Wednesday, March 30, 2022

திருக்குறள் - நடுவு நிலைமை - தகுதி

திருக்குறள் - நடுவு நிலைமை - தகுதி 


செய்நன்றி அறிதலின் பின் நடுவு நிலைமை என்ற அதிகாரத்தை வைக்கிறார். அது ஏன் என்று முந்தைய ப்ளாகில் சிந்தித்தோம். 


நடுவு நிலையில் நிற்றல் என்ற ஒரு அறத்தை கடைபிடித்தால் போதும். மற்றதெல்லாம் தானாகவே வரும் என்கிறார் வள்ளுவர். 


அது எப்படி வரும் ?


முதலில் குறளைப் பார்ப்போம்.


பாடல் 


 தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

பாற்பட்டு ஒழுகப் பெறின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_30.html


(pl click the above link to continue reading)


தகுதி = தகுதி 


எனஒன்று நன்றே = என்ற ஒன்று நன்று 


பகுதியால் = பகுதியால் 


பாற்பட்டு = அதன் பால் 


 ஒழுகப் பெறின் = ஒழுகப் பெறின் 


எதாவது புரிகிறதா? ஒன்றும் புரியாது. 


பரிமேலழகர் உரை இல்லை என்றால் இதை எல்லாம் புரிந்து கொள்ளவே முடியாது. 


"தகுதி" என்றால் இங்கே நடுவு நிலைமையில் நிற்கும் தகுதி என்கிறார். அது எப்படி சொல்ல முடியும்? தகுதி என்றால் நடுவு நிலைமை என்று எங்கே சொல்லி இருக்கிறது என்று கேட்டால் எங்கேயும் சொல்லவில்லை. இந்த அதிகாரம் நடுவு நிலைமை என்ற அதிகாரம், எனவே இங்கே தகுதி என்பது நடுவு நிலையில் நிற்கும் தகுதி என்று கொள்கிறார். 


அடுத்து, 


"என ஒன்று நன்றே" என்பதை சொற்களை மாற்றிப் போட்டு பொருள் கொள்கிறார். "ஒன்று நன்றே" என்பதை "நன்றே ஒன்று" என்று கொள்கிறார். அதாவது, அது ஒன்றுதான் நல்லது, அல்லது உயர்ந்தது அல்லது சிறந்தது என்று கொள்ள வேண்டும் என்கிறார். 


அடுத்து, 


"பாற்பட்டு" என்றால் அதன் பால் ஒழுகி என்று பொருள். எதன் பால்?  உறவு, பகை, நொதுமல் என்ற மூன்றின் தன்மை அறிந்து அதன் பால் ஒழுகுதல் என்கிறார்.


"ஒழுகப் பெறின்" என்றால் அப்படி அந்த மூவருள்ளும் நடுவு நிலைமையாக இருக்க முடியுமானால் என்று அர்த்தம். 


பெறின் என்றால் அது மிகக் கடினம் என்று கொள்ள வேண்டும். 


"நல்லா படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம்" என்றால் என்ன அர்த்தம்? படிப்பது கடினம் என்று பொருள். 


செஞ்சால் நல்லது என்றால் செய்வது கடினம் என்று பொருள். 


"நடுவு நிலைமை என்ற ஒரு அறமே சிறந்தது, அது நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்று பகுதியுள் அதற்கு ஏற்ப நடக்க முடியுமானால்" 


என்று விரியும். 


அது இருக்கட்டும், நடுவு நிலைமை எப்படி சிறந்த அறமாகும்?

 

ஒருவன் நடுவு நிலைமையில் இருக்கிறான் என்றால், அவனுக்கு எது சரி, எது தவறு என்று தெரிந்திருக்க வேண்டும். 


அடுத்ததாக, உறவு, நட்பு, பகை என்பவை எல்லாம் தாண்டி எது சரியோ அதன் படி நிற்கும் மன உறுதி இருக்கும் அவனிடம். 


மூன்றாவதாக, அப்படி சரி தவறு தெரிந்து, சரியான பாதையில் செல்லும் மன உறுதி உள்ள ஒருவன் தன் வாழ்விலும் சரியான ஒன்றையே தேர்ந்து எடுத்து அதன் பால் செல்வான் அல்லவா? 


எனவே, நடுவு நிலைமை என்பது சிறந்த அறம் என்று தெரியும் என்கிறார். 


சந்தேகம் இருந்தால் அடுத்த ஒரு வாரத்துக்கு இதை கடைப்பிடித்து பாருங்கள். எவ்வளவு மாரம் உங்களில் வருகிறது என்று தெரியும். 




No comments:

Post a Comment