Showing posts with label கம்ப இராமாயணம். Show all posts
Showing posts with label கம்ப இராமாயணம். Show all posts

Tuesday, May 26, 2026

கம்ப இராமாயணம் - நலம் துடிக்கின்றதோ ?

 கம்ப இராமாயணம் - நலம் துடிக்கின்றதோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2026/05/blog-post_26.html



வெளியில் இருந்து வரும் செய்திகள் நம் மூளைக்கு சென்று , அது அந்த செய்திகளை அலசி ஆராய்ந்து பார்த்து விடை சொல்வதற்கு முன்பே, நம் உடல் அந்த செய்தியின் தரத்தை அறிந்து விடுகிறது. 


உதாரணமாக, ஒரு சிலரை பார்த்தவுடன் சட்டென்று பிடித்து விடும். சிலரை பார்த்த உடனேயே ஒரு வெறுப்பு வரும். இவன் சரி இல்லை என்று ஏதோ ஒன்று நமக்குச் சொல்லும். The first impression is the best impression என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். 


நாம் அவர்களைப் பற்றி ஆராயவில்லை. பார்த்தவுடன் தெரிந்து விடுகிறது. அது நம் உடல் சார்த்த கணிப்பு. அதில் மூளையின் பங்கு இல்லை. நம் உடலில் ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது. நமக்கு வேண்டியவர்கள் எங்கோ இருப்பார்கள். அவர்களுக்கு ஒன்று என்றால் இங்கு நம் மனதுக்கு என்னவோ செய்யும். வயிறு சரியா இருக்காது. மனம் எதிலும் ஒட்டாது. இது உடல் சார்ந்த அறிவு. 


ஆபத்து வரும் முன்னே வயற்றைக் கலக்கும். ஏன்?  உடல் சார்ந்த அறிவு என்று ஒன்று இருக்கிறது. 


வயதான ஒற்றுமையாய் வாழும் தம்பதிகளை பாருங்கள். ஒருவரின் குணம் மற்றவரிடம் இருக்கும். குரல், நடை , பாவனை, சில குறிப்பிட்ட சொற்களை கூறுவது, என்று. எப்படி இது நிகழ்கிறது. நம் வயிற்றில் உள்ள பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் நம் செயல்களை தீர்மானிக்கின்றன. வயிற்றில் சில பல மில்லியன் நியுரான்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கணவன், மனைவி இடையே இந்த நியுரான்கள் இட மாற்றம் நிகழ்கின்றன. எப்படி என்று திருமணம் ஆனவர்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 


நியூரான்கள் இடம் மாறும் போது, ஒருவரின் உடல் சார்ந்த பழக்க வழக்கங்கள் இன்னொருவருக்கு வந்து விடுகிறது. 


நம் உடல் சொல்வதை உற்றுக் கேட்டால் நமக்கு பல விடயம் புரியும். 


ஏன் திடீரென்று தலைவலை வருகிறது ? ஏன் சிலரிடம் பேசிவிட்டு வந்தால் ஒரு எரிச்சல் வருகிறது, சிலரிடம் பேசிவிட்டு வந்தால் ஒரு உற்சாகம் வருகிறது?  உன்னித்துப் பார்க்க வேண்டும். உடல் சொல்வதை கேட்க வேண்டும். உடலின் மொழியை நாம் மறந்து விட்டோம். 

 


இதை முன்பு சகுனம் என்றார்கள். புருவம் துடிப்பது, கண் துடிப்பது போன்றவை இந்த உடல் சார்ந்த அறிவின் கூறுகள். 


அசோகவனத்தில் சீதை தனித்து இருக்கிறாள். 


திடீரென்று அவளது இடது கண்ணும் புருவமும் துடிக்கின்றன. அப்படி என்றால் நல்ல செய்தி வரப்போகிறது என்று அர்த்தம். சீதை கேட்கிறாள், திரிசடையிடம்  


"என்னுடைய வலப்பக்கக் கண்ணும், புருவமும் துடிக்கவில்லை. இடப்பக்கம் துடிக்கின்றது. ஏதோ நல்லது வரப் போகிறது போல இருக்கு. அல்லது, நான் செய்த தீவினை தான் இன்னும் வந்து என்னை துன்பம் செய்யப் போகின்றதோ ? ஒன்றும் விளங்கவில்லையே "


என்று.


பாடல் 

‘நலம் துடிக்கின்றதோ? நான்செய் தீவினை

சலம் துடித்து இன்னமும் தருவது உண்மையோ?

பொலம் துடி மருங்குலாய்! புருவம் கண் நுதல்

வலம் துடிக்கின்றில : வருவது ஓர்கிலேன்!



பொருள் 

‘நலம் துடிக்கின்றதோ?  = நன்மைகள் என்னை நாடி வரத் துடி துடித்துக் கொன்றுக்கிறதா? 

நான் = நான் 

செய் தீவினை = செய்த தீய வினைகள் 

சலம் = கோபம் கொண்டு 

துடித்து = துடித்து 

 இன்னமும்  = மேலும் 

தருவது = (தீமைகளைத்) தருவது 

 உண்மையோ? = ஒரு வேளை உண்மையாக இருக்குமோ?

பொலம் = பொன்னால் செய்யப்பட்ட 

துடி மருங்குலாய்! = சிறிய இடையை உள்ள பெண்ணே (திரிசடை) 

புருவம் = புருவம் 

கண் நுதல் = கண், நெற்றி 

வலம் துடிக்கின்றில = வலப்பக்கம் துடிக்கவில்லை 

வருவது ஓர்கிலேன்! = என்ன வரப் போகிறதோ 





Sunday, March 22, 2026

கம்ப இராமாயணம் - இன்சொலின் திருந்தினாள்

 கம்ப இராமாயணம் - இன்சொலின் திருந்தினாள் 


https://interestingtamilpoems.blogspot.com/2026/03/blog-post_22.html



வார்த்தைகள்.!!



வார்த்தைகள் வலிமை மிக்கவை. 


அவை நம் வாழ்க்கையை மட்டும் அல்ல, நம்மை சுற்றி உள்ளவர்கள் வாழ்வையும் பாதிக்கும். 


அது நல்லதாகவும் இருக்கலாம். அல்லது வேறு விதமாகவும் இருக்கலாம். 


எவ்வளவு பெரிய துன்பத்தில் ஒருவர் இருந்தாலும், ஆறுதலான நாலு வார்த்தை போதும், அவர்கள் துன்பத்தை மாற்ற, அவர்கள் வாழ்வில் ஒரு நம்பிக்கையை ஊட்ட. 


யோசித்துப் பாருங்கள். 


திருக்குறள், கம்ப இராமாயணம், தேவாரம், பிரபந்தம், விவிலியம் எல்லாம் வார்த்தைகளின் தொகுப்பு. நம் வாழ்க்கைக்கு அவை வழிகாட்டி நிற்கின்றன. நம்மை நல்வழிப் படுத்துகின்றன.


காலம் காலமாய், அணையா விளக்காய், கலங்கரை விளக்காய் நின்று வழி காண்பித்துக் கொண்டிருக்கின்றன.


சீதை அசோகவனத்தில் இருக்கிறாள். சுற்றிலும் அரக்கியர்கள்.  பேசக் கூட ஆள் இல்லை. தனிமை. சோகம். பயம். விரக்தி. எதிர்காலம் பற்றிய கேள்விக் குறி. இதற்கு நடுவில் சீதை. 


அந்த அரக்கியர் நடுவில், திரிசடை என்று ஒரு பெண். வீடணனின் மகள். 


அவளை கம்பன் அறிமுகள் செய்கிறான். 


"இன் சொலின் திருந்தினாள்" என்று. 


அவள் இனிய சொற்களை பேசுவது மட்டும் அல்ல, அவற்றையும் திருத்தமாக, தவறின்றி அழகாகப் பேசுவாளாம். 


பாடல் 


இருந்தனள்;திரிசடை என்னும் இன் சொலின்

திருந்தினாள்ஒழிய, மற்று இருந்த தீவினை

அருந் திறல்அரக்கியர், அல்லும் நள் உறப்

பொருந்தலும்,துயில் நறைக் களி பொருந்தினார்.


பொருள் 


இருந்தனள் = அரக்கியர் நடுவில் இருந்தாள். யார்? 


திரிசடை என்னும் = திரிசடை என்ற 


இன் சொலின் திருந்தினாள் = இனிய சொல்லை திருத்தமாகப் பேசும் பெண் 

 


ஒழிய = அவளைத் தவிர்த்து 


 மற்று இருந்த = மற்ற பெண்கள் 


 தீவினை = தீய வினை புரியும் 


அருந் திறல்அரக்கியர் = பெரிய பலம் கொண்ட அரக்கியர் 


அல்லும்  = இரவு 


நள் உறப் பொருந்தலும் = நடு இரவு வந்த நேரத்தில் 


துயில் = தூக்கத்தோடு 


நறைக் களி பொருந்தினார்  = கள் உண்ட மயக்கத்தில் இருந்தார்கள் 


தண்ணி அடிச்சிட்டு மட்டையாகி விட்டார்கள் என்கிறார். 


கோர தோற்றம் கொண்ட அரக்கியர். வலிமையானவர்கள். மது அருந்திவிட்டு , மயங்கிக் கிடக்கிறார்கள். 


அவர்கள் நடுவில் பிராட்டி. 


தூங்காமல் விழித்து இருக்கிறாள். 


அவளோடு கூட திரிசடையும் விழித்து இருக்கிறாள். 


அப்போது சீதை திரிசடையிடம் சொல்லத் தொடங்குகிறாள் 




Sunday, January 11, 2026

கம்ப இராமாயணம் - திரிசடை - இன்சொல்லி

 கம்ப இராமாயணம் - திரிசடை - இன்சொல்லி 

https://interestingtamilpoems.blogspot.com/2026/01/blog-post.html


பின் வரும் ஒரு சூழ்நிலையை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். 


பெரிய, திருத்தப்பட்ட வனம். சுற்றிலும் பயங்கர தோற்றம் கொண்ட அரக்கியர். இடையிடையே இராவணன் வேறு வந்து தொந்தரவு செய்கிறான். இராமன் எப்போது வருவானோ, வரமாட்டானோ என்ற ஐயம். பேச்சு துணைக்குக் கூட ஒரு ஆள் இல்லை. சீதையோ, செல்லமாக வளர்ந்த ஜனக மகாராஜனின் செல்லப் பிள்ளை. அவளுக்கு எப்படி இருக்கும் அந்த சிறை?


