Thursday, October 31, 2019

கந்த புராணம் - அவரை எலாம் வெறுக்கல் ஆமோ ?

கந்த புராணம் - அவரை எலாம் வெறுக்கல் ஆமோ ?


இறைவன் பெரியவன். எல்லாம் தெரிந்தவன். அவனால் முடியாதது எதுவும் இல்லை. இந்த உலகம், இந்த உயிர்கள் அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவன் அவன் என்று பலர் ஏற்றுக் கொள்கிறார்கள்.

பின் அவர்களே சொல்கிறார்கள், அந்தக் கடவுளுக்கு கண் இல்லை, எனக்கு ஏன் இந்த சோதனை என்று.

கடவுளுக்கு வேற வேலை இல்லையா ? நாம் எப்படி போனால் அவருக்கு என்ன? அவ்வளவு பெரிய ஆளுக்கு நாம் எம் மாத்திரம்.

நாம் பக்தி செய்தால் என்ன, பக்தி செய்யாவிட்டால் என்ன? நாம் வாழ்த்தினால் என்ன, வைத்தால் என்ன?

அது புரியாமல், இறைவா எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு, அதில் இருந்து காப்பாற்று, என்றெல்லாம் வேண்டுகிறார்கள். வேண்டியது கிடைக்கவில்லை என்றால் இறைவன் மேல் நொந்து கொள்கிறார்கள்.

நாம் செய்த வினை நமக்கு மீண்டு வருகிறது என்று நினைப்பது இல்லை.

குளிர்ந்த நீரை நிறையக் குடித்தால் தொண்டை காட்டும்.

ஐஸ் கட்டி போட்டு குளிர்ந்த நீரை குடித்து விட்டு, ஆண்டவா எனக்கு தொண்டை கட்டு வரக்கூடாது என்று வேண்டினால் என்ன பலன்?

சூரபத்மன், தேவர்களை எல்லாம் சிறைபிடித்து படாத பாடு படுத்துகிறான். முருகன் அவதாரம் செய்தால் தான் சூரன் அழிவான்.

சிவனோ நிட்டையில் இருக்கிறார். அம்பாள் சிவனை நினைத்து தவம் இருக்கிறாள். ஆளுக்கு ஒரு புறம் இருந்தால், குமார சம்பவம் நிகழ்வது எப்படி?

எல்லோருமாக சேர்ந்து மன்மதனை அனுப்பி, சிவன் மேல் மலர் அம்புகளை விட்டு, சிவனுக்கு காமம் ஏற்படச் செய்ய முயன்றார்கள்.

மன்மதனும் அம்பு போட்டான்.  சிவனின் தவம் கலைந்தது. வந்த கோபத்தில், நெற்றிக் கண்ணால்  மன்மதனை எரித்து விட்டார்.

மன்மதன் சாம்பலாகி விட்டான்.

அவன் மனைவி இரதி புலம்புகிறாள். அருமையான தமிழ் பாடல்கள்.

என்னவெல்லாமோ சொல்லி அழுகிறாள். பின் தெளிகிறாள்.

"உன் தலையில் வெந்து போ என்று விதி எழுதி இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? இதுக்கு யாரை நொந்து கொள்வது? " என்று தெளிகிறாள்.


பாடல்


போ என்று வரவிட்ட தேவர் எலாம் பொடி ஆகிப் போன உன்னை
வா என்று கடிது எழுப்ப மாட்டாரோ நின் தாதை வலியன் என்பார்
ஓ என்று நான் இங்கே அரற்றிடவும் வந்திலனால்  உறங்கினானோ
வே என்று நின் சிரத்தில் விதித்து இருந்தால் அவரை  லாம் வெறுக்கல் ஆமோ.


பொருள்


போ என்று = போ என்று

வரவிட்ட தேவர் எலாம் = உன்னை செலுத்திய தேவர் எல்லாம்

பொடி ஆகிப் போன உன்னை = எரிந்து பொடிப் பொடியான உன்னை

வா என்று = உயிரோடு திரும்பி வா என்று

 கடிது  = விரைந்து

எழுப்ப மாட்டாரோ  = எழுப்ப மாட்டாரோ?

நின் தாதை = உன் தந்தை (திருமால்)

வலியன் என்பார் = வலிமையானவர் என்று சொல்லுவார்கள்

ஓ என்று = ஓ என்று

நான் இங்கே அரற்றிடவும் = நான் இங்கே அழுது புலம்ப

வந்திலனால்  = வராமல்

உறங்கினானோ = எங்கே பள்ளி கொண்டு இருக்கிறானோ

வே என்று = வெந்து போ என்று

நின் சிரத்தில் = உன் தலையில்

விதித்து இருந்தால் =  விதித்து இருந்தால்

அவரை  எலாம் = அவர்களை எல்லாம்

வெறுக்கல் ஆமோ. = வெறுக்கலாமா ?

நாம் செய்த வினை நம்மை வந்து சேர்கிறது  என்றது நினைத்துக் கொள்ள வேண்டும்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா


கந்த புராணம் கிட்டத்தட்ட 1800 பாடல்களைக் கொண்டது

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்தது.

மூல நூலை தேடி பிடித்துப் படித்துப் பாருங்கள்.

தேன் சொட்டும் பாடல்கள்.  படித்துப் பாருங்கள், நல்ல வேளை தமிழனாக பிறந்தேன்  என்று நினைத்துக் கொள்வீர்கள். அவ்வளவு இனிய பாடல்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_31.html



Wednesday, October 30, 2019

கம்ப இராமாயணம் - அவாவும் தோளினாய்

கம்ப இராமாயணம் - அவாவும் தோளினாய் 


இலக்கியம் என்றால் எப்பப் பார்த்தாலும் அறம் , நீதி, முறை, உபதேசம் என்று சொல்லிக் கொண்டு இருப்பதுதானா என்று ஒரு சலிப்பு வரலாம். எனவே இடை இடையே சொற்சுவை, பொருட்சுவை உள்ள பாடலைகளையும் அமைத்து இலக்கியம் அமைத்து இருக்கிறார்கள். நோக்கம் வார்த்தை விளையாட்டு, உவமை நயம் போன்றவை இல்லை. இருந்தாலும், நேரே தத்துவங்களை சொல்லிக் கொண்டு போனால் கொஞ்சம் அலுப்புத் தட்டத்தான் செய்யும்.

கம்பனில் உவமைகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம். அவ்வளவு நயமான உவமைகள். நினைத்துப் பார்த்தால் இதழோரம் ஒரு புன்னகை ஓடும்.

தாடகையைப் பற்றி விஸ்வாமித்ரனிடம் இராமன் கேட்கிறான்.

அவளைப் பற்றிச் சொல்ல வந்த முனிவன், இராமனுக்கு ஒரு அடை மொழி தருகிறான்.

அடடா...என்ன ஒரு கற்பனை என்று நாம் இரசிக்கும்படியான ஒரு கற்பனை.

"ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!"

இராமனின் தோள்களைப் பார்த்தால், ஆண்களுக்குக் கூட ஆசை வருமாம். அடடா நாம் ஒரு பெண்ணாய் பிறக்கவில்லையே...இந்தத் தோள்களை அணைத்து இன்பம் பெற என்று ஆண்கள் ஆசைப் படும் அளவுக்கு அழகான தோள்களாம்.

பாடல்


‘சூடக அரவு உறழ் சூலக் கையினள்;
காடு உறை வாழ்க்கையள்; கண்ணின் காண்பரேல்.
ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்!-
‘’தாடகை’’ என்பது அச் சழக்கி நாமமே


பொருள்

‘சூடக = கையில் அணியும் வளையல்

அரவு = பாம்பு. மலைப் பாம்பை கையில் வளையல் போல் அணிந்து இருப்பாள்.

உறழ்  = சுழலும்

சூலக் கையினள்; = சூலத்தைக் கையில் கொண்டவள்

காடு உறை வாழ்க்கையள்; = எப்போதும் காட்டிலேயே வாழ்பவள்

கண்ணின் காண்பரேல். = கண்ணால் கண்டால்

ஆடவர் = ஆண்கள்

பெண்மையை  = பெண்மையை

அவாவும் தோளினாய்!- = விரும்பும் தோள்களை கொண்டவனே

‘’தாடகை’’ என்பது = தாடகை என்பது

அச் சழக்கி நாமமே; = அந்தக் கொடியவளின் பெயர் ஆகும்

இராமனின் தோள்கள் மலை போல இருந்தன, விம்மி இருந்தன, வீரமாக இருந்தன, என்றெல்லாம் சொல்லலாம். அப்படிச் சொல்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

இராமனுக்கு அப்படி இருக்கிறது. வேறு யாராவது ஒருவருக்கும் அப்படி இருக்கலாமே, அல்லது அதை விட சிறப்பாக இருக்கலாமே என்ற கேள்வி வரும்.

"ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய் "

என்று சொல்லிவிட்டால், எல்லா ஆடவர்களும் அதில் வந்து விடுவார்கள்.

இதற்கு மேல் ஒரு அழகான தோள் இல்லை என்று ஆகிவிடும்.

கம்பனின் சொல் ஆட்சி, கற்பனை நயம் எப்படி இருக்கிறது?

இவற்றை எல்லாம் படிக்கும் போது, நம்மை அறியாமலேயே நம் பேச்சும், எழுத்தும்  மேன்மை அடையும். புதுப் பொலிவு உண்டாகும்.

மனம் மென்மைப் படும்.

படுகிறதா இல்லையா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_30.html

Sunday, October 27, 2019

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்


கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 




குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.

இந்தப்  பாடலை  சில நாட்களுக்கு முன்னால் பதிவிட்டிருந்தேன்.

அது என்ன அறிவு அற்று, அறியாமையும் அற்று என்று சில அன்பர்கள் கேள்வி கேட்டு இருந்தார்கள்.

அறியாமை அற்றது சரி. அறிவு ஏன் அற்றுப் போக வேண்டும். அறிவு போய் விட்டால் அறியாமை வந்து விடாதா என்பது அவர்கள் கேள்வி.

சிந்திப்போம்.


நிறைய வாசிக்கிறோம். சொற்பொழிவுகள் கேட்கிறோம். கோவில்களுக்குப் போகிறோம். பூஜை, விரதம் போன்றவற்றை மேற்கொள்கிறோம்.

எதற்கு ?

வாசிக்க வாசிக்க, வந்து கொண்டே இருக்கும்.  படிக்க வேண்டியது கடல் போல இருக்கிறது.  அனைத்தையும் வாசித்து விட முடியுமா ? அப்படியே வாசித்து விட்டாலும், எல்லாம் புரிந்து விடுமா? அப்படியே புரிந்தாலும், நமக்கு புரிந்துதான் சரி என்று நாம் எப்படி அறிந்து கொள்வது?

சிலர் கூறுவார்கள் , தினமும் காலையில் எழுந்தவுடன் அந்த ஒரு குறிப்பிட்ட பாடல்களை, முழுவதும் சொல்லிவிட்டுத் தான் காப்பியே குடிப்பேன் என்று.

மூன்று வேளை அதை செய்வேன், ஆறு வேளை இதைச் செய்வேன், மாதம் இருமுறை அதைச் செய்வேன் என்று.

இப்படி செய்து கொண்டே இருந்தால், நேரே சுவர்க்கம், இறைவன் திருவடி என்று எதையோ அடைந்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அது சரி அல்ல.

மாடிக்கு செல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு படியாக எறிச் செல்ல வேண்டும். நான் தினமும் பத்து படி ஏறி இறங்குவேன், ஒரு நாளைக்கு இருப்பது முறை  ஏறி இறங்குவேன், இப்படி இருப்பது வருடம் செய்து கொண்டு இருக்கிறேன்.  வாழ் நாள் பூராவும் இப்படி செய்து கொண்டே இருந்தால், ஒரு நாள் முழு மாடியும் ஏறி விடுவேன் என்று யாராவது சொன்னால் இப்படி இருக்கும்.

ஒரு படியை அடைந்து விட்டால், அடுத்த படிக்கு செல்ல வேண்டும். ஏறிய படி எவ்வளவு  நன்றாக இருந்தாலும், அதை தாண்டி மேலே செல்ல வேண்டும்.

அந்த பாசுரம் எவ்வளவு நல்லா இருக்கு, இந்த பாடல் எவ்வளவு அர்த்தம் செறிந்ததாக இருக்கிறது   என்று அதிலேயே நின்று விடக் கூடாது.

பள்ளிக் கூடம் போனால்,  ஒவ்வொரு வகுப்பாக மேலே செல்ல வேண்டும்.

இரண்டாம் வகுப்பு பிடித்து இருக்கிறது என்று ஒரு 30 வருடம் இரண்டாம் வகுப்புக்கே போய் கொண்டு இருக்க முடியுமா ?

அவ்வளவு ஏன் ?

வீடு குப்பையாக இருக்கிறது. விளக்குமாறு கொண்டு சுத்தம் செய்கிறோம். குப்பை எல்லாம் ஒரு   ஓரத்தில் தள்ளி விட்டோம். வீடு சுத்தமாகி விட்டது.

வீடு சுத்தமானபின் விளக்குமாறை என்ன செய்வது?

"அடடா, என் அருமை விளக்குமாறே , நீ அல்லவா இந்த வீட்டை சுத்தம் செய்தாய். எனவே உன்னை நான் நடு வீட்டில் வைக்கிறேன் " என்று யாராவது சொல்வார்களா?

குப்பையை கூட்டியபின் பின் விளக்குமாறை குப்பையோடு சேர்த்து ஓரமாக  வைத்து விட வேண்டும்.

அறியாமை என்ற குப்பை நீங்கியபின், அறிவு என்ற விளக்குமாறு எதற்கு?

படித்துக் கொண்டே இருக்கக் கூடாது. படித்ததை வைத்து மேலே செல்ல வேண்டும்.  வாழ்நாள் எல்லாம் படித்துக் கொண்டே இருப்பேன் என்பது, விளக்குமாறை தலையில் வைத்துக் கொண்டு  அலைவது போலத்தான்.



பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது

அறிவு என்பது இறைவனை அல்லது உண்மையை அறிய பெரிய தடை. 

சொல்வது, அருணகிரி நாதர் மட்டும் அல்ல. மணிவாசகரும் சொல்கிறார். 

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலம் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னும்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்றூதாய் கோத்தும்பீ.  

செல்வம் சேர்த்து வைத்து வைத்தால், அதை விட்டுப் போக மனம் வராது. இன்னும் அனுபவிக்க வேண்டும்  என்றே மனம் பற்றும். 

அன்பான மனைவி கிடைத்தால், அவளை விட்டு பிரிய மனம் வராது.  ஆசை மேலும் மேலும் வளரும். 

