Wednesday, January 31, 2024

அறநெறிச்சாரம் - பிறவியை நீக்கும் திருவுடையார்

அறநெறிச்சாரம் - பிறவியை நீக்கும் திருவுடையார் 



அறத்தின் சாரத்தை பிழிந்து தரும் நூல் அறநெறிச்சாரம். 


அற நூல்களை படிக்க எங்கே நேரம் இருக்கிறது. நம் நேரத்தை நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ள பல முனைகளில் போட்டி நடக்கிறது. தொலைகாட்சி, செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள், முகநூல் என்று நேரம் போவதே தெரிவதில்லை. 


இது இன்று நடப்பது அல்ல. அன்றும் இதே நிலைதான். 


"அறம் அல்லதாவற்றைப் பற்றி பேசும் நூல்களும், காமம், ஆசை இவற்றை தூண்டி விடும் நூல்களும் நிறைந்து இருக்கும் இந்த உலகில், அறவுரையை கேட்கும் மனம் உள்ளவர்களே இந்த பிறவிப் பிணியில் இருந்து விடுபடுவார்கள்"


பாடல் 


மறவுரையும் காமத் துறையும் மயங்கிப்

பிறவுரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை

கேட்கும் கருத்துடை யோரே பிறவியை

நீக்கும் திருவுடை யார்


பொருள் 




மறவுரையும் = அறம் அல்லாதவற்றை சொல்லும் நூல்களும் 


காமத் துறையும் = காமம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் நூல்களும் 


மயங்கிப் = மயக்கம் கொள்ளச் செய்யும், அறிவை மழுங்கச் செய்யும் 


பிறவுரையும்  = மற்ற பிற நூல்களும் 


மல்கிய = பெருகிக் கிடக்கும் இந்த 


ஞாலத்து = உலகில் 


அறவுரை கேட்கும் = அற உரைகளை கேட்கும் 


கருத்துடை யோரே = அறிவு உள்ளவர்களே 


பிறவியை = பிறவிப் பிணியில் இருந்து 


நீக்கும் = விடுபடும் 


திருவுடை யார் = பெருமை உடையவர்கள் 



பிறவிப் பிணியில் இருந்து விடுபட வேண்டுமா?  கண்டதையும் படிக்காமல் அற நூல்களை தேடிச் சென்று படியுங்கள் என்கிறது இந்தப் பாடல். 



Monday, January 29, 2024

திருக்குறள் - தன்னுயிர் அஞ்சும் வினை

 திருக்குறள் - தன்னுயிர் அஞ்சும் வினை



தவறு ஏன் நிகழ்கிறது? அருள் இல்லாமையால்.


அது எப்படி ? அருளுக்கும், தவறுக்கும் என்ன சம்பந்தம்?


ஒருவன் தவறு செய்கிறான் என்றான் அதனால் யாருக்கோ பாதிப்பு இருக்கத்தானே செய்யும். 


திருட்டு, இலஞ்சம், கொலை, கொள்ளை, போன்ற எந்த குற்றம் செய்தாலும் அதனால் யாருக்கோ ஒரு பாதிப்பு இல்லாமல் இருக்காது. மற்ற உயிர்கள் மேல் எல்லாம் கருணை இருந்தால் எப்படி தவறு செய்ய முடியும். 


அன்பு கொண்ட ஒருவரை அடிக்க முடியுமா? அவர்கள் மேல் கடுமையான வார்த்தைகள் பேச முடியுமா? அவர்களிடம் இருந்து திருட முடியுமா? அவர்களை கொலை செய்ய முடியுமா?


அருள் இல்லாமைதான் அனைத்து குற்றங்களுக்கும் காரணம். 


அருள் இல்லாமை ஒரு காரணம் என்றால், அறிவீனம் இன்னொரு காரணம். 


தவறு செய்ய பயம் இல்லாத தன்மை. மாட்டிக் கொள்ள மாட்டோம் என்ற தைரியம். மாட்டினாலும் எப்படியாவது வெளியே வந்து விடலாம் என்ற நம்பிக்கை. யாருக்கும் தெரியாது என்ற நினைப்பு. 


யாருக்குத் தெரியாவிட்டாலும், மனதுக்குத் தெரியும். இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் தண்டனை கிடைத்தே தீரும் என்ற பயம் இருந்தால் குற்றம் செய்யத் தோன்றுமா?  


அருள் இருந்தால் குற்றம் செய்ய முடியாது. குற்றம் செய்யாவிட்டால் தண்டனை வருமோ என்ற பயம் இருக்காது. 


எனவே பயம் இல்லாமல் வாழ வேண்டுமா? அருள் மனதில் நிரம்பி இருக்க வேண்டும். 


பாடல் 



மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப

தன்னுயிர் அஞ்சும் வினை


பொருள் 


மன்னுயிர் = நிலைத்து வாழும் உயிர்களை 


ஓம்பி = போற்றி 


அருளாள்வாற்கு = அவற்றின் மேல் அன்பு செய்பவர்களுக்கு 


இல்என்ப = இல்லை என்று அறிவுடையவர்கள் சொல்லுவார்கள் 


தன்னுயிர் = அவர்களுடைய உயிர் 


அஞ்சும் வினை = பயப்படும் செயல் 


மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல். உடல் அழியும். உயிர் நிலைத்து நிற்கும். எனவே "மன்னுயிர்" என்றார். 


உயிர்கள் அருள் செய்பவர்கள் அவ்வுயிர்களுக்கு துன்பம் செய்ய மாட்டார்கள். எனவே அவர்களுக்கு துன்பமும் வராது. துன்பம் வந்து விடுமோ என்ற அச்சம் தேவை இல்லை. 


இதில் இருந்து என்ன தெரிகிறது. எப்போதெல்லாம் நமக்கு துன்பம் வருகிறதோ, அப்போதெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டும் மனதில் அருள் இல்லாமல் யாருக்கோ தீங்கு செய்து இருக்கிறோம் என்று. மேலும், இனிமேல் துன்பம் வேண்டாம் என்றால் இப்போது இருந்தே உயிர்கள் மேல் அன்பு செலுத்த தொடங்க வேண்டும். 


"தன்னுயிர் அஞ்சும் வினை " என்றார். தன் உடல் அஞ்சும் வினை என்று சொல்லவில்லை. காரணம், உடல் அழிந்து விடும். இப்போது தவறு செய்தால், இந்த உயிர் மறு பிறவி எடுத்து அங்கு வருந்தும். அப்போது தெரியாது...நமக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது. என்றோ செய்த வினை, இப்போது வருகிறது. எனவே, இப்போது அருள் செய்து வாழ்ந்தால் இனி வரும் பிறவிகளிலும் துன்பம் வராது. மகிழ்ச்சியாக இருக்கலாம். 


அப்புறம் உங்க இஷ்டம்.. 


Friday, January 26, 2024

கம்ப இராமாயணம் - சூர்பனகை - மானுடவர்க்கு ஆற்றாது

கம்ப இராமாயணம் -  சூர்பனகை - மானுடவர்க்கு ஆற்றாது


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் துண்டிக்கப்பட்ட சூர்பனகை தன் அண்ணனான இராவணனை நினைத்து அழுகிறாள் ....


"இராவணா, நீ வாயு பகவானையும், அக்னி பகவானையும், கொடுமையான எமனையும், ஆகாயத்தையும், நவ கிரகங்களையும், ஆட்டிப் படைத்தாய். ஆனால், இன்று இந்த இரண்டு மானிடர்களுக்கு பயந்து சிவன் கொடுத்த வாளினையும் மறந்து பயந்து நின்று விட்டாயா?"


பாடல் 


 'காற்றினையும், புனலினையும், கனலினையும்,

     கடுங் காலக்

கூற்றினையும், விண்ணினையும், கோளினையும்,

     பணி கொண்டற்கு

ஆற்றினை நீ; ஈண்டு, இருவர்

     மானுடவர்க்கு ஆற்றாது

மாற்றினையோ, உன் வலத்தை? சிவன்

     தடக்கை வாள் கொண்டாய்!


பொருள் 


காற்றினையும் = காற்றின் கடவுளையும் (வாயு பகவான்)  

புனலினையும் = நீரின் கடவுளையும் (வருண பகவானையும்) 

கனலினையும் = தீயின் கடவுளையும் )அக்னி பகவானையும்) 

கடுங் காலக் கூற்றினையும் = கடுமையான கூற்றுவனையும் 


விண்ணினையும் = விண்ணுலகையும் 


கோளினையும் = ஒன்பது கிரகங்களையும் 


பணி கொண்டற்கு = உனக்கு வேலை செய்யும் படி 


ஆற்றினை நீ = வழி செய்தாய் நீ 


ஈண்டு = இன்று 


இருவர் = இரண்டு 


மானுடவர்க்கு  = மனிதர்களுக்கு 


ஆற்றாது = அடக்க முடியாமல் 


மாற்றினையோ = மாற்றி வைத்து விட்டாயா? 


உன் வலத்தை?  = உன் பலத்தை 


சிவன் = சிவனின் 


தடக்கை வாள் கொண்டாய்! - பெருமை கொண்ட வாளினைக் கொண்டாய் 


அவ்வளவு வலிமை இருந்தது உன்னிடம். சிவன் மேல் பக்தி கொண்டவன். சிவனிடம் தவம் செய்து வாளினைப் பெற்றவன். அப்பேற்பட்ட நீ இந்த மானிடற்கு பயந்து விட்டாயா?



Thursday, January 25, 2024

திருக்குறள் - இன்னா உலகம்

 திருக்குறள் - இன்னா உலகம் 


நாம் வாழும் இந்த உலகில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடக்கின்றன. 


அப்படி அல்லாமல், இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகமோ, அல்லது துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகமோ இருக்க முடியுமா?


முடியும் என்று நம்பியது நம் இலக்கியங்கள். 


இன்பம் மட்டுமே உள்ள உலகத்திற்கு சொர்க்கம் என்று பெயர். 


துன்பம் மட்டுமே உள்ள உலகிற்கு நரகம் என்று பெயர். 


மற்றபடி இரம்பை , திலோத்தமை, எண்ணெய் கொப்பரை எல்லாம் கொஞ்சம் கற்பனையாக இருக்கலாம். 