இராமன் அனுபவித்தது ஒரு துயர் என்றால், சீதை அனுபவித்தது அதனினும் பல மடங்கு. 


அத்தகைய சூழ் நிலையில் மனதுக்கு ஆறுதலாக பேச ஒருவர் கிடைத்தால் எப்படி இருக்கும்? பாலைவனத்தின் நடுவில் ஒரு நீர் ஊற்றை கண்ட மாதிரி இருக்கும் அல்லவா. 


வீடணனின் மகள் திரிசடை அப்படி வருகிறாள். சீதைக்கு ஆறுதல் சொல்கிறாள்.


அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தைகளை காண இருக்கிறோம். 


அதற்கு முன், 


நம்மைச் சுற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ கவலைகளில் இருக்கிறார்கள். நம்மிடம் எல்லாம் சொல்லி இருக்க மாட்டார்கள். சொல்லாத, சொல்ல முடியாத வேதனைகள் பல இருக்கும். 


எப்போதுமே, யாரிடம் பேசினாலும், அவர்களிடம் இனிமையாக பேசினால் என்ன. நம் வார்த்தை அவர்கள் கவலைக்கு ஒரு மருந்தாக இருக்கக் கூடும். மனதுக்கு ஒரு ஆறுதலாக இருக்கலாம். 


நம் வார்த்தைகள் ஆறுதல் தருவதாக, நம்பிக்கை ஊட்டுவதாக, இதம் தருவதாக இருக்கட்டும். 


திரிசடை மூலம் கம்பன் ஏதோ சொல்ல வருகிறான் என்றால், நான் இதைத்தான் சொல்வேன். 


கவலைப் படுபவர்களுக்கு உங்கள் வார்த்தை இனிமை சேர்க்கட்டும். 


நம்பிக்கை இழந்தவர்களுக்கு உங்கள் வார்த்தை தைரியத்தைத் தரட்டும். 


சோர்ந்தவர்களுக்கு, உங்கள் வார்த்தை உற்சாகத்தைத் தரட்டும். 


இனி, காப்பியத்துக்குள் நுழைவோம். 












Monday, November 10, 2025

கம்ப இராமாயணம் - உந்தையை உயிர் கொண்டானை

 கம்ப இராமாயணம் - உந்தையை உயிர் கொண்டானை



மனைவியை இழக்கும் துயரம் பெரும் துயரம். என்னதான் அவளிடம் ஆயிரம் குறை இருந்தாலும், அவள் இல்லாத உலகம் ஒரு மிகப் பெரிய வெற்றிடமாக இருக்கும். ஒரு ஆண் மகனை மிகவும் பலவீனமாக்கும் ஒரு விடயம் என்றால் அது அவன் அவனுடைய மனைவியை இழப்பதுதான். 


எந்த பெரிய இழப்பையும் ஒரு ஆணால் தாங்க முடியும். ஆனால், மனைவியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கிறது. 


இராமனை விட மன உறுதி உள்ள ஆடவனை நாம் காட்ட முடியாது. நாடு கிடையாது, காட்டுக்குப் போ என்ற போது கூட கலங்காமல் நின்றவன், சீதையை பிரிந்த பின் தடுமாறுகிறான். அவன் உள்ளம் சோர்ந்து போகிறது. 


ஜாடாயு இறந்து கிடக்கிறார். ஏற்கனவே சீதையைப் பிரிந்த துன்பம். இப்போது தந்தை போன்ற ஜடாயு இழந்த துயரும் சேர்ந்து கொள்கிறது. இராமன் மனம் சோர்ந்து போகிறான். 


இலக்குவன் சொல்கிறான் 


"என்ன இராமா நீ இப்படி பேசுகிறாய்...இவ்வளவு சோர்ந்து, ஒரு சாதாரண மனிதன் போல் பேசுகிறாய்.சீதையை இழந்த துயரம், அதனால் வந்த சோகம், கோபம் எல்லாம் விடு.  நம்ம அப்பா போன்ற ஜடாயுவின் உயிரை எடுத்த அந்த இராவணனை கொல்ல வேண்டும் என்ற சிந்தை இல்லாமல் இது என்ன பேச்சு"


என்கிறான். 


பாடல் 




“எந்தை ஈது இயம்பிற்று என்னை?

    எண்மையன் ஆகி ஏழைச்

சந்த வார் குழலினாளைத்

    துறந்தனை தணிதி யேனும்,

உந்தையை உயிர் கொண்டானை

    உயிர் கொள்ளும் ஊற்றம் இல்லாச்

சிந்தையை ஆகின் நின்று,

    செய்வதென் செய்கை ‘‘ என்றான்


பொருள் 


“எந்தை = என் தந்தை போன்ற இராமனே 


ஈது = இந்த மாதிரி 


இயம்பிற்று என்னை? = என்ன பேசுகிறாய் ?


எண்மையன் ஆகி = தாழ்வு மனப்பாண்மை கொண்டு 


ஏழைச் = எளிமையான, பேதையான 


சந்த வார் குழலினாளைத் = நீண்ட குழலினை (தலை முடி) கொண்ட சீதையை  


 துறந்தனை = பிரிந்து இருக்கிறாய் 


தணிதி யேனும் = அதனால் வந்த சோகத்தையும், கோபத்தையும் விட்டு 


உந்தையை உயிர் கொண்டானை = உன் தந்தையின் உயிரை எடுத்தவனை 


உயிர் கொள்ளும் = அவன் உயிரை எடுக்கும் 


ஊற்றம் = வலிமை 


இல்லாச் = இல்லாத 


சிந்தையை ஆகின் நின்று = எண்ணங்களைக் கொண்டு நின்று 


செய்வதென் செய்கை ‘‘ = செய்கின்ற இந்த செயல் என்ன 


என்றான் = என்று இலக்குவன் கேட்டான் 


ஆறுதல் சொல்லுவதும் ஒரு கலை தான். 


இராமன் சோகத்தில் இருக்கிறான். அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று இலக்குவனும் அவனைக் கட்டிக் கொண்டு அழுதால் என்ன ஆகும்?  இராமாயணம் அங்கேயே முடிந்து போய் இருக்கும். 


யாராவது சோர்ந்து இருந்தால், அவர்களை தட்டி எழுப்பி, உற்சாகப் படுத்தி அதில் இருந்து மீள வழி செய்ய வேண்டும். ஐயோ பாவம் என்று அவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால் காரியம் நடக்காது. 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும். 


அப்படி இராமன் என்ன சொன்னான் ?

Saturday, September 13, 2025

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2

 

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2


இதன் முதல் பகுதியை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 



ஜடாயு மாண்ட பின், இராமன் வருந்துகிறான். 

இலக்குவன் சொல்கிறான், 


"தீமை என்று எதுவும் இல்லை. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். அதற்கு எதற்கு வருந்த வேண்டும். நடக்க வேண்டியது நடந்தது. இது வருந்தவோ, துக்கப்படவோ வேண்டிய நேரம் அல்ல. அந்த அரக்கர்களை கொன்ற பின் நாம் இந்த துக்கத்தை அனுபவிக்கலாம்"


இப்படித்தான் வாழ்வில் ஒவ்வொரு உணர்சிகளையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். எந்த சந்தோஷம் வந்தாலும், "இல்லை இல்லை, இது என்ன பெரிய விடயம், நான் அதை அடைந்தால் சந்தோஷாம் அடைவேன் " என்று நினைக்கிறோம். அதை அடைந்த பின், வேறு ஒன்று வந்து நிற்கும். ஒரு நாளும் சந்தோஷமாய் இருப்பதே இல்லை. துக்கமும் அப்படியே.  "இது விதி, நான் ஆண், அழக் கூடாது, நானே தளர்ந்து போனால் பிள்ளைகள் பயந்து விடுவார்கள்" என்று ஏதேதோ சொல்லி துக்கத்தையும் தள்ளிப் போட்டு விடுகிறோம். 

இப்படி ஒவ்வொன்றாக தவிர்த்துக் கொண்டே போனால், வாழ்வில் உணர்வுகளுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். ஆங்கிலத்தில் Emotional Intelligence என்று சொல்லுவார்கள். 


இன்பமோ, துன்பமோ அவ்வவற்றை அவ்வப்போது அனுபவிக்க வேண்டும். அப்புறம், அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகக் கூடாது. 

பாடல் 


என்றலும், இளைய கோ அவ் இராமனை
     இறைஞ்சி, 'யாண்டும்,
வென்றியாய்! விதியின் தன்மை
     பழியல விளைந்தது ஒன்றோ?
நின்று இனி நினைவது என்னே? நெருக்கி
    அவ் அரக்கர் தம்மைக்
கொன்றபின் அன்றோ, வெய்ய கொடுந்
     துயர் குளிப்பது?' என்றான்.

பொருள் 

என்றலும் = இராமனின் துயரச் சொற்களை கேட்ட பின் 

இளைய கோ = இளவல் இலக்குமன் 

அவ் இராமனை இறைஞ்சி = அந்த இராமனை வணங்கி 

 'யாண்டும், = எப்போதும் 

வென்றியாய்! = வெற்றியை உடையவனே 

விதியின் தன்மை = விதியின் தன்மை(யைத் தவிர) 

பழியல விளைந்தது ஒன்றோ? = பழி அல்லது தீமை என்று ஒன்று உண்டா. இல்லை. எல்லாம் விதியின் செயல் 

நின்று இனி நினைவது என்னே?  = அதையே நீண்ட நேரம் சிந்தித்து நடக்கப் போவது என்ன. 

நெருக்கி = மேல் சென்று 

அவ் அரக்கர் தம்மைக் = அந்த அரக்கர்களை 

கொன்றபின் அன்றோ = கொன்ற பின் அல்லவா 

வெய்ய  கொடுந்  துயர் குளிப்பது?' = மிகக் கொடுமையான துயரை நாம் அனுபவிக்க வேண்டும். 

என்றான் = என்று கூறினான் 

இப்ப துக்கப் படாதே. அரக்கர்ளை கொன்ற பின் ஜடாயு இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கலாம் என்கிறான். 

நடக்கிற காரியமா அது? அப்போது இந்தத் துக்கம் மறந்து விடும். 

சிந்திப்போம். 




