Thursday, June 11, 2026

திருக்குறள் - அறிவின் பயன்

 திருக்குறள் - அறிவின் பயன் 


இன்று செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) பற்றி பெரிய அளவில் பேசப் படுகிறது. 


அறிவு என்றால் என்ன? அறிவு உள்ளவன் என்ன செய்வான்? யாரை அறிவு இல்லாதவன் என்று சொல்ல முடியும்?


நிறைய படித்து, பட்டம் பெற்றவன் அறிவு உள்ளவனா? பள்ளிப் பக்கமே போகாதவன் அறிவு இல்லாதவனா? 


இது ஒரு புறம் இருக்கட்டும். 


அறிவு பெறுவதால் என்ன பயன்?


அறிவுக்கும், இந்த இன்னா செய்யாமை என்ற இந்த அதிகாரத்துக்கும் என்ன தொடர்பு. 


குறளைப் பார்க்கலாம். 


 

பாடல் 


அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின்நோய்

தம்நோய்போல் போற்றாக் கடை


பொருள் 


அறிவினான் = ஒருவன் தான் பெற்ற அறிவினால் 


ஆகுவது உண்டோ = பெற்ற பயன் என்ன ?


பிறிதின்நோய் = பிற ஒன்றின் துன்பத்தை 


தம்நோய்போல் = தன்னுடைய துன்பம் போல் எண்ணி 


போற்றாக் கடை = அத்துன்பத்தை நீக்காவிட்டால் 


இதை ஏன் துறவறத்தில் வைக்க வேண்டும். இல்லறத்தில் உள்ளவன் பிற உயிர்களை காக்க வேண்டாமா?


பரிமேலழகர் சொல்கிறார், ஒரு துறவி உயிரின் நுட்பத்தை அறிவான். இல்லறத்தில் உள்ளவனுக்கு அந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு இருக்காது. 


"அறிவினான் ஆகுவது உண்டோ" என்றால் எந்த அறிவு? எனக்கு சிலை செய்யத் தெரியும், வண்டி ஓட்டும் அறிவு இருக்கிறது, சமைக்கத் தெரியும், கணனியில் வேலை செய்யும் அறிவு இருக்கிறது. அந்த அறிவால் உயிர்களை துன்பத்தில் இருந்து காப்பது எப்படி?


பரிமேலழகர் சொல்கிறார், இங்கே அறிவு என்பது , உயிர்களின் தன்மை பற்றி அறிந்த அறிவு என்று. 


"உயிர் முதலியவற்றை உள்ளவாறறிந்த அறிவினான் ஆவதொரு பயன் உண்டோ"


"பிறிதின்" என்று ஏன் கூறினார்?


மற்ற மக்கள் மட்டும் அல்ல. மற்ற உயிர்களும் அதில் அடங்கும். எறும்பு, ஈ, போன்ற சிற்றுயிர்களும் அடங்கும். 


குசேலர், கண்ணனைப் பார்க்கப் போகும் போது, மர நிழலில் போகாமல், வெயிலில் நடந்து போனாராம். காரணம், நிழலில் எறும்பு போன்ற சிறிய உயிர்கள் உலாவும். தெரியாமல் அவற்றை மிதித்து அவற்றிற்கு துன்பம் செய்து விடக் கூடாதே என்ற கருணையால். 


சிவ இலிங்கத்துக்கு கண்ணில் இருந்து இரத்தம் வந்ததால், தன் கண்ணையே எடுத்துக் கொடுத்தான் கண்ணப்பன். ஒன்றல்ல, இரண்டையும். கல்லுக்கும் இரங்கியது அவன் கருணை. 


நோய் என்றால் துன்பம். 


தெரியாமல் கூட ஒரு உயிருக்கு தீங்கு செய்து விடக் கூடாது. நமக்கு யாராவது தெரியாமல் தீங்கு செய்தால், "பாவம் தெரியாமல் செய்து விட்டான் " என்று சும்மா இருப்போமா? எவ்வளவு வலி, கோபம் வருகிறது. மற்ற உயிர்களுக்கும் அப்படித்தானே வலியும் , கோபமும் இருக்கும். 


அதை உணர வேண்டும் என்கிறார். 


பிற உயிர்களுக்கு நாம் துன்பம் செய்யக் கூடாது என்பது மட்டும் அல்ல. அந்த உயிர்களுக்கு துன்பம் வராமால் காக்க வேண்டும். 


நமக்கு ஒரு துன்பம் வந்தால் என்ன செய்வோம்? வந்த துன்பத்தை போக்க நினைப்போம். இனி அந்த மாதிரி துன்பம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம் அல்லவா. 


தன் நோய் (தன்னுடைய துன்பம்) போல் போற்றாக் கடை என்றார். 


உயிர்கள் மேல் அன்பு வேண்டும். அவைகளும் துன்பம் இன்றி தீங்கு இன்றி வாழ வேண்டும்.