Wednesday, February 28, 2024

கம்ப இராமாயணம் - முகம் காட்ட வல்லேனோ ?

 கம்ப இராமாயணம் - முகம் காட்ட வல்லேனோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_28.html



இயற்கையாகவே பெண்கள் அழகானவர்கள். அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள். உடை, ஒப்பனை என்று அனைத்து விதத்திலும் தாங்கள் அழகானவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அழகுணர்ச்சி அவர்களிடம் இயற்கையிலேயே அமைந்து கிடக்கிறது. 


தங்கள் அழகு மட்டும் அல்ல, அவர்கள் இருக்கும் இடம், வீடு, சமையல் அறை எல்லாமே ஒரு அழகோடு, நேர்த்தியோடு இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 


ஒரு பெண்ணால் சகிக்க முடியாத ஒன்று அவளின் அழகை இழப்பதுதான். ஆரோக்கியம் குறைந்தால் கூட கொஞ்சம் குறைவாகத்தான் கவலைப்படுவார்கள். அழகு குறைவது பெரிய குறை.

 

சாதாரண நாட்களை விட வீட்டில் ஒரு விசேடம் என்றால் கேட்கவே வேண்டாம். புதுத் துணி, அழகு நிலையத்துக்குப்  போய் தங்களை மேலும் அழகு படுத்திக் கொள்வது, நகைகளை மெருகேற்றிக் கொள்வது, என்று அதிகப்படியான சிரமம் எடுத்துக் கொள்வார்கள். 



நம் வீட்டு பெண்மணிகள் நிலை இது என்றால், சூர்பனகை நிலை எப்படி இருக்கும். 


இராவணனின் அவை எப்படி இருக்கும்?


தேவாதி தேவர்கள் எல்லாம் வந்து அவன் முன் கை கட்டி நிற்பார்கள். தேவ லோகப் பெண்கள் பல்லாண்டு பாடுவார்கள். ஏழேழு உலகமும் அவனை துதித்து நிற்கும். அப்பேற்பட்ட சபையில் அவள் சென்றால் அவளுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும். 


ஆனால், இன்று அவள் மூக்கும், காதும், முலையும் அறுபட்டு இருக்கிறாள். இப்படிப்பட்ட நிலையில் அந்த சபைக்கு அவள் போனால் எப்படி இருக்கும்? அவளைப் பார்த்து எல்லோரும் சிரிக்க மாட்டார்களா? அவளால் அங்கு போக முடியுமா? 


பாடல் 



'இந்திரனும், மலர் அயனும்,

     இமையவரும், பணி கேட்ப,

சுந்தரி பல்லாண்டு இசைப்ப, உலகு

     ஏழும் தொழுது ஏத்த,

சந்திரன்போல் தனிக் குடைக்கீழ்

     நீ இருக்கும் சவை நடுவே

வந்து, அடியேன் நாணாது,

     முகம் காட்ட வல்லேனோ?


பொருள் 


'இந்திரனும் = தேவர்களின் தலைவனான இந்திரனும் 


மலர் அயனும் = தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும் 


இமையவரும் = கண் இமைக்காத மற்ற தேவர்களும் 


பணி கேட்ப = இராவணன் இட்ட கட்டளையை கேட்டு நடக்க 


சுந்தரி = தேவ லோகப் பெண்கள் 


பல்லாண்டு இசைப்ப= பல்லாண்டு பாடல் பாட 


உலகு ஏழும் = ஏழு உலகும் 


தொழுது ஏத்த = பணிந்து தொழ 


சந்திரன்போல் = நிலவைப் போன்ற வெண்மையான 


தனிக் குடைக்கீழ் = தனிச் சிறப்பு வாய்ந்த குடையின் கீழ் 



நீ = இராவணனாகிய நீ 


இருக்கும் சவை நடுவே = வீற்றிற்கும் சபையின் நடுவே 


வந்து = வந்து 


அடியேன் = சூற்பனகையான நான் 


நாணாது = நாணம் இல்லாமல் 


முகம் காட்ட வல்லேனோ? = முகத்தையாவது காட்ட முடியுமா? (முடியாது) 


அவளால் அந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. உறுப்பு அறுந்த வலி கூட பெரிதாகத் தெரியவில்லை. தன் அழகு போய் விட்டதே. வெளியே தலை காட்ட முடியாமல் போய் விட்டதே என்று வருந்துகிறாள். 


ஒரு பெண்ணின் அவல நிலையை கம்பன் அவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறான். 


Saturday, February 24, 2024

திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு

 திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு 


இந்த உடல் அழியும் தன்மை உடையது. என்ன செய்தாலும், ஒரு நாள் அழிந்தே தீரும். இப்படி அழியும் உடலை பாதுகாக்க வேண்டி இன்னொரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்டால், உயிர்க்  கொலை  செய்த பாவம் வரும். அந்தப் பாவம் பிறவி தோறும் தொடரும். இப்படி ஒரு பிறவியில் அழியும் உடலை வளர்க வேண்டி செய்த பாவம் அழியாமல் நின்று பிறவி தோறும் தொடரும் என்றால், அதைச் செய்யலாமா? 


அப்படி தன் சுய தேவைக்காக இன்னொரு உயிரைக் கொன்று தின்பவன் மனதில் அருள் எங்கே இருக்கும் ? அருள் இல்லாதவன் வீடு பேறு அடைவது எங்கனம்?


பாடல் 


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்


பொருள் 


தன்ஊன் = தன் உடலில் உள்ள மாமிசத்தைப் 


பெருக்கற்குத் = வளர்ப்பதற்கு 


தான் = ஒருவன் 


பிறிது = பிற உயிரின் 


ஊன்உண்பான் = மாமிசத்தை தின்பான் என்றால் 


எங்ஙனம் ஆளும் அருள் = அவன் எப்படி அருள் வழியில் நிற்க முடியும்? 


இன்றைய நவீன சிந்தனையாளர்கள் "ஆஹா...உயிரைக் கொல்லக் கூடாதா? சரி, அப்படி என்றால் தாவரங்களும் உயிர்கள்தானே, அதை மட்டும் கொல்லலாமா? " என்று வாதிக்கக் கூடும். 


தாவரங்களால் நகர முடியாது. ஒரு மரமோ செடியோ இன விருத்தி செய்ய வேண்டும் என்றால் அதன் விதைகள் நீண்ட தூரம் செல்ல வேண்டும். எல்லா விதையும் ஒரே இடத்தில் விழுந்தால் ஓரிரண்டு முளைக்கலாம். எல்லாம் முளைக்காது.  பின் எப்படி விதைகளைப் பரப்புவது?


உண்மைதான். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளல் பெருமான். அது அருளின் உச்சம். 


வள்ளலார் ஒரு நாள் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அங்கே மீன் பிடிக்கும் வலைகளை காய வைத்து இருந்தார்கள். அதைப் பார்த்து, பதறிப் போய், அதை கொலைக் கருவி என்றார். எத்தனை மீன்களை அது கொல்கிறது. மீன் வலையைப் பார்த்தால் கொலைக் கருவி என்று நமக்குத் தோன்றுமா?


நம் பழைய இலக்கியங்களில் பார்த்தால் தெரியும், முனிவர்கள், கானகத்தில் மரங்கள் உதிர்த்த, காய்ந்த சருகுகளை உண்டு உயிர் வாழ்ந்தார்கள். இலையைக் கூடப் பறிக்கக் கூடாது. அதுவும் ஒரு உயிர் தான் என்பது அவர்கள் எண்ணம். 