Friday, September 12, 2025

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது - 1/2

 கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -1/2


துக்கத்தை எப்படி கையாள்வது ?  


எந்த ஒரு உணர்வையும் கையாள்வது என்றால் அதில் பயிற்சி வேண்டும். துக்கம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறோம். அதை எப்படியாவது தவிர்க்க எண்ணுகிறோம். இப்படி பயந்து பயந்து ஓடிக் கொண்டே இருந்தால், ஒரு நாள் உண்மையிலேயே ஒரு துன்பம் வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமலேயே போய் விடும். சின்ன துன்பம் வந்தால் கூட தவித்துப் போய் விடுவோம். 


துன்பத்தை கையாளத் தெரிய வேண்டும். அதற்காக எங்கு போய் பயிற்சி எடுப்பது?  


எங்கும் போக வேண்டாம். வரும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை கடந்து போகப் பழக வேண்டும். 


சரி துன்பமே வராவிட்டால் என்ன செய்வது?


அதற்குத்தான் விரதம், தூக்கம் விழிப்பது என்று வைத்து இருந்தார்கள். மாதத்தில் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார். பசிக்கும். தலை வலிக்கும். சோர்வு வரும். ஆனால், பழகி விடும். அப்புறம், அது ஒரு பெரிய விடயமாகத் தெரியாது. அது போல் ஆண்டில் ஒரு நாள் சிவராத்திரி அன்று தூக்கம் தவிர்த்துப் பார்க்க வேண்டும். கடினம்தான். அவற்றை ஏற்றுப் பழகிக் கொண்டால் பின் நாம் எதிர்பார்க்காமல் பசி தூக்கம் போன்ற துன்பங்கள் வரும் போது அவற்றை எளிதில் நம்மால் சமாளிக்க முடியும். 


நான் பார்த்தவரை, நாம் துக்கம் அனுஷ்டிப்பது என்பதை நாம் சரியாக செய்வதில்லையோ என்ற சந்தேகம் உண்டு. துக்கம் வந்தால் அதை தள்ளிப் போட்டு விடுகிறோம். அதில் பல சடங்குகளைப் புகுத்தி அந்த உணர்வுகளை மழுங்கப் பண்ணி விடுகிறோமோ என்று தோன்றுகிறது. மனம் அந்த சமய சடங்குகளில், அதற்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, சடங்கு செய்யும் ஆட்களை கொண்டு வருவது,சுற்றம்/ நட்பை அழைப்பது, அதில் யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்க வேண்டாம் என்ற சச்சரவு வேறு. 


இதில் மனம் போனால் துக்கத்தில் எங்கே மனம் போகும். 


அனுபவிக்காமல் விட்ட துக்கம் எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. பின், அது வேறு வேறு விதங்களில் வெளிப்படுகிறது. 


ஜடாயு இறந்து போகிறார். 



இராமன் துக்கத்தில் புலம்புகிறான். அது தான் சரியான ஒன்று. 


ஆனால், இலக்குவன் அதை மறுக்கிறான். 


அவன் என்ன சொன்னான் என்று நாளை சிந்திப்போம். 



Thursday, August 21, 2025

கம்ப இராமாயணம் - மாரீசன் - புலவியினும் வணங்கா முடி

கம்ப இராமாயணம் - மாரீசன் - புலவியினும் வணங்கா முடி 

https://interestingtamilpoems.blogspot.com/2025/08/blog-post.html


வில்லன் இல்லை என்றால் கதாநயாகன் இல்லை. 


கதாநாயகனின் பெருமை எல்லாம் வில்லனைச் சேர்ந்தது. 


இராவணன் சீதையைச் தூக்கிச் செல்லவில்லை என்றால், பதினாலு வருடம் இராமனும், சீதையும் காட்டில் இருந்து விட்டு பின் நாட்டுக்குப் போய் இருப்பார்கள். அதில் இராமனின் பெருமை என்ன இருக்கிறது ? அப்பா காட்டுக்குப் போகச் சொன்னார். போனான். பின் வந்தான் என்று கதை முடிந்து இருக்கும். 


இராமனின் ஆற்றலை காட்ட ஒரு இராவணன் வேண்டும். 


இராமன் தெருவோரம் போகும் ஒரு மெலிந்த ஒருவனை வென்றான் என்றால் அது ஒரு செய்தி கூட இல்லை. கொசுவை அடித்துக் கொல்வது என்ன பெரிய செய்தியா?


இராமனின் பெருமை உயர வேண்டும் என்றால் அவன் இராவணன் என்ற மிகப் பெரிய வீரனை, தவ வலிமை உடையவனை, பேரும் புகழும் கொண்டவனை வென்றான் என்ற சொல்ல  வேண்டும். 


இராமன் வென்ற இராவணன் எப்பேற்பட்டவன் என்று கம்பன் விவரித்துக் கொண்டு போகிறான். 


எவ்வளவுக்கு எவ்வளவு இராவணனை தூக்கிப் பேசுகிறானோ, அதை விட ஒரு படி இராமன் புகழ் வரப் போகிறது என்று அர்த்தம். அப்பேற்பட்ட இராவணனை, இராமன் வென்றான் என்று வர வேண்டும். 


"சிவன்,  திருமால், பிரமன் ஆகிய மூவரும், இராவணனை வெல்ல முடியாது. மும்மூர்திகளாலும் வெல்ல முடியாதவன் என்றால் அவனை வேறு யாரால் வெல்ல முடியும். 


எப்பேற்பட்ட ஆள் ஆனாலும், வீட்டில், படுக்கை அறையில், மனைவியிடம் அல்லது காதலியிடம் இறங்கி வந்தே ஆக வேண்டும். அது தான் கலவியில் இன்பம். அதட்டி, மிரட்டி, இன்பம் அனுபவிக்க முடியுமா? 


ஆனால், இராவணன், படுக்கை அறையிலும் வணங்கா முடி உள்ளவனாம். அப்படி என்றால் வேறு எங்கு வணங்கி இருப்பான்?  "


பாடல் 


புலியின் அதள் உடையானும், பொன்னாடை

     புனைந்தானும், பூவினானும்

நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு

     யாவர், இனி நாட்டல் ஆவார்?

மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்

     தோள், சேயரிக் கண், வென்றி மாதர்

வலிய நெடும் புலவியினும் வணங்காத

     மகுட நிரை வயங்க மன்னோ.


பொருள் 


புலியின் = புலியின் 


அதள் = தோலை 


உடையானும் = உடையாகக் கொண்ட சிவனும் 


பொன்னாடை = பட்டு , பீதாம்பரம் 


புனைந்தானும் = உடுத்திய திருமாலும் 


பூவினானும் = தாமரை பூவில் தோன்றிய பிரமனும் 


நலியும் = (இராவணனை) வெல்லும் 


வலத்தார் அல்லர் = வல்லமை உடையவர்கள் அல்ல 


தேவரின் = அப்படி இருக்கும் போது, தேவர்களில் 


இங்கு யாவர் = யார் இங்கு  


இனி நாட்டல் ஆவார்? = இனி அவனை வெல்லப் போக்கிரார்கள் 


மெலியும் இடை = மெலிந்து கொண்டே போகும் இடுப்பு 


தடிக்கும் முலை = தடிக்கும் மார்பகங்கள் 


வேய் = மூங்கில் போல் 


இளந் தோள் = இளமையான தோள்கள் 


சேயரிக் கண் = சிவந்த கண்கள் 


வென்றி மாதர் = வெற்றி கொள்ளும் பெண்கள் 


வலிய நெடும் புலவியினும் = நீண்ட கலவி நேரத்திலும் 


வணங்காத = வணங்காத 


மகுட நிரை வயங்க மன்னோ = மகுடங்களை கொண்டவன் 


படுக்கை அறையில் கூட தலை வணங்காதவன்.


தனிமையில், மோகம் கொண்ட நேரம், ஆண், பெண்ணிடம் அடிமையாவது இயல்பு. 


முருகன், வள்ளியிடம் "நீ எனக்கு என்ன ஆணை இடுகிறாயோ அதை செய்வேன் என்று வள்ளியின் பாதங்களை பிடித்துக் கொண்டு கேட்டானாம்".


"பணியா என வள்ளி பதம் பணியும், 

தணியா அதி மோக தயாபரனே"


என்பது அருணகிரி வாக்கு 


அவள் காலடியில் பணிந்து நிற்பானாம்.


அதுதான் ஆண்மை.  பெண்ணிடம் தோற்க வேண்டும். என் முன்னால் அவன் பணிந்து நிற்கிறான் என்று அவள் பெருமை கொள்ள வேண்டும். அது உயர்வு தாழ்வு அல்ல. அன்பின் வெளிப்பாடு.


இராவணனுக்கு அதெல்லாம் தெரியாது. அங்கும் கூட அவன் வணங்கா முடியன். 


அதுதான் அரக்க குணமோ ?

Sunday, June 15, 2025

கம்ப இராமாயணம் - மாரீசன் - தர்மம் போல்

கம்ப இராமாயணம் - மாரீசன் - தர்மம் போல் 



இராவணன் அரசவையில் வீற்றிருக்கிறான். அவன் இருக்கும் அந்த மணி மண்டபத்தை வர்ணிக்க வேண்டும். 


கம்பன் என்ன சொல்கிறான் என்பது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் அறிந்தவரை ஒரு மண்டபத்தை எப்படி எல்லாம் வர்ணிக்கலாம்?


விண் வரை உயர்ந்த மாளிகை, மேகம் வந்து இளைப்பாறிப் போகும் முற்றம், ஒளி வீசும் மண்டபம், இமய மலை போல் உறுதியானது என்றெல்லாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


கம்பன் சொல்லும் உவமை நாம் கனவிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத உவமை. 


அந்த மண்டபம் தேவ தச்சன், விஸ்வகர்மா உருவாக்கியது. 


சரி. அது என்ன பெரிய விடயம். 



அவன் படைக்கும் கடவுளான பபிரமனாலும் முடியாத அளவுக்கு சிறப்பாக படைப்பான். 


ஓ, அப்படியா.  பெரிய ஆள் தான். 


அவன் நாம் என்னவெல்லாம் வேண்டும் என்று சொல்கிறோமோ, அது போலத் கட்டித் தருவான். 


சரி, அதில் என்ன சிறப்பு இருக்கிறது. 


