அவனிடம் இல்லாத வீரமா, அதிகாரமா, அவன் செய்யாத தவமா...என்ன இருந்தாலும் என்ன, அறம் பிழைத்தால் அழிவு வரும். யாரும் தப்ப முடியாது. 


நம் இலக்கியம், வாழும் முறை, கலாச்சாரம், பண்பாடு, எல்லாமே அறம் அறம் என்று அறம் சார்ந்தே வந்திருக்கிறது.


அறம் தான் எல்லாவற்றிற்கும் அடி நாதம். 





Tuesday, September 15, 2026

திருக்குறள் - தானே வரும்

 திருக்குறள் - தானே வரும் 



பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். 


மற்றவர்களுக்கு நாம் துன்பம் செய்தால், நமக்கு துன்பம் தானே வரும். 


அதுவும், காலையில் செய்தால், மாலையில் வரும் என்கிறார் வள்ளுவர். 


மற்றவர்களுக்குத் துன்பம் செய்தால் நமக்கு துன்பம் வரும் என்பது தெரிந்த விடயம் தானே. இதைச் சொல்வதற்கு வள்ளுவர் வேண்டுமா என்று நினைக்கலாம். 


பாடல் 


பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா

பிற்பகல் தாமே வரும்


பொருள் 


பிறர்க்கு = மற்றவர்களுக்கு 


இன்னா = துன்பத்தை 


முற்பகல் = காலையில் 


செய்யின் = செய்தால் 


தமக்குஇன்னா = செய்தவனுக்கு துன்பம் 


பிற்பகல் = மாலையில் 


தாமே வரும் = தானே வரும் 


இதற்கு பரிமேல் அழகர் சொல்லும் விளக்கத்தைப் பார்ப்போம். 


இந்தக் குறள், துறவறத்தில் உள்ளது. எனவே இது துறவிகளுக்குச் சொல்லப்பட்டது என்று எடுத்துக் கொள்கிறார். 


ஒரு துறவி, முனிவன், பிறருக்கு துன்பம் செய்யவே கூடாது. எல்லார் மேலும் அவன் அன்பு செலுத்த வேண்டும். துறவிகள் பிறருக்கு துன்பம் செய்யமாட்டார்கள் என்பதால் 


"செய்யின்" என்று கூறினார். அதாவது செய்தால் என்ற அர்த்தத்தில். செய்ய மாட்டார்கள், ஒருவேளை செய்தால்.


அது என்ன முற்பகல் , பிற்பகல் ?


ஒரு துறவி தவறு செய்தால், அவன் செய்த தவம் உடனே அழியும் என்பதால், முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்றார். 


இன்று ஒரு தவறு செய்தால், ஒரு நாலைந்து வருடம் கழித்து அதற்கு உண்டான தண்டனை கிட்டும் என்று அல்ல. இன்று செய்தால், இன்றே விளையும்.


செய்யின், தானே. என்று இரண்டு வார்த்தைகள். 


செய்வது - நாமே சென்று செய்வது. 


ஆனால், நமக்குத் துன்பம் யாரும் செய்ய வேண்டாம். அது தானே வரும். நம்மை விட எளிய ஒரு ஆளுக்கு துன்பம் செய்கிறோம். இவன் நம்மை என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறோம். அவன் பதிலுக்கு துன்பம் செய்ய வேண்டாம். நமக்குத் துன்பம் தானே வரும்.


மனைவியை சுடு சொல் கூறுகிறாயா? அவளால் திருப்பிச் சொல்ல முடியாமல் இருக்கலாம்...ஆனால் அலுவலகத்தில் மேலதிகாரி உன்னை திட்டலாம். அது வலிக்கும். ஏன் இவர் நம்மைத் திட்டுகிறார் என்று நினைத்தால், யாரையோ, எங்கேயோ நம் சொல்லால் வருத்தி இருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். 


வலி வரும்போது தெரியாது ஏன் அது வருகிறது என்று. எப்போதோ செய்த வினை, இப்போது வருகிறது. சில சமயம் உடனே வரும், சில சமயம் நேரம் தாழ்த்து வரும். ஆனால், கட்டாயம் வரும். 


