Sunday, November 30, 2014

திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?

திருக்குறள் - கற்றதனால் பயன் என்ன ?


எவ்வளவோ படிக்கிறோம் ? எதை  எதையோ   அறிந்து கொள்கிறோம். ? படித்து அறிவது. அனுபவத்தில் அறிவது என்று பல விதங்களில் அறிகிறோம்.

இவையெல்லாம் எதற்காக என்று வள்ளுவர் கேட்கிறார்.

படித்து என்ன செய்யப் போகிறாய் என்பது அவர் கேள்வி.

ஒன்றைச் செய்கிறோம் என்றால் அதற்கு ஒரு பயன் இருக்க வேண்டும். கல்வியின் பயன் என்ன ?

பாடல்

கற்றதனா லாய பயனென்கொல், வாலறிவ

னற்றா டொழாஅ ரெனின்.

சீர் பிரித்த பின்

கற்றதனால் ஆய  பயன் என் கொல், வாலறிவன் 
நற்றாள் தொழார் எனின் 

பொருள்

கற்றதனால் = படித்ததனால்

ஆய  பயன் என் கொல் = கிடைக்கும் பயன் என்ன ?

வாலறிவன் = இறைவன் 

நற்றாள் = நன்மை பயக்கும் திருவடிகளை

தொழார் எனின் = தொழவில்லை என்றால்

வள்ளுவர் இறைவனை  தொழுங்கள் என்று சொல்லவில்லை.

இறைவனை தொழவில்லை என்றால், கற்றதனால் ஆய பயன் என்ன என்ற கேள்வியை  நம் முன் வைக்கிறார்.

அதற்கு நம்மிடம் பதில் இருக்கிறதா ?

வாசிப்பதால் என்று சொல்லவில்லை. கற்றதனால் என்கிறார்.

இறைவன் திருவடிகளை தொழுவது என்பது கற்றதனால் வரும் ஒரு பயன்.

அது இல்லை என்றால், வேறு என்ன பயன் இருக்கிறது என்கிறார் ?

ஆணவங்களில் முதலாவது நிற்பது கல்வியினால் வரும் ஆணவம். வித்யா கர்வம் என்று   சொல்வார்கள்.

நாம் எல்லாம் அறிந்து விட்டோம். என்னை விட்டால் யார் இருக்கிறார்கள் இந்த உலகில் . எனக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை என்ற கர்வம் வரும்.

அந்த கர்வம் அழிவுக்கு வழி வகுக்கும்.

இறைவனை தொழுவது ஆணவத்தை அழிக்கும்.

நம் அறிவை, ஏதோ மார்கத்தில் தூண்டிச் செலுத்துவது எது ? அந்தத் துறையில் நாம் வெற்றி பெறச் செய்வது எது ?

சிந்திக்கச் சொல்கிறார் வள்ளுவர்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் ?

சிந்திப்போம்.



 


Saturday, November 29, 2014

தேவாரம் - சிலையாளி மலையாளி

தேவாரம் - சிலையாளி மலையாளி 


ஞான சம்பந்தர் திருவையாறு என்ற தலத்திற்குப் போகிறார்.

அந்த ஊரின் இயற்கைக் காட்சிகள் அவரின் மனதை கொள்ளை கொள்கின்றன.

ஊரின் வெளியே நிறைய கரும்புத் தோட்டங்கள்.

அங்குள்ள கரும்புகளில் கணுக்கள் இருக்கின்றன. அவற்றை கண் என்றும் சொல்லுவார்கள்.

கண் என்ன செய்யும் ?

பார்க்கும், அல்லது மூடித் தூங்கும்.

அவர் பார்க்கும் போது அந்த கரும்பின் கண்கள் எல்லாம் தூங்குவது போலத் தோன்றிற்று.

ஏன் தூங்க வேண்டும் ?

குளிர்ந்த , வாசமான தென்றல் காற்று சிலு சிலுவென வீசுகிறது.

அது மட்டும் அல்ல, அங்குள்ள சோலைகளில் உள்ள குயில்கள் இனிமையாக குரல் எழுப்புகின்றன. அது தாலாட்டு மாதிரி இருக்கிறது.

தென்றல் வருட, குயில் பாட...தூக்கத்திற்கு கேட்பானேன்.

அந்த மாதிரி கரும்பின் கண் வளரும் திருவையாற்றில் யார் இருக்கிறார் தெரியுமா ?

வானில் பறக்கும் மூன்று உலகங்களைச் செய்து அவற்றின் மூலம் மற்றவர்களுக்குத் துன்பம் தந்ததால் அவற்றை அழிக்க அம்பு தொடுத்த, கைலாய மலையில் இருக்கும் சிவன் வசிக்கும் இடம் அந்த திருவையாறு.

பாடலைப் பாருங்கள்

நின்றுலா நெடுவிசும்பு னெருக்கிவரு புரமூன்று நீள்வாயம்பு 
சென்றுலாம் படிதொட்ட சிலையாளி மலையாளி சேருங்கோயில்
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந் திருவையாறே.

சீர் பிரித்த பின்

நின்று உலாவும் நெடு விசும்பு நெருக்கி வரு புர மூன்று நீள்வாய் அம்பு  
சென்று உலாம் படி தொட்ட சிலையாளி மலையாளி சேருங் கோயில்
குன்றெல்லாம்  குயில் கூவக் கொழும் பிரச மலர் பாய்ந்து வாசமல்கு
தென்றலார் அடி வருடச்  செழுங் கரும்பு கண் வளரும்  திருவையாறே.


பொருள்

நின்று உலாவும் = ஒரு இடத்தில் நில்லாமல் எங்கும் பறந்து திரியும்

நெடு விசும்பு = நீண்ட வானத்தில்

நெருக்கி வரு = ஒன்றாகச் சேர

புர மூன்று = மூன்று உலகங்களையும்

நீள்வாய் = நீண்ட

அம்பு சென்று உலாம் படி = அம்பு சென்று தைக்கும் படி

தொட்ட = விட்ட

சிலையாளி = வில்லைக் கொண்டவன்

மலையாளி  = கைலாய மலையில் இருக்கும் சிவன்

சேருங் கோயில் = வந்து அடையும் கோயில்

குன்றெல்லாம்  = எல்லா குன்றுகளிலும்

குயில் கூவக் = குயில்கள் கூவ

கொழும் = சிறந்த

பிரச = தென்

மலர் பாய்ந்து = மலரின் மேல் சென்று

வாசமல்கு = வாசத்தைப் பெற்றுக் கொண்டு

தென்றலார் = தென்றல் காற்றானது

அடி வருடச் = பாதத்தை வருட

செழுங் கரும்பு = வளர்ந்த கரும்பு

கண் வளரும் = கண்கள் தூங்கும்

திருவையாறே = திருவையாறே

ஏதோ கோவிலுக்குப் போனோம்,  அர்ச்சனை பண்ணினோம், பிரகாரத்தை நாலு முறை  வலம் வந்தோம் , பஸ்ஸைப் பிடித்து ஊர் வந்தோம் என்று இல்லாமல், அங்குள்ள இயற்கையை  இரசிக்கிறார்.

இறைவன் என்பவன் கோவிலுக்கு உள்ளே மட்டும் இருப்பவன் அல்ல.  எங்கும் நீக்கமற  நிறைந்து இருப்பவன்.

எங்கோ உள்ள குன்று, அதில் கண்ணுக்குத் தெரியாத குயில், அது பாடும் இசை,  தலை வருடும் பூங்காற்று, அதில் தவழ்ந்து வரும் இசை, அது கேட்டு கண் வளரும்  கரும்பு....இது எல்லாம் சேர்ந்ததுதான் இறைவன்.

