Tuesday, June 29, 2021

திருக்குறள் - இல்லறம் - இல்லறத்தின் நோக்கம்

திருக்குறள் - இல்லறம் - இல்லறத்தின் நோக்கம்


வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். அந்த நோக்கத்தை நோக்கி ஒவ்வொரு நாளும் முன்னேற வேண்டும். 


வீடு பேறு அடைவதுதான் வாழ்வின் நோக்கம் என்று நம்மவர்கள் கொண்டார்கள். 


இல்லை. எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. கடவுளே இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது. பின் எப்படி அவரை அடைவதை நான் என் வாழ்வின் குறிக்கோளாக கொள்ள முடியும் என்று கேட்கலாம். நியாயமான கேள்வி. 


வீடு பேறு வேண்டாம். வேறு என்ன குறிக்கோள் இருக்க முடியும்? 


செல்வம் சேர்ப்பது, இன்பமாக இருப்பது, புகழ் அடைவது,  பெரிய பெரிய கண்டுபிடிப்புகள் செய்வது, கவிதை எழுதுவது, ஊரு சுற்றுவது என்று எவ்வளவோ குறிக்கோள்கள் இருக்கலாம். 


சரி, அவற்றை அடைந்த பின் என்ன செய்வது? 



அவற்றை அடைந்தவர்கள் என்ன செய்கிறார்கள்? 


எந்த ஒரு குறிக்கோளும் முடிவு அல்ல. ஒன்றை அடைந்தால் மனம் அதைவிட பெரியது ஒன்றை நாடும். 


ஒரு இலட்சம் சேர்ப்பது குறிக்கோளாக இருந்தால், அது அடைந்த பின், பத்து இலட்சம், பின் கோடி, பின் பத்து கோடி,  என்று விரிந்து கொண்டே போகும். 


அப்படி என்றால் அதற்கு மேல் ஒன்று இல்லை என்ற ஒரு நிலை வரை நாம் சென்று கொண்டே இருப்போம் அல்லவா?  அதை விட பெரியது, சிறந்தது என்று ஒன்று இல்லை என்றால், அது தான் கடைசி. அதை அடைந்த பின் வேறு ஒன்று இல்லை. 


அப்படி ஒன்று இருக்கிறதா என்ன ? அது என்ன? 




(click the above link to continue reading)


அதை நீங்கள் கடவுள் என்று வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது தன்னைத் தான் அறிவது என்று வைத்துக் கொண்டாலும் சரி, அல்லது வேறு எந்த பெயரை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். 


வள்ளுவர் அதற்கு வீடு பேறு என்று வைத்து இருக்கிறார். அவ்வளவுதான். 


அதை அடைவதுதான் வாழ்வின் நோக்கம். எல்லோருக்கும். அதுவே குறிக்கோள்.


அதை எப்படி அடைவது?

துறவறத்தின் மூலமே அடைய முடியும். 


சரி.


துறவறத்தை எப்படி அடைவது?


இல்லறத்தின் மூலமே அதை அடைய முடியும். (விதி விலக்குகள் இருக்கலாம்) 


எனவே, முதலில் இல்லறம் பற்றி சொல்லத் தொடங்குகிறார். 


இல்லறம் என்பது வீடு பேறு அடைய ஒரு வழியே தவிர அதுவே முடிவு அல்ல. 


பலர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், கல்யாணம் பண்ணி, பிள்ளை குட்டிகள், பேரன் பேத்திகளோடு சந்தோஷமாக வாழ்வதுதான் வாழ்வின் நோக்கம் என்று. 


அது அல்ல. 


இல்லறம் முதல் படி. 


அடுத்த படி, துறவறம். 


அடுத்த படி, வீடு பேறு. 


முதல் படியிலேயே இருந்து விடக் கூடாது. 


கோவிலுக்குப் போனால் சுண்டல் கிடைக்கும். 


சுண்டலுக்காக கோவிலுக்கு போவதா?


இல்லறத்தில் ஆண் பெண் இன்பம், பிள்ளைகள் இன்பம், பொருள்களினால் வரும் இன்பம், சுற்றம், நட்பு இவற்றால் வரும் இன்பம் என்று இதெல்லாம் இருக்கும். இவை எல்லாம் சுண்டல் போல. 


கோவிலுக்குப் போய், வேறு ஒன்றும் செய்யாமல்,  சுண்டல் மட்டும்  வாங்கி உண்டு விட்டு வந்தால் எப்படி இருக்கும். 


கணவன், மனைவி, பிள்ளைகள், சாப்பாடு, டிவி,  அரட்டை, இதையெல்லாம் கடந்து மேலே போக வேண்டும். 


ஆசார அனுஷ்டானங்களிலேயே வாழ்க்கை முடிந்து விடக் கூடாது. 


இல்லறம் என்பது ஒரு நீண்ட சாலை.  திருமணத்தில் தொடங்கி வீடு பேறு வரை அந்த சாலை செல்லும். நடந்து கொண்டே இருக்க வேண்டும். தொடங்கிய இடத்திலேயே அமர்ந்து விடக் கூடாது. 


போகிற வழியில் கொஞ்சம் பசிக்கும். வழியில் ஒரு டீ கடை இருக்கும். ஒரு தேநீர் அருந்தலாம். 


அடடா என்ன அருமையான தேனீர். நான் இங்கேயே இருந்து விடுகிறேன். மேலே போக வேண்டாம் என்று அந்த டீ கடையிலேயே உட்கார்ந்து இருபதல்ல வாழ்க்கை. 


எவ்வளவு சுவையாக இருந்தாலும், குடித்த தேநீருக்கு காசு கொடுத்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.


எப்படி போவது என்று வள்ளுவர் சொல்கிறார். 


அவர் கை பிடித்துச் செல்வோமா?


Sunday, June 27, 2021

திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை - பாகம் 2

 

 திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை  - பாகம் 2


( இதன்  முதல் பாகத்தை இங்கே காணலாம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1_25.html

)


பத்து அதிகாரங்களின் தலைப்புகளையும் அவற்றின் முறைமைகளையும் பார்த்தோம். 


இனி மேலே தொடர்வோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/2_27.html

(please click the above link to continue reading)


ஒழுக்கம் உடைமை வரை பார்த்தோம்.


11. பிறனில் விழையாமை - இன்பம்தானே வேண்டும், அது யாரிடம் இருந்து வந்தால் என்ன? தன் மனைவியாக இருந்தால் என்ன, மாற்றான் மனைவியாக இருந்தால் என்ன என்று ஒழுக்கம் தவறிச் செல்லாமல், ஒழுக்கம் உடையவர்கள் பால் தான் பிறன் மனைவியை நோக்காமல் இருக்கும் பாங்கு இருக்கும் என்பதால், ஒழுக்கம் உடைமைக்கு பின் இதைக் கூறினார். 



12. பொறையுடைமை - குடும்பம், சமுதாயம் என்று வந்து விட்டால் சில தவறுகள் நிகழ்வது இயற்கை. எல்லாவற்றிற்கும் சரிக்கு சரி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் குடும்பமும், நாடும் சீரழிந்து விடும். இல்லறத்துக்கு பொறுமை அவசியம். தெரிந்தோ, தெரியாமலோ பிறர் செய்த குற்றங்களை பொறுப்பது, பொறையுடைமை. 


13. அழுக்காறாமை - மற்றவர்கள் பெறுவதை கண்டு பொறாமைப் படுவது. குடும்பம், சமுதாயம் என்றால் ஏற்றத் தாழ்வுகள் கட்டாயம் இருக்கும். ஐயோ அவனுக்கு இவ்வளவு செல்வமா, புகழா , எனக்கு ஒன்றும் இல்லையே என்று மற்றவர்கள் ஆக்கம் கண்டு பொறாமை படாமல் இருத்தல் அழுக்காறாமை. 


14. வெஃகாமை : பிறர் பொருளை கவர நினைத்தல். பொறாமை வந்தால், தான் முன்னேறாவிட்டாலும், மற்றவனை முன்னேற விடக் கூடாது என்று அவன் பொருளை கவர நினைப்பது. எனவே, இது அழுக்காறாமை என்ற அதிகாரத்தின் பின் வைக்கப்பட்டது. 


15. புறங்கூறாமை - இது சொல்லினால் வரும் குற்றம். காணாததை கண்டது போல் கூறுவது. ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி தவறாக இல்லாததையும் பொல்லாததையும் கூறுவது.  இது சொல் குற்றம். 


16. பயனில சொல்லாமை - இதும் ஒரு சொல் குற்றம். வெட்டிப் பேச்சு, யாருக்கும் ஒரு பலனும் தராத பேச்சு. இவை சொல்லில் நிகழும் குற்றங்கள். இவற்றை கடிய வேண்டும். 


17. தீவினையச்சம் - மனம், செயல், வாக்கு இவற்றால் நிகழும் அனைத்து குற்றங்களையும் கண்டு அச்சம் கொள்ளுதல். தவறு செய்ய அஞ்ச வேண்டும். என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் தானே குற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, குற்றம் நிகழாமல் இருக்க அவற்றைப் பற்றி அச்சம் கொள்ள வேண்டும். 



18. ஒப்புரவு அறிதல் - உலகோடு ஒட்டி வாழ்தல். திருக்குறளில் இப்படி சொல்லி இருக்கிறது. எனவே நான் இப்படித்தான் வாழ்வேன் என்று உலகத்தோடு முரண் பட்டு வாழ்க் கூடாது. இங்கே உலகம் என்று கூறுவது, நல்லவர்களை, பெரியவர்களை. புத்தகங்கள் பல கூறும். உலகம் மாறிக் கொண்டே இருக்கும். உலகோடு ஒட்டி வாழ வேண்டும். 


19. ஈகை: வறியவர்களுக்கு, ஏழைகளுக்கு, துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது. 


20.புகழ்: இவை எல்லாம் செய்வதால் நிகழ்வது புகழ். 


இதோடு இல்லறம் பற்றிய அதிகாரங்கள் நிறைவு பெறுகின்றன. 


இருபது அதிகாரங்கள். இருநூறு குறள்கள். இல்லறத்தின் ஒவ்வொரு பகுதியையும் மிக மிக நுணுக்கமாக அலசி ஆராய்ந்து, தொகுத்து கூறியுள்ளார். 


இதற்கு மேல் இல்லறம் பற்றி சிந்திக்கக் கூட முடியாது. 


மற்ற எல்லா புத்தகங்களையும் மூட்டி கட்டி வைத்து விடலாம். இல்லற வாழ்க்கைக்கு இதற்கு மேல் சொல்ல ஏதும் இல்லை. இதை முழுமையாக புரிந்து கொண்டு, வாழ்வில் கடைப் பிடித்தாலே போதும். 


இனி ஒவ்வொரு அதிகாரமாக சிந்திப்போமா?




Saturday, June 26, 2021

பெரிய புராணம் - தெளிவு இல்லதே

 பெரிய புராணம் - தெளிவு இல்லதே 


வாழ்க்கை பெரிய துரித கதியில் சென்று கொண்டு இருக்கிறது. 


அனைத்திலும் ஒரு வேகம். ஒரு பதற்றம். ஒவ்வொரு வாகனமும் ஒன்றை விட ஒன்று முந்திக் கொண்டு வருகின்றன. எவ்வளவு சீக்கிரத்தில், எவ்வளவு வேகமாக செல்ல முடியும் என்று போட்டி போட்டுக் கொண்டு பறக்கின்றன. 


எதற்கும் நேரம் இல்லை. மழை, வெயில், மின் கம்பியின் மேல் இருக்கும் அந்த சின்னக் குருவி, குழந்தையின் சிரிப்பு, அதிகாலைச்  சூரியன், அந்தி சந்திரன்..இப்படி ஆயிரம் ஆயிரம் இனிமையான விடயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. எதையும் பார்க்க, இரசிக்க, அனுபவிக்க  நேரம் இல்லை. 


பணம், பொருள், சொத்து, அதிகாரம், பதவி, எதிர்கால கனவு/பயம் என்று வாழ்கை ஒரு சாரம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. 


பெரிய புராணம் போன்ற மிகப் பெரிய இலக்கியத்தை எழுத ஆரம்பித்த சேக்கிழார், ஆற்றின் நீரோட்டத்தை, நின்று, இரசித்து, அனுபவித்து எழுதுகிறார்.


ஆற்றின் நீரோட்டம் கலங்கலாக இருக்கிறது. ஏன் கலங்கி இருக்கிறது என்றால், பெண்கள் ஆற்றில் நீராடுவார்கள், அவர்கள் உடலில் உள்ள சந்தனம், குங்குமம் போன்றவை நீரில் கலந்ததால் அந்த நீர் தெளிவு இல்லாமல் இருக்கிறதாம். 


பாடல் 


வாச நீர்குடை மங்கையர் கொங்கையிற்  

பூசு கும்கும மும்புனை சாந்தமும்

விசு தெண்டிரை மீதழித் தோடுநீர்

தேசு டைத்தெனி னுந்தெளி வில்லதே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_26.html


(please click the above link to continue reading)


வாச நீர் = வாசம் உள்ள நீர் 


குடை = குடைந்து குடைந்து நீராடும் 


மங்கையர் = பெண்கள் 


கொங்கையிற்  = மார்பில் 


பூசு  = பூசிய 


கும்கும மும் = குங்குமமும் 


புனை சாந்தமும் = அணிந்த சந்தனமும் 


விசு = வீசி 


தெண்டிரை =  அலையால் 


மீதழித் தோடுநீர் = மிகையாக அழித்துக் கொண்டு ஓடும் நீர் 


தேசு = ஒளி 


உடைத்தெனி னுந்  = பொருந்தியதாயினும் 


தெளி வில்லதே. = தெளிவு இல்லாமல் கலங்கி இருந்தது 


சரி, இதில் என்ன இருக்கிறது ? பெண்கள் குளிக்கிறார்கள். சந்தனமும், குங்குமமும் நீரில் கலந்து இருக்கிறது. நீர் தெளிவாக இல்லை.  இதெல்லாம் தெரிந்து என்ன ஆகப் போகிறது? 


இயற்கையை இரசிக்க தெரிந்து கொள்ள வேண்டும். எப்படி இரசித்து இருக்கிரார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். அட, இதை இப்படியும் இரசிக்க முடியுமா என்று வியக்க வைக்கிறது. 


Wordsworth என்ற ஆங்கில் கவிஞர் ஒரு கிராமத்தில் வயலோரம் நடந்து போகிறார். அங்கே யாரோ ஒரு முகம் தெரியாத பெண்  கதிர் அறுத்துக் கொண்டிருக்கிறாள். ஏதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருக்கிறாள். அது என்ன பாட்டு என்றும் அவருக்குத் தெரியாது. 

