திருக்குறள் - தலையாய அறம்
இரவு நேரம். முக மூடி அணிந்த சிலர் ஒருவனை கத்தியால் குத்தி, அவன் வயிற்றை கிழித்து...கொஞ்ச நேரத்தில் அவன் இறந்து போகிறான்.
அப்படி கத்தியால் குத்தியவர்களை என்ன செய்வது?
குத்தியவர்கள் மருத்துவர்கள். அவனுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. பாவம், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனான். மருத்துவர்களை குறை சொல்வோமா?
ஏன்? கத்தியால் குத்தி , உயிர் பிரிந்து விட்டதே?
செயல் என்னவோ அதுதான். ஆனால், கொல்ல வேண்டும் என்பது மருத்துவர்களின் நோக்கம் அல்ல. மனதளவில் அவர்கள் அந்த நோயாளி சுகமாக பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று நினைத்துதான் செய்தார்கள்.
செயல் முக்கியம் அல்ல. நோக்கம் தான் முக்கியம்.
வள்ளுவர் சொல்கிறார், மனதளவில் கூட யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று. எல்லா குற்றமும் மனதில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்"
என்பார் வள்ளுவர்.
மனதால் செய்யக் கூடாது.
யாருக்கும் செய்யக் கூடாது.
எப்போதும் செய்யக் கூடாது.
பாடல்
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை
பொருள்
எனைத்தானும் = எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும்
எஞ்ஞான்றும் = எப்போதும்
யார்க்கும் = யாருக்கும்
மனத்தானாம் = மனதால் கூட
மாணா = மாட்சிமை இல்லாத செயல்களை
செய்யாமை தலை = செய்யாமல் இருப்பது சிறந்த அறம்
யாருக்கும் செய்யக் கூடாது
எப்போதும் செய்யக் கூடாது
எந்த அளவும் செய்யக் கூடாது
மனதால் கூட செய்யக் கூடாது.
மனம் என்றால் நம் மனம் மட்டும் அல்ல. பிறர் மனமும் புண் படும்படி செய்யக் கூடாது.
சில சமயம், நாம் கேலி, கிண்டல், நையாண்டி என்று சில பேரை மனதளவில் காயப் படுத்தி விடுவோம். உடலளவில் துன்பம் இல்லை. இருந்தும் மனதளவில் வலி இருக்கும்.
சில பேர் ஏதாவது கேட்டால், முகம் கொடுத்துக் கூட பேச மாட்டார்கள். கணனி, கை பேசியை பார்த்துக் கொண்டே பதில் சொல்வார்கள். அது ஒரு மரியாதை இல்லாத்தனம். மற்றவரை காயப் படுத்தும்.
வேலைக் காரர்கள், நமக்கு கீழே வேலை செய்பவர்களை மரியாதை இல்லாமல் நடத்துவது, பேசுவது. கூடாது. எனவேதான் "யார்க்கும்" என்றார்.
நம்மை விட பெரியவர்களை நாம் வருத்த மாட்டோம். நினைத்தாலும் முடியாது. சிறியவர்களை, எளியவர்களை எளிதாக வருத்த முடியும். கூடாது என்கிறார் வள்ளுவர்.
இதை எல்லோரும் கடைபிடித்தால் எப்படி இருக்கும்.
மற்றவர்கள் எப்படியும் போகட்டும். நாம் கடைபிடிப்போம்.
உலகில் இன்றில் இருந்து நல்லவர்களின் தொகை ஒன்று கூடட்டும்.
No comments:
Post a Comment