பாரதத்தில், அர்ச்சுனன் தவம் மேற்கொள்கிறான். வெறும் சருகை மட்டும் உண்டு தவம் செய்தான் என்பார் வில்லிபுத்துரார். 


பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்

                           பாதபங்களின் சினை உதிர்ந்த

சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது

                                  அருந்துதல் தவிர்ந்தான்

உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி

                                  ஆக்கி, நம்மிடத்தே

செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்

                                  சிறந்தவர்?' என்றான்.



தாவரங்கள் தங்கள் விதைகளை காய்களிலும், கனிகளிலும் புதைத்து வைக்கின்றன. அதை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும், அந்த விதைகளை அவர்கள் வசிக்கும் இடங்களில் விழச் செய்கிறார்கள். 


உதாரணமாக, சேலத்தில் ஒரு மாமரம் இருக்கிறது. மாம்பழம் இனிமையாக இருப்பதால், அந்த மரத்தின் பழத்தை பறித்து சென்னை , டெல்லி போன்ற இடங்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கே உள்ள மக்கள் அந்தப் பழத்தை உண்டு, அதன் விதையை குப்பையில் போட்டு விடுகிறார்கள். அது அங்கே முளைக்கும். மாம்பழத்தை மனிதர்கள் உண்பது இல்லை என்று வைத்து விட்டால், சேலத்தில் உள்ள விதை மும்பைக்கும், டெல்லிக்கும் எப்படி போகும். தங்கள் விதைகளை கொண்டு செல்ல விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தாவரங்கள் தரும் கூலி அந்த காய்களும், கனிகளும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


தொலைக்காட்சியில் இந்த மாமிச உணவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பற்றி நிறைய செய்திப் படங்கள் இருக்கின்றன. அதில், விலங்குகளை எப்படி கொன்று, அதன் மாமிசத்தை எடுத்து டப்பாவில் அடைகிறார்கள் என்று காட்டுவார்கள். 


சிறு சிறு கோழிக் குஞ்சுகளில் இருந்து, பெரிய திமிங்கலம் வரை, கொஞ்சம் கூடஒரு முக சுளிப்பு இல்லமால், மனதில் உறுத்தல் இல்லாமல், கொன்று தள்ளுகிறார்கள். இரத்தம் பீரிட்டு அடிக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப் படுவது இல்லை. அப்படி ஒரு சிறு உறுத்தல் கூட இல்லாமல் உயிர்களை கொல்பவர்கள் மனதில் அருள் எப்படி இருக்கும் என்று வள்ளுவர் கேட்கிறார். 




Friday, February 23, 2024

கந்தர் அநுபூதி - கமழும் கழல்

கந்தர் அநுபூதி - கமழும் கழல் 


கிடைக்கவே கிடைக்காது, கிடைப்பது ரொம்பக் கடினம், என்று நாம் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்போம். அது நாம் எதிர்பாராத நேரத்தில் கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?  


இது எப்படி நமக்கு கிடைத்தது என்று வியந்து போவோம் அல்லவா?  இது உண்மைதானா, என்ற சந்தேகம் ஒருபுறம் வரும். இன்னொருபுறம் மிகுந்த மகிழ்ச்சி. 


அது போல அருணகிரிநாதர் இருக்கிறார். 


முருகனின் திருவடியில் சரணம் அடையும் பேறு தனக்கு எப்படி கிடைத்தது என்று விளங்காமல் தவிக்கிறார். அதை நான் எப்படிச் சொல்லுவேன் என்று திகைக்கிறார். 


அப்படி என்ன முருகன் திருவடியில் சிறப்பு?


அவரே சொல்கிறார் 


"வீடு பேற்றைத் தரும் திருவடி. தேவர்களின் தலை மேல் இருக்கும் திருவடி. வேதத்தில் படிந்து கிடக்கும் திருவடி. வள்ளியைத் தேடி தினைப்புனம் உள்ள காட்டில் பதிந்த திருவடி. இங்கெல்லாம் அவன் திருவடி பட்டு, அவை எல்லாம் மணம் வீசுகிறதாம்."


பாடல் 



சாடும் தனிவேல் முருகன் சரணம் 

சூடும் படிதந்தது சொல்லு மதோ 

வீடும் சுரர்மாமுடி வேதமும் வெங் 

காடும் புனமும் கமழுங் கழலே . 


பொருள் 


சாடும் = போர் புரியும் 

தனி = தனித்துவமான 


வேல் = வேல் 


முருகன் = முருகன் 


சரணம்  = சரண் அடையும்படி 


சூடும் படிதந்தது = அந்தத் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளத் தந்தது 


சொல்லு மதோ  = எப்படி என்று சொல்ல முடியுமா? 


வீடும் = சுவர்க்கத்திலும் 


சுரர்மாமுடி = தேவர்களின் தலையிலும் 


வேதமும் = வேதத்திலும் 


வெங் காடும் = வெம்மையான காட்டிலும் 


புனமும் = அந்தக் காட்டில் உள்ள திணை புனம் உள்ள இடத்திலும் 


 கமழுங் கழலே = மணம் வீசும் திருவடிகளே 


கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?

கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?


இலக்குவனால் உறுப்புகள் சேதிக்கப்பட்ட சூர்பனகை, தன் தமையான கரனை நினைத்து புலம்புகிறாள். 


"இந்த மானிடர்கள் என்னை இந்த மாதிரி தண்டித்து விட்டார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?  இந்தக் காட்டில் மறைந்து, தவம் செய்யும் முனிவர்களின் தவ வலிமையா? அரக்கர்களின் வலிமை குறைந்து போனதோ? எதிரில் நிற்கும் இவர்கள் பிரமனா, திருமாலா, சிவனா ? அவர்களுக்கு இணையான வலிமை படைத்த கரனே, என் நிலைமை காணாயோ?"


பாடல் 


 'மரன் ஏயும் நெடுங் கானில்

     மறைந்து உறையும் தாபதர்கள்

உரனேயோ? அடல் அரக்கர் ஓய்வேயோ?

     உற்று எதிர்ந்தார்,

"அரனேயோ? அரியேயோ? அயனேயோ?"

     எனும் ஆற்றல்

கரனேயோ! யான் பட்ட

     கையறவு காணாயோ?


பொருள் 


 'மரன் ஏயும் = மரங்கள் அடர்ந்த 


 நெடுங் கானில் = இந்தப் பெரிய கானகத்தில் 


 மறைந்து = மறைந்து 


உறையும் = வாழும் 


தாபதர்கள் = தவம் செய்யும் முனிவர்களின் 


உரனேயோ? = தவ வலிமையா? 


அடல் = சண்டை செய்யும் 


 அரக்கர் = அரக்கர்களின் 


 ஓய்வேயோ? = வலிமை குன்றியதோ ?


உற்று எதிர்ந்தார் = எதிர்த்து நிற்பவர்  


"அரனேயோ? = சிவனோ ?


அரியேயோ?  = திருமாலோ?


அயனேயோ?" = பிரமனோ?


எனும் ஆற்றல் = என்று சொல்லும்படி ஆற்றல் கொண்ட 


கரனேயோ! = கரனே 


யான் பட்ட = நான் பட்ட 


 கையறவு காணாயோ? = துன்பத்தைக் காண மாட்டாயா?




Thursday, February 22, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_22.html


மாமிசம் உண்ணலாமா? கூடாதா ? என்ற சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. இரண்டு பக்கமும் அழுத்தமான காரணங்கள் இருக்கின்றன. 


வள்ளுவர் புலால் உணவை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அது சரி தவறு என்ற வாதத்துக்குள் போகவில்லை. 


