Thursday, March 31, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்று ஒன்றிலம் கதியே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மற்று ஒன்றிலம் கதியே 


ஒரு காலத்தில் தேவர்களும் அசுரர்களும் விடாமல் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். சண்டை என்பது இன்று நேற்று அல்ல, அந்தக் காலத்திலும் இதே தான். 


இரண்டு பக்கமும் ஆட்கள் இறந்து கொண்டே இருக்கிறார்கள். சண்டை என்றால் இழப்பு இருக்கத்தானே செய்யும். 


சண்டையும் போட வேண்டும், ஆளும் இறக்கக் கூடாது...அதுக்கு என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள். அமுதம் உண்டால் இறப்பு வராது என்று அறிந்து கொண்டார்கள். அமுதம் பாற்கடலை கடைந்தால் வரும். 


பாற்கடலை எப்படி கடைவது? எந்த மத்தில், எந்த கயிறைக் கொண்டு அதை கடைய முடியும்?


முடிவாக மேரு மலையை மத்தாக, வாசுகி என்ற பெரிய பாம்பை கயிறாக கொண்டு கடைவது என்று முடிவு செய்தார்கள். 


மலையை தலைகீழாக நட்டு ஆகி விட்டது. பாம்பை சுத்தியாச்சு. யார் வால் பக்கம், யார் தலைப் பக்கம் என்ற சர்ச்சை வந்தது. எப்படியோ பேசி சமாளித்து, அசுரர்களை தலைப் பக்கம் பிடிக்க சொல்லி விட்டார்கள் தேவர்கள். 


கடைந்தார்கள். வாசுகி என்ற பாம்புக்கு உடல் எல்லாம் வலி. வலி பொறுக்க முடியாமல், அது விஷத்தை கக்கியது. வாசுகியின் விஷம் என்றால் சும்மாவா? 


யாராலும் தாங்க முடியவில்லை. எல்லோரும் சிவனிடம் ஓடினார்கள். அவர் அதை எடுத்து விழுங்கினார். அம்பாள் அதை அவருடைய தொண்டைக் குழியில் நிறுத்தி விட்டாள். 


அமுதம் வந்தது. யாருக்கு எவ்வளவு என்ற சண்டை ஆரம்பம் ஆனது. 


அப்போது திருமால் மோகினி வடிவம் கொண்டு வந்து, ஆடிப் பாடி அந்த அமுதத்தை எல்லாம் தேவர்களுக்கே கொடுத்து விட்டார். 


அது புராணக் கதை. எல்லோருக்கும் தெரிந்த கதை. 


அப்படி அமுதம் கொடுத்த இடம் மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் என்ற இடம். 


திரு மோகனி ஊரு, திரு மோகன ஊர், திரு மொமொகனுர் , திருமோகூர் என்று ஆகி மருவி விட்டது. 


சின்ன கிராமம். மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் இருக்கிறது. 


இந்தத் தலத்துக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்து இருக்கிறார். 


பத்துப் பாடல்கள். 


அத்தனையும் தேன். கற்கண்டு. 


பாடலை அனுபவிக்க வேண்டும் என்றால் நீங்கள் காலத்தில் பின்நோக்கிப் போக வேண்டும். 


அது ஒரு சின்ன கிராமம். அந்தக் காலம். மின்சாரம், பெட்ரோல், தொழிற்சாலை இல்லாத காலம். எங்கும் இயற்கை. வயல்கள், குளம், குட்டை, ஆறு, நீர் நிலைகள். எங்கும் பச்சை பசேல் என்று இருக்கும் கிராமம். 


அங்குள்ள நீர் நிலைகளில் தாமரை மலர்கள் பூத்து நிறைந்து இருக்கின்றன. ஊரைச் சுற்றி பசுமையான வயல்கள். குளிர்ச்சி. அந்த வயல்களைச் சூழ்ந்து குளங்கள். அதில் சிவந்த தாமரை மலர்கள். 


பச்சை வயல். நடு நடுவே சிலு சிலுவென்ற நீர். சுற்றி சிவந்த தாமரை நிறைந்த குளங்கள். 


கற்பனையில் பார்க்க வேண்டும். 


ஊருக்குள் நுழைந்து பெருமாளை சேவிக்கிறார் நம்மாழ்வார். 


நான்கு தோள்கள், சுருள் சுருளாக முடி, தாமரை போன்ற கண்கள், அழகான உதடுகள்...


கண்ணீர் மல்குகிறது. இதை விட வேறு என்ன வேண்டும் என்று உருகுகிறார். 


பாடல் 


தாள தாமரைத் தடமணி வயல் திருமோகூர்

நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்

தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்

காள மேகத்தை யன் றிமற் றொன்றிலம் கதியே. (3891)


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_31.html


(Pl click the above link to continue reading)



தாள = தாள் என்றால் நார், தண்டு. தண்டு உள்ள 


தாமரைத் = தாமரை மலர்கள் 


தடமணி = அந்த தாமரை மலர்களை அணிகலனாக அணிந்த 


வயல் = வயல்கள் நிறைந்த 


 திருமோகூர் = திருமோகூர் 


நாளும் மேவி  = தினம் தோறும் சென்று 


நன் கமர்ந்து  = நன்கு அமர்ந்து 


நின் ற = நின்ற 


அசுரரைத் தகர்க்கும் = அசுரர்களை வதைக்கும் 


தோளும் நான்குடைச் = நான்கு தோள்கள் உடைய 


 சுரிகுழல் = சுருட்டை முடி 


கமலக்கண் = தாமரை போன்ற கண்கள் 


 கனிவாய் = சிவந்த அதரம் 


காள மேகத்தை யன் றி  = அந்தக் கோவிலில் உள்ள காளமேகப் பெருமாளைத் தவிர 


மற் றொன்றிலம் = வேறு ஒன்றும் இல்லை 


கதியே. = வழியே 


இந்தா இருக்கு மதுரை. ஒரு எட்டு எடுத்து வைத்தால் போய் வரலாம். இப்ப தான் கொரோனா எல்லாம் இல்லையே. போய்டு வாங்க. 


இன்னும் ஒன்பது பாசுரங்கள் இருக்கின்றன. 



Wednesday, March 30, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - தகுதி

திருக்குறள் - நடுவு நிலைமை - தகுதி 


செய்நன்றி அறிதலின் பின் நடுவு நிலைமை என்ற அதிகாரத்தை வைக்கிறார். அது ஏன் என்று முந்தைய ப்ளாகில் சிந்தித்தோம். 


நடுவு நிலையில் நிற்றல் என்ற ஒரு அறத்தை கடைபிடித்தால் போதும். மற்றதெல்லாம் தானாகவே வரும் என்கிறார் வள்ளுவர். 


அது எப்படி வரும் ?


முதலில் குறளைப் பார்ப்போம்.


பாடல் 


 தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_30.html


(pl click the above link to continue reading)


தகுதி = தகுதி 


எனஒன்று நன்றே = என்ற ஒன்று நன்று 


பகுதியால் = பகுதியால் 


பாற்பட்டு = அதன் பால் 


 ஒழுகப் பெறின் = ஒழுகப் பெறின் 


எதாவது புரிகிறதா? ஒன்றும் புரியாது. 


பரிமேலழகர் உரை இல்லை என்றால் இதை எல்லாம் புரிந்து கொள்ளவே முடியாது. 


"தகுதி" என்றால் இங்கே நடுவு நிலைமையில் நிற்கும் தகுதி என்கிறார். அது எப்படி சொல்ல முடியும்? தகுதி என்றால் நடுவு நிலைமை என்று எங்கே சொல்லி இருக்கிறது என்று கேட்டால் எங்கேயும் சொல்லவில்லை. இந்த அதிகாரம் நடுவு நிலைமை என்ற அதிகாரம், எனவே இங்கே தகுதி என்பது நடுவு நிலையில் நிற்கும் தகுதி என்று கொள்கிறார். 


அடுத்து, 


"என ஒன்று நன்றே" என்பதை சொற்களை மாற்றிப் போட்டு பொருள் கொள்கிறார். "ஒன்று நன்றே" என்பதை "நன்றே ஒன்று" என்று கொள்கிறார். அதாவது, அது ஒன்றுதான் நல்லது, அல்லது உயர்ந்தது அல்லது சிறந்தது என்று கொள்ள வேண்டும் என்கிறார். 


அடுத்து, 


"பாற்பட்டு" என்றால் அதன் பால் ஒழுகி என்று பொருள். எதன் பால்?  உறவு, பகை, நொதுமல் என்ற மூன்றின் தன்மை அறிந்து அதன் பால் ஒழுகுதல் என்கிறார்.


"ஒழுகப் பெறின்" என்றால் அப்படி அந்த மூவருள்ளும் நடுவு நிலைமையாக இருக்க முடியுமானால் என்று அர்த்தம். 


பெறின் என்றால் அது மிகக் கடினம் என்று கொள்ள வேண்டும். 


"நல்லா படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம்" என்றால் என்ன அர்த்தம்? படிப்பது கடினம் என்று பொருள். 


செஞ்சால் நல்லது என்றால் செய்வது கடினம் என்று பொருள். 


"நடுவு நிலைமை என்ற ஒரு அறமே சிறந்தது, அது நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்று பகுதியுள் அதற்கு ஏற்ப நடக்க முடியுமானால்" 


என்று விரியும். 


அது இருக்கட்டும், நடுவு நிலைமை எப்படி சிறந்த அறமாகும்?

 

ஒருவன் நடுவு நிலைமையில் இருக்கிறான் என்றால், அவனுக்கு எது சரி, எது தவறு என்று தெரிந்திருக்க வேண்டும். 


அடுத்ததாக, உறவு, நட்பு, பகை என்பவை எல்லாம் தாண்டி எது சரியோ அதன் படி நிற்கும் மன உறுதி இருக்கும் அவனிடம். 


மூன்றாவதாக, அப்படி சரி தவறு தெரிந்து, சரியான பாதையில் செல்லும் மன உறுதி உள்ள ஒருவன் தன் வாழ்விலும் சரியான ஒன்றையே தேர்ந்து எடுத்து அதன் பால் செல்வான் அல்லவா? 


எனவே, நடுவு நிலைமை என்பது சிறந்த அறம் என்று தெரியும் என்கிறார். 


சந்தேகம் இருந்தால் அடுத்த ஒரு வாரத்துக்கு இதை கடைப்பிடித்து பாருங்கள். எவ்வளவு மாரம் உங்களில் வருகிறது என்று தெரியும். 




Tuesday, March 29, 2022

நளவெண்பா - கடவுளை எங்கே காணலாம் ?

நளவெண்பா -  கடவுளை எங்கே காணலாம் ?


முந்தைய ப்ளாகில் திருமாலை எங்கு காணலாம் என்று புகழேந்திப் புலவர் கூறினார். 


அதாவது,


மூலப் பழமறைக்கு முன்னேயும் காணலாம்

காலிக்குப் பின்னேயும் காணலாம் - மால்யானை

முந்தருளும் வேத முதலே எனஅழைப்ப

வந்தருளும் செந்தா மரை.


பழமையான வேதங்களுக்கு முன்னேயும் காணலாம். ஆநிரைகளுக்கு பின்னேயும் காணலாம், யாரைக் காணலாம் என்றால், "ஆதி மூலமே" என்று அலறிய யானைக்கு அன்று அருளிய திருவடிகளை என்றார். 


சரி, திருமாலை அங்கு காணலாம், சிவ பெருமானை எங்கு காணலாம் ?


அடுத்து சொல்கிறார், 


"நெறிகளின் உறைவிடமாக உள்ள, கையில் மானை ஏந்திய சிவனை எங்கு காணலாம் என்றால், திருநீறு அணிந்த அடியவர்களின் உள்ளத்தில்"


என்கிறார். 


பாடல் 


போதுவார் நீறணிந்து பொய்யாத ஐந்தெழுத்தை

ஓதுவார் உள்ளம் எனஉரைப்பார் - நீதியார்

பெம்மான் அமரர் பெருமான் ஒருமான்கை

அம்மான்நின் றாடும் அரங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_29.html


(Pl click the above link to continue reading)



போதுவார் = எந்நேரமும் 


நீறணிந்து = திருநீற்றை தரித்து 


பொய்யாத ஐந்தெழுத்தை = பொய் இல்லாத 'நமச்சிவாய' என்ற ஐந்து எழுத்தை 


ஓதுவார் = தினம் பாராயணம் செய்வார் 


உள்ளம் எனஉரைப்பார்  = உள்ளத்தில் என்று சொல்லுவார்கள் 


நீதியார் = நெறிமுறைகள் நிறைந்த 


பெம்மான் = பெம்மான் 


அமரர் பெருமான் = தேவர்களின் தலைவன் 


ஒருமான்கை = ஒரு மானைக் கையில் கொண்ட 


அம்மான் = அந்த சிவன் 


நின் றாடும் அரங்கு. = நின்று ஆடும் அரங்கு 


கோவிலுக்கு எல்லாம் போக வேண்டாம். திருமாலும், சிவனும் கோவிலில் இல்லை என்கிறார். 


நாம் எங்கே கேட்கப் போகிறோம். அவர் பாட்டுக்கு சொல்லிவிட்டுப் போகட்டும். 




Monday, March 28, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - முன்னுரை

திருக்குறள் - நடுவு நிலைமை - முன்னுரை 


கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறத்தல், இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல், செய்நன்றி அறிதல் வரை சிந்தித்தோம்.


வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் இனியவை கூறினால் அவர்கள் நம்மிடம் அன்போடு இருப்பார்கள். நமக்கு உதவிகள் செய்வார்கள். அந்த உதவிகளை மறக்கக் கூடாது என்பதற்காக செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தை வைத்தார். 


அடுத்து என்ன?


நமக்கு பல நட்பும், சுற்றமும் இருக்கும். அவர்கள் செய்த நன்றியை மறக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்காமல் இருக்கக் கூடாது. எப்போதும் நீதியின் பால், அறத்தின் பால் நிற்க வேண்டும். வேண்டியவன், வேண்டாதவன், நமக்கு உதவி செய்தவன் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. எப்போதும் நடுவு நிலைமையாக இருக்க வேண்டும். 


நடுவு நிலைமை என்ன பெரிய அறமா? அது நீதிபதிகளுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் எல்லோருக்கும் அது தேவையா என்ற கேள்வி வரும். 


சிந்திப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_28.html


(pl click the above link to continue reading)



ஒரு வீட்டில் பெற்றோர் மற்றும் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பிள்ளைக்கு நல்ல சோறு, துணிமணி, தின்பண்டம் என்று கொடுக்கிறார்கள். மற்ற பிள்ளைகளுக்கு அவ்வாறு கொடுப்பதில்லை என்றால் அது நடவு நிலைமை பிறந்ழ்த ஒன்றாகத்தான் இருக்கும். 


அந்தக் கொடுமைகள் நமது நாட்டில் நிகழ்ந்து இருக்கிறது.  ஆண் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை எல்லாம் இருக்கும். பெண் பிள்ளைகளுக்கு சரியான உணவு கூட கொடுப்பதில்லை. நடுவு நிலைமை தவறிய குற்றம் அது. 


ஒரு நீதிபதி தன்முன் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு வேண்டியவர் என்று அவருக்கு சாதமாக தீர்ப்பு சொல்லக் கூடாது. அது நடுவு நிலைமை பிறழ்ந்த குற்றம் 


மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களில் ஒரு சாராருக்கு நன்மையும், இன்னொரு சாராருக்கு தீமையும் செய்யுமானால், அதுவும் நடுவு நிலை பிறழ்ந்த குற்றமே. 


ஒரு வீட்டில், உறுப்பினர்களுக்கு இடையே வேறுபாடு வரலாம். வீட்டுக்கு பெரியவர், மூத்தவர் என்று ஒருவர் இருப்பார். அவர் நடுவு நிலைமை மாறாமல் தீர்புச் சொன்னால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 


அம்மாவுக்கும், மனைவிக்கும் நடுவில் கருத்து வேறுபாடு இருந்தால் அந்தக் கணவன்/மகன் நடுவு நிலை காக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தில் குழப்பம் தான். 



ஊருக்கும் அப்படித்தான். நாட்டாமை, பஞ்சாயத்து தலைவர் என்று ஒருவர் இருந்தால், அவர் நடு நிலை மாறாமல் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். அவர் தவறினால், அந்த சமுதாயம் அழியும். 


