Saturday, July 22, 2017

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - மெய் நடுங்குற்று வீழும்

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - மெய் நடுங்குற்று வீழும் 


மனு நீதி சோழனின் மகன், பட்டத்து இளவரசன், தேரில் சென்று கொண்டு இருக்கிறான். அப்போது யாரும் காண்பதற்குள் ஒரு இளம் கன்று துள்ளி ஓடி வந்தது என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அப்படி துள்ளி வந்த கன்று, தெரியாமல் தேர் செல்லும் வழியில் குறுக்கே வந்தது. அதனால், அந்தத் தேரின் பொன்னால் ஆன சக்கரம் அந்த கன்றின் மேல் ஏறியது. கன்று இறந்து போனது. இறந்த கன்றைக் கண்டு தாய் பசு வருத்தியது.

பாடல்

அம்புனிற் றாவின் கன்றோ ரபாயத்தி னூடுபோகிச்  
செம்பொனின் றேர்க்கான் மீது விசையினாற் செல்லப்பட்டே
உம்பரி னடையக் கண்டங் குருகுதா யலமந்தோடி
வெம்பிடு மலறுங் சோரு மொய்ந்நடுக் குற்று வீழும்.

சீர் பிரித்த பின்

அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகி 
செம்பொனின் தேர் கால் மீது மீது விசையினால் செல்லப்பட்டே
உம்பரின் அடைய கண்டு அங்கு உருகும் தாய் அலமந்து ஓடி 
வெம்பிடும் அலறும் சோரும் மெய் நடுங்குற்று வீழும் 

பொருள்


அம்அ =அந்த

புனிற்று  = அப்போது தான் பிறந்த

ஆவின் = பசுவின்

கன்று = கன்று

ஓர் = ஒரு

அபாயத்தின் = அபாயத்தின்

ஊடு போகி = இடையே சென்று

செம்பொனின் = செம்மையான பொன்னால் செய்யப்பட்ட

தேர் கால் மீது = தேரின் சக்கரத்தின் மீது

விசையினால் = வேகமாக

செல்லப்பட்டே = செலுத்தப்பட்டே

உம்பரின் = தேவர் உலகை

அடைய கண்டு = அடையக் கண்டு

அங்கு  =  அந்த இடத்தில்

உருகும் = மனம் இறுகும்

தாய் = தாய் பசு

அலமந்து ஓடி = எ அங்கும் இங்கும் திசை தெரியாமல் ஓடி

வெம்பிடும் = மனம் வருந்திடும்

அலறும் = வாய் விட்டு அலறும்

சோரும் = சோர்ந்து இருக்கும்

மெய் = உடல்

நடுங்குற்று = நடுக்கம் கொண்டு

வீழும் = கீழே விழும்

ஒரு பசுவின் சோகத்தை சொல்ல எத்தனை வார்த்தைகளை உபயோகப் படுத்துகிறார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

உருகும் - அலமந்து - ஓடும் - வெம்பும்  - அலறும் - சோரும் - மெய் நடுங்குறும் - வீழும்.

அறிவினான் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை

என்பார் பேராசான் வள்ளுவர்.

பசுதானே, விலங்கு தானே என்று விட்டு விடவில்லை. புதிதாக கன்றை ஈன்ற பசு  , தன் கன்றை நாவால் நக்கிக் கொண்டே இருக்கும். ஒரு நிமிடம் கூட பிரிந்து இருக்காது.

"கற்றாவின் மனம் போல கசிந்து உருக வேண்டுவனே" என்பார் மணிவாசகர்.

(கற்றா  = கன்றை ஈன்ற பசு )

விலங்குகளை வேட்டையாடுவதும், அவற்றை கொன்று தின்பதும் நிறைந்த இந்தக் காலத்தில், உயிர்கள் மேல் அருள் செலுத்தும் இது போன்ற நூல்கள் கட்டாயம் தேவை.


மனிதன் உணர்வுகள் நாளாக நாளாக மழுங்கி கொண்டே போகிறது. விலங்கை கொல்வது சரி , அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்று நினைக்கத் தொடங்கும் போது , நாளடைவில் மனிதர்கள் கொல்லப் படுவதும் பெரிய  விஷயம் இல்லை என்று ஆகி விடும்.

"அந்த விபத்தில் எத்தனை பேர் இறந்தார்கள் ?"

"ஒரு நாலஞ்சு பேர் இருக்கும் "

"ஓ..அவ்வளவுதானா "

என்று கேட்டு விட்டு மேலே போய் கொண்டே இருக்கும் காலம் வந்து விட்டது.

மனித மனதில் ஈரத்தை கொண்டு வர, மனித மனதில் அன்பையும், அருளையும் கொண்டு  வர இது போன்ற உயரிய நூலகளை படிக்க வேண்டும்.

பொழுது போகாமல் அல்ல, ஒரு கன்னுக்குட்டி இறந்ததை பாட்டாக பாடி வைத்தது.

ஒன்றிப்  படித்தால்,நம் விழி ஓரம் ஈரம் கசியலாம்.

அது அருள். அந்த அருள் வீடு பேற்றை நோக்கி நம்மை செலுத்தும்.

இன்னொரு முறை பாடலை வாசித்துப் பாருங்கள்.

மனம் இலேசாக அதிர்ந்தால் , உங்களுக்குள்ளும் அன்பும், அருளும் இருக்கிறது என்று அர்த்தம்.

நீங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2017/07/blog-post_22.html

Wednesday, July 19, 2017

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் தயா இன்றி

பெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் தயா இன்றி 


அருள் !

அருள் என்றால் என்ன ?

நம் பிள்ளை தடுக்கி கீழே விழுந்து விட்டால் , நம் மனம் பதறுகிறது. அது அன்பு.

அந்த பதற்றம் வேறு ஏதோ பிள்ளை விழும்போதும் வந்தால் அருள்.

தொடர்புடையவர் மேல் வருவது அன்பு. தொடர்பு இல்லாதவர் மேலும் வருவது அருள்.

டிவி யில் எங்கோ ஒரு தேசத்தில் பசித்த சின்ன குழந்தைகளை காட்டும் போது ஐயோ என்று மனம் கேவினால், அது அருள்.

எங்கேயோ குண்டு போட்டு, இடிபாட்டுக்கு இடையில் இருந்து அடிபட்ட பிள்ளையை தூக்கிக் கொண்டு வரும் அந்த பெயர் தெரியாத தந்தையை பார்த்து மனம் வருந்தினால், அது அருள்.

அந்த அருள் இன்னொரு மனிதன் மேல் வரலாம்.

விலங்கின் மேல் வரலாம் . சிபி சக்கரவர்த்தி புறாவுக்காக தன் தசையை அறுத்துக் கொடுத்தான். குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன் என்ற அரசன்.

அந்த அருள் மேலிடும் போது செடி கொடி மேலும் வரும். வாடிய பயிரை கண்டபோதெல்லாம்  வாடினேன் என்றார் வள்ளலார். அவர் அருளின் எல்லை அது.

உயிர் இல்லாத கல்லின் மேல் அருள் பிறந்தது கண்ணப்பருக்கு.


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

என்பார் வள்ளுவர்.

பசுவுக்கு அருள் செய்த மனு நீதி சோழனின் கதையை தெய்வப் புலவர் சேக்கிழார் கூறுகிறார்.

"தர்ம தேவதை , மனு நீதி சோழனின் உண்மையான  மனதை உலகுக்கு காட்ட நினைத்தான். அப்போது, யாரும் பார்ப்பதற்கு முன்னால் , ஒரு இளம் கன்று துள்ளி குதித்து தெருவின் குறுக்கே பாய்ந்தது "

பாடல்

தனிப் பெருந் தருமம் தான் ஓர் தயா இன்றித் தானை மன்னன்
பனிப்பு இல் சிந்தையினில் உண்மைப் பான்மை சோதித்தால் என்ன,
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்று இளம் கன்று துள்ளிப் போந்தது அம் மறுகின் ஊடே.


பொருள்

தனிப் பெருந் தருமம் = தனி பெரும் தர்மம்

தான் = அது

ஓர் = ஒரு

தயா இன்றித் = கருணை இல்லாமல்

தானை = படை கொண்ட

மன்னன் = மன்னவனின்

பனிப்பு இல் =  நடுக்கம், அச்சம் இல்லாத

சிந்தையினில் = சிந்தனையினில்

உண்மைப் பான்மை = உண்மை தன்மையை

சோதித்தால் என்ன = சோதித்தால் என்ன என்று

மனித்தர் = மனிதர்கள்

தன் = தன்னுடைய

வரவு = வரவை

காணா வண்ணம் = காணாத வகையில்

ஓர் = ஒரு

வண்ணம் நல் = நல்ல வண்ணம் உள்ள

ஆன் = ஆவின், பசுவின்

புனிற்று இளம் கன்று = பிறந்த சில நாட்களே ஆன கன்று

துள்ளிப் போந்தது = துள்ளி போனது

அம் மறுகின் ஊடே. = அந்த தெருவின் ஊடே

எளிமையான பாடல் தான். சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.



"தனிப் பெருந் தருமம்" - உலகிலேயே பெரியது தர்மம்தான். அறத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை. அது தனித்துவமானது மட்டும் அல்ல எல்லாவற்றையும் விட உயர்ந்தது தர்மம்.


"தான் ஓர் தயா இன்றித்" = தர்மம் என்பது கருணையின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஒரு தாய் தன் பிள்ளையை அடித்து திருத்துவது மாதிரி. அதில் கோபம் இருந்தாலும், அருளே மிகுந்து நிற்கும்.

அரி சினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும் மற்றவள் தன் அருள் நினைந்தே அழும் குழவி அதுவே போன்று இருந்தேனே என்பார் குலசேகர ஆழவார்.


தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே


அப்படி அருளோடு இருக்க வேண்டிய தர்மம் அருள் இன்றி , மன்னவனை சோதிக்க எண்ணி.