வாழ்வின் நோக்கம் என்ன?  


வீடு பேறு அடைவது. 


அதற்கு வழி என்ன?


இல்லறம் - துறவறம். 


துறவறத்துக்கு இன்றியையாத ஒன்று - அருள். 


பிற உயிர்களை கொன்று தின்றால், மனதில் அருள் இல்லாமல் போகும். அருள் இல்லை என்றால் துறவு இல்லை. துறவு இல்லை என்றால் வீடுபேறு இல்லை. 


எனவே, புலாலை மறுக்கச் சொல்கிறார். 


புலால் உண்பவர்கள் சொல்லும் ஒரு தர்க்கம் இருக்கிறது. 


"...நான் அந்த ஆட்டை மாட்டை கொல்லவில்லை. யாரோ, ஏற்கனவே கொன்று அதன் மாமிசத்தை கடையில் வைத்து இருக்கிறான். நான் வாங்கவிட்டாலும், யாராவது அதை வாங்கி உண்ணத்தான் போகிறார்கள். இல்லை என்றால் குப்பையில் போடப்படும். எனவே, நான் கொல்லவில்லை. எனக்கு எந்த பாவமும் இல்லை..." என்று ஒரு சாரார் வாதம் செய்கிறார்கள். 


மற்றவன் 


"..நான் புலால் உண்பது இல்லை. விலங்குகளை வெட்டி வைக்கிறேன். வேண்டுபவர்கள் வாங்கி உண்கிறார்கள். அவர்கள் உண்பதால்தானே நான் வெட்டி வைக்கிறேன்?  யாருமே வாங்கவில்லை என்றால் நான் ஏன் விலங்குகளை வெட்டப் போகிறான் " 


இரண்டு பக்கமும் இப்படி கூறுவார்கள் என்று அறிந்து பரிமேலழகர் அதை மறுக்கிறார். 


"கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது"


அதாவது உண்பதால், கொலை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே புலால் உண்பது கொலைக்கு காரணமாகிறது. 


கொலை செய்யப்பட்டதால், உண்கிறார்கள். எனவே புலால் உணவு காரியமாகிறது. 


அவ்வாறு காரணம், மற்றும் காரியம் இரண்டுக்கும் எதுவாக இருப்பதால், புலால் உண்பது துறவிகளுக்கு மறுக்கப்பட்டது. 


இனி அதிகாரத்துக்குள் செல்வோம். 



Sunday, February 18, 2024

திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம்

 திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_18.html

அருள் இருந்தால் எவ்வளவோ நன்மை என்று தெரிகிறது. இருந்தும் அருள் வர மாட்டேன் என்கிறதே. அது ஏன் இயற்கையாக வர மாட்டேன் என்கிறது? அப்படி வராத அருளை எப்படி வரவைப்பது ?


அருள் வராத இடங்கள் எவை ?


வீட்டு வேலைக்கார்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்கள் மேல், நம்மை விட செல்வத்தின், அறிவில், புகழில், பெருமையில் குறைந்தவர்களிடம் நமக்கு ஒரு ஆணவம், அவர்கள்மேல் ஒரு இளக்காரம், திட்டினால் பதிலுக்கு திட்டமாட்டார்கள் என்று ஒரு தைரியம். சிலர் அது போன்ற எளியவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பது கிடையாது. அவர்கள் ஏதாவது கேட்டால் முகம் பார்த்து கூட பதில் சொல்ல மாட்டார்கள். 


இந்த கெட்ட பழக்கத்தை எப்படி மாற்றுவது?


வள்ளுவர் சொல்கிறார்,


"உன்னை விட மெலிந்த ஒருவன் மேல் நீ உன் வலிமையை காட்டுவதற்கு முன், உன்னை விட வலிமையான ஒருவன் முன் நீ நிற்பதாய் ஒருமுறை எண்ணிப் பார். உனக்கு எவ்வளவு பயம் இருக்கும், நடுக்கம் இருக்கும். அது உனக்கு பிடித்து இருக்கிறதா?  அது ஒரு வலிதானே ? அந்த வலிதானே உன் முன்னால் இருப்பவனுக்கும் இருக்கும் என்று நினைத்துப் பார். தானாகவே அருள் பிறக்கும் "


என்கிறார். 


பாடல்  


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து


பொருள் 


வலியார்முன் = தன்னை விட வலியவர்கள் முன் 


தன்னை நினைக்க = ஒருவன் தன்னை நினைத்துக் கொள்க 


தான் தன்னின் = ஒருவன் தன்னை விட 


மெலியார்மேல் = மெலிந்தவர்கள் மேல் 


செல்லும் இடத்து = செல்லும் பொழுது 


இந்தக் குறளுக்கு பரிமேலழகர் செய்திருக்கும் நுணுக்கம் மிக அழகானது.


மெலியார் என்று உயர்திணையில் கூறினாலும், அது விலங்குகளையும், ஏனைய உயிர்களையும் சேர்த்தது என்கிறார். 


ஆட்டையும், மாட்டையும், வெட்டும் போது, என்னை விட  பலமான ஒருவன் என்னை இப்படி வெட்டினால் எப்படி இருக்கும் என்று நினைக்க வேண்டும் என்கிறார். 


மேலும்,


"செல்லும் இடத்து" என்றால் என்ன?  


ஒரு போக்குவரத்து துறை அதிகாரி உங்கள் வண்டியை நிறுத்தி, வண்டிக்கு உண்டான certificate களை கேட்கிறார். ஒரு சின்ன பயம் இருக்கும். எல்லாம் சரியா இருக்குமோ, இருக்காதோ என்று சந்தேகம் வரும். எவ்வளவு அபராதம் வருமோ என்ற பயம் வரும். ஆனால், அதே அதிகாரியின் முன் நாம் வண்டியில் இல்லாமல் நடந்து செல்லும் போது அந்தப் பயம் வருமா?  வராது. 


பயம் எப்போது வரும் என்றால், நம்மை விட வலியவன் நமக்கு துன்பம் தருவதற்கு வருகிறான் என்றால், பயம் வரும். அதைத்தான் 'செல்லும் இடத்து" என்றார். நாம் அவனிடம் போகிறோம். அவனால் நமக்கு துன்பம் வரலாம் என்றால் பயப்படுவோம் அல்லவா?  அது போல உன்னிடம் வருபவனை நினைத்துப் பார். என்கிறார். 


தானே அருள் வரும் என்கிறார். 


அப்படியாக அருளுடைமை என்ற அதிகாரம் முற்றுப் பெற்றது. 


அடுத்தது புலால் மறுத்தல் என்ற அதிகாரம். 







Saturday, February 17, 2024

அபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியே

அபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியே

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_17.html

பட்டருக்கு அபிராமியின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு. 


அவளைத் தவிர வேறு யாரையும் அவருக்குத் தெரியாது. 

மற்றவர்கள் எல்லாம் துச்சம் அவருக்கு. 


அபிராமி, அவளுடைய பக்தர்கள். இதைத் தவிர வேறு ஒன்றும் அவருக்கு வேண்டாம். 


அவர் சொல்கிறார், 


அபிராமி, நீ தான் எனக்குத் தெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் உனது பரிவாரங்கள் ஆனபடியால், அவர்களை எல்லாம் நான் வணங்க மாட்டேன். அவர்களை எல்லாம் போற்றவும் மாட்டேன். மனதில் வஞ்சகம் உள்ளவர்களோடு சேர மாட்டேன். தன்னுடையது எல்லாம் நீ கொடுத்தது என்று இருக்கும் உன் பக்தர்களோடு வேறு பாடு கொள்ள மாட்டேன். எனக்கு என்ன தெரியும் உன்னைத் தவிர, உன் அருளைத் தவிர"


என்று. 