அவன் நாம் மனதில் நினைப்பதை எல்லாம், வேண்டியதை எல்லாம் தருவான், எப்படி என்றால் அறம் எப்படி ஒருவனுக்கு வேண்டியன எல்லாம் தருமோ, அப்படி.


எங்கிருந்து எங்கே போகிறான் கம்பன். கிடைத்த சின்ன இடைவெளியில் அறத்தின் உயர்வை சொல்லிவிட்டுப் போகிறான். 


அறம் எப்படி வேண்டியன எல்லாம் தருமோ, அது போல் தேவதச்சன் அந்த மண்டபத்தை செய்தான்.


பாடல் 



 நிலை இலா உலகினிடை நிற்பனவும்

    நடப்பனவும் நெறியின் ஈந்த

மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது,

    நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்

உலைவு இலா வகை உழந்த தருமம் என,

    நினைந்த எலாம் உதவும் தச்சன்

புலன் எலாம் தரெிப்பது, ஒரு புனை மணி

    மண்டபம் அதனில் பொலிய, மன்னோ.


பொருள் 




நிலை இலா = நிரந்தரம் இல்லாத 


 உலகினிடை = இந்த உலகில் 


நிற்பனவும் = அசையாதனவும் 


நடப்பனவும் = அசையும் தன்மை கொண்ட பொருள்களும் 


நெறியின் = உயர்ந்த வழியில் 


ஈந்த = உருவாக்கிய 


மலரின் = திருமாலின் நாபிக் கமலத்தில் 


மேல் = இருந்து உருவான, அல்லது இருக்கும்  


நான்முகற்கும் = நான்கு முகங்கள் கொண்ட பிரமனுக்கும் 


வகுப்பு அரிது = செய்வது கடினம் 


நுனிப்பது = நுண்ணிய, நுட்பமான 


ஒரு வரம்பு இல் = எல்லையில்லா 


ஆற்றல் = திறமை 


உலைவு இலா வகை = தீமை இல்லாத வழியில்  


உழந்த தருமம் என = செய்த அறத்தைப் போல  போல

 

நினைந்த எலாம் = மனதில் நினைத்ததை எல்லாம் 


உதவும் தச்சன் = செய்து தரும் தேவ தச்சன் 


புலன் எலாம் = தன் அறிவு அனைத்தையும் 


தெரிப்பது = தெரிய, வெளிப்பட 


ஒரு = கட்டிய ஒரு 


புனை மணி = மணிகள் பதிக்கப் பெற்ற 


மண்டபம் = மண்டபம் 


அதனில் பொலிய, மன்னோ = அதில் பொலிவுடன் வீற்றிருந்தான் 


தருமம் என்கிறான் கம்பன். அதை பிறருக்கு உதவும் தான தர்மம் என்று கொண்டாலும் சரி, செய்யக் கூடிய தருமம், அறம் என்று கொண்டாலும் சரி அர்த்தம் பெரிதாக மாறாது. அறம் சிறப்பு. 


அறம், வேண்டியன எல்லாம் தரும் என்ற போதனையை இங்கே வைக்கிறான். 


கிடைக்கும் இடமெல்லாம் அறம் பேசியது நம் இலக்கியங்கள். 

Tuesday, June 10, 2025

கம்ப இராமாயணம் - மாரீசன் வதைப் படலம்

 கம்ப இராமாயணம் - மாரீசன் வதைப் படலம் 


மாரீசன் வதைப் படலம் என்றவுடன் நமக்கு என்ன நினைவுக்கு வரும்?


இராவணன், மாரீசனை மாய மானாகப் போகச் சொன்னான். சீதை அந்த பொன் மானைப் பிடித்துத் தரச் சொன்னாள். இராமன், மான் பின் போனான். பின் இலக்குவன் போனான். இராவணன் கபட சந்நியாசி வேடத்தில் வந்து சீதையை தூக்கிச் சென்றான். இராமனின் அம்பு பட்டு மாரீசன் இறந்தான். 


இவ்வளவுதானே நமக்குத் தெரியும். 


இந்தப் பகுதியை கம்பன் எழுதியிருக்கும் விதத்தைப் படித்தால், கம்பன் மிகவும் இரசித்து இரசித்து எழுதிய பகுதி மாதிரி தோன்றும். 


அறம், இலக்கியம், மனோ தத்துவம், அரசியல் கோட்பாடு, வீரம், தன்னிரக்கம், காமம், என்று வண்ணமயமாக தீட்டி இருக்கிறான். 


நீண்ட ஒரு காப்பியத்தைப் படிக்கும் போது, இது போன்ற பகுதிகளை வேகமாக தள்ளிவிட்டு விட்டு மேலே போய் விடுவோம். 


என்ன அவசரம். எங்கே போகப் போகிறோம். நிறுத்தி நிதானமாக இரசிப்போமே. 


எந்நேரமும் ஓட்டமும், நடையுமாக ஒரு வித பதட்டத்திலேயே வாழ்க்கை கழிகிறது. 


இந்த உலகை விட்டு விட்டு வாருங்கள். கம்பன் காட்டும் அந்த அற்புத, மாயா உலகத்துக்குள் சென்று வருவோம். 


ஒவ்வொரு பாடலும் தேன். 


அடடா அடடா என்று ஒவ்வொரு பாடலும் அத்துணை அற்புதம். 


வாருங்கள். அனுமதி இலவசம். 



Thursday, January 9, 2025

கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் - நெஞ்சின் நலம் காண

 கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் - நெஞ்சின் நலம் காண 

https://interestingtamilpoems.blogspot.com/2025/01/blog-post_9.html

தயரதன் இறந்த செய்தியைக் கேட்ட சடாயு புலம்புகிறான். 


அவன் புலம்புவது ஒரு புறம் இருக்கட்டும். 


ஒரு பட்சிக்கும், ஒரு சக்ரவத்திக்கும் எப்படி இப்படி ஒரு நட்பு இருக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது. 


நண்பர்களுக்குள்ளேயே ஒருவன் விரைவில் பெரிய இடத்தை அடைந்து விட்டால், மற்றவர்கள் மெல்ல மெல்ல விலகி விடுவார்கள். "அவன் பெரிய ஆள் .." என்று அவனிடம் உள்ள பழைய நெருக்கம் குறைந்துவிடும். 


அப்படி இருக்க ஒரு பறவைக்கும், ஒரு பெரிய சக்ரவத்திக்கும் இடையே இப்படி ஒரு நட்பா என்று நம்மை வியக்க வைக்கிறது.  


உண்மையான நட்பில் உயர்வு தாழ்வு இல்லை. 


இப்போது சடாயுவின் புலம்பலுக்கு வருவோம். 


சடாயு 


"தயரதா, என் நண்பனே, நீ ஏன் என்னை விட்டுப் போனாய் என்று எனக்குத் தெரியும். நீ இறந்து போனால் நானும் இறப்பேனா என்று என் நட்பின் ஆழத்தை அறியவே நீ என்னை விட்டுப் போய் விட்டாய். என்ன செய்ய. நான் இன்னும் உயிரை வைத்துக் கொண்டு இருக்கிறேனே. காரணம், நான் ஒரு விலங்கு என்பதலா? ஒரு வேளை நான் ஒரு மனிதப் பிறவியாய் இருந்திருந்தால் நீ உயிர் துறந்த போது நானும் உயிரை துறந்து இருப்பேன் என்று நினைக்கிறேன்"  


புலம்புகிறார். 


பாடல் 


அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும்

    தனிக் குடையாய்! ஆழி சூழ்ந்த

நிலம் காவல் அது கிடக்க, நிலையாத

    நிலை உடையேன் நேய நெஞ்சின்

நலம் காண நடந்தனையோ? நாயகனே!

    தீவினையேன், நண்பின் நின்றும்

விலங்கு ஆனேன் ஆகலினால், விலங்கினேன்;

    இன்னும் உயிர் விட்டிலேனால்.


பொருள் 

அலங்காரம் = அழகானது 


என = என்று 


உலகுக்கு = இந்த உலகத்துக்கு 


அமுது அளிக்கும் = அமுதை வழங்கும் 


தனிக் குடையாய்! = சிறந்த வெண் கொற்ற குடையை உடையவனே 


ஆழி சூழ்ந்த = கடல் சூழ்ந்த 


நிலம் = இந்த உலகம் 


காவல் அது கிடக்க = காவல் இன்றி கிடக்க (நீ இல்லாததால்) 


நிலையாத = ஒரு நிலையில் நிற்காத 


நிலை உடையேன் = மனதை உடைய என் 


நேய நெஞ்சின் = அன்பு கொண்ட மனத்தின் 


நலம் காண = பெருமையை, உறுதியைக் காண 


நடந்தனையோ? = என்னை விட்டு பிரிந்து போனாயோ ?


நாயகனே! = தலைவனே 


தீவினையேன், = தீய வினை உடையவனான நான் 


நண்பின் நின்றும் = நட்பு இருந்தாலும் 


விலங்கு ஆனேன் = விலங்காக இருக்கின்றேன் 


ஆகலினால் = ஆதலினால், எனவே 


விலங்கினேன் = விலகி இருக்கிறேன் 


இன்னும் உயிர் விட்டிலேனால் = இன்னும் உயிரை விடாமல் இருக்கிறேன் 


தன்னைத் தானே நொந்து கொள்கிறார். 


அலுவலக வேலைக்கு செல்பவர்கள் கூட, வீட்டில் கணவன்/மனைவி/பிள்ளைகள் என்று உறவாட நேரம் இல்லமால் தவிக்கிறார்கள். 


ஒரு சக்கரவர்த்தி எப்படி நேரம் ஒதுக்கி ஒரு பறவையோடு நட்பு பாராட்டி இருக்க முடியும். 


நேரம் இல்லை என்று நாம் சொல்லுவது எல்லாம் ஒரு சாக்கு. 


அன்பிருந்தால், நேரம் இருக்கும். 



Tuesday, December 24, 2024

கம்ப இராமாயணம் - ஜடாயு புலம்பல் - ஏன் என்னை விட்டுப் போனாய்?

கம்ப இராமாயணம் - ஜடாயு புலம்பல் - ஏன் என்னை விட்டுப் போனாய்?



தயரதன் இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும், ஜடாயு பெரும் துயரம் அடைந்து வருந்திப் புலம்புகிரான். 