எல்லோருக்கும் சொர்கத்திற்கு போக வேண்டும் என்று விருப்பம் இருக்கும். யாருக்குமே நரகத்துக்கு போக ஆசை இருக்காது. 


அதை எப்படி நிறைவேற்றுவது? நரகத்துக்குப் போகாமல் எப்படி தப்புவது?


வள்ளுவர் வழி சொல்கிறார்...


"உன் மனதில் அருள் சேர்ந்து இருக்குமானால், நீ நரகுக்கு போக மாட்டாய்"


என்று. 


பாடல் 



அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்


பொருள் 


அருள்சேர்ந்த = அருள் நிறைந்த 


நெஞ்சினார்க்கு = நெஞ்சம் உடையவர்களுக்கு 


இல்லை = ஒருபோதும் நிகழாது 


இருள்சேர்ந்த = எப்போதும் இருள் சூழ்ந்து இருக்கும் 


இன்னா உலகம் = இனிமை இல்லாத உலகிற்குள் 


புகல் = செல்லுதல் 


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி வந்தால், நரகம் போக வேண்டி வராது என்கிறார். 


அருள் இல்லை என்றால், நரகில் ஒரு இடம் உறுதி. 


                                                                                    


Wednesday, January 24, 2024

கார் நாற்பது - இன்னே வருவர் நமர்

 கார் நாற்பது - இன்னே வருவர் நமர் 


பருவ நிலைகள் நம் மனதைப்  பாதிக்கின்றன. 


மழைக் காலம் 


அவ்வப்போது மழை பெய்து கொண்டே இருக்கிறது. வானம் எப்போதும் மேகம் சூழ்ந்து இருண்டு இருக்கிறது. மரங்களும் செடிகளும் துளிர் விட்டு, மழையில் குளித்து பளிச்சென்று இருக்கின்றன. சில மரங்களிலும், செடிகளிலும் புது மொட்டுகள் மலரலாமா வேண்டாமா என்று மெல்ல எட்டிப் பார்க்கின்றன. வண்டுகள் ரீங்காரம் இடுகின்றன. காற்றில் ஈர மணம். 


காதலனை பிரிந்து இருக்கிறாள். அவன் மட்டும் இப்போது கூட இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து ஏங்குகிறாள். 


தூரத்தில் மின்னல் வெட்டுகிறது. 


அந்த மின்னல் அவன் வர இருக்கிறான் என்ற செய்தியை சொல்லவதாக அவளுக்குப் படுகிறது. அவன் அனுப்பிய தூது என்று நினைக்கிறாள். 


பாடல் 



கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த

நெடுங்காடு நேர்சினை யீனக் கொடுங்குழாய்

இன்னே வருவர் நமரென் றெழில்வானம்

மின்னு மவர்தூ துரைத்து


பொருள் 


கடுங்கதிர் = கடுமையான வெப்பம் 

 

நல்கூரக் = நல்குரவு என்றால் வறுமை. கோடைக் காலம் வறுமை அடைந்தது என்றால், வெயில் குறைந்து விட்டது என்று அர்த்தம். கோடைக் காலம் போய் விட்டது. 


கார் = கார் காலம், அதாவது மழைக் காலம் 


செல்வ மெய்த = மேலும் மேலும் வலுப்பெற 


நெடுங்காடு = பெரிய காடு 


நேர் = நேர்த்தியான 


சினை யீனக் = சினை என்றால் உறுப்பு. இங்கே காட்டில் உள்ள மரம், செடி, கொடிகளின் உறுப்பான மலர்கள். மலர்கள் மொட்டு விட்டு பூக்கத் தொடங்கி விட்டன. 


கொடுங்குழாய் = வளைந்த காதணியை அணிந்தவளே 


இன்னே வருவர் = இப்போதே வருவார்  


 நமரென் றெழில்வானம் = நமர் + என்று + எழில் + வானம் = நம் துணைவர் இப்போதே வருவார் என்று அழகான வானம் 


மின்னு மவர்தூ துரைத்து = மின்னும் அவர் தூது உரைத்து = மின்னல் மூலம் அவர் சொல்லி அனுப்பிய தூதினை என்னிடம் சொல்லி 


இப்படி ஒரு நாற்பது பாட்டு இருக்கிறது. அத்தனையும் காதலை, பிரிவை, இயற்கையை ஒட்டிய வாழ்வை சித்தரிக்கும் பாடல்கள். 


Tuesday, January 23, 2024

திருக்குறள் - அருளுடைமை - அஃதே துணை

 திருக்குறள் - அருளுடைமை - அஃதே துணை

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_23.html


உலகில் எத்தனையோ சமயங்கள் இருக்கின்றன. அது தவிர வேறு பல மார்கங்களும் இருக்கின்றன. அவை ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு நிற்கின்றன. எது சரி, எது தவறு என்று சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 

என் சமயம்தான் பெரியது, என் கடவுள்தான் உயர்ந்தவர் என்று சண்டை போட்டுத் திரிகிறார்கள். 


அவர்கள் மேல் தவறு சொல்ல முடியாது. மதங்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட கருத்துகளைச் சொன்னால், பாமர மனிதன் என்ன செய்வான்?


மதங்கள் எவ்வளவுதான் வேறுபட்டாலும், ஒரு விடயத்தில் அனைத்து மதங்களும் ஒன்று படுகின்றன. அது என்ன விடயம் என்றால் 


"உயிர்களிடத்து அன்பு செய்"


என்ற ஒரு கட்டளையில் எல்லா மதங்களும் ஒரு புள்ளியில் நிற்கின்றன. 


அன்பு, கருணை, அருள் என்ற விடயத்தில் எல்லா மார்கங்களும் ஒன்றாக நிற்கின்றன. 


நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உயிர்களிடத்து அன்பு செய் என்று உங்கள் மதமும் போதிக்கும்.  அதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. 


பாடல் 

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

தேரினும் அஃதே துணை


பொருள் 


நல்லாற்றான் = நல்ல வழிகளில் 


நாடி = தேர்ந்து எடுத்து 


அருளாள்க = அருள் செய்க 


பல்லாற்றான் = பலவழிகளில் 


தேரினும் = ஆராய்ந்து பார்த்த பின்னும் 


அஃதே துணை = அதுதான் உயிருக்கு சிறந்த துணை 


இந்த குறளுக்கு பரிமேலழகர் செய்திருக்கும் நுட்பமான உரையை பார்ப்போம். அவர் மட்டும் இல்லை என்றால் நமக்கு இதெல்லாம் புரிந்தே இருக்காது. 


நல்லாற்றான் = நல்ல வழிகளில். 


அது என்ன நல்ல வழி? 


நல்ல வழி என்பதை இரு கூறாக பிரிக்கிறார் பரிமேலழகர்.


அளவையின் மூலம் அறிந்து கொள்வது. பொருத்தம் அறிந்து செய்வது என்று. 


அளவை என்றால் என்ன?


எது ஒன்றும் சரியா தவறா என்று எப்படி அரிவது? அளந்து பார்க்க வேண்டும். ஒரு அளவுகோல் வேண்டும் அல்லவா? அது போல் நாம் தேர்ந்து எடுத்த பாதை சரியா அல்லது தவறா என்று எப்படி அறிந்து கொள்வது?


அதற்கு மூன்றுவிதமான அளவைகள் இருக்கின்றன. அவற்றை பிரமாணங்கள் என்பார்கள்.  


காட்சி பிரமாணம் (காண்டலளவை )

அனுமானப் பிரமாணம்  (கருத்தலளைவை)

ஆகமப் பிரமாணம் என்று  (சப்தலளைவை - ஞானிகள், பெரியவர்கள் சொல்லக் கேட்பது) 


தானே கண்டு உணர்வது. அருள் உடைய பெரியவர்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்வு சிறந்து இருக்கிறதா நேரடியாக பார்த்து அறிவது. 


அடுத்தது யூகித்து அறிவது. வள்ளலாரை நாம் பார்த்தது இல்லை. ஆனால் அவர் உயிர்கள் மேல் அருள் கொண்டு இருந்தார் என்று எப்படி அறிகிறோம்? அவரது பாடல்கள் மூலம் அவர் ஒரு  அருளாளர் என்று அனுமானிக்கிறோம். 


மூன்றாவது, பெரியவர்கள் சொல்லக் கேட்பது. ஞானிகள், தவ சீலர்கள் சொல்லக் கேட்பது. 


இந்த மூன்று வழிகளால் ஆராய்ந்து பின், அது பொருந்துமா, பொருந்தாதா என்று அறிந்து செய்வதைத்தான் "நல்லாற்றான்" என்கிறார். 


இப்படி ஆழமாக ஆராய்ந்த பின்னும், எல்லா மதங்களும் வேறு பல விடயங்களில் வேறு பட்டாலும், உயிர்கள் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்ற ஒரு கொள்கையில் எல்லோரும் ஒன்றாக நிற்கிறார்கள் 


சரி, அது என்ன "அஃதே துணை " என்றால் என்ன?


உயிர்கள் மேல் அன்பு செலுத்துவது இம்மைக்கும், மறுமைக்கு இன்பம் தருவதால், அதை துணை என்றார். 


அன்பு விரிந்து அருளாகட்டும் !



Sunday, January 21, 2024

தனிப்பாடல் - பலபட்டடைச் செக்கநாதப் புலவர்

 

தனிப்பாடல் - பலபட்டடைச் செக்கநாதப் புலவர்

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_21.html



தமிழில் பல புலவர்கள் பாடிய பாடல்கள், ஒரு தனிப்பட்ட நூலாக அல்லாமல் தனிப்பாடல் திரட்டாக இருக்கின்றன. மிகவும் சுவையான, எளிமையான பாடல்கள். 


அதில் பலபட்டடைச் செக்கநாதப் புலவர் என்பவர் என்பவர் பாடிய ஒரு அழகான பாடல். 


ஒரு பெரிய ஆளிடம் காரியம் ஆக வேண்டும் என்றால், அந்த வீட்டு அம்மாவைப் பிடித்து, "ஐயாகிட்ட நீங்க தான் எப்படியாவது எடுத்துச் சொல்லி, இதை நடத்திக் கொடுக்கணும்" என்று சிலர் வீட்டுத் தலைவி மூலம் காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பார்கள். 