இதில் என்ன இருக்கிறது? 

அதைப் பற்றி ஒரு பாடல் எழுதி இருக்கிறார். காலத்தால் அழியாத பாடல். 



The Solitary Reaper

Behold her, single in the field,
Yon solitary Highland Lass!
Reaping and singing by herself;
Stop here, or gently pass!
Alone she cuts and binds the grain,
And sings a melancholy strain;
O listen! for the Vale profound
Is overflowing with the sound.

No Nightingale did ever chaunt
More welcome notes to weary bands
Of travellers in some shady haunt,
Among Arabian sands:
A voice so thrilling ne'er was heard
In spring-time from the Cuckoo-bird,
Breaking the silence of the seas
Among the farthest Hebrides.

Will no one tell me what she sings?—
Perhaps the plaintive numbers flow
For old, unhappy, far-off things,
And battles long ago:
Or is it some more humble lay,
Familiar matter of to-day?
Some natural sorrow, loss, or pain,
That has been, and may be again?

Whate'er the theme, the Maiden sang
As if her song could have no ending;
I saw her singing at her work,
And o'er the sickle bending;—
I listened, motionless and still;
And, as I mounted up the hill,
The music in my heart I bore,
Long after it was heard no more.


இரசிக்க பழக வேண்டும்.

இரசிக்க ஆயிரம் இருக்கிறது. இரசிக்க இரசிக்க வாழ்கை இனிமையாக இருக்கும். 



Friday, June 25, 2021

திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை - பாகம் 1

 திருக்குறள் - இல்லறம் - ஒரு பருந்துப் பார்வை  - பாகம் 1 


வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது ஒரு முழு வாழ்க்கை நடைமுறை. அது ஒரு குடும்பத்தோடு நிற்கும் ஒன்று அல்ல. 


வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது வீடு பேற்றை அடையும் வழி. இல்லறம் என்பது வீடு குடும்ப வாழ்க்கையோடு முடிவது அல்ல. அது முதல்படி.  பெரும்பாலோனோர், இல்லறம் என்பது குடும்ப வாழ்கை என்று நினைப்பார்கள். அல்ல. 


குடும்பம், சமுதாயம், துறவறம், வீடு பேறு என்று ஒரு நீண்ட பாதையின் முதல் படி இல்லறம். 


ஒவ்வொரு படியும் ஒரு அதிகாரம். ஒவ்வொரு அதிகாரமும் ஒன்றில் இருந்து மற்றொன்றுக்குப் போகும் படி. திருக்குறளை மனம் போன படி படிக்கக் கூடாது. அதிகாரங்கள் என்பது ஒரு நெறியோடு ஒன்றின் பின் ஒன்றாக சொல்லப்பட்டு இருக்கிறது.  


எனக்கு பிடித்த அதிகாரம் என்று ஏதோ ஒரு அதிகாரத்தை நடுவில் எடுத்துப் படிக்கக் கூடாது. 


சரி, வள்ளுவர் காட்டும் இல்லறம் எப்படி விரிகிறது என்று அதிகார முறைமையால் பார்ப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1_25.html

(please click the above link to continue reading)


1. இல்வாழ்க்கை - திருமணம், குடும்பம், குடும்பத் தலைவனின் கடமைகள். இது தொடக்கம். பலருக்கு இதுவே முடிவாக தோன்றும். 


2. வாழ்க்கைத் துணை நலம் - மனைவியின் முக்கியத்துவம், அவள் பொறுப்புகள், இல் வாழ்க்கையில் அவளின் பங்களிப்புகள் பற்றி கூறுகிறார். 


3. புதல்வர்களைப் பெறுதல் - அன்பான இல்வாழ்வின் வெளிப்பாடு பிள்ளைகள். பிள்ளைகளின் கடமைகள், அவர்களால் பெறும் நன்மைகள். 


4. அன்புடைமை - கல்யாணம் பண்ணினோம், பிள்ளைகளப் பெற்றோம், வளர்த்தோம் என்று இல்லாமல், எப்படி இல்லறம் என்பது அன்பின் வெளிப்பாடு என்று கூறும் அதிகாரம். ஒருவர் மேல் அன்பு செலுத்தாத இல்லறம் என்ன இல்லறம்? திருமணம் ஆகாத ஒரு பிரம்மச்சாரிக்கு அன்பு என்றால் என்ன என்று எப்படித் தெரியும்? என் பிள்ளைக்கு இது பிடிக்கும் என்று தனக்குப் பிடித்ததை தான் உண்ணாமல் பிள்ளைக்கு கொடுத்து அது மகிழ்ச்சியாக உண்பது கண்டு மகிழும் மனம் இல்லறத்தில் உள்ளவனுக்குத்தான் வரும். அன்பு வளர வேண்டுமானால், இல்லறம் வேண்டும். 


5. விருந்தோம்பல் - கணவன், மனைவி, பிள்ளைகள், இது மட்டுமா இல்லறம். சுற்றமும், நட்பும் வேண்டாமா? அவர்களை வீட்டுக்கு அழைத்தல், அவர்களை உபசரித்தல், அவர்கள் மேல் அன்பு பாராட்டுதல் என்று பெரிய வளையம் வேண்டாமா. அது பற்றிக் கூறுவது விருந்தோம்பல். விருந்துக்குப் போவது என்றால் யார் வீட்டுக்குப் போக முடியும்? திருமணம் ஆகாத ஒரு பெண் தனித்து இருக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். அவள் வீட்டுக்கு விருந்துக்குப் போக முடியுமா? அது போல் தான் தனியாக இருக்கும் ஒரு ஆண் வீட்டுக்கு யார் விருந்துக்குப் போவார்கள்? அவன் என்ன செய்து வைத்து இருப்பானோ என்ற பயம் இருக்கும் அல்லவா? 


6. இனியவை கூறல் - எப்படி விருந்தினை ஓம்புவது? போற்றுவது. வந்தவர்களுக்கு நிறைய சாப்பாடு போட்டால் போதுமா? அவர்களோடு எப்படி அன்பாகப் பேசுவது என்பது பற்றி கூறும் அதிகாரம். 

7.  செய்நன்றி அறிதல் - விருந்தை போற்றி, இனியவை கூறினால், விருந்தினர்கள் அவர்களால் முடிந்த உதவியை நமக்குச் செய்வார்கள்.  அப்படி நன்றி செய்தால், அதை மறக்காமல் இருப்பது பற்றி கூறும் அதிகாரம். 


8. நடுவு நிலைமை - குடும்பம், கணவன், மனைவி, பிள்ளைகள், சுற்றம், நட்பு என்று அமைந்து விட்டது. இதில் நமக்கு வேண்டியவர்களுக்கு இடையிலோ அல்லது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலோ ஏதோ ஒரு பிணக்கு வந்து விடலாம். எனக்கு பிடித்தவர்கள் என்று நடு நிலை மாறி பேசவோ செய்யக் கூடாது.  அப்படி நடு நிலை மாறாமல் இருப்பவர்களை வீடும், நாடும் ஏற்றுக் கொண்டு அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். குடும்பத்தில் மூத்தவர், பெரியவர் , ஊருக்கு பெரிய மனிதர் என்று நல்லவர்கள் நடு நிலை தவராதவர்களை பற்றிக் கூறும் அதிகாரம். 


9. அடக்கம் உடைமை - நடுவு நிலை என்றால் யார் செய்தது தவறு, யார் செய்தது சரி என்று கூற வேண்டும். அதற்கு புலன் அடக்கம் வேண்டும். பற்று இருக்கக் கூடாது. எனவே அடுத்த அதிகாரம், அடக்கம் உடைமை. 


10. ஒழுக்கம் உடைமை - நாடும், வீடும் நலமாக இருக்க வேண்டும் என்றால் குடிகள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். புலன் அடக்கம் வந்தால் தான் ஒழுக்கம் வரும்.  எனவே, அடக்கம் உடைமைக்கு அடுத்து ஒழுக்கம் பற்றி கூறுகிறார். 


இன்னும், கொஞ்சம் அதிகாரங்கள் இருக்கின்றன. யோசித்துப் பாருங்கள் இதுவே எவ்வளவு விரிவாக ஆழமாக இருக்கிறது என்று.  நினைக்க நினைக்க பிரமிப்பு ஊட்டும் படைப்பு. 


ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு அடியாக கை பிடித்து இனிய இல்லறம் நடத்த வழி சொல்லித் தருகிறார். 


இதற்கு மேல் சிந்திக்கவே முடியாது என்ற அளவுக்கு அனைத்தையும் தொகுத்து, வழிமுறைப் படுத்தி, ஒரு நேர்த்தியோடு, அழகோடு சொல்கிறார். 


குறள் படித்த பின் வேறு ஒரு நூலே தேவை இல்லை. 


மற்ற அதிகாரங்களை பற்றி நாளை பட்டியல் இடுவேன். அதற்கு முன் ஒரு வார்த்தை. 


வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது ஆண் மகனை தலைமை பொறுப்பில் அமர்த்துகிறது. ஆணுக்கு கடமைகளைச் சொல்லி, பெண் அவனுக்கு துணை செய்ய வேண்டும் வழி காட்டுகிறது.  பெண்ணுக்குத் தலைமைப் பொறுப்பை தரவில்லை. அதற்காக அவளின் பெருமையை, பங்களிப்பை குறைக்கவில்லை. ஒரு நிறுவனம் சிறப்பாக நடக்க வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தில் எல்லோரும் சிறப்பாக உழைக்க வேண்டும். அதற்காக எல்லோரும் தலைமை பொறுப்பில் (CEO) இருப்பேன் என்று சொல்லுவது அடாவடித்தனம் இல்லையா. 


இன்றைய பெண்ணிய சிந்தனையாளர்களுக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். தவறில்லை.  பெண்ணை முதன்மை படுத்தி, ஆண் அவளுக்கு துணை செய்ய வேண்டும் என்று ஒரு குடும்ப கோட்பாடு வரையலாம். 


குறள் சிந்தனை தவறு என்று சொல்பவர்கள், அப்படி ஒரு கோட்பாட்டை வரையறுத்து, பாடல் எழுதி அதை பிரபலப் படுத்தலாம். அதை இந்த வருங்கால சமுதாயம் ஏற்றுக் கொண்டால், அப்படி ஒரு வாழ்க்கை முறை அமையலாம். தவறில்லை. 


குறள் தவறு என்று சொல்பவர்கள் முயற்சி செய்ய வேண்டும். 


வள்ளுவருக்கு ஒன்றும் தெரியாது, பரிமேலழகருக்கு ஒன்றும் தெரியாது, எங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பவர்கள் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்தி புதிய குறள் எழுத வேண்டும். அதை இந்த சமுதாயம் ஏற்றுக் கொள்ள முயற்சிகள் செய்ய வேண்டும். 


மீதி அதிகாரங்களை நாளை பார்ப்போமா ?




Thursday, June 24, 2021

பெரிய புராணம் - உலகம் உய்ய

 பெரிய புராணம் - உலகம் உய்ய 


சோழ நாட்டின் அரசன் அநபாய சோழன் என்பவன். அவன் ஒரு காலகட்டத்தில் பல சிற்றின்ப நூல்களை படித்து பொழுதை போக்கிக் கொண்டிருந்தான். அவனிடம் மந்திரியாக இருந்தவர் சேக்கிழார். 


மன்னன் இப்படி சிற்றின்ப நூல்களைப் படித்துக் கொண்டிருந்தால், அவனுக்கு கீழே உள்ள அதிகாரிகளும் அந்த மாதிரி நூல்களையே படிப்பார்கள். அவர்களைப் பார்த்து குடி மக்களும் அதே மாதிரி நூல்களைப் படிப்பார்கள். நாடே நலிந்து போகும் என்று நினைத்து, சேக்கிழார் பெருமான் அரசனிடம் அந்த மாதிரி நூல்களைப் படிக்க வேண்டாம் என்றார். 


அதற்கு அரசன், "சரி இந்த மாதிரி நூல்களைப் படிக்கவில்லை...வேறு எந்த மாதிரி நூல்களைப் படிக்கட்டும்" என்று கெட்டான். 


சேக்கிழார் :  அடியார்கள் பற்றிய செய்திகளை படியுங்கள் 


அரசன்: அடியார்கள் பற்றிய நூல் இருக்கிறதா ?


சே: நூலாக இல்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாக செய்திகள், கதைகள் என்று இருக்கிறது 


அ: அப்படியானால் நீரே அவற்றை தொகுத்து ஒரு நூலாக செய்து தாருங்கள் படிக்கிறேன் 


சே: முதலைமைச்சர் பதவியும் பார்த்துக் கொண்டு, நூல் எழுதுவது என்பது நடவாத காரியம். நேரம் இருக்காது


அ: அப்படியா, பரவாயில்லை, நீங்கள் முதலைமைச்சர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்த நூலை எழுதுங்கள் என்றான். 


சேக்கிழாரும் அவ்வாறே செய்தார். 


இது ஒரு ஒரு அநபாயனுக்கு, அவர் முதலைமைச்சர் எழுதிய நூல் என்று கொள்ளக் கூடாது. 


எல்லா காலகட்டத்திலும், தலைவர்கள் வழி தவறுவார்கள். தெரிந்தோ, தெரியாமலோ. அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்று குடி மக்களும் அறம் தவறுவார்கள். என்றென்றுக்கும் வழி காட்ட இந்த நூலைச் செய்தேன் என்கிறார். 


உலகம் உய்ய இந்த திருத் தொண்டர்களின் வரலாற்றை பாடுகிறேன் என்கிறார். 


தொண்டர்களின் வரலாற்றைப் படித்தால் உலகம் உய்யுமா என்று கேட்டால் அதற்கு இரண்டு விடை இருக்கிறது. 


ஒன்று, சேக்கிழார் போன்ற ஆழுந்து அகன்ற நுண்ணிய அறிவு உடையவர்கள் சொல்வது தவறாக இருக்காது என்று நம்பலாம். 


இல்லை. அதெல்லாம் நம்ப முடியாது. அது யாராக இருந்தால் என்ன, இதைப் படித்தால் என்ன பலன் என்று தெரிய வேண்டும் என்று கேட்டால், கொஞ்சம் படித்துப் பாருங்கள். உங்களுக்குள் ஒரு மாற்றம் வந்தால் மேலே படியுங்கள். இல்லை என்றால் விட்டு விடலாம். 


கொஞ்சம் படியுங்கள். புரியும். 