ஒருவர் இன்று ஏதோ ஒன்றில் புகழ் அடையலாம். படிப்பில், விளையாட்டில், நடிப்பில், பணம் சம்பாதிப்பதில்...அந்தப் புகழ் அவர்களிடம் எப்போதும் இருக்காது. அவர்களை விட வேறு யாராவது சிறப்பாக செய்தால் அவர்களிடம் போய் விடும். புகழுக்கு என்று ஒரு நிலையான இடம் கிடையாது. 


ஆனால், தயரதா, நீ இருக்கும் வரை, புகழுக்கு நீயே நிரந்தர புகலிடம்.....


தயரதா, உனக்கு நிரந்தர பகை என்று ஒன்று உண்டு என்றால் அது பொய். நீ பொய்க்கு நிரந்தர பகைவன். 


உண்மையும் சத்தியமும் உன்னை அணிகலனாக அணிந்து மகிழும். 


நீ யாரையெல்லாம் விட்டு விட்டுப் போனாய் தெரியுமா? 


புகழ் தரும் உன் கொடைத் திறனையும் 

நீதி மாறாத உன் வெண் கொற்றக் குடையையும் 

உன்னுடைய உயர்ந்த பொறுமை என்ற பண்பையும் 


இவற்றையெல்லாம் விட்டு விட்டுப் போய் விட்டாய். 


நீ இறந்ததில் சிலருக்கு மகிழ்ச்சி இருக்கும். அவர்கள் யார் தெரியுமா?


கற்பக மரம். கேட்டதை எல்லாம் கொடுக்கும். நீ இருந்த வரை அதுக்கு போட்டியாக இருந்தாய். இப்போது நீ இல்லை. கேட்டதை எல்லாம் கொடுப்பதற்கு இனி கற்பக மரம் மட்டும்தான் இருக்கிறது. எனவே, அது மகிழும். 


உடுபதி...விண்மீன்களின் தலைவனான நிலவு அமிர்தத்தைக் கொடுப்பது. உன் கொடை மூலம் நீ உயிர்களை காத்தாய். நீ இல்லாததால், இனி உயிர் காக்கும் அம்ரிதத்தைத் தர நிலவு மட்டும் தான். எனவே, அது மகிழும். 


கடல். உன் புகழ் கடலை விடப் பெரியது. நீ இல்லாவிட்டால், இனி உலகிலேயே பெரியது கடல் என்ற பெருமையை பெறும். எனவே அது மகிழும். 

  தயரதா, நீ போன பின், யாசகம் வேண்டுபவர்களும், நல் அறமும், நானும் இனி எங்கே போவோம். எங்களை எல்லாம் விட்டு விட்டு நீ எப்படி போனாய்....


என்று ஜடாயு புலம்புகிறார். 


பாடல்  


'பரவல் அருங்கொடைக்கும், நின்தன் பனிக்குடைக்கும்,

     பொறைக்கும், நெடும் பண்பு தோற்ற

கரவல் அருங் கற்பகமும், உடுபதியும்,

     கடல் இடமும், களித்து வாழ-

புரவலர்தம் புரவலனே! பொய்ப் பகையே!

     மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே!-

இரவலரும், நல் அறமும், யானும், இனி

     என் பட நீத்து ஏகினாயே?


பொருள் 


'பரவல் அருங்கொடைக்கும் = புகழ் தரும் உன் கொடை திறனுக்கும் 


நின்தன் பனிக்குடைக்கும் = உன் வெண் கொற்றக் குடைக்கும் 


பொறைக்கும் = உன் பொறுமைக்கும் 


நெடும் பண்பு தோற்ற = உயர்ந்த பண்புகள் தோற்க 


கரவல் அருங் கற்பகமும் = மறைக்காமல் கொடுக்கும் கற்பக மரமும் 


உடுபதியும் = நிலவும் 


கடல் இடமும் = கடலும் 


களித்து வாழ = மகிழ்ந்து வாழ 


புரவலர்தம் புரவலனே = அரசர்களுக்கு அரசனே 


பொய்ப் பகையே = பொய்க்கு பகையானவனே 


மெய்க்கு அணியே = உண்மைக்கு அணிகலன் போன்றவனே 


புகழின் வாழ்வே! = புகழுக்கு வாழ்வளிப்பவனே 


இரவலரும் = யாசகம் பெறுபவர்களும் 


நல் அறமும் = நல்ல அறமும் 


யானும் = நானும் 


இனி = இனிமேல் 


என் பட  = என்ன செய்வோம் என்று நினைத்து 


நீத்து ஏகினாயே? = விலகி மேலே போனாய் ?




Wednesday, December 18, 2024

கம்ப இராமாயணம் - வாய்மை காத்து

கம்ப இராமாயணம் - வாய்மை காத்து 


தயரதன் ஏன் இறந்தான் ?


அவனுக்கு புத்திர பாசத்தால் இறப்பான் என்று ஒரு சாபம் இருந்தது. எனவே இராமன் கானகம் போகப் போவதை அறிந்து இறந்தான் என்று சொல்லுவார்கள். 


அது சரியா?


காதோரம் வந்த நரை முடியை பார்த்து, இனி ஆட்ச்சியை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு கானகம் போவதாகத் தான் தயரதன் நினைத்து இருந்தான். இராமன் முடி சூடி, தயரதன் கானகம் போனால் பிரிவு வந்து இருக்காதா?


சரி, இப்படிப் பார்ப்போம்.


தயரதன் கானகம் போக முடிவு செய்துவிட்டான். கைகேயின் வரத்தால் இராமனும் கானகம் போக வேண்டி இருக்கிறது. நல்லதுதானே...இரண்டு பேரும் கானகம் போய் இருக்கலாமே? பிரிவு வந்து இருக்காதே. 


பின் ஏன் தயரதன் இறந்தான்?


அறம் தவறியதால், நீதி பிழைத்ததால் உயிர் விட்டான். 


அதை இராமனே சொல்கிறான். 


"தயரதன் வலிமையுடன் இருக்கிறானா" என்று ஜடாயு கேட்டவுடன், இராமன் சொல்கிறான்....


"மறக்க முடியாத தன் நீதியைக் காக்க, தயரதன் உயிர் விட்டான்" என்று.


அதைக் கேட்டதும், ஜடாயு மயங்கி விழுந்தான். பின் தெளிந்தான். 


பாடல் 


மறக்க முற்றாத தன் வாய்மை  காத்து அவன்

துறக்கம் உற்றான்' என, இராமன் சொல்லலும்,

இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான்;

உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான்.


பொருள் 


மறக்க முற்றாத = மறக்கக் கூடாத, மறக்க முடியாத 


தன்  = தன்னுடைய 


வாய்மை = நீதியை


காத்து = காப்பாற்றி 


அவன் = தயரதன் 


துறக்கம் உற்றான் = இறந்து போனான் 


என = என்று


இராமன் சொல்லலும், = இராமன் சொன்னதும் 


இறக்கம் உற்றான் என = ஏமாற்றம் அடைந்தான் 


 ஏக்கம் எய்தினான் = ஏங்கினான் 


உறக்கம் உற்றான் என = மயக்க நிலை உற்று 


உணர்வு நீங்கினான் = பின் தெளிந்தான் 


இராமனைப் பிரிந்ததால் அல்ல, நெறி தவறி விட்டோமே என்ற கவலையில் உயிர் விட்டான் தயரதன். 


"அப்பா இறந்து போனார்" என்று சொல்லி இருக்கலாம். 


இராமன் அப்படிச் சொல்லவில்லை. மீற முடியாத, மீறக் கூடாத அறத்தை மீறியதால் உயிரை விட்டான் என்று சொன்னான். 


அந்த அதிர்ச்சி செய்தி கேட்ட ஜடாயு, மயங்கி விழுந்தான். 


பின் என்ன சொன்னான்?



Friday, December 13, 2024

கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல்

கம்ப இராமாயணம் - சடாயு புலம்பல் 


சடாயு இராம இலக்குவனர்களைப் பார்த்து "நீங்கள் யார் "  என்று கேட்டார் .  அதற்கு அவர்கள் "நாங்கள் தயாரதனின் பிள்ளைகள் "  என்று கூறினார்கள் .  


அதைக் கேட்டதும் ஒரு சிறு குன்றின் மேல் அமர்ந்து இருந்த ஜடாயு வேகமாக தத்தி தத்தி வந்து தன் பெரிய சிறகுகளால் அவர்களை அணைத்துக் கொண்டார். மேலும் ,  "தயரதன் நலமாக இருக்கிறாரா" என்று விசாரித்தார் . 



பாடல் 


உரைத்தலும், பொங்கிய உவகை வேலையன்,

தரைத்தலை இழிந்து அவர்த் தழுவு காதலன்,

'விரைத் தடந் தாரினான்,  வேந்தர் வேந்தன்தன்,

வரைத் தடந் தோள் இணை வலியவோ?' என்றான்.


பொருள் 

உரைத்தலும் = "நாங்கள் தயரதனின் பிள்ளைகள் "  என்று சொன்னவுடன் 


பொங்கிய =பொங்கி வந்த 


உவகை  = மகிழ்ச்சிக் 


வேலையன் = கடல் போல வர 


தரைத்தலை இழிந்து = குன்றின் மேல் இருந்து தரைக்கு வந்து 


அவர்த் தழுவு காதலன் = அவர்களை (இராம இலக்குவர்களை )  தழுவும் காதல் கொண்ட சடாயு 


'விரைத் = மணம் பொருந்திய 


தடந் = பெரிய 


தாரினான் = மாலை அணிந்த 


வேந்தர் வேந்தன்தன் = அரசர்களுக்கு அரசனான 



வரைத் = மலை போன்ற 


தடந் தோள் = பெரிய தோள்கள் 


இணை = இரண்டும் 


வலியவோ?' = வலிமையாக இருக்கின்றனவா  


 என்றான் = என்று கேட்டான் .


அவ்வளவு ஆர்வத்தோடு கேட்ட ஜடாயுவுக்கு இராம இலக்குவனர்கள் என்ன பதில் சொன்னார்கள் ? 


என்ன சொல்லி இருப்பார்கள் என்று தெரியும் .  எப்படி சொல்லி இருப்பார்கள் என்று தெரியாது .  


நாளை சிந்திப்போம் .  




