Wednesday, September 9, 2026

திருக்குறள் - தான் அறிவான்

 திருக்குறள் - தான் அறிவான் 



பிறருக்குத் துன்பம் செய்யக் கூடாது என்று ஏதாவது அற நூல்களில் சொல்லி இருக்கிறதா?  நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் படிப்பு அறிவு இல்லைங்க.  நமக்கு கீழே உள்ளவன் சரியா வேலை செய்யாவிட்டால், மண்டையில உறைக்கிற மாதிரி நாலு வார்த்தை கேட்டா எல்லாம் சரியாப் போயிரும். அப்படி திட்டக் கூடாது என்று எந்த நூலில் சொல்லி இருக்கிறது என்று சிலர் வாதம் செய்யலாம். 


இதுக்கு எல்லாம் புத்தகம் எழுத முடியாது.....


நமக்கு ஒருவர் துன்பம் செய்தால் அது நமக்கு வலிக்கிறது அல்லவா. அதை அறிந்த பின், அதே துன்பத்தை நாம் மற்றவருக்குச் செய்தால் அவர்களுக்கும் அதே மாதிரி வலிக்கும் என்பது புரியும் அல்லவா? அப்படி அறிந்த பின், எதற்காக அதை மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும் ?


துன்பம் என்றால் ஏதோ கை நீட்டி அடிப்பது என்று நினைக்க வேண்டியது இல்லை. 


நம்மிடம் ஒருவர் கோபமாக பேசுகிறார், நம்மை பற்றி கேலி பேசுகிறார், தாழ்வாகப் பேசுகிறார், நம் நம்பிக்கையை கிண்டல் செய்கிறார்...அப்போதெல்லாம் நமக்கு அது ஒரு வலியைத் தரும் அல்லவா ? 


அப்படி என்றால், நாம் மற்றவர்களிடம் கோபமாகவோ, அவர்களைப் பற்றி தாழ்வாகவோ, கிண்டல் செய்தோ பேசக் கூடாது. 


இப்படியே ஒவ்வொரு இன்னா செயலையும் புரிந்து கொள்ள வேண்டும். 


நமக்கு வலிப்பது மாதிரித்தானே மற்ற உயிர்களுக்கும் வலிக்கும் என்று நினைக்க வேண்டும். 


பாடல் 


தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ

மன்னுயிர்க்கு இன்னா செயல்


பொருள் 


தன்னுயிர்க்கு = தனக்கு 


இன்னாமை = துன்பம் என்று 


தான்அறிவான் = எவன் அறிந்து கொள்வானோ 


என்கொலோ = எதனால்  


மன்னுயிர்க்கு = நிலைத்து வாழும் உயிர்களுக்கு 


இன்னா செயல் = துன்பம் தரும் செயல்களை செய்வது  


சர்கரை வைத்திருக்கும் டப்பாவில் எறும்பு வந்து விட்டால், அதைத் தூக்கி வெயிலில் வைக்கிறோம். சூட்டில் அந்த எறும்புகள் சாகட்டும் என்று. நம்மை தூக்கி ஒருவர் அப்படி வெயிலில் போட்டால் நமக்கு எப்படி இருக்கும். அது எவ்வளவு துன்பமாக இருக்கும் என்று நினைத்தால் அப்படிச் செய்வோமா? 


வீட்டில் வேலை செய்பவர்களை மரியாதை இல்லாமல் திட்டுகிறோம். அவர்கள் உடலும் மனமும் கூசும் படி பேசுகிறோம். நம்மை யாராவது அப்படித் திட்டினால் நம் மனம் என்ன பாடு படும் என்று ஒரு கணம் நினைத்தால் அப்படிச் செய்வோமா?


மற்றவர்களை என்ன மற்றவர்களை - மனைவியை, குழந்தைகளை, மருமகளை, உடன் பிறப்புகளை எல்லாம் எப்படி நடத்துகிறோம். அவர்களுக்கும் மனம் இருக்கும் தானே?


எல்லா உயிர்களையும் தன் உயிர் போல் நினைத்தால் யாருக்கும் தீங்கு செய்யும் எண்ணம் வராது. 