"தானே" என்பதற்கு பரிமேலழகர் , "நீ (துறவி) ஒருவனுக்கு துன்பம் செய்கிறாயா? உனக்கு இன்னொருவன் , வேறு ஒரு துன்பம் செய்ய வேண்டாம். நீ செய்த துன்பமே, உன் தவத்தை அழித்து உனக்கு துன்பத்தைத் தரும். தானே என்றால் நீ செய்த அந்த துன்பமே" என்று பொருள் கூறுகிறார். 


பிறருக்கு துன்பம் செய்யும் போது, நினைத்துக் கொள்ள வேண்டும்....இது எனக்கு திருப்பி வரும் என்று. 


அந்த நினைவு வந்தால், துன்பம் செய்வோமா? 


யாருக்குமே துன்பம் செய்யாமல் இருக்கும் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும். நாம் யாருக்கும் துன்பம் செய்யாவிட்டால், எல்லோரும் நம்மிடம் அன்போடு இருப்பார்கள். அந்த வாழ்க்கை எவ்வளவு இனிதாக இருக்கும் ?


நாளை பூஜை செய்யும் போது, வள்ளுவரை நினைத்து ஒரு பூ எடுத்துப் போட வேண்டும்.




Monday, September 14, 2026

கம்ப இராமாயணம் - உள்உறை உயிரினை

 கம்ப இராமாயணம் - உள்உறை உயிரினை 



சீதையைத் தேடி அனுமன் அசோக வனத்துக்கு வந்து விட்டான். சீதையைப் பார்க்கிறான். 


அந்தக் காலத்தில் புகைப் படம் எல்லாம் ஏது ?


சீதையின் திவ்யமான அந்த அருள் மிகு தோற்றத்தைப் பார்கிறான். இவள் சீதையாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறான். மேலும், இராமன் , சீதையைப் பற்றி சொன்ன அடையாளங்களையும் சேர்த்துப் பார்த்து, இவள் சீதைதான் என்று முடிவு செய்கிறான். 


அனுமன் நினைக்கிறான் , "இந்த கள்ள அரக்கர்கள், சீதையைக் கொண்டு வந்து வைக்கவில்லை, அந்த இராமனின் உயிரை அல்லவா இங்கே கொண்டு வந்து ஒளித்து வைத்து இருக்கிறார்கள்" என்று. 


பாடல் 



எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்,

வள்ளல் தன்உரையொடு மாறு கொண்டில,

கள்ள வாள் அரக்கன் அக் கமலக் கண்ணனார்

உள்உறை உயிரினைஒளித்து வைத்தவா !


பொருள் 



எள் அரும் = குறை ஒன்றும் இல்லாத 


உருவின் = உருவத்தின் 


அவ் இலக்கணங்களும் = அங்க இலக்கணங்களும் 


வள்ளல் = வள்ளலாகிய இராமன் 


தன்உரையொடு = சொன்ன அடையாளங்களோடு 


மாறு கொண்டில = மாறுபாடு இல்லாமல் அப்படியே இருக்கிறாள் 


கள்ள வாள் அரக்கன் = கள்ளம் கொண்ட அரக்கனாகிய இராவணன் 


அக் கமலக் கண்ணனார் = அந்த தாமரை போன்ற கண்களை உடைய இராமனின் 


உள்உறை = உள்ளே குடியிருக்கும் 


உயிரினை = உயிரை 


ஒளித்து வைத்தவா ! = இங்கேயா ஒளித்து வைத்து இருக்கிறார்கள் 


உள் உறை உயிர் - எவ்வளவு அழகான சொற்றொடர் !


அங்கே இராமன் உயிர் இல்லாமல் நடை பிணமாக இருக்கிறான். 


இங்கே சீதை உடல் இல்லாத உயிர் போல் தனித்து இருக்கிறாள். 


இருவருக்கும் உள்ள அந்தப் பிணைப்பை எவ்வளவு அழகாக கம்பன் படம் பிடிக்கிறான். 