பிள்ளைகள், கேட்கவே வேண்டாம். பிள்ளைகளை விட்டு விட்டு எப்படி போவது. 

இதெல்லாம் நமக்குத் தெரிகிறது. 

அடுத்து ஒன்றைச் சொல்கிறார் மணிவாசகர் - "கல்வி" 

கல்வியும்  சித்தத்தைக் குழப்பும் என்கிறார். 

இறைவனை அடைய செல்வம், மனைவி, பிள்ளைகள் எப்படித் தடையோ அப்படி கல்வியும். 

காரணம், கல்வியில் இறங்கியவர்கள் அதில் போய் கொண்டே இருப்பார்கள். அதுவே குறிக்கோள் என்பது  போல .

"கற்பனவும் இனி அமையும்" என்பார் மணிவாசகர். 

படியுங்கள். பூஜை செய்யுங்கள். விரதம் இருங்கள். ஸ்லோகங்கள், பஜனைப் பாடல்கள்  எல்லாம்  சொல்லுங்கள்  

ஆனால், அதுவே முடிவானாது என்று எண்ணிக் கொள்ளாதீர்கள்.  

அதைத் தாண்டி போக வேண்டும். 

அறியாமை அற்று, அறிவும் அற்றுப் போக வேண்டும். 

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_27.html

Saturday, October 26, 2019

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை

ஐங்குறு நூறு - இனிது மன்ற அவர் கிடக்கை 


என்ன எப்பப் பார்த்தாலும், தேவாரம், திருவாசகம், திருக்குறள் என்று ஒரு பக்தி, ஒழுக்கம், அறம் என்று தமிழ் இலக்கியம் என்றால் இவ்வளவுதானா என்று சிலர் நினைக்கலாம்.

இல்லை. தமிழ் இலக்கியம் மனித உறவின் நுணுக்கங்களை, அதன் சிக்கல்களை, அதன் நெளிவு சுளிவுகளை, யதார்த்தத்தை அப்படியே படம் பிடிக்கிறது.

அது ஒரு சிறிய வீடு. கணவன், மனைவி அவர்களின் சிறிய மகன் மூவர் மட்டும் இருக்கிறார்கள். ஒரே ஒரு படுக்கை அறை தான்.

ஒரு நாள் இரவு, கணவனும் மனைவியும் சற்று இன்பமாக இருக்கலாம் என்று நினைத்து ஆவலோடு படுக்கை அறையில் நுழைகிறார்கள். அவர்கள் படுத்ததுதான் தாமதம், எங்கிருந்தோ அந்த பையன் ஓடி வந்து அவர்கள் இருவருக்கும் நடுவில் படுத்துக் கொள்கிறான்.  அவள் , அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பிள்ளையின் தலை கோதி இருப்பாள்.

அவர்கள் தவிப்பு அவனுக்கு எங்கே தெரிகிறது.


இருந்தும், அவர்களுக்கு பிள்ளை மேல் கோபம் இல்லை. சந்தோஷமாக அவனை கட்டி அணைத்துக் கொண்டு உறங்கிப் போனார்கள்.

அது எப்படி இருக்கிறது என்றால், மான் ஜோடிகளுக்கு நடுவில் படுத்துக் கிடக்கும் மான் குட்டியைப் போல இருக்கிறதாம்.

இல்லறத்தின் நுணுக்கமான உணர்வுகளை விளக்கும் பாடல்.

பாடல்

"மறி இடைப் படுத்த மான் பிணை போலப்
புதல்வன் நடுவணனாக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி
நீல் நிற வியல் அகம் கவைஇய
ஈனும் உம்பரும் பெறலரும் குரைத்தே"


பொருள்

"மறி  = மான் குட்டி

இடைப் படுத்த = இடையில் படுத்து இருந்த

மான் பிணை  = ஜோடி மான்களைப்

போலப் = போல

புதல்வன் = மகன்

நடுவணனாக = நடுவில் இருக்க

நன்றும் = நல்லது

இனிது  மன்ற =  இனிது என்று

அவர் கிடக்கை = அவர்கள் (கணவனும் மனைவியும்) படுத்துக் கிடந்தது

முனிவு இன்றி = கோபம் இன்றி

நீல் நிற வியல் = நீல நிறம் கொண்ட ஆகாயத்தின் கீழ்

அகம் = உள்ள உலகம்

கவைஇய = சூழ்ந்து உள்ள

ஈனும் = இன்றும் , இங்கும்

உம்பரும் = தேவர்களும் , மறு உலகிலும்

பெறலரும் = பெறுவதற்கு அரிதான

குரைத்தே" = உரைத்தல், சொல்லுதல்

அருகில், அன்பான மனைவி (/கணவன்) , பிள்ளை இவர்களை கட்டிக் கொண்டு கிடப்பது எவ்வளவு சுகம்  என்கிறது பாடல்.

இங்கு மட்டும் அல்ல, ஸ்வர்கத்திலும் இது போன்ற சுகம் கிடைக்காது என்கிறது பாடல்.

உண்மைதானே ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_26.html

Thursday, October 24, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - தவம் செய்யும் கொள்கை அற்றேன்

இராமானுசர் நூற்றந்தாதி - தவம் செய்யும் கொள்கை அற்றேன் 


தினமும் மூணு வேளை குளிக்கிறேன், நாலு வேளை பூஜை பண்ணுகிறேன், நாளும் கிழமையும் என்றால் உடலை வருத்தி தவம் செய்கிறேன், வருடம் தவறாமல் திருத்தல யாத்திரை செய்கிறேன், மொட்டை போட்டுக் கொள்கிறேன், வெளியே ஒரு காப்பி கூட குடிப்பதில்லை, ஆச்சாரம், அனுஷ்டானம் என்று அத்தனையும் கடைபிடிக்கிறேன் ....

என்று சிலர் பெருமையாகச் சொல்வார்கள். ஏதோ இதை எல்லாம் செய்தால் நேரே இறைவனடி சேர்ந்து விடலாம் என்ற நினைப்பில்.

அமுதனார் சொல்கிறார்

"உடலை வருத்தி செய்யும் தவங்களை விட்டு விட்டேன். குலசேகர பெருமாளின் பாசுரங்களை படிக்கும் பெரியவர்களின் பாதங்களை துதிக்கும் இராமானுஜரை நான் பற்றிக் கொண்டேன். அவர் என்னை விட்டு விட மாட்டார்"  என்கிறார்.

பாடல்


கதிக்குப் பதறிவெங் கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத் தவம்செய்யும் கொள்கையற் றேன்,கொல்லி காவலன்சொல்
பதிக்கும் கலைக்கவி பாடும் பெரியவர் பாதங்களே
துதிக்கும் பரமன் இராமா னுசனென்னைச் சோர்விலனே.


பொருள்


கதிக்குப் = நல்ல கதிக்கு செல்ல வேண்டுமே என்று

பதறி = பதட்டம் கொண்டு

வெங் கானமும் = கொடிய காடும்

கல்லும் = மலையும்

கடலுமெல்லாம் = கடலும் எல்லாம்

கொதிக்கத் = கொதிக்கும்படி

தவம் செய்யும் = தவம் செய்யும்


கொள்கையற் றேன் = கொள்கையை விட்டு விட்டேன்

கொல்லி காவலன் = குலசேகர ஆழ்வார்

சொல் = சொற்கள்

பதிக்கும் = பதிந்து கிடக்கும்

கலைக்கவி  = கலை நின்றாய்ந்த கவிதைகள்

பாடும் = பாடுகின்ற

பெரியவர் பாதங்களே = பெரியவர்களின் பாதங்களை

துதிக்கும் = வணங்கும்

பரமன் = பெரியவன்

இராமா னுசன் = இராமானுசன்

என்னை  = என்னை

சோர்விலனே. = சோர்வுடைய விட மாட்டார்

பக்தியிலே இரண்டு விதம் சொல்வார்கள்.

குரங்கு மாதிரி, பூனை மாதிரி என்று இரண்டு விதம்.

பூனை, தன் குட்டியை தானே தூக்கிக் கொண்டு திரியும்.

குரங்கு அப்படி அல்ல. குட்டி குரங்கு தாயை இறுக்க பற்றிக் கொள்ளும். தாய் குரங்கு அங்கும் இங்கும் தாவும்.  விடாமல் பிடித்துக் கொள்ள வேண்டியது குட்டியின் பாடு.

இராமானுசன் என்னை சோர்விலனே என்றால் பூனை மாதிரி பக்தி. அவர் கிட்ட போய்விட்டால் போதும்.  அவர் நம்மை தூக்கிக் கொண்டு சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பித்து விடுவார்.  அப்புறம் அவர் பாடு அது என்கிறார்  அமுதனார்.

தாய்தான் , தந்தையை அடையாளம் காட்டுகிறாள்.

தந்தைதான், குருவை அடையாளம் காட்டுகிறார்.

குரு , நமக்கு தெய்வத்தை அடையாளம் காட்டுவார் என்பது நமது நம்பிக்கை.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது முறை.

குருவிடம் போய் சேர்ந்து விட வேண்டும். அவர் கொண்டு போய் சரியான இடத்தில்  சேர்த்து விடுவார்.

இதற்கு நடுவில் இந்த  ஆச்சாரம், அனுஷ்டானம், பூஜை, புனஸ்காரம், விரதம், தவம்  எல்லாம் தேவையே இல்லை என்கிறார்.

நாமா கேட்போம்?

நமக்கு எவ்வளவு தெரியும். இத்தனை நாளாய் செய்து வந்த முறைகளை விட முடியுமா என்ன?

பாசுரம் ஒரு பக்கம் வாசித்து, 'அடடா என்னம்மா பாடியிருக்கிறார்" என்று சொல்லிக் கொண்டே நம்ம  வேலையை பார்க்க வேண்டியதுதான்.

நாளை மீண்டும் சந்திப்போமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_24.html

Monday, October 21, 2019

அபிராமி அந்தாதி - உள்ளத்தே விளைந்த கள்ளே

அபிராமி அந்தாதி - உள்ளத்தே விளைந்த கள்ளே 


உணர்ச்சி வருவதற்கு காரணம் சொல்லலாம். ஆனால், ஒரு உணர்ச்சி எப்படி இருக்கிறது என்று விளக்கிச் சொல்ல முடியாது.

காதல் வந்தால், அதற்கு காரணம் சொல்ல முடியும். காதல் என்ற அந்த உணர்வு எப்படி இருக்கிறது என்று எப்படி விளக்கிச் சொல்வது?

இறை அனுபவம் என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று கேட்டால் எப்படி அதை விளக்கிச் சொல்வது என்று தவிக்கிறார் பட்டர்.

எனக்கு அந்த அனுபவம் இருக்கிறது. நான் அதை அனுபவிக்கிறேன். ஆனால், அது எப்படி இருக்கிறது என்று கேட்டால் எப்படிச் சொல்வது ?

ஒரு கள் குடித்து இருக்கிறான். போதையில் தடுமாறுகிறான். உளறுகிறான். ஆடுகிறான். தன்னை மறந்து நடந்து கொள்கிறான். அக்கம் பக்கம் இருப்பவர்களை பற்றி ஒரு கவலையும் இல்லை. தான் யார், சமுதாயத்தில் தன் நிலை என்ன, ஒரு தகப்பன், கணவன், பிள்ளை, சகோதரன், ஒரு அலுவலகத்தில் ஒரு பொறுப்புள்ள வேலையில் இருப்பவன் என்பதெல்லாம் மறந்து விடுகிறது. போதையில் இலயித்துக் கிடக்கிறான்.

அது போன்றது பக்தி என்கிறார் பட்டர்.

கள் தான். ஆனால் வெளியே வாங்கி வந்து அடித்த சரக்கு அல்ல. உள்ளுக்குள்ளேயே உருவான கள் என்கிறார். உள்ளத்தே விளைந்த கள்ளே என்கிறார்

வெளியில் வாங்கி வந்தால், ஏதோ ஒரு பாட்டில், இரண்டு பாட்டில் வாங்கி வரலாம். போதை தலைக்கு ஏறிவிட்டால் எப்போது வேண்டுமானாலும் குடிப்பதை நிறுத்தி விடலாம்.  இதுவோ உள்ளே விளைந்த கள். எப்படி நிறுத்துவது?  அது பாட்டுக்கு ஊற்று எடுத்துக் கொண்டே இருக்கிறது.

வேறு வழியில்லை. போதையில் தன் நிலை தடுமாற வேண்டியதுதான்.

அபிராமியைப் பார்க்கிறார்.

அவள் யார்? தாயா? தாரமா? சகோதரியா? நண்பியா? காதலியா ? ஒன்றும் புரியவில்லை.

என்னை காப்பாற்று என்று பக்தனாக வேண்டுகிறார்.

உன் மார்பகங்கள் அப்படி இருக்கிறது , இப்படி இருக்கிறது என்று குழந்தையாக  அவள் மடியில் கிடக்கிறார்.

உன்னுடைய மற்ற அவயங்கள் இப்படி இருக்கின்றன என்று வர்ணிக்கிறார்.  இப்படி  செய்யலாமா? இது சரியா ? இதுவா பக்தியா, பட்டர் போன்றவர்கள்   இப்படி  சொல்லலாமா ? ஒரு பெண்ணின் அந்தரங்க அவயங்களை பற்றி பேசுவது  நாகரீகமா என்று கேட்டால் கள் குடித்தவனுக்கு என்ன தெரியும்?

ஆண்டாளும் அப்படித்தான்.  பக்தி என்ற போதை. கள்.

பாடல்

கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே


பொருள்


கொள்ளேன் மனத்தில் = என மனதில் வைத்துக் கொள்ள மாட்டேன்

நின் கோலம் அல்லாது  = உன் உருவத்தை அன்றி மற்ற எதையும்

அன்பர் கூட்டம் தன்னை = உன்னுடைய அன்பர்கள் கூட்டம்

விள்ளேன்  = விட மாட்டேன்

பரசமயம் விரும்பேன் = மற்ற சமயங்களை விரும்ப மாட்டேன்

வியன் = வியக்கத்தக்க

மூவுலகுக்கு = மூன்று உலகங்களுக்கு

உள்ளே =உள்ளே

அனைத்தினுக்கும் புறம்பே = எல்லாவற்றிற்கும் வெளியே

உள்ளத்தே = மனதினில்

விளைந்த = தோன்றிய

கள்ளே = கள்ளே

களிக்கும் களியே = அனுபவிக்கும் இன்பமே

அளிய என் கண்மணியே = அதைத் தரும் என் கண்ணின் மணி போன்றவளே



"அனைத்தினுக்கும் புறம்பே"...எல்லாவற்றிற்கும் வெளியே. ஏதோ ஒன்று இருக்கிறது என்றால்  அது ஏதோ ஒன்றினுக்கு உள்ளேதான் இருக்க வேண்டும். அனைத்துக்கும் வெளியே என்றால் அது எங்கே?