அவ்வளவு ஏன், பையன் கொஞ்சம் பணம் வேண்டும் என்றால், அம்மாவிடம் சொல்லி,  "அப்பா கிட்ட சொல்லி எனக்கு பணம் வாங்கித்தா" என்று கேட்பது இல்லையா? 


அம்மாவுக்கு இளகிய மனது. அப்பாவுக்கு கொஞ்சம் கரடு முரடான மனது. 


சொக்கநாத புலவர் பார்வதியிடம் கூறுகிறார்....


"முத்துப் பந்தலின் கீழ் மென்மையான பஞ்சனை மேல் உன் அருகில் வந்து "எனக்கு ஒரு முத்தம் தா " என்று உன் கணவன் உன்னைக் கொஞ்சும் போது, நீ அவரிடம் என் குறைகளை மெல்ல மெல்ல எடுத்துச் சொல்லேன். சொன்னால் உன் வாய் முத்து உதிர்ந்து விடுமா ?"


பாடல் 

 


"ஆய்முத்துப் பந்தரின் மெல்லணை மீது,

     உன் அருகு இருந்து,

"நீ முத்தம் தா" என்று அவர் கொஞ்சும்

     வேளையில், நித்தம் நித்தம்

வேய்முத்தரோடு என் குறைகள் எல்லாம்

     மெல்ல மெல்லச் சொன்னால்,

வாய்முத்தம் சிந்திவிடுமோ?

     நெல்வேலி வடிவன்னையே."



பொருள் 

"ஆய்முத்துப்  = ஆராய்ந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் கோர்த்த 


பந்தரின் = பந்தலின் கீழ் 


மெல்லணை = மெல்லிய படுக்கை 


மீது  = மேல் 


உன் அருகு இருந்து = உனது அருகில் வந்து 


"நீ முத்தம் தா"  என்று = நீ முத்தம் தா  என்று 


 அவர் கொஞ்சும் = அவர் உன்னைக் கொஞ்சும் போது 


வேளையில் = அந்த வேளையில் 


நித்தம் நித்தம் = தினமும் 


வேய்முத்தரோடு = மூங்கில் முத்து போன்ற சிவனிடம் 


என் குறைகள் எல்லாம் = என்னுடைய குறைகள் எல்லாம் 


மெல்ல மெல்லச் சொன்னால் = மெல்ல மெல்ல சொன்னால் 


வாய்முத்தம் = உன் வாயில் உள்ள முத்தம் 


சிந்திவிடுமோ? = சிந்தி விடுமோ ?



     நெல்வேலி வடிவன்னையே."


Saturday, January 20, 2024

திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம்

 திருக்குறள் - அருளுடைமை - செல்வத்துள் செல்வம் 


https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_20.html


திருக்குறள் என்ற நூலை மூன்று பெரும் பிரிவுகளாக வள்ளுவர் பிரிக்கிறார். 


அறம்

பொருள் 

இன்பம் 


என்று. இந்த மூன்றுக்கும் பால் என்று பெயர். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால். 


அறத்துப் பாலை மூன்று  பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறார்.  அந்தப் பிரிவுகளுக்கு இயல் என்று பெயர். 


பாயிர இயல், இல்லறவியல், துறவறவியல் என அப்பிரிவுகள் அழைக்கப்படும். 


நாம் பாயிரம், இல்லறம் பற்றி சிந்தித்து விட்டோம். 


இனி துறவுக்குள் நுழைகிறோம்.


துறவறம் என்பதை இரண்டாகப் பிரிக்கிறார்கள். விரதம், ஞானம் என்று. 


இதில், விரதத்தில் பலவிதமான விரதங்கள் உண்டு என்றாலும் அதில் சிறப்பான சிலவற்றை சொல்ல ஆரம்பிக்கிறார். 


அதில் முதலாவது அருளுடைமை. 


அருளுடைமை என்றால் என்ன?


நமக்கு தொடர்பு உள்ளவர்கள் மேல் நாம் காட்டும் கருணை, பரிவு அன்பு எனப்படும். என் மனைவி/கணவன், பிள்ளைகள், உடன் பிறந்தோர் இதில் அடங்குவர்.


தொடர்பு இல்லாதவர்கள் மேல் காட்டும் கருணை அருள் எனப்படும். என் பையனுக்கு ஒரு மிட்டாய் வாங்கித் தருகிறேன். அதை ருசித்து அவன் மகிழ்கிறான். அதைப் பார்த்து நான் மகிழ்கிறேன். அப்போது அந்தக் கடை வாசலில் ஒரு ஏழைப் பையன் ஏக்கத்தோடு என் மகன் மிட்டாய் சாப்பிடுவதை பார்க்கிறான். அந்த ஏழைப் பையன் மேல் பரிதாபம் கொண்டு அவனுக்கும் ஒரு மிட்டாய் வாங்கித்தந்தால் அது அருள். 


என் மகன் மேல் நான் செலுத்துவது அன்பு. 

அந்த ஏழைப் பையன் மேல் நான் செலுத்துவது அருள். 


அதில் முதல் குறள்

பாடல் 


அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள


பொருள் 


அருட்செல்வம் = அருளாகிய செல்வம் 


செல்வத்துள் செல்வம் = செல்வத்துள் எல்லாம் பெரிய செல்வம் 


பொருட்செல்வம் = பொருளாகிய செல்வம் 


பூரியார் கண்ணும் உள = இழிந்தவர் இடத்திலும் இருக்கும் 


மேலோட்டமாய் பார்த்தால் மிக எளிமையான, பெரிய ஆழ்ந்த அர்த்தம் இல்லாத குறள் போலத் தெரியும். 


வாருங்கள்,உள்ளே செல்வோம். 


பொருள் செல்வம் புரிகிறது. வீடு, மனை, நகை, கார், வங்கிக் கணக்குகள் என்று நாம் புரிந்து கொள்கிறோம். 


அது என்ன அருள் செல்வம்?  அருள் செய்யலாம். அது எப்படி செல்வமாக முடியும்?


செல்வம் என்றால் என்ன? ஏதோ ஒருவிதத்தில் நமக்கு இன்பம் தருவதைத்தானே நாம் செல்வம் என்போம். நம்மிடம் ஒரு கார் இருக்கிறது. எப்ப அதை எடுத்தாலும் ஏதாவது ஒரு கோளாறு. ஓடுவது கிடையாது, ரொம்ப சத்தம் வரும், பிரேக் பிடிக்காது என்று இருந்தால், அதை செல்வம் என்போமா? "இந்தச் சனியனை கட்டிக்கொண்டு ..." என்று சலிப்போம் அல்லவா?  செல்வம் என்றால் சுகம் தர வேண்டும். 


பொருள் செல்வத்தால் சுகம் வரும். ஆனால், சிக்கலும் வரும். பயம் வரும். சில சமயம் அது நம்மை விட்டுப் போய் விடலாம். 


ஆனால், அனைத்து உயிர்களையும் போற்றி, அவைகளுக்கு நன்மை தருவதால் வரும் இன்பம் இருக்கிறதே, சுகம் இருக்கிறதே, அது தான் அருளலால் வரும் செல்வம். அது இம்மைக்கு மட்டும் அல்ல, மறுமைக்கு நன்மை தருவது. வீடு பேற்றையும் தரும். எனவே, அருளை செல்வம் என்றார். 


சரி, அதை செல்வம் என்று ஏற்றுக் கொண்டாலும், மற்ற எல்லா செல்வத்தையும் விட, இதுதான் உயர்ந்த செல்வம் என்று எப்படி கூற முடியும்?


நம்மிடம் ஒரு விலை உயர்ந்த கார் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை நினைத்து நாம் பெருமைப் படுகிறோம். தெருவில் நம் வண்டியைப் பார்த்து மற்றவர்கள் வியப்பதை கண்டு உள்ளுக்குள் மகிழ்கிறோம். வீடு, கார், நகை எல்லாம் அப்படித்தான்.


ஆனால், அதே போல் கார் நிறைய பேரிடம் இருந்தால் என்ன ஆகும். நாம் சாதாரண ஆளாகி விடுவோம். அதில் ஒரு பெருமையும் இல்லை. பணமும் பொருளும் யார் வேண்டுமானாலும் சேர்த்து விடலாம். திருடன், அயோக்கியன் இடம் கூட பெரும் செல்வம் இருக்க வாய்ப்பு உண்டு. 


இந்த அருளாகிய செல்வம் இருக்கிறதே, அது எல்லோரிடமும் இருக்காது. 


அருள் செல்வம் பெற முதலில் அறிவு வேண்டும். மன மாசுகள் நீங்க வேண்டும், அன்பு நிறைய வேண்டும், அருள் பெருக வேண்டும்.  எளிதான காரியம் அல்ல. ஒருவனிடம் அருள் செல்வம் இருக்கிறது என்றால், அது மற்றவர்களால் எளிதாக அடைய முடியாத செல்வம். எனவே அது உயர்ந்த செல்வம். 


அது மட்டும் அல்ல, எவ்வளவு பொருள் சேர்த்தாலும், நாம் இறந்த பின் அதில் ஒரு குன்றுமணியைக் கூட கொண்டு செல்ல முடியாது. எல்லாவற்றையும் விட்டு விட்டுத்தான் செல்ல முடியும். 


ஆனால், அருள் செல்வம் இருக்கிறதே, அது மறுமைக்கும் பயன் தரும். 


எனவே அது உயர்ந்த செல்வம். 


மேலும் சிந்திப்போம். 




Friday, January 19, 2024

விவேக சிந்தாமணி - அறிந்தோம் அம்மம்மா!

விவேக சிந்தாமணி - அறிந்தோம் அம்மம்மா!

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_19.html


தெருவில் பிச்சைக் காரர்களை பார்த்து இருக்கிறோம். பசி. வறுமை. அழுக்குத் துணி. குளித்து எத்தனை நாளோ. இருக்க இடம் இல்லை. குளிர், வெயில் கொடுமைகள். போதாக்குறைக்கு தெருவில் சென்றால் நாய்கள் எல்லாம் அவர்களை பார்த்துக் குரைக்கும், கடிக்க வரும். எல்லார் முகத்தையும் பரிதாபமாக பார்த்து பிச்சை கேட்க வேண்டும். சிலர் போடுவார்கள், சிலர் முகம் சுளிப்பார்கள். ஒன்றும் செய்ய முடியாது. 