Tuesday, September 8, 2026

அபிராமி அந்தாதி - பசும் பெண்கொடியே

 அபிராமி அந்தாதி - பசும் பெண்கொடியே

https://interestingtamilpoems.blogspot.com/2026/09/blog-post.html


ஒரு நாள் பச்சை நிறத்தில் பட்டுப் புடவை. மறு நாள் மஞ்சள் கலரில் சுடிதார். மற்றொரு நாள் கருப்பு நிறத்தில் ஜீன்ஸ்...என்ன போட்டாலும் அவளுக்கு அழகா இருக்கு. எப்படித்தான் எல்லா நிறமும் அவளுக்கு ஒத்துப் போகிறதோ....


தினமும் அபிராமியை தரிசிக்கிறார் பட்டர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறாள். அது எப்படி முடியும்?  அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ, அப்படியே அபிராமி அவருக்கு காட்சி தருகிறாள். 


காக்கைச் சிறகினிலே

பார்க்கும் இடமெல்லாம் நின்றன் பச்சை நிறம் 

தீக்குள் விரலை வைத்தால் தோன்றும் இன்பம் 


என்று பாரதிக்குத் தோன்றிய மாதிரி எப்படியெல்லாம் நினைக்கிறோமோ அப்படியெல்லாம் அவள் தோன்றுகிறாள். 


பாடல் 


மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்

சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே




பொருள் 

மங்கலை = மங்களகரமானவள் 

செங்கலசம் = செம்மையான கலசம் போன்ற 

முலையாள் = மார்பகம் உடையவள் 

மலையாள் = மலைமகள் 

வருணச் = வருணனின் இருப்பிடமான (கடல். அதில் உள்ள ) 

சங்கலை  = சங்குகள் 

செங்கைச்= சிவந்த கைகளை உடையவள் 

சகலகலாமயில் தாவு = சகல கலைகளையும் அறிந்த மயில் போன்ற சாயல் உடையவளே 


கங்கை பொங்கி = பொங்கி வரும்  வருகின்ற கங்கையையும் 

கலை = பிறை நிலவையும்  

தங்கும் = குடி இருக்கும் 
 

புரிசடையோன் = சடை முடி கொண்ட சிவனின் 

புடையாள் = அவனின் இடப்பாகம் உடையவளே 


பிங்கலை =   பார்வதியே 

நீலி = கரிய நிறம் கொண்டவள் 


செய்யாள் = சிவந்த நிறம் கொண்ட இலக்குமி 

வெளியாள் = வெள்ளை நிறம் கொண்ட சரஸ்வதி 

பசும் = பசுமையான 

பெண்கொடியே = கொடி போன்ற பெண்ணே 


பார்த்து பார்த்து முடியவில்லை. 

ஒரு நாள் கோபமாக, கருமையாக பார்வதி போல இருக்கிறாள் 

இன்னொரு நாள் சிவந்த நிறமாக, இலக்குமி போல செல்வத்தோடு ஜொலிக்கிறாள் 

இன்னொருநாள் வெள்ளையான தாமரை மேல் அமர்ந்து இருக்கும் அறிவே வடிவான சரஸ்வதி போல இருக்கிறாள். 

இவளை என்ன என்ன என்று சொல்லுவது. 

மயில் போல, கொடி போல இருக்கிறாள். 

அவளை எப்படியாவது முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால்தானே. 



பெண் என்பவள் புரிந்து கொள்ள அல்ல. 

அன்பைச் செலுத்தவும், அன்பை பெற்றுக் கொள்ளவும் உருவானவளோ ?

வார்த்தைகளில் அகப்படுபவள் அல்ல அவள். அன்பால் உணர்ந்து கொள்ளப் படுபவள். 

அபிராமி அந்தாதிக்கு அருஞ்சொற் பொருள் விளக்கம் கேட்கக் கூடாது. 

கண்மூடி, மனதுக்குள் கரைய வேண்டிய ஒன்று அது. 




Wednesday, July 15, 2026

திருக்குறள் - தலையாய அறம்

 திருக்குறள் - தலையாய அறம் 



இரவு நேரம். முக மூடி அணிந்த சிலர் ஒருவனை கத்தியால் குத்தி, அவன் வயிற்றை கிழித்து...கொஞ்ச நேரத்தில் அவன் இறந்து போகிறான். 