பாடல் 


உலக முய்யவுஞ் சைவநின் றோங்கவும்  

அலகில் சீர்நம்பி யாரூரர் பாடிய

நிலவு தொண்டர்தங் கூட்டம் நிறைந்துறை

குலவு தண்புன னாட்டணி கூறுவாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_24.html


(please click the above link to continue reading)



உலக முய்யவுஞ் = உலகம் உய்யவும். உய்தல், தவறுகளில் இருந்து தப்பி, நிலைத்து வாழ்தல் 


சைவநின் றோங்கவும் = சைவ நெறி நின்று ஓங்கவும் 


அலகில் சீர் = அளவற்ற சிறப்புகள் நிறைந்த 


நம்பி யாரூரர் பாடிய = நம்பி ஆரூரர் பாடிய 


நிலவு = நிலைத்து இருக்கும் 


தொண்டர்தங் = தொண்டர்களின் 


கூட்டம் நிறைந்துறை = கூட்டம் நிறைந்து, வாழும் 


குலவு = விளங்கும் 


தண்புன னாட்டணி கூறுவாம். = தண் + புனல் + நாட்டு + அணி + கூறுவாம் 


குளிர்ந்த நீரை உடைய நாட்டின் (சோழ நாட்டின்) சிறப்பைக் கூறுவோம். 




Tuesday, June 22, 2021

திருக்குறள் - இல்லறம் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - இல்லறம் - ஒரு முன்னோட்டம் 


இல்லறம் என்றால் என்ன? 


திருமணம் செய்து கொள்வது, பிள்ளைகளை பெற்றுக் கொள்வது, அவர்களை நல்ல விதமாக வளர்ப்பது, வயதான காலத்தில் பெற்றோர்களை பேணுவது  என்பதுதான் இல்லறமா? 


ஒரு குடும்பத்துக்குள் நடப்பதுதான் இல்லறமா? 


நான், என் குடும்பம், என் கணவன்/மனைவி, என் பிள்ளைகள், என் பெற்றோர் என்று இருப்பதுதான் இல்லறமா? 


திருமணம் செய்து கொள்வது எதற்கு? இன்பம் அனுபவிக்கவும், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளவும் மட்டுமா? 


வள்ளுவர் காட்டும் இல்லறம் என்பது மிக பிரமாண்டமானது. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_22.html

(click the above link to continue reading)


இல்லற வாழ்கையை இதற்கு மேல் விரிவாக, ஆழமாக, நுட்பமாக சொல்லவே முடியாது என்று அடித்துச் சொல்லலாம். 


இல்லறத்தின் ஒவ்வொரு பாகத்தையும், படியையும் ஒரு அதிகாரமாக படைக்கிறார். 


மிகச் சிறபானா இல்லற வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் வள்ளுவர் சொல்லும் வழியை கடைப் பிடித்தால் போதும். 


ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு கட்டமாக நம்மை அழைத்துச் செல்கிறார். 


அது மட்டும் அல்ல, இந்த திருமணம், பிள்ளைகளை பெறுவது, வளர்ப்பது எல்லாம் எதற்காக? ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், மணந்தோம், பிள்ளைகளைப் பெற்றோம், வளர்த்தோம், மறைந்தோம் என்று முடிந்து விடுவதா இல்லறம்? ஒரு அர்த்தம், நோக்கம் இல்லையா? இதை ஏன் செய்ய வேண்டும்? 


இப்போதெல்லாம் ஆணும் பெண்ணும் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக இருந்தால் என்ன என்று கேட்கிறார்கள். அதற்கு சட்ட ரீதியாக அங்கீகாரமும் கிடைக்கிறது.  அது சரியா தவறா என்று நாம் விவாதம் செய்ய வேண்டாம். வள்ளுவர் போன்ற பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று அறிந்து கொள்வோம். 


இதற்கு ஒரு படி மேலே போய், ஆணும் பெண்ணும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? ஆணும் ஆணுமோ அல்லது பெண்ணும் பெண்ணுமோ திருமணம் செய்து கொள்ளக் கூடாதா என்றும் கேட்கிறார்கள். அப்படி திருமணமும் செய்து கொள்கிறார்கள்.  அவை சரியா தவறா என்று தெரியாமல் ஒரு மயக்கம் இருக்கிறது. சரி என்று சொல்பவர்கள் வாதத்திலும் ஞாயம் இருக்கிறது போல் தெரிகிறது. தவறு என்று வாதம் செய்பவர்கள் பக்கமும் ஞாயம் இருப்பது போலத் தெரிகிறது. 


இல்லறத்தின் கடமைகள் என்ன, அதன் நோக்கம் என்ன, ஒரு சிறப்பான இல்லறம் என்றால் எப்படி இருக்க வேண்டும், அப்படி சிறப்பாக வாழ்ந்தால் என்னென்ன நன்மைகள், பலன்கள் கிடைக்கும், இல்லறத்தின் அடுத்த கட்டம் என்ன என்றெல்லாம் மிக மிக விரிவாக விளக்குறார் வள்ளுவர். 


வரும் நாட்களில் இவற்றைப் பற்றி சிந்திக்க இருக்கிறோம். 


சிந்திப்போமா?

Monday, June 21, 2021

பெரிய புராணம் - காட்சியில் கண்ணினார்

 பெரிய புராணம் - காட்சியில் கண்ணினார் 


தகவல் தொழில் நுட்பம் (information technology ), உயிரியல் தொழில் நுட்பம் (bio technology ) என்று உலகம் எங்கோ போய் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பெரிய புராணம், திருக்குறள் என்று பழம் பாட்டு படிப்பதில் காலணாவுக்கு புண்ணியம் உண்டா? 


இதை எல்லாம் நேரம் செலவழித்து படித்து என்ன ஆகப் போகிறது? 


வளர்ச்சி என்றால் அது முழுவதுமாக இருக்க வேண்டும். உடலில் ஒரு பக்கம் மட்டும் வளர்ந்து கொண்டே போகிறது, இன்னொரு பக்கம் வளராமல் அப்படியே இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அது எப்படி இருக்கும். 

வலது கை நாலு அடி நீளம், இடது கை இரண்டு அடி நீளம். வலது கால் மூணு அடி நீளம். இடது கல் ஒரு அடி நீளம் என்று இருந்தால் எப்படி இருக்கும். பக்க வாதம் வந்த மாதிரி இருக்கும் அல்லவா. வளர்ச்சி என்றால் அது அனைத்து பக்கங்களிலும் சமமாக இருக்க வேண்டும். 


மனிதர்கள் அறிவு, உணர்வு என்ற இரண்டின் கலவை. அறிவியல் வளர்ந்து கொண்டே போகிறது. மிக வேகமாக வளர்கிறது. அதை வளர்க பள்ளிகள், கல்லூரிகள், என்று இருக்கின்றன.


மனிதனின் உணர்வு சார்ந்த பகுதிகள் வளர என்ன வழி இருக்கிறது? 


இலக்கியமும், சமயமும் மனிதனின் உணர்வு சார்ந்த பகுதிகளை செம்மை படுத்தி வளர்க்க உதவும். உதவ வேண்டும். 


ஆனால், வருந்த்தத்தக்க  விடயம் என்ன என்றால், உரம் ஊட்ட வேண்டிய இலக்கியமும், மதமும், பெரும்பாலும் நஞ்சை ஊட்டுகின்றன. 


வேற்றுமையை வளர்த்து, பகையை உருவாக்கி, மலினமான பால் உணர்சிகளை தூண்டி பணம் பார்க்கும் வழிகளாக உருவாகி விட்டன. 


இதில் இருந்து தப்பி, நல்ல உயர்ந்த இலக்கியங்களை, பொருள் அழகும், சொல் அழகும், இலக்கிய நயமும், பண்பாடும், கலாச்சாரமும் செறிந்த உயர்ந்த இலக்கியங்களை தேடித் பிடித்து படிக்க வேண்டும். 


இல்லை என்றால், அறிவு வளரும். மனம் வளராது. 


இதை மனதில் கொள்ள வேண்டும். 


கதைக்கு வருவோம். 


கைலாய மலை. அருகில் ஒரு நந்தவனம். அந்த நந்தவனத்தில் பூ பறிக்க இரண்டு தேவ லோக பெண்கள் வருகிறார்கள். அவர்கள் பூ பறிக்கும் போது, அங்கே சுந்தரரும் வருகிறார். அவர்களைப் பார்கிறார். 


அந்தப் பெண்கள் கண்ணிலும், சுந்தரர் கண்ணிலும் காதல் மலர்கிறது. 


நடந்தது அவ்வளவு தான். அதை சேக்கிழார் எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள். 


பாடல் 


மாத வஞ்செய்த தென்றிசை வாழ்ந்திடத்

தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப்

போது வாரவர் மேன்மனம் போக்கிடக்

காதன் மாதருங் காட்சியிற் கண்ணினார்.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_21.html


(Please click the above link to continue reading)


மாத வஞ்செய்த = பெரிய தவத்தை செய்த 


தென்றிசை  = தென் திசை (தமிழ் நாடு) 


வாழ்ந்திடத் = வாழ்ந்திட 


தீதி லாத் = தீமையை இல்லாது செய்யும் 


திருத் தொண்டத் தொகை = திருத் தொண்டத் தொகை  என்ற நூலை 


தரப் = தருவதற்காக 


போது வாரவர் = போது என்றால் மலர். மலர் கொய்ய வந்த அந்த இளம் பெண்கள் 


மேன் = மேல் 


மனம் போக்கிடக் = மனதை செலுத்த 


காதன் மாதருங் = காதல் கொண்ட அந்தப் பெண்களும் 


காட்சியிற் கண்ணினார். = கண்களால் அதை வெளிப்படுத்தினார் 


அவர் அந்தப் பெண்கள் மேல் மனம் செலுத்தக் காரணம் நமக்கு திருத் தொண்டர் தொகை என்ற நூலைத் தருவதற்காக என்கிறார் சேக்கிழார். 


அவர் காதலாக பார்பதற்கும், இந்த நூலுக்கும் என்ன சம்பந்தம்?


மேலும் சிந்திப்போம். 



Sunday, June 20, 2021

திருக்குறள் - செய்வதும், ஒழிவதும்

 திருக்குறள் - செய்வதும், ஒழிவதும் 


அறம் செய்கிறேன், கூடவே கொஞ்சம் அறம் அல்லாததையும் செய்கிறேன். என்ன செய்வது? வாழ்க்கை நடைமுறை அப்படி இருக்கிறது. கொஞ்சம் கூட பாவம் செய்யாமல் வாழ முடியாது போல் இருக்கிறது. 


முழுக்க முழுக்க அறமே செய்து வாழ முடியுமா?  நடை முறை வாழ்க்கைக்கு அது ஒரு நல்ல வழிகாட்டியா? 


கொஞ்சம் செம்பு கலந்தல்தானே தங்கத்தில் ஆபரணம் செய்ய முடியும். 


இது ஒரு நடைமுறை சிக்கல். 


அதற்கும் பதில் சொல்ல வேண்டும். வள்ளுவர் சொல்கிறார். 


"ஏதாவது செய்வதாய் இருந்தால், அறம் செய். முடியாவிட்டால் பழிச் செயல்களை செய்யாமல் இரு" என்கிறார். 


பாடல் 


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_20.html


(please click the above link to continue reading)



செயற்பால = செய்யத் தகுந்தது 


தோரும் = ஓரும் என்பது அசைச் சொல். அர்த்தம் கிடையாது. 


அறனே ஒருவற்கு = அறம்தான் ஒருவருக்கு 


உயற்பால = விலக்க வேண்டியது 


தோரும் = ஓரும் என்பது அசைச் சொல். அர்த்தம் கிடையாது. 


பழி = பழிதரும் செயல்கள் 



செல்வதானால் அற வழியில் செல். இல்லையா, பழி வரும் பாதையில் போகாமளாவது இரு. 


"அறனே ஒருவற்கு" என்பதில் உள்ள ஏகாரம் தேற்ற ஏகாரம். அதைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது.  அறத்தைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது.


இந்தக் குறளோடு அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரம் முடிவடைகிறது. 


இந்த அதிகாரத்தோடு பாயிரவியல் முடிவடைகிறது. 


கடவுள் வாழ்த்து 

வான் சிறப்பு 

நீத்தார் பெருமை 

அறன் வலியுறுத்தல் 


என்ற இந்த நான்கு அதிகாரங்களும் பாயிரவியலில் அடங்கும். 


பாயிரம் என்பது நூலுக்கு முன்னுரை போன்றது. 


கடவுள் - அவர் கருணையால் பொழியும் மழை, அதில் இருந்து பிறக்கும் இயற்கை, இயற்கையின் ஊடே பொதிந்து கிடக்கும் அற இரகசியங்கள், அந்த இரகசியங்களை கண்டு சொல்லும் நீத்தார், அந்த நீத்தாரது பெருமை, அவர் சொல்லும் அறத்தின் முக்கியத்வம். 


இவற்றை இது வரை பார்த்தோம். 



நேரம் இருப்பின், இதுவரை வாசித்தவற்றை ஒரு மறுவாசிப்பு செய்து பாருங்கள். மனதில் ஆழப் பதியும். 


இனி, இந்த அறம் எவ்வாறு இல்லறம், துறவறம் எனப்  பிரிகிறது, அவற்றின் கூறுகள், முறைகள் என்ன என்பன பற்றி சிந்திக்க இருக்கிறோம். 




Saturday, June 19, 2021

திருக்குறள் - அறத்தால் வருவதே இன்பம்

 திருக்குறள் - அறத்தால் வருவதே இன்பம் 


உயிர்கள் ஒன்றில் இருந்து மற்றது பல விதங்களில் மாறுபாடு கொண்டுள்ளன. ஒரே வீட்டில் பிறந்த பிள்ளகைளிடம் கூட பல வேற்றுமைகள் இருக்கின்றன. 


இருந்தும், உலகம் முழுவதிலும், அனைத்து உயிர்களிடத்தும் ஒரு ஒற்றுமை உண்டு. உயிர் என்று சொல்லும் போது இங்கே மனிதர்களை மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், செடி, போன்றவையும் தான். 


அது என்ன என்றால் "இன்பத்தை நாடுவது".


இன்பம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு உயிர் இருக்கிறதா? அனைத்து உயிர்களும் இன்பம் நோக்கியே வாழ்கையை நடத்துகின்றன. 


இன்பம் எப்படி வரும் ? 


பணத்தால்,பதவியால், படிப்பால், அதிகாரத்தால் வருமா?