இந்த பிரமாண்டமான இயற்கைதான் இறைவன்.

இறைவனை கோவிலுக்குள் மட்டும் தேடாதீர்கள். கோவிலுக்கு வெளியேயும் அவன்  தான்.

தேவாரம் ,  இப்படி எத்தனையோ அருமையான பாடல்களைக் கொண்டது.

நேரம் இருப்பின் மூலத்தைப் படித்துப் பாருங்கள்.

கொட்டி கிடக்கிறது. அள்ளிக் கொள்ளுங்கள்.

   .

Friday, November 28, 2014

தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

தேவாரம் - செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.


திருவையாறு !

திரு ஞான சம்பந்தர் காலத்து திருவையாறு !

பச்சை பசேலென்ற வயல் பரப்புகள்.

வயல் எங்கும் நெல். வயலில் நீர் நிறைந்திருக்கிறது. எவ்வளவு நீர் என்றால் , அந்த வயல்களில் தாமரை மலர் பூத்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் எவ்வளவு நீர் என்று.

பசுமையான நெற் பயிர்களின் ஊடே சிவந்த தாமரை மலர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன.

வயல் வெளியில் ஊடாடும் தென்றல்.

அதன் அருகே கொஞ்சம் வீடுகள். வீட்டின் முற்றத்தில்  சில பல தென்னை மரங்கள். மரத்தடியில் தடி தடியாக சில எருமைகள். அதன் அருகே அந்த எருமையின் கன்றுகள்.

நெல்லின் தலை கோதிய காற்று தென்னை மரத்தின் மேலும் படர்ந்தது. அப்போது, அந்த தென்னை மரத்தில் இருந்த சில காய்ந்த தென்னக் குருளைகள் உதிர்ந்து விழுந்தன.

அந்த சத்தத்தில் , எருமை கன்றுகள் துள்ளி எழுந்து , தாமரை மலர்கள் சூழ்ந்த வயல் வெளியில் ஓடின.


இது தேவாரப் பாட்டில் வருகிறது சொன்னால் நம்ப முடிகிறதா ?


பாடல்

அஞ்சாதே கயிலாய மலையெடுத்த வரக்கர்கோன் றலைகள்பத்தும்
மஞ்சாடு தோணெரிய வடர்த்தவனுக் கருள்புரிந்த மைந்தர்கோயில்
இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ விளமேதி யிரிந்தங்கோடிச்
செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.

சீர் பிரித்த பின்

அஞ்சாதே கயிலாய மலை எடுத்த  அரக்கர் கோன் தலைகள் பத்தும்
மஞ்சாடும் தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள் புரிந்த மைந்தர் கோயில்
இஞ்சாய இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி  இருந்து அங்கு ஓடி 
செஞ்சாலிக் கதிர் உழக்கி செழுங்கமல வயல் படியுந் திருவையாறே.

பொருள்

அஞ்சாதே = அஞ்சாமல்

கயிலாய மலை = கயிலாய மலையை

எடுத்த = எடுத்த

 அரக்கர் கோன் = அரக்கர்களின் அரசன்

தலைகள் பத்தும் = தலைகள் பத்தும்

மஞ்சாடும் = வலிமை பொருந்திய

தோள் நெரிய = தோள்களும் நெரியும் படி

அடர்த்து = சண்டையிட்டு (இங்கே அழுத்தி )

அவனுக்கு = அந்த இராவணனுக்கு

அருள் புரிந்த  = அருள் புரிந்த

மைந்தர் கோயில் = காப்பவனின் கோயில்

இஞ்சாய = இஞ்சி போல உலர்ந்த

இளம் தெங்கின் பழம் வீழ = சிறிய தென்னையின் குருளை விழ

இள மேதி = எருமைக் கன்றுக் குட்டி

இருந்து அங்கு ஓடி  = அங்கிருந்து ஓடி

செஞ்சாலிக் = செந் நெல்

கதிர் = கதிர்களை

உழக்கி = மிதித்துக் கொண்டு

செழுங்கமல = சிவந்த தாமரைகள் உள்ள

வயல் = வயல்கள்

படியுந் = உள்ள

திருவையாறே.= திருவையாறே

என்ன ஒரு அழகான பாட்டு...இல்லையா ?

பாட்டு அழகாக இருந்தாலும்...

வயல் வெளியில் தாமரை பூத்தது, தென்னை மரத்தில் இருந்து குருளை விழுந்தது, எருமைக் கன்று ஓடியது, இராவணனுக்கு அருள் புரிந்த சிவன் அமரும்  கோயில்....என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாமல் இருக்கிறதே ?

சிலருக்கு எதைப் பார்த்தாலும் தனக்கு அது வேண்டும் என்று நினைப்பார்கள்.

நல்ல வீட்டைப் பார்த்தால், நமக்கு இந்த மாதிரி ஒரு வீடு இருந்தால் தேவலை என்று நினைப்பார்கள்..

அழகான பெண்ணை பார்த்தால் , தனக்கு வேண்டும்.

காண்பதெல்லாம் வேண்டும்.

அது ஒரு வகை.

இன்னொரு வகை, அடைய வேண்டும் என்ற ஆசை இல்லாமல், அது அது அங்கங்கே இருக்கட்டும் என்று அவற்றை அப்படியே பார்த்து இரசிப்பதோடு நிற்பது.

இராவணன் என்ன நினைத்தான் ....?

கைலாய மலையே தனக்கு வேண்டும் என்று நினைத்தான். மலையை தூக்கிக் கொண்டு போய் விட நினைத்தான். அவன் வலிமைக்கு மலையை தூக்க நினைத்தான்.

நம் வலிமைக்கு நாம் எதை எதையோ தூக்க நினைக்கிறோம்.

எல்லாம் தனக்கு வேண்டும் என்று நினைப்பது ஆணவம். ஆணவம் அழியும் இடத்தில்  அருள் கிடைக்கும்.

பக்தி என்றால் எல்லா பற்றையும் விட்டு விட்டு இறைவன் மேல் அன்பு செலுத்துவது  ஒன்று மட்டும் தான் என்று ஒரு எண்ணம் பலருக்கு உண்டு.

உலக இன்பங்களை வெறுத்து ஒதுக்க வேண்டும். இறைவன் ஒருவனையே நேசிக்க வேண்டும் என்று பலர் நினைப்பது உண்டு.

அது அல்ல பக்தி,

பக்தி என்பது உலகை, இயற்கையை இரசிப்பது, அதன் ஆச்சரியங்களில் மூழ்குவது,

இறைவன் வேறு இயற்கை வேறு என்பது அல்ல.

தென்னை மரம், அதன் அடியில் எருமைக் கன்று, வயல் வெளி, அதில் பூத்த தாமரை என்று  இயற்கையோடு ஒன்றுகிறார் ஞான சம்பந்தர்.

நாம் செல்லும் வழியில் நிற்கும் மரங்களை  நாம் எத்தனை முறை இரசித்து இருக்கிறோம் ?

மழையில் நனைந்த மரங்களை, ஜன்னலோரம் பறந்து செல்லும் அந்த பெயர் தெரியாத  பறவையை, தாயின் தோளில் நிம்மதியாகக் தூங்கிக் கொண்டு வரும் குழந்தையை, நிலவோடு கட்டிப் பிடித்து விளையாடும் மேகங்களை, இப்படி நம் வாழ்க்கையில் அன்றாடம் ஆயிரம் அதிசயங்கள்  நம் முன்னே கொட்டிக் கிடக்கின்றன. நாம் தான் கண் மூடிச் செல்கிறோம்.

