Sunday, February 18, 2024

திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம்

 திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_18.html

அருள் இருந்தால் எவ்வளவோ நன்மை என்று தெரிகிறது. இருந்தும் அருள் வர மாட்டேன் என்கிறதே. அது ஏன் இயற்கையாக வர மாட்டேன் என்கிறது? அப்படி வராத அருளை எப்படி வரவைப்பது ?


அருள் வராத இடங்கள் எவை ?


வீட்டு வேலைக்கார்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்கள் மேல், நம்மை விட செல்வத்தின், அறிவில், புகழில், பெருமையில் குறைந்தவர்களிடம் நமக்கு ஒரு ஆணவம், அவர்கள்மேல் ஒரு இளக்காரம், திட்டினால் பதிலுக்கு திட்டமாட்டார்கள் என்று ஒரு தைரியம். சிலர் அது போன்ற எளியவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பது கிடையாது. அவர்கள் ஏதாவது கேட்டால் முகம் பார்த்து கூட பதில் சொல்ல மாட்டார்கள். 


இந்த கெட்ட பழக்கத்தை எப்படி மாற்றுவது?


வள்ளுவர் சொல்கிறார்,


"உன்னை விட மெலிந்த ஒருவன் மேல் நீ உன் வலிமையை காட்டுவதற்கு முன், உன்னை விட வலிமையான ஒருவன் முன் நீ நிற்பதாய் ஒருமுறை எண்ணிப் பார். உனக்கு எவ்வளவு பயம் இருக்கும், நடுக்கம் இருக்கும். அது உனக்கு பிடித்து இருக்கிறதா?  அது ஒரு வலிதானே ? அந்த வலிதானே உன் முன்னால் இருப்பவனுக்கும் இருக்கும் என்று நினைத்துப் பார். தானாகவே அருள் பிறக்கும் "


என்கிறார். 


பாடல்  


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து


பொருள் 


வலியார்முன் = தன்னை விட வலியவர்கள் முன் 


தன்னை நினைக்க = ஒருவன் தன்னை நினைத்துக் கொள்க 


தான் தன்னின் = ஒருவன் தன்னை விட 


மெலியார்மேல் = மெலிந்தவர்கள் மேல் 


செல்லும் இடத்து = செல்லும் பொழுது 


இந்தக் குறளுக்கு பரிமேலழகர் செய்திருக்கும் நுணுக்கம் மிக அழகானது.


மெலியார் என்று உயர்திணையில் கூறினாலும், அது விலங்குகளையும், ஏனைய உயிர்களையும் சேர்த்தது என்கிறார். 


ஆட்டையும், மாட்டையும், வெட்டும் போது, என்னை விட  பலமான ஒருவன் என்னை இப்படி வெட்டினால் எப்படி இருக்கும் என்று நினைக்க வேண்டும் என்கிறார். 


மேலும்,


"செல்லும் இடத்து" என்றால் என்ன?  


ஒரு போக்குவரத்து துறை அதிகாரி உங்கள் வண்டியை நிறுத்தி, வண்டிக்கு உண்டான certificate களை கேட்கிறார். ஒரு சின்ன பயம் இருக்கும். எல்லாம் சரியா இருக்குமோ, இருக்காதோ என்று சந்தேகம் வரும். எவ்வளவு அபராதம் வருமோ என்ற பயம் வரும். ஆனால், அதே அதிகாரியின் முன் நாம் வண்டியில் இல்லாமல் நடந்து செல்லும் போது அந்தப் பயம் வருமா?  வராது. 


பயம் எப்போது வரும் என்றால், நம்மை விட வலியவன் நமக்கு துன்பம் தருவதற்கு வருகிறான் என்றால், பயம் வரும். அதைத்தான் 'செல்லும் இடத்து" என்றார். நாம் அவனிடம் போகிறோம். அவனால் நமக்கு துன்பம் வரலாம் என்றால் பயப்படுவோம் அல்லவா?  அது போல உன்னிடம் வருபவனை நினைத்துப் பார். என்கிறார். 


தானே அருள் வரும் என்கிறார். 


அப்படியாக அருளுடைமை என்ற அதிகாரம் முற்றுப் பெற்றது. 


அடுத்தது புலால் மறுத்தல் என்ற அதிகாரம். 







1 comment:

  1. அருமையான உதாரணங்கள்...easy to understand. Thanks

    ReplyDelete