கம்ப இராமாயணம் - உள்உறை உயிரினை
சீதையைத் தேடி அனுமன் அசோக வனத்துக்கு வந்து விட்டான். சீதையைப் பார்க்கிறான்.
அந்தக் காலத்தில் புகைப் படம் எல்லாம் ஏது ?
சீதையின் திவ்யமான அந்த அருள் மிகு தோற்றத்தைப் பார்கிறான். இவள் சீதையாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறான். மேலும், இராமன் , சீதையைப் பற்றி சொன்ன அடையாளங்களையும் சேர்த்துப் பார்த்து, இவள் சீதைதான் என்று முடிவு செய்கிறான்.
அனுமன் நினைக்கிறான் , "இந்த கள்ள அரக்கர்கள், சீதையைக் கொண்டு வந்து வைக்கவில்லை, அந்த இராமனின் உயிரை அல்லவா இங்கே கொண்டு வந்து ஒளித்து வைத்து இருக்கிறார்கள்" என்று.
பாடல்
எள் அரும் உருவின் அவ் இலக்கணங்களும்,
வள்ளல் தன்உரையொடு மாறு கொண்டில,
கள்ள வாள் அரக்கன் அக் கமலக் கண்ணனார்
உள்உறை உயிரினைஒளித்து வைத்தவா !
பொருள்
எள் அரும் = குறை ஒன்றும் இல்லாத
உருவின் = உருவத்தின்
அவ் இலக்கணங்களும் = அங்க இலக்கணங்களும்
வள்ளல் = வள்ளலாகிய இராமன்
தன்உரையொடு = சொன்ன அடையாளங்களோடு
மாறு கொண்டில = மாறுபாடு இல்லாமல் அப்படியே இருக்கிறாள்
கள்ள வாள் அரக்கன் = கள்ளம் கொண்ட அரக்கனாகிய இராவணன்
அக் கமலக் கண்ணனார் = அந்த தாமரை போன்ற கண்களை உடைய இராமனின்
உள்உறை = உள்ளே குடியிருக்கும்
உயிரினை = உயிரை
ஒளித்து வைத்தவா ! = இங்கேயா ஒளித்து வைத்து இருக்கிறார்கள்
உள் உறை உயிர் - எவ்வளவு அழகான சொற்றொடர் !
அங்கே இராமன் உயிர் இல்லாமல் நடை பிணமாக இருக்கிறான்.
இங்கே சீதை உடல் இல்லாத உயிர் போல் தனித்து இருக்கிறாள்.
இருவருக்கும் உள்ள அந்தப் பிணைப்பை எவ்வளவு அழகாக கம்பன் படம் பிடிக்கிறான்.
மனைவியை உயிராக நினைக்கும் கணவன் இருந்தால் அந்த இல்லறம் எப்படி சிறந்து விளங்கும்....