மனித்தர் தன் வரவு காணா வண்ணம் = கன்று வருவதை மக்கள் காண மாட்டார்களா ? அது என்ன சின்ன எறும்பா, கொசுவா மனிதர்கள் காணாமல் இருக்க ? கன்று வந்தது தெரியும். அது ஏன் வந்தது என்று தெரியாது. தர்மத்தின் செயல்பாடுகள் கண்ணுக்குத் தெரியாது.

யார் பார்க்கப் போகிறார்கள் என்றுதான் எவ்வளவோ தவறுகளை மனிதர்கள் செய்கிறார்கள். அறம் பார்த்துக் கொண்டேதான் இருக்கும்.

கன்று வருவது தெரிகிறது. அது வந்த காரணம் தெரியவில்லை. கண் முன்னால் நடப்பதற்கே காரணம் தெரியவில்லை. கன்னுக்குத் தெரியாமல் நடப்பவற்றை நாம் எவ்வாறு அறிவோம் ?

ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் அவ்வளவு அர்த்தம்.

கதையை மேலும் தொடர்ந்து சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_19.html

Sunday, July 16, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை 


நேற்று வரை இராமாயணத்தில் திருவடி சூட்டுப் படலம் என்பது பற்றி சிந்தித்தோம்.

தொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு சில விஷயம் தெளிவில்லாமல் இருக்கலாம்.

எதற்காக இராமன் கானகம் போக வேண்டும் ? பேசாமல் பரதன் மற்றும் குல குரு வசிட்டர் பேச்சை கேட்டுக் கொண்டு அயோத்தியிலேயே இருந்திருக்கலாமே. அங்கிருந்து கொண்டே இராவணன் மேல் போர் தொடுத்து இருக்கலாமே என்றெல்லாம் பல கேள்விகள் வரும்.

இதற்கு இரண்டு விடைகள் தரலாம்.

ஒன்று சாதாரணமான விடை. செய்திருக்கலாம். அப்படியும் ஒரு கதை எழுதலாம். இன்னமும் கூட வேறு விதமாக யோசிக்கலாம். எதற்காக இராவணன் மேல் சண்டை போட வேண்டும் ? அவன் போரிட்டு எதிரிகளை வென்றான் (தேவர்களை). கைதிகளை , கைதிகள் போல் நடத்தினான். அவ்வளவுதானே. அது ஒரு பெரிய குற்றமா ? அவன் பாட்டுக்கு அந்த பக்கம் இருக்கட்டும். நாம் பாட்டுக்கு இந்த பக்கம் நாட்டை ஆளுவோம் என்று கூட சிலர் சிந்திக்கலாம்.

பொதுவாகவே, உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அவற்றை படிப்பதன் மூலம் நம்மை நாம் எப்படி உயர்திக் கொள்ளலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, எப்படி அந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே கொண்டு வருவது என்று சிந்திக்கக் கூடாது.

இராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படித்து விட்டு சிலர் அதை பரிகசித்து வேறு மாதிரி நூல்கள் எழுதினார்கள். இராமாயணத்தை கொளுத்த வேண்டும், அதை அடியோடு அழிக்க வேண்டும் என்று சில இயக்கங்கள் புறப்பட்டன.

இவை எல்லாம், உயர்ந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே இறக்கும் முயற்சி.

அதை விடுத்து, அதில் உள்ள உயர்ந்த கருத்துகளை தேடிப் பிடித்து , அந்த கருத்துகளை நம் வாழ்வில் கடை பிடித்து நாம் உயர என்ன வழி என்று சிந்திக்க வேண்டும்.

சரி, இன்னொரு காரணம் என்ன ?

வள்ளுவர் கூறினார், வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானில் உள்ள தேவர்களுக்கு சமமாவான் என்று.

இந்த உலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தால் , இந்த உலகிலேயே அவன் தேவனாக மதிக்கப் படுவான் என்றார்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்.


சரி. வாழ்வாங்கு என்றால் வாழும் முறைப்படி என்று அர்த்தம். அது என்ன முறை ? அந்த முறை எங்கே எழுதி இருக்கிறது ? யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது ?

அப்படி வாழ்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா ?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை இராமாயணம்.

இங்கே நல்லபடி வாழ்ந்து , தேவர்களைப் போல ஆனவர்கள் யார் என்று சொன்னாலும், அவர்கள் வாழ்வில் உள்ள சில குறைகளை கண்டு பிடித்து , இதுவா வாழ்வாங்கு வாழும் முறை என்று சிலர் ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே, கம்பர் என்ன செய்தார் தெரியுமா, வானில் உள்ள ஒருவனை பூமிக்கு கொண்டு வந்தார். அங்குள்ள ஒருவன் இங்கு வந்தால் எப்படி வாழ்வான் என்று  படம் பிடித்து காட்டுகிறார்.

திருமாலையே நேராகக் கொண்டு வந்து , அவனை சாதாரண மானிடன் போல வாழ வைக்கிறார்.

திருமால் , மனித வாழ்க்கையை வாழ்ந்தால் எப்படி வாழுவார் என்று காண்பிக்கிறார்.

இராமன் என்னென்ன செய்தான் என்று தெரிகிறது.

ஏன் செய்தான் என்று நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம்.  இராமனின் சில காரியங்களுக்கு   நமக்கு காரணம் விளங்காமல் இருக்கலாம். அதனால் அவை தவறு என்று  ஆகி விடாது.

ஒரு கடவுளே இங்கு வந்து வாழ்ந்தால் எப்படி வாழ்வான் என்று காண்பிக்கும் முயற்சி தான்  இராமாயணம்.

வேண்டாம், எனக்கு இராமன் போல வாழ வேண்டாம். இராமன் செய்த செயல்களில் எனக்கு   உடன்பாடு இல்லை என்று சிலர் சொல்லலாம்.

சரி. வேறு வழியில் வாழ்வாங்கு வாழத் தெரியும் என்றால், முடியும் என்றால்  அந்த  வழியிலேயே போகலாம்.ஒரு தவறும் இல்லை.

இது இராமன் + அயனம் (பாதை; உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவது போல).

வாழ்வாங்கு வாழ இராமன் காட்டிய வழி.

முடிந்தவரை அந்த வழியில் செல்வோம்.

வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_16.html

Saturday, July 15, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - பாதுகம் செந்தனிக் கோல் முறை செலுத்த

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - பாதுகம் செந்தனிக் கோல் முறை செலுத்த 


இந்தப் படலத்தின் இறுதிப் பாடல் இது.

இராமன் அரசை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டான். தேவர்கள் "இராமன் கானகம் போவதும், பரதன் அரசை ஆள்வதும் கடமை " என்று கூறி விட்டார்கள். பரதன் , இராமனின் இரண்டு பாதுகைகளை வாங்கிக் கொண்டு செல்கிறான்.

சில அருமையான பாடல்கள் உள்ளன. அவற்றைத் தாண்டி, இறுதி கட்டத்துக்கு வருவோம்.

நந்தியம்பதி என்ற இடத்தில் , இராமனின் பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்து, அதற்கு முடி சூட்டி, தன் புலன்களை எல்லாம் அடக்கி , அழுத கண்ணீரோடு அரசாட்சி செய்கிறான் பரதன்.

பாடல்


நந்தி அம் பதி இடை நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்தச் சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.

பொருள்


நந்தி அம் பதி இடை = நந்தியம்பதி என்ற இடத்தில்

நாதன் = இராமன்

பாதுகம் = பாதுகைகளை

செந்  = செம்மையான

தனிக் = தனிச் சிறப்பான

கோல்  = செங்கோல் (அரசாட்சி)

முறை செலுத்தச்  = வழியில் செலுத்த

சிந்தையான் = சிந்தனை கொண்ட பரதன்

இந்தியங்களை அவித்து = இந்திரியங்களை அவித்து

இருத்தல் மேயினான் = இருக்கத் தொடங்கினான்

அந்தியும் = இரவும்

பகலும் = பகலும்

நீர்  = கண்ணீர்

அறாத = வற்றாத

கண்ணினான் = கண்களை கொண்டவன்


கல்லும் உருகும் கவி நயம் ஒரு புறம் இருக்க, மிக மிக ஆழ்ந்த கருத்துகளை கொண்ட பாடல் இது.

முதலாவது,  ஏன் நந்தியம்பதி ? அந்த பாதுகைகளை அயோத்திக்கு கொண்டு போய் , அங்குள்ள சிம்மாசனத்தில் வைக்கக் கூடாதா ?

வைக்கலாம். ஆனால், இராமன் இல்லாத அயோத்திக்குள் போவதற்கு கூட பரதனுக்கு  மனம் இல்லை.

சில சமயம் பிள்ளைகள் திருமணம் ஆகியோ, அல்லது மேற் படிப்புக்கோ, வேலைக்கோ  வீட்டை விட்டு போய் விடுவார்கள். அவர்கள் போன பின், அவர்கள் இருந்த அறையை பார்க்கவே  மனதுக்கு வருத்தமாக இருக்கும். பிள்ளை எப்படி  இருக்கிறானோ / ளோ என்று. அந்த அறைக்கு போகவே மனம் வராது.

அது போல,  இராமன் இருந்த அயோத்தியில், அவன் இல்லாமல் இருக்க பரதனுக்கு மனம் இல்லை. எனவே, ஊருக்கு வெளியே , நந்தியம்பதி என்ற இடத்தில் இருந்து விட்டான்.