இன்றும், நீதிபதிகளுக்கு ஏன் அவ்வளவு மரியாதை? நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தால் கூட நீதிக்கு கட்டுப் பட்டுதான் ஆக வேண்டும். 


ஆண்டியையும் அரசனையும் ஒரு தராசில் வைத்து நிருப்பது நீதி பரிபாலனம். 


நடுவு நிலை தவறும் இடத்தில் எல்லாம் அழிவு ஆரம்பமாகும். 


உலக அளவிலும் சரி. வீட்டு அளவிலும் சரி. நிர்வாகத்திலும் சரி. அதுதான் விதி. 


நடுவு நிலைமை என்பது பெரிய விஷயம். நாம் அதை சரியாக புரிந்து கொள்வதில்லை. பெரிதாக நினைப்பது இல்லை. 


அந்த நடுவு நிலைமையை பற்றிக் கூறுவது இந்த அதிகாரம். வேலை மெனகெட்டு ஒரு அதிகாரம் செய்கிறார் என்றால் அது எவ்வளவுவ் பெரிய விடயம் என்று புரிந்து கொள்ளளலாம். 


தொடருவோமா?





Sunday, March 27, 2022

சிவ ஞான போதம் - இரண்டாம் சூத்திரம் - ஆணை வழி

 சிவ ஞான போதம் - இரண்டாம் சூத்திரம் - ஆணை வழி 


இந்த பிறத்தல், இருத்தல், அழிதல் என்ற முத்தொழில் இருக்கிறதே, அதை யார் செய்கிறார்? 


பிரம்மா, விட்டுணு, உருத்திரன் என்று நாம் பெயர் வைத்து இருக்கிறோம். கடவுளுக்கு இது தான் வேலையா? ஏன் இதை அவர் செய்ய வேண்டும்? பேசாமல் இருந்து விடலாம்தானே? 


வேலை மெனக்கெட்டு தோற்றுவிப்பானேன், பின் அதை காப்பானேன், பின் அழிப்பானேன்? இது ஒரு வெட்டி வேலையாக தெரியவில்லையா?  


ஒரு குயவன் அவனே குடம் செய்து, அதை பாதுகாத்து பின் தூக்கிப் போட்டு உடைபானா? அது அறிவுள்ளவன் செய்யும் வேலையா? எந்த பெற்றோராவது தங்கள் பிள்ளைகளை கொல்வார்களா? பின் ஆண்டவன் மட்டும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?


அது மட்டும் அல்ல, காப்பதற்கு ஒருவர், அழிப்பதற்கு ஒருவர் என்றால் அவர்களுக்குள் சண்டை வராதா?  இவர் அழிக்க வேண்டும் என்பார், அவர் காக்க வேண்டும் என்பார். யார் வெல்வார்கள் இதில்? 


இதெல்லாம் ஒரு மாயை. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_27.html


(Pl click the above link to continue reading)


அப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. தெரியவில்லை, புரியவில்லை என்றால் மாயை என்று சொல்லி தப்பித்து கொள்ளக் கூடாது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. 


நாம் தெருவில் வண்டி ஓட்டிக் கொண்டு போகிறோம். காவல் அதிகாரி நம்மை நிறுத்தி "ஏன் வண்டியை வேகமாய் ஒட்டினாய்? அபராதம் கட்டு "என்கிறார். "நீ யார் அதைக் கேட்க?  என் வண்டி, நான் வரி கட்டுகிறேன், எப்படி வேண்டுமானாலும் ஓட்டுவேன்" என்று சொன்னால் என்ன சொல்வார்?


நான் சாலை விதிகளை மக்கள் ஒழுங்காக கடை பிடிக்க நியமிக்கப் பட்டவன் என்பார். 


உன்னை யார் நியமித்தது என்றால் , உயர் அதிகாரியின் பெயரைச் சொல்வார்.


அவரைக் கேட்டால் அவருக்கு மேலே உள்ள ஒருவரைச் சொல்வார். இப்படியே போனால், முதல் மந்திரி, குடியரசு தலைவர், பிரதம மந்திரி என்று போகும். அவர்களை கேட்டால் "இல்லையே நான் இவரை நியமிக்கவில்லையே" என்பார்கள். 


பின் யார் தான் நியமித்தது என்றால் "இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்".  அதன் கீழ் உண்டாகிய பல சட்டங்கள், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த தோற்றுவிக்கப்பட அமைப்புகள், பாராளுமன்றம், சட்ட சபை, நீதி மன்றம்,  காவல் துறை எல்லாம் அந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து வருவது. 


அது ஒரு புத்தகம் அவ்வளவு தான். 


ஆனால், அந்த ஒரு புத்தகம் ஒரு நாட்டை நிர்வாகம் பண்ணுகிறது.


அது போல, இறைவனின் ஆணையில், சந்நிதியில் இந்த பிறப்பு, இறப்பு, இருப்பு என்பதெல்லாம் நிகழ்கின்றன. 


அவர் நேரடியாக ஒன்றும் செய்ய மாட்டார். ஆனால் செயல் நிகழும். 


இன்னொரு உதாரணம் பார்ப்போம். 


காலையில் சூரியன் எழுகிறது. 


வெளிச்சம் வருகிறது. சூடு வருகிறது. நீர் ஆவியாகிறது. செடி கொடிகள் வளர்கின்றன. புழு பூச்சிகள் சில இறக்கின்றன.


சூரியனுக்கு இதெல்லாம் வேலையா? இன்னைக்கு அந்த குளத்தை வற்றச் செய்ய வேண்டும், இந்த செடியை வளர்க்க வேண்டும், இந்த பூச்சியை கொல்ல வேண்டும் என்று அது நினைத்து வருவது இல்லை. ஆனால், அதன் சந்நிதியில் இவை நிகழ்கின்றன. 


இன்னொரு உதாரணம் பார்ப்போம்.


ஒரு அலுவலகம். அங்கே வேலை பார்ப்பவர்கள் சும்மா அரட்டை அடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலாளி வருகிறார். எல்லோரும் கப் சிப் என்று அவரவர் இடத்துக்குச் சென்று தங்கள் வேலையை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். முதலாளி ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவருக்கு அந்த வேலையெல்லாம் நடப்பதே கூடத் தெரியாது. ஆனால், அவர் முன்னிலையில் அவை ஒழுங்காக நடக்கின்றன. 


சூரியன் செய்வது, பிரதம மந்திரி செய்வது, முதலாளி செய்வது என்பதெல்லாம் ஒரு மாயை. ஒரு பிரமை. ஆனால் அங்கே நிகழ்கிறது அல்லவா?


அது போல் இந்த உலகம் என்று அடுத்த சூத்திரம் சொல்ல வருகிறது. 


அது என்ன என்று நாளை பார்ப்போம்.


(பின் குறிப்பு - சற்று நீண்டு விடுகிறது. சுருக்கிச் சொன்னால் புரியாமல் போய் விடலாம். நீட்டிச் சொன்னால் ஒரு அலுப்பு வந்து விடலாம். எனவே முடிந்த வரை பிரித்து பிரித்து பொருள் சொல்கிறேன். 


உங்கள் எண்ணம் என்ன?)


Thursday, March 24, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - தொகுப்புரை

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - தொகுப்புரை 


இதுவரை செய்நன்றி அறிதல் பற்றி சிந்தித்தோம்.


என்ன படித்தோம்?  எவ்வளவு நினைவில் நிற்கிறது?  என்ன சொல் வந்தார்? நமக்கு என்ன புரிந்தது? 


இவற்றை ஒரு தொகுப்பு உரையாக பார்ப்போம். 


திருக்குறள் மொத்தமுமே ஒரு அறநூல். அறத்தை இரண்டாகப் பிரித்துக் கொள்கிறார். 


இல்லறம், துறவறம் என்று. 


முதலில் இல்லறத்தை எடுத்துக் கொள்கிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_24.html



(Please click the above link to continue reading)


அதில், முதலில் உலகம் தோன்றக் காரணமான இறைவனை வாழ்த்தி கடவுள் வாழ்த்துப் பாடினார். 


பின், இல்லறமும், துறவறமும் இனிது நடக்க வேண்டும் என்றால் மழை வேண்டும். மழை இல்லை என்றால் சிறப்பொடு, பூசனை செல்லாது என்பதால் அனைத்து அறங்களுக்கும் ஆதாரமான மழை பற்றி வான் சிறப்பு கூறினார். 


பின், அறங்கள் நிலைக்க வேண்டும் என்றால் அதை யாராவது உள்ளபடி எடுத்துச் சொல்ல வேண்டும். அவ்வாறான முனிவர்களை சிறப்பித்து "நீத்தார் பெருமை" பற்றிக் கூறினார். 


பின், அந்த நீத்தார் கூறும் அறத்தின் வலிமை பற்றி "அறம் வலியுறுத்தல்" என்று கூறினார். அறம் என்பது இம்மை, மறுமை, வீடு பேறு என்ற மூன்றிற்கும் வழி கோலும் என்பதால் அதன் சிறப்பு பற்றிக் கூறினார். 


பின்,  இரண்டு அறங்களில் இல்லறம் முதலில் வருவதால், அதன் சிறப்பு பற்றி "இல் வாழ்க்கை" என்ற அதிகாரத்தில் கூறினார். 


பின், இல்லறம் நடத்த மனைவியின் துணை இன்றி முடியாது என்பதால், "வாழ்க்கை துணை நலம்" என்று மனைவியின் பெருமை பற்றிக் கூறினார். 


பின், கணவனும் மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்லறத்தின் பலனாக அவர்கள் பெறும் பிள்ளைகளின் சிறப்பு கூற "புதல்வரைப் பெறுதல்" என்ற அதிகாரம் கூறினார். 


பின், கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற இல்லறத்தின் அடி நாதமான அன்பு பற்றி  "அன்புடைமை" பற்றிக் கூறினார். 


பின், இல்லறம் என்பது கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் மட்டும் அல்ல. அந்த அன்பு வீடு தாண்டியும் விரியும் , விரிய வேண்டும் என்பதால் என்பதால் "விருந்தோம்பல்" பற்றிக் கூறினார். 


பின், விருந்தோம்பலை சிறப்பாகச் செய்ய இனிய சொற்கள் அவசியம் என்பதால் "இனியவை கூறல்" என்ற அதிகாரம் செய்தார். 


பின், இனியவை கூறி, உறவினர் தம்பால் வந்து தமக்கு ஒரு உதவி செய்தால், அதை மறக்கக் கூடாது என்பதைச் சொல்ல "செய்நன்றி அறிதல்" என்ற அதிகாரம் செய்தார். 


அந்த செய்நன்றஅறிதல் என்ற அதிகாரத்தில் ,


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.


காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது


என்ற முதல் மூன்று குறள்களில் செய்யாமல் செய்த உதவி, காலத்தால் செய்த உதவி, பயன் கருதாமல் செய்த உதவி என்று உதவியின் சிறப்பு பற்றிக் கூறினார். 


அடுத்தது, 


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்.


உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.


என்ற அடுத்த இரண்டு குறள்களில் மேலே சொன்ன மூன்று மட்டும் அல்ல, உதவியின் தரம் அதைப் பெற்றுக் கொண்டவரைப் பொருத்தும் சிறக்கும் என்று கூறினார். 


அடுத்தது, 


மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.


செய்நன்றி அறிதலின் இம்மை, மறுமை பலன்கள் பற்றிக் கூறினார்.


 அடுத்தது, 


எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு.


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.


என்ற இரண்டு குறள்களில் நன்றி மறப்பதும், மறவாமை பற்றியும் கூறினார். 


அடுத்தது, 


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்.



எப்படி நன்றியை மறக்கக் கூடாதோ, அதே போல் நல்லது அல்லாததை மறப்பது பற்றிக் கூறினார். 



அடுத்த கடைசிக் குறளில், 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு.


நன்றி கொன்ற பாவம் பற்றி கூறி முடிக்கிறார். 


இந்த தொகுப்பு இது வரை படித்ததை ஒரு முறை நினைவு படுத்தும் முயற்சி. 


உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.




Wednesday, March 23, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் 


என்ன முதல் சூத்திரம் இன்னும் முடியவில்லையா என்று கேட்கிறீர்களா? 


எவ்வளவோ இருக்கிறது அதற்குள். 


இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். ரொம்ப போர் அடித்தால் சொல்லுங்கள். நிறுத்திவிட்டு அடுத்த சூத்திரத்துக்கு போவோம். 


இந்த உலகம் எப்படி படைக்கப்பட்டது, யார் படைத்தார்கள், ஏன் படைக்கப் பட்டது அல்லது படைக்கப் படவே இல்லை, அதுவே அப்படித்தான் இருந்ததா என்றெல்லாம் நம் முன்னவர்கள் மிக மிக ஆழமாக யோசித்து இருக்கிறார்கள். 


பல்வேறு கொள்கைகள், சிந்தாந்தங்கள், வாதங்கள் எல்லாம் இருக்கின்றன.  அவற்றின் சாரம் என்ன என்று மட்டும் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_23.html


(click the above link to continue reading)


முதல் வாதம். மண்ணில் இருந்து பானை வருகிறது. பானை தானே வருமா? யாரோ ஒருவர் அந்த மண்ணை எடுத்து குழைத்து, சக்கரத்தில் இட்டு சுழற்றி, அழகான பானை செய்ய வேண்டும் அல்லவா?  பானை செய்ய மண் வேண்டும். மண் இல்லாமல் குயவன் என்ன முயன்றாலும் பானை செய்ய முடியாது. வெறும் மண் மட்டும் பானையாக முடியாது.  ஒரு பொருள் உண்டாவதற்கு இரண்டு காரணம் வேண்டும் என்று சொல்கிறார்கள். 


முதலாவது உபாதான கரணம். மற்றொன்று நிமித்த காரணம். 


பானை உண்டாவதற்கு மண் உபாதான காரணம். குயவன் நிமித்த காரணம். இரண்டும் இல்லாமல் பானை உண்டாகாது. 


அது போல, இந்த உலகம் உண்டாக அணுக்கள் அல்லது அடிப்படையான பொருள் ஒன்று வேண்டும். அதைக் கொண்டு இந்த உலகை ஒருவர் (குயவன் மாதிரி) செய்ய வேண்டும்.  


இதற்கு ஆரம்ப வாதம் என்று பெயர். இதைஅசத் காரிய வாதம் என்றும் சொல்லுவார்கள். 


சத் என்றால் பொருள். அசத் என்றால் பொருள் இல்லாதது. மண்ணுக்குள் பானை இல்லை. இல்லாத பானையை மண்ணில் இருந்து குயவனார் கொண்டு வருவதைப் போல இல்லாத உலகை, இறைவன் அணுக்களைக் கொண்டு செய்தான் என்று ஒரு வாதம் இருக்கிறது. 


இது சரியல்ல என்று மற்றொரு வாதம் இருக்கிறது. 


அது என்ன என்பதை நாளை பார்ப்போம்.

Tuesday, March 22, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - உய்வில்லை

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - உய்வில்லை 


செய்நன்றி அறிதலின் முக்கியம், அதன் இம்மை மறுமை பயன்கள், அதை எப்படிச் செய்வது என்றெல்லாம் சொல்லித் தந்தார்.


இனி, கடைசிக் குறள்.


இந்த செய்நன்றி மறந்தால் என்ன ஆகும். எனக்கு ஒருவர் செய்த நன்றியை மறந்தால் அது ஒண்ணும் சட்டப்படி குற்றம் இல்லையே? அதற்காக தண்டனை ஒன்றும் தர முடியாதே. அப்படி என்றால் எதற்கு இவ்வளவு துன்பப் படவேண்டும்? 


ஏதோ அவரால முடிந்தது செய்தார். முடியலேனா செய்யவா போறார் என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போக வேண்டியது தானே? 


அப்படி அல்ல.


எந்த பாவத்தைச் செய்தாலும் அதற்கு ஒரு கழுவாய், பிரயாசித்தம் உண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு எந்தக் காலத்திலும் பிர்யாசித்தமே கிடையாது என்கிறது வள்ளுவம். 