பாடல் 


 அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்

வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்

பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.


பொருள் 


அணங்கே! = தெய்வப் பெண்ணே


அணங்குகள் = மற்ற தேவ லோகப் பெண்கள் எல்லாம் (சரஸ்வதி, இலக்குமி) 


 நின் பரிவாரங்கள் = உன்னுடைய பரிவாரங்கள், உன் பின்னால் வரும் கூடத்தில் ஒருவர்கள் 


ஆகையினால் = ஆனபடியால் 


வணங்கேன் = அவர்களை எல்லாம் நான் வணங்க மாட்டேன் 


ஒருவரை வாழ்த்துகிலேன் = அவர்களில் ஒருவரைக் கூட வாழ்த்தவும் மாட்டேன் 


நெஞ்சில் = மனதில் 


வஞ்சகரோடு = வஞ்சக எண்ணம் உள்ள ஆட்களோடு 


இணங்கேன் = சேர்ந்து இருக்க மாட்டேன் 



 எனது = தன்னுடையது எல்லாம் 


 உனது  = உன்னுடையது 


என்றிருப்பார் = என்று நினைக்கும் 


சிலர் யாவரொடும் = சிலரோடு 


பிணங்கேன் = மாறுபாடு கொள்ள மாட்டேன் 


அறிவொன்றிலேன்  = எனக்கென்று தனியே ஒரு அறிவும் இல்லை 


எண்கண் = என் மேல் 


நீவைத்த = நீ வைத்த 


பேரளியே = பெருங்கருணையே, பெரிய அன்பே, பெரிய கருணையே 


மத்தவங்க எல்லாம் தேவை இல்லை. நீ மட்டும் போதும். உன் அன்பு மட்டும் போதும். நான் ஒன்றும் சிந்திக்கப் போவது இல்லை. அறிவு என்று ஒன்று இருந்தால் அல்லவா சிந்திக்க. 


நீ என் மேல் அன்பு வைத்து இருக்கிறாய். நான் உன் மேல். இதில் அறிவுக்கு என்ன வேலை இடையில். 


அன்பு என்பது ஆராய்வது அல்ல. அனுபவிப்பது. 


எதோ ஒரு சில புத்தகங்களை படித்துவிட்டு,  தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பும் சிலரோடு நான் சேர மாட்டேன். அவனுக எப்படியோ போகட்டும்.


எனக்கு நீ, உனக்கு நான். 


உலகில் மற்ற பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உனக்கு பக்கத்தில் கூட வர முடியாது. அவர்களைப் பற்றி எல்லாம் எனக்கு ஒரு கவலை இல்லை. 


இந்த அன்பை புரிந்து கொள்ள தனி மனம் வேண்டும். 




.


 

 

Wednesday, February 14, 2024

திரிகடுகம் - முன் செய்த வினை

 திரிகடுகம் - முன் செய்த வினை 


சில சமயம் நம்மால் தீர்க்க முடியாத சில துன்பத்தில் மாட்டிக் கொள்வோம். என்ன செய்தாலும், அதை தீர்க்க முடியாது. அப்போது நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தத் துன்பம் முன் செய்த வினையால் வந்தது என்று. 


அப்படிப்பட்ட மூன்று துன்பங்களை பட்டியலிடுகிறது திரிகடுகம்.


"எதிர்த்துப் பேசும் மனைவி, ஒழுக்கம் இல்லாத வேலையாள், பகைக் கொண்ட சுற்றம். இந்த மூன்றும் முன் செய்த வினையால் வந்து நின்று ஒருவனது இறுதிக் காலம் வரை வந்து துன்பம் தரும். அதற்கு ஒன்றும் செய்ய முடியாது"


பாடல் 


எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பில் தொழும்பும்

செயிர்நிற்கும் சுற்றமும் ஆகி - மயிர்நரைப்ப

முந்தை பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்

நொந்தார் செயக்கிடந்தது இல். . .


பொருள் 


எதிர்நிற்கும் பெண்ணும் = என்ன சொன்னாலும், எதிர் வாதம் செய்யும் மனைவியும். எதிர்த்துப் பேசும் மனைவியும். 



இயல்பில் தொழும்பும் = இயல்பு + இல் + தொழும்பும் = ஒழுக்கம் இல்லாத வேலையாட்களும் 


செயிர்நிற்கும் சுற்றமும்  ஆகி = எப்போதும் பகை கொண்டு இருக்கும் சுற்றத்தாரும் 



 மயிர்நரைப்ப = முடி நரைக்கும் வயதான காலம் வரை 



முந்தை = முன்பு செய்த 


பழவினையாய்த் = பழைய வினைகளாக வந்து 


தின்னும் = ஒருவனது இன்பத்தை தின்றுவிடும், கொன்று விடும் 


இவைமூன்றும் = இந்த மூன்றும் 


நொந்தார்  = நினைத்துத் துன்பப் படுபவர்கள் 


செயக்கிடந்தது இல் = செய்யக் கூடியது ஒன்றும் இல்லை 


இனி வரும் பிறவிகளில் நல்ல அன்பான மனைவி, ஒழுங்காக வேலை செய்யும் பணியாள், அன்பு பாராட்டும் சுற்றத்தார் இவை வேண்டுமானால், நல்ல வினைகளை இப்போதே செய்ய வேண்டும். 




Tuesday, February 13, 2024

திருக்குறள் - அருளற்றானின் அறம்

 திருக்குறள் - அருளற்றானின் அறம் 


பெரிய பணக்காரர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எல்லாம் பல தான தர்மங்களைச் செய்வதைப் பார்க்கிறோம். கோவிலில் சென்று பெரிய நன்கொடை தருவார்கள். அன்னதானம், இலவச அரிசி, சேலை, துணிமணி என்று தருவார்கள். வெள்ளம் போன்ற இடர்கள் வந்தால் இலட்சக் கணக்கில் நன்கொடை தருவார்கள். 


அந்த தர்ம காரியங்களுக்குப் பின்னால் இருப்பது உயிர்கள் மேல் உள்ள அருள் அல்ல. என்னிடம் பணம் இருக்கிறது என்பதைக் காட்ட, அரசியல் செல்வாக்குப் பெற, தனக்குப் புகழ் சேர்க்க என்று பல காரணங்கள் இருக்கும். 


அவர்கள் செய்வதெல்லாம் அறத்தில் சேராது. அருள் இல்லாதவன் செய்யும் அறம் என்பது அறத்தில் சேராது.  


அது எப்படி என்றால், சில சமயம் சில மடையர்கள் வாயில் இருந்து அபூர்வமாக சில நல்ல தத்துவங்கள் வருவதைப் போல. போகிற போக்கில் ஏதாவது சொல்லிவிட்டுப் போவார்கள். "அட...இது இவனுக்கு எப்படித் தெரியும்" என்று ஆச்சரியப்படுவோம். அது அவன் இயற்கை அறிவு அல்ல. ஏதோ வந்து விழுந்தது. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 


ஏறல் எழுத்துப் போல என்பார்கள். கடற்கரையில் நண்டு அங்கும் இங்கும் அலையும். சில சமயம் அதன் தடம் 'ட' மாதிரி இருக்கும், சில சமயம் 'ப' மாதிரி இருக்கும். உடனே, "ஆஹா, இந்த நண்டுக்கு தமிழ் தெரியும்" என்று யாராவது சொல்லுவார்களா? 


