Tuesday, July 30, 2019

திருவருட்பா - தயவு செயல் வேண்டும்

திருவருட்பா - தயவு செயல் வேண்டும் 


நம்மால் என்ன செய்ய முடியும்.

தலை முடி நரைக்கிறது. அதை நிறுத்த முடியுமா? நம் தலை முடி, நம் கட்டுப்பாட்டில் இல்லை.

நேற்று படித்தது இன்று மறந்து விடுகிறது.

இதில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், சில பல புத்தகங்களை படித்து, தினம் சில பாடல்களை மனப்பாடமாக கிளிப் பிள்ளை போல் ஒப்பித்து, கற்பூரம், ஊதுவத்தி கொளுத்தி இது போன்ற சடங்குகளை செய்து நேரே ஸ்வர்கம் போய் விடலாம் என்று.

நம்முடைய ஆணவம்தான் எவ்வளவு பெரிதாக இருக்கிறது.

நினைத்த நேரம் தூங்க முடிவதில்லை, ஆசைப் பட்டதை சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டதை எல்லாம்  செரிக்க முடிவதில்லை, நம் கணவனோ, மனைவியோ, பிள்ளையோ நாம் சொல்வதை கேட்பதில்லை, இருந்தும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நாம் பெரிய ஆள் என்று.

நாம் விரும்பியதை நம்மால் செய்ய முடியுமா ? நினைத்ததை பேச முடியுமா ? மனதில் பட்டதை சொல்லவாவது முடியுமா ?

நம்மிடம் ஒரு சுதந்திரமும் இல்லை.

வள்ளலார் சொல்கிறார், இறைவனிடம்

"என்னால் ஒரு துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாது. எனக்கு ஒரு சுதந்திரமும் இல்லை. இறைவா, நீ தான் பெரிய ஆள். தயவு செய்து எனக்கு உதவி செய். உன் அருள் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது"

பாடல்

“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

பொருள்

“என்னாலோர் = என்னால் ஒரு

துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே = ஒரு சிறிய துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாதே

எல்லாஞ் = எல்லாவற்றையும்

செய் வல்லவன் = செய்யத்தக்க வல்லவன்

என்றெல்லாரும் = என்று எல்லாரும்

புகழும் = புகழும்

நின்னால் = உன்னால்

இவ்வுலகிடை = இந்த உலகத்தில்

நான் வாழ்கின்றேன் அரசே = நான் வாழ்கின்றேன் அரசே

நின்னருள் = உன்னுடைய அருளை

பெற்றழியாத = பெற்று , அழியாத

நிலையை அடைந்திடவென் = நிலையை அடைந்திட என்

தன்னாலோர் = தன்னால் ஓர்

சுதந்தரமும் = சுதந்திரமும்

இல்லை = இல்லை

கண்டாய் = கண்டு கொள்வாய்

நினது = உன்

சகல சுதந்திரத்தை = அனைத்து சுதந்திரத்தையும்

யென்பால் = என் பால்

தயவு செயல் வேண்டும்” = தயவு செயல் வேண்டும்

அதாவது, வள்ளலார் சொல்கிறார், எனக்குத்தான் சுதந்திரம் எதுவும் இல்லை. உனக்குத்தான்  எல்லா சுதந்திரமும் இருக்கிறதே. எனக்கு உதவி செய்ய உனக்கு என்ன  தடை. யார் உன்னை என்ன சொல்ல முடியும். கவலைப் படாமல், தயவுசெய்து எனக்கு உதவி செய் என்கிறார்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_30.html

Sunday, July 28, 2019

நள வெண்பா - எரிகின்ற தென்னோ இரா

நள வெண்பா - எரிகின்ற தென்னோ இரா


நடைமுறை வாழ்கை ஒரு நேரம் இல்லையென்றால் மற்றொரு நேரம் சலிப்பு தருவதாய் அமைந்து விடுகிறது. துன்பமும், குறையும், வருத்தமும் , வலியும் அவ்வப்போது வந்து போகாமால் இருக்காது.

அப்படி அலுப்பும், சலிப்பும் வரும்போது, இலக்கியத்துக்குள் புகுந்து விட வேண்டும்.

அது ஒரு தனி உலகம்.

எப்படி அந்த உலகத்துக்குள் போவது?

மனோ இரதம் என்று ஒன்று இருக்கிறது. அதில் ஏறினால் உடனே போய் விடலாம்.

"அட இப்படியும் கூட இருக்குமா" என்று ஆச்சரியப்பட வைக்கும்.

"அடடா , நமக்கு இப்படி தோன்றவில்லையே" என்று  நம் அறிவின் எல்லைகளை விரிவாக்கும்.

"ஹ்ம்ம்...எனக்கு எப்படி ஒரு எண்ணம் , உணர்ச்சி தோன்றி இருக்கிறது " என்று நம் வாழ்வை உரசி விட்டுச் செல்லும்.

பிரிவு.

காதலன்/காதலி பிரிவு. கணவன்/மனைவி பிரிவு, பெற்றோர் பிள்ளைகள் பிரிவு,  நண்பர்கள் பிரிவு ...என்று பிரிவு என்பது நம் வாழ்வின் நிகழும் அடிக்கடி நிகழும் சம்பவம்.

பிரிவு துன்பம் தரும்.

அதிலும் காதலன் காதலி பிரிவு ஒரு ஏக்கம், காமம், காதல், பாசம் என்று எல்லாம் கலந்து ரொம்பவும் படுத்தும் .

நளனை பிரிந்த தமயந்தி தனிமையில் வருந்துகிறாள்.

இரவுப் பொழுது. குளிர்ந்த நிலா. இருந்தும் அவளுக்கு அது சூடாக இருக்கிறது. காமம்.

"இந்த இரவு ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறது? ஒரு வேளை இந்த நிலவு சூரியனை விழுங்கி விட்டதா? அதனால் தான் இவ்வளவு சூடாக இருக்கிறதா? இல்லை, என் மார்பகத்தில் இருந்து எழுந்த சூட்டால் இந்த உலகம் இவ்வளவு சூடாகி விட்டதா? அல்லது இந்த நிலவின் கதிர் வெப்பத்தை பரப்புகிறதா ? ஒன்றும் தெரியவில்லையே " என்று பிரிவில் தவிக்கிறாள்.

பாடல்


வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலில் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா.

பொருள்


வெங்கதிரோன் = வெம்மையான கதிர்களை உடைய சூரியன்

தன்னை = அவனை

விழுங்கிப் புழுங்கியோ = விழுங்கியதால் இந்த இரவு இப்படி புழுங்குகிறதா ?

கொங்கை = என் மார்பகத்தின்

அனலில் = சூட்டில்

கொளுந்தியோ = கொளுத்தப்பட்டா ?

திங்கள் = நிலவு

விரிகின்ற = பரந்து

வெண்ணிலவால் = வெண்மையான இந்த நிலவால்

வேகின்ற தேயோ = வேகின்றதோ

எரிகின்ற தென்னோ இரா. = ஏன் இந்த  இரவு எரிகிறது

நாமும்தான் தினமும் இரவையும் பகலையும் பார்க்கிறோம்.

நமக்கு என்றாவது தோன்றியது உண்டா, இரவு சூரியனை விழுங்கி இருக்கும் என்று.

கற்பனை விரிய விரிய மனம் விரியும்.

மனம் விரியும் போது, வானம் வசப்படும்.

பலவித வேலைகளுக்கு நடுவில், நல்ல இலக்கியத்துக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

அது உங்கள் மன வளர்சிக்கு வித்திடும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_43.html

திருக்கடை காப்பு - வேதியற்கு விளம்பாயே

திருக்கடை காப்பு - வேதியற்கு விளம்பாயே


சில பாடல்கள் ஏன் பிடித்திருக்கிறது என்று கேட்டால், எனக்குச் சொல்லத் தெரியாது. என்னவோ ஒன்று அந்தப் பாட்டில் இருக்கிறது. என்ன என்று சுட்டி கூற முடிவதில்லை.

என்னவோ பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்.

என் நண்பர்கள் கேப்டது உண்டு..."என்ன எப்பப் பார்த்தாலும் சாமி, பூதம் என்று அதையே திருப்பி திருப்பி எழுதிக் கொண்டிருக்கிறாய் ...மனித உணர்வுகள், உறவுகள், அதில் எழும் சிக்கல்கள் பற்றி நம் தமிழ் இலக்கியம் என்ன கூறுகிறது என்று எழுதக் கூடாதா " என்று.

அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இருந்தாலும், பக்திப் பாடல்களில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.

அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்விய பிரபந்தம் படிக்கும் போது இப்பவும் மனம் நிறைந்து கண்ணில் நீர் தழும்புவது நிகழாமல் இல்லை.

தெளிந்த குளத்தில் சிறு கல் விழுந்தால், வட்ட வட்டமாக அலை பரவுவதைப் போல, சில பாடல்கள் படித்து முடித்து பல மணி நேரம் கழிந்தும் மனதுக்குள் அலை அடித்துக் கொண்டிருக்கும்.

அப்படிப் பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

திருஞான சம்பந்தர் பாடிய திருக்கடை காப்பில் உள்ளது இந்தப் பாடல்.

ஆன்மீகம், இறை உணர்வு, சமய உணர்வு, உண்மைத் தேடல், நான் என்று அறியும் வேட்கை இவற்றிற்கு நாமே தேடி விடை கண்டு கொள்ள முடியுமா? சிலரால் அது முடியுமாக இருக்கும். எல்லோராலும் அது முடியாத காரியம்.

பின் என்ன செய்வது?

கண்டு தெளிந்தவர்களை பிடித்து, அவர்கள் மூலம் தெரிந்து கொள்வது எளிய வழி.

ஞான சம்பந்தர் சொல்கிறார்


"குருகே (நீர் பறவை) , என் பசலை நோய் அவனுக்குத் தெரியாமல் போனது என் வினைப் பயனே. நீ போய் சொல்லு, இப்படி நான் அவன் நினைவாகவே இருக்கிறேன் என்று". என்று குருகை தூது விடுகிறார்.

இறைவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியாது. உனக்குத் (ஆச்சாரியனுக்கு) தெரியும். எனவே, எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க மாட்டாயா என்று வேண்டுகிறார்.


பாடல்

எறிசுறவங் கழிக்கான லிளங்குருகே யென்பயலை
அறிவுறா தொழிவதுவு மருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.


பொருள்

எறிசுறவங்  = எதிரில் வரும் மற்ற கடல் வாழ் விலங்குகளை தூக்கி எறியும் சுறாமீன்

கழிக்கான லிளங்குருகே = இருக்கும் கடலுக்கு பக்கத்தில் உள்ள கானகத்தில் உள்ள இளம் குருகே

யென்பயலை = என் பசலை

அறிவுறா தொழிவதுவு மருவினையேன் = அறிவு உறாது ஒழிவதும்  அரு வினையேன்

பயனன்றே = பயனால் அன்றோ

செறிசிறார் = நெருங்கியசிறுவர்கள்

 பதமோதுந் = பதம் ஓதும் (வேத பதங்களை ஓதும்)

திருத்தோணி புரத்துறையும் = திருத் தோணி புரத்து உறையும்

வெறிநிறார் = சிறந்த நிறங்களைக் கொண்ட

மலர்க்கண்ணி = மலர்மாலையை அணிகலனாக அணிந்த

வேதியர்க்கு = வேதியற்கு, சிவனுக்கு

விளம்பாயே. =  சொல்வாயாக

ஒரு புறம் கலங்கும் கடல். அதில், கோபம் கொண்டு திரியும் சுறா மீன். மறுபக்கம் காடு. காட்டில், ஒரு குருகு. தூரத்தில், திருத்தோணிபுர கோவில்.

கண்மூடி கற்பனை பண்ணிப் பாருங்கள்.

பாட்டின் பல பரிணாமங்கள் தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_28.html



Thursday, July 25, 2019

குறுந்தொகை - குருகும் உண்டு

குறுந்தொகை - குருகும் உண்டு 



காதலில் பெண் மிக எச்சரியாகவே இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு இழை கோடு தாண்டினாலும், பெண் தான் அந்த பளுவை தூக்கிச் சுமக்க வேண்டி இருக்கிறது.

காதலும், ஊடலும், கூடலும் ஒரு அந்தரங்க அனுபவம். சாட்சிக்கு யாரையும் வைத்துக் கொண்டா காதலிக்கு முத்தம் கொடுக்க முடியும்?

ஆண் துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பி விடலாம். இயற்கை, பெண்ணுக்கு அதிகம் சுமையை தந்திருக்கிறது.