பாடல் 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_22.html


(Please click the above link to continue reading)



எந்நன்றி  = எந்தப் பெரிய அறத்தை 


கொன்றார்க்கும் = சிதைதவர்களுக்கும் 


உய்வுண்டாம் = பிரயாசித்தம் உண்டு 


உய்வில்லை = தப்பிக்க வழியே இல்லை 


செய்ந்நன்றி = ஒருவர் பெற்ற உதவியை 


கொன்ற மகற்கு = சிதைத்தவனுக்கு 


இதில் பரிமேலழகர் மிக நுட்பமாக உரை செய்கிறார். 


"எந்நன்றி" என்ற சொல்லுக்கு பெரிய அறங்கள் என்று சொல்கிறார். நன்றி என்ற சொல்லுக்கு அறம் என்று பொருள் கொள்கிறார். எவ்வளவு பெரிய அறம் பிழைத்த காரியங்களை செய்தாலும், அதாவது எவ்வளவு பெரிய பாவத்தை செய்தாலும் என்று பொருள் சொல்கிறார். 


"செய் நன்றி கொன்ற மகற்கு" என்ற இடத்தில் ஒருவன் செய்த நன்றியை சிதைத்த மகனுக்கு என்கிறார். மறத்தல் என்ற பொருளில் கூறவில்லை. 



மறப்பது பெரிய குற்றம் இல்லை. ஆனால், நமக்கு உதவி செய்தவனுக்கு தீமை செய்யலாமா? அது பெரிய குற்றம் இல்லையா? யார் நமக்கு உதவி செய்தார்கள், யார் செய்யவில்லை என்று எப்படித் தெரியும்? அவர்கள் செய்த உதவியை மறவாமல் மனதில் நிறுத்தி வைத்து இருந்தால் அல்லவா அவர்களுக்கு தீமை செய்யாமல் இருக்க முடியும்? எனவே, செய் நன்றி மறக்கக் கூடாது. 


மற்றவர்களுக்கு தீமை செய்யலாமா என்றால் அதுவும் கூடாது. ஒருவேளை செய்து விட்டால், அதற்கு ஒரு பிரயாசித்தம் உண்டு. உதவி செய்தவனுக்கு தீமை செய்தால் பிரயாசித்தமே கிடையாது. 


ஏன் அப்படிச் சொன்னார்?


ஒருவற்கு ஒருவர் செய்த நன்றியை மறந்து செயல்படத் தொடங்கினால், சமுதாயமே ஒரு காட்டு மிராண்டி கும்பலாகி விடும். ஒரு சமுதாயப் பிடிப்பு இருக்காது. நட்பு, உறவு என்பதெல்லாம் இல்லாமல் போகும். மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனையே அந்த சமுதாயத்தில் இருக்காது. வாழ்கை நரகமாகி விடும். 


மாறாக, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, அப்படி உதவி பெற்றுக் கொண்டவர் அதை வாழ்நாள் எல்லாம் நினைவில் நிறுத்தி நன்றி உடையவராக இருந்தால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் ? அது ஒரு உன்னத சமுதாயமாக இருக்கும் அல்லவா?


எனவே செய் நன்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது. 


Monday, March 21, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம்


உலகம் மூவகை பொருள்களால் ஆனது (அவன், அவள், அது) என்று பார்த்தோம். 


அந்த மூன்றும் மூன்று தொழில்களைச் செய்கின்றன என்று பார்த்தோம் (தோன்றுதல், இருந்தல், அழிதல்). 


இப்போது சூத்திரத்துக்குள் நுழைவோம். 


பாடல் 


அவன் அவள் அதுஎனும் அவைமூ வினைமையின்

தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்

அந்தம் ஆதி என்மனார் புலவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_21.html


(pl click the above link to continue reading)



அவன் அவள் அது  = அவன், அவள், அது 


எனும் அவை  = என்ற அந்த மூன்றும் 


மூ வினைமையின் = பிறத்தல், இருத்தல், அழிதல் என்ற மூன்று வினைகளில் இருக்கின்றன 


தோற்றிய = எப்படி தோற்றிவிக்கப்பட்டதோ 


திதியே = நிலைத்து நின்று 


ஒடுங்கி = பின் மறைந்து 


மலத்து உளதாம் = முதிவர்டையாத காரணத்தால் 


அந்தம் = முடிவே 


 ஆதி = தொடக்கம் 


என்மனார் புலவர் = என்று அறிஞர்கள் சொல்லுவார்கள் 


நாம் பிறந்தோம். அதில் சந்தேகம் இல்லை. 


நாமே பிறந்தோமா அல்லது ஒரு பெற்றோர் மூலம் பிறந்தோமா? 


ஒரு தாயின் வயிற்றில் இருந்து பிறக்கிறோம். எதுவும் தானே தோன்றி விட முடியாது. 


ஒன்று தோன்றுகிறது என்றால், அது தோன்ற மற்றொன்று வேண்டும். 


இந்த உலகம் தோன்றி இருக்கிறது என்றால், அதை தோற்றுவித்த ஒருவன் வேண்டும். இந்த உலகம் தன்னைத் தானே தோற்றுவித்துக் கொள்ள முடியாது. 


"தோற்றிய திதியே" என்கிறது சிவ ஞான போதம். 


தோன்றிய அல்ல, தோற்றிய. 


இது பெரிய தத்துவ சிக்கல். 


ஒரு பானை இருக்கிறது என்றால், அதை செய்த குயவன் இருக்க வேண்டும் என்று நாம் அறிந்து கொள்கிறோம். 


பானை என்றால் குயவன், குயவன் என்றால் அவனுடைய பெற்றோர், ப் பின் அவர்களின் பெற்றோர் என்று போய்க் கொண்டே இருக்கும். 


எல்லாவற்றிற்கும் ஒரு மூல காரணம் இருக்க வேண்டுமே என்கிறார்.


அது தான் கடவுள் என்கிறது நம் பக்தி இலக்கியங்கள். 


அதற்கு எதிர் வாதம் செய்பவர்கள், எல்லாவற்றிற்கும் ஒரு கர்த்தா வேண்டும் என்றால், இறைவனைப் படைத்தவர் யார் என்ற கேள்வி வரும். 


அது வந்து, அப்படி அல்ல...இறைவன் தானே தோன்றினான் என்றால் பின் உலகமும் ஏன் தானே தோன்றி இருக்க முடியாது என்ற கேள்வி வரும். 


இந்தவாதத்திற்கு முடிவு இல்லை. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சரி, தோற்றிவித்தவன் ஒருவன் வேண்டும் என்றே வைத்துக் கொள்வோம்.


எதில் இருந்து தோற்றி வைத்தான்? 


பானை செய்ய குயவன் வேண்டும். சரி. மண்ணும் வேண்டுமே. 


இந்த உலகை தோற்றுவிக்க மூலப் பொருள் வேண்டுமே (raw material) 


ஒன்றும் இல்லாத ஒன்றில் இருந்து எதுவும் தோன்ற முடியாது. 


எனவே எதில் இருந்தோ இவை தோன்றி இருக்கின்றன.


சரி, அதையும் ஏற்றுக் கொள்வோம். 


இறந்த பின், இவை எங்கே போகின்றன? எங்காவது போக வேண்டுமே. 


உள்ளது மறையாது, இல்லாதது தோன்றாது என்ற விதிப் படி இந்த உலகம் ஏதோ ஒன்றில் இருந்து தொடங்கி ஏதோ ஒன்றில் முடிகிறது. 


இந்த தோற்றம், இருத்தல், மறைதல் என்ற மூன்றையும் செய்பவர் யார் என்ற கேள்வி வருகிறது அல்லவா?  


"அந்தம் ஆதி என்மனார் புலவர்"


எது முடிவோ, அதுவே தொடக்கம் என்று புலவர்கள் கூறுவார்கள் என்கிறது சிவ ஞான போதம். 


அது என்ன அர்த்தம்?


உரை எழுதிய பெரியவர்கள் எல்லோரும் கூறுவது என்ன என்றால் "அழிக்கும் கடவுளே எல்லாவற்றிற்கும் காரணம்" என்று கூறுகிறார்கள்.


அதை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியது இல்லை. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சூத்திரம் என்ன சொல்கிறது 


"அந்தம் ஆதி".


எது முடிவோ, அதுவே தொடக்கம். 


இது ஒரு சுழற்ச்சி. மாறி மாறி வரும். 


அப்படி இல்லாமல் தோன்றுவது போலவும், இருப்பது போலவும், இறப்பது போலவும் தனித் தனியாகத் தெரிகிறதே என்றால் அதன் காரணம் "மலதுளாதம்" என்கிறது சூத்திரம். 


மலம் என்றால் குற்றம், மயக்கம், குழப்பம். 


அப்படித் தோன்ற காரணம் நம் அறிவின் குறை. சரியாக பார்காத பிழை என்கிறது சூத்திரம். 


இது இன்னும் விரியும். 




Sunday, March 20, 2022

திருக்குறள் - உள்ளக் கெடும்

திருக்குறள் - உள்ளக் கெடும் 


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது 

அன்றே மறப்பது நன்று 


என்று முந்தைய குறளில் கூறினார். 


சொல்லுவது எளிது. எப்படி முடியும். .


ஒருவர் நமக்கு எவ்வளவோ உதவி செய்து இருக்கலாம். ஆனால், அவர் ஒரு தீங்கு செய்தால் அது தானே நமது உள்ளதில் நிற்கிறது. 


"என்னை அப்படிச் சொல்லி விட்டானே"


"நான்னு தெரிஞ்சும் அப்படிஅவன் செய்யலாமா "


ஒரு துரோகம். ஒரு தவறு. ஒரு சுடு சொல். ஒரு முறை தவறிய நடத்தை அது தானே மனத்தை போட்டு அரிக்கிறது. 


ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு போல், அந்த ஒரு வார்த்தை, செயல் முழுவதுமே கெடுத்து விடுகிறது அல்லவா?


ரொம்ப ஒன்றும் போக வேண்டாம், கோபத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏதோ வார்த்தை வந்து விழுந்து விடுகிறது. எவ்வளவு பெரிய விரிசல் வந்து விடுகிறது. மறக்க முடிகிறதா?


ஆனால் வள்ளுவர் எளிமையாக சொல்லிவிட்டார், "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று. 


எப்படி என்று சொல்ல வேண்டாமா?


அதையும் சொல்லித் தருகிறார் இந்தக் குறளில். 


பாடல் 



 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த

ஒன்றுநன்று உள்ளக் கெடும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_20.html


(Pl click the above link to continue reading)


கொன்றன்ன = கொல்வதற்கு ஒப்பான 


இன்னா செயினும் = தீமையைச் செய்யினும் 


அவர்செய்த = அவர் (அந்த தீமையைச் செய்தவர்) செய்த 


ஒன்று நன்று = நல்லது ஒன்றை 


உள்ளக் கெடும் = நினைக்கக் கெடும். 


நமக்கு ஒருவர் மிகப் பெரிய தீமையை செய்தாலும், அவர் நமக்கு முன் செய்த ஒரு நன்மையை மனதில் நினைக்க இந்த தீமையால் வந்த துன்பம், கெட்ட நினைவுகள் அழிந்து போகும் என்கிறார். 


அது எப்படி முடியும்?


சிந்திப்போம். 


முதலாவது, உலகில் எல்லோருக்கும் மிகப் பிடித்தமான ஒன்று எது என்று கேட்டால் அவர்கள் உயிர் தான் உயர்ந்தது. "உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன்" என்று சொல்லுவதில் என்ன தெரிகிறது. நான் என் உயிரை மிக ஆழமாக நேசிக்கிறேன். அதே போல் உன்னையும் நேசிக்கிறேன் என்பது தானே. 


அந்த உயிருக்கு கேடு விளைவிக்க ஒருவன் நினைத்தால் அவன் மேல் எவ்வளவு கோபம் வரும்? நம்மை கொல்ல வந்தவன் மேல் நமக்கு எவ்வளவு கோபமும், ஆங்காரமும், வெறுப்பும் வரும்? அது தானே அதிக பட்ச கோபமும் வெறுப்பும். 


அப்படிப் பட்ட துன்பம் ஒருவர் செய்தால் கூட. அதாவது எவ்வளவு பெரிய தீமை செய்ய முடியுமோ அதை செய்தால் கூட


இரண்டாவது, "அவர் செய்த ஒன்று நன்று உள்ளக் கெடும்" என்கிறார். அவர் நமக்கு எவ்வளவோ நன்மை செய்து இருக்கலாம். அதில் ஒன்றை நினைத்தால் போதும், எல்லாவற்றையும் நினைக்க வேண்டும் என்று இல்லை, ஒன்று போதும். அதை நினைத்தால் போதும், இந்த உயிரை எடுக்கும் அளவுக்கு செய்த தீமை மறந்து போகும், அல்லது பெரிதாகத் தெரியாது. 


இப்பவும் நமக்கு குழப்பமாக இருக்கும். 


எப்படி முடியும் என்று. 


பரிமேலழகர் இல்லை என்றால் இதெல்லாம் புரியவே புரியாது. நாம் எவ்வளவு சிந்தித்தாலும் அவர் சொன்ன உரை நம் புத்திக்கு எட்டவே எட்டாது. 


அவர் சொல்கிறார், "முன்னால் என்ன சொன்னார் வள்ளுவர்? திணை துணையாகச் செய்தாலும் பனைத் துணையாக கொள்ள வேண்டும் " என்று சொன்னார் அல்லவா? அதன் படி, உனக்கு தீமை செய்த ஒருவர் உனக்கு முன் செய்த ஒரு உதவியை நினை. அதை பனையளவு நினை. எவ்வளவு பெரிய உதவி என்று நினை. அந்த உதவியின் பலனை நினை. அதனால் நீயும் உன் சந்ததியும் பெற்ற, பெறும், பெற இருக்கும் நன்மைகளை நினை. அப்படி நினைத்தால், இந்தத் தீமையின் அளவு சிறிதாகப் போய் விடும். நீ அந்தத் தீமையை எளிதில் மறக்க முடியும் என்கிறார். 


"தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின், அவ்வொன்றுமே அவற்றையெல்லாம் கெடுக்கும் என்பதாம். "


பரிமேலழகர் உரை. 


பொதுவாக மக்கள் என்ன செய்கிறார்கள்?


நன்மையின் அளவை குறைத்து மதிப்பிடுகிறார்கள். தீமையின் அளவை பெரிதாக நினைக்கிறார்கள். அதனால் என்ன ஆகும், எந்நேரமும் மனதில் ஒரு வெறுப்பும், பகைமையுமே நிலவும். 


அன்பு மலராது. உறவு சிறக்காது. மனதில் அமைதி இருக்காது. 


இல்லறம் பாழ் படும். 


அந்த ஒருவர் என்பது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்...பெற்றோர், பிள்ளைகள், உடன் பிறப்பு, நட்பு, சுற்றம், அண்டை அயல், ஆசிரியர் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். 


நல்லதை பெரிதாக நினைக்க, தீமைகள் மறைந்து போகும். 


"இதனால் நன்றல்லது அன்றே மறக்கும் திறம் கூறப்பட்டது" என்கிறார் பரிமேலழகர். 


அதாவது, அன்றே எப்படி மறப்பது என்பதற்கு ஒரு உபாயம், technique கூறப்பட்டது என்கிறார். 


எப்படி என்பதும் சொல்லியாகி விட்டது. 


அதை கடைப் பிடிப்பதும், படிக்காமல் இருப்பதும் நம் பாடு. 





Saturday, March 19, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - தோற்றமும் மறைவும்

 சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - தோற்றமும் மறைவும் 


நமது பக்தி இலக்கியங்கள் எல்லாம் தோற்றம், இருத்தல், மறைதல் என்பது பற்றி பேசுகின்றன. 


பிரம்மா படைப்பு கடவுள், விஷ்ணு காக்கும் கடவுள், உருத்திரன் அழிக்கும் கடவுள் என்று பேசுகின்றன. 


இவை எல்லாம் ஒருவித மயக்கமே.


தோற்றமும், அழிவும், இருத்தலும் வேறு வேறு அல்ல. 


ஒரு பானை செய்கிறோம் என்றால் களிமண் அழியும், பானை உண்டாகும். களிமண்ணே இல்லாமல் பானை உருவாக்க முடியுமா?