ஏன் சிலர் இப்படி இருக்கிறார்கள்? யாரும் பிச்சைக்கார்களாய் பிறப்பது இல்லை. பின் ஏன் இப்படி வருந்துகிறார்கள். 


விவேக சிந்தாமணி சொல்கிறது. 


ஒரு காலத்தில், முன் பிறவிகளில், அன்பான மனைவி பால் சோறை (அன்னத்தை) பொன் கிண்ணத்தில் கொண்டு வந்து அன்போடு ஊட்டிய போது, அதை சுவைத்து உண்டு கொண்டு, பசி என்று வந்தவர்களுக்கு ஒன்று ஈயாமல் விரட்டி அடித்தவர்கள் இருக்கிறார்களே, அவர்கள்தான் இந்தப் பிறவியில்  பிச்சைக்கார்களாய்  பிறந்து துன்பப் படுகிறர்கள் 


என்கிறது. 


பாடல் 



 மண்ணார் சட்டி கரத்து ஏந்தி

     மறநாய் கௌவும் காலினராய்

அண்ணாந்து ஏங்கி இருப்பாரை

     அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா!

பண்ணார் மொழியார் பால் அடிசில்

     பைம்பொன் கலத்தில் பரிந்து ஊட்ட

உண்ணா நின்ற போது ஒருவர்க்கு

     உதவா மாந்தர் இவர்தாமே!


பொருள் 


மண்ணார் = மண்ணால் செய்த 


சட்டி = சட்டியை 


கரத்து ஏந்தி = கையில் ஏந்தி 


மறநாய் = கொடூரமான நாய்கள் 


கௌவும் = கவ்வும் 


காலினராய் = கால்களை உடையவர்களாய் 


அண்ணாந்து = தெருவில் அமர்ந்து போவோர் வருவோர் முகங்களை அண்ணாந்து பார்த்து 


 ஏங்கி இருப்பாரை = யார் நமக்கு பிச்சை போடுவார்கள் என்று ஏங்கி இருப்பவர்களை பற்றி 


அறிந்தோம் அறிந்தோம் அம்மம்மா! = அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும், தெரியும் 


பண்ணார் = இசை போன்ற இனிய 


மொழியார் = குரலை உடைய மனைவி 


பால் அடிசில் = பால் சோறை 


பைம்பொன் = சிறந்த தங்கப்  


கலத்தில் = பாத்திரத்தில் வைத்து  


பரிந்து ஊட்ட = பாசத்தோடு ஊட்டும் போது 


உண்ணா நின்ற போது = அவற்றை உண்டு கொண்டு இருந்த போது 


ஒருவர்க்கு = பசி என்று வந்த ஏழைக்கு 


உதவா மாந்தர் இவர்தாமே! = உதவாத மனிதர்கள்தான் இந்தப் பிச்சைக்காரர்கள் 


விவேக சிந்தாமணி சொல்லும் கருத்து ஒருபுறம் இருக்கட்டும். 


இனி வரும் நாட்களில் பிச்சைக்கார்களே இருக்க மாட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. 


எந்த ஊரில் மனைவிகள் இனிமையாக பேசிக் கொண்டு, தங்கப் பாத்திரத்தில், பால் சோறை அன்போடு கணவனுக்கு ஊட்டுகிறார்கள். அது அந்தக் காலம். :)


நகைச்சுவையை தவிர்த்து, இன்றைய சூழ்நிலையோடு ஓட்டிப் பார்த்தால், இவ்வளவு செல்வம் இருந்தும், மற்றவர்களுக்கு ஒரு உதவி செய்யாமல் இருப்பவர்கள் மறு பிறவியில் துன்பப்படுவார்கள் என்று பயம் காட்டுகிறது விவேக சிந்தாமணி. 



Thursday, January 18, 2024

தேவாரம் - சொல்லுகேன் கேள்

 தேவாரம் -  சொல்லுகேன் கேள்  

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_18.html

நமக்கு என்னவெல்லாம் தேவை ?  


நிறைய செல்வம், நல்ல உடல் ஆரோக்கியம், கல்வி, புகழ், பெருமை, சுற்றம், நட்பு..என்று பட்டியல் போடலாம். 


நாவுக்கரசர் சொல்கிறார், இதெல்லாம் பெரிய விடயம் அல்ல. அடைய வேண்டிய பெரிய விடயங்கள் என்னென்ன தெரியுமா?


நாம் செய்த பாவங்கள் நம்மை பற்றி நிற்கின்றன. அவை நம்மை விட்டு விலக வேண்டும். இல்லை என்றால் பாவத்தின் பலனாக துன்பம் வரும், பிறவி வரும்.


வீடு பேறு அடைய வேண்டும். திரும்பி திரும்பி பிறந்து இறந்து பிறந்து இறந்து ...இந்த சுழலில் இருந்து விடுபட வேண்டும். 


பழைய வினைகள் விட்டால் மட்டும் போதாது. புது வினைகள் எதுவும் வராமலும் இருக்க வேண்டும்.


இவை எல்லாம் முக்கியமா இல்லையா?


முக்கியம் என்றால், இவற்றை எப்படி அடைவது? அதையும் அவரே சொல்கிறார். 


"சிவனே..நீ தான் எனக்குத் துணை, உன்னைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை நான் நினைக்க மாட்டேன், புனிதமானவனே, ஆரூரா" 


 என்று போற்றுங்கள். மேற்சொன்ன எல்லாம் கிடைக்கும் என்கிறார். 


பாடல் 


பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்,

         பரகதிக்குச் செல்வதுஒரு பரிசு வேண்டில்,

சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்,

         சொல்லுகேன் கேள்,நெஞ்சே, துஞ்சா வண்ணம்,

உற்றவரும் உறுதுணையும் நீயே என்றும்,

         உன்னைஅல்லால் ஒருதெய்வம் உள்கேன் என்றும்,

புற்றுஅரவக் கச்சுஆர்த்த புனிதா என்றும்,

         பொழில்ஆரூ ராஎன்றே போற்றா நில்லே.


பொருள் 


பற்றிநின்ற பாவங்கள் = நம்மை விடாமல் பற்றிக் கொண்டு நிற்கும் பாவங்கள் 


பாற்ற வேண்டில் = பாற்றுதல் என்றால் விலகுதல். அந்தப் பாவங்கள் விலக வேண்டுமானால். 


பரகதிக்குச் = பரம் என்றால் மேலான, உயர்ந்த. பரம்பரை. பரசிவம். பரமாத்மா. கதி என்றால் வழி. பரகதி, உயர்ந்த வழி. 


செல்வதுஒரு பரிசு வேண்டில் = உயர்ந்த வழியில் செல்லும் வாய்ப்பு வேண்டும் என்றால் 


சுற்றிநின்ற சூழ்வினைகள் = நம்மைச் சுற்றி நிற்கும் வினைகள், எப்போது நம்மை பற்றலாம் என்று காத்துக் கிடக்கும் வினைகள் 

 


வீழ்க்க வேண்டில் = நம்மைப் பற்றாமல் இருக்க வேண்டும் என்றால் 


சொல்லுகேன் கேள் நெஞ்சே = என் மனமே, நான் சொல்வதைக் கேள் 


துஞ்சா வண்ணம் = துஞ்சுதல் என்றால் உறங்குதல். இங்கே மறக்காமல், ஒருபோதும் விடாமால் என்று பொருள் கொள்ளலாம். 


உற்றவரும் = நமக்கு வேண்டியவர்களும், துணையானவர்களும் 


உறுதுணையும் = சிறந்த துணையும் 


நீயே என்றும் = நீதான் என்றும் 


உன்னைஅல்லால் = உன்னைத் தவிர 


ஒருதெய்வம் = மற்றொரு தெய்வம் 


உள்கேன் = உள்ளத்தால் நினைக்க மாட்டேன் 


என்றும் = என்றும் 


புற்று = புற்றில் வாழும் 


அரவக் = பாம்பை 


கச்சு ஆர்த்த = இடுப்பில் அணிந்து இருக்கும் 


புனிதா என்றும் = புனிதமானவனே என்றும் 


பொழில் = சோலைகள் சூழ்ந்த 


ஆரூரா = திருவாரூர் என்ற திருத்தலத்தில் உறைபவனே 


என்றே = என்று 


போற்றா நில்லே = போற்றி நிற்பாயாக 


நாவுக்கு அரசர் என்று இறைவனால் பட்டம் வழங்கப்பட்டவர் அப்பரடிகள்.  ஊனை உருக்கும், உயிரை உருக்கும் பாடல்கள் அவர் பாடிய தேவாரம். 


நிறைய இருக்கிறது. 


நேரம் இருப்பின், மூலத்தை தேடிப் படியுங்கள் 



Sunday, January 14, 2024

திருக்குறள் - துறவறம் - விரதம்

 திருக்குறள் - துறவறம் - விரதம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_14.html



துறவறத்தை பரிமேலழகர் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். 


விரதம், ஞானம் என்று. 


ஞானம் என்பது பற்றி முந்திய பதிவில் சிந்தித்தோம். இனி விரதம் பற்றி கூறத் தொடங்குகிறார். 


விரதம் என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


விரதம் என்றால் பட்டினி கிடப்பது. சாப்பிடாமல் இருப்பது என்றுதான் நாம் சொல்லுவோம். சாப்பட்டுக்கே வழி இல்லாமல் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் விரதம் இருக்கிறார்கள் என்று அர்த்தமா? 


பரிமேலழகர் காட்டும் விரதம் வேற லெவல்.



"அவற்றுள், விரங்களாவன, இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும், தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன. அவைதாம் வரம்பில ஆகலின், பெருகும் என்று அஞ்சி, அவைதம்முளே பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை ஈண்டுக் கூறுவான் தொடங்கி, முதற்கண் 'அருளுடைமை' கூறுகின்றார்"


 "இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும்,"


ஒருவன் உலகில் உள்ள எல்லா அறத்தையும் செய்ய முடியாது. எனவே, எதை எதை செய்யப் போகிறான் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே கடைபிடிக்க வேண்டும். அதே போல் எதை எதை விடுவது என்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும். 


