Saturday, June 20, 2026

திருக்குறள் - இன்னா என தான் உணர்ந்தவை

திருக்குறள் - இன்னா என தான் உணர்ந்தவை 

https://interestingtamilpoems.blogspot.com/2026/06/blog-post_20.html

இந்த இன்னா செய்யாமை, இன்னா செய்யாமை என்று சொல்கிறோமே, இன்னா என்றால் என்ன? அதற்கு ஒரு பட்டியல் இருக்கிறதா?  அந்தப் பட்டியலை யார் செய்தது? அது எல்லா ஊருக்கும், எல்லா காலத்துக்கும் பொருந்துமா? என்ற கேள்விகள் வரலாம்.


எல்லா நாட்டுக்கும், எல்லா காலத்துக்கும் பொருந்துமாறு ஒரு வரையறை தர வேண்டும். முடியுமா? 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும். 


புலால் உண்பதால் என்ன தவறு?  விலங்குகளை கொன்று தின்பது பாவமா? பாவம் என்று எங்கே சொல்லி இருக்கிறது ?  அது சட்டப்படி குற்றமா? என்றெல்லாம் கேள்வி எழும். மரம், செடி, கொடிகளுக்குக் கூடத்தான் உயிர் இருக்கிறது...என்ற வாதமும் ஏற்புடையதே. 


எல்லாவற்றிற்கும் வள்ளுவரும், பரிமேலழகரும் பதில் சொல்கிறார்கள். 


பாடல் 


இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்


பொருள் 



இன்னா = துன்பம் தருபவை, தீங்கு இழைப்பவை 


எனத் = என்று 


தான் = ஒருவன் தனக்குத் தானே 


உணர்ந்தவை = உணர்ந்தவற்றை 


துன்னாமை = செய்யாமல் இருக்க 


வேண்டும் = வேண்டும் 


பிறன்கண் செயல் = மற்றவற்றிற்கு அந்தச் செயலை 


பரிமேலழகர் மிக நுட்பமாக உரை செய்கிறார். 


மற்ற ஒரு உயிருக்கு துன்பம் என்று நமக்கு எப்படித் தெரியும்?  ஒருவன் முகத்தைப் பார்த்து, அவன் செய்யும் செயல்களை வைத்து அவன் துன்பத்தில் இருக்கிறானா, இல்லையா என்று நாம் அறிய முடியாது. நாம் செய்யும் ஒன்று அவனுக்கு துன்பம் தருமா இல்லையா என்று எப்படி அறிந்து கொள்வது?


வள்ளுவர் சொல்கிறார் 


இன்னா எனத்தான் "உணர்ந்தவை" : அதாவது ஒன்று நமக்குத் துன்பம் தருகிறதா இல்லையா என்று நமக்குத் தெரியும். யாரும் சொல்ல வேண்டாம். எந்த சட்டமும் தேவை இல்லை. நம் உணர்சிகள் நமக்குத் தெரியும் அல்லவா. எது நமக்குத் துன்பம் தருகிறதோ, அதை மற்ற உயிர்களுக்குச் செய்யக் கூடாது. 


நம்மை ஒருவன் முட்டாள் என்று திட்டினால் நமக்கு வருத்தம் வரும்தானே. எனவே, நாம் மற்றவர்களை அப்படித் திட்டக் கூடாது. 


"பிறன்கண் செயல்": பிறர் கண் என்று சொல்லி இருக்கலாம். இல்லை. பிறன் என்று சொல்கிறார். எல்லா உயிரும் அதில் அடங்கும். 


நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் இந்த அளவுகோல் கொண்டு சிந்திக்க வேண்டும். நான் இப்படிச் செய்வது மற்றவருக்கு துன்பம் தருமா என்று அறிய வேண்டும். எப்படி அறிவது என்றால், அந்தச் செயலை நமக்கு பிறர் செய்தால் எப்படி இருக்கும் என்று சிந்திக்க வேண்டும். அது நமக்கு வருத்தம் தரும் என்றால், அந்தச் செயலை, சொல்லை நாம் மற்றவர் மேல் செய்யவோ, சொல்லவோ கூடாது. 


யோசித்துப் பார்போம்...


எவ்வளவு நக்கல், நையாண்டி, ஏளனம், பரிகாசம், திமிராக பதில் சொல்லுவது, கேட்டும் கேளாத மாதிரி இருப்பது, முகம் சுழிப்பது, திட்டு, குத்தல், மட்டம் தட்டுவது, குறை கூறுவது, என்று எவ்வளவு செய்கிறோம். 


செய்யலாமா ?



No comments:

Post a Comment