அது போல முட்டாள் சொல்லும் மெய்ப் பொருளும், அருள் இல்லாதவன் செய்யும் அறமும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்


பொருள் 


தெருளாதான் = தெளிவு இல்லாதவன் 


மெய்ப்பொருள் = உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்ட உண்மைப் பொருளை 


கண்டற்றால் = கண்டு சொன்னால் 


தேரின் = நினைத்துப் பார்த்தால் 


அருளாதான் = அருள் இல்லாதவன் 


செய்யும் அறம் = செய்யும் அறம் போன்றது 


ஓட்டு வேண்டும் என்று தலைக்கு இவ்வளவு பணம் என்று ஒரு அரசியல்வாதி கொடுக்கலாம். அது அறமா?  இல்லை. 


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் 


என்றார் வள்ளலார்.  அவர் ஒன்றும் செய்யவில்லை. வாடினார். அது அவர் அந்த பயிரின் மேல் கொண்ட அருள். 


அருள்தான் அடிப்படை. அதன் வெளிப்பாடு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். செயலை வைத்து தீர்மானிக்க முடியாது. மனதை வைத்து தீர்மானிக்க வேண்டும். 




Monday, February 12, 2024

விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்

 விவேக சிந்தாமணி - உறவும் நட்பும்


உறவும் நட்பும் நல்லதா?


நமக்கு நாலு பேரு வேண்டாமா? அவரச ஆத்திரத்துக்கு ஒரு மனுஷாள் துணை வேண்டாமா?   தனி மரம் தோப்பாகுமா?  என்றெல்லாம் நாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம். 


நிறைய நண்பர்கள், உறவினர்கள் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அப்படி இல்லாதவர்கள் தனிமையில் வாடுகிறார்கள் என்று நினைக்கிறோம்.


அது சரிதானா? 


நட்பினாலும், உறவினாலும் அழிவு வருவது இல்லையா? என்று விவேக சிந்தாமணி கேள்வி எழுப்புகிறது. 


பாடல் 



அருமையும் பெருமை தானு மறிந்துடன் படுவர் தம்மால்

இருமையு மொருமை யாகி யின்புறற் கேதுவுண்டாம்

பரிவிலாச் சகுனி போலப் பண்புகெட்டவர்கள் நட்பால்

ஒருமையி னரக மெய்து மேதுவே யுயரு மன்னோ


சீர் பிரித்த பின் 


அருமையும் பெருமைதானும்  அறிந்து உடன் படுவர் தம்மால்

இருமைம் ஒருமையாகி இன்புறற்கு  ஏதுவுண்டாம்

பரிவிலாச் சகுனி போலப் பண்பு கெட்டவர்கள் நட்பால்

ஒருமையில்  நரகம் எய்தும் ஏதுவே வேய் உயரு மன்னோ


பொருள் 


அருமையும் = அருமையான, சிறப்பான 

பெருமைதானும் = பெருமைகளும் 


அறிந்து = அறிந்து 


உடன் படுவர் தம்மால் = நட்பாக இருப்பவர்களால் 


இருமையும் = இந்தப் பிறவியும், மறு பிறவியும் 


ஒருமையாகி = ஒன்றாகி 


இன்புறற்கு  = இன்பம் அடைவதற்கு 


ஏதுவுண்டாம் = வழி உண்டு 


பரிவிலாச் = பரிவு, பாசம் இல்லாதா 


சகுனி போலப் = சகுனியைப் போல 


பண்பு கெட்டவர்கள் நட்பால் = பண்பு இல்லாதவர்கள் நட்பினால் 


ஒருமையில் = உறுதியாக 


 நரகம் எய்தும் ஏதுவே = நரகத்தை அடையும் வழி அதுவே 


 வேய் உயரு மன்னோ = மூங்கில்கள் உயர்ந்த காட்டினை உள்ள நாட்டினை ஆளும் அரசனே 


அறிவும், பெருமையும் உள்ள நண்பர்களால் வாழ்க்கை இனிமையாக இருக்கும். சகுனி போன்ற நண்பர்கள் வாய்த்தால் வாழ்க்கை நரகமாகி விடும். 


நாம் அந்த எல்லைகைளைத் தொட வேண்டாம். 


இன்றைய சகுனிகள் நம் நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பவர்கள். கண்ட கண்ட whatsapp ஐ forward செய்பவர்களும் சகுனிகள்தான். நம் நேரத்தை வீணடிப்பவர்கள். நாம் அந்த நேரத்தை வேறு நல்ல வழியில் செலவிட்டு இருந்தால், நமக்கு நன்மைகள் கிடைத்து இருக்கும். அதை தடுப்பவர்கள் அந்த சகுனிகள். 


வெட்டிப் பேச்சு, அரட்டை, தவறான செய்திகளை பரப்புவது, பேசுவது இதெல்லாம் கூட சகுனித்தனம் தான். 


நாம் அப்படி ஏதாவது செய்கிறோமா என்று சிந்திக்க வேண்டும். நம்மால் நம் நண்பர்கள் பயன் அடைகிறார்களா என்று சிந்திக்க வேண்டும். அவர்கள் வாழ்வை நாம் இனிமையாக்குகிரோமா என்று சிந்திக்க வேண்டும். 





Sunday, February 11, 2024

திருக்குறள் - பொருளும், அருளும்

 திருக்குறள் - பொருளும், அருளும் 


மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பினாலும், திறமையாலும் உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களாக ஆனவர்கள் உண்டு. பெரிய செல்வந்தர்கள் கூட தொழிலில் நட்டப்பட்டு, இருப்பதை எல்லாம் இழந்து, பின் மறுபடியும் பொருள் ஈட்டி உயர்ந்த நிலைக்கு வந்தவர்களும் உண்டு. 


பொருள் இல்லாவிட்டால் பரவாயில்லை. எப்படியாவது சம்பாதித்து விடலாம். நிறைய பேர் அப்படி சம்பாதித்துக் காட்டி இருக்கிறார்கள். 


ஆனால், அருள் இல்லாவிட்டால், ஒருக்காலும் மீண்டும் அருள் உடையவர்களாக ஆக முடியாது என்கிறார் வள்ளுவர். 


பாடல்  


பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற்று ஆதல் அரிது


பொருள் 


பொருளற்றார் = பொருள் இல்லாதவர்கள், செல்வம் இல்லாதவர்கள் 


பூப்பர்  ஒருகால் = ஒரு காலத்தில் செல்வத்தை சம்பாதித்து விட முடியும் 


அருளற்றார் = அருள் இல்லாதவர்கள் 


அற்றார் = அருள் இல்லாதவர்களாகவே இருப்பார்கள் 


மற்று ஆதல் அரிது = மீண்டும் அருள் உடையவர்களாக மாறுவது கடினம். 


ஏன் அருள் இல்லாதவர்கள் மீண்டும் அருள் உள்ளவர்களாக மாற முடியாது?


அருள் இல்லாதவர்கள், அருள் அற்ற வழிகளில் சென்று பல பாவங்களைச் செய்வார்கள். தீயவர்களோடு சேர்ந்து கொண்டு அருள் அற்ற செயல்களைச் செய்வார்கள். 


அதில் இருந்து மீண்டு வருவது கடினம். அவர்கள் மீள நினைத்தால் கூட, கூட்டாளிகள் விட மாட்டார்கள். எங்கே இவன் வெளியே போய் நம்மைக் காட்டி கொடுத்து விடுவானோ என்று அஞ்சி அவனை வெளியே விட மாட்டார்கள். 