தங்கத்தை உருக்கி, நகை செய்கிறோம்.. கட்டியாக இருந்த தங்கம் அழிந்து, ஆபரணமாக உள்ள தங்கம் வெளிப்படுகிறது. இதில் தோற்றம் என்ன, அழிவு என்ன. 


ஒரு அழிவில் ஒரு தோற்றம் உண்டாகிறது. ஒரே சமயத்தில். இன்று அழிவு ஒரு வாரம் கழித்து தோற்றம் என்று இல்லை. அழிவும் தோற்றமும் ஒரு செயல்தான்.


விதை அழிகிறது, செடி முளைக்கிறது. இன்று விதை அழிந்து அடுத்த மாதம் செடி முளைக்கும் என்று அல்ல. 


தோற்றம் தான் அழிவு. அழிவுதான் தோற்றம். ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. 


இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_68.html


(pl click the above link to continue reading)


ஆக்கம், காத்தல், அழிதல் என்பது முத்தொழில் அல்ல. அது ஒரே தொழில்தான். 


ஒரு சக்கரம் போல் சுழன்று கொண்டே இருக்கும். வட்டத்தின் தொடக்கம் எது, முடிவு எது?  தொடங்கிய இடம் தான் முடியும் இடமும். முடியும் இடம் தான் தொடக்கமும். 


அடியும் முடியும் தெரிய முடியாது. சுத்தி சுத்தி வர வேண்டியது தான். 


மும்மூர்த்திகள் என்று சொல்வது ஒரு வசதிக்குத் தான். எல்லாம் ஒரு மூர்த்தி தான். இருப்பது ஒரு வேலைதான். 


நகை செய்யும் ஆசாரி தான் தங்கத்தையும் அழிக்கிறார். 


பெரிய மரத் துண்டு கிடக்கிறது. அதை வெட்டி, நறுக்கி, இழைத்து ஒரு மேஜை செய்கிறார் ஒரு தச்சர்.


மரத்தை வெட்டியது ஒருவர், மேஜையை செய்தவர் இன்னொருவரா? 


நான் உணவு உண்கிறோம். வளர்கிறோம். கல்யாணம் செய்து கொள்கிறோம். பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம். மறைந்து போகிறோம். நம்மை புதைத்து விடுகிறார்கள். நம் உடல் மக்கி, உரமாகி செடி கொடி மரமாகி, உணவாகிறது. 


இது ஒரு சுழற்ச்சி. அவ்வளவுதான். 


இதைத் தான் அறிவியல் Law of conservation of Mass என்கிறது. ஒரு பொருளை உருவாக்கவும் முடியாது. அழிக்கவும் முடியாது. ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறும். அவ்வளவுதான். 


தோன்றுகிறது, இருக்கிறது, அழிகிறது என்று சொல்லுவதெல்லாம ஒரு மயக்கமே. 


மேஜை செய்யும் தச்சரை மரத்தை அழிப்பவர் என்று சொல்லலாமா? சொல்லலாம். அவர் தான் அழித்தார். 


தோட்டக்காரரை விதை அழிப்பவர் என்று சொல்லலாமா? விதையை அப்படியே வைத்துக் கொண்டு தோட்டம் போட முடியாது. விதை அழிய வேண்டும். 


எனவே, இந்த தோற்றம், இருத்தல், அழிவு என்பதெல்லாம் ஒரே செயலின் தொடர் வினைகள் என்று புரிந்து கொள்ள வேண்டும். 




சரி, இதெல்லாம் எதுக்கு? சிவ ஞான போதம் எங்கே என்று கேட்கிறீர்களா?


வருகிறது. இது புரிந்தால் தான் சூத்திரம் புரியும். 


இன்னும் கொஞ்சம் இருக்கிறது. அதையும் பார்த்து விட்டு சூத்திரத்துக்குள் நுழைவோம். 


சரியா?



திருக்குறள் - மறப்பதும், நினைப்பதும் அறம்

 திருக்குறள் - மறப்பதும், நினைப்பதும் அறம் 


ஒருவர் தனக்குச் செய்த உதவியை மறப்பது நல்லது அல்ல. அதே போல், ஒருவர் தனக்கு செய்த தீமையை அன்றே மறந்து விடுவது நல்லது என்கிறார் அடுத்த குறளில். 


ஹ்ம்ம்...நல்லாத்தான் இருக்கு. அனால், இது நடைமுறை சாத்தியமா? நாம் சும்மா இருக்கும் போது நமக்கு ஒருவன் ஒரு தீங்கு செய்கிறான். அதை அப்போதே மறந்து விடுவது நல்லதா? அப்படிச் செய்தால் அவன் நமக்கு மேலும் மேலும் தீங்கு செய்யமாட்டானா? 


அப்புறம் காவல் நிலையம், சட்டம், ஒழுங்கு, நீதி மன்றம், சிறைச் சாலை, தண்டனை எல்லாம் எதுக்கு இருக்கு? தீமையை எல்லாம் மறந்து கொண்டே இருந்தால் நாட்டில் அநியாயம் பெருத்து விடாதா ? 


இப்படி ஒரு நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றை வள்ளுவர் சொல்லுவாரா?


பரிமேலழகர் இல்லாவிட்டால் இதெல்லாம் நமக்கு புரியவே புரியாது. 


பாடல் 


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_19.html


(Please click the above link to continue reading)


நன்றி = ஒருவன் தனக்குச் செய்த நன்றியை, உதவியை 


மறப்பது = மறப்பது 


நன்றன்று = நல்லது அல்ல 


நன்றல்லது = ஒருவன் தனக்குச் செய்த நன்மை இல்லாததை 


அன்றே = அன்றே 


மறப்பது நன்று = மறந்து விடுவது நல்லது 


இதற்கு பரிமேலழகர் எப்படி பொருள் சொல்கிறார் என்றால், 


"நன்மையும் தீமையும் ஒருவரே செய்த பொழுது, அவர் செய்த நன்மையை மறக்கக் கூடாது, அவர் செய்த தீமையை அன்றே மறந்து விடவேண்டும்" என்கிறார். 


அதாவது, நட்பில், உறவில் சில சமயம் தவறு நேர்ந்து விடலாம். அப்போது, அந்த தவறை நினைத்துக் கொண்டு நட்பை உறவை பிரிந்து விடக் கூடாது. அவர்கள் முன் செய்த உதவியை நினைக்க வேண்டும். 


உதாரணமாக, சகோதரர்கள் நடுவில் ஏதோ ஒரு குழப்பம். சிக்கல் பெரிதாகி ஏதோ தவறான வார்த்தை வந்து விழுந்து விடுகிறது. அது நல்லது அல்ல தான். ஆனால், அதையே நினைத்துக் கொண்டு இருக்கக் கூடாது. முன்னால் எவ்வளவு அன்பாக இருந்தோம், ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு உதவி செய்தோம் என்று நினைக்க வேண்டும். 


முன் செய்த உதவியை மறக்காமல் இருந்தால், இப்போது செய்த தீமையை அது மறக்க உதவும். முன் செய்த உதவி மறந்து போனால், இந்த தீமை மட்டும்தான் நினைவில் நிற்கும். 


சரி, "அன்றே மறப்பது நன்று" என்று தானே சொன்னார், காலையில் தீமை செய்தால், சாயங்கலாம் வரை அவகாசம் இருக்கிறது. வள்ளுவர் "அன்றே" என்று தான் சொல்லி இருக்கிறார் என்றால், அதற்கு பொருள் சொன்ன பரிமேலழகர் சொல்கிறார் 


"அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்."


தீமை செய்த பொழுதே, அந்தக் கணமே அதை மறந்து விட வேண்டும் என்கிறார். 


ஒரு சில நொடி கூட அதைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கக் கூடாதாம். உடனே மறந்து விட வேண்டும் என்கிறார். 


தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. ஒருவர் செய்த தவறுகளை நினைவில் வைத்துக் கொண்டு இருந்தால், பின் உறவு என்பதே இருக்காது. 


இல்லறம் சிறக்காது. 


துறவறம் நடக்காது. 


வீடு பேறு என்பது முடியாத காரியமாகி விடும். 


"நன்றி மறப்பது நன்று அன்று" என்ற தொடருக்கு பரிமேலழகர் "அறம் அன்று" என்று   உரை செய்கிறார். 


செய்த நன்றியை மறப்பது அறம் அன்று. 


செய்த தீமையை மறப்பது அறம் 


என்று இரண்டு பக்கமும் அறம் பற்றிச் சொல்கிறார். 


மறப்பதும், நினைவில் வைத்துக் கொல்வதும் நம் வசதிக்கு அல்ல. அப்படிச் செய்வது கட்டாயம் என்கிறார். 


அப்படிச் செய்யாவிட்டால் அது அறத்தின் வழியில் இருந்து தவரியதாகவே கொள்ள வேண்டும். 


உங்களுக்கு நன்மை செய்த ஒருவரின் குற்றம் உங்கள் மனதில் நினைவு இருக்கிறதா? நீங்கள் அறம் வழுவியவர்கள் என்றே கொள்ள வேண்டும்.  அவர் உங்களுக்குச் செய்த தீமை நினைவிலேயே இருக்கக் கூடாது. மறந்திருக்க வேண்டும். 


எப்போதோ படித்த குறள். எளிமையான குறள். பல முறை நாமே கூட சொல்லி இருப்போம். 


எவ்வளவு ஆழமான அர்த்தம் இருக்கிறது அதற்குள். 


உயர்ந்த நூல்களை கற்றறிந்த அறிஞர் துணையோடு படிக்க வேண்டும். 




Friday, March 18, 2022

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - உலகம் - பொருளும் செயலும்

சிவ ஞான போதம் - முதல் சூத்திரம் - உலகம் - பொருளும் செயலும் 


எந்த அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி என்றாலும் அது எடுத்துக் கொண்ட பொருளின் அடிப்படை என்ன என்று ஆராயும். 


உதாரணமாக,  இயற்பியல் (physics) என்ற அறிவியல் பகுதி பொருள்களின் செயல்பாடுகளைப் பற்றி ஆராயும் போது, இந்த உலகில் எத்தனையோ பொருள்கள் இருந்தாலும், அவை எல்லாம் அணு என்ற ஒன்றால் ஆனது என்று கண்டு சொன்னது. அணுவைப் புரிந்து கொண்டால் இந்த உலகைப் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பொருளாக ஆராய வேண்டியது இல்லை. அணுவை ஆராய்ந்தால் போதும். அதனுள் எல்லாம் அடக்கம். அதன் எல்லைகள் மேலும் விரிந்து அணு அல்ல அடிப்படை, ப்ரோட்டான், நியுட்ரான், எலெக்ட்ரான் என்ற நுண்ணிய துகள்கள்தான் அடிப்படை என்று ஆனது. பின் மேலும் விரிந்து  அடிப்படை துகள்கள் (fundamental particles) என்று போகிறது.  எது மூல காரணமோ அதைப் பிடித்து விட்டால், எல்லாம் புரிந்து விடும். 


உயிரியல் என்று சொல்லப்படும் அறிவியல் பிரிவு, உலகில் எத்தனையோ ஜீவ இராசிகள் இருந்தாலும், எல்லாவற்றிற்கும் அடிப்படை செல் (cell) என்று கண்டு தெளிந்தது. செல் பற்றி தெரிந்து கொண்டால் உலகில் உள்ள அத்தனை மனிதர்களையும், விலங்குகளையும், பறவைகளையும், தாவரங்களையும் புரிந்து கொள்ளலாம். ஒவ்வொன்றாக ஆராய வேண்டிய அவசியம் இல்லை. 



உலகில் எத்தனையோ விதமான சக்திகள் இருந்தாலும், எல்லாம் அடிப்படையில் நான்கே நான்கு சக்திகள் தான். 


புவி ஈர்ப்பு விசை (gravitational force)


மின் காந்த விசை (electro magnetic force)


உயர் அணு விசை  (strong nuclear force)


தாழ் அணு விசை (weak nuclear force)


இந்த நான்கு விசைகளைத் தாண்டி இன்னொரு சக்தி கிடையாது. 


இப்படி ஒவ்வொரு அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியும் தான் எடுத்துக் கொண்ட இயலின் அடிப்படை என்ன என்று ஐந்து கொள்ள முற்படுகிறது. 



இப்போது சிவஞான போததிற்குள் வருவோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_18.html

(pl click the above link to continue reading)


இந்த உலகம் எதனால் ஆனது என்ற கேள்விக்கு விடை காண முயல்கிறது சிவஞான போதம். 


இந்த உலகம் மூன்றே மூன்றால் ஆனது. அதற்கு வெளியில் எதுவும் இல்லை என்று முதலில் உலகம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்கி விடுகிறது. 



அந்த மூன்று சொற்கள் 


"அவன், அவள், அது"


இதற்கு வெளியில் உலகம் என்று ஒன்று இருக்கிறதா? எல்லாமே இந்த மூன்றனுள் அடக்கம். 


சரி, இந்த மூன்றும் எவ்வளவோ வேலை செய்கின்றன. என்னென்ன வேலைக்கள் செய்கின்றன? எத்தனை விதமான வேலைகள் இருக்கின்றன என்று ஆராய முற்பட்ட சிவஞான போதம் சொல்கிறது, அனைத்து உயிர்களும் மூன்றே மூன்று தொழிலைத் தான் செய்கின்றன. 


அந்த மூன்று தொழில்கள் 


"பிறத்தல், இருத்தல், இறத்தல் "


இதுவன்றி வேறு தொழில் இல்லை. 


மூன்று பொருள்கள், மூன்று செயல்கள்.


சரிதானே? 


இது புரிந்துவிட்டால், அனுமான பிரமாணம் கொண்டு மற்றவற்றை நிரூபிக்கலாம். 


இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய நிரூபணம் செய்ய முடியும் என்று நினைப்போம். 


மேலும் சிந்திப்போம். 





Thursday, March 17, 2022

திருக்குறள் - விழுமம் துடைத்தார் நட்பு

திருக்குறள் - விழுமம் துடைத்தார் நட்பு 


நமக்கு சில பேரை பார்த்தவுடனேயே பிடித்துப் போய் விடும். அது போல சில பேரை முதல் தரம் பார்க்கும் போதே ஒரு வெறுப்பு வரும். காரணம் என்ன. 


இது எங்கு தெரியும் என்றால், காதல் செய்பவர்களை கேட்டால் சொல்லுவார்கள். "எனக்கும் அவளுக்கும் (அல்லது அவனுக்கும்) ஏதோ ஒரு முன் ஜென்ம தொடர்பு இருந்திருக்கிறது போல இருக்கிறது. இல்லை என்றால் இத்தனை பேரில் அவளை மட்டும் எனக்கு பிடிப்பானேன்?" என்று சொல்லுவார்கள். 


இது உண்மையா? முற் பிறவி என்று ஒன்று உண்டா? அடுத்த பிறவி என்று ஒன்று உண்டா? 


தெரியாது. ஆனால், நம் உள் உணர்வு சொல்கிறது இது ஏதோ ஜன்ம ஜென்மமாய் வரும் உறவு என்று. 


எங்கிருந்து வருகிறது அந்த உணர்வு? யார் சொல்லித் தந்தார்கள்?


இதை எல்லாம் நம்பாத நாத்திகன், பகுத்தறிவுவாதி கூட, மனைவி/காதலி மேல் உண்மையான ஆழமான அன்பு இருந்தால் இந்த உணர்வைப் பெறுகிறார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அது உண்மை. 


அப்படி ஏன் சில பேரை பார்த்த மாத்திரத்தில் அன்பு வருகிறது என்றால், அவர்கள் முற்பிறவியில் நமக்கு செய்த நன்மை. அந்த நன்மை மனதில் ஆழமாக பதிந்து, உயிரோடு கலந்து விடுகிறது. உயிர் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலில் செல்லும் போது, அந்த நன்றி உணர்வும் கூடவே வந்து விடுகிறது என்கிறார். 


பாடல் 


 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_17.html


(Pl click the above link to continue reading)


எழுமை  = எழும் தன்மை, உயர்தல் 


எழுபிறப்பும் = ஏழு பிறப்பிலும் 


 உள்ளுவர் = நினைப்பார்கள் 


தங்கண் = தனக்கு 


விழுமம் = துன்பம் 


 துடைத்தவர் நட்பு = நீக்கியவர்களின் நட்பை 


தனக்கு துன்பம் வந்த காலத்தில் அதை போக்க உதவி செய்தவர்களை இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, இனி வரப் போகும் ஏழு பிறவியிலும் நினைப்பார்கள் என்கிறார் வள்ளுவர். 


கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம். 


"உள்ளுவர்" என்றால் நினைப்பர் என்று அர்த்தம். நேத்து மதியம் என்ன சாப்பிட்டோம் என்பதே மறந்து போய் விடுகிறது. இதில் அடுத்த பிறவியில் மட்டும் அல்ல இன்னும் வரும் ஏழு பிறவியில் எப்படி நினைக்க முடியும்? 


முடியும். செய்த உதவியை பெரிதாக நினைத்து, மனதில் அதை ஆழமாகப் பதித்தால், தானே நினைவு வரும். 



இரண்டாவது, ஒரு விடயம் எப்படி ஞாபகம் இருக்கும். அதை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால் அது மனதில் தங்கும்.  ஒருவர் செய்த உதவியை மறுபடி மறுபடி நினைக்க வேண்டும். அப்போது அது, இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, பல பிறவியிலும் நினைவில் நிற்கும். .


மூன்றாவது, என்ன உதவி பெற்றுக் கொண்டாலும், அதை பெரிதாக நினைத்தால் அது மறுபடி மறுபடி ஞாபகம் வரும். அதை மனதுக்குள் நன்றி பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.  "அன்னைக்கு அவர் அந்த உதவி செய்தார். அவர் மட்டும் அந்த உதவிய செய்யலேனா" என்று நினைக்க வேண்டும். 


நான்காவது, சில பேர்இருக்கிறார்கள். என்ன உதவி செய்தாலும், 'அதெல்லாம் ஒரு பெரிய உதவியா" என்று அலட்சியம் செய்வார்கள். பனைத் துணையாக செய்தாலும், தினைத் துணையாகக் கொள்வார்கள். சிறியோர். அவர்களுக்கு என்ன செய்தாலும், அது அவர்கள் நினைவில் தங்காது. 


ஐந்தாவது, "துடைத்தவர் நட்பு" என்கிறார்.  துடைப்பவர் நட்பு என்று இருந்திருக்க வேண்டும். விரைவு கருதி இறந்த காலத்தில் கூறினார் என்கிறார் பரிமேலழகர் உரையில். முன்பே இது பற்றி சிந்தித்து இருக்கிறோம். 


அவசரமாக வெளியே போக வேண்டும். மனைவி அலங்காரம் செய்து கொண்டு இருக்கிறாள். கணவன் வெளியே பொறுமை இல்லாமல் "எவ்வளவு நேரம்...சீக்கிரம் கிளம்பு" என்று அவசரப் படுத்துகிறான். "இதோ வந்துட்டேன்" என்கிறாள். வரவில்லை. இருந்தும், வந்து விட்டேன் என்பது, விரைவில் வந்து விடுவேன் என்பதை குறிப்பதற்காக. 


துடைத்தவர் என்றால் விரைந்து துடைப்பவர்.  ஒரு உதவி என்று கேட்டுப் போனால், அப்புறம் வா, நாளைக்கு வா, அடுத்த வாரம் இதைப் பற்றிப் பேசலாம் என்று இழுத்து அடிக்கக் கூடாது. உடனே, உடனே அவர் துன்பத்தை துடைக்க வேண்டும். அந்த நட்புதான் ஏழு பிறப்பிலும் தொடரும் என்கிறார். 


நமக்கு பாடம் என்ன என்றால், உதவி என்று யாராவது கேட்டால், குறிப்பாக நண்பர்கள், "உடனே" செய்து விட வேண்டும்.  உடுக்கை இழந்தவன் கை போல் என்று வள்ளுவர் கூறியது போல. அப்படி உதவி செய்தால் அது அவர் மனதில் நிற்கும். ஏழு பிறவியிலும். 


இந்தப் பிறவியில் அப்படிச் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தேடாமலேயே பல சிறந்த நட்பு உங்களுக்கு கிடைக்கும். அன்பு செய்வர் என்கிறார் பரிமேலழகர். 


என்ன ஒரு சிந்தனை !


படிக்க படிக்க உவகை ஊட்டும் நூல். 


இதை எல்லாம் விட்டு விட்டு 'முது காட்டில் காக்கை உகக்கும் பிணம்" போல எதையெதையோ படித்துக் கொண்டு இருக்கிறார்கள். 



Wednesday, March 16, 2022

சிவ ஞான போதம் - நூல் அறிமுகம்

 சிவ ஞான போதம் - நூல் அறிமுகம் 


சைவ சமயத்தில் சாத்திரம் தந்த நால்வர், தோத்திரம் தந்த நால்வர் என்று நான்கு நான்கும் எட்டு பெரியவர்களை குறிப்பிடுவார்கள். 


தோத்திரம் தந்த நால்வர்கள் - அப்பர் என்ற திருநாவுக்கரசர், சுந்தரர், திரு ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர். 


சாத்திரம் தந்த நால்வர்கள் - மெய்கண்டத் தேவர், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவாசாரியார்.


இவர்களுள் மெய்கண்ட தேவர் அருளிய நூல் சிவ ஞான போதம். 


சிவஞான போதம் என்ற இந்த நூல் இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், பன்னிரண்டு சூத்திரங்களை உடையது.


இருப்பது    என்னவோ பன்னிரெண்டே சூத்திரங்கள். அதற்கு இரண்டு அதிகாரங்கள், நான்கு இயல்கள், இயலுக்கு மூன்று சூத்திரம் என்று பன்னிரண்டு சூத்திரங்கள். 


பொது அதிகாரம்

உண்மை அதிகாரம் 


என்று அதிகாரங்கள் உண்டு. 


பொது அதிகாரத்தில், பிரமாண இயல், இலக்கண இயல் என்று இரண்டு இயல்கள். 


உண்மை அதிகாரத்தில், சாதனை இயல், பயன் இயல் என்று இரண்டு இயல்கள் உண்டு. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_16.html


(click the above link to continue reading)


எதை  சொன்னாலும் அதற்கு ஒரு சான்று வேண்டும் அல்லவா? அது சரியா, தவறா என்று நிரூபணம் செய்ய வேண்டும் அல்லவா? சும்மா வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டுப் போக முடியுமா? நிரூபணம் இல்லை என்றால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். 


இப்போதெல்லாம் அப்படி ஆகி விட்டது. கேட்டால், "அதெல்லாம் நம்பிக்கை பாற்பட்டது. கேள்வி கேட்கக் கூடாது. நம்ப வேண்டும்" என்கிறார்கள். எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டு, "எல்லாம் ஒரு நம்பிக்கைதான்" என்று சொல்லி விட்டு நழுவி விட முடியாது. 


பிரமாணம் என்றால் நிறுவுதல். ஒரு எடுகோளை (hypothesis ) எடுத்துக் கொண்டு அதை நிறுவுவது. பொதுவாக பத்து பிரமாணங்கள் உண்டு என்று சொல்கிறார்கள். அந்தப் பத்தையும் சுருக்கி மூன்று பிரமாணத்துக்குள் அடக்கி விடுகிறார்கள் நம் தர்க்க இயலார். 


காட்சிப் பிரமாணம்,


அனுமானப் பிரமாணம் 


ஆகமப் பிரமாணம் 


என்று மூன்று பிரமாணங்கள் உண்டு. 


ஒன்றை உண்மை என்று சொல்லுவதற்கு இவை பயன் படுகின்றன.


"அவன் அடித்ததை நான் கண்ணால் பார்த்தேன்" என்றால் அது காட்சிப் பிரமாணம். 


காட்சி என்றால் பார்ப்பது மட்டும் அல்ல. புலன்களால் அறியும் எல்லாமே காட்சிப் பிரமாணம் தான்.


பக்கத்து வீட்டில் நெய் விட்டு பொங்கல் செய்கிறார்கள். வாசம் இங்கே மூக்கை துளைக்கிறது. ம்ம்...நல்ல பொங்கல் வாசம் வருது" என்கிறோம். நேரில் பார்க்கவில்லை. வாசத்தை வைத்து "கண்டு" பிடிக்கிறோம். 


வெளியே ஒரு வண்டிச் சத்தம் கேட்கிறது. "...அப்பா வந்தாச்சு" என்று பிள்ளை ஓடுகிறது. அப்பா வந்ததை பார்க்கவில்லை. ஸ்கூட்டர் சப்தத்தை கொண்டு "கண்டு" பிடிக்கிறது. 


பிள்ளை அப்பாவின் முதுகில் ஏறிக் கொண்டு, கண்ணை மறைத்துக் கொண்டு, "யார் சொல்லு பார்ப்போம்" என்கிறது. தொடு உணர்ச்சியில் கண்டு கொள்ள முடிகிறது. 


எல்லாவற்றையும் புலன்களால் அரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. 


புகை இருந்தால் தீ இருக்கும் என்று அனுமானித்து அறியலாம். 


காலையில் எழுந்து பார்க்கிறோம். சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. "இராத்திரி மழை பொழிந்திருக்கிறது" என்று அனுமானிக்கிறோம். மழை பெய்ததை பார்க்கவில்லை. இருந்தும் மழை பெய்த உண்மையை அறிந்து கொள்கிறோம். எப்படி? அனுமானம். 


இதற்கு அனுமான பிரமாணம் என்று பெயர். 


சிவ ஞான போதம் என்ற இந்த நூல், பொது அதிகாரத்தில் வரும் முதல் இயலான அனுமான இயலில், உண்மையை அனுமான பிரமாணம் கொண்டு நிறுவுகிறது. 


அப்படி என்ன உண்மைகளை அது நிறுவுகிறது என்பதை வரும் நாட்களில் சிந்திக்க இருக்கிறோம். 


(புரிந்து கொள்ள எளிமையாக இருக்கிறதா? புரிவதில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? மாற்றம் ஏதேனும் செய்ய வேண்டுமா?)



Tuesday, March 15, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - மறவற்க, துறவற்க

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - மறவற்க, துறவற்க 


இதுவரை சிக்கல் இல்லாமல் சென்று கொண்டிருந்த அதிகாரம், இப்போது ஒரு சிக்கலான ஒரு விடயத்தை சொல்ல வருகிறது. 


நமக்கு துன்பம் வந்த காலத்தில் ஒருவர் உதவி செய்கிறார். பின்னாளில் அவர் அவ்வளவு நல்லவர் இல்லை என்று தெரிய வருகிறது. என்ன செய்யலாம்? அவர் செய்த நன்றியை மறவாமால் போற்ற வேண்டுமா அல்லது அவர் நல்லவர் இல்லை என்பதால் அவர் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டுமா? 


இது ஒரு சிக்கலான கேள்வி. நல்லவர் இல்லை என்று தொடர்பை துண்டித்துக் கொண்டால், செய் நன்றி மறந்த குற்றம் வரும். சரி, அவருடன் நட்பில் இருக்கலாம் என்றால் அதனால் என்னென்ன சிக்கல்கள் வருமோ என்ற பயமும் வரும். 


இதுக்கு என்ன தான் தீர்வு? 


சரி, அது புறம் இருக்கட்டும். 


சிலபேருடன் நாம் நட்பாக இருப்போம். அவர்கள் நமக்கு நேரடியாக ஒரு உதவியும் செய்து இருக்க மாட்டார்கள். பணமோ, பொருளோ, எதுவும் செய்து இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களின் நட்பு நம்மை எவ்வளவோ விதத்தில் உயர்த்தி இருக்கும். அவருடைய அறிவு, பண்பு,  போன்றவை நம்மை வியக்க வைக்கும். நாமும் அது போல இருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை நம்முள் விதைக்கும். நம்மை அறியாமலேயே நாம் அவர்கள் சொல்வது போல், பேசுவது போல, நடந்து கொள்வது போல் நடக்க தலைப் படுவோம். அது நம்மை உயர்த்தும். 

அது ஒரு நன்மையா? அது அவர்கள் செய்த உதவியா? அதை மறக்காமல் இருக்க வேண்டுமா? 


இது அடுத்த கேள்வி. 


இந்த இரண்டு சிக்கலான கேள்விக்கும், ஒரே குறளில் பதில் தருகிறார் வள்ளுவர். 


"குற்றமற்ற நல்லவர்களின் நட்பை மறக்கக் கூடாது. நமக்கு துன்பம் வந்த காலத்தில் உதவி செய்தவர்களின் நட்பை துறக்கக் கூடாது" 


பாடல் 



மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_15.html


(pl click the above link to continue reading)



மறவற்க = மறக்காமல் இருக்க 


மாசற்றார் = குற்றம் அற்றவர் 


கேண்மை = நட்பு 


துறவற்க = விட்டுவிடக் கூடாது 


துன்பத்துள் = நமக்கு ஒரு துன்பம் வந்த காலத்து 


 துப்பாயார் நட்பு. = துணையாய் நின்றவர்களின் நட்பை 


இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். 


மாசற்றார் கேண்மை மறவற்க - குற்றமறவர் நல்லவர்களின் நட்பை மறக்கக் கூடாது. 


சரி, அதுக்கும் இந்த அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கு. அதுதான் வள்ளுவர். 


நல்லவர்களின் நட்பால் நமக்கு பல நன்மைகள் விளையும். அப்படி நன்மை விளைந்ததால் அதை செய் நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் வைத்ததார். 


ஆனால், அப்படி ஒன்றும் நன்மை விளைந்த மாதிரி தெரியலையே என்றால் , பரிமேலழகரிடம் தான் கேட்க வேண்டும்.   அவர் சொல்கிறார் 


"மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்" 


மாசு அற்றார் கேண்மை மறுமைக்கு உறுதி தரும் என்கிறார். அவர்களுடைய நட்பால் நாம் அற வழியில் செல்வோம். அதனால் நமக்கு மறுமைக்கு நன்மை கிடைக்கும் என்பதால், அவர்கள் நட்பை விட்டுவிடக் கூடாது என்கிறார். 


அடுத்தது, 



"துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு"


நமக்கு துன்பம் வந்த காலத்தில் நமக்கு துணை நின்றவர் நட்பை விட்டு விடக் கூடாது என்கிறார். 


நம் துன்பம் கண்டு, நமக்கு இரங்கி உதவி செய்தார் அல்லவா, அதுவே ஒரு நல்ல குணம் தான். அவரிடம் வேறு பல தீய குணங்கள் இருக்கலாம். அவர் தண்ணி அடிக்கலாம், கையூட்டு வாங்கலாம். அதெல்லாம் செய்தாலும், நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லையே? இருந்தும் செய்தார். அந்த நன்றியை மறக்கக் கூடாது.  குற்றம் இல்லாத மனிதன் எங்கே இருக்கிறான். தவறே செய்யாதவன் என்று ஒருவனும் கிடையாது. உதவி செய்தவர்களிடம் உள்ள குறைகளை, குற்றங்களை ஆராய முற்பட்டால், ஒருவர் கூட மிஞ்ச மாட்டார். பின் செய்நன்றி அறிதல் என்பதே அர்த்தம் இல்லாமல் போய் விடும். 


அவன் எப்படியோ இருக்கட்டும். உனக்கு துன்பம் வந்த காலத்தில் காப்பாற்றினான் அல்லவா, அந்த நன்றியை மறவாதே என்கிறார். 


அதில் உள்ள இன்னொரு ஆழ்ந்த அர்த்தம் என்ன என்றால், யாரிடம் உதவி கேட்கிறோம் என்று தெரிந்து கேட்க வேண்டும். ஏன் என்றால், உதவி பெற்றுக்கொண்டால், நன்றி மறக்கக் கூடாது. 


ஊரிலேயே உள்ள பெரிய அயோக்கியனிடம் சென்று உதவி கேட்டுப் பெற்றால், பின்னாளில் சிக்கல் வரத்தான் செய்யும். 


இப்போதைக்கு உதவி வாங்கிக் கொள்ளலாம். பின்னால் கழட்டி விட்டு விடலாம் என்று நினைக்கக் கூடாது.. 


உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மறக்கக் கூடாது.  (இம்மைப் பலன்)


நல்லவர்கள், உதவியே செய்யாவிட்டாலும், அவர்கள் நட்பை விட்டுவிடக் கூடாது. (மறுமைப் பயன்)



எவ்வளவு சிந்தித்து இருந்தால் இவ்வளவு சொல்ல முடியும்?




