Sunday, January 14, 2024

திருக்குறள் - துறவறம் - விரதம்

 திருக்குறள் - துறவறம் - விரதம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/01/blog-post_14.html



துறவறத்தை பரிமேலழகர் இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறார். 


விரதம், ஞானம் என்று. 


ஞானம் என்பது பற்றி முந்திய பதிவில் சிந்தித்தோம். இனி விரதம் பற்றி கூறத் தொடங்குகிறார். 


விரதம் என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம்?


விரதம் என்றால் பட்டினி கிடப்பது. சாப்பிடாமல் இருப்பது என்றுதான் நாம் சொல்லுவோம். சாப்பட்டுக்கே வழி இல்லாமல் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் விரதம் இருக்கிறார்கள் என்று அர்த்தமா? 


பரிமேலழகர் காட்டும் விரதம் வேற லெவல்.



"அவற்றுள், விரங்களாவன, இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும், தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன. அவைதாம் வரம்பில ஆகலின், பெருகும் என்று அஞ்சி, அவைதம்முளே பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை ஈண்டுக் கூறுவான் தொடங்கி, முதற்கண் 'அருளுடைமை' கூறுகின்றார்"


 "இன்னஅறம் செய்வல் எனவும், இன்ன பாவம் ஒழிவல் எனவும்,"


ஒருவன் உலகில் உள்ள எல்லா அறத்தையும் செய்ய முடியாது. எனவே, எதை எதை செய்யப் போகிறான் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே கடைபிடிக்க வேண்டும். அதே போல் எதை எதை விடுவது என்றும் முடிவு செய்து கொள்ள வேண்டும். அதை அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும். 


உதாரணமாக, காலையில் குளித்துவிட்டு தான் சமையல் தொடங்குவேன் என்று வைத்துக் கொண்டால், அதுவும் ஒரு விரதம். தினமும் ஒரு மணி நேரம் நல்ல விடயங்களைப் படிப்பேன் என்று செய்து வந்தால், அதுவும் ஒரு விரதம். எல்லோரிடமும் அன்பாகப் பேசுவேன் என்று வைத்துக் கொண்டால், அது ஒரு விரதம். 


என்ன வந்தாலும், விரதத்தைக் கை விடக் கூடாது.எவ்வளவு துன்பம் வந்தபோதும், உண்மை பேசுவேன் என்ற விரதத்தை அரிச்சந்திரன் கைவிடவில்லை. அரிச்சந்திரன் பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை. அவனை ஏன் இன்றும் கொண்டாடுகிறோம்?  ஒரு விரதத்தை முழுமையாகக் கடைபிடித்தான். அவ்வளவுதான். 


அதே போல், சிலவற்றை செய்யமாட்டேன் என்று இருப்பதும் ஒரு விரதம்தான். மாமிசம் உண்பது இல்லை, புகை பிடிப்பது இல்லை, மது அருந்துவது இல்லை என்று பிடிவாதமாக இருப்பதும் விரதம் தான். 


சரி, இதை எந்த அளவுக்குச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். 


"தம் ஆற்றலுக்கு ஏற்ப வரைந்து கொள்வன"


நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு. உதாரணாமாக மது அருந்துவதில்லை என்ற விரதம், சில இருமல் மருந்தை உட்கொள்ளும் போது கைவிடப்படும். பல இருமல் மருந்துகளில் கொஞ்சம் மது இருக்கும். தவிர்க்க முடியாது. நாம் உண்ணும் தயிரில் கோடிகணக்கான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. தயிர் விட்டு உண்ணும்போது நாம் அத்தனை உயிர்களையும் உண்ணுகிறோம். விரதம் பழுதுபடும். தவிர்க்க முடியாது. எனவே, "ஆற்றலுக்கு ஏற்றவாறு" என்று கூறினார். 


சரி இப்படி எத்தனை விரதங்கள் இருக்கின்றன? எதையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும்? என்று கேட்டால்....



"அவைதாம் வரம்பில"


அந்த விரதங்கள் கணக்கில் அடங்காது. அவ்வளவு விரதங்கள் இருக்கின்றன. 



"ஆகலின்,"


எனவே. 



"பெருகும் என்று அஞ்சி"


அவை அனைத்தையும் சொல்லத் தொடங்கினால் மிகப் பெரியதாகி விடும் என்று பயந்து 



", அவைதம்முளே"  - அந்தப் பல விரதங்களில் 


"பலவற்றையும் அகப்படுத்து நிற்கும் சிறப்புடையன சிலவற்றை" பல விரதங்களை உள்ளடக்கிய ஒரு சில சிறப்பான விரதங்களை 


"ஈண்டுக் கூறுவான் தொடங்கி", - இன்று கூறத் தொடங்கி 


"முதற்கண் " - முதலி 


'அருளுடைமை' கூறுகின்றார் = அருளுடைமை என்ற விரதம் பற்றிக் கூறுகிறார். 


துறவுக்கு அருள்தான் முதல் படி. 


பொண்டாட்டியை பிடிக்கவில்லை, கடன்காரன் தொல்லை தாங்க முடியவில்லை, வாழ்க்கைச் சுமை பெரிதாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்பதெல்லாம் துறவுக்கு அடிப்படை அல்ல. அருள்தான் அடிப்படை என்பதால் அதை முதலில் கூறத் தொடங்கினார். 


என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமா ?



1 comment:

  1. அருமையான பதிவு... நன்றி

    ReplyDelete