அப்படி கத்தியால் குத்தியவர்களை என்ன செய்வது?


குத்தியவர்கள் மருத்துவர்கள். அவனுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. பாவம், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனான். மருத்துவர்களை குறை சொல்வோமா?


ஏன்? கத்தியால் குத்தி , உயிர் பிரிந்து விட்டதே?


செயல் என்னவோ அதுதான். ஆனால், கொல்ல வேண்டும் என்பது மருத்துவர்களின் நோக்கம் அல்ல. மனதளவில் அவர்கள் அந்த நோயாளி சுகமாக பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நினைத்துதான் செய்தார்கள். 


செயல் முக்கியம் அல்ல. நோக்கம் தான் முக்கியம். 


வள்ளுவர் சொல்கிறார், மனதளவில் கூட யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று. எல்லா குற்றமும் மனதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. 


"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்"


என்பார் வள்ளுவர். 


மனதால் செய்யக் கூடாது. 


யாருக்கும் செய்யக் கூடாது. 


எப்போதும் செய்யக் கூடாது. 


பாடல் 

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

மாணாசெய் யாமை தலை


பொருள் 


எனைத்தானும் = எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும் 


எஞ்ஞான்றும் = எப்போதும் 


யார்க்கும் = யாருக்கும் 


மனத்தானாம் = மனதால் கூட 


மாணா = மாட்சிமை இல்லாத செயல்களை 


செய்யாமை தலை = செய்யாமல் இருப்பது சிறந்த அறம் 


யாருக்கும் செய்யக் கூடாது

எப்போதும் செய்யக் கூடாது 

எந்த அளவும் செய்யக் கூடாது 

மனதால் கூட செய்யக் கூடாது. 


மனம் என்றால் நம் மனம் மட்டும் அல்ல. பிறர் மனமும் புண் படும்படி செய்யக் கூடாது. 


சில சமயம், நாம் கேலி, கிண்டல், நையாண்டி என்று சில பேரை மனதளவில் காயப் படுத்தி விடுவோம். உடலளவில் துன்பம் இல்லை. இருந்தும் மனதளவில் வலி இருக்கும். 


சில பேர் ஏதாவது கேட்டால், முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள். கணனி, கை பேசியை பார்த்துக் கொண்டே பதில் சொல்வார்கள். அது ஒரு மரியாதை இல்லாத்தனம். மற்றவரை காயப் படுத்தும். 


வேலைக் காரர்கள், நமக்கு கீழே வேலை செய்பவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது, பேசுவது. கூடாது. எனவேதான் "யார்க்கும்" என்றார். 


நம்மை விட பெரியவர்களை நாம் வருத்த மாட்டோம். நினைத்தாலும் முடியாது. சிறியவர்களை, எளியவர்களை எளிதாக வருத்த முடியும். கூடாது என்கிறார் வள்ளுவர். 


இதை எல்லோரும் கடைபிடித்தால் எப்படி இருக்கும். 


மற்றவர்கள் எப்படியும் போகட்டும். நாம் கடைபிடிப்போம். 


உலகில் இன்றில் இருந்து நல்லவர்களின் தொகை ஒன்று கூடட்டும். 









Tuesday, June 30, 2026

கம்ப இராமாயணம் - ஆவி நாயகன்

 கம்ப இராமாயணம் - ஆவி நாயகன்


https://interestingtamilpoems.blogspot.com/2026/06/blog-post_30.html 


எது நல்ல சகுனம். வலது கண் துடிப்பதா, இடது கண் துடிப்பதா?


எளிமையாக ஞாபகம் வைத்துக் கொள்ள ஒரு சுருக்கு வழி.


பெண்கள் முதன் முதலாக வீட்டுக்கு வரும் போது வலது காலை எடுத்து வைத்து வர வேண்டும் என்பார்கள். வலது கால் எடுத்து வைப்பது நல்லது. அதோடு இடது கண் துடிப்பது நலம். இது ஐதீகம். 


பெண்ணுக்கு வலது கண் துடித்தால் நல்லது அல்ல என்பது ஒரு நம்பிக்கை. 