"கர்ப்பம் ஆனால் என்ன? வேண்டாம் என்றால் கலைத்து விட்டு போவது. இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேறி விட்டது. கற்பு கத்திரிக்காய் எல்லாம் அந்தக் காலம்" என்று சொல்லுபவர்களும் இருக்கலாம். அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

அறிவியலும், மருத்துவமும் எவ்வளவு வேகமாக முன்னேறினாலும், பண்பாடு, கலாச்சாரம் என்பவை அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவது இல்லை.

எது நமது பண்பாடு, கலாச்சாரம் என்றால் நம் இலக்கியங்களை புரட்டி பார்த்தால் தெரியும். எப்படி நம் முன்னவர்கள் வாழ்ந்தார்கள்? எது அவர்களுக்கு முக்கியம் என்று பட்டது? எதை முதன்மை படுத்தி அவர்கள் வாழ்ந்தார்கள்  என்று நாம் அறியலாம்.

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி.

"அவள் எவ்வளவோ மறுத்தால். அவன் எங்கே கேட்கிறான். அவளை வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டான். காரியம் முடிந்த பின், இப்போது அவளை அவ்வளவாக அவன் கவனிப்பது இல்லை. அல்லது, அவளுக்கு அப்படி ஒரு பயம் வந்திருக்கிறது. யோசிக்கிறாள்.அன்று நடந்த அந்த கூடலுக்கு, சாட்சி யாரும் இல்லை. அவன் அப்படி எல்லாம் எங்களுக்குள் ஒன்றும் இல்லை என்று பொய் சொன்னால், நான் என்ன செய்ய முடியும்?

யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. அந்த ஓடைக்கு பக்கத்தில், செடிகளுக்கு பின்னால் ஒரு குருகு (பறவை) ஒன்று அங்கு நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தது"

என்று சொல்கிறாள் தலைவி.

எவ்வளவு வெகுளி (innocent)


பாடல்

“யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”

பொருள்

“யாரும் இல்லை;  = யாரும் இல்லை

தானே கள்வன்; = அவன் தான் களவாணிப் பயல்

தான் அது பொய்ப்பின் = அவன் (அன்று அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று) பொய் சொன்னால்

யான் எவன் செய்கோ? = நான் என்ன செய்ய முடியும் ?

தினைத்தாள் அன்ன = திணையின் ஓலை போல

சிறுபசுங் கால = பசுமையான கால்களை கொண்ட

ஒழுகுநீர் = நீர் ஒழுகும்

ஆரல் = ஆரல் என்று ஒரு வகை மீனைப்

பார்க்கும் = பிடிக்க பார்த்து இருக்கும்

குருகும் உண்டு = குருகு (ஒரு வித நீர் பறவை). நாங்கள் மட்டும் தனித்து இருந்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை, ஒரு குருகும்  இருந்தது. குருகு"ம்".

தான் மணந்த ஞான்றே!” = அவன் என்னை சேர்ந்த நாளில்

பாடலில் பல நுண்ணிய உணர்ச்சிகள் பொதிந்து கிடக்கிறது.

அவனுக்கோ, அவளைக் கூடுவதில் ஆசை, ஆர்வம், பதற்றம். வேறு ஒன்றைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால், அவளோ பயப் படுகிறாள். யாரவது  வந்து விடுவார்களோ,  பார்த்து விடுவார்களோ என்று சுத்தி முத்தும் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். அப்படி பார்க்கும் போது , செடி மறைவில் உள்ள குருகு அவள் கண்ணில் படுகிறது. "சீ, இந்த குருகு நம்மையே பார்க்கிறதே" என்று  நாணுகிறாள்.

அப்புறம் நினைக்கிறாள். குருகுக்கு என்ன தெரியும். அது நம்மை ஒன்றும் பார்க்கவில்லை,  அது ஆரல் மீனை பிடிக்க காத்திருக்கிறது. என்னை ஒன்றும் இந்தக் கோலத்தில் அது பார்க்கவில்லை என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்.


மேலும் அவள் மனதில் ஓடுகிறது, ஒருவேளை அந்த ஆரல் மீனின் கதிதானோ தனக்கும் என்று.

எல்லாம் முடிந்து விட்டது.

நாட்கள் கொஞ்சம் நகர்ந்து விட்டன.

"ஐயோ, அன்று நடந்ததற்கு ஒரு சாட்சியும் இல்லையே. அவன் மறுத்து விட்டால் நான்  என்ன செய்வேன்"

என்று ஒரு பெண்ணாக பரிதவிக்கிறாள்.  அவன் கள்வன், பொய் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன்  என்று மறுகுகிறாள்.

உதடு துடிக்க, சொல்லவும் முடியாமல், மனதுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியாமல், கண்ணில் நீர் தளும்ப "நான் என்ன செய்வேன்" என்று சொல்லி நிற்கும்  ஒரு இளம் பெண் நம் கண் முன்னே வருகிறது அல்லவா?

"பார்த்த சாட்சி யாரும் இல்லை, ஒரே ஒரு குருகுதான் இருந்தது அந்த இடத்தில்"  என்று சொல்லும் போது "ஐயோ, இந்த வெள்ளை மனம் கொண்ட பெண்ணை, அவன் கை விட்டு விடுவானோ" என்று நம் மனம் பதறுகிறது.

"கவலை படாதடா, அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது. அவன் வருவான்" என்று அடி வயிறு கலங்க அவளுக்கு ஆறுதல் சொல்லக் தோன்றுகிறது.

சம்மதிக்காவிட்டால், அவன் அன்பை இழக்க நேரிடலாம். அவனுக்கு கோபம் வரும். "என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா...இவ்வளவுதானா உன் காதலின் வலிமை "  என்று அவன் அவளுடைய காதலை பந்தயம் வைக்கலாம்.

சம்மதித்து விட்டால், பின்னால் கை விட்டு விட்டால், எதிர் காலமே ஒரு கேள்விக் குறியாகிவிடும்.

பெண்ணுக்கு இரண்டு புறமும் சிக்கல்தான்.

பெண்ணின் நிலைமையை தெளிவாக படம் பிடிக்கும் அதே நேரத்தில் , மற்ற பெண்களுக்கும்   "எச்சரிக்கை ...இந்த நிலை உனக்கு வரலாம் " என்று பாடமும் சொல்கிறது இந்தப் பாடல்.

பாடலை ரசிப்போம். பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_25.html

Wednesday, July 24, 2019

தேவாரம் - மனம் எனும் தோணி பற்றி

தேவாரம் - மனம் எனும் தோணி பற்றி 


கோபம் மற்றும் காமம்.

இவை பற்றி நமது இலக்கியங்கள் மிக மிக ஆழமாக பேசி இருக்கின்றன.

கோபமும் காமமும் உயிர்க் குணங்கள் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் மற்றைய குணங்கள் வெளியில் இருந்து உள்ளே வந்து நம்மைத் தூண்டுபவை. காமமும், கோபமும் நமக்குள்ளேயே இருந்து உள்ளிருந்து வெளியே செல்வன என்கிறார்கள்.

இராமாயணத்தில், விஸ்வாமித்ரன் , தயரதனிடம் தன்னுடைய வேள்வியை காக்க இராம இலக்குவனர்களை துணையாக அனுப்பு என்று கேட்கிறான். வேள்வியை யாரிடம் இருந்து காக்க வேண்டும் என்று கேட்கிறான் தெரியுமா ?

"அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்"

வெகுளி என்றால் கோபம். காமம் மற்றும் வெகுளி என்ற அரக்கர்களிடம் இருந்து என் வேள்வியை காப்பாற்ற இராம இலக்குவனர்களை தா என்று வேண்டுகிறான்.

வேள்விக்கு இடையூறு செய்பவர்கள் ஏதோ கருப்பா, குண்டா, கோரை பற்களோடு வரும் அரக்கர்கள் அல்ல. அது எல்லாம் ஒரு உவமை. உண்மையான இடையூறு எது தெரியுமா , நமக்குள் இருக்கும் காமமும் கோபமும் தான்.

“தரு வனத்துள் யான் இயற்றும்
    தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம
    வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின்
    சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
    இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்



எனக்கு காமம் பற்றி புரிகிறது. கோபம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக  புரிய ஆரம்பித்து இருக்கிறது.

கோபம் என்றால் ஏதோ கத்துவது, சாமான்களை தூக்கி எறிவது , சுடு சொல் கூறுவது , பிறர் மனம் புண் படும்படி பேசுவது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.

கோபம் என்பது மிக ஆழமான ஒன்று என்று அறியத் தொடங்கி இருக்கிறேன்.

கோபம் பிறர் மேல் மட்டும் வருவது அல்ல. நம் மேலேயே நமக்கு கோபம் வரலாம்.

நான் அழகாக இல்லை, நிறைய படிக்கவில்லை, நிறைய சம்பாதிக்க வில்லை, பேரும் புகழும் சேர்க்கவில்லை , நான் எல்லாம் எதுக்கு இலாயக்கு என்று  நம் மேலேயே நமக்கு கோபம் வரலாம். அந்த கோபம் மன அழுத்தம் (anxiety  ), மன பதட்டம் (nevousness ),  மனச் சோர்வு (depression ) என்று கொண்டு விடலாம்.

இவை நமக்கு எளிதில் புரிவதில்லை.


திருநாவுக்கரசர் சொல்கிறார் ....

"நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ   நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம்  மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு  சற்றே வழி மாற்றுகிறோம். அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த  சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அந்த தோணியில் என்ன சரக்கை ஏற்றுக் கொண்டு போகிறோம் தெரியுமா ? கோபம் என்ற சரக்கை ஏற்றிக் கொண்டு செல்கிறோம். அப்படி இந்த பிறவி என்ற பெரிய கடலில் நம் வாழ்க்கைப் படகு  செல்லும்போது , காமம் என்ற பெரிய பாறையில் அந்த படகு முட்டி தலை கீழாக  கவிழ்ந்து விடுகிறது. அந்த சமயத்தில், நடு கடலில், இருட்டில், எலும்பு  உறையும் குளிர்ந்த நீரில், உடைத்த படகோடு தத்தளிக்கும் போது, இறைவா, உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய் , ஒற்றியூர் உடைய கோவே "


பாடல்




மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

பொருள்

மனமெனும் தோணி பற்றி  = மனம் என்ற படகைப் பற்றிக் கொண்டு

மதியெனுங் கோலை ஊன்றிச் = அறிவு என்ற துடுப்பை ஊன்றி

சினமெனும் சரக்கை யேற்றிச் = சினம் என்ற சரக்கை ஏற்றி கொண்டு

செறிகட லோடும் போது = அடர்ந்த கடலில் போகும் போது  (பிறவிப் பெருங்கடல்)

மனனெனும் பாறை தாக்கி  = மன்மதன், காமம் என்ற பாறை தாக்கி

மறியும்போது = தலைகீழாக கவிழும் போது

அறிய  வொண்ணா = அறிந்து கொள்ள முடியாத

துனையுனு முணர்வை நல்கா = உனை உன்னும் உணர்வை நல்காய்

யொற்றியூ ருடைய கோவே. = ஒற்றியூர் உடைய கோவே

இறைவன் அறிவுக்கு அப்பாற்பட்டவன்.

அவனை அறிய முடியாது. உணர முடியும்.

"அறிய முடியாத உன்னை, உணர்வைத் தருவாய்" என்று வேண்டுகிறார்.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் , செல்வர் சிவ புரம் " என்பார் மணிவாசகர்.

"உலகெல்லாம் உணர்ந்து, ஓதற்கு அறியவன் " என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.


நாம் அறிவைப் பற்றிக் கொண்டு, உணர்ச்சிகளை விட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது.

உணர்ச்சிகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு தோன்றுகிறது.

எதையும், அறிவுக் கண் கொண்டு பார்க்கத் தோன்றுகிறது.

உணர்வுகளை கண்டு நாம் பயப்படுகிறோமோ என்று தோன்றுகிறது.

உளவியல் அறிஞர்கள் "emotional intelligence" பற்றி நிறைய பேசுகிறார்கள்.

நாவுக்கரசர் சொல்கிறார், அறிவின் துணையோடு செல்லும் போது காமம் என்ற  பாறையில் முட்டிக் கொள்கிறோம் என்று.

அறிவு ஏன் அந்த விபத்தை தடுக்கவில்லை?

அந்த சமயத்தில் கூட 'உனை அறியும் அறிவை நல்காய்" என்று அவர் கேட்கவில்லை.

"உனை உன்னும் உணர்வை நல்காய்" என்று வேண்டுகிறார்.

காமம் என்ற உணர்வால் தான், மனம் என்ற தோணி முட்டி உடைந்தது. பின் எதற்கு  "உனை உன்னும் உணர்வை நல்காய்" என்று மீண்டும் உணர்ச்சியை தா  என்று  கேட்கிறார்?

விளக்கம் கேட்கலாம் என்றால், அவர் இல்லை.

நாம் தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும் போல் இருக்கிறது.