பணம் ஒன்றே குறியாக  அலைகிறோம். அது வேண்டும், இது வேண்டும் , அதுவும்  வேண்டும், இதுவும் வேண்டும் என்று ஆலாய் பறக்கிறோம்....இராவணன் மாதிரி

மலையைப் பார்த்தால் தனக்கு வேண்டும்.

மற்றவன் மனைவியைப் பார்த்தால் தனக்கு வேண்டும்

சற்று நேரம் அடையும் ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு இயற்கையை இரசியுங்கள்....

மனைவியின் வெட்கப் புன்னகையை, பிள்ளையின் மலர்ந்த முகத்தை, சில்லென்று  முகத்தில் படும் நீரை...

இத்தனை சந்தோஷங்களும் உங்கள் முன்னால் கொட்டிக் கிடக்கிறது. அனுபவியுங்கள்.

பக்தி பின்னால் வரும்.....


Thursday, November 27, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ?

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இப்ப என்ன செய்வது ?


இராமனுக்குத் தந்த வாக்குறுதியை சுக்ரீவன் மறந்தான். அதனால் கோபம் கொண்ட இராமன், இலக்குவனை சுக்ரீவனிடம்  அனுப்பினான். இலக்குவனும் மிகுந்த சினத்துடன் வருகிறான்.

குரங்குகள் என்ன செய்வது என்று அறியாமல் தாரையிடம் சென்று யோசனை கேட்டன. தாரை அவர்களை பலவாறு ஏசுகிறாள்.

அந்த சமயத்தில் இலக்குவன் கோட்டையை நெருங்கி விட்டான். குரங்குகள் சென்று கோட்டை கதவை அடைத்தன . இலக்குவன் அதை எல்லாம் உடைத்து எறிந்து விட்டு வேகமாக வருகிறான்.

குரங்குகள் மீண்டும் தாரையிடம் ஓடி வருகின்றன..

"இப்ப என்ன செய்வது " என்று கேட்க்கின்றன ....

பாடல்


அன்ன காலையின் ஆண் தகை ஆளியும்
பொன்னின் நல்நகர் வீதியிற் புக்கனன்;
சொன்ன தாரையைச் சுற்றினர் நின்றவர்
“என்ன செய்குவது? எய்தினன் ” என்றனர்.

பொருள் 

அன்ன காலையின் = அந்த நேரத்தில் (காலத்தில் )

ஆண் தகை ஆளியும் = ஆண்களில் சிங்கம் போன்ற அவனும் 

பொன்னின் = பொன் போன்ற சிறந்த உயர்ந்த

நல்நகர் = அந்த நல்ல நகரின் (கிட்கிந்தையின் )

வீதியிற் புக்கனன்; = வீதியில் புகுந்தான்

சொன்ன தாரையைச்  = முன்னால் சொன்ன தாரையை

சுற்றினர் நின்றவர் = மீண்டும் வந்து சூழ்ந்து கொண்டனர்

“என்ன செய்குவது? எய்தினன் ” என்றனர். = என்ன செய்வது இப்போது என்று வந்தோம்  என்றனர்.



Tuesday, November 25, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர்

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர் 


தன் முன்னால் நிற்கும் குரங்குக் கூட்டத்தை பார்த்து மேலும் தாரை சொல்கிறாள்.

"மனைவியை பிரிந்த அந்த தேவர்களின் மேலோன், உயிர் பிரிந்த மாதிரி சோர்வடைவான். அதை நீங்கள் நினைத்துப் பார்க்காமல், கருங்குவளை மலர் போன்ற கண்களை கொண்ட உங்கள் மனைவியருடன் காதல் நீரைப் பருகிக் கொண்டு இருக்கிறீர்கள்"

பாடல்

தேவி நீங்க, அத் தேவரின் சீரியொன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது, பருகுதிர் போலும், நும்

காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர்.

பொருள்

தேவி நீங்க = சீதை நீங்க

அத் தேவரின் சீரியொன் = தேவர்களை விட சிறந்தவனான அவன்

ஆவி நீங்கினன்போல் = உயிர் பிரிந்ததைப் போல

அயர்வான் = சோர்வடைவான்

அது பாவியாது = அந்தி நினைத்துப் பார்க்காமல்

பருகுதிர் போலும் = சுவைப்பீர்கள் போலும்

நும் = உங்கள்

காவி நாள்மலர்க்  = அன்று பூத்த குவளை மலர் போன்ற

கண்ணியர் = கண்களை கொண்டவர்களின்

காதல் நீர் = காதல் நீர்

காதல் நீர் என்பதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை உங்களிடமே விட்டு விடுகிறேன்....:)

ஒரு பெண், முன்னால் நிற்கும் பெரிய ஆண்கள் கூட்டத்தைப் பார்த்து இவ்வளவு  உரிமையோடு கண்டித்து திட்டுகிறாள் என்றால் அவளின் ஆளுமை எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும்.

முன்ன பின்ன தெரியாத ஒரு கூட்டத்தைப் பார்த்து ஒரு பெண் இப்படி பேச முடியுமா .....

அது மட்டும் அல்ல, இந்தப் பகுதியை கம்பன் ஏன் வைத்து இருக்கிறான் ?

சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு சொன்ன வாக்கை மறந்து விட்டான். இலக்குவன்  கோபித்து வந்தான். தாரை சமாதானப் படுத்தினாள். எல்லாம் சரியாகி விட்டது.

இந்த பகுதி இல்லாவிட்டால் , காப்பியம் என்ன ஆகி இருக்கும் ? ஒன்றும் ஆகி இருக்காது.  கதையின் ஓட்டத்திற்கு இந்த பகுதி தேவை இல்லை தான்.

குறித்த காலத்தில் சுக்ரீவன் வந்தான் என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.

மாறாக, இவ்வளவு நீட்டி கம்பன் சொல்லக் காரணம் என்ன....?

காரணம் இருக்கிறது.

முதலாவது, ஒரு தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவன் அமைச்சர்களும், குடிகளும் ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.  சுக்ரீவன் இன்பத்தில் மூழ்கி சொன்ன சொல்லை மறந்தான். அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி  என்று மற்றவர்களும் அப்படியே இருந்து விட்டார்கள்.

இது ஒரு முதல் பாடம் - தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவனுக்கு கீழே உள்ளவர்களும்  ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.

அதை விட முக்கியமான பாடம் என்ன என்றால், மனிதன் ஏன் கடமை தவறுகிறான் ?

முதல் காரணம் போதை. போதைக்கு அடிமையானதால் சுக்ரீவன் தன் நிலை மறந்தான்.

இரண்டாவது, காமம். கண்ணியர் காதல் நீர் பருகிக் கிடந்ததால் மற்றவர்களும் சொன்ன சொல்லை காக்கத் தவறினார்கள்.

மதுவும் மாதுவும் மனிதனை தடம் புரளச் செய்யும்.

மேலும் சிந்திப்போம்.



Monday, November 24, 2014

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே


இத்தனை ஆட்டமும் பாட்டமும் ஓட்டமும் எதற்கு ?  எதை அடைய இத்தனை முயற்சிகள் ?

படித்து, மணம் முடித்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, அவர்களை திருமணம் செய்து கொடுத்து....பின் என்ன ?

ஒன்றும் இல்லை ! ஒன்றும்  இல்லாமல் போவதற்கா இத்தனை பாடு ?