Thursday, December 12, 2024

கம்ப இராமாயணம் - அவலச் சுவை - புலம்பல்கள்

 கம்ப இராமாயணம் - அவலச் சுவை - புலம்பல்கள் 


இன்பமான நிகழ்வுகளை எளிதில் சொல்லி விடலாம் .  பெரிய, ஆழ்ந்த வார்த்தைகள் தேவை இல்லை .  எல்லோரும் புரிந்து கொள்ள முடியும் .  


சோகத்தை ,  துன்பத்தை எழுத்தில் வடிப்பது அவ்வளவு எளிது அல்ல .  துன்பத்தில் என்ன இருக்கிறது விவரிக்க ?  வர்ணிக்க ?   


மேலும் அதை மெருகு செய்யப் போனால்  சில சமயம் அருவெறுப்பாகி விடும் .  "இறந்த அவன் முகம் அழுகிய வாழைப் பழம்  போல் இருந்தது "  என்று சொன்னால் நல்லாவா இருக்கும் .  


ஆனால் கம்பன் சோகத்தையும் மிக அழகாக படம் பிடிக்கிறான் .  


பாத்திரங்களின் சோகம் நம்மை தாக்க வேண்டும் .  அதே சமயம் அடடா என்ன அழகாக சொல்லி இருக்கிறான் என்ற நயமும் வேண்டும் .  வார்த்தைகளில் ஆழம் வேண்டும் ,  சோகத்தை பிரதிபலிக்க வேண்டும் ,  அதே சமயம் சொல்லப் பட்ட விதமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் .  


"இறந்தார் ,  மண்டைய போட்டார் ,  டிக்கெட் வாங்கி விட்டார்" என்றெல்லாம் சொல்லாமல்   "இறைவன் திருவடியை அடைந்தார் ,  காலமானார் "  என்றெல்லாம் சொல்லுவது போல .  


இராமாயணத்தில் பல இடங்களில் கம்பன் சோகத்தைப் பிழிகிறான் .  அது நம் நெஞ்சை அறுக்கும் படி இருக்கும் .  வலிக்கும் .  அவன் சொன்ன விதம் ,  நம்மை வியப்பில் ஆழ்த்தும் .  இப்படி கூட இதைச் சொல்ல முடியுமா என்று நினைக்க வைக்கும் .  



சோக இரசம்.


முதல் புலம்பல் ஜடாயு புலம்பல் .  தயரதன் இறந்த சேதி கேட்டு ஜடாயு புலம்புகிறான் .  


நினைத்துப் பார்ப்போம். நெருங்கிய நண்பர் இறந்து விட்டதாக அவருடைய மகன் நம்மிடம்  கூறுகிறான் .  அந்த மகனிடம் நாம் என்ன சொல்லுவோம் ? 


ஜடாயு என்ன சொன்னார் என்று பார்ப்போம் .  


  

Friday, November 15, 2024

கம்ப இராமாயணம் - இந் நின்றாள் என்னை ஈன்றாள்

கம்ப இராமாயணம் -  இந் நின்றாள் என்னை ஈன்றாள்


பிள்ளைகளுக்கு நல்லது செய்கிறோம் என்று பெற்றோர் நிறைய காரியங்களை செய்வார்கள். பிற்காலத்தில் அந்தப் பிள்ளைகளே அவற்றை மறுதலித்து, பெற்றோர் பால் வெறுப்பு கொள்வார்கள். 


"...உனக்காகத்தானே நான் அவ்வளவு ஓடி ஓடி உழைத்தேன்...நீ நல்லா இருக்க வேண்டும் என்று தானே இதெல்லாம் செய்தேன் ..." என்று ஒரு தகப்பன் கூறுவதும்....


"...யாருக்கு வேணும் உன் பணம்...ஒரு நாளாவது என்னோடு உட்கார்ந்து அன்பா பேசி இருக்கிறாயா? கை பிடித்து நடந்து இருக்கிறாயா?  கதை சொல்லி தூங்கப் பண்ணி இருக்கிறாயா?  இப்ப வந்து பாசம் இல்லை, அன்பு இல்லை என்றால் எங்கிருந்து வரும்...நீ எனக்கு பணம் சேர்த்து வைத்தாய், இல்லை என்று சொல்லவில்லை...பதிலுக்கு நான் வேண்டுமானால் உனக்குப் பணம் தருகிறேன்..."


என்று மகன் சொல்லுவதும் நாம் காணக் கூடிய காட்சிதான். 


இது ஒரு உதாரணம். இப்படி பலப் பல சொல்லலாம். 


அன்பினால் செய்தேன் என்பதலாயே ஒன்று சரியாகி விடாது. எது சரி, எது தவறு என்று அறிவு கொண்டு சிந்திக்க வேண்டும். எது அறம், எது அறம் அல்லாதது என்ற அறிவு வேண்டும். 


பரதனுக்கு நாடு வேண்டும் என்று கைகேயி நினைத்ததில் என்ன தவறு? தன் பிள்ளைக்கு பெரிய இராஜ்யத்தை கொடுக்கிறோம். அவன் வந்து தன்னைக் கட்டிக் கொண்டு மகிழ்வான் என்று கைகேயி நினைத்து இருக்கக் கூடும். 


நடந்தது என்ன?


பரதனிடம், கைகேயைக் காட்டி குகன் கேட்கிறான் , "இவர் யார் என்று"


"பரதனுக்கு கோபமும், வெறுப்பும், அருவெறுப்பும் பொங்கி பொங்கி வருகிறது....


"உலகில் உள்ள அனைத்து துன்பங்களையும் படைத்தவள் இவள். படைத்தது மட்டும் அல்ல, அவற்றை வளர்த்து எடுப்பவளும் இவள். பாவியான என்னை மட்டும் அல்ல, இந்த உலகில் உள்ள அனைவர்க்கும் உயிர் வாழ்வதே வீண், உயிரை விட்டு விடலாம் என்று நினைக்கும் அளவுக்கு அவர்களை நடை பிணமாக்கியவள் இவள். இவ்வளவும் செய்து விட்டு ஒன்றும் செய்யாத மாதிரி எப்படி முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாள் பார். இவள் யார் என்று இன்னுமா உனக்குத் தெரியவில்லை? இவள் என்னைப் பெற்ற தாய்"  


என்று கைகேயியை, பரதன் குகனிடம் அறிமுகம் செய்கிறான். 


பாடல் 



‘படர் எலாம் படைத்தாளை, பழி வளர்க்கும்

     செவிலியை, தன் பாழ்த்த பாவிக்

குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்

     உயிர்ப் பாரம் குறைந்து தேய,

உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்

     உலகத்தே, ஒருத்தி அன்றே,

இடர் இலா முகத்தாளை, அறிந்திலையேல்,

     இந் நின்றாள் என்னை ஈன்றாள்.’


பொருள்



‘படர் = துன்பம். பெரும் துன்பம். 


 எலாம் படைத்தாளை = அனைத்து பெரிய துன்பங்களையும் உண்டாகியவளை 


பழி வளர்க்கும் = பழியை வளர்க்கும் 


செவிலியை = செவிலித்தாயை 


தன் = தன்னுடைய 


பாழ்த்த = பாழாய்ப்போன 


பாவிக் குடரிலே = பாவம் செய்த குடலிலே 


நெடுங் காலம் = நீண்ட காலம் 


 கிடந்தேற்கும் = கிடந்த எனக்கும் 


உயிர்ப் பாரம் = உயிரே பாரமாய் ஆகும் படி. பாரத்தை எப்போது இறக்கி வைப்போம் என்று நினைப்பது போல, எப்போது இந்த உயிரை விடுவோம் என்ற என்று நினைக்கும் படி 


குறைந்து தேய = குறைந்து தேய 


உடர் எலாம் = உடல்கள் எல்லாம் 


உயிர் இலா எனத் தோன்றும் = உயிரற்றவை என்று தோன்றும் படி 


உலகத்தே = இந்த உலகத்தில் 


ஒருத்தி அன்றே = சிறந்த ஒருத்தி 


இடர் இலா முகத்தாளை = ஒன்றுமே நடக்காதது போல் முகத்தினை வைத்துக் கொண்டு 


அறிந்திலையேல் = நீ இன்னுமா அறிந்து கொள்ளவில்லை 


இந் நின்றாள் = இங்கே நிற்கிறாளே இவள் 


என்னை ஈன்றாள் = என்னை பெற்றத் தாய் 


என்று அறிமுகள் செய்கிறான். 


எல்லோரும் அருகில் இருக்கிறார்கள். ஒரு மூன்றாவது மனிதனிடம் தன் தாயைப் பற்றி பரதன் அவ்வாறு பேசுகிறான். 


கூனி அவளுடைய மனதை மாற்றும் வரை கைகேயி மிக நல்லவள். இராமனை தன் சொந்த மகனாக நினைத்தவள். தயரதனுக்கு அன்பு மனைவி. 


பரதனையும் சீரும் சிறப்புமாகவே வளர்த்து இருப்பாள். 


"சிறு வயது முதலே அவள் அப்படித்தான்" என்று பரதன் குற்றம் சாற்ற முடியாது. 


கைகேயி தவறு செய்து விட்டாள். அறம் தவறினாள். அதற்காக பெற்ற தாயை பரதன் இவ்வளவு கீழ்த்தரமாக பேசலாமா?  


இத்தனைக்கும் அவள் பரதனுக்கு ஒரு தீங்கும் செய்யவில்லை. 


ஆயிரம் இராமர், கோடி இராமர் உனக்கு ஈடாக மாட்டார்கள் என்று பாராட்டப் பெற்ற பரதன் தாயை இவ்வளவு தாழ்வாக பேசலாமா? 


ஏன் பேசினான்?


முதலாவது, அன்பு, பாசம் இவற்றிருக்கு எல்லாம் மேலானது அறம். கைகேயி நடுவு நிலை தவறினாள். தன் பிள்ளை என்பதற்காக தர்மத்தை காற்றில் பறக்க விட்டாள். அன்பு என்ற போர்வைக்குள் அவள் செய்த முதல் தவறு. 


இரண்டாவது,  இறைவனுக்கும் பக்தனுக்கும் நடுவில் அவள் வந்து நின்றாள். பரதன் என்ற பக்தனை இராமன் என்ற பரம் பொருளிடம் இருந்து பிரித்து விட்டாள். அது ஒரு மிகப் பெரிய தவறு. பக்தி செலுத்துவோரை குழப்பக் கூடாது. கணவன் மனைவி உறவு போல் அது ஒரு புனிதமான உறவு. அதன் நடுவில் சென்று குழப்பம் விழைவிக்கக் கூடாது. 


