Saturday, February 24, 2024

திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு

 திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு 


இந்த உடல் அழியும் தன்மை உடையது. என்ன செய்தாலும், ஒரு நாள் அழிந்தே தீரும். இப்படி அழியும் உடலை பாதுகாக்க வேண்டி இன்னொரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்டால், உயிர்க்  கொலை  செய்த பாவம் வரும். அந்தப் பாவம் பிறவி தோறும் தொடரும். இப்படி ஒரு பிறவியில் அழியும் உடலை வளர்க வேண்டி செய்த பாவம் அழியாமல் நின்று பிறவி தோறும் தொடரும் என்றால், அதைச் செய்யலாமா? 


அப்படி தன் சுய தேவைக்காக இன்னொரு உயிரைக் கொன்று தின்பவன் மனதில் அருள் எங்கே இருக்கும் ? அருள் இல்லாதவன் வீடு பேறு அடைவது எங்கனம்?


பாடல் 


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்


பொருள் 


தன்ஊன் = தன் உடலில் உள்ள மாமிசத்தைப் 


பெருக்கற்குத் = வளர்ப்பதற்கு 


தான் = ஒருவன் 


பிறிது = பிற உயிரின் 


ஊன்உண்பான் = மாமிசத்தை தின்பான் என்றால் 


எங்ஙனம் ஆளும் அருள் = அவன் எப்படி அருள் வழியில் நிற்க முடியும்? 


இன்றைய நவீன சிந்தனையாளர்கள் "ஆஹா...உயிரைக் கொல்லக் கூடாதா? சரி, அப்படி என்றால் தாவரங்களும் உயிர்கள்தானே, அதை மட்டும் கொல்லலாமா? " என்று வாதிக்கக் கூடும். 


தாவரங்களால் நகர முடியாது. ஒரு மரமோ செடியோ இன விருத்தி செய்ய வேண்டும் என்றால் அதன் விதைகள் நீண்ட தூரம் செல்ல வேண்டும். எல்லா விதையும் ஒரே இடத்தில் விழுந்தால் ஓரிரண்டு முளைக்கலாம். எல்லாம் முளைக்காது.  பின் எப்படி விதைகளைப் பரப்புவது?


உண்மைதான். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளல் பெருமான். அது அருளின் உச்சம். 


வள்ளலார் ஒரு நாள் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அங்கே மீன் பிடிக்கும் வலைகளை காய வைத்து இருந்தார்கள். அதைப் பார்த்து, பதறிப் போய், அதை கொலைக் கருவி என்றார். எத்தனை மீன்களை அது கொல்கிறது. மீன் வலையைப் பார்த்தால் கொலைக் கருவி என்று நமக்குத் தோன்றுமா?


நம் பழைய இலக்கியங்களில் பார்த்தால் தெரியும், முனிவர்கள், கானகத்தில் மரங்கள் உதிர்த்த, காய்ந்த சருகுகளை உண்டு உயிர் வாழ்ந்தார்கள். இலையைக் கூடப் பறிக்கக் கூடாது. அதுவும் ஒரு உயிர் தான் என்பது அவர்கள் எண்ணம். 


பாரதத்தில், அர்ச்சுனன் தவம் மேற்கொள்கிறான். வெறும் சருகை மட்டும் உண்டு தவம் செய்தான் என்பார் வில்லிபுத்துரார். 


பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்

                           பாதபங்களின் சினை உதிர்ந்த

சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது

                                  அருந்துதல் தவிர்ந்தான்

உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி

                                  ஆக்கி, நம்மிடத்தே

செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்

                                  சிறந்தவர்?' என்றான்.



தாவரங்கள் தங்கள் விதைகளை காய்களிலும், கனிகளிலும் புதைத்து வைக்கின்றன. அதை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும், அந்த விதைகளை அவர்கள் வசிக்கும் இடங்களில் விழச் செய்கிறார்கள். 


உதாரணமாக, சேலத்தில் ஒரு மாமரம் இருக்கிறது. மாம்பழம் இனிமையாக இருப்பதால், அந்த மரத்தின் பழத்தை பறித்து சென்னை , டெல்லி போன்ற இடங்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கே உள்ள மக்கள் அந்தப் பழத்தை உண்டு, அதன் விதையை குப்பையில் போட்டு விடுகிறார்கள். அது அங்கே முளைக்கும். மாம்பழத்தை மனிதர்கள் உண்பது இல்லை என்று வைத்து விட்டால், சேலத்தில் உள்ள விதை மும்பைக்கும், டெல்லிக்கும் எப்படி போகும். தங்கள் விதைகளை கொண்டு செல்ல விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தாவரங்கள் தரும் கூலி அந்த காய்களும், கனிகளும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


தொலைக்காட்சியில் இந்த மாமிச உணவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பற்றி நிறைய செய்திப் படங்கள் இருக்கின்றன. அதில், விலங்குகளை எப்படி கொன்று, அதன் மாமிசத்தை எடுத்து டப்பாவில் அடைகிறார்கள் என்று காட்டுவார்கள். 


சிறு சிறு கோழிக் குஞ்சுகளில் இருந்து, பெரிய திமிங்கலம் வரை, கொஞ்சம் கூடஒரு முக சுளிப்பு இல்லமால், மனதில் உறுத்தல் இல்லாமல், கொன்று தள்ளுகிறார்கள். இரத்தம் பீரிட்டு அடிக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப் படுவது இல்லை. அப்படி ஒரு சிறு உறுத்தல் கூட இல்லாமல் உயிர்களை கொல்பவர்கள் மனதில் அருள் எப்படி இருக்கும் என்று வள்ளுவர் கேட்கிறார். 




No comments:

Post a Comment