நாவுக்கரசர் சொல்கிறார்

"பூவைக் கையில் கொண்டு அவன் பொன் போன்ற அடிகளை போற்றுவதில்லை. நாக்கினால் அவன் நாமம் சொல்வதில்லை. இந்த உடம்புக்கே நாளும் இரை தேடி அலைந்து, முடிவில் காக்கைக்கு இரையாக இந்த உடலை விட்டு, வாழ்நாட்களை கழிப்பார்களே"

பாடல்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

பொருள்

பூக் = பூவைக்

கைக் கொண்டு = கையில் கொண்டு

அரன் = சிவனின்

பொன்னடி= பொன் போன்ற திருவடிகளை

போற்றிலார் = போற்ற மாட்டார்கள்

நாக்கைக் = நாக்கினைக்

கொண்டரன் = கொண்டு + அரன்

நாமம் நவில்கிலார் = பெயரைச் சொல்ல மாட்டார்கள்

ஆக்கைக் கேயிரை தேடி = ஆக்கைக்கே + இரை + தேடி = இந்த உடம்புக்கு தீனி தேடி

அலமந்து = அலமந்து (அலைந்து)

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே = காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே

இந்த உடல் எப்படியும் மடிந்து போகப் போகிறது.  மடிந்த உடன் மக்கிப் போகும்.

அதற்கு முன் இந்த உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம் ....

 காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலந் தானையே கூறு.

என்பார் பட்டினத்தார்.

கடைசி காலம் வருமுன்னே குற்றாலத்தானையே கூறு என்றார்.


Saturday, November 22, 2014

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 2




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !



போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்

வாழ்க்கையில் பல துன்பங்களுக்குக் காரணம் மெய் எது பொய் எது என்று அறியாமல் குழம்புவதுதான்.

சரி எது, தவறு எது ?
நல்லது எது, கெட்டது எது ?
நல்லவர் யார் , கெட்டவர் யார் ?
எது சரியான பாதை, எது தவறான பாதை ?

என்று தெரியாமல் பல தவறான முடிவுகளை எடுத்து விட்டு தவிக்கிறோம்.

பொய்யானவற்றை விட்டு உண்மையானவற்றை அடைய வேண்டும்.


பொய் என்பது பொய் அறிவு, பொய் உணர்வு.
மெய் என்பது மெய் அறிவு, மெய் உணர்வு.


எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் , அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு  என்பார் வள்ளுவர்.

எப்பொருள் எத்தன்மையத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு  என்பதும் அவர் வாக்கே.

இறைவனை அறியும் போது பொய் விலகும், உண்மை புரியும்.



Thursday, November 20, 2014

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார்

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார் 


பெண்மை, மென்மை படுத்துகிறது. தாய், சகோதரி, காதலி, மனைவி, நண்பி என்று பெண்கள் எங்கெங்கும் ஆண்களை மென்மை படுத்துகிறார்கள்.

பெண் தொடர்பு இல்லாதவர்கள் கொஞ்சம் ஈரம் குறைந்தவர்களாக இருப்பார்களோ என்னவோ.

"தாயினும் சாலப் பரிந்து " என்பார் மணிவாசகர்.

"தாயினும் நல்லான் " என்று குகனை சொல்வார்  கம்பர்.

நந்தியின் ஊரில் வாழும் ஒரு பெண். அவளுக்கு நந்திவர்மன் மேல் காதல். ஒரு தலைக் காதல்.

அவளுக்கு ஏதாவது ஒன்றின் மேல் பயம் என்றால், அது இந்த மாலைப் பொழுதின் மேல்தான்.

அது எப்ப வருமோ என்று பயந்து கொண்டே இருப்பாள்.

அவள் பயத்தை இன்னும் அதிகரிக்கும் படி, அந்த நிலவும், சீக்கிரம் சீக்கிரம் வந்து விடுகிறது.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல், வேகமாக வந்து விடுகிறது.

"பெண்கள் இல்லாத ஊரில் பிறந்தவர்கள் மாதிரி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்  இப்படி வருகிறாயே நிலவே " என்று அந்த நிலவின் மேல் கோபம் கொள்ளுகிறாள்.


பாடல்

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
                தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
                வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.



Wednesday, November 19, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?

இராமாயணம் - தாரையின் ஆளுமை - இது உங்களுக்குச் சரிதானா ?


இராமனுக்கு தந்த வாக்குறுதியை மறந்ததால், சுக்ரீவன் மீது கோபம் கொண்டு இலக்குவன் அவனோடு சண்டை பிடிக்க மிகுந்த கோபத்தோடு வருகிறான்.

வானரங்கள் எல்லாம் தாரையிடம் வந்து அவளிடம் யோசனை கேட்டு நின்றன.

ஒரு பெண். ஒரு அரசை எப்படி செலுத்தி இருக்கிறாள் என்று கம்பன்  காட்டுகிறான்.

தன் முன்னால் பயந்து நடுங்கி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து தாரை சொல்லுகிறாள்

"வாலியின் உயிரை காலனுக்குக் கொடுத்து, வற்றாத செல்வத்தை உங்களுக்குக் கொடுத்த இராமனும் இலக்குவனும் ஊருக்கு வெளியே சும்மா உட்கார்ந்து இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தீர்களா ? இப்படி உதவி செய்தவர்களை புறக்கணிப்பது உங்களுக்கு தகுமா ?"

என்று அவர்களை கடிந்து கூறுகிறாள் .

பாடல்

'வாலி ஆர் உயிர் காலனும் வாங்க, விற்
கோலி, வாலிய செல்வம் கொடுத்தவர்
போலுமால், உம் புறத்து இருப்பார்! இது
சாலுமால், உங்கள் தன்மையினோர்க்கு எலாம்.

பொருள்

'வாலி ஆர் உயிர்  = வாலியின் உயிரை

காலனும் வாங்க = காலன் வாங்க

விற் கோலி = வில்லை வளைத்து 

வாலிய செல்வம் கொடுத்தவர் = வற்றாத செல்வம் கொடுத்தவர் (அல்லது வாலியின் அந்த செல்வத்தை கொடுத்தவர் )

போலுமால் = அவர்கள்

உம் புறத்து = உங்கள் ஊருக்கு வெளியே

இருப்பார்! = (சும்மா) இருப்பார்கள் என்று (நினைத்து அவர்களை புறக்கணிப்பது )

இது சாலுமால் = இது சரியா ?

உங்கள் தன்மையினோர்க்கு எலாம் =உங்களைப் போன்றோருக்கு எல்லாம்

நன்றி மறப்பது நன்றன்று என்பார் வள்ளுவர்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு என்பதும் அவர் வாக்கு.

நன்றி மறவாமையை அறமாகச் சொன்னவர்கள் நம் முன்னவர்கள்.

மேலும் சிந்திப்போம். 



திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1

திருவாசகம் - பொய் கெட்டு மெய் ஆனார் - பாகம் 1




"வேறு வேறு விதமாக இருக்கும் உடம்பினுள் என்னால் இருக்க முடியாது. ஐயா ! அரனே ! என்று போற்றி புகழ்ந்து, பொய்யானவெல்லாம் கெட மெய்யானவற்றை அடைந்து , மீண்டும் இங்கு வந்து வினை சேரும் இந்த பிறவியை அடையாமல், வஞ்சனையைச் செய்யும் இந்த புலன்களிடம் கிடந்து அகப்படாமல் என்னை காப்பவனே; நள்ளிருளில் நடனம் ஆடுபவனே."