இல்லை.  இன்பம் வர ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. 


அறத்தான் வருவதே இன்பம் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_19.html


(click the above link to continue reading)



அறத்தான் வருவதே இன்பம் = அறத்தால் வருவதே இன்பம் 


மற் றெல்லாம் = மற்றவை எல்லாம் 


புறத்த = துன்பம் 


புகழு மில  = புகழும் இல்லாதான 


மேலோட்டமான பொருள் இது. 


இனி, பரிமேலழர் கூறும் ஆழ்ந்த நுண்ணிய பொருளை காண்போம்.


முதலாவது, அறத்தான் என்றால் இல்லறத்தால் வருவதே இன்பம் என்கிறார். இல்லறம் என்று குறளில் இல்லை. இல்லறம் என்று எப்படி உரை எழுதலாம். ஏன் துரவறத்தால் இன்பம் வராதா? வள்ளுவர் இல்லறம் என்று சொல்லவில்லையே என்று கேட்டால், அதற்கு விளக்கம். 


வள்ளுவர் தன் நூலை அறம், பொருள், இன்பம் என்று மூன்றாகப் பிரித்து இருக்கிறார். அதில் இன்பம் என்பது தலைவனும் தலைவியும் தம்முள் இரண்டற கலந்து அனுபவிக்கும் இன்பத்தையே சொல்கிறார். அது பின்னால் வரப் போகிறது. 


அந்த இன்பம் இல்லறத்தில் தான் கிடைக்கும். எனவே, இங்கே அறம் என்று சொன்னது "இல்லறம்" தான் என்று பொருள் கொள்கிறார். 


இரண்டாவது, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க இல்லறம் தேவை இல்லையே. அதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கின்றனவே என்று விதண்டாவாதம் பேசினாலும், அதற்கும் வள்ளுவர் விடை தருகிறார். 


அப்படி வரும் இன்பங்கள், முதலில் இன்பம் போல் தோன்றினாலும், அவை இன்பம் அல்ல. துன்பமே என்கிறார். 


துன்பம் என்ற சொல்லே குறளில் இல்லையே? என்றால். 


ஆம், துன்பம் என்ற சொல் குறளில் இல்லை, ஆனால் "புறத்த" என்ற சொல் இருக்கிறது. 


இன்பத்திற்கு புறத்த என்றால் இன்பத்தில் சேராத, தள்ளி நிற்கும், விலகி நிற்கும், சம்பந்தமில்லாத என்று அர்த்தம். இன்பத்தில் இல்லை என்றால் அது துன்பம் தானே.


மேலும், "புகழும் இல" என்கிறார். 


இல்லறத்துக்கு வெளியே ஒருவன் இன்பம் காண்பானாகில் அது துன்பத்தில் முடிவது மட்டும் அல்ல, அவனுக்கு அது புகழும் சேர்க்காது.


பரத்தையரிடம் போவது, மாற்றான் மனைவியை அடைவது என்பதெல்லாம் முதலில் இன்பம் போல் தோன்றினாலும் பின் துன்பத்தைத் தந்து, அவன் புகழையும் அழிக்கும். 


பெரிய பதவிகளில் இருப்பவர்கள், கண நேரம் சபலப்பட்டு எவ்வளவு பெரிய துன்பத்தில் விழுந்து விடுகிறார்கள், அவர்கள் சேர்த்த பேரும் புகழும் அழிந்து போகிறதை நாம் எவ்வளவோ முறை கண் கூடாக பார்க்கிறோம். 




பின்னால் வரும் "இன்பம்" என்ற சொல்லுக்கு "காம நுகர்ச்சி" என்று பொருள் எடுக்கிறார். 


மூன்றாவது , "அறத்தான்" என்று ஏன் கூறினார்? அறத்தால் என்று தானே சொல்லி இருக்க வேண்டும். "ஆன்' என்ற உருபு "உடனிகழ்ச்சிகண்" வந்தது என்கிறார். 


உடன் நிகழ்வது என்றால் இரண்டும் ஒன்றாக நிகழ்வது. 


இராமனோடு இலக்குவன் வந்தான் என்று கூறும் போது எப்படி ஓடு ஒருபு எவ்வாறு இருவரும் ஒன்றாக வந்தார்கள் என்று சொல்கிறதோ அது போல 'ஆன்' உருபும் ஒன்றாக நிகழ்வதை குறிக்கும். 


இல்லறத்தில் இருப்பதும், இன்பம் அனுபவிப்பதும் ஒன்றாக நிகழும். அறம் செய்வது இப்போது. இன்பம் வருவது பின்னொரு நாளில் என்று அல்ல. கூடவே நிகழும். நிகழ வேண்டும். 


நான்காவது, பலர் நினைக்கலாம், அறம் அல்லாத வழியில் செல்பவர்கள் இன்பமாகத்தானே இருக்கிறார்கள். நாமும் அந்த வழியில் சென்றால் என்ன என்று. வள்ளுவர் தெளிவாக சொல்கிறார். அறத்தான் வருவதே இன்பம். மற்றவை எல்லாம் இன்பம் போலத் தோன்றினாலும் அவை இன்பம் அல்ல.


இலஞ்சம் வாங்குவது...அந்த நேரத்துக்கு அது இன்பம் போலத் தோன்றும். மாட்டிக் கொண்டால்? வேலை போகும். மானம் போகும். சிறைக்குச் செல்ல வேண்டும். புகழ் போய் விடும். 


அதிகாரத்தைப் பயன் படுத்தி தனக்கு கீழே பணி புரியும் பெண்களை தன் வசப்படுத்தலாம். அதிகாரம் போன பின் அவை வெளிவரும்.  வரும் போது எவ்வளவு அவப் பெயரை கொண்டு வரும் ? தினம் செய்திகளில் பார்கிறோமே.


அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில


யார் சொல்லித் தருவார்கள்?

Friday, June 18, 2021

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள்

 பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் 


நம் வீடாகவே இருந்தாலும், இருட்டில் மாட்டிக் கொண்டால் எது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் முட்டி மோதிக் கொள்வோம்.  கண் இருக்கிறது. பார்வை இருக்கிறது. அறிவு இருக்கிறது. தெரிந்த இடம்தான். இருந்தும், இருட்டில் ஒன்றும் தெரியாது அல்லவா. 


அது போல, உலகம் இருக்கிறது. நமக்கு அறிவு இருக்கிறது.  தெரிந்த இடம்தான். பழகிய இடம்தான். இருந்தும், அறியாமை என்ற இருள் இருந்தால் என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்று தெரியாமல் தப்புத் தவறாக செய்து காயப் பட்டுக் கொள்வோம். 

  

புற இருளை நீக்க சூரியன் இருக்கிறது. அக இருளை நீக்க ?


அறியாமையை நீக்க இந்த பெரிய புராணம் என்ற நூலை எழுதுகிறேன் என்று நூல் காரணம் சொல்கிறார். 


பாடல் 


இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள்

தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற

பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற

செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_18.html


(Please click the above link to continue reading)


இங்கு = இங்கு 


இதன் = இதன் 


நாமம் கூறின் = இந்த நூலின் பெயரை கூறினால் 


இவ் உலகத்து = இந்த உலகில் 


முன்னாள் = முன்பு 


தங்கு இருள் = தங்கிய இருள் 


இரண்டில் = இரண்டில் 


மாக்கள் = சிந்திக்கும் திறம் அற்றவர்களின் 


சிந்தையுள் சார்ந்து நின்ற = சிந்தையுள் சார்ந்து நின்ற 


பொங்கிய இருளை = பொங்கிய இருளை 


ஏனைப் = மற்ற 


புற இருள் போக்கு கின்ற = புறத்தில், வெளியில் உள்ள இருளை போக்குகின்ற 


செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல 


நீக்கும்= நீக்கும் 


திருத் தொண்டர் புராணம் = திருத் தொண்டர் புராணம் 


என்பாம் = என்று கூறுவோம் 



புற இருளை நீக்குகின்ற சூரியனைப் போல அக இருளை நீக்குகின்ற நூல் இது. இதன் பெயர் திரு தொண்டர் புராணம். 


இது தொண்டர்களைப் பற்றியது. இறைவனைப் பற்றியது அல்ல. 


"சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருள்"  என்று நான்கு அடை மொழி போடுகிறார் சேக்கிழார். 


மனதில் உள்ள இருள் 


மனதை சார்ந்து நிற்கும் இருள். பற்றிக் கொண்டு இருக்கும் இருள். 


நிற்கும் இருள். ஏதோ வந்தோம், போனோம் என்று இருக்காது. நிற்கும் இருள். 


பொங்கும் இருள். நின்றால் மட்டும் போதாது. பொங்கும் இருள். நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கும். 


யோசித்துப் பாருங்கள். ஒரு ஊருக்குப் போக வேண்டும். தவறான பாதையில் போகத் தொடங்கி விட்டீர்கள். எவ்வளவு வேகமாக போனாலும், போய்ச் சேர வேண்டிய இடம் வராது. என்னடா இது இன்னும் வரலியே என்று இன்னும் வேகமாக வண்டியை ஓட்டினால் என்ன ஆகும். சேர வேண்டிய இடத்தை விட்டு மேலும் விரைவாக விலகிச் செல்வோம் அல்லவா?


அது போல, தவறு செய்ய ஆரம்பித்து விட்டால், அது தவறு என்று தெரியாவிட்டால், தொடர்ந்து மேலும் மேலும் அதை செய்து கொண்டே இருப்போம். பழக பழக அது இலகுவாகி விடும். அதிகமகாச் செய்வோம். 


பொங்கிய இருள். 


அப்புறம், அங்கு ஒருவர் வந்து நாம் செல்ல வேண்டிய ஊருக்கு போகும் வழி உள்ள map ஐ நம்மிடம் தருகிறார். அடடா, இப்படி போகனுமா? தெரியாம இந்த வழியில் வந்து விட்டேனே என்று நாம் நம் பாதையை திருத்திக் கொள்வோம் அல்லவா. அது போல, வழிகாட்டி இந்த நூல் என்கிறார். 


அது உண்மையும் கூட. எப்படி என்றால், செல்லும் ஊருக்கு ஒரு வழி அல்ல   64 வழிகளை காட்டுகிறார்.  


நடந்து போனால் இப்படி, இரண்டு சக்கர வாகனம் என்றால் இப்படி, நாலு சக்கர வாகனம் என்றால் இப்படி, பறந்து போவது என்றால் இப்படி என்று 64 வழிகளை காட்டுகிறார். 


நீங்கள் உங்களுக்கு வேண்டிய வழியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். 


அது மட்டும் அல்ல, 


வழி தவறி பல பேர் பல இடங்களில் அலைந்து கொண்டு இருப்பார்கள். 


செல்ல வேண்டிய இடம் ஊருக்கு நடுவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் அந்த இடத்துக்கு வடக்கில் இருகிறீர்கள் என்றால், உங்களுக்கு வழி சொல்லும் போது தெற்கே போக வேண்டும் என்று சொல்ல வேண்டும். 


அது போல, தெற்கில் ஒருவர் இருந்தால் அவரை வடக்கு நோக்கி போகச் சொல்ல வேண்டும். மேற்கில் இருந்தால் கிழக்கு நோக்கியும், கிழக்கில் இருந்தால் மேற்கு நோக்கியும் போகச் சொல்ல வேண்டும். 


எல்லோருக்கும் ஒரு வழி காட்ட முடியுமா? எல்லோரும் தெற்கே போங்கள் என்றால் சரியாக இருக்குமா. இருக்கும் இடத்ததை வைத்துக் கொண்டு , போகும் இடத்துக்கு வழி சொல்ல வேண்டும். 


எனவே, பல வழிகள் தேவைப் படுகிறது. 


எனவே தான் இது பெரிய புராணம்.  அத்தனை வழிகள். 


மேலும் சிந்திப்போம். 



Thursday, June 17, 2021

திருக்குறள் - வழி அடைக்கும் கல் - பாகம் 2

 

திருக்குறள் - வழி அடைக்கும் கல்  - பாகம் 2 


(இதன் முதல் பகுதியை கீழே உள்ள பதிவில் காணலாம்)

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1.html



பாடல் 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/2.html


(Please click the above link to continue reading)


வீழ்நாள் = செய்யாது கழியும் நாள் 


படாஅமை  = உளவாகாமல் 


நன்றாற்றின் = நல்லது செய்தால், அறத்தை செய்தால் 


அஃதொருவன் = அந்த செயல் 


வாழ்நாள் = மீண்டும் மீண்டும் வந்து வாழும் நாட்களை 


வழியடைக்கும் கல் = வழி அடைக்கும் கல் 



ஐந்து விதமான குற்றங்களால் வரும் இரண்டு விதமான வினைகளால் உயிர் இந்த உடம்போடு கூடி அந்த அந்த வினைகளது பயனை அனுபவிக்கும். எனவே, அந்தக் காலம் முழுவதும் வாழ் நாள் எனப்பட்டது. 


அது என்ன ஐந்து வித குற்றம், இரண்டு வினை,  வினைப் பயன் ....?


நாளை சிந்திப்போமா?


என்று முந்தைய ப்ளாகில் சிந்தித்த்தோம். 


ஐந்து விதமான குற்றங்கள் என்பன 


அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, மேலும்  வெறுப்பு  என்பவை. 


அவிச்சை என்றால் மயக்கம். நல்லதை தீயவை என்றும் தீயதை நல்லது என்றும் நினைப்பது.  மக்கள் நல்லது எது கெட்டது எது என்று மயங்குகிறார்கள். ரொம்ப போக வேண்டாம், எந்த உணவு நல்லது என்று தேடப் போனால், ஆளாளுக்கு ஒன்று சொல்கிரார்கள். காப்பி குடிப்பது நல்லது என்று கொஞ்ச பேர். இல்லை கெடுதல் என்று கொஞ்சம் பேர். மிதமான அளவு மது குடித்தால் உடம்புக்கு நல்லது என்று சிலர். குடிக்கவே கூடாது என்று சிலர். எது நல்லது, எது தீயது என்று தெரியாமல் குழம்புவது அவிச்சை. 


அகங்காரம் - தான் என்ற செருக்கு. நான் தான் எல்லாம், என்னை விட்டால் ஒன்றும் இல்லை, என்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற மமதை. 


அவா - அவா என்றால் ஆசை இல்லை. ஒரு பொருளை அடைய நினைக்கும் முயற்சிக்கு அவா என்று பெயர். 