தேவாரத்தில், ஒரு பாடலுக்குள் இவ்வளவு இருக்கும் என்றால், முழுவதிலும் எவ்வளவு இருக்கும்?

நேரம் கிடைக்கும் போது, மூல நூலை படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_24.html

Monday, July 22, 2019

அபிராமி அந்தாதி - அறிந்தேன் எவரும் அறியா மறையை

அபிராமி அந்தாதி - அறிந்தேன் எவரும் அறியா மறையை 


நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்?

அதை சாதித்தவர்களை கண்டு, அவர்களிடம் அறிவுரை பெறுவோம். அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் , எப்படி செய்கிறார்கள் என்று அறிந்து கொண்டு அது போல செய்ய முயற்சி செய்வோம்.

நமக்கு ஆயிரம் சந்தேகங்கள் இருக்கிறது. இந்த கடவுள், வேதம், சுவர்க்கம், நரகம், என்றெல்லாம் பல விஷயங்கள் மேல் சந்தேகம் இருக்கிறது.

யாரிடமாவது போய் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றால் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வருகிறது

பட்டர் சொல்கிறார் ....

"நான் அறிந்து கொண்டேன். எதைத் தெரியுமா ? யாருமே அறிந்திராத மறைப் பொருளை. அறிந்த பின் என்ன செய்தேன் தெரியுமா ? அபிராமி உனது திருவடிகளை பற்றிக் கொண்டேன். அது மட்டும் அல்ல பயம் கொண்டு பிரிந்தேன். யாரைப் பிரிந்தேன் தெரியுமா ? உன்னுடைய அன்பர்களின் பெருமையை அறியாத, நரகத்தில் விழ இருக்கும் மனிதர்களை"

பாடல்


அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.


பொருள்

அறிந்தேன், = அறிந்து கொண்டேன். துணிவாகச் சொல்கிறார். எனக்குத் தெரியும். நான் அறிவேன் என்கிறார்.

எவரும் = வேறு யாரும்

அறியா மறையை = அறியாத மறை பொருளை

அறிந்துகொண்டு = அறிந்து கொண்டு

செறிந்தேன் = நெருங்கினேன்

நினது திருவடிக்கே = உனது திருவடிகளுக்கே

திருவே. = சிறந்தவளே

வெருவிப் = பயந்து

பிறிந்தேன் =  பிறிந்தேன்

நின் = உன்

அன்பர் = அன்பர்கள்

பெருமை எண்ணாத  = பெருமையை நினைக்காத

கரும நெஞ்சால் = கர்மம் செய்யும் நெஞ்சால்

மறிந்தே = தலைகீழாக

 விழும் = விழும்

நரகுக்கு  = நரகத்துக்கு

உறவாய = உறவான

மனிதரையே. = மனிதர்களையே


தீயவர்களைக் கண்டால் பயந்து ஓடி விட வேண்டும் என்கிறார்.

படித்தவர்தான், அறிவாளிதான், அம்பாளின் அருள் பெற்றவர்தான், இருந்தும், தீயவர்களைக் கண்டால் "வெருவிப் பிறிந்தேன்" என்கிறார்.

பயந்து விலகி விட வேண்டும்.

தீயவர்கள் என்றால் ஏதோ, பெரிய கடா மீசை வைத்துக் கொண்டு, கன்னத்தில் ஒரு வெட்டுத் தழும்போடு, கையில் துப்பாக்கி வைத்து இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது.

நேரத்தை வீணே செலவழிப்பவர்கள், பொய் பேசி திரிபவர்கள், கோபம், காமம், ஆணவம் , பொறாமை போன்ற தீய குணங்கள் கொண்டவர்கள், வெட்டி அரட்டை பேசுபவர்கள் , ஒழுக்கம் தவறி நடப்பவர்கள் எல்லோருமே தீயவர்கள்தான்.

நல்லவர்களோடு சேர்ந்தேன்

தீயவர்களை விட்டு விலகினேன் என்கிறார்.

நல்லவர்களைத் தேடி கண்டு பிடித்து அவர்களோடு சேர்வது என்பது கடினமான காரியமாக  இருக்கலாம்.

தீயவர்களை விட்டு விலகி விடுவது அப்படி ஒன்றும் கடினமான காரியம் இல்லையே?

பட்டியல் போடுங்கள். உங்கள் வட்டத்தில் உள்ள தீயவர்களை. களை எடுங்கள்.




https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_31.html

கம்ப இராமாயணம் - தோள் நிமிர்த்த வலியோனே

கம்ப இராமாயணம் - தோள் நிமிர்த்த வலியோனே


காதும், மூக்கும், முலைகளும் , இலக்குவனால் அறுபட்ட சூர்ப்பனகை அவளுடைய அண்ணனான இராவணனை கூப்பிட்டு முறை இடுகிறாள்.

சூர்ப்பனகை சொல்கிறாள்

"உருவம் பொடி பொடியான மன்மதனை ஒத்து இருக்கின்றனர். இருந்தாலும், அவர்கள் உன் செருப்பில் ஒட்டியுள்ள துகளுக்கு இணையாவார்களா? மாட்டார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை நீ கோபிக்க மாட்டாயா. எட்டு திக்கு யானைகளின் தந்தம் ஒடிய, இமய மலை இடிய , தோள் நிமிர்த்த வலியோனே"

பாடல்

உருப் பொடியா மன்மதனை ஒத்துளரே ஆயினும், உன்
செருப்பு அடியின் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ?
நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடிய, பொருப்பு இடிய, தோள் நிமிர்த்த வலியோனே! 

பொருள்

உருப்  = உருவம்

பொடியா = பொடிப் பொடியான

மன்மதனை = மன்மதனை

ஒத்துளரே ஆயினும் = ஒத்து இருந்தாலும்

உன் = உன்னுடைய

செருப்பு = செருப்பின்

அடியின்  = அடியில் ஒட்டி இருக்கும்

பொடி = தூசிக்கு

ஒவ்வா = இணையாகாத

மானிடரைச்  = மானிடர்களை

சீறுதியோ? = கோபம் கொள்ள மாட்டாயா

நெருப்பு அடியில் = காலின் கீழே நெருப்பு

பொடி சிதற = பொடி பொடியாக சிதற

நிறைந்த = பெரிய

மதத் = மதம் கொண்ட

திசை யானை = எட்டு திக்கு யானைகளின்

மருப்பு ஒடிய = தந்தம் ஒடிய

பொருப்பு = மலை, இமய மலை

இடிய = இடியும்படி

தோள் நிமிர்த்த வலியோனே!  = தோள்கள் நிமிர்த்த வலைமையானவனே

வலிமை இருந்தால் அதை சரியான இடத்தில், தேவையான அளவு பயன் படுத்த வேண்டும்.

இராவணனுக்கு அளவு கடந்த ஆற்றல் இருந்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை.

சிவன் இருக்கும் கைலாய மலையை தூக்கிக் கொண்டு போனால் என்ன என்று நினைத்தான். நினைத்தது மட்டும் அல்ல, அந்த மலையை தூக்கினான். சிவன், தன் கால் கட்டை விரலால் அழுத்தவே, அதன் கீழே மாட்டிக் கொண்டு திணறினான். கொழுப்பு.

அது மட்டும் அல்ல,

யாரிடம் சண்டை போடுவது என்று அலைந்தான். அவனை எதிர்க்க யாருமே இல்லை. பார்த்தான், அட்ட திக்கு யானைகளிடம் சண்டைக்குப் போனான். அந்த யானைகள் அவன் மார்பில் தங்களுடைய தந்தத்தினால் முட்டின . தந்தங்கள் அவன் மார்பை துளைத்து  உள்ளே சென்றன. வெளியே எடுக்க முடியவில்லை. அப்படியே உடைத்தான். அந்த தந்தங்கள் அவன் மார்பில் துளைத்து நின்று விட்டன.

தேவையா ?

அபரிமிதமான செல்வமும், வலிமையையும் இருந்தால் மனம் சும்மா இருக்காது போல. அதை வைத்துக் கொண்டு என்னடா செய்யலாம் என்று அலையுமோ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_22.html


Sunday, July 21, 2019

நள வெண்பா - பெண்ணிடம் பணியாதார் யார்?

நள வெண்பா - பெண்ணிடம் பணியாதார் யார்?


பெண்ணின் கை தீண்டலுக்கு பணியாதவர் யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறார் நளவெண்பா எழுதிய புகழேந்தி.

பெண் தொட்டால் போதும், அந்த தொடுகைக்கு அவ்வளவு சக்தி உண்டு. அது தொடுபவரை, அந்த அன்பில், கருணையில் பணிய வைக்கும்.

அதுதான் பெண்ணின் சக்தி. பெருமை.

அது பெண், பெண்ணாக இருக்கும் வரை. ஆனால், கால மாற்றத்தில் பெண்கள், நாங்களும் ஆண்கள் போல ஆக வேண்டும் என்று மாறி வருகிறார்கள்.

நாங்களும் குஸ்தி போடுவோம், கமாண்டோ படையில் சேர்வோம், என்று ஆணுக்கு நிகராக, ஆணாகவே ஆக விரும்புகிறார்கள்.

அப்படித்தான் வேண்டும் என்றால், இயற்கை ஏன் ஆண் , பெண் என்று இரண்டு இனத்தைப் படைக்க வேண்டும்?  எல்லாம் ஆணாகவே படைத்து விட்டுப் போய் விடலாமே.

ஆண் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், பல சாலியாக இருந்தாலும், பெண்ணின் கை பட்ட மாத்திரத்தில் அவள் காலில் விழுவான் என்கிறார்.

அது படைப்பின் நோக்கம்.

வலிமையான ஆணை, மென்மையான பெண்ணின் முன் மண்டியிட வைத்தது இயற்கையின் பேராற்றல்.

இதை அறிந்து கொள்ளாமல், பெண்கள் அந்த பேராற்றலை விட தங்களுக்கு நிறைய தெரியும் என்று ஏதேதோ செய்து வருகிறார்கள்.


சரியா தவறா என்று காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

நளனும் தமயந்தியும் தேரில் வந்து கொண்டு இருக்கிறார்கள். வரும் வழியில் உள்ள சோலைகளில், பெண்கள் பூ பறித்துக் கொண்டிருக்கிறார்கள். கிளையின் மேலே உள்ள பூக்களைப் பறிக்க அவர்கள் அந்த கொம்பை சற்றே இழுத்து வளைக்கிறார்கள். அதை கண்ட புலவனின் மனதில் கற்பனை பிறக்கிறது.

பெண்களின் கை பட்டதால், அந்த மரமே தாழ்ந்து அவர்களின் காலில் விழுந்த மாதிரி இருந்தது என்கிறான். பெண்ணின் கை பட்டால் யார் தான் பணிய மாட்டார்கள், இந்த பூ மரம் மட்டும் என்ன விதி விலக்கா என்று கேட்கிறான்.

பாடல்

‘பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே?
பூவையர்கை தீண்டலும்ப் பூங்கொம்பு – மேவியவர்
பொன்னடியில் தாழ்ந்தனவே பூங்குழலாய்!காண்! என்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.


பொருள்

‘பாவையர்கை = பெண்களின் கை

தீண்டப் = தீண்டினால்

பணியாதார் யாவரே? = அதற்கு பணியாதவர் யார்? (ஒருவரும் இல்லை)

பூவையர்கை = பெண்களின் கை

தீண்டலும்ப் = தீண்டப் பட்டவுடன்

பூங்கொம்பு  = மரத்தில் உள்ள பூங்கொம்பு

மேவியவர் = அந்த பெண்களின்

பொன்னடியில் = பொன் போன்ற அடிகளில்

தாழ்ந்தனவே = தாழ்ந்து வந்தது

பூங்குழலாய்!காண்!  = பூங்குழலாய் (தமயந்தியே ) கான்

என்றான் = என்று கூறினான் (நளன் )

மின்னெடு = மின்னல் போன்ற

வேற் கையான் = வேலை கையில் கொண்டவன்

விரைந்து. = வேகமாக

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_21.html

Saturday, July 20, 2019

நாலடியார் - யானும் அதனை அது

நாலடியார் - யானும் அதனை அது 



செல்வத்தை சேர்க்கத் தெரிய வேண்டும், அனுபவிக்கத் தெரிய வேண்டும், சேமிக்கத் தெரிய வேண்டும்.

இந்த மூன்றும் தெரிந்தவர் உலகில் மிகச் சிலரே.

சிலர் நன்றாக சம்பாதிப்பார்கள். ஆனால், சம்பாதித்த செல்வத்தை அனுபவிக்கத் தெரியாமல் இருப்பார்கள்.

சிலர் தாட் பூட் என்று செலவழித்து அனுபவிப்பார்கள், செல்வத்தை சம்பாதிக்கத் தெரியாது. கடனை உடனை வாங்கி ஆடம்பரமாக வாழ்வார்கள்.