பாடல்

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடு நாதனே

பொருள்

வேற்று = வெவேறு விதமான

விகார = வடிவங்கள் கொண்ட

விடக்குடம்பி னுட்கிடப்ப = ஊனாலான இந்த உடம்பினுள் கிடக்க

ஆற்றேனெம் ஐயா = ஆற்றமாட்டேன் என் ஐயா

அரனேயோ என்றென்று = அரனே என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து = போற்றி புகழ்ந்திருந்து

பொய்கெட்டு மெய்யானார் = பொய்யை விடுத்து மெய்யை அடைந்தார்

மீட்டிங்கு வந்து = மீண்டும் வந்து இங்கு

வினைப்பிறவி சாராமே = வினைக்கொண்ட இந்த பிறவியை அடையாமல்

கள்ளப் புலக்குரம்பைக் = கள்ளம் செய்யும் இந்த புலன்களின்

கட்டழிக்க வல்லானே = கட்டை அழிக்க வல்லவனே

நள்ளிருளில் = நடு இரவில்

நட்டம் = நடனம்

பயின்றாடு நாதனே = பயின்று ஆடும் நாதனே !


மிக மிக ஆழமான வரிகள்.

இதில் முதல் வரியைப் பார்ப்போம்.

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்

"வெவ்வேறு விதமாக மாறும் இந்த உடம்பினுள் கிடக்க என்னால் முடியாது "

உங்கள் உடம்பைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன ?

உங்கள் உடம்பை உங்களுக்கு பிடிக்குமா ?

தங்கள் உடலை பிடிக்காதவர்கள் யார் இருப்பார்கள் ? அந்த உடலைத் தான் எப்படி எல்லாம் பாதுகாக்கிறோம் ?

சோப்பு, பவுடர், உதட்டுச் சாயம், முடி திருத்தம், உடற் பயிற்சி, என்று இந்த உடலை எப்படி எல்லாம் மெருகு ஏற்ற முடியுமோ அப்படியெல்லாம் அழகு படுத்துகிறோம்.

இந்த உடல் மூலம்தானே நாம் அத்தனை அனுபவங்களையும் பெறுகிறோம்.

புலன் இன்பங்களை அனுபவிக்கத்தானே இந்த பாடு படுகிறோம்.

ஆனால், சற்று ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் இந்த உடலால் சுகமா ? இந்த சுகம் நிரந்தரமா ? இன்பம் போல் தோன்றும் இந்த இந்த இன்பம் எவ்வளவு நாள் கூட வரும் ? இதன் முடிவு என்ன ?

வயதாகும். உடல் தளரும். நினைவு தப்பிப் போகும். இருமலும் சளியும் வந்து சேரும். கண் பார்வை மங்கும். தோல் சுருங்கும். எலும்பு வளையும். காது கேட்காது. படுக்கையை விட்டு எழுந்திருப்பதே பெரிய வேலையாகிப் போகும்.

மறதி வந்து, சேர்த்து வைத்த அனுபவம் எல்லாம் செல்லாக் காசாகிப் போகும்.

மனைவி யார், கணவன் யார், பிள்ளை யார், பெற்றோர் யார் என்று தெரியாமல் மலங்க மலங்க விழிக்க  வேண்டி இருக்கும்.

அருகில் நிற்பவர்கள் எல்லாம், "கால காலத்தில் போய் சேர்ந்தால் நல்லது ..." என்று சொல்லும் நாள் வரும்.

இந்த உடம்பு சுகமா ?

இந்த உடம்பு மாறிக் கொண்டே இருக்கிறது. குழந்தையாக, சிறுவன்/சிறுமியாக, குமரன்/குமரியாக, வயதாகி, கிழவன்/கிழவியாக....நாளும் மாறிக் கொண்டே இருக்கிறது.

இதற்கிடையில், நோய் நொடி வந்து படுத்து விடுகிறது.

நாளும் வயதாகிக் கொண்டே இருக்கும் இந்த உடலுக்கா இந்த பாடு ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேன்

வேறு வேறு விதமாக மாறிக் கொண்டே இருக்கும் இந்த உடம்பினுள் அடை பட்டு கிடக்க என்னால் முடியாது என்கிறார் மணிவாசகர். இந்த உடலை சிறையாக நினைக்கிறார். நம் உயிரை, எண்ணங்களை, நான் என்ற என்னை அடைத்து வைக்கும் சிறை இந்த உடல். நான் என்பது இந்த உடல் அல்ல என்று நினைத்தால் இந்த உடலின் பாரம் தெரியும் ?

"இங்கு யார் சுமந்து இருப்பார் இச்சரக்கை" என்பார் காளமேகம்.



முதுகு பற்றிக் கைத்தலத்தால் முன் ஒரு கோல் ஊன்றி
விதிர் விதிர்த்து கண் சுழன்று மேல் கிளைகொண்டு இருமி
இது என் அப்பர் மூத்த ஆறு என்று இளையவர் ஏசாமுன்
மது உண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்குதுமே


முதுகைப் பிடித்துக் கொண்டு, கையால் தடவி தடவி , முன்னால் ஒரு கோலை ஊன்றிக் கொண்டு , உடல் நடுங்கி, கண் சுழன்று, இருமலோடு, இவர் எங்க அப்பா,  பெரிசு, என்று இளையவர் திட்டுமுன் , பத்ரிநாதனை வணங்குங்கள்  என்றார் ஆழ்வார். 

உடலினுள் அடை பட்டுக் கிடக்க முடியாது  என்கிறார்.

எது அடை பட்டுக் கிடக்கிறது ? உயிரா ? ஆன்மாவா ? நினைவுகளா ?

மாறும் உடலில் மாறாமால் இருக்கும் நான் யார் ?

சின்ன பிள்ளையாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

இளைஞனாக இருக்கும் போதும் நான் என்று சொன்னேன்.

கிழவனாக மாறும் போதும் நான் என்று சொல்வேன்.

உடல் மாறிக் கொண்டே இருக்கிறது...நான் என்பது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறது.

அது எது ?

உடலில் அடை பட்டு கிடைக்கவில்லை என்றால் அது எங்கு போகும் ?

அடைத்தது யார் ? விடுவிப்பது யார் ?

வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம்


Sunday, November 16, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - திறம்பினால் திறம்பும்

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - திறம்பினால் திறம்பும் 


இராமனுக்கு உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் அதை மறந்து விட்டான். அதனால் கோபம் கொண்ட இராமன் இலக்குவனை அனுப்பி சுக்ரீவனை மிரட்டி வரச் சொல்கிறான்.

இலக்குவனும் மிகுந்த கோபத்தோடு வருகிறான்.

வானர சேனைகள் என்ன செய்வது என்று அறியாமல் அங்கும் இங்கும் ஓடி கடைசியில்  அனுமனிடம் வந்து சேர்கின்றன.

அனுமன் அவர்களை அழைத்துக் கொண்டு தாரையிடம் செல்கிறான்.

எல்லோரும் அவள் முன் நிற்கிறார்கள்.

அவள் மேலும் சொல்கிறாள் (முதலில் சொன்னதை முந்தைய ப்ளாகில் பார்த்தோம் )

"மீண்டும் ஒன்று சொல்லுவாள்.  படைகளை கூட்டுங்கள் என்று இராமன் சொன்ன நாள் தப்பினால் , உங்கள் நாளும் தப்பும், என்று நான் பல முறை சொன்னேன் நீங்கள் கேட்கவில்லை. இப்போது குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டீர்கள். பாருங்க என்ன நடக்கப் போகிறது என்று "

பாடல்


மீட்டும் ஒன்று
      விளம்புகின்றாள்: ' ''படை
கூட்டும்'' என்று, உமைக்
      கொற்றவன், ''கூறிய
நாள் திறம்பின், உம்
      நாள் திறம்பும்'' எனக்
கேட்டிலீர்; இனிக்
      காண்டிர்; கிடைத்திரால்.