உதாரணமாக, காலையில் குளித்துவிட்டு தான் சமையல் தொடங்குவேன் என்று வைத்துக் கொண்டால், அதுவும் ஒரு விரதம். தினமும் ஒரு மணி நேரம் நல்ல விடயங்களைப் படிப்பேன் என்று செய்து வந்தால், அதுவும் ஒரு விரதம். எல்லோரிடமும் அன்பாகப் பேசுவேன் என்று வைத்துக் கொண்டால், அது ஒரு விரதம். 


என்ன வந்தாலும், விரதத்தைக் கை விடக் கூடாது.எவ்வளவு துன்பம் வந்தபோதும், உண்மை பேசுவேன் என்ற விரதத்தை அரிச்சந்திரன் கைவிடவில்லை. அரிச்சந்திரன் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. அவனை ஏன் இன்றும் கொண்டாடுகிறோம்?  ஒரு விரதத்தை முழுமையாகக் கடைபிடித்தான். அவ்வளவுதான். 


அதே போல், சிலவற்றை செய்யமாட்டேன் என்று இருப்பதும் ஒரு விரதம்தான். மாமிசம் உண்பது இல்லை, புகை பிடிப்பது இல்லை, மது அருந்துவது இல்லை என்று பிடிவாதமாக இருப்பதும் விரதம் தான். 


சரி, இதை எந்த அளவுக்குச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். 


"தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன"


நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு. உதாரணாமாக மது அருந்துவதில்லை என்ற விரதம், சில இருமல் மருந்தை உட்கொள்ளும் போது கைவிடப்படும். பல இருமல் மருந்துகளில் கொஞ்சம் மது இருக்கும். தவிர்க்க முடியாது. நாம் உண்ணும் தயிரில் கோடிகணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. தயிர் விட்டு உண்ணும்போது நாம் அத்தனை உயிர்களையும் உண்ணுகிறோம். விரதம் பழுதுபடும். தவிர்க்க முடியாது. எனவே, "ஆற்றலுக்கு ஏற்றவாறு" என்று கூறினார். 


சரி இப்படி எத்தனை விரதங்கள் இருக்கின்றன? எதையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும்? என்று கேட்டால்....



"அவைதாம் வரம்பில"


அந்த விரதங்கள் கணக்கில் அடங்காது. அவ்வளவு விரதங்கள் இருக்கின்றன. 



"ஆகலின்,"


எனவே. 



"பெருகும் என்று அஞ்சி"


அவை அனைத்தையும் சொல்லத் தொடங்கினால் மிகப் பெரியதாகி விடும் என்று பயந்து 



", அவைதம்முளே"  - அந்தப் பல விரதங்களில் 


"பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை" பல விரதங்களை உள்ளடக்கிய ஒரு சில சிறப்பான விரதங்களை 


"ஈண்டுக் கூறுவான் தொடங்கி", - இன்று கூறத் தொடங்கி 


"முதற்கண் " - முதலி 


'அருளுடைமை' கூறுகின்றார் = அருளுடைமை என்ற விரதம் பற்றிக் கூறுகிறார். 


துறவுக்கு அருள்தான் முதல் படி. 


பொண்டாட்டியை பிடிக்கவில்லை, கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லை, வாழ்க்கைச் சுமை பெரிதாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்பதெல்லாம் துறவுக்கு அடிப்படை அல்ல. அருள்தான் அடிப்படை என்பதால் அதை முதலில் கூறத் தொடங்கினார். 


என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமா ?



Saturday, January 13, 2024

அறநெறிச்சாரம் - ஓதுமின், ஓதி அடங்குமின்

 அறநெறிச்சாரம் - ஓதுமின், ஓதி அடங்குமின் 



வேண்டாத விடயங்களை படிப்பது என்றால் நிறைய பேருக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். நல்ல விடயங்களை படிப்பது என்றால் "அது ஒண்ணும் புரியாது, அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது" என்று தள்ளி விடுவார்கள். 


இது ஏதோ இன்று நேற்று நடப்பது அல்ல. காலம் காலாமாய் நடக்கும் சங்கதி. 


"தேவை இல்லாதவற்றைப் பற்றி கூறினால், ஆர்வமுடன் கேட்பார்கள்.  தேவையான, பயனுள்ள விடயங்களை கேட்க மாட்டார்கள். அது ஏதோ மெலிந்த உடம்பின் மேல் குளிர் காற்று வீசினார்ப் போல நடுங்குவார்கள், துன்பப் படுவார்கள். நல்ல விடயங்களை கேளுங்கள். படியுங்கள். அதன்படி நடங்கள். படித்து, அடக்கமுடன் நடந்து கொள்ளுங்கள்"


என்கிறது அறநெறிச்சாரம் 


பாடல் 


வேட்டவாய்க் கேட்பர் விரைந்தோடி ஞாலத்தார்

கேட்டைக் கிழத்தியைப் பாடுங்கால்-கோட்டில்லா

ஓதுமின் ஓதி அடங்குமின் என்னுஞ்சொல்

கூதற்குக் கூதி ரனைத்து.


பொருள் 


வேட்டவாய்க் = வேட்டு + அவாய் = வேட்கையுடன், ஆர்வத்துடன் 


கேட்பர் = கேட்பார்கள் 


விரைந்தோடி = விரைந்து ஒட்டி வந்து 


ஞாலத்தார் = ஞாலம் என்றால் உலகம். உலகில் உள்ளவர்கள் 


கேட்டைக் = கேடுதரும், பலன் இல்லாத 


கிழத்தியைப் = பெண்ணைப் பற்றி 


பாடுங்கால் = பாடும் பொழுது 


கோட்டில்லா = கோட்டம் என்றால் வளைவு. குற்றம். கோட்டில்லா என்றால் குற்றம் இல்லாத நூல்களைப்  


ஓதுமின் = மீண்டும் மீண்டும் படியுங்கள் 


அடங்குமின் = படித்த பின், புலன் அடக்கம் கொள்ள வேண்டும் 


என்னுஞ்சொல் = என்று கூறினால் 


கூதற்குக் = குளிர் காற்றில் 


கூதி ரனைத்து = நடுங்கிய உடல் மேல் 


அதாவது, நல்லதைப் படியுங்கள், அதன் படி நடவுங்கள் என்று சொன்னால், குளிர் காற்று அடித்தால் எப்படி உடல் வருத்தம் அடையுமோ, அது போல வருந்துவார்கள். 


ஏதோ ஒரு நடிகை பற்றிய கிசு கிசு என்றால் அதை ஆர்வமாகப் படிப்பார்கள். 


ஓதுதல் என்றால் திரும்ப திரும்பச் சொல்லுதல். ஓதுவார் என்றால் தினமும் கோவில்களில் பாடல்களைப் படிப்பவர். 


நல்ல புத்தகங்களை ஒரு முறை வாசித்துவிட்டு, படித்துவிட்டேன் என்று சொல்லக் கூடாது. மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். எனவே "ஓதுமின்" என்றார். 





Friday, January 12, 2024

பழமொழி - பக்கத்து வீட்டு சமையல்

 பழமொழி - பக்கத்து வீட்டு சமையல் 


பக்கத்து வீட்டில் நல்ல நெய் விட்டு ஏதோ பலகாரம் செய்கிறார்கள். மணம் நம் மூக்கைத் துளைக்கிறது. அல்லது பக்கத்து வீட்டில் கருவாடு போன்ற அசைவ உணவு சமைக்கிறார்கள். அதன் வாசம் நம் மூக்கை தாக்கும் அல்லவா? அங்கே போய் பார்க்க வேண்டாம், என்ன நடக்கிறது என்பதை பார்க்காமலேயே நாம் அறிந்து கொள்ள முடியும். 


அது போல ஒருவன் நல்லவனா, கெட்டவனா என்பதை அறிய அவன் கூடவே இருந்து, அவன் செய்யும் செயல்களை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவன் யாருடன் கூட்டாக இருக்கிறான் என்று பார்த்தாலே போதும். 


தெருவோர டீ கடையில், புகை பிடித்துக் கொண்டு, போகும் வரும் பெண்களை கிண்டல் அடித்துக் கொண்டு இருக்கும் கூட்டத்தில் இருப்பவனை பற்றி நாம் என்ன நினைப்போம்?


இன்னொருவன் பலருடன் சேர்ந்து ஒரு சமய சொற்பொழிவோ, ஆன்மீக சொற்பொழிவோ கேட்கிறான் என்றால், அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? 


பாடல் 


முயலவோ வேண்டா முனிவரை யானும்

இயல்பினர் என்ப தினத்தால் அறிக

கயலியலும் கண்ணாய் கரியரோ வேண்டா

அயலறியா அட்டூணோ இல்.


பொருள் 


முயலவோ வேண்டா = பெரிய முயற்சி எல்லாம் வேண்டாம் 


முனிவரை யானும் = முனிவர் ஆயினும் 


இயல்பினர் என்ப = அவர்கள் என்ன இயல்பினர் என்பதை 


தினத்தால் அறிக = இனத்தால் அறிக = அவர்கள் கூடியிருக்கும் கூட்டத்தால் அறிந்து கொள்க 

 

கயலியலும் = மீனை போன்ற 


கண்ணாய் = கண்களை உடையவளே 


கரியரோ வேண்டா = கரி என்றால் சாட்சி. சாட்சி எதுவும் வேண்டாம், நிரூபணம் எதுவும் வேண்டாம் 


அயலறியா = பக்கத்து வீட்டுக்காரர் அறியாத 


அட்டூணோ இல் = அடுதல் என்றால் சமைத்தல். ஊன் என்றால் உணவு. பக்கத்து வீட்டுக்காரன் அறியாத சமைத்த உணவு இல்லை. நாம் என்ன சமைக்கிறோம் என்று பக்கத்து வீட்டுக்காரனுக்குத் தெரியும். 