மேலும், அருள் அற்ற தீய செயல்களை செய்யும் போது, ஒருவன் அறியாமலேயே அவனுக்கு அதில் ஒரு உருசி வந்து விடும். ஒரு முறை இலஞ்சம் வாங்கி பொருள் சேர்த்து விட்டால், "அட, இது எளிய வழியாக இருக்கிறதே...இப்படியே இன்னும் கொஞ்சம் சேர்த்தால் என்ன " என்று தோன்றும். நிறைய செய்வான். மாட்டிக் கொள்வான். சிறை செல்ல வேண்டி வரும். எங்கிருந்து மீள்வது? 


இப்போதைக்கு கொஞ்சம் அப்படி இப்படி இருந்து பணம் சேர்ப்போம். பின்னால், நன்கொடை, கோவில், அன்ன தானம் என்று செய்து புண்ணியம் தேடிக் கொள்ளலாம் என்று நினைப்பர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கிறார் வள்ளுவர். 


அந்தப் பாதையில் போகாதே. போனால் திரும்பி வர மாட்டாய் என்று. 


அருள் அற்ற எந்த செயலை செய்யவும் அஞ்ச வேண்டும். இது நம்மை எங்கே கொண்டு செல்லுமோ, திரும்பி வர முடியாதே என்று அஞ்ச வேண்டும். 


சிலருக்குத் தோன்றும், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நான் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தி விடுவேன் என்று. 


முயன்று பார்க்க வேண்டும். செல் போன் பார்ப்பது தீமை என்று தெரிந்தும் நிறுத்த முடிகிறதா?  காப்பி குடிப்பது தீமை என்று தெரிந்தும் நிறுத்த முடிகிறதா?  


எனவே, அருள் அற்ற வழியில் ஒரு அடி கூட எடுத்து வைக்கக் கூடாது. 


Saturday, February 10, 2024

அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை

 அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_10.html

எவ்வளவோ புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் எதைப் படிப்பது, எதை விடுவது என்று குழப்பமாக இருக்கும். ஒரு நல்ல புத்தகத்தை எப்படி தேர்ந்து எடுப்பது? 


ஒரு நல்ல அற நூல் எதைச் சொல்லும் என்று பட்டியல் இடுகிறது அறநெறிச்சாரம். 


பாடல்  


மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்

செம்மை ஒன்று இன்மை துறவுடைமை - நன்மை

திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன

அறம் பத்தும் ஆன்ற குணம்


பொருள் 


மெய்மை = உண்மையைப் பற்றி சொல்ல வேண்டும் 


பொறையுடைமை = பொறுமை பற்றி போதிக்க வேண்டும் 


மேன்மை =  பெருமை, புகழ் இவற்றைத் தருவதாக இருக்க வேண்டும் 


தவம் = தவத்திற்கு துணை செய்ய வேண்டும் 


அடக்கம் = புலன் அடக்கம் பற்றி சொல்ல வேண்டும் 


செம்மை = சிறப்பான வாழ்க்கை பற்றி போதிக்க வேண்டும் 


ஒன்று இன்மை = தன்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதின் பெருமை பேச வேண்டும் 


துறவுடைமை  = துறவின் நன்மைகளைச் சொல்ல வேண்டும் 


நன்மை = நல்லது செய்வதைப் பற்றிச் சொல்ல வேண்டும் 


திறம்பா விரதம் தரித்தலோடு = மாறுபாடு இல்லாத, தவறாத விரதம் மேற் கொள்வதைப் பற்றி விளக்க வேண்டும் 


இன்ன அறம் பத்தும் ஆன்ற குணம் = இந்த பத்து குணங்களும் நல்ல அறத்துக்கு எடுத்துக் காட்டு. 


ஒரு நல்ல புத்தகம் என்றால் இவற்றைப் பற்றி பேச வேண்டும், எடுத்துச் சொல்ல வேண்டும். 


இருக்கின்ற கொஞ்ச நாளை நல்ல புத்தகங்களை வாசிப்பதில் செலவு செய்வோம். 




Wednesday, February 7, 2024

திருக்குறள் - இடம் இல்லை

 திருக்குறள் - இடம் இல்லை 


அருள் இல்லாமல் வாழ்ந்தால் என்ன ஆகும்?  அரசாங்கம் பிடித்து சிறையில் போட்டு விடுமா? அப்படி வாழ வேண்டும் என்பது என்ன சட்டமா? சட்டம் இல்லை என்றால் எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும்?


அருள் இல்லாமல் வாழ்ந்தால் யாரும் தண்டிக்க மாட்டார்கள். தாரளமாக அப்படி வாழலாம். சிக்கல் என்ன என்றால், வீட்டுலகத்து இன்பம் கிடைக்காது. அதாவது சுவர்க்கம் என்று சொல்கிறோமே, அந்த சொர்கத்தின் அனுபவம் கிடைக்காது. 


சொர்க்கம் என்பது உயர்ந்தபட்ச இன்ப அனுபவம். அது கிடைக்காமல் போய் விடும். 


பாடல் 



அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு


பொருள் 


அருள்இல்லார்க்கு = அருள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு 


அவ்வுலகம் இல்லை= சுவர்க்கம் கிடையாது 


பொருள்இலார்க்கு = பொருள் இல்லாதவர்களுக்கு 


இவ்வுலகம் = இந்த பூ உலகம் 


இல்லாகி யாங்கு = எப்படி இல்லையோ, அது போல. 


பொருள் இல்லாதவர்கள் இந்த உலகில் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏழைகள் இருக்கிறார்களே. அது எப்படி, பொருள் இல்லாதவற்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்லலாம்? என்று கேட்டால், அதற்கு பரிமேலழகர் விளக்கம் தருகிறார். 


அவ்வுலகு, இவ்வுலகு என்பதெல்லாம் ஆகு பெயர். 


உலகு என்பது உலகில் உள்ள இன்பங்களுக்கு ஆகி வந்தது. 


அதாவது, பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகில் உள்ள இன்பங்கள் கிடைக்காதது போல, அருள் இல்லாதவர்களுக்கு அந்த உலகின் இன்பம் கிடைக்காது. 


சொர்கத்துக்கு ஒரு வேளை போனால் கூட, அங்குள்ள இன்பங்களை அனுபவிக்க முடியாது என்கிறார். 


அருள் இருந்து, பொருள் இல்லாவிட்டால், இந்த உலக இன்பம் கிடைக்காமல் போகலாம். 


பொருள் இருந்து, அருள் இல்லாவிட்டால், அந்த உலக இன்பங்கள் கிடைக்காது. 


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        `


கம்ப இராமாயணம் - தேவரையும் தெறும் ஆற்றல்

 கம்ப இராமாயணம் -  தேவரையும் தெறும் ஆற்றல்


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகையின் புலம்பல் தொடர்கிறது. 


"தேவர்களையும் ஆட்டிப் படைக்கும் இராவணனுக்கும், அவன் தம்பிகளுக்கும் இந்த ஊண் உடம்பைக் கொண்ட மானிடர்களைக் கண்டு வலி குன்றிப் போனதென்ன" என்று புலம்புக்கிறாள். 


பாடல் 


தேனுடைய நறுந் தெரியல்

     தேவரையும் தெறும் ஆற்றல்

தான் உடைய இராவணற்கும், தம்பி

     யர்க்கும், தவிர்ந்ததோ?