பொருள்

மீட்டும்  = மீண்டும்

ஒன்று  விளம்புகின்றாள்: = ஒன்று கூறுவாள்

' ''படை கூட்டும்'' என்று, = படைகளை கூட்டுங்கள் என்று

உமைக்  கொற்றவன், = சீதையின் கணவன்

 ''கூறிய நாள் திறம்பின், = கூறிய நாள் தவறிப் போனால்

உம்  நாள் திறம்பும்'' = உங்கள் வாழ் நாளும் தவறிப் போகும்

எனக் = என்று

கேட்டிலீர்;  = சொன்னேன், நீங்கள் கேட்கவில்லை

இனிக் காண்டிர்; = இனி என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள்

கிடைத்திரால்.= நன்றாக கிடைத்தீர்கள்

இதில் கவனிக்க வேண்டியது என்ன என்றால்,  தாரை, நடை முறை ஆட்சியில் ஈடு பட்டிருக்கிறாள் .  இராமனுக்கு தந்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை என்றால்  அரசுக்கு துன்பம் வரும் என்று அவளுக்குத் தெரிந்திருக்கிறது. வீரகளை பல முறை அவள் எச்சரிக்கை செய்திருக்கிறாள்.

இப்போது எல்லோரும் அவள் முன் நிற்கிறார்கள். அவள் அவர்களை கோபித்து திட்டுகிறாள்.

மேலும் சொல்லுவாள் ....



Tuesday, November 11, 2014

திருப்பாட்டு - மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை

திருப்பாட்டு - மூப்பதும் இல்லை, பிறப்பதும் இல்லை 


சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய பாடல்களுக்கு திருப்பாட்டு என்று பெயர்.


ஆண்டவன் - பக்தன்;
ஆண்டான் - அடிமை;
நாயகன் - நாயகி என்று பல மன நிலைகளில் ஆண்டவனை அடியவர்கள் வழிபட்டு இருக்கிறார்கள்.

இறைவனை நண்பனாக கொண்டாடியவர் சுந்தரர். இறைவனை வேலை சொல்வது, தனக்காக மனைவியிடம் தூது போகச் சொல்வது என்று மிக மிக உரிமையுடன் ஒரு உயிர் நண்பனைப் போல இறைவனோடு பழகுகிறார்.

அது மட்டும் அல்ல, இடையில் சில கிண்டல் வேறு. 

தெரியாம வந்து இவர் கிட்ட மாட்டிகிட்டோமே என்று நையாண்டி செய்வது போல சுந்தரர் சில பாடல்களைப் பாடி இருக்கிறார்.

பிறப்பதும் இல்லை. மூப்பதும் இல்லை. இறப்பதும் இல்லை. இருக்கும் இடமோ சுடு காடு. அது மட்டும் அல்ல திரு வேள்விக்குடி மற்றும் திருத் துருத்தி என்ற இடங்களில் வசிக்கிறார். சரி, உடையாவது சரியாக உடுத்துகிராரா என்றால் அதுவும் இல்லை. அவர் இடையில் கட்டுவது பாம்பை. முன்னாலேயே தெரிந்து இருந்தால் இவர்கிட்ட மாட்டி இருக்க மாட்டோம் என்று நையாண்டிப் பொருளில் பாடிய பாடல் இது: 

பாடல்

மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை; இறப்பது இல்லை; 
சேர்ப்பு அது காட்டு அகத்து; ஊரினும் ஆக; சிந்திக்கின்-அல்லால், 
காப்பது வேள்விக்குடி, தண்துருத்தி; எம் கோன் அரைமேல் 
ஆர்ப்பது நாகம்; அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே! 

பொருள்

மூப்பதும் இல்லை = வயதாகி மூப்பு அடைவதும் இல்லை

பிறப்பதும் இல்லை = பிறப்பதும் இல்லை

இறப்பது இல்லை = பிறப்பும் இல்லை, மூப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை.

சேர்ப்பு அது காட்டு அகத்து = சேர்ந்து இருக்கும் இடம் சுடு காடு

ஊரினும் ஆக = வாழும் ஊர்

சிந்திக்கின் = யோசித்துப் பார்த்தால்

அல்லால் = மேலும்

காப்பது வேள்விக்குடி , தண்துருத்தி = காவல் செய்து இருப்பது வேள்விக் குடி மற்றும் குளிர்ந்த திருபந்துருத்தி

எம் கோன் = எங்கள் அரசன்

அரைமேல் = இடுப்பின் மேல்

ஆர்ப்பது நாகம் = படம் எடுத்து ஆடுவது நாகப் பாம்பு

அறிந்தோமேல்  = இது தெரிந்து இருந்தால் 

நாம் இவர்க்கு ஆட்படோமே! = நாம் இவருக்கு ஆட் பட்டோமே.



Monday, November 10, 2014

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம்

முத்தொள்ளாயிரம் - ஒற்றைக் காலில் தவம் 


அது ஒரு பெரிய குளம்.

அது ஒரு கார் காலம்.

அந்த குளத்தின் நடுவில் ஒரு குவளை மலர் மலர்ந்து நிற்கிறது. கழுத்தளவு நீரில் நின்று கொண்டு என்ன இது தவம் ?

யாருக்காக இந்த தவம் ?

ஓ ....புரிந்து விட்டது....கூர்மையான வேலைக் கொண்ட, வண்டுகள் ரீங்காரம் இடும், குதிரையின் மேல் செல்லும் பாண்டிய மன்னனின் மார்பில் மாலையாக மாற இந்த குவளை மலர் ஒற்றைக் காலில் இந்த குளிர்ந்த நீரில் தவம் இருக்கிறது.

பாடல்

கார் நறு நீலம் கடிக் கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவம்கொலோ, கூர்நுனைவேல்
வண்டு இருக்கும் நக்க தார் வாமான் வழுதியால்
கொண்டு இருக்கப் பெற்ற குணம்

பொருள்

கார் = கார் காலத்தில்

நறு = நறு மணம் பொருந்திய

நீலம் = குவளை மலர்

கடிக் = பெரிய

கயத்து = குளத்தில்

வைகலும் = தினமும்

நீர்நிலை நின்ற = நீர் நிலையில் நின்று

தவம்கொலோ = எதற்க்காக தவம் செய்கிறாய்

கூர் நுனை வேல் = கூர்மையான முனை கொண்ட வேலைக் கொண்ட

வண்டு இருக்கும் = வண்டு இருக்கும்

நக்க தார் = மலர்ந்த மாலையைக் கொண்ட (நக்க = மலர்ந்த; தார் = மாலை )

வாமான் = தாவி செல்லும் குதிரை

வழுதியால் = பாண்டிய மன்னனால்

கொண்டு இருக்கப் பெற்ற குணம் = அவனோடு இருக்க வேண்டி


இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்வதனால், அந்த மாதிரி தவம் இருந்ததால், அவன் மார்பில் இருக்கப் பெற்றது.



Saturday, November 8, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - பொய் உரையாத புண்ணியா

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 2 - பொய் உரையாத புண்ணியா 


தாரை சொல்ல சொல்ல கேளாமல் சுக்ரீவனோடு போரிட்டு இராம பாணத்தால் வாலி இறந்து போனான்.