இரண்டு, "இந்திரியங்களை அவித்து ". அதாவது புலன்களை அடக்கி அரசு செலுத்தினான்.  பதவி என்றாலே சுகம் அனுபவிக்கத்தான் என்று ஆகிவிட்ட இந்நாளில் , சக்கரவத்தி பதவியில் சுகம் எதையும் அனுபவிக்காமல் இருந்தான் பரதன் என்கிறார் கம்பர்.  பதவி என்பது வேலை செய்யவே தவிர சுகம் அனுபவிக்க அல்ல.  ஒரு சக்கரவர்த்திக்கு எவ்வளவு சுகம், வசதி கிடைக்கும்? சின்ன கம்பெனியில் வேலை செய்பவர்கள் கூட, கார் கதவை ஓட்டுநர் திறக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறார்கள்.  தனது சுகத்தை நினைக்காமல்  மக்களின் சுகத்தை நினைத்து ஒவ்வொருவரும் பணியாற்றினால்  இந்த நாடும் உலகும் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் எண்ணிப் பாருங்கள்.  எந்த பதவியில் இருப்பவர்களுக்கும் இந்த பாடல் ஒரு வழிகாட்டி.  பிரிண்ட் பண்ணி அலுவலகத்தில் ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது, பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் ? கொஞ்சம் நெருடலாக இல்லை ? இராமன் படத்தை வைத்து , அதற்கு பட்டாபிஷேகம் செய்திருக்கலாமே ?

பதவி வேண்டாம் என்று எல்லாவற்றையும் துறந்தவனின் பாதுகைகளை சக்கரவர்த்தி  பட்டம் ! எல்லாம் துறந்தவனுக்கு, எல்லாம் கிடைக்கும்.  வேண்டும் வேண்டும்   என்று மேலும் மேலும் ஆசைப் படுபவன் பிச்சைக்காரனாகவே இருப்பான்.  ஒன்றும் வேண்டாம் என்று மர உரி உடுத்து கானகம் போனவன்  பாதுகைகளை மணி மகுடம்.


நான்காவது,  அரசை யார் செலுத்துகிறார்கள் ? இராமனா ? அவன் தான் கானகம் போய் விட்டானே. பாதுகைகளா ? அவற்றிற்கு என்ன தெரியும் ? பரதனா  ?  அவன் இராமனின் பொறுப்பாளனாக இருக்கிறான். (representative ).  பின் யார் தான்  அரசை செலுத்துகிறார்கள் ?

யார் செலுத்துகிறார்கள் என்பதல்ல முக்கியம். அரசு என்பது ஒரு தனி மனிதன்  செலுத்த வேண்டிய ஒன்று அல்ல. பாதுகை என்பது ஒரு அடையாளம். ஒரு சின்னம். தர்மம், அறம்  , தர்மம் இவற்றின் வழியில் அரசு செலுத்தப் பட வேண்டும். பிரதம மாதிரி, முதல் மந்திரி என்பதெல்லாம் ஒரு குறியீடு. அவர்கள்தான் ஆட்சியை செலுத்த வேண்டும் என்றல்ல.

ஐந்தாவது, பரதனுக்கு தனி மனித சோகம் உண்டு. அண்ணனை பிரிந்த சோகம். இருந்தும் அது அரசை பாதிக்க விடாமல் . "செந் தனிக் கோல் முறை செலுத்தச்" என்பான் கம்பன். நமது சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து விட்டு  கடமையை செய்ய வேண்டும்.

இந்தப் படலத்தின் மணிமகுடமான பாடல் இது.


காலம் கருதி சில பாடல்களை விட்டு விட்டேன்.  மூல தேடி பிடித்து , அவற்றையும் படியுங்கள்.

இதுவரை பொறுமையாக அனைத்து பாடல்களையும் படித்து வந்த உங்களுக்கு ஒரு  ஒரு நன்றி.

Friday, July 14, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எம்மையும் தருவன

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எம்மையும் தருவன 


கானகம் வந்த இராமனை பின் தொடர்ந்து வந்த பரதன் ஆட்சியை மீண்டும் ஏற்றுக் கொள்ளுபடி வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். வசிட்டன் சொல்லிப் பார்க்கிறான். அப்பவும் இராமன் ஏற்றுக் கொள்ளவில்லை. பின் தேவர்கள் வந்து இராமன் கானகம் செல்வதும், பரதன் நாடு ஆள்வதும் அவர்கள் கடமை என்று சொன்ன பின்  இராமன் பரதனிடம்   கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் , நாட்டை ஆளும்படி.

பரதனும் சரி என்று ஏற்றுக் கொள்கிறான். ஆனால் "பதினான்கு ஆண்டுகளில் நீ திரும்பி வராவிட்டால் உயிர் விடுவேன் " என்று கூறுகிறான்.

அதற்கு இராமன் சம்மதிக்கிறான்.

இறுதியில் பரதன் , வேறு ஒன்று செய்வதற்கு இல்லை என்று அறிந்த பின் "உன் திருவடிகளை தா" என்று இராமனிடம் கேட்கிறான். இராமனும் அவற்றை கொடுக்கிறான்.


பாடல்

விம்மினன் பரதனும், வேறு செய்வது ஒன்று
இன்மையின், ‘அரிது’ என எண்ணி, ஏங்குவான்,
‘செம்மையின் திருவடித்தலம் தந்தீக’ என,
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான்.


பொருள்

விம்மினன் பரதனும் = பரதனும் மனம் விம்மி

வேறு செய்வது ஒன்று = வேறு ஒன்று செய்வது

இன்மையின் = இல்லாததால்

‘அரிது ‘என எண்ணி ஏங்குவான் = ஒன்றும் செய்ய

முடியவில்லையே என்று எண்ணி ஏங்கி

செம்மையின் = செம்மையான

திருவடித் தலம் = திருவடி இருக்கின்ற தலம், அதாவது பாதுகை

தந்தீக ‘என = தந்து ஈக. தானமாக கொடு என்று வேண்டினான்

எம்மையும் தருவன = எம்மையும் தருவன

இரண்டும் நல்கினான். = இரண்டையும் தந்தான்

''எம்மையும்" என்றால் என்ன ?

எம்மையே எமக்குத் தரும் என்று கொள்ளலாம்.

"தம்மையே தமக்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை"

என்று பின்னொரு இடத்தில் கம்பன் கூறுவான்.

இம்மைக்கும், மறுமைக்கும் எல்லாவற்றையும், எப்போதும்  தரும் என்ற பொருளில், "எம்மையே " என்றான்.

"நல்லன எல்லாம் தரும் அபிராமி கடைக் கண்களே " என்பார் அபிராமி பட்டர்.


இறைவன் உயர்ந்தவன்.

அவனைத் தாங்கும் அவன் பாதங்கள் அதை விட உயர்ந்தது.

பாதங்களையும் சேர்த்துத் தாங்கும் பாதுகை அதை விட உயர்ந்தது.

இராமனின் திருவடிகளை கொண்டு போய் பரதன் என்ன செய்யப் போகிறான் ?

இந்த படலம் முடிவதற்கு இன்னும் ஒரு சில பாடல்களே இருக்கின்றன.

சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_14.html


Thursday, July 13, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான் 


தயரதன் சொல் கேட்டு கானகம் வந்த இராமனை மீண்டும் அரசை ஏற்றுக் கொள்ளும்படி பரதனும், பின் வசிட்டனும் வேண்டிய பின்னும், இராமன் மறுத்து விடுகிறான். பரதன் பிடிவாதம் பிடிக்கிறான்.

இறுதியில் வானவர் வந்து இராமன் கானகம் போவதும், பரதன் நாடாள்வதும் கடமை என்று சொல்லி விடுகிறார்கள்.

இராமன் பரதனிடம் சொல்கிறான்

"வானவர்கள் சொல்லி விட்டார்கள். அவர்கள் சொல்லை மீறக் கூடாது. நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நீ இந்த நாட்டை ஆள்"

என்று பரதனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு சொல்கிறான்

பாடல்

வானவர் உரைத்தலும்,
    ‘மறுக்கற்பாலது அன்று;
யான் உனை இரந்தனென்,
    இனி என் ஆணையால்
ஆனது ஓர் அமைதியின்
    அளித்தி பார் ‘எனா,
தான் அவன் துணை மலர்த் தடக்கை பற்றினான்.
  

பொருள்


வானவர் = தேவர்கள்

உரைத்தலும் = சொன்ன பின்னால்

‘மறுக்கற்பாலது அன்று = அதை மறுக்க முடியாது

யான் உனை இரந்தனென் = நான் உன்னை கேட்டுக் கொள்கிறேன்

இனி என் ஆணையால்  = இனி மேல் என் ஆணையால்

ஆனது ஓர் அமைதியின் = உனக்கென்று அமைந்து விட்ட

அளித்தி பார் ‘எனா, = இந்த உலகை ஆள் என்று

தான் = இராமன்

அவன் = பரதனின்

துணை  = இரண்டு

மலர்த் = மலர் போன்ற

தடக்கை = பெரிய கைகளை

பற்றினான் = பற்றிக் கொண்டான்


கண்ணில் நீர் வரவழைக்கும் பாடல்

நினைத்துக் கூட பார்க்க முடியாத இடம். கற்பனை கூட செய்ய முடியாத சூழ்நிலை.

எவ்வளவோ இருக்கிறது இந்தப் பாடலில் அறிந்து கொள்ள.

அண்ணன் சொல்லி விட்டான்.

குல குருவும் மௌனமாகி விட்டார் . அப்படி என்றால் அவரும் ஏற்றுக் கொண்டு விட்டார் என்று தான் அர்த்தம்.

இப்போது தேவர்களும் கூறி விட்டார்கள்.

பரதனுக்கு வேறு வழியில்லை.

இராமன் கை ஓங்கி இருக்கிறது. "நான் தான் அப்பவே சொன்னேனே ...பார் இப்போது தேவர்களும் சொல்லி விட்டார்கள். நீ போய் நாட்டை ஆள் " என்று சொல்லி இருக்கலாம்.

இராமன் அப்படி சொல்லவில்லை.

"நான் உன்னிடம் பிச்சை கேட்கிறேன்' என்று கூறுகிறான்.

"யான் உனை இரந்தனென்". இரத்தல் என்றால் பிச்சை கேட்டல், கெஞ்சி கேட்டல்.