ஊனுடைய உடம்பினர் ஆய், எம்

     குலத்தோர்க்கு உணவு ஆய

மானுடவர் மருங்கே புக்கு

     ஒடுங்கினதோ வலி? அம்மா!`


பொருள் 


தேனுடைய = தேன் வடியும் 


நறுந் = நல்ல, அழகிய 


 தெரியல் = பூ மாலை (அணிந்த)  


தேவரையும் = தேவர்களையும் 


 தெறும் ஆற்றல் =  வெற்றி பெறும் வலிமை  


தான் உடைய  = உடைய 


இராவணற்கும் = இராவணனுக்கும் 


தம்பியர்க்கும் = அவனுடைய தம்பியற்கும் 


தவிர்ந்ததோ? = அந்த வலிமை நீங்கிப் போய் விட்டதா? 


ஊனுடைய உடம்பினர் ஆய் = மாமிசத்தை உடைய உடலைக் கொண்ட 


எம் குலத்தோர்க்கு உணவு ஆய = எம் குல அரக்கர்களுக்கு உணவாகும் 


மானுடவர் = மனிதர்கள் 

 

மருங்கே புக்கு = உடலிடம் சென்று 


 ஒடுங்கினதோ வலி? அம்மா! = ஒடுங்கி விட்டதா அந்த வலிமை எல்லாம் 




Monday, February 5, 2024

திருக்குறள் - மறந்து போச்சு.

 திருக்குறள் - மறந்து போச்சு.


உயிர்கள் மேல் அன்பு செய்தால், அவை நம்மிடம் அன்பு செய்யும்.  புரிந்து கொள்ள இது மிக எளிதான ஒன்று. இரண்டு அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு இடையே பகை இருக்காது, ஒருவரை ஒருவர் துன்பம் செய்யும் எண்ணம் இருக்காது, எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். 


இது தெரிந்தும் கூட ஏன் மக்கள் உயிர்கள் மேல் அன்பு செலுத்தாமல் வெறுப்பு கொள்கிறார்கள்?


அவன் வேறு மதம், அவன் வேறு இனம், பணக்காரன், ஏழை, படித்தவன், முட்டாள், அழகானவன், அழகு இல்லாதவன் என்று வேறுபாடு கொண்டு, வெறுப்பை வளர்த்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பகைமை பாராட்டுவது ஏன்?  


விலங்குகளை வேட்டையாடுகிறார்கள். ஏழைகளை, பாமர மக்களை துன்புறுத்துகிறார்கள், மெலியாரை வலியார் வதைக்கிறார்கள். ஏன் இவ்வாறு நிகழ்கிறது?


வள்ளுவர் அதற்கு விடை தருகிறார். அந்த விடையில் நமக்கும் ஒரு வழி இருக்கிறது. 


பாடல் 

 


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்துஒழுகு வார்


பொருள் 


பொருள்நீங்கிப் = பொருளை விட்டு நீங்கி 


பொச்சாந்தார் = மறந்து விட்டார் 


என்பர் = என்று கூறுவார்கள் 


அருள்நீங்கி = அருளை விட்டு நீங்கி 


அல்லவை = அது அல்லாத காரியங்களை 


செய்துஒழுகு வார் = செய்து வாழ்பவர்கள். 


என்ன இது பொருள், அருள் னு ஒண்ணும் புரியலையே.


பொருள் நீங்கி என்றால் பொருளை விட்டு நீங்கி என்று அர்த்தம். சரி, அது என்ன பொருள்?  வீடு, வாசல், நிலம், புலம் என்ற பொருளா என்றால் இல்லை. மிக உயர்ந்த பொருள், நிரந்தரமான பொருள், உறுதியான பொருள் எது என்றால் அறம் தான் சிறந்த பொருள். அழியாத பொருள். என்றும் நிலைத்து நிற்கும் பொருள். 


அந்த அறத்தில் இருந்து நீங்கி.


"பொச்சாந்தார் என்பர்". மறந்து விட்டார்கள் என்று சொல்லுவார்கள் பெரியவர்கள். 


மக்கள் ஏன் அற வழியில் நிற்க மாட்டேன் என்கிறார்கள் என்றால், அறம் அல்லாத வழியில் சென்று பட்ட துன்பங்களை மக்கள் மறந்து விடுகிறார்கள். எனவே அறம் அல்லாத வழியில் செல்கிறார்கள் என்கிறார். 


தீயில் விரலை வைக்கிறோம். சுடுகிறது. மீண்டும் வைப்போமா? மாட்டோம் என்றால் ஒரு முறை சுட்டது நினைவில் நிற்கும். 


ஆனால், அறம் தவறி நடந்ததன் மூலம் வந்த துன்பம் மறந்து போய் விடுகிறது. மீண்டும் அதே வழியில் மக்கள் செல்கிறார்கள். 


ஒவ்வொரு முறை துன்பம் வரும் போதும், அந்தத் துன்பம் ஏன் வருகிறது என்று யோசிக்க வேண்டும்.  எங்கோ தவறு செய்திருக்கிறோம் என்று தெரிய வேண்டும். மீண்டும் தவறு செய்யாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.  


இதெல்லாம் பரிமேலழகர் இல்லாவிட்டால் புரிவது கடினம். 


தவறு செய்ய நினைக்கும் போதே, முன் பட்ட துன்பங்கள் நினைவு வந்தால், தவறு செய்வோமா?  




Sunday, February 4, 2024

கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ

கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_4.html

இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, தன் அண்ணன் இராவணனை நினைத்துப் புலம்புகிறாள். 


புலம்பலில் கூட இவ்வளவு கவி நயமா என்று வியக்க வைக்கும் கவிதைகள். 


இன்று வரும் திரைப் படங்களில் கதா நாயகனை முதன் முதலில் காட்டும் போது, அவர் காலைக் காட்டுவார்கள், அவர் நடந்து வரும் போது அவர் போட்டிருக்கும் காலணியில் இருந்து தீப் பொறி பறக்கும். 


நாம் ஆகா என்று வியப்போம். 


இதெல்லாம் கம்பன் அன்றே காட்டிவிட்டான். 


இராவணன் நடந்து வந்தால், அவன் கால் உரசி தரையில் இருந்து தீப் பொறி பறக்குமாம். 


இராவணன் இன்னும் காப்பியத்துகுள் வரவில்லை. அதற்கு முன்பே கம்பன் கட்டியம் கூறுகிறான். 


பொடி என்ற ஒரு வாரத்தையை எடுத்துக் கொள்கிறான். 


"உருவம் பொடியான (சாம்பலான) மன்மதனை ஒத்து இருக்கும் இந்த மானிடர்களை நீ கோபித்து சீற்றம் கொள்ள மாட்டாயா?  நீ யார்? எவ்வளவு பெரிய ஆள்! இந்த மானிடர்கள் உன் செருப்பில் இருந்து பறக்கும் ஒரு மண் தூசிக்கு சமம் ஆவார்களா?  நீ நடந்து வந்தால் உன் காலடியில் நெருப்பு சிதறுமே. மதம் கொண்ட அட்ட திக்கு யானைகளோடு சண்டை போட்டு, அவற்றின் தந்தங்களை முறித்தவன் அல்லவா நீ. அது மட்டுமா? சிவன் உறையும் அந்த கைலாய மலையையே தூக்க முயன்றவன் அல்லவா நீ. அப்பேற்பட்ட நீ, இந்த மானிடர்களை ஒரு கை பார்க்க மாட்டாயா?" 


என்று சூர்பனகை புலம்புகிறாள். 


பாடல்  



'உருப் பொடியா மன்மதனை

     ஒத்துளரே ஆயினும், உன்

செருப்பு அடியின் பொடி ஒவ்வா

     மானிடரைச் சீறுதியோ?

நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த

     மதத் திசை யானை

மருப்பு ஒடிய, பொருப்பு இடிய,

     தோள் நிமிர்த்த வலியோனே!