சம்பாதித்தாலும், செலவழித்தாலும், பிற் காலத்துக்கு வேண்டுமே என்று சரியான வழியில் அதை முதலீடு செய்யத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே.

சாலையில் ஒரு ஏழை போய்க் கொண்டிருந்தான். அந்த சாலையில் ஒரு பெரிய பணக்காரன் வீடு இருந்தது. அந்த வீட்டில், அந்த வீட்டின் உரிமையாளனான பணக்காரன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான்.

அவனைப் பார்த்த அந்த ஏழைப் பிச்சைக்காரன் சொன்னான்

"நானும் அவனும் ஒன்று" என்று.

"அது எப்படி நீயும் அவனும் ஒன்றாக முடியும். அவனோ பத்து தலைமுறைக்கு  சொத்து சேர்த்து வைத்திருக்கிறான். உன்னிடமோ அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழி இல்லை.  நீங்கள் இரண்டு பேரும் எப்படி ஒன்றாக முடியும்" என்று கேட்டார்கள்.

பிச்சைக்காரன், "அந்தப் பணக்காரன் அவன் வைத்திருக்கும் பொருளை என்னுடையது என்னுடையது என்று சொல்லிக் கொண்டு திரிகிறான். நானும் எனது பொருளை எனது எனது என்று சொல்லித் திரிகிறேன்.  அவனிடம் உள்ளை செல்வத்தை அவன் யாருக்கும் வழங்குவது இல்லை. நானும் என்னிடம் உள்ள செல்வத்தை யாருக்கும் கொடுப்பது இல்லை. அவன் தன்னுடைய செல்வத்தை அனுபவிக்காமல் இருக்கிறான். நானும், என் செல்வத்தை அனுபவிக்காமல் இருக்கிறேன். எங்களுக்குள் என்ன பெரிய வேறுபாடு ?"

என்கிறான்.

நகைச்சுவையான அந்தப் பாடல்

எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை
எனதென தென்றிருப்பன் யானும்;- தனதாயின்
தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்;
யானும் அதனை அது.


பொருள்


எனதென தென்றிருக்கும் = எனது எனது என்று இருக்கும்

ஏழை = ஏழை

பொருளை = பொருளை

எனதென தென்றிருப்பன் யானும்; = எனது எனது என்று இருப்பேன் நானும்

தனதாயின் = அவனுடையது என்றால்

தானும் அதனை வழங்கான்  = அவன் அதை மற்றவர்களுக்கு கொடுக்க மாட்டான்

பயன்துவ்வான்; = அந்த செல்வத்தின் பயனை அவனும் அனுபவிக்க மாட்டான்

யானும் = நானும்

அதனை = அதே போல்

அது. = அதைச் செய்கிறேன்.

பணக்காரனிடம், பணம் இருக்கிறது.

நல்ல பெரிய கார் வாங்கலாம் - வாங்கவில்லை, ஆட்டோவில் போய் வந்து கொண்டிருக்கிறான் என்று   வைத்துக் கொள்வோம். அவனுக்கும், அதே போல்  ஆட்டோவில் போய் வந்து கொண்டிருக்கும் ஏழைக்கும் (பிச்சை காரனாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை )  என்ன வித்தியாசம்.

ஏழை மற்றவர்களுக்கு தானம் செய்ய முடியாது.  அவனிடம் போதிய பணம் இல்லை.

பணக்காரன் தானம் செய்ய மாட்டான். இருவருக்கும் என்ன வித்தியாசம்.

பணம் இருந்தால் அனுபவிக்க வேண்டும். மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.

இரண்டும் இல்லை என்றால், அந்த பணம் இருந்தும் ஒன்று தான், இல்லாததும் ஒன்றுதான்.

அனுபவிக்கவும், தானம் செய்யவும் தெரியாத பணக்காரன் , ஏழைக்கு சமம் என்கிறது  இந்த நாலடியார்.

பணம் இருந்தால், அனுபவியுங்கள், முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_20.html


Thursday, July 18, 2019

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்

திருவாசகம்  - பால் நினைந்து ஊட்டும்



சில நாட்களுக்கு முன்னால், "பால் நினைந்து ஊட்டும்" என்ற திருவாசக பாடல் பற்றி ஒரு பிளாக் எழுதி இருந்தேன்.

அதன் இணைப்பு கீழே.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_16.html

இதைப் படித்துவிட்டு ஒரு நண்பர் எழுதி இருந்தார், "இராம கிருஷ்ண பரமஹம்சராக இருந்தாலும் சரி அது யாராக இருந்தாலும் சரி, ஆண்களுக்கு மார்பில் பால் சுரக்க வழி இல்லை" என்று.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம் உண்டு.

ஆண்களுக்கு ஏன், பெண்களுக்கு இருப்பது போல் மார்பில் காம்புகள் இருக்கின்றன. அந்த கரிய இரண்டு, ஐம்பது பைசா நாணயம் போல, மார்புகள் ஏன் இருக்கின்றன என்று.

ஆண்கள், குழந்தைகளுக்கு பால் தரவில்லை என்றால், பின் மார்பகங்களுக்கு எதற்கு ?

நம்முடைய வளர்ச்சியில், ஒரு காலகட்டத்தில் ஆண் பெண் இருவரும் குழந்தைகளுக்கு பால் தந்திருக்க வேண்டும். நாளடைவில், ஆண்கள் வேட்டையாட வெளியே நிறைய  சுத்த வேண்டி இருந்ததால், அதன் தேவை சுருங்கி சுருங்கி  வெறும் தடயம் மட்டுமே இருக்கிறது இப்போது என்று
பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் கூறிய சார்லஸ் டார்வின் கூறுகிறார்.

https://en.wikipedia.org/wiki/Male_lactation



Darwin later considered the nearly perfect function of male nipples in contrast to greatly reduced structures such as the vesicula prostatica, speculating that both sexes may have nursed young in early mammalian ancestors, and subsequently mammals evolved to inactivate them in males at an early age


While male mammals could, in theory, improve offspring's survival rate through the additional nourishment provided by lactation, most have developed other strategies to increase the number of surviving offspring, such as mating with additional partners. 


ரொம்ப நாள் பட்டினி கிடந்த பின், உணவு உண்ண ஆரம்பித்தால், ஆண்களுக்கும் பால் சுரக்கும்  என்கிறது மேலே சொன்ன விக்கிபீடியா கட்டுரை.

Male lactation has also been seen during recovery from starvation. This may be because glands that produce hormones recover faster than the liver, which absorbs hormones, leading to high hormone levels.

சில குறிப்பிட சமயங்களில் ஆண்களுக்கும் பால் சுரக்கும். Stress அதிகமானால் பால் சுரக்குமாம். பக்தி பற்றி இந்த கட்டுரை ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வேளை ஆராய்ச்சி செய்திருந்தால் ஏதாவது தெரிந்திருக்குமோ என்னவோ. 


Male mammals of many species have been observed to lactate under unusual or pathogenic conditions such as extreme stress, castration and exposure to phytoestrogens, or pituitary tumors

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_14.html



குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ

குசேலோபாக்கியானம் - கை விரித்து கவித்தரோ 




நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

உயர்ந்த நூல்களை படிக்கும் போதெல்லாம் எப்படி அதன் உன்னதம், மகிமை, சிறப்பு நமக்குப் புரிகிறதோ அது போல நல்ல பண்பு உள்ளவர்களின் நட்பு ஒவ்வொரு முறை அவர்களோடு தொடர்பு கொள்ளும் போதும் நமக்கு ஒரு புது உற்சாகத்தை, மகிழ்ச்சியைத் தரும். 

தமிழில் அது போன்ற உயர்ந்த இலக்கியங்கள் பல இருக்கின்றன. ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அதில் இருந்து புது புது அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். படிப்பவரின் மன நிலையை பொறுத்து அதில் அர்த்தங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். 

சில பல நாட்களுக்கு முன் குசேலோபாக்கியானத்தில் இருந்து ஒரு பாடலுக்கு பிளாக் எழுதி இருந்தேன் 

அதாவது, கண்ணனைப் பார்க்கப் போகும் போது, வழியில் உள்ள ஈ எறும்புகளுக்கு தன்னால் துன்பம் வந்து விடக் கூடாதே என்று அவை நடக்கும் மர நிழலைத் தவிர்த்து, வெயிலில், தலைக்கு மேல் கையை வைத்துக் கொண்டு நடந்து போனாராம் குசேலர். 



சீத நீழற் செலிற்சிற் றுயிர்தொகை
போதச் சாம்பும்மென் றெண்ணிய புந்தியான்
ஆத வந்தவழ் ஆறு நடந்திடுங்
காத லங்கை விரித்துக் கவித்தரோ.

பொருள்

சீத = குளிர்ந்த

நீழற் = நிழல்

செலிற் = செல்லும்

சிற் றுயிர் = சின்ன உயிர். ஈ எறும்பு போன்றவை

தொகை = கூட்டம்

போதச்  = அறிவு. இங்கே அறிந்து அல்லது எண்ணி என்று கொள்ளலாம்

 சாம்பும் = வருந்தும்

மென் றெண்ணிய = என்று எண்ணிய

புந்தியான் = புத்தி உள்ளவன்

ஆத வந்தவழ் = ஆதவன் + தவழ் = சூரியன் தவழும்

ஆறு = வழி

நடந்திடுங் காதல்  = நடக்க விரும்பி

அங்கை = அவருடைய கையை

விரித்துக் = விரித்து

கவித்தரோ. = குடை போல கவிழ்த்துக் கொண்டார்


அன்று தோன்றியது, "அடடா எவ்வளவு பெரிய கருணை உள்ளம். ஜீவ காருண்யம்" என்று. 

மீண்டும் ஒரு முறை அந்தப் பாடலை நினைத்துப் பார்க்கிறேன். 


இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் நித்தமும் இறைவனிடம் பக்தர்கள்  வேண்டுகிறார்கள். 

இறைவன் அவர்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்ப்பானா? எப்படி இறைவனின் கருணையை பெறுவது?

முதலில் நாம் கருணை செலுத்த பழக வேண்டும். 

கோவிலுக்கு போகும் வழியில் உள்ள பிச்சைக்காரனை கண்டால் அவன் மேல்  வெறுப்பும், கோபமும் வருகிறது. "வந்துட்டானுக ...நிம்மதியா சாமி கும்பிட  முடியுதா..." என்று எரிச்சல் வருகிறது. 

உள்ளே போய் "ஆண்டவா, எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு " என்று பிச்சை  எடுத்தால் ஆண்டவன் என்ன நினைப்பான். "நிம்மதியா இருக்க விடுறானுகளா ...வந்துட்டானுக காலங் காத்தால ...கைலாயம் கொடு, பாற்கடல் கொடு, சொர்ககம் கொடுனு ...பிச்சைக்கார பசங்க" என்று தானே ஆண்டவனும்  நினைப்பான். 

வீட்டில் வேலை செய்பவர்களிடம் நாம் எவ்வளவு அன்போடு இருக்கிறோம்? நமக்கு கீழே வேலை செய்பவர்களிடம் எவ்வளவு கருணை இருக்கிறது நம்மிடம்.  

வயதான காலத்தில், சாலையை மெதுவாக கடக்கும் முதியவர் மீது எவ்வளவு கோபம்  வருகிறது. 

அவ்வளவு ஏன், வயதான பெற்றோர், தாத்தா பாட்டி மேல் எவ்வளவு பேர் அன்போடு இருக்கிறார்கள்? "கிழத்துக்கு காதும் கேக்காது, கண்ணும் தெரியாது ...நம்ம உயிரை வாங்குது" 

எங்கிருந்து இறை அன்பு கிடைக்கும். 

கண்ணனின் அருள் வேண்டி சென்ற குசேலர், ஈ எறும்புகளின் மேல் அன்பு செலுத்தினார். அவற்றின் மேல் கருணை கொண்டார். தான் துன்பப் பட்டாலும் பரவாயில்லை, அந்த சிறிய உயிர்கள் துன்புறக் கூடாது என்று நிழலை தவிர்த்து  வேகாத வெயிலில் நடந்தார்.

அவருக்கு கண்ணனின் அன்பு முழுவதும் கிடைத்தது. 

இறைவன் ஒரு படி மேலே. 

கொஞ்சம் கீழே வருவோம். 

"என் மேல் யாருக்கும் அன்பு இல்லை. யாரும் என்னை நேசிக்க மாட்டேன் என்கிறார்கள். உண்மையான காதல் என்பதை நான் சினிமாவிலும் புத்தகங்களிலும் தான்  படித்து இருக்கிறேன். அனுபவித்தது இல்லை. " 

என்று பலர் ஏங்குவார்கள். 

என் உதவி வேண்டும். ஆனால், என் மேல் அன்பு செலுத்துவோர் யாரும் இல்லை  என்று தனிமையாக உணர்வார்கள். 