இராவணன் செய்த தவறு என்ன?  சீதைக்கும் இராமனுக்கும் இடையில் அவன் வந்தான். 


யோசித்துப் பார்த்தால், எந்த உறவுக்கும் நடுவில் செல்வது தவறு என்றே படுகிறது. மகனுக்கும், மருமகளுக்கும் உள்ளை உறவின் நடுவே மாமியார் மூக்கை நுழைப்பதும் தவறுதான். 


மூன்றாவதாக, இறைவனை விட்டு விட்டு, உலக இன்பங்களில் நாட்டம் கொல்லுவது. இராமனை காட்டுக்கு அனுப்பி விட்டு, அரசை ஆள்வது எவ்வளவு அறிவான செயல் ?  பலர் அப்படித்தான் செய்கிறார்கள். கடவுளைப் பற்றி அப்புறம் (பதினாலு வருடம்) சிந்திக்கலாம். இப்போதைக்கு வீடு, வாசல், சொத்து, பத்து என்று இருப்போம் என்று இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கைகேயி என்றே உருவகம் செய்து கொள்ளலாம். 


உலகிலேயே தாயன்புதான் மிக உயர்ந்தது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


அது கூட அறத்துக்குப் பிறகுதான். அது கூட பக்திக்குப் பிறகுதான் என்று என்று சொல்கிறதோ நம் இலக்கியங்கள்....


சிந்திப்போம். 



Monday, October 21, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - மகன்

 கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - மகன்  

https://interestingtamilpoems.blogspot.com/2024/10/blog-post_21.html



பல பணக்காரர்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகள் அங்கு வேலை செய்யும் ஆட்களை எப்படி நடுத்துகிறார்கள் என்று நாம் கண்டும் கேட்டும் இருக்கிறோம். தன் தந்தையின், தாத்தாவின் வயது ஒப்ப வேலையாளை வா போ என்று ஒருமையில் அழைப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது என்றெல்லாம் செய்கிறார்கள். காரணம், அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் பெரிய பணக்காரர்கள், அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் என்பதால். 


வீட்டின் செல்வமும், அதிகாரமும் அந்த இளம் பிஞ்சுகளின் மனதில் ஏறி விடுகிறது. அதை பெற்றோரும் கண்டிப்பது இல்லை. 


இராமனை அழைத்து வரும்படி முதல் அமைச்சனான சுமந்தரனிடம் தசரதன் கூறுகிறான். சுமந்திரனும் இராமன் இருக்கும் இடம் செல்கிறான். 


"அப்பா வரச் சொன்னார் .. ஒரு வேலை இருக்கு...என் கூட வா" என்று சுமந்திரன் இராமனை அழைக்கிறான். என்ன வேலை என்று சொல்லவில்லை.  


"சரி சரி வெளியே காத்து இரு, வர்றேன்" என்று இராமன் சொல்லி இருக்கலாம். சொன்னாலும் யாரும் குறை காணப் போவது இல்லை. 


அல்லது, என்ன வேலை, இப்பவே வரணுமா, நாளைக்கு பாத்துக்க முடியாதா, என்று ஆயிரம் கேள்விகள் கேட்டு இருக்கலாம். 


அல்லது, "ஆமா, இந்த அப்பாவுக்கு ஒரு வேலை இல்லை. சும்மா பொழுது போகலைனா என்னைய கூப்பிட்டு உக்கார வச்சு பழம் கதைகள் பேசி 


அதெல்லாம் இராமன் செய்யவில்லை. 


சுமந்திரன் சொன்னதுதான் தாமதம், "இதோ வர்றேன் என்று உடனே கிளம்பி விட்டான்...மேகம் மிதந்து வருவது போல் வந்தான் " என்கிறான் கம்பன். 


உள்ளே போய் உடை மாற்றி, முகம் கழுவி, தலை கிலை சீவி, கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கலாம். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அப்பா கூப்பிடுகிறார், சுமந்திரன் வந்திருக்கிறான்  என்றால் எதாவது முக்கியமான வேலையாகத்தான் இருக்கும் என்று உடனே கிளம்பி விட்டான். 


பாடல் 


கண்டு கை தொழுது “ஐய! இக்    கடல் இடைக் கிழவோன்

‘உண்டு ஒர் காரியம், வருக ‘என     உரைத்தனன்“ எனலும்

புண்டரீகக் கண் புரவலன்     பொருக்கென எழுந்து, ஓர்

கொண்டல் போல் அவன் கொடி நெடும்     தேர் மிசைக் கொண்டான்.


பொருள் 


கண்டு = சுமந்திரன், இராமனைக் கண்டு 


கை தொழுது = கை கூப்பி 


“ஐய! = ஐயனே 


இக் = இந்த 

    

கடல் இடைக் = கடல்களுக்கு நடுவில் உள்ள உலகின் 


கிழவோன் = தலைவன் (தயரதன்) 


‘உண்டு ஒர் காரியம், வருக ‘ = ஒரு வேலை இருக்கிறது, வா 


என = என்று 


உரைத்தனன்“ = கூறினான் 


எனலும் = என்று சொன்னவுடன் 


புண்டரீகக் = தாமரை போன்ற 


கண் = கண்களை உடைய 


புரவலன் = காப்பவனான இராமன் 


பொருக்கென = சட்டென்று 


எழுந்து = எழுந்து 


ஓர் = ஒரு 


கொண்டல் = மழை மேகம்  


 போல் = போல 


அவன் = சுமந்தரனின் 


கொடி நெடும் = நீண்ட கொடியை உடைய 


தேர் மிசைக் கொண்டான் = தேர் மேல் ஏறிக் கொண்டான் 


அப்பா மேல் அவ்வளவு மரியாதை. அப்பா வா ன்னு சொன்னா உடனே கிளம்பி வருகிறான் இராமன். 


இன்றுள்ள தலைமுறையை நினைத்துப் பார்த்தால்...


என்ன சொன்னாலும் ஆயிரம் கேள்வி, முடியாது, இப்ப முடியாது, என்னால் முடியாது, வேற வேலை இ இருக்கு, வேற வேலை வெட்டி இல்லையா....என்று ஆயிரம் பதில்கள் வரும். 


இந்தப் பாடல்களையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லி கொடுக்கணும்.  

Thursday, September 26, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - சந்தேகம்

 கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - சந்தேகம் 



மனிதர்களுக்கு சந்தேகம் வரலாம். எது சரி, எது தவறு என்று குழப்பம் வரலாம். தயக்கம் வரலாம். இறைவனுக்கு வருமா?


மனிதனாக அவதாரம் செய்த இராமன், மனிதனாகவே வாழ்ந்து காட்டுகிறான். 


ஒரு மாணவனாக விஸ்வாமித்திரன் பின் செல்கிறான். வேள்வியைக் காக்க. சின்ன பையன் மாதிரி கேள்விகள் கேட்டுக் கொண்டு செல்கிறான். இறுதியில் தாடகை வந்து நிற்கிறாள். 


விஸ்வாமித்திரன் அவளை கொல் என்று கட்டளை இடுகிறான். 


இராமன் கொள்ளவில்லை. தயங்குகிறான். குழம்புகிறான். 


வசிட்டர் சொல்லித் தந்த பாடம் "மாதரையும், தூதரையும் கொல்லக் கூடாது" என்று. விச்வாமித்ரரோ பெண்ணான தாடகையை கொல் என்கிறார். 


என்ன செய்வது ?


நான் கடவுள் அவதாரம். எனக்கு எல்லாம் தெரியும் என்று முடிவு எடுக்கவில்லை. 


அவள் மேல் அம்பு போடாமல், பெண்ணிடம் எப்படி போர் செய்வது என்று நினைக்கிறான். 


பாடல் 


அண்ணல் முனிவற்கு அது

    கருத்து எனினும், ‘ஆவி

உண் ‘என வடி கணை

    தொடுக்கிலன்; உயிர்க்கே

துண் எனும் வினைத் தொழில்

    தொடங்கி உளள் ஏனும்,

பெண் என மனத்திடை

    பெரும் தகை நினைந்தான்.


பொருள் 


அண்ணல்  = பெரியவரான 


முனிவற்கு = விஸ்வாமித்ர முனிவருக்கு 


அது = தாடகையை கொல்லும் 


கருத்து எனினும் = எண்ணம் என்றாலும் 


 ‘ஆவி உண்  = உயிரைக் குடி 


‘என -= என்று 


வடி கணை  தொடுக்கிலன்; = வடிவான அம்பை தொடுக்கவில்லை 


உயிர்க்கே = உயிர்கள் எல்லாம் 


துண் எனும் = நடுங்கும் 


வினைத் தொழில் = கொலைத் தொழில் 


தொடங்கி உளள் ஏனும் = தொடங்கி நடத்துபவள் என்றாலும் 


பெண் என  = அவளும் பெண் தானே  என்று 


மனத்திடை = மனத்தில் 


பெரும் தகை = பண்புகளில் உயர்ந்த 


நினைந்தான் = இராமன் நினைத்தான் 


ஒரு அறிவான மாணவனுக்கு வரும் குழப்பம் அவனுக்கும் வருகிறது. அவனும் நம்மைப் போல் தான் என்று காட்டுவதன் நோக்கம், அவனும் உன்னைப் போல உள்ளவன் தானே, உனக்கு உள்ள குழப்பங்கள் அவனுக்கும் இருந்தது தானே, இருந்தும் அவன் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தான், அது போல் நீயும் வாழ முடியும், வாழ வேண்டும் என்று சொல்வதர்காக.


விஸ்வாமித்திரன் இராமனுக்கு எடுத்துச் சொல்லி இறுதியில் இராமன் மனம் மாறுகிறான்.


மாறிய பின் என்ன சொன்னான், செய்தான் ? 



Wednesday, August 28, 2024

கம்ப இராமாயணம் - குழந்தை இராமன்

 கம்ப இராமாயணம் - குழந்தை இராமன் 


இராமன் கானகம் சென்ற போது துக்கத்தில் தசரதன் மாண்டான். கைகேயியோ, கோசலையை மாளவில்லை. ஏன்? அவர்களுக்கு அவன் மேல் அன்பு இல்லையா?


தசரதன் இராமன் மேல் கொண்ட அதை என்ன என்று சொல்லுவது?  