விழைவு அல்லது ஆசை - பெற்ற ஒரு பொருளை பிரிய மனம் இல்லாமல் பற்றிக் கொண்டு இருப்பது. ஆசை ஆசையாக கட்டிய வீடு என்று சொல்லும் போது அதை விட முடியாத பற்று. 


இராமன் காடு போன போது கௌசலை உயிரை விடவில்லை, தசரதன் விட்டான். கோசலை கொண்டது அன்பு. தசரதன் கொண்டது ஆசை. இராமனை பிரிய முடியவில்லை. அது ஆசை.  ஆசை கொல்லும். அன்பு கொல்லாது.


வெறுப்பு - பகைமை பற்றி தோன்றும் உணர்வு. 


இந்த ஐந்து குற்றங்களால் நல்வினை, தீவினை செய்கிறோம். 


நல்வினை செய்தால் புண்ணியம் கிடைக்கிறது. 


தீவினை செய்தால் பாவம் வந்து சேர்கிறது. 


புண்ணியம் சேர்ந்தால்  அதை அனுபவிக்க மறு பிறவியில் இன்பம் கிட்டுகிறது. 

பாவம் சேர்ந்தால் அதை அனுபவிக்க மறு பிறவியில் துன்பம் நிகழ்கிறது. 


எனவே

ஐந்து வித குற்றங்கள். அதில் இருந்து 


இரண்டு வித வினைகள் - நல்வினை, தீவினை. அதில் இருந்து 


இரண்டு விளைவுகள் - புண்ணியம், பாவம். அதில் இருந்து 


இரண்டு அனுபவங்கள் - இன்பம், துன்பம்

நல்வினை - புண்ணியம் - இன்பம் 

தீவினை - பாவம் - துன்பம். 


நல்லது செய்தாலும் பிறவி வரும், தீயது செய்தாலும் பிறவி வரும். 


"அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர். இரண்டும் கயிறு தான். இரண்டும் நம்மை இந்த பிறவியோடு கட்டிப் போடும். இதில் இருந்து விடுதலை தராது. 


சரி, அதுக்கு என்னதான் செய்வது? இதில் இருந்து எப்படி மீழ்வது என்றால், அதற்கு ஒரே வழி தொடர்ந்து அறம் செய்வதுதான். 


அந்த அறம் இந்த பிறவி என்ற வழியை அடைக்கும் கல். இதற்கு மேல் போக முடியாது என்று அடைக் கல் வழியை அடைப்பது போல, இனிமேல் பிறக்க முடியாது என்று அறம் உங்கள் பிறவிப் பாதையை அடைக்கும் கல் என்கிறார் வள்ளுவர். 


"வாழ்நாள்" என்ற ஒரு வார்த்தையை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு விரிவாக உரை செய்கிறார் பரிமேலழகர். 


நம்மால் இதை எல்லாம் சிந்திக்கவாவது முடியுமா? 


அவர் உரை இல்லை என்றால் குறள் நமக்கு புரிந்தே இருக்காது. 


யார் செய்த புண்ணியமோ, இதை எல்லாம் படிக்க, இரசிக்க கொடுத்து வைத்து இருக்கிறோம்.





என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

Wednesday, June 16, 2021

திருக்குறள் - வழி அடைக்கும் கல் - பாகம் 1

 திருக்குறள் - வழி அடைக்கும் கல்  - பாகம் 1 


நாம் ஏதாவது ஒரு நெடுஞ் சாலையில் போய் கொண்டிருக்கும் போது, சில இடங்களில் பழைய பாலம் ஒன்று மிக பழுது பட்டு இருக்கும். அதில் செல்வது ஆபத்து என்பதால் அதன் அருகிலேயே புது பாலம் கட்டி இருப்பார்கள். தவறி யாராவது பழைய பாலத்தின் வழியில் சென்று விடக் கூடாது என்பதற்காக அதன் வழியில் பெரிய பாறைகளை போட்டு அந்த வழியை மூடி இருப்பார்கள். 


அது தான் வழி அடைக்கும் கல். 

அந்த வழியாக போக முடியாது. மாற்றுப் பாதையில் சென்று புதிய பாலத்தை  அடைந்து மேற் கொண்டு செல்ல வேண்டும். 


சில மலைப்பாங்கான இடங்களில், பாறைகள் உருண்டு வந்து பாதையில் விழுந்து விடும். பாதை அடைத்து விடும். மாற்று வழியும் இருக்காது. பின்னாலும் போக முடியாது. 


இது இன்னொரு வகையான வழி அடைக்கும் கல். 


நாம் பிறந்து, வாழ்ந்து, இறந்து, மீண்டும் பிறந்து என்று இந்தப் பாதையில் போய்க் கொண்டே இருக்கிறோம். இந்தப் பாதையை அடைக்கும் கல் ஏதாவது இருக்கிறதா. மீண்டும் பிறவி என்ற ஊருக்குப் போகாமல் தடுக்க ஏதாவது கல்லைப் போட்டு அடைக்க முடியுமா என்றால் முடியும் என்கிறார் வள்ளுவர். 


இடைவிடாமல் செய்யும் அறமே அந்த வழி அடைக்கும் கல் என்கிறார். 


பாடல் 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1.html


(Please click the above link to continue reading)


வீழ்நாள் = செய்யாது கழியும் நாள் 


படாஅமை  = உளவாகாமல் 


நன்றாற்றின் = நல்லது செய்தால், அறத்தை செய்தால் 


அஃதொருவன் = அந்த செயல் 


வாழ்நாள் = மீண்டும் மீண்டும் வந்து வாழும் நாட்களை 


வழியடைக்கும் கல் = வழி அடைக்கும் கல் 


பரிமேலழகர் இல்லாவிட்டால், வாழ்நாள் அடைக்கும் கல் என்பதற்கு வாழ்கையை முடித்து விடும் கல் என்று தவறாக பொருள் கொண்டிருப்போம். 


அதாவது, அறத்தை செய்யாத நாள் என்று ஒன்றே இருக்கக் கூடாதாம். எல்லா நாளும் செய்ய வேண்டும். ஏதோ ஒரு சில நாள், பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் என்று செய்தால் போதாது. அறம் செய்யாத நாள் என்றே ஒரு நாள் இருக்கக் கூடாதாம். 


இந்தப் பாடலுக்கு பரிமேலழகர் தரும் உரை பிரமிப்பைத் தரும். 


ஒருகணம் யோசித்துப் பாருங்கள். இந்தக் குறளில் இதற்கு மேல் என்ன உரை கண்டு விட முடியும் ?


இப்போது பரிமேலழகர் சொல்லும் உரையைக் காண்போம். 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


வாழ்நாள் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார்.  வாழ்நாள் என்றால் இந்தப் பிறவியில் நாம் வாழும் நாள் என்று கொண்டால் அர்த்தம் அனர்த்தமாகப் போய் விடும். இப்பிறவியில் உள்ள வாழ் நாளை அடைக்கும் கல் என்று பொருள் வந்து விடும். 


இருப்பதே கொஞ்ச நாள் தான். அதையும் அடைக்கும் என்றால் எதற்கு அறம் செய்ய வேண்டும்?


வாழ்நாள் என்றால் இந்த உயிர் எத்தனை நாள் வாழுமோ அத்தனை நாள். 


புல்லாகி, புழுவாகி, மரமாகி, பல் மிருகமாகி...எத்தனை எத்தனை பிறவி இருக்கிறதோ அத்தனையும் வாழ்நாள் தான். 


அறம் இந்த வாழ் நாட்கள் மேலும் மேலும் செல்லாமல் அடைக்கும் கல். 


சரி. அப்ப இந்த வாழ்நாளை நீட்டும் கருவி எது. யார் அல்லது எது இந்த வாழ் நாளை நீட்டுகிறது?


அதை செய்யாமல் இருந்தாலே போதுமே? எதுக்கு அனாவசியமாக அறம் எல்லாம் செய்து துன்பப் பட வேண்டும்?


"ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. " என்கிறார். 


ஐந்து விதமான குற்றங்களால் வரும் இரண்டு விதமான வினைகளால் உயிர் இந்த உடம்போடு கூடி அந்த அந்த வினைகளது பயனை அனுபவிக்கும். எனவே, அந்தக் காலம் முழுவதும் வாழ் நாள் எனப்பட்டது. 


அது என்ன ஐந்து வித குற்றம், இரண்டு வினை,  வினைப் பயன் ....?


நாளை சிந்திப்போமா?



Tuesday, June 15, 2021

பெரிய புராணம் - மேன்மையால் கொள்வர்

 பெரிய புராணம் - மேன்மையால் கொள்வர் 


உயர்ந்த நூல்களைப்  படிக்கும் போது நாம், நம் தரத்தை உயர்த்திக் கொள்ள பழக வேண்டும். 


சிலர் பெரிய நூல்களை, உயர்ந்த கருத்துகளை உள்ள நூல்களை எடுத்து வைத்துக் கொண்டு, இதை எழுதியவர் என்ன ஜாதி, என்ன குலம், அதனால்தான் இப்படி எழுதி இருக்கிறார் என்று தங்கள் சிறுமையை நூல்களின் மேல் ஏற்றத் தலைப் படுகிறார்கள். 


மேலும் சிலரோ, இது என்ன எதுகை, என்ன மோனை என்று இலக்கணம் படிக்க இறங்கி விடுகிறார்கள். நூலின் கருத்தை விட்டு விடுகிறார்கள். 


இன்னும் சிலர், தங்களுக்கு பிடிக்காத கருத்துகள் இருந்தால், அந்தப் பகுதி இடைச் செருகலாக இருக்கும் என்று அதை புறம் தள்ளி விடுகிறார்கள்.  புதிதாக ஒரு அறிவும் உள்ளே வரக் கூடாது என்பதில் அப்படி ஒரு பிடிவாதம். 


சேக்கிழார் சொல்கிறார், 


"நான் சொல்லப் போகும் பொருளின் சிறப்புக்  கருதி, நான் சொல்லும் சொல்லின் பொருளைக் கொள்வார்கள் மெய் பொருளை நாடுபவர்கள். என்னுடைய உரை சிறிதாக இருந்தாலும், பொருளின் பெருமை நோக்கி அதைப் பெரிதாக கொள்வார்கள்" 

என்கிறார். 


யாரோ கொஞ்சம் நாயன்மார்கள், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள், பக்தி செய்தார்கள், முக்தி அடைந்தார்கள். அதை தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகப் போகிறது. நமக்கு இருக்கு ஆயிரம் கவலை.  ஞானசம்பந்தர் அழுதால் என்ன, பார்வதி வந்து பால் தந்தால் என்ன என்று நினைக்கலாம். 


கோவிலுக்குப் போகிற கூட்டம் போலத்தான். 


சிலர் பக்தியோடு போவார்கள், சிலர் அன்பினால், நன்றியால் போவார்கள், சிலர் தங்கள் துக்கத்தை சொல்லி முறையிட போவார்கள், சிலர் அங்கே தரும் சுண்டல், பொங்கல் வாங்கப் போவார்கள். 


சுண்டல் வாங்கப் போனாலும், நாளடைவில் அவர்களும் பக்தி நோக்கி நகர வாய்ப்பு இருக்கிறது. 


பக்தி, இறைவன், முக்தி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், தமிழின் இனிமை கருதி படியுங்கள். 


சொல்லின் ஆழம், கருத்தின் செறிவு, சொல்லும் அழகு...இவற்றை கருதி கூட வாசிக்கலாம். 


யாருக்குத் தெரியும், எந்த பாதை எங்கே பிரியும் என்று. 


பாடல் 


செப்ப லுற்றா பொருளின் சிறப்பினால்

அப்பொ ருட்குரை யாவரும் கொள்வரால்

இப்பொ ருட்கென் னுரைசிறி தாயினும்

மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_15.html


(please click the above link to continue reading)


செப்ப லுற்றா  = கூறிய 


பொருளின் = பொருளின் 


சிறப்பினால் = உயர்வால் 


அப்பொ ருட்குரை = அந்த பொருளுக்கு உரை 


யாவரும் கொள்வரால் = எல்லோரும் கொள்வார்கள் 


இப்பொ ருட்கு = இந்தப் பொருளுக்கு 


என் னுரை = என்னுடைய உரை 


சிறி தாயினும் = அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும் 


மெய்ப் பொருட்குரி யார்  = மெய் பொருளை அறிந்து உணரும் பெரியவர்கள் 


கொள்வர் மேன்மையால். = உயர்ந்த கருத்துகளை தங்களுடைய உயர்வால் கொள்வார்கள். 


சிறியார், தங்கள் உயர்வுக்கு ஏற்ப கொள்வார்கள் என்பது உணரக் கிடைப்பது. 


"சரியா படிக்கலேனா மாடு மேய்க்கத் தான் போற" என்று அப்பா கடிந்து சொன்னால், அதன் அர்த்தம், அப்பா என்னை மாடு மேய்க்கத் தான் லாயக்கு என்று கூறுகிறார், அவருக்கு என் மேல் அன்பு இல்லை என்று நினைத்தால் அந்தப் பிள்ளையை போல மடையன் உலகில் யார் இருப்பார்கள். 


என் மேல் உள்ள அன்பால், அக்கறையால்,  என் தந்தை இப்படி கூறுகிறார் என்று எடுக்கத் தெரிய வேண்டும். 


சொல் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பொருள்தான் முக்கியம். 


சேக்கிழார் சைவ சமயத்தை சார்ந்தவர், நான் அந்த சமயம் அல்ல, நான் எதற்கு அதை படிக்க வேண்டும் என்று தள்ளக் கூடாது. 


நல்லது எங்கிருந்தால் என்ன? 


பொருளைப் பிடித்துக் கொள்வோம். 


என்ன, சரியா? 

Monday, June 14, 2021

திருக்குறள் - அறத்தின் பயன்

 திருக்குறள் - அறத்தின் பயன் 


அறம் எப்படிச் செய்ய வேண்டும், யார் செய்ய வேண்டும், எந்த அளவு செய்ய வேண்டும், அதனால் என்னென்ன பலன் என்றெல்லாம் சொல்லினார்.


அதெல்லாம் சரிங்க, நீங்க சொன்னா நாங்க நம்பிறனுமா...இதுகெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு ? நாங்க பாட்டுக்கு அறம் செய்து கொண்டே இருப்போம்....பலன் கிடைக்கும் என்பதற்கு என்ன உறுதி? என்று சிலர் கேட்கலாம். கேட்டால் தவறு இல்லை. 


அதற்கும் விடை தருகிறார் வள்ளுவர். 