பக்தியின் உச்சம். அவருக்குத் தெரிகிறது. சொல்ல முடியவில்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_21.html

Sunday, October 20, 2019

வில்லி பாரதம் - எது நல்லது ?

வில்லி பாரதம்  -  எது நல்லது ?


எது நல்லது?

எது உடனடி சுகம் தருகிறதோ, அதுவே நல்லது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.

படிப்பதைவிட டிவி பார்ப்பது சுகமாக இருக்கிறது.

வேலை செய்வதை விட, படுத்து தூங்குவது நல்லா இருக்கிற மாதிரி தெரிகிறது.

நல்ல விஷயங்களை படிப்பதைவிட whatsapp ல் அரட்டை அடிப்பது நல்லா இருக்கிற மாதிரி தோன்றுகிறது.

கருத்து வேற்றுமை வந்தால், விட்டுக் கொடுத்து, அதனால் வரும் தோல்வியை விட, சண்டை போட்டு வெற்றி பெறுவது சுகமாக இருக்கிறது.

அது சரியா ?

பாண்டவர்களிடம் கண்ணன் கேட்கிறான், வனவாசம் முடிந்து விட்டது, அஞ்ஞாத வாசம் முடிந்து விட்டது. இப்போது என்ன செய்ய உத்தேசம் என்று.

அதற்கு தர்மன் சொல்கிறான் (முந்தைய பிளாகின் தொடர்ச்சியாக)

"குலத்தில் உதித்த பெரியவர்களையும், உறவினர்களையும், துணைவர்களையும், கொன்று, போரில் வென்று, இந்த உலகம் முழுவதையும் ஆழ்வதை விட, திருதராஷ்டிரன் சொன்ன மாதிரி, நாங்கள் காட்டில் காய் கனிகளை உண்டு வாழ்வது எவ்வளவோ சிறந்தது "

என்று.

பாடல்

'குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும்,
                  கொன்று, போர் வென்று,
அரவ நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி
                  ஆளும் அரசுதன்னில்,
கரவு உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த
                  மொழிப்படியே, கானம்தோறும்,
இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல்
                  இனிது, நன்றே!

பொருள்


'குரவரையும் = தலைவர்களையும், முதியவர்களையும்

கிளைஞரையும் = உறவினர்களையும்

குலத்து உரிய துணைவரையும் = குலத்தில் கூட உதித்த துணைவர்களையும்

கொன்று = கொன்று

போர் வென்று, = போர் வென்று

அரவ = ஆதி சேஷன் என்ற பாம்பின் தலையில் இருக்கும்

நெடுங் கடல் = பெரிய கடலை

ஆடை = ஆடையாக உடுத்திய இந்த

அவனி எலாம் = உலகம் எல்லாம்

தனி = தனி ஆளாக

ஆளும் அரசுதன்னில், = ஆளுகின்ற அரசை விட

கரவு உறையும் = வஞ்சம் நிலவும்

மனத்  = மனத்தைக் கொண்ட

தாதை  = தந்தை (திருதராஷ்டிரன்)

முனிக்கு = சஞ்சய முனிவனுக்கு

உரைத்த = கூறிய

மொழிப்படியே, = சொற்படி

கானம்தோறும் = காடுகள் எல்லாம் சென்று

இரவு பகல் = இரவு பகல் எல்லா நேரமும்

பல = பலவிதமான

மூல சாகம் = பழங்களையும், காய்களையும்

நுகர்ந்து = உண்டு

உயிர் வாழ்தல் = உயிர் வாழ்தல்

இனிது, நன்றே! = இனிமையானது, நன்மை பயப்பது


எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டு.

வெற்றி பெற வேண்டுமா, உலகை ஆள வேண்டுமா, அதற்கு ஒரு விலை உண்டு.

பெரும் செல்வம் சேர்க்க வேண்டுமா, அதற்கும் ஒரு விலை உண்டு.

அந்த விலை கொடுத்து அந்த செல்வத்தை பெறுவது நல்லதா என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டியது நம் கடமை.

பணம் பணம் என்று சென்று, வாழ்கையை தொலைத்தவர்கள் பலர்.

மனைவி, மக்கள், அன்பு, பாசம், உறவு எல்லாம் விளையாகக் கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

இங்கே தர்மன் சொல்கிறான்.

எல்லாரையும் பலி கொடுத்தால் பெரிய அரசு கிடைக்கும்.

அது தேவை இல்லை என்கிறான்.

தர்மன் செய்தது தவறா சரியா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் எதை அடைய எதை இழக்கிறீர்கள் என்பதை அறிந்து  கொள்ளுங்கள்.

கணவனை (மனைவியை) விட நான் பெரிய ஆள், புத்திசாலி என்று நிலை நிறுத்த விரும்புகிறீர்களா? செய்யுங்கள். அதன் விலை, அவர்களின் அன்பை, காதலை இழக்க  வேண்டி வரும். அவ்வளவுதான்.

வில்லி பாரதத்தில் இது போல எவ்வளவோ கருத்துகள் கொட்டிக் கிடக்கிறது.

அள்ளிக் கொள்ளுங்கள். அத்தனையும் இலவசம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_20.html

Saturday, October 19, 2019

வில்லி பாரதம் - இரு திறத்தேமும் சென்று மாள்வோம்

வில்லி பாரதம் -  இரு திறத்தேமும் சென்று மாள்வோம்


உறவுகளுக்குள் சண்டை வருவது இயல்பு. கணவன் மனைவி, மாமியார் மருமகள், அண்ணன் தம்பி, பங்காளிகள் என்று உறவில் விரிசல் வருவது இயற்கை.

சண்டை வந்தால் என்ன செய்ய வேண்டும் ?

நீயா நானா என்று ஒரு கை பார்த்து விட வேண்டும். யார் சரி என்று நிரூபித்தே ஆக வேண்டும். வெற்றி பெற்றே ஆக வேண்டும். அது எப்படி நான் தவறு என்று சொல்லலாம் என்று மூர்க்கமாக வாதிட வேண்டும். என்ன ஆனாலும் சரி, அடுத்தவர் தவறு என்று நிலை நிறுத்தாமல் விடுவது இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு கோதாவில் இறங்க வேண்டும்....

என்று தான் பலரும் நினைக்கிறார்கள். செய்கிறார்கள்.

சூதில் பாண்டவர்கள் தோற்றார்கள். நாடு நகரம் எல்லாம் வைத்து இழந்தார்கள். இறுதியில் மனைவியையும் வைத்து இழந்தான் தர்மன். பாஞ்சாலி சபை நடுவில் நெருக்கடிக்கு உள்ளானாள் . கதை உங்களுக்குத் தெரியும்.

வனவாசம், அஞ்ஞாத வாசம் முடிந்து திரும்பி வந்து விட்டார்கள்.

இப்போது என்ன செய்ய வேண்டும்?

ஒரு புறம் அர்ஜுனன், வீமன் , பாஞ்சாலி சபதம் நிற்கிறது.

கண்ணன் கேட்கிறான். என்ன செய்ய வேண்டும் என்று.

தருமன் சொல்கிறான். தர்மன் வாயிலாக வில்லி புத்தூராழ்வார் சொல்கிறார்.

"காட்டிலே மூங்கில் மரங்கள் வளர்ந்து இருக்கும். ஒன்றோடு ஒன்று உரசினால் தீப்பற்றிக் கொள்ளும். அப்படி தீப்பற்றிக் கொண்டால், உரசிய  இரண்டு மூங்கில்கள் மட்டும் அல்ல , காடே எரிந்து சாம்பல் ஆகும்.  அது போல  உறவினர்கள் ஒருவரோடு ஒருவர் உரசிக் கொண்டால் அவர்கள் அழிவது மட்டும் அல்ல, அவர்களுடைய சுற்றம் எல்லாம் அழியும். எனவே, நாங்கள்  ஒன்றாக வாழ வழி சொல்வாய்"

என்று கேட்கிறான்.

எவ்வளவு பெரிய மனம். கோபம் வந்தாலும்,  மற்றவர்கள் நகைப்பார்களே என்ற எண்ணம் இருந்தாலும்,  எவ்வளவு தீர்க்கமாக சிந்தித்து பேசுகிறான் தர்மன்.

பாடல்

வயிரம் எனும் கடு நெருப்பை மிக மூட்டி வளர்க்கின்,
                  உயர் வரைக்காடு என்ன,
செயிர் அமரில் வெகுளி பொர, சேர இரு திறத்தேமும்
                  சென்று மாள்வோம்;
கயிரவமும் தாமரையும் கமழ்பழனக் குருநாட்டில்
                  கலந்து, வாழ,
உயிர் அனையாய்! சந்துபட உரைத்தருள்!' என்றான்,
                  அறத்தின் உருவம் போல்வான்.

பொருள்

வயிரம் எனும் = வயிரம் போன்ற உறுதியான

கடு நெருப்பை = கடுமையான கோபத்தை

மிக மூட்டி = அதிகமாக மூட்டி

வளர்க்கின் = வளர்த்து விட்டால்

உயர் வரைக் = உயர்ந்து வளரும் மூங்கில்

காடு என்ன = காடு போல

செயிர் அமரில் = கடுமையான போரில்

வெகுளி பொர = கோபம் தீர

சேர இரு திறத்தேமும் = இருபக்கமும் சேர்ந்து போராடினால்

சென்று மாள்வோம்; = சண்டையில் சென்று இறந்து போவோம்

கயிரவமும் = ஆம்பல் மலரும்

தாமரையும் = தாமரை மலரும்

கமழ் = மணம் வீசும்

பழனக் = பழமையான

குருநாட்டில் = குரு நாட்டில்

கலந்து, வாழ, = ஒருவரோடு ஒருவர் கலந்து வாழ

உயிர் அனையாய் = எங்கள் உயிர் போன்றவனே (கண்ணனே )

சந்துபட = சமாதானம் அடைய

உரைத்தருள்!'  என்றான், = உரைத்து அருள் செய்வாய் என்றான்

அறத்தின் உருவம் போல்வான். = அறத்தின் உருவம் போன்ற தர்மன்


கௌரவர்கள் , பாண்டவர்களுக்கு செய்ததை விடவா உங்கள் கணவனோ/மனைவியோ உங்களுக்கு துன்பம் செய்து விடப் போகிறார்கள்.

கௌரவர்களோடு கலந்து வாழ வழி சொல்வாய் என்று கேட்கிறான்.

மனைவியின் சேலையை பிடித்து இழுத்தவனுடன் கலந்து வாழ அருள் செய்வாய்  என்று கேட்கிறான்.

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா, அவ்வளவு பொறுமை.

சண்டை போட்டால் எவ்வளவு பேர் இறந்து போவார்கள் என்ற அளவற்ற அருள் உள்ளத்தில் தோன்றியதால் , அதை தவிர்க்க நினைக்கிறான் தர்மன்.

கோபத்தில் நிதானம் இழக்காமல், பேசுகிறான் தர்மன்.

நம்மால் அந்த அளவு கட்டாயம் செய்ய முடியாது.

பரவாயில்லை.

இப்படியும் இருக்க முடியும். இருந்திருக்கிறார்கள் என்று நினையுங்கள்.

அது உங்களை ஒரு படி மேலே உயர்த்தும்.

மாந்தர் தம் உள்ளத்து அனையது உயர்வு.


https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_19.html

Friday, October 18, 2019

திருமந்திரம் - குறியாத தொன்றைக் குறியாதார்

திருமந்திரம் - குறியாத தொன்றைக் குறியாதார்


சிறு பிள்ளைகள், மணலில் விளையாடும். அதில் அவர்கள் சோறு, கறி எல்லாம் செய்வார்கள். செய்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பார்கள். சாப்பிடுவது போல பாவனை செய்து, ஏப்பமும் விடுவார்கள்.

அது சிறு பிள்ளை விளையாட்டு. அது சோறும் இல்லை. அது பசியையும் தீர்க்காது.

அது போல, நாம் இந்த உலகியல் அனுபவங்களில் திளைத்து இருந்து கொண்டு, அதுவே சுகம், அதுவே வீடு பேறு , முக்தி இவற்றை தரும் என்று நினைத்துக் கொள்கிறார்கள் என்கிறார் திருமூலர்.

பாடல்

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே .

பொருள்

சிறியார் = சிறுவர்கள்

மணற்சோற்றில் = மணலால் செய்த சோற்றில்

தேக்கிடு மாபோல் = உண்டு ஏப்பம் விடுவது போல (தேக்கு = ஏப்பம்)

செறிவால் = கூடி இருப்பதால் (கணவன், மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவு)

அனுபோகஞ் சித்திக்கும் என்னில் = உயர்ந்த போகம் கிடைக்கும் என்று எண்ணுவது

குறியாத தொன்றைக்  = குறிப்பாக சொல்ல முடியாத ஒன்றை

குறியாதார் = குறித்துக் கொள்ளாதவர்கள்

தம்மை = தங்களை

அறியா திருந்தார் = அறிய மாட்டார்கள்

அவராவர் = அவர் என்ற தலைவரை

அன்றே = அப்போதே

உலக இன்பங்களில் திளைத்து இருப்பவர்கள் தங்களையும் அறிய மாட்டார்கள், "அவரையும்" அறிய மாட்டார்கள்.

வீடு, வாசல், பணம், நகை,நட்டு, உறவு என்று  அலைந்து கொண்டு இருப்பவர்கள், பிள்ளைகள் மணல் சோறு செய்வது போல சிறு பிள்ளைகளாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

மணல் சோறு பசியை எப்படி போக்காதோ, அப்படியே இவையும் என்று அறிக.

interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_37.html



கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும்

கந்தர் அநுபூதி - குறியை குறியாது குறித்து அறியும் 


ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தான். அவனுக்கு ஏகப்பட்ட செல்வம். எல்லாவற்றையும் பல இரும்பு பெட்டிகளில் போட்டு அவனுக்கு சொந்தமான பல இடங்களில் மறைவாக புதைத்து வைத்து இருந்தான். அந்த பெட்டிகளின் சாவியை அவனுடைய மகனிடம் கொடுத்து "மகனே நான் இதுவரை சேர்த்த செல்வங்களை எல்லாம் பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்து இருக்கிறேன். அந்தப் பெட்டிகளின் சாவிகள் இவை. பத்திரமாக வைத்துக் கொள் . எனக்குப் பின்னால் அவை அனைத்தும் உனக்குத்தான்" என்று கூறினான்.