நாம்  நினைத்துக் கொண்டிருப்போம் நம்மை பற்றி யாருக்கும் தெரியாது என்று. நாம் யாரோடு பழகுகிறோமோ, அதை வைத்து இந்த உலகம் நம்மை எடை போடும். 


யாரோடு பழகுகிறோம் என்பது முக்கியம். 


(மணக்க மணக்க சமைக்க வேண்டும் என்பதும் முக்கியம்...:))

Thursday, January 11, 2024

திருக்குறள் - துறவறம் - தொடக்கம்

 திருக்குறள் - துறவறம் - தொடக்கம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_11.html


துறவறம் என்றால் என்ன, அதன் பயன் என்ன, அது எப்படி வரும் என்பதை எல்லாம் பரிமேலழகர் மிகத் தெளிவாக, மிகச் சுருக்கமாக விளக்குகிறார். 


"இனி, முறையானே துறவறம் கூறிய தொடங்கினார். துறவறமாவது, மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி, அறவுடையராய்ப்  பிறப்பினை அஞ்சி, வீடுபேற்றின் பொருட்டுத் துறந்தார்க்கு உரிய அறம். அதுதான் வினைமாசு தீர்ந்து, அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, அவராற் காக்கப்படும் விரதங்களும், அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் என இருவகைப்படும்."


ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் மிக நீண்ட பொருள் உண்டு. 


விரித்து சிந்திப்போம். 


முதலில் துறவறம் என்றால் என்ன என்று சொல்கிறார். 


"மேற்கூறிய இல்லறத்தின் வழுவாது ஒழுகி"

துறவறம் என்பது இல்லறத்தின் நீட்சி. இல்லறத்தை ஒரு தவறு இல்லாமல் நடத்த வேண்டும் என்பது முதல் நிபந்தனை. பல பேர் இல்லறத்தில் சிக்கல் அதிகமானால் அதை சமாளிக்க முடியாமல் சந்நியாசியாகப் போகிறேன் என்று கிளம்பி விடுகிறார்கள். அது அல்ல துறவு. இல்லறத்தை முழுமையாக, சிறப்பாக, ஒரு குற்றமும் இன்றி நடத்த வேண்டும். 


" அறவுடையராய்ப்"


அறத்தின் வழி நிற்க வேண்டும். ஊரை ஏமாற்ற காவி அணியக் கூடாது. அது துறவறம் அல்ல. அறத்தின் வழி நிற்பதுதான் துறவறம். 


"  பிறப்பினை அஞ்சி"

மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு அஞ்சி, அதில் இருந்து விடுபட எடுக்கும் நடவடிக்கைதான் துறவறம். இந்தப் பிறப்பு என்பது நல்லாத்தானே இருக்கிறது என்று நினைபாவர்களுக்கு துறவு வாய்க்காது. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று மணிவாசகர் கூறியது போல 


"எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி " என்பார் அருணகிரி. 


மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்

வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா

இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை

கருப்பையிலே வாராமற் கா’


என்னை மீண்டும் மீண்டும் பெற்று, தாய்மார்களும் உடல் சலித்து விட்டார்கள். நான் மீண்டும் மீண்டும் பிறப்பது எனக்கு மட்டும் துன்பம் அல்ல. என்னை ஈன்றெடுக்கும் அன்னைமார்களுகும் துன்பம்தான். ஓடி, ஆடி, விளையாடி, பொருள் சேர்க்க உழைத்து, என் கால் வலிக்கிறது. ஒவ்வொரு முறை நான் பிறக்கும் போதும் பிரமன் எனக்கு தலை எழுத்தை எழுத வேண்டும். எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். இன்னும் ஒரு கருப்பையில் வாராமல் என்னை காத்தருள் என்று இருப்பையூர் வாழும் சிவனை உருகி வேண்டுகிறார் பட்டினத்தார். 


"வீடுபேற்றின் பொருட்டுத்"


பிறப்பினை அஞ்சி என்ன செய்ய? மீண்டும் பிறக்காமல் இருக்க வீடு பேறு அடைய வேண்டும். அதற்கு துறவு அவசியம். 


"துறந்தார்க்கு உரிய அறம்."


அப்படிப்பட்ட துறவை மேற் கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளை இந்த துறவற இயலில் கூற இருக்கிறார். 



"அதுதான்"


அந்தத் துறவரமானது



"வினைமாசு தீர்ந்து"


வினையினால் வரும் குற்றங்கள் தீர்ந்து. அதாவது வினையினால் வரும் பாவ புண்ணியங்கள் தொடராமல். புண்ணியமும் பிறவிக்கு வழி வகுக்கும். 


"அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி"


என்பார் மணிவாசகர். 


அறமும், பாவமும் நம்மை பிறவியில் கட்டும் கயிறுகள். இரண்டும் தீர வேண்டும். 


"அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு"


அந்தக்கரணங்கள் என்றால் என்ன? 


கரணம் என்றால் செய்கை, செயல் என்று பொருள். தோப்புகரணம், குட்டிக் கரணம் என்று சொல்கிறோம் அல்லவா? அந்தக் கரணம் என்றால் உள்ளே நடக்கும் செயல்பாடுகள். 


கண் என்பது புற உறுப்பு. கண் காண்பது இல்லை. கண் காண்பதற்கு உதவி செய்கிறது. கண் சரியாகத் தெரியவில்லை என்றால் கண்ணாடி போட்டுக் கொள்கிறோம். அதன் பின் சரியாகத் தெரிகிறது. அப்படி என்றால் கண்ணாடி பார்கிறது என்று அர்த்தமா? இல்லை. கண்ணாடி நாம் காண உதவி செய்கிறது. அது போல கண் உதவி செய்கிறது. 


இப்படி அனைத்து புலங்களில் இருந்தும் வரும் செய்திகளை பகுத்து, பிரித்து, ஆராய்ந்து நமக்கு சொல்லும் கருவிகளுக்கு அந்தக்கரணங்கள் என்று பெயர். 


நான்கு வித அந்தக் கரணங்கள் இருக்கின்றன. 


மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்பன.


கண், காது, மூக்கு, தோல், நாக்கு இவற்றில் இருந்து வரும் செய்திகளை அலசி ஆராய்ந்து நமக்கு இது இன்னது என்று சொல்லுபவை இந்த நான்கும். இந்த நான்கிற்கும் உள்ள தொடர்பினை நமது வேதாந்தங்களும்,தர்க்க இயலும் பலவாறு ஆராய்ந்து சொல்கின்றன. 


இந்த நான்கு அந்தக்கரணங்களும் தூய்மையாக வேண்டும். நாம் அணியும் மூக்குக் கண்ணாடி எண்ணெய் பிசுக்கு ஏறி, அழுக்கு படித்து இருந்தால் நம்மால் சரிவர பார்க்க முடியாது அல்லவா? அது போல இந்த அந்தக்கரணங்கள் தூயவையாக இல்லாவிட்டால் உண்மை சரியாக நமக்கு புலப்படாது. எனவே, அவற்றை தூய்மையாக வேண்டும். 


"அவராற் காக்கப்படும்"


அப்படி தூய்மையாக்க வேண்டுபவர்கள் செய்யும் செயல்கள், கடமைகள் விரதங்கள் எனப்படும். விரதங்கள் மூலம் அந்தக்கரணங்களை தூய்மை படுத்த முடியும். 


உடனே, விரதம் என்றால் பட்டினி கிடப்பது, உண்ணாமல் இருப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. விரதம் என்றால் என்ன என்பதை பின்னர் விளக்குகிறார். 



"விரதங்களும்"  


அவர்களால் கடைபிடிக்கப்படும் விரதங்களும் 


" அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும்"


விரதம் இருந்தால் என்ன கிடைக்கும் என்றால், "ஞானம்".


விரதம் இல்லாமல் ஞானம் வராது. ஞானம் என்பது படித்து வருவது அல்ல. விரதங்களின் மூலம் வருவது.



" என இருவகைப்படும்."


துறவறம் என்பது விரதம், ஞானம் என்ற இரண்டு வகைப்படும்.


 - இல்லறத்தின் வழுவாது ஒழுகி, 

- அறவுடையராய்ப்  

- பிறப்பினை அஞ்சி, 

- வீடுபேற்றின் பொருட்டுத் 

- துறந்தார்க்கு உரிய அறம். 

-  வினைமாசு தீர்ந்து, \

- அந்தக்கரணங்கள் தூயவாதற்பொருட்டு, 

- அவராற் காக்கப்படும் விரதங்களும், 

- அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமும் 

- என இருவகைப்படும்."


இதைவிட தெளிவாக யாரால் கூற முடியும்.


அடுத்து விரதம் பற்றி கூற இருக்கிறார். 


அதை அடுத்த பதிவில் சிந்திக்க இருக்கிறோம். 



Monday, January 8, 2024

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவனந்தபுரம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_35.html

நமக்கு ஏன் துன்பங்கள் வருகின்றது என்று கேட்டால், நாம் செய்த வினை. முன்பு செய்த வினை, இந்தப் பிறவி எடுத்த பின் செய்த வினைகள் என்று எல்லாம் சேர்ந்து கொண்டு நமக்கு துன்பம் தருகின்றன. 


அவற்றை எப்படி போக்குவது?  இனி துன்பங்கள் வராமல் எப்படி காத்துக் கொள்வது?