Sunday, March 13, 2022

சிவ ஞான போதம் - ஒரு அறிமுகம்

 சிவ ஞான போதம் - ஒரு அறிமுகம் 


சிவஞான போதம் என்ற நூல் மிக மிக சிறிய நூல். 


பன்னிரெண்டே சூத்திரங்கள் கொண்ட நூல். 


எழுதியவர் மெய்கண்ட தேவர். 


அந்த பன்னிரண்டு சூத்திரத்துக்குள் சைவ சமயத்தின் அத்தனை சாரத்தையும் அடக்கி விட்டார். 


படிக்கப் படிக்க விரிந்து கொண்டே போகும். இவ்வளவு இருக்கா என்ற பிரமிப்பு வரும். 


இந்த நூலுக்கு எவ்வளவோ பேர் உரைகள், விரிவுரைகள், பொழிப்புரைகள் என்று எழுதி இருக்கிறார்கள். எழுதி முடியவில்லை. அவ்வளவு ஆழம் கொண்ட நூல். .


கடல் போல் விரிந்த சைவ சமய கோட்பாடுகளை பன்னிரண்டு சூத்திரத்துக்குள் அடக்குவது என்பது முடிகிற காரியமா? 



https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_0.html


(click the above link to continue reading)


நான் வாசித்தவரை, எனக்குத் தெரிதவரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 


எனக்கு சைவ சமயம் பற்றி ஒன்றும் தெரியாது.  நான் செய்வது எல்லாம் இருக்கும் உரைகளை தொகுத்து, எளிமைப் படுத்துவது மட்டும் தான். 


ஆன்மீகத்துக்கும் எனக்கும் ஒரு துளியும் சம்மந்தம் கிடையாது. 


இது பற்றி மேலும் உங்களுக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பின், சைவ சமய பெரியவர் யாரையாவது அணுகி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 


நூலை எளிமையாக அறிமுகப் படுத்துவது ஒன்றுமட்டும் தான் என் வேலை. 


மெய்கண்டர் பற்றி பல சுவையான தகல்வகள் உள்ளன. அவற்றை நடுநடுவே பார்ப்போம்.


இனி, நேரே நூலுக்குள் நுழைவோம். 


முதல் சூத்திரம்.....





திருக்குறள் - செய்நன்றி அறிதல் - செயப்பட்டார் சால்பின் வரைத்து

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - செயப்பட்டார் சால்பின் வரைத்து 


உதவி செய்பவர், உதவி பெற்றுக் கொண்டவர், உதவி என்ற மூன்று இருக்கிறது. 


இதில், உதவியின் அளவை எப்படி மதிப்பிடுவது? உதவி செய்தவரை வைத்தா, உதவி பெற்றுக் கொண்டவரை வைத்தா? 


உதவியின் அளவு பெற்றுக் கொண்டவரின் தன்மையைப் பொறுத்து என்கிறார். 


சிலர் இருக்கிறார்கள்...என்ன உதவி செய்தாலும், "என்ன சார் பெரிய உதவி செஞ்சிட்டார்...அவருக்கு இருக்கிற பணத்துக்கு இதெல்லாம் ஒரு உதவியே கிடையாது...இன்னும் எவ்வளவோ செய்யலாம், சரியான கஞ்சன்" என்று உதவியைப் பெற்றுக் கொண்டு, உதவி செய்தவரை ஏளனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அது அவரின் தன்மை.


இன்னும் சிலர், கொஞ்சம் உதவி செய்தாலும், "மகராசன், சரியான நேரத்தில் உதவி செய்தான். அவனுக்கு ஒரு கோவில் கட்டி கும்பிடணும்" என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அது அவன் இயல்பு. 


நாம் ஒருவரிடம் ஒரு உதவியைப் பெற்றுக் கொண்டால், அதனால் நமக்கு என்ன நன்மை, பயன், என்று பார்க்க வேண்டுமே தவிர, உதவி செய்தவனுக்கு அது பெருசா, சிறுசா என்று ஆராயக் கூடாது. 


இன்றும் சில மாணவர்கள் சொல்வதைக் கேட்டு வருந்துகிறேன் "என்ன பெரிய ஆசிரியர். சும்மாவா சொல்லிக் கொடுக்கிறார்.சம்பளம் வாங்கிக் கொண்டு தானே சொல்லிக் கொடுக்கிறார். அந்த சம்பளம் யார் கொடுத்தது ? நான் கட்டிய fees இல் இருந்து அவருக்கு சம்பளம் கிடைக்கிறது" என்று பேசுகிறார்கள். "இவர் இல்லாட்டி, இன்னொரு ஆசிரியர்" என்றும் பேசுகிறார்கள். 


ஆசிரியரைப் பொறுத்தவரை அது என்னவோ சின்ன விடயம்தான். அதே பாடத்தைத் தான் அவர் வருட வருடம் சொல்லிக் கொடுக்கிறார். அது அவருக்கு பெரிய விடயம் அல்லதான். ஆனால், மாணவனுக்கு அது எவ்வளவு பெரிய உபகாரம்? அந்த அறிவின் பயனை பெற்றுக் கொண்ட மாணவன் சிந்திக்க வேண்டும். 


"எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்" என்று தமிழ் பேசுகிறது. 


அறிவித்தவன் என்றால் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். அ ஆ சொல்லித் தந்தவர். ABCD சொல்லித் தந்தவர். அவர் இறைவனுக்கு சமம் என்கிறது தமிழ். 


ஒரு பாட்டில் இரத்தம் ஒன்றும் பெரிய விலை கிடையாது. சாதாரண நேரத்தில் வாங்கி விடலாம். ஆனால், நாம் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கும் போது, யாராவது ஒரு பாட்டில் இரத்தம் கொடுத்தால், அதை பணத்தைக் கொண்டு மதிப்பிடக் கூடாது. 


பெற்றுக் கொண்டவரின் சால்பு என்கிறார். சால்பு என்றால் பெருந்தன்மை, உயரிய மனம் என்று கொள்ளலாம். 


முட்டாளுக்கு என்ன செய்தாலும் பெரிதாகத் தெரியாது. 


அறிவு உள்ளவர்களுக்கு திணை துணை செய்யினும் அதை பனைத் துணையாகக் கொள்வர்.


பாடல் 


உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_13.html


(pl click the above link to continue reading)



உதவி வரைத்தன்று உதவி = ஒரு உதவியின் அளவு அந்த உதவியைப் பொறுத்து அல்ல 


உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து = உதவி செய்யப்பட்டார் சால்பின் தன்மையைப் பொறுத்தது. 


பத்து மில்லுக்கு முதலாளியாக இருக்கும் ஒருவருக்கு ஒரு வேட்டி தானம் தந்தால் அது பெரிய விடயம் இல்லை. 


உடுத்த துணி இல்லாமல், கிழிந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு, மானத்தை மறைக்க போராடும் ஒரு ஏழைக்கு ஒரு வெட்டினேன் கொடுத்தால் அது எவ்வளவு உயர்ந்தது?


கொடுத்தது என்னவோ ஒரு வேட்டிதான்.  அதன் மதிப்பு பெற்றுக் கொண்டவரின் தன்மையைப் பொறுத்தது.


நாம், எப்போது ஒரு உதவியைப் பெற்றுக் கொண்டாலும், அதை உயர்வாக நினைத்துப் பழக வேண்டும். எவ்வளவு உயர்வாக நினைகிறோமோ அவ்வளவு நம் நிலை உயர்ந்து நிற்கிறது என்று பொருள். 


எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள்.




Saturday, March 12, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒக்கலையில் கொண்டு

 நாலாயிர திவ்ய பிரபந்தம் -  ஒக்கலையில் கொண்டு 


குழந்தையை கொஞ்சுவது போல ஒரு சுகம் உலகில் இல்லை. 


குழந்தையை தோளில் போட்டு தூங்க வைப்பது, அதோடு விளையாடுவது, அது நம் விரல் பிடித்து நடப்பது எல்லாம் அவ்வளவு சுகம். 


மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு


என்பார் வள்ளுவர். குழந்தைகள் நம்மை கட்டி அணைப்பது நம் உடலுக்கு இன்பம். அவர்கள் சொல்லும் மழலையைக் கேட்பது செவிக்கு இன்பம் என்கிறார். 


பெண்களுக்கு ஒரு படி மேலே. குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொள்வார்கள். அவர்கள் இடுப்பு குழந்தை அமர வசதியாக இருக்கும். அந்தக் காலத்தில் பெண்களின் இடுப்பு ஒடுங்கி இருந்தது. 


"உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு" என்று ஔவையார் சொன்னால், "ஆகா, பெண்கள் பட்டினி கிடக்க வேண்டுமா? நீங்கள் எங்களை பார்த்து இரசிக்க நாங்கள் பட்டினி கிடந்து துன்பப் பட வேண்டுமா? நாங்களும் நல்லா சாப்பிடுவோம்" என்று பெண் விடுதலை பேசி, இடுப்பு என்பதே இல்லாமல் தூண் போல ஆகும் ஒரு தலைமுறை வந்து கொண்டு இருக்கிறது.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


கண்ணன் தெருவில் விளையாடுகிறான். அவன் மேல் அங்குள்ள பெண்களுக்கு அவ்வளவு அன்பு, ஆசை. போவோர் வருவோர் எல்லாம் அவனை தூக்கி தங்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு "வா, நம்ம வீட்டுக்குப் போகலாம்"  என்று தூக்கிக் கொண்டு போய் விடுவார்களாம். 


அங்கு கொண்டு போய், அவனோடு ஆசை தீர விளையாடுவார்களாம். 


வீட்டுல உள்ள பெண் பிள்ளைகள் அவனோடு விளையாடுவார்கள். கொஞ்சுவார்கள். மற்றவர்களுக்கு அவன் செய்வதைப் பார்த்து அப்படி ஒரு சந்தோஷம். 


அந்தக் காட்சியை மனதில் கண்டு, பெரியாழ்வார், கண்ணனை நோக்கி, "கண்ணா, நீ நல்லா ஆடு" என்று நேரில் பார்த்து கூறுவதைப் போலக் கூறுகிறார். 



பாடல் 



உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி

உன்னொடு தங்கள் கருத்தாயின செய்துவரும்*

கன்னியரும் மகிழக் கண்டவர் கண்குளிரக்

கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி*

மன்னுகுறுங் குடியாய்! வெள்ளறையாய்! மதிள்சூழ்

சோலைமலைக் கரசே! கண்ண புரத்தமுதே!*

என்னவலம் களைவாய்! ஆடுக செங்கீரை

ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_12.html


(Pl click the above link to continue reading)



உன்னையும்  = உன்னை (கண்ணனை) 


ஒக்கலையில் கொண்டு = இடுப்பில் தூக்கிக் கொண்டு 


தமில்மருவி = தம் + இல் + மருவி = தங்களது இல்லத்துக்கு தூக்கிச் சென்று 


உன்னொடு = உன்னோடு (கண்ணனோடு) 


தங்கள் கருத்தாயின செய்துவரும் = தங்கள் மனதில் என்னவெல்லாம் தோன்றியதோ அப்படி எல்லாம் விளையாடி 


கன்னியரும் மகிழக் = பெண்கள் அவனைக் கொஞ்சி, அவன் கூட விளையாடி மகிழ 


கண்டவர் கண்குளிரக் = அதைப் பார்பவர்கள் மனம் குளிர 

 

கற்றவர் = படித்தவர்கள் 


தெற்றிவரப் பெற்ற = அருள் கொண்டு நோக்கப் பெற்ற 


 எனக்குஅருளி = எனக்கு (பெரியாழ்வார்) அருள் செய்து 


மன்னுகுறுங் குடியாய்! = நிலைத்து நிற்கும் புகழுடைய திருக்குறுங்குடி என்ற தலத்தில் உறைபவனே 


வெள்ளறையாய்!  = திரு வெள்ளறை என்ற தலத்தில் இருப்பவனே 


மதிள்சூழ் = கோட்டை மதிள் சூழ்ந்த 


சோலைமலைக் கரசே! = திருமாலிருஞ்சோலைக்கு அரசனே 


கண்ண புரத்தமுதே! = கண்ணபுரத்தில் இருக்கும் அமுதம் போன்றவனே 


என்னவலம்  = என் அவலம் (துன்பம்) 


களைவாய்! = நீக்குவாய் 


ஆடுக செங்கீரை = ஆடுக 


ஏழுலகு முடையாய்! ஆடுக ஆடுகவே. = ஏழு உலகம் உடையவனே ஆடுக, ஆடுகவே 


(செங்கீரை என்பது ஒரு குழந்தைப் பருவம்) 


பெரியாழ்வார் கற்பனையில் காண்கிறார். கண்ணன் தெருவில் விளையாடினால் அங்கு என்னவெல்லாம் நிகழ்ந்து இருக்கும் என்று. 


அவர் கற்பனையில் கண்டது மட்டும் அல்ல, அதை நம் கண் முன்னே கொண்டு வந்தும் நிறுத்தி விடுகிறார். 


ஏதோ நாமும் கண்ணனை நம் வீட்டுக்கு கொண்டு வந்து அவன் கூட விளையாடுவது போல இருக்கிறது. 


அவ்வளவு அன்யோன்யம். 


பிரபந்தம் படிக்க ஒரு மனம் வேண்டும். 




Friday, March 11, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன் தெரிவார்

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன் தெரிவார் 


செய்யாமல் செய்த உதவி 

காலத்தினால்  செய்த உதவி 

பயன் தூக்கார் செய்த உதவி 


என்று உதவியின் உயர்வு பற்றி கூறினார். .


அடுத்ததாக உதவி பெற்றுக் கொள்பவர் பற்றி கூறுகிறார். .


ஒரு உதவி பெற்றுக் கொண்டவன் அதை எப்படி நினைக்க வேண்டும் ?


ஒரு விதை இருக்கிறது என்றால், அது விதை மட்டும் அல்ல..அதனுள் பெரிய மரம் இருக்கிறது, அந்த மரத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழங்கள் வரும். அந்த பழங்களில் விதை இருக்கும். அந்த விதைகளில் இருந்து பல மரங்கள் வரும் என்று எவ்வளவு இருக்கிறது. 


ஒரு விதை என்றால், விதை என்று மட்டும் பார்க்கக் கூடாது. 


சிறு வயதில் எனக்கு என் ஆசிரியர்கள் எழுத்துச் சொல்லித் தந்தார்கள். அதன் பலன் என்ன? அதனால் மேலும் படித்து, வேலைக்குப் போய், நிறைய பொருள் ஈட்ட முடிந்தது. அ ஆ சொல்லிக் கொடுத்தார் என்று சொல்லக் கூடாது. எனக்கு இத்தனை வசதியும் அவர் கொடுத்தார் என்று நினைக்க வேண்டும். 


எனக்கு மட்டும் அல்ல, நான் பொருள் ஈட்ட முடிந்ததால் என் பிள்ளைகளை உயர் கல்விக்கு அயல் நாட்டுக்கு அனுப்ப முடிந்தது. அது எப்படி முடிந்தது? ஆரம்பப் பள்ளியில் அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்த அ ஆ, ஒன்று இரண்டு போன்றவற்றில் இருந்து. 


இப்படி ஒவ்வொரு உதவியையும் அந்த உதவியை மட்டும் வைத்துப் பார்க்கக் கூடாது. அதனால் விளையும் பயன்களை எண்ணிப் பார்க்க வேண்டும். 


அடி பட்டு இரதம் சிந்திக் கொண்டு இருந்த போது,ஒரு பத்து சென்டிமீட்டர் நீளம் உள்ள நூலால் தையல் போட்டார் என்று சொல்லக் கூடாது. அந்தத் தையலால் இரத்தம் செல்வது நின்று, உயிர் பிழைத்தது அல்லவா அதை நினைக்க வேண்டும். 


கண்ணன் ஆற்றில் குளிக்கும் போது அவன் உடை தண்ணீரில் போய் விட்டது. வெளியே வர முடியாமல் தவித்தான். பாஞ்சாலி தன் சேலையில் ஓரத்தில் கொஞ்சம் கிழித்து அவன்பால் தூக்கி எறிந்தாள். அது ஒரு முழ துணி அல்ல. அவனின் மானம். 


அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். 


"திணை அளவு நன்றி செய்தாலும் அதை பனை அளவாகக் கொள்வர் பயன் தெரிவார்" என்று. 


பாடல் 


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_11.html


(pl click the above link to continue reading)



தினைத்துணை = திணை அளவு 


நன்றி செயினும் = நன்றி செய்யினும் 


பனைத்துணையாக் = அதை பனை அளவாகக் 


கொள்வர் = நினைத்துக் கொள்வர் 


 பயன்தெரி வார் = அதன் பயன் தெரிந்தவர்கள் 


இதில் திணை, பனை என்பது அளவு குறித்து நின்றது என்கிறார் பரிமேலழகர். 


நான் சற்று வேறு விதமாக சிந்திக்கிறேன். தவறாகவும் இருக்கலாம். 


திணை அளவு உதவிக்குள் பனை அளவு பயன் இருப்பது அதை பெற்றுக் கொள்ளும் போது பெரும்பாலும் தெரியாது. 


உதவி பெற்றுக் கொள்ளும் போது திணை அளவு தான் தெரியும். 


எனக்கு பாடம் சொல்லித் தந்த போது, அதனால் இவ்வளவு பயன் விளையப் போகிறது என்று அப்போது தெரியவில்லை. 


அது சிறு வயது. 


ஆனால், வயது முதிர முதிர, அனுபவம் கூடும் போது, ஒவ்வொரு உதவியின் பின்னாலும் எவ்வளவு பலன் என்று அறிந்து கொள்ளும் பக்குவம் வர வேண்டும். 


உதவியின் பலனை அறிந்து கொண்டால் அந்த உதவியின் அளவு எவ்வளவு பெரியது என்று தெரியும். 


ஒவ்வொரு நன்மையின் பின்னாலும் மிகப் பெரிய பலன் இருக்கிறது என்று தெரிந்தால் நாம் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம் என்று தெரிய வரும். 


ஒட்டு மொத்த சமுதாயமும் நன்றிக் கடனில் நெகிழ்ந்து நிற்கும். 


இப்போது புரிகிறதா, செய் நன்றி மறந்தால் ஏன் பிரயாசித்தம் இல்லை என்று. 


அது மிகப் பெரிய கடன். அவ்வளவு பெரிய கடனை வாங்கிவிட்டு இல்லை என்று மறந்தால் எப்படி?


ஒரே ஒரு வார்த்தை "பயன்" தெரிவார் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். 


உயிரை உருக்கி பெற்று எடுத்து வளர்த்த தாய், ஒவ்வொரு நாளும் பாடுபட்டு உழைத்து காப்பாற்றும் தந்தை, எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்து நிற்கும் மனைவி, என்ன ஆனாலும் உன்னைக் காப்பேன் என்ற கணவன், தேவைப் பட்ட காலத்தில் கை நீட்டும் உடன் பிறப்புகள், உயிர் காக்கும் தோழன்...


பயன் தெரிந்து கொள்ள வேண்டும். 




Thursday, March 10, 2022

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அறமும் வாழ்வும்

 கம்ப இராமாயணம்  - வீடணன் அடைக்கலம் - அறமும் வாழ்வும் 


"நீ என் கண் முன் நிற்காதே. ஓடிப் போய் விடு" என்று அறிவுரைகள் சொன்ன வீடணனை இராவணன் வெறுத்து, கோபம் கொண்டு விரட்டி விடுகிறான். 


இராவணனுக்கு சீதை மேல் காமம் ஒரு புறம். 


அவளை அடைய முடியவில்லையே என்ற கோபமும் வருத்தமும் மறு புறம். 


இதற்கிடையில், உடன் பிறந்த தம்பி தனக்கு உதவி செய்யாமல் அறம் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறானே என்ற வெறுப்பு. 


வார்த்தைகள் வெடிக்கிறது. 


ஆனால், வீடணன் கோபம் கொள்ளவில்லை. வெறுக்கவில்லை. 


மிக மிக நிதானமாக பேசுகிறான். 


இராவணன் உணர்ச்சியின் விளிம்பில் நிற்கிறான் என்றால், வீடணன் அறிவின் உச்சியில் நிற்கிறான். 


இதை ஏன் இராவணன், வீடணன் என்று பார்க்க வேண்டும். 


நம் வீடுகளில் எப்போதும் நிகழ்வதுதானே. 


ஒருவர் கோபம் கொண்டு பேசினால், மற்றவரும் அதற்குச் சரியாக உணர்ச்சியில் வார்த்தைகளை விடக் கூடாது. உணர்ச்சி வசப்பட்டவர் பேசட்டும். எது சரியோ அதை மென்மையாக மற்றவர் எடுத்துச் சொல்லலாம். 


இதற்கு முன்னும் அதற்கு ஒரு உதாரணம் உண்டு. 


கானகம் போ என்ற சொல்லக் கேட்ட இலக்குவன் உணர்ச்சியில், கோபத்தில் ஏதேதோ பேசுகிறான். இராமன் நிதானமாக இருக்கிறான். "மறை கூறிய வாயால்" இப்படி பேசலாமா என்று அவனை திருத்துகிறான். 


அந்த நிதானம் வேண்டும். 


பாடல் 



'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக


ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,


கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?


வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_10.html


(Please click the above link to continue reading)



'வாழியாய் ! = நீ (இராவணனாகிய நீ) வாழ்க 


கேட்டியால்: = நான் (வீடணன்) சொல்வதைக் கேள் 


வாழ்வு கைம்மிக = வாழ்வில் உயர்வு பெற 


ஊழி  = ஊழிக் காலத்தை 


காண்குறு = காணும் வரை உள்ள 


நினது உயிரை ஓர்கிலாய், = உன் நீண்ட வாழ்நாளைப் பற்றி நீ நினைக்கவில்லை 


கீழ்மையோர் = கீழானோர் 


சொற்கொடு = சொன்ன சொற்களைக் கேட்டு 


கெடுதல் நேர்தியோ ? = உனக்கு நீயே கெடுதலை தேடிக் கொள்வாயா ?


வாழ்மைதான் = வாழ்க்கைதான் 


அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? = அறம் பிழைத்தவர்களுக்கு கிடைக்குமோ 


அறம் தவறி நடந்தால் வாழ்க்கை தொலைந்து போய் விடும். 


எவ்வளவு படித்து என்ன, எவ்வளவு தவம் செய்து என்ன, ,எத்தனை வரம் வாங்கி என்ன, அறம் இல்லை என்றால் அத்தனையும் பாழ். 


அவ்வளவு பெரிய இராவனனுக்கே அந்தக் கதி என்றால் மற்றவர் பாடு சொல்லவும் வேண்டுமோ?


நிறைய செல்வம் சேர்த்து விட்டால் போதும், அது நம்மை காக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். 


இராவணனுக்கு முன் எவ்வளவோ பெரிய பெரிய அரக்கர்கள் எல்லாம் இருந்தார்கள். அவனை விட பல மடங்கு வரம் பெற்று, பெரிய பலசாலிகளாக இருந்தார்கள். அறம் தவறி நடந்ததால், இருந்த இடம் தெரியாமல் போனார்கள். 


அரக்கர்கள்தான், தாங்கள் கட்டி வைத்த கோட்டை, ஆள், அம்பு, சேனை, வரம், எல்லாம் தங்களை காக்கும் என்று நினைப்பார்கள் என்கிறார் அபிராமி பட்டர்.



"அரணம் பொருள் என்று அருள் இல்லாத அசுரர்கள் தங்கள் முரண் அன்று அழிய"


என்பார். அரணம் என்றால் அரண், கோட்டை, காவல். அதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அது நம்மை காக்காது. 


அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,

‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் அடியார்,

மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.


அற வழியில் நட என்று நம் இலக்கியங்கள் முடிந்த இடத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. 


அறத்தை போதிப்பதும், அதை பாதுகாப்பதும், அதன் வழி மக்களை கொண்டு செல்வதும் தான் இலக்கியங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. 


மேலும் சொல்வான் 




Wednesday, March 9, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன்தூக்கார் செய்த உதவி

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன்தூக்கார் செய்த உதவி 


முதலில் செய்யாமல் செய்த உதவி பற்றிக் கூறினார். 


இரண்டாவது, காலத்தினால் செய்த உதவி பற்றிக் கூறினார். 


இப்போது, பதில் உதவி எதிர்பார்க்காமல் செய்யும் உதவி பற்றிக் கூறுகிறார். 


ஒருவருக்கு ஒரு உதவி செய்தால் அதனால் நமக்கு என்ன நன்மை விளையும் என்று எதிர் பார்க்காமல் செய்யும் உதவி. 


என் மேலதிகாரிக்கு என் வீட்டில் ஒரு விருந்து வைத்தேன் என்பது ஒரு உதவியா? அவரால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது. பதவி உயர்வோ, சம்பள உயர்வோ ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்த உதவி அது. 


ஒரு உயிர் வாடுகிறது. தவிக்கிறது. அதன் மேல் உள்ள கருணையால், அன்பால் உதவி செய்ய வேண்டும். இதைச் செய்தால் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்வது உயர்ந்த உதவி அல்ல. 


அப்படி பயன் எதிர் பாராமல் செய்த உதவி இருக்கிறதே அது கடலை விடப் பெரியது என்கிறார். 


பாடல் 


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_9.html


(Please click the above link to continue reading)


பயன்தூக்கார் = மறு பலனை எதிர்பார்க்காமல் 


செய்த உதவி = மற்றவருக்கு செய்த உதவி, நன்மை 


நயன்தூக்கின் = அந்த கருணையை, அன்பை நோக்கின் 


நன்மை கடலிற் பெரிது = அதன் நன்மை கடலை விடப் பெரியது 


சொல்லுக்கு பொருள் புரிகிறது. பொதுவான அர்த்தமும் புரிகிறது. 


இதை யாருக்குச் சொல்கிறார்?  உதவி செய்தவருக்கா? உதவி பெற்றுக் கொண்டவருக்கா? 


இருவருக்கும் இதில் செய்தி இருக்கிறது. 


கல்யாண வீட்டில் மொய் எழுதுகிறோம், பரிசு தருகிறோம். திரும்பி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதெல்லாம் ஒரு உதவி கிடையாது என்பதை புரிந்து கொள் என்கிறார் உதவி செய்பவனை பார்த்து. பசி என்று வந்து நிற்கும் ஒரு ஏழைக்கு பத்து ரூபாய் தருகிறாயா, அது கடலை விடப் பெரியது.  சின்ன உதவிதானே என்று நினைக்காதே. பயன் எதிர்பாராமல் செய்த எந்த உதவியும் மிகப் பெரியது. எனவே, அவற்றைச் செய் என்கிறார். கொடுத்தால் பெரிதாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் சும்மா இருந்து விடலாம் என்று இருந்து விடாதே. சின்ன உதவி கூட மிகப் பெரியதுதான், பலன் எதிர் பாராமல் செய்தால்.  


நிறைய செய்திதாள்களில், facebook போன்ற வற்றில் விளம்பரம் வரும். என் பிள்ளைக்கு உடம்புக்கு முடியவில்லை. மருத்துவ செலவு பெரிதாக ஆகும். பல இலட்சம் ஆகும். என்னிடம் வசதி இல்லை. உதவி செய்யுங்கள் என்று. ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் நாம் குறைந்து போய் விட மாட்டோம். இந்த நூறு ரூபாயில் என்ன வந்து விடப் போகிறது என்று நினைக்கக் கூடாது. பல நூறு ரூபாய்கள் சேர்ந்தால் அது பெரிய தொகையாகிவிடும். சின்ன உதவிதான். யாரோ ஒருவரின் கண்ணீரை துடைக்க பயன் படுகிறது அல்லவா? அது கடலை விடப் பெரியது. 


பயன் பெற்றவன், "என்ன பெருசா செஞ்சிட்டார்...இதெல்லாம் ஒரு உதவியா" என்று பெற்ற உதவியை அலட்சியம் செய்யக் கூடாது. செய் நன்றி மறக்கக் கூடாது. அதிகாரம் அது தான். நம்மால் அவருக்கு பதிலுக்கு ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு அது தேவையும் இல்லை. அப்படி இருந்தும் செய்தார் அல்லவா, அது மிகப் பெரிய விடயம் என்று மனதில் நினைக்க வேண்டும். 


நாம் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு உதவியையும் மிகப் பெரிதாக நினைக்க வேண்டும். ஏன்? சின்னது என்று நினைத்தால் மறந்து போவோம். 


"அந்தக் காலத்துல ஏதோ ஒரு வருஷம் எனக்கு பள்ளிகூடத்துக்குபீஸ் அடிச்சார், கொஞ்சம் நோட்டு புத்தகம் வாங்கித் தந்தார் ...அதெல்லாம் ஒரு பெரிய விடயமா ?" என்று கேட்கக் கூடாது. 


அது எல்லாம் விட, பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்யும் உதவி. பெற்றோர் பதில் உதவி எதிர் பார்த்து செய்வதில்லை. "நீ என் படிப்புக்கும் சாப்பாடுக்கும் எவ்வளவு செலவழித்து இருப்பாய் சொல். ஒரே செக்கில் செட்டில் பண்ணி விடுகிறேன்" என்று கூறினால் அந்த செலவின் மதிப்பு கடல் போல் பெரியது. அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது? 


எந்தப் பிள்ளையாலும் அந்தக் கடனை அடைக்க முடியாது. 


பயன் தூக்கா உதவி செய்ய வேண்டும். அப்படி பெற்ற உதவிகளை கடலைப் போல் பெரிதாக நினைக்க வேண்டும். 


இந்த மூன்று குறள்கள் மூலம் செய்யாமல் உதவி, காலத்தினால் செய்த உதவி, பலன் எதிர்பாராமல் செய்த உதவி என்று உதவியின் பெருமை கூறப்பட்டது என்கிறார் பரிமேலழகர். 


சரி, உதவியின் பெருமை கூறியாகிவிட்டது. 


அடுத்து என்னவாக இருக்கும்?





Sunday, March 6, 2022

திருக்குறள் - செய் நன்றி அறிதல் - காலத்தினால் செய்த உதவி

 திருக்குறள் - செய் நன்றி அறிதல் - காலத்தினால் செய்த உதவி 


முந்தைய குறளில் செய்யாமல் செஎய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்றார். .


அடுத்து இந்தக் குறளில் காலத்தினால் செய்த உதவி பற்றிக் கூறுகிறார். 


பாடல் 


காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_6.html


(Pl click the above link to continue reading)


காலத்தி னால் = உரிய காலத்தில் 


செய்த நன்றி  = செய்த உதவி 


சிறிதுஎனினும் = சிறிது என்றாலும் 


ஞாலத்தின் = இந்த உலகை விட 


மாணப் பெரிது = மிகப் பெரிது 


எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் தெரியும். ஆனால், பொருள் விளங்காது. 


அது என்ன காலத்தினால் செய்த உதவி? 


பரிமேலழகர் இல்லாவிட்டால் நமக்கு இது புரியவே புரியாது. 


ஒரு குவளை தண்ணீர் நமக்கு ஒருவர் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது என்ன பெரிய உதவியா?  சரி, ரொம்ப தாகமாக இருக்கும் போது தருகிறார் என்றே வைத்துக் கொள்வோம்...அப்போதும் அது என்ன பெரிய உதவியா? அவர் தராவிட்டால் வேறு ஒருவரிடம் வாங்கிக் கொள்கிறோம். அல்லது ஏதாவது கடையில் ஒரு பாட்டில் நீர் வாங்கிக் குடித்துக் கொள்கிறோம்.  இது என்ன பெரிய உதவி?


எங்கோ ஒரு பாலைவனத்தில் சிக்கிக் கொண்டோம், அல்லது உக்ரைன் போன்ற ஒரு யுத்தம் நடக்கும் ஊரில் சிக்கிக் கொண்டோம். தப்பிச் செல்கிறோம். வண்டி இல்லை. ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருக்கிறது. நாக்கு வரள்கிறது. அக்கம் பக்கம் கடை ஒண்ணும் இல்லை. அத்துவானக் காடு. தாகம் உயிர் போகிறது. கண் இருண்டு வருகிறது. அப்போது ஒருவர் ஒரு பாட்டில் நீர் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நீரின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? 