மகனும் சாவியை வாங்கிக் கொண்டான். பெட்டிகள் எங்கே இருக்கிறது அந்தத் தந்தை மகனிடம் சொன்னான். அவன் சரியாக மனதில் வாங்கிக் கொள்ளவில்லை. சரி, அப்பறம் இன்னொரு நாள் கேட்டு சரியாக எழுதி வைத்துக் கொள்வோம் என்று இருந்து விட்டான்.  விதியின் விளையாட்டு. தந்தை ஒரு விபத்தில் இறந்து போனார்.

மகனிடம் சாவிகள் இருக்கின்றன. ஆனால், அந்த சாவிகள் எந்த பூட்டைத் திறக்கும் என்று அவனுக்குத் தெரியாது. பூட்டு தெரியாது. ஆனால், சாவி இருக்கிறது.

அவன் , அவனுடைய  மகனிடம் "மகனே, உன் தாத்தா பெரிய ஆள். நிறைய சம்பாதித்தார். அவற்றை எல்லாம் பல பெட்டிகளில் போட்டு பல இடங்களில் புதைத்து வைத்தார். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை.  நீ தான் அவற்றின் வாரிசு. சில பெட்டிகளின் இடம் எனக்குத் தெரியும். மற்றவை மறந்து  போய் விட்டது. நீ கண்டு பிடித்துக் கொள். ஆனால், அவற்றில் பல விலை மதிக்க முடியாத செல்வங்கள் இருக்கின்றன" என்று கூறி தன் மகனிடம் அந்த சாவிகளைக் கொடுத்தான்.

இப்படி தலை முறை தலை முறையாக அந்த சாவிக் கொத்து கை மாறிக் கொண்டே வந்தது.

பல தலைமுறைகளுக்குப் பின், தற்போதைய வாரிசுகள் "எங்க முன்னோர்கள்  பெரிய செல்வந்தர்கள். கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்தார்கள். அந்த பெட்டிகளின் சாவிகள் இவை " என்று அந்த சாவிக் கொத்தை  கையில் ஸ்டைலாக சுத்திக் கொண்டு திரிகிறார்கள். பெட்டிகள் எங்கே இருக்கிறது என்று தெரியாது.

அது போலத்தான்  பலர் இன்று இருக்கிறார்கள்.

கோவில், பூஜை, நாள், கிழமை, உடம்பில் பல விதமாக கோடுகள் போட்டுக் கொள்வது, பல விதமாக உடை  அணிந்து கொள்வது, சாப்பிடுவது, சாப்பிடாமல் இருப்பது  என்று பல வித காரியங்களை செய்கிறார்கள்.

ஏன் என்று கேட்டால் தெரியாது. முன்னோர்கள் செய்தார்கள். அவர்கள் மடையர்களா என்று  கேட்கிறார்கள். முன்னோர்கள் செய்ததற்கு காரணம் இருக்கலாம். நீ ஏன் செய்கிறாய் என்றால் தெரியாது.

இந்த சடங்களுகளின் பின்னால் காரணம் இருக்கலாம். ஆனால் அது என்ன என்று தெரியாது.

சாவி இருக்கிறது. பூட்டு எங்கே என்று தெரியாது.

குறியீடுகள் முக்கியமாக போய் விட்டது. சாவியே செல்வம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

விரதம் என்றால் அது எதை சாதிக்க முற்படுகிறது என்று தெரிய வேண்டும்.

விளக்கு ஏற்றுகிறோம் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரிய வேண்டும். .

ஏன் செவ்வாய், வெள்ளி பூஜைக்கு உகந்த நாள்? ஏன் மார்கழி உயர்ந்த மாதம்,  ஏன் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும்,  ஏன் கோவிலுக்குப் போக வேண்டும் ?

கையில் சாவியை சுழற்றிக் கொண்டு திரிகிறார்கள். என்ன சொல்வது.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

குறிகளை, குறியீடுகளை தாண்டிச் செல்ல வேண்டும். அதுவே இறுதி அல்ல.  அது எதைக் குறிக்கிறதோ  அதை நோக்கிச் செல்ல வேண்டும்.

சாவியை எடுத்துக் கொண்டு போய் , பெட்டியை திறந்து செல்வங்களை எடுத்து அனுபவிக்க வேண்டும்.

பாடல்

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவு அற்று, உலகோடு உரை சிந்தையும் அற்று
அறிவு அற்று, அறியாமையும் அற்றதுவே.


பொருள்

குறியைக் குறியாது = குறிப்புகளை மனதால் குறித்துக் கொள்ளாமல்

குறித்து அறியும் = அந்தக் குறிகள் எவற்றை குறிக்கின்றனவோ அவற்றை அறியும்

நெறியைத் = வழியை

தனிவேலை நிகழ்த்திடலும் = தனித்துவம் வாய்ந்த வேலை உடைய முருகன் நிகழ்த்திடவும்

செறிவு அற்று, உலகோடு =உலகோடு நெருங்கிய பந்தம் விட்டு

உரை = பேச்சு

சிந்தையும் = சிந்தனை

அற்று = விட்டு

அறிவு அற்று = அறிவு அற்று

அறியாமையும் அற்றதுவே = அறியாமையும் விட்டது


அறிவு இல்லாமல் போகலாம். அறியாமை எப்படி இல்லாமல் போகும்?

செய்கின்ற செயல்களின் அர்த்தங்களை கண்டு பிடியுங்கள். சாவி முக்கியம் அல்ல.  செல்வம் முக்கியம்.

தேடுங்கள். காரணம் இல்லாமல் காரியம் செய்யக் கூடாது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_18.html

Wednesday, October 16, 2019

இராமானுசர் நூற்றந்தாதி - செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலை

இராமானுசர் நூற்றந்தாதி - செந்தமிழில் பெய்யும் மறைத்தமிழ் மாலை


நமது புலன்கள் எப்போதும் வெளியே செல்லும் இயல்பு உடையன. வெளியில் உள்ளதை பார்க்கும், நுகரும், கேட்கும்...இப்படி எங்கே எது இருக்கிறது என்று அலையும்.

நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கும், நல்ல படம் எங்கே ஓடும் என்று ஆசை கொண்டு நம்மை விரட்டும்.

இப்படி நாளும் ஓடும் புலன்களை பிடித்து நிறுத்த முடியுமா என்றால், அதுவும் கடினம். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு மனதை அடக்க முயற்சி செய்கிறோமோ, அவ்வளக்கவ்வளவு அது திமிறிக் கொண்டு ஓடும்.

பின் என்ன தான் செய்வது ? எப்படி புலன்களை வெற்றி கொள்வது?

நம் முன்னவர்கள் அதற்கு ஒரு வழி கண்டு பிடித்து சொன்னார்கள்.

ஓடுவது புலன்களுக்கு இயல்பு. ஓடட்டும். ஆனால், அது எங்கே ஓட வேண்டும் என்று நாம் முடிவு செய்து கொண்டு அதை அங்கே அனுப்ப வேண்டும் என்று கூறினார்கள். அது நிற்காது. ஆனால், அதை நாம் விரும்பிய திசையில் செலுத்த முடியும்.

வழிபாடு என்ற ஒன்றை கண்டு பிடித்தார்கள். உங்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ,  வழிபாடு என்பது மனதை நல் வழி படுத்த வந்த ஒரு முறை என்று எடுத்துக் கொள்ளுங்கள். இறைவனைத் தான் வழிபட வேண்டும் என்று இல்லை. இயற்கையை வழிபடுங்கள், உங்கள் பெற்றோரை வழி படுங்கள், ஆசிரியரை வழி படுங்கள்...வழிபாடு மனதை நல்வழி திருப்பப் பயன்படும்.

வழிபடும் போது, மனம், வாக்கு, உடல் (காயம்) இந்த மூன்றும் ஒன்று பட வேண்டும்.  வாய் பாட்டுக்கு பாசுரத்தை சொல்லிக் கொண்டிருக்கும், மனம்  வேறு எதையோ  நினைத்துக் கொண்டிருக்கும், கை இன்னொன்றை செய்து கொண்டிருக்கும். அது அல்ல வழிபாடு.

திரிகரண சுத்தி என்று சொல்லுவார்கள். மனம், வாக்கு , காயம் என்ற உடல் மூன்றும்  ஒரு புள்ளியில் இலயிக்க வேண்டும்.

இறைவனை வழிப்படு என்றால் சிக்கல். ஆளாளாளுக்கு ஒரு கடவுள் வைத்து இருக்கிறார்கள்.  எந்தக் கடவுளை வழிபடுவது. எல்லாக் கடவுளும் ஒன்றா. நம்ம கடவுள்  மற்ற கடவுள்களை விட உயர்ந்தவர் இல்லையா? என்றெல்லாம் தோன்றும்.

எனவேதான், குருவை, ஆச்சாரியனை வழிபடுதல் என்று வைத்தார்கள். அவர் நமக்கு  இறைவனை காட்டித் தருவார் என்று  நம்பினார்கள்.

திருவரங்கத்து அமுதனார் சொல்கிறார்,

"துளசியுடன் கூடிய பூ மாலையும், தமிழ் பா மாலையும் பாடிய தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருவடிகளை மனதில் கொண்ட இராமானுஜரின் திருவடிகளே எனக்குத் துணை" என்று.

பாடல்

செய்யும் பசுந்துள பத்தொழில் மாலையும் செந்தமிழில்
பெய்யும் மறைத்தமிழ் மாலையும் பேராத சீரரங்கத்
தையன் கழற்கணி யம்பரன் தாளன்றி ஆதரியா
மெய்யன் இராமா னுசன்சர ணேகதி வேறெனக்கே.

பொருள்

செய்யும் = செய்கின்ற

பசுந் = பசுமையான

துளபத் = துழாய்

தொழில் = எழிலான , அழகான

மாலையும் = மாலையும்

செந்தமிழில் = செம்மையான தமிழில்

பெய்யும் = பொழியும்

மறைத்தமிழ் மாலையும்  = வேதங்களின் சாரமான பா மாலையும்

பேராத  = நீங்காத

சீரரங்கத் தையன்= ஸ்ரீரங்கத்து ஐயன்

கழற் = திருவடிகள்

கணியம் = அணியும், மனதில் தரித்துக் கொள்ளும்

பரன் = தொண்டரடிப் பொடி ஆழ்வார்

தாளன்றி  = திருவடிகள் தவிர

ஆதரியா = மற்றவற்றை ஆதரிக்காத, வணங்காத

மெய்யன் = உண்மையானவன்

இராமா னுசன் = இராமானுசன்

சர ணே = பாதங்களே

கதி = வழி

வேறெனக்கே. = வேறு எதுவும் இல்லை

பூ மாலை, கையால் , உடலால் செய்யும் பூஜை

பா மாலை , மனதால், வாக்கால் செய்யும் பூஜை

அப்படி மூன்றும் ஒன்றுபட்ட தொண்டரடிப் பொடியின் பாதங்களை பற்றிக் கொண்ட இராமானுஜரின் பாதங்களே எனக்குத் துணை என்கிறார்.

கொஞ்சும் தமிழ். தேனாய் தித்திக்கும் தமிழ்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_16.html

Tuesday, October 15, 2019

அபிராமி அந்தாதி - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி

அபிராமி அந்தாதி - ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி


நேற்று சாப்பிட்டது ஞாபகம் இருக்கிறது. அதற்கு முந்தின நாள்? போன வாரம், போன மாதம், போன வருடம் இதே நாள் என்ன சாப்பிட்டோம் என்று நினைவு இருக்கிறதா? இல்லை அல்லவா.

ஒரு மாடு, நெல் விளைந்த ஒரு வயல் காட்டில் சென்று வளர்ந்து இருக்கின்ற நெல் பயிரை மேய்ந்து விடுகிறது. வயலுக்கு சொந்தக்காரன் வந்து தடியால் இரண்டு அடி போட்டு மாட்டை விரட்டுகிறான்.  மறு நாளும் அந்த மாடு அதே வயக்காட்டில் இறங்கி பயிரை மேயும். "அடடா, நேற்றுதானே இந்த பயிரை மேய்ந்ததற்கு தடியால் அடித்தார்கள்" என்ற நினைவு இருக்காது. செய்த தவறை மீண்டும் மீண்டும் செய்யும். மறந்து போய் விடுகிறது.

நாமாக இருந்தால் அப்படி செய்வோமா? நம்மை சரியாக மதிக்காதவர் வீட்டுப் பக்கம் கூட நாம் போக மாட்டோம் அல்லவா? காரணம், அவர் செய்த மரியாதை குறைவான செயல் நம் மனதில் நிற்கிறது. அது மனதில் நிற்காவிட்டால்? மீண்டும் அவர் வீட்டுக்குப் போவோம் அல்லவா?

நேற்று சாப்பிட்டதே மறந்து போய் விடுகிறது. போன பிறப்பும் அதற்கு முந்தைய பிறப்பும் நினைவு இருக்குமா?

மாட்டுக்கு நினைவு இல்லாதது, நமக்கு நினைவில் இருக்கிறது.

நமக்கு நினைவில் இல்லாதது, பெரியவர்களுக்கு, சான்றோர்களுக்கு நினைவில் நிற்கிறது.

எத்தனை முறை மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து இப்படி துன்பப் படுவது என்று  அவர்கள் தளர்ந்து போகிறார்கள்.

பட்டர் சொல்கிறார்,

"தயிர் கடையும் மத்தின் இடையில் அகப்பட்ட தயிர் போல என் ஆவி ஆனது சுழல்கிறது. பிறக்கிறது, பிறக்கிறது, இறக்கிறது...நான் தளர்ந்து போய் விட்டேன். தளர்வு அடையாமல் நான் ஒரு நல்ல கதி அடைய எனக்கு அருள் செய்வாய். பிரமனும், திருமாலும், சிவனும், துதிக்கும் சிவந்த திருவடிகளை கொண்டவளே " என்று

பாடல்


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.


பொருள்

ததி = தயிர்

உறு = அடைகின்ற

மத்தின் = மத்தின். மத்தில் அகப்பட்ட தயிரைப் போல

சுழலும் என் ஆவி = சுழலும் என் ஆவி

தளர்வு இலது ஓர் = தளர்வு இல்லாத ஒரு

கதியுறுவண்ணம் = கதியினை அடைய

கருது கண்டாய் = அருள் புரிவாய்

கமலாலயனும், = தாமரை மலரில் இருக்கும் பிரமனும்

மதியுறு = நிலவை உள்ள

வேணி = சடை முடியுள்ள

மகிழ்நனும் = உன்னோடு சேர்ந்து மகிழும் சிவனும்

மாலும் = திருமாலும்

வணங்கி = வணங்கி

என்றும் = எப்போதும்

துதியுறு = துதி செய்யும்

சேவடியாய் = சிவந்த அடிகளைக் கொண்டவளே

சிந்துரானன சுந்தரியே. = சிவந்த குங்குமம் அணிந்த அழகியே

மறு பிறப்பு உண்டா ? இது பற்றி வேறு யாராவது சொல்லி இருக்கிறார்களா?