மனைவியை உயிராக நினைக்கும் கணவன் இருந்தால் அந்த இல்லறம் எப்படி சிறந்து விளங்கும்....




Wednesday, September 9, 2026

திருக்குறள் - தான் அறிவான்

 திருக்குறள் - தான் அறிவான் 



பிறருக்குத் துன்பம் செய்யக் கூடாது என்று ஏதாவது அற நூல்களில் சொல்லி இருக்கிறதா?  நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் படிப்பு அறிவு இல்லைங்க.  நமக்கு கீழே உள்ளவன் சரியா வேலை செய்யாவிட்டால், மண்டையில உறைக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டா எல்லாம் சரியாப் போயிரும். அப்படி திட்டக் கூடாது என்று எந்த நூலில் சொல்லி இருக்கிறது என்று சிலர் வாதம் செய்யலாம். 


இதுக்கு எல்லாம் புத்தகம் எழுத முடியாது.....


நமக்கு ஒருவர் துன்பம் செய்தால் அது நமக்கு வலிக்கிறது அல்லவா. அதை அறிந்த பின், அதே துன்பத்தை நாம் மற்றவருக்குச் செய்தால் அவர்களுக்கும் அதே மாதிரி வலிக்கும் என்பது புரியும் அல்லவா? அப்படி அறிந்த பின், எதற்காக அதை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் ?


துன்பம் என்றால் ஏதோ கை நீட்டி அடிப்பது என்று நினைக்க வேண்டியது இல்லை. 


நம்மிடம் ஒருவர் கோபமாக பேசுகிறார், நம்மை பற்றி கேலி பேசுகிறார், தாழ்வாகப் பேசுகிறார், நம் நம்பிக்கையை கிண்டல் செய்கிறார்...அப்போதெல்லாம் நமக்கு அது ஒரு வலியைத் தரும் அல்லவா ? 


அப்படி என்றால், நாம் மற்றவர்களிடம் கோபமாகவோ, அவர்களைப் பற்றி தாழ்வாகவோ, கிண்டல் செய்தோ பேசக் கூடாது. 


இப்படியே ஒவ்வொரு இன்னா செயலையும் புரிந்து கொள்ள வேண்டும். 


நமக்கு வலிப்பது மாதிரித்தானே மற்ற உயிர்களுக்கும் வலிக்கும் என்று நினைக்க வேண்டும். 


பாடல் 


தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்


பொருள் 


தன்னுயிர்க்கு = தனக்கு 


இன்னாமை = துன்பம் என்று 


தான்அறிவான் = எவன் அறிந்து கொள்வானோ 


என்கொலோ = எதனால்  


மன்னுயிர்க்கு = நிலைத்து வாழும் உயிர்களுக்கு 


இன்னா செயல் = துன்பம் தரும் செயல்களை செய்வது  


சர்கரை வைத்திருக்கும் டப்பாவில் எறும்பு வந்து விட்டால், அதைத் தூக்கி வெயிலில் வைக்கிறோம். சூட்டில் அந்த எறும்புகள் சாகட்டும் என்று. நம்மை தூக்கி ஒருவர் அப்படி வெயிலில் போட்டால் நமக்கு எப்படி இருக்கும். அது எவ்வளவு துன்பமாக இருக்கும் என்று நினைத்தால் அப்படிச் செய்வோமா? 


வீட்டில் வேலை செய்பவர்களை மரியாதை இல்லாமல் திட்டுகிறோம். அவர்கள் உடலும் மனமும் கூசும் படி பேசுகிறோம். நம்மை யாராவது அப்படித் திட்டினால் நம் மனம் என்ன பாடு படும் என்று ஒரு கணம் நினைத்தால் அப்படிச் செய்வோமா?


மற்றவர்களை என்ன மற்றவர்களை - மனைவியை, குழந்தைகளை, மருமகளை, உடன் பிறப்புகளை எல்லாம் எப்படி நடத்துகிறோம். அவர்களுக்கும் மனம் இருக்கும் தானே?


எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நினைத்தால் யாருக்கும் தீங்கு செய்யும் எண்ணம் வராது. 




Tuesday, September 8, 2026

அபிராமி அந்தாதி - பசும் பெண்கொடியே

 அபிராமி அந்தாதி - பசும் பெண்கொடியே

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post.html


ஒரு நாள் பச்சை நிறத்தில் பட்டுப் புடவை. மறு நாள் மஞ்சள் கலரில் சுடிதார். மற்றொரு நாள் கருப்பு நிறத்தில் ஜீன்ஸ்...என்ன போட்டாலும் அவளுக்கு அழகா இருக்கு. எப்படித்தான் எல்லா நிறமும் அவளுக்கு ஒத்துப் போகிறதோ....


தினமும் அபிராமியை தரிசிக்கிறார் பட்டர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறாள். அது எப்படி முடியும்?  அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ, அப்படியே அபிராமி அவருக்கு காட்சி தருகிறாள். 


காக்கைச் சிறகினிலே

பார்க்கும் இடமெல்லாம் நின்றன் பச்சை நிறம் 

தீக்குள் விரலை வைத்தால் தோன்றும் இன்பம் 


என்று பாரதிக்குத் தோன்றிய மாதிரி எப்படியெல்லாம் நினைக்கிறோமோ அப்படியெல்லாம் அவள் தோன்றுகிறாள். 


பாடல் 


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்

சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே




பொருள் 

மங்கலை = மங்களகரமானவள் 

செங்கலசம் = செம்மையான கலசம் போன்ற 

முலையாள் = மார்பகம் உடையவள் 

மலையாள் = மலைமகள் 

வருணச் = வருணனின் இருப்பிடமான (கடல். அதில் உள்ள ) 

சங்கலை  = சங்குகள் 

செங்கைச்= சிவந்த கைகளை உடையவள் 

சகலகலாமயில் தாவு = சகல கலைகளையும் அறிந்த மயில் போன்ற சாயல் உடையவளே 


கங்கை பொங்கி = பொங்கி வரும்  வருகின்ற கங்கையையும் 

கலை = பிறை நிலவையும்  

தங்கும் = குடி இருக்கும் 
 

புரிசடையோன் = சடை முடி கொண்ட சிவனின் 

புடையாள் = அவனின் இடப்பாகம் உடையவளே 


பிங்கலை =   பார்வதியே 

நீலி = கரிய நிறம் கொண்டவள் 


செய்யாள் = சிவந்த நிறம் கொண்ட இலக்குமி 

வெளியாள் = வெள்ளை நிறம் கொண்ட சரஸ்வதி 

பசும் = பசுமையான 

பெண்கொடியே = கொடி போன்ற பெண்ணே 


பார்த்து பார்த்து முடியவில்லை. 

ஒரு நாள் கோபமாக, கருமையாக பார்வதி போல இருக்கிறாள் 

இன்னொரு நாள் சிவந்த நிறமாக, இலக்குமி போல செல்வத்தோடு ஜொலிக்கிறாள் 

இன்னொருநாள் வெள்ளையான தாமரை மேல் அமர்ந்து இருக்கும் அறிவே வடிவான சரஸ்வதி போல இருக்கிறாள். 

இவளை என்ன என்ன என்று சொல்லுவது. 

மயில் போல, கொடி போல இருக்கிறாள். 

அவளை எப்படியாவது முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால்தானே. 



பெண் என்பவள் புரிந்து கொள்ள அல்ல. 

அன்பைச் செலுத்தவும், அன்பை பெற்றுக் கொள்ளவும் உருவானவளோ ?

வார்த்தைகளில் அகப்படுபவள் அல்ல அவள். அன்பால் உணர்ந்து கொள்ளப் படுபவள். 

அபிராமி அந்தாதிக்கு அருஞ்சொற் பொருள் விளக்கம் கேட்கக் கூடாது. 

கண்மூடி, மனதுக்குள் கரைய வேண்டிய ஒன்று அது.