நம்மாழ்வார் கூறுகிறார் 


"கேசவா என்று சொல்லு. உன் எல்லா துன்பங்களும் ஓடிப் போய் விடும். அது மட்டும் அல்ல இனி ஒரு துன்பமும் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? எமன் கூட உன் அருகில் வராத ஒரு தலம் இருக்கிறது. அங்கு போய் விட்டால் மரண பயம் கூட இருக்காது. அந்தத் தலம் "திருவனந்தபுரம்" என்ற தலம்"


பாடல்  


கெடும் இடர்ஆயஎல்லாம்*  கேசவா என்ன*  நாளும் 

கொடுவினை செய்யும்*  கூற்றின் தமர்களும் குறுககில்லார்*

விடம்உடை அரவில்பள்ளி*  விரும்பினான் சுரும்பலற்றும்* 

தடம்உடை வயல்*  அனந்தபுரநகர் புகுதும்இன்றே 

(திருவாய் மொழி - 10-2-1, நம்மாழ்வார்) 


பொருள் 


கெடும் = முடிந்து போகும் 


இடர்ஆயஎல்லாம் = அனைத்துவிதமான துன்பங்களும் 


 கேசவா என்ன = 'கேசவா' என்று சொன்னால் 


நாளும் = ஒவ்வொரு நாளும் 

 

கொடுவினை செய்யும் = கொடிய செயல்களைச் செய்யும் 


கூற்றின் = எமனின் 


தமர்களும்  = கூட்டாளிகளும், கூட உள்ளவர்களும் 


குறுககில்லார் = கிட்ட கூட வர மாட்டார்கள் 


விடம்உடை = நஞ்சை உடைய 


அரவில் = பாம்பின் மேல் 


பள்ளி = அனந்த சயனம் 


விரும்பினான் = விரும்பி சயனிக்கும் 


சுரும்பலற்றும் = வண்டுகள் ரீங்காரம் செய்யும் 

 

தடம்உடை = அடையாளம் உள்ள 


வயல் = வயல்கள் நிறைந்த 


அனந்தபுரநகர் = திருவனந்தபுரம் என்ற தலம் 


புகுதும்இன்றே = இப்பவே போவோம் 


கேசவா என்ற சொல் வந்த வினைகளை தீர்க்கும். 


திருவனந்தபுரம் இனி வர இருக்கும் இன்னல்களை போக்கும். 


புகுதும் இன்றே....





 



திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - துறவறம் - ஒரு முன்னோட்டம் 


நமக்கும் துறவறத்துக்கும் என்ன சம்பந்தம்?


நாம் என்ன துறவியாகப் போகிறோமா? அந்த எண்ணம் துளியும் நமக்கு இல்லை. பின் எதற்கு துறவறம் பற்றி நாம் படிக்க வேண்டும்?  துறவியாக போக விரும்புபவர்கள் படிக்கட்டுமே என்று நினைக்கத் தோன்றும். 


சற்று பொறுங்கள். 


ஏன் துறவறம் பற்றி படிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன். 


நாம் எல்லோருமே துறவிகள்தான். 


துறவு என்றால் என்ன? ஏதோ ஒன்றை துறப்பதுதானே ?


சிறு வயதில் பொம்மைகள் வைத்து விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் கோலி குண்டு, கிட்டிப் புள், பம்பரம், பட்டம் என்று விளையாடினோம். பின் அவற்றைத் துறந்தோம். 


பின் சைக்கிள், அதையும் துறந்தோம். 


இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதோ ஒன்றை துறந்து கொண்டேதானே இருக்கிறோம். இல்லை, எதையுமே நான் துறக்க மாட்டேன் என்று இன்றும் சொப்பு சட்டி வைத்து விளையாடினால் எப்படி இருக்கும்?


ஏன் துறந்தோம்?  அறிவு வளர்ச்சி, மன வளர்ச்சி அடைவதால் துறந்தோம். எனவே துறவு என்பது மன, அறிவு வளர்ச்சியின் அடையாளம். 


இரண்டாவது, சில விடயங்களை நாம் நன்மை நோக்கி துறக்கிறோம். உதாரணமாக, வயதானால், இனிப்பை துறக்கிறோம். உடம்பு ஒத்துக் கொள்ளாது. சர்க்கரை வியாதி வரும். இனிப்பு கிட்ட கூட போகக் கூடாது என்று மருத்துவர் சொல்லி விடுகிறார். சரி, இனிமேல் காப்பியில் சர்கரை போடாமல் குடிப்போம் என்று சர்க்கரையை துறந்து விடுகிறோம் அல்லவா. அது நன்மை நோக்கி வந்த துறவு. 


துறவு ஆரோக்கியமான வாழ்வின் அடையாளம். 


சர்க்கரை என்பது ஒரு உதாரணம். பிள்ளைகள் மேல் உள்ள அதீத பாசம் மட்டுப் படும். இனி அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்ளுவார்கள் என்று விட்டு விலகத் தோன்றும். அதுவும் ஒரு துறவு தான். 


ஒரு துறையில் நாம் முன்னேற வேண்டும், சிறப்பாக வேண்டும் என்றால் என்ன செய்வோம். அந்தத் துறையில் பெயர் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து, அதைப் போல் செய்ய முயற்சி செய்வோம் அல்லவா. வாழ்வை சிறப்பாக வாழ வேண்டும் என்றால் சிறப்பாக வாழ்பவர்கள், வாழ்ந்தவர்கள் யார் என்று பார்த்து அவர்களைப் போல வாழ முயற்சி செய்யலாம். அப்படி வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் துறவிகள். அவர்கள் வழிகாட்டிகள். 


எப்படியும் நாம் கொஞ்ச கொஞ்சமாக துறவில் ஈடுபடுகிறோம். அதையே சிறப்பாகச் செய்து விட்டால் என்ன?  


துறவு என்பது தனி வாழ்க்கை முறை அல்ல. துறவு என்பது இல்லறத்தின் தொடர்ச்சி. அவ்வளவுதான். 


வயதாக வயதாக நாம் விரும்புகிறோமோ இல்லையோ, துறவு என்பது தானே நம் மீது திணிக்கப்படும்.  உறவுகள் நம்மைத் துறக்கும், ஆரோக்கியம் நம்மைத் துறக்கும், செல்வம் ஒரு பொருட்டாகத் தெரியாது...வலிந்து திணிக்கப்படும் துறவை விட நாமே விரும்பி ஏற்றுக் கொள்ளும் துறவு சிறந்தது அல்லவா?  


துறவு என்றால் ஏதோ வாழ்வை உதறிவிட்டு ஓடிவிடுவது அல்ல. வாழ்வின் நீட்சி. அவ்வளவுதான். 


நான் சொல்வதை ஏற்க வேண்டும் என்று அல்ல. வள்ளுவர் என்ன சொல்கிறார் சிந்திப்போம். நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம். திறந்த மனத்துடன் இதை அணுகுவோம். 




 
















Saturday, January 6, 2024

திருக்குறள் - இதுவரை - பாகம் 6

  

 திருக்குறள் - இதுவரை - பாகம் 6

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/6.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 

12.  பிறனில் விழையாமை 

13. பொறையுடைமை 

14. அழுக்காறாமை 

15. வெஃகாமை

16.  புறங்கூறாமை 

17. பயனில சொல்லாமை 

18. தீவினையச்சம் 


மேற்கண்ட 18 அதிகாரங்களின் தொகுப்புரை பற்றி சிந்தித்தோம். 


மேலும் தொடர்வோம். 


ஒப்புரவு அறிதல் - மன, மெய், மொழியால் வரும் குற்றங்களை நீக்கிய பின், ஒருவன் தான் பெற்ற செல்வத்தினை சமுதாய நலனுக்குக்காக செலவிடத் தலைப்படுவான். பொறாமை, பேராசை, குறுக்கு வழியில் செல்வம் சேர்க்க நினைப்பது, மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவது என்ற குற்றங்கள் எல்லாம் மறைந்த பின், ஒருவன் மகிழ்வான வாழ்வை நடத்துவான். அப்படி மகிழ்ந்து இருப்பவன், தான் மட்டும் மகிழ்ச்சி அடைந்தால் போதாது, தன்னைச் சார்ந்த சுமுதாயமும் மகிழ வேண்டும் என்று நினைத்து செய்வான். அது ஒப்புரவு எனப்பட்டது. அது தன் குற்றங்கள் மறைந்த பின்னால் தான் வரும் என்பதால், அவற்றின் பின்னே இந்த அதிகாரம் கூறினார். 


ஈகை - பொது நலம் குறித்து நல்லது செய்தாலும், அதில் கொஞ்சம் புகழ் வரும். நாலு பேர் புகழ்ந்து பேசுவார்கள். டிவி, செய்தித்தாள் இவற்றில் பேர் வரும். சுய இலாபம் இருக்கும். மாறாக, தனி ஒருவனுக்கு உதவி செய்தால், பெரிய விளம்பரம் இருக்காது. அதாவது, அதில் சுயநலம் கொஞ்சம் கூட இருக்காது. பொது நலத்துக்கு செய்வது போல், தனி மனிதனுக்கும் உதவி செய்வது ஈகை என்பது. கொஞ்சம் கூட விளம்பரம், சுய இலாபம் இல்லாமல் செய்யும் மனப் பக்குவம் வர வேண்டும் என்பதால், இதை ஒப்புரவின் பின் கூறினார். 


புகழ் - ஒருவன் இல்லறத்தை சிறந்த முறையில் நடத்தி, மன, மெய், மொழிக் குற்றங்களை நீக்கி, சமூகத்துக்கும், தனி மனிதர்களுக்கும் உதவி செய்து வாழ்ந்தால், அவனுக்கு நீடித்த புகழ் கிடைக்கும். புகழ் ஒன்றே ஒருவன் சிறப்பாக இல்லறம் நடத்தினான் என்பதற்கு சான்று.  


புகழ் என்ற அதிகாரத்தோடு இல்லறம் நிறைவு பெறுகிறது. 


இனி அடுத்து துறவறம் பற்றிப் பேசப் போகிறார். 


நாளை முதல் அது பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


இதுவரை நாம் சேர்ந்து பயணித்த அனுபவம் எப்படி இருந்தது ? உங்கள் கருத்துகளை அறிய ஆவல். 



Friday, January 5, 2024

நாலடியார் - புல்லறிவாண்மை - எதுக்குச் சண்டை?

 நாலடியார் - புல்லறிவாண்மை - எதுக்குச்  சண்டை?



புல் எவ்வளவு சிறியது. அதில் சிறப்பித்துக் கூற ஒன்றும் இல்லை. புல்லறிவு என்றால் புல் போன்ற சிறிய அறிவு. சிற்றறிவு. கொசு மூளை என்று சொல்லுவார்களே அது. புல்லறிவாண்மை என்றால் அந்த சிறிய அறிவை பெரிய அறிவு என்று நினைத்துக் கொண்டு  பெருமிதம் கொண்டு அலைவது. 