அவர்களுக்கும் இது ஒரு பாடம். 

நீங்கள் முதலில் அன்பை செலுத்தப் படியுங்கள். உங்களுக்கு அன்பு வந்து சேரும். 

ஒரு பலனும் எதிர் பார்க்காமல், கன்னுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் மேல்  அன்பு  செலுத்தினார் குசேலர்.

பலன் கருதாமல் எத்தனை பேர் மேல் நீங்கள் அன்பு செலுத்துகிறீர்கள்?

மற்றவர்களிடம் இருந்து அன்பும், காதலும், இறைவனிடம் இருந்து கருணையும் வேண்டுமா?  முதலில் நீங்கள் மற்ற உயிர்கள் மேல் அன்பு செலுத்தப் படியுங்கள். 

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும்  என்று வேண்டிய வள்ளலார், முதலில் வேண்டியது "ஆருயிர்க்கெலாம் நான் அன்பு செய்ய வேண்டும்" என்று. 


அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.


அன்பை அள்ளி அள்ளி கொடுங்கள். 

அது திரும்பி வரும்.


Tuesday, July 16, 2019

திருவாசகம் - பால் நினைந்து ஊட்டும்

திருவாசகம்  - பால் நினைந்து ஊட்டும் 


பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, 
பாவியேனுடைய ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, 
உலப்பு இலா ஆனந்தம் ஆய தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; 
எங்கு எழுந்தருளுவது, இனியே?

முன்பு எப்போதோ எழுதிய ப்ளாக் லிங்க் கீழே உள்ளது.


http://interestingtamilpoems.blogspot.com/2014/07/blog-post_9060.html

இப்போது எழுத நினைத்தது வேறு.

பால் நினைந்து ஊட்டும்.

குழந்தைக்கு பசிக்குமே என்று, குழந்தை அழு முன் அவளுக்கு பால் தரும் தாய் என்று ஒரு பொருள்.

பால் தர வேண்டுமே தர வேண்டுமே நினைப்பால் அவளுக்கு பால் சுரக்கிறது.

இன்றைய கால நெருக்கடியில் பெரும்பாலான பெண்களுக்கு குழந்தை பிறந்த பின் பால் தருவதற்கு போதிய காலம் விடுப்பு கிடைப்பதில்லை. அவளின் நினைப்பு எல்லாம், "இன்னும் இரண்டு அல்லது மூணு மாதத்தில்  வேலைக்குப் போக வேண்டும். விடுமுறை தீர்ந்து விடும். அதற்கு முன்பே பிள்ளைக்கு  புட்டி பாலை பழக்க படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் பின்னால்  பிள்ளை ரொம்ப சிரமப் படுவான்/ள்" என்று எண்ணம் எல்லாம்  புட்டி பாலின் மேலேயே இருக்கிறது.  எவ்வளவு சீக்கிரம் புட்டி பாலுக்கு மாற்ற முடியுமோ  அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது என்று நினைக்கிறாள்.

எங்கிருந்து பால் சுரக்கும்?

அது ஒருபுறம் இருக்க, சில பெண்கள், சிறுபான்மை பெண்கள், பால் கொடுத்தால்  அழகு கெட்டு விடும் என்று நினைக்கிறார்கள். அதனால், எப்படி கொடுப்பதை  குறைக்கலாம், எவ்வளவு சீக்கிரம் நிறுத்தலாம், என்றே எண்ணம்  ஓடுகிறது.

எங்கிருந்து பால் சுரக்கும்?

"பால் நினைந்து" என்றார் மணிவாசகர்.

புட்டியை நினைந்து என்றோ, அழகை நினைந்து என்றோ சொல்லவில்லை.

காலத்தின் கட்டாயம் தாய்மையின் இயற்கை உணர்வும் தடம் மாறிப் போய் கொண்டிருக்கிறது.

நான் சொல்ல வந்தது அது அல்ல.

பால் தர வேண்டும் என்று நினைத்தால் பால் சுரக்கும்.

இராம கிருஷ்ண பரமஹம்சர், கல்கத்தா காளியை நினைத்து உருகுவாராம். அப்போது அவருக்கு பால் சுரக்குமாம்.


மனதில் என்ன நினைக்கிறோமோ அது நடக்கும்.

நடந்தே தீரும்.

ஒன்று நடக்க வேண்டும் என்றால், அதை மனதில் தீவிரமாக நினைக்க வேண்டும்.

மனதில் நினைப்பது மாதிரி உடல் மாறும். உடல் என்றால் உடல் மட்டும் அல்ல, நம் அறிவும், ஆற்றலும், திறமையும் எல்லாம் மாறும்.

இலக்குவன்  கானகம் போக விடை கேட்டு நிற்கிறான். "இராமன் திரும்பி வந்தால்  அவனுடன் வா. இல்லையேல், அவனுக்கு முன் நீ முடி" என்று விடை கொடுத்து  அனுப்புகிறாள்.

அவள் தாய்மை பொங்கி வருகிறது. அந்த நிலையில் அவளுக்கு பால் சுரந்தது  என்கிறான் கம்பன்.


பின்னும் பகர்வாள், ‘மகனே!
    இவன் பின் செல்; தம்பி
என்னும்படி அன்று; அடியாரினில்
    ஏவல் செய்தி;
மன்னும் நகர்க்கே இவன் வந்திடின்
    வா; அது அன்றேல்
முன்னம் முடி; ‘ என்றனள்
    பால் முலை சோர நின்றாள்.


அத்தனை வயதில் பால் சுரக்க வாய்ப்பில்லை. இருந்தும், மனதில் பிறந்த  மகன் மேல் உள்ள காதலால் பால் சுரந்தது. 

நாம் எதை நினைக்கிறோமோ, அதை முடித்துக் கொடுக்கும் வன்மை நம் மனதுக்கு உண்டு. 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் 
திண்ணியர் ஆகப் பெறின் 

நினைத்தது, நினைத்தபடியே நடக்கும் என்று வள்ளுவர் உறுதி கூறுகிறார். 

வெள்ளத்து அணையது மலர் நீட்டம் மாந்தர் தம் 
உள்ளத்து அணையது உயர்வு 

என்பதும் அவர் வாக்கே. 

"நினைவு நல்லது வேண்டும் " என்பான் பாரதி. 

எவ்வளவு பெரிய ஆளாக வேண்டும் ? பணம், செல்வாக்கு, புகழ், முக்தி என்று என்று எது வேண்டுமோ....அதை கேளுங்கள். 

கேளுங்கள் கொடுக்கப்படும் என்றார் இயேசு பிரான். 

தெளிவாக கேளுங்கள். என்ன வேண்டும், எவ்வளவு வேண்டும் என்று கேளுங்கள். நம்பிக்கையோடு கேளுங்கள். 

"திண்ணியராகப் பெறின்" என்பதுதான் இங்கே முக்கியம். 

நம்பிக்கை. உறுதி. 

எதை நினைக்கிறோம், அது நடந்தே தீரும். 

"பால் நினைந்து" ஊட்டும்.

மணிவாசகரின் இரண்டு வார்த்தைக்குள் எவ்வளவு பெரிய பேருண்மை புதைந்து  கிடக்கிறது. 

திருவாசகம் முழுவதும் படித்தால்?.....

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_16.html

Thursday, July 11, 2019

கம்ப இராமாயணம் - மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ?

கம்ப இராமாயணம்  -  மானுடவர்க்கு ஆற்றாது மாற்றினையோ?


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் வெட்டுப்பட்ட சூர்ப்பனகை வலியில் தன் அண்ணனான இராவணனை அழைக்கிறாள்.

"இராவணா, நீ தேவர்களையெல்லாம் வென்று அவர்களை அடிமைப் படுத்தி வேலை வாங்கினாய். அப்படிப்பட்ட நீ, இந்த மானிடர்களுக்கு முன் வலிமையை காட்டாமல் மாற்றி வைத்து விட்டாயா? இதற்காகவா உன் கையில் சிவன் தந்த வாள் இருக்கிறது?"

என்று அழுது புலம்புகிறாள்.

பாடல்


காற்றினையும், புனலினையும்,
    கனலினையும், கடுங் காலக்
கூற்றினையும், விண்ணினையும்,
    கோளினையும், பணி கோடற்கு
ஆற்றினை நீ, ஈண்டு இருவர்
    மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ? உன் வலத்தைச்
    சிவன் தடக்கை வாள் கொண்டாய்!

பொருள்


காற்றினையும் = வாயு பகவானையும்

புனலினையும் = வருண பகவானையும்

கனலினையும் = அக்கினி பகவானையும்

கடுங் காலக் கூற்றினையும் = எமனையும் (கூற்றுவன் , உடலையும், உயிரையும் கூறு போட்டு பிரிப்பவன்)

விண்ணினையும் = ஆகாயத்தையும்

கோளினையும் = நவ கோள்களையும்

பணி  = வேலை

கோடற்கு = செய்வதற்கு

ஆற்றினை நீ = செய்செய்வித்தாய் நீ

ஈண்டு = இன்று

இருவர் = இருவர்

மானுடவர்க்கு = மானிடற்கு

ஆற்றாது = போருக்க முடியாமல்

மாற்றினையோ? = மாற்றி வைத்து விட்டாயா ? (எதை மாற்றி வைத்து விட்டான்)

உன் வலத்தைச் = உன் வலக்கையில்

சிவன் = சிவன்

தடக்கை = பெரிய கை, பெருமை வாய்ந்த கை

வாள் கொண்டாய்! = வாள் கொண்டாய் (வாளை மறைத்து வைத்து விட்டாயா என்று கேட்கிறாள்)

இந்தப் பாடலில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? இதைத் தெரிந்து நமக்கு என்ன  பலன்.  இதைப் போய் வேலை மெனக்கெட்டு எதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும்?

 நாம், நாம் இருக்கும் இடத்தில் இருந்து மற்றவற்றை எடை போடுகிறோம். மற்றவர்களை , நம் கோணத்திலேயே புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்.

என்னுடைய நிலை தாழ்வாக இருந்தால், என் உயரத்துக்கு எது தெரியுமோ, அதுதான்  உண்மை என்று நாம் நினைக்கிறோம்.

அது மட்டும் அல்ல, அதற்கு மேலாக எதுவும் இருந்தால், அவற்றை என்னுடைய  அளவுக்கு கீழே இரக்க முயற்சி செய்வேன். என்னை விட, என் அறிவின்  வீச்சை விட பெரியது என்ன இருக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.

நான், இவற்றை நேரில் கண்டிருக்கிறேன்.

"தீயவர்களோடு சேராதே" என்று திருக்குறள் சொல்கிறது என்று சொன்னால், "அப்படி என்றால் அந்த தீயவர்களை எப்படித்தான் திருத்துவது? நாம் அவர்களோடு  சேர்ந்து பழகி அவர்களை திருத்த வேண்டாமா" என்று கேட்பவர்களை  நான் பார்த்து இருக்கிறேன்.

அதாவது, திருக்குறள் என்ன பெரிய புத்தகமா? நான் அதை விட பெரிய ஆள் என்று  அவர்களுக்கு நினைப்பு.

சூர்ப்பனகை நினைக்கிறாள் இராம இலக்குவனர்களை மானிடர்கள் என்று. அவள்  அறிவுக்கு எட்டியது அவ்வளவு தூரம் தான்.

கண்ணனை இடையன் என்று சொல்லிக் கெட்டான், துரியோதனன் என்ற மடையன்.

முருகனை சிறு பாலகன் என்று சொல்லிக் கெட்டான் சூரபத்மன் என்ற  மூடன்.

இராமனை மானிடன் என்று சொல்லிக் கெட்டான் இராவணனும் (இங்கு சூர்பனகையும்).

சில விடயங்கள் நம் அறிவுக்கு அப்பால் இருக்கின்றன. அவற்றை அறிவு கொண்டு  சிந்தித்து அறிந்து விட முடியாது.

"சித்தமும் செல்லா சேச்சியான் காண்க"

என்பார் மணிவாசகர்.

நம் அறிவு அங்கே போகாது. அறிவினால் அதை அறிய முடியாது.

அன்பினால் அறியலாம். அருளினால் அறியலாம்.

இராமனை தூரத்தில் கண்ட போதே அனுமன் சொல்கிறான்

"இவர்கள் மேல் உள்ள அன்பினால் என் எலும்பு உருகுகிறது" என்று.

குகனுக்கு, அனுமனுக்கு, வீடணனுக்கு, பரம் பொருளாக தெரிந்த இராமன்  சூர்பனகைக்கு  மானிடர்களாகத் தெரிகிறான்.

அவரவர் உயரம்.

உயர்ந்த நூல்களை,  உயர்ந்த விடயங்களை, அறிவில் பெரியவர்கள் சொல்லியதை கேட்கும் போது , நாம் நம்மை அந்த உயரத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டுமே அல்லாது அவற்றை நம் உயரத்துக்கு கீழே  கொண்டு வர  முயற்சி செய்யக் கூடாது.