சீதை சொல்கிறாள் 


"என் ஆவி நாயகன் இராமன், தனக்கு வர வேண்டிய அரசை தம்பிக்குத் தந்து, கானகம் புறப்பட்ட அந்த நாள் எனக்கு வலது கண் துடித்தது. அது நல்ல சகுனம் அல்ல."


இன்று இடது கண் துடித்தது. அது நல்லது என்று சொல்ல வருகிறாள் சீதை. 


பாடல் 


'மறந்தனென்; இதுவும் ஓர் மாற்றம் கேட்டியால்;

அறம் தரு சிந்தைஎன் ஆவி நாயகன்,

பிறந்த பார்முழுவதும் தம்பியே பெறத்

துறந்து, கான்புகுந்த நாள், வலம் துடித்ததே.


பொருள் 


'மறந்தனென்; = இன்னொன்னு சொல்ல மறந்து விட்டேன் 


இதுவும் = இதையும் 


ஓர் மாற்றம் கேட்டியால் = ஒரு மாற்றம் நிகழ்ந்தது, அதையும் கேள் ;



அறம் தரு சிந்தை = அறத்தை தரும், செய்யும் மனம் கொண்ட 


என் ஆவி நாயகன் = என் உயிர் நாயகன் 


பிறந்த பார்முழுவதும் = தலை மகனாக பிறந்ததால் அடைய வேண்டிய உலகம் முழுவதையும் 


 தம்பியே பெறத் = தம்பியான பரதனே பெற்றுக் கொள்ள 


துறந்து = அவற்றைத்  துறந்து , 


கான்புகுந்த நாள் = காட்டுக்குப் போன அந்த நாள் 


வலம் துடித்ததே = வலக் கண் துடித்தது 


இன்றைய அறிவியல் என்ன சொல்கிறது ?


நமக்கு இரண்டு விதமான ஞாபகங்கள் இருக்கிறது என்கிறது. 


ஒன்று தர்க ரீதியாக, நாம் யோசித்து, அலசி ஆராய்ந்து அறிந்து, அதை மனதில் நிறுத்திக் கொள்வது. 


இன்னொன்று உணர்ச்சி பூர்வமான அறிவு. சில விடயங்கள் மனதில் அழியாமல் இடம் பிடித்துக் கொள்கின்றன. நாம் வேண்டி விரும்பி பதிய வைப்பதால் அல்ல. அது உணர்வு சம்பந்தப் பட்டது. 


ஒரு உதாரணம் பார்ப்போம்.


சில பேரைக் கண்டாலே நமக்குப் பிடிக்காது. ஒரு வெறுப்பும், கோபமும், எரிச்சலும் வரும். ஏன்?  தெரியாது. எங்கோ நம் மனதில், அது போன்ற அல்லது அவர் செய்வது போன்ற, அல்லது அவர் குரல் போல உள்ள ஒருவர் மீது நமக்கு என்றோ, ஏதோ ஒரு விதத்தில் பாதிப்பு நிகழ்ந்து இருக்கலாம். நமக்கு தெரிந்த ஞாபகத்தில் அது இல்லை. ஆனால், நம் உடல் அதை நினைவு வைத்து இருக்கும். காரணம் சொல்லத் தெரியாது. இருந்தும் அவரைப் பிடிக்காது. அல்லது சில பேரை பார்த்தவுடனேயே பிடித்துப் போய் விடும். அதற்கும் காரணம் தெரியாது. 


நம் அறிவுக்குத் தெரியாது. உடம்புக்குத் தெரியும். உடம்புக்குத் தெரியும் என்பது அறிவுக்குத் தெரியாது. 




ஒரு வாசனை, ஒரு சத்தம், ஒரு வார்த்தை ஏதேதோ நினைவுகளை கொண்டு வரும். நாம் 


முயற்சி செய்து ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டோம். 



இது பற்றி நிறைய ஆராய்சிகள் செய்து இருக்கிறார்கள். 


நேரம் இருப்பின், ஒரு நாள் அவற்றை பற்றி சிந்திக்கலாம். 


கண் துடிக்கிறது என்றால், உடல் அறிந்து இருக்கிறது. ஏதோ ஒரு விதத்தில் உடம்பில் அந்த சக்தி இருக்கிறது. 


இந்த சகுனம் என்பது அப்படித்தான். 