அவ்வளவு தூரம் கீழே இறங்கி வருகிறான் இராமன்.

பல வீடுகளில் கணவன் மனைவி உறவுச் சிக்கல்கள் இருக்கலாம். கொஞ்சம் வாதம், பிரதி வாதம் செய்த பின், யாரோ ஒருவர் சொன்னது சரியாகவும் மற்றவர் சொன்னது தவறாகவும் இருக்கலாம்.

உடனே, வென்றவர் , "நான் தான் அப்பவே சொன்னேனே. நீ கேட்கவில்லை. பாத்தியா இப்ப..." என்று தோற்றவர் மனதை மேலும் குத்தி புண் படுத்துவதை கண்டிருக்கிறோம்.

அப்படி செய்யக் கூடாது .

வென்றவர் , தோல்வி அடைந்தவர் மனதுக்கு ஆறுதலாக பேசினால் , தோற்றவர் கூட  தோல்வியை பெரிதாக நினைக்காமல் அந்த அன்பை நினைத்து செயல்படுவார்கள்.

இது கணவன் மனைவி உறவில் மட்டும் அல்ல, பெற்றோர் பிள்ளைகள் , அதிகாரி ஊழியர் உறவு என்று எல்லா இடத்திலும் வெற்றி பெற்றவர் ஆணவம் கொள்ளாமல் , தோற்றவர் மனதுக்கு மருந்து போடுவது போல பேச வேண்டும்.

அடுத்தது, பரதனின் இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டு கேட்கிறான். அவ்வளவு பாசம் தம்பி மேல்.

தான் காட்டுக்குப் போகவும், தம்பிக்கு நாட்டைத் தரவும் இந்த கெஞ்சல்.

உதவி என்று கேட்கும் போது , எவ்வளவு இனிமையாக கேட்கிறான் இராமன்.

ஏதோ, அரண்மனையில் , சுகமாக இருந்து கொண்டு இவ்வளவு அன்பாக பேசவில்லை.

இருக்கும் இடம் கானகம். சற்று முன் தான் தந்தை இறந்த செய்தியை கேள்விப் படுகிறான் இராமன். தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி கடன்களை செய்கிறான். இன்னும் பதினாலு வருடம் காட்டில் இருக்க வேண்டும்.

சோகமான இடம். இறுக்கமான சூழ்நிலை. கடினமான காலம்.

இருந்தும் இராமனின் சொல்லிலும், செயலிலும் அவ்வளவு கனிவு.

"நாட்டைப் பார்த்துக் கொள் " என்று பரதனின் கைகளை பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்.

முடியுமா ?

முடிந்த வரை முயற்சி செய்வோம். உறவுகளோடு அன்போடு பழகுவோம். இனிமையாக பேசுவோம். பேச்சிலும், செயலிலும் இனிமையை வெளிப் படுத்துவோம்.

வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_13.html

Wednesday, July 12, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஏத்த அரும் பெருங் குணத்து இராமன்

கம்ப இராமாயணம் -  திருவடி சூட்டுப் படலம் - ஏத்த அரும் பெருங் குணத்து இராமன்


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் நாட்டுக்கு வந்து ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி பரதன் வேண்ட, அதை இராமன் மறுக்க, வசிட்டனும் பரதன் சொன்னதை சொல்ல, அதற்கும் இராமன் மறுக்க...யார் வேண்டுமானாலும் நாட்டை ஆண்டு கொள்ளுங்கள், நான் காட்டிலேயே இருக்கப் போகிறேன் என்று பரதன் இருந்து  விடுகிறான்.

இக்கட்டான சூழ்நிலை.

அப்போது தேவர்கள் அங்கே வருகிறார்கள்.

வந்தவர்கள் ....

"போற்றுதலுக்குரிய பெரிய குணங்களை உடைய இராமன் அவனுடைய தந்தையின் சொல் கேட்டு நடக்கவும், பரதா நீ அந்த நாட்டை 14 ஆண்டுகள் ஆளவும், இது உங்கள் இருவரது கடமையும் ஆகும் "

என்றனர்.

பாடல்


ஏத்த அரும் பெருங் குணத்து இராமன் இவ் வழிப்
போத்து அரும் தாதை சொல் புரக்கும் பூட்சியான்;
ஆத்த ஆண்டு ஏழினொடு ஏழும் அந் நிலம்
காத்தல் உன் கடன்; இவை கடமை’ என்றனர்.


பொருள்

ஏத்த = போற்றுதலுக்குரிய

அரும் = அருமையான

பெருங்  = பெருமை நிறைந்த

குணத்து = குணங்களை கொண்ட

இராமன் = இராமன்

இவ் வழிப் = இந்த வழி

போத்து = போய்

அரும் = அரிய அல்லது அருமையான

தாதை சொல்  = தந்தையின் சொல்லை

புரக்கும் = காக்கும்

பூட்சியான் = மேற்கொண்டுள்ளான் ;

ஆத்த = அந்த

ஆண்டு  = ஆண்டுகள்

ஏழினொடு ஏழும் = பதினான்கு ஆண்டுகளும்

அந் நிலம் = அயோத்தியை

காத்தல் உன் கடன்; = காப்பது உன் கடைமை

இவை கடமை’ = இவை உங்களது கடமைகள்

என்றனர் = என்றனர்.

இவை எல்லாம் கடமைகள்.

பெற்றோரின் சொல்லை கேட்பது என்பது பிள்ளைகளின் வசதிப்படி அல்ல. கேட்க வேண்டியது கடமை.

அது மட்டும் அல்ல, பெற்றோரின் பேச்சை ஒரு பிள்ளை கேட்டால், மற்ற உடன் பிறப்புகள்  அவனுக்கு உதவ வேண்டும் என்பதும் கடமை.

இலக்குவனை கானகம் போ என்று யாரும் சொல்லவில்லை.  அவன் தானே கிளம்பி விட்டான்.

பரதன் கொஞ்சம் முரண்பட்டான்.

தேவர்கள் வந்து அவனுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

இராமன் , தந்தையின் சொல்லை கேட்டு கானகம் போவதால், நீ நாட்டை ஆள வேண்டும் என்பது உன் கடமை என்று பரதனிடம் கூறுகிறார்கள்.

பெற்றோர் சொல்லை கேட்டு பிள்ளைகள் வாழ வேண்டும் என்று பாரம்பரியம் இருந்தது இந்த நாட்டில்.

இந்த தேவர்கள் ஏன் வருகிறார்கள், அதற்குப் பின் என்ன அர்த்தம் என்று இந்த படலத்தின் முடிவில்  சிந்திக்க இருக்கிறோம். அது மட்டும் அல்ல, ஏன் திருமால் இப்படி  அவதாரம் எடுத்து சங்கடப் படவேண்டும். பேசாமல், நேரடியாகவே வந்து  இராவணனிடம் சண்டையிட்டு ஒரு நொடியில் வேலையை தீர்த்து இருக்கலாம் அல்லவா ? இது என்ன கொக்கு தலையில் வெண்ணையை வைத்து  அதை பிடிப்பது போல உள்ளது ?


இதற்கெல்லாம் என்ன காரணம் ?

எவற்றையும் இந்த படல முடிவில் சிந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_12.html


Tuesday, July 11, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் - பாகம் 2

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் - பாகம் 2 


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் வேண்டினான். இராமன் மறுத்தான். வசிட்டன் சொல்லிப் பார்த்தான். அப்போதும் இராமன் ஏற்கவில்லை. இறுதியில், "யாராவது நாட்டை ஆண்டு கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் " என்று பரதன் அடம் பிடிக்கிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பி நிற்கிறார்கள்.

அப்போது, தேவர்கள் அங்கு கூடி யோசித்தார்கள்

"இப்போது பரதன் இராமனை கூட்டிக் கொண்டு போய் விட்டால், நம் காரியம் ஒழுங்காக நடக்காது என்று எண்ணினர்"

பாடல்

அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார்.
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்;

பொருள்

அவ் வழி =  அந்த இடத்தில் ,

இமையவர் = கண்களை இமைக்காத தேவர்கள்

அறிந்து கூடினார் = நடப்பதை அறிந்து கூடினார்கள்

‘இவ் வழி = இந்த வழியில்

இராமனை = இராமனை

இவன் = பரதன்

கொண்டு ஏகுமேல் = அயோத்திக்கு கொண்டு சென்று விட்டால்
,
செவ் வழித்து அன்று  = நல்ல வழி அன்று

நம் செயல்’ = நம்முடைய செயல் (இராவணனை கொல்லும் செயல்)

என்று எண்ணினார் = என்று நினைத்தார்கள்

கவ்வையர் =  கவலை உள்ளவர் ,

விசும்பிடைக் = வானத்திடை

கழறல் மேயினார் = பேசத் தொடங்கினார்கள்

தேவர்கள் வந்து என்ன சொன்னார்கள் ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்


============= பாகம் 2 =======================================


எடுத்த எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்க என்ன செய்ய வேண்டும் ?


காரியத்தை முடிக்க வேண்டும் என்ற உறுதி வேண்டும். 

பலருக்கு தோல்வி ஏன் வருகிறது என்றால், எடுத்த வேலையில் உறுதி கிடையாது. கொண்ட கொள்கையில் உறுதி கிடையாது. எதிலும் சந்தேகம். 

இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ, இது சரிதானா, இப்படி செய்யலாமா என்று ஆயிரம் சந்தேகங்கள். இப்படி சந்தேகப் பட்டுக் கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம் கிட்டாது. 

எண்ணித் துணிக கருமம் , துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு 

என்பார் வள்ளுவர். 

சரி, துணிந்து இறங்கி விட்டால் என்ன ஆகும் ?

இந்த உலகமே அப்படிப் பட்டவன் பின்  இந்த உலகமே நிற்கும். அவனுக்கு உதவி செய்யும். 