செய்கிறார்கள். அரக்கர்கள்.

கம்ப இராமாயணத்தை, வைணவ நூல் என்று ஒதுக்கி வைத்த ஆட்கள் உண்டு.

கம்ப இராமாயணம் மூட நம்பிக்கைகளை வளர்க்கிறது என்று கூறிய ஆட்கள் உண்டு.

கம்ப இராமாயணம் பால் உணர்ச்சியை தூண்டும் நூல் என்று கூறிய ஆட்களும் உண்டு.

அவரவர் உயரம்.

மேலிருந்து ஒருவன் நம்மை கை தூக்கி விட முயற்சி செய்தால், மேலே செல்ல முயல வேண்டுமே அல்லாமல் அவனை  நாம் இருக்கும் இடத்துக்கு கீழே இழுத்து  விட முயலக் கூடாது.


நல்ல விடயங்களை உள் வாங்கிக் கொள்ளுங்கள். மருந்து குடிக்க அடம் பிடிக்கும் குழந்தை  போல் அடம் பிடிக்காதீர்கள்.

மருந்து கசக்கும் என்று தெரிந்துதான், அதன் மேல் சர்க்கரை தடவி தருவார்கள்.

கடினமான செய்திகளை இராமனின் வாழ்க்கைக்  கதை என்ற சர்க்கரை தடவித் தருகிறார்  கம்பர்.

சர்க்கரை அல்ல முக்கியம். மருந்து தான் முக்கியம்.

நாளும் நம்மை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

அதற்கு இது போன்ற காப்பியங்கள் நமக்கு உதவி செய்யும்.

நேற்றை விட இன்று ஒரு படி மேலே.

இன்றை விட நாளை ஒரு படி மேலே என்று முன்னேறுவோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_11.html

Wednesday, July 10, 2019

சகலகலாவல்லி மாலை - சுவை கொள் கரும்பே !

சகலகலாவல்லி மாலை - சுவை கொள் கரும்பே !


குமரகுருபரர் பாடியது சகலகலாவல்லி மாலை. சரஸ்வதியின் மேல் பாடியது.


அது போல

காசி இராஜா சபையில் குமரகுருபரர் இந்த பாடல்களை பாடினார். அந்த மன்னன், தமிழ் தெரியாதவன். ஆனால், அவனுக்கு  புரிந்தது. குமரகுருபரருக்கு நிறைய பொருளை பரிசாக அளித்தான். அவற்றைக் கொண்டு அவர், காசியில் மடம் காட்டினார். இன்றும் இருக்கிறது. போனால், தங்கிக் கொள்ளலாம்.

தமிழ் தெரியாத மன்னருக்கு எப்படி இது புரிந்தது ?

காதலர்கள், ஒருவரோடு ஒருவர் பார்வையாலேயே பேசிக் கொள்வதில்லையா.

தமிழ் தெரியாத மன்னனனுக்கே புரிந்தது. நமக்குப்  புரியாதா?

பாடல்

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே

என்ன புரிகிறதா ?

என்னத்த புரிய? முதல்ல சரியா வாசிக்கவே முடியல. அப்புறம் அல்லவா புரிவதை பற்றி  யோசிக்க.

சீர் பிரிப்போம். சீர் பிரித்தால் புரியும்

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க  என்  வெள்ளை உள்ளத்து 
தண் தாமரைக்கு தகாது கொலோ சகம் ஏழும் அளித்து 
உண்டான் உறங்க  ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவை கொள் கரும்பே சகல கலாவல்லியே


இப்ப புரிஞ்சிருக்குமே?

குமர குருபரர் சொல்கிறார்

"ஏதாவது வேண்டும் என்றால் எந்தக் கடவுளை நாடுவது?  இந்த உலகை எல்லாம் படைத்து , அதை உண்டவன் திருமால். அவன் கிட்ட போகலாம் என்றான்  அவன் ஒரு பக்கம் படுத்து தூங்கிக் கொண்டு இருக்கிறான். தூங்குமூஞ்சி.

சரி, திருமால் வேண்டாம், சிவனிடம் போகலாம் என்றால், அவனோ பித்து பிடித்து சுடுகாட்டில் அலைந்து கொண்டிருக்கிறான். பித்தன்.

சரி, திருமாலும் வேண்டாம், பிரம்மனும் வேண்டாம்,  பிரம்மனிடம் போகலாம் என்றால், அவன் உன் அழகில் இலயித்து இருக்கிறான்.

இவர்களை நம்பி ஒரு பலனும் இல்லை. எனவே, தாயே, உன்னிடம் வந்து விட்டோம். என் மனதில் வந்து இருப்பாய் "

என்று வேண்டுகிறார்.

பொருள்

வெண் தாமரைக்கு = வெண்மையான தாமரைக்கு

அன்றி = அல்லாது

நின் = உன்னுடைய

பதம் = பாதங்களை

தாங்க = தாங்கிக் கொள்ள

 என்  வெள்ளை உள்ளத்து  = என் வெள்ளை உள்ளத்து

தண் = குளிர்ந்த

தாமரைக்கு  = தாமரைக்கு

தகாது கொலோ = பொருத்தம் இல்லையா ?

சகம் ஏழும் அளித்து  = ஏழு உலகையும் படைத்து

உண்டான் = உண்டு (உமிழ்ந்தவன்)

உறங்க = உறங்கிக் கொண்டு இருக்க

 ஒழித்தான் = அழிக்கும் கடவுளான சிவன்

 பித்தாக = பித்து பிடித்து அலைய

உண்டாக்கும் வண்ணம் = படைக்கும் கடவுளான பிரம்மன்

கண்டான் = உன்னைக் கண்டான். எப்படி தெரியுமா ?

சுவை கொள் கரும்பே = சுவை நிறைந்த கரும்பைப் போல

சகல கலாவல்லியே = அனைத்து கலைகளிலும் வல்லவளே


சிவனை பித்தன் என்று சொல்லியதற்கு யாரும் கோபிக்கக் கூடாது.

சுந்தரர் சொன்னது அது.

பித்தா! பிறை சூடீ! பெருமானே! அருளாளா!
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? மனத்து உன்னை
வைத்தாய்; பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் - துறையுள்
அத்தா! உனக்கு ஆள் ஆய் இனி அல்லேன் எனல் ஆமே?


சரஸ்வதி - வெண் தாமரையில் இருக்கிறாள்.

இலக்குமி - சிவந்த தாமரையில் இருக்கிறாள்.

என்ன காரணமாக இருக்கும்?

முதலில், ஏன் தாமரை ? பின் ஏன் அந்த நிறம் ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_9.html

கம்ப இராமாயணம் - யான் பட்ட பழி வந்து பாராயோ ?

கம்ப இராமாயணம் - யான் பட்ட பழி வந்து பாராயோ ?


இலக்குவனால் மூக்கும், காதும், மார்பும் துண்டிக்கப்பட்ட சூர்ப்பனகை தன் அண்ணன் இராவணனை கூவி அழைக்கிறாள். "அண்ணா, உன் தங்கையின் நிலையை பார்த்தாயா" என்று கேவுகிறாள்.

இராவணனின் பெருமைகளை சொல்லி, அப்பேற்பட்ட உன் தங்கையின் நிலையைப் பார் என்கிறாள்.

"யானைகளுக்கு அரசனான ஐராவதத்தின் மீது ஏறி சண்டைக்கு வந்த இந்திரனை போரிட்டு அவனை புறம் காணச் செய்தாய். அவன் புற முதுகை கண்ட நீ உன் தங்கையின் அவல நிலையை பார்க்க மாட்டாயா?" என்று புலம்புகிறாள்.

பாடல்

ஆர்த்து, ஆனைக்கு அரசு உந்தி,
    அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது,
    அவனைப் போர் தொலைத்து,
வேர்த்தானை, உயிர் கொண்டு
    மீண்டானை, வெரிந் பண்டு
பார்த்தானே! யான் பட்ட
    பழி வந்து பாராயோ?

பொருள்

ஆர்த்து = போரிட்டு

ஆனைக்கு அரசு = யானைகளுக்கு அரசனான ஐராவதத்தினை

உந்தி = அதன் மேல் ஏறி வந்து

அமரர் = தேவர்கள்

கணத்தொடும் = படையோடும்

அடர்ந்த = சண்டையிட்ட

போர்த்  = போரின்

தானை = தலைவன்

இந்திரனைப் பொருது = இந்திரனோடு போரிட்டு

அவனைப் போர் தொலைத்து = அவனை போரில் வென்று

வேர்த்தானை = அவன் வேர்த்து விறுவிறுக்க

உயிர் கொண்டு = உயிர் பிழைத்தோம் என்று

மீண்டானை = போரில் இருந்து தப்பி மீண்டு வந்தவனை

வெரிந் = புறமுதுகு

பண்டு = அன்றொரு நாளில்

பார்த்தானே!  = பார்த்தாயே

யான் பட்ட = நான் பட்ட

பழி வந்து பாராயோ? = பழியினை வந்து பார்க்க மாட்டாயா ?


ஆர்த்த என்றால் பேரொலி , சண்டை, யுத்தம், பெருகி வருதல் என்று பொருள்.

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீராடேலோர் எம்பாவாய். 

என்பார் மணிவாசகர். பேரலை, சுனாமி போல் வரும் பிறவிகள், ஒன்றன் பின் ஒன்றாக .

ஆர்த்த பிறவி
ஆர்த்தாடும் தீர்த்தன்
வார் கலைகள் ஆர்ப்ப
குழல் மேல் வண்டு ஆர்ப்ப

தமிழில் ஒரு வார்த்தையை பிடித்துக் கொண்டால் அது நம்மை எங்கெங்கோ கொண்டு செல்லும்.

படகு சவாரி போல. அங்கே ஒரு தென்னை மரம், இங்கே கொஞ்சம் வீடுகள், அங்கே ஒரு   பண்ணை, திட்டு திட்டாய் தாமரை பூக்கள் என்று காட்சி மாறிக் கொண்டே வருவது போல , வார்த்தை என்ற படகில் ஏறி விட்டால் அது நம்மை  காலம் என்ற நதியில் எங்கெங்கோ கொண்டு செல்லும்.

இலக்குவன் அப்படி செய்த போது , நேரே சூர்ப்பனகை இலங்கை சென்றாள் என்று  சொல்லி விட்டு கதையை நகர்த்தி இருக்கலாம்.

வேலை மெனக்கெட்டு இராவணனின் புகழ் பாடுகிறான் கம்பன். நிறுத்தி நிதானமாக.

காரணம் என்ன?

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அறம் பிழைத்தால் அந்த அறமே உன்னை தண்டிக்கும்  என்று காட்டவே, இராவணன் எவ்வளவு பெரிய ஆள் என்று காட்டுகிறான்.

ஐராவதம் என்ற அந்த யானைக்கு ஆயிரம் தந்தம் இருக்குமாம். ஆயிரம் தந்தம் என்றால்  அது எவ்வளவு பெரிய யானை என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

அந்த யானையை ஒருவன் ஓட்டுகிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருக்க வேண்டும்.

அப்படிபட்ட பல சாலியை ஒருவன் போரில் தோற்கடித்து ஓட ஓட விரட்டுகிறான் என்றால்  அப்படி விரட்டியவன் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும்? 

அவன் தான் இராவணன்.

மிகப் பெரிய பராக்கிரமம். வீரம்.

எல்லாம் போனது, மாற்றான் மனைவியை மோகித்த ஒரே காரணத்தால்.

தேவர்களை சிறை வைத்தது அல்ல அவன் செய்த தவறு.

இராமனின் மனைவியை கவர்ந்து சென்றது, அவன் செய்த பிழை.

அந்தப் பிழை, அப்பேற்பட்ட இராவணனை வேரோடு சாய்த்தது.

அவனுடைய தவம், வீரம், செல்வம், புகழ், குலம், படை, அனைத்தையும் புரட்டிப் போட்டது  அறம்.

இராமாயணம் போன்ற காப்பியங்களை சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்தால், இவை மனதில் எளிதில் பதியும்.

கதையாக மட்டும் அல்ல, ஒரு வாழ்க்கை நெறியாகச் சொல்லித் தர வேண்டும்.

பாட்டியை ஏமாற்றிய காக்கா, காக்காவை ஏமாற்றிய நரி என்று கதை சொல்லிக்  கொடுக்கிறோம். ஏமாற்றுவது தவறில்லை என்று சொல்லி சொல்லி வளர்க்கிறோம்.