மணிவாசகர் சொல்வார்

"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்" என்று திருவாசகத்தில்


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.


புல் , பூண்டு, புழு, மரம், பலவிதமான மிருகங்கள், பறவை, பாம்பு, கல், மனிதர், பேய், கணங்கள் , அசுரர், தேவர், முனிவர் என்று எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார்.

எப்படி எல்லாம் பிறந்திருக்கோம் என்பதல்ல முக்கியம், எப்படி எல்லாம் இனி பிறக்க  இருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் சற்று சங்கடமாகத்தான் இருக்கிறது.

நமக்கு ஞாபகம் இல்லை. மறந்து போய் விட்டது.

அவருக்கு ஞாபகம் இருக்கிறது.

மீண்டும் மீண்டும் பிறந்து எல்லோருக்கும் சலிப்புத்தான் வருகிறது.

என்னை மீண்டும் மீண்டும் பெற்று என் தாயர்கள் உடல் சலித்து விட்டார்கள், நான் நடந்து நடந்து கால் சலித்து விட்டேன், என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்துப் போய் விட்டான். இருப்பையூயூர் வாழ் சிவனே, இன்னம் ஒரு கருப்பையூர் வாராமல் காப்பாற்றுவாய் என்று கதறுகிறார் பட்டினத்தார்.

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை

கருப்பையூர் வாராமற் கா


அறிவு இருந்தால், மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியைக் கண்டு கொள்ளலாம் என்கிறார் வள்ளுவர்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி

மற்று ஈண்டு வாரா நெறி.  மறுபடியும் இங்கு வராத வழி.

பட்டர் அதையெல்லாம் நினைத்து அலட்டிக் கொள்ளுவது இல்லை.

அபிராமி, நான் மீண்டும் இங்கு வந்து பிறக்காமல் இருக்கும் வழியைப் பார் என்று அவள்  மேல் பாரத்தை போட்டு விடுகிறார்.

அம்மாவின் இடுப்பில் இருக்கும் குழந்தை, தாய் தன்னை கீழே போட்டு விட மாட்டாள் என்று  எவ்வளவு உறுதியாக இருக்குமோ அப்படி உறுதியாக இருக்கிறார்.

பாடலை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். சிந்துரானன சுந்தரியே என்று கொஞ்சுகிறார்.

இப்படி வந்து கேட்டால், எந்த தாய் தான் மறுப்பாள் ?

கேட்டுப் பாருங்கள்.

interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_15.html

Sunday, October 13, 2019

சகலகலாவல்லி மாலை - ஒரு காலமும் சிதையாமை நல்கும்

சகலகலாவல்லி மாலை - ஒரு காலமும் சிதையாமை நல்கும்


ஒரு காலத்தில் பெரும் செல்வந்தராய் இருந்த ஒருவர், பின்னொரு காலத்தில் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடலாம்.

அரசர்கள், ஆண்டியான கதைகள் ஏராளம்.

ஆனால், ஒரு காலத்தில் பெரிய அறிவாளியாக இருந்த ஒருவன் பின்னொரு காலத்தில் முட்டாளாக முடியாது.

"பாவம் ஒரு காலத்தில் Phd பட்டம் பெற்றவர்..இப்ப வெறும் sslc ஆகி விட்டார்" என்று இதுவரை நாம் யாரும் சொல்லக் கேட்டது இல்லை.

அறிவு, ஒருமுறை பெற்று விட்டால், அது நம்மை விட்டு போவது இல்லை. ஒரு காலத்திலும் அது சிதையாது.

செல்வம் சிதைந்து விடலாம். தொழில் தொடங்கினால், நட்டம் வந்து சேரலாம். அதனால் போட்ட முதலையும் இழந்து நடுத் தெருவில் நிற்க வேண்டி வரலாம். எவ்வளவோ பெரிய தொழில் அதிபர்கள், கடன் தொல்லை தாங்காமல் தற்கொலை கூட செய்து கொண்டுள்ளார்கள்.

பங்கு சந்தையில் முதலீடு செய்தால், பங்கு சந்தை சரிந்து போட்ட பணம் எல்லாம் போய் விடலாம்.

இன்றைய நிலையில் வங்கிகளில் போட்ட பணம் கூட பத்திரமாக இருக்குமா என்று தெரியவில்லை.

யாராவது தாங்கள் பெற்ற கல்வி காணாமல் போய் விடுமோ என்று அஞ்சி இருக்கிறார்களா?

குமா குருபரர் கூறுகிறார்

"சொல் திறமையும், பொறுமையுடன் கவனித்து பெறும் அறிவும் தந்து , கவி இயற்றும் நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய். இலக்குமியின் அருள் கூட (பொருள்) ஒரு காலத்தில் சிதைந்து போகலாம், ஆனால் நீ தரும் அறிவு என்ற செல்வம் ஒரு காலமும் சிதையாது, சகலகலாவல்லியே" என்று சரஸ்வதியை போற்றி பாடுகிறார்.


பாடல்

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சீர் பிரித்த பின்

சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல
நல் வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகலகலாவல்லியே

பொருள்

சொல் விற்பனமும் = சொற்களை கையாள்வதில் திறமையும்

அவதானமும் = கவனமும்

கவி சொல்ல வல்ல = கவிதை சொல்ல வல்ல

நல் வித்தையும் = நல்ல வித்தையும்

தந்து = தந்து

அடிமை கொள்வாய் = என்னை உன் அடிமையாக ஏற்றுக் கொள்வாய்

நளின = அழகிய

ஆசனம் சேர் = ஆசனத்தில் இருக்கும் (செந்தாமரையில் இருக்கும்)

செல்விக்கு = செல்வத்துக்கு அதிபதியான இலக்குமிக்கு

அரிது = அரியதானது

என்று = என்று

ஒரு காலமும் சிதையாமை நல்கும் = ஒரு காலத்திலும் சிதையாமை நல்கும்

கல்விப்= கல்வி என்ற

பெரும் = பெரிய

செல்வப் பேறே  = செல்வதை பெரும் பேற்றை தருபவளே

சகலகலாவல்லியே = சகலகலாவல்லியே

சிதையாத செல்வத்தை தருவது இலக்குமிக்கு கடினம். செல்வம் சிதைந்தே தீரும்.

கல்வி அப்படி அல்ல.

எனவே தான், நம் கலாச்சாரத்தில் கல்விக்கு முதலிடம் தந்தார்கள்.

பணக்காரனை விட ஒரு கல்வியாளனுக்கு இந்த சமுதாயம் அதிக முக்கியத்துவம்  தந்தது, தருகிறது.


வெண் தாமரையில் இருக்கும் அவளை நாடுங்கள். சிதையாத கல்விச் செல்வம்  பெற்றிடுங்கள்.

வாழ்த்துக்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_13.html

Saturday, October 12, 2019

திருக்குறள் - மருந்து

திருக்குறள் - மருந்து


மருந்து என்று ஒரு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். பத்து குறள். பிரமிக்க வைக்கும் ஆராய்ச்சி. ஒரு புத்தகமே எழுதலாம். அந்த அளவுக்கு மிக மிக ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார். குறள் அவ்வளவு ஆழம் என்றால், அதற்கு பரிமேலழகர் எழுதிய உரை அதை விடச் சிறப்பு.

அந்த அதிகாரத்தில் ஒரு குறள். மருந்து என்றால் என்ன என்பதற்கு வள்ளுவர் சொல்லும் விளக்கம்.

நம்மிடம் கேட்டால் என்ன சொல்வோம் ? மருந்து என்றால் மாத்திரை, ஊசி, என்று மருந்தின் வகைகளைப் பற்றிச் சொல்வோம்.

வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

பாடல்


உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.

பொருள்

உற்றவன் = நோய் உற்றவன்  (நோயாளி)

தீர்ப்பான் = நோய் தீர்ப்பவன் (மருத்துவர்)

மருந்து = மருந்து

உழைச் செல்வான் = உடன் செல்வான்

என்று = என்று

அப்பால் = அவைகளே

நாற் கூற்றே  = நாலுமே

மருந்து. = மருந்து எனப்படுவது

இதற்கு பரிமேலழகர் எழுதிய உரையை சற்று விரித்துப் பார்ப்போம்.


நோயாளி, மருத்துவன், மருந்து, உடன் செல்வான் என்ற நான்கு கூறுகளை கொண்டது  மருந்து.

இதில் முதல் மூன்று நமக்குத் தெரிகிறது.

அது என்ன உடன் செல்வான்?

நோயாளியை கவனித்துக் கொள்பவன். அதாவது செவிலியர் (nurse ), உடன் இருப்பவர் (attendant ), சுத்தம் செய்பவர் (ward boy ), போன்றோர். இவர்கள் இல்லாமல்  மருந்து இ ல்லை. மருத்துவர் மருந்தை எழுதி தந்து விட்டுப் போவார். அதை வேளா வேலைக்கு கொடுக்க ஒரு nurse அல்லது உடன் இருப்பவர் முக்கியம் என்கிறார் வள்ளுவர்.

இதில் "அப்பால்" என்பதற்கு இந்த நான்கிற்கும் ஒவ்வொரு தன்மை, சிறப்பு இருக்கிறது.

நோயாளி என்பவன் யார்? அவனுடைய தகுதிகள் என்ன?

முதலில் பொருளடைமை - நோயாளிக்கு முதலில் பொருள் இருக்க வேண்டும். இல்லை என்றால் நோயை குணப்படுத்திக் கொள்ள முடியாது. சொந்த காசு இருக்க வேண்டும், அல்லது காப்பீட்டு தொகை (insurance ) இருக்க வேண்டும்.

இரண்டாவது, மருத்துவர் சொன்ன படி கேட்டு அதன் படி செய்வது. இன்னின்ன மாத்திரையை இன்னின்னன் நேரத்தில் சாப்பிட வேண்டும், இந்த விதமான டெஸ்ட் எடுக்க வேண்டும் என்றால், அதன் படி ஒழுங்காக செய்ய வேண்டும்.

மூன்றாவது, மருத்துவத்தின் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதல். மருத்துவம் எல்லா காலத்தும் சுகமாக இருக்காது. ஊசி குத்துவது, அறுவை சிகிச்சை செய்வது, கட்டு போட்டு இருப்பது போன்ற வலிகளை பொறுத்துக் கொள்ள வேண்டும்.

நான்காவது, நோயின் நிலையை உணர்ந்து கொள்ளும் அறிவு இருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், தன் உடம்பு, தன் வலி, என்று தன்னுடைய நோயின் தன்மையை நோயாளி அறிந்து கொள்ளும் அறிவு வேண்டும்.

சரி, இது நோயாளியின் நான்கு அம்சங்கள்.

"நோய் தீர்ப்பான்" என்று சொன்னாரே, அந்த மருத்துவரின் குணம் பற்றி ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்றால், ஆம். அதற்கு நாலு சொல்லி இருக்கிறார்.


முதலாவது, நோய் கண்டு அச்சப் படாமல் இருத்தல். ஒரு மருத்துவன், நோயை கண்டு அஞ்சக் கூடாது. அது எவ்வளவு பெரிய கொடூரமான நோயாக இருந்தாலும், அதை எதிர்த்து போராடும் துணிவு இருக்க வேண்டும்.

இரண்டாவது, தன்னுடைய ஆசிரியர்களை வழிபட்டு (குருவருள்) அடைந்த கல்வியையும், அதனால் பெற்ற அறிவையும் பயன் படுத்தும் ஆற்றல்.

மூன்றாவது, அனுபவம். மருத்துவனுக்கு அனுபவ அறிவு முக்கியம். எவ்வளவுதான் படித்து இருந்தாலும், அனுபவ அறிவும் ரொம்ப முக்கியம்.

நான்காவது, மன , மொழி, மெய் சுத்தமாக இருக்க வேண்டும். அதாவது, நோயாளியின் இயலாமையை பயன் படுத்தி தவறான வழியில் பொருள் சேர்க்கக் கூடாது. இன்று வேண்டாத டெஸ்ட் கள் செய்ய வைக்கிறார்கள், வேண்டாத அறுவை சிகிச்சை செய்ய வைக்கிறார்கள். பணம் வேண்டும் என்று.  தெரியாத நோயாளி என்றால் உடல் உறுப்புகளை கூட திருடி விற்று விடுகிறார்கள்.

மருந்து பற்றி நான்கு சிறப்பு அம்சங்களை கூறுகிறார்:

முதலாவது, பல பிணிகளுக்கு ஏற்றவாறு இருத்தல். ஒரே மாத்திரை , சளி , காய்ச்சல், தலை வலி , மூக்கடைப்பு என்று எல்லாம் போய் விட வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு மாத்திரை சாப்பிட முடியாது. கூடாது.

இரண்டாவது, சக்தி வாய்ந்த மருந்தாக இருக்க வேண்டும். சீக்கிரம் நோயயை குணப்படுத்த வேண்டும்.

மூன்றாவது, எளிதாக கிடைக்க வேண்டும். ஏதோ புலிப்பாலில் கரைத்து கொடுக்க வேண்டும் என்பது மாதிரி, கடினமான மருந்தாக இருக்கக் கூடாது.

நான்காவது, ஒரு உறுப்பில் வந்த துன்பம் தீர்க்க மருந்து கொண்டால், அது இன்னொரு உறுப்பை பாதிக்கக் கூடாது.


அடுத்தது, நோயாளியுடன் இருப்பவர் பற்றி கூறுகிறார்.

முதலாவது, அவனுக்கு நோயாளியிடம் அன்பு இருக்க வேண்டும். மால ஜலம் சுத்தம் செய்ய வேண்டும், எச்சி வடியும், வாய் நாறும், இவற்றை எல்லா பொறுத்துக் கொள்ள மனதில் அன்பு வேண்டும்.

இரண்டாவது, மன , மொழி , மெய் தூய்மையாக இருத்தல். நோயாளி இறந்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்று சிந்தித்துக் கொண்டே இருக்கக் கூடாது.

மூன்றாவது, மருத்துவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செயல் படுத்தும் மன வலிமையையும், திறமையும். "இராத்திரி மருந்து கொடுக்கச் சொன்னார், தூங்கிட்டேன்" என்று சொல்லக் கூடாது.