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை சாதிக்கப் பிறந்திருக்கிறோம். அது நமக்குள் சதா சர்வ காலமும் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாம் என்ன வேலை செய்தாலும், நம் மனம் அந்த ஒன்றை பற்றியே நினைத்துக் கொண்டிருக்கும். 

நாம் அதை தொடங்கும் வரை , நம் மனம் நம்மை தொடர்ந்து இழுத்துக் கொண்டே இருக்கும். 

கீதை அதை சுதர்மம் என்கிறது. 

நம் சுதர்மம் நமக்கு முன்னே பிறந்து நமக்காக காத்துக் கொண்டிருக்கும் என்பார் ஆச்சாரியா வினோபாபாவே. 

நாம் அதை தொடங்கியவுடன்,  அதன் பாதையில் செல்லத் தொடங்கியவுடன், இந்த உலகமே நமக்கு உதவி செய்ய பின் நிற்கும். 

இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கிய துறவிகளிடம் இருந்தது ஒரே ஒரு மாற்று உடைதான். அது மட்டும்தான் அவர்கள் சொத்து. ஆனால், அவர்கள் அந்த மிஷனை தொடங்கிய பின், எங்கிருந்தோ செல்வம் வந்து கொட்டியது. 

இராமனின் சுதர்மம், பெற்றோர் சொல் கேட்பது. 

அதற்கு பல தடங்கல்கள்.  அமைச்சர்கள், உடன் பிறந்த தம்பி, கல்வி கற்றுத்தந்த குரு  என்று பல தடைகள் வந்தாலும், தான் கொண்ட கொள்கையில் இராமன் தெளிவாக இருந்தான். 

அப்போது, தேவர்கள் வந்து அவனுக்கு உதவி செய்தார்கள்.

தேவர்கள் என்றால் ஏதோ தேவர்கள் வானில் இருந்து குதித்து வந்து உதவினார்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. 

நீங்கள் உங்கள் நல்ல கொள்கையில் உறுதியாக இருந்தால், தெய்வமும் இறங்கி வந்து உங்களுக்கு உதவி செய்யும். 

நம்பிக்கை, உறுதி இரண்டும் வேண்டும். 

சந்தேகமே வேண்டாம். 

நமது புராண இதிகாசங்கள் மீண்டும் மீண்டும் இதைத்தான் பல்வேறு விதங்களில் சொல்கின்றன. 

அசரீரி வந்தது, கடவுள் நேரில் வந்து உதவினார் என்பதெல்லாம், கொண்ட செயலில் உறுதியாக இறங்கினால், தெய்வமும் உதவி செய்யும் என்பதை உணர்த்தவே. 


“Until one is committed, there is hesitancy, the chance to draw back, always ineffectiveness. Concerning all acts of initiative (and creation), there is one elementary truth, the ignorance of which kills countless ideas and splendid plans: that the moment one definitely commits oneself, then Providence moves too. All sorts of things occur to help one that would never otherwise have occurred. A whole stream of events issues from the decision, raising in one's favour all manner of unforeseen incidents and meetings and material assistance, which no man could have dreamt would have come his way. I have learned a deep respect for one of Goethe's couplets:
Whatever you can do, or dream you can, begin it.
Boldness has genius, power, and magic in it!”


― William Hutchison Murray


உங்கள் மனதுக்குள் நீண்ட காலமாக ஓடிக் கொண்டிருக்கும் அந்த எண்ணத்தை செயல்படுத்த உறுதியாக இறங்குங்கள்.

இராமன் உறுதியாக நின்றான். வான் உலகம் இறங்கி வந்தது.

நீங்களும் இறங்குங்கள்.

வையமும், வானமும் உங்கள் பின்னால் நிற்கும்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/2.html

Monday, July 10, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அன்று நம் செயல் 


தயரதன் ஆணை ஏற்று கானகம் வந்த இராமனை மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் வேண்டினான். இராமன் மறுத்தான். வசிட்டன் சொல்லிப் பார்த்தான். அப்போதும் இராமன் ஏற்கவில்லை. இறுதியில், "யாராவது நாட்டை ஆண்டு கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து விடுகிறேன் " என்று பரதன் அடம் பிடிக்கிறான்.

என்ன செய்வது என்று எல்லோரும் குழம்பி நிற்கிறார்கள்.

அப்போது, தேவர்கள் அங்கு கூடி யோசித்தார்கள்

"இப்போது பரதன் இராமனை கூட்டிக் கொண்டு போய் விட்டால், நம் காரியம் ஒழுங்காக நடக்காது என்று எண்ணினர்"

பாடல்

அவ் வழி, இமையவர் அறிந்து கூடினார்,
‘இவ் வழி இராமனை இவன் கொண்டு ஏகுமேல்,
செவ் வழித்து அன்று நம் செயல்’ என்று எண்ணினார்.
கவ்வையர், விசும்பிடைக் கழறல் மேயினார்;

பொருள்

அவ் வழி =  அந்த இடத்தில் ,

இமையவர் = கண்களை இமைக்காத தேவர்கள்

அறிந்து கூடினார் = நடப்பதை அறிந்து கூடினார்கள்

‘இவ் வழி = இந்த வழியில்

இராமனை = இராமனை

இவன் = பரதன்

கொண்டு ஏகுமேல் = அயோத்திக்கு கொண்டு சென்று விட்டால்
,
செவ் வழித்து அன்று  = நல்ல வழி அன்று

நம் செயல்’ = நம்முடைய செயல் (இராவணனை கொல்லும் செயல்)

என்று எண்ணினார் = என்று நினைத்தார்கள்

கவ்வையர் =  கவலை உள்ளவர் ,

விசும்பிடைக் = வானத்திடை

கழறல் மேயினார் = பேசத் தொடங்கினார்கள்

தேவர்கள் வந்து என்ன சொன்னார்கள் ?

அடுத்த பிளாகில் பார்ப்போம்

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_10.html

Saturday, July 8, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க நாடு

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க நாடு 


தந்தையின் உரை கேட்டு கானகம் சென்ற இராமனை பின் தொடர்ந்து வந்த பரதன், அரசை ஏற்றுக் கொள்ளும்படி இராமனிடம் வேண்டுகிறான். எவ்வளவோ சொல்லியும் இராமன் ஏற்றுக்  கொள்ளவில்லை. வசிட்டன் இடையிட்டு , "இராமா , நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் . இது என் ஆணை " என்று கூறுகிறான்.

"நான் என் பெற்றோர் சொல்வதை கேட்பதா, குரு சொல்வதை கேட்பதா " என்று கேள்வியை வசிட்டனிடமே விடுகிறான் இராமன்.

வசிட்டன் பாடு சங்கடமாகிவிட்டது. பெற்றோர் சொல் கேளாதே என்று குரு சொல்ல முடியாது. பின்  என்ன செய்வது.

"நான் சொன்னது தவறுதான், நான் அப்படி சொல்லி இருக்கக் கூடாது. நீ பெற்றோர் சொல்லையே கேள் " என்று வசிட்டன் சொல்லி இருக்க வேண்டும்.

 அவன் படித்த கல்வி அவனை அவ்வாறு சொல்ல விடாமல் தடுக்கிறது.

இராமன் அப்படி கேட்டவுடன் "இனிமேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை " என்று எண்ணி பேசாமல் அமர்ந்து விட்டான்.

பார்த்தான் பரதன், "சரி தான், வசிட்டனும் வாய் மூடி மௌனமாகி விட்டான். இனி மேல் இராமனை யாரும் மாற்ற முடியாது " என்ற எண்ணத்திற்கு வந்து வந்தான்.

" அப்படியா சங்கதி.   சரி.  யாராவது நாட்டை  ஆண்டு கொள்ளட்டும்.  நான் இராமனோடு கானகம் போகிறேன் " என்று கூறுகிறான்.

பாடல்

முனிவனும், 'உரைப்பது ஓர் முறைமை கண்டிலெம்
இனி' என இருந்தனன்; இளைய மைந்தனும்,
'அனையதேல் ஆள்பவர் ஆள்க நாடு; நான்
பனி படர் காடு உடன் படர்தல் மெய்' என்றான்

பொருள்

முனிவனும் = வசிட்ட முனிவனும்

 'உரைப்பது = இனி சொல்வதற்கு

ஓர் = ஒரு

முறைமை கண்டிலெம் = வழியும் இல்லை

இனி' = இனிமேல்

என இருந்தனன்; = என்று நினைத்து அமர்ந்து விட்டான்

இளைய மைந்தனும் = பரதனும்

அனையதேல் = அப்படியானால்

ஆள்பவர் ஆள்க நாடு; = யாரவது நாட்டை ஆண்டு கொள்ளட்டும்

நான் = நான்

பனி படர் = பனி விழும்

காடு = காட்டுக்கு

உடன் = இராமனுடன்

படர்தல் மெய்' = உடன்செல்வது உண்மை

என்றான் = என்றான்

காப்பியம் நின்று விட்டது. கதையை மேலே நகர்த்த வழி இல்லை.


இராமன் அரசை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறான்.

பரதன் நாட்டை ஆள மாட்டேன் என்கிறான்.

வசிட்டன் வாய் மூடி மௌனமாகிவிட்டான்.

அடுத்து என்ன செய்வது ?

இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணாக முட்டிக் கொண்டு நிற்கிறது. ஆங்கிலத்தில் grid lock என்று சொல்லுவார்களே ,   அது போல.


இந்த சிக்கலை யார் அவிழ்ப்பது ? எப்படி அவிழ்ப்பது ?

இராமனின்  அவதார நோக்கம் நிறைவேற வேண்டும். அதே சமயம் அயோத்தி மக்களும் மன்னன் இல்லாமல் தவிக்கக் கூடாது.

இராமனும் பரதனும் தங்கள் நிலையில் இருந்து இறங்கி வருவதாய் இல்லை.

என்ன செய்வது ? எப்படி கதையை நகர்த்துவது ? யார் வந்தால் இந்த சிக்கல் தீரும் ? எப்படித்தான் தீரும் ?