நாம் எவ்வளவோ பேரை பார்க்கிறோம். சில பேர் நல்லா வசதியாக வாழ்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள். சில பேர் வறுமையில் வாடுகிறார்கள். துன்பப் படுகிறார்கள். சில பேர் சுகமாக காரில் போகிறார்கள், சில பேர் வண்டி இழுத்துச்  சிரமப் படுகிறார்கள். 


இரண்டையும் பார். துன்பப் படுபவன் ஒன்றும் முட்டாள் இல்லை. அவன் முயற்சிக்கும் ஒரு குறைவும் இல்லை.  இன்பம் அனுபவிப்பவன் எல்லாம் பெரிய புத்திசாலி என்றும் சொல்ல முடியாது. ரொம்ப ஒன்றும் உழைப்பது மாதிரியும் தெரியவில்லை. 


பின் ஏன் இந்த வேறுபாடு? 


அறத்தினால் வந்த விளைவு என்கிறார். 


அறத்தின் விளைவு இன்னது என்று அறிய வேண்டுமா, பல்லக்கின் மேல் அமர்ந்து செல்பவனையும், பல்லக்கு தூக்குபவனையும் பார் , உனக்கே புரியும் என்கிறார். 


பாடல் 


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_14.html


Please click the above link to continue reading



அறத்தாறு = அறத்தின் பயன் 

இது வென = இன்னது என்று 

வேண்டா = படித்து அறிய வேண்டாம் 

சிவிகை = பல்லக்கு 

பொறுத்தானோடு =  தூக்கிக் கொண்டு அதன் வலியை பொறுத்துக் கொண்டவன்  

 ஊர்ந்தான்  = அதன் மேல் அமர்ந்து செல்பவன் 

இடை = இடையே உள்ள வேறுபாடு


நாம் ஒரு உண்மையை  அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு மூன்று வழிகள் இருக்கிறது. அவற்றை பிரமாணம் என்று கூறுவார்கள். 


காட்சிப் பிரமாணம் 

அனுமானப் பிரமாணம் 

ஆகமப் பிரமாணம் 


என்பவை. 


ஒன்றை புலன்களால் உணர்ந்து உண்மையை அறிந்து கொள்வது காட்சிப் பிரமாணம். 


அனுமானப் பிரமாணம் என்றால் ஊகித்து அறிவது. காலையில் எழுந்து பார்த்தால் சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. மரத்தில் இருந்து நீர் சொட்டுகிறது. இரவு மழை பெய்து இருக்கிறது என்று ஊகிக்கிறோம். கண்ணால் காணவில்லை ஆனால் அறிந்து கொள்கிறோம். 


இப்படி புலன்களாலும் அறியமுடியாமல், மனதால் ஊகித்தும் அறிய முடியாத போது, ஆகமங்கள் சொல்வதை வைத்து நாம் உண்மையை அறிகிறோம். பெரியவர்கள், உயர்ந்தவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது. 


வெளியூருக்கு காரில் போகிறோம். இதற்கு முன்னால் அந்த வழியில் சென்றது இல்லை. போகிற வழியில் ஒரு தகவல் பலகை இருக்கிறது. நாம் போகிற ஊரின் பேர் எழுதி, இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, அதற்கு எந்தப் பக்கம் போக வேண்டும் என்று அம்புக் குறியும் போட்டு இருக்கிறது. 


நாம் பார்கவில்லை. நம்மால் அனுமானம் செய்ய முடியாது. அந்த பலகை சொல்வதை நாம் நம்புகிறோம். மாறாக, இதை எல்லாம் நான் நம்ப மாட்டேன், இதை எனக்கு நிரூபணம் செய்தால் தான் நான் மேற்கொண்டு நகர்வேன் என்று இருந்தால் இருக்க வேண்டியது தான். போகும் இடத்திற்கு போய் சேர முடியாது. 


இங்கே, இரண்டு நிரூபணங்கள் இருக்கிறது என்கிறார் பரிமேலழகர். 


நமக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர் கண்ணுக்குத் தெரிகிறது. 


ஒருவன் பல்லகில் அமர்ந்து செல்கிறான், ஒருவன் அதை தூக்கிச் சுமக்கிறான். இதை நாம் பார்க்க முடியும். அது காட்சிப் பிரமாணம் என்கிறார். பார்த்து தெரிந்து கொள். 


" இதுவென வேண்டா" என்று கூறும் போது இது எப்படி என்று நூல்களில் சென்று ஆராயாதே. நீ எவ்வளவு தோண்டினாலும் கிடைக்காது. நீயே நேரில் பார்த்து தெரிந்து கொள் என்கிறார். 


"'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். "


ஆகமங்களில் (புத்தகங்களில்) இன்ன அறத்துக்கு இன்ன பலன் என்று இருக்காது. நீயே நேரில் பார் என்கிறார். 


இலக்கணம் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு ஒரு சில செய்திகளை சொல்கிறார் பரிமேலழகர். 


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


என்ற குறளில். 


அறத்தின் பயன் இன்னது என்று தேட வேண்டாம் 

பல்லக்கின் மேல் ஏறியவன் , அதை தூக்கியவன் இடையில் உள்ள வேறுபாடு


இப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாத இரண்டு வரிகள் இருக்கின்றன. இரண்டு வரிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 


"உணரப்படும் என்பது சொல்லெச்சம்." என்கிறார். 


அதாவது, இரண்டு பேருக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தால் அறத்தின் பயன் இன்னது என்று புரியும் என்கிறார்.  இதில் "உணரப்படும்" என்ற சொல் குறளில் இல்லை. அது எச்சம், அதாவது மீதியாக இருக்கிறது. நீ புரிந்து கொள் என்கிறார். 


அதெல்லாம் சரிங்க, அவன் இராஜாவாக பிறந்தான், பணக்கார வீட்டில் பிறந்தான், காரில் போகிறான், பல்லக்கில் போகிறான். மற்றவன் ஏழை வீட்டில் பிறந்தான், துன்பப் படுகிறான். இதுக்கும் அறத்துக்கும் என்ன சம்பந்தம் என்றால், பணக்கார வீட்டில் பிறக்க அவன் இந்தப் பிறவியில் ஒன்றும் செய்யவில்லை. ஏழை வீட்டில் பிறக்க மற்றவனும் ஒன்றும் செய்ய வில்லை இந்தப் பிறவியில். 


பின் ஏன் என்றால், முந்தைய குறளில் சொன்னார் "பொன்றுங்கால் பொன்றாத் துணை". ஒருவன் செய்த அறம் அவனை விட்டு விலகாமல் எல்லா பிறவியிலும் தொடரும் என்றாரே அதற்கு நிரூபணம் இது.


குப்பத்தில் பிறந்து துன்பப் படுவதற்கும், கோடீஸ்வரன் வீட்டில் பிறந்து இன்பம் அனுபவிப்பதற்கும் முன் செய்த அறச் செயல்களே காரணம் என்றார். 


இனி வரும் பிறவிகளில் இன்பமாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


(தினம் தினம் திருக்குறள் தானா என்று சலிப்பு வருகிறதா ?)








Saturday, June 12, 2021

திருக்குறள் - எப்போது அறம் செய்ய வேண்டும்

 திருக்குறள் - எப்போது அறம் செய்ய வேண்டும்


அறம் என்றால் என்ன (மனத்துக்கண் மாசிலன் ஆதல்), அதன் தன்மை, அதை எவ்வாறெல்லாம் (மனம், மொழி செயல்களால்), யார் செய்ய வேண்டும் (இல்லறத்தில் உள்ளவர்கள், துறவறத்தில் உள்ளவர்கள்), எவ்வளவு செய்ய வேண்டும் (இல்லறத்தில் இருப்பவர்கள் பொருள் வசதிக்கு ஏற்பவும், துறவறத்தில் இருப்பவர்கள் உடம்பின் வலிமையை நோக்கியும்)  என்று கூறினார். 


எப்போது அறம் செய்ய வேண்டும் என்ற காலத்தை கூறவில்லை. 


"இப்ப என்ன அவசரம். நிறைய சம்பாதித்து, வேண்டிய அளவு சொத்து சேர்த்து விட்டு, பிள்ளைகளுக்கு கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு, பின் மிஞ்சி உள்ளதை அறம் செய்யலாம். அதுக்கு நேரம் இருக்கு. எங்க ஓடியா போகப் போகுது" என்று சிலர் நினைக்கலாம். 


அது சரி அல்ல என்கிறார். வள்ளுவர். 


"பின்னால் செய்து செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல் இப்பவே அறம் செய்யுங்கள். அப்படிச் செய்தால் அது உயிருக்கு நீங்காத துணையாக இருக்கும்" 


இதற்கு பரிமேலழகர் உரை அற்புதம். 


பாடல் 


அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_75.html


(Please click the above link to continue reading)


அன்றறிவாம் = அன்று செய்து கொள்ளலாம் 

என்னாது = என்று எண்ணாமல் 

அறம்செய்க = அறத்தினை செய்திடுக 

மற்றது = அப்படிச் செய்த அறம் 

பொன்றுங்கால்  = அழியும் காலத்தில் 

பொன்றாத் = அழிவில்லாத 

துணை = துணையாக நிற்கும் 


பரிமேலழகர் துணை இல்லாமல் இந்த குறளுக்கு உரை காண்பது கடினம். 


அன்றறிவாம் என்று குறளில் இருக்கிறது. அன்று செய்து கொள்ளலாம் என்பது அர்த்தம். என்று? என்ற கேள்விக்கு விடை இல்லை. 


பரிமேல் அழகர் சொல்கிறார், அடுத்த வரியில் "பொன்றுங் கால்" அதாவது இறக்கும் தருவாயில் என்று வருகிறது அல்லவா, எனவே, அதைக் கொண்டு வந்து முன்னால் போடு. 


சாகிற காலத்தில் அறம் செய்யலாம் என்று நினைக்காதே என்று பொருள் கொண்டு வருகிறார். 


சரி...அது என்ன பொன்றாத் துணை ?


உடம்பே அழியப் போகிறது. அப்புறம் என்ன துணை?  


உயிர் உடலை விட்டுப் போகும். அது வேறு ஒரு உடம்பில் சென்று சேரும். இந்த உடம்போடு இருக்கும் போது செய்த அறம், புண்ணியமாக மாறி உயிரின் அடுத்த பிறவிக்கும் வரும். உயிர் எங்கெல்லாம் போகிறதோ, அங்கெல்லாம் வந்து இந்தப் பலனைத் தரும். 


சில பேர் ரொம்ப பாடு படாமல் சந்தோஷமாக இருக்கிறார்கள், சிலர் எவ்வளவு பாடு பட்டாலும் துன்பப் படுகிறார்கள், சிலர் அறம் அற்ற வழியில் சென்றாலும் அவர்களிடம் செல்வம் கொழிக்கிறது. சிலர் நேர்மையாக நடந்தாலும் வறுமை வாட்டுகிறது. 


ஏன்?


முன் செய்த அறம். 


பொன்றா துணையாக கூடவே வரும். 


பின்னால் செய்து கொள்ளலாம் என்று இருந்தால், நாளை என்ன வரும் என்று யாருக்குத் தெரியும்? பின்னாளில் செய்ய முடியாவிட்டால்? 


"செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனை உடம்பினுட் சேறலின். இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையின பொழுதே செய்க என்பது கூறப்பட்டது."


என்பது பரிமேலழகர் உரை. 


"செய்த உடம்பு அழியவும்"  நாம் இந்த உடம்போடு இருக்கும் போது செய்த அறம்தான். ஆனால், இந்த உடம்பு அழிந்து போகும். 


உயிரோடு ஒன்றி = அந்த அறம் நம் உயிரோடு ஒட்டிக் கொண்டு 

 ஏனை உடம்பினுட் சேறலின் = மற்ற உடம்போடு சேர்வதனால் 

 இதனான் = எனவே 

இவ்வியல்பிற்றாய = இந்த உயிரோடு ஒட்டிக் கொண்டு செல்லும் இயல்பை உடைய 

அறத்தினை = அறத்தினை 

நிலையாத யாக்கை = நிலை இல்லாத உடம்பு 

 நிலையின பொழுதே = நிலத்து இருக்கும் போதே 

 செய்க = செய்க 

என்பது கூறப்பட்டது. = என்று குறளில் கூறப் பட்டது 


என்கிறார் பரிமேலழகர். 


பின்னாடி செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாதீர்கள். இப்பவே செஞ்சுருங்க என்கிறார். 


எவ்வளவு ஆழமாக, நுணுக்கமாக சொல்லிச் சென்று இருக்கிறார்கள். 


மலைப்பாக இருக்கிறது.


என்ன புண்ணியம் செய்தோமோ, இவை எல்லாம் படிக்கக் கொடுத்து வைத்து இருக்கிறது. 


தமிழ் வாசிக்கத் தெரியும். திருக்குறள் இருக்கிறது. பரிமேலழகர் உரை இருக்கிறது. இதுக்கு மேல் என்ன சொத்து சேர்த்து விட முடியும்? 




பெரிய புராணம் - முன்னுரை

 பெரிய புராணம் - முன்னுரை 


இறைவனை அடைய என்ன செய்ய வேண்டும் ?


நிறைய படிக்கணுமா? நிறைய தான தர்மங்கள் செய்யணுமா? கோவில் கோவிலாக போய் சாமி கும்பிடணுமா?  நாளும் கிழமையும் ஆனா விரதம், பூஜை எல்லாம் செய்யணுமா? மடியா, ஆசாரமா இருக்கனுமா? 


இது ஒன்றும் செய்யாமலேயே இறைவன் அடி சேர்ந்த தொண்டர்களின் வரலாற்றுத் தொகுப்புதான் பெரிய புராணம். 


எழுத்தறிவே இல்லாமல், சிவனுக்கு மாமிசம் படைத்தார் கண்ணப்பர். அதுவும் எப்படி, வாயில் நீரை கொண்டு வந்து சிவன் மேல் கொப்பளிபார். அது தான் அபிஷேகம். செருப்புக் காலை கொண்டு போய் சிவ லிங்கத்த்தின் மேல் வைப்பார். படைத்த மாமிசமும் எப்படி, வாயில் போட்டு கடித்துப் பார்த்து பதமாக இருக்கிறதா என்று அறிந்த பின், அந்த எச்சில் மாமிசம் தான் நைவேத்தியம். 


நம்ம வீட்டில் நைவேதியத்துக்கு என்று வைத்த வடையை சிறு பிள்ளைகள் எடுத்தால் கூட நாம் திட்டுவோம். "பூஜை முடிந்து தர்றேன்...அதுக்குள்ள என்ன அவசரம்" என்று. பிள்ளைக்கு கவனம் முழுவதும் வடை மேலேயே இருக்கும். 