சீதைக்கு, இடது கண் துடிக்கிறது. ஏதோ நல்லது வரப் போகிறது என்று நினைக்கிறாள். 



Saturday, June 20, 2026

திருக்குறள் - இன்னா என தான் உணர்ந்தவை

திருக்குறள் - இன்னா என தான் உணர்ந்தவை 

https://interestingtamilpoems.blogspot.com/2026/06/blog-post_20.html

இந்த இன்னா செய்யாமை, இன்னா செய்யாமை என்று சொல்கிறோமே, இன்னா என்றால் என்ன? அதற்கு ஒரு பட்டியல் இருக்கிறதா?  அந்தப் பட்டியலை யார் செய்தது? அது எல்லா ஊருக்கும், எல்லா காலத்துக்கும் பொருந்துமா? என்ற கேள்விகள் வரலாம்.


எல்லா நாட்டுக்கும், எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு ஒரு வரையறை தர வேண்டும். முடியுமா? 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும். 


புலால் உண்பதால் என்ன தவறு?  விலங்குகளை கொன்று தின்பது பாவமா? பாவம் என்று எங்கே சொல்லி இருக்கிறது ?  அது சட்டப்படி குற்றமா? என்றெல்லாம் கேள்வி எழும். மரம், செடி, கொடிகளுக்குக் கூடத்தான் உயிர் இருக்கிறது...என்ற வாதமும் ஏற்புடையதே. 


எல்லாவற்றிற்கும் வள்ளுவரும், பரிமேலழகரும் பதில் சொல்கிறார்கள். 


பாடல் 


இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்


பொருள் 



இன்னா = துன்பம் தருபவை, தீங்கு இழைப்பவை 


எனத் = என்று 


தான் = ஒருவன் தனக்குத் தானே 


உணர்ந்தவை = உணர்ந்தவற்றை 


துன்னாமை = செய்யாமல் இருக்க 


வேண்டும் = வேண்டும் 


பிறன்கண் செயல் = மற்றவற்றிற்கு அந்தச் செயலை 


பரிமேலழகர் மிக நுட்பமாக உரை செய்கிறார். 


மற்ற ஒரு உயிருக்கு துன்பம் என்று நமக்கு எப்படித் தெரியும்?  ஒருவன் முகத்தைப் பார்த்து, அவன் செய்யும் செயல்களை வைத்து அவன் துன்பத்தில் இருக்கிறானா, இல்லையா என்று நாம் அறிய முடியாது. நாம் செய்யும் ஒன்று அவனுக்கு துன்பம் தருமா இல்லையா என்று எப்படி அறிந்து கொள்வது?


வள்ளுவர் சொல்கிறார் 


இன்னா எனத்தான் "உணர்ந்தவை" : அதாவது ஒன்று நமக்குத் துன்பம் தருகிறதா இல்லையா என்று நமக்குத் தெரியும். யாரும் சொல்ல வேண்டாம். எந்த சட்டமும் தேவை இல்லை. நம் உணர்சிகள் நமக்குத் தெரியும் அல்லவா. எது நமக்குத் துன்பம் தருகிறதோ, அதை மற்ற உயிர்களுக்குச் செய்யக் கூடாது. 


நம்மை ஒருவன் முட்டாள் என்று திட்டினால் நமக்கு வருத்தம் வரும்தானே. எனவே, நாம் மற்றவர்களை அப்படித் திட்டக் கூடாது. 


"பிறன்கண் செயல்": பிறர் கண் என்று சொல்லி இருக்கலாம். இல்லை. பிறன் என்று சொல்கிறார். எல்லா உயிரும் அதில் அடங்கும். 


நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் இந்த அளவுகோல் கொண்டு சிந்திக்க வேண்டும். நான் இப்படிச் செய்வது மற்றவருக்கு துன்பம் தருமா என்று அறிய வேண்டும். எப்படி அறிவது என்றால், அந்தச் செயலை நமக்கு பிறர் செய்தால் எப்படி இருக்கும் என்று சிந்திக்க வேண்டும். அது நமக்கு வருத்தம் தரும் என்றால், அந்தச் செயலை, சொல்லை நாம் மற்றவர் மேல் செய்யவோ, சொல்லவோ கூடாது. 


யோசித்துப் பார்போம்...