சிந்தித்துக் கொண்டு இருங்கள்.

நாளையும் சந்திப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_81.html

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய

பெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய 


சடையனார் என்பவருக்கும், இசை ஞானியாருக்கும் பிள்ளையாக சுந்தர மூர்த்தி நாயனார் பிறந்தார்.

இது செய்தி.

இதைச் சொல்ல வருகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

தமிழ் கொஞ்சுகிறது.

பாடல்

மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்  
  வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி 
                                யார்பாற்
றீதகன் றுலக முய்யத் திருவவ தாரஞ் செய்தார்.

பொருள்

மாதொரு பாக னார்க்கு = மாது + ஒரு + பாகனார்க்கு = பெண்ணை ஒரு உடம்பின் ஒரு பக்கத்தில் உடையவர்க்கு . அதாவது சிவ பெருமானுக்கு

வழிவழி யடிமை செய்யும்  = வழி வழி அடிமை செய்யும்.

அது என்ன வழி வழி ? ஒரு முறை சொன்னால் போதாதா ?

தாய் வழி, தந்தை வழி என்று இரண்டு வழியிலும் சிவத் தொண்டு செய்து வந்த குடும்பம்.  எனவே வழி வழி என்று கூறினார்.

வேதியர் குலத்துட் =  வேதியர் குலத்தில. வேதம் ஓதும் குடும்பத்தில்.  வேதம் என்பது வீட்டுப் புழக்கமாக இருந்திருக்கிறது.

டோன்றி = தோன்றி

மேம்படு சடைய னாருக் = மேன்மை மிகுந்த சடையனாருக்கு

கேதமில் கற்பின் = கேதம் என்றால் துக்கம்.

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 

என்பார் மணிவாசகப் பெருந்தகை.

கேதமில் கற்பு என்றால் குற்றமற்ற கற்பு, தீமையற்ற கற்பு.

வாழ்க்கை = வாழ்க்கை

மனை = மனைவியான

யிசை ஞானியார்பாற் = இசை ஞானியார் பால். அவரிடம்

றீதகன் றுலக முய்யத் = தீது அகன்று உலகம் உய்ய

திருவவ தாரஞ் செய்தார்= திரு அவதாரம் செய்தார்.

நாம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று அவர்கள் நினைக்கவில்லை.

என் வீடு, என் குடும்பம், என் சமயத்தில் உள்ளவர்கள், என் நாட்டில் உள்ளவர்கள் மட்டும் இன்பமாக வாழ்ந்தால் போதும் என்று சேக்கிழார் போன்ற பெரியவர்கள் நினைக்கவில்லை.

அவர்களிடம் உலகம் பற்றிய சிந்தனை  இருந்தது.

உலகம் நன்றாக இருக்க வேண்டும் விரும்பினார்கள். உலகம் என்றால் உலகில் உள்ள மக்கள். இடவாகு பெயர்.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்பார் சேக்கிழார்

உலகம் யாவையும் தாம் உள வாக்கிலும் என்பார் கம்பர்

உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதற் கணவன்
கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து

இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . .

என்று தொடங்குகிறார் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்.

உலகம் உவப்ப என்றால் உலகம் மகிழ என்று அர்த்தம்.

நான் மகிழ, என் வீட்டில் உள்ளவர்கள் மகிழ, என் சாதிக்காரர்கள் மகிழ என்று வேண்டவில்லை. உலகில் உள்ள எல்லா உயிர்களும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று  பாடினார் நக்கீரர்.

உலகளாவிய சிந்தனை இருந்திருக்குறது.

உலகிலே தீமை இருந்து கொண்டுதான் இருக்கிறது.

சுந்தரர் காலத்திலும் தீமைகள் இருந்திருக்கின்றன.

அந்தத் தீமைகள் எல்லாம் விலகி, உலகம் உய்ய திரு அவதாரம் செய்தார் என்கிறார்  சேக்கிழார் பெருமான்.


தீமைகள் நீங்காவிட்டால் உலகம் அழித்து போகும்.

நன்மைகள் பெருகி உலகம் உய்ய என்று சொல்லி இருக்கலாம்.

எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், கொஞ்சம் தீமை இருந்தால் அது நல்லவைகளை சிறுமை படுத்தி விடும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அறம் என்பார் வள்ளுவர்.

மனத்துக்கண் நல்லவன் ஆதல் அறம் என்று சொல்லி இருக்கலாம்தானே ? சொல்லவில்லை. மாறாக, மாசிலன் ஆதல் என்று கூறுகிறார்.

தீமைகளை விலக்கி விட்டால், நன்மை தானே வரும்.

"அவதாரம் செய்தார் " அவதாரம் என்றால் மேலிருந்து கீழ்  வருவது. வந்த பின் கீழே உள்ளவர்களை மேலே தூக்கிவிடுவது.

இராமனை இருகை வேழத்து இராகவன் என்பார் கம்பர்.

ஏன் இராமனை யானையோடு ஒப்பிடுகிறார் ?

யானையின் காலைப்  பிடித்தால்,அது நம்மை தலைக்கு மேலே தூக்கி முதுகில் உட்கார வைத்துக் கொள்ளும்.

இராகவனும் , அவனுடைய பாதங்களை பிடித்தவர்களை மேலே தூக்கி விடுவான்.

நம்மை உயர்த்த வந்த  யாருமே அவதாரம் தான்.

கீழிருப்பது மேலே செல்வதற்காக , மேலிருந்து ஒன்று கீழே வருவது அவதாரம் என்று பெயர்.

உலகம் தீமைகளில் இருந்து விடப்பட்டு உய்வடைய சுந்தர மூர்த்தி நாயனார்  அவதாரம் செய்தார்


பெரிய புராணத்து தமிழ் சொற்கள் ஆழம் மிகுந்தவை. பொருட்ச்செறிவு நிறைந்தவை.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_8.html


Friday, July 7, 2017

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு என் இனிச் செய்ய வகை ?

கம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு என் இனிச் செய்ய வகை ?


தந்தை சொல் கேட்டு இராமன் கானகம் வந்து விட்டான். அவனைத் தொடர்ந்து வந்த பரதன், இராமனிடம், அரசை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். அப்போது இடை மறித்து , வசிட்டன் "இராமா நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் , இது என் ஆணை " என்று ஆணையிட்டு  விடுகிறான்.

குருவின் ஆணையை மீற முடியாது. இராமன் மீறினால், பின்னால் வரும் சந்ததி ஒன்றும் ஆசிரியர் பேச்சை கேட்கமாட்டார்கள். இராமனே கேட்கவில்லை, நான் ஏன் கேட்க வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார்கள்.

இராமன் இந்த தர்ம சங்கடத்தை மிகத் திறமையாக கையாளுகிறான்.

ஆணையிட்ட வசிட்டனை நோக்கி இராமன் கேட்கிறான்

"முன்னால் சொன்ன தாய் தந்தையரின் கட்டளையை ஏற்று, நான் இங்கு வந்திருக்கிறேன். இப்போது நீ ஆணையிடுகிறாய். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீயே சொல் " என்று.

பாடல்


முன் உறப் பணித்தவர்
     மொழியை யான் என
சென்னியில், கொண்டு, “அது
     செய்வேன்” என்றதன்
பின்னுறப் பணித்தனை;
     பெருமையோய்! எனக்கு
என் இனிச் செய்வகை?
     உரைசெய் ஈங்கு’ என்றான்


பொருள்


முன் உறப் = முன்பு தெளிவாக

 பணித்தவர் =  என்னை கானகம் போகும் படி பணித்தவர்கள் (என் தாய் தந்தையர்)

மொழியை = சொன்ன சொல்லை

யான் = நான்

என்எ = என்னுடைய

சென்னியில் கொண்டு, = தலைமேல் கொண்டு

 “அது செய்வேன்” = அதை செய்து முடிப்பேன்

என்றதன் = என்ற அந்த வாக்குக்குப்

பின்னுறப் பணித்தனை; = பின்னால் நீ என்னை பணிக்கிறாய்

பெருமையோய்! = பெருமை உடையவனே

எனக்கு = எனக்கு

என் இனிச் செய்வகை? = இனி எந்த வகையில் காரியம் செய்ய வேண்டும்

உரைசெய் ஈங்கு’ என்றான் = இங்கு நீ உரைப்பாய் என்றான்

நான் உன் மாணவன். நீ எனக்கு ஆசிரியன். என் தாய் தந்தையரின் சொல் கேட்டு நான் இங்கு வந்திருக்கிறேன். நீ திரும்பி நாட்டுக்கு வா என்கிறாய். நான் என்ன செய்யட்டும் என்று கேட்கிறான்.

இப்போது வசிட்டன் பாடு திண்டாட்டம்.

பெற்றோர் வார்த்தையை கேட்காதே என்று வசிட்டன் சொல்ல முடியாது.

இராமன் நினைத்து இருந்தால் , வசிட்டன் சொல் கேட்டு மீண்டும் அரசை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.

இராமனின் நோக்கம் அது அல்ல. பெற்றோரின் வார்த்தைக்கு மதிப்பு தர வேண்டும் என்று   வாழ்ந்து காட்டுவது அவன் நோக்கம்.

எனவே,கேள்வியை வசிட்டன் பால் திரும்புகிறான்.

வசிட்டன் என்ன செய்தான் என்பதை நாளை பார்ப்போம்.

http://interestingtamilpoems.blogspot.in/2017/07/blog-post_7.html

Thursday, July 6, 2017

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - தாய், தந்தையரின் சொல்

இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - தாய், தந்தையரின் சொல் 


தயரதனின் கட்டளை ஏற்று இராமன் கானகம் சென்றான். இராமனை , கானகத்தில் சந்தித்த பரதன், அரசை இராமன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறான். இராமன் மறுக்கிறான். அப்போது வசிட்டன் இடையிட்டு , இராமன் அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆணையிடுகிறான்.