அவர்கள் வளர்ந்த பின் ,  வேறு என்ன செய்வார்கள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_10.html

Monday, July 8, 2019

திருவாசகம் - பொன்னூசல் ஆடாமோ

திருவாசகம் - பொன்னூசல் ஆடாமோ 


முன்பெல்லாம் திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் தேவாரம், திருவாசகம் போன்ற உயர்ந்த பாடல்களை பாடுவார்கள். எப்போதும் கேட்காவிட்டாலும், இது போன்ற சமயங்களிலாவது கேட்கட்டுமே என்று இவை பாடப்பட்டது.

அது மட்டும் அல்ல, உயர்ந்த சிந்தனைகள், இனிய தமிழ், பக்தி இவை எல்லாம் எல்லோரையும் போய் சேர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் காரணம்.

இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாடுவதற்காகவே மணிவாசகர் பொன்னூஞ்சல், பொற் சுண்ணம் இடித்தல் என்று பல பாடல்கள் பாடி இருக்கிறார்.

அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள்.

இப்போது இரண்டு மாற்றங்கள் வந்துவிட்டன.

ஒன்று, மங்கல விழாக்களில் பாடப்பட்ட தேவராம் , திருவாசகம் போன்றவை இப்போது அமங்கல நிகழ்ச்சிகளில் பாடப் படுகிறது. ஓதுவாரை கூட்டி வந்து , மரண சடங்குகளில் பாட வைக்கிறார்கள்.

இரண்டாவது, மங்கல விழாக்களில் கர்ண கடூரமாய் சினிமா பாடல்கள் காதை கிழிக்கின்றன. அர்த்தம் இல்லாத, பாலுணர்ச்சியை தூண்டும் பாடல்களை பாடி ஆண் பெண், முதியவர், குழந்தைகள் என்று பாரபட்சம் இல்லாமல் எல்லோரும் ஒன்றாக கேட்கிறறார்கள். யாருக்கும் ஒரு உறுத்தலும் இல்லை.

நீரும், நிலமும், காற்று மாசு படுவது போல மனங்களும் மாசு பட்டுக் கொண்டே இருக்கின்றன.  என்ன செய்வது. சூழ்நிலை அப்படி.

திருமண விழாக்களில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு ஊஞ்சலில் அமர வைத்து, லேசாக ஆட்டி விட்டு, பாடல் பாடுவார்கள்.

மணிவாசகரின் பொன்னூஞ்சல் பாடல் இதோ "ஆடு"கிறது.

பாடல்

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ.


பொருள்


மாதாடு பாகத்தன்  = பெண்ணை ஒரு பாகத்தில் கொண்டு ஆடுபவன்

உத்தர கோசமங்கைத் = திரு உத்திர கோசை என்ற திருத்தலத்தில் எழுந்து அருளி இருப்பவன்

தாதாடு = மகரந்தம் ஆடும்

கொன்றைச் = கொன்றை மலர் சூடிய

சடையான் = சடை முடியை உடையவன்

அடியாருள் = அடியவர்களுக்குள்ளே

கோதாட்டி = சீராட்டி

நாயேனை = நாய் போல கீழான என்னை

ஆட்கொண்டென் = ஆட்கொண்டு என்

தொல்பிறவித் = பழைய பிறவி

தீதோடா = தீது + ஓடா = தீது தொடர்ந்து ஓடி வந்து பற்றிக் கொள்ளாமல்

வண்ணந் = அப்படி

 திகழப் = நடக்க

பிறப்பறுப்பான் = இனி வரும் பிறவிகளை வராமல் அந்தத் தொடர்பை அறுப்பவன்

காதாடு  =காதில் ஆடும்

குண்டலங்கள் = குண்டலங்கள்

பாடிக்  = பாடி

கசிந்தன்பால் = கசிந்து அன்பால்

போதாடு  = போது என்றால் மலர். மலர் ஆடும்

பூண்முலையீர் = ஆபரணங்களை அணிந்த மார்பை உடைய பெண்களே

பொன்னூசல் ஆடாமோ. = பொன்னூசல் ஆடாமோ. ஆடுவோம்.



மாதாடு  = மாது ஆட
தாதாடு  = தாது (மகரந்தம்) ஆட
கோதாட்டி  = சீராட்டி
தீதோடா  = தீது ஓட
காதாடு  = காது ஆட
போதாடு  = போது (மலர்) ஆட

எத்தனை ஆட்டம்.

பக்தியை விடுங்கள்.   கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சையை விடுங்கள்.

தமிழ் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

பக்தியும், இறை உணர்வும், தமிழும், வாழ்க்கை முறையும் ஒரு புள்ளியில் நிற்கும் அந்த   அதிசயம், எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

மாதாடு - ஆண் என்றும் பெண் என்றும் யாரும் கிடையாது. ஆணுக்குள் பெண் உண்டு. பெண்ணுக்குள் ஆணுண்டு. எல்லோருமே இரண்டும் கலந்த கலவைதான். ஆணுக்குள் உள்ள பெண்ணை அடக்கி வைக்கிறோம். பெண்ணுக்குள் உள்ள  ஆணையும் அடக்கி வைக்கிறோம்.

எது அடக்கப் பட்டதோ, அது வெளிவர காத்திருக்கும். நீருக்குள் பந்தை அமுக்கி வைத்து இருப்பது போல.  எப்படா கையை எடுப்போம் என்று இருக்கும். எடுத்தவுடன் துள்ளிக் கொண்டு வெளியில் வரும்.

ஒவ்வொரு ஆணும், தனக்குள் இருக்கும் பெண்ணை வெளியே தேடி அலைகிறான்.

ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் ஆணை வெளியே தேடி அலைகிறாள்.

வெளியில் உள்ள எந்த ஆணும், எந்த பெண்ணும் உள்ளுக்குள் இருக்கும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ ஈடாகாது.

எது கிடைத்தாலும் திருப்தி இருக்காது.  தேடல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இது அல்ல நான் தேடிய பெண்/ஆண் என்று ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அலைந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

அர்த்த நாரீஸ்வரர் தத்துவம் அதுதான்.

மாதொரு பாகன் உணர்த்துவது அதைத்தான்.

திருவாசகம் ஒரு கடல்.

ஒரு வாழ்நாள் போதாது படித்து உணர.

மூல நூலை தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள்.

ஊன் உருகும். உயிர் உருகும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_57.html

கம்ப இராமாயணம் - தழல் எடுத்தான் மலை எடுத்தான்

கம்ப இராமாயணம் - தழல் எடுத்தான் மலை எடுத்தான் 


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் அறுபட்ட சூர்ப்பனகை, வலியில் , அவமானத்தில் துடிக்கிறாள்.

துன்பம் என்று வரும்போது நமக்கு யார் துணை செய்வார்கள் என்று நினைப்பது இயல்பு.

சூர்ப்பனகையின் தமையர்கள் யார் ? இராவணன், கும்பகர்ணன், வீடணன். பெரிய பலசாலிகள்.

இராவணா, என் நிலையைப் பார் என்று கதறி அழுகிறாள்.

ஒரு புறம் சூர்ப்பனகையின் அவலம். இன்னோரு புறம் கம்பனின் அற்புதமான பாடல்கள். பாடலை இரசித்து மகிழவா அல்லது சூர்ப்பனகையின் துன்பம் கண்டு வருந்தவா என்று தெரியாமல் நம்மை குழப்பும் பாடல்கள். பாடல்கள் அத்தனையும் தேன்.

துன்பத்தைக் கூட இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் பாடல்கள்.

அழுது, இராவணனை கூப்பிட்டாள் என்ற ஒரு வரியைத் தவிர அந்த பாடல்களில் ஒன்றும் இல்லை. ஆனால், அவள் கூப்பிட்ட விதம்..அருமையிலும் அருமை.

வாசகர்களுக்கு பொறுமை இருக்குமா என்று தெரியவில்லை, அவற்றை இரசிக்க.  இல்லை என்றால், விட்டு விட்டு மேலே போய் விடலாம். உங்கள் எண்ணத்தை  தெரிவியுங்கள்.

சரி, பாடலுக்கு வருவோம்....


"இராவணா , இந்த நிலத்தில் நீ நிலைத்து இருக்கும் போது, இந்த தவ வேடம் பூண்ட மானிடர்கள் கையில் வில்லை எடுத்துக் கொண்டு அலைவது சரியா? உன் எதிரில் தேவர்கள் கூட நிமிர்ந்து பார்க்க பயப்படுவார்களே. நீ யார், அனலை கையில் கொண்ட சிவனின் மலையை கையில் எடுக்க முயன்ற பலசாலி ஆயிற்றே ... உன் தங்கையின் நிலையை பார்க்க வரமாட்டாயா...வா "

என்று அழைக்கிறாள்.

"எடுத்து" என்ற சொல்லை கம்பன் எப்படி எடுத்தாழ்கிறான் (:) )என்று பாருங்கள்.

பாடல்

'நிலை எடுத்து, நெடு நிலத்து 
     நீ இருக்க, தாபதர்கள் 
சிலை எடுத்துத் திரியும்இது சிறிது 
     அன்றோ? தேவர் எதிர்
தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! 
     தழல் எடுத்தான் 
மலை எடுத்த தனி மலையே! 
     இவை காண வாராயோ?

பொருள்

'நிலை எடுத்து = நிலைத்து நிற்க

நெடு நிலத்து  = பெரிய நிலத்தில்

நீ இருக்க = நீ (இராவணன்) இருக்க.  நெடு நிலத்து நீ நிலை எடுத்து இருக்க என்று வாசிக்க வேண்டும்.

தாபதர்கள்  = தவக் கோலம் கொண்டவர்கள்

சிலை எடுத்துத் = கையில் வில்லை எடுத்து

திரியும் இது = திரிகின்ற இந்த நிலை

சிறிது அன்றோ?  = சிறுமை அல்லவா?

தேவர் = தேவர்கள்

எதிர் = (உன்) எதிரில்

தலையெடுத்து = தலை தூக்கி

விழியாமைச் = விழித்துப் பார்க்காமை

சமைப்பதே! = இருப்பதே

தழல் எடுத்தான்  = கையில் தீயைக் கொண்ட (சிவனின்)

மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த

தனி மலையே!  = ஒப்பற்ற மலை போல் வலிமை உடையவனே

இவை காண வாராயோ? = இந்த கொடுமையை காண வர மாட்டாயா ?


நிலை எடுத்து
சிலை எடுத்துத்
தலையெடுத்து
தழல் எடுத்து
மலை எடுத்து

தமிழ்  சொற்கள் கம்பனிடம் கை கட்டி சேவகம் செய்தன. என்னை எடுத்துக் கொள் , என்னை எடுத்துக் கொள் என்று அவன் முன் வரிசையில் நின்றன.

சூர்ப்பனகையின் புலம்பலில் இத்தனை தமிழ் சுவை.

கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

"மலை எடுத்த தனி மலையே " என்று இராவணனை குறிப்பிடுகிறாள்.

மலை போன்ற உறுதியானவன், வலிமையானவன் இராவணன் என்று சொல்ல வந்தாள். அவனையே மலை என்று சொல்லி விட்டாள்.

இதற்கு "உவமை ஆகு பெயர்" என்று இலக்கணத்தில் பெயர்.

அது என்ன ஆகு பெயர்.

ஒன்றிற்கு ஆகி வரும் பெயர்.

ஒன்றின் பெயர் இன்னொன்றுக்கு ஆகி வருவது ஆகு பெயர் எனப்படும்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

"அறம் பற்றி அறிய வேண்டும் என்றால் வள்ளுவனைப் படி"

என்று சொன்னால், வள்ளுவரை எப்படி படிக்க முடியும். அவர்தான் இல்லையே. இருந்தாலும், இரு ஆளை எப்படி படிக்க முடியும்?

வள்ளுவனை படி என்றால் அவர் எழுதிய திருக்குறளைப் படி என்று அர்த்தம்.

இதற்கு கர்த்தாவாகு பெயர் என்று அர்த்தம்.

திருக்குறளின் கர்த்தாவான வள்ளுவர், அந்த திருக்குறளுக்கு ஆகி வந்தமையால் அது கர்த்தாவாகு பெயர் .

"அடுப்புக்கு பக்கத்தில நெய்யை வச்சிருக்க பாரு. அந்த நெய்யை கொஞ்சம் மாத்தி அந்தப் பக்கம் வை."

 என்று சொன்னால், நெய்யை தள்ளி வை என்று அர்த்தம் அல்ல.  நெய் உள்ள பாத்திரத்தை  தள்ளி வை என்று அர்த்தம். அதை  தானியாகு பெயர் என்று சொல்லுவார்கள். தானி என்றால் ஸ்தானம் அல்லது இடம். நெய் இருக்கும் இடமான அந்தப் பாத்திரத்துக்கு நெய் என்று சொல் ஆகி வந்ததால் அதற்கு தானியாகு என்று  பெயர்.