அப்பாக்களுக்கு மகன்கள் மேல் உள்ள காதல் சொல்லி மாளாது. மகள் மேல் உள்ள பாசத்தை அப்பாக்கள் கொட்டி தீர்த்து விடுகிறார்கள். ஆனால், மகன்கள் மேல் உள்ள பாசத்தை வெளியில் சொல்லுவது இல்லை. 


அது ஏனோ அப்படி ஆகி விடுகிறது. 


இராமன் சிறு குழந்தையாக தொட்டிலில் கிடக்கிறான். 


தசரதன் தன் மகனைப் பார்த்து உருகுகிறான். 


"என் இராசா, என் உசிரு, என் தங்கம், என் செல்லம்",...என்றெல்லாம் பிள்ளைகளை கொஞ்சுவதைக் கேட்டிருக்கிறோம். 


தசரதன் நினைக்கிறான் , 'இவன் தான் உயிர்" என்று. அதோடு நிறுத்தி இருந்தால் பெரிய விடயம் இல்லை. அவன் ஒரு படி மேலே போகிறான். "இவன் தான் என் உடலும்" என்கிறான். 


அதாவது அவனை தவிர்த்து தனக்கு எதுவும் இல்லை என்கிறான். உயிர் மட்டும் என்றால், உடல் தனது என்று ஆகி விடும். 


உயிரும், உடலும் என்றால் எல்லாம் அவனே. தசதரன் இராமனில் கரைகிறான். 


பாடல் 


காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே

ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர்

ஆவியும் உடலமும் இலது என அருளின்

மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்.



பொருள்


காவியும் = நீலோற்ப மலரும் 


ஒளிர்தரு = ஒளி வீசும் 


கமலமும் = தாமரை மலரும் 


எனவே = போல 


ஓவிய = ஓவியத்தில் எழுதி வைத்த 


எழில் உடை = அழகைக் கொண்ட 


 ஒருவனை  = சிறந்த ஒருவனை 


அலது ஓர் = அவனைத் தவிர்த்து 


ஆவியும் = உயிரும் 


உடலமும் இலது = உடம்பும் இல்லை 


என = என்று 


அருளின் மேவினன் = கருணை மேலிட 


 உலகு உடை வேந்தர் தம் வேந்தன் = உலகத்தை ஆளுகின்ற வேந்தர்களுகெல்லாம் வேந்தனான தசரதன் 


சாதாரண அழகு என்றால் வயதாக வயதாக அது குன்றும். ஓவியத்தில் எழுதிய அழகு என்றால் எத்தனை யுகம் ஆனாலும் அப்படியே இருக்கும். இராமனின் அழகு அழியாத அழகு என்பதற்கு அதை உதாரணமாகச் சொன்னார்.


அளவுக்கு மீறிய அன்பு.


அதனால் தான் பின்னாளில் பிரிவைத் தாங்க முடியவில்லை. 




Wednesday, August 21, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற இளவரன்

 கம்ப இராமாயணம்  - இராமன் என்ற இளவரன் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/08/blog-post_21.html


இராமனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலில் அவன் எப்படி இருந்தான் என்று கம்பன் வாயிலாக பார்க்க இருக்கிறோம். 


ஏனோ தெரியவில்லை, கம்பன் இராமனின் குழந்தைப் பருவத்தை பற்றி பாடமலேயே விட்டுவிட்டான். அல்லது அவன் பாடி அந்த ஏடுகள் நமக்குக் கிடைக்கவில்லையோ என்னவோ. அந்தக் குறை தீர ஆழ்வார்கள் இராமனின் குழந்தைப் பருவத்தை பிரபந்தத்தில் பாடி அனுபவித்து இருக்கிறார்கள். 


கம்பன் காட்டும் இளவரசனான இராமனைப் பார்ப்போம். 


சக்ரவர்த்தித் திருமகன். செல்வத்துக்கு ஒரு குறைவில்லை. அதிகாரம், ஒரு பொருட்டே இல்லை. பட்டத்து இளவரசன் என்றால் ஏறக் குறைய அவன் அரசன்தான். 


மற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எப்படி இருக்கும்? அவர்கள் தங்கள் வீட்டில் வேலை பார்க்கும் வண்டி ஓட்டுபவர், வீட்டு வேலை செய்யும் ஆட்களை எப்படி நடத்துவார்கள் என்று நாம் அறிவோம். 


ஆனால் இராமன் எப்படி இருக்கிறான் என்று கம்பன் காட்டுகிறான். 


அவ்வளவு பணிவு, அவ்வளவு அன்பு, கரிசனம், மக்கள் மேல் அவ்வளவு வாஞ்சை. 


வசிட்டர் குருகுலத்தில் இருந்து மாலை இராமனும் அவன் சகோதர்களும் அரண்மனை திரும்புகிறார்கள். வருகிற வழியெல்லாம் மக்கள் இராமனைக் காண ஆவலோடு காத்து இருக்கிறார்கள். 


இன்றைய அரசியல் தலைவர்கள் போல் கையை ஆட்டிவிட்டு போகவில்லை. 


அவர்களை நெருங்கி விசாரிக்கிறான். 


அதுவும் மிகுந்த கருணையோடு, மலர்ந்த முகத்தோடு கேட்கிறான் ?


"நான் உங்களுக்கு எதாவது செய்யணுமா? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டி இருக்கிறதா?  உங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லையே?  வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? பிள்ளைகள் எல்லாம் ஆரோக்கியமா இருக்காங்களா?"



பாடல் 


 எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்

முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா

‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?

மதிதரு குமரரும் வலியர் கொல்? ‘எனவே.


பொருள் 


எதிர் வரும்  = எதிரில் வரும் 


அவர்களை  = அந்த மக்களை 


எமை உடை இறைவன் = எங்களை ஆட்கொள்ளும் இறைவனான இராமன் 


முதிர் = மிகுந்த 


தரு கருணையின் = அள்ளித்தரும் கருணையோடு 


முகமலர் = முகம் என்ற மலர் 


ஒளிரா = ஒளி விடும்படி (முகம் மலர்ந்து) 


‘எது வினை?  = ஏதாவது செய்யணுமா?  


இடர் இலை? = உங்களுக்கு துன்பம் ஒன்றும் இல்லையே? 


இனிது நும் மனையும்? = வீட்டில் உங்கள் மனைவி இனிதாக இருக்கிறாளா ?


மதிதரு குமரரும்  = அறிவுள்ள பிள்ளைகளும் 


வலியர் கொல்? = உடல்நலக் குறை ஒன்றும் இல்லாமல் ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கிறார்களா 


எனவே = என்று வினவினான் 


இதெல்லாம் அவன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பேசாமல் தேரில் ஏறி நேரே அரண்மனைக்குப் போய் இருக்கலாம். 


அதை விடுத்து, மக்கள் மேல் உள்ள அன்பினால், அவர்களை அணுகி அவர்களை நலம் விசாரிக்கிறான். 


பெண்டாட்டி, பிள்ளைகள் நலமா?  சந்தோஷமா இருக்கீங்களா?  ஏதாவது உங்களுக்கு நான் செய்யணுமா? என்று. 


"எமை ஆளும் இறை" என்று கம்பன் ஆரம்பிக்கிறான். 


இறைவன் இறங்கி மனித உருவில் வந்து  மக்கள் குறை கேட்டதாக காட்டுகிறான். 


இப்படி ஒரு தலைவன், அரசன் கிடைக்கமாட்டானா என்று மக்கள் ஏங்கும்படி கம்பன் இராமனைக் காட்டுகிறான். 


சின்ன வயதில் வந்த முதிர்ச்சி. 


கம்பன் காட்டும் இளவல். 



Tuesday, August 20, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்றோர் மானுடன்

கம்ப இராமாயணம் - இராமன் என்றோர் மானுடன் 



இராமன் பரம்பொருளின் அவதாரம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. 

கம்ப இராமாயணத்தில், கம்பன் இராமனை தெய்வம் என்றே கொண்டாடுகிறான். ஒவ்வொரு காண்டத்திலும், அவனை முழு முதற் கடவுளாகவே துதிக்கிறான். 

இருந்தும், காப்பியம் முழுக்க அவனை ஒரு மாநிடனாகக் காட்டுகிறான். 

குடிகளின் நலம் விசாரிக்கும் அன்பான அரசனாக, தந்தை சொல் கேட்கும் மகனாக, தாயாரை வணங்கும் பிள்ளையாக, சீதையைக் கண்டவுடன் மனதைப் பறி கொடுக்கும் ஒரு இளைஞனாக,  ஜடாயுவுக்கு ஈமக் கடன் செய்கையில் கண்ணீர் விட்டு அழும் ஒரு உறவினனாக, குகன், வீடனனிடம் உடன் பிறவா சகோதரனாக, சீதையைப் பிரிந்து நின்று கலங்கும் ஒரு அன்பான கணவனாக, கோபம் கொள்ளும் அரசனாக, எதிரியையும் பாராட்டும் ஒரு வீரனாக இப்படி பல கோணங்களில் இராமன் இந்த அவதாரத்தில் எப்படி ஒரு மனிதனாக வாழ்ந்தான் என்று கம்பன் காட்டுகிறான். 

இராமன் கடவுள் என்று சொல்லி விட்டால், கடவுள் செய்வதை எல்லாம் நாம் செய்ய முடியுமா என்று இராமன் வாழ்ந்து காட்டிய வழியை யாரும் பின் பற்ற மாட்டார்கள். 

கிருஷ்ணன் காட்டிய வழியில் போக யாரும் விரும்ப மாட்டார்கள். அது முடியாது. அவன் சக்ராயுதம் கொண்டு சூரியனை மறைக்கிறான், விஸ்வரூப தரிசனம் தருகிறான்...இதெல்லாம் நம்மால் ஆகுமா?  இறைவனின் லீலை என்று இரசிக்கலாமே தவிர செய்ய முடியாது. 

மாறாக இராமன், அழுகிறான், தற்கொலைக்கு முயல்கிறான், தளர்ந்து விடுகிறான், தான் செய்த செயலை எண்ணி நோகிறான்....

மானுடம் வென்றதம்மா என்பான் கம்பன். 


எப்படி மனிதனாக அவதரித்த இராமன், மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்று கம்பன் வாயிலாக பார்ப்போம். 

இது எனது சிறு முயற்சி. உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.