தாரை அவன் மேல் விழுந்து புலம்புகிறாள். அவள் புலம்பலிலும் அறிவின் தீட்சண்யம் தெரியும்.

"நான் இங்கு துன்பத்தில் கிடந்து நைந்து போகிறேன். நீயோ உண்மையான வானோர்கள் உள்ள நாட்டிற்கு சென்று விட்டாய். நான் உன் உயிர் என்று நீ என்னிடம் சொல்லி இருக்கிறாய். ஆனால், இன்றோ நான் இருக்கும்போது நீ எப்படி செல்ல முடியும் . ஒரு வேளை நீ சொன்னது பொய்யோ. ஆனால், நீ பொய் சொல்ல மாட்டாயே...."

பாடல்

நையா நின்றனன் நான் இருந்து இங்ஙன்;
மெய் வானோர் திருநாடு மேவினாய்;
ஐயா! ‘நீ எனது ஆவி ‘என்றதும்
பொய்யோ? பொய் உரையாத புண்ணியா!

பொருள்

‘நையா நின்றனன் நான் =நைந்து நின்றேன் நான்

இருந்து இங்ஙன் = இங்கிருந்து

மெய் = மெய்யான

வானோர்  = வானவர்கள்

திருநாடு மேவினாய் = திரு நாட்டிற்கு சென்றாய்

ஐயா! = ஐயா

‘நீ எனது ஆவி ‘என்றதும் = என்னிடம் நீ "நீ என் ஆவி" என்று கூறியது

பொய்யோ? = பொய்யோ ?

 பொய் உரையாத புண்ணியா! = பொய் சொல்லாத புண்ணியனே

தாரைக்கும் வாலிக்கும் உள்ள அன்பின் ஆழம் தெரிகிறது. வாலி, தாரையை உயிருக்கு உயிராக நேசித்து இருக்கிறான்.

நான் உன் உயிர் என்று நீ (வாலி) சொன்னது பொய்யானால், நீ எப்படி பொய் புகலாத வானவர் நாடு போவாய் (மெய் வானோர் திரு நாடு மேவினாய்)

வாலியின் சிறப்பு, வாலிக்கும் தனக்கும் உள்ள அன்பின்   நெருக்கம்,  வாலியைப் பிரிந்த துயரம் எல்லாம் அவளின் புலம்பலில் காணக் கிடைக்கும்.

மேலும் பார்ப்போம்.



Friday, November 7, 2014

தேவாரம் - அவை ஒன்றும் இல்லையாம்

தேவாரம் - அவை ஒன்றும் இல்லையாம் 


சமண சமயத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தார் திருநாவுக்கரசர். அதனால் கோபம் கொண்ட சமணர்கள் திருநாவுக்கரசருக்கு மிகுந்த தொல்லை கொண்டுத்தனர். அரசனிடம் சொல்லி அவரை ஒரு அறையில் இட்டு, அந்த அறையில் நிறைய விறகுகளைப் போட்டு தீ மூட்டச் செய்தனர். தீயில் வெந்து மாளட்டும் என்று.

"விண் வரை அடுக்கிய விறகின் சூடான அழல் ஆனது உண்பதற்கு புகுந்தால் அந்த விறகு ஒன்றுக்கும் ஆகாது. பண்ணிய இந்த உலகில் நாம் பயின்ற பாவங்களை நம்முடன் இருந்து அறுப்பது நமச்சிவாய என்ற நாமமே"

பாடல்

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

சீர் பிரித்த பின்

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ் அழல் 
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் 
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை 
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே 

பொருள்


விண்ணுற = விண் வரை

அடுக்கிய  = அடுக்கி வைக்கப்பட்ட

விறகின்  = விறகின்

வெவ் அழல் = சூடான தீ

உண்ணிய புகில் = உண்பதற்கு புகுந்தால்

அவை ஒன்றும் இல்லையாம் = அந்த விறகுகள் ஒன்றும் இல்லாமல் (எரிந்து) போகும்


பண்ணிய உலகினில் = செய்யப்பட்ட உலகில்

பயின்ற பாவத்தை  = பயின்ற பாவத்தை

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே = அருகில் இருந்து அறுப்பது நமச்சிவாயவே

இது மேலோட்டமான பொருள்.

சொல்வது நாவுக்கு அரசர்.

ஆழ்ந்து சிந்தித்தால் மேலும் பலவற்றை நாம் உணர முடியும்.


எவ்வளவு பாவங்களை செய்கிறோம். நாம் செய்திருக்கிற பாவங்களுக்கு அளவு உண்டா.

இந்த ஒரு பிறவி மட்டும் அல்ல...முன் எத்தனையோ பிறவிகளில் எவ்வளவோ  பாவங்கள் செய்து வந்திருக்கிறோம்.

அவற்றை எல்லாம் அடுக்கி வைத்தால் அது வானம் வரை உயர்ந்து நிற்கும்.

இந்த பாவங்களை எப்படிப் போக்குவது. அனுபவித்துதான் தீர்க்க வேண்டும் என்றால், அனுபவிக்கும் நேரத்தில் இன்னும் பல பாவங்களை நாம் செய்து விடுவோம்.

இந்த பாவங்களை எல்லாம் ஒரேயடியாக எப்படி போக்குவது.

விறகுகள் எவ்வளவு இருந்தாலும், ஒரு சிறு நெருப்பு பத்திக் கொண்டால் அது அத்தனையும் கருகி சாம்பலாகிப் போகும். அது போல , இந்த சேர்த்து வைத்த அத்தனை   பாவங்களையும் எரிக்கும் ஒரு நெருப்பு "நமச்சிவாய " என்ற ஐந்தெழுத்து .

விறகுகள் இருந்த இடம் தெரியாமல் போவது போல நம் பாவங்களும் மறைந்து போகும்.

சரி, பாவம் என்றால் என்ன ? எது பாவம் ?

இது இயற்கை இல்லையோ அது பாவம்.

பாவங்களை நாம் "பயில்கிறோம்". அதாவது அது இயற்கையாக வராது. நாம் பாவம் செய்ய படிக்கிறோம்.

"பயின்ற பாவத்தை" என்றார்.

பாவத்தை எங்கிருந்து படிக்கிறோம் ? - தீயவர்களிடம் இருந்து, அவர்களின் சகவாசத்தால், அவர்கள் சொல்வதை கேட்பதால், அவர்கள் எழுதியவற்றை படிப்பதால்  நாம் பாவத்தை பயில்கிறோம்.


 பாவம் நம்மை இந்த உலகோடு கட்டிப் போடுகிறது.

நல்ல வலிமையான சங்கிலி அது. அந்த சங்கிலியை அறுப்பது நமச்சிவாய என்ற மந்திரம்.


நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.


நண்ணி என்றால் அருகில் இருந்து. 

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


என்பது மணிவாசகர் வாக்கு. 



புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே


என்பது அபிராமி பட்டர் வாக்கு. 

நம் கூடவே இருந்து அந்த அறம் பாவம் என்ற அரும் கையிற்றை அறுப்பது அந்த மந்திரம். 



இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 1

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 1


இராமாயணத்தில் பெண் பாத்திரங்கள் மிக ஆளுமை உடையவர்களாக இருக்கிறார்கள்.