தமிழ் இலக்கணம் மிக எளிமையானது. வாழ்வோடு ஒட்டி வருவது. அன்றாடம் நடை முறையில் நாம் கையாள்வது. படிக்க படிக்க மிக சுவையானது. 'அட, இதற்கு இப்படி ஒரு பெயர் இருக்கா ' என்று ஆச்சரியப் பட வைக்கும்.

இப்படி இன்னும் கொஞ்சம் இருக்கு. தேடுங்கள், கண்டடைவீர்கள்.


மேலும் இரசிப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_8.html

Sunday, July 7, 2019

தனிப்பாடல் - உலகை உண்டுறங்குவான்

தனிப்பாடல் - உலகை உண்டுறங்குவான்


பயம்.

பயம் என்பது ஒரு நல்ல உணர்வு. பயம் நம்மை ஆபத்தில் இருந்து காப்பாற்றும். பயம் என்று ஒன்று இல்லாவிட்டால் நாம் முட்டாள் தனமாக ஏதாவது செய்து ஆபத்தில் சிக்கிக் கொள்வோம்.

வண்டிக்கு brake இருப்பது போல, குதிரைக்கு கடிவாளம் இருப்பது போல, பயம் நம்மை கட்டுப் படுத்தி ஒரு எல்லைக்குள் நிறுத்துகிறது.

இவ்வளவு செய்யலாம், இதற்கு மேல் செய்யக் கூடாது என்று நம்மை அறிவுறுத்துவது பயமே.

ஆனால், அந்த பயமே அளவு கடந்தால், வாழ்க்கை நரகமாகிவிடும். எதற்கு எடுத்தாலும் பயந்து கொண்டே இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

அதே போல், ஒன்றும் செய்ய முடியாததற்கு பயந்தால் வாழ்க்கை துன்பமயமாகி விடும்.

மரணம் கட்டாயம் வரும். அதில் இருந்து யாரும் தப்ப முடியாது. அதற்கு பயந்தால் பின் எப்படி வாழ்வது.

மரணம் பற்றிய பயம்.

மீண்டும் என்னவாக பிறப்போமோ என்று பயம்.

கணவன்/மனைவி/பிள்ளைகளை விட்டு விட்டு போகிறோமே என்ற பயம்

வரும் நாட்களில் முதுமை வந்து என்ன பாடு படுத்துமோ என்ற பயம்.

தனித்து விடப் படுவோமோ என்ற பயம்.

இந்த பயத்தில் இருந்து எல்லாம் எப்படி விடுபடுவது?

பயமற்ற வாழ்க்கை எப்படி வாழ்வது?

ஒரு தனிப்பாடல் சமீபத்தில் படித்தேன். பெரிய கருத்தாழம், சொல் ஆழம் உள்ள பாடல் இல்லைதான்.  இருந்தும் அதில் ஒரு எளிமையான அழகு இருப்பதைக் கண்டேன்.

ஒரு அலங்காரமும் இல்லாமல் சிலர் அழகாக இருப்பதைப் போல...


பாடல்

“ நாவுண்டு நீயுண்டு நாமம் தரித்தோதப்
பாவுண்டு நெஞ்சே பயமுண்டோ - பூவுண்டு
வண்டுறங்கும் சோலை மதிலரங்கத் தேஉலகை
உண்டுறங்கு வான்.ஒருவன் உண்டு “ 


பொருள்


“ நாவுண்டு = என்னுடைய நாக்கு உண்டு

நீயுண்டு = (பெருமாளே) நீ உண்டு

நாமம் = உன்னுடைய திரு நாமத்தை

தரித்தோதப் = நாக்கில் ஏற்றுக் கொண்டு ஓத

பாவுண்டு = நல்ல பாடல்கள் உண்டு

நெஞ்சே = என்னுடைய நெஞ்சே

பயமுண்டோ = நமக்கு பயம் என்று ஒன்று உண்டா ?

பூவுண்டு = நல்ல மலர்கள் உண்டு , பூவை உண்டு அதாவது பூவில் தேனை உண்டு

வண்டுறங்கும் = வண்டுகள் உறங்கும்

சோலை  = சோலைகள் நிறைந்த

மதிலரங்கத் தே = நீண்ட மதில்களை கொண்ட திருவரங்கத்தில்

உலகை = இந்த உலகத்தை

உண்டு = வாயில் போட்டு உண்டு

உறங்கு வான்.ஒருவன் உண்டு  = உறங்குவான் (பள்ளி கொண்டான்) ஒருவன் உண்டு

கற்பனை பண்ணிப் பாருங்கள். இன்றைக்கு சுமார் 300 அல்லது 400 ஆண்டுகள் பின் நோக்கி போய் விடவேண்டும்.

அதி காலை நேரம். சூரியன் இன்னும் முழுவதும் வெளி வரவில்லை.

மின்சாரம் கிடையாது.  பெட்ரோல் டீசல் கிடையாது. பெரிய வண்டிகள் கிடையாது. செல் போன் கிடையாது.  டிவி கிடையாது.

இவ்வளவு மக்கள் தொகை கிடையாது.

திருவரங்கம். சின்ன கிராமம். 200 அல்லது 300 பேர் இருக்கலாம். நிறைய திறந்த வெளி.  ஊரின் ஓரம் காவிரியும், கொள்ளிடமும் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஊரில் நிறைய தோட்டங்கள். சோலைகள்.

சோலையில் நிறைய மலர்கள். அதில் நிறைய தேன் . அந்த தேனை குடித்த மயக்கத்தில் வண்டுகள்  தூங்குகின்றன.

ஸ்ரீரங்கத்தில், பெருமாள் அமைதியாக பள்ளி கொண்டிருக்கிறார். எங்கும் அமைதி.

தூரத்தில் யாரோ நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடுகிறார்கள். இன்னொரு பக்கம் சுப்ரபாதம் கேட்கிறது.

இதற்கு  மேல் என்ன வேண்டும்.

எதைப் பற்றி பயம்?

வாழ்க்கையை இரசியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் முழுவதுமாக  அனுபவியுங்கள். எதிர் காலத்தை பற்றி பயந்து கொண்டே இருக்காதீர்கள். இந்த கணம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று அனுபவியுங்கள்.

பாடலை இன்னொரு முறை படித்துப் பாருங்கள்.

பயம் ஓடி விடும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_7.html

Saturday, July 6, 2019

திருவாசகம் - நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து

திருவாசகம் - நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து 


தினமும் உடற் பயிற்சி செய்யணும்னு நினைக்கிறேன். எங்க முடியுது, ஏதாவது ஒரு தடங்கல்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமாவது படிக்கணும்னு நினைக்கிறேன், எங்க முடியுது...whatsapp செய்தி, டிவி, நண்பர்கள் தொலைபேசி என்று ஏதாவது வந்து குழப்பி விடுகிறது.

கணவன்/மனைவி/பிள்ளைகள் கூட நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எங்க முடியுது. எனக்கு நேரம் இருக்கும் பொழுது அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களுக்கு நேரம் இருக்கும் பொழுது எனக்கு இல்லை.

என்ன செய்தாலும் ஏதாவது குத்தம் குறை சொல்லிக் கொண்டே இருக்கும் கணவன்/மனைவி. எப்படித்தான் அன்பாக இருப்பது. அன்பாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன், முடிய மாட்டேன் என்கிறதே...

என்று இப்படி நமக்கு நாளும் பல சிக்கல்கள் வருகின்றன.

இவற்றை மீறி எப்படி நாம் நினைத்ததை செய்வது?

நமக்கு மட்டும் அல்ல, மணிவாசகருக்கும் இந்த சிக்கல் இருந்திருக்கிறது.

இறைவன் மேல் பக்தி செய்ய வேண்டும். கோவிலுக்குப் போக வேண்டும். திருப்பணி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்தார். முடியவில்லை. ஏதோ ஒரு வேலை வந்து குழப்பிக் கொண்டே இருந்தது.

என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒரு வழியும் கண்டு பிடித்து விட்டார். கண்டு பிடித்தது மட்டும் அல்ல, அதை நமக்கும் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்.

அது என்ன வழி தெரியுமா ?

செய்ய முடியாவிட்டாலும், செய்வது போல நடி. நாளடைவில் அந்த நடிப்பே நிஜமாகி விடும்.

புரியவில்லையா?

படிக்க முடியவில்லையா ? ஒரு பிரச்சனையும் இல்லை. படிப்பது போல நடி. தினமும்  சும்மா இரண்டு மணி நேரம் படிப்பது போல பாவனை பண்ணு. புத்தகத்தை  திறந்து வைத்துக் கொண்டு சும்மா இரு. படம் பாரு.  ஒண்ணும் படிக்க வேண்டாம். இப்படி செய்து கொண்டிருந்தால், நாளடைவில் இந்தப் பழக்கம்  கொஞ்சம் கொஞ்சமாக தீவிர படிப்பில் கொண்டு போய் விட்டு விடும்.

மனைவி மேல் கோபமும், எரிச்சலும் வருகிறதா?  அவள் மேல் அன்பாக இருப்பது போல்  நடியுங்கள். அவள் செய்த சமையலை பாராட்டுங்கள். அவள் உடையை இரசியுங்கள். அவள் வீட்டாரைப் பற்றி புகழ்ந்து பேசுங்கள். உண்மையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த நடிப்பு நாளடைவில் உண்மையாக மாறிவிடும்.

பிள்ளை சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறானா? அவன் நல்லவன் என்று நினைத்து அவனை நடத்துங்கள்.  அவனிடம் அன்பு செலுத்துங்கள். பொய்யாகவேணும் செய்யுங்கள். அந்த பொய், நாளடைவில் உண்மையாக மாறும்.

மணிவாசகர் என்ன செய்தார் தெரியுமா,

தானும் பக்தி செய்பவர் போல மற்ற அடியார்களுடன் சேர்ந்து கோவிலுக்கு அவர்கள் பின்னால் போய் விடுவாராம். அவர் மனதில் அப்போது பக்தி இல்லை. பக்திமான் போல் நடித்தேன் என்கிறார்.

நாடகம்தான் என்றாலும், நாடிவில் அது உண்மையான பக்தியாக மாறியது உலகறியும்.



பாடல் 


நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்
ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.


பொருள்

நாடகத்தால் = நடிப்பால்

உன்னடியார் போல் = உன்னுடைய அடியவனைப் போல

நடித்து = நடித்து

நானடுவே = நான் நடுவே

வீடகத்தே = வீட்டின் அகத்தே - வானுலகத்தின் உள்ளே

புகுந்திடுவான் = புக வேண்டி

 மிகப்பெரிதும் = மிக வேகமாக

 விரைகின்றேன் = விரைந்து செல்கின்றேன்

ஆடகச்சீர் = உயர்ந்த தங்கத்தால் ஆன

மணிக்குன்றே = மணிகள் நிறைந்த குன்றே , மலையே

இடையறா = இடைவிடாத

அன்புனக்கென் = அன்பு  உனக்கு என்

ஊடகத்தே = உள்ளத்தில்

நின்றுருகத் = நின்று , அதனால் என் உள்ளம் உருக

தந்தருள் = தந்து அருள்வாய்

எம் உடையானே.= என்னை உடையவனே

இதைத்தான் இன்று மேல் நாட்டு உளவியல் அறிஞர்கள் (psychologists ) fake it till you make it என்று சொல்லுகிறார்கள். 

கீழே உள்ள இணைய தளத்தில் இது பற்றி ஒரு கட்டுரை இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் படித்துணர்க.

http://mentalfloss.com/article/74310/8-fake-it-til-you-make-it-strategies-backed-science


நம் மூளை இருக்கிறதே, அதுக்கு ஒண்ணே ஒண்ணுதான் தெரியும். எதைச் சொன்னாலும்  அது ஏற்றுக் கொள்ளும். 

முடியும் என்று சொன்னால் , ஆமாம் முடியும் என்று ஏற்றுக் கொண்டு அதற்கு தகுந்த மாதிரி  உங்களை தயார் படுத்தும். 

முடியாது என்று நினைத்தால் ஆமாம் முடியாது என்று ஏற்றுக் கொண்டு  எவ்வாறு செய்யாமல் இருப்பது என்று வழி காணும். 

ஆங்கிலத்தில் GIGO என்று சொல்லுவார்கள். அதாவது Garbage In Garbage Out. 

எதை நம்புகிறோமோ, அதுவே நடக்கும். 

அதனால்தான் படித்து  படித்து சொன்னார்கள், நல்லவர்களோடு சேர்ந்து இரு, கெட்டவர்களை கண்டால் ஓடி விடு என்று. 

நல்ல குணங்கள் உங்களிடம் இருப்பது போல நினைத்துக் கொண்டு அது படி  நடங்கள். உண்மையில் அது இல்லாவிட்டால், இருப்பது போல நடியுங்கள். நாளடைவில் அது உண்மையாகிவிடும்.

ஆச்சரியமாக இருக்கிறது இல்ல?  செய்து பாருங்கள். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_6.html