Monday, March 28, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - முன்னுரை

திருக்குறள் - நடுவு நிலைமை - முன்னுரை 


கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறத்தல், இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல், விருந்தோம்பல், இனியவை கூறல், செய்நன்றி அறிதல் வரை சிந்தித்தோம்.


வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் இனியவை கூறினால் அவர்கள் நம்மிடம் அன்போடு இருப்பார்கள். நமக்கு உதவிகள் செய்வார்கள். அந்த உதவிகளை மறக்கக் கூடாது என்பதற்காக செய்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தை வைத்தார். 


அடுத்து என்ன?


நமக்கு பல நட்பும், சுற்றமும் இருக்கும். அவர்கள் செய்த நன்றியை மறக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் செய்யும் தவறுகளை கண்டிக்காமல் இருக்கக் கூடாது. எப்போதும் நீதியின் பால், அறத்தின் பால் நிற்க வேண்டும். வேண்டியவன், வேண்டாதவன், நமக்கு உதவி செய்தவன் என்றெல்லாம் பார்க்கக் கூடாது. எப்போதும் நடுவு நிலைமையாக இருக்க வேண்டும். 


நடுவு நிலைமை என்ன பெரிய அறமா? அது நீதிபதிகளுக்கு வேண்டுமானால் இருக்கட்டும் எல்லோருக்கும் அது தேவையா என்ற கேள்வி வரும். 


சிந்திப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_28.html


(pl click the above link to continue reading)



ஒரு வீட்டில் பெற்றோர் மற்றும் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பிள்ளைக்கு நல்ல சோறு, துணிமணி, தின்பண்டம் என்று கொடுக்கிறார்கள். மற்ற பிள்ளைகளுக்கு அவ்வாறு கொடுப்பதில்லை என்றால் அது நடவு நிலைமை பிறந்ழ்த ஒன்றாகத்தான் இருக்கும். 


அந்தக் கொடுமைகள் நமது நாட்டில் நிகழ்ந்து இருக்கிறது.  ஆண் பிள்ளைகளுக்கு நல்ல உணவு, உடை எல்லாம் இருக்கும். பெண் பிள்ளைகளுக்கு சரியான உணவு கூட கொடுப்பதில்லை. நடுவு நிலைமை தவறிய குற்றம் அது. 


ஒரு நீதிபதி தன்முன் குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு வேண்டியவர் என்று அவருக்கு சாதமாக தீர்ப்பு சொல்லக் கூடாது. அது நடுவு நிலைமை பிறழ்ந்த குற்றம் 


மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசு, மக்களில் ஒரு சாராருக்கு நன்மையும், இன்னொரு சாராருக்கு தீமையும் செய்யுமானால், அதுவும் நடுவு நிலை பிறழ்ந்த குற்றமே. 


ஒரு வீட்டில், உறுப்பினர்களுக்கு இடையே வேறுபாடு வரலாம். வீட்டுக்கு பெரியவர், மூத்தவர் என்று ஒருவர் இருப்பார். அவர் நடுவு நிலைமை மாறாமல் தீர்புச் சொன்னால் அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். 


அம்மாவுக்கும், மனைவிக்கும் நடுவில் கருத்து வேறுபாடு இருந்தால் அந்தக் கணவன்/மகன் நடுவு நிலை காக்க வேண்டும். இல்லை என்றால் குடும்பத்தில் குழப்பம் தான். 



ஊருக்கும் அப்படித்தான். நாட்டாமை, பஞ்சாயத்து தலைவர் என்று ஒருவர் இருந்தால், அவர் நடு நிலை மாறாமல் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். அவர் தவறினால், அந்த சமுதாயம் அழியும். 


இன்றும், நீதிபதிகளுக்கு ஏன் அவ்வளவு மரியாதை? நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தால் கூட நீதிக்கு கட்டுப் பட்டுதான் ஆக வேண்டும். 


ஆண்டியையும் அரசனையும் ஒரு தராசில் வைத்து நிருப்பது நீதி பரிபாலனம். 


நடுவு நிலை தவறும் இடத்தில் எல்லாம் அழிவு ஆரம்பமாகும். 


உலக அளவிலும் சரி. வீட்டு அளவிலும் சரி. நிர்வாகத்திலும் சரி. அதுதான் விதி. 


நடுவு நிலைமை என்பது பெரிய விஷயம். நாம் அதை சரியாக புரிந்து கொள்வதில்லை. பெரிதாக நினைப்பது இல்லை. 


அந்த நடுவு நிலைமையை பற்றிக் கூறுவது இந்த அதிகாரம். வேலை மெனகெட்டு ஒரு அதிகாரம் செய்கிறார் என்றால் அது எவ்வளவுவ் பெரிய விடயம் என்று புரிந்து கொள்ளளலாம். 


தொடருவோமா?





No comments:

Post a Comment