ஓரிரவில் ஒரு சாம்ராஜ்யத்தின் தலை எழுத்தை மாற்றி எழுதிய கூனியாகட்டும் ,

இரண்டே வரத்தால் ஒரு சக்ரவர்த்தியைக் கொன்று, புது சக்ரவர்த்தியை கானகம் அனுப்பி, யாரும் நினைக்காத ஒருவனை சக்ர்வர்த்தியாக்கிய கைகேயியாகட்டும்,

முக்கோடி வாழ் நாள் கொண்ட இராவணனை அற்பாயுளில் முடித்த சூர்பனகையாகட்டும்,

எல்லோரும் மிக மிக வலிமையான ஆளுமை உடையவர்களாகவே இருந்திருக்கிறார்கள். 

வாலியின் மனைவி தாரை.

ஒரு பெண்ணின் ஆளுமையை தாரையின் பாத்திரத்தில் வடிக்கிறான் கம்பன்.

தாரை அரசாங்க விஷயங்களில் மிக மிக ஆழமாக ஈடு பட்டிருக்கிறாள். இன்னும் சொல்லப் போனால் ஒற்றரர்கள் தாரையிடம் பல விஷயங்களை சொல்லி இருக்க வேண்டும். நாட்டில் நடப்பவைகளைப் பற்றி வாலிக்குத் தெரியாத விஷயங்கள் கூட  தாரைக்கு தெரிந்திருக்கிறது.

வாலியை சுக்ரீவன் போருக்கு அழைக்கிறான்.

இத்தனை நாள் பயந்து ஒளிந்து இருந்தவன் எப்படி இன்று துணிவோடு சண்டைக்கு வருகிறான் என்று சிந்திக்கத் தவறி விடுகிறான் வாலி.

வலி(மை) வாலியைத் தடுமாற வைத்தது.

தாரை தடுத்துச் சொல்கிறாள்.

சுக்ரீவனோடு போருக்குப் போகிறேன் என்று வாலி சொல்லக் கேட்ட தாரை சொல்லுவாள் "அரசனே, சுக்ரீவனுக்கு உயிரினும் இனிய நட்பாக இராமன் என்பவன் கிடைத்திருக்கிறான்; அவன் உன் உயிரை எடுக்க உறுதி கூறி இருக்கிறான். இதை நான் நம் மேல் தூய அன்புள்ளவர்கள் சொல்லக் கேட்டேன் "

பாடல்


அன்னது கேட்டவள்,
      'அரச!' ''ஆயவற்கு
இன் உயிர் நட்பு
     அமைந்து இராமன் என்பவன்,
உன் உயிர் கோடலுக்கு
      உடன் வந்தான்'' எனத்
துன்னிய அன்பினர்
      சொல்லினார்' என்றாள்.

பொருள்

அன்னது கேட்டவள் = அதைக் கேட்டவள்

'அரச!'  = அரசனே

ஆயவற்கு = அவர்களுக்கு

இன் உயிர் நட்பு = உயிரினும் இனிய நட்பாக 

அமைந்து = அமைந்த

இராமன் என்பவன் = இராமன் என்பவன்

உன் உயிர் கோடலுக்கு = உன் உயிரை எடுப்பதற்கு

உடன் வந்தான்''  = உடன் வந்தான்

எனத் = என

துன்னிய அன்பினர் = நமக்கு நெருங்கிய அன்புள்ளவர்கள்

சொல்லினார்' என்றாள்.= சொல்லினார் என்றாள்

சுக்ரீவனுக்கும் இராமனுக்கும் இடையிலான நடப்பைப் பற்றி வாலிக்குத் தெரியவில்லை. தாரைக்குத் தெரிந்திருக்கிறது.

அது மட்டும் அல்ல, சொன்னது ஒரு ஆள் இல்லை. பல பேர் அவளிடம் சொல்லி இருக்கிறார்கள். "சொல்லினார்" என்றாள் .




Sunday, November 2, 2014

கம்ப இராமாயணம் - நன்றி மறவாமை என்றொரு அறம்

கம்ப இராமாயணம் - நன்றி மறவாமை என்றொரு அறம் 


இராமயணத்தை ஏதோ ஒரு கதையாகப் பார்க்கக் கூடாது.

கதை என்று பார்த்தால் அது ஒன்றும் பெரிய கதை இல்லை.

இராமாயணம், காலம் கடந்து நிற்கக் காரணம் அது சொல்லும் வாழ்கை அறங்கள் .

மனிதனை நல்வழிப் படுத்த அது சொல்லும் அறங்கள் .


கார் காலம் முடிந்து சீதையைத் தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு மட்டையாகி விட்டான். இலக்குவன் மிகுந்த சினத்தோடு வருகிறான். என்ன செய்வது என்று அறியாத வானரங்கள் அனுமனிடம் சென்று யோசனை கேட்டன.

அனுமன், அறிவில் சிறந்தவன், ஆதித்யனிடம் கல்வி பயின்றவன், சொல்லின் செல்வன் , உலகுக்கு அச்சாணி என்று இராமானால் பாராட்டப் பட்டவன்.

அப்பேற்பட்ட அனுமன், இந்த பிரச்சனையை தாரை தான் தீர்க்க முடியும் என்று அவர்களை  தாரையிடம் அழைத்துக் கொண்டு போகிறான்.


தாரை எல்லாவற்றையும் கேட்கிறாள்.

பின் சொல்கிறாள் ,

"என்ன செய்வது என்று இப்ப வந்து கேட்கிறீர்கள். யாரும் செய்ய முடியாத தீய காரியத்தை செய்துவிட்டு வந்து நிற்கிறீர்கள். நன்றி கொன்ற தீய செயலை செய்துவிட்டு அதை தீர்க்க என்ன வழி என்று திகைக்கிரீர்கள். நீங்கள் பிழைப்பது அரிது " என்கிறாள்

பாடல்

 எய்தி, 'மேல் செயத்தக்கது என்?' என்றலும்,
'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும், உதவி கொன்றீர்?' எனா,

பொருள்

 எய்தி, = இங்கு வது

 'மேல் செயத்தக்கது என்?' = மேலே என்ன செய்வது

 என்றலும் என்று அவர்கள் கேட்டதும்

'செய்திர், = செய்தீர்கள்

செய்தற்கு அரு நெடுந் தீயன =செய்ய முடியாத பெரிய தீய செயலை

நொய்தில் = அதுவும் மிக எளிதாக 

அன்னவை நீக்கவும் = அதனால் வரும் சிக்கலை நீக்கவும்

நோக்குதிர்;= வழி தேடுகிறீர்கள்

உய்திர் போலும்,= நீங்கள் பிழைத்த மாதிரிதான்

உதவி கொன்றீர்?' எனா, = நன்றி கொன்றீர்.

ஒருவர் செய்த நன்றியை ஒரு போதும் மறக்கக் கூடாது என்பதை ஒரு அறமாகவே  நம் முன்னவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நன்றி மறவாமையை  பெரிய அறமாகவும், நன்றி மறப்பதை மன்னிக்க முடியாத குற்றமாகவும்  நம் முன்னவர்கள் நினைத்தார்கள்.

சுக்ரீவன் மது அருந்தி மறந்திருந்தாலும், அதை வேலை மெனக்கிட்டு கம்பன் சொல்ல  வேண்டிய அவசியம் என்ன ? அதைச் சொல்லாவிட்டால் காப்பியத்தின்  போக்கில் , கதையின் போக்கில் ஒன்றும் குறைந்து விடாது.

இருந்தும், கம்பன் அதை குறிப்பாக சொல்கிறான் என்றால், கம்பன் ஏதோ முக்கியமான  ஒன்றை நமக்குச் சொல்ல நினைக்கிறான் என்று தான் அர்த்தம்.

அந்த முக்கியமான ஒன்று, நன்றி மறவாமை.