நான்காவது, அறிவுடைமை. அதாவது, சூழ் நிலைக்கு தக்கவாறு நடந்து கொள்ளுதல்.


யோசித்துப் பாருங்கள். ஒரு குறளுக்குள் எவ்வளவு விஷயம் என்று. நினைத்துப் பார்க்க முடியுமா?

இன்றைக்கும் சரியாக இருக்கிறது அல்லவா?

நாம் நோயாளியாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்.


நாம், நோயாளிக்கு துணையாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

நாம், மருத்துவராக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

என்று தெளிவாகக் கூறுகிறார்.

இது ஒரு குறள். இப்படி இன்னும் 9 குறள்கள் இருக்கின்றன.

எப்படியாவது தேடி பிடித்து படித்து விடுங்கள்.

நோயற்ற வாழ்வு வாழலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_12.html

Friday, October 11, 2019

திருக்குறள் - செயற்கரிய செய்வார்

திருக்குறள் - செயற்கரிய செய்வார் 


ஆங்கிலத்தில் எவ்வளவோ சுய முன்னேற்றத்திற்கான (self help) புத்தகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் காசு போட்டு வாங்கி படித்துவிட்டு, அடடா, எப்படி எழுதி இருக்கிறார்கள். தமிழில் அப்படி ஏதாவது இருக்கிறதா. எப்பப் பாரு, அறம் , கடவுள், அரச துதி, காதல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று சிலருக்குத் தோன்றலாம்.

அது சரி அல்ல. திருக்குறள் ஒன்றில் இருந்து ஓராயிரம் சுய முன்னேற்ற புத்தகங்கள் எழுதலாம்.

நம் பெருமை நமக்குத் தெரியாமல், நேற்று அடித்த மழையில் இன்று முளைத்த காளான்களை பெரிது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மிடம் இருக்கிறது ஆயிரம் ஆயிரம் ஆல மரங்கள்.

நம்மை உறுதியாக வாழ்வில் மிக உயரமான இடங்களுக்கு எடுத்துச் செல்ல திருக்குறள் ஒன்று போதும்.

முழு திருக்குறள் கூடத் தேவை இல்லை. ஒரு குறள் போதும். அதைப் பிடித்துக் கொண்டு வாழ்வில் கடை பிடித்தால், எதையும் சாதிக்க முடியும்.

ஏதோ தமிழ் என் தாய் மொழி என்பதால் கூறவில்லை.

படித்துப் பார்த்து விட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அப்படி நம்மை முன்னேற்றக் கூடிய குறள்களில் , ஒன்று...


பாடல்


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர
செயற்கரிய செய்கலா தார்.



பொருள்

செயற்கரிய = செய்வதற்கு அரிய செயல்களை

செய்வார் = செய்வார்கள்

பெரியர் = பெரியவர்கள்

சிறியர் = சிறியவர்கள்

செயற்கரிய = செய்வதற்கு அரிய செயல்களை

செய்கலா தார். = செய்ய மாட்டார்கள்


செய்வதற்கு   கடினமான செயல்களை பெரியவர்கள் செய்வார்கள். அந்த மாதிரி காரியங்களை சிறியவர்கள் செய்ய மாட்டார்கள்.

இந்த குறளுக்கு இவ்வளவு build up தேவையா என்று நீங்கள் நினைக்கலாம். இதெல்லாம் நாங்க பள்ளிக் கூடத்திலேயே படித்தது தான். இதில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

இதற்கு பரிமேலழகர் எழுதிய உரையை விரித்துச் சொன்னால், அதுவே ஒரு புத்தமாக போடலாம்.

அவர், யோகம், ஞானம், வீடு பேறு என்று போகிறார். அதை விட்டு விடுவோம். (அதை பின்னொரு நாளில் சிந்திப்போம்).

நடை முறையில், எது சாத்தியம் என்று பார்ப்போம். எப்படி இந்த குறள் நம்மை உயர்த்தும், நாம் விரும்பியதை விட அதிகம் அடைய உதவி செய்யும் என்று பார்க்கலாம்.

பொதுவாகவே, பெரிய விஷயங்களை சொன்னால், நம்மவர்கள் "நல்லாத்தான் இருக்கு , ஆனால், நம்மால் முடியாது" என்று மூட்டை கட்டி வைத்து விடுவார்கள்.

சின்னதாகவும் இருக்க வேண்டும், பெரிய பலன்களையும் தர வேண்டும். அதுதானே நமக்கு வேண்டியது.

எப்படி இந்த குறள் அதற்கு வழி செய்கிறது என்று பார்ப்போம்.

ஒரு சில உதாரணங்களை பார்த்தால் புரியும்.

ஒரு நாளில் நமக்கு செய்ய வேண்டிய செயல்கள் பல இருக்கும். அதில் சில கடினமான செயல்களாக இருக்கும். சில எளிமையாக இருக்கும்.

ஒரு மாணவனை எடுத்துக் கொள்வோம்.

ஒரு நாளைக்கு 50 பக்கம் படிக்க வேண்டும், வீடியோ கேம்ஸ் விளையாட வேண்டும், நண்பர்களோடு அரட்டை அடிக்க வேண்டும், whatsapp இல் chat செய்ய வேண்டும்,  facebook பூராவும் பார்த்து தீர வேண்டும், என்று இப்படி பல காரியங்கள்  செய்ய வேண்டி இருக்கும்.

இதில் முதலில் சொன்னது 50 பக்கம் படிக்க வேண்டும். அது கடினமான செய்ய. மற்றவை எல்லாம் எளிய செயல்கள்.

அந்த 50 பக்கத்தை படித்து முடிப்பவன், பின்னாளில் பெரிய ஆளாவான். "பெரியர் " என்று சொல்கிறோமே அப்படி ஆவான். இப்படி வீடியோ கேம்ஸ், வாட்ஸாப்ப் என்று   பொழுதை செலவழிப்பவன் என்ன ஆவான் என்று உங்களுக்குத் தெரியும்.

ஒரு நாள் 50 பக்கம் படித்து விட்டால் போதுமா ?

போதாது. அடுத்த நாள் வரும். அன்று செய்ய வேண்டிய காரியங்களை பட்டியல் போட வேண்டும். அதில் உள்ள கடினமான காரியத்தை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் செய்து கொண்டே போனால்?

சரி, ஒரு குடும்பத் தலைவியை எடுத்துக் கொள்வோம்.

அவள் செய்ய வேண்டிய வேலைகள் என்று பட்டியல் போடலாம், சமைக்க வேண்டும்,  துணி துவைக்க வேண்டும், வீட்டை பராமரிக்க வேண்டும், காலையில்  உடற் பயிற்சி செய்ய வேண்டும், பணத்தை சரியான முறையில் முதலீடு செய்ய வேண்டும்,  தனக்கும் கணவனுக்கும் உடல் நிலை பற்றி ஆண்டு சோதனை செய்ய   வேண்டும்...என்று இப்படி பல இருக்கும்.

இதில் எளிதான காரியம் என்பது, சமைப்பது, காய் நறுக்குவது, துணிகளை மடித்து வைப்பது,  டிவியில் சீரியல் பார்ப்பது போன்றவை.

கடினமான செயல்கள், உடற் பயிற்சி செய்வது, மருத்துவ பரிசோதனைக்கு செல்வது, பணத்தை சரியான படி முதலீடு செய்வது போன்றவை.

இதில் பெரும்பாலான இல்லத்து அரசிகள் செய்வது என்ன என்று நாம் சிந்தித்துக் கொள்ளலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும், நாம் செய்யும் செயல்  அரிய செயலா அல்லது எளிய செயலா என்று சிந்திக்க வேண்டும்.

பெரிய காரியங்களை செய்து பழக வேண்டும். உயர்ந்த காரியங்களை செய்து பழக வேண்டும்.

இன்றைக்கு என்ன முக்கியமான காரியம் செய்யலாம் என்று யோசிக்க வேண்டும்.

நாளைக்கு என்ன முக்கியமான காரியம் செய்யலாம் என்று சிந்தித்து செய்ய பட்டால்,  வாழ்வில் முக்கியமான, சிறப்பான, உயர்ந்த, செயல்களை மட்டுமே செய்து கொண்டு   இருப்போம். அப்படி ஒவ்வொரு நாளும் செய்து கொண்டிருந்தால் , முன்னேற்றம் வருமா இல்லையா ?

இன்றே ஒரு பட்டியல் போடுங்கள்...உங்களுக்கு முக்கியமான காரியங்கள், சிறந்தவை,  உயர்வானவை என்று ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள்....

- 20 கிலோ எடையை குறைப்பது
- முனைவர் (doctorate , phD ) பட்டம் பெற முயற்சி செய்வது
- இப்போது இருக்கும் வேலையை விட இரண்டு மடங்கு சம்பளம் தரும் வேலையை தேடுவது
- இந்த வருடம் தேர்வில் தங்கப் பதக்கம் வாங்குவது
-  25 புத்தகங்கள் வாசிப்பது
- ஒரு புது மொழியை கற்றுக் கொள்ளுவது
- இசை கற்றுக் கொள்ளுவது
- ஒரு புது நாட்டுக்குப் போய் வருவது
- புது வித சமையல் கற்றுக் கொள்ளுவது

இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் . பட்டியல் போடுங்கள்.

அவற்றை செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள்.

இது செய்து அலுத்து, சோர்வு வரும் நேரத்தில் மற்றவற்றை செய்யுங்கள்.

நேற்று நீங்கள் செய்த காரியங்கள் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அதில் எத்தனை காரியங்கள்   சிறப்பானவை, உயர்ந்தவை, கடினமானவை, 'அரிய செயல்கள்" என்று.

போன வாரம், போன மாதம், போன வருடம் ?

பெரும்பாலான நேரத்தை எளிய செயல்களை செய்வதிலேயே செலவிட்டு விடுகிறோம்.

எளிய செயல்களை செய்தால், பலன் மட்டும் பெரிதாக இருக்குமா ?

கையளவு நிலத்தில் விதைத்து விட்டு, கடலளவு அறுவடை செய்ய வேண்டும் நினைத்தால் எப்படி முடியும் ?

பெரும் பலன்கள் வேண்டும் என்றால், பெரும் முயற்சி தேவை அல்லவா?

அவ்வளவு முயற்சியையும் ஒரே நாளில் செய்ய முடியாது.

ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சம் செய்து கொண்டே வந்தால், நாளடைவில் அது பெரும் பலனைத் தரும்.

இப்போது சொல்லுங்கள். இது எந்த அளவுக்கு வாழ்க்கைக்கு துணை செய்யும் குறள் என்று.

எங்கே, ஒரு பேப்பரும் பேனாவையும் எடுங்கள் பார்ப்போம்....எழுதுங்கள்  பெரிய காரியங்கள், முக்கியமான காரியங்களை .  அந்த பட்டியல் செய்வது இன்றைய பெரிய காரியமாக இருக்கட்டும்.

உடனே தொடங்கி விடுங்கள்.

வானம் எட்டும் தூரம்தான்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_11.html

Wednesday, October 9, 2019

கந்தர் அலங்காரம் - நீரில் பொறி என்று அறியாத நெஞ்சே

கந்தர் அலங்காரம் - நீரில் பொறி என்று அறியாத நெஞ்சே 


எவ்வளவு செல்வம் இருந்தால் போதும் நமக்கு? அதற்கு ஒரு அளவு இல்லை. எத்தனை ஆயிரம் கோடி சேர்த்தாலும் போதாது போல் இருக்கிறது.

எதற்கு இவ்வளவு செல்வம்?

நிறைய செல்வம் இருந்தால் மரணத்தை வென்று விட முடியுமா? நோயில் இருந்து தப்ப முடியுமா ? முதுமை வராது போய் விடுமா?

அப்படித்தான் நினைத்தார்கள் பல அரசர்கள். பல அரக்கர்கள். உலகம் அனைத்தையும் தங்கள் அதிகாரத்தில் கொண்டு வந்து விட்டால், பகை என்பதே இல்லாமல் ஒழித்து விட்டால், பெரிய பெரிய தவம் செய்து, வலிமையான வரங்களைப் பெற்று, சக்தி வாய்ந்த ஆயுதங்களைப் பெற்று விட்டால், பின் நம்மை யாரும் அசைக்க முடியாது என்று நினைத்தார்கள்.

என்ன ஆயிற்று?

ஒருவரும் தப்ப முடியவில்லை.

அதை எல்லாம் பார்த்த பின்னும், இன்னும் மனிதர்கள் பொருளை தேடி குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஏதோ பொருள் இருந்தால் எல்லாம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தில்.....

பாடல்


சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ்
சாரிற் கதியன்றி வேறிலை காண் தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.

சீர் பிரித்த பின் 

சூரில் கிரியில் கதிர் வேல் எறிந்தவன் தொண்டர் குழாம் 
சாரில் கதியின்றி வேறு இல்லை காண் தண்டு தாவடி போய் 
தேரில் கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம் 
நீரில் பொறி என்று அறியாத பாவி நெடு நெஞ்சமே 


பொருள் 


சூரில் = சூர பத்மன் என்ற அரக்கன் 

கிரியில் = கிரௌஞ்ச மலை 

கதிர் வேல் = ஒளி வீசும் வேலை 

எறிந்தவன் = எறிந்தவன் 

தொண்டர் குழாம் = அவனுடைய அடியார்கள் கூட்டத்தை 
சாரில் = சார்ந்து இருப்பதைத் தவிர 

கதியின்றி = வழி இன்றி 

வேறு இல்லை = வேறு வழி இல்லை 

காண் = கண்டு கொள்  (மனமே) 

தண்டு = தண்டாயுதம் 

தாவடி = தாவுகின்ற அடி (காலாட் படை) 

போய் = அவற்றோடு போய் 

தேரில் = தேர் படை 

கரியில் =  யானைப் படை 

பரியில் = குதிரைப் படை 

திரிபவர் = இவற்றில் எல்லாம் திரிபவர் 

செல்வம் எல்லாம்  = செல்வம் எல்லாம் 

நீரில் = நீர் மேல் எழுதிய 

பொறி என்று = எழுத்து என்று 

அறியாத பாவி நெடு நெஞ்சமே  = அறியாத பாவி நெடு நெஞ்சமே 

எவ்வளவு பெரிய படை, ஆள், அம்பு, சேனை, எல்லாம் வைத்துக் கொண்டு திரிந்தவர்களின் செல்வம் எல்லாம் ஒரு நொடியில் காணாமல் போய் விட்டது. 

அப்படி என்றால் நம் செல்வம் எந்த மூலைக்கு ?