சிலருக்கு படிப்பறிவு, பட்டறிவு எல்லாம் மிகக் கொஞ்சமாக இருக்கும். ஆனால், அவர்கள் பேசுவதைக் கேட்டால் ஏதோ எல்லாம் படித்த மேதாவிகள் மாதிரி பேசுவார்கள். 


அப்படிப்பட்ட அறிவுள்ளவர்களைப் பற்றி நாலடியார் பேசுகிறது. 


"இருக்கப் போகிற நாள் கொஞ்சம். உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இதில் பலர் பேசும் பழிச் சொற்களை வேறு கேட்க வேண்டும். இருக்கின்ற கொஞ்ச நாளில், எல்லோரிடமும் சிரித்து பேசி மகழ்ந்து இருக்காமல், எல்லோரிடமும் எதற்கு சண்டை போட வேண்டும் ?"


அப்படி சண்டை போடுபவன், புல்லறிவாளன்.


பாடல் 

 


உளநாள் சிலவால் உயிர்க்கேமம் இன்றால்,

பலர்மன்னுந் தூற்றும் பழியால், -பலருள்ளும்

கண்டரோ டெல்லாம் நகாஅ தெவனொருவன்

தண்டித் தனிப்பகை கோள்.


பொருள் 


உளநாள் = உயிரோடு இருக்கப் போகும் நாட்கள் 


சிலவால் = சில நாட்களே 


உயிர்க்கேமம் = உயிர்க்கு ஏமம் = உயிருக்கு துணை 


இன்றால் = யாரும் இல்லை 


பலர்மன்னுந் = பலரும் 


தூற்றும் பழியால் = பழிச் சொல்லை கேட்டு 


பலருள்ளும் = பலரிடத்தில், உள்ள பலரிடத்தில்   


கண்டரோ டெல்லாம் = காண்கின்ற பேர்களை எல்லாம் 


நகாஅ தெவனொருவன் = நகாது எவனொருவன் = சிரித்து மகிழாமல் எவன் ஒருவன் 


தண்டித் = வெறுத்து, ஒதுக்கி 


தனிப் = தனித்து 


பகை கோள் = பகை கொள்வது ஏன் ?


இருக்கிற கொஞ்ச நாளில் எல்லாரிடமும் சிரித்து பேசி மகிழாமல், எல்லாரிடமும் சண்டை போட்டுக் கொண்டு, பேச்சு வாங்கிக் கொண்டு, தனித்து இருப்பது புல்லறிவாண்மை என்கிறது நாலடியார். 


சண்டியர் மாதிரி எல்லாரிடமும் சண்டை போடுவதும் ஒரு சுகம் என்று நினைப்பது silly mind...













Thursday, January 4, 2024

Page View 26 Lakhs

 இன்று இந்த ப்ளாக் page view 26 இலட்சத்தை தொட்டு இருக்கிறது. 


வாசகர்களுக்கு நன்றி. 

Wednesday, January 3, 2024

திருக்குறள் - இதுவரை - பாகம் 5

 

 திருக்குறள் - இதுவரை - பாகம் 5

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/5.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 

12.  பிறனில் விழையாமை 

13. பொறையுடைமை 

14. அழுக்காறாமை 

15. வெஃகாமை


இதுவரை மேலே உள்ள 15 அதிகாரங்களை சிந்தித்தோம். 


புறங்கூறாமை 


அழுக்காறாமை,  வெஃகாமை என்ற இரண்டும் மனதின் கண் நிகழும் குற்றங்கள். அதை அடுத்து மொழியின் கண் குற்றங்கள் பற்றி கூற இருக்கிறார். அதில் முதலாவதாக, புறங்கூறாமை பற்றி கூறுகிறார். அதாவது, ஒருவர் இல்லாதபோது அவரைப் பற்றி தவறாக மற்றவர்களிடம் கூறுவது. இது தேவையில்லாத ஒன்று. ஒருவர் தவறு செய்தால், அது தவறு என்று தெரிந்தால், அதை அவரிடமே நேரிடையாகவே கூறலாமே. அவர் இல்லாத போது கூறுவது என்பது நடந்ததை திரித்துக் கூறவே உதவும். அதனால் ஒரு பயனும் விளையாது. 


பயனில சொல்லாமை 


சொல்லில் ஏற்படும் குற்றங்கள் நான்கு. அவை பொய், குறளை, கடும் சொல், பயனில சொல் என்பவை. இதில் இல்லறத்தில் உள்ளவன் பொய்யே சொல்லாமல் இருக்க முடியாது. ஒன்றும் இல்லாவிட்டால் கூட மனைவியை "நீ இரதி மாதிரி இருக்கிறாய்' என்று பொய் சொல்லத்தான் வேண்டும். இல்லை என்றால் இல்லறம் சிறக்காது. பொய்யை முற்றும் விலக்க துரவியால்தான் முடியும் என்பதால், அதை துறவறத்தில் வைத்தார். கடும் சொல்லை தவிர்க்க இனியவை கூறல் என்ற அதிகாரம் வைத்தார். மீதி இருக்கும் புறங்கூறாமை மேலே சொல்லிவிட்டபடியால், அடுத்து பயனில சொல்லாமை பற்றி கூறுகிறார். தனக்கும், பிறருக்கு, இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தராத சொற்களை கூறாமல் இருப்பது. 


தீவினையச்சம் 


மனதின் கண் நிகழும் குற்றங்களும், வாக்கின் கண் நிகழும் குற்றங்களும் சொல்லிய பின், உடலின் கண் நிகழும் ஏனைய குற்றங்கள் பற்றி தொகுத்து ஒரே அதிகாரத்தில் கூறினார். தீய வினைகள் செய்ய அஞ்ச வேண்டும். அச்சம் வந்தால் தானே அதில் இருந்து விலகி விடுவோம். தவறான காரியம் செய்தால் மானம் போய்விடுமே என்ற அச்சம், தண்டிக்கப் படுவோம் என்ற அச்சம் இருந்தால் தவறான காரியங்கள் செய்ய மாட்டோம். 


மேலும் சிந்திப்போம். 


 

Tuesday, January 2, 2024

கம்ப இராமாயணம் - அதையெல்லாம் பார்த்தாயே, இதைப் பார்க்க மாட்டாயா?

கம்ப இராமாயணம் - அதையெல்லாம் பார்த்தாயே, இதைப் பார்க்க மாட்டாயா?

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post.html


தான் பட்ட அவமானத்தால் வருந்தி தன் அண்ணனான இராவணனை அழைத்துப் புலம்புகிறாள் சூர்பனகை. 


இராவணா, நீ எதையெல்லாம் பார்த்து இருக்கிறாய்....


முன்பு ஒரு நாள் ஐராவதம் என்ற யானையின் மேல் ஏறி உன்னோடு போர் புரிய வந்தான் இந்திரன். அவனை போர்க் கோலத்தில் கண்டாய். பின் அவன் உன்னோடு போர் புரிந்து, உயிருக்குப் பயந்து தப்பி ஓடினான். அப்போது அவனுடைய முதுகைக் கண்டாய். அவன புற முதுகு காண ஓடச் செய்தாய். அப்பேற்பட்ட வலிமை உள்ளவன் நீ. உன் தங்கை இந்த நிலையில் இருந்து கவலைப் படுகிறேன். இதைக் காண வரமாட்டாயா என்று ஓலமிடுகிறாள். 


பாடல்  


'ஆர்த்து, ஆணைக்கு-அரசு உந்தி, அமரர்

     கணத்தொடும் அடர்ந்த

போர்த் தானை இந்திரனைப் பொருது,

     அவனைப் போர் தொலைத்து,

வேர்த்தானை, உயிர் கொண்டு

     மீண்டானை, வெரிந் பண்டு

பார்த்தானே! யான் பட்ட

     பழி வந்து பாராயோ?


பொருள் 


'ஆர்த்து = ஆரவராமாக சப்தம் எழுப்பிக் கொண்டு வந்த 


ஆனைக்கு-அரசு = யானைகளுக்கு அரசனான ஐராவதம் 


உந்தி = அதன் மேல் ஏறி 


அமரர் = தேவ(ர்) 


கணத்தொடும் = படைகளோடு 


அடர்ந்த = போருக்கு வந்த 


போர்த் தானை = போர் தலைவனை 


இந்திரனைப் = இந்திரனை 


பொருது = சண்டையிட்டு 


அவனைப் = அந்த இந்திரனை 


போர் தொலைத்து = போரில் தோற்கடித்து 


வேர்த்தானை = உயிருக்கு பயந்து ஓடி உடல் எல்லாம் வேர்த்தானை  


உயிர் கொண்டு = உயிரை விடாமல் 


மீண்டானை = தாபியவனை 


வெரிந் = புற முதுகு 


பண்டு = பழைய நாளில், முன்பொரு நாள் 


பார்த்தானே!  = பார்த்த இராவணனே 


யான் பட்ட = நான் அடைந்த 


பழி வந்து பாராயோ? = பழியை பார்க்க வர மாட்டாயா ?


ஆனை என்ற சொல்லை எவ்வளவு அழகாக கையாள்கிறான் கம்பன். 


ஆனைக்கு அரசு - ஐராவதம் 

போர்த் தானை = போர்த் தலைவனை 

வேர்த்தானை = வேர்க்க விறுவிறுக்க ஓடியவனை 

மீண்டானை = உயிரை கையில் பற்றிக் கொண்டு மீண்டவனை 

பார்த்தானை = பார்த்தவனே 


கம்பனில் இரசிக்க ஆயிரம் இருக்கு. 


சூர்பனகையின் இந்த அவலம், பின்னாளில் எப்படி எல்லாம் வெடிக்கப் போகிறது என்று பார்க்க இருக்கிறோம். 


அசுர குலத்தை அடியோடு வேர் அறுத்தது அவள் பட்ட அவமானம். 


யாருடைய தன்மானத்தையும் சீண்டிப் பார்க்கக் கூடாது. 


கூனியின் தன் மானத்தை சீண்டியதால் கானகம் வர நேர்ந்தது. 


சூர்பனகையின் தன்மானத்தை சீண்டியதால் சீதையை இழந்து எவ்வளவு சோகம்!


இராவணன் சீதையை கவர்ந்தது தவறு. அந்த தவற்றின் வேர் எங்கே இருந்தது?


சிந்திப்போம்.