எவ்வளவு நக்கல், நையாண்டி, ஏளனம், பரிகாசம், திமிராக பதில் சொல்லுவது, கேட்டும் கேளாத மாதிரி இருப்பது, முகம் சுழிப்பது, திட்டு, குத்தல், மட்டம் தட்டுவது, குறை கூறுவது, என்று எவ்வளவு செய்கிறோம். 


செய்யலாமா ?



Friday, June 19, 2026

கம்ப இராமாயணம் - நனி துடிக்கின்றன

 கம்ப இராமாயணம் - நனி துடிக்கின்றன 


ஒரு நாள் காகம் கரைகிறது. அன்று விருந்தினர் வருகின்றனர். 


மறுபடியும் மற்றொரு நாள் காகம் கரைகிறது, அன்றும் விருந்தினர் வருகின்றனர்.


இப்படி பல தடவை நடந்தால், நமக்கு என்ன தோன்றும்?  இந்த காகம் கரைவதற்கும், விருந்தினர் வருவதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று நம் மனம் எண்ணும் அல்லவா?  


அது மனித இயற்கை. 


கரிய மேகம் சூழ்ந்தால், மழை வரும். 


நம்பிக்கைதான். 


விரக்தியின் எல்லையில் சில சமயம் நம்பிக்கைகள்தான் நமக்கு துணை புரிகின்றன. வாழ்வை மேலும் கொண்டு செல்ல நம்பிக்கைகள் உதவுகின்றன. 


நடுக்கடலில் தத்தளிப்பவனுக்கு ஒரு மரக்கட்டை கையில் அகப்பட்டால் போல். 


சீதையின் இடது கண் துடிக்கிறது. அப்படி துடித்தால் நல்லது நடக்குமா?  


முன்பு இராமன் மிதிலை வந்தபோது இதே மாதிரி துடித்தது. திருமணம் நடந்தது. அதே போல் இப்போதும் துடிக்கிறது. ஏதோ நல்லது நடக்கப் போகிறதோ என்று எண்ணி மகிழ்கிறாள் சீதை. 


பாடல் 



‘முனியொடு மிதிலையில் முதல்வன் முந்து நாள்,

துனி அறு புருவமும், தோளும், நாட்டமும்,

இனியன துடித்தன; ஈண்டும், ஆண்டு என்

நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய்



பொருள்


‘முனியொடு = கௌசிகன் என்ற முனிவனோடு 


மிதிலையில் = மிதிலை மாநகரில் 


முதல்வன் = இராமன் 


முந்து நாள் = முன்பு ஒரு நாள் 


துனி அறு = குற்றம் அற்ற 


புருவமும் = புருவங்களும் 


தோளும் = தோளும் 


நாட்டமும் = கண்ணும் 


இனியன துடித்தன = இன்பமாகத் துடித்தன 


ஈண்டும் = இப்போதும் 


ஆண்டு என் = அதே போல் 


நனி துடிக்கின்றன = நன்றாக துடிக்கின்றன 


ஆய்ந்து நல்குவாய் = காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து சொல்வாய் (திரிசடை) என்கிறாள் சீதாப் பிராட்டி


இதெல்லாம் ஏன் கம்பர் சொல்கிறார். காப்பிய ஓட்டத்திற்கு இது தேவையா?  மிகப் பெரிய காப்பியம் செய்து கொண்டு போகும்போது, இது என்ன சின்னப் பிள்ளைத் தனமாக இருக்கிறதே என்று தோன்றும். யார் வாசிக்கப் போகிறார்கள். இந்தப் பாடல்களை எல்லாம் எடுத்து விட்டால், கதை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக செல்லும் அல்லவா?


காரணம் இல்லாமல் கம்பர் இதை வைக்கவில்லை. 


என்ன காரணமாக இருக்கும்?


 



Thursday, June 11, 2026

திருக்குறள் - அறிவின் பயன்

 திருக்குறள் - அறிவின் பயன் 


இன்று செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பற்றி பெரிய அளவில் பேசப் படுகிறது. 


அறிவு என்றால் என்ன? அறிவு உள்ளவன் என்ன செய்வான்? யாரை அறிவு இல்லாதவன் என்று சொல்ல முடியும்?