மண் பாண்டம் செய்து விற்கும் குயவர், அவருக்கு கொஞ்சம் பெண் பித்து. மனைவி இருக்க பல பெண்களை நாடினார். அதை அறிந்த மனைவி, "என்னைத் தொடாதே" என்று தள்ளி வைத்து விட்டார். அவருக்கு முக்தி. 


இன்னொருவரோ, சாமி கும்பிடவே இல்லை. சுவர்க்கம் வேண்டும், வீடு பேறு வேண்டும் என்றெல்லாம் கேட்கவே இல்லை.அவரை வீடு தேடி வந்து முக்தி தந்தார் சிவன். 


இன்னொருவர், சிவனை கூப்பிட்டு, "எனக்கு அந்த பெண் மேல் காதல். நீ போய் இந்த லவ் லெட்டரை நான் குடுத்தேன்னு குடுத்துட்டு வா" நு சிவனை courier boy யாக ஆக்கி விட்டார். அவருக்கும் முக்தி. 


இன்னொருவர், சிவன் ஒரு கடவுளே இல்லை. சைவம் ஒரு மதமே இல்லை என்றார். அவருக்கும் முக்தி. 


இப்படி பலதரப்பட்ட தொண்டர்களுக்கு முக்தி வழங்கிய வரலாறுதான் பெரிய புராணம். 


இவர்களுக்குள் இருந்த ஒரே ஒற்றுமை - பக்தி. அசைக்க முடியாத பக்தி. புரிந்து கொள்ள முடியாத பக்தி.  



https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_12.html


(Please click the above link to continue reading)


இப்படிதான் பக்தி செய்ய வேண்டும் என்ற கருத்தை முற்றாக முறித்து எறிந்த இலக்கியம் பெரிய புராணம். எப்படி வேண்டுமானாலும் பக்தி செய்யாலாம் என்று எடுத்துச் சொன்னது பெரிய புராணம். 


என் மதம் உயர்ந்தது,  என் ஜாதி உயர்ந்தது, நான் செய்யும் பக்தியே உயர்ந்தது, கடவுளுக்கு நான் செய்வது தான் பிடிக்கும், ஆடு வெட்டுவது, மாடு வெட்டுவது எல்லாம் காட்டு மிராண்டித் தனம் என்று சொல்பவர்கள் முன்னால், பிள்ளையை வெட்டி கறி சமைத்து போட்ட தொண்டர் கதையை சொல்கிறது பெரிய புராணம். 


அன்பு ஒன்று தான் முக்கியம் என்று எடுத்துக் காட்டிய இலக்கியம் பெரிய புராணம். 


எனவே தான் அதற்கு "பெரிய " புராணம் என்று பெயர் வந்தது. 



சேக்கிழாரின் தமிழ்...அமிழ்தை விட இனிமையாக இருக்கும். படிக்க படிக்க நாவில் இனிப்பு ஒட்டிக் கொள்ளும். அவ்வளவு இனிமையான பாடல். 


பக்தி மணம் ஒரு புறம், கொஞ்சும் தமிழ் மறுபுறம். 


அற்புதமான பக்தி இலக்கியம். படிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். 


அதில் இருந்து சில பாடல்களை பார்க்க இருக்கிறோம். 


பார்ப்போமா?


Friday, June 11, 2021

கம்ப இராமாயணம் - செய்து மறந்த

கம்ப இராமாயணம் - செய்து மறந்த 


ஒரு அரசனின் பெருமையை சொல்ல வேண்டும். எப்படிச் சொல்லலாம்? 


இலக்கியங்களை படிக்கும் போது, ஒரு விடயத்தை நாம் சொல்ல வேண்டி இருந்தால் எப்படி சொல்லி இருப்போம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நம்மால் அந்த விடயத்தை எவ்வளவு சிறப்பாக சொல்ல முடியும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். பின், இலக்கியத்தைப் படிக்க வேண்டும். அதில் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்போதுதான் இலக்கியத்தின் பெருமை புரியும்.


தசரதனின் பெருமையை சொல்ல வருகிறார் கம்பர்.


ஒரு பேரரசனின் பெருமை என்றால் என்னவாக இருக்கும். பெரிய யாகங்களை செய்வது. அச்வதமேத யாகம் போன்ற யாகங்கள் செய்வது என்றால் மற்ற அரசர்கள் அந்த அரசனை பேரரசன் என்று ஏற்றுக் கொண்டு கப்பம் கட்ட ஒத்துக் கொள்ள வேண்டும் அல்லது அந்த யாகம் செய்யும் அரசன் கப்பம் கட்ட மறுக்கும் அரசர்கள் மேல் போர் தொடுத்து அவர்களை வெல்ல வேண்டும். 


கடினமான செயல். 


நிறைய அரசர்கள் அதற்கு முயற்சி செய்வார்கள். எல்லோராலும் முடியாது. 


எனவே, கம்பன் என்ன சொல்லி இருப்பான்? தசரதன் பல அச்வேமேத யாகங்கள் செய்தான் என்று சொல்லி இருக்கலாம். அப்படி சொல்லி இருந்தால் அவன் ரொம்ப சாதாரண ஒரு கவிஞனாகி இருப்பான். 


கம்பன் சொல்கிறான். "பெரிய பெரிய யாகங்கள் எல்லாம் செய்ய வேண்டும் பல அரசர்கள் முயல்வார்கள். அந்த யாகங்கள் எல்லாம் தசரதன் என்றோ செய்து முடித்து, அப்படி ஒன்று நடந்ததையே மறந்தும் விட்டான்" என்று.  அவ்வளவு நாள் ஆகி விட்டதாம். "இதெல்லாம் நான் என்றோ செய்து முடித்து விட்டேன்...எப்ப என்று நினைவில் கூட இல்லை " என்று சொல்லும் அளவுக்கு தசரதன் இருந்தானாம்.  அவ்வளவு நாட்களுக்கு முன்னால் செய்திருந்தால், அதற்கு பின் எவ்வளவு காரியங்கள் செய்திருப்பான் என்பதை நம் கற்பனைக்கு விடுகிறான். 


அது மட்டும் அல்ல, தசரதன் நிறைய தான தர்மங்கள் செய்வான் என்று சொல்ல வந்த கம்பன் சொல்கிறான் "ஒவ்வொரு தரம் தானம் செய்யும் போதும் கையில் நீர் எடுத்து தாரை வார்த்துக் கொடுப்பான். அப்படி தசரதன் கையில் இருந்து வழியும் நீரால் நனையாத கைகளே இல்லை". அப்படி என்றால், அவனிடம் உதவி பெறாத நபர்களே இல்லை என்று அர்த்தம். 


பாடல் 


மொய் ஆர்கலி சூழ் முது பாரில். முகந்து தானக்

கை ஆர் புனலால் நனையாதன கையும் இல்லை;

மெய் ஆய வேதத் துறை வேந்தருக்கு ஏய்ந்த. யாரும்

செய்யாத. யாகம் இவன் செய்து மறந்த மாதோ.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_11.html


(please click the above link to continue reading)


மொய் = சூழ்ந்த 


ஆர்கலி = கடல் 


சூழ் = சூழ்ந்த 


முது பாரில் =  முதிய உலகில்


முகந்து =  நீரை முகந்து 


தானக் = தானம்  செய்யும் 


கை ஆர் புனலால் = கையில் இருந்து வழியும் நீரால் 


நனையாதன கையும் இல்லை; = நனையாத கை என்று ஒரு கையும் உலகில் இல்லை 


மெய் ஆய  = உண்மையான 


வேதத் துறை = வேத வழியில் நடக்கும் 


வேந்தருக்கு = அரசர்களுக்கு 


ஏய்ந்த. யாரும் = பெருமை/பொருந்திய 


யாரும்  = அனைவரும் 


செய்யாத. யாகம் = செய்யாத யாகங்கள் 


இவன் = தசரதன் 


செய்து மறந்த மாதோ. = செய்து பின் நீண்ட ஆள் ஆனதால் மறந்து போன யாகங்கள். 


என்ன ஒரு கற்பனை. 



Thursday, June 10, 2021

திருக்குறள் - அறத்தின் இயல்பு

திருக்குறள் - அறத்தின் இயல்பு 


நாம் அற வழியில் செல்கிறோமா அல்லது வேறு ஏதாவது தவறான பாதையில் செல்கிறோமா என்று எப்படித் தெரியும்?


எல்லோரும் செய்வதைப் போலத்தான் நாமும் செய்கிறோம். இருக்கிறோம். சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்வது இல்லை. இதெல்லாம் அறம் இல்லையா? வேறு என்ன செய்ய வேண்டும்? 


எப்போது நாம் அறம் அற்ற பாதையில் செல்கிறோம் என்று தெரிந்து கொள்வது? 


ஒவ்வொரு செயலுக்கு முன்னாலும் யாரிடமாவது போய் கேட்க முடியுமா - இது சரியா, இது அறமா என்று?


ஒண்ணே முக்கால் அடியில் இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார். 


இன்னொரு நூறு பிறவி எடுத்தாலும் நமக்கு அது தோன்றாது. 


பாடல்  


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_10.html


(please click the above link to continue reading)


அழுக்காறு = பொறாமை 

அவா = ஆசை 

வெகுளி = கோபம் 

இன்னாச்சொல் = தீய சொற்கள் 

நான்கும் = என்ற இந்த நான்கையும் 

இழுக்கா = விலக்கி 

இயன்றது = செய்வது 

அறம் = அறம் 


நினைத்துப் பார்க்க முடியமா நம்மால்?


அழுக்காறு - பொறாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமை. 


அவா - புலன்கள் மேல் செல்கின்ற ஆசை என்கிறார் பரிமேலழகர் 


கோபம் - பொறாமையாலும், புலன்கள் மேல் செல்லும் ஆசையாலும் கோபம் வரும். கோபம் எப்போது வரும், நமக்கு வேண்டியது கிடைக்காத போது கோபம் வரும். நாம் எதிர் பார்த்தது கிடைக்காத போது கோபம் வரும். வேண்டியது, எதிர் பார்த்தது எல்லாம் ஆசையால் விளைவது. அல்லது, மற்றவனுக்கு கிடைத்து விட்டதே, எனக்கு கிடைக்கவில்லையே என்று கோபம் வரும். 


இன்னா சொல் = இனிய சொல் என்பதன் எதிர்பதம். நீங்கள் மற்றவர்களிடம் இனிமையாக பேசவில்லையா, நீங்கள் அறம் தவறி நடக்கிறீர்கள் என்று அர்த்தம். துன்பம் தரும் சொல். பயனில்லாத சொல். 


இராமனை காட்டுக்குப் போ என்று தசரதன் சொன்னதாக கைகேயி சொல்லி விடுகிறாள். அதை அறிந்த இலக்குவன் கொந்தளிக்கிறான். 


அப்போது இராமன் சொல்கிறான் 


"மறை தந்த நாவால் இப்படித் எல்லாம் கோபம் கொண்டு பேசலாமா" என்று 


ஆய் தந்து, அவன், அவ் உரை  கூறலும் ‘ஐயன், ‘நின் தன்

வாய் தந்தன கூறுதியோ மறை தந்த நாவால்?

நீ தந்தது அன்றே நெறியோர்  கண் இலாதது? ஈன்ற

தாய் தந்தை என்றால் அவர்மேல் சலிக்கின்றது என்னோ? ‘


கோபமும் கூடாது. இன்னா சொல்லும் கூடாது என்பது விளங்கும். 


இந்த நான்கையும் விலக்கி, இடைவிடாமல் செய்வது அறம். 


மாதத்திற்கு ஒரு நாள் கோபப் படமாட்டேன் என்றால் அது அறம் அல்ல. எப்போதுமே கோபப் படக் கூடாது. 


வெள்ளி செவ்வாய் தண்ணி அடிக்க மாட்டேன் என்பதெல்லாம் அறத்தில் சேர்த்தி இல்லை. 


வியாழக் கிழமை மாமிசம் உண்பதில்லை. ஜீவ காருண்யம். 


இந்த நான்கில் ஒன்று மனதில் இருக்கும் போது எது செய்தாலும் அது அறம் இல்லை. 


"இவற்றோடு விரவி இயன்றது அறம் எனப்படாது என்பதூஉம் கொள்க."


என்கிறார் பரிமேலழகர். 


இதை வைத்துக் கொண்டு செய்வது அறம் அல்ல. 


பக்கத்து வீட்டுக் காரன் நாசாமாகப் போக வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே சாமி கும்பிட்டால் அது அறமாகாது. 


எப்போது இந்த நான்கில் ஏதோ ஒன்று மனதில் இருக்கிறதோ, அப்போதே நாம் அறம் அற்ற வழியில் செல்லப் போகிறோம் என்று அறிந்து கொள்ளலாம். 


நமக்குத் தெரியாதா நம் மனம். 


பொறாமை படுவது சட்டப் படி குற்றம் அல்ல. ஆனால், அது அறம் அல்ல. 


யாரையும் கேட்க வேண்டாம். நமக்கே தெரியும் நம் மன நிலை. அதை வைத்து நாம் அறத்தின் பாதையில் செல்கிறோமா இல்லையா என்று அறிந்து கொள்ளலாம். 

Wednesday, June 9, 2021

திருக்குறள் - மனத்துக்கண் மாசிலன் ஆதல்

 திருக்குறள் - மனத்துக்கண் மாசிலன் ஆதல் 


இந்த அறம் அறம் என்று சொல்கிறார்களே அப்படி என்றால் என்ன?  அது எங்கே எழுதி இருக்கிறது? ஏதாவது புத்தகத்தில் இருக்கிறதா? யாராவது சொல்லி வைத்து இருக்கிறார்களா? அப்படியே சொன்னாலும், அது எல்லா காலத்துக்கும் பொருந்துமா?


இராமர் வழியில் நடப்பது என்பது நடக்கிற காரியமா? 


நிறைய அற நூல்கள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் படித்து முடிக்க பல ஆயுள் தேவைப்படும் போல் இருக்கிறதே. ஒரு திருக்குறள் படிக்கவே இத்தனை நாள் ஆகிறது. என்று மற்ற நூல்களையெல்லாம் படிப்பது?


சரி அப்படியே படித்தாலும், அவை ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கின்றன. ஒரு நூலுக்கு உள்ளேயே முரண்கள் இருப்பது மாதிரி தெரிகிறது. 


ஐயம் இட்டு உண் என்று முன்னால் சொல்லி விட்டு

ஏற்பது இகழ்ச்சி என்று பின்னால் சொல்கிறாள். 