ஒரு நூறு ரூபாய் எவ்வளவு பெரிய உதவி? பெரிய உதவி ஒன்றும் இல்லை. 


அதி காலை. உடற் பயிற்சி என்று நடை போகிறோம். இருட்டில், ஒரு கார் நம் மேல் இடித்து விடுகிறது. அடிபட்டு இரத்தம் போய் கொண்டிருக்கிறது.  அக்கம் பக்கம் யாரும் இல்லை. செல் போன் எங்கே என்று தெரியவில்லை. அப்போது ஒருவர், நம்மை தூக்கி எடுத்து ஒரு ஆட்டோவில் போட்டு, ஆட்டோ ஓட்டுபவருக்கு நூறு ரூபாய் கொடுத்து, நம்மை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல அனுப்புகிறார். "நீ முன்னால போப்பா...நான் பின்னால என் வண்டியில வர்றேன்" என்று நம்மை சரியான நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்து உயிர் காக்கிறார். அவருக்கு செலவு என்னவோ நூறு ரூபாய் தான். 


இப்படி எவ்வளவோ உதாரணம் சொல்லலாம். 


பரிமேலழகர் சொல்கிறார் 


"ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்"


காலம் என்றால் இறுதி வந்த காலம். அல்லது மிகப் பெரிய இக்கட்டு. சிக்கல். அந்த நேரத்தில் செய்த உதவி. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், உலகை விடப்  பெரியது. 


நான் இதை இன்னொரு விதமாக சிந்தித்தேன். சரியா தவறா என்று தெரியவில்லை. 


ஒருவருக்கு உதவியை எவ்வளவோ வகையில் செய்யலாம்...பணம் கொடுக்கலாம், வேலை வாங்கித் தரலாம், சம்பந்தம் பேசி முடிக்கலாம், இப்படி ஆயிரம் வழியில் உதவி செய்யலாம். 


ஒருவருக்கு நம் நேரத்தை செலவழித்து செய்யும் உதவி மிகப் பெரியது. "காலத்தினால்" என்றால் நேரத்தின் மூலம் செய்யும் உதவி. 


ஏன் அது பெரியது?


பணம், பொருள் எல்லாம் பின் சம்பாதித்துக் கொள்ளலாம். உதவி பெற்றவர் கூட திருப்பித் தந்து விடலாம். ஆனால், நாம் நம் நேரத்தை செலவிட்டு உதவி செய்தால், அது திரும்பி வரவே வராது. யாரும் நமக்கு ஒரு மணி நேரம் அதிகம் தந்து விட முடியாது. திருப்பி தர முடியாத உதவி என்பதால் அது காலத்தால் செய்த உதவி. 


பொருளால் செய்த உதவி 

அறிவால் செய்த உதவி 

பணத்தால் செய்த உதவி 

அதிகாரத்தால் செய்த உதவி 


என்பது போல


காலத்தால் செய்த உதவி. 


அது மட்டும் அல்ல, ஒருவன் துன்பத்தில் இருக்கும் போது, அவன் அருகில் இருந்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை தேற்றுவது என்பது பெரிய விடயம். ஆயிரம் ரூபாய் பணம் யார் வேண்டுமானாலும் கொடுத்துவிட முடியும். இரண்டு நாள் அவன் கூட இருந்து அவனுக்கு ஆறுதலாக இருக்க முடியுமா ?


பணம் எல்லா துன்பத்துக்கும் விடை இல்லை. மனித நேயம், ஒருவருக்கு ஒருவர் கூட இருந்து, கை பிடித்து, முதுகை தடவிக் கொடுத்து, அழுவதற்கு தோள் தந்து பக்கத்தில் இருப்பது பெரிய விடயம். எனவே, ,அதை "காலத்தால்" செய்த உதவி என்று கூறி இருப்பாரோ?


இது யார் சொன்ன உரையும் இல்லை. இது இலக்கணப்படி தவறாகக் கூட இருக்கலாம். 


தோன்றியது. அவ்வளவுதான். 








Saturday, March 5, 2022

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் 


சீதையை விட்டுவிடு என்று வீடணன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாக இல்லை. சீதை மேல் கொண்ட காமம் ஒரு புறம். தம்பி இப்படிச் சொல்கிறானே என்று அவன் மேல் கோபம் மறுபுறம். காமமும், கோபமும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா அழிவுக்கு. அறிவு நீங்கி விடும்.


தனக்கு அறிவுரை சொன்ன வீடணன் மேல் கோபம் கொண்டு இராவணன் சொல்கிறான் 


"உன்னை கொன்றால் எனக்கு பழி வரும் என்பதால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். எனக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொள். என் கண் முன் நில்லாதே. ஓடி விடு" 


என்று அவனை விரட்டுகிறான் இராவணன். .


பாடல் 



‘பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;

ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;

விழி எதிர் நிற்றியேல் விளிதி “ என்றனன்

அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_5.html


((please click the above link to continue reading))


‘பழியினை = என் மேல் பழி வரும் என்று 


உணர்ந்து = உணர்ந்து 


யான் படுக்கிலேன் உனை; = உன்னை நான் கொல்லாமல் விடுகிறேன் 


ஒழி = விட்டு விடு 


சில புகலுதல் = இந்த மாதிரி சில்லறைத் தனமாக எனக்கு அறிவுரை கூறுவதை 


ஒல்லை நீங்குதி; = உடனடியாக ஓடிப் போய் விடு 


விழி எதிர் நிற்றியேல் = என் கண் முன் நின்றால் 


விளிதி “ என்றனன் = இறந்து போவாய் என்றான் 


காமம் மிகுந்தால் அறிவு மங்கும். யார் சொன்னாலும் மண்டையில் ஏறாது. 


கோபம் மிகுந்தாலும், அறிவு மங்கும். கோபம் கண்ணை மறைக்கும். 


தனக்குள்ள அறிவு மங்குவது மட்டும் அல்ல, பிறர் நல்லவை சொன்னாலும் அறிவு அதைப் பற்றாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும்.


நம்மிடம் யாராவது கோபித்து பேசினால் நமக்கு எப்படி இருக்கும்? நமக்கு பதிலுக்கு கோபம் வருமா வராதா? அது யாராகவும் இருந்துவிட்டு போகட்டும்....பெற்றோர், ஆசிரியர், கணவன், மனைவி, நட்பு, சுற்றம் என்று யார் நம் மேல் கோபம் கொண்டு பேசினாலும், பதிலுக்கு கோபப் படுவது இயற்கைதானே. 


நாம் வார்த்தைகளை அள்ளி வீசாவிட்டாலும், உள்ளுக்குள் கோபம் இருக்கும் தானே. 


இராவணன் இவ்வளவு சொன்ன பின், வீடணன் என்ன செய்தான்? எப்படிச் செய்தான்?


மேலும், சிந்திப்போம். 



Thursday, March 3, 2022

அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

 அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். அவள் மேல் காதல் வருகிறது. அன்பு பிறக்கிறது. ஏன் அவள் மேல் மட்டும் அன்பு, காதல்? மற்ற பெண்கள் எல்லாம் பெண்கள் இல்லையா? 


மற்றவர்களும் பெண்கள் தான். ஆனால், இந்த ஒரு பெண் அவள் மேல் அன்பு செலுத்த என்னைத் தூண்டுகிறாள். நான் என்ன செய்வது? அவளின் அருகாமை அவள் மேல் அன்பு சுரக்கச் செய்கிறது. அவள் எனக்கு காதல் என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தாள். 


அந்த ஒரு பார்வை, அந்தச் சின்ன புன்னகை, எல்லாம் அவள் மேல் காதலை மேலும் மேலும் தூண்டி விடுகிறது. 


என்று அவள் மேல் காதல் வந்ததோ, வேறு ஒரு சிந்தனையும் இல்லை. எந்நேரமும் அவள் நினைப்பு தான். 


உலகில் ஏதேதோ நடக்கிறது. எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. 


அவள் அன்பு ஒன்று போதும். ஜன்ம சாபல்யம் அடைந்து விடும். இனி ஒரு பிறவி இல்லை. செய்த அத்தனை பாவங்களும் அவள் அன்பில் கரைந்து போய் விட்டது. இனி பாவம் செய்யவே முடியாது. அவள் அன்பு இருக்கும் போது வேறு என்ன வேண்டும்? ஒரு ஆசையும் இல்லை. ஒரு தேடலும் இல்லை. கடவுளும், மதங்களும், சொர்கமும், வீடு பேறும் எல்லாம் அவளுள் அடக்கம். 


இனி இன்னொரு பெண்ணை பார்க்கும் ஆசை கூட இல்லை. அவளுக்கு மேலா இன்னொரு பெண் இருந்து விடப் போகிறாள்? 


அபிராமி அந்தாதி படிக்கும் போது மனம் கரைந்துதான் போகிறது. 



பாடல் 


உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_51.html


(Please click the above link to continue reading)


உமையும்  = அபிராமியும் 


உமையொரு பாகனும் = அவளை தன் உடலில் பாதியாகக் கொண்ட அவனும் 


 ஏக உருவில் வந்து = ஒரே உருவில் வந்து 


இங்கு = இங்கு 


எமையும் = என்னை 


தமக்கு அன்பு செய்ய வைத்தார் = அவர்கள் மேல் அன்பு செய்ய வைத்தார்கள் 


இனி எண்ணுதற்குச் = இனி சிந்தித்து குழம்ப 


சமையங்களும் இல்லை = நேரம் இல்லை, மற்ற கொள்கைகள், மதங்கள் இல்லை 


 ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை = மீண்டும் என்னை பெற்று எடுக்க ஒரு தாயும் இல்லை 



அமையும் = அமைதியுறும் 


அமையுறு தோளியர் = அழகிய தோள்களைக் கொண்ட பெண்கள் 


மேல் வைத்த ஆசையுமே = மேல் வைத்த ஆசையுமே 


புரிந்தால், நல்லது. 


புரியாவிட்டாலும், நல்லது தான். 



திருக்குறள் - செய்நன்றி அறிதல்

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் 


ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். செய்நன்றி அறிதலில் என்ன சொல்ல முடியும்? 


செய்த நன்றியை மறக்காதே என்று சொல்லலாம். மறந்தால் வரும் தீமை பற்றி சொல்லலாம். மறவாமல் இருந்தால் வரும் நன்மை பற்றிச் சொல்லலாம். மூணு குறள் போதும். இதில் வேறு என்ன இருக்கிறது என்று நாம் யோசிப்போம். 


வள்ளுவரின் சிந்தனையின் விரிவு இந்த அதிகாரத்தை படிக்கும் போது தெரியும். இப்படி கூட சிந்திக்க முடியுமா என்று நாம் வியப்போம். 


முதல் குறளில் செய்யாமல் செய்த உதவி பற்றி கூறுகிறார். 


அது என்ன செய்யாமல் செய்த உதவி?


நாம் ஒரு சிக்கலில், இக்கட்டில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மற்றவர்களிடம் போய் உதவி கேட்கவும் தயக்கமாக இருக்கிறது. கூச்சமாகவும் இருக்கிறது. கேட்டு தரவில்லை என்றால் அவமானமாக இருக்கும். அப்புறம் எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது என்ற சங்கடம்  வரும். 


அப்படி இருக்கும் போது, ஒருவர் தானே வந்து நமக்கு ஒரு உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு எப்படி இருக்கும். அவருக்கு நாம் முன்ன பின்ன உதவி செய்தது கிடையாது. அவரே வந்தார், செய்தார், போய் விட்டார் என்றால் எப்படி இருக்கும் 


அப்படிப் பட்ட உதவிக்கு இந்த உலகையும், வானத்தையும் தந்தாலும் போதாது என்கிறார். அதாவது அது அவ்வளவு உயர்ந்ததாம். 


பாடல் 


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_3.html


(pl click the above link to continue reading)


செய்யாமல் = இது வரை நாம் ஒருவருக்கு ஒரு வித உதவியும் செய்யாமல் இருக்கும் போது 


செய்த உதவிக்கு = அவர் நமக்கு செய்த உதவி 


வையகமும் = இந்த மண்ணுலகும் 


வானகமும் = அந்த வானுலகும் 


ஆற்றல் அரிது. = கொடுத்தாலும் போதாது 


நமக்கு வேண்டிய ஒருவர், கணவனோ/மனைவியோ, பிள்ளையோ, பெற்றோரோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மருத்துவர் சொல்கிறார் இரண்டு பாட்டில் இரத்தம் அவசரமாக தேவைப் படுகிறது என்கிறார். அப்போது அங்கு வந்த ஒருவர், "என் இரத்தமும் அதே குரூப் தான், எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு வேண்டியவரின் உயிர் காப்பாற்றப் படுகிறது. அந்த உதவிக்கு எவ்வளவு கைம்மாறு செய்யலாம்?


இதைப் படிக்கும் வாசகர்கள் பல பேர் பொருளாதார நிலைமையில் ஒரு நல்ல இடத்தில் இருக்கலாம். நல்ல வசதி இல்லாத ஒருவர் பெண்ணுக்கு கல்யாணம், பையனுக்கு கல்லூரியில் அனுமதி, வீடு ஏலத்துக்கு வருகிறது அதை தடுத்து நிறுத்த கொஞ்சம் பணம் வேண்டும் என்று கையை பிசைந்து கொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் 


நாம் போய், 'கவலைப் படாதீங்க, நான் இருக்கேன். பொண்ணு கல்யாணத்தை நடத்திறலாம் , பையனை அனுப்புங்க செக் கொடுத்து அனுப்புகிறேன், வீட்டு மேல எவ்வளவு கடன் இருக்கு...சொல்லுங்க வட்டியும் முதலும் கட்டி வீட்டை எடுத்துருவோம்...மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்று உதவி செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்...அது அவருக்கு எப்படி இருக்கும்?


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், செய்யாமல் செய்த உதவி மிகப் பெரியது என்றால், அதை நாம் ஏன் செய்யக் கூடாது? வாழ்க்கையில் ஒரு இக்கட்டான இடத்தில் உள்ள ஒருவருக்கு நாம் செய்யும் உதவி மிகப் பெரியது. நமக்கு உதவி செய்யாதவர்களுக்கு நாம் உதவி செய்து பழக வேண்டும். 


முன்ன பின்ன தெரியாத ஒருவருக்கு நாம் உதவி செய்வதால் நமக்கு என்ன நன்மை என்று கேட்டால், அருணகிரிநாதர் சொல்கிறார் "எங்காயினும் வரும் ஏற்பவருக்கு இட்டது" என்று. .




பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ

"எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட(து)" திடாமல்வைத்த

வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்

சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.


அருணகிரி ஒரு படி மேலே போகிறார். சரி, வேண்டியவர்களுக்கு கொடுக்காமல் வைத்து என்ன செய்யப் போகிறாய்? 


உங்கள் சிங்கார வீடும், பெண்களும் நிரந்தரமாக உங்களுடன் இருக்குமா? என்கிறார். 


உதவி என்று ஒருவர் கேட்டால், அவர் நமக்கு முன் என்ன உதவி செய்திருக்கிறார் என்று எண்ணாமல் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார். 


நமக்கு உதவி செய்யாத ஒருவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்றால், நமக்கு உதவி செய்தவர்களுக்கு கட்டாயம் மறு உதவி, கைம்மாறு செய்ய வேண்டும் என்று சொல்லாமல் பெறப்படும். 


உனக்கு உதவி செய்தவனுக்கு நீ மறு உதவி செய் என்று சொல்லுவது பெரிய விடயம் இல்லை. 


உனக்கு உதவி செய்யாதவனுக்கு நீ செய்யும் உதவி மண்ணை விட, விண்ணை விடப் பெரியது என்று சொல்லும் போது, உனக்கு உதவி செய்தவனுக்கு நீ செய்யும் உதவி அவ்வளவு பெரியதில்லை, எனவே, யோசிக்காமல் அதையும் செய் என்று கூறுகிறார். 


உதவி பற்றி இப்படி சிந்தித்து இருப்போமா?


அடுத்த முறை பூஜை செய்யும் போது, வள்ளுவருக்கு ஒரு பூ எடுத்துப் போடுங்கள். 


அது அவர் செய்த உதவிக்கு நாம் செய்யும் கைம்மாறு.