ஒரு புறம் பெற்றோர் சொல். மறு புறம் குருவின் சொல். எதை ஏற்றுக் கொள்வது, எதை விடுவது என்ற தர்மசங்கடமான நிலை இராமனுக்கு.

ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம்.

நாம் இராமன் இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம் ? அரசு பரதனிடம் இருக்கிறது. பரதனே அந்த அரசை தருகிறான். மக்கள் எல்லோரும் இராமன் தான் ஆள வேண்டும் என்கிறார்கள். அரச முறைப்படி பார்த்தாலும் இராமன் தான் பட்டத்துக்கு உரியவன். ஆணையிட்ட தயரதன் இறந்து போய்விட்டான்.  எழுந்து வந்து கேட்கப் போவது இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக , குல குருவான வசிட்டரும் ஆணை இட்டு விட்டார்.

பேசாமல் அரசை ஏற்றுக் கொண்டிருப்போம். அப்படி ஏற்றுக் கொண்டிருந்தால் யாரும் குறை சொல்ல முடியாது.

இராமன் ஏற்கவில்லை.

அப்பாவின் ஆணையை, அம்மா மகிழ்ந்து சொன்ன சொல்லை ஏற்று அதன்படி நடக்காதபிள்ளையும் ஒரு பிள்ளையா ? அவனைக் காட்டிலும் நாய் எவ்வளவோ மேல் என்கிறான்.

பாடல்


‘தாய் பணித்து உவந்தன, தந்தை, “செய்க” என
ஏய எப் பொருள்களும் இறைஞ்சி மேற்கொளாத்
தீய அப் புலையனின், செய்கை தேர்கிலா
நாய் எனத் திரிவது நல்லது அல்லதோ?


பொருள்



‘தாய் = தாயான கைகேயி

பணித்து = பணி செய்யுமாறு ஆணையிட்டு

உவந்தன = மகிழ்வோடு

தந்தை, = தந்தையான தயரதன்

 “செய்க” என ஏய  = செய் என்று கட்டளையிட

எப் பொருள்களும் = அப்படி சொல்லப்பட்ட எது ஒன்றையும்

இறைஞ்சி  = வணங்கி

மேற்கொளாத் = ஏற்றுக் கொள்ளாத

தீய = தீமை நிறைந்த

அப் புலையனின் = அந்த புலையனின்

செய்கை = செயலானது

தேர்கிலா = நல்லது கேட்டது தேர்ந்து அறியாத

நாய் எனத் திரிவது = நாய் போலத் திரிவது

நல்லது அல்லதோ? = எவ்வளவோ நல்லது

எவ்வளவு படித்தாலும், யார் என்ன சொன்னாலும், பெற்றோரின் சொல்லுக்கு மேல்  ஒன்று கிடையாது என்று இராமன் வாழ்ந்து காட்டுகிறான்.

பெற்றோருக்கு ஒன்றும் தெரியாது, நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைக்கும் ஒரு தலைமுறை வரும் என்று இராமனுக்கு தெரிந்திருக்கிறது. நாலு புத்தகம், கொஞ்சம் google அலசல் செய்து விட்டு , பெற்றோரைப் பார்த்து "உங்களுக்கு ஒண்ணும் தெரியாது " என்று எள்ளி நகையாடும் தலைமுறைக்கு இராமனின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு

பெற்றோர் சொல்வதை கேட்காமல் இருக்கும் வாழ்க்கை , நாயை விட கேவலமானது என்கிறான் இராமன்.

மிக கடினமான வார்த்தைதான்.

பெற்றோரின் சொல் கேட்க வேண்டும் என்பதற்கு அழுத்தம் தருகிறான் இராமன்.

சில வீடுகளில் பிள்ளைகள் தந்தை சொல் கேட்டாலும் கேட்பார்கள், தாய் சொல்லை கேட்பது இல்லை. அம்மாவுக்கு ஒன்றும் தெரியாது என்று ஒரு இளக்காரம் வேறு.

இராமானுக்குத் தெரியும் , கைகேயியை விட வசிட்டன் அறிவில் மிக உயர்ந்தவன் என்று. இருந்தும், தாய் சொல்லை வசிட்டனின் சொல்லை விட அதிகம் இராமன் மதிக்கிறான்.

உயர்ந்த கருத்து. அற்புதமான பாடல்.

அறிந்து கொள்வோம். அறியச் சொல்வோம். 

Sunday, July 2, 2017

இராமாயணம் - அவ் உரை மறுக்கும் ஈட்டதோ ?

இராமாயணம் - அவ் உரை மறுக்கும் ஈட்டதோ ?


நாட்டை ஏற்றுக் கொள்ளும்படி பரதன் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டான் இராமனிடம். இராமன் அசைந்து கொடுப்பதாய் இல்லை. அருகில் இருந்த வசிட்டன், "குல குருவான என் ஆணை, நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று கூறுகிறான்.

வசிட்டனை வணங்கி, இராமன் சொல்லத் தொடங்குகிறான்.

"தாமரை மலரில் தோன்றிய பிரமனின் புதல்வனே (வசிட்டனே ), தாய், தந்தை, குரு போன்றோருக்கு ஒன்றை செய்கிறேன் என்று வாக்கு தந்து விட்டால் அதில் இருந்து மாறுவது சரியா "

என்று வசிட்டனிடம் இராமன் கேட்கிறான்.

பாடல்


சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய்
போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான் -
தேன் தரு மலருளான் சிறுவ! -“ செய்வேன்” என்று
ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ?

பொருள்

‘சான்றவர் ஆக; = பெரியவர்கள் ஆக

தன் குரவர் ஆக; = தனக்கு மேலே உள்ளவர் (தலைவர், பெரியோர்) ஆகட்டும்

 தாய் போன்றவர் ஆக; = தாய் போன்றவர் ஆக. இராமன் வார்த்தையை பொறுக்கி எடுத்து போடுகிறான். தாய் ஆக என்று சொல்லவில்லை. தாய் போன்றவர் ஆக.

 மெய்ப் புதல்வர் ஆக; = உண்மையான புதல்வர்கள் ஆகட்டும்

தான் = ஒருவன்

தேன் தரு மலருளான் சிறுவ! = தேனைத் தருகின்ற மலரின் மேல் அமர்ந்து இருக்கும் பிரமனின் மகனே (வசிட்டனே )

 “ செய்வேன்” என்று = செய்வேன் என்று

ஏன்றபின், = ஏற்றுக் கொண்ட பின்

 அவ் உரை  = அந்த உரையை

மறுக்கும்  = மறுக்கும், மாறுபடும்

ஈட்டதோ? = செய்யலாமா (செய்யக் கூடாது என்பது தெளிவு)


சரியோ தவறோ, சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பது இராமனின் கொள்கை.

நான் வாக்கு தந்து விட்டேன். என்ன ஆனாலும் சரி, அதை நிறைவேற்றியே தீருவேன் என்று இராமன் கூறுகிறான்.

வாக்கு தரக் கூடாது. தந்து விட்டால், உயிரை கொடுத்தாவது அதை காக்க வேண்டும் என்பது நம் பண்பாட்டின் ஒரு கூறு.

வாக்குக்கு விலை இருக்கும் என்று தான் நமது வாழ்க்கை முறை அமைக்கப் பட்டிருக்கிறது.

திருமண சடங்கில், பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு "வாழ்விலும் சாவிலும் ஒன்றாக இருப்பேன், சுக துக்கங்களில் சம பங்கு எடுப்பேன் " என்று வாக்குத் தருகிறார்கள்.

பெரிய பதவிகளை ஏற்றுக் கொள்ளும் போது  (MLA , MP , பிரதம மாதிரி, ஜனாதிபதி , தலைமை நீதிபதி ) பதவி பிரமாணமும் , இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்கள்.


சட்டம் போட்டு அதை கட்டுப் படுத்த முடியாது. ஒருவன் தரும் வாக்கு தான் முக்கியம்.

நீதி மன்றத்தில் "நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை "  என்று பிரமாணம் செய்கிறார்கள்.

இந்த பிரமாணங்களை எல்லோரும் ஏற்று அதன்படி வாழ்ந்தால் இந்த நாடு எவ்வளவோ  முன்னேறி இருக்கும்.

மனைவியை துன்பத்தில் தவிக்க விடும் கணவன், கணவனை மதிக்காமல் அவன் துன்பத்தில்  பங்கெடுக்காத மனைவி , குடும்பச் சிக்கல்கள் வருகின்றன.  

ஏன் ? ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருப்போம் என்று தந்த வாக்கை இருவரும் காற்றில்   பறக்க விட்டதால்.

வீடு நாசமாகப் போகிறது.


அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டுகிறார்கள். இலஞ்சம் தலை விரித்து ஆடுகிறது? ஏன் ?

"பாரபட்சமின்றி நாட்டு மக்களுக்கு உழைப்பேன் " என்ற வாக்கை காற்றில் பறக்க  விட்டதால்.

இன்று நிறைய மருந்தகங்களில் தேவை இல்லாத சோதனைகள் செய்ய வைக்கிறார்கள்,  தேவை இல்லாத மருந்துகள் தருகிறார்கள். மருத்துவ மனைக்கு போவது என்றாலே பயமாக இருக்கிறது .

காரணம் என்ன ?

ஹிப்போக்கரிடிஸ் பிரமாணம் என்ற பிரமாணத்தை மருத்துவர்கள் காற்றில் விடுவதால்.

இத்தனை மணிக்கு வரும் என்றால், அத்தனை மணிக்கு வர வேண்டும். அது ஆகாய விமானமாக இருந்தாலும் சரி, உள்ளூர் பேருந்தாக இருந்தாலும் சரி.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றி அதன் வழி நடப்பேன் என்று ஒவ்வொரு குடிமகனும் வாக்குத் தருகிறான். அதன் படி நடந்து விட்டால் நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் எப்படி நடக்கும் ?