இதை சேர்க்கவா வாழ் நாள் எல்லாம் செலவழித்தோம் என்று எண்ண வேண்டும்.

செல்வம் என்ற சொல்லை தமிழர்கள் தெரிந்து எடுத்து இருக்கிறார்கள். 

செல்வோம் என்றதால் அது செல்வம் என்று ஆயிற்று. ஒரு இடத்தில் நிலைத்து நிற்காது. சென்று கொண்டே இருக்கும். எனவே, அது செல்வம். 

ஒரு பக்கம், அளவுக்கு அதிகமான செல்வம், படை, பதவி, அதிகாரம். 

இன்னொரு பக்கம் ஒன்றும் இல்லாத பக்தர்கள் கூட்டம். 

பக்தர்கள் கூட்டத்தை அடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார். 

நினைத்துப் பார்க்க முடியுமா நம்மால்?  

பெரிய ஆட்கள் நட்பு இருந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாம், சில காரியங்களை எளிதாக சாதித்துக் கொள்ளலாம். அப்படித்தானே நாம் நினைப்போம். அருணகிரிநாதர் சொல்கிறார், அடியார்களை சென்று சேருங்கள் என்று. 

அதற்கு ஆழமான காரணம் இருக்கிறது. 

அதை நான் சொல்வதை விட நீங்கள் சிந்தித்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

சிந்தித்துப் பாருங்கள். விடை கிடைக்கும். 

தேடுதல் தானே வாழ்க்கை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_58.html


Tuesday, October 8, 2019

அபிராமி அந்தாதி - சிந்தையுள்ளே மன்னியது

அபிராமி அந்தாதி - சிந்தையுள்ளே மன்னியது 


பக்தி இலக்கியமாக இருக்கட்டும், அற நூல் இலக்கியமாக இருக்கட்டும், அடியவர்கள் பற்றி மிக மிக உயர்வாக பேசுகின்றன.

அப்படி என்ன அடியவர்களிடம் சிறப்பு இருக்கும்? அவர் ஒரு அடியவர் என்றால், நாம் இன்னொரு அடியவராக இருந்து விட்டுப் போகிறோம். அவர் என்ன பெரிய சிறப்பு?

ஒரு பெரிய மைதானத்தில் ஒரு ஓரம் நின்று ஒரு பந்தை உதைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மிக வேகமாக உதைக்கிறோம். நாம் உதைக்கும் கோணம் சற்றே மாறினால், அந்த பந்து சேர வேண்டிய இடத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகிச் சென்று விடும் தெரியுமா? தூரம் செல்ல செல்ல அது செல்ல வேண்டிய இடத்தை விட்டு விலகிச் சென்று கொண்டே இருக்கும்.

பூமியில் இருந்து இராக்கெட்டை ஏவுகிறோம். அது ஒரு டிகிரி கொஞ்சம் சாய்ந்தாலும், பல இலட்சம் கிலோ மீட்டர் செல்லும் போது, அந்த ஒரு டிகிரி மாற்றம் விரிந்து விரிந்து இராக்கெட் எங்கோ சென்று விடும் அல்லவா? அவ்வளவு பணம், நேரம், உழைப்பும் வீணாகிப் போய் விடும் அல்லவா?

அது போல, நல்லவர்கள், சான்றோர்கர்கள், அடியவர்கள் அல்லாதாவரிடம் நாம் தொடர்பு கொண்டால், சிறிது காலம் கூட போதும், அவர்களின் தாக்கத்தால், நாம் செல்ல வேண்டிய இடத்தை விட்டு எங்கோ போய் விடுவோம். எங்கே எப்போது தடம் மாறினோம் என்று தெரியாது. ஒரு சின்ன மாற்றம் தான்.  நமக்கு தெரியக் கூட தெரியாது. ஆனால், பல வருடங்கள் கழித்து, அடடா, இவ்வளவு நாள் வீணாகி விட்டதே...இனி இருக்கும் நாட்கள் கொஞ்சம் தானே....என்ன செய்வது என்று தவிப்போம்.

எனவே தான், எப்போதும் நல்லவர்கள், சான்றோர்கள், அடியவர்கள் கூட்டத்தோடு இருக்க வேண்டும்   என்பது.

பட்டர் சொல்கிறார்,

"உன்னுடைய திருவடிகள் எப்போதும் என் தலை மேல் இருக்கின்றன. நான் எப்போதும் சொல்லுவது உன் நாமமே. உன் அடியார்களுடன் கூடி  எப்போதும் உன்னைப் பற்றிய  வேதாகமங்களையே வாசிக்கிறேன்" என்கிறார்.

பாடல்

சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே!
முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே


பொருள்

சென்னியது = சென்னி என்றால் தலை. தலையில்

உன் = உன்னுடைய

பொன் = பொன் போன்ற

திருவடித் = திருவடி

தாமரை  = தாமரை மலர்கள்

சிந்தையுள்ளே = என்னுடைய சிந்தையில்

மன்னியது = மன்னுதல் என்றால் நிலைத்து இருத்தல்.

உன் திருமந்திரம் = உன்னுடைய திரு மந்திரம்

 சிந்துர வண்ணப் பெண்ணே! = சிவந்த அழகிய பெண்ணே

முன்னிய = முன் வரும்

நின் அடியாருடன் = உன்னுடைய அடியவர்களுடன்

கூடி = கூடி

முறை முறையே = முறைப்படி

பன்னியது = திரும்ப திரும்ப சொல்லுவது

உந்தன் = உன்னுடைய

பரமாகமப் பத்ததியே!* = உயர்ந்த ஆகம நூல்களையே

ஏன் அடியவர்களுடன் சேர்ந்து படிக்க வேண்டும் ? நாம் தனியே படித்துக் கொள்ளலாமே ? என்றால் கூடாது.

நம் மரபில், உயர்ந்த நூல்களை ஒரு ஆசிரியர் மூலம்தான் கற்க வேண்டும்.

நாமே படித்து கற்றுக் கொள்ளலாம் என்றால், நாம் கற்றது சரியா தவறா என்று கூட  நமக்குத் தெரியாது.

மேலும், நாமே படிப்பது என்றால், ஒவ்வொரு சொல்லாக படித்து, அதன் பொருள் என்ன  என்று விளங்கத் தலைப்படுவோம்.

முன்பே படித்த அறிஞர்கள் இருந்தால், அவர்களுக்கு பொருள் தெரியும். பொருளில் இருந்து நமக்கு  சொல்லை சொல்லித் தருவார்கள்.

பட்டர் சொல்கிறார், அபிராமியின் அடியவர்களோடு சேர்ந்து படிப்பாராம். அவருக்கு அப்படி என்றால், நமக்கு ?

கம்ப இராமாயணத்துக்கு வை மு கோவின் உரையை படிக்கும் போதுதான் தெரியும், அடடா, என்ன ஒரு உரை என்று. நாமே படித்து தெரிந்து கொள்ளலாம் என்றால்  ஒரு காலும் அந்த நுண்ணிய பொருள் நமக்கு புலப்படாது.

திருக்குறளுக்கு, பரிமேலழகர் உரை போல. நம்மால் அந்த உயரத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

சேர்ந்து படியுங்கள். படித்ததை பகிருங்கள். அனுபவம் ஆழமாகும். பொருள் விரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_8.html

Monday, October 7, 2019

அபிராமி அந்தாதி - அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை

அபிராமி அந்தாதி - அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை


ஒரு குழந்தை இந்த உலகத்தில் வந்தபின் பெறும் முதல் சுகம், தாயின் மார்பில் இருந்து பாலை சுவைப்பதுதான். அது பசியை தணிப்பது மட்டும் அல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை தருவது மட்டும் அல்ல, அன்பை, காதலை , பாசத்தையும் தருகிறது. தாயின் பாலை ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொடுத்தால் பிள்ளை அவ்வளவு நன்றாக வளராது. பால் தரும் போது அந்தத் தாயின் அரவணைப்பு வேண்டும். அவள் உடல் சூடு வேண்டும்.

ஆண்கள் கொஞ்சம் வேகம் கொண்டவர்கள். உணர்ச்சி வேகம், உடல் தரும் வேகம் இவற்றால் எதையாவது செய்து விடுவார்கள். பின்னால், அப்படி செய்து இருக்கக் கூடாதோ, அப்படி சொல்லி இருக்கக் கூடாதோ  என்று யோசிப்பார்கள். என்ன செய்வது. செய்தாகி விட்டது. சொல்லியாகி விட்டது. அதன் வேண்டாத விளைவுகளை சரிப்படுத்த வேண்டும். அங்குதான் பெண் வருகிறாள். தன்னுடைய சாமர்த்தியத்தால் ஆணுக்கு வரும் துன்பங்களை நீக்குகிறாள்.

ஆணின் வேகமும் வேண்டும். பெண்ணின் நிதானமும் வேண்டும்.

பாடல்


பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.


பொருள்

பொருந்திய = பொருத்தமான

முப்புரை = மூன்று சொல்லப்படக் கூடிய உரை. படைத்தல், காத்தல், மறைத்தல் என்ற செயல்கள்

செப்பு  = செப்பு கலசம் போல

உரை  செய்யும்  = சொல்லக் கூடிய

புணர் முலையாள் = ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கும் தனங்களை உடையவள்

வருந்திய = அதனால், அந்த பாரத்தால் வருந்தும்

வஞ்சி = வஞ்சிக் கொடி போன்ற

மருங்குல் = இடை, இடுப்பு

மனோன்மணி = மனோன்மணியைப் போன்ற சிறந்தவள்

வார் சடையோன் = சடை முடி நிறைந்த சிவன்

அருந்திய = குடித்த

நஞ்சு = ஆலகால விஷத்தை

அமுது ஆக்கிய = அமுது ஆக்கிய

அம்பிகை = அம்பிகை, அபிராமி

அம்புயமேல் = தாமரை மலரின் மேல்

திருந்திய சுந்தரி = அமர்ந்து இருக்கும் சுந்தரி

அந்தரி = அந்தரத்தில் இருப்பவள்

பாதம் = பாதம்

என் சென்னியதே. = எங்கு இருக்கிறது என்றால் என் தலை மேல்

நஞ்சை அமுதம் ஆக்கியவள்.

நமக்கு வரும் பெரிய பெரிய துன்பங்களை நீக்குவது மட்டும் அல்ல, அவற்றையே இன்பமாக  மாற்றித் தருபவள்.

நாம் செய்த வினை காரணமாக துன்பம் வந்து சேரும். அதில் இருந்து தப்ப முடியாது.  ஆனால், அபிராமி அந்த துன்பங்களை இன்பங்களாக மாற்றி விடுவாள்.

ஆலகால விஷத்தை அமுதமாக மாற்றியவளுக்கு நம் துன்பங்கள் எம்மாத்திரம்.

என்னடா இது ஒரு பக்தனாக இருந்து கொண்டு, கடவுளின் மார்பகங்களை இப்படி கொஞ்சம் கூட  கூச்சம் இல்லமால் பேசுகிறாரே என்று சிலர் நினைக்கலாம்.

ஒரு தாயின் மார்பகத்தை ஒரு குழந்தை பார்க்கும் பார்வை வேறு, கணவனோ மற்றவர்களோ  பார்க்கும் பார்வை வேறு.

பட்டர் குழந்தையாகி விடுகிறார். கொஞ்சம் கூட  விகல்பம் இல்லை. கூச்சம் இல்லை.

அபிராமி அந்தாதி புரிய வேண்டும் என்றால், பட்டரின் மனநிலைக்கு போய் விட வேண்டும். ஒரு குழந்தையின் மன நிலையில் இருந்தால்தான் அது புரியும்.

சொல்லுக்கு பொருள் தேடும் கவிதை விளையாட்டு அல்ல இது.

சொல்லைக் கடந்து, காதலில் கரையும் இரசவாதம் இது.

அந்த சித்தி உங்களுக்கும் வாய்க்கட்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_9.html

பெரிய புராணம் - நீளு மாநிதி

பெரிய புராணம் - நீளு மாநிதி 


வீட்டுக்கு வர்றவங்களுக்கு எல்லாம் நாலு வித உணவை, ஆறுவித சுவையில் தினமும் விருந்து கொடுத்தால், கட்டுப்படியாகுமா? எவ்வளவு செலவு ஆகும்? ஏதோ நாள் கிழமை னா பரவாயில்லை. எப்போதும் செய்வது என்பது நடைமுறை சாத்தியமா என்ற கேள்வி எழும் அல்லவா?

சேக்கிழார் சொல்கிறார்...

"சிவ பெருமானின் அன்பர்கள் உள்ளம் மகிழ நாளும் நாளும் விருந்து அளித்ததால், அவருடைய செல்வம் மேலும் மேலும் பெருகி குபேரனின் தோழன் என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்தார் "

என்கிறார்.

பாடல்


ஆளு நாயகர் அன்பர் ஆனவர் அளவி லார்உளம் மகிழவே
நாளு நாளும்நி றைந்து வந்துநுகர்ந்த தன்மையின் நன்மையால்
நீளு மாநிதி யின்ப ரப்புநெருங்கு செல்வநி லாவியெண்
தோளி னார்அள கைக்கி ருத்திய தோழ னாரென வாழுநாள்.

பொருள்

ஆளு நாயகர் = அடியவர்களை ஆளும் நாயகர் (சிவன்)

அன்பர் ஆனவர் = அவரிடத்தில் அன்பு கொண்டவர்கள்

அளவி லார் = எண்ணிக்கையில் அடங்காத

உளம் மகிழவே = உள்ளம் மகிழவே

நாளு நாளும் = ஒவ்வொரு நாளும்

நி றைந்து வந்து = நிறைந்து வந்து

நுகர்ந்த = விருந்தை உண்ட

தன்மையின் = தன்மையின்

நன்மையால் = அதனால் விளைந்த நன்மையால்

நீளு மாநிதி யின் = நீண்டு கொண்டே, அல்லது பெருகிக் கொண்டே சென்ற பெரிய நிதியின்

பரப்பு = அளவு

நெருங்கு செல்வ = குவிந்த செல்வத்தின்

நிலாவி = பொருந்தி

யெண்தோளி னார் = எட்டு தோள்களை உடைய  (சிவன்)

அளகைக்கி ருத்திய =  அழகாபுரி என்ற இடத்தில் இருக்கப் பண்ணிய (குபேரன்)

 தோழனாரென = தோழனார் என

வாழுநாள். = வாழும் நாளில்

அடியவர்களுக்கு அமுது படைத்ததால், இளையான் குடி நாயனாரின் செல்வம் குபேரனுக்கு இணையாக  வளர்ந்ததாம்.

இதெல்லாம் நம்புகிற படியா இருக்கு?