என்னதான் செய்வது? அற வழிப்படி எப்படி வாழ்வது?


வள்ளுவரைப் போல ஒரு ஆசான் நமக்கு கிடைக்குமா? 


7 வார்த்தைகள் அல்ல, நாலே வார்த்தையில் அறம் என்றால் என்ன என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். 


எந்த காலத்துக்கும், எந்த நாட்டுக்கும், அது பொருந்தும். 


"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்"


அவ்வளவு தான். மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதுதான் எல்லா அறமும். அதற்கு மேல் ஒரு அறம் இல்லை. 


பாடல் 


*மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற*


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_9.html


(Please click the above link to continue reading)

மனத்துக்கண் = மனதின் கண் 


மாசிலன் ஆதல் = குற்றம் இல்லாமல் இருப்பது 


அனைத்துஅறன் = எல்லா அறமும் அதுவே 


ஆகுல = ஆரவாரத்  


நீர = தன்மை உடையன


பிற = மற்றவை 


உலகில் உள்ள அத்தனை அயோக்கியத் தனங்களும் முதலில் மனதில் தோன்றுகின்றன. பின் அவை வாக்காக, செயலாக வடிவம் பெறுகின்றன. 


மனதில் குற்றம் இல்லை என்றால், அறம் அல்லாத செயல்ககள் நிகழவே நிகழாது. 


முந்தைய குறளில் அறம் செய்ய மூன்று வழிகள் சொன்னார் - மனம், வாக்கு, செயல் என்று. 


இங்கே, மனத்தின்கண் மாசிலன் ஆதல் என்று கூறி விட்டு, பின் சொல்கிறார் 

"ஆகுல நீர பிற" என்கிறார். 


அதாவது, வாக்காலும், செயலாலும் செய்யும் அறங்களில் ஆராவரதன்மை இருக்கும். கொஞ்சம் விளம்பரம், புகழ்ச்சி எல்லாம் இருக்கும். 


மனதில் தூய்மையாக இருந்துவிட்டால், ஒரு ஆராவாரமும் இல்லை, புகழ்ச்சி இல்லை, சத்தம் இல்லை. 


மனதில் தீய எண்ணங்களை வைத்துக் கொண்டு, வாக்கால், செயலால் அறம் செய்தாலும் சரி அல்ல என்கிறார். 


மனம் தூய்மையாக இருந்து விட்டால் போதும், மற்ற அறங்கள் எல்லாம் தானே வரும். 


இதை விட எளிமையாக, தெளிவாக யாரால் கூற முடியும்?


Tuesday, June 8, 2021

குறுந்தொகை - நல்கலு நல்குவர்

குறுந்தொகை - நல்கலு நல்குவர் 


வேலை நிமித்தமாக வெளியூர் போயிருப்போம். நாட்கள் பல கழிந்திருக்கும். வீட்டு நினைப்பு வராமல் இருக்குமா?


அந்த ஊரில் தெருவில் ஒரு இளம் ஜோடி கை கோர்த்து நடந்து போவதை பார்க்கும் போது, மனைவியின் (அல்லது கணவனின்) நினைப்பு வரும் அல்லவா? 


அந்த ஊரில் ஒரு நல்ல உணவை இரசிக்கிறோம். அடா ...இந்த ஐஸ் கிரீம் அவளுக்கு பிடிக்குமே என்ற எண்ணம் வரும் அல்லவா? 


இந்த மாதிரி சேலை உடுத்தினால் அவள் அழகாக இருப்பாள் என்று தோன்றலாம். 


அது மனித இயற்கை. துணையை பிரிந்து வந்த பின், சுற்றுப் புற சூழ் நிலை நமக்கு நம் துணையை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். 


இது இன்று நேற்று அல்ல. சங்க காலம் தொட்டு நிகழ்ந்து வருகிறது. 


தலைவன் பிரிவால் தலைவி வாடுகிறாள். அவளுக்கு ஆறுதலாக தோழி சொல்கிறாள் "கவல படாதடீ ...சீக்கிரம் வந்துருவார்" நு.


தலைவி: ஆமா நீ தான் சொல்ற. எனக்கு என்னவோ நம்பிக்கையே இல்ல. அவருக்கு வேலை தான் முக்கியம். என் நினைப்பு கூட இருக்குமோ இல்லையோ..


தோழி: அதெல்லாம் இல்லை...அவருக்கு உன் நினைப்பு கண்டிப்பா இருக்கும். 


தலைவி: அதெப்படி சொல்ற? 


தோழி: அவர் போகிற வழியோ பாலை நிலம். வெயில் சுட்டு எரிக்கும். அங்கு ஆண் யானையும், பெண் யானையும் சேர்ந்து செல்லும். தாகம் அதிகம் எடுக்கும். அப்போது, ஆண் யானை அங்குள்ள "யா" மர பட்டைகளை உரிக்கும். அதில் இருந்து நீர் வடியும். வடியும் நீரை தான் உண்ணாமல், பெண் யானை அருந்த, ஆண் யானை அதைப் பார்த்து மனம் மகிழும். 


அதை எல்லாம் பார்க்கும் போது அவருக்கு உன் நினைப்பு கண்டிப்பாய் வரும்.


ஏதோ, இன்று வரும் சினிமா பட காட்சி மாதிரி இருக்கிறது அல்லவா? 


கீழே உள்ள சங்க காலப் பாடலைப் பாருங்கள்.


பாடல் 


நசைபெரி துடையர் நல்கலு நல்குவர் 

 பிடிபசி களைஇய பெருங்கை வேழம் 

 மென்சினை யாஅம் பொளிக்கும் 

 அன்பின தோழியவர் சென்ற வாறே. 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_89.html

(please click the above link to continue reading)



நசை = அன்பு 


பெரி துடையர் = அதிகம் உடையவர் (உன்பால்) 


நல்கலு நல்குவர்  = அந்த அன்பை உன்னிடம் தருவார் 


 பிடி = பெண் யானை 


பசி களைஇய = பசியைப் போக்க 


பெருங்கை வேழம்  = பெரிய தும்பிக்கையை உடைய ஆண் யானை 


மென்சினை = மெல்லிய கிளையை 


யா = யா மரத்தின் 


அம் பொளிக்கும்  = உடைத்து, பியித்து 


அன்பின = அன்பை வெளிப்படுத்தும் 


தோழியவர் = தோழி, அவர் 


சென்ற வாறே.  = சென்ற வழி 


அவர் செல்கிற வழியில் இதை எல்லாம் பார்ப்பார். அப்போது அவருக்கு உன் நினைவு கண்டிப்பாக வரும். உன்னைக் காண சீக்கிரம் வந்து விடுவார் என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். 


எவ்வளவு மென்மையான உணர்வுகள். அதை எவ்வளவு அழகாக வெளிப் படுத்தி இருக்கிறார்கள். 



திருக்குறள் - எப்படி அறம் செய்வது ?

 திருக்குறள் - எப்படி அறம் செய்வது ?


அறத்தினால் வரும் நன்மைகளையும், அதைக் கடைப் பிடிக்காவிட்டால் வரும் தீமைகளையும் முன் சொன்னார்.


சரி. 


அந்த அறத்தை எப்படிச் செய்வது?  அறம் என்பது இங்கே உதவி, பிறர்க்கு செய்யும் நன்மை, கொடை என்ற அர்த்தத்தில் வருகிறது. அதுவும் அற வினைதான்.


என்னிடம் அவ்வளவு செல்வம் இல்லை. இன்னும் கொஞ்சம் செல்வம் சேர்த்த பின் தான தர்மங்கள் செய்யலாம் என்று இருக்கிறேன் என்று சிலர் நினைக்கலாம். பிள்ளைகளை கட்டிக் கொடுத்து விட்டு, என் எதிர்காலத்துக்கு கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு பின் அறம் பற்றி சிந்திக்கலாம் என்று இருக்கிறேன் என்று சிலர் நினைக்கலாம்.  தனக்கு மிஞ்சித் தானே தானமும் தர்மமும். எனக்கே யாராவது உதவி செய்தால் பரவாயில்லை என்று இருக்கிறேன்...இதில் நான் போய் யாருக்கு உதவி செய்வது? என்று சிலர் நினைக்கலாம். 


எல்லாவற்றிற்கும் வழி சொல்கிறார் வள்ளுவர். 


பாடல் 


ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல்  (33)


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_8.html


(Please click the above link to continue reading)


ஒல்லும் வகையான் = செய்ய முடிந்த வரையில் 


அறவினை  = அறச் செயல்களை 


ஓவாதே = இடை விடாமல் 


செல்லும்வாய் எல்லாம் = எப்படியெல்லாம்  முடியுமோ 


 செயல்  = செய்க 


அறச் செயல்களை முடிந்த வரையில், எப்படி எல்லாம் முடியுமோ செய்க.


முதலில் நிறைய  பிரச்சனைகளை எழுப்பி, அதுக்கெல்லாம் வள்ளுவர் விடை சொல்கிறார் என்று கூறினீர்களே, இதில் ஒரு விடையும் இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம். 


பரிமேலழகர் இல்லாவிட்டால் நம்மால் அந்த விடைகளை இந்தக் குறளில் காணவே முடியாது. 


ஒரு நிமிடம் கண் மூடி யோசித்துப் பாருங்கள். இந்தக் குறளில் இதற்கு மேல் என்ன அர்த்தம் இருந்து விட முடியும் என்று. 


இப்போது பரிமேலழகர் எப்படி உரை எழுதுகிறார் என்று பாருங்கள். 


"ஒல்லும் வகையான்" - முடிந்த வரை என்பதற்கு பரிமேலழகர் யாருக்கு முடிந்த வரை என்ற கேள்வியை எழுப்புகிறார். இது "அறன் வலியுறுத்தல்" என்ற அதிகாரம். எனவே உரையும் அதைப் பற்றியே இருக்க வேண்டும். அதற்கு சம்பந்தமில்லாமல் உரை எழுதக் கூடாது. எனவே, யார் என்ற கேள்விக்கு மக்களை இரண்டாக பிரிக்கிறார். மக்கள் இரண்டு விதமான அறங்களை பின் பற்றுகிறார்கள். இல்லறம், துறவறம் என்ற இரண்டு அறங்கள். 


எனவே, இல்லறத்தில் இருப்பவர்கள், துறவறத்தில் இருப்பவர்கள் முடிந்தவரை அறம் செய்ய வேண்டும்  என்று முதல் படி எடுக்கிறார். 


அடுத்தது, சரி, இதில் என்ன வேறுபாடு இருக்கிறது? இல்லறத்தில் இருப்பவனுக்கும், துறவறத்தில் இருப்பவனுக்கும் அறம் செய்வதில் என்ன வேறுபாடு என்ற கேள்வியை எழுப்பி அதற்கு பதில் தருகிறார். 



"இல்லறம் பொருள் அளவிற்கு ஏற்பவும், துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவும் செய்தல்"



இல்லறத்தில் இருப்பவன், தன்னுடைய பொருள் வசதிக்கு ஏற்பவும், துறவறத்தில் இருப்பவன் தன்னுடைய உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்குமோ அந்த அளவும் என்கிறார். துறவறத்தில் இருப்பவனிடம் அதிகமாக பொருள் இருக்காது.  அவன் அதிகம் சாப்பிட்டு பெரிய உடல் வலிமையுடனும் இருக்க மாட்டான். எலும்பும் தோலுமாக இருப்பான். 



ஆண்கள் படித்தால் அழகு 


பெண்கள் மணந்தால் அழகு 


நான்கு கால் பிராணிகள் கொழுத்தால் அழகு 


துறவிகள் மெலிந்தால் அழகு 


என்று ஒரு பேச்சு வழக்கு உண்டு. 


எனவே, துறவி முடிந்தவரை உடல் உழைப்பால் மற்றவர்களுக்கு அறம் செய்ய முடியும். 


சரி, இல்லறத்தில் இருக்கும் எல்லாரிடமும் செல்வம்  இருக்குமா ?


அதற்கும் விடை தருகிறார் 


"செல்லும் வாயெல்லாம் செயல்"...எப்படியெல்லாம் முடியுமோ, அப்படி செய்ய வேண்டும். 


அது என்ன எப்படியெல்லாம் முடியுமோ?


அறத்தை மூன்று வழிகளில் செய்யலாம் 


மனதால், வாக்கால், செயலால் 


பொருள் இருந்தால், பொருள் கொடுப்போம். 


பொருள் இல்லையா, வாக்கால் அறம் செய்வோம்.  ஒரு நெருங்கிய நண்பருக்கோ, உறவினருக்கோ ஒரு சிக்கல் வந்து விட்டது. அவரிடம் பணம் இருக்கிறது. இருந்தும் ஒரு துக்கம். என்ன செய்யலாம்? அவருக்கு இதமாக நாலு வார்த்தை சொல்லலாம். ஆறுதல் சொல்லலாம். அது பணத்தை விட உயர்ந்தது. 



சரி, நல்ல சொல்லும் சொல்ல வரவில்லை என்றால்? மனதால் அவர்கள் நன்மை அடைய வேண்டும் நினைத்தாலும் போதும்.  அதுகூடவா கடினம்?



அறம் செய்ய விரும்பு என்று மூன்று வார்த்தையில் சொல்லி விட்டுப் போய் விட்டாள் கிழவி.  விரும்புதல் மனதால் செய்தல். 


யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

- திருமந்திரம்


என்பார் திருமூலர். 


ஒன்றும் முடியாவிட்டால் ஒரு இன்னுரை சொன்னால் போதும். 


'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர் 

நிதி குறைந்தவர் காசுகள் தாரீர் 

அதுவுமற்றவர் வாய்ச்சொல் அருளீர் 

ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்'


என்பார் பாரதியார். 


முடிந்தால் பொன் கொடுங்கள். இல்லை என்றால் காசு கொடுங்கள், அதுவும் இல்லை என்றால் உடல் உழைப்பைத் தாருங்கள், அதுவும் இல்லை என்றால் வாய்ச் சொல் அருளீர் என்கிறார். 


மற்றவை எல்லாம் தாருங்கள் என்று சொன்னவர், வாய்ச் சொல்லை "அருளீர்" என்றார். 


இல்லறத்தான் - பொருளாலும் 


துறவறத்தான் - உடல் உழைப்பாலும் 


மனம், மொழி, வாக்கால் அறம் செய்ய வேண்டும் என்று எப்படி அறம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். 



யோசித்துப் பாருங்கள், பரிமேலழகர் இல்லை என்றால், இந்த அர்த்தம் நமக்கு புரிந்து இருக்குமா?