இப்படி, நாடும், வீடும், நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் சிதைந்து போக  காரணம் , யாருக்கும் தங்கள் தந்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் இல்லாததால்.

எல்லோரும், தங்கள் வாக்கை காப்பாற்ற தொடங்கிவிட்டால், இந்த உலகம் சொர்க்கமாக மாறும்.

அதை வலியுறுத்த, இராமன் வாழ்ந்து காட்டுகிறான். 

Saturday, July 1, 2017

திருக்குறள் - செயக் கிடந்தது இல்

திருக்குறள் - செயக் கிடந்தது இல் 


அது ஒரு பெரிய வீடு. வீடெல்லாம் செல்வச் செழிப்பு மின்னுகிறது. அங்கு உள்ள  அனைத்துப்  பொருள்களும் விலை உயர்ந்த பொருள்கள். குளிர் சாதன பெட்டிகள். பெரிய டிவி, என்று எங்கு பார்த்தாலும் செல்வம்.

அந்த வீட்டின் உரிமையாளன் இறந்து கிடக்கிறான். நடு வீட்டில் அவனது உடல் கிடத்தி வைக்கப் பட்டு இருக்கிறது.  அவனால் அந்த பொருள்களையெல்லாம் அனுபவிக்க முடியுமா ? அந்த பொருள்கள் அவனுக்கு ஏதாவது உதவி செய்யுமா ?

இரண்டும் இல்லை அல்லவா ?

சரி, அவன் கிடக்கட்டும் ஒரு புறம்.

நாம் வாழ் நாள் எல்லாம் ஓடி ஆடி பொருள் சேர்க்கிறோம். எல்லா பொருள்களையும் நாம் அன்புபவிக்கப் போகிறோமா ? நாம் அனுபவிக்கப் போவது இல்லை என்றால், எதற்காக வாழ் நாள் எல்லாம் செலவழித்து அவற்றை சேர்க்க வேண்டும் ?

அந்த வீட்டில், செல்வத்தை அனுபவிக்காமல் இறந்து கிடப்பவனுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் ?

பாடல்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருL அஃதுண்ணான் 
செத்தான் செயக்கிடந்தது இல்.


பொருள்

வைத்தான்வாய் = வாய் என்றால் பணப் பெட்டியின் வாய். வைத்தான் வாய் , பணத்தை வைத்து இருக்கும் பேட்டி 


சான்ற = நிறைந்த

பெரும்பொருள் = பெரிய அளவிலான செல்வம்

அஃதுண்ணான் = அதை அனுபவிக்காதவன்

செத்தான் = இறந்தவன்

செயக்கிடந்தது இல் = செய்வதற்கு ஒன்றும் இல்லை.


செல்வத்தை சம்பாதிப்பதும், சேர்ப்பதும் மட்டும் அல்ல வாழ்க்கை. சேர்த்த  செல்வத்தை  சிறந்த முறையில் செலவழிக்கவும் தெரிய வேண்டும்.

அந்த வங்கியில் போட்டு வைத்தேன், தங்க நகைகள் வாங்கி இந்த பெட்டகத்தில் வைத்து இருக்கிறேன் , இந்த கம்பெனியின் பங்கில் முதலீடு செய்து இருக்கிறேன்  என்று கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பொருளை அனுபவிக்காமல் இருப்பவன், பிணத்துக்கு ஒப்பாவான் என்கிறார் வள்ளுவர்.

சரிதானே ?

இறந்தவன் பொருளை அனுபவிப்பது இல்லை. அது போல பொருளை அனுபவிக்கத் தெரியாதவன்  இறந்தவன் போலத்தானே ?

நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பொருள் சம்பாதித்தாலும், அந்த செல்வம் நமக்கு நேரடியாக பயன்படாது.

செல்வத்தை சரியான வழியில் பயன் படுத்தி, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு உதவி அவர்களின் உறவை பலப் படுத்திக் கொள்ள வேண்டும்....

இப்படி நல்ல வழிகளில் பணத்தை அனுபவிக்கப் படிக்க வேண்டும்.

எப்படி எல்லாம் அனுபவிப்பது என்று பட்டியல் போடுங்கள்.

அனுபவியுங்கள்


இராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ !

இராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ !


காட்டில் இராமனைக் கண்டு, அரசை ஏற்றுக் கொள்ளும் படி பரதன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறான். இராமன் ஏற்றுக் கொள்வதாய் இல்லை. பார்த்தார் வசிட்டர், இது வேலைக்கு ஆகாது. பரதன் சொன்னால் இராமன் கேட்க மாட்டான். நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று , பரதனை இடை மறித்து "நீ அரசை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் . இது என் ஆணை " என்கிறார்.

குருவின் ஆணை. மீறவும் முடியாது.

தர்ம சங்கடத்தில் இராமன்.

இராமன் என்ன செய்தான் ?

முனிவரை வணங்கி, அறிஞனே , நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது என்று கூறத் தொடங்குகிறான் ...


பாடல்


கூறிய முனிவனைக் குவிந்த தாமரை
சீறிய கைகளால் தொழுது, செங்கணான்,
‘ஆறிய சிந்தனை அறிஞ! ஒன்று உரை
கூறுவது உளது’ எனக் கூறல் மேயினான்:


பொருள்

கூறிய முனிவனைக் = ஆட்சியை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறிய முனிவனை

குவிந்த தாமரை = குவிந்த தாமரை போன்ற

சீறிய கைகளால் = சிறந்த கைகளால்

தொழுது = வணங்கி

செங்கணான் = சிவந்த கண்களை உடைய

‘ஆறிய சிந்தனை அறிஞ! = ஆறிய சிந்தனை உள்ள அறிஞனே

ஒன்று உரை கூறுவது உளது’  = நான் சொல்வதற்கு ஒன்று உள்ளது

எனக் கூறல் மேயினான் = என்று கூறத் தொடங்கினான்



சொன்னது  ஆசிரியன். அவர் சொன்னதை மறுத்துச் சொல்லப் போகிறான் .

அப்படி சொல்வதற்கு முன்னால் , கை கூப்பி , தொழுது பின் சொல்லத் தொடங்குகிறான்.

இது நமது பண்பாடு. கலாச்சாரம்.

பெரியவர்களிடம் பேசும் போது ஒரு மரியாதையோடு பேச வேண்டும்.

இன்று , பெரியவர்கள் பேசுவதை கேட்பது கூட கிடையாது. அப்படியே கேட்டாலும், அவர்கள் சொல்லி முடிப்பதற்குள் பாதியில் இடை மறித்து பேசும் பழக்கம் இருக்கிறது.  

பெரியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் பேசும் போது , அவர்களை வணங்கி, மரியாதையுடன் பேச வேண்டும். .

இராமன் ஒரு மாற்றுக் கருத்தை கூறப் போகிறான். நாம் பெரியவர்களின் கருத்துக்களோடு முரண் படலாம். அதை சொல்லும் முறை இருக்கிறது.

இராமனிடம் பாடம் கற்க வேண்டும்.

அது மட்டும் அல்ல, "ஆறிய சிந்தனை அறிஞ" என்று மரியாதையோடு அவர் பெருமையையும்  சேர்த்துச் சொல்கிறான்.


"நீ பெரிய அறிஞன் என்பது எனக்குத் தெரியும் " என்று சொல்லிவிட்டு சொல்லாத் தொடங்குகிறான்.

இது ஒரு பேசும் கலை.

நாம் இன்னொருவரின் கருத்தை மறுத்துச் சொல்ல வேண்டி இருந்தால், அவர்களோடு கடுமையான முகத்தை வைத்துக்கொண்டு, கடு கடு என்று பேச வேண்டியது இல்லை.

"நீங்கள் சொல்வது சரிதான். உங்களுக்குத் தெரியாதது இல்லை. உங்க அறிவுக்கும், அனுபவத்துக்கும், நீங்க சொல்வது சரியாத்தான் இருக்கும். ....இருந்தாலும், எனக்கு சொல்ல ஒன்று இருக்கிறது "

என்று சொல்ல ஆரம்பித்தால், எதிரில் இருப்பவரும் நீங்கள் சொல்வதை கேட்பார்.

முதலில் இனிய சொற்களோடு ஆரம்பிக்க வேண்டும்.

"ஆறிய சிந்தனை அறிஞ" என்று சொன்னவுடன் வசிட்டரின் கோபம் கொஞ்சம் தணியும். என் அறிவின் வீச்சை இராமன் அறிவான். அவன் என்ன தான் சொல்கிறான் கேட்போம் என்று அவன் சொல்வதை கேட்கத் தலைப்படுவார்.


ஆறிய சிந்தனை என்றால் என்ன ?

நம் சிந்தனை எந்நேரமும் கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது. காமம், கோபம், பொறாமை, எரிச்சல் என்ற பல்வேறு குணங்களால் கொந்தளித்துக் கொண்டே இருக்கிறது. ஆறிய சிந்தனை என்பது, சலனம் இல்லாமல், அமைதியாக, தெளிவாக இருப்பது. உணர்ச்சி வசப்படாமல், அமைதியான சிந்தனை என்று பொருள்.

இராமன் ஆண்டால் என்ன, பரதன் ஆண்டால் என்ன ? வசிட்டனுக்கு ஒன்றும் இல்லை.  இராமன் மேல் உள்ள அன்பினாலோ, அல்லது பரதன் மேல் உள்ள வெறுப்பினாலோ  அவன் அதைக் கூறவில்லை என்று இராமன் முன்னமேயே தெரிவித்து விடுகிறான்.


இரண்டு விஷயங்கள்


ஒன்று, பெரியவர்களோடு பேசும் போது , அவர்களை வணங்கி மரியாதையோடு பேச வேண்டும்.

இரண்டு, மாற்று கருத்து இருந்தாலும், பெரியவர்களின் அறிவை, திறமையை குறைத்து  மதிப்பிடக் கூடாது. நம் கருத்தை பணிவாக வெளிப்படுத்த வேண்டும்.