Tuesday, July 2, 2019

கம்ப இராமாயணம் - உருகியது உலகம்

கம்ப இராமாயணம் - உருகியது உலகம்


சீதையை கவர வந்த சூர்ப்பனகையின் முடியை பிடித்து இழுத்து, தரையில் தள்ளி, காலால் அவளை உதைத்து, அவளின் மூக்கு, காது மற்றும் முலை கண்களை வாளால் வெட்டினான் இலக்குவன்.

பெண்ணின் மார்பு என்பது அவளின் குழந்தைகளுக்கு பால் தர அமைந்த ஒரு அவயம். காலப் போக்கில் அது ஒரு கவர்ச்சிக்கு இடமான ஒன்றாக ஆகிப் போனது காலத்தின் கோலம்.


ஒரு தாய் பிள்ளைக்கு பால் தரும் போது , இயற்கை அவளின் மார்புகளை பெரிதாக்குகிறது.  குழந்தை  நிறைய பால் அருந்த வேண்டும் என்று.

அபிராமிக்கு எத்தனை குழந்தைகள்.  பட்டர் சொல்கிறார், மலை போல பெருத்த தனங்கள் , அழும் பிள்ளைக்கு தர வேண்டி பருத்த தனங்கள்.

கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.

"அம்மா, நீ என் முன்னால் வர வேண்டும் என்று அழுகிறார் பட்டர்".

சரி, இலக்குவன் அப்படி செய்து விட்டான். சூர்பனகைக்கு வலித்திருக்குமா, வலித்து இருக்காதா ? அவள் அழுது இருப்பாளா ? மாட்டாளா?

அறுபட்ட வலி ஒரு புறம். ஒரு பெண்ணின் மார்பை அறுத்தால், அவள் மன நிலை எப்படி இருக்கும்?

மார்பக புற்று நோய் வந்தால், பெண்களின் மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்து  அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறுவார். அதை அந்த பெண்கள்  எப்படி எடுத்துக் கொள்வார்கள்? தவித்துப் போவார்கள். செத்தாலும் பரவாயில்லை,  இந்த சிகிச்சை வேண்டாம் என்று தான் நினைப்பார்கள்...என்று நான் நினைக்கிறேன்.

சவலியால் துடிக்கிறாள். வாய் விட்டு அலறுகிறாள்...

பாடல்


அக் கணத்து அவள் வாய் திறந்து
    அரற்றிய அமலை
திக்கு அனைத்தினும் சென்றது;
    தேவர்தம் செவியும்
புக்கது; உற்றது புகல்வது என்?
    மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று,
    உருகியது உலகம்.


பொருள்

அக் கணத்து = அந்த நேரத்தில்

அவள் = சூர்ப்பனகை

வாய் திறந்து = வாய் திறந்து

அரற்றிய அமலை = அழுத அழுகை. அமலை என்றால், இருந்து அழுவது அல்ல. வலி பொறுக்க முடியாமல் அங்கும் இங்கும் ஓடி அழுவது.

திக்கு அனைத்தினும் சென்றது = எல்லா திசைகளிலும் சென்றது

தேவர்தம் செவியும் = வானுலகில் உள்ள தேவர்களின் காதில்

புக்கது; = சென்று அடைந்தது

உற்றது  = அங்கு நடந்ததை

புகல்வது என்?  = சொல்ல என்ன இருக்கிறது ?

மூக்கு எனும் = அவளுடை மூக்கு என்ற

புழையூடு = துவாரத்தின் வழியாக

உக்க = வழிந்த

சோரியின்  = இரத்தத்தின்

ஈரம் உற்று = ஈரத்தால்

உருகியது உலகம். = உருகியது உலகம்


நனைந்து உலகம் என்று கம்பன் சொல்லவில்லை. உருகியது என்று உலகம் என்கிறான்.

ஒரு பெண் எதையும் சகிப்பாள், ஆனால் தன் அழகிற்கு ஒரு பங்கம் என்றால் அவளால் அதைத் தாங்க முடியாது.

சூர்ப்பனகையின் துன்பத்தை, அவலத்தை கம்பன் படம் பிடிக்கிறான்.

கல்லும் கரையும்.

அதைப் படித்த பின், கண்ணின் ஓரம் நீர் துளிர்க்கவில்லை என்றால்....தமிழும் கம்பனும் தோற்று விட்டார்கள்ள் என்றே சொல்ல வேண்டும்.



1 comment:

  1. "காலப் போக்கில் அது ஒரு கவர்ச்சிக்கு இடமான ஒன்றாக" ஆகவில்லை, அது எப்போதுமே அப்படித்தான் இருந்திருக்கிறது. அதனால்தான் அதனைப் பல பழைய காவியங்களில் வருணித்திருக்கிறார்கள்.

    இந்தப் பாடலைப் படித்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    ReplyDelete