பொருள் 


'உருப் = உருவம் 

பொடியா = பொடியான (சாம்பலான) 

மன்மதனை = மன்மதனை 

ஒத்துளரே ஆயினும் = போல இருந்தாலும் 

உன் = உனது (இராவணனது) 

செருப்பு அடியின் = செருப்பின் கீழ் உள்ள 


பொடி = தூசிக்கு 

ஒவ்வா = இணையாக மாட்டாத


 மானிடரைச் = மனிதர்களைச் (இராம இலக்குவனர்களை) 


 சீறுதியோ? = அவர்கள் மேல் சீற்றம் கொள்ள மாட்டாயா ?


நெருப்பு அடியில் பொடி சிதற = உன் காலடியில் நெருப்பு பொறி பறக்க 


நிறைந்த மதத் = பெரிய மதம் பிடித்த


திசை யானை = அட்ட திக்கு யானைகளின் 


மருப்பு ஒடிய = தந்தம் ஓடிய 


பொருப்பு இடிய = மலை இடிபட 


தோள் நிமிர்த்த = தோள்களை நிமிர்த்து நின்ற 


வலியோனே! = வலிமையாணவனே 



உருப் பொடி

செருப்பு அடியின் பொடி

நெருப்பு அடியில் பொடி

மருப்பு ஒடிய, 

பொருப்பு இடிய,


கம்பனிடம் சொற்கள் கை கட்டி நின்று சேவகம் செய்கின்றன. 


பெரியவர்களின் தரம் தெரியாமல் இருப்பது அரக்கர்களின் குணம். 


முருகனை பாலன் என்று எண்ணி அழிந்தான் சூரன். 


கண்ணனை இடையன் என்று எண்ணி அழிந்தான் கம்சன். 


இராமனை மானிடன் என்று எண்ணி அழிந்தான் இராவணன். 


தரம் தெரியாததால் வந்த அழிவு. 



Friday, February 2, 2024

திருக்குறள் - இதுவே சாட்சி

 திருக்குறள் -  இதுவே சாட்சி 


https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_2.html


மனதில் அருள் இருந்தால் தன் உயிர் அஞ்சும் வினை வராது என்றார் வள்ளுவர். அவர் சொன்னால் போதுமா? நமக்கு ஒரு நிரூபணம் வேண்டாமா?  சொன்னால் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது என் மரபில் கிடையாது. எதையும், சான்றுகளோடு, வாத பிரதிவாதம் செய்துதான் ஏற்றுக் கொள்வது நம் மரபு.


வள்ளுவர் சொல்கிறார் 


"மனதில் அருள் உள்ளவர்களுக்கு ஒரு துன்பமும் வராது என்பதற்கு இந்த உலகமே சான்று"  


என்று. 


அது எப்படி இந்த உலகம் சான்றாகும்? குழப்பமாக இருக்கிறதே.


பாடல் 


அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு

மல்லல்மா ஞாலம் கரி.


பொருள் 


அல்லல் = துன்பம் 


அருளாள்வார்க்கு = மனதில் அருள் உள்ளவர்களுக்கு 


இல்லை  = இல்லை 


வளி வழங்கு = காற்றை வழங்குகின்ற 


மல்லல் = வளம் நிறைந்த 


மா = பெரிய 


ஞாலம் = இந்த உலகே 


கரி = சான்று .


உலகம் சான்று என்றால், உலகில் உள்ளவர்கள் சான்று. ஊரே பாராட்டுகிறது என்றால் ஊரில் உள்ளவர்கள் பாராட்டுகிறார்கள் என்று அர்த்தம். 


இந்த உலகில் அருள் உள்ளவர்களைப் பார்த்தால் தெரியும், அவர்கள் மனதில் ஒரு சாந்தம், அமைதி, பொறுமை, எல்லாம் இருக்கும். எல்லோரும் அவர்களிடம் சென்று ஆசி பெறுவார்கள், அவர்கள் சொல்வதைக் கேட்பார்கள், அவர்களை வணங்குவார்கள். அவர்களுக்கு ஒரு துன்பமும் இருக்காது. 


அருள் உள்ள மகான்கள், துறவிகளை துன்பம் பற்றாது. 


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் ஒருவனை யார் துன்புறுத்தப் போகிறார்கள்? ஒருவரும் செய்ய மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு துன்பம் இல்லை. 





Thursday, February 1, 2024

அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து

 அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து 


மிக வயதானவர்களைப் பார்த்தால் தெரியும். படுக்கையில் இருந்து எழுவது கூட அவர்களுக்கு பெரிய வேலையாகத் தெரியும். எழுந்து நாலடி எடுத்து வைப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். மற்றவர்கள் சொல்வது எதுவும் காதில் விழாது. படிப்பு என்பது சுத்தமாக இருக்காது.யார் என்ன சொன்னாலும் மிகச் சீக்கிரம் மறந்து விடும்....பார்க்கவே பரிதாபமாக இருக்கும். 


அந்த நேரத்தில் தேவாரம் படி, திருவாசகம் படி என்றால் நாக்கு குழறும், மனம் நிற்காது, உடல் எல்லாம் சோர்ந்து போய் இருக்கும். 


எப்படா போய்ச் சேருவோம் என்று இருக்கும். 



நமக்கும் அப்படி ஒரு நாள் கட்டாயம் வரும். அதில் இருந்து தப்ப முடியாது. 


நல்ல காரியங்களை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தால், இதுதான் நிகழும். செய்யலாம் என்று நினைக்கும் போது உடல் ஒத்துழைக்காது. 


நாடி, நரம்பு எல்லாம் தளர்ந்த பின், அதை எடுத்து ஒட்டவைத்து ஓடவைத்து விடலாம் என்றால் நடக்காது. 


எனவே, உடல் நல்ல நிலையில் இருக்கும் போதே நல்ல காரியங்களை செய்து விட வேண்டும். 


பாடல் 



அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்

உறங்குதல் காரணம் என்னை - மறந்து ஒருவன்

ஆட்டு விடக்கு ஊர்தி அச்சு இறும் காலத்துக்

கூட்டும் திறம் இன்மையால்


பொருள் 

அறம் புரிந்து  = அறச் செயல்களைச் செய்து 


ஆற்றுவ = செய்ய வேண்டிய நல்ல காரியங்களை ஒழுங்கான முறையில் 


செய்யாது = செய்யாமல் 


நாளும் = ஒவ்வொரு நாளும் 


உறங்குதல் = தள்ளிப் போட்டுக் கொண்டே போவதன் 


காரணம் என்னை  = காரணம் என்ன?


மறந்து  = செய்ய வேண்டிய செயல்களை மறந்து 


ஒருவன் = பிரமன்  


நாட்டு =  படைத்த 


விடக்கு = இறைச்சியால் செய்யப்பட்ட 


ஊர்தி = வண்டி 


அச்சு இறும் காலத்துக் = அச்சு முறிந்து போன காலத்தில் 


கூட்டும் = அதை மீண்டும் சரி செய்யும் 


திறம் இன்மையால் = திறமை இல்லாது இருத்தல் 


வயதாகி உடல் தளர்ந்து விட்டால், பின் என்ன செய்தாலும் அது சரியாகாது. 


நல்ல விடயங்களை இளமையில் படித்தால், அதன் படி நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் நன்மை வரும். 


பின்னால் படித்து, தெரிந்து, அதன் படி நடக்கலாம் என்றால் ஒன்றும் நடவாது. 


முதுமை கண்டு அச்சம் வேண்டும்.