செலவு செய்தால், செல்வம் வளருமா ?

நான் சொல்வது தவறாக இருக்கலாம்.

தெய்வப் புலவர் சேக்கிழார் பொய் சொல்லுவாரா ? தவறான ஒன்றை செய்யச் சொல்லுவாரா ?

அவர் மட்டும் அல்ல, வள்ளுவரும் சொல்லுகிறார்.

"நீ மற்றவர்களுக்கு உதவி செய். உன் வீட்டுக்கு செல்வம் தானே வரும் " என்று.

வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சின் மிசைவான் புலம்

விருந்தினர் உண்ட பின் மிச்சம் இருப்பதை உண்பவன் நிலத்தில் விதை விதைக்காமலே  பயிர் விளையும் என்கிறார்.  அதவாது, அவன் வேறு ஒன்றும் செய்யாவிட்டாலும், செல்வம் அவனைத் தேடி வரும் என்கிறார்.

விவேகானந்தர் , தன்னுடைய குருவான இராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் ஒரு மடம்  நிறுவி, ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

அப்படி அவர் அந்த மடத்தை நிறுவியபோது அவரிடம் கையில் காலணா காசில்லை.

இன்று அந்த நிறுவனம் உலகெங்கும் கிளை பரப்பி தொண்டாற்றி வருகிறது.  செல்வம்  தானே வருகிறது.

என்னுடைய சிற்றறிவிற்கும், தர்க ரீதியான சிந்தனைகளுக்கும் அப்பால் சில விஷயங்கள் நடக்கின்றன என்பதை நான் அனுபவ பூர்வமாக  உணர்ந்து இருக்கிறேன்.  அது எப்படி நிகழ்கிறது என்று தெரியாது.  ஆனால் நிகழ்கிறது.

அப்படிப்பட்ட  விஷயங்களில் இதுவும் ஒன்று.

பலன் எதிர் பாராமல் உதவி செய்து பாருங்கள், ஒன்றுக்கு பத்தாக அது உங்களுக்கு திரும்பி வரும்.

வந்தே தீரும் என்பதில் எள்ளவும் சந்தேகம் இல்லை.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_7.html

Saturday, October 5, 2019

திருவாசகம் - இமைப்பொழுதும்

திருவாசகம் - இமைப்பொழுதும் 


திருவாசகத்தை மற்றவர்களும் எளிதில் புரிந்து கொண்டு, அவர்கள் திருவாசகத்தின் மேல் ஆர்வம் கொண்டு மேலும் படிக்க வழி கோல முன்பு திருவாசகம் பற்றி சில பிளாகுகள் எழுதி இருந்தேன்.

மீண்டும் மீண்டும் படிக்கும் போது, முன்பு எழுதியது எவ்வளவு ஒரு புரிதல் இல்லாமல் எழுதி இருக்கிறேன் என்று கூச்சம் வருகிறது. அவற்றை எல்லாம் நீக்கி விடலாமா என்றும் தோன்றுகிறது.

திருவாசகத்தின் ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு சொல்லும் அவ்வளவு பொருள் ஆழம் நிறைந்ததாக இருக்கிறது. வாசிக்க வாசிக்க அதன் எல்லைகள் விரிந்து கொண்டே போகிறது.

நீங்களே அதை படித்து நேரடியாக உணர்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை.

திருவாசகத்தில், முதலில் வருவது சிவபுராணம்.

அதில் முதல் பத்தி, கீழே உள்ள ஐந்து வரிகள்.


நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க


அதில் இரண்டாவது வரி

"இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க"

இமைப் பொழுது கூட என் மனதை விட்டு நீங்காதான் திருவடிகள் வாழ்க என்பது  நேரடிப் பொருள்.

இதில் என்ன பெரிய ஆழம் இருந்து விடப் போகிறது என்று தான் நினைத்தேன்.

அது எப்படி ஒரு இமைப் பொழுது கூட நீங்காமல் இருக்க முடியும்?  மற்ற வேலைகள்  இருக்காதா? சாப்பிடுவது, தூங்குவது, குளிப்பது, வேலைக்குப் போவது,  மனைவி/கணவன் உறவு, பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டும்....இது எல்லாம் இருக்கும் போது எப்படி இமைப் பொழுதும் என் நெஞ்சில்  நீங்காதான் என்று மணிவாசகர் சொல்ல முடியும்.

மணி வாசகருக்கே கூட இது சாத்தியமா? அவரும் மனிதர் தானே. அவருக்கும் பசி, தாகம், தூக்கம் என்பதெல்லாம் இருக்கும் தானே?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நீங்கள் கார் ஓட்டும் பழக்கம் உண்டா? கார் இல்லாவிட்டால், ஸ்கூட்டர், மிதிவண்டி  என்று ஏதாவது ஓட்டிய அனுபவம் இருக்கும் தானே?

முதலில் எந்த வண்டியை ஓட்ட ஆரம்பித்தாலும், மனம் , மூளை, உடல் அனைத்தும்  அந்த ஓட்டுகின்ற செயலிலேயே ஒரு புள்ளியில் நிற்கும். கவண் அங்கு இங்கு சிதறாது.

Accelerator ஐ  அமுக்க வேண்டும், steering ஐ சரியாக பிடிக்க வேண்டும், கிளட்ச் போட வேண்டும்,  கியர் ஐ மாற்ற வேண்டும், இண்டிகேட்டர் போட வேண்டும், ஹார்ன் அடிக்க வேண்டும், தேவையான சமயத்தில் பிரேக் போட வேண்டும்...இப்படி  அத்தனை வேலையும் செய்ய வேண்டி இருக்கிறது.

அதுவே நாளடைவில், நம்மை அறியாமலேயே இவற்றை நாம் செய்வோம்.

வண்டி ஓட்டிக் கொண்டே, செல் போனில் பேசுவோம், CD மாத்துவோம், நீர் குடிப்போம், பாட்டு நல்லா இல்லை என்றால் அடுத்த பாட்டுக்கு செல்லுவோம், கூட வரும் நபர்களோடு பேசிச் சிரிப்போம். இதற்கு இடையில் யாராவது  நெருங்கி வந்தால் ஹார்ன் அடிப்போம். சிக்னல் மாறினால் வண்டியை நிறுத்துவோம்.

எப்படி முடிகிறது.  ஒரு நொடி கூட வண்டியை செலுத்துகிறோம் என்று அறியாமலேயே  வண்டியை செலுத்துகிறோம்.

எந்த வண்டியையும் ஓட்டாதவர்கள் கூட  வேறு விடயத்தில் இது பற்றி சிந்திக்கலாம்.

சமையல் செய்து கொண்டே போனில் பேசுவார்கள் சிலர். டிவி பார்த்துக் கொண்டே  காய் நறுக்குவார்கள்.

எப்படி முடிகிறது?

முன்ன பின்ன பழக்கம் இல்லாதவர்கள் கையில் கொடுத்தால், டிவி பார்த்துக் கொண்டே கையை நறுக்கிக் கொள்வார்கள். இரத்தம் வரும்.

இது எப்படி சாத்தியமாகிறது?

பழக்கம்.

மீண்டும் மீண்டும் செய்தால் பழகி விடும். அப்புறம், நம்மை அறியாமலேயே நாம் அவற்றை  செய்ய முடியும்.

இறைவன் மேல் அன்பு, பக்தி, காதல் என்பதை பழக்கப் படுத்தி விட்டால், மற்ற  வேலைகள் செய்து கொண்டே இருந்தாலும், அந்த பக்தி பாட்டுக்கு  நடந்து கொண்டே இருக்கும்.

மனைவியுடன் இருக்கும் போதும், பிள்ளைகளோடு விளையாடும் போதும், சமையல் செய்யும் போதும், அலுவலகத்தில் வேலை செய்யும் போதும் பக்தி பாட்டுக்கு நடந்து கொண்டே இருக்கும்.

பேசிக் கொண்டே வண்டி ஓட்டுவது போல.

ஒளவையார் ஒரு படி மேலே போகிறார்....

கனவிலும் அந்த பழக்கம் தொடரும் என்கிறார். அது எந்தப் பாடல் என்று தேடி கண்டு பிடியுங்கள்.


"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

புரிகிறதா?

இப்படி ஒவ்வொரு வரிக்குப் பின்னாலும், வாழ்கை அனுபவத்தின் தொகுப்பு இருக்கும் என்றால், என்று நாம் இதை எல்லாம் அறிந்து கொள்வது?

மலைப்பாக இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_5.html




Thursday, October 3, 2019

பெரிய புராணம் - ஆறு சுவை, நாலு விதம்

பெரிய புராணம் - ஆறு சுவை, நாலு விதம் 


விருந்தாளி தூரத்தில் வரும்போதே அவருக்கு இன்முகம் காட்டி, அவர் அருகில் வரும்போது இனிய சொல் கூறி வரவேற்க வேண்டும் என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

சேக்கிழார் சொல்லுகிறார்

"அவர்களை அன்போது வீட்டுக்குள் அழைத்துச்  சென்று, அவர்களுக்கு ஆசனம் அளித்து, அவர்கள் கால்களை சுத்தம் செய்து, அவர்களுக்கு அர்ச்சனை செய்து, நாலு விதமான உணவும், ஆறு வித சுவையில் அவர்கள் விரும்பும்படி விருந்தளிக்க வேண்டும்"

பாடல்

கொண்டு வந்து மனைப்பு குந்து குலாவு பாதம்  விளக்கியே
மண்டு காதலி னாத னத்திடை வைத்த ருச்சனை செய்தபின்
உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினிலொப்பிலா
வண்டர் நாயகர் தொண்டரிச்சையி லமுது செய்யவளித்துளார்.

பொருள்


கொண்டு வந்து = விருந்தினர்களை கொண்டு வந்து

மனைப்பு குந்து = வீட்டிற்குள் அழைத்து வந்து

குலாவு = விளங்கும்

பாதம் = பாதம்

விளக்கியே = சுத்தம் செய்து , கழுவி

மண்டு காதலினா (ல்) = மிகுந்து வரும் காதலினால்

தனத்திடை வைத்த  ருச்சனை  = ஆசனத்தில் இருத்தி அர்ச்சனை

செய்தபின் =  செய்த பின்

உண்டி = சாப்பாடு

நாலு விதத்தி லாறு சுவைத் = நாலு விதத்தில் ஆறு சுவையில்

திறத்தினில் = திறமையாக செய்து

ஒப்பிலா = ஒப்புவமை இல்லாத

வண்டர் நாயகர் =  வலிமை மிக்க சிவ பெருமானின்

தொண்டர் = தொண்டர்கள்

இச்சையி ல் = விருப்பப்படி

அமுது = உணவு

செய்யவளித்துளார். = செய்யும் படி அளித்து உள்ளார்



அது என்ன நாலு விதம், ஆறு சுவை ?

நாம் உண்ணும் உணவை நான்கு விதமாக பிரிக்கலாம்.

உண்ணுபவை, தின்னுபவை , நக்குபவை, பருகுபவை என்று நான்காக பிரிக்கலாம்.

உண்ணுதல் என்றால் சோறு, காய் கறி போன்ற மென்மையான உணவுகளை சாப்பிடுவது.

தின்னுதல் என்றால் முறுக்கு, சீடை, தட்டை போன்ற கடினமான பொருட்களை சாப்பிடுவது. முறுக்கு தின்றான் என்று சொல்ல வேண்டும். முறுக்கு உண்டான் என்று சொல்லக் கூடாது.

நக்குதல் என்றால் பாயசம், தேன், பஞ்சாமிருதம் போன்றவற்றை சாப்பிடுவது. இவற்றை நக்கித்தான் சாப்பிட வேண்டும்.

பருகுபவை என்றால் மோர், பால், பழ இரசம், காப்பி, டீ போன்றவற்றை உட்கொள்வது.

காப்பி சாப்பிட்டுவிட்டு போங்கள் என்று சொல்லக் கூடாது.

இது நாலுவிதமான உணவு.

ஆறு சுவை?

தமிழிலே ஒரு பழ மொழி உண்டு.

உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று.

அதற்காக அல்வாவில் உப்பு போட முடியுமா? உப்பு இல்லை என்பதால் லட்டை குப்பையில் கொட்ட முடியுமா?

உப்பு என்று சொன்னாலே சுவை என்று அர்த்தம்.

சுவை இல்லாத பண்டம் குப்பையிலே என்று பொருள்.

ஆறு சுவைகளை பாருங்கள்.



புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, உவர்ப்பு

புளி + உப்பு
இனி+ உப்பு
கை + உப்பு
கார்(அம்) + உப்பு
துவர் +  உப்பு
உவர் + உப்பு

என்று எல்லா சுவையும் உப்பிலேயே முடியும்.  உப்பு என்றால் சுவை.

நான்கு விதமான உணவு, ஆறு விதமான சுவையில்...மொத்தம் 24 வகையான உணவு. (6 x 4)

"மண்டு காதலினால்  "

ஏதோ சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது என்று கடனே என்று செய்யவில்லையாம். மனதில் எழும் காதலினால் செய்தாராம். எதையும் மனம் ஒப்பி, அன்போடு செய்ய வேண்டும். .


"தொண்டரிச்சையி லமுது செய்யவளித்துளார்."

விருந்தினருக்கு, அவர்கள் விரும்பும்படி உணவு அளிக்க வேண்டும். சில பேர்  சாப்பிட உட்கார்ந்த உடன்   "கை கழுவி விட்டு வாருங்கள்" என்று சொல்லுவார்கள். அப்படி சொல்லக் கூடாது. விருந்தினர் விரும்பினால் கழுவட்டும். இல்லை என்றால் விட்டு விட வேண்டும்.  விருந்தினரை சங்கடப் படுத்தக் கூடாது.

சில பேர் விருந்து உபசரிக்கிறேன் பேர்வழி என்று அளவுக்கு அதிகமாக உணவை பரிமாறி விடுவார்கள்.  அப்படிச் செய்யக் கூடாது. அவர்கள் எவ்வளவு விரும்புகிறார்களோ , அவ்வளவு சாப்பிட அவர்களை அனுமதிக்க வேண்டும்.

இதெல்லாம் விருந்து உபசரிக்கும் முறை.

இப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள்.

பெரிய புராணம் படிப்பது, ஏதோ சில பக்திமான்கள் கதை படிக்க அல்ல. நம் கலாச்சாரம்,  பக்தி, இலக்கியம், பண்பாடு, சமயம் , தமிழ் எல்லாம் படிக்கலாம் அதில்.

முழுவதையும் இந்த பிளாகில் கொண்டுவருவது என்பது முடியாத காரியம்.

மூலத்தை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/10/blog-post_3.html