நிறைய படித்து, பட்டம் பெற்றவன் அறிவு உள்ளவனா? பள்ளிப் பக்கமே போகாதவன் அறிவு இல்லாதவனா? 


இது ஒரு புறம் இருக்கட்டும். 


அறிவு பெறுவதால் என்ன பயன்?


அறிவுக்கும், இந்த இன்னா செய்யாமை என்ற இந்த அதிகாரத்துக்கும் என்ன தொடர்பு. 


குறளைப் பார்க்கலாம். 


 

பாடல் 


அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை


பொருள் 


அறிவினான் = ஒருவன் தான் பெற்ற அறிவினால் 


ஆகுவது உண்டோ = பெற்ற பயன் என்ன ?


பிறிதின்நோய் = பிற ஒன்றின் துன்பத்தை 


தம்நோய்போல் = தன்னுடைய துன்பம் போல் எண்ணி 


போற்றாக் கடை = அத்துன்பத்தை நீக்காவிட்டால் 


இதை ஏன் துறவறத்தில் வைக்க வேண்டும். இல்லறத்தில் உள்ளவன் பிற உயிர்களை காக்க வேண்டாமா?


பரிமேலழகர் சொல்கிறார், ஒரு துறவி உயிரின் நுட்பத்தை அறிவான். இல்லறத்தில் உள்ளவனுக்கு அந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்காது. 


"அறிவினான் ஆகுவது உண்டோ" என்றால் எந்த அறிவு? எனக்கு சிலை செய்யத் தெரியும், வண்டி ஓட்டும் அறிவு இருக்கிறது, சமைக்கத் தெரியும், கணனியில் வேலை செய்யும் அறிவு இருக்கிறது. அந்த அறிவால் உயிர்களை துன்பத்தில் இருந்து காப்பது எப்படி?


பரிமேலழகர் சொல்கிறார், இங்கே அறிவு என்பது , உயிர்களின் தன்மை பற்றி அறிந்த அறிவு என்று. 


"உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ"


"பிறிதின்" என்று ஏன் கூறினார்?


மற்ற மக்கள் மட்டும் அல்ல. மற்ற உயிர்களும் அதில் அடங்கும். எறும்பு, ஈ, போன்ற சிற்றுயிர்களும் அடங்கும். 


குசேலர், கண்ணனைப் பார்க்கப் போகும் போது, மர நிழலில் போகாமல், வெயிலில் நடந்து போனாராம். காரணம், நிழலில் எறும்பு போன்ற சிறிய உயிர்கள் உலாவும். தெரியாமல் அவற்றை மிதித்து அவற்றிற்கு துன்பம் செய்து விடக் கூடாதே என்ற கருணையால். 


சிவ இலிங்கத்துக்கு கண்ணில் இருந்து இரத்தம் வந்ததால், தன் கண்ணையே எடுத்துக் கொடுத்தான் கண்ணப்பன். ஒன்றல்ல, இரண்டையும். கல்லுக்கும் இரங்கியது அவன் கருணை. 


நோய் என்றால் துன்பம். 


தெரியாமல் கூட ஒரு உயிருக்கு தீங்கு செய்து விடக் கூடாது. நமக்கு யாராவது தெரியாமல் தீங்கு செய்தால், "பாவம் தெரியாமல் செய்து விட்டான் " என்று சும்மா இருப்போமா? எவ்வளவு வலி, கோபம் வருகிறது. மற்ற உயிர்களுக்கும் அப்படித்தானே வலியும் , கோபமும் இருக்கும். 


அதை உணர வேண்டும் என்கிறார். 


பிற உயிர்களுக்கு நாம் துன்பம் செய்யக் கூடாது என்பது மட்டும் அல்ல. அந்த உயிர்களுக்கு துன்பம் வராமால் காக்க வேண்டும். 


நமக்கு ஒரு துன்பம் வந்தால் என்ன செய்வோம்? வந்த துன்பத்தை போக்க நினைப்போம். இனி அந்த மாதிரி துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம் அல்லவா. 


தன் நோய் (தன்னுடைய துன்பம்) போல் போற்றாக் கடை என்றார். 


உயிர்கள் மேல் அன்பு வேண்டும். அவைகளும் துன்பம் இன்றி தீங்கு இன்றி வாழ வேண்டும்.